Go Back

22/03/21

பிரமபுரத்துறை பெம்மான்


முன்னுரை:

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் ஏகபாதம் என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது ஏகபாத திருப்பதிகத்தை சிந்திப்போம்.

இந்த பதிகமும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள் போன்று பன்னிரண்டு பாடல்களை உடைய பதிகமாகும். ஒவ்வொரு பாடலிலும் சீர்காழியின் வேறுவேறு பெயர்கள் உணர்த்தப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நான்கு அடிகளும் ஒரே சொற்றொடரைக் கொண்டிருப்பதை நாம் காணலாம். ஓரடியே பொருள் வேறுபட நான்கு முறை மடித்து வந்து பாடலாக அமைந்தமையால் ஏகபாதம் என்று பெயர் வந்தது. ஏகம்=ஒன்று; பாதம்=அடி. இந்த பாடலையும் சித்திரக் கவியின் ஒரு வகையாக கருதுவார்கள். சொற்களை வேறு வேறு முறையில் பிரித்து பொருள் கொள்ள வேண்டுமென்பதால் இதனையும் மிறைக் கவி என்று அழைப்பார்கள். மிறை என்றால் வருத்தச் செய்வது என்று பொருள். மூளையை வருத்தி, கசக்கிப் பிழிந்து பொருள் காண வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது.. திருஞான சம்பந்தப் பெருமானே மீண்டும் எழுந்தருளி பொருள் உரைத்தால் அல்லது, இந்த பாடலின் பொருள் இன்னது என்று திட்டவட்டமாக கூற முடியாது என்று சொல்லுவார்கள். எனினும் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்காழி கண்ணுடைய வள்ளலார் என்பவர், திருஞான சம்பந்தரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர், இந்த பாடலுக்கு உரை எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒழிவில் ஒடுக்கம் என்ற சித்தாந்த நூல் மிகவும் பிரபலமானது. இந்த ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலுக்கு திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் உரை கண்டுள்ளார். இராமலிங்க சுவாமிகள் மற்றும் பகவான் ரமணர் ஆகியோர் இந்த நூலை மிகவும் சிறந்த தத்துவ நூலாக கருதினார்கள். இவர் இந்த பதிகத்திற்கு எழுதிய உரையே பல தேவாரப் பதிப்புகளிலும் காணப் படுகின்றன. இவரது உரையினையே ஆதாரமாகக் கொண்டு, சிவக்கவிமணியார் தனது பெரிய புராண விளக்கம் நூலில், இந்த பாடலுக்கு குறிப்பு அளித்துள்ளார். அந்த குறிப்பின் வழியே இந்த பாடலுக்கு இங்கே விளக்கமும் பொழிப்புரையும் அளிக்கப் பட்டுள்ளது.. மற்ற பதிகங்களுக்கு மாறுபட்ட முறையில் அமைந்துள்ள பதிகம் எனினும் இந்த பதிகத்தின் இறுதி நான்கு பாடல்களில், இராவணின் கயிலை சம்பவம், அண்ணாமலை நிகழ்ச்சி, சமணர்கள் பற்றிய குறிப்பு மற்றும் பதிகம் ஓதுவதால் விளையும் பயன் முதலியன காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அமைப்பு திருஞான சம்பந்தரின் வியத்தகு புலமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது.

பாடல் 1:

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பிரமம் புரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்து உறை பெம் மான் எம் ஆன்

பிரமம் புரத்து உறை பெம் ஆன் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

முதல் அடி; பிரமம்=ஞானமே உருவமாக இருக்கும் பராசக்தி; புரத்து உறை=பரிபூரணமான ஞானத்தை வியந்து நிற்கும்; பெருமைக்குரிய மகன் என்ற பொருளை உணர்த்தும் பெருமகன் என்று சொல் பெம்மான் என்று திரிந்ததாக கூறுவார்கள்; பெருமானின் பல பெருமைகளில், முற்றும் உணர்ந்தவனாக இருப்பதும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதுமன்றி உயிர்களுடன் கலந்து அவைகளின் நடுவே இருந்து இயக்கும் தன்மையும் மிகவும் முக்கியமானவை அல்லவா. இந்த இரண்டு தன்மைகளும் இந்த அடியில் உணர்த்தப் படுகின்றன. எம்மான்=எமது தலைவன். இரண்டாவது அடி; பிரமபுரம்=மேலே உள்ள மேலுலகம்; உறை=இருந்த தண்ணீர், கங்கை நதி; பெம்=விருப்பம்; மான்=மான் போன்ற சாயலை உடைய கங்கை நங்கை; எம்=எமது; ஆன்=ஆன்மா; மூன்றாவது அடி: பிரமம்=பிரமத்துவம்; புரம்=சரீரம்; உறை=எண்ணுதல்; பெம்=விருப்பம், ஆசை; ஆன்=அமையாது இருத்தல்; எம்மான்=என்னைப் போன்று ஒத்திருப்பவன்; நான்காவது அடி: வெளிப்படையான பொருள். பிரமபுரம் என்று அழைக்கப் படும் பெருமைக்குரிய சீர்காழி தலத்தில் உறையும் பெருமான் எனது தலைவன் ஆவான்.

பிரமரூபத்தில் உள்ளதாக எண்ணப்படும் என்னை முக்தி நிலையில் அமர்த்தாமல் என்னுடன் ஒத்து என்னைப் போன்று இருப்பவன் என்று இந்த பாடலின் மூன்றாவது அடிக்கு விளக்கம் பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த கருத்து சற்று ஆராயப் பட வேண்டியது. பெருமான் தன்னை பிறப்பிறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்காமல், தன்னை மீண்டும் பிறக்க வைத்ததற்கு தான் என்ன குற்றம் செய்தேன் என்று சம்பந்தர் துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் கேள்வி கேட்பது நமது நினைவுக்கு வருகின்றது. துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98) ஒரு பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார். இந்த செய்தியைத் தான் சம்பந்தர் முக்தி நெறி அமையாமல் செய்தது ஏன் என்று கேள்வி கேட்கும் முகமாக துறக்குமாறு சொலப்படாய் என்று இந்த பாடலின் முதல் பகுதியாக குறிப்பிடுகின்றார் போலும்.

துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து

இம்மண்ணின் மேல்

பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு

இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

அடுத்து இந்த தொடரின் இரண்டாவது பகுதியை நாம் இங்கே காண்போம். முற்பிறவியில் தவறேதும் செய்யாதவரை ஏன் மீண்டும் பிறப்பில் ஆழ்த்தினார் என்பதற்கு, சேக்கிழார் திருஞான சம்பந்தரின் புராணத்தில் முதல் பாடல் வாயிலாக நமக்கு விடையளிக்கின்றார். வேதநெறி தழைத்து ஓங்கவும் சைவத்துறை சிறப்புடன் விளங்கவும் சிவனடியார்களின் கூட்டம் பெருகவும் ஞானசம்பந்தரின் திருவவதாரம் தானே காரணமாக இருந்தது. ஞான சம்பந்தரை ஒரு கருவியாக கொண்டு, அமணர்கள் மற்றும் புத்தர்களின் கொட்டத்தை அடக்கி, தமிழகத்தில் முன்பு போன்று சைவநெறி சிறந்து விளங்க பெருமான் திருவுள்ளம் கொண்டதால் தானே ஞானசம்பந்தரின் அவதாரம் நிகழ்ந்தது; அம்மையே அப்பா என்று கோபுரத்தை பார்த்து அழுத குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது. மேலும் பெருமானே அவரது உள்ளத்தில் அமர்ந்து தனது கருத்துகளை ஞானசம்பந்தர் வாயிலாக வெளிப்படுத்தினார் அல்லவா. இதனை சம்பந்தரே, இலம்பையங்கோட்டூர் பதிகத்தில் எனதுரை தனதுரையாக என்று உணர்த்துகின்றார் அல்லவா. இந்த செய்தியையே தன்னைப் போன்று ஒத்து இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார் போலும்.

பொழிப்புரை:

முற்றும் உணர்ந்தவன் என்ற குணத்தையும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதும் அன்றி அனைத்து உயிர்களிலும் கலந்து அவற்றின் நடுவே இருந்து அவற்றை இயக்கம் தன்மையையும், மேலும் இது போன்று பல பெருமைகளை உடையவனும் ஆகிய சிவபெருமான், ஞானமே உருவமாக உள்ள பராசக்தியைக் கண்டு, பராசக்தியின் பரிபூரண ஞானத்தை மிகவும் வியந்து பெருமை அடையும் பெருமான் எமது தலைவன் ஆவான். மேல் நிலமாகிய தேவர் உலகத்தில் இருந்த கங்கை நதியை, மான் போன்ற சாயல் உடைய கங்கை நங்கையை மிகுந்த விருப்பத்துடன் தனது சடையில் வைத்துள்ள பெருமான், எமது உயிர் போன்று எங்களுக்கு அருமையான பொருளாகத் திகழ்கின்றான். பிரமத்தின் வடிவமாக பலராலும் கருதபட்ட என்னை நான் விரும்பிய முக்தி நிலையில் ஆழ்த்தாமல் மிகுந்த விருப்பத்துடன் இந்த நிலவுலகில் என்னை பிறப்பித்து என்னுடன் என்னை ஒத்தவனாக ஒன்றி நின்றவன் சிவபெருமான் ஆவான். பிரமபுரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய சீர்காழி நகரினில் உறையும் பெருமான் எனது தலைவன் ஆவான்.

பாடல் 2:

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுரம் தரன்

விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன்

விண்தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன்

விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்தரன்

முதல் அடி; விண்டு=மலை; அலர்=ஒலி: பொழில்=அழகிய சோலைகள் நிறைந்த உலகம்; அணிவு=அகப்படுத்துதல்; ஏண்=பெருமை வாய்ந்த: நுபுரம்=சிலம்பு: நூபுரம் என்ற சொல் நுபுரம் என்று குறுகியுள்ளது. தரன்=அணிந்தவன்; சிவபெருமான் அணிந்துள்ள சிலம்பின் பெருமை இங்கே குறிப்பிடுகின்றது. இரண்டாவது அடி; விண்டு=விஷ்ணு, திருமால்; அலர்= பழிச்சொல்; பொழில்=சோலை மரநிழல்; அணி=பொருந்தி, அணுகி நின்று; அண்ணி என்ற சொல் அணி என்று குறுகியது; வேணு=விரும்பிய; புரத்து=திரிபுரத்து அரக்கர்களின் நகரத்தை எரித்த; அரன்=சிவபெருமான்; திரிபுரத்து அரக்கர்கள் வைதீக முறையில் வாழ்க்கை நடத்தியதால் பெருமான் முதலில் அவர்களுடன் போரிட ஒப்பவில்லை. திருமாலின் போதனையால் திரிபுரத்து அரக்கர்கள் மனம் மாறி வைதீக நெறியை கைவிட்டு சிவனை நிந்தித்தும் வாழ்ந்த நிலையே பெருமான் அவர்களுடன் போருக்கு செல்ல காரணமாக அமைந்தது என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. மூன்றாவது அடி: விண்தலர்=மேல் உலகில் வாழும் தேவர்கள்; பொழில்=கற்பகச் சோலை; அணிவு=சூடிக் கொள்ளும்; ஏணும்=பெருமையாக எண்ணும்; புரந்தரன் என்ற சொல் புரத்தரன் என்று திரிந்து தேவர் தலைவன் இந்திரனை குறிப்பிடுகின்றது; நான்காவது அடி விண்டு=இதழ்கள் விரிந்து; அலர்=மலர்கின்ற; பொழில்-=சோலைகள் அணி=அழகு செய்யும்; வேணுபுரத்து அரன்=வேணுபுரம் என்ற பெயர் கொண்டுள்ள நகரில் உறையும் சிவபெருமான்.

பொழிப்புரை:

உலகத்தில் உள்ள சிறந்த எட்டு மலைகளை உள்ளடக்கியது போன்று பெரியதாவும் ஆரவாரம் மிகுந்த சோலைகள் சூழ்ந்த உலங்கங்கள் அனைத்தையும் உள்ளே அடக்கியது போன்ற ஒலியினை எழுப்பவதாகவும் அமைந்துள்ள பெருமை வாய்ந்த சிலம்பினைத் தனது காலில் அணிந்தவன் சிவபெருமான். புத்தனாக வந்த திருமால் கூறிய பழிச்சொற்களை (பெருமானை குறித்த) அரசமரத்தின் நிழலில் திருமாலுடன் அமர்ந்து விரும்பி கேட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் சிவபெருமான். மேல் உலகில் உள்ள தேவர்களால் கற்பக மலர் தூவி வழிபட அந்த மலர்களைத் தனது தலையில் பெருமையுடன் சூட்டிக் கொள்ளும் தேவேந்திரன் தங்கிய தலம் சீர்காழி; இதழ்கள் விரிந்து நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த சோலைகள் அழகு செய்யும் தலமாகிய வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 3:

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகம் தவன் மேவிய புகலி ஏ

புண்டரீகம் தவன் மே வியம் பு கலி ஏ

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

முதல் அடி; புண்டரீகம்=இதய கமலம்; புண்டரீகத்தவன்=எனது இதய கமலத்தில் உள்ளவன்; மேவிய=மீண்டு வாராமல் பொருந்திய; புகலி=புகலிடம்; எப்போதும் இறைவனை தியானித்து நமது மனதினில் நிறுத்திக் கொண்டால், அவன் நமக்கு சிறந்த புகலிடமாக விளங்கி மீண்டு வாராத வண்ணம் முக்தி உலகுக்கு அழைத்துச் செல்வான் என்று இங்கே உணர்த்துகின்றார். புகலியே என்ற சொல்லில் உள்ள ஏகாரம் புகலிடமாக விளங்கும் பெருமானின் சிறப்புத் தன்மையை உணர்த்தும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. இரண்டாவது அடி; புண்டரீகம்= மூன்று கோடுகளாக திருநீற்றை அணிந்தவன்; தவன்=மிகுந்த பெருமை உடையவன்; மேவிய=சொல்லப்பட்ட; புகலுதல்=சொல்லுதல்; புகல்=சொல், இங்கே பாடல் என்று பொருள் கொள்ளவேண்டும்; ஏ=பொருள் ஏதும் இல்லாத அசைச்சொல்; திரிபுண்டரீகமாக திருநீற்றினை அணிந்துள்ள பெருமானே, யான் இங்கே சொல்லியுள்ள பாடலில் உள்ள சொற்கள் உணர்த்தும் பெருமைக்கு உரியவன் ஆவான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மூன்றாவது அடி: புண்டரீகம்=புலி; தவம்=முனிவன்; புண்டரீகம் தவம்= புலிக்கால் முனிவர்; மே=கூத்து; வியன்=பொன்; வியம் என்ற சொல் விய என்று கடைக்குறையாக இந்த பாடலில் உள்ளது; பு=பொது, அரங்கு; கலி=கற்றவன்; நான்காவது அடி: புண்டரீகத்தவன்= தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமதேவன்; மேவிய=பொருந்தி வழிபட்ட

பொழிப்புரை:

எப்போதும் இறைவனை தியானித்த வண்ணம் இருக்கும் அடியேனின் இதய கமலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமான், இந்த நிலவுலகினுக்கு மீண்டும் வாராத வண்ணம் முக்தி உலகினை பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அளிக்கும் வல்லமை உடையவனாகவும், மற்ற உயிர்களுக்கு புகலிடமாகவும் திகழ்கின்றான். திரிபுண்டரீகமாக திருநீற்றினை அணிந்துள்ள பெருமான் தான், யான் இங்கே சொல்லியுள்ள பாடலில் உள்ள சொற்கள் உணர்த்தும் பெருமைக்கு உரியவன் ஆவான் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட வியாக்ரபாதர் காணும் வண்ணம் பொன்னம்பலத்தில், தில்லைச் சிற்றம்பலத்து பொதுவினில் நடனம் ஆடியவன் சிவபெருமான். தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமதேவன், புகலி நகரில் பொருந்தி, மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த பெருமானை வழிபட்டான்.

பாடல் 4:

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

விளம் கொளி தி கழ்தரு எங்கு உரு மேவினன்

விளங்கு ஒளி தி கழ்தரு எங்கு உருமு ஏவினன்

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்

விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன்

முதல் அடி; விளம்=விளாம்பழம்; கொளி=கன்றுக்குட்டியை கவண்கல்லாகக் கொண்டு விளாமரத்தை நோக்கி எறிந்து அழித்த கண்ணனாகிய திருமால்; கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த காலத்தில் கண்ணனை அழிப்பதற்காக வத்சாசுரன் என்ற அரக்கனும் கபிச்தாசுரன் என்ற அரக்கனும் கம்சனால் அனுப்பப்பட்டனர். இருவரும் கண்ணனைக் கொல்வதற்கு தகுந்த தருணம் எதிர்பார்த்து காத்திருந்தனர். வத்சாசுரன் ஒரு கன்றுக்குட்டியாக உருவம் எடுத்து அங்கிருந்த கன்றுகளுடன் கலந்திருக்க, கபிச்தாசுரன் அருகில் இருந்த ஒரு விளாமரத்தில் ஒளிந்து கொண்டான். இதனை அறிந்த கண்ணன், அசுரன் ஒளிந்து கொண்டிருந்த கன்றின் பின்னங்கால்களை தூக்கிப் பிடித்து விளாமரத்தின் மீது எறிந்து மரத்தினை ஒடித்து அதில் மறைந்திருந்த அரக்கனையும் கண்ணன் கொன்றான் என்று பாகவதம் உணர்த்துகின்றது. இந்த செய்தியை கன்றால் விளவு எறிந்தவன் என்று பல திவ்யபிரபந்த பாடல்களும் சில தேவார பாடல்களும் குறிப்பிடுகின்றன. தி=விளங்கிய; தீ என்ற சொல் தி என்று குறுகியதாக பெரியோர்கள் கூறுவார்கள். கழுதரு என்ற சொல் கழ்தரு என்று திரிந்தது. கழுதரு=நின்மல; எங்கு=எந்த இடத்தில்; உரு மேவினன்=தனது உருவத்தில் வைத்துக் கொண்டான், இடது புறம் என்பது என்பது எந்த இடத்தில் என்ற கேள்விக்கு ஏற்ற விடை என்பதால், திருமாலைத் தனது உடலின் இடது புறத்தில் வைத்துக் கொண்ட பெருமான் என்பது இந்த அடியின் பொருள். திருமாலை பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

இரண்டாவது அடி; விலங்கு என்ற சொல் விளங்கு என்று திரிந்தது என்பர். விலங்கு= மாறுபாடாக இருந்த தி=தீ; இந்த அடிக்கு மாறுபாடாக விளங்கி முழக்கம் செய்து திருஞான சம்பந்தரின் அடியார்களை தடுத்த புத்தநந்தியின் தலையின் மீது இடி விழச் செய்த பெருமான் என்று பொருள் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி, பாண்டிய நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு திருஞானசம்பந்தர் சீர்காழி திரும்பிய போது நடந்தது. அந்த நிகழ்ச்சி இந்த பதிகத்த்தை பாடிய பின்னர் நடந்த நிகழ்ச்சி என்பதால், இந்த விளக்கம் ஏற்புடையது அல்ல என்று பலரும் கருதுகின்றனர். கழ்தரு=அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கீழே விழும்; எங்கு=எங்கும் ஒலிக்கும் வண்ணம்; உருமு=இடி; ஏவினன்= ஏவியவன்; இடியாக இடித்து மின்னலாக மின்னி மழையாக பொழிபவன் பெருமான் என்பதால், இடி இடிப்பதை அவனது செயலாக இந்த அடியில் சம்பந்தர் உணர்த்துகின்றார். ஏங்குதல்=ஒலித்தல்; ஏங்கு என்ற சொல் எங்கு என்று திரிந்தது,

மூன்றாவது அடி: விள்=நீங்குதல்; அங்கு=அந்த இடத்தில்; ஒளிது=ஒள்ளியது, சிறந்தது சிறந்ததாகிய சிவஞானம்; இகழ் தரு=இகழப்படும், மாயையின் மயக்கத்தில் சிக்கி இகழும் தன்மையில் வாழும் மனிதனாகப் பிறந்த என்னிடமும்; மேவுதல்=கலத்தல்; அம்மையே அப்பா என்று தோணிபுரத்து கோபுரத்தை நோக்கி மூன்று வயது குழந்தை அழுத போதே, அந்த குழந்தைக்கு சிவஞானமும் பாலுடன் குழைத்து கொடுக்க வேண்டும் என்று பெருமான் திருவுள்ளம் கொண்டார். பெருமானின் எண்ணமே தனது செயலாக செயல்படும் அன்னையும். பாலுடன் சிவஞானத்தை குழைத்து கொடுத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

திருக்கோயில் சிகரத்தை பார்த்து, அம்மையே அப்பா என்று அழைத்தவாறு குழந்தை அழுதது. காலம் கனிந்து வந்தமை கண்டு பெருமான் குழந்தைக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்டவராய், தேவியுடன் தாமும் விடையின் மீது அமர்ந்தவராக குழந்தை இருந்த இடத்திற்கு அருகே வந்தார். அருகே வந்தவர், தேவியை நோக்கி, உனது திருமுலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் பொழிந்து குழந்தைக்கு ஊட்டுவாய் என்று கூறினார். தேவியும் உடனே, பொற்கிண்ணத்தில் பாலை வைத்துக் கொண்டு, குழந்தையின் அருகே சென்று குழந்தையின் கண்களில் பெருகிய நீரினை துடைத்து, அடிசிலை உண்ணுவாய் என்று கூறினார். எண்ணரிய சிவஞானம் குழைத்து கொடுக்கப்பட்ட பால் என்று சேக்கிழார் கூறுகின்றார். வள்ளம்=கிண்ணம்

அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருட்கருணை

எழுகின்ற திருவுள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்

தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை

முலைகள்

பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டென்ன

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்

கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம்

அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள்

புரிந்தார்

குழந்தைக்கு பிராட்டி ஊட்டிய பாலமுதம் வெறும் பசியினை போக்குவதை மட்டுமாக இல்லாமல், சிவஞானமும் கலந்து குழைத்து ஊட்டப்பட்டது என்று சேக்கிழார் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அம்மை ஊட்டிய பாலடிசிலை உண்ட குழந்தை, சிவபெருமானின் திருவடிகளை சிந்திக்கும் தன்மையையும் சிவபெருமானே மேலான பரம்பொருள் என்ற கலை ஞானம் மற்றும் பிறவிப்பிணியினை தீர்க்கவல்ல மெய்ஞானம் ஆகியவற்றை உணர்ந்தது என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பாலுடன் சிவஞானமும் கலந்து கொடுக்கப்பட்டாதால், அதற்கு காரணமாக இருந்த பெருமானை தனது குருவாக சம்பந்தர் கருதியது இயற்கை தானே. உலகினுக்கே குருவாக இருக்கும் பெருமானின் திருவருள் பெற்றவுடன் பாடப்பட்ட பதிகம் என்பதால் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம், அப்பர் பிரானும் சுந்தரரும் பாடிய முதல் பதிகங்களுடன் குருவருள் என்ற தலைப்பின் கீழ் மிகவும் பொருத்தமாக அகத்தியர் தேவாரத் திரட்டில் வைக்கப் பட்டுள்ளது. குருவாக பெருமானை தான் கருதிய செய்தியை சம்பந்தர் இந்த பாடலிலும் சுட்டிக் காட்டுகின்றார். தனது குருவாகிய சிவபெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி இழிந்த நிலையில் இருந்த தனக்கு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து சிறந்த முக்தி நிலையினை அளித்து தன்னுடன் பெருமான் கலந்தான் என்று சம்பந்தர் கூறுகின்றார். அந்நாள் வரை பெருமான் சம்பந்தருக்கு அருளிய செயல்கள் (சிவஞானம் கலந்த பாலினை ஊட்டியது, பொற்றாளம் கொடுத்தது, முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊது கொம்பு அளித்தது) பெருமானின் திருவருள் தனக்கு இருந்தமையை உணர்ந்த ஞானசம்பந்தர், இந்த பிறவி முடிந்தவுடன் தனக்கு முக்தி நிலை நிச்சயமாக கிடைக்கும் என்பதையும் உணர்ந்தார் போலும். அதனால் தான் முக்தி நிலை கிடைத்து விட்டது போன்று இறந்த காலத்தில் (மேவினன்) என்று கூறுகின்றார் போலும்.

நான்காவது அடி; இந்த அடிக்கு விளக்கம் கூறிய கண்ணுடைய வள்ளலார், தருமராசனுக்கு அருள் புரிந்த சிவபெருமான் என்று கூறுகின்றார். தேவகுருவாகிய பிரகச்பதிக்கு அருள் புரிந்ததால் வெங்குரு என்ற வந்தது என்பதை நாம் சுரரருலகு நரர்கள் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலிருந்து அறிந்தோம். பிரமபுரத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.63.4) சம்பந்தர் தருமராசனுக்கு அருளியதால் வெங்குரு என்ற பெயர் வந்ததாக கூறுகின்றார். இந்த பாடலில், செங்கோல் பிடித்து ஆட்சி நடத்தும் தருமராசனாகிய இயமன், பல உயிர்களுக்கும் அந்தந்த உயிர்கள் ஈட்டிய வினைகளுக்குத் தக்கவாறு தண்டனை அளிப்பது எவ்வாறு என்பதை சீர்காழி நகரம் வந்து தங்கி பெருமானிடம் கற்றுக் கொண்டமையால் வெங்குரு என்ற பெயர் வந்ததாக கூறுகின்றார். தருமம் தவறாமல் இயமன் உயிர்களுக்கு தண்டனை வழங்குகின்றார் என்ற செய்தியை உணர்த்தும் வண்ணம், தில்லைப் பதிகத்தின் பாடல்களில் தருமராசனார் என்று சுந்தரர் இயமனை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.

இயமனுக்கு நீதிகளை கற்றுத் தந்த பெருமான் தான் நீதியுடன் நடந்து கொண்டாரா என்ற கேள்வியையும் இந்த பாடலில் சம்பந்தர் எழுப்புகின்றார். தாருகவனத்து மகளிரிடம் பிச்சை ஏற்கச் சென்ற போது, அவர்களைத் தன் மீது மையல் கொள்ளச் செய்தது நியாயமான செயலா என்று கேட்கின்றார். பெருமான் மீது தீராத கொண்ட தாருகவனத்து மகளிர், பெருமானை அடைய முடியாத ஏக்கத்தினால் அவர்களது உடல் இளைக்க, அவரகளது கைகளில் இருந்த வளையல் நழுவி விழுந்தன என்பதை உணர்த்தும் சம்பந்தர், இவ்வாறு வளையல்கள் கழன்று விழுந்ததற்கு பெருமான் என்று குறை கூறுகின்றார். தங்களது கணவர் அல்லாது வேறு ஒரு ஆடவரை மனதினில் நினைத்தாலே கற்பு தவறியதாக பண்டைய நாளில் கருதப் பட்டது. எனவே தான், அவர்களை மயக்கிய பெருமானை, அவர்களது கற்பினை கவர்ந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். ஆநலம்=அவர்களது அழகு, கற்பு என்பது பெண்களுக்கு அழகு தரும் சிறந்த அணிகலனாக கருதப்படுகின்றது.

சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ்

குழையன்

அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆநலம்

வவ்வுதியே

செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை

மெய் தெரிய

வெங்கோத் தருமன் பேணி ஆண்ட வெங்குரு

மேயவனே

பொழிப்புரை:

கன்றினைக் கொண்டு விளாமரத்தின் மீது எறிந்து, கன்றிலும் விளாமரத்திலும் மறைந்திருந்த அரக்கர்களை கொன்ற கண்ணனாகிய திருமாலை, நின்மலனாகிய பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற ஒலிகளிலிருந்து மாறுபட்டுத் திகழ்வதும் அனைவர்க்கும் அச்சம் ஊட்டும் வண்ணம் குமுறுவதும் ஆகிய இடியாக ஒலிப்பவன் சிவபெருமான். சிறந்ததாகிய சிவஞானத்தை அளித்து எனக்கு குருவாக விளங்கிய பெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி மிகவும் இழிந்த நிலையில் இருந்த என்னை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீக்கி, முக்தி நிலையை எனக்கு அருளி என்னுடன் கலந்தவன் சிவபெருமான். நீதிநெறி வழுவாது உயிர்களுக்கு தண்டனை அளிப்பதால் மிகுந்த சிறப்பினுடன் திகழும் இயமன், வெங்குரு எனப்படும் தலத்தில் பொருந்தி உறையும் பெருமானை வணங்கி அந்த சிறப்பினை பெற்றான்.

பாடல் 5:

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

சுடர் இம் மணி ஆளி கைத்தோணி புரத்து அவன்

சுடர்மணி மாலி கைத்தோள் நிபுரத்தவன்

சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்

சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன்

முதல் அடி; சூடார் என்ற சொல் சுடர் என்று திரிந்தது. சூடார்=வெம்மை பொருந்திய; இம்=ஈமம் என்பதன் திரிபு, சுடுகாடு என்று பொருள்; ஆளி=ஆள்பவன்; புரத்து அவன்= திரிபுரங்களை எரித்து நாசம் செய்தவன்; கைத்தோணி=வெற்றியின் அடையாளமாக விளங்கும் தும்பைப் பூவை அணிந்தவன்; இரண்டாவது அடி; சுடர்மணி=சுடர் விட்டு விளங்கும் சுடர்மணி; மாலி (ஆன்மாக்களை ஈடேற்றுவதில் பித்தனைப் போன்று பெரும் விருப்பம் கொண்டவன் என்று பொருள்) என்ற சொல் மாளி என்று திரிந்தது; கைத்தோள்= துதிக்கையை உடைய யானை; நிபுரத்தவன்=வடிவம் இல்லாமல் அழித்தவன்; மூன்றாவது அடி: சுடர்=சூரியன்; சூரியன்; நான்காவது அடி: சுடர்மணி=சுடர் விட்டு ஒளிரும் மணிகள் பதிக்கபெற்ற;

பொழிப்புரை:

வெம்மை பொருந்திய சுடுகாட்டினைத் தான் ஆளும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், திரிபுரத்தவர்களின் மூன்று கோட்டைகளை அழித்து வெற்றிவாகை சூடியவன். எனது தலையின் உச்சியில் உள்ள சூடாமணி ஆபரணம் போன்று சிறப்பாக கருதப் படுபவன் சிவபெருமான். அவன் ஆன்மாக்களை கடையேற்றுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு பித்தனைப் போன்று செயல்படுபவன்; தன்னை எதிர்த்து வந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்து வடிவத்தை அழித்த போர்க்குணம் உடையவன் பெருமான். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், சுடர் விட்டு ஒளிரும் மணிகள் பதிக்கப்பெற்ற மாளிகைகள் நிறைந்த தோணிபுரத்தில் உறைகின்றான்

பாடல் 6:

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பூ சுரர் சேர் பூ தராயவன் பொன் அடி

பூசுரர் சேர் பூ தராய் அவன் பொன் நடி

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி

பூசுரர் சேர் பூந்தராயவன் பொன்னடி

முதல் அடி; பூ=பூமியில் உள்ளவர்கள்; சுரர்கள்=தேவர்கள்; ஆடி=கண்ணாடி என்ற சொல் அடி என்று குறுகியது; பூ=உந்திக்கமலம்; தராயவன்=தரித்தவன்; பொன்=பொலிவு, விளங்கும்; சேர்=தோன்றும்; இரண்டாவது அடி; பூசுரர்=பூமியில் வாழ்ந்த போதிலும், தங்களது மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்புடன் வாழும் தேவர்களாக கருதப்படும் சிவஞானிகள்; சேர்= திரட்சி, கூட்டம்; பூ=பொலிவு; தராய்=பெறப்பட்ட; அவன்=இங்கே கடவுளை குறிக்கும் சொல்லாக கையாளப்பட்டுள்ளது; பொன்=பொன் போன்று வனப்பு மிகுந்த; நடி=நடனம் ஆடுபவன்; மூன்றாவது அடி: பூசு=பூசப்படும் திருநீறு; உரர்=மார்பினை உடையவர்; சேர்பு= அரிந்து, முற்றிலும் நீக்கி; ஊந்தராய்=உந்தித் தள்ளும்; யவன்=யௌவனம் உடைய யுவன் என்ற சொல் யவன் என்று திரிந்தது; அடி=மூலமாக, ஆதாரமாக உள்ள தன்மை; நான்காவது அடி; நிலவுலகில் வாழும் அந்தணர்கள் ஒழுக்கமாக வாழும் நெறியை பின்பற்றுவதால், அவர்களை சிறப்பாக மதித்து நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சொல்வது வழக்கம். சேர்=திரண்டு சென்று சேர்ந்து; பூந்தராயவன்=பூந்தராய் நகரத்தில் உறையும் பெருமான்;

பொழிப்புரை:

பூமியில் வாழும் மனிதர்களையும், மேலுலகில் வாழும் தேவர்களையும் தோற்றுவிக்கும் பிரமனையும், பிரமனைத் தனது உந்திக்கமலத்தில் தோற்றுவித்த திருமாலையும் தனது பிரதிபிம்பமாக தோன்றும் வண்ணம் கண்ணாடியாக நிற்பவன் சிவபெருமான்; மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்பாக கருதப்படும் சிவஞானிகள் கூட்டம், மிகுந்த மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருக்கும் வண்ணம், பொன் போன்று வனப்பு மிகுந்த சிறந்த நடனத்தை ஆடுபவன் சிவபெருமான்; தங்களது மார்பினில் திருநீற்றைப் பூசியவர்களும் தங்களைப் பிணைத்திருந்த பாவம் புண்ணியம் என்ற கட்டினை அறுத்து எறிந்தவர்களும் ஆகிய சிவஞானிகள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பூலோக வாழ்க்கையை உதறித் தள்ளும் தனமையினை அடைவதற்கு ஆதாரமாக விளங்குபவன், எனும் இளமையுடன் விளங்கும் சிவபெருமான் ஆவார்; குற்றமில்லாத மறையவர்கள் திரண்டு சென்று சேர்ந்து வழிபடும் பூந்தராய் தலத்து இறைவனின் பொன்னடிகள் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று அடியேன் விரும்புகின்றேன்.

பாடல் 7:

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செர் உக்கு வாய்ப் புடையான் சிர் அபுரம் என்னில்

செருக்கு வாய்ப் புடையான் சிரம் புரம் என்னில்

செருக்கு ஆயப்பு உள் தையான் சிரபுரம் என்னில்

முதல் அடி; செருக்கு=மலங்களால் ஏற்படும் மயக்கம்; வாய்ப்பு=மேலீடு, வலிமை உடையதாக விளங்கி தனது விருப்பம் போன்று உயிர்களை ஆட்டுவிக்கும் தன்மை; உடைத்தல்=கேடு செய்தல்; உடையான்=உடைத்து அழிக்காமல், கேடு செய்யாமல் இருப்பவன்; சிரபுரம்=மேன்மை உடைய இருப்பிடம்; என்னில்=எனது அறிவினில்; பெருமானிடமிருந்து நேரிடையாக சிவஞானம் பெற்றமையால், பசுபோதம் நீங்கி பதிபோதத்துடன் தான் விளங்கிய நிலையை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களது முனைப்பினால் தான் மலங்களின் ஆளுமையிலிருந்து விடுபட வேண்டுமே தவிர, அதற்காக இறைவனது உதவியை பெறமுடியாது என்ற கருத்து இங்கே குரிப்பிடப்படுகின்றது. மெய்ப்பொருளின் தன்மையை அறிந்து கொண்டு, மெய்ப்பொருளை தியானித்தால் மட்டுமே இறைவனது அருள் நமக்கு உதவி புரியும் என்பதை நாம் மறக்கலாகாது.

இரண்டாவது அடி; சேர் என்ற சொல் செர் என்றும் சீர் என்ற சொல் சிர் என்றும் இங்கே குறைந்துள்ளன. சேர்=ஆகாயம், காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகிய நான்கு பூதங்களின் கலவையாக விளங்கும் ஐந்தாவது பூதமாகிய; உக்கு=அந்த பூமி; புடையான்=இருப்பிடமாகக் கொண்டவன்; சீர்=சிறப்பு வாய்ந்த; அபுரம்=உயிரற்ற உடல்; என்னில்=மேலே வைத்துக் கொள்ளப்பட்டது என்றவாறு; பூமிக்கு இருப்பிடமாக தனது வாயினை அளித்து பூமியை மீட்ட (பன்றி வடிவம் எடுத்து பூமியினை மீட்ட திருமால் தனது பற்களின் இடையே வைத்துக் கொண்டு வந்த செய்கை குறிப்பிடப் படுகின்றது) சிறப்பினை உடைய திருமாலும் ஒரு நாள் இறந்துபட அவனது உயிரற்ற உடலினைத் தனது தோள் மேல் தாங்கிய பெருமான் என்று பெருமானின் சிறப்பு விளக்கப்படுகின்றது. மூன்றாவது அடி: செருக்கு= கர்வம்; வாய்=வாய் உள்ளிட்ட ஐந்து பொறிகளையும் குறிக்கின்றது; புடையான்=இடத்தான்; சிரம்=மேல்; புரம்=உடல், சரீரம்; இம்மையில் தங்களது பொறிகளுக்கு இன்பம் அளிக்கும் செயல்களைப் புரிந்த உயிர், மறுமையிலும் அந்த இன்பம் தொடர வேண்டும் என்று விரும்புவது இயற்கை தானே. உயிர்கள் செய்த நற்செயல்களுக்கு தக்கவாறு, அந்த இன்பத்தினை சொர்கத்தில் அழிப்பவனும் சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. நான்காவது அடி: சிரபுரம் என்று இந்த தலத்தின் பெயரைச் சொன்னால் விளையும் பயனை இந்த அடியில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். செரு=யுத்தம்; இந்திரியங்கள் உயிருடன் செய்யும் யுத்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆயப்பு=இளைத்து; உள் தையான்=இந்திரியங்கள் எய்யும் பாணங்களால் தைக்கப்பட்டு காயம் அடையாமல் இருத்தல்; என்னில்=என்று சொன்னால்

பொழிப்புரை:

மலங்களால் ஏற்படும் மயக்கத்தில் ஆழ்ந்து தன்னை நினைக்காத மனிதர்களின் மலங்களின் தன்மையை கெடுக்காமல் இருக்கும் சிவபெருமான், தனது மேலான இருப்பிடமாக அடியேனின் ஞான அறிவினைக் கொண்டுள்ளான். மற்ற நான்கு பூதங்களின் கலவையாக விளங்கும் பூமிக்கு இருப்பிடமாகத் தனது வாயினைக் கொடுத்து இரண்யாக்கனால் ஒளித்து வைக்கப் பட்ட பூமியினை மீட்ட சிறப்பினை உடைய திருமாலின் உயிரற்ற உடலைத் தனது தோள் மேல் தாங்கிய பெருமையை உடையவன் சிவபெருமான். ஆன்மாவின் ஒரு குற்றமாகிய கர்வத்தினால், வாய் முதலான ஐந்து பொறிகளுக்கும் இன்பம் அளிக்கும் செயல்களைப் புரியும் உயிர்கள், உடலை விட்டு பிரிந்த பின்னரும் அந்த இன்பத்தினை சூக்கும உடலுக்கு அளிக்கும் வண்ணம், அந்தந்த உயிர்கள் ஈட்டிய நற்செயல்களுக்கு ஏற்ப சொர்க்க போகம் அனுபவிக்க ஏற்பாடு செய்பவன் சிவபெருமானே. இத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் வீற்றிருக்கும் தலத்தின் பெயரினை சிரபுரம் என்று ஒரு முறை சொல்பவர்கள், தங்களுடன் தங்களது பொறிகள் தொடுக்கும் சண்டையில், பொறிகளால் எய்யப்படும் அம்புகளால் காயம் அடைய மாட்டார்கள்.

பாடல் 8:

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்

பொன் அடி மாதவர் சேர் புறவம் தவன்

பொன் அடி மாது அவர் சேர்புற அவத்தவன்

பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்

முதல் அடி; பொன்=பொன் போன்று பொலிவினை உடைய; நடி=கூத்தினை உடைய; மாது= காளி; அவர்=பூதகணங்கள்; சேர்=சென்று அடைந்து தங்கும்; புறவம்=ஊருக்கு புறத்தே உள்ளே சுடுகாடு; புறவத்தவன்=சுடுகாட்டினை இருப்பிடமாக உடையவன்; இரண்டாவது அடி; பொன்= தூய்மையான; அடி=வழி, முறையில்; மாதவர்=சிறந்த தவத்தினை புரியும் முனிவர்கள்; சேர்=திரண்டு சேரும்; புறவம்=முல்லை நிலம்; தவன்=தவத்தினை புரியும் சிவபெருமான்; தவம் புரியும் முனிவர்களிலும் சிறந்தவனாக சிவபெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தவம் செய்யும் அனைவரும் சடையினை உடையவர்களாக இருந்தாலும் சிவபெருமான் ஒருவனைத் தானே சடையான் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன.

மூன்றாவது அடி: பொன் என்ற சொல் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் இலக்குமி தேவியை குறிக்கும். அடி=அழகிய ஆபரணங்கள்; மாது அவர்=தாருக வனத்து முனிவர்களின் மனைவிகள்; சேர்பு உறு=வந்து அணைந்த, பிச்சை இடுவதற்காக பெருமானை நாடிச் சென்ற; அவம்=பாவம்’ அவத்தவன்=பாவச் செயல் புரிந்தவன்; அந்நாள் வரை கற்பு குலையாமல் இருந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், பிச்சை ஏற்று வந்த பெருமானின் அழகினில் மயங்கி தாங்கள் செய்வது இன்னதென்று உணராமல், பெருமானின் பின்னே பின் தொடர்ந்ததை, கற்பு குலைந்த செயலாக புராணங்கள் கருதுகின்றன. இவ்வாறு அவர்கள் மாறுவதற்கு பெருமானின் அழகு காராணமாக இருந்தமையால் அவர்களது கற்பு நிலை குலைவதற்கு காரணமாக இருந்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய பாவம் புரிந்தவன் பெருமான் என்று தாருகவனத்து முனிவர்கள் கருதியதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது மனைவியர்களின் நிலையை மாற்றிய பெருமானை, தங்களது பகைவனாக நினைத்து அவனை அழிப்பதற்கு பலவாறும் முயற்சி செய்தமையும், இறுதியில் பெருமானின் பெருமைகளை உணர்ந்து அவனது அடியார்களாக தாருகவனத்து முனிவர்கள் மாறியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள். தாருகவனத்து முனிவர்களின் நிலையினை மாற்றி அவர்களையும் தனது அடியார்களாக மாற்றுவதற்கு பெருமான் செய்த திருவிளையாடலின் ஓர் அங்கம் தான், பிச்சைப் பெருமானாக சென்று, தனது அழகினால் முனிவர்களின் மனைவிகள் மயங்கும் வண்ணம் நடந்தது. இந்த செயல் முனிவர்களின் கண்ணோட்டத்தில் பாவாமாக கருதப் பட்டதால், பாவம் புரிந்தவன் என்று இங்கே கூறுகின்றார்.

நான்காவது அடி: பொன்னடி=பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்; அடி=பாதம்; மாதவர்= கன்னியர்; சேர்=சேர்ந்து ஒரு இனமாக இருத்தல்; புறவத்தவன்=புறவம் என்று அழைக்கப்படும் பதியில் உறைபவன். இந்த அடியில் உள்ள சொற்களை சற்று மாற்றி அமைத்து, மாதவர் சேர் பொன்னடி புறவத்தவன் என்று கூட்டி, சிறந்த தவ முனிவர்கள் சேரும் பொன் போன்று பொலியும் திருவடிகளை உடைய பெருமான், புறவம் திருத்தலத்தில் உறைபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

பொன் போன்று பொலிவினை உடைய கூத்தினை ஆடும் மாதாகிய காளிதேவியும், பூத கணங்களும் சென்று அடைந்து தாங்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; தூய்மையான முறையில் சிறந்த தவம் செய்யும் முனிவர்கள் திரண்டு சேரும் முல்லை நிலத்தில் தானும் தவம் செய்பவன் சிவபெருமான்; அழகிய ஆபரணங்கள் அணிந்து இலக்குமி தேவியைப் போன்று அழகுடன் விளங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள், தனது அழகில் மயங்கி தாங்கள் (தாருகவனத்துப் பெண்கள்) செய்வது இன்னதென்று அறியாமல் தன்னைப் பின்தொடர்ந்து செல்லும் வண்ணம், அவர்களின் முன்னே பிச்சைப் பெருமானாக தோன்றி, அவர்களது கற்பு நிலை குலையச் செய்தவன் பெருமான். பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்த பாதங்களை உடைய மகளிர், கூட்டமாக சேர்ந்து வணங்கும் இறைவன், புறவம் தலத்தில் உறைபவன் ஆவான்.

பாடல் 9:

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

தசமுகன் எரி தர ஊன்று சண் பையான்

த சமுகம் நெரி தர ஊன் துசு அண்பையான்

தசம் உக நெரி தரம் ஊன் து சண் பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

முதல் அடி; தசமுகன்=உயிர்கள் பால் கருணையை உடையவன்; எரி=நெருப்பு, இங்கே நெருப்பு போன்று கொடிய நஞ்சம் என்று பொருள் கொள்ளவேண்டும். தர=வீசும்; ஊன்று= அழுத்தி; சண்=வேகமாக; பை=படம். படம் உடைய பாம்பு; பையான்=படம் உடைய பாம்பினை உடையவன்; இரண்டாவது அடி; த=அது, இங்கே சிவஞானிகளை குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்;; சமூகம்=கூட்டம்; நேரி என்ற சொல் நெரி என்றும், தரக்கு என்ற சொல் தர என்றும் தூசு என்ற சொல் துசு என்றும் குறுக பாயான் என்ற சொல் பையான் என்று மாறியது. தரக்கு=புலி; நேரி=நேரானவன்; ஊன்=மாமிசம்; அண்பையான்= விரித்து உடுத்தான்; மூன்றாவது அடி: தசம்=தைசதம் என்ற சொல்லின் திரிபு; அகங்காரம்: உக=கெட; நேரி என்ற சொல் இங்கும் நெரி என்று குறுகியது; தரம்=மலை; ஊன்=உள்ளம்; து=சிறப்பான ஞானம் உடையவன்; சண்=சட்சமயம், ஆறு விதமான சமயங்கள்; பையான்= பயனாக உள்ளவன்; நான்காவது: தசமுகன்=பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணன்; நெரிதர=தோள்களும் தலைகளும் முறியும் வண்ணம்: ஊன்று=தனது கால் பெருவிரலை ஊன்றிய; சண்பையான்=சண்பை எனப்படும் தலத்தில் உறைபவன்

பொழிப்புரை:

உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான், படம் எடுத்து ஆடுவதும் நெருப்பு போன்று கொடுமையான நஞ்சினை வீசும் தன்மையை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டியுள்ளான். சிவஞானிகளின் கூட்டத்திற்கு நேராக மெய்ப் பொருளாக தோன்றும் இறைவன், தாருகவனத்து முனிவர்களால் தன்னை நோக்கி அனுப்பப்பட்ட புலியினை கொன்று, அதன் ஊனினை நீக்கி அதன் தோலை ஆடையாக விரித்துத் தனது இடுப்பினில் அணிந்துள்ளான். அடியேனின் அகங்காரத்தை நீக்கும் வண்ணம் எனது உள்ளத்தில் எதிர்ப்பட்டு அறிவினில் பொருந்தி இருக்கும் பெருமான், ஆறு வைதீக சமயங்களை பின்பற்றுவோரும் அவர்கள் அடைவதற்கு உரிய பயனாக உள்ளான். பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது தலைகளும் தோள்களும் மலையின் கீழே அமுங்கி முறியும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய இறைவன், சண்பை என்று அழைப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி அமைந்துள்ளான்.

பாடல் 10:

காழியான் அயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ளவா காண்பரே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை

காழியான யன் உள்ளவா காண்பரே

காழியான் நயன் உள்ளவா காண்பரே

:காழியான் அயன் உள்ள ஆ கண் பரே

காழியான் அயன் உள் அவா காண்பரே

முதல் அடி; காழியான்=காழி நகரைப் போன்ற; சீர்காழி நகரம் ஊழிக்காலத்திலும் எந்த விதமான மாற்றமும் அடையாமல் நிலையாக இருப்பது போன்று, மலங்களினால் கெடாத சிந்தனை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்; யன்=பக்தர்கள்/அடியார்கள்; உள்ளவா= மெய்ப்பொருளின் தன்மை உணரும் வண்ணம்; காண்பரே=தனது அருட்கண்ணால் பெருமான் நோக்குவார். இரண்டாவது அடி; காழியான்=களங்கம் உள்ளவன்; பெருமானின் கழுத்தினில் விடத்தினால் உண்டான நீலநிறத்து கறை இங்கே களங்கம் என்று சொல்லப் படுகின்றது; நயன்=நயனம் என்பதன் சுருக்கம்; மூன்றாவது அடி: காளிமம் என்பது கருமை நிறத்தினை குறிக்கும்; காளியன்=கருமை நிறம் உடைய திருமால்; காளியன் என்ற சொல் காழியன் என்று திரிந்துள்ளது; அயன்=பிரமன்; உள்குதல்=நினைத்தல்; உள்ள=நினைக்க; ஆ என்ற சொல் அதிசயக் குறிப்பினை உணர்த்தும்; கண் என்ற சொல் இங்கே காண் என்று நீண்டது; கண்-கருதுதல்; பரே=அன்னியம்; நான்காவது அடி: காழியான்=சீர்காழி நகரத்தின் தலைவனாகிய இறைவன்; ஐயன் (தலைவன் என்று பொருள்) என்ற சொல்லின் திரிபு அயன் என்பதாகும். உள்=அறிவினில் உள்ளே; அவா=ஆசை; காண்பரே=காண முடியுமா, காண முடியாது;

பொழிப்புரை:

ஐந்து பொறிகள் விளைவிக்கும் சேட்டைகளால் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் நின்மல சிந்தையை உடைய அடியார்கள், மெய்ப் பொருளின் தன்மையை உணரும் வண்ணம், தனது அருட்கண்ணினால் அவர்களை நோக்கி அருள் புரிபவர் சிவபெருமான். பெருமானின் அருளினால் ஞானக்கண் பெற்ற அடியார்கள், அந்த ஞானக் கண் கொண்டு பெருமானின் கழுத்தினில் உள்ள நீலநிறத்து கறையினையும், பெருமானை உணர்த்தும் மற்ற அடையாளங்களையும் உள்ள வண்ணம் காண்பார்கள்; திருமாலும் பிரமனும் சிவபெருமானை மனதில் தியானம் செய்து அவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்ததால், அவர்கள் இருவரும் எவ்வளவு தூரம் அகழ்ந்தும் பறந்தும் சென்ற போதும் அவர்களால் அடியையோ முடியையோ காண முடியவில்லை. இது அதிசயம் அல்லவா. சீர்காழி தலத்தின் உறைபவனும் எனது தலைவனாகவும் உள்ள பெருமானின் அடியையோ முடியையோ காண வேண்டும் என்ற ஆசை திருமால் மற்றும் பிரமனின் உள்ளத்தில் இருந்தாலும், அவர்களால் காண முடியுமா, காண முடியாது அல்லவா.

பாடல் 11:

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே

கொச்சையன் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே

கொச்சை அண்ணலை கூட கிலார் உள்தல் மூடரே

முதல் அடி; கொச்சை=அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம்; கூடகிலார்=ஆணவ மலம் அனைத்து உயிர்களுடன் இணைந்தது என்ற கொள்கைக்கு உடன்படாத சமணர்கள்; மூடாரே என்ற சொல் மூடரே என்று குறுகியது; இரண்டாவது அடி; கொச்சை=புலால் நாற்றம் வீசும் உடல்; அண்ணுதல்=அணுகுதல், இங்கே பொருந்திய என்ற பொருளுடன் வருகின்றது; கூடகிலார்=நிலையற்றது உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாது வாழும் புத்தர்கள்; மூடரே=துவராடையால் மூடுவார்கள்; மூன்றாவது அடி: கொச்சையன்= அருவருக்கத் தகுந்த மீன்வாடை தனது உடலில் வீசுபவளாக திகழ்ந்த மீனவப்பெண் மச்சகந்தி; மீனவப் பெண்ணாகிய மச்சகந்தியை கண்டு மனம் மயங்கிய அத்தினாபுரத்து அரசன் சந்தனு, அவளது உடலிலிருந்து வீசிய நறுமணத்தால் மனம் கவரப் பட்டான் என்று மகாபாரதம் கூறுகின்றது. அந்த நறுமணம் மீனவப் பெண்ணுக்கு முனிவர் பராசரரால் கிடைத்தது என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது; நலை=நலன் கருதி; அகில் ஆர்=அகிற்புகை வாசனையுடன்; கூடு=கூடி பொருந்தும் வண்ணம்; மூடரே=பொருத்திய பராசர முனிவர்; நான்காவது அடி: கொச்சை அண்ணல்=கொச்சை வயம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலத்தின் தலைவன்; கூடகிலார்=நேரில் கண்டு வணங்காத மனிதர்கள்; மூடரே=அறியாமை நிறைந்த மனதினை உடையவர்களே. உள்தல் கூடகிலார் என்று சொற்களை மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம் அனைத்து உயிர்களுடன் இணைந்துள்ளது என்ற கொள்கைக்கு உடன்படாத சமணர்கள் தங்களது உடலினை மூடாமல் திரிவார்கள்; நிலையற்ற உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாத புத்தர்கள், புலால் நாற்றம் வீசும் தங்களது உடலினை துவராடையால் மூடுவார்கள்; மிகுந்த விருப்பத்துடன் தான் புணர்ந்த மீனவப் பெண்ணின் உடலில் வீசிய துர்நாற்றம் மிகுந்த மீன் வாடையை நீக்கி, அவளது உடலில் அகிற்புகையின் நறுமணம் பொருந்தும் வண்ணம் செய்தவர் பராசர முனிவர்; அத்தகைய பராசர முனிவரால் வணங்கப்பட்டவரும் கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரத்தில் உறைபவரும் ஆகிய அண்ணல் சிவபெருமானை மனதினில் தியானித்து அவரை நேரே தரிசனம் செய்து வணங்காத மனிதர்கள் எப்போதும் அறியாமையில் மூழ்கி இருப்பார்கள்.

பாடல் 12:

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

கழுமல் அமுது பதிக்க உள் நீ கட்டு உரை

கழு மலமது பதி கவுணி அன் கண் துரை

கழும் மலம் அமுது பதி க உணியன் கட்டு உரை

கழுமலபதி கவுணியன் கட்டு உரை

முதல் அடி; கழுமல்=மிகுதிப் பட்ட குற்றம்; அமுது=சலம், நீர், சுக்கில சுரோணிதம் ஆகிய விந்து நீர்; பதிக்க=விளைவிக்க; உள் நீ=உள்ள ஆன்மாவாகிய நீ; கட்டு=வடிவமாகக் கட்டுண்டு பின்னர் வினைகளால் கட்டுண்டு; உரை=தேய்தல், தேய்ந்து=அழிதல்; பிறவியின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது; பிறவி உயிர் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதால், பிறவிக்கு காரணமாகிய விந்து நீர்களும் குற்றத்தின் விளைவாக கருதப்படுகின்றன. இரண்டாவது அடி; கழு=கழுவப்படும்; அது=ஆணவ மலமும் அதனுடன் கூடிய கன்ம மற்றும் மாயா மலங்களால் ஏற்படும் விளைவுகள்; பாதி என்ற சொல் பத்தி என்று குறுகியது; பாதி என்பது இங்கே பெருமானின் உடலில் பாதியாக உள்ள பிராட்டியின் அருளும் தன்மையை குறிப்பிடுகின்றது. பெருமானின் அருள் வடிவமாகத் தானே பிராட்டி கருதப் படுகின்றாள். கவுணி=தன்னுள்ளே அகப்படுத்திக் கொள்ளும் தன்மை; அன்கண்=ஆன்மாவிடத்து; துரை=இறைவர்; மூன்றாவது அடி: கழும்=மயக்கம்; அலம்=துன்பப்படுதல்; க=தலை; உணியன்=பலி ஏற்று உண்பவர்; கட்டு= விளக்கம்; உரை=உரைப்பொன் போன்று தூய்மையானவர்; நான்காவது அடி, முதுபதி= தொன்மையனா தலம்; கவுணியன்=திருஞான சம்பந்தரின் ஒரு பெயர்; கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் வந்த பெயர்; காட்டு=கட்டு என்று குறுகியது; காட்டு= ஆன்மாக்களுக்கு உபதேசமாக காட்டிய பாடல்; உரை=உரைத்து பயன் அடைவீர்களாக; காட்டிய என்பதற்கு பெருமானுக்கு நிவேதனமாக சம்பந்தர் காட்டிய பாடல் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலில் மிகுதிப் பட்ட குற்றங்களால் விளையும் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகிய விந்து நீர்களின் சேர்க்கையால் உண்டாகும் உடலுடன் கட்டுண்டு இருக்கும் உயிர்கள், தங்களது வினைகளால் தேய்ந்து முடிவில் ஒரு நாள் உடலினை இழக்கின்றன. இவ்வாறு பிறவி தோன்றி மறைகின்றது. கழுமலத்தின் தலைவராகிய இறைவர், தன்னில் பாதியாக உள்ள அருளின் வடிவமாக உள்ள பராசக்தியின் மூலம், ஆணவமலம் கன்மமலம் மற்றும் மாயாமலம் ஆகிய மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் விளைவுகளை தானே உள்வாங்கிக் கொண்டு அடியேனை ஆட்கொண்டுள்ளார். மாயாமலத்தின் கண் அகப்பட்டு பிறவியின் நோக்கத்தை அறிய முடியாமல் துன்பமடையும் உயிர்களுக்கு அமுதம் போன்று அரியதாக உள்ளவனும், விளக்கமாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவனும், பிரமனின் கபாலத்தில் பலி ஏற்பதற்காக உலகெங்கும் திரிபவனும் ஆகிய இறைவன், உயிர்களின் மீது மிகுந்த கருணை கொண்டுள்ளான். பண்டைய நாளிலிருந்து தொடர்ந்து இருந்து வரும் நகரமாகிய கழுமலம் நகரத்தின் தலைவனாக உள்ள பெருமானின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வழியிலும் ஆன்மாக்களுக்கு உபதேசமாக அமைந்த முறையிலும் சம்பந்தன் இயற்றிய பாடலை பலமுறை படித்து பெருமானின் அருள் பெற்று, உங்களது மலங்களை நீக்கிகொண்டு உய்வினை அடைவீர்களாக.

முடிவுரை:

பொருளாழம் மிகுந்த பாடலாயினும், ஓதுவதற்கு மிகவும் எளிமையான பாடல். நான்கு அடிகளும் ஒன்றே போல இருப்பதால் மனனம் செய்வதற்கும் மிகவும் எளிதான பாடல். இந்த பாடலுக்கு பொருத்தமாக கூறப்பட்டுள்ள வியாழக்குறிஞ்சி பண்ணும் மிகவும் எளிமையானது. மேலும் சிறப்பு வாய்ந்த சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களையும், முறையாக சொல்வதே புண்ணியம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பதிகம் அந்த பன்னிரண்டு பெயர்களையும் நான்குமுறை நாம் ஓதும் வண்ணம் அமைந்துள்ளமையால், ஒதுவோர்க்கு பல மடங்கு பயன்கள் விளையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இந்த பாடலை அடிக்கடி ஓதி, நமது பழைய வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு நிலையான பேரின்பம் அடைவதற்கு தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Piramapuraththu Urai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

பிரமபுரத்துறை பெம்மான்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: