Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - பாடல் 6


நறவ நிறை வண்டு - பாடல் 6


பின்னு சடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்

அன்ன நடையார் மனைகள் தோறும் அழகார் பலி தேர்ந்து

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக

என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

விளக்கம்:

கேழல் எயிறு=பன்றியின் கொம்பு; பிறழ=விளங்க; பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற பெருமான் பன்றியின் கொம்பினை அணிந்தவாறு சென்ற போதிலும், ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர், வந்தவர் சிவபெருமான் என்பதை உணர முடியாமல் பெருமானது அழகில் அவர்கள் மயங்கிய நிலை, இங்கே அழகுடன் பலி தேர்ந்து என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. மடல்=தாழை மடல்; இறைவனின் அழகு தாருகவனத்து இல்லத்தரசிகளை ஈர்த்தது போன்று, இறைவனின் கருணை உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

பின்னப்பட்ட தனது சடைகள் தாழுமாறும், மார்பினில் தான் அணிந்திருந்த பன்றியின் கொம்பு விளங்கிச் தோன்றுமாறும் தாருகவனம் சென்ற பெருமான், ஆங்கிருந்த அன்னம் போன்று நடை உடையவர்களாக விளங்கிய முனிவர்களின் மனைவியர் இருந்த இல்லங்கள் தோறும் தனது அழகான உருவத்துடன் சென்று பிச்சை கேட்டார். இந்த பெருமான் புன்னை மற்றும் தாழை மடல்கள் நிறைந்த சோலைகள் உடைய அழகான நகரமும், புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான் இவரே என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டவர் ஆவார்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - பாடல் 6


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: