இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை

Manimekalai Peedhikai Kandu Pirappu Anantha Kaathai likely explores the themes of identity, heritage, and recognition of one's rightful place in society. The story revolves around Manimekalai, a central character who comes to terms with her true status or role after discovering significant truths about her lineage or position.


ஒன்பதாவது மணிமேகலை மணிபல்லவத்திடைப்

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த பாட்டு


அஃதாவது மணிமேகலை மணிபல்லவத்தில் நறுமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்தவள் அவ்விடத்துப் புதுமையால் பெரிதும் மருண்டு ஞாயிறு தோன்றிய பின்னர் எழுந்து யாங்கணும் திரிபவள் தன்முன்னே தோன்றிய புத்தபீடிகையைக் கண்ணுற்றபொழுது அப் பீடிகையின் தெய்வத்தன்மை காரணமாகத் தனது பழம் பிறப்பு வரலாற்றைக் உணர்ந்துகொண்ட செய்தியைக் கூறுஞ்செய்யுள் என்றவாறு.

இதன்கண் ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ள காரணத்தாலே மணிமேகலை புத்தபீடிகையைக் கண்டவுடனேயே இறையன்பாலே அவட்கெய்திய மெய்ப்பாடுகளும், அதனை அன்புடன் வலம் வந்து நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்தவுடனே தனது முற்பிறப்பின் செய்திகளை எல்லாம் உணர்ந்துகோடலும், முற்பிறப்பிலே பிரமதருமன் என்னும் முனிவனைத் தான் கண்டவாறே தன் அகக்கண் முன்னர்க் காண்டலும், முற்பிறப்பிலே காயங்கரை என்னும் யாற்றின் கரையிலிருந்து அம்முனிவர் பெருமான் தனக் குரைத்தவை எல்லாம் அவ்வாறே நிகழ்கின்றன என்று விம்மித மெய்துதலும், தான் அசோதரம் ஆளும் இரவிவன்மன் என்னும் அரசனுக்கும் அமுதபதி என்னும் அரசிக்கும் மகளாய் இலக்குமி என்னும் அரசிளங்குமரியா யிருந்தமையும்; தான் , சித்திபுரம் என்னும் நகரத்து அரசன் தேவியாகிய நீலபதி என்னும் அரசி வயிற்றிற் றோன்றிய அரசிளங் குமரனாகிய இராகுலனுக்கு வாழ்க்கைத்துணைவியாகியதும் பிறவும் ஆகிய செய்திகள் பலவும் மருட்கையணி தோன்ற மிகவும் அழகாகப் புனைந்துரைக்கப்படுகின்றன.

ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்
காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன
தலைமேல் குவிந்த கையள் செங் கண்
முலை மேல் கலுழ்ந்து முத்தத் திரள் உகுத்து அதின்
இடமுறை மும் முறை வலமுறை வாரா
கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
தொழு தகை மாதவ! துணி பொருள் உணர்ந்தோய்!
காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் 09-010

வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறை கெட வாழும்
அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன்!
ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
தீம் கனி நாவல் ஓங்கும் இத் தீவிடை
இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே!
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இந் நகர் 09-020

நாக நல் நாட்டு நானூறு யோசனை
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக என இரு நில வேந்தனும்
மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே
பறையின் சாற்றி நிறை அருந் தானையோடு
இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
வட வயின் அவந்தி மா நகர்ச் செல்வோன்
காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப 09-030

எம் கோன் நீ ஆங்கு உரைத்த அந் நாளிடைத்
தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
மருள் அறு புலவ! நின் மலர் அடி அதனை
அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய
அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து
உலகு துயர் கெடுப்ப அருளிய அந் நாள்
அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று 09-040

இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்
அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர் போல் தோன்றிய
இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு
பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னைத்
திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை 09-050

ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக் களி மூதூர்ச் சென்று பிறப்பு எய்துதி
அணி இழை! நினக்கு ஓர் அருந் துயர் வரு நாள்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
அன்று அப் பதியில் ஆர் இருள் எடுத்து
தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து 09-060

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என,
சா துயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன்
காதலன் பிறப்புக் காட்டாயோ? என
ஆங்கு உனைக் கொணர்ந்த அரும் பெருந் தெய்வம்
பாங்கில் தோன்றி பைந்தொடி! கணவனை
ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை
ஆங்கு அத் தெய்வதம் வாராதோ? என
ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் 09-071

மணிமேகலை புத்தபீடிகையை வலம்வந்து வணங்கலும் பழம் பிறப்புணர்தலும்

1-8: ஆங்கது.........உணர்ந்து

(இதன் பொருள்) ஆங்கு அதுகண்ட ஆயிழை அறியாள்-அம்மணிபல்லவத்தின்கண் புத்த பெருமானுக்கியன்ற அத் தருமபீடிகையைக் கண்ணாற் கண்டதுணையானே மணிமேகலை நல்லாள் தான் எய்திய துயரங்களைச் சிறிதும் அறியாள் என்பதென்னை? அவள் தன்னை முழுதும் அறியாததொரு நிலையினை எய்தினள்; காந்தள் அம்செங்கை தலைமேல் குவிந்தன-அவளுடைய செங்காந்தள்மலர் போன்ற சிவந்த கைகள் தாமே எழுந்து அவள் தலையின்மேல் கூம்பிக் கும்பிட்டன; தலைமேல் குவிந்த கையள் செங்கண் கலுழ்ந்து முலைமேல் முத்தத்திரள் உகுந்து- தாமே தலைமேலேறிக் குவிந்து கும்பிட்ட சிவந்த கைகளையுடைய மணிமேகலை அன்பு மேலீட்டாலே நெஞ்சுருகி அழுது தன் சிவந்த கண்களினின்றும் கண்ணீர்த்துளிகளை முத்துக்கள் போன்று மிகுதியாக முலைமேற் சொரிந்து; அதினிடம் முறை மும்முறை வலமுறை வாரா-அப் பீடிகையின் மருங்கே சென்று நூல்சொன்ன முறைப் படியே மூன்று முறை அதனை வலமுறையாகச் சுற்றி வந்து; கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன- கொடியுருவமுடைய மின்னலொன்று முகிலோடே நிலத்தில் வந்து பொருந்தினாற் போன்று; இறும் நுசுப்பு அலச ஆங்கு-ஒடிவது போன்று நுணுகிய தன்னிடை வருந்தும்படி அப் பீடிகையின் முன்னர்; வெறு நிலம் சேர்ந்து எழுவோள்- வெற்றிடத்திலே விழுந்து வணங்கி அந்நிலத்தினின்றும் எழுபவள்; பிறப்பு வழுவு இன்று உணர்ந்து- தனது முற்பிறப்பின் வரலாற்றைச் சிறிதும் குற்ற மில்லாமல் நன்குணர்தலாலே; என்க.

(விளக்கம்) அது-அத் தரும பீடிகை. ஆயிழை- மணிமேகலை. அறியாள் என்றது தன்னைக் கவ்விய துயரத்தோடு தன்னையும் அறியாமல் மெய்மறந்தாள் என்பதுபட நின்றது. புத்த பீடிகையைக் கண்டவுடன் மணிமேகலை தன்னை மறத்தற்குக் காரணம் பழவினை காரணமாக அவள் நெஞ்சத்தின்கண் நிகழ்ந்த இறையன்பு மேலிட்டமையே யாகும். ஆகவே இஃது அன்பின் மெய்ப்பாடேயாகும். பண்டும் பண்டும் பல பிறப்புக்களிலே புத்தன்பால் அடிப்பட்டுவந்த அன்புதான் வெளிப்படுதற்கியன்ற ஏது நிகழ்ச்சி எதிர்ந்தமையாலே ஈண்டு மணிமேகலைக்கு நிகழும் மெய்ப்பாடுகள் எல்லாம் அவ்விறையன்பின் மிகுதியால் பிறப்பனவே என்றுணர்க.

இது புதுமை பற்றிவந்த மருட்கை என்னும் மெய்ப்பாடு என்பாரு முளர். அது பொருந்தாது. என்னை? ஈண்டு மணிமேகலையின் பால்நிகழும் மெய்மறத்தலும் கைகுவித்தலும் கண்ணீரரும்பலும் பிறவும் இறையன்பு மிக்குழி யுண்டாகும் மெய்ப்பாடுகளோடு ஒத்திருத்தலும் மருட்கை யுற்றோர்க்கு இம் மெய்ப்பாடுகள் சிறிதும் ஒவ்வாதிருத்தலும் கீழே தரும் எடுத்துக் காட்டுக்களாலே இனிதினுணர்க அவற்றுள் இறையன்பின் மேலீட்டால் நிகழும் மெய்ப்பாடுகளை

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுத லளவின்றால்
(திருத்தொண்டர்-1438)

எனவரும் அருமைச் செய்யுளை ஈண்டு மணிமேகலை நிலைகூறும் பகுதியோடு ஒப்பு நோக்கி யுணர்க.

இனி, மருட்கை யுற்றோர் மெய்ப்பாடுகள் வருமாறு: அற்புத அவிநய மறிவரக் கிளப்பிற் சொற்சோர்வுடையது சோர்ந்தகையது மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய திமைத்தலும் விழித்தலும் இகவாதென் றையமில் புலவர் அறைந்தன ரென்ப என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோளான் (சிலப். 3.12-25) உணர்க. அல்லதூஉம், புதுமை பற்றி வந்த மருட்கையணி முன்னைக் காதையிலே 15 ஆம் அடி முதலாக 43 ஆம் அடிகாறும் கூறிப் போந்தமையும் அறிக.

அதனிடம் முறை எனக் கண்ணழித்து முறை நூன்முறைப்படி என்க. மணிமேகலையின் திருமேனிக்கு மின்னற்கொடியும் அவள் கூந்தலுக்கு முகிலும் உவமை.

இறுநுசுப்பு: வினைத்தொகை. இறும் என்றையுறுதற்குக் காரணமான நுசுப்பு என்க. வெறுநிலம் என்றது வெற்றிடம் என்றவாறு. அலச-வருந்த. வழுவின்றுணர்ந்து என்புழி இன்றி என்னும் குற்றியலிகரம் குற்றியலுகரமாய்த் திரிந்தது.

மணிமேகலை பிரமதருமன் என்னும் முனிவனை முன்னிலைப்படுத்துப் பழம்பிறப்பி னிகழ்ச்சிகளை உரைத்தல்

9-16: தொழுதகை........உரைப்போய்

(இதன் பொருள்) தொழு தகை மாதவ துணிபொருள் உணர்ந்தோய்- அமரரும் முனிவரும் தொழுதற்கியன்ற தகுதியையுடைய பெரிய தவத்தையுடையோய்! தெளிதற்குரிய மெய்ப்பொருளை உணர்ந்த பெரியோய்!; காயங் கரையின் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்- காயங் கரை என்னும் பேரியாற்றின் கரையின்மேல் பூம்பொழிலின்கண்ணிருந்தருளி அடிச்சிக்குத திருவாய் மலர்ந்தருளிய செய்தி எல்லாம் உண்மையே ஆதலே அடிச்சி ஐயமும் திரிபுமாகிய மயக்கஞ் சிறிதும் இல்லாமல் உணர்ந்துள்ளேன்; காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டு பூருவதேயம் பொறைகெட வாழும் காந்தாரம் என்னும் பெயரையுடைய மிகப் பெரிய நாட்டின்கண்ணதாகிய பூருவதேயம் என்னும் நாட்டின்கண் நிலமகட்குப் பொறையாகிய தீவினையாளர் மிகாவண்ணம் செங்கோலோச்சி வாழ்கின்ற; அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன் மைத்துனன் ஆகிய பிரமதரும-அத்திபதி என்னும் பெயரோடு அரசாட்சி செய்கின்ற மன்னனுக்கு மைத்துனனாகிய பிரமதருமனென்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெருமானே! ஆங்கு அவன்றன்பால் அணைந்து அறன் உரைப்போய்-அப் பூருவதேயத்தே அம் மன்னன்பாற் சென்று அறஞ்செவியறிவுறுத்துகின்ற நீதானும்; என்க.

(விளக்கம்) புத்தபீடிகையை வணங்கி எழும்பொழுதே பழம் பிறப்புணர்ச்சியோடே எழுந்த மணிமேகலை முற்பிறப்பிலே தான் காயங்கரை என்னும் யாற்றங்கரையிற் கண்டளவளாவிய பிரமதத்தமுனிவனைத் தனது அகக்கண் முன்னர்க் கண்டு அக்காலத்தே அவன் கூறியவையனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்து வருதலைக் கண்டு அம் முனிவனைப் பாராட்டுபவள் அவனை மாதவ எனவும் உணர்ந்தோய் எனவும் முன்னிலைப்படுத்திப் பாராட்டுகின்றபடியாம். காயங்கரை-ஓரியாறு உரைத்ததை என்புழி ஐகாரம் சாரியை. வாய்-உண்மை. காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டின் கீழ்த்திசை நாட்டை ஆளும் அரசன் எனினுமாம். பூருவம்- கீழ்த்திசை. பிரமதருமன் என்னும் முனிவன் அத்திபதி என்னும் அரசனுடைய மைத்துனனாயிருந்து துறவு பூண்டவன் என்பது இதனாற் பெற்றாம். பிரமதரும என்றது விளி. ஆங்கு-அப் பூருவதேயத்தில். அவன்: அத்திபதி என்னும் அரசன். உரைப்போய்: விளி.

இதுவுமது

17-28: தீங்கனி...........செல்வோன்

(இதன் பொருள்) நீள் நிலவேந்தே தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவு இடை இன்று ஏழ் நாளில்- நெடிய நிலத்தை ஆளுகின்ற அத்திபதியரசே! ஈதொன்று கேட்பாயாக! இனிய கனிதரும் நாவல் மரம் நிலை பெற்று ஓங்கி நிற்கும் இந்நாவலந்தீவினிடத்தே இற்றைக்கு ஏழா நாளிலே; இரு நில மாக்கள் நின்று நடுக்கு எய்த- பெரிய நிலத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் செயலற்று நின்று அச்சத்தால் நடுக்கமுறும்படி; பூமி நடுக்குறூஉம் போழ்தத்து-நிலநடுக்கம் உண்டாகும் அப் பொழுது; இந்நகர் நாக நல் நாட்டு நால் நூறு யோசனை வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்- நினது தலைநகரமாகிய இந்த நகரமும் கிழக்குத் திசையிலமைந்த நாகருடைய நல்ல நாட்டின்கண் நானூறு யோசனை நிலப்பரப்பும் அகன்ற பாதலத்திலே அழுந்தி அழிந்தொழியும் காண்! இதன் பால் ஒழிக என- ஆதலால் இங்கு நின்றும் புறம் போவாயாக! என்று அறிவுறுத்தியருளுதலாலே; இரு நில வேந்தனும்-அது கேட்ட பெரிய நிலத்தை ஆள்கின்ற அத்திபதி யரசன்றானும் நின் பணி தலைமேற்கொண்டு; மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்- மிகமிகப் பெரியதாகிய தனது நகரத்தே வாழுகின்ற தன் குடிமக்கட் கெல்லாம்; ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையில் சாற்றி-அச் செய்தியை அறிவிப்பவன் நுங்கள் ஆக்களையும் ஏனைய விலங்கினங்களையும் கைக்கொண்டு அப்பாற் சென்றுய்யுங்கோள் என்று பறையறைவிக்குமாற்றால் அறிவித்து; நிறை அருந் தானையோடு- தன்பாலமைந்த நிறைந்த வெலற்கரிய நால்வேறு வகைப்படைகளோடே; இடவயம் என்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்- இடவயம் என்னும் தனது பெரிய தலைநகரத்தினின்றும் புறப்பட்டு வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரம் புகச் செல்லுபவன்; என்க.

(விளக்கம்) தீங்கனி நாவலோங்குமித் தீவிடை என்றது நாவலந்தீவத்தை. இதன் பெயர்க் காரணம் தெரித்தோதிய படியாம். இந் நகரும்-என்றது இடவய நகரத்தை. இந் நாகநன்னாட்டு நானூறி யோசனையும் எனல் வேண்டிய எண்ணும்மை தொக்கன. நாக நன்னாடு நாவலந்தீவின் கீழ்த்திசையிற் கடலின்கண்ணமைந்ததொரு பெரிய நாடு. இதனை முன்னைக் காதையினும்(54) கீழ் நில மருங்கின் நரகநாடு என்றுகுறிப்பிட்டமை யுணர்க.

பூமி நடுக்குறூஉம் போழ்தத்து என்றாரேனும் பூமி நடுக்குறும் என்னும் அப்போழ்தத்து என்றும் அறுத்தோதுக. விலங்குகளில் ஆக்கள் தம்முயிர் கொடுத்தும் காப்பாற்றப்படுஞ் சிறப்புடைமை பற்றி அதனைத் தனித்து வாங்கி ஏனையவற்றை மா என்னும் பொதுப் பெயரோ லோதியவாறு ஆவிற்கு அச்சிறப்புண்மையை

ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும்... ...
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்எனா
அறத்தாறு நுவலும் பூட்கை

எனவரும் நெட்டிமையார் கூற்றானும்

பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு

எனவரும் கண்ணகியார் கூற்றானும் (சிலப்-21:53-4) இனிதினுணர்க

இதுவுமது

29-37: காயங்கரை.....அந்நாள்

(இதன் பொருள்) காயங்கரை யெனும் பேரியாற்று அடைகரை சேய் உயர் பூம் பொழில் பாடி செய்திருப்ப-காயங்கரை என்னும் பெரிய யாற்றினது நீரடைகரையிடத்தே மிகவும் உயர்ந்து வளர்ந்துள்ளதொரு பொழிலின்கண் அவ்வரசன் கட்டூரமைத்துப் படைகளோடு தங்கியிருந்தானாக; எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை அந்நகர் தங்காது வீழ்ந்து கேடு எய்துதலும்- எம்பெருமானே நீ இடவயநகரத்தே கூறியவாறே அற்றைக்கு ஏழாநாளிலேயே அவ்விடவய நகரம் சிறிதும் எஞ்சாது பாதலத்திலே நில நடுக்கத்தாலே வீழ்ந்தழிந் தொழிதலும் மருள் அறு புலவ- பேதைமை அற்ற மெய்க்காட்சியாளனே; அரசொடு மக்கள் எல்லாம் நின் மலர் அடியதனை ஈண்டி சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய-அந் நிகழ்ச்சி வாய்மையே ஆதல் அறிந்த அத்திபதி யரசனோடு ஏனைய மக்களும் நின்னுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடியிற் புகல் புகுந்து நின்னைச் சூழ்ந்துகொண்டு வணங்கித் திருவடியிலே வீழ்ந்து நின் புகழ் பலவும் கூறி ஏத்தியதும்; அருள் அறம் பூண்ட ஒரு பேரின்பத்து-ஆதிபகவன் திருவாய் மலர்ந்தருளிய அனைத்துயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதலாகிய அருள் அறத்தை மேற்கொள்ளுமாற்றால் வந்துறும் ஒப்பற்ற பேரின்பத்தை எய்துவித்து; உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள்- நின்னைச் சரண்புகுந்த அம் மக்களே யன்றி இப் பேருலகத்து வாழும் மாந்தரனைவருடைய துயரத்தையும் போக்கி உய்யக் கொள்வான் திருவுளங் கொண்டு அவ்வருளறத்தை எல்லா மக்கட்கும் செவியறிவுறுத்தியதும் ஆகிய அந்தக் காலத்திலே; என்க.

(விளக்கம்) (28) செல்வோன் பாடி செய்திருப்ப என்க. பாடிகட்டூர்; படைவீடு. எங்கோன்: முன்னிலைப் புறமொழி. ஆங்கு-அவ்விடவய நகரத்தில். அந்நாள்-அற்றைக்கு ஏழாநாள். தங்காது- சிறிதும்எஞ்சாமல், சூழ்ந்தனர்: முற்றெச்சம். பூண்டமையால் வந்துறும் ஒரு பேரின்பம் என்க. அஃதாவது நிருவாண நிலை. அதனை எய்தினாலன்றித் துயரம் போகாமையின் அதனை ஏதுவாக்கினார். தாழ்ந்து பல ஏத்தியதும் அருளியதும் ஆகிய அந்நாள் என இயைக்க. அந்நாள் என்றது அந்தக்காலத்திலே என்பதுபட நின்றது.

மணிமேகலை தன் முற்பிறப்பின் வரலாறு கூறுதல்

38-47: அரவ.....பணிதலும்

(இதன் பொருள்) அரவக் கடல் ஒலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒரு பெருந்தேவி- ஆரவார முடைய கடல் இடையறா தொலிக்குமாறு இடையறாத பேராரவாரமுடைய அசோதரம் என்னும் நகரத்திருந்து அரசாட்சி செய்கின்ற இரவிவன்மன் என்னும் அரசனுடைய முதன் மனைவியாகிய கோப்பெருந்தேவி அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்- செம்பஞ்சிக் குழம்பூட்டிய சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவளுடைய வயிற்றிலே அடிச்சி இலக்குமி என்னும் பெயருடையேனாய்ப் பிறந்திருந்தேன்; அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி அடிச்சிக்குப் பெதும்பைப் பருவம் வந்துற்றபோது யான், அத்திபதி என்னும் அரசனுடைய கோப்பெருந் தேவியும்; சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்- சித்திபுரத்தில் ஆட்சி செய்யும் சீதரன் என்னும் அரசனுடைய அழகிய மகளும் ஆகிய; நீலபதி என்னும் நேர் இழைவயிற்றின் காலை கதிர் ஞாயிறு போல் தோன்றிய- நீலபதியென்னும் நேரிய அணிகலன் அணிந்த அரசியின் திருவயிற்றிலே காலையில் தோன்றும் கதிர்களையுடைய ஞாயிறு போல் தோன்றிய; இராகுலன் தனக்குப் புக்கேன- இராகுலன் என்னும் கோக்குமரனுக்கு வாழ்க்கைத் துணையாகப் புகுந்தேன்; அவனோடும் பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்; ஒருநாள் என் கணவனாகிய இராகுலனோடு வந்து யான் நின்னைக் கண்டு புகழ்தற்கரிய முறைமையினையுடைய நின் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினேனாக அப்பொழுது என்க.

(விளக்கம்) அரவக்கடல் போன்ற ஒலியினையுடைய அசோதர நகரம் என்க. அலத்தகம்- செம்பஞ்சிக் குழம்பு. அமுதபதி: பெயர். இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன் என்றாரேனும் பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன் என்பது கருத்தாகக் கொள்க.

சீதரன்- சீதர மன்னன். காலைக் கதிர் ஞாயிறுபோல் என்க. புக்கேன் என்றது வாழ்க்கைத் துணைவியாகப் புக்கேன் என்றவாறு. பராவு அரும்-பராவுதல் அரிய.

இதுவுமது

48-57: எட்டிரு........வைத்தலும்

(இதன் பொருள்) எட்டு இரு நாளின் இவ் விராகுலன் தன்னை திட்டிவிடம் உண்ணும்- எம்பெருமான் அடிச்சியை நோக்கி இற்றைக்குப் பதினாறாநாள் நின் கணவனாகிய இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் நாகம் உயிர் பருகிவிடும்; செல் உயிர் போனால் சேயிழை அவனொடு தீ அழல் மூழ்குவை- செல்லுதற்குரிய போகூழ் தலைப்பட்ட நின் கணவன் உயிர் போனக்கால் நீ அவனோடு ஈமத் தீயாகிய நெருப்பில் முழுகி உயிர் துறப்பாய் காண் என்றும்; ஈங்கு ஏது நிகழ்ச்சி இன்று ஆதலின்- அப்பால் இந் நாட்டில் நினக்குப் பழவினையாலுண்டாகும் நிகழ்ச்சி யாதும் இல்லையாதலின்; கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர் சென்று பிறப்பு எய்துதி- நீ கவேரன் மகவாகிய காவிரியின் பெயரை அடை மொழியாகப் பெற்றுக் கெடாத மகிழ்ச்சியையுடைய பழைமையுடைய காவிரிப்பூம் பட்டினத்திலே போய்ப் பிறப்பாய் காண் என்றும்; அணியிழை நினக்கு ஓர் அருந்துயர் வருநாள் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அழகிய அணிகலன்களையுடைய இலக்குமியே இன்னும் கேள், இம்மை மாறி மறுமையாகி அந்தப் பிறப்பிலே நின்னால் கடத்தற் கரிய ஒப்பற்ற துயர் (ஒன்று வந்துறும்) வந்துறுகின்ற அந்த நாளிலே, மணிமேகலா தெய்வம் என்னும் நின்குல தெய்வம் தானே நின்னை அத் துயரத்தினின்றும் எடுத்து நன்னெறிப் படுத்துதற்கு எளிவந்து நின் கண்முன் தோன்றி; அன்று அப்பதியின்ஆர் இருள் எடுத்துத் தென் திசை மருங்கில் ஓர் தீவு இடைவைத்தலும்- அற்றை நாளிலேயே நள்ளிரவிலே நின்னை எடுத்துப் போய்த் தென்திசையிலமைந்த ஒரு தீவின்கண் இட்ட பின்னர்; என்க.

(விளக்கம்) இராகுலன்- முற்பிறப்பில் இலக்குமியா யிருந்த மணிமேகலையின் காதலன். எட்டிருநாள்- பதினாறாம் நாள். இதனால் பிரமதத்த முனிவர் இந் நிகழ்ச்சிகளை அவள் கணவன் அறியாவண்ணம் இலக்குமிக்கு மட்டும் தனித்துக் கூறியதாதல் வேண்டும் என்று கருதுக. செல்லுயிர் என்றாள் இறந்துபாடுறும் போகூழ் வந்தெய்தப் பெற்ற உயிர் என்பதறிவித்தற்கு.

திட்டிவிடம்- தன் நோக்கம் பட்ட துணையானே உயிர்கள் இறந்து படுதற்குக் காரணமான கொடிய நச்சுத் தன்மையை நோக்கத்திலேயே கொண்டிருக்கும் ஒரு நாகப் பாம்பு. இதனால் இதற்குத் திட்டி விடம் என்பதே பெயராயிற்று. புத்தர் பிறந்த பிறப்புக்களிலே திட்டிவிடம் என்னும் நச்சுப் பாம்பாகப் பிறந்து கண் விழித்தாற் பிறவுயிர் சாமென்றஞ்சிக் கண் விழியாதே கிடந்தார் என்னும் ஒரு கதை புத்தசாதகக் கதையிலுள தென்பது நீலகேசி உரையிற் காணப்படுதலு முணர்க.

திட்டிவிட மன்ன கற்பின் செல்வியை

என்பது கம்பர் வாக்கு;(தாடகை-10)

கவேரன் என்னும் அரசன் தவம் செய்து பெண் காவிரிநதி யாகினள் என்பது பௌராணிக மதம். கவேரகன்னிப் பெயரொடு விளங்கிய மூதூர் என்றது காவிரி என்னும் அடைபுணர்த்தோதப்படும் காவிரிப் பூம்பட்டினத்தை. அருந்துயர் என்றது- கடத்தற்கரிய துயரம் என்றவாறு. அஃதாவது உதயகுமரன் மணிமேகலையின்பாற் கழிபெருங்காமமுடையவனாய் அவளைக் கைப்பற்ற முயன்றதனை. மணிமேகலையின் நெஞ்சமும் அவன் பின்னர்ப் போனமையால் அஃது அவளால் கடந்தற்கரிய துயர் ஆயிற்றென்பார் ஆயிழை நினக்கோர் அருந்துயர் வரும் நாள் என்று பிரமதத்த முனிவர் அறிவித்தனர் என்றவாறு. அப் பதி- பூம்புகார் நகரம். தீவு- மணிபல்லவம்.

பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என- அற்றைநாட் பகற் பொழுதிலேயே உன்னுடைய இப்பிறப்பின் வரலாற்றினை உணர்ந்து மேலும் இற்றைநான் இங்கியான் உனக்குக் கூறகின்ற இம் மொழி யெல்லாம் வாய்மையே ஆதலையும் நீலே உணர்ந்து கொள்வாய் என்றும் கூறாநின்றனை என்றாள் என்க.

(விளக்கம்) வேகம்-சினமிகுதி. திறல்- போர் செய்யும் ஆற்றல். மனமாசு-அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்குமாம். மறச்செவி-தீயவற்றைக் கேட்டற்கவாவும் செவி. இது பயிற்சியா லெய்துமொரு வழக்கம். அறச்செவி-அறங்கேட்டற்கு அவாவுடைய செவி. இதுவும் பயிற்சியா லெய்துவதேயாம். பிறவிப்பிணி மருத்துவன்- பிறவிநோய் தீர்தற் கியன்ற நல்லற மருந்துகளை ஊட்டி மீண்டும் பிறவிப்பிணி வாராமற் செய்யும் மருத்துவனாகிய புத்த பெருமான். ஈங்கு என்றது முற்பிறப்பிலே பிரமதத்த முனிவரைக் கண்ட இடத்தை. உரை வாயேயாதலை நீயே தெளிந்து கொள்ளுவாய் என்று நீ கூறியவாறே இற்றைநாள் காயங்கரையின் நீ உரைத்ததை யெல்லாம் வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன் என்று முன்பே நுதலிப் புகுதல்(10-11) ஈண்டு நினைக.

(முற்பிறப்பிலே இலக்குமி யாகிய) மிணமேகலை பிரமதத்தனை வினவினமையும் அவன் கூறிய மாற்றமும்)

45-71: சாதுயர்....தானேன்

(இதன் பொருள்) சாதுயர் கேட்டுத் தளர்ந்து உகும் மனத்தேன் காதலன் பிறப்பும் காட்டாயோ என-என் ஆருயிர்க் கணவன் திட்டிவிடத்தாற் சாதலும் யான் தீயினிற் புகுந்துசாதலும் ஆகிய சாதற்றுன்பங்களைக் கேட்டு அப்பொழுதே தளர்ந்துருகி ஒழுகும் மனத்தை யுடையேனாகிய யான் பெரும்! அடிச்சியின் மறுபிறப்பிஃதொன்று மட்டும் கூறியருளினை அதனினும் காட்டில் யான் பெரிதும் அறிந்துகொள்ள விரும்புகின்ற என் காதலன் மறுமையில் எய்தும் பிறப்பினையும் அறிவித்தருள மாட்டாயோ? என்று நின்னை அவலத்தோடு வினவ; ஆங்கு உனைக்கொணர்ந்த அரும் பெருந்தெய்வம் பாங்கின் தோன்றி ஈங்கு இவன் பைந்தொடி கணவனை என்னும் என்று எடுத்து ஓதினை- அது கேட்ட நீ அம் மணிபல்லவத்திற்கு உன்னை கொண்டுவந்த அந்த மாபெருஞ் சிறப்புடைய மணிமேகலா தெய்வத்தானே மீண்டும் நின்பக்கலிலே வந்து தோன்றி இன்ன விடத்துப் பிறந்திருக்கின்ற இன்ன பெயருடையவனே நின் கணவனாகிய இராகுலன் என்று அறிவிக்கும் என்று எடுத்துக்கூறா நின்றனை; ஆங்கு அத்தெய்வம் வாராதோ என இளங்கொடி ஏங்கினள் அழூஉம் நீ கூறியாங்கு அவ்வரும் பெருந் தெய்வம்(இப்பொழுது என்பக்கலிலே வரற்பாலது) வாராதொழியுமோ? என இளமையுடைய அம் மணிமேகலை பின்னும் தன் பேதைமை காரணமாக ஏங்கி அழாநின்றனள்; என்பதாம்.

(விளக்கம்) (48) எட்டிரு நாளிலிவ் விராகுலன் திட்டி விட முணும் என்பது முதலாக(64) இன்றியான் உரைத்த உரை தெளிவாய் என்பதீறாக நீ காயங்கரையில் உரைத்தவை எல்லாம் வாயே ஆகுதல் மயக்கற வுணர்ந்தேன். பின்னர் அரும் பெருந் தெய்வம் பாங்கிற்றோன்றி ஈங்கு இவன் என்னும் என்று எடுத்தோதினை அல்லையோ! அத் தெய்வம் வரக் கண்டிலேன் அது மட்டும் பொய்ப்ப ஒரோ வழி வாரா தொழியுமோ என்று சொல்லி ஏங்கி அழுதனள் என்றவாறு.

காதலன் சாவாகிய துயர் கேட்டு என்றவாறு. காதலன் பிறப்புங் காட்டாயோ? என்றது என் பிறப்புக் காட்டினை அங்ஙனமே காதலன் பிறப்புங் காட்டாயோ என்பதுபட நின்றது. பைந்தொடி முன்னிலைப் புறமொழி. கணவனை: ஐகாரம் அசைச் சொல். நின் கணவன் இன்னவிடத்தே பிறந்து இப் பெயரோடிருக்கும் இவன் என்று நினக்குக் கூறும் என்று எடுத்தோதினை என்றவாறு. அது மட்டும் பொய்க்குமோ என்னையுற்றேங்கி அழுதனள் என்க.

இனி, இக் காதையை-ஆங்கு அது கண்ட ஆயிழை அறியாள் கைதலைமேற் குவிந்தன, குவிந்த கையள் வலமுறை வாராச் சேர்ந்து எழுவோள் உணர்ந்து மாதவ உணர்ந்தோய் நீ உரைத்ததை எல்லாம் வாயே ஆகுதல் உணர்ந்தேன், பிரமதரும! உரைப்போய் இந்நகர் கேடெய்தலும், புலவ அருளிய அந்நாள் கேடெய்தலும் ஒழிகெனச் சாற்றிச் செல்வோன் இருப்ப நீ உரைத்த நாளிடைகேடெய்தலும், புலவ அருளிய அந்நாள் பிறந்தேன் புக்கேன் பணிதலும், விடமுணும் மூழ்குவை ஈங்கின்றாதலின் சென்று பிறப்பெய்துதி துயர்வருநாள் தெய்வம் தோன்றி எடுத்து வைத்தலும் சென்று தொழுதி தெளிவாய் என, தளர்ந்துகு மனத்தேன் காட்டாயோ என, தெய்வம் தோன்றி இவன் என்னும் என்று ஓதினை அத் தெய்வம் வாராதோ என இளங்கொடி அழூஉம் என்றியைத்திடுக.

பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று.


Key Elements

Manimekalai's Recognition: The narrative focuses on Manimekalai's recognition of her rightful place or status, which could be related to a throne, a position of power, or a significant role within a community or kingdom.

Realization of Identity: The story includes Manimekalai's realization of her true identity or heritage. This realization might come after a period of uncertainty or disguise, leading to a deeper understanding of her own origins and purpose.

Setting and Context: The setting may involve a kingdom or a significant location where Manimekalai’s recognition takes place. The context might include political or social dynamics that influence her understanding of her role and heritage.

Themes: Key themes include identity, heritage, destiny, and the journey of self-discovery. The narrative may explore how understanding one's true nature and position affects personal growth and fulfillment.

Resolution: The story likely concludes with Manimekalai embracing her true identity and role, leading to a resolution that reflects her newfound understanding and acceptance. This could involve taking on a leadership role, fulfilling a destiny, or achieving personal clarity.

Significance

Exploration of Identity: Manimekalai Peedhikai Kandu Pirappu Anantha Kaathai delves into themes of self-discovery and the importance of understanding one’s true identity. It highlights the impact of realizing one's heritage and rightful place.

Cultural and Historical Insights: The narrative provides insights into cultural and historical aspects of leadership and lineage. It reflects the significance of heritage and status in shaping individual roles and societal expectations.

Educational and Inspirational Value: The story serves as an educational and inspirational tale about personal growth and the journey of recognizing one's potential and destiny. It encourages readers to reflect on their own identities and roles in their communities.

Conclusion

Manimekalai Peedhikai Kandu Pirappu Anantha Kaathai is a narrative that explores Manimekalai’s journey of recognizing her true status and heritage. Through themes of identity, heritage, and self-discovery, the story highlights the significance of understanding one’s rightful place and the impact of such realizations on personal growth and fulfillment. It offers cultural, historical, and educational insights, reflecting on the journey of embracing one's true nature and destiny.



Share



Was this helpful?