Digital Library
Home Books
Naladiyar is a classic Tamil poetic work belonging to the post-Sangam period, specifically within the group of works known as the Patinenkilkanakku anthology. The title "Naladiyar" translates to "Four Hundred Quatrains," referring to the collection's structure of 400 quatrains (four-line verses).
(நானூறு சமண முனிவர்கள்)
உரையாசிரியர் : ஊ.புட்பரதச் செட்டியார்
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்பட்டன. நாலடியாரும் அவற்றுள் ஒன்று. முப்பொருள்களையும் சிறப்புற நான்கடிக்கு மிகாமல் உரைப்பது கீழ்கணக்கு நூல்களின் சிறப்பாகும். இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது.
கடவுள் வணக்கம்
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
(இ-ள்) வான் இடு வில்லின் - மேகத்தில் உண்டாகிய இந்திரவில்லைப் போன்ற, வரவு அறியா - (உடம்பின்) தோற்றத்தை அறிந்து, வாய்மையால் - சத்தியத்தினால், கால் நிலம் தேயா - பாதம் பூமியிற் படியாத, கடவுளை - தேவனை, எம் உள்ளத்து - எமது மனதில், முன்னியவை முடிக என்று - நினைத்த காரியங்கள் கைகூட வேண்டுமென்று சொல்லி, யாம் - நாம், நிலம் சென்னி உற - தரையில் தலை பொருந்தும்படி, வணங்கி சேர்தும் - தெண்டமிட்டுச் சேர்வோம். எ-று.
வானத்தில் தோன்றுகின்ற வில்லானது இப்போதென்றும் இன்னபடியென்றும் தெரியாமல் உண்டாகி உரு அழிந்து போவது போல் உடம்பும் அழிந்து போவதனால் அது அழியா முன்னமே நினைத்த காரியங்கள் கைகூடும்படி கடவுளை நாம் பணிந்து சேர்வோம் என்பது கருத்து.
கால் நிலத் தோயாமைக்குக் காரணம் வாய்மை. தேவதைகளின் பாதம் பூமியிற் படியாதென்று சாஸ்திரஞ் சொல்லும். இங்கு கடவுளை என்பது அருகனை. இக்காப்பு பதுமனார் செய்ததென்பர்.
இடு - வினைத்தொகை. வில்லின் - இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது. அறியா - செய்யா என்னும் வினையெச்சம். முன்னியவை - வினையாலணையும் பெயர், முன்னு - பகுதி, இ - இன் இடைநிலையின் ஈறு குறைந்தது, அ - சாரியை, வை - விகுதி. என்று - சொல்லெச்சம். சேர்தும் - தனித் தன்மைப்பன்மை வினைமுற்று; உயர்வினால் வந்தது பன்மை. முடிக - வேண்டிக் கோடலில் வந்த வியங்கோள்.
அறத்துப்பால்
அறத்துப்பால் - தருமத்தை விளைக்கும் பாகம் என உருபும் பயனு முடன் தொக்க தொகையா விரியும். அறமாவது மநு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும். விலக்கியன ஒழிதலுமாம்.
1. துறவற இயல்
1. செல்வ நிலையாமை
[அதாவது செல்வம் நிலையல்ல வென்பதைக் குறித்துச் சொல்லியது. செல்வநிலையாமை - செல்வத்தின் நிலையாமையைத் தெரிவிக்கிற அதிகாரம். அதிகாரம் - தலைமை; செல்வநிலையாமையைத் தலைமையா வைத்துச் சொல்லிய பாடல் என்பது திரண்ட பொருள். மற்றவைகளு மிப்படியே.]
1. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.
(இ-ள்.) அறுசுவை உண்டு - (தித்திப்பு முதலிய) ஆறு உருசிகளையுமுடைய போசனத்தை, இல்லாள் அமர்ந்து ஊட்ட - பெண் சாதி அன்பு கொண்டு உண்பிக்க, மறு சிகை நீக்கி - மற்றொரு கவளத்தைத் தள்ளி, உண்டாரும் - உண்ட செல்வர்களும், வறிஞர் ஆய் - தரித்திரராகி, ஓர் இடத்து சென்று இரப்போர்களாகில், செல்வம் ஒன்று - செல்வமென்கிற ஒரு பொருள், உண்டு ஆக - நிலையாயிருக்கிறதாக, வைக்கல் பாற்று அன்று - வைக்கும்படியான தன்மையுடையது அல்ல, எ-று.
பரிசாரகர் பலரிருக்கையிலும் இல்லாளே அன்பு கூர்ந்து பல இன்சொற்களோடு வேண்டி உண்பிக்கையில் ஒருவகையுண்டியில் ஒரு கவளமேயன்றி மற்றொன்றை நீக்கிப் புசித்த மிக்க செல்வமுடையவர்க்கும் வேறோரிடத்திற் போய் கூழையிரக்கும்படி நேரிடுமானால் செல்வமென்பது நிலையான பொருளென்று நினைக்கத் தக்கதல்ல என்பது கருத்து.
அறுசுவை - இரண்டனுருபும் பயனு முடன் தொக்க தொகை; அறுசுவை - பண்புத்தொகை. உண்டி - உண் - பகுதி, இ - செயப்படுபொருள் விகுதி, ட் - எழுத்துப் பேறு. இல் = இல்லறம், அதற்கு உரியவள் இல்லாள். ஊட்ட - பிறவினை வினையெச்சம்; உண் - பகுதி, டு - பிறவினை விகுதி, முதல் நீட்சி - விகாரம்; ஆக ஊட்டு - பிறவினைப் பகுதி. சிகை = குடுமி, பிசைந்த அன்னத்தில் எடுக்குங்கவளம் அதுபோல் தோன்றுதலால் ஆகுபெயராய்க் கவளத்தை யுணர்த்திற்று. வறிஞர் - ஞகரம் பெயர்ப்பகுபத இடைநிலை. "இலக்கியங் கண்டதற்கு" [நன். பதவி. சூ.14]. உண்டு - குறிப்புமுற்று. வைக்கல் - தொழிற்பெயர்; வைக்கலாகிப் பால் = வைக்கற்பால், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை; பால் - தன்மை, அதனையுடையது வைக்கற்பாற்று; று - ஒற்றன்பால் விகுதி, குறிப்புமுற்று; இது அன்று என்பதோடு சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு எதிர்மறை வினைமுற்றாயிற்று.
2. துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
(இ-ள்.) செல்வம் - அகடு உற - நடுவுநிலைமை பொருந்த, யார் மாட்டும் - யாரிடத்திலும், நில்லாது - நிற்காமல், சகடக்கால் போல - பண்டியின் சக்கரம்போல, வரும் - (கீழ்மேலாகவும் மேல் கீழாகவும்) மாறி வரும்; (ஆதலால்) துகள் தீர் பெருஞ் செல்வம் - குற்றமற்ற பெரிய செல்வமானது, தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - (அது) தொடங்கி, பகடு நடந்த கூழ் - எருமைக்கடாக்கள் உழைத்ததனாலுண்டாகிய சோற்றை, பல்லாரோடு உண்க - (ஏழைகள்) பலரோடு (கூடி) உண்ணக்கடவர்கள், (செல்வம் தோன்றியவர்கள்), எ-று.
செல்வம் சகடக்கால்போல் தாழ்ந்து முயர்ந்தும் நிலையின்றி வருவதாதலால் அச்செல்வ முண்டான காலந்தொட்டுப் பலருக்கு மிட்டுத் தாமு முண்பது நலம் என்பது கருத்து.
தோன்றியக்கால் - எதிர்காலவினையெச்சம்; தொட்டு என்பதோடு அது என்பதை வருவித்துக் கூட்டுக. பகடு நடந்த கூழ் என்பது கடாவின் உழைப்பினாலுண்டான சோற்றில் ஒருவருக்கு மாத்திரஞ் சுதந்திரம் வேண்டாமென ஓரெளிமையைக் காட்டுதற்கு, நடந்த என்னும் பெயரெச்சம் காரியப் பெயரைக் கொண்டது. "அறுபொருட் பெயரும் எஞ்சநிற்பது பெயரெச்சம்" என்பதில் உம்மையை எச்சப் பொருளதாவைத்து, பிறபெயரும் என்று உரைத்திருப்பதைக் காண்க. நில்லாது - முற்றெச்சம்; எதிர்மறை வினையெச்சமுமாம். துகள் தீர் என்பதில் தீர் வினைத்தொகை யாதலின் பகரம் இரட்டியாது நின்றதென உணர்க.
3. யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
(இ-ள்.) யானை எருத்தம் பொலிய - யானையின் பிடரானது விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடையினது நிழலிலே, சேனை தலைவராய் சென்றோரும் - சேனைகளுக்கு அதிபதியாகிச் சென்ற அரசர்களும், ஏனை வினை உலப்ப - மற்றவினை [தீவினை] கெடுப்பதனால், வேறு ஆகி - (முன்னிருந்த நிலையினின்றும்) வேறுபட்டு, தாம் கொண்ட மனையாளை - தாங்கள் கலியாணஞ் செய்து கொண்ட மனைவியை, மாற்றார் கொள - பகைவர் கொண்டு போக, வீழ்வர் - கெடுவார்கள், எ-று.
சேனைகள் சூழ்ந்து வர யானை மேல் செல்லும் பெருஞ் செல்வமுடைய அரசர்களும் அந்த நல்வினை போய்த் தீவினை வரும்போது தம் மனையாளுந் தமக்கு உதவாதபடி பிறர் கொண்டு போக வறுமையும் சங்கடமும் அடைவர் ஆதலால், செல்வஞ் சதமன்றென நோக்கி அது கிடைத்த போது தரும சிந்தையோடிருக்க வேண்டும் என்பது கருத்து.
எருத்தத்தில் பொலிய என உரைக்கவுங் கூடும். பொலிய என்னும் வினையெச்சம் சென்றோர் என்பதற்கு உரியா நின்றது. கீழ் - ஏழனுருபு. உம்மை - உயர்வு சிறப்பு. செல்வம் நல்வினைப் பயனாதலின் ஏனை என்பது தீவினைக்காயிற்று. உலப்ப - இதுவேறாகி என்பதற்குங் காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். கொள - இது வீழ்வர் என்பதற்குக் காரணம்.
4. நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
(இ-ள்.) வாழ் நாள் - ஆயுள், சென்றன சென்றன - நிச்சயமாய் விரைவில் போகாநின்றன; கூற்று - எமன், செறுத்து - கோபித்து, உடன் வந்தது வந்தது - கூடவே நிச்சயமாய் வரக் காத்திருக்கிறது; (ஆதலால்) நின்றன நின்றன - இருக்கின்றன இருக்கின்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள், நில்லா என உணர்ந்து - அப்படி நிற்க மாட்டா [அழியும்] என்று அறிந்து, ஒன்றின ஒன்றின - உங்களுக்குச் செய்யக் கூடியவையாகப் பொருந்தின தருமங்களை, செயின் - செய்யப் புகுந்தால், வல்லே செய்க - துரிதமாய்ச் செய்யக் கடவீர்கள், எ-று.
கூடிய நற்காரியங்களைச் செய்ய வேண்டின் சீக்கிரஞ் செய்ய வேண்டும், ஆகட்டும் பின் செய்வோ மென்றால் நாம் ஸ்திரமென்று நினைக்கிற பொருள்கள் அழிந்து போகின்றன. அன்றியும் நமக்கும் நாளேற ஆயுள் குறுக எமன் கொண்டு போகக் காத்திருக்கிறான், பின்பு நாம் ஒன்றுஞ் செய்ய முடியாது என்பது கருத்து.
சென்றன சென்றன என்னும் அடுக்கு விரைவைக் காட்டுகின்றது. நிச்சயம் பற்றி நிகழ்காலத்தில் இறந்தகாலம் வந்தது. வந்தது வந்தது என்பதும் அப்படியே; ["விரைவினுமிகவினும்" பொது. சூ.33] நின்றன நின்றன என்பதில் முதலது முற்றெச்சம், இரண்டாவது வினையாலணையும் பெயர், இங்கும் முன்போல் காலவழுவமைதி; அங்ஙனம் நினைக்கப் பட்டன என்று பிரகரணத்தால் கொள்ளப்பட்டது. ஒன்றின ஒன்றின என்னும் அடுக்கு அப்போது அப்போது எனக் கால பேதத்தைக் குறித்து வந்தது. வல்லே - இடைச்சொல். கூற்று - சொல்லளவில் அஃறிணையாய் உயர்திணைப் பொருளை யுணர்த்துகின்றது.
5. என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.
(இ-ள்.) என் ஆனும் ஒன்று - ஏதாகிலும் ஒரு பொருள், தம்மை உற பெற்றக்கால் - தமது கையிற் சேரப் பெற்றால், பின் ஆவது என்று - (இதனைக் கொடுப்பது) பிற்காலத்திலாகட்டுமென்று, பிடித்து இரா - பிடித்து வைத்திராமல், முன்னே கொடுத்தார் - முந்தியே கொடுத்தவர்கள், கோடு இல் தீ கூற்றம் - கோணுதலில்லாத தீய எமன், தொடுத்து செல்லும் - கயிற்றாற் கட்டிப் போகின்ற, சுரம் ஆறு - பாலைநில வழியினின்றும், உயப் போவர் - தப்பிப் போவார்கள், எ-று.
பிறர்க்குக் கொடுக்கத்தக்கதாகக் கையிலோர் பொருள் கிடைத்த போதே அதனைக் கொடுப்பவர் எமன் கொண்டு போகுங் கொடிய வழியினின்று தப்பி நல்ல நல்ல நெறியிற் செல்வர், அதாவது சுவர்க்க நெறியிற் செல்வர் என்பது கருத்து.
சுரம் - காய்ச்சலான என்னவுமாம். தொடுத்த ஆறு என்பது தொடுத்தாறு என்று ஈறு தொகுத்தலாய் கொண்டு கட்டிய படியே எனவு முரைக்கலாம்.
தான் கொண்ட கொள்கையைச் சிறிதும் பிசகாமல் நிறைவேற்றுதலால் "கோடு இல் தீங்குற்றம்" என்றது. பாலை நிலமாவது சிறிதும் நீர் நிழல்களில்லாத வெட்டவெளி. சுரம் என்பது 'ஜ்வரம்' என்கிற ஆரியத்தின் திரிபு. என் என்பது இடை குறைந்த எவன் என்னுங் குறிப்பு முற்றினாலணையும் பெயர். ஆனும் என்பது விகற்பப் பொருளில் வந்ததோ ரிடைச் சொல். ஆவது என்பது இங்கு வியங்கோளாக் கொள்ளத்தக்கது. எதிர்கால முற்றாக் கொள்ளினும் கொள்ளலாம். பொருள் சிறிது சுற்றாம்.
6. இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
(இ-ள்.) இழைத்த நாள் - (ஆயுளாக) ஏற்படுத்திய நாட்கள், எல்லை இகவா - தமது எல்லையைக் கடக்கமாட்டா; கூற்றம் ஒரீஇ - எமனை விட்டு பிழைத்து - தப்பி, குதித்து உய்ந்தார் - குதித்து ஓடிப்போனவர்கள், ஈங்கு இல்லை - இவ்வுலகத்திலில்லை; ஆற்ற - நிரம்ப, பெரும் பொருள் வைத்தீர் - மிகுந்த திரவியத்தைச் (சேர்த்து) வைத்திருப்பவர்களே! வழங்குமின் - கொடுங்கள், நாளை - நாளைக்கே [சீக்கிரத்தில்], தண்ணம் - பிணப்பறையானது, தழீஇம் தழீஇம் - தழீந்தழீ மென்னு மோசையாக, படும் - அடிக்கப்படும், எ-று.
ஒருவனுக்கு நிர்ணயித்த ஆயுசு ஒரு நிமிஷமும் மேலோடா தாகையால் எமனுக்குத் தப்பிப் பிழைத்தவரில்லை. நீரும் இறந்து போவதற்கு முன்பே பரோபகாரமாகப் பொருளைக் கொடுங்கள் என்பது கருத்து.
தண்ணம் படுமென்றது சாவுக்குக் குறிப்பு. ஆற்ற - வினையுரியா வந்த வினையெச்சம். வைத்தீர் - முன்னிலை வினையாலணையும் பெயர். நாளை என்பது காலவிரைவைக் காட்டியது. வழங்குமின் - மின் - ஏவற்பன்மை விகுதி.
7. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.
(இ-ள்.) கூற்று - இயமன், தோற்றம் சால் ஞாயிறு - பிரகாச மிகுந்த சூரியனை, நாழிஆ - படியாகக் கொண்டு, வைகலும் - தினந்தோறும், நும் நாள் அளந்து உண்ணும் - உமது ஆயுளை அளவிட்டுத் தின்கிறது; (ஆதலின்) ஆற்ற அறம் செய்து - மிகுதியாகத் தருமத்தைச் செய்து, அருளுடையீர் ஆகுமின் - கிருபையுள்ளவர் ஆகுங்கள், (அப்படியாகாமற் போனால்) யாரும் - எப்படிப்பட்டவரும், பிறந்தும் - மனிதராய்ப் பிறந்தும், பிறவாதாரில் - பிறவாதார் போலவே (ஆவர்), எ-று.
ஜனங்களே! ஆயுள் சீக்கிரத்திற் கழிந்து போகின்றது; அப்படி கழியா முன்னமே பரோபகார முதலிய தருமங்களைச் செய்து உயிர்க்கு உயிராகிய கிருபை உள்ளவரென்று பலருஞ் சொல்லும்படி ஆகுங்கள்; அப்படி ஆகாமற் போனால் தருமங்களைச் செய்யக் கூடிய மனிததேக மெடுத்தும் உபயோகமில்லை என்பது கருத்து.
சூரியன் உதயமாவதனாலே நாளுண்டாகி அழிவதால் சூரியனை அளவுக் கருவியாகவும், அது அழிய ஆயுசு குறைந்து போவதனால் கூற்ற முண்ணுமென்றும் ரூபித்தார். 'அறஞ்செய் தருளுடையீராகுமின்' என்பதை விகுதி பிரித்தல் என்கிற நியாயத்தினால் 'அருளுடையீராகி அறஞ் செய்மின்' என்று மாற்றிப் பொருளுரைத்தல் நேர். பிறவாதாரில் - ஐந்தனுருபு, ஒப்புப் பொருளில் வந்தது. சால் ஞாயிறு - உரியடியாகப் பிறந்த வினையின் தொகை, உரித்தொடரென்பதே நேர். வைகலும் - உம்மை முற்றுப் பொருளில் வந்தது.
8. செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
(இ-ள்.) செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையவராயிருக்கிறோமென்று நினைத்து, தாம் செல் உழி - தாம் போகுமிடங்களில், எண்ணாத - (பிறரை) மதியாத, புல் அறிவாளர் - அற்பபுத்தியுள்ளவர்களுடைய, பெருஞ் செல்வம் - பெரிய சம்பத்தும், எல்லில் - இரவில், கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுபோல் - கருமையாகிய மேகம் வாய் திறப்பதனாலுண்டாகிய மின்னலைப் போல, தோன்றி - காணப்பட்டு, மருங்கு அற இருந்தவிடம் தெரியாமல், கெட்டுவிடும் - அழிந்துபோம், எ-று.
செல்வச் செருக்கினால் பிறரை மதியாத அற்பருடைய செல்வம் மின்னல் தோன்றி அழிவது போல் விரைவில் அழிந்து போம் என்பது கருத்து.
ஜனங்களுடைய தோற்றத்திற்கு வாய் திறந்து விடுவது போல் காணப்படுதலால் 'கருங்கொண்மூ வாய் திறந்த' என்றார்.
செல்வர்யாம் என்றது ஓரிடம் பிறவிடந் தழுவிய வழுவமைதி [பொது. சூ. 29] செல்வுழி - செல் உழி என்பதில் "எகர வினாமுச் சுட்டின் முன்னர்" என்னுஞ் சூத்திரத்தில் 'நெறி' என்பதனால் வகரந் தோன்றியது; [உயிர். சூ. 13ன்] உரையைக் காண்க. பெருஞ் செல்வமும் என உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கொண்மூ - நீரைக் கொள்ளூந் தன்மையால் வந்த காரணப் பெயர் என்னலாம். மூ - விகுதி. இலக்கியங் கண்டதற்கு இலக்கண மியம்ப வேண்டுவது நியாயம். திறந்த - இப்பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது.
9. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.
(இ-ள்.) உண்ணான் - (ஒருவன்) தான் உண்ணாதவனாயும், ஒளி நிறான் - தன்னிடத்துப் பிரகாசத்தை நிறுத்தாதவனாயும், ஓங்குபுகழ் செய்யான் - வளரும்படியான கீர்த்தியைச் சம்பாதியாதவனாயும், துன் அரு கேளிர் - சேருதற்கு அரிய உறவினருடைய, துயர்களையான் - துன்பங்களை நீக்காதவனாயும், வழங்கான் - (யாசகர்க்குக்) கொடாதவனாயும், கொன்னே - வீணாக, பொருள் காத்திருப்பானேல் -, அ ஆ - ஐயோ! இழந்தான் என்று எண்ணப்படும் - (அப்பொருள்) போக்கடித்துக் கொண்டானென்று (புத்திமான்களால்) எண்ணப்படுவான், எ-று.
செல்வம் நிலையற்றதாகையால் அது கிடைத்தபோதே தானும் அனுபவித்து நல்ல விஷயத்திலும் உபயோகப்படுத்தாமற் போனால் அதை இழந்ததற்குச் சமானம் என்பது கருத்து.
ஒளி நிறான் என்றது ஆடையாபரணங்களாலே தன்னிடத்து ஒரு பிரகாசத்தை உண்டாக்காதவன் என்றபடி, புகழாவது, தேவாலயம் பிரமாலயம் சத்திரம் சாலை முதலிய செய்தலாலாவது. ஓங்கு புகழ் என்றது மேலுலகங்களிலுஞ் செல்லும்படியான புகழ் என்பதற்கு; புகழினால் சொர்க்க முண்டு என்பது சாஸ்திரக் கொள்கை. எப்போதோ ஒரு கால் ஏதோ ஒரு துன்பமடைந்து தம்மவனென்று தன்னிடம் வந்த பந்துக்கள் என்பதற்கு 'துன்னருங்கேளிர்' என்றார்.
நிறான் - நிறு - பகுதி, ஆன் - விகுதி, இடைநிலையின்றி வந்ததனால் எதிர்மறையையுங் காட்டியது; ஆகாரம் புணர்ந்து கெட்டதெனவும், ஆ எதிர்மறையினிடை நிலையும் னகர விகுதியும் வந்தன எனவும் கொள்வது முண்டு. கொன் - இடைச்சொல். அ ஆ - இரக்கக் குறிப்பு. எண்ணப்படும் - "பல்லோர் படர்க்கை" என்கிற சூத்திரத்தினால் செய்யுமென் முற்று ஆண்பாலுக்கு வந்தது [வினை. சூ. 29]
10. உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
(இ-ள்.) வான் தோய் மலை நாட - ஆகாயத்தை அளாவிய மலைகளுள்ள நாட்டின் அரசனே! உடாஅதும் - தான் உடுக்காமலும், உண்ணாதும் - உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தமது உடம்பை வருத்தியும், கெடாத நல்லறமும் செய்யார் - அழியாத நல்ல தருமங்களையும் செய்யாராகி, கொடாது - (ஆதுலர்க்கு) கொடாமல், வைத்து ஈட்டினார் - ஈட்டி வைத்தவர்கள், இழப்பர் - அச்செல்வத்தை இழந்து போவர்; உய்த்து - (பல மலரினின்றும்) கொண்டு வந்து, ஈட்டும் - சேர்த்து வைக்கிற, தேன் ஈ - தேனீயானது, கரி - (இதற்கு) சாட்சி, எ-று. [ஈட்டல் - சம்பாதித்தல்]
இதற்கும் முற்பாட்டின் கருத்தே கருத்து. தேனீயானது பல பூக்களிலுஞ்சென்று கொண்டு வந்து தேனைச் சேர்த்து வைக்க அதை யாரோ கொண்டு போவது போல் தனக்கும் பிறர்க்கும் பயன்படுத்தாத பொருளைக் கள்ளர் முதலினோர் கொண்டு போவர் என்பது விசேஷம்.
'தம் உடம்பு செற்றும் கெடாத நல்லறம்' என்றது, தமது உடம்பை அழியும்படி வருத்தினாலும் உடம்பு அழியுமேயன்றி அறம் அழியாமலிருக்கும், அப்படிப்பட்ட தருமத்தை எனச் சிறப்பிக்கும்படி.
உடா அது முதலிய அளபெடைகள் இசை நிறைக்க வந்தவை. செற்றும் - உம்மை இழிவு சிறப்பு, அறமும் - உயர்வு சிறப்பு; மற்ற உம்மைகள் எண்ணும்மை. வைத்து ஈட்டினார் என்பதை ஈட்டி வைத்தார் என விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. உய்த்தீட்டும் என்பதையும் அப்படி பிரித்து உரைக்கலாம். ஒரு காரியத்தைக் கண்டவனேயன்றி அனுபவித்தவனும் சாக்ஷியாவானாகையால், 'தேனீக்கரி' என்றார். தேன் என்பதைப் பிரித்து ஈட்டினார் என்பதற்குச் செயப்படு பொருளாவைத்தும் உரைக்கலாம்.
2. இளமை நிலையாமை
[அதாவது இளமைப் பருவம் சதமல்லவென்று சொல்லுவது.]
11. நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.
(இ-ள்.) நல்லறிவாளர் - நல்ல விவேகமுள்ளவர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு (நிச்சயமாக) வரத்தக்கது என்று நினைத்து, குழவியிடத்தே துறந்தார் - இளம் பருவத்திலேயே இல்வாழ்க்கையை விட்டார்கள்; புரை தீரா - குற்றம் நீங்காத, மன்னா இளமை - நிலையில்லாத இளமைப் பிராயம், மகிழ்ந்தாரே - (இருக்கிறதென்று) சந்தோஷப்பட்டவர்களே, கோல் ஊன்றி - கோலை ஊன்றிக் கொண்டு, இன்னாங்கு எழுந்திருப்பார் - வருத்தமாக எழுந்திருப்பார்கள், எ-று.
காரியாகாரியங்களைப் பகுத்தறிந்தவர்கள் இளமையுள்ள போது மகிழாமல் அக்காலத்துக்கு உரிய சுகங்களைக் கைவிட்டிருப்பார்; இளமையிலே மகிழ்ந்தவரோ அது நீங்கி மூப்பு வந்த போது சுகத்தையனுபவிக்கச் சக்தியில்லாமையால் வருத்தப்படுவார்கள் என்பது கருத்து.
நரை என்பது மூப்புக்குக் காரிய ஆகுபெயர். குழவியிடத்தே - இடம் - ஏழனுருபு தாமே யெழுந்திருக்க மாட்டாமல் கோலையூன்றியும் எழுந்திருக்க வருந்துவார் என்பது சுகானுபவசக்தி இல்லாமைக்குக் குறிப்பு மன்னா - மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைப் பெயரெச்சம், ஈறுதொக்கது. இன்னா ஆங்கு என்பது ஈறு தொகுத்தலாய் இன்னாங்கு என்றாயிற்று.
12. நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
(இ-ள்.) நட்பு நார் அற்றன - சினேகங்களாகிய பந்தனைகள் அற்றுப் போயின நல்லாரு அஃகினார் - பெண்டுகளும் அன்பு குறைந்தார்கள். அற்பு தளையும் அவிழ்ந்தன - அன்பாகிய பந்தமும் அவிழ்ந்து போயின; உள் காணாய் - மனதிலே யோசித்துப் பார்; வாழ்தலின் - உயிரோடிருப்பதிலே, ஊதியம் என் உண்டாம் - பயன் என்ன உண்டு, ஆழ் கலத்து அன்ன கலி வந்தது - கடலில் முழுகுகின்ற கப்பலிடத்து உண்டாகும் ஓசை போன்ற (உறவினர் அழுங் குரல்) வந்தது, எ-று.
உறவினர்களும் மனைவிகளும் இனி இவனால் உபயோகமில்லையென்று அன்பில்லாமல் இருக்கவும், தனக்கும் யாரிடத்தும் அன்பு நீங்கியிருக்கவும், மூப்பு வந்து நலிய உயிரோடிருப்பதிற் பயனென்ன? அதுதான் சதமோ, சாவுங்கிட்டிற்றே; இவற்றால் இளமை நிலைமை யல்லவென்று நீ யோசித்து இளமை மகிழாதே என்பது கருத்து.
நட்பு - நட்பினனுக்கு ஆகுபெயர். என் - எவனென்னும் குறிப்பு முற்று இடைகுறைந்தது. ஆம் - அசை, உண்டாம் என ஒரு சொல்லாகவுங் கொள்ளலாம். வந்தது - நிச்சயம் பற்றி இறந்த காலமா வந்த வழுவமைதி கலத்தன்ன - கலத்தது அன்ன, ஈறு தொகுத்தல், ஏ - அசை.
13. சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
(இ-ள்.) சொல் தளர்ந்து - பேச்சு ஓசை குன்றி, கோல் ஊன்றி - தடியைப் பிடித்துக் கொண்டு, சோர்ந்த நடையினராய் - தள்ளாடிப் போன நடையுடையவராய், பல் கழன்று - பற்கள் நீங்கிப் போய், பண்டம் பழிகாறும் - (தேகமாகிய) பண்டம் பழிப்பை யடையுமளவும், இல் செறிந்து - இல்வாழ்க்கையில் நெருங்கியிருந்து, காம நெறி படரும் - ஆசை வழியிலே செல்லுகின்ற, கண்ணினார்க்கு - அறிவுடையவருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - சுகமாகிய வழியில் செல்லும் வகை, இல்லை -, எ-று. ஏ - அசை.
மூப்பினால் சுகானுபவத்திற்கு உரிய அங்கங்களெல்லாம் பழுதுபடச் சாமளவும் உலக இன்பத்தையே நாடினவர்கள் மோட்ச இன்பத்துக்குரிய வழியில் செல்லார்கள் என்பது கருத்து.
சொல் தளர்ந்து, பல் கழன்று, - இவை சினை வினையாதலால் முதல் வினையோடு முடிந்தன [வினை. சூ. 26].
14. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
(இ-ள்.) தாழா - குனிந்து, தளரா - தளர்ச்சியடைந்து, தலைநடுக்கா - தலை நடுக்கலெடுத்து, தண்டு ஊன்றா - தடியை ஊன்றிக் கொண்டு, வீழா இறக்கும் - வீழ்ந்து செல்லுகின்ற, இவள் மாட்டும் - இவளிடத்தும், தாழ் இல்லா - உறுதி இல்லாத, மம்மர் கொள் - மோகத்தைக் கொண்ட, மாந்தர்க்கு - மனிதருக்கு, தன் கை கோல் - அவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது, அம்மனை கோல் ஆகிய ஞான்று - அவள் தாய்க்கு ஊன்றுகோலா யிருந்த நாளில், அணங்கு ஆகும் - வருத்த முண்டாயிருக்கும் [மிக்க ஆசை உண்டாயிருக்கு மென்றபடி] எ-று.
மூப்பினால் முதுகு வளைந்து தலை நடுக்கத்தோடு தள்ளாடிச் செல்லும் இந்தக் கிழவியினிடத்திலும் அவள் பருவமடைந்திருந்த காலத்தில் காமுகர்க்கு ஆசையாய் வருத்தமுண்டாயிருக்கும், ஆகவே இப்போது வெறுக்கத்தக்க நிலையுள்ள இவள் முன் ஆசைப்படத்தக்கவளா யிருந்தாள் என்பது கருத்து.
இதனால் இளமை நிலையல்ல என்றதாயிற்று. தாழா முதலியவை செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், தலை நடுக்கா என்பது சினைவினையாதலின் முதல்வினையோடு முடிந்தது. இவள்மாட்டும் - உம்மை இழிவு சிறப்பு. கோல்மேல் வைத்து அம்மானை ஆடுகிற வழக்கமும் உண்டு ஆதலால், இவள் இப்பொழுது ஊன்றிக் கொண்டு போகும் கோல் அம்மானை ஆடும் கோலாகிய காலத்து என்றால் இளமைப் பருவத்து எனவும் கருத்துக் கொள்ளலாம்.
15. எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.
(இ-ள்.) எனக்கு தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்கு தாய் நாடி - தனக்கொரு தாயைத் தேடி, சென்றாள் - போனாள்; தனக்கு தாய் ஆகியவளும் - அவளுக்குத் தாயாயிருந்தவளும், அது ஆனால் - அப்படியானால், இ உலகு - இந்த உலகம், தாய் தாய் கொண்டு - ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக் கொண்டு, ஏகும் அளித்து - செல்லும் படியான ஏழமையை உடையது, எ-று.
தாய் நாடிச் சென்றாள் என்றால் இறந்து இன்னொருத்தி வயிற்றிற் பிறக்கிறாள் என்பதாம். மக்களைப் பெற்று இளமையிலேயே இறக்கிறாள் என்பதனால் இளமை சதமல்ல என்பது கருத்து.
ஆகியாள் - ஆகு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு கெட்டது, ஆள் - விகுதி, ய் - உடம்படுமெய், சந்தி. ஆகியவள் - இதில் ஈறுகெட்ட இடைநிலைமேல் அகரச் சாரியையும் அள் விகுதியும் வந்தன. தாய்த் தாய்க் கொண்டு என்பதில் முதலது எழுவாயாதலினால் தகரம் விரித்தல் விகாரம், இரண்டாவதில் "இயல்பின் விகாரமும்" என்கிற விதியால் ககரம் மிக்கது, 'தாய் தாய்க் கொண்டு' என்கிற பாடம் நன்று. 'தாயைத் தாவிக் கொண்டு' எனவும் உரைக்கலாம். அதில் தாய் - வினையெச்சமாம், யகரம் - வினையெச்சவிகுதி, ஏ - அசை.
16. வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
(இ-ள்.) வெறி அயர் - வெறியாட்டம் ஆடுகிற, வெம் களத்து - உக்கிரமான இடத்தில், வேல் மகன் பாணி - பூசாரியினது கையில், முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் நிறைந்த வாசனையுள்ள பூமாலை, முன்னர் தயங்க - எதிரில் விளங்க, மறி - ஆடு, குளகு உண்ட அன்ன - உணவை உண்டதற்குச் சமானமான, மன்னா மகிழ்ச்சி - நிலையில்லாத சந்தோஷம், அறிவுடையாளர்கண் இல் - விவேகமுள்ளவர்களிடத்து இல்லை, எ-று.
உடனே தன்னை வெட்டுகிறதற்குக் கத்தி பிடித்திருக்கிற பூசாரி கையில் தொங்குகிற மாலையிலுள்ள தளிரைத் தின்று அவ்வாடு சந்தோஷப்படுகிறதற்குச் சமானமாயிருக்கின்றது. இன்றைக் கிருந்து நாளை அழியும்படியான இளமையைக் கண்டு மகிழ்தல் என்பது கருத்து.
பல ஜெந்துக்களைப் பலியிடுமிடமாதலால் வெங்களமென்றது. வேல் என்பது ஆயுதப் பொதுப் பெயராகையால் இங்கே கத்திக்குக் கொள்க. ஆர் - வினைத்தொகை. நறுங்கண்ணி - பண்புத்தொகை. தயங்க - நிகழ்கால வினையெச்சம். உண்ட அன்ன என்பது ஈறு தொகுத்தலால் உண்டன்ன என்று ஆயிற்று. உண்டு என்பதை உண்டால் என்பதின் திருபாகக் கொண்டும் உரைக்கலாம் [வினை சூ. 25] இல் - விகுதி கெட்ட குறிப்பு முற்று முடையாளர் - உடைமையை ஆள்பவர் என்பது பொருள், ஒரு சொற்றன்மைப்பட்டது.
17. பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
(இ-ள்.) இளமை - இளமைப் பருவமானது, பனி படு சோலை - குளிர்ச்சி பொருந்திய சோலையினிடத்து, பயன் மரம் எல்லாம் - பயனைத்தரும் மரங்களெல்லாம், கனி உதிர்ந்து வீழ்ந்தால் அற்று - பழங்கள் உதிர்ந்து போய் வீழ்ந்தாற் போலும்; இவளை - இப்பெண்ணை, வேல் கண்ணள் என்று - வேலைப் போன்ற கண்களையுடையவளென்று, நனி பெரிதும் - மிக விசேஷமாக, வெஃகன்மின் - ஆசைப்படாதிருங்கள்; மற்று - இன்னும் யாதெனில், இவளும் - இத்தன்மையான இப்பெண்ணும், குனிந்து - வளைந்து, கோல் கண்ணள் ஆகும் - கோலாகிய கண்ணை உடையவள் ஆவாள், எ-று.
ஒரு சோலையிலே யாவரும் விரும்பும்படி கனிகளோடும் கூடியிருந்த மரம் அக்கனிக ளுதிர்ந்துவிட்டால் விரும்பத்தகாதாவது போல், இளமை அழிந்த பின் அவ்வுடம்பு விரும்பத் தகாததாம்; ஆதலினால் பெண்கள் மேல் ஆசை வைக்க வேண்டாம் என்பதாம்.
மூப்பில் பார்வை குறைந்து போவதினால் கோலைத்தட்டி வழி கண்டு கொண்டு செல்வாள் என மூப்பிற்குக் குறியாகக் கோல்கண்ணள் என்றார்.
படு - வினைத்தொகை, படுதல் = பொருந்துதல். பயன்மரம் - இரண்டனுருபும் பயனும் தொக்கதொடர். மரம் - பால்பகா அஃறிணைப் பெயர், இங்கு பன்மை. கனி உதிர்ந்து - சினைவினை முதலைக் கொண்டது. வீழ்ந்து என்பது வீழ்ந்தால் என்பதின் திரிபு. அற்று - அன் என்னும் உவமையிடைச் சொல்லடியாகப் பிறந்த குறிப்புமுற்று; அன் என்பதில் னகரம் சாரியை. நனி பெரிதும் - ஒரு பொருட்பன்மொழி. வெஃகன்மின் - எதிர்மறை ஏவற்பன்மை முற்று. மற்று - வினைமாற்றில் வந்த அசை. இவளும் - உம்மை - உயர்வு சிறப்பு.
18. பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
(இ-ள்.) பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு உண்டு? பல்லின் பால் ஏனை - பல்லின் தன்மை எவ்வளவு? இரு சிகையும் உண்டீரோ என்று - இரண்டு முனைகளிலும் மென்று தின்றீரோ என்று, வரிசையால் - முறையால், உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - உள்ளத்தில் ஆராய்தலைச் செய்யப்படுவதனால், யாக்கை கோள் - தேகத்தின் வலிமையை, [இளமையில் தேகக்கட்டை என்றபடி] அறிவுடையார் எண்ணார் - விவேகிகள் (சதமென்று) சிந்திக்கமாட்டார், எ-று.
இப்போது வயதென்ன? பல் தளர்ந்திருக்கிறதோ? பல், தளராமல் இருக்கிறதோ? வாயின் இருபுறங்களிலும் மென்று தின்னும்படி இருக்கிறதா? என்று, இப்படி காலந்தோறும் மாறுதலை விசாரிக்கக் கூடியதாய் இருப்பதினால், இளமையில் உடம்பிலுள்ள வலிமையைச் சதமென்று நினைப்பது புத்தியீனம் என்பது கருத்து.
எனைத்து - என் என்னும் வினாவிடைச் சொல்லின் மேல் ஐகாரச் சாரியையும், து - விகுதியும் வந்த குறிப்புவினையாலணையும் பெயர். உளது என்பது ஈறுதொகுத்தலாய் உள என்று ஆயிற்று. ஏனை - இதுவும் எனைத்து என்பதின் விகாரமெனலாம், அல்லது ஏ என்னும் வினாவிடைச் சொல்லடியாக வந்த குறிப்புமுற்றாம்; னகர ஐகாரங்கள் சாரியை, து - விகுதி குன்றியது.
19. மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
(இ-ள்.) நல் வினை - தரும காரியத்தை, மற்று அறிவாம் - பின்னே அறிந்து செய்வோம். (இப்போது) யாம் இளையம் என்னாது - யாம் இளையவரா யிருக்கின்றோம் என்று நினையாமல், கைத்து உண்டாம் போழ்தே - பொருள் இருக்கும் பொழுதே, கரவாது அறம் செய்மின் - மறைக்காமல் தருமத்தைச் செய்யுங்கள்; தீ வளியால் - கடுங்காற்றினால், முற்றி இருந்த - முதிர்ந்த, கனி ஒழிய - பழங்கள் நீங்கி நிற்க [விழாமலிருக்க], நல் காய் - நல்ல காய்கள், உதிர்தலும் உண்டு, எ-று.
பெருங்காற்றடிக்கையில் பழங்கள் உதிராமலிருக்க, காய் உதிர்வது போல் வயது சென்றவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டாதலால், நாம் இப்பொழுது போகங்களை அனுபவித்துக் கொண்டு வயது முதிர்ந்த பின் தரும காரியங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே தருமம் செய்ய வேண்டும் என்பது கருத்து.
மற்று - வினைமாற்றில் வந்தது, இளையம் - குறிப்பு முற்று, கைத்து - கையிலிருக்கத்தக்கது என்னுங் காரணத்தால் பொருளுக்குப் பெயராயிற்று. உதிர்தலும் - எதிர்மறை உம்மை.
20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
(இ-ள்.) ஆள் பார்த்து உழலும் - (ஆயுள் முடிந்த) ஆளைத் தேடிக் கொண்டு திரிகிற, அருள் இல் கூற்று - கிருபை யில்லாத எமன், உண்மையால் - இருப்பதனால், தோள் கோப்பு - (பிரயாணத்துக்கு வேண்டுவதாய்) தோளில் சேர்க்கத்தக்க மூட்டையை [தருமத்தை], காலத்தால் கொண்டு - நேர்ந்த காலத்தில் கைக்கொண்டு, உய்மின் - பிழையுங்கள்; பீள் பிதுக்கி - (வயிற்றில் இருக்கும்) கருவை வெளிப்படச் செய்து, தாய் அலற - தாயானவள் கூவி அழ, பிள்ளையை கோடலால் - பிள்ளையைக் கொண்டு போவதினால், அதன் கள்ளம் - அக்கூற்றினுடைய வஞ்சனையை, கடைப்பிடித்தல் நன்று - அறிந்து சேர்தல் நல்லதாம், எ-று.
எமன் கிருபையில்லாமல் சிறியவனோ பெரியவனோ ஆயுசு முடிந்தவனிடம் செல்லுகின்றான்; அன்றியும் தாய் வருந்திச் சுமந்த கருவை அகாலத்தில் வெளிப்படுத்தித் தாய் அழும்படி அந்தக் குழந்தையைக் கொண்டு போகின்றான்; ஆதலால், எமன் எந்தக் காலத்தில் வந்து பிடிப்பானோ என்று நினைத்து இளமையை நிலையுள்ளதென்று நம்பாமல் நேர்ந்த போதே அறஞ் செய்ய வேண்டும் என்பது கருத்து.
"இயல்பின்விகாரமும் விகாரத்தியல்பும்" என்கிற உருபு புணரியல் (16வது) சூத்திரத்தினால் ஆள் என்னும் உயர்திணைப் பெயரின் ஈறு திரிந்தது. அருளில் கூற்று - மெய்யீற்றுப் புணரியல் (30வது) சூத்திர விதியால் இல் என்பது ஈறு இயல்பாய் முடிந்தது. தோளில் கோக்கத்தக்கது தோட்கோப்பு = மூட்டை; அது இங்கே தருமத்திற்கு உவமை ஆகுபெயர். காலத்தால் - ஆல் உருபு இடப்பொருளில் வந்தது; "யாதனுருபிற் கூறிற்றாயினும்" [பெயரியல். சூ. 60] பிதுக்கல் - பிறைனை; பிதுக்கல் - தன்வினை; மெல்லெழுத்து வல்லெழுத்தானது பிறவினைக்குறி. மற்று - அசை.
[அஃதாவது, உடம்பு நிலையற்றது என்பதைக் குறித்துச் சொல்லுவது]
21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
(இ-ள்.) மலைமிசை தோன்றும் - மலையின் மேல் காணப்படுகிற, மதியம் போல் - சந்திரனைப் போல, யானை தலைமிசை கொண்ட குடையர் - யானையின் தலைமேல் வைத்த குடையையுடைய அரசரும், நிலமிசை - பூமியில், துஞ்சினார் என்று - இறந்தார்களென்று, எடுத்து தூற்றப் பட்டார் அல்லால் - பலரறியக் காட்டி இகழப்பட்டவர்களே யல்லாமல், எஞ்சினார் - (அவ்விகழ்ச்சிக்கு உட்படாமல்) மிகுந்தவர்கள், இ உலகத்து இல் - இவ்வுலகத்தில் இல்லை, எ-று.
மகா ராஜாதிராஜாக்களும் இறந்தார்களென்று இகழப்படுதலால் யாக்கை நிலையற்றது என்பது கருத்து.
குடையார் - இங்கே உயர்வு சிறப்பும்மை, விகாரத்தால் தொக்கது. மதியம் - அம் - சாரியை. துஞ்சினார் - இது இடக்கரடக்கல்.
22. வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
(இ-ள்.) வாழ்நாட்கு - உயிரோடிருக்குங்காலத்துக்கு, அலகு ஆய் - கணக்காய், வயங்கு ஒளி மண்டிலம் - விளங்குகிற சூரியன், வீழ்நாள் படாது - பிரயோசனமில்லாத காலம் உண்டாகாமல், எழுதலால் - உதயமாதலால், வாழ்நாள் உலவா முன் - ஆயுசு கெடாமுன், ஒப்புரவு ஆற்றுமின் - கடமையான தர்மங்களைச் செய்யுங்கள்; யாரும் எப்படிப்பட்டவரும், நிலமிசைமேல் - பூமியின் மேல், நிலவார் - நிலைபெறார், எ-று.
சூரியன் உதயமாவது ஒருநாள் கழிந்தது இரண்டு நாள் கழிந்தன என்று ஆயுசுக்கு அளவிடுவதா யிருத்தலால் ஆயுசு கழிந்து போவதற்கு முன்னே தர்மத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
மண்டலம் - [வட்டம்]. இவ்வடசொல் தமிழின் மண்டிலம் என விகாரப்பட்டு வழங்குகின்றது. படாஅது - இவ்வளபெடை மறை விகுதி. நிலவார் என்பதில் நில - பகுதி. ஒப்புரவு = பெரியோர் ஒப்பும்படியான பலம்; இது உபகாரத்திற்கு வழங்குகின்றது. மிசை மேல் - "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின் வழா" [பொது. சூ. 47]
23. மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
(இ-ள்.) மன்றம் கறங்க - சபையெல்லாம் முழங்க, மணம்பறை ஆயின - கலியாண வாத்தியமாய் நின்றவை, பின்றை அன்று - பின்பு அன்றைக்கே, ஆங்கே - அவ்விடத்திலேயே, அவற்கு - அந்த மனிதனுக்கு, பிணம் பறை ஆய் - பிணவாத்தியமாய், ஒலித்தலும் உண்டாம் என்று - ஓசைப்படுவதும் உண்டு என்று நினைத்து, மாண்டார் மனம் - மாட்சிமைப்பட்டவர்களுடைய மனமானது, உய்ந்து போம் ஆறே (பிறவித் துயருக்குத்) தப்பிப் போம்படியான வழியை, வலிக்கும் உறுதியாய்ப் பற்றியிருக்கும். எ-று.
ஒருவருக்குக் கல்லியாணத்துக்கு வைத்த வாத்தியமே உடனே அவர் சாவுக்கு அடிக்கும் வாத்தியம் ஆகும்படியான நிலையுள்ளது இவ்வுடம்பு. ஆனதால் இப்படிப்பட்ட உடம்பைப் பராமரியாமல் தருமஞ் செய்ய முயலுவார் பெரியோர் என்பது கருத்து.
ஒலித்தலும் - உம்மை எதிர்மறையில் வந்தது, என்று - இவ்விடைச் சொல்லோடு நினைத்து என்னும் ஒரு சொல் கூட்டிக் கொள்க. வலிக்குமாம் - ஆம் - அசை. மாண்டார் - மாண் - பண்படி, பகுதி, ட் - இடைநிலை, ஆர் - விகுதி. இறந்தார் என்னும் பொருள்படும்போது மாள் - பகுதி.
24. சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
(இ-ள்.) சென்று - (செத்தவிடத்திற்குப்) போய், ஒரு கால் எறிப் (பறையினை) - பிணவாத்தியத்தை ஒரு தரம் கொட்டுவார்கள்; சிறுவரை நின்று - (பின்) சிறிது காலம் சும்மாவிருந்து, பறையினை எறிப - சாப்பறை யடிப்பார்கள்; முக்காலைக் கொட்டினுள் - மூன்றாங் காலம் வாத்தியத்தைக் கொட்டுவதற்குள்ளே, சாவார் - சாகப்போகிறவர்கள், செத்தாரை - செத்துப் போனவர்களை, மூடி சுமந்து - வஸ்திரத்தினால் மறைத்துத் தூக்கிக் கொண்டு, தீ கொண்டு எழுவர் - நெருப்பை யெடுத்துக் கொண்டு போவார்கள்; நன்றே காண் - நன்றாய் யோசித்துப் பார், எ-று.
மூன்றாங் கொட்டுக்குள்ளே செத்தவரைச் சுடுகாட்டுக்குக் கொண்டு போகிறார்களாதலால் யாக்கை நிலையற்றது என்பதாம்.
"சாவார்" என்பது, இன்றைக்கொருவரைச் சுடுகாட்டில் விட்டு வந்தவர் நாளைக்குச் செத்துப் போவார் என்பது தோன்றுதற்கு. சென்றே நின்றே - ஏகாரங்கள் - அசை. எறிப - "அர் ஆர் பவ்வூ ரகரமாரீற்ற" என்றதனால் 'ப' விகுதி பலர் பாலுக்கு வந்தது, [வினை. சூ. 8] "பாந்தம் செலவோடு வரவும்" என்றதனால், [பத. சூ. 18.] இங்கே எதிர்காலங் காட்டியது.
25. கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
(இ-ள்.) கணம் கொண்டு - கூட்டங்கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கலீரென்று கூவி அழ, பிணம் கொண்டு - பிணத்தைத் தூக்கிக் கொண்டு, காட்டு உய்ப்பார் - சுடுகாட்டில் இடுபவரை, கண்டும் - பார்த்து, மணம் கொண்டு - கல்லியாணஞ் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் - இவ்வுலகத்தில் நிச்சயமாய்ச் சுகமுண்டு சுகமுண்டு சுகமுண்டு என்கிற, உணர்வினான் - அறிவுல்லவனைக் குறித்து, தொண் தொண் தொண் என்னும் பறை - தொண் தொண் தொண் என்கிற வகையாய் ஒலிக்கிற பிணப்பறையானது, சாற்றும் - (இல்வாழ்க்கை இவ்வகையது என்று) சொல்லும், எ-று. ஏகாரம் - அசை, பிரசித்தத்தைக் காட்டியது என்றுஞ் சொல்லலாம்.
இறந்து சுடுகாடு சேர்பவரைப் பார்த்தும் கல்லியாணஞ் செய்து கொண்டு நான் சுகமே வாழ்வேன் என்று நினைக்கிற மூடனுக்குச் சரீரம் நிலையுள்ளதென்று நினையாதே என்ப பிணப்பறை தன் ஒலியால் தெரிவிக்கின்றது என்றால் நாளைக்கு நமக்கும் இதுதான் கதியென்று அறிவு மூட்டுகின்றது என்பது கருத்து.
'கல்' என்பது அழும் ஓசையின் குறிப்பு. உய்ப்பார்க்கண்டு - 'இயல்பின்விகாரமும்' என்கிற [உருபு. சூ. 16] விதியால் வலி மிகுந்தது. உண்டு உண்டு உண்டு என்னும் அடுக்கு நிச்சயமென்கிற பொருளில் வந்தது. [பொது. சூ. 44] தொண் தொண் தொண் என்பது ஒலிக்குறிப்பு. பறைசாற்றும் என்பது [பொது. 49ம்] சூத்திரத்தின் விதியால் கருவியைக் கர்த்தா போல் சொன்னது.
26. நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
(இ-ள்.) தோல் பையுள் நின்று - தோலாற் செய்த பையாகிய உடம்பிலிருந்து, தொழில் அற செய்து - (தான் செய்ய விதித்த) தொழில்களைப் பூரணமாகச் செய்து, ஊட்டும் கூத்தன் - (அப்பயனைத் தன்னை) அனுபவிக்கச் செய்கிற கூத்தாடியாகிய ஆத்துமா, புறப்பட்டக்கால் - (அதைவிட்டு) அப்புறஞ் சென்றால், (அவ்வுடலை) நார் தொடுத்து ஈர்க்கில் என் - கயிற்றாற் கட்டி யிழுத்தாலென்ன?, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகச் சுத்தஞ் செய்து அடக்கஞ் செய்தால் என்ன? பார்த்த உழி பெய்யில் என் - கண்டவிடத்தில் போட்டாலென்ன?, பல்லோர் பழிக்கில் என் - பலரும் பழித்தாலென்ன? [யாதும் இழிவுமில்லை சிறப்புமில்லை என்றபடி.], எ-று.
இறந்த பின் உடலை மேன்மைபப்டுத்தினாலும் உயர்வில்லை; தாழ்மைப்படுத்தினாலும் குறையில்லை; ஆதலின் இறவாதிருக்கும் பொழுதே நற்காரியம் செய்ய வேண்டும் என்பது கருத்து.
இப்பாட்டு யாக்கை நிலையாமையைக் குறிப்பிப்பதனால் இவ்வதிகாரத்தில் சேர்க்கப்பட்டது என்றறிக. உயிரோடிருக்கும் போது ஒரு காலத்துக்கொருகால் வெவ்வேறான செய்கைகளைச் செய்வதனால் ஆத்துமாவைக் 'கூத்தன்' என்றது.
என் என்பது எவன் என்னும் குறிப்பு வினைமுற்று, இடைகுறைந்தது. பார்த்த உழி என்பது ஈறு தொக்கதாய்ப் பார்த்துழி என்று ஆயிற்று; உழி - இடம். பல்லோர் - ஈற்று அயல் ஆகாரம் ஓகாரமாயிற்று [பொது. சூ. 2].
27. படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
(இ-ள்.) படு மழை மொக்குளில் - வீழ்கின்ற மழை நீரினது குமிழிபோல், பல் காலும் தோன்றி - பல காலங்களிலும் உண்டாகி, கெடும் இது - நாசமாகும் படியானது, ஓர் யாக்கை என்று எண்ணி - ஒருவகைப் பொருளாகிய தேகம் என்று நினைத்து, தடுமாற்றம் தீர்ப்போம்யாம் - (இந்தச் சம்சாரத்தில்) தடுமாறுவதை நாம் போக்கக் கூடவோம், என்று உணரும் - என்று அறிந்து நிற்கிற, திண் அறிவாளரை - உறுதியான ஞானமுள்ள பெரியோர்களை, நீள் நிலத்தின்மேல் - இந்தப் பெரிய பூமியில், நேர்ப்பார் யார் - ஒத்திருப்பவர்கள் யார்? [ஒருவருமில்லை என்றபடி], எ-று.
மழை நீர்க்குமிழிகள் போல நிலையற்ற உடம்பெடுத்துத் தடுமாறுவதை ஒழிக்க முயல்வார்கள் பெரியோர், நாமும் அப்படி முயல்வது நலம் என்பது கருத்து.
படுதல் = வீழ்தல், படுமழை - வினைத்தொகை. மொக்குளின் - ஐந்தனுருபு, ஒப்புப் பொருளில் வந்தது.
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை
மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
இ-ள்.) யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்து ஆ- உறுதியை யுடையதாக, பெற்றவர் - அடைந்தவர், தாம் பெற்ற யாக்கையால் ஆய பய - தாம் அடைந்துள்ள தேகத்தினால் ஆகத்தக்க பிரயோஜனங்களை, கொள்க - கொள்ளக்கடவர், (ஏனெனில்) யாக்கை - தேகமானது, மலை ஆடு மஞ்சு போல் தோன்றி - மலையினிடத்திலே ஆடுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, நிலையாது - நிலைபெறாமல், நீத்துவிடும் (உயிரை) ஒழித்துவிடும், எ-று.
மலைமேல் அசைந்து கொண்டிருக்கிற மேகத்தைப் போல உடம்பு நிலையற்றதாகையால் அது உறுதியாயிருக்கும் போதே நற்காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
யாத்தல் = கட்டுதல், தோல் நரம்பு முதலியவைகளால் கட்டப்படுவதாகையால் யாக்கையெனச் சொல்லப்பட்டது; யா - பகுதி, கு - சாரியை, ஐ - விகுதி, ஆய - ஆகிய என்பதின் இடைக்குறை யென்பார்கள்; அல்லது ஆ - பகுதி, யகரம் - இறந்தகால இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி மற்று, ஆங்கு, ஏ - இம்மூன்றும் அசை.
29. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
(இ-ள்.) இன் இனி ஏ - இப்பொழுதே, (ஒருவன்) நின்றான் இருந்தான் கிடந்தான் - நின்று கொண்டிருந்தான் உட்கார்ந்தான் படுத்தான், தன் கேள் அலற சென்றான் - தன் பந்துக்கள் அலறி அழ இறந்தான், எனப்படுதலால் - என்று சொல்லப்படுவதனால், (உடம்பு) புல் நுனிமேல் - புல்லின் நுனியிலிருக்கிற, நீர் போல் - நீர்த்துளியைப் போல, நிலையாமை என்று எண்ணி - நிலைபெறாத தன்மையையுடையது என்று நினைத்து, இன் இனி ஏ - இப்பொழுதே, அறம் வினை செய்க - தர்ம காரியத்தைச் செய்யக்கடவர், எ-று.
ஒருவன் ஒரே காலத்தில் நின்று கொண்டிருக்கக் கண்டேனென்றும் மற்றொருவன் உட்கார்ந்திருக்கக் கண்டேனென்றும் இன்னம் ஒருவன் படுத்திருக்கப் பார்த்தேனென்றும் கடைசியிலொருவன் அவன் இறந்து போனானென்றும் சொல்லும்படி மனிதனுடைய நிலையிருக்கிறதினால் தருமத்தைச் சீக்கிரத்தில் செய்ய வேண்டும் என்பது கருத்து.
இன் இனி - இன் என்பது இக்காலம் என்பது தெரிவிக்கிற ஒருவகை இடைச்சொல். அது மிக என்னும் பொருளினால் அடுக்கி இன்னின் என்றாகி ஈற்றில் இகரச் சாரியை பெற்றது. அறம் வினை என்பதில் மகரங்கெட்டது. [மெய்யீறு. சூ. 16.], இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
30. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
(இ-ள்.) மாந்தர்கள் - மனிதர்கள், கேளாதே வந்து - (வரட்டுமா என்று) கேளாமல் வந்து, கிளைகளாய் இல் தோன்றி - உறவினராய் தன் குடியிற் பிறந்து, வாளாதே - சொல்லாமலே, சேக்கை மரன் ஒழிய - தனக்கு வாசஸ்தானமாயிருந்த மரத்தை ஒழித்து, சேண் நீங்கு புள் போல - தூரத்தில் நீங்கிச் செல்லுகிற பட்சியைப் போல, தமர்க்கு - தம்மவர்களுக்கு, யாக்கை ஒழிய நீத்து - உடம்பை விட்டு விட்டு, வாளாதே போவர் - சொல்லாமல் போகின்றார்கள், எ-று.
பறவைகள் தமது இச்சையின்படி மரங்களில் வந்து சேர்வதும் விட்டுப் போவதும் போல மனிதர் கர்மவசத்தினால் ஒரு குடியிற் பிறப்பதும் நீங்குவதுமா யிருப்பதுபோல் வந்து போகிறவரை உறவினரென்றெண்ணிப் பாடுபட்டு உழலாமல் தருமத்தைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
கேளாது, வாளாது - வினையெச்சங்கள். மரம் மரன் ஆனது போலி, [எழுத்து. சூ. 67.] நீத்து - நீ - பகுதி, த் - இடைநிலை, உ - விகுதி, தகரம் - சந்தி, ஆல் - அசை.
4. அறன் வலியுறுத்தல்
[அதாவது தருமம் பொருள் இன்பங்களிலும் உறுதியுடைய தென்பதைக் குறிப்பது.]
31. அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
(இ-ள்.) மேல் தவத்தால் - முன் ஜனனத்தில் செய்த நோன்புகளினால், தவம் செய்யாதார் - (பிற்பிறப்பில்) தவஞ் செய்யாதவர்கள், அகத்தாரே வாழ்வார் என்று - அகத்திலுள்ளவரே நன்மையடைவார் என்று நினைத்து, அண்ணாந்து நோக்கி -, தாம் புகப் பெற்றார் - தாங்கள் உள்ளே போகப் பெறாதவராகி, புறங்கடை பற்றி - தலை வாயிலைப் பிடித்துக் கொண்டு, மிக வருந்தியிருப்பார் - மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள், எ-று.
ஒரு தனவான் வீட்டில் சுபாசுபங்கள் நேர்ந்த போது யாசகர் பலர் உட்புகுந்திருக்க மற்றொரு யாசகன் உள்ளே போயிருப்பவர்கள் நல்ல பயனைப் பெறுவார்கள் ஆதலின் நாமும் உள்ளே செல்லக்கடவோம் என்று உள்ளே புகப் பார்க்க, வாசற் காப்போரால் தடையுற்று வாசற்படியைப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பான் என்பதாம்.
இது பூர்வஜனனத்தில் தருமஞ்செய்யாத கொடுமையால் வந்தது எனச் சொன்னதனால் தருமம் செய்வது இம்மை மறுமைகளுக்கு உறுதி என்றும், பொருள் இன்பங்கள் அப்படியல்லவென்றும் சொன்னதாயிற்று.
அகத்தாரே - இங்கு ஏகாரம் பிறர் வாழார் என்பதைக் குறித்ததினால் பிரிநிலை. அண்ணாந்து - அண்ணா - பகுதி. பெறா அர் - அளபெடை இசை நிறைக்க வந்தது. மூன்றாம் அடியில் தாம் ஏ இரண்டும் அசை. தவத்தால் தவஞ் செய்வதாவது முந்திய ஜனனத்தில் செய்த தவம் பிந்திய ஜனனத்தில் தவஞ் செய்வதற்குக் காரணமாய் சங்கிலிபோல் தொடர்ந்திருக்கும் தன்மை. தவத்தால் என்பதை செய்யாதார் என்பதின் பகுதியில் முடித்துக் கொள்க.
32. ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
(இ-ள்.) ஆஆ - ஐயோ! நாம் ஆக்கம் நசை இ - நாம் செல்வத்தை விரும்பி, அறம் மறந்து - தருமத்தை மறந்து, போவாம் நாம் என்னா - நாம் இறந்து போவோம் என்று நினையாத, புலை நெஞ்சே - அற்பமான மனமே! ஓவாது - ஒழியாமல், நின்று - நிலைபெற்று, உஞற்றி வாழ்தி எனினும் - முயற்சி செய்து வாழ்வாயானாலும், நின் வாழ்நாட்கள் - உன்னுடைய ஆயுள் நாட்கள், சென்றன - ஒழிந்தன, செய்வது உரை - இனிச் செய்ய வேண்டியதைச் சொல்லு, எ-று.
நாம் ஆக்கம் நசைஇ ஆவாம் - செல்வத்தை விரும்பி விர்த்தியாவோம் (என்று எண்ணி), அறம் மறந்து போவோம் நாம் - தருமத்தை மறந்து போவோம் நாம், என்னா புலை நெஞ்சே - என்று எண்ணாத அற்ப மனமே!, எனவும் உரைக்கலாம்.
உள்ள காலமும் செல்வம் பெற்று வாழ்வதற்கே முயன்று தருமத்தைச் செய்யாதுவிட்டால் உன்வாழ்நாள் சீக்கிரம் ஒழிந்தபின் செய்யத்தக்கது ஒன்றுமில்லை என்பது கருத்து.
ஆஆ - இரக்கக் குறிப்பிடைச்சொல். ஆவாம், போவாம் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று; உளப்பாட்டில் வராமல் தனித்து வந்தன. ஆக்கம் - விர்த்தியாக்குதற்குக் காரணமாதலின் செல்வத்திற்குக் காரணப்பெயர். ஆக்கு - பிறவினைப்பகுதி. இதில் கு - பிற வினைவிகுதி, அம் - விகுதி, நசைஇ - நசைந்து என்பதின் விகாரம். ஓவாது - ஓ - அல்லது ஓவு - பகுதி.
33. வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
(இ-ள்.) பேதை - புத்தியீனன், வினைப்பயன் வந்தக்கால் - தீவினைப்பயனாகி ஆபத்து நேர்ந்தால், வெய்ய உயிரா - கடுமையாக மூச்சுவிட்டு [பெருமூச்சுவிட்டு], மனத்தின் அழியும் - மனதிலே வருந்துவான்; அதனை நினைத்து - அத்தீவினைப் பயனை நினைத்து, தொல்லையது என்று - முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்ததென்று, உணர்வாரே - அறிந்த விவேகிகளே, தடுமாற்றத்து எல்லை - சம்சார துக்கத்தின் எல்லையை, இகந்து ஒருவுவார் - விட்டு நீங்குவார்கள், எ-று.
விவேகமில்லாதவர் சங்கடம் வந்த போது இது முற்பிறப்பின் வினையென்று எண்ணாமல் வருந்துவார்; அதை யறிந்தவரோ வருந்தமாட்டார் என்பது கருத்து.
இதனால் விவேகமும் தருமத்தின் பயன் என்று சொல்லியதாயிற்று.
வெய்ய - வெம்மையின் அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர்; வெய்யனவாகிய உயிர்ப்பு உயிர்த்து எனக்கொள்க. குறிப்புவினையெச்சமெனக் கொண்டு உயிரா என்னும் வினைக்கு உரி என்னவுமாம். உயிரா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். அழியுமாம் - ஆம் - அசை. தொல்லையது - தொல்லை என்னும் பண்பின்மேல் வந்த குறிப்பு வினைமுற்று; அ - சாரியை, து - விகுதி. உணர்வாரே ஏகாரம் பிரிநிலை. தடுமாறுதல் = வழிதெரியாமல் அங்கே இங்கே சுற்றுவது; பலபிறப்புப் பிறப்பதான சம்சாரத்துக்கு ஆகுபெயர்.
34. அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
(இ-ள்.) அரு பெறல் யாக்கையை - அருமையான பெறுதலையுடைய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த பலத்தினால், பெரு பயனும் - பெரிய பிரயோஜனமான (தர்மத்தையும்), ஆற்ற கொள்க - மிகவுந் தேடிக்கொள்ள வேண்டும்; கரும்பு ஊர்ந்த சாறு போல் - கரும்பிலிருந்து உண்டான சாற்றைப்போல, சாலவும் பின் உதவி - (அத்தருமம்) மிகவும் பின்னுக்கு உதவியாயிருக்கும்; உடம்பு - திரேகமானது, அதன் கோது போல் போகும் - அக்கரும்பின் சக்கைபோல (உதவியில்லாமல்) போய்விடும், எ-று.
மக்களுடம்பைப் பெறுதல் அருமையானது; அதைப் புண்ணியத்தால் பெற்றபடியால் அதைக்கொண்டு தருமத்தைச் செய்யவேண்டும்; அத்தருமம் கருப்பஞ்சாற்றைப் போல் ஆத்துமாவின் அனுபவத்திற்கு உதவும், உடம்போ உதவாது என்பது கருத்து.
'அரும்பெறல்' என்பதை 'பெறல் அரு' என மாற்றியும் உரைக்கலாம். அற்ற - வினையெச்சம்; இங்கே வினையுரி. உதவி = உதவுவது, பெயர். ஏ - அசை.
35. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
(இ-ள்.) கரும்பு ஆட்டி - கரும்பை (ஆலையில்) சிதைத்து, கட்டி - (அச்சாற்றினாலாகிய) வெல்லக்கட்டியை, சிறுகாலை கொண்டார் - முற்காலத்தில் கொண்டவர்கள், துரும்பு எழுந்து வேங்கால் - அதன் சக்கை கிளம்பி வேகும்போது, ஆண்டு - அவ்விடத்தில், துயர் உழவார் - துன்பத்தால் வருந்தார்கள்; (அதுபோல்), வருந்தி - வருத்தப்பட்டு, உடம்பின் பயன் கொண்டார் - தேகத்தின் பிரயோசனத்தைக் கொண்டவர்கள் [தருமத்தைச் செய்து அதன் பயனைப் பெற்றவர்], கூற்றம் வருங்கால் - எமன் வரும்போது, பரிவது இலர் - துன்பப்படுவது இல்லையாவார், எ-று.
கரும்பின் சாற்றினால் ஆக வேண்டிய பயனைப் பெற்ற பின் அதன் துரும்பு வேகக்கண்டு துன்பம் அடையாததுபோல் தேகத்தின் பயனாகிய தருமத்தைச் சம்பாதித்த பின் மரணத்துக்குப் பயப்படார் விவேகிகள் என்பது கருத்து.
சிறுகாலை - இது அற்பகால மென்னும் பொருளை யுடைத்தாய் முற்காலத்தைக் குறிக்கின்றது. "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து." இலர் - சிறப்புக்குறிப்பு வினைமுற்று. பரிவது அதற்குச் செயப்படுபொருள். இல்லை என்பது ஒரு பொருளின் சம்பந்தத்தை நீக்கும்போது செயப்படுபொருள் குன்றாவினையாகவும் பொருளையே நீக்கும்போது செயப்படு பொருள் குன்றிய வினையாகவும் வழங்கும். உதாரணம்: 'குடம் நீரில்லாது' - செயப்படு பொருள் குன்றாவினை; 'குடமில்லை' - செயப்படு பொருள் குன்றியவினை.
36. இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
(இ-ள்.) இன்று கொல் அன்று கொல் என்று கொல் - இன்றைக்கோ அன்றைக்கோ என்றைக்கோ, என்னாது - என்று நினையாமல், கூற்றம் - எமன், பின்றையே நின்றது என்று எண்ணி - பின் புறத்திலேயே நிற்கின்றது என்று நினைத்து, தீயவை ஒருவுமின் - தீமையான காரியங்களை விட்டு விடுங்கள்; ஒல்லும் வகையான் - கூடிய விதத்தில், மாண்டார் அறம் - மாட்சிமைப் பட்டவர்களுடைய தர்மத்தை, மருவுமின் - சேருங்கள், எ-று.
நம்முடைய ஆயுள் சதமல்லவென்று நினைத்துப் பாவங்களைச் செய்யாமல் புண்ணியங்களைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
கொல் - ஐயத்தில் வந்தது. [இடை. சூ. 46.] பின்றை - ஐ - சாரியை, [உயிரீற்று. சூ. 35.] மாண்டார்களுடைய அறமாவது அவர்கள் நூல்களில் சொல்லியதும் அவர் ஆசரித்ததுமாம்.
37. மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
(இ-ள்.) மக்களால் ஆய - மனிததேகங்களால் செய்யத்தக்க, பெரும் பயனும் - பெருமையாகிய பயன்களும், ஆயுங்கால் - ஆராயுமிடத்து, எத்துணையும் - எவ்வளவினும், ஆற்றபல ஆனால் - மிகவும் அநேகங்கள் ஆதலினாலே, தொக்க உடம்பிற்கே - (நரம்பு தசை முதலியவை) சேர்ந்த உடம்புக்காக்வே, ஒப்புரவு செய்து ஒழுகாது உபயோகமான காரியங்களைச் செய்து நடவாமல், உம்பர் கிடந்து - சுவர்க்கத்திலிருந்து, உண்ணப் பண்ணப்படும் - போகங்களை யனுபவிக்க (அறங்களைச்) செய்யவேண்டும், எ-று.
மனிதர் உடம்பினால் செய்ய வேண்டிய நற்காரியங்கள் பலவாயிருக்க அசுத்தமான தேகத்துக்கே வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிராமல் சொர்க்க அனுபவத்திற்கு ஏதுவான நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது கருத்து.
மக்கள் என்பது மனித உடம்பை. தொக்க - தொகு - பகுதி, அகரம் - பெயரெச்ச விகுதி, ககரம் இரட்டி இறந்தகாலம் காட்டியது.
38. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
(இ-ள்.) உறக்கும் துணையது - கிள்ளி எடுக்கும் அளவுள்ளதான, ஓர் ஆலம் வித்து - ஒரு ஆலமரத்தின் விதை, ஈண்டி - (கிளைகள்) நெருங்கி, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழலைத் தருவது போல, அறம் பயனும் - தருமப் பிரயோஜனமும், சிறிது ஆயினும் - அற்பமானாலும், தக்கார் கைபட்டக்கால் - யோக்கியர் கையில் சேர்ந்தால், வான் சிறிது ஆ - ஆகாயம் அற்பமாகும்படி, போர்த்துவிடும் - மூடிவிடும், எ-று.
தருமஞ் செய்வதையும் யோக்கியர்கள் திறத்திலே செய்தால் அது அற்பமானாலும் ஆலம்விதை பெருகிப் பெரிய மரமாவது போல மிகவும் பெரிதாம் என்பது கருத்து.
வான் சிறிதா என்பதற்கு வானினும் பெரிதாக என்றபடி.
பயந்தாங்கு - பயந்த என்பது அசுர ஈறு தொகுத்தலால் வந்ததென்றும், பயந்தால் என்னும் வினையெச்சம் பயந்து எனத் திரிந்ததென்றும் இருவகையில் கொள்ளலாம். அறப்பயனும் - உம்மை எச்சப்பொருளில் வந்தது. ஆயினும் - இழிபு சிறப்பும்மை.
39. வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
(இ-ள்.) வைகலும் - தினந்தோறும், வைகல் - நாட்கழிவை, தம் வாழ் நாள்மேல் - தமது ஆயுசில், வைகுதல் - வைத்து - செல்லுதலாக வைத்து, வைகலை உணராதார் - நாட்கழிவை யறியாதவர்கள், வைகலும் - தினந்தோறும் வைகல் வரக்கண்டும் - நாட்கழிவு வரப்பார்த்தும், அஃது உணரார் - அதின் உண்மையை அறியாதவராகி, வைகலும் - தினந்தோறும், வைகலை - ஆயுள் கழிதலை, வைகும் என்று - இருக்கிறதென நினைத்து, இன்பு உறுவர் - சந்தோஷப்படுவார்கள், எ-று.
தினம் நாள் கழிந்து வருவது தமது ஆயுள் கழிவதாக நினையாமல் அது நிற்பதாகவே நினைத்துச் சந்தோஷப்படுவது மூடத்தனம்; தனது மேல் கதிக்கு வேண்டிய நற்காரியங்களைச் செய்து சந்தோஷித்தல் புத்தி என்பது கருத்து.
இங்கே வைகல் என்றது நாள் கழிவுக்கு ஏதுவான சூரியவுதயாஸ்தமயங்கள் எனக்கொள்க. இதனால் தனது ஆயுள் கழிவதன் முன்னே தருமங்களைச் செய்வது அவசியமென அறனை வலியுறுத்தியதாயிற்று.
வைகலும் - முற்றும்மை. கண்டும் - சிறப்பும்மை. உணரார் - முற்றெச்சம். வாழ்நாள் மேல் - ஏழாம் வேற்றுமை. இது முன் வந்த சொல்லும் பொருளும் மறுத்தும் வருவதனால் "இருமைப்பின் வருநிலை" என்னும் அலங்காரமாம். சூத்திரம் - "முன்வருஞ் சொல்லும் பொருளும் ப்லவயின், பின்வருமென்னிற் பின்வருநிலையே" - தண்டியலங்காரம்.
40. மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
(இ-ள்.) ஈநத்தால் - இழிவான காரியத்தால், ஊட்டியக் கண்ணும் - (சோறு முதலியவற்றை) அனுபவிக்கச் செய்தும், இவ்வுடம்பு - இந்தத் தேகம், உறுதிசேர்ந்து - உறுதிப்பட்டு, நீட்டித்து நிற்கும் எனின் - வெகுகாலம் நிலைத்திருக்குமானால், மாநம் அரு கலம் நீக்கி - மானமென்னும் அருமையாகிய ஆபரணத்தைத் தள்ளி, இரவு என்னும் - இரப்பது என்று சொல்லுகிற, ஈந இளிவினால் - தாழ்மையான அவமானத்தால், வாழ்வேன்மன் - பெரும்பாலும் வாழ்வேன், எ-று.
எவ்வளவு காப்பாற்றினாலும் உடம்பு நீடித்து நிற்பதில்லை யாதலால், அதற்காக இழிவான காரியங்களைச் செய்தல் வீண். நிலையான ஆத்துமாவுக்காக வேண்டிய காரியக்களைச் செய்வது நலம் என்பது கருத்து.
மாநமாவது தன் பெருமையைக் காப்பற்றல். ஈநவிளி வினால் = ஈநமாகிய சாவினால் எனவும் உரைக்கலாம்; ஈநகாரியஞ் செய்வது சாவுக்குச் சமானமென்பது கருத்து; சாவில் ஈநமாவது பலர் பழிக்கும்படியான நிலை. மன் - அசையும் ஆம். பெரும்பாலும் வாழ்வேனென்பதனால் அப்படி வாழ்தலும் கூடாத காரியம் என்றதாயிற்று. ஊட்டியக் கண்ணும் - இது எதிர்கால வினையெச்சம்; கண் - விகுதி, உம் - இழிவு சிறப்பு. நீட்டித்து - டகரம் - விரித்தல் விகாரம்.
5. துய்தன்மை
[துய்தன்மை - இது துய்து அன்மை எனப்பிரித்து, சுத்தமில்லாதது எனப் பொருள் கொள்ளப்படும், ஆதலின் அதைக் குறித்துச் சொல்லிய அதிகாரமாம். தூயதன்மை என்றும் பாடமுண்டு. அதையும் தூயது அன்மை எனப்பிரித்து முன்போல் பொருள் கொள்க.]
41. மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
(இ-ள்.) மா கேழ் மடம் நல்லாய் - மாந்தளிரின் நிறம் போன்ற நிறமும் இளமையும் பொருந்திய பெண்ணே! என்று அரற்றும் - என்று கத்துகிற, சான்றவர் - வித்துவான்கள், நொய்யது - அற்பமான, ஓர் புக்கு இல்லை - ஒரு புகத்தக்க வீட்டை, நோக்கார் கொல் - சிந்தியார்களா; ஓர் யாக்கைக்கு - ஒரு உடம்பில், ஈ சிறகு அன்னது - ஈயின் சிறகு அளவான, ஓர் தோல் அறினும் - ஒரு தோல் அற்றாலும். காக்கை கடிவது - காக்கையை ஓட்டும்படியான, ஓர் கோல் - ஒரு கொம்பு, வேண்டும் - வேண்டியிருக்கிறது, எ-று. ஏ - அசை.
அசுத்தமான புண்ணுடம்பைக் கண்டு மாக்கேழ் மட நல்லாய் என்று துதித்துக் கத்திக் கொண்டிருப்பவர் அவ்வுடம்பின் அற்பத்தனத்தைக் கண்டதில்லையோ? ஏனென்றால் உடம்பில் கொஞ்சந் தோல் பேர்ந்தாலும் அப்புண்னைக் குத்த வருகின்ற காக்கையை ஓட்ட ஒரு கோல் தேட வேண்டுமே; இவ்வளவு அருவருப்பான உடம்பை மேன்மையாக நினைத்தல் அசுத்தமேயல்லாது சுத்தமன்று என்பது கருத்து.
அப்படிப்பட்ட அறிவீனரை சான்றவரென்றது எதிர்மறை இலக்கணை, பரிகாசத்துக்குச் சொன்னது. நல்லாள் என்பதின் ஈறு விளியில் யுகரமாய்த் திரிந்தது [பெயர். சூ. 51]. சான்றவர் - வினையாலணையும் பெயர்; சால் - உரிச்சொல், பகுதி. றகரம் - இடைநிலை, அகரம் - சாரியை, அர் - விகுதி, சால்பு = நிறைவு, விவேகத்தால் நிறைந்தவர் என்பது பொருள். நொய்வது - நொய் - பண்படி, பகுதி, அ - சாரியை, து - ஒன்றன்பால் விகுதி. புக்கில் - புகு இல் என்பதில் ககரம் இரட்டி நின்றது, வினைத்தொகை. யாக்கைக்கு - கு உருபு இடப் பொருளில் வந்தது. கடவது - வினையாலணையும் பெயர். கோல் என்பதோடு இருபெயரொட்டுப் பண்புத்தொகையாய்க் கொள்ள வேண்டும்.
42. தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.
(இ-ள்.) தோல் போர்வை - தோலாகிய போர்வையை, மேலும் - மேலேயும், தொளை பல ஆய் - பல துவாரங்களையு முடைத்தாய், பொய் மறைக்கும் - அசுத்தங்களை மறைக்கின்ற, மீ போர்வை - மேல் போர்வையினால், மாட்சித்து - மாட்சிமை யுடையது, உடம்பு -; ஆனால் - அப்படியாதலால், மீ போர்வை - மேற்பார்வையானது, பொய் மறை ஆ - பொய்யை மறைத்து நிற்க, காமல் புகலாது - காமத்தை விரும்பாமல், அதனை - அவ்வுடம்பை, பை மறி ஆ - பையை மறித்ததாக, பார்க்கப்படும் - பார்க்கவேண்டும், எ-று.
இந்த உடம்பு அருவருக்கும் படியான நீர் ஒழுகுகின்ற பல துவாரங்களோடு கூடி மேலே ஒரு தோல் போர்த்து அதனாலே கண்ணுக்கினியதாகத் தோன்றுகின்றதே யன்றி, உண்மையாகப் பார்த்தால் மல மூத்திர முதலிய அசுத்தங்கள் பொதிந்த பைக்குச் சமானமாகும்; அதனை மேலே பார்த்துக் காமங் கொள்ளாமல், மேலே பளபளப்பாயும் மெத்தென்று மிருக்கிற ஓர் அசுத்தப்பையை உட்புறந் திருப்பிப் பார்த்தால் எப்படியோ அப்படிப் பார்த்தால் அதன் அசுத்த நிலை வெளிப்படும் என்பது கருத்து.
மாட்சித்து - குறிப்புவினைமுற்று. அசுத்த வஸ்துக்கள் உண்மையில் அழகில்லாதனவாய்ப் போர்வையினால் அழகுள்ளன போலத் தோன்றுதலால் பொய்யென்றார். மறை = மறைப்பது; கர்த்தாப் பொருள் விகுதி குறைந்து நின்றது. மறி - முதனிலைத் தொழிற்பெயர், மறிதல் = திருப்புதல். ஆ - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், ஈறு குறைந்து நின்றது. மற்று - அசை, பார்க்கப்படும் - பார்க்க வேண்டுமென்னும் பொருள்ளுள்ள ஒருவகை வியங்கோள் வினைமுற்று; தேற்றப்பொருளுள்ள தொழிற்பெயர் என்று சொல்வாரும் உளர்.
43. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
(இ-ள்.) பெரியோர் - மேலோர், எக்காலும் - எப்போதும், உண்டி வினையுள் - உண்ணுகிற தொழிலால், உறைக்கும் என - துர்க்கந்தப்படுமென்று, கண்டு கைவிட்ட - பார்த்துத் தள்ளிவிட்ட, மயல் - மயக்கமாகிய (தேகம்), தக்கோலந் தின்று - தக்கோலம் என்னும் (வாசனைத் திரவியத்தைத்) தின்று, தலை நிறைய பூ சூடி - தலை நிரம்பப் பூவைச் சூடி, பொய் கோலம் செய்ய - பொய்யான அலங்காரஞ் செய்வதனால், ஒழியுமே - (அந்தத் துர்க்கந்தம்) நீங்குமா? [நீங்காது], எ-று.
பல உணவுகள் சீர்ணிப்பதனால் துர்க்கந்தம் வீசுகிற உடம்பில் வாசனை வஸ்துக்களை மெல்வதும் பூச்சூட்டுவதும் ஆகிய இப்பொய் அலங்காரத்தினால் அந்தத் துர்க்கந்தம் நீங்குமா என்பது கருத்து.
பொய்க்கோலம் - இங்கே [மெய்யீறு. சூ. 21னால்] வலி மிகுந்தது. ஒழியுமே - ஏகாரம் - வினாவிடைச்சொல். வினையுள் - விக்குள் என்பது போல. உள் - தொழிற்பெயர் விகுதியாம், மூன்றாம் வேற்றுமைத் தொகை; அல்லது உள் - ஏழனுருபாய் காரணப் பொருளில் வந்ததென்பது நேர். மயல் என்பது அதற்குக் காரணமாகிய உடம்பிற்கு ஆகு பெயர்.
44. தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
(இ-ள்.) உள் நீர் - உள்ளேயிருக்கிற நீரை, களைந்தக்கால் - நீக்கிவிட்டால், நுங்கு குன்றிட்ட அன்ன - நுங்கைத் தோண்டியெடுத்தாற் போலிருக்கிற, கண் நீர்மை - கண்ணின் குணத்தை, கண்டு ஒழுகுவேன் - கண்டு நடக்கிற நான், தெள் நீர் குவளை - தெளிவான நீரில் (முளைத்த) கருநெய்தற்பூ - பொரு கயல் - போர் செய்கின்ற கெண்டை மீன்கள், வேல் - வேலாயுதம், என்று - என்று சொல்லி, கண் இல் புல் மாக்கள் - விவேகமில்லாத அற்பமனிதர்கள், கவற்ற - கவலைப்படுத்த விடுவனோ - (என் ஒழுக்கத்தை) விடுவனோ [விடேன்], எ-று.
உள் நீரைத் தோண்டிவிட்டால் நுங்கைத் தோண்டி விட்டாற் போல வெறும்பள்ளமாய் காணப்படுகிற கண்ணை குவளை கயல் வேல் இவற்றோடு உபமானப்படுத்தி விவேகமற்றவர் வருணிப்பதனாலே மயங்க வேண்டாம் என்பது கருத்து.
பொருகயல் என்பது ஒன்றோடொன்று எதிர்முகமாய் நின்று பாய்வதுபோல கண் அசைந்து ஓடும்போது நிற்குநிலையைக் குறிக்கின்றது. இவை பெயர்ச்செவ்வெண், விகாரத்தால் தொகை பெறாதனவாம். என்று - வினையெச்சம். இல்புன் - இங்கே லகரம் [உருபு. சூ. 10னால்] இயல்பாயிற்று. கவற்ற - இது கவற்று என்னும் பிறவினையின் வினையெச்சம். கவல் - தன்வினைப்பகுதி, று - பிறவினை விகுதி. சூன்றுதல் = தோண்டுதல், குன்றிட்டு அன்ன, அல்லது சூன்றிட்ட அன்ன என இருவகையாயும் பிரித்து முற்பாட்டுகளில் காட்டி யிருக்கிறபடி இலக்கணம் கூறலாம். விடுவன் - அன் - தன்மையொருமை விகுதி [வினை. சூ. 12]. ஒழுகுவேன் - தன்மை வினையாலணையும் பெயர்.
45. முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
(இ-ள்.) எல்லாரும் காண - யாவருங் காணும்படி, புறம் காடு - சுடுகாட்டில், உதிர்ந்து உக்க - உதிர்ந்து சிந்தியிருக்கிற, பல் என்பு கண்டு - பல்லாகிய எலும்புகளைக் கண்டு, ஒழுகுவேன் நடப்பவனாகிய யான், முறுவல் - பற்களை, முல்லை முகை என்று - முல்லை யரும்புகள் என்றும், முத்து (என்று) - முத்தென்றும், இவை பிதற்றும் - இவற்றை உபமானமாகப் பிதற்றுகிற, கல்லா புல் மக்கள் - (மேலான நூல்களைக்) கற்காத அற்ப மனிதர், கவற்ற விடுவனோ - சொல்லும்படி சும்மா விருப்பேனோ [இரேன்], எ-று.
சுடுகாட்டில் உதிர்ந்து கிடக்கிற பல் எலும்புகளை முல்லையரும்பு முத்து இவைகளோடு ஒப்பிட்டுக் கல்லாதவர் பிதற்றுவதனால் மனவுறுதியை விட்டு மயங்கலாகாது என்பது கருத்து.
புறங்காடு - இது காட்டுப்புறம் என இலக்கணப்போலியாகவும், ஊர்க்குப் புறத்திலுள்ள காடு என்று இலக்கணம் உடையதாகவுங் கொள்ளலாம். உக்க - பெயரெச்சம், உகு - பகுதி.
46. குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
(இ-ள்.) குடரும் - குடலும், கொழுவும் - கொழுப்பும், குருதியும் - இரத்தமும், என்பும் - எலும்பும், தொடரும் நரம்பொடு - ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் - சருமமும், இடைஇடையே - இவற்றின் நடுவே நடுவே, வைத்த தடியும் - வைத்த தசைகளும், வழும்பும் - நிணமும், ஆம் இவற்றுள் - ஆகிய இவைகளுக்குள், ஈர்ங் கோதையாள் - குளிர்ச்சியான மாலையை யணிந்த பெண் என்பவள், எத்திறத்தாள் - எந்தப் பகுதியை யுடையவள், எ-று.
குடல் முதல் வழும்பு ஈறாகச் சேர்ந்திருக்கிற உடம்பைக் கண்டு ஈர்ங்கோதையாளென்று மயங்குகின்றார்களே, உற்றுப் பார்த்தால் எல்லாம் அசுத்த வஸ்துக்களாகவே காணப்படுகின்றன, ஆதலின் இது அஞ்ஞானம் என்பது கருத்து.
உம்மைகள் - எண்ணும்மைகள். ஒடு - எண்ணிடைச் சொல், மற்று - அசை. ஈர்ங்கோதை - பண்புத்தொகை, நிலைமொழியில் அ - கெட்டது. [எழுத்தியல். சூ. 64னால்] ஙகரம் மிகுந்து ஈரெற்றாய் நின்றது.
47. ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
(இ-ள்.) ஊறி உவர்த்தக்க - (மலங்கள்) ஊறி வெறுக்கத்தக்க, ஒன்பது வாய் புலனும் - ஒன்பது துவாரமாகிய இந்திரியங்களும், கோதி குழம்பு அலைக்கும் - அசுத்தக் குழம்புகள் சிதறி மோதப் பெற்ற, கும்பத்தை - (உடம்பாகிய) பண்டத்தை, பேதை - அறிவில்லாதவன், மீ போர்த்த கருந்தோலால் - மேலே போர்த்திருக்கிற அழகான தோலினால், கண் விளக்கப்பட்டு - கண்கள் ஒரு பிரகாசத்தையடைந்து, பெருந்தோளி - பெருத்ததோளை யுடையவளே!, பெயவளாய் - வளைகளை இடப்பெற்றவளே!, என்னும் - என்று சொல்வான், எ-று.
கருத்து வெளிப்படை ஊறி என்னும் செய்தென் வினையெச்சம், உவர்த்தலுக்குக் காரணமாதலின் பிறகர்த்தா வினையோடு முடிந்தது. இது செயவென் வினையெச்சத்தின் திரிபென்னலுமாம். உவர்த்தலுக்குத் தக்க = உவர்த்தக்க. வாய்ப்புலனும் என்னும் எழுவாய் அலைக்கும் என்னும் உடம்பின் வினையைக் கொண்டது. [பொது. சூ. 26னால்] அமைந்தது. அதன் உரையைக் காண்க. வாய் என்பதை ஏழாம் வேற்றுமை தொக்கதாகவுங் கொள்ளலாம்.
48. பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி.
(இ-ள்.) பண்டம் அறியார் - வஸ்துவின் உண்மையை அறியாமல், படு சாந்தும் கோதையும் கொண்டு - பூசத்தக்க சந்தனத்தையும் பூமாலையும் அணிந்து கொண்டு, பாராட்டுவார் - அவ்வுடம்பை ஆதரிப்பவர்கள், பெடை சேவல் வன் கழுகு - பெட்டையும் ஆணுமாகிய கடினமான கழுகுப் பறவைகள், மண்டி - நெருங்கி, பேர்த்திட்டு குத்தும் - பெயர்த்து குத்துகின்ற, முடை சாகாடு - துர்க்கந்தமுள்ள உடம்பாகிய பண்டியை, அச்சு இற்றுழி - (உயிராகிய) அச்சு முறிந்த போது, கண்டிலர் கொல் - பார்த்தார்கள் இல்லையோ, எ-று.
உயிர்போன உடம்பைக் கழுகுகள் குத்த அதின் அசுத்தம் வெளிப்படையா நிற்பதைக் கண்டறியாமல் சந்தனம் மாலை முதலியவற்றால் அதனைப் பாராட்டுகிறார்கள் மூடர்கள் என்பது கருத்து.
அறியார் - முற்றெச்சம். [வினையியல் - சூ. 32.] பெடைச் சேவல் - உம்மைத் தொகை. சாகாடு, அச்சு - இரண்டும் உவமையாகு பெயர்.
49. கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
(இ-ள்.) கழிந்தார் இடு தலை - இறந்தவர்களுடைய (சுடுகாட்டில்) கிடக்கிற தலை, கண்டார் - பார்த்தவர்களுடைய, நெஞ்சு உட்க - மனம் பயப்படும்படி, குழிந்து ஆழ்ந்த கண்ண ஆய் தோன்றி - பள்ளமாகி ஆழ்ந்திருக்கிற கண்களையுடையனவாக காணப்பட்டு, ஒழிந்தாரை - மற்றவர்களை, போற்றி - மேன்மைப்படுத்தி, நெறி நின்மின் - நல்ல வழியிலே நில்லுங்கள், இதன் பண்பு - இவ்வுடம்பின் குணம், இற்று என்று - இத்தன்மையானது என்று, சால சிரித்து - மிகவும் சிரித்து, சாற்றுங்கொல் - சொல்லுகின்றனவோ, எ-று.
சுடுகாட்டில் கிடக்கிற செத்தவர்களுடைய தலையெலும்புகள் கண்ணிருந்த விடத்து ஆழமான பள்ளமாய் இளித்த பற்களுமாய் கிடப்பதைப் பார்த்தால் இவ்வுடம்பு இப்படி அருவருக்கத்தக்கது; இதனை நம்பி வீண் காலம் போக்காமல் நல்லவழியிலே நடவுங்களென்று சிரித்துப் பிறருக்குப் போதிக்கின்றன போலிருக்கின்றன என்பது கருத்து.
கண்ண - சினையடியாகப் பிறந்த பெயர்ப் பகுபதம்; குறிப்பு வினைமுற்று என்னவுமாம். ஆய் - ஆக என்பதின் திரிபு. தலை - பால் பகா அஃறிணை யாதலின் இங்கு பன்மை. இற்று - இன் என்னும் இடைச்சொல்லின் அடியாகப் பிறந்த குறிப்பு வினை முற்று. று - விகுதி. சாற்றும் - "றவ்வொடுகரவும்மை" என்னும் [பதவியல். 18ம்] சூத்திரத்தில் செய்யுநிகழ்பெதிர்வும் என்றமையால் இங்கு நிகழ்காலத்தில் வந்தது. அல்லது இயற்கைப் பொருளை இற்றெனக்கிளத்தல்' என்கிற [பொது. சூ. 53] விதியால் தன்மையைக் காட்டவந்ததுமாம்.
50. உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
(இ-ள்.) உயிர் போயார் வெள் தலை - செத்தவர்களுடைய வெள்ளையான தலையெலும்புகள், உட்க சிரித்து - (பிறர்) பயப்படும்படி சிரித்து, செம்மாப்பவரை - (இல்வாழ்க்கைச் சுகத்தால்) இறுமாந்திருப்பவர்களுக்கு, செயிர் தீர்க்கும் - (இறுமாப்பாகிய) குற்றத்தை நீக்கும், (ஆதலால்) செயிர் தீர்ந்தார் - குற்றம் நீங்கியவர்கள், கண்டு - பார்த்து, இதன் வண்ணம் இற்று - இதன் குணம் இப்படிப்பட்டது, என்பதனால் - என்று நினைப்பதனால், தம்மை - தங்களை, ஓர் பண்டத்துள் - ஒரு பொருளில், வைப்பது இலர் - வையார்கள், எ-று.
இறந்தவர்களுடைய தலையெலும்புகள் பிறர் பயப்படும்படி சிரிப்பது போலிருத்தலால் உடம்பின் மேல் ஆதாரம் வைத்திருப்பவர்கள் அவ்வபிமானத்தை விடுகிறார்கள்; அப்படி விட்டால் தம்மை ஒரு பொருளாகப் பாராட்டார்கள் என்பது கருத்து.
போயார் - யகரம் இறந்தகால இடைநிலை யெனக் கொள்க. [பொது. சூ. 26னால்] உயிர் என்பது போயார் என்பதின் பகுதியோடு முடிந்தது. வெள் தலை என்பதில் [மெய். 24வது சூத்திரத்தினால்] தகரம் டகரமும் ஆயின. செம்மாப்பவரை - ஐ உருபை கு உருபாகத் திரித்துக் கொள்க; வேற்றுமை மயக்கம். வைப்பது - தொழிற்பெயர்; இதனை எழுவாயாகவும் இரண்டாம் வேற்றுமையாகவும் கொள்ளலாம். இல் என்பது செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமாய் இருக்குமென்பதை முன்னமே காட்டியிருக்கிறோம்.
52. நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
(இ-ள்.) தலை ஆயார் - மேலானவர்கள், நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - (உடம்பு செல்வ முதலானவைகளில்) நிலையில்லாமை என்றும் வியாதிகளும் கிழத்தனமும் சாவும் ஆகிய குற்றங்களையுடையவனவென்றும் யோசித்து, தம் கருமம் செய்வார் - தமக்கு உறுதியான காரியங்களைச் செய்து வருவார்கள்; தொலைவு இல்லா - நீங்குதலில்லாத, சத்தமும் சோதிடமும் - சொல்லைக் குறித்த சாஸ்திரங்களும் (கிரகவோட்டமும் அதனால் வரும் பயன் முதலியவற்றையு முணர்த்தும்) சோதிட சாஸ்திரமும், என்று இவை - என்று சொல்லப்பட்ட பல நூல்களையே, பிதற்றும் - (விடாமல்) சொல்லிக் கொண்டு திரிகிற, பித்தரில் - பைத்தியம் பிடித்தவரைக் காட்டிலும், பேதையார் இல் - புத்தியினர் (உலகத்துள்) இல்லை, எ-று.
செல்வமுதலியவற்றுள் பல குற்றங்களிருப்பதைக் கண்டு அவைகளில் அபிமானத்தை வைக்காமல் தமக்கு நற்கதிக்கேதுவான வேதாந்த சாஸ்திர முதலியவை கற்றுக் காலத்தைக் கழிப்பர் பெரியோர்; இம்மைக்கே பெரும்பாலும் உபயோகப்படுகிற இலக்கண முதலிய நூல்களையே கற்றுக் காலத்தை வீண் போக்குவர் மூடர் என்பது கருத்து.
சத்தம் என்பது ஐந்திலக்கணங்களும் சங்கீதமும்; தொனிகளுக்கும் பொது. சோதிடம் என்பது கணிதத்துக்குமாம். இப்படிப்பட்ட நூல்கள் இம்மை மறுமைகளிற் சிறிது உபயோகமானாலும் வேதாந்த முதலிய நூல்களைப் போல் முக்கியமா யுதவியாகாமையின் அவற்றையே முக்கியமாகக் கொண்டவரை இப்பாட்டிற் பழித்தது என அறிக. நிலையாமை - ஒரு தன்மையதாயிராமை என்று என்னும் எண்ணிடைச் சொல்லை நிலையாமை முதலிய நான்கிலும் கூட்டிக் கொள்க; [இடை. சூ. 10.] மேற்படி இயல் 9ம் சூத்திரத்தினால் இது தொகைபெறாதாயிற்று. ஆயுள் முழுதுமே போதாதாகையால் 'தொலைவில்லா' என்றார். ஆங்கு - அசை. பித்தரில் - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்தது. நீக்கப் பொருளெனக் கொள்வாருமுளர்.
53. இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.
(இ-ள்.) இல்லம் - மனை, இளமை - வாலிபம், எழில் வனப்பு - மிகுந்த அழகு, மீக்கூற்றம் - செல்வாக்கு, செல்வம் - சம்பத்து, வலி - தேகபலம், என்று இவையெல்லாம் - என்று சொல்லப்பட்ட இவைகளெல்லாம், நிலையாமை - நிலைத்திராமையை, மெல்ல கண்டு - நிதானித்து யோசித்து, தலையாயார் - மேலோர், தாம் உய்யக் கொண்டு - தாங்கள் கடைத்தேறுவதற்கு, நெடியார் - நீடியாதவராகி, துறப்பர் - (இல்ல முதலியவற்றுட்) பற்றை விடுவார்கள், எ-று.
முதற்பாட்டின் கருத்தே இதிலுமென்றறிக.
எழில் வனப்பு என்பன ஒரு பொருட் கிளவியாயினும் "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா" என்கிற [பொது. 47வது சூ.] விதியால் அமைந்தன. மீக்கூற்றம் - மீ - மேலான, கூற்றம் - கூறுதல் [சொல்லுதல்]. எல்லாவற்றின் மேலாகச் சொல்லுதலென்றபடி. என்று என்பதை எண்ணிடைச் சொல்லாக் கொண்டு முரைக்கலாம். மெல்ல - மென்மையடியாக வந்த குறிப்பு வினையெச்சம். நெடியார் - எதிர்மறை வினையாலணையும் பெயர்; நெடு - பகுதி, தாமதித்தல், ஆர் - எதிர் மறையையுங் குறிக்கும் பலர்பால் விகுதி, உய்யக்கொண்டு - ஒரு சொல்லாக் கொள்ளுதற் நேர்; தாம் உய்வதைக் கொண்டெனவும் உரைக்கலாம்.
54. துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
(இ-ள்.) ஏழையார் - விவேகமற்றவர்; பல நாள் துன்பம் உழந்தும் - பலதினம் துக்கத்தை யனுபவித்தும், ஒரு நாளை இன்பமே காமுறுவர் - ஒருதினத்தில் கிடைக்கும் சுகத்தையே விரும்புவார்கள்; ஆன்று அமைந்தார் - அறிவு அதிகமாகப் பொருந்தினவர். இன்பம் இடைதெரிந்து - சுகமானது மாறுபடுவதை அறிந்து, இன்னாமை நோக்கி - அதனால் வருந் துன்பத்தைக் கண்டு, மனை ஆறு அடைவு - இல்வாழ்க்கை வழியில் சேருதலினின்றும், ஒழிந்தார் - நீங்கினார், எ-று.
புத்தியீனர் இல்வாழ்க்கையிற் பலதுன்பத்தை அனுபவித்தும் ஒரு கால் நேரிடுகிற சொற்ப இன்பத்தைப் பற்றி அதையொழித்தாரில்லை; விவேக மிருந்தவரோ அது மாறிப்போய் பல துன்பங்கள் நேரிடுவதை யோசித்து அதையொழித்தார் என்பதாம்.
நாளை - ஐ - சாரியை, காமம் - விருப்பம், அதனை உறுவர் காமுறுவர், மரூஉமொழி, காமம் இடைகுறைந்த தென்னவுமாம். இடை - இடைதல் அதாவது நீங்குதல்; முதனிலைத் தொழிற்பெயர். இன்னாமை - இனி என்பதின் எதிர்மறைப் பண்பு. ஆன்று - இது அகன்று என்பதின் விகார மென்பர்; ஆன்றல் என்பது தனித்த ஒரு சொல் எனவுஞ் சொல்லுகின்றனர்.
55. கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.
(இ-ள்.) இளமையும் - இளமைப்பருவம், கொன்னே கழிந்தன்று - வீணாய்ச் சென்றது; இன்னே - இப்பொழுதே, பிணியொடு மூப்பும் வரும் - நோயும் கிழத்தனமும் வந்து சேரும்; (ஆதலால்) துணிவு ஒன்றி - துணிவைப் பொருந்தி என்னொடு சூழாது - என்னொடு ஆலோசியாமல், எழு நெஞ்சே - எழுகின்ற மனமே, நமக்கு நல் நெறி சேர - நமக்கு நல்ல வழியானது கிடைப்பதற்கு, போதியோ - போகிறாயோ, எ-று.
ஒருவன் திடீரென்று விஷய வாசனை தீர்ந்து நன்மார்க்கத்திற் செல்லத் துணிந்த தன் மனதை நோக்கி "நானு நீயு மொன்றியே எல்லாக் காரியமும் வெகுநாளாய் நடத்தி வந்தோமே, இப்பொழுதென்ன என்னோடே ஆலோசியாம லெழுந்தாய்? கால இயல்பினால் வருந் துன்பங்களைக் கண்டு விஷயப் பற்றை விட்டு நித்திய சுகமான மோக்ஷவழிக்குப் போகிறாய் போலும்" என்று சொன்னது என்பது கருத்து.
நன்னெறி - மோக்ஷவழி. நமக்கு - உனக்கும் எனக்கும், நீ என்பது மனம்; நான் என்பது ஆத்துமா. மனதின் வழியாகவே சுகதுக்கங்களை யனுபவிப்பது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. நமக்கு என்பது தனித்தன்மைப்பன்மை யென்னவுமாம். கழிந்தன்று - கழி - பகுதி, த் - இடைநிலை, சந்தியால் வந்த தகரம் மெலிந்தது. அன்சாரியை; று - விகுதி, உம்மைகள் எண்ணில் வந்தன. ஆல் - அசை, காரணம் குறித்த தெனவுமாம். துணிவு - நிச்சயமும் தீரமுமாம். போதி - இ - விகுதி. தகரம் - எழுத்துப் பேறு, தி என்பதே விகுதி என்னலாம்; இவ்விகுதி ஏவலுக்கும் நிகழ்காலத்துக்கும் வருகின்றது; அல்லது தகரம் - இடைநிலை; இ - விகுதி, விரைவு பற்றி நிகழ்காலம் இறந்தகாலமான வழுவமைதி என்னலாம்.
56. மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
(இ-ள்.) மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல் எனினும் - மாட்சிமைப்பட்ட குணங்களும் பிள்ளையைப் பெறுதலும் (இல்லாளிடத்து) இல்லாவிட்டாலும், பூண்டான் - கலியாணஞ் செய்து கொண்டவன், கழித்தற்கு அருமையால் - (அம்மனையை) நீக்குவதற்குக் கூடாமையாலே, பூண்ட மிடி என்னுங் காரணத்தின் - (தான்) அடைந்த வருத்தம் என்கிற காரணம் பற்றி, மேல் முறைக்கண்ணே - மேலாகிய ஒழுக்கத்திலே, [அல்லது பூர்வ காலத்திலேயே.] கற்றறிந்தார் - நூல்களைக்கற்று [அதன்படி அனுபவத்தை] அறிந்தவர்கள், கடி என்றார் - (விவாகத்தை) விடு என்றார்கள்.
நற்குணமும் பிள்ளைப்பேறு மில்லாதிருந்தாலுங் கொண்ட பெண்டாட்டியை விடக்கூடாதாகையால், விவாகம் செய்த பின் இல்வாழ்க்கையில் பலதுன்பங்களுண்டாவதைப் பற்றி முன்னமே அதனை விடு என்று பெரியோர் சொன்னார்கள் என்பது கருத்து.
கடி என்னுஞ் சொல்லுக்குக் கலியாணமென்றும் ஒரு பொருளுண்டு. அது கடிய வேண்டுவது என்கிற காரணம் பற்றி வந்ததென்பது அபிப்பிராயம். இதைச் செயப்படுபொருள் விகுதி குன்றிய பெயரென்றாகிலும் கடி என்று சொல்லப்படுவதினால் வந்த பெயரென்றாகிலும் கொள்க; நேர்பொருளில் ஏவலொருமை; [உரியியல் "கடியென் கிளவி காப்பே கூர்மை" என்கிற 16வது சூத்திரத்தைக் காண்க.] குணத்தொடு - ஒடு - எண்ணிடைச் சொல், 'என்று மெனவு மொடுவும்' என்கிற [இடை. சூ. 10னால்] பிரிந்து மக்கட்பேறு என்பதோடு சேர்ந்தது. அருமை இங்கே கூடாமை; மனையாளைக் கழித்தற்குக் காரணம் தருமநூலிற் காட்டப்பட்டிருப்பதனால் இதைப் பெரும்பான்மையிற் கொள்க. மிடி - துன்பத்திற்கு ஆகுபெயர். காரணத்தின் - இன் உருபு ஏதுப் பொருளில் வந்தது. கடி என்பதற்கு இங்ஙனம் பொருள் படுத்ததை 'நிருத்தி' அலங்கார மென்ப.
57. ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
(இ-ள்.) ஊக்கி - முயற்சிப்பட்டு, தாம் கொண்ட விரதங்கள் - தாம் ஆரம்பித்த விரதங்கள் [தவங்கள்], உள் உடைய - சொரூபங் கெடும்படி, தாக்கு அரு துன்பங்கள் - தாங்குதற்குக் கூடாத தீங்குகள், தலைவந்தக்கால் - அவற்றினிடம் வந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - அவற்றைத் தள்ளி (விரதங்கள்) ஸ்திரப்படுத்தும் மனோபல முள்ளவர்களே, நல் ஒழுக்கம் காக்கும் - மேலான துறவற வொழுக்கங்களைக் காக்கும்படியான, திருவத் தவர் - சிறப்பையுடையவர், எ-று.
உறுதியாகத் தாம் ஆரம்பித்த விரதங்களில் சொரூப மழியும் படியான இடையூறுகள் வந்தால் அவற்றை நீக்கி விரதங்களைக் காக்கத் தக்கவரே துறவிகளாவார் என்பது கருத்து.
விரதங்களாவன்; தியான தாரணாதிகள், உள் என்பது இங்கே உண்மை. அதாவது சொரூபம். துன்பங்களாவன: தன்னைப் பற்றி வருவனவும், பிருதிவி முதலியவைபற்றி வருவனவும், தெய்வங்களால் வருவனவுமான மூன்று தாபங்கள், தாக்கரு - தாங்கு அரு, வலித்தல், முதனிலைத் தொழிற்பெயர், நான்காம் வேற்றுமைத் தொகை. நிறூஉம் - நிறுவும் என்பதின் விகாரம். திருவத்தவர் - திரு - பகுதி, அத்து, அ - இரண்டும் சாரியை, அர் - விகுதி. திரு - மேன்மை பொருந்திய, அத்தவர் - அப்படிப்பட்ட தவசிகள் எனவுமுரைக்கலாம்.
58. தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
(இ-ள்.) தம்மை இகழ்ந்தமை - தங்களைத் தூஷித்ததை, தாம் பொறுப்பது அன்றி - தாங்கள் பொறுத்துக் கொள்வதுமல்லாமல், மற்று - மேலும், எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - நம்மைத் தூஷித்த செய்கையின் பலனால், உம்மை - மறுமையில், எரிவாய் நிரயத்து - எரிகின்ற வாயையுடைய நரகத்திலே, வீழ்வர்கொல் என்று வீழ்வார்களே என்று, பரிவதூஉம் - இரங்குவதும், சான்றோர் கடன் - (துறவறவியல்பு) மிகுந்தவர்களுடைய கடமை, எ-று.
தம்மை யிகழ்ந்ததைப் பொறுத்தலோடு இகழ்ந்ததைப் பற்றி அவருக்கு நரகம் நேரிடுமேயென்றிரங்கி அப்படி யில்லாமலிருக்கப் பிரார்த்திப்பதும் துறவிகள் கடமை என்பது கருத்து. இடையூறுகளுக்குப் பின்வாங்காமையும் பிறர்க்குத் துன்பம் நேரிடப் பொறாமையும் துறவிகளுக்கு வேண்டும் என்பதாம்.
இகழ்ந்தமை - தொழிற்பெயர் விகுதி. உம்மை - மை - இடம். பரிவதுவும் என்பது பரிவதூஉம் என இன்னோசைக்கு அளபெடுத்தது. இப்பாட்டு பின் அதிகாரங்களிலிருப்பது நன்று.
59. மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.
(இ-ள்.) மெய் வாய் கண் மூக்கு செவி -, என பெயர் பெற்ற - என்று பேர் கொண்ட, ஐ வாய் - ஐந்தின்வழியாய் வருகின்ற, வேட்கை அவாவினை - மிகுந்த ஆசையை, கலங்காமல் காத்து - மனக்கலக்கமின்றி (தம்மிடஞ்சேராமற்) பாதுகாத்து, கைவாய் உய்க்கும் - நல்லொழுக்கத்திற் செலுத்துகிற, ஆற்றல் உடையான் - வல்லமையுடையவன், விலங்காது - தப்பாமல், வீடு பெறும் - மோக்ஷமடைவான், எ-று.
ஐம்பொறிகளை அடக்கி ஞானவழியிற் செலுத்துகிறவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்பது கருத்து.
மெய் என்பது பரிசேந்திரியம்; வாய் என்பது நாக்கு. இங்கும் 'என' என்னும் எண்ணிடைச் சொல் முன் குறித்த இடையியல் சூத்திரத்தினால் மெய் முதலிய ஐந்தோடும் கூடும். ஐவாய் - ஐந்து வாய் பண்புத்தொகை. இதன்மேல் இவற்றால் வருபவை என்னும் பொருளில் அகரவிகுதி வந்தது; இது தத்திதம். இது வேட்கையவர் என்பதோடு இருபெயரொட்டுப் பண்புத்தொகை; பெயரெச்சமெனவுங் கொள்ளலாம். வேட்கையவா - ஒருபொருட் பன்மொழி, சிறப்பைக் குறிக்கும்.
60. துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
(இ-ள்.) துன்பமே மீது ஊரக் கண்டும் - துக்கமே மேலிட்டு வரப்பார்த்தும், துறவு உள்ளார் - துறத்தலை நினையாதவராய், ஏழையார் - புத்தியீனர், இன்பமே காமுறுவர் - சுகத்தையே இச்சிப்பார்கள்; மேல் - மேலானவன், இன்பம் இசைதோறும் - இன்பத்தின் காரணம் கூடுந்தோறும், அதன் இன்னாமை நோக்கி - அதனிலுள்ள துக்கத்தைக் கண்டு, பசைதல் பரியாது - ஆசைப்படுவதை விரும்பான், எ-று. ஆம், மற்று - அசைகள்.
இதற்கு நாலாம்பாட்டின் கருத்தே பெரும்பாலும் அமையும். பண முதலிய இன்பத்தின் காரணத்திலும் அதனைக் காத்தல் வளர்த்தல் முதலான துன்பங்களை நோக்கி அதனையும் விரும்பார் என்பது விசேஷம்.
உள்ளார் - முற்றெச்சம்; "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற வினையியல் 32வது சூத்திரவிதியைக் காண்க. இசை - முதனிலைத் தொழிற்பெயர். மேல் என்பது ஆகுபெயர்.
7. சினம் இன்மை
[அதாவது கோபிக்கக் காரணமிருந்துங் கோபியாமலிருப்பது.]
61. மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
(இ-ள்.) மதித்து இறப்பாரும் இறக்க - தம்மை மேன்மைப் படுத்திச் செல்லுகிறவர்களும் செல்லுக; மதியாது மிதித்து இறப்பாரும் இறக்க - மதியாமல் தம்மைக் கீழ்ப்படுத்திச் செல்லுகிறவரும் செல்லுக; ஈயும் - (பறக்கும்) ஈயும், மிதித்து ஏறி- (நம்மை) மிதித்து (நம்) மேலேறி, தலைமேல் இருத்தலால் - தலையின் மேல் இருப்பதனால், அஃது அறிவார் - அதை அறிந்தவர், காயும் கதம் இன்மை - சுடும்படியான கோபம் இல்லாதிருப்பது, நன்று - நல்லது, எ-று.
அறிவுடையோன் மதிப்பான், அறிவிலான் அவமதிப்பான்; அதற்கு ஈயே திருஷ்டாந்தம், ஆதலால் அவமதித்தவனைக் கோபியா திருத்தல் வேண்டும் என்பது கருத்து.
உம்மைகள் எண்ணில் வந்தவை. ஈயும் - இவ்வும்மை இழிவு சிறப்பு. இறக்க - வியங்கோள். அறிவார் என்னும் எழுவாய் இன்மையின் பகுதியாகிய இல் என்பதற்குக் கருத்தாவாய் நின்றது.
62. தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
(இ-ள்.) மண்டி - நெருங்கி, அடி பெயராது - வைத்த பாதத்தை வாங்காமல், ஆற்ற இளி வந்த போழ்தில் - மிகவும் அவமதிப்பும் இழிவும் வந்த போதிலும், முடிகிற்கும் உள்ளத்தவர் - (அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை) நிறைவேற்றும் படியான மனோபல முள்ளவர்கள், தண்டா சிறப்பின் தம் இன் உயிரை - நீங்காத சிறப்பையுடைய தமது இனிமையாகிய பிராணனை, தாங்காது - தரியாமல், கண்டுழி எல்லாம் - கண்ட விஷயங்களிலும், துறப்பவோ - துறப்பார்களோ, எ-று.
பிறர் தம்மை யிகழ்ந்ததற்காகக் கோபங்கொண்டு அதற்காக உயிரை விடும் அற்பரைக் குறித்துச் சொல்லியது. மகத்தான இகழ்ச்சியிலும் அதை லக்ஷியஞ் செய்யாமல் எடுத்த காரியத்தை முடிக்கும்படியானவர் கண்ட விஷயங்களில் தம் உயிரைத் துறவாமல் சாந்தமாயே யிருப்பார் என்பது கருத்து.
'தண்டாச் சிறப்பின்' என்பதை 'சிறப்பின் தண்டா' என மாற்றி "சிறப்பின் நீங்காத" எனவு முரைக்கலாம். சிறப்பின் - ஐந்தனுருபு. நீக்கத்தில் வந்தது; முன் உரைத்தபடியாகில் இன்சாரியை. கண்டுழி - கண்ட உழி என்பதில் ஈறு தொகுத்தல் நியதி; ஏழாம் வேற்றுமைத் தொகை. எல்லாமும் அப்படியே. கண்டுழியெல்லாம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. துறப்ப - பகரம் - பலர்பால்விகுதி [வினை. சூ. 8]. ஓ - எதிர் மறையில் வந்தது. போழ்தின் என்பதோடு உயர்வு சிறப்பும்மை கூட்டிக் கொள்க. முடிகிற்கும் - முடி - பகுதி, கில் - ஆற்றலைக் காட்டும் விகுதி, கு - சாரியை, உம் - விகுதி.
63. காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
(இ-ள்.) காவாது - தன் வாயைக் காக்காமல், ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - ஒருவன் தன் வாயைத் திறந்து சொல்லுஞ் சொல்லானது, ஓவாதே - ஒழியாமல், தன்னைச் சுடுதலால் - தன்னை வருத்துவதனால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி - ஒழியாமல் ஆராய்ந்து பொருந்திய கேள்வியைப் பெற்ற அறிவுடையார் - விவேகிகள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், கறுத்து - கோபித்து, காய்ந்து அமைந்த - உக்கிரமாகி யிருக்கிற சொற்களை, சொல்லார் - சொல்ல மாட்டார்கள். எ-று.
தம்மைப் பிறன் நிந்தித்த போது தமக்கு உண்டாயிருக்கிற வருத்தத்தையே திஷ்டாந்தமாக் கொண்டு பிறர் விஷயத்தில் கடுமையான சொற்களைச் சொல்லார் விவேகிகள் என்பது கருத்து.
ஓவாது - எதிர்மறை வினையெச்சம், ஓ அல்லது ஓவ - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, து - விகுதி. காய்ந்தமைந்த - பலவின்பால் வினையாலயணையும் பெயர், இரண்டாம் வேற்றுமைத் தொகை; இது அன்சாரியை பெற்றால் 'அமைந்தன' என்றிருக்கும்.
64. நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
(இ-ள்.) நிகர் அல்லார் - தமக்குச் சமானமாகாதவர்கள், நேர்த்து - எதிர்த்து, நீர் அல்ல சொல்லியக்கால் - அயோக்கியமான சொற்களைச் சொன்னால், விழுமியோர் - மேலானவர்கள், வேர்த்து வெகுளார் - (உடம்பு) புழுங்கி கோபிக்க மாட்டார்கள்; கீழ் - கீழோன், அதனை ஓர்ந்து - அந்த நிந்தனையை ஆராய்ந்து, உள்ளத்தான் உள்ளி - மனதினால் நினைந்து, உரைத்து - (பலர்க்கும்) சொல்லி, உராய் - உராய்ந்து, ஊர் கேட்ப - ஊராரெல்லாம் கேட்கும்படி, துள்ளி - அதிகமாய் குதித்து, தூண் முட்டும் - தூணில் முட்டிக் கொள்ளுவான், எ-று.
அற்பர் செய்யும் நிந்தனையைக் குறித்துக் கோபிக்க மாட்டார் பெரியோர். கீழ்மக்களோ தம்மை வெகுமேலாக நினைத்திருப்பதனால் நிந்தனையைக் கேட்ட மாத்திரத்தில் நம்மை இப்படி சொல்லலாமாவென்று மனம் பொறாமல் பலருக்குஞ் சொல்லி நிமிஷத்துக்கு நிமிஷம் கோபம் மிஞ்சுவதனால் துள்ளித் தூணில் முட்டிக் கொள்வார்கள் என்பது கருத்து.
நேர்த்து, ஓர்த்து - இரண்டிடத்தும் வலித்தல் விகாரம். நீர் - சற்குணம், அதை யுடையதுக்கு ஆயிற்று. அல்ல - பலவின் பெயர் விழுமியோர் - விழுமு - பகுதி, சிறப்பு, விரும்புதலுமாம்; இன் - இடைநிலை ஈறுகெட்டது, ஆர் - விகுதி, ஓர் ஆயிற்று, [பொது. சூ. 2] உராய் - முதனிலையே வினையெச்சமா நின்றது. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற வினையியல் 32வது சூத்திரத்தின் உரையைக் காண்க. 'ஊர் கேட்ப என்றதற்கு துள்ளுதல் முட்டிக் கொள்ளுதலின் ஓசை யாவருக்கும் செவிப்படும்படி எனவும் ஊரார் ஓடி வந்து இதென்னவென்று வினாவ எனவும் கருத்துக் கொள்ளலாம். கீழ் - ஆகுபெயர்.
65. இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
(இ-ள்.) இளையான் அடக்கம் - (வாலிபன் பொறிவழிச் செல்லாது) அடங்கி நிற்பதே, அடக்கம் - அடக்கமென்று சொல்லப்படும்; கிளை பொருள் இல்லாஜ்ன் - விர்த்தியாகும் படியான பணமில்லாதவன், கொடையே கொடைப்பயன் - (பிறர்க்குப் பண முதலியவற்றைக்) கொடுப்பதே பயனுள்ள கொடையாம்; எல்லாம் ஒறுக்கும் - எல்லாவற்றையும் வெல்லத்தக்க, மதுகை - தேகபலமும், உரன் - மனவுறுதியும், உடையாளன் - உடையவன், பொறுக்கும் பொறையே - பொறுத்துக் கொள்ளும் பொறுமையே, பொறை - பொறுமையென்று சொல்லத்தகும், எ-று.
பொறிகளை வெல்லுதற்குக் கூடாத வயதுள்ளவன் இந்திரியங்களை ஜயிப்பது எப்படி சிரேஷ்டமோ, பணமில்லாதவன் கொடுப்பது எப்படி கொண்டாடும்படியான கொடுத்தலோ, அப்படி தேகபல மனோபலங்களை யுடையவன் கோபத்தைப் பொறுத்தல் மேலானது என்பது கருத்து.
இது ஒப்புமைக் கூட்டம் என்னுமலங்காரம். இளையான் - இளமையுடையவன். அடக்கம் - தொழிற்பெயர், அடங்கு - பகுதி, வலித்தது, அம் - விகுதி. கொடை, பொறை - இரண்டும் தொழிற்பெயர்கள். கொடு, பொறு, - பகுதிகள், ஐ - விகுதி; "முற்றுமற்றொரோ வழி" என்றதனால் உகரம் கெட்டது. கிளை பொருள் - கிளைக்கின்ற பொருள், வினைத்தொகை. 'கொடைப் பயன்' என்பதை 'பயன்கொடை' என மாற்றிக் கொள்க. எல்லாக் கொடையும் பயன்படுவதானாலும் சிறப்பைப் பற்றி இங்ஙனம் சொல்லப்பட்டது. மதுகையுரன் - உம்மைத் தொகை. உடையாளன் - உடையனாதலை ஆள்பவன். பொறுக்கும் பொறை - பெயரெச்சம் தொழிலைக் கொண்டது; பொறுத்தல் என்பதே திரண்ட பொருள், [வினை. சூ. 21] இப்பாட்டில் விதியலங்காரமும் சேர்ந்திருக்கின்றது.
66. கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
(இ-ள்.) ஒல்லை - சீக்கிரத்தில், இடு நீற்றால் - மந்திரித்திட்ட விபூதியினால், பை அவிந்த நாகம் போல் - படம் அடங்கின பாம்பைப் போல, தத்தம் குடிமையால் - தங்கள் தங்கள் குலப்பெருமையால், வாதிக்கப்பட்டு - வருத்தப்பட்டு, (யோக்கியர்) கல் எறிந்தது அன்ன - கல்லால் எறிந்தது போலிருக்கிற, கயவர் வாய் இன்னாச்சொல் - மூடர் வாயிலுண்டாகிற கொடுஞ்சொற்களை, எல்லாரும் காண - யாவரும் காணும்படி, பொறுத்து -, உய்ப்பர் - செலுத்துவார்கள், எ-று.
விபூதி மந்திரித்துப் போட்டால் தலை யெடுக்க மாட்டாமல் அடங்கிக் கிடக்கிற பாம்பைப் போல பெரியோர்களும் தங்களைத் துஷ்டர் வைதால் தங்கள் குலப்பெருமைகளை நினைத்துப் பொறுத்துக் கொண்டு சும்மா விருப்பார்கள் என்பது கருத்து.
உய்ப்பர் என்பதற்கு அந்த இன்னாச் சொற்கள் தங்கள் மேல் பட்டனவாகப் பாவியாமல் புறத்திற் பட்டனவாக்குவார் என்று அபிப்பிராயம். வாதிக்க - இது பாதிக்க என்னும் வடமொழித் திரிபு. இதற்கே தர்க்கிக்கப்பட்டு எனப்பொருள் கொண்டு, நீர் இந்தப்படி செய்வது இன்னின்ன காரணத்தால் நம் பெருமைக்குத் தகாது என்று தர்க்கஞ் செய்யப்பட்டு எனவும் கருத்துரைக்கலாம்.
எறிந்தன்ன - 'எறிந்தாலன்ன', 'எறிந்தது அன்ன' என்றிரு வகையுங் கொள்ளலாம். கல் எறிந்து எனவுமாம். உய்ப்பர் - பிறவினை, உய் - தன்வினை பிறவினைகளுக்குப் பொதுவான பகுதி. தத்தம் - தம் தம் என்பது "மவ்விரொற்றழிந்து" என்கிற விதியால் மகரங்கெட்டுத் தகர மிகுந்தது. குடிமை - மை - விகுதி, இயல்பைக்காட்டும்.
67. மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
(இ-ள்.) மாற்றார் ஆய் நின்று - பகையுள்லவர்களாகி நின்று, தம் மாறு - தம் பகைக்கு உரிய காரியங்களை, ஏற்பார்க்கு மேற்கொண்டவர்க்கு, ஏவாமை - (தானும்) அதை மேற்கொள்ளாம லிருப்பதை, ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - சத்தியீனமென்று சொல்லமாட்டார் விவேவிகள்; (ஆதலால்) ஆற்றாமை - பொறாமல், அவர் நேர்ந்து - (அப்பகைவரை) எதிர்த்து, இன்னா செய்தக்கால் - கொடுமையானவைகளைச் செய்தால், தாம் அவரை - தாங்கள் அவர்களுக்கு, பேர்த்து இன்னா செய்யாமை - மீட்டும் கொடுமைகளைச் செய்யாதிருந்தால், நன்று - நல்லதாம். எ-று.
பகை கொண்டவர் அதற்குரிய கொடுமைகளைச் செய்தால் தாமும் அவர்களுக்கு அப்படி செய்யாமல் பொறுப்பது நலம். இவ்வாறு செய்ததனால் விவேகிகளால் சத்தியீனனென்கிற நிந்தை வர மாட்டாது என்பது கருத்து.
மாறுதலையுடையவர் மாற்றார். மாறு - முதனிலைத் தொழிற்பெயர், மற்று - அசை. இரண்டாம் ஆற்றாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி. இன்னா - எதிர்மறைப் பலவின்பாற் பெயர்.
68. நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
(இ-ள்.) நீசர் வெகுளி - கீழ் மக்களுடைய கோபம், நெடுங்காலம் ஓடினும் - அதிககாலஞ் சென்றாலும், கெடும் காலம் இன்றி - அழியுங்கால மில்லாமல், பரக்கும் - வியாபிக்கும்; சீர் கொண்ட சான்றோர் சினம் - கீர்த்தி பெற்ற பெரியோர் கோபமானது, அடும் காலை - காய்ச்சும் பொழுது, நீர் கொண்ட வெப்பம் போல - ஜலமானது கொண்ட உஷ்ணத்தைப் போல, தானே தணியும் - பிறர் ஆற்ற வேண்டாமல் ஆறும், எ-று.
நீசர் தம்மிடத்து மகிமையுளதாக எண்ணி அகங்காரங் கொண்டிருப்பவராதலால் அவர்க்கு வரும் கோபம் காலம் செல்லச் செல்ல வளர்ந்தே வரும், சான்றோர் சினமோ காய்ச்சும் போது நீர் வெப்பங் கொண்டாலும் பின் தானே ஆறுவது போல் தானே ஆறிவிடும் என்பது கருத்து.
இயல்பில் தண்மையும் பிறர் காயச் செய்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பெரியோர் குணத்திற்கும் இருக்கிறது என்று அவ்வுவமை கூறப்பட்டது.
இன்று - எதிர்மறைக் குறிப்பு வினையெச்சம். பரக்கும் - பர - பகுதி. தானே - ஏகாரம் பிரிநிலை. தணியுமே - ஏ - அசை.
69. உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
(இ-ள்.) உபகாரம் செய்ததனை - (ஒருவன்) தனக்குச் செய்த உபகாரத்தை, ஓராதே - நினையாமல், தங்கண் - தம்மிடத்தில் [உபகாரஞ் செய்தவரிடத்தில்], அபகாரம் ஆற்ற செயினும் - அபகாரத்தை மிகச் செய்தாலும், தாம் உபகாரம் செய்வதல்லால் - தாங்கள் (அவனுக்கு) உபகாரம் செய்வதேயன்றி, தவற்றினால் - பிசகியும், தீங்கு ஊக்கல் - தீமையைச் செய்ய ஆரம்பித்தல், வான் தோய் குடி பிறந்தார்க்கு - புகழால் வானத்தை எட்டிய குலத்திற் பிறந்தவர்க்கு, இல் - இல்லை, எ-று.
தாம் உபகாரஞ் செய்திருக்க, தமக்கே அபகாரஞ் செய்த நீசருக்கும் மறுபடி தர்ம உபகாரஞ் செய்வாரேயல்லாது அபகாரஞ் செய்யார் நற்குடிப் பிறந்தோர் என்பது கருத்து.
உபகாரம் - உதவி, அபகாரம் - அதற்கு எதிரானது. செய்ததனை - செய்தது - செய்யப்பட்டது. "செயப்படு பொருளைச் செய்தது போல்" என்கிற [பொது. சூ. 49] விதி; உபகாரத்துக்கு விசேஷணமாகக் கொள்க. ஆற்ற - வினையெச்சம், ஆற்று - பகுதி, தவற்றினால் - தவறு என்னும், பெயரின் மூன்றாம் வேற்றுமை. ஊக்கல் - விர்த்தி செய்தல்.
70. கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
(இ-ள்.) நாய் - , கூர்த்து - கோபித்து, கௌவிக் கொளக் கண்டும் - (தம்மைக்) கவ்விக் கொள்வதைப் பார்த்தும், பேர்த்து தம் வாயால் - எதிராகி தமது வாயினால், நாய் கௌவினார் - அந்த நாயைக் கவ்வினவர்கள், ஈங்கு இல்லை - இவ்வுலகத்திலில்லை; (ஆதலால்) கீழ்மக்கள் - அயோக்கியர், நீர்த்து அன்றி - குணமுடைய தல்லாமல், கீழாய சொல்லியக்கால் - ஈனமான பேச்சுகளைப் பேசினால், மேன்மக்கள் - யோக்கியர், மீட்டு - மறுபடியும், தம் வாயால் - , சொல்பவோ - (அப்பேச்சுக்களைச்) சொல்வார்களோ, எ-று.
நாய் நம்மைக் கடித்தால் எதிரே நாமும் கடித்தல் போலக் கீழோர் வைதால் நாமும் அவரை வைதல் தகாது என்பது கருத்து.
வைதலுக்குக் காரணம் சினம். கௌவிக் கொள - இதனை வினைப் பெயர் போல் கொள்க. நீர்த்து - நீரையுடையது, நீர் - சற்குணம், கீழாய - பலவின் பெயர். சொல்ப - பலர்பால் வினைமுற்று; ப - விகுதி. ஒ - எதிர்மறை.
8. பொறையுடைமை
[அதாவது எந்தக் காரணங்களாலாயினும் தம்மோடு கலந்தவர் செய்த பிழையைப் பொறுத்தல். இதுவும் சினமின்மையையொடு சேர்ந்ததனாலும் அது சாதாரணமாக அயலார் விஷயமாகவும் இது கலந்தார் விஷயத்தில் விசேஷமாகவும் கூறப்பட்டன என்றறிக.]
71. கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
(இ-ள்.) கோதை அருவி - மாலை போன்ற அருவிகளாலே, குளிர்வரை - குளிர்ந்த மலைகளையுடைய, நல்நாட - நல்ல நாட்டையுடைய அரசனே!, பேதையோடு யாதும் உரையற்க - புத்தியீனனோடு எதையும் சொல்லாதிருக்கக் கடவாய், பேதை - பேதையானவன், உரைப்பின் - சொன்னால், சிதைந்து உரைக்கும் - மாறுபட்டுச் சொல்வான், (ஆதலின்) ஒல்லும் வகையான் - கூடுமான விதத்திலே, வழுக்கி கழிதலே - தப்பித்து நீங்குதலே, நன்று - நல்லது. எ-று.
அரசனே உன்னிடத்துச் சேர்ந்திருக்கிற வேவலரில் புத்தியீனனாயிருப்பா னொருவனோடு ஒரு சங்கதியும் சொல்லாதே. சொன்னால் அவன் அதைச் சொல்ல வேண்டுமிடத்துச் சரியாய்ச் சொல்லாமல் மாறுதலாய்ச் சொல்வான். அது உனக்குக் கோப காரணமாகும். அப்படி கோபம் வந்தால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதைக் காட்டிலும் அந்தச் செய்தியை அவனிடம் சொல்லாமல் தப்பி நீங்குவதே நல்லதென்பது கருத்து.
பேதையோடியாதும் - "யவ்வரினிய்யாம்" என்கிற விதியால் ஓடு ஓடி ஆயிற்று; இது குற்றியலிகரம். உரையற்க - எதிர்மறைவியங்கோள், உரை - பகுதி. அல் - எதிர்மறை விகுதி, க - விகுதி. உரைப்பின் - பகரம் - இடைநிலை, ககரமும் வரும். அப்போது உரைக்கின் என்றாகும் கழிதலே - ஏகாரம் - தேற்றம். நன்று - குறிப்புமுற்று.
72. நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
(இ-ள்.) நேர் அல்லார் - செவ்வையாகாதவர், நீர் அல்ல - குணவீனமான சொற்களை, சொல்லியக்கால் -, அது தாரித்து இருத்தல் - அதைப் பொறுத்திருப்பது, தகுதி - யோக்கியமாம், மற்று - அதற்கு வேறாகிய பொறாமையை, பொங்கு நீர் ஞாலம் - மேலோங்குகிற சமுத்திரஞ் சூழ்ந்த பூமி [பூமியிலுள்ளோர்], புகழ்மை ஆ கொள்ளாது - புகழத்தக்கதாக் கொள்ளாமல், சமழ்மை ஆ கொண்டு விடும் - அவமதிக்கத்தக்கதாகக் கொள்வார்கள், எ-று.
அரசனே காரியங்களை நேராகக் கண்டறிய மாட்டாத இயல்புடையோர் குணவீனமாகப் பேசினால் அதற்குக் கோபியாமல் பொறுக்க வேண்டும். அதுதான் உலகத்தார் புகழத் தக்கது. அப்படி பொறுக்காமற் போனால் அது நிந்தனையாம் என்பது கருத்து.
நேர் - இது பகுதியே பெயரானது அல்ல - பலவின் பெயர். முதலிலிருக்கும் மற்று - அசை, பிந்திய மற்று பெயராக் கொள்ளத்தக்கது. ஒரும் - அசை, [இடை. சூ. 21] புகழ்மை சமழ்மை இவைகளில் மை - தன்மையைக் குறிக்கும் விகுதி. ஞாலம் - இடவாகு பெயர்.
73. காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.
(இ-ள்.) போது எல்லாம் - பூக்களிலெல்லாம், மாதர் வண்டு - அழகான வண்டுகள், ஆர்க்கும் - ஒலிக்கின்ற, மலி கடல் தண் சேர்ப்ப - நிறைந்த கடலினது குளிர்ச்சியான, கரையை யுடைய அரசனே!, ஆவது அறிவார் பெறின் - தமக்கு நன்மை யாவதை அறிந்திருப்பவரைப் பெற்றால், காதலார் சொல்லும் சுடு சொல் - தன்னிடத்து அன்புள்ளவர் சொல்லுகிற கடுமையான சொல்லானது, உவந்து உரைக்கும் - சந்தோஷப்பட்டுச் சொல்லுகிற, ஏதிலார் இன்சொலின் - அயலாருடைய இனிமையான சொல்லைக் காட்டிலும், தீது ஆமோ - தீமையைத் தருவதாகுமோ, எ-று.
தமக்கு நன்மை தருவது இது, தீமை தருவது இது என்று அறிந்திருக்கிற விவேகிகளுக்கு அன்புள்ளவர்கள் கடிந்து சொல்லுகிற உறுதிச்சொல் எதிரிகள் சிரித்துக் கொண்டு பிரியமாய்ச் சொல்லுகிற சொல்லைவிடத் தீதாகாது என்றால் "அழ அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் பிறர்" என்கிற பழமொழிப்படி, தற்காலத்தில் பிரியமாகாமல் வெறுக்கத்தக்கதாகச் சொன்னாலும் பிற்காலத்தில் நன்மையைத் தருமாதலால் நண்பர் பேச்சையே யோசித்து எடுத்துக் கொண்டு பொறுக்க வேண்டுமல்லாமல், பிறர் தற்காலத்துக்கு இனிப்பாகச் சொல்லும் பேச்சை எடுத்துக் கொள்ளலாகாது என்பது கருத்து. குறள் - "நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண், மேற்சென்றிடித்தற் பொருட்டு."
பெறின் என்பதனால் அது அருமை என அறிக. ஏதும் இலார் - தமக்கு நன்மை செய்யும்படியான யாதொரு சம்பந்தமும் இல்லாதவர் ஏதிலார். இன்சொல் - இனிமையில் மையோடு இகரமும் கெட்டது. சொலின் - ஐந்தனுருபு எல்லையில் வந்தது. போதெலா மாதர் வண்டார்க்கும் என்பது கடற்கரையைச் சிறப்பிக்கின்றது. அறிவார்ப்பெறின் - உருபு - 18வது சூத்திர விதியால் பகரம் மிகுந்தது.
74. அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
(இ-ள்.) அறிவது அறிந்து - அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடங்கி - கோபதாபங்களில்லாமல் சாந்தமாகி, அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க பழி பாவங்களுக்கு அஞ்சி, உறுவது (தமக்கு) நேர்ந்த காரியத்தை, உலகு உவப்ப செய்து - உலகம் சந்தோஷிக்கும்படி செய்து, பெறுவதனால் - (நியாயத்தின்படி தாம்) பெற்ற பொருளால், - இன்பு உற்று - சந்தோஷத்தை அடைந்து, வாழும் இயல்பு உடையார் - வாழும்படியான சுபாவத்தை யுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், துன்பு உற்று - துன்பத்தை அடைந்து, வாழ்தல் அரிது - வாழுவதில்லை, எ-று.
இதனால் நமக்கு நன்மையாகும், இதனால் தீமையாகுமென்று தெரிந்து கொண்டு, கோபமில்லாமல் பொறுத்துப் பழிபாவங்களுக்கு அஞ்சித் தாம் செய்ய வேண்டியதை உலகுக்கு இன்பமாச் செய்து பிறரிடத்துப் பொறாமையில்லாமல் தமக்குக் கிடைத்ததைக் கொண்டு சந்தோஷப் படுகிறவர்களுக்கு எப்போதும் துன்பமில்லையென்பது கருத்து.
அறிவது முதலானவை செய்தது போல் வந்த செயப்பாட்டு வினையாலணையும் பெயர்கள் அரிது - இங்கு இன்மையில் வந்தது.
75. வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
(இ-ள்.) இருவர் - இரண்டு பேர், வேற்றுமை இன்றி கலந்து - பேதமில்லாமற் சேர்ந்து, நட்டக்கால் - சிநேகிதத்தால், தேற்றா - ஒழுக்கம் - அறிவிக்கக்கூடாத நடக்கை, ஒருவன் கண் உண்டாயின் - ஒருவனிடம் உண்டாயிருந்தால், ஆற்றும் துணையும் - பொறுக்கக் கூடிய அளவும், பொறுக்க - பொறுக்கக் கடவன், பொறானாயின் - பொறுக்கக் கூடாமற் போனால், தூற்றாதே - (பிறர் அறிய) வெளிப்படுத்தாமல், தூர விடல் - (அவன் சிநேகத்தை) தூரத்தில் விடக்கடவன், எ-று.
சிநேகித்தவனிடத்தில் அயோக்கியமான நடக்கை உண்டாயிருந்தால் கூடிய அளவு பொறுத்திருக்க வேண்டும். கூடாமற் போனால் சிநேகத்தை விடலாமே யல்லாமல் அதைத் தூற்றலாகாது என்பது கருத்து.
நட்டக்கால் - நள் - பகுதி, கால் - விகுதி; ளகரம் டகரமானது சந்தி, மற்றொரு டகரம் எழுத்துப் பேறு, அகரம் - சாரியை, ககர மிகுதியும் சந்தி. தேற்றல் - தெளியச் செய்தல், அறிவித்தல். தூரவிடல் - அந்தச் சிநேகம் தூர்ந்துபோம்படியாக விடல்; அதாவது அழிந்துபோம்படி எனவும் உரைக்கலாம். விடல் - வியங்கோள் வினைமுற்று.
76. இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
(இ-ள்.) கானக நாட - காடு மிகுந்த நாடுடையவனே!, இன்னாசெயினும் - (நண்பர்) இனிமையாகாதவை செய்தாலும், இனிய ஒழிக என்று - (அந்த இன்னாதவை) இனியவாக நீங்கட்டும் என்று நினைத்து, தன்னையே தான் நோவின் அல்லது - தன்னையே தான் வெறுப்பதல்லாமல், துன்னி கலந்தாரை - சேர்ந்து சிநேகித்தவரை, கைவிடுதல் - விட்டுவிடாதே; விள்ளல் - (சிநேகத்திற்) பிரிதல், விலங்கிற்கும் அரிது - மிருகங்களுக்கும் கூடாத காரியம், எ-று.
சிநேகிதர் தீங்கு செய்தால் அதற்குக் கோபியாமல் அத்தீங்குகள் நமக்கு நல்லவையா ஒழியட்டுமென்று எண்ணி இப்படியாவதற்குக் காரணம் நம்முடைய பாவந்தான் என்று தன்னைத்தான் வெறுக்க வேண்டுமே யன்றிப் பொறாமல் சிநேகிதரைத் துறப்பது தகுதியன்று. இப்படிச் செய்வது மிருகங்களிலும் இல்லை என்பதாம்.
இனி + அவ் + ஒழிக என்பது தொகுத்தலாய் இனிய வொழிக என்றாயிற்று எனக்கொண்டு இனி அவ் இன்னாதவை ஒழியட்டுமென்று எனவுமுரைக்கலாம். அவ் - பலவின்பால் சுட்டுப் பெயர். செயினும் என்கிற இழிவு சிறப்பும்மையால் அப்படி செய்தல் பெரும்பாலுமில்லை யென்றாகிறது. நோவின் - இதில் இன் சாரியை, வேற்றுமையுருபு முதலியவின்றித் தனித்துப் பெயரோடு வந்ததெனக் கொள்ள வேண்டும்; செயினென் வாய்பாட்டு வினையெச்ச விகுதி யென்றாகிலும் ஐந்தனுருபென்றாகிலும் கொண்டால் பொருள் பொருந்தாமை அறிக. நோவு - தொழிற்பெயர்; நோவதல்லது என வருவதைக் காண்க. விலங்கிற்கும் - இழிவு சிறப்பும்மை. விலங்கு - குறுக்கு, மனிதரைப் போல் நேரே நிற்பதின்றிக் குறுக்காய் நின்று உணவு முதலாயவற்றைக் கொள்ளுதலாலே விலங்கு என்னப்பட்டது. இதனை வடநூலார் 'திர்யக்' என்பர்.
77. பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.
(இ-ள்.) ஒல் என் அருவி - ஒல் என ஒலிக்கின்ற அருவிகளையுடைய, உயர் வரை நல் நாட - உயர்வாகிய மலைகளையுடைய நல்ல நாட்டின் அரசனே!, பெரியார் பெரு நட்பு கோடல் - பெரியோர்களுடைய மேன்மையான சிநேகத்தைக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்பு என்று அன்றோ - தாங்கள் செய்த பொறுத்தற்குக் கூடாத குற்றங்களைப் பொறுத்துக் கொள்வார்கள் என்றல்லவா, நல்ல செய்வார்க்கு - நன்மைகளைச் செய்பவர்க்கு, தமர் - நேசராகிறவர்கள், அரியரோ - (கிடைக்க) அருமையானவர்களோ, எ-று.
தம்மைச் சேர்ந்தவர்கள் அரிய குற்றங்களைச் செய்தாலும் அவை பொறுப்பது பெரியோரியல்பு. நன்மை செய்பவர்களுக்கு எவரும் நட்பாவாராதலால் அது விசேஷமல்ல வென்றபடி.
கோடல் - தொழிற்பெயர், கொள், தல் - பகுதி விகுதிகள், பகுதி முதனீட்சி - விகாரம்; இதை எழுவாயாக வைத்து ஆகின்றதெனப் பயனிலை வருவித்துக் கொள்க. பெரியார் பொறுப்ப என்பது இவ்வாக்கியத்தின் உள் வாக்கியம். பொறுப்ப - பலர்பால் வினை முற்று. அன்றோ என்பது பிரசித்தத்தைக் காட்டுகின்றது. தமர் - தாம் என்னுங் கிளைப் பெயரடியாக வந்த பெயர். அரியரோ - ஓகாரம் எதிர்மறை. நல்ல - பலவின் பெயர்.
78. வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.
(இ-ள்.) வற்றி - (உடம்பில் மாமிச முதலிய) வற்றி, ஆற்ற பசிப்பினும் - மிகவும் பசித்தாலும், அற்றம் - (தமது) வறுமையை, பண்பு இலார்க்கு - சற்குண மில்லாதவருக்கு, அறிய உரையற்க - அறியும்படி சொல்லாதிருக்கக் கடவர்; தம்மை துறக்கும் துணிவு இலாதார் - விசேஷ சங்கடங்களில் தம்மை மாய்த்துவிடும் படியான மனவுறுதி யில்லாதவர். அற்றம் மறைக்கும் துணையார்க்கு - தமது வறுமையை நீக்க வல்லவருக்குச் சொல்லலாமே யல்லாமல் அயோக்கியரிடத்துச் சொல்லலாகா தென்பதாம்.
இப்பாடல் வேறு அதிகாரத்தில் சேர்க்கத் தக்கது ஆனாலும் பொறுக்கிறதென்கிற வொரு சம்பந்தத்தால் இங்கே சேர்க்கப்பட்டது.
வாய் திறந்து கொண்டு தூங்கினான் என்பது போல் பசித்து வற்றினாலும் என மாற்றிக் கொள்க. அற்றம் - அது - பகுதி, அம் - கர்த்தாப் பொருள் விகுதி; செல்வம் அற்றிருப்பது. என்பது பொருள். ஏ - அசை.
79. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.
(இ-ள்.) ஓங்கு அருவி நாட - மேலெழும்புகிற அருவிகளுள்ள நாடுடையவனே! இன்பம் பயந்து - இன்பத்தைத் தந்து, ஆங்கு இழிவு தலைவரினும் - அதிலே தாழ்மை நேர்ந்தாலும், இன்பத்தின் பக்கம் - இன்பம் வருகிற பக்ஷத்திலேயே, இருந்தைக்க - இருக்கின்ற உனக்கு, இன்பம் ஒழியாமை கண்டாலும் - சுகம் நீங்காதிருப்பதைப் பார்த்தாலும், பழி ஆகா ஆறே - பழிப்பு உண்டாகாத வழியே, தலை - முக்கியம், எ-று.
ஒரு காரியஞ் செய்தால் அதில் இன்ப முண்டாவதோடு பழியும் தாழ்மையு முண்டானால் அதை விட வேண்டும். தாழ்மையைப் பொறுத்து இன்பம் வருவதையே நோக்கி நிற்கிறவனுக்கு ஒழியாத இன்பம் கிடைத்தாலும் அது வரும் வழி பழிப்பில்லாததாயிருக்க வேண்டும் என்றபடி.
இருந்தைக்க - இருந்தை - முன்னிலை வினையாலணையும் பெயர், கு - நான்கனுருபு, அ - சாரியை பெற்றது. (பெயர். சூ. 61.)
இப்பாடலும் பழிப்பைப் பொறுத்தல் தகுதியல்ல வென்பது மாத்திரத்தால் இங்கு சேர்க்கப்பட்டதென அறிக. ஏகாரம் - தேற்றம் கண்டாலும் - உம்மை உயர்வு சிறப்பு.
80. தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.
(இ-ள்.) தான் கெடினும் - தான் கெட்டாலும், தக்கார் கேடு எண்ணற்க - யோக்கியருக்குக் கெடுதி செய்ய நினையாதிருக்கக் கடவன்; தன் உடம்பின் ஊன் கெடினும் - தன்னுடம்பில் மாமிசம் வற்றி யழியும்படி யானாலும், உண்ணார் கைத்து - உண்ணத்தகாதவர் கையினால் வரும் உணவை, உண்ணற்க - உண்ணாதிருக்கக் கடவன்; வான் கவிந்த - ஆகாயம் மூடிய, வையகமெல்லாம் பெறினும் - உலகத்தையெல்லாம் பெறுவதாயிருந்தாலும், பொய்யோடு இடைமிடைந்த சொல் - இடையிலே அசத்தியத்தோடு சேர்ந்த சொல்லை, உரையற்க - சொல்லாதிருக்கக் கடவன், எ-று.
பொறாமையாலே தன்னைப் போல் பிறரும் கெடட்டும் என்று யோக்கியருக்கு கேடு நினையாதிருக்க வேண்டும்; பசி பொறாமையாலே உண்ணாத விடத்தில் உண்ண வேண்டாம்; உலகமெல்லாம் கிடைப்பதா யிருந்தாலும் பொய் சொல்லாமல் தன் வளப்பமின்மையைப் பொறுக்க வேண்டும் என்பது கருத்து.
முந்திய உம்மை இரண்டும் இழிவு சிறப்பு, பிந்தியது உயர்வு சிறப்பு, கைத்து - கையினால் வருவது; அவரிடுஞ் சோறு; பொருள் எனவுமுரைக்கலாம்; கை - பகுதி, து - விகுதி. பொய்யோடிடைமிடைந்த சொல் என்றதனாலே சில உண்மையானாலும் பொய் சிறிது கலந்ததும் சொல்லலாகாதென்பதாம்.
9. பிறர்மனை நயவாமை
[அதாவது பிறருடைய மனையாளை விரும்பாதிருத்தல்.]
81. அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
(இ-ள்.) அச்சம் பெரிது - பயம் அதிகமானது; அதற்கு இன்பம் - அக்காரியத்தில் இன்பமானது, சிறு அளவு - அற்ப பிரமாணமுள்ளது; நிச்சம் - தினமும், நினையுங்கால் - யோசித்தால், கோ - அரசனால், கொலை - கொல்லுதல் (நேரும்); நிச்சலும் - நித்தமும், கும்பிக்கே - நரகத்திற்கே, கூர்ந்த வினை - மிகுந்த செய்கை; (ஆதலால்) நாண் உடையார் - வெட்கமுள்ளவர்கள், பிறன் தாரம் - பிறனுடைய மனையாளை, நம்பற்க - விரும்பாதிருக்கக் கடவர், எ-று.
பிறர் தாரத்தினிடத்தில் போக எத்தனப்பட்டால் அவளுக்குடையவர் அடிப்பது முதலான செய்கைகளுக்கு அஞ்ச வேண்டுவதும், விஞ்சினால் அரசன் கொலை செய்வானென்கிற பயமும், இத்தனை தான் பொறுத்தாலும் அதில் வரும் சுகமோ அற்பம், பின்பு நரகத்திற்குக் காரணம். இவ்வளவு சங்கடங்களிருப்பதனால் பிறர் தாரம் விரும்புதல் யோக்கியமன்று என்றதாம்.
அச்சம் - அஞ்சு - பகுதி, அம் - தொழிற்பெயர் விகுதி, வலித்தல் விகாரம். அதற்கு - கு - இடப்பொருளில் வந்தது, வேற்றுமை மயக்கம். நிச்சம் நிச்சல் இரண்டும் 'நித்யம்' என்கிற வடமொழித் திரிபு. கொலை - தொழிற்பெயர்; கொல் ஐ - பகுதி விகுதிகள். கும்பிக்கு - கு - பொருட்டுப் பொருளில் வந்தது. [பெயர். சூ. 41.] ஆல் - நான்கும் அசை. தாரம் - வடமொழி. நாணுடையார் என்பதனாலே அக்காரியத்தில் எல்லாக் குற்றங்களுக்குமுன் நாண முண்டாவது பெரிதென்றாயிற்று.
82. அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.
(இ-ள்.) அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - தருமம் கீர்த்தி சிநேகம் மேம்பாடு ஆகிய இந்த நான்கு பொருளும், பிறன் தாரம் நச்சுவார் - பிறன்மனையாளை விரும்புகிறவர்களை, சேரா - சேரமாட்டா; பகை பழி பாவமென்று - பகையும் நிந்தனையும் பாவமும், அச்சத்தோடு இந்நால் பொருளும் - அச்சமும் ஆகிய இந்த நான்கு பொருளும், பிறன் தாரம் நச்சுவார் - பிறன் தாரத்தை விரும்புகிறவர்களை, சேரும் -, எ-று.
அப்பெண்ணைச் சேர்ந்த பலரும் விரோதிகளாவார்களாதலால் கேண்மையில்லை; ஈனகாரியமாதலால் பெருமையும் கீர்த்தியுமில்லை.
அற முதலிய நான்கும் செவ்வெண் ஆதலின், [இடை. சூ. 9]ன்படி தொகைபெற்றன. பகை முதலிய நான்கு மிப்படியே. என்று என்கிற எண்ணிடைச்சொல், [இடை. சூ. 10]ன்படி பிரிந்து பகை முதலியவற்றோடும் சேர்ந்தன. "இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்" என்கிற [உரு. சூ. 16] விதியால் 'நச்சுவார்ச்சேரா' என வலி மிகுந்தது. நான்கு போய் நான்கு வரும் என்று சொன்னதினால் இது 'பரிவர்த்தனை' என்னும் அலங்காரம்; "பொருள் பரிமாறுதல் பரிவர்த்தனையே" - தண்டியலங்காரம்.
83. புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
(இ-ள்.) புக்க இடத்து அச்சம் - (பிறன் தாரத்தினிடம்) போகும் பொழுது பயமுண்டாகின்றது; போதரும் போது அச்சம் - திரும்பி வரும் போதும் பயம்; துய்க்கும் இடத்து அச்சம் - அனுபவிக்கும் போதும் பயம்; தோன்றாமல் காப்பு அச்சம் - (பிறர்) அறியாமல் காப்பதில் பயம்; எக்காலும் அச்சம் தருமால் - எப்போதும் பயத்தைத் தருவதாகையால், பிறன் இல் புகல் - பிறனில்லாளிடம் போவதை, எவன் உட்கான் - எவன் பயப்படமாட்டான், எ-று. கொல், ஓ - இரண்டும் அசை.
கருத்து வெளிப்படையா நின்றது.
புக்க - புகு - பகுதி, அ - விகுதி, ககர மிகுதி இறந்த காலங்காட்டும் பெயரெச்சம். உட்கான் - உட்கு - பகுதி. அச்சப் பொருளுள்ள சொல் வந்தவிடத்து அஞ்சத்தக்கதின் மேல் இரண்டாம் வேற்றுமை வருவது தமிழ் வழக்கு. நான்காம் வேற்றுமையும் வரும்.
84. காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.
(இ-ள்.) காணின் குடி பழி ஆம் - (பிறர்) கண்டால் தன் குலத்துக்கு நிந்தனையுண்டாம்ப்; கை உறில் - அகப்பட்டால், கால் குறையும் - (தண்டனையால்) கால் குறைவுபடும்; மாண் இன்மை செய்யுங்கால் - அந்தத் துஷ்ட காரியஞ் செய்யும்போது, அச்சம் ஆம் - பயமுண்டாம்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - (அந்தக் கெட்ட காரியம்) நெடுங்கால மனுபவிக்கும்படியான நரக வேதனையை உண்டாக்கும்; (ஆகவே) துச்சாரி - விபசாரமாகிய துஷ்ட காரியஞ் செய்பவனே! நீ கண்ட இன்பம் எனைத்து - நீ அதில் கண்ட சுகம் எவ்வளவு, எனக்கு கூறு - எனக்குச் சொல், எ-று.
கருத்து வெளிப்படை. கையுறில் கால் குறையும் என்றால் அகப்பட்ட போது அரசனால் காலை வெட்டுதல் நேரிடும் என்பதாம், துச்சாரி - வடமொழி திரிந்தது; துஷ்ட நடக்கை செய்பவன் என்பது பொருள். ஆல் - இரண்டும் அசை; முதலிலிருப்பதை ஏதுப் பொருள் குறிப்பதாகவுங் கூறலாம்.
85. செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
(இ-ள்.) செம்மை ஒன்று இன்றி - ஒரு நன்னடக்கையுமில்லாமல், சிறியார் இனத்தர் ஆய் - அயோக்கியரோடு சேர்ந்தவராய், கொம்மை வரி முலையாள் - திரட்சியான ரேகைகள் எழுதப் பெற்ற முலையை யுடையாளுடைய, தோள் மரீஇ - தோளைச் சேரவிரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் - வலிமையால், பிறர் மனைமேல் சென்றாரே - பிறர் மனையாளிடஞ் சென்றவர்களே, இம்மை அலி ஆகி - இப்பிறப்பில் நபும்சகராய், ஆடி உண்பார் - கூத்தாடி (பிச்சை வாங்கி) உண்கிறார்கள், எ-று.
முற்பிறப்பில் பிறர் மனையாளிடம் சென்றவர் தாம் இப்பிறப்பில் நபும்சகராகிக் கூத்தாடிப் பிழைக்கிறவர் என்பதாம். ஆதலால், பிறர்மனை நயக்க வேண்டாம் என்பது கருத்து.
செம்மை ஒன்று இன்றி என்றால், கிஞ்சித்தும் பழி பாவங்களுக்கு அஞ்சி நடவாமல் என்றபடி, அவளைச் சுவாதீனஞ் செய்யப் பலவித சாகசங்களைச் செய்து என்பதை வலியால் என்றார். உம்மை - உகரச்சுட்டின் மேல் காலங்குறிக்க மை விகுதி வந்தது. இம்மையுமப்படியே.
86. பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
(இ-ள்.) நாள் கேட்டு - (தக்க) நாளை விசாரித்து, பல்லார் அறிய - பலரும் அறியும்படி, பறை அறைந்து - வாத்தியம் கொட்டி, கல்யாணம் செய்து -, கடி புக்க - காவலைப் பொருந்தின, மெல் இயல் காதல் மனையாளும் - மென்மையான தன்மையுள்ள (தன்னிடம்) ஆசையுள்ள பெண்டாட்டியும், இல்லாள் ஆ - வீட்டிலிருப்பவளாயிருக்க, ஒருவன் -, ஏதில் மனையாளை - அயலான் மனைவியை, நோக்கு - பார்ப்பது, என் - என்ன காரணமுள்ளது, எ-று.
தான் கிரமம்படி கலியாணஞ் செய்த மனையாட்டி வீட்டிலிருக்க அயல்மனையாளை விரும்புவது மிகவும் அயோக்கியம் என்றபடி.
ஆனால் கலியாணஞ் செய்தவள் வீட்டிலிராவிடின் அயலான் மனையாளிடஞ் செல்லலாமோ என்று ஆக்ஷேபிக்க வேண்டாம். மனையாட்டி யிருக்க அயலில் செல்வது மிகவும் அயுக்தமென்றும், மகாபாதகமென்றும் அறிவித்தற்கு இப்படி சொல்லியதெனக் கொள்க.
"வம்புலாங்கூந்தன் மனைவியைத் துறந்து பிறன் பொருடாரமே வெண்ணி; நம்பினாரிறந்தா னமன்றமர்பற்றி யெற்றிவைத்தெரியெழுகின்ற, செம்பினாலியன்ற பாவையைப் பாவி தபவென மொழிவதற்கஞ்சி, நம்பனே வந்துன் னடியிணை பணிந்தே னைமிசாரணியத்து ளெந்தாய்" என்று ஆழ்வார் அருளிச் செய்ததும் காண்க.
மெல்லியலென்றும் காதலென்றுஞ் சொன்னது, பெண்ணுக்கு இருக்க வேண்டியகுணமுள்ளவள் என்பதை அறிவிக்க. கடி - உரியடியாகப் பிறந்த பெயரெனக் கொள்க, விகுதி குன்றியது. என் - எவன் என்கிற குறிப்புமுற்று இடைக்குறையா வந்தது. நோக்கு இதை முதனிலைத் தொழிற் பெயரென்றாகிலும் விகுதி கெட்ட தொழிற்பெயர் என்றாகிலும் வைத்துக் கொள்க.
87. அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.
(இ-ள்.) அயல் அம்பல் எடுப்ப - அயலார் நிந்தனை செய்ய, தமர் அஞ்சி பரீஇ - உறவினர் பயந்து விசனப்பட, மைந்து உற்று - மயக்கங்கொண்டு, வம்பலன் பெண் மரீஇ - அயலான் பெண்டாட்டியைச் சேர்ந்து, நம்பும் நிலைமையில் நெஞ்சத் தான் - (பிறர்) நம்பத்தக்க நிலைமையில்லாத இதயமுடையவனது, துப்புரவு - அனுபவமானது, பாம்பின் தலை நக்கி அன்னது - பாம்பினுடைய தலையை நக்கினாற் போன்ற தன்மையை, உடைத்து - உடையது, எ-று.
அயலான் மனையாளிடத்துச் செல்லும்போது பலர் தூஷித்தலும் பயமும் இவனாலே நமக்கெல்லாம் இழிவு வருகின்றதே யென்று பந்துக்கள் விசனப்படுவதும் நேரும். இதனையும் லக்ஷியஞ்செய்யாமல் அனுபவித்தல் எப்படிப்பட்டதென்றால், பளபளப்பாயிருக்கிற தென்று பாம்பின் தலையை நக்கினால் விஷம்பட்டு மரணமடைவது போலக் கேட்டை அடையும்படியிருக்கும் என்பது கருத்து.
அயல் - ஆகுபெயர். பரீஇ - பரிந்து என்பது விகுதி உகரம் இகரமாகி அளபெடுத்துக் காலங்காட்டியது; மரீஇ என்பது மிப்படியே. இவை சொல்லிசையளபெடை. பரீஇ என்பது செயவெனெச்சத் திரிபு; "சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை" இது விதி. வம்பலன் - வம்பல் - திசை, அதாவது வேறிடம், அதிலுள்ளவன் வம்பலன்; தன்னோடு சேராமல் வேறிடத்திருப்பவன் என்பது திரண்ட பொருள். நக்கியன்னது - நக்கினாற் போலுந்தன்மை.
88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.
(இ-ள்.) உரவோர்கண் காம நோய் - ஞானமுடையவரிடத்துள்ள காமவியாதியானது, ஓஓ கொடிது - மிகவும் கொடுமையானது, (ஏனெனில்) பரவா - வளராமலும், வெளிப்படா - வெளியாகாமலும், பல்லோர்கண் தங்கா - பலரிடத்துச் சென்று நிற்காமலும், விரவாருள் - வேறானவர்களிடத்து, நாணுப்படல் - வெட்கப்படுவதை, அஞ்சி - பயப்பட்டு, யாதும் உரையாது - ஒன்றுஞ் சொல்லாமல், உள் ஆறிவிடும் - உள்ளேயே தணிந்துவிடும், எ-று.
ஞானவான்களுக்கும் கருமவசத்தாற் காமமுண்டாகலாம்; ஆனால் அது விர்த்தியாகாமலும் வெளிப்படாமலும் பலவிஷயங்களிற் செல்லாமலும் உள்ளேயே ஆறிப்போம்; ஏனெனில் பலருக்கும் நாண வேண்டியிருப்பதால், ஆனபடியால் அது மிகவும் கொடியது என்றதாம். இங்கே கொடிதென்றது காமத்தின் தீமையை நோக்கி அதைச் சகிக்கிறார்களே என்று வியப்பினால் வந்ததாம்.
பரவா முதலிய வினையெச்சங்கள் வினைச்செவ்வெண் [இடை. சூ. 11] ஓ - சிறப்பில் வந்தது; இது விசேஷ மிகுதி என்பதற்கு அடுக்கி வந்தது. ஏ - அசை, தேற்றமுமாம். விரவார் - விரவுதல் - கலத்தல். நாணு - உகரம் - சாரியை.
இப்பாட்டை இவ்வதிகாரத்திற் சொன்னது காமமிகுதியிலும் உரவோர் பிறர்மனை நயவார் என்பதற்கு.
89. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
(இ-ள்.) அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் - பாணமும் நெருப்பும் விரிந்த கிரணங்களையுடைய சூரியனும், வெம்பி சுடினும் - தீக்ஷணியமாகி சுட்டாலும், புறம் சுடும் - புறத்திலே சுடும்; காமம் - காமமானது, வெம்பி - உக்கிரமாகி, மனத்தைக் கவற்றி - இதயத்தைக் கவலைப்படுத்தி, சுடுதலால் - சுடுவதினால், அவற்றினும் - அம்பு முதலியவற்றைக் காட்டிலும், அஞ்சப்படும் - அஞ்சத்தக்கது, எ-று.
அம்பு முதலானவை எவ்வளவு வெம்பினாலும் புறமேயன்றி அகஞ்சுடா; காமமோ உள்ளத்தை ஒன்றும் தோன்றாமலிருக்கும்படி கலக்கிச் சுடுமாதலால் அம்பு முதலியவற்றினும் கொடிதென்று பயப்பட வேண்டியதாம்.
சுடினும் - உம் - சிறப்பு, கவற்றி - பிறவினை வினையெச்சம், கவற்று - பகுதி, அஞ்சப்படும் - இது செயப்பாட்டு வினை; காமம் என்றதை இரண்டாம் வேற்றுமையாகக் கொண்டால் இது ஒருவகை வியங்கோள் வினைமுற்றாம்; காமத்தை அஞ்ச வேண்டும் என்று பொருளாகும். இவ் வினைமுற்றை நன்னூலுரைகாரர் தேற்றப்பொருள்பட்டு வந்த தொழிற்பெயரென்பர்; "வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்தன" என்கிற சூத்திர வுரையைக் காண்க.
90. ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
(இ-ள்.) ஊருள் எழுந்த - ஊரில் (பள்ளிக்கொண்டு) ஓங்கிய, உருகெழு செம் தீக்கு - உருவம் சிறந்த நல்ல நெருப்புக்கு, நீருள் குளித்தும் - தண்ணீருள் மூழ்கியாயினும், உயல் ஆகும் - தப்பலாம்; காமம் -, நீருள் குளிப்பினும் சுடுமே - நீரில் மூழ்கினாலும் சுடுமே, காமம் - குன்று ஏறி ஒளிப்பினும் - மலைமேலேறி ஒளித்துக் கொண்டாலும், சுடும்-, எ-று.
ஊரிற் பற்றிச் செக்கச் செவேலென்று எழும்பிச் சொலிக்கிற நெருப்பு நீரில் முழுகியிருந்தாரை ஒன்றுஞ் செய்யாது; காமமோ குளித்திருந்தாலும் மலைமேலேறிப் போய் ஒளிந்திருந்தாலும் சுடாமல் விடாதென்றபடி.
குளித்தும் - உம்மை விகற்பத்தோடு கூடிய சிறப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க. உய்யல் என்பது தொகுத்தலால் உயல் என நின்றது. சுடுமே - ஏ நிச்சயத்தில் வந்தது.
10. ஈகை
[அதாவது தரித்திரத்தினால் வருந்தித் தம்மிடம் வருகிறவருக்குச் சோறு முதலியவை கொடுத்தலாம்.]
91. இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.
(இ-ள்.) இல்லாவிடத்தும் - (தமக்குச் செல்வம்) இல்லாமற் போன காலத்திலும், இயைந்த அளவினால் - தமக்கு இசைந்தமட்டிலே, உள்ள இடம் போல - செல்வமிருக்குங் காலத்திற் போல், பெரிது உவந்து - (அவர் வந்ததற்கு) மிகவும் சந்தோஷப்பட்டு, மெல்ல சாந்தமாக, கொடையோடு பட்ட - கொடுத்தலோடு சேர்ந்த, குணன் உடை மாந்தர்க்கு - குணமுள்ள மனிதருக்கு, ஆண்டை கதவு - அவ்வுலகத்துக் கதவுகள், அடையாஆம் - அடைக்கப்படாதன ஆகும், எ-று.
செல்வ மில்லாத போதும் சந்தோஷப்பட்டுச் சாந்தமாய்க் கொடுக்குங் குணமுள்ளவர்களது வரவை எதிர்நோக்கி மேலுலகத்தார் தமது உலகத்துக் கதவைத் திறந்து வைத்திருப்பார்கள் என்றபடி.
இங்கே இடம் என்பது காலத்தை. பெரியது - இந்தக் குறிப்பு முற்று இங்கே வினையெச்சமாகி உவத்தலுக்கு உரியாய் நின்றது; இதை வடநூலார், "க்ரியா விசேஷணம்" என்பர். கொடை - கொடு - பகுதி, ஐ - தொழிற்பெயர் விகுதி. குணன் = மகரத்துக்கு னகரம் போலி. உடை - ஈறுதொக்க குறிப்புப் பெயரெச்சம். ஆம் - அசை என்றும் கொள்ளத்தகும். ஆண்டை - ஆண்டு என்னும் சுட்டு குற்றியலுகரமாதலின் "ஐயீற்றுடைக்குற்றுகரமு முளவே" என்கிற [உயிர். சூ. 35] விதியால் ஐகாரச்சாரியை பெற்றது.
92. முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
(இ-ள்.) முன்னரே - பூர்வத்திலேயே, சாம் நாள் - சாகுங் காலமும், முனி தக்க மூப்பு - வெறுக்கத் தக்க கிழத்தனமும், உள - ஏற்பட்டிருக்கின்றன; பின்னரும் - பின்னும், பீடு அழிக்கும் - பெருமையைக் குலைக்கும்படியான, நோய் உள - வியாதிகளும் உண்டாயிருக்கின்றன; கைத்து உண்டாம் போழ்து - திரவியம் உண்டாயிருக்கிற காலத்தில், கொன்னே - வீணாய், பரவன்மின் - நாற்புறமும் ஓடாதேயுங்கள், பற்றன்மின் - பிடித்திராதேயுங்கள், பாத்து உண்மின் - (சோறு முதலியவற்றை யாசகர்க்கு) பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள், யாதும் கரவன்மின் - எதையும் ஒளியாதிருங்கள், எ-று.
நாம் பிறக்கு முன்னமே சாநாள் மூப்பு நோய் இவை கடவுளால் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் திரவியமிருக்கும் போது அதைக் கெட்டியாப் பிடித்து யாசகர்க்கு இல்லையென்று சொல்லாமல் பகுத்துக் கொடுத்து அனுபவியுங்கள் என்பது கருத்து.
வைத்து உண்டாம் போழ்து என்பதை ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட்டிக் கொள்க. பின்னரும் என்பதற்கு இன்னமும் எனப்பொருள் கொள்க. முன் பின் என்பவை அர் சாரியை பெற்றன. சாம் நாள் - பெயரெச்சத் தொடர். முனிதக்க - முனிதற்குத்தக்க, முதனிலைத் தொழிற்பெயர், நான்காம் வேற்றுமைத்தொகை. உள - பலவின்பால் குறிப்பு முற்று. கொள் - இடைச்சொல். பரவன்மின் பற்றன்மின் முதலியவை எதிர்மறை யேவற்பன்மை வினைமுற்று. பாத்து - பா - பகுதி. கைத்து - கையிலுள்ளது. யாதும் கரவன்மின் என்றது எதையும் இல்லையென் றொளிக்க வேண்டாம் என்று முன் சொன்னதையே உறுதிப்படுத்தியது.
93. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.
(இ-ள்.) கொடுத்து தான் துய்ப்பினும் - பிறருக்குக் கொடுத்துத் தான் அனுபவித்தாலும், ஈண்டும் கால் ஈண்டும் - சேருங்காலத்திற் சேரும்; விடுக்கும் வினை உலந்தக்கால் - (நம்மிடத்தில் பொருளைச்) சேர்த்த நல்வினை அழிந்தால், செல்வம் - செல்வமானது, மிடுக்கு உற்றுப் பற்றினும் - வலி பொருந்திப் பிடித்தாலும், நில்லாது - நிலையாது; (இதை அறியாதவர்) நடுக்கு உற்று தன் சேர்ந்தார் துன்பம் - (தரித்திரத்தால்) நடுக்கலை அடைந்து தன்னைச் சேர்ந்தவர்களுடைய துக்கத்தை, துடையார் - போக்க மாட்டார்கள், எ-று.
செல்வமானது நல்வினை சேர்ந்த காலத்திற் சேர்ந்து அது அழியுங் காலத்தில் எவ்வளவு உறுதியாய்ப் பிடித்தாலும் நிற்காதாகையால் செல்வமிருக்கும் போதே வறுமையால் வருந்தித் தன்னிடம் வருபவருடைய சங்கடத்தைத் தீர்க்க வேண்டுமென்பது கருத்து.
இது ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியதாகிய அடிமறிமாற்றுப் பொருள்கோள். [பொது. சூ. 68.] கொடுத்துத் தான் துய்ப்பினும் என்றதனால், கொடுத்தல் செல்வ நிலைமைக்குக் காரணமானாலும் அது மறுபிறப்புக்கே யன்றி இப்பிறப்புக்கு அன்று என்று காட்டியதாயிற்று. இப்பிறப்பில் செல்வம் சேர்வதும் நீங்குவதும் போன பிறப்பின் கருமவசம் என அறிக. நடுக்கு - முதனிலைத் தொழிற்பெயர். தற்சேர்ந்தார் - இதில் [மெய். 15வது சூத்திரவிதியால்] தன் என்பதின் னகரம் திரிந்தது. துய்ப்பினும் - உம்மை உயர்வு சிறப்பு. விடுக்கும் - கு - சாரியை.
94. இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.
(இ-ள்.) இம்மி அரிசி துணை ஆனும் - இம்மியளவான அரிசியை யாயினும், நும்மில் இளையவ - உங்களுக்கு இசைந்தவற்றை, வைகலும் - தினந்தோறும், கொடுத்து உண்மின் - யாசகருக்குக் கொடுத்து உண்ணுங்கள்; குண்டு நீர் வையத்து - ஆழமான கடல் சூழ்ந்த பூமியில், அடா அடுப்பினவர் - சமைக்காத அடுப்பையுடையவர் (சோற்றுப் பிச்சைக்கு வருகின்றவர்), உம்மை - முற்பிறப்பில், கொடாதவர் என்பர் - (யாசகருக்குக்) கொடுக்காத லோபிகள் என்று சொல்வார்கள், எ-று.
கிஞ்சித்தாலும், இயைந்ததைக் கொடுக்க வேண்டும், முற்பிறப்பில் கொடாதவரே இப்பிறப்பில் சோற்றுப் பிச்சைக்கு வருகிறவர்கள் என்பதாம்.
அடா அடுப்பினவர் - துறவிகள், உம்மை கொடாதவர் - (இவர்) முற்பிறப்பில் கொடுத்து வையாதவர், என்பர் -, என உரைத்தல் நன்று. சன்னியாசிகள் அடுப்பு வைத்துச் சமைக்க லாகாதென்பது சாஸ்திரவிதி.
இம்மி - ஒரு சிறிய அளவு, அது (960ல்) ஒரு பங்கு. ஏனும் என்பது போல ஆனும் என்பதும் இழிவு சிறப்போடு விகற்பத்தைக் காட்டுகிற ஓரிடைச் சொல். வைகலும் - முற்றும்மை. இயைவ - பலவின்பால் வினையாலணையும் பெயர். கொடா அதவர், அடாஅ - இசையளபெடை. அடாஅ அடுப்பினவர் என்பது வறுமைக்குக் குறிப்பு.
95. மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
(இ-ள்.) மறுமையும் இம்மையும் நோக்கி - மேலுலகப் பயனையும் இவ்வுலகப் பயனையும் பார்த்து, ஒருவற்கு -, உறும் ஆறு இயைவ - பொருந்தும் வழியில் இசைந்தவைகளை, கொடுத்தல் - கொடுக்கக் கடவன்; வறுமையால் - தரித்திரத்தினால், ஈதல் இசையாதெனினும் - கொடுத்தல் இசையாமற் போனாலும், இரவாமை - பிறரிடம் யாசியாமலிருப்பது, ஈதல் - கொடுப்பதினும், இரட்டி உறும் - இரட்டித்துப் பயன் தரும், எ-று.
மறுமையில் சொர்க்கமும் இம்மையில் புகழும் வருவதைப் பார்த்து இயைந்தமட்டில் பிறருக்குக் கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுக்கக் கூடாமற் போனாலும் தான் பிறரை யாசியாமலிருப்பது மிகவும் நல்லதென்பதாம்.
கொடுத்தல் - வியங்கோள்வினைமுற்று [வினை. சூ. 69], இரட்டி - வினையெச்சம். இரட்டுவது இரட்டி எனக் கர்த்தாப் பொருள்விகுதி பெற்ற பெயரெனக் கொண்டு இரட்டித்த பயனானது பொருந்தும் எனவு முரைக்கலாம்.
96. நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
(இ-ள்.) நடு ஊருள் - ஊர் நடுவிலே, வேதிகை - திண்ணையானது, சுற்றுக்கோள் புக்க - சுற்றிக் கொள்ளுதலை யடைந்த, படுபனை அன்னர் - பயன்படும்படியான பனை மரத்தை யொத்தவர் (யாரெனில்) பலர் நச்ச வாழ்வார் - பலரும் விரும்பும்படி வாழ்கிறவர்கள்; குடி கொழுத்தக்கண்ணும் - குடித்தனம் வளப்பமாயிருக்கும் போதும், கொடுத்து உண்ணாமாக்கள் - யாசகர்க்குக் கொடுத்து அனுபவியாத மனிதர், இடுகாட்டுள் ஏற்றுப்பனை - சுடுகாட்டிலுள்ள ஆண்பனைக்கு ஒப்பாவார்கள், எ-று.
ஊரினடுவிலே பழந்தரும் படியான பனைமர மொன்றிருந்து அதைச் சுற்றிலும் திண்ணையுமிருந்தால் வேண்டியவர் வந்து பழம் பறித்துக் கொண்டு அத்திண்ணைமேலுட்கார்ந்து புசிப்பார்களே அது போல் செல்வமுள்ளவர் சோறு கூறை முதலியவற்றைத் தாராளமாய்க் கொடுப்பவரா யிருந்தால் யாவரும் விரும்பி அவரிடம் வந்து இன்பமடைவா ராதலின் கொடுப்பவர் அப்படிப்பட்ட பனைக்கு ஒப்பிடப்பட்டார்; செல்வமல்கிக் குடிவாந்திருக்கையிலும் ஒன்றுங் கொடாமல் வாழ்கிறவர்கள் சுடுகாட்டிலுள்ள ஆண்பனை போல் வீணாயும் வெறுக்கும் படியாயு மிருப்பவராம் என்பது கருத்து.
சுடுகாடு நினைத்த போது போகக்கூடாத அசுத்தமான விடம். மரமும் பழந்தராதாயின் மிகவு நிந்தனைக்குப் பாத்திரமென்றபடி,
நடுவூர் - இலக்கணப்போலி, சுற்றுக் கோளுக்கு வேதிகை கர்த்தா. புக்க - இப்பெயரெச்சம் பனையொடு சேரும். வேதிகையைச் சுற்றுக் கோட்புக்க பனையெனவுங் கூட்டலாம். அப்போது நடுவில் திண்ணையும் சுற்றிலும் பனைமரங்களுமெனக் கருத்துக் கொளல் வேண்டும். படு - வினைத்தொகை. கொழுத்தக்கண் - வினையெச்சம், கண் - விகுதி. உம்மை - சிறப்பு. இடு - இதுவும் வினைத்தொகை. இடுகாடு - இறந்தவரை வைக்கிற காடென்பதாம். ஏறு - ஆண்.
97. பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு.
(இ-ள்.) கயல் புலால் - மீன்களின் மாமிச நாற்றத்தை, புன்னை கடியும் - புன்னை மலர்கள் நீக்கப் பெற்ற, பொரு கடல் - அலைமோதுகின்ற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையுள்ள அரசனே!, பெயல் பால் - பெய்யும்படியான காலத்தில், மழை பெய்யாக் கண்ணும் - மழை பெய்யாவிடினும். உலகம் - உலகமானது, செயல்பால - செய்யத்தக்க உதவிகளை, செய்யவிடினும் - செய்யாமல் விட்டாலும், உலகு உய்யும் ஆறு - உலகம் பிழைக்கும் வகை, என்னை - ஏதாம், எ-று.
காலத்தில் மழை பெய்யாமலும் மேலானவர் அன்ன முதலியவற்றை உதவாமலும் இருந்தால் உலகம் அப்படி பிழைக்கும் என்றதாம்; ஆதலால் உள்ளவர் இல்லாதவர்க்குக் கொடுக்க வேண்டு மென்பது கருத்து.
பெயல்பால் - பெயலுக்கு உரிய பால் என விரிக்க; பால் - காலப்பகுதி, உலகம் என்பது இங்கே உயர்ந்தவர்கள். செயல்பால - செய்தற்குத்தக்க தன்மையை உடையன; அகரம் - பலவின்பால் விகுதி, செய்யா - எதிர்மறை வினையெச்சம், மல் - விகுதி குறைந்தது; செய்யாவிடின் என்று ஒரு சொல்லாக் கொள்வதும் தகும். என்னை - எவன் என்கிற குறிப்புமுற்று இடைகுறைந்து ஐகாரச் சாரியை பெற்றது; அகரச் சாரியை பெற்று என்ன என்றும் வரும்.
98. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.
(இ-ள்.) மலி கடல் தண் சேர்ப்ப - வளப்பமிகுந்த க்டலின் குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, ஏற்ற கை மாற்றாமை - யாசகன் ஏந்தின கையை மறுக்காமல், என்னானும் - எதையாகிலும், வரையாது - (இன்னான் இன்னானென்று) வரை ஏற்படுத்தாமல், ஆற்றாதார்க்கு - பிரதி செய்யமாட்டாத தரித்திரருக்கு, ஆற்றின் ஈவது - முறையால் கொடுப்பது, ஆண் கடன் ஆம் - ஆண் மக்களுடைய கடமையாம்; மாறு ஈவர்க்கு ஈதல் - எதிருபகாரஞ் செய்யவல்லவருக்குக் கொடுப்பது, பொலிகடன் என்னும் பெயர்த்து - விசேசமான கடன் என்கிற பெயரையுடையது, எ-று.
யாசித்தால் இல்லையென்று மறுக்காமலும், இவன் உறவினன் இவன் சிநேகிதன் இவன் அப்படியல்லாதவன் என்று வரையறை செய்யாமலும் வறுமைப்பட்டவர்க்குத் தனக்கியைந்ததைக் கொடுக்க வேண்டும்; அதுதான் கொடையெனப் பெயர்பெறும். பதிலுபகாரஞ் செய்பவனுக்குக் கொடுப்பது கொடையாகாது; விசேஷமான கடனென்றே சொல்லப்படும். பிறரிடம் கடன் வாங்கினால் சக்தியில்லாத போது ஐயா எனக்கு நிர்வாகமில்லை அல்லது இவ்வளவு கொடுக்கிறேன் நீர் அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சக்தியின்படி நடத்தலா மாதலால் பொலிகடன் என்றார்.
மாற்றாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி, ஆண் - கொடுக்கும் ஆண்மையுள்ளவன். பெயர்த்து - குறிப்பு வினைமுற்று.
99. இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
(இ-ள்.) இறப்ப சிறிது என்னாது - (நாம் கொடுப்பது) மிகவும் அற்பமானதென்று நினையாமலும், இல் என்னாது - இல்லை என்று சொல்லாமலும், என்றும் - எப்போதும், யார்மாட்டும் - எப்படிப்பட்டவர் விஷயத்திலும், அறம் பயன் செய்க - தருமமாகிய பிரயோஜனத்தைச் செய்யக்கடவன்; (அது) முறை - கிரமமாக, புதவின் - வாசல்களிலே, ஐயம் புகும் தவசி - பிச்சைக்குச் செல்கிற தவசியினது, கடிஞை போல - பிச்சைப் பாத்திரம் போல, பைய - மெல்ல, நிறைந்து விடும் - (அறப்பயனை) பூரணமாக்கும், எ-று.
நாம் அற்பத்தைக் கொடுக்கலாமா என்று யோசியாமலும் இல்லையென்று சொல்லாமலும் இசைந்தமட்டில் கொடையாகிய அறத்தைச் செய்தால் அதனால் வீடுதோறுஞ் சென்று சிறிது சிறிதாய் இரக்க, சன்னியாசியின் பாத்திரம் நிறைந்து போவதுபோல அறப்பயனும் நிறைந்துபோம் என்பதாம்.
இல் - ஈறுகெட்ட வினைமுற்று. பைய - வினையெச்சம், பை - பகுதி, மெதுவாதல், அ - விகுதி, நிறைந்துவிடும் - விடு - அசை, இக்காலத்தார் துணை வினையென்பர்.
100. கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.
(இ-ள்.) கடிப்பு இடு கண் முரசம் - வாத்தியம் அடிக்கும் கொம்பு இடப்பட்ட [அடிக்கப்பட்ட] இடத்தையுடைய பேரிகையோசையை, காதத்தோர் கேட்பர் - ஒரு காத தூரத்திலிருப்பவர் கேட்பார்கள்; இடித்து முழங்கியது - மேகம் இடித்துக் கர்ச்சித்ததை, ஓர் யோசனையோர் கேட்பர் - ஒரு யோசனை யளவிலுள்ளவர் கேட்பார்கள்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் - யோக்கியருக்குக் கொடுத்தார்கள் என்னுஞ் சொல், அடுக்கிய மூவுலகும் கேட்குமே - (ஒன்றின்மே லொன்றாய்) அடுக்கப்பட்டிருக்கிற மூன்று லோகங்களுக்கும் நிச்சயமாய்க் கேட்கும், எ-று.
பேரியோசை காத தூரத்திலிருப்பவர்க்குச் செவிப்படும். மேகக் கர்ச்சனை அதினும் கிஞ்சித்து அதிகமாகிய யோசனை தூரத்திலிருப்பவர்க்குச் செவிப்படும். கொடுத்தார் என்கிற சொல்லோ எல்லாவுலகத்தார்க்கும் செவிப்படும் என்றால் யாவருக்கும் தெரிந்து கொண்டாடும்படி யிருக்கும் என்பது கருத்து.
கண் என்பது வாத்தியங்களின் நடுவிடம். காதத்திற்கும் யோசனைக்கும் கிஞ்சித்துப் பேதமுண்டென்பது சிலருடைய கொள்கை. அடுக்கிய - செயப்படுபொருள் செய்தது போல் வந்தது. உலகம் பதினான்கா யிருக்க மூவுலகு என்றது என்னையெனின் மேல் கீழ் நடு என்கிற நோக்கத்தா லென்க. அல்லது, கிருதகம் அகிருதகம் கிருதகா கிருதகம் என மூவகைப் பட்ட வுலகமாம். கிருதகம் என்றால் செய்யப்பட்டது. பூமி பாதாள முதலானது; அகிருதகம் என்றால் செய்யப்படாதது, தபோலோக சத்தியலோகங்கள்; கிருதகா கிருதகம் என்றால் செய்யப்பட்டதும் செய்யப் படாததுமாயிருப்பது, சொர்க்கம் முதலியது. கேட்குமே - ஏகாரம் தேற்றம்.
102. உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து.
(இ-ள்.) உருவும் - அழகும், இளமையும் - வாலிபமும், ஒள் பொருளும் - மேன்மையான செல்வமும், உட்கும் - (பலர்) அஞ்சத்தக்க மதிப்பும், ஒருவழி நில்லாமை - ஒருவழிப்பட்டு நிலைபெற்றிராமையை, கண்டும் - பார்த்தும், ஒருவழி - ஒரு பிறப்பிலும், ஒன்றேயும் இல்லாதான் - யாதொரு நற்செய்கையும் இல்லாதவனுடைய, வாழ்க்கை - வாழுதலானது, உடம்பு இட்டு நின்று - உடலைப் பெற்று நின்று, வீழ்ந்தக்கது - வீழுந்தன்மையை, உடைத்து - உடையது, எ-று.
உருவமுதலாகிய பொருள்கள் ஓரிடத்தில் நிலையாயிராமலழிந்து போவது பிரத்தியக்ஷமா யிருக்கையால், அவற்றின் காரணமாகிய நல்வினையை ஒருபிறப்பிலும் செய்யாதவனுடைய வாழ்வானது பிறந்தான் இறந்தானென்னு மாத்திரையே யன்றி வேறு பயனில்லாதது என்பது கருத்து. இதனால் ஒரு பிறப்பிலாகிலும் நல்வினை செய்தால் அது பிற்பிறப்புகளில் தொடர்ச்சியாய் நன்மைகளை யுண்டாக்குமென்பதாம்.
உட்கு - கருவிப் பொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்; உட்குதல் - அஞ்சுதல், உம்மைகள் - எண்ணுப்பொருளன. கண்டும் - உம்மை உயர்வு சிறப்பு. ஒன்றேயும் - உம்மை இழிவு சிறப்பு அல்லது விகற்பப் பொருள். வீழ்ம் - வீழும் என்பதில் உகரம் தொகுத்தல் விகாரம். தக்கது - குணத்தை யுணர்த்திய தொழிற்பெயர். ஏ - அசை.
103. வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்.
(இ-ள்.) வளம்பட வேண்டாதார் - (செல்வ முதலியவற்றால்) வளப்பத்தையடைய விரும்பாதவர்கள், யார் யாரும் - எப்படிப்பட்டவர்களும், இல்லை - (உலகத்தில்) இல்லை; போகம் - சுகானுபவங்கள், அவர் அவர் ஆற்றான் - அவரவர்களுடைய புண்ணியவசத்தினாலே, அளந்தன - அளக்கப்பட்டிருக்கின்றன; விளங்காய் திரட்டினார் - விளங்காயைத் திரண்டவுருவாகச் செய்தவர்கள், இல்லை - யாருமில்லை; களம் கனியை - களாப்பழத்தை, கார் என செய்தாரும் - கறுப்பாகச் செய்தவர்களும், இல் - இல்லை, எ-று.
உலகத்தில் செல்வமுதலிய வளப்பத்தை யாவருமே விரும்புகிறார்கள்; ஆயினும் அவரவர் செய்த புண்ணியங்களுக்கேற்றபடி அப்போகம் கிடைக்குமே யல்லது அதிகமாயும் குறைவாயும் கிடைக்க மாட்டாது; எங்ஙனமெனில், விளங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையால் திரண்டிருப்பது போலவும் களங்கனி கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும் எனவறிக. விளங்காய் முதலியன தந்தம் இயற்கையா லமைந்திருப்பது போல அவரவர் சுகமும் அவரவர் புண்ணியமும் இயற்கையால் அமைந்த தென்பதாம். இதனால் பிற்பிறப்பில் விசேஷமாக வளம்பட்டவர் முற்பிறப்பில் மிகுதியான புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது கருத்து.
யாரும் என்பதில் உம்மை முற்றுப் பொருளது. அளந்தன - செயப்பாட்டுவினை, செய்வினை போல் வந்தது, [பொது. சூ. 49] இல் - எதிர்மறைக்குறிப்பின் பகுதி முற்றுப் பொருளைத் தந்தது. இல்லைக் களங்கனி என்னுமிடத்தில் ஓசை பற்றி வல்லொற்று மிகுந்தது.
104. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
(இ-ள்.) உறல் பால் - வந்து கூடும்படியான தீவினைகளை, நீக்கல் - தடுத்தல், உறுவர்க்கும் - முனிவர்களுக்கும், ஆகா - இசையாது; பெறல் பால் அனையவும் - பெறும்படியான தன்மையையுடைய நல்வினைகளும், அன்ன ஆம் - அத்தன்மையனவாம்; மாரி - மழையானது, வறப்பின் - வறண்டால், அதனை தருவாரும் இல்லை - அதைக் கொடுப்பாருமில்லை; சிறப்பின் - (அது) அதிகப்பட்டால், தணிப்பாரும் இல் - (அதனை) அடக்கவல்லவர்களுமில்லை, எ-று.
மழை வறண்ட காலத்தில் அதனைக் கொடுப்பதற்கும் அது அதிகப்பட்டால் அதனைத் தணிப்பதற்கும் எப்படி ஒருத்தருக்குஞ் சக்தி யில்லையோ அப்படியே ஒருவனுக்குத் தீவினைப்பயன் நேரிட்டபோதும் நல் வினைப்பயன் நேரிட்ட போதும் அவைகளைத் தடுக்க யாராலுமாகாது; அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பதாம்.
உறற்பால - உறல் - வந்து சேர்தல், பால் - தன்மை, அதாவது சேரும்படியான தன்மைப்; அ - பலவின்பால் விகுதி, இது உடைமைப் பொருளைக் காட்டும்; தத்திகம். உறுவர் - சாமர்த்தியம் மிகுந்தவர். ஆகா - ஆகாது என்பதில் ஈறு தொக்கது; அல்லது நீக்கலென்பதைப் பன்மையாக் கொள்க. பெறற்பாலனைய - பெறுதலாகிய பான்மையையுடைய அப்படிப்பட்டவை எனப் பொருள் விரித்துக் கொள்க. அன்ன - குறிப்பு வினைமுற்று, அல்லது வினையாலணையும் பெயர். இவ்வாறு வருவதை வட நூலார் 'விதேயவிசேஷண' மென்பர். வறப்பின் - செயினென்னும் வாய்பாட் டெதிர்கால வினையெச்சம், பகரம் - இடைநிலை, இன் - விகுதி; அல்லது வறப்பு என்பதைத் தொழிற்பெயராகக் கொண்டு ஏழனுருபு புணர்ந்த தெனினும் பொருந்தும். சிறப்பின் என்பதை வறப்பின் என்பதைப் போற் கொள்க.
105. தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.
(இ-ள்.) பனை துணையார் - பனையளவாக விருந்தவர் [உயர்ந்தவர் என்றபடி], தினை துணையர் ஆகி - தினையளவினராகி, தம் தேக உள் அடக்கி - தமது சாமர்த்தியத்தை உள்ளே அடங்கச் செய்து, வைகலும் - தினந்தோறும், பாடு அழிந்து - பெருமை கெட்டு, வாழ்வார் - இருப்பார்; நினைப்ப - யோசித்தால், மேலை வினை பயன் அல்லால் - முற்பிறப்பிற் செய்த வினையின் பயனேயல்லாமல், பிற கிடந்தது - வேறாக இருப்பதாகிய, எவன் உண்டு ஆம் - எது உண்டாகும், எ-று.
உயர்ந்த நிலையிலிருந்த ஒருவன் மிகவும் தாழ்ந்த நிலையில் வந்து தன் சாமர்த்தியமும் பெருமையும் கெட்டிருப்பது எதனாலென்று யோசித்தால், அவன் பூர்வஜனனத்திற் செய்த தீவினையினாலே யல்லாமல் வேறு காரணத்தாலல்ல என்பது கருத்து.
பனை தினை என்னும் உபமானங்களைப் பிரமாணத்திற்குக் கொள்ளாமல் மேன்மைக்கும் தாழ்மைக்கும் கொள்க. தினைத் துணையர் - தினையின் தளவையுடையவர் என விரித்துக் கொள்க. வைகலும் - உம்மை - முற்றுப்பொருளது. நினைப்ப - எதிர்காலவினையெச்சம். எவன் - வினாவினைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; எ - பகுதி, அ - சாரியை, னகரம் - விகுதி; இது சாரியையின்றி என் எனவும், அதன்மேல் ஐகாரச் சாரியை பெற்று என்னை எனவும், அகரச் சாரியை பெற்று என்ன எனவும் வரும், எவன் என்பதைப் பகாப்பதமாகக் கொள்ளின் என் என்பது இடைக்குறையாம்.
106. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
(இ-ள்.) பல் ஆன்ற கேள்வி - மேன்மைப்பட்ட கேள்விகளினது, பயன் உணர்வார் - பயனை அறிந்தவர்கள், வீயவும் - அழியவும், கல்லாதார் - படியாத மூடர்கள், வாழ்வது - நெடுங்காலம் சீவித்திருப்பதை, அறிதிர் - அறிந்திருக்கிறீர்கள்; கல்லாதார் - படியாதவர்கள், சேதனம் என்னும் - அறிவென்னப்பட்ட, அச்சேறு - அந்தச் சாரத்தை, அகத்து இன்மையால் - உள்ளத்திலே உடையரா யில்லாமையால், (அவரை) கூற்று - யமன், கோது என்று - திப்பியென்று நினைத்து, கொள்ளாது - கொள்ளமாட்டான், எ-று.
நூல்களின் சாரத்தையறிந்த யோக்கியர்கள் சீக்கிரத்தில் மாண்டுவரப் படியாத மூடர்கள் நெடுங்காலம் வாழ்ந்திருப்பது உங்களுக்குப் பிரத்தியட்சமாக இருக்கின்றதே, அது ஏனெனில் கற்றவரிடத்தில் சேதனம் என்னும் சாரம் இருத்தல் பற்றி அவரை யமன் தீவிரத்தில் கொள்ளுகின்றான், மற்றவரை அச்சாரம் இல்லாமையால் கொள்ளுவதில்லை என கவிசாதுரியத்தாற் றற்குறிப்பேற்றமாய்க் கூறினார். இப்படி விபரீதமாவதும் முன் வினைப்பயன் என்பது கருத்து.
அகன்ற என்பது ஆன்ற வென ஆயிற்று என்பர். வீய - செயவென் வாய்பாட்டு வினையெச்சம், வீ - பகுதி, அ - விகுதி, யகரம் - உடம்படுமெய். அறிதிர் - முன்னிலைப்பன்மை இறந்த கால வினைமுற்று; அறி - பகுதி, த் - இடைநிலை, இர் - விகுதி. கூற்று - சொல்லளவில் அஃறிணையாயினும் பொருள் அளவில் உயர்திணை. இங்ஙனமே அரசு அமைச்சு முதலியவும் கொள்க. ஏல் ஆம் - அசைகள்.
107. இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
(இ-ள்.) அடம்பம் பூ - அடம்பக் கொடியின் பூக்களை, அன்னம் கிழிக்கும் - அன்னங்கள் (கோதிக்) கிழிக்கின்ற, அலை கடல் - அலைகளையுடைய கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய, கரையையுடைய பாண்டியனே!, (சிலர்) இடும்பை கூர் நெஞ்சத்தார் - துன்பம் மிகுந்த மனமுடையவர்களாகி, எல்லாரும் காண - யாவருங் காணும்படி, நெடும் கடை நின்று - பெரிய வாயில்களிலே நின்று [பலவீட்டு வாயில்களிற்சென்று என்றபடி], உழல்வது எல்லாம் - (பிச்சைக்காக) வருந்தும் செயல்களெல்லாம், முன்னை வினை ஆய் விடும் - முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகி நிற்கும், எ-று.
சிலர் வறுமையால் மிகவும் மனநொந்து பிச்சைக்காக வீடுதோறுஞ் சென்று வருந்தி நிற்பது முன்னை வினையின் பயன் என்றபடி. இதனால் இப்பிறப்பி லனுபவிக்கும் நன்மை துன்மைகளுக்குப் பழவினையே காரணமென்றதாயிற்று.
இடும்பைகூர் நெஞ்சத்தார் என்பதை காண்போருக்கு அடையாகக் கொண்டு, இரப்போர்படும் அல்லலுக்கு ஐயோவென்று இரக்க முற்றனரெனப் பொருள் கூறுவது அமையும். இடும்பைகூர் - எழுவாய்த் தொடர், கூர்நெஞ்சம் - வினைத்தொகை நிலைத்தொடர். நெடுமை - பன்மை. நெடுங்கடை - பல்லாயிலென்றாயிற்று. உழல்வது - சாதியொருமை. உழல்வதெல்லாம் - பலவகைப்பட்ட வுழலுதல், ஆய்விடு - ஒரே பகுதி.
108. அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
(இ-ள்.) வளி ஓடி - காற்று வீசி, நெய்தல் - நெய்த னிலங்களிலே, நறவு உயிர்க்கும் - தேனைச் சிந்துகின்ற, நீள் கடல் தண் சேர்ப்ப - நீண்ட கடலினது குளிர்ச்சியான துறையை யுடைய பாண்டியனே, அறியாரும் அல்லர் - (ஒருவர்) அறியாதவர்களு மல்லராகி, அறிவது - வேண்டியதை, அறிந்தும் - தெரிந்திருந்தும், பழியோடுபட்டவை - நிந்தனையோடு கூடிய காரியங்களை, செய்தல் - செய்வது, செய்த வினையான் - (முற்பிறப்பிற்) செய்த தீவினையால், வரும் - உண்டாகும், எ-று.
இப்பிறப்பில் பாவ காரியங்களைச் செய்வதும் முற்பிறப்பின் தீவினைப்பயனாம் என்றபடி, பாவகாரியம் செய்வது அறியாமையால் நேர்ந்தாலும் ஒருவகை கூடலாம்; அறிந்தும் செய்வது அவ்வினையின் வசத்தினாலேயே யென்பது கருத்து.
அறியாரும், அறிந்தும் - உம்மை - சிறப்பு. பழியோடு - பழிக்கப்படுவது பழி, செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். உயிர்க்கும் என்னும் பெயரெச்சம் சேர்ப்ப என்னும் இடப்பெயரைக் கொண்டது. நீள்கடல் - வினைத் தொகையாதலால் ஈறு இயல்பாயிற்று [நன். மெய். சூ.24.].
109. ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
(இ-ள்.) நீர் ஈண்டு வையத்துள் - சமுத்திரம் சூழ்ந்த பூமியுள், எல்லாரும் - எவர்களும், எத்துணையும் - எவ்வளவாயினும், தீய வேண்டார் - தீயவைகளை விரும்பமாட்டார்; நல்லவை - நன்மைகளே, விழை பயன் - அவர்கள் விரும்பும் பயனாகும்; வேண்டினும் - விரும்பினாலும், வேண்டாவிடினும் - விரும்பாதிருந்தாலும், உறல் பால - வரத்தக்கவை, தீண்டா விடுதல் அரிது - (ஒருவரை) சேராமற் போவது இல்லை, எ-று.
உலகத்திலே எவரும் தீமையை வேண்டார்; நன்மையையே வேண்டுவார்கள்; ஆயினும் வரவேண்டியது வந்து சேருமே யன்றி இவர்கள் விருப்பத்திற்கும் விரும்பாமைக்கும் ஏற்க நில்லா என்பதாம். ஒருவனுக்குச் சம்பவிக்கும் நன்மை துன்மைகள் பழவினையினாலேயே என்பது கருத்து.
இங்ஙனங் கூறியது முற்பாட்டுகளின் கருத்தை உறுதிப் படுத்தற்கென்க. மன் - அசை; மன் என்பதற்குப் பெரும்பான்மை யெனப் பொருள் கொண்டு, தற்கொலை முதலிய தீமைகளையும் விரும்புகிறார்களெனவும் பொருள் கொள்ளலாம்.
தீய - தீமையடியாகப் பிறந்த பலவின் பெயர். தீண்டா - ஈறு தொக்க எதிர்மறைவினையெச்சம். அரிது - இங்கே இல்லையென்னும் பொருளைத் தந்தது, அருமையடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று. ஈறு போதலும் இடை உகரம் இஆதலும் ஆகிய விகாரங்கள் இங்கே வந்தன; [நன். பத. சூ. 9].
110. சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.
(இ-ள்.) சிறு காலை - அற்பகாலத்தில் [கருப்பட்ட காலத்தில் என்றபடி], பட்ட - உண்டாகிய, பொறியும் - எழுத்துகளும் [அதாவது கடவுளமைத்த விதிகளும்], சிறுகா - குறைய மாட்டா; பெருகா - வளரமாட்டா; முறை பிறழ்ந்து வாரா - கிரமம் தப்பி வரமாட்டா; உறு காலத்து - துன்பம் வந்த காலத்திலே, ஊற்று ஆகா - ஊன்றுகோலாகமாட்டா; ஆம் இடத்தே ஆகும் - வரவேண்டிய காலத்திலேயே வந்து சேரும்; அதனால் - அப்படியிருப்பதால், இறு காலத்து - மரண காலத்தில், பரிவு என்னை - துன்பப்படுவது ஏன், எ-று.
கருவுற்றபோதே ஒருவனுக்கு நடக்க வேண்டியது இன்னின்னவெனச் சங்கற்பித்தவை குறைந்தும் வளர்ந்தும் பிறழ்ந்தும் ஆவன வில்லை; வந்த காலத்து ஸ்திரமாயிராமல் ஆகுங்காலத்திலேயே ஆகும்; ஆதலால் நேரும் துன்பங்களைக் குறித்துத் துக்கிப்பது வீண் என்பது கருத்து.
பொறி - பொறிக்கப்பட்டவை; பொறித்தல் - எழுதுதல், சிறுகா, பெருகா, வாரா, ஆகா - இவை எதிர்மறைப் பன்மை வினைமுற்று. இவைகளை ஈறுதொக்க வினையெச்சமாகக் கொண்டு ஆகும் என்பதனோடு முடிக்கலாம். சிறுகாலை - சிறுமையாகிய காலம், அதாவது உருவம் கருப்பட்டகாலம். இறுகாலத்து என்பது மற்ற துன்பங்கள் வரும் காலத்துக்கும் உபலக்ஷணம்.
12. மெய்ம்மை
[அதாவது உண்மை என்றால் அந்தந்தப் பொருள்களி ளியற்கையான தன்மை.]
111. இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.
(இ-ள்.) இசையா ஒரு பொருள் - தமக்குக் கைகூடாத ஒரு பொருளை, இல் என்றல் - (ஆதுலர்க்கு) இல்லையென்று சொல்லுதல், யார்க்கும் வசை அன்று - எப்படிப்பட்டவர்களுக்கும் குற்றமாகாது; வையத்து இயற்கை - (இது) உலகத்தின் சுபாவமாகும்; நிரை தொடீஇ - வரிசையான வளையலணிந்தவளே!, நசை அழுங்க - ஆசை கெடும்படி, நின்று ஓடி - நெடுங்காலம் கழித்து, பொய்த்தல் - பொய் சொல்லுதல், செய் நன்றி - (ஒருவன் செய்த) உபகாரத்தை, கொன்றாரில் - மறந்தவர்களைக் காட்டிலும், குற்றம் உடைத்து - குற்றமுடையதாகும், எ-று.
இசையாத பொருளை யில்லையென்று சொல்லுதல் குற்றமன்று, ஒருவனுக்குக் கொடுப்பதாக நெடுங்காலம் ஆசைகாட்டிக் கடைசியில் இல்லையென்பது நன்றி மறப்பதினுன் குற்றமாம்.
"எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்று கூறியதனால் செய்ந்நன்றி கொன்றாரில் என்றார். இதனால் அயோக்கியனுடைய தன்மை சொல்லப்பட்டது.
அன்று - எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று. நிரைதொடீஇ - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த - அன்மொழித்தொகை, அளபெடை விளியுருபு. செய்ந்நன்றி - [நன். உயி. புண. சூ. 8] விதியால் நகரம் மிகுந்தது.
112. தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
(இ-ள்.) தக்காரும் - யோக்கியரும், தக்கவர் அல்லாரும் - யோக்கியரல்லாதவர்களும் [அயோக்கியர்களும்], எக்காலும் - எப்போதும், தம் நீர்மை - தம்முடைய குணமானது, குன்றல் இலராவர் - குறைதல் இல்லாதவராவர்; அக்காரம் - வெல்லமானது, யாவர் தின்னினும் - யார் தின்றாலும், கையாது - கசக்கமாட்டாது; வேம்பு - வேப்பங்காய், தேவரே தின்னினும் - தேவர் தின்றாலும், கைக்கும் - கசப்பைத் தரும், எ-று.
யோக்கியர் மெய்சொல்லும் குணத்திலும் அயோக்கியர்கள் பொய்சொல்லுங் குணத்திலும் குறையார்கள். ஒருவேளை விதிவசத்தால் யோக்கியர் பொய்சொன்னாலும் அயோக்கியர் மெய்சொன்னாலும் அவரவருக்குத் தங்களுக்குரிய குணத்திலேயே பிர்யமிருக்கும்; இதை அக்காரமும் வேம்புமாகிய உபமானங்களால் அறிந்து கொள்க.
தக்கார் - தகு என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையாலணையும் பெயர்; இதில் ககரம் மிகுந்து தன்மையைக் காட்டியதே யன்றிக் காலம் காட்டவில்லை. குன்றல் இலராவார் - குன்றுதல் இலர் என்றும், குன்றுதலை இலர் என்றும் இரு வகையினும் கூறலாம்; இல்லையென்னும் குறிப்பு வினை செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமாய் வருதலினாலென வறிக. எழுவாயாக் கொண்டபக்ஷத்தில் "உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும் அதனொடு சார்த்தி னத்தினை முடிபின" என்னும் [பொது. சூ. 29] விதியா லமைத்துக் கொள்க. ஏ, ஆம் - அசை.
113. காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.
(இ-ள்.) ஈரம் குன்ற நாட - குளிர்ச்சியான மலைகளுள்ள நாட்டை யுடையவனே!, கால் ஆடு போழ்தில் - (ஒருவனுக்கு) செல்வாக்கு உண்டான காலத்தில், வானத்துமேல் ஆடு - ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற, மீனில் - நக்ஷத்திரங்களைக் காட்டிலும், கழி கிளைஞர் - கழிக்கத்தக்க சுற்றத்தார்கள், பலர் ஆவர் - அநேகராயிருப்பார்கள்; ஏலா இடர் - தகாத துன்பங்களில், ஒருவர் உற்றக்கால் - ஒருவர் பொருந்தினால், தொடர்பு உடையேம் - சம்பந்தமுடையரா யிருக்கிறோம், என்பார் - என்று சொல்லுகிறவர்கள், சிலர் - சிலரேயாவார், எ-று.
செலவமுள்ள காலத்திலே பொய்யான உறவு பாராட்டி நடிப்பவர் பலர்; துன்பமுற்ற காலத்திலே மெய்யாகச் சம்பந்தமுடையவரென்று வந்து உதவுவோர் சிலராம். இஃது உலக இயற்கை.
காலாடு - கால் - பாதம், ஆடுதல் - நினைத்த விடம் போதல், இது இலக்கணையால் செல்வம் பெற்றதற்கு வந்தது. கழி - உரிச்சொல், கிளைஞர் - முறைப்பெயர், கிளையாய் நிற்பவர்கள்; யகரத்துக்கு ஞகரம் போலி.
114. வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.
(இ-ள்.) வடு இலா வையத்து - குற்றமற்ற உலகத்தில், மன்னிய மூன்றில் - நிலைபெற்றிருக்கின்ற (அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்றிலும், நடுவணது - நடுவிலிருக்கின்ற பொருளை, எய்த - (ஒருவன்) அடைந்ததனால், இருதலையும் - முதலிலுள்ள அறத்தையும் கடையிலுள்ள இன்பத்தையும், எய்தும் - அடைவான்; நடுவணது - பொருளை, எய்தாதான் - அடையாதவன், உலை பெய்து அடுவது போலும் - (கொல்லன்) உலையிலிட்டு காய்ச்சுவது போன்ற, துயர் எய்தும் - துன்பத்தை அடைவான், எ-று.
பொருளைப் பெற்றால் அறம் இன்பம் இரண்டையும் பெறலாம்; அதைப் பெறாவிடி னிவற்றைப் பெறுதலில்லை யென்றதனால், பொருளில்லாவிடில் பொய், குறளை, வஞ்ச முதலியவற்றைச் செய்ய வேண்டி வருதலால் அறமுதலியவற்றை அடைவது கூடாது.
உலைப்பெய்து அடுவது போலுந் துயர் - ஒரு செந்துவை உலையிலிட்டு அட்டால் அதற்கு உலைநீர் காயக்காயத் துன்பம் அதிகரிப்பது போல், பொருள் எய்தாதானுக்கும் பொய் வஞ்சனை முதலியவை மிகுதலால், நாளுக்குநாள் துன்பம் அதிகரிக்கு மென்பது கருத்து.
நடுவணது - நடு - பகுதி, அண் - இடத்தைக் காட்டும் விகுதி, நடுவண் என்பதன் மேல் அ - சாரியையும், து - விகுதியும் வந்து நடுவணது என்றாயிற்று. எய்தும் - செய்யுமெனமுற்று ஆண்பாலுக்கு வந்தது; [நன். வினை. சூ. 29].
115. நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
(இ-ள்.) நல் ஆவின் கன்று ஆயின் - நல்ல பசுவின் கன்றானால், நாகும் - இளம் பெட்டைக் கன்றும், விலை பெறூஉம் - (நல்ல) விலையை யடையும்; கல்லாரே ஆயினும் - படியாதவர்களா யிருந்தாலும், செல்வர் வாய் சொல் - செல்வர் வாக்கிலிருந்து வரும் சொற்கள், செல்லும் - ஏற்றுக் கொள்ளப்படும்; புல் ஈர போழ்தின் - அற்ப ஈரமுள்ள காலத்தில், உழவே போல் - உழுதலைப் போல, மீது ஆடி - மேலே மாத்திரம் தோன்றி, நல்கூர்ந்தார் சொல் - தரித்திரன் வாய்ச் சொற்கள், செல்லா - ஏற்றுக் கொள்ளப்படமாட்டா, எ-று.
நல்ல பசுவின் பெண் கன்று விசேஷமான பால் கொடுக்குமென்பதனால் கன்றாயிருந்தாலும் அதிக விலைகொடுத்து வாங்குவார்கள். அதுபோல் செல்வர் மூடர்களாயிருந்தாலும் அவர்கள் வாய்ச்சொல்லினால் பயனுண் டென்பதைப் பற்றி அதனை யேற்றுக் கொள்வார்கள். புல்லீரத்தி லுழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி உள்ளே செல்லாதது போலத் தரித்திரனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப் பட்டாலும் பயனின்மையால் அங்கீகரிக்கப்ப்ட மாட்டா என்பது கருத்து.
பெறூஉம் - இன்னோசைக்கு வந்த அளபெடை நாகும், ஆயினும், - இவற்றுள் உம்மை இழிவு சிறப்பு.
116. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
(இ-ள்.) இடம் பட - அதிகமாக், மெய் ஞானம் - மெய்யான நூல்களை, என்றும் கற்பினும் - எக்காலமும் கற்றாலும், அடங்காதார் - அடக்கமில்லாதவர்கள், என்றும் அடங்கார் - எப்போதும் அடங்காமலே யிருப்பர்; தடம் கண்ணாய் - விசாலமான கண்களை யுடையவளே! பேய்ச்சுரையின் காய் - பேய்ச் சுரைக்காய்கள், உப்போடு நெய் பால் தயிர் காயம் பெய்து - உப்பும் நெய்யும் பாலும் தயிரும் காயமும் போட்டு, அடினும் - சமைத்தாலும், கைப்பு அறா - கசப்பு நீங்காதனவாம், எ-று.
ஞான நூல்களை யெவ்வளவு கற்றாலும் அதனால் அடங்காதாருக்கு நன்மையுள்ள குணம் வருவதில்லை, பேய்ச் சுரைக்காய்க்கு எவ்வளவு சம்பாரங்கள் சேர்ந்தாலும் அதன் கைப்பு நீங்காதது போலென்றபடி.
இடம்பட - இடமானதுண்டாக, அதாவது புத்தி விசாலமாக, நன்றாக என்றபடி சுரைக்காய் கைப்பறா என்பதை "உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்" என்ற விதியினா லமைத்துக் கொள்க. உப்பொடு - ஒடு - எண்ணிடைச் சொல்; இதனை நெய் முதலியவற்றோடுங் கூட்டிக் கொள்க. [நன். இடை. சூ. 10]
117. தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.
(இ-ள்.) புன்னை - புன்னை மரங்களினது, விறல் - வெற்றி பெற்ற, பூகமழ் - புஷ்பங்கள் பரிமளிக்கின்ற, கானல் - சோலையையுடைய, வீங்கு - ஓங்குகின்ற, நீர் - கடலினது, சேர்ப்ப - கரையையுடையவனே!, தம்மை இகழ்வாரை - தம்மை நிந்திப்பவர்களை, அவரின் முன் - அவர் நிந்திப்பதற்கு முன்னமே, தாம் இகழ்க - தாம் நிந்திக்கக்கடவர்; அவரோடு பட்டது - அவரோடு தமக்குண்டாகியது, என்னை - என்ன?, உறல் பால - வரவேண்டியவை, யார்க்கும் உறும் - எவர்க்கும் வந்தே தீரும், எ-று.
தம்மை நிந்திப்பவர்களைத் தாட்சணியமில்லாமல் முந்தி நிந்திப்பதே பலம், அதனால் நன்மையோ தீமையோ வரவேண்டியது வந்தே தீரும். இது புத்திசாலிக்கு ஏற்கையான காரியம், இதனால் நிந்திக்க எத்தனப்படுபவனுடைய நிந்தை குறைப்படும் என்பது கருத்து.
அவரின் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருள், முன் என்னுங் காலத்திற்கு எல்லையானது பற்றி யென்றறிக. விறலாவது துற்கந்தத்தை நீக்கும் சாமர்த்தியம்.
118. ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
(இ-ள்.) ஆ வேறு உருவின ஆயினும் - பசுக்கள் வெவ்வேறுருக்களை யடையனவா யிருந்தாலும், ஆ பயந்த பால் - அப்பசுக்கள் கொடுத்த பால்கள், வேறு உருவின அல்ல ஆம் - வேறுபட்ட உருவமுள்ளவை யாகமாட்டா; அறம் - தருமம், பால் போல் ஒருதன்மைத்து ஆகும் - பாலைப்போல ஒரே குணத்தை யுடையதாகும்; நெறி - (அத்தருமத்தைத் தரும்) மார்க்கங்கள், ஆ போல் - பசுக்களைப் போல், ஈங்கு - இவ்வுலகத்தில், உருவு பல் கொளல் - பல உருவுகளைக் கொண்டிருத்தலை (உடையனவாயிருக்கும்), எ-று.
தானம் தவம் விரதம் அவரவர்க்கு இஷ்டமான தெய்வத்தைத் தொழல் முதலிய தர்மகாரண மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் அவைகளா லுண்டாகும் நற்கதிக்கு ஏதுவான தருமம் ஒன்றே யாம். அஃது, பசுக்கள் வெவ்வே றுருவங்களுள்ளனவாயினும் அவைகளாலுண்டான பால் ஒரு தன்மையா யிருப்பது போலென்றபடி. இப்படியிருப்ப தவற்றி னுண்மை யென்பது கருத்து.
ஆ - பால்பகா வஃறிணைப் பெயர். உருவின - உரு - பகுதி, இன் - சாரியை, அ - பலவின்பால் விகுதி. தன்மைத்து - குறிப்பு வினையாலணையும் பெயர். கொளல் - தொழிற்பெயர்.
119. யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்?
(இ-ள்.) தேருங்கால் - ஆராயுமிடத்து, யார் - எவர், உலகத்து - பூமியில், ஓர் சொல் இல்லார் - ஒரு (நிந்தைச்) சொல்லை உடையராயிராதவர்கள்?, யார் - எவர், உபாயத்தின் - ஒரு ஏதுவினாலே, வாழாதார் - வாழாதிருப்பவர்கள்?, யார் - எவர், இடை ஆக - (வாழ்நாளின்) மத்தியில், இன்னாதது - துன்பத்தை, எய்தாதார் - அடையாதவர்கள்?, யார் - எவர், கடை போக (வாழ்நாள்) கடைசிவரையிலும், செல்வம் உய்த்தார் - சம்பத்தைப் பொருந்தினவர்கள்? [ஒருவருமிலர்], எ-று.
இவ்வுலகத்தில் எல்லாரும் நிந்தைப் படுபவர்களும், ஒரு ஏதுவினால் வாழ்பவர்களும், நடுவில் துன்பமுடையவர்களும், கடைசி வரையிலு மில்லாமல் சில காலம் வரைக்குமே செல்வ முடையவர்களுமா யிருக்கிறார்கள். இவையெல்லாம் உலகத்தின் உண்மையென்பது கருத்து.
யா அர் - அசை நிறைக்கவந்த அளபெடை உபாயத்தின் - இன் - ஏதுப் பொருளில் வந்த ஐந்தனுருபு. உபாயங்களாவன; உழவு, வாணிபம், சேவகம், பிச்சை முதலியனவாம்.
120. தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது.
(இ-ள்.) தேரில் - (நன்றாய்) யோசித்தால், தம்மொடு செல்வது - (இறந்து போகும்போது) தம்மோடு கூட வருவது, தாம் செய்வினை அல்லால் - அவரவர் செய்த நல்வினை தீவினைகளே யல்லாமல், யாங்கணும் - எவ்வுலகத்தினும், பிறிது இல்லை - வேறு இல்லை; கூற்றம் - யமன், கொண்டு ஓடும் பொழுது - கொண்டு போகும் போது, ஆங்கு - அப்படி, தாம் போற்றி - தாம் பாதுகாத்து, புனைந்த - (ஆடையாபரணாதிகளால்) அலங்கரித்த, உடம்பும் - சரீரமும், பயம் இன்று - பிரயோசனமில்லை; எ-று.
தான் போற்றிப் புனைந்த வுடம்பும் சாம்போது பயனில்லாமற் போக, பொருண் முதலியவை கூட வரா; தான் செய்த வினையொன்றே தன்னைப் பின்பற்றும் என்பது கருத்து.
இதுவும் பொருள்களி னுண்மை. யாங்கண் - யா - வினா விடைச்சொல், கண் - இடப்பெயர், பண்புத்தொகை, ஙகரம் - தோன்றல் விகாரம். கூற்றம் - அம் - சாரியை.
13. தீவினை அச்சம்
[அதாவது தீவினை செய்வதற்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதைப் பற்றிச் சொல்லியது. பொருள்களின் மெய்ம்மையை யுணர்தலினாலே தீமை பயக்குமவை இன்னின்னவை யென்று தெரியும், ஆனதைப்பற்றி மெய்ம்மையின் பின்னர் இது வைக்கப்பட்டது.]
121. துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
(இ-ள்.) சுடுகாடு - சுடுகாடுகள், துக்கத்துள் - துக்கத்தைத் தரும் பாபகாரியங்களில், தூங்கி - சுகித்திருந்து, துறவின்கண் - (அவற்றைத்) துறக்கும் வழியில், சேர்கலா - சேரமாட்டாத, மக்கள் - மனிதர்களுடைய, பிணத்த - உயிர்போன உடல்களையுடையனவாம்; புலன் கெட்ட - அறியுந்திறங் கெட்ட, புல் அறிவு ஆளர் - அற்ப அறிவை யுடையவர்களது, வயிறு - வயிறுகள், தொக்க - சேர்ந்த, விலங்கிற்கும் - மிருகங்களுக்கும், புள்ளிற்கும் - பட்சிகளுக்கும், காடே - இடுகாடேயாம், எ-று.
மனிதப் பிணங்களை யிடுகிற சுடுகாட்டைப் போல புத்தியில்லாதவர்களுடைய வயிறுகள் மிருகங்களையும் பட்சிகளையும் கொன்றிடும்படியான சுடுகாடு என்று நிந்தித்ததனால் விவேகமுள்ளவன் மிருகபட்சிகளைக் கொன்று தின்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்தாம்.
"துக்கத்துட்டூங்கித் துறவின் கட்சேர்கலா மக்கள்" என்றதனால் உடம்பைப் போற்றுதலே யன்றி உயிர்க் குறுதியானவற்றைச் செய்யாதவர்கள் என்பதாம். சேர்கலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், சேர் - பகுதி, கல் - ஆற்றலைக் காட்டும் விகுதி, ஆ - எதிர்மறை விகுதி. பிணத்த - பலவின் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று. காடே - ஏ - தேற்றம். புன்மையான அறிவை யாள்பவர் புல்லறிவாளர்; புல்லறிவு - உண்ணுதல் உறங்குதல் முதலிய சாதாரண அறிவு.
122. இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
(இ-ள்.) சுரும்பு ஆர்க்கும் - வண்டுகள் சப்திக்கின்ற, காட்டுள் ஆய் வாழும் - காட்டினிடத்து இருந்து வசிக்கின்ற, சிவலும் - கவுதாரியையும், குறும்பூழும் - காடையையும், கூட்டுள் ஆய் - கூடுகளில் இருக்கும்படி, கொண்டு வைப்பார் - பிடித்து வந்து அடைத்து வைப்பவர்கள், இரும்பு ஆர்க்கும் - இருப்பு விலங்குகள் சப்திக்கின்ற, காலர் ஆய் - கால்களை யுடையவர்களாய், ஏதிலார்க்கு - பகைவர்களுக்கு, ஆளாய் - (அடிமை) ஆள்களாய், சுரும் பார் - வட்டை நிலத்திலும், [அல்லது, கரும்பு ஆர் - கரும்புகள் விளைந்த,] கழனியுள் - கழனியிலும் [கருப்பந் தோட்டங்களில் என்றபடி], சேர்வர் - (வேலை செய்யும்படி) சேர்வார்கள், எ-று.
காடை கவுதாரி முதலியவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைப்பவர்கள் மறுமையில் பகைவர்க்கு அடிமைகளாய் காலில் விலங்கு பூண்டு கழனிகளில் வேலை செய்விக்கப் படுவார்களென்பதாம்.
கரும் பார் - கருமையான பார், இங்கே கருமையாவது வலிமை, அதாவது வட்டையாயிருத்தல், பயனில்லாத நிலம். கரும்பாருள்ளும் கழனியுள்ளும் என முதல் பட்சத்தில் உம்மைத் தொகையாகவும், கரும் பார்ந்த கழனியுள் என இரண்டாவது பட்சத்தில் வினைத்தொகை யாகவுங் கொள்க. வைப்பார் - வினையாலணையும் பெயர்.
123. அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
(இ-ள்.) அக்கால் - அந்தக் காலத்தில் [முற்சன்மத்தில்], அலவனை - நண்டை, காதலித்து - விரும்பி, கால் முரித்து - காலையொடித்து, தின்ற - (அதனைத்) தின்ற, பழவினை - (அதனாலுண்டாகிய) கருமம், வந்து அடைந்தக் கால் - (பயன் பெறும்படி) வந்து சேர்ந்த போது, அங்கை - உள்ளங்கையானது, அக்கு போல் - சங்குமணியைப் போல, ஒழிய - நீங்க, விரல் அழுகி - விரல்கள் அழுகிப் போய், துக்கம் - துக்கத்தைத் தருகின்ற, தொழு நோய் - பலவகைக் குட்ட நோய்கள், எழுப - உண்டாகப் பெறுவார் (பாவிகள்), எ-று.
தண்டை முரித்துத் தின்றவர்க்குக் குட்ட நோ யுண்டாமாதலால் அதுவும் தீவினை யென்பதாம்.
"அகமுனர்ச்செவிகை வரினிடை யனகெடும்" என்பதனால் அகங்கை அங்கை யென்றாயிற்று [மெய். சூ. 19]; பாவிகள் நோயெழுப என்பது "உயர்திணை தொடர்ந்த பொருண்முதலாறும்" என்கிற [பொது. சூ. 26] விதியால் பொருந்தியது. சங்கு சுட்ட சுண்ணாம்பு என்பது போல தின்ற என்பது பழவினை யென்னுங் காரியப் பெயரோடு முடிந்தது.
124. நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
(இ-ள்.) நெய் போல்வதும் - நெய்யைப் போல இதமாகிய பொருளும், நெருப்பு அழல் - நெருப்பினது உக்கிரத்தை, சேர்ந்தக்கால் - சேர்ந்தால், எரிப்ப சுட்டு - (உடலை) யெரிக்கும்படி காய்ந்து, எவ்வம் நோய் - துன்பப்படுத்தும் படியான நோயை, ஆக்கும் - உண்டாக்கும்; (அதுபோல) கோடாரும் - (நல்லொழுக்கத்திற்) கோணி நடவாதவரும், சுடு வினையார் ஆகியார் - கடுமையான தீவினை செய்பவர்களை, சார்ந்து - சேர்ந்து, கோடி - (தம் ஒழுக்கத்தில்) கோணி, பரப்ப - மிகவும், கொடு வினையா ஆகுவர் - கொடுமையான வினைகளைச் செய்பவராவார்கள், எ-று.
நெய் உடம்பிற்பட இதமானதா யிருந்தாலும் காய்ந்து விடின் உடம்பைச் சுட்டு நோயுண்டாக்குவது போல, யோக்கியரும் தீவினை செய்பவரோடு சேர்ந்தால் தீவினையே அதிகமாகச் செய்பவராவார்கள்.
போல்வதூஉம் - இசை நிறை கோடார் - கோடு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி புணர்ந்து கெட்டது, ஆர் - விகுதி; வினைப்பகுதி இடைநிலையின்றி ஆர் விகுதியோடு சேர்ந்தால் எதிர்மறையைக் காட்டுமென்றே சொல்லலாம். உடன்பாட்டில் கோடினார், கோடுகின்றார், கோடுவார் என்று வரும். ஆகியார்ச்சார்ந்து - இரண்டாம் வேற்றுமைத் தொகையாகலின் உயர்திணைப் பெயர் முன் வலி மிகுந்தது. "இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்" என்பது விதி.
125. பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
(இ-ள்.) பெரியவர் கேண்மை - பெரியோர்களுடைய சிநேகமானது, பிறை போல - இளஞ் சந்திரனைப் போல, வரிசை ஆ - கிரமக் கிரமமாக, நாளும் நந்தும் - தினந்தோறும் வளரும்; சிறியார் தொடர்பு - சிற்றறிவுடையாரது சிநேகம், வான் ஊர் - ஆகாயத்தில் தவழ்கின்ற, மதியம் போல் - பூர்ண சந்திரனைப் போல, வைகலும் - தினந்தோறும், வரிசையால் - கிரமமாக, தானே தேயும் - தானே குறைந்துவிடும், எ-று.
அயோக்கியரோடு உறவாடுவதை விட்டு யோக்கியரோடு உறவாட வேண்டு மென்பதாயிற்று.
நாளும், வைகலும் - இரண்டிடத்திலும் உம் - முற்றும்மைகள், பெரியவர் சிறியவர் என்பவற்றிற்கு அரிது என்பதற்கு எழுதியுள்ளதுபோலக் கொள்க.
126. சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
(இ-ள்.) சான்றோர் என மதித்து - சற்குணம் நிறைந்தவர்களென்று நினைத்து, மன் சார்ந்தாய் - (சிலரை) மிகவும் நேசித்தாய்; சார்ந்தாய்க்கு - (அப்படி) நேசித்த உனக்கு, சார்ந்தார்கண் - (நீ) சேர்ந்தவரிடத்து, சான்றாண்மை - (அந்த) சற்குண நிறைவு, இல் ஆயின் - இல்லையானால், சார்ந்தோய் - (அவர்களை) அடுத்தவனே! கேள் - (அதற்கு நான் சொல்லும் உவமையை) கேள்; (அது) ஒருவன் - ஒருவன், அகத்து சாந்து உண்டு என்று- உள்ளே வாசனை வஸ்து இருக்கிறதென்று நினைத்து, செப்பு திறந்து - பரணியைத் திறந்து, அகத்து - உள்ளே, பாம்பு கண்டது உடைத்து - பாம்பைப் பார்த்த உவமானத்தையுடையது, எ-று.
நீ சிலரை ஆராயாமல் மஹாகுணவான்களென்று நினைத்து நட்புக் கொண்டு பின்பு அவர்களிடத்து அந்த நட்புக்குணம் இல்லையென் றுனக்குத் தெரிந்தால் சாந்துச் செப்பு என்று ஒரு பரணியை நீ திறந்து அச்சாந்தில்லாமல் பாம்பிருக்கக் கண்டது போல் உன் குற்றத்தால் வந்ததென நினைத்துக் கொள். இதனால் ஒருவரை நன்காராய்ந்து நேசிக்க வேண்டும். அப்படி நேசியாமற் போனால் அதனால் செப்புக்குள்ளிருந்த பாம்பினால் தீமை வருவது போலத் தீமை யுண்டாகும். ஆகையாலதற்க கஞ்ச வேண்டு மென்பதாயிற்று.
சான்றோர் - சால் - பகுதி, (=நிறைவு), ஆர் - விகுதி, றகரம் - இடைநிலை, லகரம் னகரமானது சந்தியும் விகாரமும், விகுதி ஆகாரம் ஓகாரமானது [பொது. நன். சூ. 2, விதியால்] மன் - உரிச்சொல். சார்ந்தாய்க்கு - முன்னிலை வினையாலணையும் பெயர். சார்ந்தோய் - விளி; ஈற்று னகரம் யகரமானது விளியுருபு. கண்டது - வினையாலணையும் பெயர், இங்கே காணப்பட்ட உபமானத்தை யுணர்த்திற்று.
127. யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
(இ-ள்.) சாரல் - மலைச்சாரல்களிலே, கனமணி நின்று இமைக்கும் - காந்திமிகுந்த இரத்தினங்கள் இருந்து பிரகாசிக்கின்ற, நாட - நாட்டை யுடைய அரசனே! கேள் - கேட்கக் கடவாய்; ஒருவர்தம் உள்ளத்தை - ஒருவருடைய மனத்தை, தேரும் துணைமை யுடையவர் ஒருவர் - ஆராய்ந்தறியும் வல்லமை யுடையவராகிய ஒருவர், யார் - எவர் இருக்கிறார்கள்? [ஒருவருமில்லை]; (ஏனெனில்) மக்கள் மனம் வேறு - மனிதர்கள் இதயமானது வேறு தன்மையையுடையது; செய்கையும் வேறு - (அவர்கள்) செய்யுங் காரியமும் வேறாயிருக்கின்றது, எ-று.
உலகத்தில் மனிதர் மனத்தில் நினைத்தபடி செய்யாமல் மேலுக்கு வஞ்சனையாய் வேறுவிதம் நடத்துகிறார்களாகையால், செய்கையினாலே உள்ளத்தை யின்னபடி யென்று அறியக் கூடாது; ஆகவே செய்கையைக் கொண்டே நல்லவரென்று எண்ண வேண்டாம்; அப்படித் தேராத போது அவர் கூட்டுறவுக்கு அஞ்ச வேண்டும் என்பதாயிற்று.
துணைமை - மை - பண்புப்பெயர் விகுதி. வேறு - ஐம்பான் மூவிடங்கட்கும் பொதுவான குறிப்பு வினைமுற்று. சாரல் - தொழிற்பெயர், இடப்பெயர்க்கு ஆகுபெயர்.
128. உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
(இ-ள்.) புனல் அருவிநீர், தெள்ளி - தெளிந்து, செதும்பு - சேற்றை, நின்று அலைக்கும் - (தான்) இருந்து போகும்படி செய்கிற, பூ குன்ற நாட - அழகிய மலையுள்ள நாட்டை யுடையவனே! உள்ளத்தான் நள்ளாது - மனத்தினால் விரும்பாமல், உறுது தொழிலர் ஆய் - உறுதியான தொழிலைச் செய்பவராய், கள்ளத்தால் நட்டார் - வஞ்சனையால் சிநேகித்தவர்களுடைய, சுழி கேண்மை - மிகுதியான சிநேகம், மனத்துக் கண் - மனதில், மாசு ஆய்விடும் - குற்றமுள்ளதாய் நிற்கும், எ-று.
மனமொப்பி நேசியாமல் இவர் உண்மையாக நேசித்தவரென்று நம்பத்தக்க உறுதியான செய்கைகளைச் செய்து கபடமாக நேசிப்பவர்களுடைய சிநேகம் மனதிற் குற்றமாயிருக்கும், அதாவது பின்னிட்டுத் தீமையை விளைக்கு மென்பதாம். இதனால் அதற்கு அஞ்சவேண்டு மென்பதாயிற்று.
தள்ளாது - நள் - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி; து - வினையெச்ச விகுதி. நட்டார் - நள் - பகுதி, ட - இடைநிலை, ளகரம் டகரமானது சந்தி, ஆர் - விகுதி; வினையாலணையும் பெயர், கழி - உரிச்சொல். கேண்மை - கேள் (=உறவினன், க்ஷேமத்தை விசாரிப்பவனானதால்) பகுதி, மை - பண்புப் பெயர் விகுதி. தெள்ளிப்புனற் செதும்பு நின்றலைக்கும் - அருவிநீர் சேற்றைப் போக்கித் தெளிவாய் நிற்கின்ற தென்பதாம். தெள்ளி - வினையெச்சம், தெள்ளு - பகுதி. அலைக்கும் - (அலையச் செய்கிற), பிறவினைப் பெயரெச்சம்.
129. ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
(இ-ள்.) ஓக்கிய - (தான் பிறன்மேல்) வீசிய ஒள் வாள் - பிரகாசமான கத்தி, தன் ஒன்னார் கை பட்டக்கால் - தன் சத்துருவின் கையிற் சேர்ந்தால், ஊக்கம் அழிப்பது மெய் ஆகும் - (தன்) தைரியத்தைப் போக்கடிப்பது உண்மையாகும்; ஆக்கம் - (தான் மூடருக்குச் செய்த) உபகாரம், இருமையும் சென்று சுடுதலால் - (இம்மை மறுமை என்கிற) ஈரிடத்திலும் தொடர்ந்து வருத்துவதால், கல்லார்கண் தீர்வு - படிப்பில்லாத அயோக்கியரிடத்தினின்றும் நீங்கி யிருப்பது, நல்ல கருமமே - நல்ல காரியந்தான், எ-று.
தான் ஒருவனைக் கொல்லுதற்கு மேலெடுத்த வாள் தவறிக் கொல்ல நினைக்கப்பட்டவன் கையிற் சேர்ந்தால், கத்தியைத் தூக்கினவனுக்குத் தைரியம் அழிந்து போகின்றது; ஆதலால் அவ்வாளாயுதத்துக்கு அஞ்சிப் பகைவரிடத்தினின்றும் நீங்க வேண்டும். அப்படியே தான் அயோக்கியனுக்கு ஓர் உபகாரம் செய்தால் அவன் அதைக் கொண்டு பல அக்கிரமங்கள் செய்வானாதலால் உபகாரம் செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் கீர்த்தியும் கெடுவது மன்றி மறுமையில் நரகத்துக்கு மேதுவாகும். ஆகவே வாளா யுதத்துக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அயோக்கியனுக்கு உபகாரம் செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டுமென்பது கருத்து.
அழிப்பதூஉம் - உலகத்தில் பல காரியங்களைப் போல இதுவும் மெய்யாயிருக்குமெனப் பொருளைத் தருதலால் எதிரது போற்றிய எச்சவும்மை; இன்னிசையளபெடை. ஓக்கிய - பிறவினைப் பெயரெச்சம், ஓக்கு - பிறவினைப் பகுதி, ஓங்கு - தன்வினைப் பகுதி; மெல்லொற்று வல்லொற்றானது பிறவினைக் குறி, இன் - இடைநிலை ஈறு தொக்கது, அ - பெயரெச்ச விகுதி, யகரம் - உடம்படுமெய். ஆக்கம் - பொருட்பெயர்; அம் - செயப்படுபொருள் விகுதி; இங்கு பொருளெனக் கொள்ளினும் குற்றமில்லை. கல்லார்கண் - ஏழாம் வேற்றுமை, கண் - இங்கு நீக்கப் பொருளில் வந்தது. கல்லாதார் - கல்லாமை என்பது அயோக்கியதை வரையிற் கொள்ளப்பட்டது.
130. மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
(இ-ள்.) நெஞ்சே - மனமே!, (நீ) மனை பாசம் கைவிடாய் - மனையாளிடத்துள்ள ஆசையை விடமாட்டாய்; மக்கட்கு என்று - மக்களுக்கு (பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும்) என்று, ஏங்கி - ஏக்கமுற்று, எனைத்து ஊழி - எவ்வளவு காலம், வாழ்தியோ - வாழ்வாயோ?, சிறுவரையே ஆயினும் - அற்பகாலமானாலும், எனைத்தும் - எவ்வளவாவது, செய்த நன்று அல்லால் - செய்த நற்காரியமே யல்லாமல், உயிர்க்கு - ஆத்துமாவுக்கு, உறு பயனோ - அடியும்படியான நற்பயனோ, இல்லை - (வேறு) இல்லை, எ-று.
மனமே! மனையாளிடத்தும் மக்களிடத்தும் ஆசாபாசம் நீங்காமல் அவர்களுக்கே வேண்டுங் காரியங்களைச் செய்ய வேண்டுமென்று பெரிய ஏக்கங்கொண்டு எத்தனை காலம் நிற்கப் போகிறாய்? இவ் வேகத்தோடேயே மாள்வாயல்லது வேறொரு நற்பயனைப் பெற்றாயில்லை; நீ இருக்கும் சொற்ப காலத்திலாகிலும் தான தரும முதலிய நற்காரியங்கள் செய்தால் அதுதான் ஆத்துமாவுக்கு நற்பயனாகும். இதனால் உயிருக்கு உறுதி செய்யாமல் வீண் காலம் கழிப்பதற்கு அஞ்ச வேண்டுமென்பது கருத்து.
மனை - மனையாளுக்கு ஆகுபெயர். எனைத்து - என் என்பதன் மேல் அளவைக் காட்டுகிற ஐ விகுதிபெற்ற எனை என்பது பகுதி, து - விகுதி. முந்தி யெழுதியது போல் எ என்னும் வினாவின் மேல் னகரச் சாரியை வந்ததென்றும் கொள்ளலாம். வாழ்தி - இ - முன்னிலை விகுதி, த் - எழுத்துப்பேறு, தி - விகுதியென்பது நேர்; இங்கே எதிர் காலத்துக்கு வந்தது. வாழ்தியோ - ஓ - வினாப்பொருளில் வந்தது. இகழ்ச்சியைக் குறிக்கின்றது. உறுபயனோ - இதில் ஓகாரம் முந்திச் சொன்ன பொருளினின்றும் வேறாந்தன்மையைக் குறிக்கின்றது.
அறத்துப்பால் முற்றிற்று.
பொருட்பால்
[அவற்றுள் எல்லாப் பொருள் நுட்பத்தையு மறிவதற்குக் காரணமாகிய கல்வி முதலில் கூறப்பட்டது.]
14. கல்வி
[அதாவது கற்க வேண்டிய நூல்களைக் கற்பது.]
131. குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
(இ-ள்.) குஞ்சி அழகும் - மயிர் முடியி னழகும், கொடுதானை கோடு அழகும் - வளையும்படியான ஆடையினது கரையழகும், மஞ்சள் அழகும் - பூச்சினது அழகும், அழகு அல்ல - அழகாக மாட்டா, நெஞ்சத்து - மனதில், நல்லம் யாம் என்னும் - யாம் நல்லவர்களா யிருக்கக் கடவோ மென்கிற, நடுவு நிலைமையால் - நடுவு நிலைமையைத் தருதலால், கல்வி அழகே - கல்வியினா லுண்டாகின்ற அழகே, அழகு - அழகாகும், எ-று.
மயிர்களைச் சீர்ப்படுத்தி முடிப்பதனாலும் ஓரங்களில் பட்டுக் கரைபோட்ட வஸ்திரங்களைத் தரிப்பதனாலும், நல்ல பரிமளத் திரவியங்களை மெய்யிற் பூசுவதனாலும் உண்டாகின்ற அழகு அழகாக மாட்டா, நாம் மறுமைக்கு அஞ்சிப் பக்ஷபாதமில்லாமல் நடக்க வேண்டுமென்கிற நடுவுநிலைமையைக் கல்வி யுண்டாக்குவதால் அதனால் வரும் அழகே விசேஷமென்பதாம்.
மஞ்சள் என்பது பூசத்தக்க வாசனைத் திரவியங்களுக்கெல்லாம் உப லக்ஷணமாகக் கொள்ளப்பட்டது. [நன். பொது. சூ. 7] கொடுமை என்பது இங்கே மடியுந்தன்மைக்குக் கொள்ளப் பட்டது. நல்லம் - தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று. அழகே - தில் ஏகாரம் - பிரிநிலை.
132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
(இ-ள்.) இம்மை பயக்கும் - இவ்வுலக சௌக்கியத்தைக் கொடுக்கும்; ஈய - (பிறருக்குக்) கொடுப்பதனால், குறைவு இன்று - குறையுந் தன்மையை யுடையதன்று; தம்மை - (கற்றவராகிய) தம்மை, விளக்கும் - விளங்கச் செய்யும் [அதாவது எங்கும் புகழ்பெறச் செய்யுமென்றபடி]; தாம் உளரா - தாம் உயிரோடிருக்க, கேடு இன்று - கெடுதலை யுடையதன்று; (ஆதலால்) எம்மை உலகத்தும் - எத்தன்மையான உலகத்திலும், கல்வி போல் - கல்வியைப் போல, மம்மர் அறுக்கும் மருந்து - மயக்கத்தை அறுக்கும்படியான மருந்தை, யாம் காணேம் - யாம் கண்டோமில்லை, எ-று.
இம்மையிற் சுகத்தையுண்டாக்கி, பிறருக்குக் கொடுக்கவும் குறைபடாமலிருந்து தமக்குப் புகழை யுண்டாக்கி, தாமிருக்கவும் அழிதலில்லாம லிருப்பதால் எல்லாப் பொருளிலும் கல்வியே மேலானதென்பது கருத்து.
இதனை மருந்தென்றது மயக்கத்தைத் தீர்த்தலும் சுகத்தை யுண்டாக்குதலுமாகிய காரணங்களா லென்க. மற்ற மருந்து சுகத்தைக் கொடுத்தாலும் பிறருக்குக் கொடுப்பதனால் குறையும், தாம் இருக்கும் போது கெடவும் கெடும், ஆதலால் இம்மருந்து எல்லா மருந்திலும் மேலென்றார்.
ஆல் - அசைகள், இம்மை - சுகத்திற்கு ஆகு பெயர். எம்மை - அம்மை இம்மை என்பதைப் போல் மை விகுதி. இடப்பொருளில் வந்தது.
133. களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.
(இ-ள்.) களர் நிலத்துப் பிறந்த உப்பினை - உவர் நிலத்தில் உண்டான உப்பை, சான்றோர் - யோக்கியர்கள், விளை நிலத்து நெல்லின் - கழனியில் விளையும் நெல்லைக் கொள்வது போல, விழுமிது ஆ கொள்வர் - மேன்மையான பொருளாகக் கொள்வார்; (அதுபோல்) கடை நிலத்தோர் ஆயினும் - கீழ்ச்சாதியிற் பிறந்தவர்களானாலும், கற்று அறிந்தோரை - (நூல்களை) கற்று (அவற்றின் சாரத்தை) அரிந்தவர்களை, தலை நிலத்து - மேலான ஜாதியில், வைக்கப்படும் - வைக்க வேண்டும், எ-று.
பிறப்பைப் பற்றி உயர்வு தாழ்வு யோசியாமல் அவர்களிடத்துண்டான கல்விச் சிறப்பினால் அவரை உயர் பிறப்பாளராகக் கொண்டு அவர்களிடத்தில் கற்க முயல வேண்டு மென்பது கருத்து.
நெல்லின் - இன் உருபு ஒப்புப் பொருளில் வந்தது. விழுமிது - வினையாலணையும் பெயர், விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு தொக்கது, து - ஒன்றன் விகுதி, படும் - இது ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவான வியங்கோள் வினைமுற்று. அல்லது விதிப் பொருளையுடைய வினைமுற்று. இதை நன்னூல் உரையாசிரியர் தேற்றப் பொருளில் வந்த தொழிற்பெயரென்கிறார்.
134. வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
(இ-ள்.) வைப்புழி - வைத்த இடத்தில், கோள் படா - (பிறரால்) அபகரிக்கப்படமாட்டாது; வாய்த்து - (தமக்கு) கிடைத்து, ஈயில் - (பிறருக்கு) கொடுத்தால், கேடு இல்லை - அழிவதில்லை; மிக்க சிறப்பின் - மேலான (படைச்) சிறப்பையுடைய, அரசர் செறின் - அரசர் கோபிப்பாராயின், வவ்வார் - பிடுங்கிக் கொள்ள மாட்டார்கள்; (ஆதலால்) ஒருவன் -, மக்கட்கு - (தன்) பிள்ளைகளுக்கு, எச்சன் என - (தன் சம்பாத்தியத்தின்) மிஞ்சின ஆஸ்தியென்று, செய்வன - செய்யத்தக்கவை, விச்சை - கல்வியாம், பிற அல்ல - மற்றவைகள் அல்ல, எ-று. மற்று - அசை.
செல்வப் பொருள் திருடப்படும்; பிறருக்குக் கொடுத்தா வழிந்து போம்; சேனாபலமுள்ள அரசரும் கைக்கொள்வார்கள்; கல்விப் பொருளுக்கு இத்தன்மையான ஈனங்களில்லை யாதலால் செல்வப் பொருளிலும் கல்விப் பொருளே சிறந்ததென்பதாம்.
கோள் - கொள் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முதனீட்சி விகாரம் பெற்றது, இரண்டாம் வேற்றுமைத் தொகை, சிறப்பின் - இன் - சாரியை. எச்சம் - எஞ்சியது எச்சம்; எஞ்சு - பகுதி, அம் - கர்த்தாப் பொருள் விகுதி, ஞகரம் சகரமானது வலித்தல். செய்வன - செய்வது போல் வந்த செயப்பாட்டு வினையாலணையும் பெயர். விச்சை - வித்யா என்னும் வட சொல்லின் விகாரம். பிற - பலவின் பாற் பெயர், வேற்றுமைப் படும்போது அற்றுச் சாரியை பெறும்.
135. கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
(இ-ள்.) கல்வி கரை இல - கல்விகள் முடிவில்லாதன; கற்பவர் நாள் சில - கற்பவர்களுடைய வாழ்நாள்கள் சில; மெல்ல நினைக்கில் - பொறுத்து யோசித்தால், பிணி பல - கற்பவர்க்கு அநேகம் வியாதிகளுளவாம்; (ஆதலால்) நீர் ஒழிய பால் உண் குருகின் - நீரை நீக்கிப் பாலையே உண்ணுகின்ற அன்னப் பறவையைப் போல், தெரிந்து - (நூல் திறங்களை) அறிந்து, தெள்ளிதின் - விவேகத்தினால், ஆராய்ந்து -, அமைவுடைய - (தமக்குப்) பொருந்தினவைகளை, கற்ப - கற்பார்கள், எ-று, ஏ - அசை.
ஒருவன் முற்றும் கற்க வேண்டுமானால் கல்விகள் அபாரமாக யிருத்தலினாலும் ஆயுள் அற்பமானதா யிருப்பதாலும், பலவியாதிகள் ச்மபவிப்பதனாலும் அது இசையாது; ஆகவே நன்றாய் ஆராய்ந்து தமக்கு வேண்டியவைகளைப் புத்திசாலிகள் நன்றாய் ஆராய்ந்து தமக்கு வேண்டியவைகளைப் புத்திசாலிகள் கற்கின்றார்கள். எங்ஙனமெனில் நீரைப் பிரித்துப் பாலையுண்ணும் அன்னத்தைப் போல்.
நீரையும் பாலையும் கலந்து வைக்கில் நீரைப்பிரித்துப் பாலை யன்னம் உண்கிறதென்று கூறுகிறார்கள். கல்வி - கல் - பகுதி, வி - செயப்படுபொருள் விகுதி, கற்கத்தக்கவை யென்பது திரண்டபொருள். கல்வி கரையில என்பது முந்தி யெழுதியுள்ள இலக்கணத்திற் கண்டு கொள்க. மெல்ல - அவசரப்படாமல், மென்மை யடியாகப் பிறந்த குறிப்பு வினையெச்சம். தெள்ளிது - தொழிற்பெயராய்ப் பண்பை யுணர்த்துகின்றது. தெளி - பகுதி, இ - விகுதி, ளகரம் - விரித்தல், கற்ப - பலர்பால் வினைமுற்று.
136. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
(இ-ள்.) தோணி இயக்குவான் - மரக்கலத்தை நடத்துவோன், காணில் - ஆராய்ந்தால், தொல்லை வருணத்து - பழமையான சாதிகளில், கடைபட்டான் என்று - கடைசியான சூத்திர சாதியிற் சேர்ந்தவன் என்று, இகழார் - (பெரியோர்) நிந்திக்கமாட்டார்; காணாய் - நீ பார்; நூல் கற்ற - சாஸ்திரங்களைப் படித்து, மகன் துணையா - மனிதன் சகாயமாக விருக்க, நல்ல கொளல் - நல்ல நூற்பொருள்களைக் கற்றல், அவன் துணையா ஆறு போய் அற்று - அந்தத் தோணி இயக்குவான் துணையா நிற்ப ஆற்றைக் கடந்தது போலாகும், எ-று.
படவு ஓட்டுவோன் ஈனசாதிய னானாலும் இன்றியமையாது அவனைக் கொண்டே ஆற்றைக் கடப்பது போலக் கற்றவன் ஈனசாதிப் பிறப்பின னானாலும் அவசியமான போது அவனைக் கொண்டே கற்க வேண்டிய நூல்களைக் கற்க வேண்டுமென்பது கருத்து.
இயக்குவான் - பிறவினை வினையாலணையும் பெயர், இயக்கு - பிற வினைப்பகுதி, இயங்கு - தன் வினைப் பகுதி, தொல்லை - தொல் - பகுதி பண்படி, ஐ - விகுதி. தொல்லை வருணம் - பண்புத்தொகை. காணாய் அசையுமாம். போயற்று - போய் - செய்தெனெச்சத்திரிபு, அற்று - உவமையைக் காட்டும் குறிப்பு வினைமுற்று; இரண்டும் சேர்ந்து, போனால் எத்தன்மைத்தோ அத்தன்மைத்து என்னும் பொருளைத் தரும், இது முன்னோர் கொள்கை. செய்தெனெச்சத்தைத் தொழிற் பெயர் போலக் கொண்டு போனது போலாம் எனப் பொருள் கொள்ளுதல் இக்காலத்து வழக்கு. நல்ல - பலவின்பாற்பெயர், இரண்டாம் வேற்றுமைத் தொகை.
137. தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.
(இ-ள்.) தவல் அரு - குற்றமில்லாத, தொல் கேள்வி தன்மை உடையார் - பழமையான நூற்கேள்விகளைக் கேட்குந் தன்மையை உடையவர்கள், எஃகு உடையார் தம்முள் - ஆயுதம்போற் கூர்மையான புத்தியை யுடையவர்களுக்குள்ளே, குழீஇ - கூடி, இகல் இலர் - மாறுபடுத லில்லாதவர்களாகி, நகலின் - மகிழ்வதைக் காட்டினும், இனிது ஆயின் - இன்ப முள்ளதாயின், அகல் வானத்தும்பர் - விசாலமாகிய வானத்தின் மேல், உறைவார் - வாசஞ்செய்கின்ற வேதர்களுடைய, பதி - ஸ்தானமாகிய சொர்க்கத்தை, காண்போம் - பார்ப்போம், எ-று.
நன்றாய்க் கற்றவர்களோடு கூடி நேசமாயிருந்து அனுபவிக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் சொர்க்கத்தி லுண்டாகிய அனுபவம் சிறந்ததல்ல என்பதாம்.
எஃகு ஆயுதம், இங்கு கூர்மை பற்றி புத்திக்கு ஆகுபெயராக கொள்ளப்பட்டது. தவலரு - அருமையாவது இன்மை. குழீஇ - குழு - பகுதி, இ - விகுதி, அளபெடை இன்னோசைக்குவந்தது, செய்தெனெச்சம். நகலின் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருள், இதனை நீக்கப் பொருளென்பாரும் உளர்.
138. கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
(இ-ள்.) கனை கடல் - ஒலிக்கின்ற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியாகிய துறையை யுடையானே! கற்று அறிந்தார் கேண்மை - நூல்களைக் கற்று (அவற்றின்) சாரத்தை யறிந்தவரது சிநேகமானது, நுனியில் கரும்பு தின்றற்று - நுனியிலிருந்து கரும்பைத் தின்றது போலாம்; பண்பு இலா - குணமில்லாத, ஈரம் இலாளர் - சாரமற்றவர்களுடைய, தொடர்பு - சிநேகமானது, நுனி நீக்கி - நுனியைத் தள்ளி, தூரில் தின்றன்ன தகைத்து - வேரிலிருந்து தின்றதையொத்த தன்மையை யுடையது, எ-று. அரோ, ஏ - அசைகள்.
யோக்கியருடன் சிநேகிப்பது கரும்பை நுனியிலிருந்து தின்றது போல வர வர ருசியாயிருக்கும்; சற்குணமென்னும் சாரமில்லாதானுடைய சிநேகம் வேரிலிருந்து கரும்பைத் தின்பது போல வர வர ருசியில்லாமல் வெறுக்கத்தக்க தென்றபடி. ஆதலால் கற்றவரையே சேரவேண்டு மென்பதாயிற்று.
கனைகடல் - வினைத்தொகை நிலைத் தொடர், தின்றற்று - போயற்று என்பதைப் போற் கொள்க. நுனியில், தூரில் - ஐந்தாம் வேற்றுமை, எல்லைப் பொருளன. இலாளர் - இன்மையை யாள்பவர்.
139. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
(இ-ள்.) தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, ஒள் நிறம் பாதிரி பூ சேர்தலால் - ஒண்மையான நிறத்தையுடைய பாதிரிப் பூவைச் சேர்ந்திருப்பதினாலே, புது ஓடு - புதிய பானையோடானது, தண்ணீர்க்கு - (தன்னில் தங்கிய) ஜலத்துக்கு, தான் பயந்த ஆங்கு - தான் (வாசனையைக்) கொடுத்தது போல, கல்லாரே ஆயினும் - (தாம்) கல்வி கற்காதவராயினும், கற்றாரை சேர்ந்து ஒழுகின் - கற்றோரைச் சேர்ந்து (அவர் போல) நடந்தால், நல் அறிவு - நல்ல விவேகமானது, நாளும் - தினந்தோறும், தலைப்படுவர் - உண்டாகப் பெறுவர், எ-று.
கல்லாதாருக்கும் கற்றாரோடு சேர்க்கையால் விவேகமுண்டாம், எங்ஙனமெனில் பானையோடானது பாதிரிப் பூவைச் சேர்ந்து தன்னிலுள்ள நீருக்கு வாசனையைத் தந்தது போல என்பதாம்.
அறிவு தலைப்படுவர் - "உயர்திணை தொடர்ந்த" என்பது விதி. புத்தோடு - புது ஓடு என்பதில் தகரம் இரட்டித்தது [நன். உயிரீறு. சூ. 33ன் உரையைக் காண்க].
140. அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
(இ-ள்.) அலகு சால் - கணக்குமிகுந்த, கற்பின் - சாஸ்திரங்களுக்குள்ளே, அறிவு நூல் கல்லாது - ஞான சாஸ்திரங்களைக் கற்காமல் விட்டு, உலக நூல் ஓதுவது எல்லாம் - இவ்வுலகத்திற்குப் பயன் படும்படியான நூல்களைப் படிப்பதெல்லாம், கலகல கூஉந் துணை அல்லால் - கலகலவென்று சும்மாக் கூவுமளவை யுடையதே யல்லது, கொண்டு - (அவற்றைக்) கொண்டு, தடுமாற்றம் - (சம்சாரத்தில்) தடுமாறுவது, போந் துணை - நீங்குமளவாகிய மேன்மையை, அறிவார் இல் - அறிபவர்கள் இல்லை, எ-று.
பல நூல்களிருந்தாலும் ஞானநூலையே முக்கியமாய்க் கற்க வேண்டும்; அதனைக் கல்லாதுவிட்டு உலக இன்பத்துக்கு வேண்டிய நூலையே கற்பது யாதொரு பொருளு மில்லாமல் கலகலவென்று சும்மாக் கூவுவது போல் வீணே யல்லாமல் சம்சார பந்தத்தை நீக்கும் மேன்மையதல்ல என்பதாம். இதனால் ஞான நூலை முக்கியமாய்க் கற்க வேண்டுமென்பதாயிற்று.
சால் - வினைத்தொகை, அல்லது உரிச்சொல். கற்பு - கற்கப்படு நூலுக்கு ஆகுபெயர். அறிவு நூல் - இரண்டாம் வேற்றுமையுருபும் பயனு முடன்றொக்கதொகை. கல்லாது - எதிர்மறை வினையெச்சம். ஓதுவதெல்லாம் - ஒருமையிற் பன்மைமயக்கம். கலகல - அநுகரணம் பொருளில்லாமையைக் குறிக்கின்றது. கூஉம் - கூ - பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, அளபெடை இன்னிசை. கூஉந்துணை - பெயரெச்சத் தொடர்ப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இங்ஙனம் வருவதற்கு விதியில்லையாயினும் அநுபவத்தாற் கொள்ள வேண்டும். வினைத்தொகையாக் கொள்ளின் நகரம் மிகுவதற்கு வழி இல்லையாம். அல்லது துணையென்பதற்குத் துணையை யுடையதெனப் பொருள் கொள்ளலாம். போஒந் துணையும், இப்படியே.
15. குடிப்பிறப்பு
[இஃது நல்ல குலத்திற் பிறப்பதன் மேன்மையைக் கூறியது. நற்குடியிற் பிறந்தார்க்கே பெரும்பாலும் கல்வி கேள்விப் பயன்கள் அமையுமாதலால், இது கல்வியின் பின் வைக்கப்பட்டது.]
141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.
(இ-ள்.) உடுக்கை உலறி - உடுக்கும் வஸ்திரமும் கெட்டு, உடம்பு அழிந்த கண்ணும் - தேகம் மெலிந்து நாசப்பட்ட போதும், குடி பிறப்பு ஆளர் - நற்குடியிற் பிறந்தவர்கள், தம் கொள்கையில் குன்றார் - தமக்குரிய ஒழுக்கங்களில் குறைய மாட்டார்; இடுக்கண் தலை வந்தக் கண்ணும் - (பசி தாகங்களால்) துன்பம் நேர்ந்த போதும், அரிமா - சிங்கம், கொடி புல் - கொடியாயிருக்கும் புல்லை, கறிக்குமோ - தின்னாது, எ-று. பற்று - அசை.
எவ்வளவு பசி வருத்த முண்டானாலும் சிங்கம் புல்லைத் தின்னாதது போல் நற்குடியிற் பிறந்தவர் எத்தனை வறுமை யுண்டானாலும் தமக்குரிய நல்லொழுக்கங்களில் குறைய மாட்டார்க ளென்பதாம்.
உடுக்கை யுலறி என்பது வறுமையின் மிகுதியைக் காட்டுகின்றது. தம் கொள்கையாவன; மெய்கூறல், பரோபகாரம் செய்தல், அன்புடைமை, ஆசாரத்திலொழியாமை முதலியன, தலைவருதல் - தன்னிடத்தில் வர என்பது பொருள். அரிமா - அரி - சிங்கம், மா மிருகம், இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. கொடிப்புல் - மாடு முதலியவையும் வந்து தின்னுதலால் கொடிப்புல் என்று கூறினார். உலறி - உலறு - பகுதி, இ - விகுதி. அழிந்தக்கண், வந்தக்கண் - செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உம் - இழிவு சிறப்பு. கறிக்குமோ என்பதனால் உட்கொள்ளாவிடினும் கறிப்பதுமில்லை யென்றபடி, ஓ - எதிர்மறை.
142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது - வான்தோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
(இ-ள்.) வான் தோயும் - வானம் அளாவிய, மை தவழ் வெற்ப - மேகங்கள் தவழ்கின்ற மலையையுடைய அரசனே!, சான்றாண்மை - சற்குணநிறைவும், சாயல் - தேஜஸும், [அல்லது மேன்மையும்,] ஒழுக்கம் - நல்லொழுக்கமும், இவை மூன்றும் - ஆகிய இம்மூன்றும், வான் தோய் - கீர்த்தியால் சுவர்க்கத்திற் சேர்ந்திருக்கிற, குடிப்பிறந்தார்க்கு அல்லது - உயர்குலத்திற் பிறந்தவர்களுக் கல்லாமல், பெரு செல்வம் - பெரிய செல்வமானது, எய்தியக் கண்ணும் - வந்தடைந்த போதிலும், பிறர்க்கு - நல்ல குடியிற் பிறவாதவர்களுக்கு, படர் - உண்டாகாவாம், எ-று.
சான்றாண்மை முதலிய நற்குணங்கள் உயர்குலத்தார்க்கே இயல்பா யமைவனவேயன்றி இழிகுலத்தார்க்கு அமையாவென உயர்குலச் சிறப்புக் கூறப்பட்டது.
படாஅ - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று; அளபெடை அசையை நிறைக்க வந்தது.
143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று.
(இ-ள்.) இருக்கை எழலும் - (பெரியோரைக் கண்டால்) தம் இருப்பிடத்தை விட்டெழுந்திருப்பதும், எதிர் செலவும் - எதிர்கொண்டு செல்லுதலும், ஏனை - இன்னமும், விடுப்ப - (அவர்கள்) விடை கொடுக்க, ஒழிதலோடு - ஒழிதலுடனே பிரிதலும், இன்ன - இப்படிப்பட்டவைகளை, குடிப்பிறந்தார் - நல்ல குடியிற் பிறந்தவர்கள், குன்றா ஒழுக்கமாக் கொண்டார் - குறையாத நல்ல நடக்கைகளாக ஏற்றுக் கொண்டார்கள், (ஆதலால் அவர்களை) கயவரோடு - மூடர்களோடு, ஒன்றா - சேர்த்து, உணரல் பாற்று - அன்று - மதிப்பது பான்மையை யுடையதல்ல, எ-று.
பெரியோர் தம்மிடம் வந்தால் தாம் இருந்தவிடத்தை விட்டெழுந்திருந்து எதிர்சென்று உபசரித்து அவர்கள் விடை கொடுத்த பின் திரும்பி வருதல் முதலாகிய காரியங்களை இன்றியமையா ஒழுக்கங்களாகக் குடிப்பிறந்தார் கொண்டிருப்பதனால் அங்ஙனம் கொள்ளாத மூடர்களோடு அவர்களைச் சேர்த்துப் பார்ப்பது நன்றன்று என்பதாம்.
எழல் - எழு - பகுதி, அல் - விகுதி; "முற்றுமற்றொரோவழி" என்றதனால் உகரம் கெட்டது. செலவு - செல் - பகுதி, அ - சாரியை, உ - விகுதி. ஒழிதலோடு - ஓடு - எண்ணிடைச் சொல். இன்ன - சுட்டு அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர். இ (அல்லது) இன் - பகுதி, அ - விகுதி. கயவர் - கயமை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்.
ஒன்றா - செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்; ஒன்ற என்பது பொருள். உணரற்பாற்று - உணரலாகிய பான்மையை யுடையது; உணரல் + பால் + று எனப் பிரித்துக் கொள்க.
144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்?
(இ-ள்.) நல்லவை செய்யின் - நல்ல காரியங்களைச் செய்தால், இயல்பு ஆகும் - செய்ய வேண்டிய முறைமை யென்னலாகும்; தீயவை - தீயகாரியங்களைச் (செய்தால்), பல்லவர் தூற்றும் - பலரும் பரவச்செய்கிற, பழி ஆகும் - நிந்தையாகும், ஒருவர்க்கு புணரும் எனின் - (நற்குடிப்பிறப்பு) ஒருவர்க்குச் சேர்ந்தால், எல்லாம் உணரும் - எல்லாவற்றையு முணர்ந்த, குடி பிறப்பின் ஊதியம் - குடிப்பிறப்பினுடைய பயன், என் - என்ன? எ-று. ஓ - அசை.
உலகத்தில் ஒருவர் நல்லொழுக்கமாக நடந்தால் அதனை உலகத்தார் விசேஷமாகக் கொள்ளாது நடக்க வேண்டிய இயல்பு தானென்று சாமானியமாகக் கொள்ளுகின்றார்கள்; தீயொழுக்கம் ஒழுகினாலோ தூஷிக்கின்றார்கள். ஆகவே நற்குடிப் பிறப்பினர்க்கு நல்லொழுக்கத்தால் யாதொரு பிரயோஜனமு மில்லை. பிறர் விசேஷமாகக் கொண்டாடாமை பற்றி நற்குடிப் பிறந்தார் தமக்கியல்பான நல்லொழுக்கத்தினின்றுந் தவறார் என்பது கருத்து.
எல்லாமுணரும் என்றதனால் சகலகலா ஞானங்களை யுணர்வதற்கு நற்குடிப் பிறப்பு எளிதாயிருக்கின்ற தென்பதாம். எல்லாம் உணரும் என்பதற்கு எல்லாமறிந்திருக்கிற எனவும் பொருள் கொள்ளலாம் அப்போது பிரசித்தமான நற்குடிப் பிறப்பு என்றதாயிற்று. பல்லவர் - பல் - பகுதி, அ - சாரியை, அர் - பலர்பால் விகுதி, வகரம் உடம்படுமெய் 'பல்' தனிக்குறில் முன்னொற் றாதலால் லகரம் இரட்டிற்று.
145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந்தார்.
(இ-ள்.) கல்லாமை அச்சம் - (தாம்) கல்லாமைக்கு அஞ்சுதலும், கயவர் தொழில் அச்சம் - மூடர்களுடைய தொழிலுக்கு அஞ்சுதலும், சொல்லாமை உள்ளும் - (பொய் குறளை முதலியவற்றைச்) சொல்லாமலிருப்பதிலும், ஓர் சோர்வு - (எந்த விடத்தில் தவறிப் போனோமோ வென்கிற) தளர்ச்சிக்கு, அச்சம் - அஞ்சுதலும், இரப்பார்க்கு - யாசகர்களுக்கு, ஒன்று ஈயாமை - (அவர் விரும்பிய) ஒரு பொருளைத் தாராமைக்கு, அச்சம் - அஞ்சுதலும், எல்லாம் - (இப்பேர்ப்பட்ட) பல அச்சங்களும் (நற்குடிபிறந்தார்க்கு உண்டாகின்றனவாம்); (அங்ஙனம் யாதொரு அச்சமுமில்லாத) இ மாணா குடி பிறந்தார் - இப்படிப்பட்ட - மரத்தன்மையை யுடையோர், (அதாவது மரத்தினாற் செய்த பிரதிமைகளைப் போன்றவர்கள்), எ-று.
நல்ல குடியிற் பிறந்தார்க்கு கல்லாமை முதலிய பலவற்றிலும் அச்சம் உண்டாகின்றது. ஆதலால் நற்குடிப் பிறப்பென்ன வென்று புகழாப் புகழ்ச்சியாக் கூறியதனால் அது மேன்மையதென்பது கருத்து.
கல்லாமை முதலியவற்றிற்கு அஞ்சாத கீழ் குடிப்பிறந்தோர் மனிதர்களாக இருந்தும் பயனின்மையால் மரத்தார் என்றார். கல்லாமை - நான்காம் வேற்றுமைத்தொகை. மாணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், மாண் - பகுதி, ஆ - எதிர்மறையைக் காட்டும் விகுதி.
146. இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.
(இ-ள்.) கனமணி - காந்திமிகுந்த இரத்தினங்கள், முத்தோடு - முத்துக்களோடு சேர்ந்து, இமைக்கும் - பிரகாசிக்கின்ற, முழங்கு உவரி - சத்திக்கின்ற சமுத்திரத்தினுடைய, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, இனம் நன்மை - சேர்க்கின்றவர்களுடைய நன்மையும், இன்சொல் - இனிமையான சொல்லும், ஒன்று ஈதல் - (யாசித்தவர்க்கு ஏதேனும்) ஒரு பொருளைத் தருதலும், ஏனை - மற்றும், மனம் நன்மை - மனம் சுத்தமாயிருத்தலும், என்று இவை எல்லாம் - ஆகிய இவைகளெல்லாம், இல் பிறந்தார் கண்ணே உள - நற்குடியிற் பிறந்தவர்களிடத்திலேயே யுண்டு, எ-று.
குற்றமில்லாத நல்லினத்தைச் சேர்ந்திருத்தலும், யாவரிடத்தும் தக்கபடி இனிமையாகப் பேசுதலும், கேட்பவர்களுக்கு இல்லை யென்னாது கொடுத்தலும், மனதில் பஞ்ச முதலியவில்லாமல் தயாதாக்ஷிணியங்க ளுள்ளவரா யிருத்தலும், இப்படிப்பட்ட நற்குணங்களெல்லாம் குடிப்பிறந்தா ரிடத்தேயுண்டு.
இன்சொல் - பண்புத்தொகை, என்று - எண்ணிடைச் சொல்; இது இனநன்மை முதலியவற்றோடும் கூடும், [இடை. சூ. 10.] முத்தோடு - உடனிகழ்ச்சியில் வந்த மூன்றாம் வேற்றுமை, முழங்கு உவரி - வினைத்தொகை உவர்த்தலையுடையது உவரி. உள - பலவின்பாற் குறிப்பு வினைமுற்று.
147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
(இ-ள்.) செய்கை அழிந்து - வேலைப்பாடுகள் கெட்டு, சிதல் மண்டிற்று ஆயினும் - கறையான்கள் நெருங்கிப் பிடித்திருந்தாலும், பேர் இல் - பெரிய வீடானது, பெய்யா ஒரு சிறை - (மழை) பெய்யாத ஒரு பக்கத்தை, உடைத்து ஆகும் - உடையதாயிருக்கும்; (அதுபோல்) எவ்வம் உழந்தக்கடைத்தும் - துன்பத்துள் மிகுதியாக அலைச்சற் பட்டிருந்தாலும், குடிப்பிறந்தார் - நல்லகுடியிற் பிறந்தவர்கள், செயற்பாலவை - செய்யத்தக்க காரியங்களை, செய்வர் - செய்வார்கள், எ-று.
ஒரு பெரிய வீடு கட்டடங்க ளழிந்து செற்பிடித்திருந்தாலும் மழை பெய்தற்கு உள்ளாகாத ஒரு பக்கம் அந்த வீட்டில் இருக்கவே இருக்கும். குடிப்பிறந்தார் வறுமை முதலியவற்றால் வருத்தப்பட்டாலும், செய்யத்தக்க காரியங்களைச் செய்வார்களேயன்றி செய்யத்தகாத காரியங்களைச் செய்யார் என்பதாம்.
அழிந்து என்னும் வினையெச்சமும், மண்டிற்று என்னும் ஒன்றன் பால் முற்றும், மாடு கோடு கூரிய தென்பது போல் இல் என்பதைக் கொண்டன. உழந்தக் கடைத்து - கடைத்து - செயினென் வாய்பாட்டு வினையெச்ச விகுதி வலி மிகுந்திருப்பதனால் இது பெயரெச்சத் தொடராகாது.
148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.
(இ-ள்.) ஒரு புடை - ஒரு பக்கத்தை, பாம்பு கொளினும் - பாம்பு பிடித்துக் கொண்டாலும், ஒரு புடை - ஒரு பக்கத்தால், அம் கண் மாஞாலம் - அழகிய இடமுள்ள பெரிய பூமியை, விளக்குறூஉம் - விளக்குகின்ற, திங்கள் போல் - சந்திரனைப் போல, செல்லாமை - (தங்கள் காரியங்கள்) ஈடேறாமை, செவ்வன் நேர் நிற்பினும் - நன்றாக நேரே இருந்தாலும், குடிப் பிறந்தார் -, ஒப்புரவிற்கு - உபகாரச் செய்கைக்கு, ஒல்கார் - பின் வாங்க மாட்டார்கள், எ-று.
கிரஹணகாலத்தில் ஒரு பக்கத்தை இராகு கேதுக்களென்கிற பாம்பு பிடித்துக் கொண்டாலும் மற்றொரு பக்கத்தினால் சந்திரன் உலகத்தை விளக்குவது போல, குடிப்பிறந்தார் தாங்கள் எடுத்த காரியங்கள் நிறைவேறாமற் போன போதிலும் கூடிய மட்டில் உபகாரம் செய்வார்களென்பது கருத்து.
விளக்குறூஉம் - உறு - துணைவினை அல்லது அசை, இன்னிசை யளபெடை ஒல்கார் - ஒல்கு - பகுதி.
149. செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
(இ-ள்.) செல்லா இடத்தும் - (தங்களுக்குக்) கூடாத போதும், குடிப்பிறந்தார் -, செய்வன - செய்யுங் காரியங்களை, செல் இடத்தும் - கூடிய விடத்தும், செய்யார் சிறியவர் - இழிகுலத்திற் பிறந்தவர்கள் செய்ய மாட்டார்கள், புல்வாய் - மானானது, பருமம் - பருத்திருத்தலை, பொறுப்பினும் - சுமந்திருந்தாலும், பாய் - ஓடுகின்ற, பரிமாபோல் - குதிரையைப் போல், பொரு முரண் - போர் செய்யவல்ல பலத்தை, ஆற்றுதல் இன்று - பொறுப்பதில்லை, எ-று.
தமக்குக் கூடாதவிடத்தும் குடிப்பிறந்தார் செய்யும் காரியங்களைத் தமக்குக் கூடிய இடத்திலும் அற்பர் செய்ய மாட்டார்கள். எப்படியெனில் மான் பருத்திருந்த போதிலும் குதிரையைப் போலப் போரிட வல்லதல்லாதது போல்.
செய்வன - வினையாலணையும் பெயர்; செய் - வ் - அன் - அ - பகுதி, இடைநிலை, சாரியை, விகுதி; இங்கு இடைநிலை காலங்காட்டாது தன்மையைக் காட்டும். ஒருவகை மான் குதிரையைப் போல் பருத்திருக்கின்றது.
150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
(இ-ள்.) எற்று ஒன்றும் இல்லா இடத்தும் - யாதொரு பொருளும் இல்லாத போதும், குடிப்பிறந்தார் -, அற்று - (தம்மைக் காப்பார்) இல்லாமல், தன் சேர்ந்தார்க்கு - தம்மைச் சேர்ந்தவர்களுக்கு, அசைவு இடத்து - சங்கடமான காலத்தில், ஊற்று ஆவர் - ஊன்று கோலாயிருப்பர்; அற்றக்கடைத்தும் - நீர் வறண்ட போதும், அகல்யாறு - விசாலமான நதியானது, அகழ்ந்தக்கால் - தோண்டினால், தெற்றென - தெளிவாக, தண் நீர் படும் - குளிர்ந்த நீரை உடைத்தாயிருக்கும், எ-று.
கோடைக்காலத்தில் ஆற்றைத் தோண்டினால் நீர் சுரப்பது போல ஒன்றுமில்லாத வறுமைக் காலத்திலும் குடிப் பிறந்தார் தம்மையடைந்தவர்களுக்கு எப்படியாயினும் ஆதரவு செய்வர்.
எற்று - என் - பகுதி, று - விகுதி, னகரம் றகரமானது வலித்தல் ஊன்று என்னும் பகுதியில் னகரம் வலிந்தது; தொழிலாகுபெயர். தெற்றென - சீக்கிரத்தி லெனப் பொருள் கொள்ளின் "தெண்ணீர்படும்" எனப் பாடங்கொண்டு, தெள் - தெளிந்த எனப் பொருள் கொள்க. தண்ணீர் படும் என்பதை ஒரு சொல்போ லெடுத்துக் கொள்ள வேண்டும்.
16. மேன் மக்கள்
[இஃது மேலாகிய மனிதருடைய இயல்பு கூறியதாம்.]
151. அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
(இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்தில், அகல் நிலா பாரிக்கும் - விரிவான நிலாவை நிரப்புகின்ற, திங்களும் சான்றோரும் - சந்திரனும் பெரியோர்களும், ஒப்பர் மன் - பெரும்பாலும் சமானமாவார்கள்; திங்கள் மறு ஆற்றும் - சந்திரன் களங்கத்தைப் பொறுக்கும், சான்றோர் அஃது ஆற்றார் - பெரியோர் அதனைப் பொறார்; ஒரு மாசு உறின் - ஒரு குற்றம் நேர்ந்தால், தெருமந்து தேய்வர் - வருந்தி மெலிந்து போவர், எ-று.
நிலா என்பதைக் கீர்த்திக்கு ஆகுபெயராக்கி "அங்கண் விசும்பினகனிலாப் பாரிக்கும்" என்பதைச் சான்றோருக்குங் கூட்டிக் கொள்க. சந்திரன் தேய்ந்தாலு மறுபடி வளர்கின்றான்; சான்றோரோ தேய்ந்தே போவார் என்பதும் சிறப்பு. இப்படிப்பட்ட சிறப்புகளைப் பற்றித் தான் மன் என்றது, [நன். இடை. சூ. 13; பொது. சூ. 27] விதியால் திங்கள் என்கிற அஃறிணையும் சான்றோர் என்கிற உயர்திணையும் ஒப்பர் என்று ஒரு முடிபு ஏற்றது; திங்களைத் தேவனென்று குறித்தால் இது வழாநிலையேயாம்.
152. இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?
(இ-ள்.) இசையும் எனினும் - கூடுமானாலும், இசையாது எனினும் - கூடாதானாலும், சான்றோர் - பெரியோர், வசை தீர எண்ணுவர் - பழிப்பு நீங்கும்படியே (காரியத்தை) சிந்திப்பர்; விசையின் - வேகத்தினால், நரி மா உளம் கிழித்த - நரியென்னு மிருகத்தினது மார்பைப் பிளந்த, அம்பினில் - அம்பைக் காட்டிலும், அரிமா - சிங்கமானது, பிழைப்பு எய்த - தப்பிப் போம்படி (பிரயோகித்த), கோல் - அம்பானது, தீதோ - பொல்லாதோ, (தாழ்ந்ததோ என்கிறபடி,) எ-று.
செய்யக்கூடினாலும் கூடாமற் போனாலும் பழிப்பில்லாத காரியத்தைப் பெரியோர் நினைப்பார்களேயன்றி இழிவான காரியத்தை நினையார்கள்; ஏனென்றால், சிங்கத்தின் மேல் அம்பை எய்து அது தவறிப் போனாலும் பெருமையுண்டு, நரிமேல் எய்து அதன் மார்பைப் பிளந்தாலும் பெருமையில்லை. ஆகையால் மேலான காரியமே யோசிப்பார்கள் என்பது கருத்து.
பிழைப்பு என்னும் வினையெச்சம் ஈறு குறைந்தது. அம்பினில் - ஐந்தனுருபு எல்லைப் பொருளில் வந்ததெனக் கொள்க.
153. நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
(இ-ள்.) நரம்பு எழுந்து - நரம்புகள் மேலே தோன்றும்படி (மெலிந்து), நல்கூர்ந்தார் ஆயினும் - தரித்திரரானாலும், சான்றோர் - மேலோர், குரம்பு எழுந்து - எல்லைகடந்து, குற்றம் கொண்டு - (யாசிப்பதாகிய) குற்றத்தைக் கைக்கொண்டு, எறார் - (ஒருவரிடம்) போகார், உரம் கவறு ஆ - அறிவைக் கவறாக வைத்து, உள்ளம் எனும் நாரினால் - முயற்சியென்கிற நாரினாலே, கட்டி - (மனதைக்) கட்டி, உளவரையால் - (பொருளானது) தமக்கு இருக்கின்ற அளவினால், செயற்பாலவை - செய்யத்தக்க காரியங்களை, செய்வர் - செய்வார்கள், எ-று.
மனதை விவேகத்தினாலும் முயற்சியாலும் உறுதிப் படுத்திக் கொண்டு இரக்காமல் தமக்குள்ளளவு பிறர்க்கு இட்டு நன்மையே செய்து வருவர் பெரியோர் என்பது கருத்து.
கவறு என்பது பிளப்புள்ள பனமட்டை எழுந்தென்பது சினைவினையாதலால் நல்கூர்ந்தார் என்னு முதல்வினை கொண்டது [நன். வினை. சூ. 26]. குரம்பினின்றும் எழுந்தெனக் கொள்வதனால் எல்லை கடந் தென்றாயிற்று.
154. செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.
(இ-ள்.) நல் வரை நாட - நல்ல மலைகளுள்ள நாட்டை யுடையவனே!, சான்றவர் - பெரியோர், செல்வுழிக்கண் - தாம்போகும் வழியில், ஒரு நாள் காணினும் - (ஒருவரை) ஒருநாள் கண்டாலும், தொல்வழி கேண்மையின் - பழைய முறையில் வந்த சிநேகிதனைப் போல் [அல்லது உறவினனைப் போல] (கொண்டு), தோன்ற - விளங்கும்படி, புரிந்து - (உபசாரங்களைச்) செய்து, யாப்பர் - (தம்மவராக) பிணித்துக் கொள்வர்; சில நாள் அடிப்படின் - சில காலம் காலடிப் பட்டால், கல் வரையும் - கல்மிகுந்த மலையிலும், நெறி உண்டாம் - வழி உண்டாகும், எ-று.
கல்லிலும் காலடிப்பட்டால் வழியுண்டாவது போல கடினசித்தருக்கும் பழகினால் சிநேக முண்டாகு மல்லவோ, அப்படியிருக்க மெழுகுபோன்ற சித்தமுள்ளவர் கண்டவுடனே சிநேகிப்பாரென்பது இயல்புதான் என்றபடி.
155. புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
(இ-ள்.) பொருள் இல் - பொருளின் அறிவு இல்லாத, வறுகோட்டி - பயனற்ற சபையைச் சேர்ந்த, கல்லா ஒருவன் - (நூல்களைக்) கற்காத ஒருவன், புல்லா எழுத்தின் - (இலக்கணத்தோடு) பொருந்தாத சொற்களால்; உரைப்பவும் - சொல்லுமவைகளையும், நல்லார் - பெரியோர், கண் ஓடி - தாக்ஷிணியப் பட்டு, வருந்தியும் - வருத்தமடைந்தும், அவன் - அந்த மூடன், பல்லாருள் - பலபேருக்கு முன்பு, நாணல் - வெட்கப்படுவதற்கு, பரிந்து - இரங்கி, கேட்பர் - (காதினாற்) கேட்பர், எ-று.
பெரியோர் மூடர் பேசும் பேச்சுகளையும் கேட்பார்கள், ஏனென்றால் தாங்கள் உபேக்ஷை செய்தால் அவர்கள் பலரில் அவமானப்படுவார்களே என்கிற இரக்கத்தால் தங்கள் மனதுக்கு வருத்தமாயிருந்தாலும் கேட்பர் என்பது கருத்து.
எழுத்து சொல்லுக்கும், பொருள் அதன் அறிவுக்கும் ஆகுபெயர். மற்று, எ - அசைகள் ஏ - தேற்றத்தில் வந்ததெனவுமாம்.
156. கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
(இ-ள்.) கரும்பினை - கரும்பை, கடித்து -, கண் தகர நூறி - கணுக்கள் உடையும்படி நெரித்து, இடித்து - (ஆலையில்) துவைத்து, நீர் கொள்ளினும் - சாற்றைக் கொண்டாலும், இன் சுவைத்தே ஆகும் - (அது) இனிய ருசியுள்ளதே ஆம்; குடி பிறந்தார் - நற்குலத்திற் பிறந்தவர், வடு பட வைது இறந்தக் கண்ணும் - (தம்மைப் பிறர்) குற்றந் தாக்கும்படி திட்டிப் போனாலும், தம் வாயில் - தமது வாயினால், சிதைந்து - (தம்மை வைதவர்) கெடும்படி, கூறார் - வசைகளைச் சொல்லமாட்டார், எ-று.
இறந்தக்கண் - ஒருவகை வினையெச்சம்; இற - பகுதி, கண் - விகுதி, தகரம் எழுத்துப்பேறா யிரட்டி மெலிந்தது; நகர தகரங்கள் எழுத்துப்பேறு எனல் நேர் சிதைந்து - சிதைய என்பதின் திரிபு; நிலை திரிந்து எனவும் பொருள் கொள்ளலாம்.
157. கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.
(இ-ள்.) வடு அறு காட்சியார் - குற்றமற்ற அறிவுள்ளவர்கள், கள்ளார் - திருடார்; கள் உண்ணார் - கள்ளைக் குடியார்; கடிவ கடிந்து ஒரீஇ - தள்ளத்தக்கவைகளைத் தள்ளி நீங்கி, பிறரை - அன்னியரை, எள்ளி இகழ்ந்து உரையார் - அவமதித்து நிந்தித்துப் பேசமாட்டார்; தள்ளியும் - தவறியாகிலும், வாயில் பொய் கூறார் - வாயினால் பொய்யைச் சொல்லார்; சாயில் - (வறுமையுற்றுத்) தளர்ந்தாலும், பரிவது இலர் - விசனப்படுந் தன்மை இல்லாதவராவர், எ-று.
கடிந்து ஒரீஇ என்பதையும் எள்ளி இகழ்ந்து என்பதையும் [நன். பொது. சூ. 47] விதியால் ஒருபொருட் பன்மொழியாக அமைத்துக் கொளல் வேண்டும். ஒரீஇ - ஒருவு என்னு முதனிலை இகர விகுதி புணர்ந்து கெட்டு ஈற்றுயிர் மெய்யும் போய் உகரம் இகரமாகி அளபெடுத்ததெனக் கொள்க. இது சொல்லிசை யளபெடை.
158. பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
(இ-ள்.) பிறர் மறையின்கண் - அன்னியருடைய ரகசியச் சொல்லில், செவிடு - ஆய் - செவிடனாய், திறன் அறிந்து - நற்காரியங்களின் தன்மையை யறிந்து, ஏதிலார் இல் கண் - பிறருடைய இல்லாளிடத்து, குருடன் ஆய் - கண்ணில்லாதவனாய், தீய - அயோக்கியமான, புறங்கூற்றின் - (காணாவிடத்துத்) தூஷிப்பதில், மூகை ஆய் - ஊமையாய், நிற்பானேல் - (ஒருவன்) இருப்பானானால், அவற்கு - அப்படிப் பட்டவனுக்கு, யாதும் அறம் கூற வேண்டா - வேறெந்தத் தருமமும் சொல்ல வேண்டுவ தில்லை, எ-று.
புறங்கூற்றின் என்பதற்கு தான் ஒருவனைத் தூஷிப்பதில் எனவும் ஒருவன் தன்னைத் தூஷிப்பதில் எனவும் கருத்துக் கொள்ளலாம். பின்னதாயின் தன்னைத் தூஷிக்குமிடத்து ஒன்றும் பேசாதவனாய் என்பதாம். ஏதிலார் - ஏதில் - அயலாயிருத்தல், அதனை யுடையார் ஏதிலார், வேண்டா என்பது வேண்டும் என்பதின் எதிர்மறை ஆதலின் ஒருவகை வியங்கோள் என்றாகிலும் உறுதிப்பாட்டைக் காட்டும் தொழிற்பெயர் என்றாகிலுங் கொள்க.
159. பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.
(இ-ள்.) பண்பு இலார் - சற்குணமில்லாதவர், தம்முழை - தம்மிடத்து, பல் நாளும் சென்றக்கால் - (ஒருவர்) பலதினங்கள் வந்து கொண்டிருந்தால், என்னானும் வேண்டுப என்று - எதையாகிலும் விரும்புவார்களென்று, இகழ்ப - (அவரை) இகழ்வார்கள்; விழுமியோர் - பெரியோர், என்னானும் வேண்டினும் - (தம்மிடம் வருபவர்) எதையாகிலும் அபேக்ஷித்தாலும், நன்று என்று - நல்லதென்று சொல்லி, காண்தொறும் - காணும்போதெல்லாம், சிறப்பு செய்வர் - (அவருக்குச்) சிறப்பானவைகளைச் செய்வார்கள், எ-று.
கீழ்மக்கள் பலநாளாய்த் தம்மிடம் வந்து கொண்டிருக்கிறவர்களையும் இவர் எதாவது நம்மிடத்திற் பெற விரும்புவா ரென்று வரவொட்டாமற் றள்ளி விடுவார்கள்; மேன்மக்களோ தம்மிடம் வருபவர் எதை அபேக்ஷித்தாலும் அதைக் கொடுக்க வுடன்பட்டுக் கண்ட போதெல்லாம் அவர்களுக்கு நன்மையே செய்து வருவார்கள் என்பது கருத்து.
என் - இடைகுறைந்த எவனென்னுங் குறிப்பு முற்றாலாகிய பெயர். காண்தொறும் - வினைத்தொகைநிலைத் தொடர். தொறு என்பது இடைச்சொல்லாயினும் பெயர்ப்பொருளைத் தருதலால் பெயரெச்சத்திரிபாகிய வினைத்தொகை அதனோடு சேர்ந்தது.
160. உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.
(இ-ள்.) உடையார் இவர் என்று - பொருள் உடையவர் இவர் என்று நினைத்து, ஒரு தலையா பற்றி - உறுதியாப் பற்றிக் கொண்டு, கடை ஆயார் பின் சென்று வாழ்வர் - கீழ் மக்களுடைய பின்னே போய்ப் பிழைப்பர் சிலர்; நல்ல குலம் - நற்குலத்தாரை, தலைப்பட்ட இடத்து - சேர்ந்த விடத்தில் [சேர்ந்தால் என்கிறபடி], உடைய பிலம், (வேண்டும் பொருளை) உடைத்தாயிருக்கிற குகையை, தலைப்பட்டது போலாதே - சேர்ந்ததுபோலிராதா [இருக்கும் என்றபடி] எ-று.
திரவியவான்களென்று நினைத்து அயோக்கியரையும் பின்பற்றி வாழ்கிறார்கள் உலகத்திற் சிலர்; அப்படிப் பட்டவர்க்கு யோக்கியரைச் சேர்தல் திரவியம் நிறைந்த குகையகப்பட்டது போலே சந்தோஷமா யிருக்குமல்லவோ என்பது கருத்து.
தலைப்பட்டவிடத்து என்பதும் ஒருவகை வினையெச்சமெனக் கொள்ளலாம். குலம் - ஆகுபெயர்.
17. பெரியாரைப் பிழையாமை
[அதாவது பெரியோர் திறத்தில் பிழை செய்யாமையாம்.]
161. பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
(இ-ள்.) ஆர்க்கும் அருவி அணி மலை நல் நாட - ஒலிக்கின்ற அருவிகளை அணிந்த மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டையுடையவனே!, பொறுப்பர் என்று எண்ணி - (நாம் செய்யுங் குற்றங்களைப்) பொறுத்துக் கொள்வார் என்று நினைத்து, புரை தீர்ந்தார், மாட்டும் - குற்றமில்லாதவரிடத்தும், [பெரியோரிடத்தும் என்றபடி], வெறுப்பன. வெறுக்கும் படியான காரியங்களை, செய்யாமை வேண்டும் - செய்யாதிருத்தல் அவசியமானது; வெறுத்த பின் - (அவர்கள்) கோபித்த பின்பு, பேர்க்குதல் - (அக்கோபத்தின் பயனை) மாற்றுதல், யார்க்கும் அரிது - எப்படிப்பட்டவர்க்கும் கூடாதது, எ-று.
இழிந்தாரிடத்துப் பிழை செய்வதனால் யாதொரு கேடுமில்லையென்று நினைப்பது போல் பெரியாரிடத்துப் பிழை செய்வதினாலும் அவர்கள் பொறுமையுள்ளா ரானது பற்றி யாதொரு கேடும் வாராதென் றெண்ணிக் கொண்டு அபசாரப் பட வேண்டாம். அவர் பொறுமையுள்ளவராயினும் "சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பெரியோ ரப்பிழை பொறுத்தலுமரிதே" என்கிறபடி பிழையின் கொடுமையால் அவர்களுடைய மனங் கலங்கிய போது அதனால் வருந் தீங்கை நிவர்த்தி செய்ய யாராலு மாகாதென்பது கருத்து "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி, கண்மேயுங் காத்த லரிது."
தீர்ந்தார் மாட்டும் - உம்மை எச்சப்பொருட்டாய் வந்தது; மாடு - ஏழனுருபு. செய்ய வேண்டும் என்பது போற் செய்யாமை வேண்டும் என்பதிலும் வேண்டும் என்பது தேற்றப் பொருட்டாய் வந்த தொழிற்பெயர்; இதனை ஒருவகை வியங்கோளாகக் கொள்ளவுந் தகும். யார்க்கும் - குவ்வுருபு கர்த்தாப் பொருளில் வந்தது.
162. பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
(இ-ள்.) நல்ல நயம் இல் அறிவினவர் - மேன்மையான பயன் இல்லாத புத்தியுள்ளவர், [மூடர்], பொன் கொடுத்தும் - (விசேஷமாக) பொருளைக் கொடுத்தாலும், புணர்தற்கு அரியாரை - சேரக்கூடாத பெரியோர்களை, கொன்னே - சும்மா, தலைக்கூட பெற்றிருந்தும் - சேரத்தக்க நிலையை அடைந்திருந்தாலும், அன்னோ - ஐயோ, பயன் இல் பொழுது ஆ - வீண் காலமாக, கழிப்பாரே - கழிப்பார்களே, எ-று.
அருமையான பெரியோர் வலியத் தம்மிடம் வந்த போது அவர்களைக் கொண்டு நன்மை பெறாமற் காலங்கழிப்பதும் பெரியாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.
கொன்னேமுதலான விடத்து ஏ - அசை. தலைக்கூட என்பது வினையெச்சமாகத் தோன்றினாலும் பொருணோக்கத்தில் தொழிற்பெயராய்ச் செயப்படுபொருளா அமையுமென அறிக. அன்னோ - இரக்க இடைச்சொல். உம்மைகள் - சிறப்பு.
163. அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
(இ-ள்.) அவமதிப்பும் - தாழ்வாக நினைப்பதும், ஆன்ற மதிப்பும் மேலாக நினைப்பதும், இரண்டும் - ஆகிய இரண்டும், மிகைமக்களால் - பெரியோர்களால், மதிக்கல் பால - மதிக்கத் தக்கவை; நயம் உணரா - குணமறியாத, கை அறியா - நல்லொழுக்கமறியாத, மாக்கள் - மனிதர்கள், இழிப்பும் - தாழ்த்துவதையும், எடுத்து ஏத்தும் - தூக்கிப் புகழ்வதையும், வடித்த நூலார் - ஆராய்ந்த நூலையறிந்த பெரியோர், வையார் - (ஒருபொருளாக) வைக்க மாட்டார், எ-று.
"நாயின் மேலேறி வையாளி விட்டாலென்ன வீழ்ந்தாலென்ன" என்கிற பழமொழிப்படி அற்பர் புகழ்ந்தாலும் பழித்தாலுமொன்று மிலலை யென்பதாம்.
அகன்ற என்பது ஆன்ற எனத் திரிந்த தென்பர்; ஆன்றல் - மாட்சிமை எனத் தனியே கொள்வது முண்டு. "உம்மையென்றெனவோ டிந்நான்கெண்ணு மஃதின்றியுமியலும்" என்றமையால் இங்கு உம்மை தொகைபெற்றது [நன். இடை. சூ. 9]. மிகை - மிகுதல் [மேன்மை] அதனையுடைய மக்கள், என உருபும் பயனுந் தொக்கத் தொடர். மக்கள், மாக்கள் - இவை இரண்டுக்கும் ஒருமையில்லை. ஏத்து - முதனிலைத் தொழிற் பெயர். நயமுணரா, கையறியா - பெயரெச்சங்கள் அடுக்கி மாக்களென்னுமொரு முடிபு கொண்டன. [நன். பொது. சூ. 4].
164. விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
(இ-ள்.) விரி நிறம் நாகம் - மிகுந்த காந்தியுள்ள பாம்பு, விடர் உளதேனும் - மலைப்பிளப்பில் இருப்பதானாலும், உருமின் கடுசினம் - இடியின் மிகுந்த உக்கிரமானது, சேண் நின்றும் - வானத்தில் இருக்கவும், உட்கும் - பயப்படும்; பெருமை உடையார் -, செறின் - கோபித்தால், (பிழை செய்தவர்) அருமை உடைய அரண் சேர்ந்தும் - (பிறர்) புகுதற்குக் கூடாத கோட்டையைச் சேர்ந்திருந்தாலும், உய்யார் - பிழையார், எ-று.
இது எடுத்துக்காட்டுவமையணி. நிற்க என்பது நின்று எனத் திரிந்தது. [நன். வினை. சூ. 27.] சாரியை விகற்பமாதலின் உருமின் என்பதில் அத்துச்சாரியை வரவில்லை. விரிநிறம் என்பது அதின் பளபளப்பினால் அதின் சத்தியைக் குறிப்பித்தது. பாம்பு இடியோசைக்கு அஞ்சி இறக்குமென்பர்.
165. எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.
(இ-ள்.) எம்மை அறிந்திலிர் - எங்களை அறியமாட்டீர்கள், எம் போல்வார் இல் - எம்மை ஒத்தவர்கள் இல்லை, என்று - தம்மை தாம் கொள்வது - தங்களைத் தாங்களே மதித்துக் கொள்வது, கோள் அன்று - குணம் ஆகாது; அறன் அறியும் சான்றோர் - தருமத்தை அறிந்த பெரியோர்கள், தம்மை - அரியர் ஆ நோக்கி - அருமையானவராக நினைத்து, பெரியர் ஆ கொள்வது - பெரியவர்கள் என்று ஏற்றுக் கொள்வது, கோள் - குணமாம், எ-று.
பெரியார் - ஆக என்பது ஈறு தொக்கது. அறிந்திலிர் - முன்னிலைப்பன்மை யெதிர்மறை வினைமுற்று, அறி - பகுதி, இல் - எதிர்மறைப்பண்படி, ஈண்டு விகுதி; த் - இடைநிலை, தகரம் இரட்டித்து மெலிந்தது; எல்லாம் ஒரு பகுதியானது, இர் - முன்னிலைப் பன்மை விகுதி. இல் - விகுதி குன்றிய குறிப்புமுற்று.
166. நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
(இ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப - விசாலமான கடலின் குளிர்ச்சியான கரையை யுடையவனே!, சிறியவர் கேண்மை - அற்பருடைய சிநேகமானது, நாள் நிழல் போல - முற்பகலின் நிழலைப் போலே, விளியும் - குறைந்துபோம்; தொல் புகழ் ஆளர் தொடர்பு - பழைமையான கீர்த்தியுள்ளவர்களுடைய சிநேகம், அல்கு நிழல் போல் - பிற்பகலின் நிழலைப் போல், அகன்று அகன்று ஓடும் - மிகவும் வளர்ந்து செல்லும், எ-று, ஏ - அசை.
தொல்புகழாளர் - பெரியோர்; புகழுக்குத் தொன்மையாவது முன்னோர்களது நிலைமையாயிருத்தல்; அல்லது தொன்மை புகழாளர்க்குமாம். விளிவு - குறைவுக்குக் கொள்ளப் பட்டது. அகன்றகன்று - மிகுதியென்னும் பொருணிலையால் வந்த அடுக்கு. [நன். பொது. சூ. 44.]
167. மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.
(இ-ள்.) மன்னா திருவும் - அரசருடைய செல்வத்தையும், மகளிர் எழில் நலமும் - பெண்களுடைய அழகின் நன்மையையும், துன்னியார் - நெருங்கினவர், துய்ப்பர் - அனுபவிப்பார்கள்; தகல் வேண்டா - யோக்கியதை வேண்டுவதில்லை; (எதுபோலெனில்) துன்னி - நெருங்கி, குழை கொண்டு - தளிர்களையுடைத்தாய், தாழ்ந்த - கவிந்திருக்கிற, குளிர் மரம் எல்லாம் - குளிர்ச்சியான மரங்களெல்லாம், தங்கண் சென்றார்க்கு - தங்களிடத்தில் வந்தவர்களுக்கு, ஒருங்கு - ஒருமிக்க, உழை - இடம் ஆம் (அதுபோல்), எ-று.
மகளிர் என்பதை இங்கு வேசியர்க்குக் கொள்ளல் தகுதி; தாழ்ந்தோ ருயர்ந்தோர் என்று தாரதம்மியமின்றி வந்தவர்களை யெல்லாந் தம்மிடஞ் சேர்க்கின்ற அறிவில்லாத மரங்கள் போலவும் வேசிமார் போலவும் அரசர் பெரியாரைச் சிறியாரோடு ஒருமிக்கச் சேர்த்தலும் பெரியாரைப் பிழைத்தல் என்பது கருத்து.
துன்னியார் - துன் - பகுதி, ஆர் - விகுதி, இன் - இடைநிலை ஈறு குறைந்தது, யகரம் - உடம்படுமெய், னகரம் இரட்டியது. தகல் - (தகு + அல்) தொழிற்பெயர் ஒருங்கு - பகுதியே வினையெச்சமானது [நன். வினை. சூ. 32ன் உரையைப் பார்க்க].
168. தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும்.
(இ-ள்.) தெரிய தெரியும் - விளங்க அறியும்படியான, தெரிவு இலார் கண்ணும் - அறிவு இல்லாதவரிடத்திலும், பிரிய - பிரியும் போது, பெரும்படர் நோய் - பெரியதுக்கமாகிய வியாதியை, செய்யும் - (சிநேகமானது) உண்டாக்கும்; (ஆதலால்) பெரிய -, உலவா - வற்றாத, இரு கழி சேர்ப்ப - பெருமையான கழிக்கரை யுடையவனே!, யார் மாட்டும் - எவரிடத்திலும், கலவாமை - சிநேகியாமையானது, கோடி உறும் - (சிநேகத்தினும்) கோடி பங்கு நன்மையாகும், எ-று.
புத்தியீனரிடத்தில் சிநேகித்துப் பிரிந்தாலும் துக்கமுண்டாகுமானால் நல்ல விவேகிகளைச் சிநேகித்துப் பிரிதலில் எவ்வளவு துக்க முண்டாகலாம்? ஆகையால் யாரையும் சிநேகியாமையே நலமென்றபடி. இதனால் பெரியாரைச் சேர்தலி லிருக்கு நன்மையைக் காட்டி அப்படிப்பட்டவ ரிடத்துப் பிழைத்தல் நல்லதன்றெனக் குறிப்பித்ததாம்.
கண்ணும் - உம்மை - இழிவு சிறப்பு. யார்மாட்டும் - முற்றும்மை. பிரிய - நிகழ்கால வினையெச்சம்.
169. கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
(இ-ள்.) கல்லாது போகிய நாளும் - நூல்களைக் கற்காமற் கழிந்த காலமும், பெரியவர்கண் செல்லாது - பெரியவரிடத்திற் போகாமல், வைகிய வைகலும் - சென்ற காலமும், ஒல்வ - இசைந்தவைகளை, கொடாது ஒழிந்த பகலும் - (தக்கவர்க்கு) கொடாமற்போன காலமும், உரைப்பின் - சொல்லப்புகுந்தால், பண்பு உடையார்கண் - சற்குணமுள்ளவரிடத்தில், படா ஆம் - சேராதவைகளாம், எ-று.
இதிலும் பெரியோரிடத்திற் சேரு நன்மையைக் காட்டி அவரிடம் பிழையாமை நன்றெனக் குறிப்பிக்கப்பட்டது.
போகிய - போ - பகுதி, கு - சாரியை, இன் - இடைநிலை, ஈறு போனது, அ - பெயரெச்ச விகுதி. ஒல்வ - வினையாலணையும் பெயர், ஒல் - பகுதி, வ் - இடைநிலை, அ - பலவின்பால் விகுதி. படா - எதிர்மறை வினையாலணையும் பெயர். காலங்களுக்கு விசேஷணமாதலால் ஆமென்கிற அதன் வினையால் முடிந்தது [பொது. சூ. 41]. எதிர்மறை முற்றாகக் கொண்டு, ஆம் - அசை, என்னவுமாம். கொடாஅ, படாஅ, - அளபெடைகள் செய்யுளோசைக்காக வந்தன.
170. பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.
(இ-ள்.) பெரியார் பெருமை - பெரியோர்க்குப் பெருமையாவது, சிறு தகைமை - எளிமையைக் காட்டும் பணிவேயாம்; ஒன்றிற்கு உரியார் - ஒரு பெரிய கல்வி முதலியவற்றிற்குச் சுதந்திர முள்ளவர்களுக்கு, உரிமை - அவ்வுரிமையாலாகி பெருமையாவது, அடக்கம் - (தானே எடுத்துக்காட்டாமல்) அடங்கியிருத்தல்; தெரியுங்கால் - ஆராய்ந்து பார்த்தால், தன் சேர்ந்தார் அல்லல் - தன்னைச் சேர்ந்தவர்களுடைய துன்பத்தை, களைப எனின் - நீக்குவார்களேயானால், செல்வமுடையாரும் செல்வரே - பொருளுள்ளவர்களும் உள்ளவர்களேயாவர், எ-று.
பெரியோர்க்குப் பணிவும், கற்றோர்க்கு அடக்கமும், செல்வர்க்கு ஈகையும் தக்ககுணங்கள் என்பது கருத்து. இதிலும் முற்பாடல்களிற் காட்டிய வழியே கருத்து அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வதிகாரமும் முன்னதிகாரத்தைப் போல மேன் மக்களியல்பைத் தெரிவித்த தென்பது தகுதி.
தகைமை - தகு - பகுதி, ஐ - விகுதி, மை - விகுதிமேல் விகுதி, ஐ - சாரியை என்னவுமாம்; சிறுமையாகிய தகை என விரியும். தற்சேர்ந்தார் என்பது காரணத்தால் வந்த ஒரு பெயராதலால் தன் என்னுமொருமை பிழையன்று. களைப - பலர்பால் முற்று.
18. நல்லினம் சேர்தல்
[அதாவது நல்ல கூட்டத்தைச் சேர்தல்; நற்குண முடையவர்களது சமூகத்தை நேசிப்பது என்பதாம்.]
171. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
(இ-ள்.) அறியா பருவத்து - புத்தியில்லாத வயதில், அடங்காரோடு - அடக்கமில்லாதவரோடு [அயோக்கியரோடு], ஒன்றி - சேர்ந்து, நெறியல்ல - வழியல்லாதவைகளை [பாவ காரியங்களை], செய்து ஒழுகியவும் - செய்து நடந்த அக்கிரமங்களும், நெறி அறிந்த - சன்மார்க்கத்தை அறிந்த, நல் சார்வு - நல்ல இடத்தை [பெரியோரை], சார - சேர்தலாலே, வெயின் முறுக - வெய்யில் விர்த்தியாக, புல் - புல்லை, பனி பற்று - பனி பிடித்திருப்பது, விட்டாங்கு - விடுவது போல, கெடும் - நாசமாகும், எ-று.
நெறியாவது சாஸ்திர ஏற்பாடு ஒழுகியவ்வும் என்பதில் லகர வொற்று விரித்தல் செய்தொழுகிய நெறியல்லவும் எனக் கூட்டவுமாம். உம்மை - இழிவு சிறப்பு, சார - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம், விட்டாங்கு - விட்டால் என்பது விட்டு எனத் திரிந்து ஆங்கு என்னு முவமை இடைச் சொல்லோடு சேர்ந்தது. விட்டது என்பது ஈறுகுறைந்து சேர்ந்தது என்னவுமாம்.
172. அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
(இ-ள்.) எஞ்ஞான்றும் - எப்போதும், அறம் நெறி - தருமத்தின் வழிகளை, அறிமின் - அறியுங்கள்; கூற்றம் அஞ்சுமின் - யமனை அஞ்சுங்கள்; பிறர் - அன்னியர்களுடைய, சுடு சொல் - கடூரமான சொற்களை, பொறுமின் - பொறுத்துக் கொள்ளுங்கள்; வஞ்சம் போற்றுமின் - வஞ்சனையை (உங்களிடஞ்சேராதபடி) பாதுகாவுங்கள்; வினை தீயார் கேண்மை - தீவினை செய்பவருடைய சிநேகத்தை, வெறுமின் - விரும்பாதுவிடுங்கள்; பெரியார் வாய் சொல் - பெரியோர்களுடைய வாயிலுண்டாகுஞ் சொற்களை, பெறுமின் - பெற்றுக் கொள்ளுங்கள், எ-று.
"வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்ற விதியால் அறிமின் முதலிய ஏவற்பன்மை முற்றுக்களை வினையெச்சமாகக் கொண்டு பெறுமின் என்பதோடு முடித்து உரைப்பாருமுளர். வினைதீயர் - வினையில் தீமையுள்ளார். கூற்றம் அஞ்சுமின் என அச்சத்தின் ஏதுவை இரண்டாம் வேற்றுமையாக் கூறல் செய்யுள் வழக்கு.
173. அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
(இ-ள்.) அடைந்தார் பிரிவும் - சேர்ந்தவர்களைப் பிரிவதும், அரும்பிணியும் - அருமையான வியாதியும், கேடும் - மரணமும், உடம்பு கொண்டார்க்கு - தேகத்தைப் பெற்றிருக்கிறவர்களுக்கு, உடங்கு - ஒருமிக்க, உறலால் - வருவதனால், தொடங்கி - ஆதிகாலந் தொட்டு (வருகின்ற), பிறப்பு - இன்னாது என்று - தீயது என்று, உணரும் - அறிந்திருக்கிற, பேர் அறிவினாரை - மிக்க விவேகமுள்ளவர்களை, என் நெஞ்சு - என் மனமானது, உற புணர்க - உறுதியாகச் சேரக்கடவது, எ-று.
பிறப்பில் துன்பங்களைக் கண்டு அதை வெறுத்திருக்கின்ற ஞானிகளைச் சேர்தல் நன்மைக்கு ஏதுவாம் என்பது கருத்து.
உடங்கு என்பது ஒருங்கு என்பது போல் வினைப்பகுதி வினையெச்சப் பொருட்டாய் வந்தது; "வினைமுற்றே" என்கிற சூத்திரத்தின் உரையைக் காண்க. இவ் வினையெச்சங்கள் பொருணோக்கால் வினையுரியாகின்றன. "இயல்பின்" என்கிற [நன். உருபு. சூ. 16] விதியால் அடைந்தார்ப்பிரிவு என வலி மிகுந்தது.
174. இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
(இ-ள்.) நினையுங்கால் - யோசிக்குமளவில், இறப்ப இன்னாது எனினும் - மிகவும் தீயது ஆனாலும், பிறப்பினுள் - சம்சாரத்தில், பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு - நற்குணந்தரித்த மனமுடைய பெரியவர்களோடு, எஞ்ஞான்றும் - எக்காலமும், நண்பு ஆற்றி - சிநேக குணம் பாராட்டி, நடகப் பெறின் - சிநேகிக்கப் பெற்றால், பிறப்பினை - பிறப்பை, யாரும் முனியார் - எவர்களும் வெறுக்க மாட்டார்கள், எ-று.
பல தீமைகட்கு இடமாகிய இப்பிறப்பில் நல்லோரை நேசித்திருப்பதே குணமென்றபடி.
பிறப்பு - சம்சாரத்துக்கு ஆகுபெயர்; சம்சாரமாவது பிறந்து இறக்கும்படியான இயல்பு; தேக சம்பந்தமுமாம். நண்பு - நள் - பகுதி, பு - விகுதி, ளகரம் டகரமாகி மெலிந்தது.
175. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
(இ-ள்.) ஊர் அங்கணம் நீர் - ஊரிலுள்ள சலதாரை நீரானது, உரவு நீர் - சிறப்புப் பொருந்திய நீரை, சேர்ந்தக்கால் - சேர்ந்தால், பேரும் பிறிது ஆகி - வேறுபேரும் உண்டாகி, தீர்த்தம் ஆம் - பரிசுத்தமான ஜலமாம்; (அப்படியே) ஓரும் - அறியத்தக்க, குலம் மாட்சி இல்லாரும் - குலப்பெருமை இல்லாதவர்களும், நலம் மாட்சி - குணப்பெருமையுள்ள, நல்லாரை சார்ந்து - நல்லவர்களைச் சேர்ந்து, குன்று போல் நிற்பர் - மலைபோல் (பெருமை யுடையவராய்) இருப்பார்கள், எ-று.
உரவு - வலி, இங்கே சிறப்புக்காயிற்று. "பேரும் பெரிதாகி" எனப் பாடங்கொண்டு, சிறப்பான ஓர் பேரையடைந்து எனப் பொருள் கொள்வது தகுதி. நலம் - குணத்துக்கு ஆகுபெயர். ஆகி, சார்ந்து என்பவை செயவெனெச் சத்திரிபுகள், செய்தெனெச்சமே காரணப் பொருட்டாய்வரின் பிறவினைக் கருத்தாவைக் கொண்டு முடிவது அனுபவத்திலிருக்கின்றது.
176. ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.
(இ-ள்.) ஒள் கதிர் - அழகான கிரணங்களுள்ள, வாள் மதியம் - பிரகாசமான சந்திரனை, சேர்தலால் -, ஓங்கிய - உயர்ந்த, அம் கண் விசும்பின் - அழகான இடமுள்ள வானத்திலுள்ள, முயலும் - முசலும், தொழப்படும் - கும்பிடப்படுகின்றது; (அதுபோல்) குன்றிய சீர்மையர் ஆயினும் - குறைந்த சிறப்புள்ளவர்களானாலும், குன்று அன்னார் கேண்மை - மலைபோன்ற மேன்மையுள்ளவர்களுடைய சிநேகத்தை, கொளின் - பெற்றுக் கொண்டால், சீர் பெறுவர் - மேன்மை அடைவர், எ-று.
ஒண்கதிர் - ஒள் கதிர் என்பதில் ளகரம், முன் டகரமாகிப் பின்பு ணகரமாக மெலிந்ததெனக் கொள்க.
177. பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; - தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
(இ-ள்.) பாலோடு அளாய நீர் - பாலிற் கலந்த ஜலம், பால் ஆகும் அல்லது - பாலாக எண்ணப்படுமே யல்லாமல், நிறம் தெரிந்து - நிறத்தின் வேற்றுமை அறியப்பட்டு, நீர் ஆய் தோன்றாது - ஜலம் ஆகக் காணப்படாது; தேரின் - ஆராய்ந்து பார்த்தால், நல்ல - , பெரியார் - பெரியவர்களுடைய, பெருமையைச் சார்ந்து - பெருந்தன்மையைச் சார்தலால், சிறியார் சிறுமையும் - அற்பருடைய அற்பத்தனமும், தோன்றாது -, எ-று. ஆம் இரண்டும் - அசை.
அளாவிய என்பது அளாய என மருவியது; அளாவு என்னு முதனிலையில் ஈற்றுயிர்மெய் குறைந்து இறந்த காலங்காட்டும் யகர இடைநிலையும் அகர விகுதியும் சேர்ந்து உண்டானதென்றும் சொல்வார்கள்.
178. கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம்.
(இ-ள்.) கொல்லை - கொல்லையைச் சேர்ந்த, இரு புனத்து - பெரிய வயலிலே, குற்றி அடைந்த புல் - மரக்கட்டையை பற்றி நிற்கிற புல்லானது, உழவர் - உழுகின்றவர்களுடைய, உழுபடைக்கு - கலப்பைக்கு, ஒல்கா ஆகும் - அசையாதவைகளா யிருக்கும்; (அப்படியே) மெல்லியவரே ஆயினும் - பலஹீனர்களா யிருந்தாலும், நல் சார்வு சார்ந்தார் மேல் - நல்ல ஆசிரயத்தைப் பற்றினவர்களிடத்தில், செற்றார் சினம் - பகைவருடைய வலி, செல்லா ஆம் - செல்ல மாட்டாதவைகளாய் விடும்.
கொல்லையாவது பலவயல்கள் சேர்ந்ததொரு நிலம் எனக்கொள்க. குற்றி பெயர்க்கப்படாமையால் புல்லும் பெயர்க்கப்படாதென்பது கருத்து.
ஒல்கா - எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று; ஒல்கு - பகுதி, ஆ - விகுதி, மறைபொருளையும் காட்டும். "ஆவேயெதிர் மறைக் கண்ணதாகும்" என்பது விதி. உழுபடை - வினைத்தொகை நிலைத் தொடராய்க் கலப்பைக்குக் காரணப்பெயர்; குவ்வுருபு கருவிப் பொருளில் வந்தது.
[இதுவரையிலும் நல்லினஞ் சேர்தலினாலாகும் பயன்களைக் காட்டி மற்றிரண்டு பாட்டால் தீயினஞ் சேர்வதனாலாகுங் கேட்டை விளக்குகின்றார்.]
179. நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினம் சேரக் கெடும்.
(இ-ள்.) நெல் - நெல்லானது, நிலம் நலத்தால் - நிலத்தினது வளப்பத்தால், நந்திய போல் - வளர்வது போலே, தத்தம் குலம் நலத்தால் - தாங்கள் தாங்கள் சேர்ந்திருக்கிற கூட்டங்களின் யோக்கியதையால், சான்றோர் ஆகுவர் - (மனிதர்) மேலான வராவர்; கலம் நலத்தை - கப்பலின் பெருமையை, தீ வளி - சுழல்காற்று, சென்று - போய், சிதைத்து ஆங்கு - கெடுத்தாற் (கெடுவது) போல, சான்றாண்மை - (ஒருவருடைய) மேன்மையானது, தீ இனம் சேர - துர்க்குணமுள்ள கூட்டத்தைச் சேர்வதனால், கெடும் - கெட்டுப்போம், எ-று.
நந்திய - ஈறு குறைந்த தொழிற்பெயராக் கொள்க; பெயரெச்சமாக் கொள்ளின் கருதிய துள்ளிட்டது என்கிற குற்றம் வரும். சிதைத்து என்பது சிதைத்தால் என்பதின் திரிபு. ஆங்கு - உவமையிடைச் சொல். தந்தம் [தம்தம்] என்பது வலித்தலால் தத்தம் என்றாயிற்று.
180. மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.
(இ-ள்.) மனத்தான் - மனநிலைமையினால், மறு இலர் எனும் - குற்றம் இல்லாதவர்களானாலும், தாம் சேர்ந்த இனத்தால் - தாங்கள் கூடின தீய கூட்டத்தால், இகழப்படுவார் - நிந்திக்கப்படுவார்கள். (மனிதர்); எறி புனம் - வெட்டியகாடு, தீ பட்டக்கால் - நெருப்புப் பற்றினால், புனத்து - அக்காட்டிலுள்ள, வெறி கமழ் - வாசனை வீசுகின்ற, சந்தனமும் வேங்கையும் - சந்தனமரமும் வேங்கைமரமும், வேம் - வெந்து போம், எ-று. ஏ - அசை.
இயற்கையிற் குற்றமிலராயினும் சேர்க்கைக் குற்றத்தால் கெடுவர் என்பது கருத்து.
மனத்தான் - மனத்தில் எனவு முரைக்கலாம், வேற்றுமை மயக்கம். [பெயர். சூ. 60].
19. பெருமை
[அதாவது, எவ்வழியு மனக்கலக்கமின்றித் தாம் செய்ய வேண்டியவைகளைக் கூடியவளவு செய்யுமுறுதிப் பாட்டானாய வுயர்வு.]
181. ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
(இ-ள்.) ஈதல் இசையாது - (பொருள் இன்மையால்) பிறர்க்கு ஒன்றைக் கொடுப்பது அமையாது; இளமை - யௌவனம், சேண் நீங்குதலால் - தூரமாக நீங்கிப் போதலால், காதலவரும் - (தம்மிடத்து முன்) ஆசை கொண்டிருந்த பெண்டிரும், கருத்து அல்லர் - (இப்போது) மனப்பற்றுடையவர்கள் அல்லர்; (ஆதலால்) காதலித்து - (இல்வாழ்க்கையில்) ஆசை வைத்து, நாம் ஆதும் என்னும் - நாம் வாழ்வோம் என்கிற, அவாவினை கைவிட்டு - ஆசையை விட்டு, போவதே பொருள் - துறந்து போவதே நல்ல காரியமாகும், எ-று. போலும் - அசை;
ஒருவர்க்கு ஒன்று கொடுத்து உபகாரஞ் செய்யக் கூடாமலும் போகங்களை அனுபவிக்கக் கூடாமலும் போன பின்னும் இல்வாழ்க்கையில் ஆசை வைத்துத் தடுமாறுதலை விட்டு ஆத்துமானுபவ சுகத்தைப் பெற மனந் துணிவது பெருமை என்பது கருத்து.
ஆதும் - தன்மைப்பன்மை யெதிர்கால வினைமுற்று; ஆ - பகுதி, தும் - விகுதி, விகுதியே காலங்காட்டும். [வினை. சூ. 13ம், பத. சூ. 18ம் காண்க.]
182. இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
(இ-ள்.) இல் சார்வின் - இல்வாழ்க்கையைச் சார்ந்ததனால், ஏமாந்தேம் - களிப்படைந்தோம், ஈங்கு - இந்த இல் வாழ்க்கையில், அமைந்தேம் - (எல்லாம்) நிறைந்தவர் ஆனோம், என்று எண்ணி -, பொச்சாந்து - (பின்வருவதை) மறந்து, ஒழுகுவர் - நடப்பார்கள், பேதையார் - புத்தியீனர்; அச்சார்வு - (இல்வாழ்க்கையாகிய) அந்த ஆதரவுகள், நின்றன போன்று - நிலையானவைகள் போலிருந்து, நிலையா - நிலைநிற்க மாட்டா, என உணர்ந்தார் - என்றறிந்தவர், என்றும் - எப்போதும், பரிவது இலர் - விசனப்படமாட்டார், எ-று.
பல இடையூறுகளால் இல்வாழ்க்கை நிலைகுலைந்து வருந்தும்படி நேரிடுவதுதான் பின்வருவது; இது இத்தன்மையதென முன்பே உணர்ந்து அதிற் பற்றற்று நிற்குநிலை சுகத்திற்கு ஏதுவாதலால் பெருமை என்பது கருத்து.
ஏமாந்தேம் - ஏமா - பகுதி. பொச்சாந்து - பொச்சா - பகுதி. மனைவி மக்கள் மாளிகை விளைநிலம் முதலியவைதாம் அச்சார்வு என்னப்பட்டன.
183. மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவும் உள.
(இ-ள்.) மயல் இன்றி - மயக்கமில்லாமல், மறுமைக்கு வித்து - மறுமைச் சுகத்திற்குக் காரணமாயுள்ள நற்காரியத்தை, செய்து -, சிறுமைபடாதே - துன்பத்தை யடையாமல், நீர் - நீங்கள், அறிஞர் ஆய் - விவேகமுள்ளவர்களாய், வாழ்மின் - வாழுங்கள்; நின்றுழி நின்றே - இருந்த இடத்தில் இருந்தே, நிறம் - பருவம் [அல்லது குணம்], வேறு ஆம் - மாறிப்போம்; காரணம் இன்றி - காரணமில்லாமலே, பலவும் உள - இன்னும் பலவேறுபாடுகளும் உண்டாம்; [அல்லது குணம் மாறும் படியான காரணமில்லாமலே பலமாறுதல்களும் உண்டாம் என உரைத்துக் கொள்க], எ-று.
நாம் இருக்கிறபடி இருக்கையிலேயே நமக்குத் தெரியாமலே நம்முடைய பருவமுதலானவை மாறிப் போகின்றன. ஆதலால் மறுமைக்குரியவற்றை மயக்கமுறாமுன்னமே செய்து, விவேகிகள் என்று சொல்லும்படி வாழ்ந்து கொண்டு, பருவமுதலிய மாறிப் போன காலத்தில் மனக்குறையின்றி யிருப்பது பெருமை என்பதாம்.
நிறம் ஒளியாதலால் பருவத்துக்கு ஆகுபெயராக் கொள்ளப்பட்டது. காரணமில்லாமல் என்பதற்கு நம்மால் அறியப்பட்ட காரணங்களில்லாமல் என்பது கருத்து. அறிஞராய் நின்றுழி நின்று எனக்கூட்டி "நாம் இன்னதைச் செய்ய வேண்டும் இன்னதைத் தவிர வேண்டும் என்றிருக்கையிலேயே எல்லாம் மாறுகின்றன" எனவும் கருத்துக் கொள்ளலாம். நின்ற உழி என்பது நின்றுழி என விகாரப்பட்டது, உழி - இடம்.
இம் மூன்று பாட்டினாலும் இல்வாழ்க்கைச் சிதைவினால் மனங்கலங்காது நிற்றலாகிய பெருமை கூறப்பட்டது. இனிச் செய்கடன்களைப் பற்றிய வுயர்வு கூறப்பட்டது.
184. உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது.
(இ-ள்.) உறைப்பு அரு காலத்தும் - மழை பெய்தல் அருமையாகிய காலத்திலும், ஊற்று நீர் கேணி - ஊற்றினால் நீரையுடைய குளம், இறைத்து உணினும் - இறைத்துக் குடித்தாலும், ஊர் ஆற்றும் - ஊரைக் காப்பாற்றும், என்பர் -, கொடை கடன் - கொடுத்தலாகிய கடமை, சாயக்கண்ணும் - தளர்ந்த போதும், பெரியார் போல் - பெரியோர்களைப் போல, மற்றையார் - சிறியவர், ஆயக்கண்ணும் - (செல்வம்) பெருகி வருங்காலத்திலும், அரிது - (பிறர்க்கு உபகரித்தல்) இல்லையாம், எ-று.
ஒரு குளம் மழையில்லாத போதும் ஊற்று நீரால் பலரைக் காப்பாற்றுவது போல் பெருமையுடையோர் கொடுக்கும் வளம் தங்களுக்கில்லாத போதும் யாதோ ஒருவகையால் பிறர்க்கு உதவி செய்வர், சிறியாரோ செல்வ மிகுதியிலும் அப்படிச் செய்யார் என்பது கருத்து.
அருங்காலத்து என்பதில் ஙகரம் இனமிகல். கொடைக் கடனும் என்பதில் உம்மை அசையெனக் கொள்வதே தகுதி. ஆயக்கண், காயக் கண் - வினையெச்சங்கள்; அளபெடைகள் பாட்டினோசையும் இன்னோசையு நிறைக்க வந்தன.
185. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை.
(இ-ள்.) உறு புனல் தந்து - (செழித்த காலத்தில்) மிகுந்த நீரைக் கொடுத்து, உலகு ஊட்டி - உலகத்தாரை உண்ணச் செய்து, அறும் இடத்தும் - (நீர்) அற்ற காலத்தினும், கல் ஊற்றுழி தோண்டின ஊற்றிலே, ஊறும் - (நீர்) ஊறப்பெற்ற, ஆறே போல் - நதியைப் போல், செல்வம் பலர்க்கு ஆற்றி - (உள்ள போது) தஞ்செல்வத்தைப் பலபெயர்க்குங் கொடுத்து, கெட்டு உலந்தக்கண்ணும் - (அச்செல்வம்) கெட்டழிந்த போதும், சிலர்க்கு ஆற்றி - சிலர்க்காயினுங் கொடுத்து, செயல் பாலவை - செய்யும்படியானவைகளை, செய்வர் - (பெரியோர்) செய்வார்கள், எ-று.
கல் - வினைத்தொகை. செயல்பாலவை - செயலுக்குத்தக்க பான்மையுடையவை; பான்மை - குணம் அல்லது இயல்பு.
186. பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
(இ-ள்.) பெருவரை நாட - பெரியமலைகளுள்ள நாட்டின் அரசனே!, பெரியார்கண் - பெரியவர்களிடத்தில், தீமை - குற்றமானது, கரு நரைமேல் - சிறந்த வெள்ளை ரிஷபத்தின் மேல், சூடே போல் - சூடிய சூடு போலே, தோன்றும் - விளங்கிக் காணும், கரு நரையை கொன்றன்ன - சிறந்த வெள்ளை ரிஷபத்தைக் கொன்றாற் போன்ற, இன்னா செயினும் - தீச்செயல்களைச் செய்தாலும், சிறியார் மேல் - சிறியோரிடத்து, ஒன்றானும் - ஒரு குற்றமாயினும், தோன்றா கெடும் - விளங்கிக் காணாமல் அழிந்து விடும், எ-று.
பெரியோர் ஒரு குற்றஞ் செய்தால் அது நன்றாய் விளங்கித் தோன்றும். சிறியோர் எத்தனை செய்தாலும் ஒன்றாவது விளங்கித் தோன்றாததுமன்றிச் செய்ததாகவே காணப்படாமற் போம் என்றதனால் பெருமையுடையோர் சிறிதுங் குற்றஞ் செய்யாது தம்மைக் காக்க வேண்டும் என்பது கருத்து.
ரிஷபங்களில் வெள்ளை ரிஷபம் மிகச் சிறந்ததென்பர், ஆகையாலதைக் கொல்வது அதிக பாவமான செய்கை. தோன்றா கெடும் என்னுமிடத்து ஒற்றுமிகுவதே தகுதி. ஒன்றானும் - ஆன், ஏன் என்பவை ஐயம் அல்லது விகற்பத்தைக் காட்டு மிடைச் சொல், உம் - இழிவு சிறப்பு.
187. இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
(இ-ள்.) சிறுமை இசைந்த - அற்பத்தன்மை பொருந்திய, இயல்பு இலாதார்கண் - குணமில்லாதவர்களிடத்தில், பசைந்த துணையும் - சிநேகித்த அளவும், பரிவு ஆம் - துன்பமே ஆம்; அசைந்த - தளர்ந்த [நல்வழியிற் சேராத], நகையேயும் - பரிகாசத்தையும், வேண்டாத - விரும்பாத, நல் அறிவினார்கண் - நல்ல விவேகிகளிடத்து, பகையேயும் - விரோதமும், பாடு பெறும் - பெருமையை அடையும், எ-று.
அயோக்கியரிடத்தில் நேசங் கொள்ளக் கொள்ளத் துன்பமே வரும், ஆதலால் அதனினும் யோக்கியரிடத்துப் பகை நல்லது; ஏனெனில் இப்பகை யாதொரு துன்பமுஞ் செய்யாதென்பது கருத்து.
நகை - பரிகாசத்துக்கு ஆகுபெயர். பரிகாசத்திலுந்தகாததைக் கொள்ளாமை பெரியோ ரியல்பாதலின் அங்ஙன முரைக்கப்பட்டது. அசைந்த - தகாதவைகளை, நகையேயும் - மகிழ்ச்சியிலும், என உரைப்பாருமுண்டு.
188. மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; - எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
(இ-ள்.) மெல் இயல் - மென்மையான குணமுள்ள, நல்லாருள் - பெண்டிர்களிடத்தில், மென்மை - மெதுவாந்தன்மைக்கும், ஒன்னாருள் - சத்துருக்களிடத்து, அது இறந்து - அதை விட்டு, கூற்று உட்கும் - யமன் பயப்படும்படியான, உட்கு உடைமை - பயப்படுத்துந் தன்மைக்கும், எல்லாம் - எல்லாவிடத்திலும், சலவருள் - வஞ்சகம் பேசுவோரிடத்து, சால - மிகவும், சலமே - வஞ்சம் பேசுவதற்கும், நலவருள் - நற்குண முடையவரிடத்து, நன்மை - நலமா நடப்பதற்கும், வரம்பு ஆய்விடல் - எல்லையாயிருக்க வேண்டும், எ-று.
அயோக்கியரிடத்து அயோக்கியமாயும் யோக்கியரிடத்து யோக்கியமாயு நடப்பது பெருமை என்பது கருத்து.
வேண்டுக என்றும் செலுத்துக என்றும் வினை வருவித்துத் தனித் தனி வாக்கியமா முடிப்பாருமுளர். வரம்பாய் - எல்லையாநின்று, விடல் - செலுத்த வேண்டும் எனவு முரைக்கலாம். சலம் உடையோர்சலவர், நலம் உடையோர் நலவர். 'மெல்லிய நல்லாருண் மேன்மை எனவும் பாடம். விடல் - வியங்கோள் வினைமுற்று. [நன். வினை. சூ. 19ன் உரையைக் காண்க].
189. கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
(இ-ள்.) ஒருவன் -, கடுக்கி - (முகத்தைக்) கடுமையாக்கி, கடுங் குறளை பேசி - மிகுந்த கொடுஞ் சொற்களைப் பேசி, மயக்கி விடினும் - மயங்கச் செய்தாலும், மனப்பிரிப்பு ஒன்று இன்றி - மனம் வேறுபடுதல் கிஞ்சித்து மில்லாமல், விளக்கினுள் - தீபத்தில், ஒள் சுடரே போன்று - பிரகாசமான சுவாலையை ஒத்து, துளக்கம் இலாதவர் - அசைவு இல்லாதவர், தூய மனத்தார் - சுத்தமான மனமுள்ளவர், எ-று.
ஒன்று என்பது இங்கே அற்பம் என்பதைக் காட்டுகின்றது.
190. முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
(இ-ள்.) முன் துத்தும் - முந்தி உண்ணும்படியான, துத்தினை - உணவை, நாளும் - தினந்தோறும், அறம் செய்து - (பிறர்க்குக் கொடுத்தலாகிய) தருமமாச் செய்துவிட்டு, பின் துத்து - பின் உண்ணும்படியான (உணவை), துத்துவர் சான்றவர் - புசிப்பர் பெரியோர் அ துத்து - அப்படிச் செய்யு முணவு. முக்குற்றம் நீக்கி - காமம் வெகுளி மயக்கம் என்கிற மூன்று குற்றங்களையும் போக்கி, முடியும் அளவும் - (அவர்) முடியுங் காலம் வரையும், துக்கத்துள் நீக்கிவிடும் - துக்கத்தினின்றும் (அவர்களை) பிரித்துவிடும், எ-று.
முதலில் உண்ணும்படி கொண்ட சோற்றைப் பரதேசிகட்குக் கொடுத்துப் பிற்பட நின்றதை உண்டு வாழுமவர்க்குச் சாமளவும் துக்கமில்லா திருக்கும்படியான நிலையைத் தரும்; புண்ணிய முண்டா மென்பதாம்.
துத்தும் - து - பகுதி, உம் - பெயரெச்ச விகுதி, து - சாரியை, தகரமும் உகரக்கேடும் சந்தி. துத்து - வினையாலணையும் பெயர், உண்ணத்தக்கதென்பது பொருள், து - பகுதி, து - ஒன்றன்பால் விகுதி, இடைநிலையின்றி வந்தது. துக்கத்துள் - எ-ம் வேற்றுமையுருபு 5ம் வேற்றுமையில் வந்தது.
20. தாளாண்மை
[அதாவது முயற்சியை ஆளுந்தன்மை.]
191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு?
(இ-ள்.) கோள் - (நீரின்) கொள்கையை, ஆற்ற - பூர்ணமாக, கொள்ளா - கொள்ள மாட்டாத, குளத்தின் கீழ் - ஏரியின் கீழுள்ள பைங்கூழ் போல் - பயிரைப் போலே, கேள் ஈவது உண்டு - பந்துக்கள் கொடுப்பதைப் புசித்துக் கொண்டு, கிளைகள் - (கொடுப்பவர்க்கு) உறவின் முறையார், துஞ்சுவ - சாவர்; வாள் ஆடு - வாளின் மேல் ஆடுகின்ற, கூத்தியர் - கூத்தாடும் பெண்களுடைய, கண் போல் - கண்ணைப் போல், தடுமாறும் - (அவ்வாட்டத்தின் மேல் கவனமாய்) புடைபெயர்ந்து நிற்கிற, தாள் ஆளர்க்கு - முயற்சியைக் கையாள்பவர்க்கு, தவறு உண்டோ - காரியம் கைகூடாமற் போவது உண்டாகுமோ [உண்டாகாது], எ-று.
மிகுந்த நீரைக் கொள்ளமாட்டாத ஏரியின் கீழ்ப் பயிர் அவ்வேரி செழித்திருக்கு மளவும் செழித்திருந்து அது வரண்டால் தானும் சாவது போல், யாதொரு முயற்சியுஞ் செய்யாமல் உறவினர் கொடுக்கத் தின்று கொண்டு காலங் கழிக்குஞ் சோம்பர் அவர் செல்வம் வரளும் போது சாவர். கத்திமேல் ஆடுகிறவள் அவ்வாட்டம் தவறாமலும் அபாயம் வராமலும் ஜாக்கிருதையாய்க் கண்ணை அதன் மேலேயே செலுத்துவது போல் காரியத்தில் ஜாக்கிருதையாய் முயற்சி செய்கிறவர்களுக்குக் காரியம் தவறிப் போக மாட்டாது என்பது கருத்து.
துஞ்சுக எனவும் பாடமுண்டு. தடு - தம்பித்திருத்தல். அது மாறுதல் தடுமாற்றம். ஆற்ற - வினையெச்சம், ஆற்று - பகுதி. பசுமையான கூழ் பைங்கூழ்; அடி அகரம் ஐ ஆய், மற்றவை கெட்டன. கிளைகளோ - ஓ - இரக்கதின்கண் வந்தது.
192. ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
(இ-ள்.) ஆடு கோடு ஆகி - ஆடுகின்ற கொம்பு ஆகி, அதரிடை - வழியில், நின்றதும் - நின்ற செடியும், காழ் கொண்ட கண்ணே - வயிரங் கொண்ட போதே, களிறு அணைக்கும் கந்து ஆகும் - யானையைக் கட்டும்படியான தறியாகும்; ஒருவன் -, தான் தன்னை -, தாழ்வு இன்றி செயின் - தாழ்ச்சியில்லா திருக்கும்படி (முயற்சி) செய்தால், வாழ்தலும் - (அவனுடைய) வாழ்வும், அன்ன தகைத்தே - அப்படிப்பட்ட தன்மையுடையதே ஆகும், எ-று.
அளபெடை இன்னிசைக்கு வந்தது. ஏகாரம் இரண்டும் தேற்றம்.
193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
(இ-ள்.) உறு புலி - பெரிய புலி - ஊன் இரை இன்றி - மாமிசமாகிய உணவு இல்லாமல், ஒருநாள் -, சிறு தேரை - சிறிய தவளையை, பற்றியும் தின்னும் - பிடித்தும் புசிக்கும்; (ஆனது பற்றி) அறிவினால் -, கால் தொழில் என்று - அற்பச் செய்கையென்று, கருதற்க - நினைக்க வேண்டாம்; கையினால் - முயற்சியால், மேல் தொழிலும் - மேலான செய்கையும், ஆங்கே மிகும் - அப்படியே மேம்படும், எ-று.
புலியும் ஒரு சமயத்தில் தேரையைத் தின்னும்படி நேரிடும். ஆதலால் நாமும் சமயத்துக்கு ஏற்றபடி ஒரு அற்ப காரியஞ் செய்ய வந்தால் அதை அற்பம் என்று நினையாமல் முயன்றால் மேலான காரியம் அப்படியே கைகூடு மென்பதாம்.
பற்றியும் என்கிற உம்மை எச்சப்பொருளோடு இழிவு சிறப்புமாம்; பற்றித் தின்பது முண்டு என்றபடி.
194. இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.
(இ-ள்.) கண்டல் - முள்ளிச் செடியை [அல்லது தாழஞ் செடிகளை], திரை - அலைகள், அலைக்கும் - அலையச் செய்கின்ற, கானல் - உப்பளமுள்ள, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கடற்றுறையுடைய பாண்டியனே!, இசையாது எனினும் - கூடாமற்போனாலும், ஓர் ஆற்றான் இயற்றி - ஒரு வழியினால் செய்து, அசையாது நிற்பது - மனம் சலியாமலிருப்பது, ஆண்மை ஆம் - ஆண்தன்மையாம்; இசையுங்கால் - கூடினால், பெண்டிரும் வாழாரோ - பெண்பிள்ளைகளும் மேன்மை அடைய மாட்டார்களா?, எ-று. மற்று - அசை.
சுலபமாய் ஒரு காரியம் கைகூடினால் பெண்பிள்ளைகளும் அதைச் செய்து மேன்மை பெறலாம். இசையாத காரியத்தை எப்படியாகிலும் செய்து அந்த வருத்தத்துக்காக மனஞ் சலியாமலிருப்பதுதான் ஆண்குணம் என்பது கருத்து.
கானல் - கடற்கரைச் சோலையுமாம். அம் - சாரியை, அழகைக் குறிக்கு முரிச் சொல்லுமாம்.
195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
(இ-ள்.) நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் -, (சொல்வது) சொல் அளவு அல்லால் - சொல்மாத்திரையா யிருக்கின்ற தல்லாமல், பொருள் இல்லை - ஒரு பொருளையும் உடைத்தாயிருக்கவில்லை; தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, ஒள் பொருள் ஒன்றோ - சுத்தமான பொருளும், தவம் - விரதமும், கல்வி - நூலறிவும்; ஆள் வினை - முயற்சியும், என்ற இவற்றால் - என்று சொல்லப்படுகிற இக்குணங்களால், குலம் ஆகும் - நற்குலமென்பது உண்டாகும், எ-று.
இயற்கையாய் நற்குலமென்றும் தீக்குலமென்றும் மில்லை; நற்குண நற்செய்கைகளால் நல்ல குலமென்பதும் அவையின்மையால் தீயகுல மென்பதுமாம் என்றதாயிற்று.
ஒன்றோ என்பது எண்ணிடைச் சொல், அல்லது அது ஒன்றோ, பின் சொல்லப்படும் பிறவும் என வுரைக்கினு மமையும்.
196. ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.
(இ-ள்.) ஆற்றும் துணையும் - (தாம் ஒரு காரியத்தை) செய்து முடிக்குமளவும், அறிவினை உள் அடக்கி - (தமது) அறிவின் திறத்தை வெளிப்படாமல் வைத்து, ஊக்கம் உரையார் - (தமது) மனவலியை (பிறருக்கு) சொல்லமாட்டார், உணர்வு உடையார் - விவேகமுள்ளவர், ஊக்கம் - (பிறர்) மனவலியை, உறுப்பினால் - அவயவங்களி னிலைமையினால், ஆராயும் ஒண்மை உடையார் - ஆராய்ந்து அறியும்படியான புத்தியுள்ளவர்களது, குறிப்பின் கீழ் - அறிவின் நுட்பத்தில், பட்டது உலகு - இருக்கின்றது உலகு, எ-று.
புத்திமான்கள் எடுத்த காரிய முடியுமளவும் முயற்சி செலுத்தும்படியான தமது மனோபலத்தைப் பிறருக்கு வெளியிடார். பிறருடைய மனோபலத்தையோ அவருறுப்புகளிருக்குந் தன்மையாலேயே அறிந்து கொள்ளுவர். ஆதலால் உலக்மெல்லாம் அப்படிப்பட்டவருடைய குறிப்பிலடங்கி யிருக்கிறதென்பது கருத்து.
ஒண்மை - விளக்கம், புத்திக்கு ஆகு பெயர். ஊக்கமுரையாரும் உணர்வுடையாரும் ஒண்மையுடையாரு மானவர்களுடைய என ஒரே வாக்கியமாகவு முரைக்கலாம். குறிப்பின் கீழ் - கீழ் ஏழனுருபு.
197. சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
(இ-ள்.) சிதலை தினப்பட்ட - கறையானாலே தின்னப் பட்ட, ஆல மரத்தை -, மதலை ஆய் - தாங்குந் தூணாய், அதன் வீழ் - அந்த ஆலின் வீழ், ஊன்றி ஆங்கு - தாங்கினாற் போல, தந்தைகண் குதலைமை தோன்றின் - பிதாவினிடத்தில் தளர்ச்சி உண்டானால், தான் பெற்ற புதல்வன் - அவன் பெற்ற மகன், மறைப்ப - மறைப்பதனால், கெடும் - போய்விடும், எ-று.
செல்லெரித்து வீழ்ந்து போகத்தக்க ஆலமரத்தை அதன் வீழ் தாங்கிக் கொண்டது போல் பிதா செய்யுங் காரியத்துக்கு நேரிடும் தளர்ச்சியை மகன் முயற்சியால் போக்க வேண்டுமென்றபடி.
ஆல் மரம் - இடையில் அம் சாரியை வந்தது. மதலை - மகனுக்கும் தூணுக்கும் சிலேடை ஊன்றினால் என்பது ஊன்றி எனத் திரிந்தது.
198. ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்.
(இ-ள்.) யானை வரி முகம் - யானையினது புள்ளியுள்ள முகத்தை, புண் படுக்கும் - புண்படச் செய்யும்படியான, வள் உகிர் - கூர்மையான நகங்களும், நோன் தாள் - வலிமையுள்ள பாதங்களும் (உள்ள), அரிமா - சிங்கத்தைப் போன்ற, மதுகையவர் - வீரமுள்ளவர்கள், ஈனம் ஆய் - தாழ்ச்சியுண்டாகி, இல் இருந்து - வீட்டிலிருந்து, இன்றி - ஒரு பொருளுமில்லாமல், விளியினும் - சாம்படி நேரிட்டாலும், மானம் தலைவருவ - குற்றம் தம்மிடத்து வரும்படியான காரியங்களை, செய்பவோ - செய்வார்களோ [செய்யார்கள்], எ-று.
நல்ல சாமர்த்திய முள்ளவர்கள் ஒரு கால் தங்கள் முயற்சி இடையூறுற்றுக் காரிய முடியாமல் சாம்படி நேர்ந்தாலும் பொறுத்திருந்து அம்முயற்சியை மறுபடியும் கைகூடப் பார்ப்பார்களேயன்றித் தாழ்வான காரியங்களைச் செய்ய மாட்டார்கள் என்பது கருத்து.
செய்ப - பலர்பால் வினைமுற்று, எதிர்காலம்; [வினை. சூ. 8, பத. சூ. 18] ஓகாரம் - எதிர்மறை.
199. தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
(இ-ள்.) தீம் கரும்பு ஈன்ற - மதுரமான கரும்பு பெற்ற, திரள் கால் - திரண்ட தாளையுடைய, உளை - குதிரை முதலியவற்றின் பிடர் மயிர்போல் (கற்றையாகிய), அலரி - பூவானது, தேம் கமழ் நாற்றம் - இனிமையாய்ப் பரிமளிக்கும் சுகந்தத்தை, இகழ்ந்தது ஆங்கு - இகழ்ந்ததுபோல், ஓங்கும் உயர் குடியுள் - பேர் பெற்ற மேலான குலத்தில், பிறப்பின் - பிறந்ததனால், பேர் பொறிக்கும் - பேர் எழுதும் படியான, பேர் ஆண்மை - மிகுந்த சாமர்த்தியம் [அதாவது முயற்சி], இல்லாக் கடை - இல்லாமற் போனால், என ஆம் - என்ன (சிறப்பு) உண்டாம், எ-று.
கரும்பிற் பிறந்தும் அதன் நுனியிலுள்ள பூங்கொழுந்துக்குச் சிறப்பில்லை போல மேற்குலத்திற் பிறந்தாலும் முயற்சியில்லையாயின் சிறப்பில்லை என்பதாம்.
மெதுவாய்ச் செறிந்து குஞ்சம் போலிருக்குந் தன்மையால் உளை உவமானமாயிற்று. அலரி - அலர் - பகுதி, இ - கர்த்தாவைக் காட்டும் விகுதி. பிறப்பின் - தொழிற்பெயர், ஐந்தனுருபு, ஏதுப்பொருள்.
200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
(இ-ள்.) பெரு - பெரிய, முத்தரையர் - முத்தரையரென்பவர், பெரிது உவந்து - மிகவும் சந்தோஷித்து, ஈயும் - கொடுக்கிற, கருனை சோறு - பொரிக்கறியோடு கூடிய சோற்றை, கயவர் - மூடர் [யாதொரு முயற்சியுஞ் செய்யுந் திறனில்லாதவர்], ஆர்வர் - உண்பார்கள்; கருனையை பேரும் அறியார் - பொரிக்கறியின் பேரையும் அறியாதவருடைய, நனி விரும்பு தாளாண்மை - மிகவும் விரும்பத்தக்க முயற்சியாலுண்டாகிற, நீரும் -, அமிழ்து ஆய்விடும் - (அவர்க்கு) அமிர்தம் போலாகும், எ-று.
முத்தரையர் என்பவர் ஒருவர் பூர்வத்தில் பலருக்கும் நல்ல சோறிட்டுக் கொண்டிருந்தார் போலும், யாதொரு முயற்சியும் செய்ய மாட்டாத சோம்பேறிகள் அதனையுண்டு மகிழ்ந்தார்கள். அது தகுதியன்று. உயர்ந்த ஊணின் பேரையும் அறியாத சிலர் தமது முயற்சியால் கூழ்நீரைக் கொண்டாலும் அதுவே தகுதி. அவர்களுக்குத் திருத்தியையும் பெருமையையும் தருவதனால் அமிருதத்தோடு ஒப்பிடப்பட்டது.
பெருமுத்தரையர் - பேரு முத்து அரையர் - பெரிய முத்துக்களையுடைய பாண்டியரசர்கள் எனவும் உரைக்கலாம்; அந்நாட்டிலே முத்து மிகுதியுமுண்டாவது பிரசித்தம். கயவர் - கயம் - பகுதி, உரிச்சொல், அர் - விகுதி. கருனை - வேற்றுமைமயக்கம் அல்லது கருனையைப் பேரினாலுமறியாதவர் எனவுங் கொள்ளலாம். தாளாண்மை - மூன்றனுருபு தொக்கது.
இவ்வளவால் முன் கூறிய பெருமைக்கும் மேன்மைக்கும் தாளாண்மை முக்கிய காரணமென அதன் சொரூபமும் பயனும் அஃதில்லாமையா லிழிவும் விளக்கப்பட்டன.
21. சுற்றம் தழால்
[அதாவது சுற்றத்தாரைத் தழுவிக் கொண்டிருத்தல், அதனால் மிகுந்த பயனுண்மையின் அது பெருமையுடையோர் கடனெனக் கூறப்பட்டது.]
201. வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
(இ-ள்.) வயாவும் - கர்ப்பந் தரித்திருப்பதினா லுண்டான நோவையும், வருத்தமும் - (அதுபற்றி வரும் பல) துன்பங்களையும், ஈன்றக்கால் நோவும் - கருவுயிர்க்குங்கால் உண்டாகும் நோவையும், கவான் மகன் கண்டு - தொடை மேல் மகனைக் கண்டு, தாய் -, மறந்து ஆங்கு - மறந்து போனாற் போல், அசா - தளர்ச்சியால், தான் உற்ற வருத்தம் - தான் அடைந்த துன்பம், உசா - (க்ஷேம) விசாரணை செய்யுந் தன்மையுள்ள, தன் கேளிரைக் காண - தன் சுற்றத்தாரைப் பார்க்கையில், கெடும் - நீங்கும், எ-று.
ஈன்றக்கால் என்கிற வினையெச்சம் நிகழ்காலத்திற்குக் கொள்ளப்பட்டது. அசா - முதனிலைத் தொழிற்பெயர். அளபெடைகள் பாட்டினோசை நிறைக்க வந்தன.
202. அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
(இ-ள்.) அழல் மண்டு போழ்தின் - வெப்பம் நெருங்கின காலத்தில் [கோடை காலத்தில்], அடைந்தவர்கட்கு எல்லாம் - (தன்னிடம்) சேர்ந்தவர்களுக்கெல்லாம், நிழல் மரம் போல் - நிழலைத் தருகிற மரத்தைப் போலே, நேர் ஒப்ப - ஒருசமமாக, தாங்கி காத்து, பழு மரம் போல் - பழுத்த மரத்தைப் போலே, பல்லார் பயன் துய்ப்ப - பலரும் பிரயோசனம் அனுபவிக்கும்படி, தான் வருந்தி வாழ்வதே - தான் வருத்தப்பட்டுக் கொண்டாயினும் சீவித்திருப்பதே, நல் ஆண்மகற்கு - நற்குணமுள்ள ஆண்பிள்ளைகளுக்கு, கடன் முறைமையாகும், எ-று.
போழ்து - பொழுதின் விகாரம், வருந்தி என்பதோடு இழிவு சிறப்பும்மை வருவிக்கப்பட்டது. ஏகாரம் - தேற்றம்.
203. அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார்பெரியோர்; - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
(இ-ள்.) அடுக்கல் மலை நாட - அடுக்கடுக்கான மலைகள் பொருந்தின நாட்டை யுடையவனே!, பெரியோர் -, தற்சேர்ந்தவரை - தம்மைச் சேர்ந்தவர்களை, எடுக்கலம் - தாங்க மாட்டோம், என்னார் - என்று சொல்லமாட்டார்; வன் காய் பல பல - வன்மையான அநேகங் காய்கள், அடுத்து அடுத்து காய்ப்பினும் - சேர்ந்து சேர்ந்து அல்லது கிட்டக் கிட்டக் காய்த்தாலும், (ஒரு மரத்தில்) தன் காய் பொறுக்கலா கொம்பு - தன் காய்களைப் பொறுக்க மாட்டாத கிளை, இல்லை - இல்லையே, எ-று.
எத்தனை கனமான காய்கள் காய்த்தாலும் மரத்துக்கிளை பொறுப்பது போல தம்மை யடுத்தவரைப் பெரியோர் காப்பர் என்றபடி.
எடுக்கலம் - தன்மைப் பன்மை யெதிர்மறை வினைமுற்று, எடு - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, அம் - தன்மைப் பன்மை விகுதி. பொறுக்கலா என்னும் பெயரெச்சத்தையும் இவ்வாறே பகுத்துக்கொள்க. தற்சேர்ந்தவர் என்பதை ஒரு சொல்லாக் கொள்ள வேண்டும்.
204. உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
(இ-ள்.) உலகு அறிய - உலகத்தார் அறியும்படி, தீர கலப்பினும் - திடமாகச் சேர்ந்தாலும், சிறு இனத்தார் கேண்மை - அற்பருடைய உறவு, நில்லா - நிலைபெறாமல், சில பகல் ஆம் - சொற்பகால விருப்பதேயாம்; ஒற்கம் இலாளர் தொடர்பு - குணக்குறைவு இல்லாதவருடைய உறவு, நிலை திரியா நிற்கும் - தமது நிலையினின்று மாறாமலிருக்கின்ற, பெரியோர் -, நெறி அடைய - நன்னெறி [மோக்ஷம்] அடையும்படி, நின்ற அனைத்து - யோக நிலையிலே நின்றாற் போலாம். [தவறிப் போகாமல் நீடித்து நின்று பயன்படுமென்பது கருத்து.] எ-று. ஆல் - அசை.
205. இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
(இ-ள்.) இன்னர் - இவர், இனையர் - இப்படிப்பட்டவர், எமர் - எம்மவர் [உறவினர்], பிறர் - உறவில்லாதவர், என்னும் சொல் - என்று சொல்லுகிற பேச்சு, என்னும் - ஏதாகிலும், இலர் ஆம் - இல்லாதவராகிய, இயல்பினால் - தன்மையால், துன்னி - சேர்ந்து, தொலை மக்கள் - தளர்ந்த மனிதருடைய, துன்பம் தீர்ப்பார் - சங்கடத்தை நீக்குவார்கள், யார் மாட்டும் - எவரிடத்தும், தலை மக்கள் ஆகல் பாலார் - மேன்மக்களாகும் தன்மையுடையவர்கள், எ-று.
எங்கும் மேன்மக்களென்று சொல்லத்தக்கவர் நன்மை தீமைகளையும் உறவு உறவின்மைகளையும் நாடாமலே சேர்ந்து துன்புற்றவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பர் என்பது கருத்து.
ஆகற்பாலார் - எழுவாய்; தீர்ப்பாரே - பயனிலை ஏகாரம் - தேற்றம். துன்பம் தீர்ப்பார் - எழுவாய், தலைமக்களாகற் பாலார் - பயனிலை என்னவுமாம்; அப்போது ஏகாரம் பிரிநிலை தொலை மக்கள் - தொலை - வினைத்தொகை, செல்வம் தொலைந்த மக்கள் என்பதாம்.
இன்னர் - இன் - இடைச்சொல், பகுதி, அர் - விகுதி. இளையரில் ஐ - சாரியை, பிறர் - ரகரவொற்று விகுதி. என் என்பது இடைக் குறையான எவனென்னும் குறிப்பு முற்றாலாகிய பெயர்.
206. பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானும் இனிது.
(இ-ள்.) பொன் கலத்தில் பெய்த - பொற்பாத்திரத்திலே இட்ட, புலி உகிர் வான் புழுக்கல் - புலி நகம் போலே வெண்மையான சோற்றை, அக்காரம் பாலோடு - சக்கரை பால்களோடு, அமரார் கைத்து - அன்பில்லாருடைய கையிலிருந்து, உண்டலின் - உண்பதைப் பார்க்கிலும், உப்பு இலி - உப்பு இல்லாத, புற்கை - புல்லரிசிக் கூழை, உயிர்போல் கிளைஞர் மாட்டு - உயிரையொத்த பந்துக்களிடத்தில், எக்கலத்தானும் - எந்தப் பாத்திரத்திலாகிலும் (உண்பது) இனிது - இனிப்பாகும், எ-று.
அக்காரம் பால் - உம்மைத் தொகை. கைத்து - ஐந்தாம் வேற்றுமைத் தொகை, து - சாரியை, அல்லது கைத்து - கையினிடத்துள்ளதாகிய, புழுக்கல் எனவுங் கூட்டலாம். போல் - வினைத்தொகை. கலத்தான் - ஆன் - இடப்பொருள்.
207. நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.
(இ-ள்.) நாள்வாய் பெறினும் - காலத்திலே பெற்றாலும், தம் - தம்மை, நள்ளாதார் இல்லத்து - நேசியாதவருடைய வீட்டில், வேளாண்மை - உபகாரமாகக் கொடுக்கப்பட்ட, வெம் கருனை - விரும்பத்தக்க பொரிக்கறியுணவும், வேம்பு ஆகும் - வேம்பு போல் கைப்பு ஆகும்; கேளாய் - கேள், அபரானப் போழ்தின் - பிற்பகற்காலத்து, அட்கு இடுவர் ஏனும் - இலைக்கறியை இட்டாராயினும், தமர் ஆயார் மாட்டே - தம்மவரா யிருப்பவரிடத்திலேயே, இனிது - (உண்ணும் உணவு) இனிப்பாகும், எ-று.
இங்கே தமர் என்பது நேசிக்கு முறவினர்க்கு ஆம். நாள்வாய் - வாய் - ஏழனுருபு. நள்ளாதார் - நள் - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, ள் - சந்தி, ஆர் - பலர்பால் விகுதி, தகரம் - எழுத்துப் பேறு, அபரானம் - அபராஹ்ந என்னும் ஆரியமொழித்திரிபு; அபர - பிற்பட்டது. அஹத் - பகல், பகலின் பிற்பட்ட பாகம் என மாறி யியைந்தது.
208. முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.
(இ-ள்.) முட்டிகை போல - சம்மட்டியைப் போலே, முனியாது - வெறுக்காம லிருக்கும்படி, வைகலும் - நாள்தோறும், கொட்டி - பதப்படுத்தி, உண்பாரும் - (ஒருவர் சோற்றை) உண்கிறவர்களும், (காலம் வாய்த்தால்) குறடுபோல் - பற்றுக் குறட்டைப்போல, கைவிடுவர் - விட்டு நீங்குவர்; நட்டார் என்பபடுவார் - அன்புள்ள உறவின ரென்னப்பட்டவர்கள், சுட்டு கோல் போல - உலையாணிக்கோலைப் போல, எரியும் புகுவர் - (உறவினர்க்குத் துன்ப நேர்ந்த போது அவரோடு) நெருப்பிலேயும் விழுவர், எ-று.
சம்மட்டி இரும்பைக் கொட்டிப் பதமாக்குவது போல் ஒருவனைத் தனக்கு இதஞ்செய்யும்படி வசப்படுத்தி யுண்பர் என்பதாம்.
கொட்டுதல் - அடித்தல், பதமாக்குதலுக்கு ஆயிற்று. குறடு - கொல்லனுடைய ஓநாயுதம்.
209. நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
(இ-ள்.) நறுமலர் தண் கோதாய் - சுகந்தமான பூச்சூட்டிய குளிர்ந்த கூந்தலுடையவளே!, நட்டார் - நேசித்தவர், நட்டார்க்கு - நேசித்தவர்க்கு, இறும் அளவும் - சாகும் வரையும், அவரோடு - அந்த நட்டாரோடு, இன்பு உறுவ இன்பு உற்று - இன்பப்படுமவைகளை இன்பப்பட்டு, எழீஇ - நடந்து, துன்பு உறுவ துன்பு உறாக்கால் - துன்பப்படுமவைகளைத் துன்பப்படாமற் போனால், மறுமையும் - மறுபிறப்பிலாகிலும், செய்வது ஒன்று உண்டோ - செய்யத்தக்க நற்காரியம் வேறொன்று இருக்கிறதோ [இல்லை], எ-று.
நட்டார் - சுற்றத்தார் எனக்கொள்க. மறுமையும் என்பதில் உம்மை விகற்பப் பொருளும் எச்சப் பொருளு முடையது. இம்மையிலொன்று மில்லையே மறுமையிலாகிலு முண்டோ வென்றால் அதுவுமில்லை என்பது கருத்து.
நட்டார் தம்மை நட்டாரோடு சமமாக இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென அவர்களிருக்க வேண்டிய முறைமை கூறப்பட்டது.
இன்பு உறுவ, துன்பு உறுவ - பலவின்பால் வினையாலணையும் பெயர், இரண்டனுருபு தொக்கது. எழீஇ - எழு - பகுதி.
210. விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து.
(இ-ள்.) விருப்பு இலார் இல்லத்து - (தன்மேல்) அன்பில்லாதவர்களுடைய வீட்டில், வேறு இருந்து, வேறாயிருந்து, உண்ணும் -, வெருகு கண் - பூனைக்கண்னைப் போன்ற, வெம்கருனை - விரும்பத் தக்க பொரிக்கறியுணவு, வேம்பு ஆம் - விருப்பு உடை தன்போல்வார் இல்லுள் (தன்மேல்) விருப்பமுள்ள தன்னோடொத்தவருடைய வீட்டில் (உண்ணப்படும்) தயங்கு நீர் - தெளிந்த நீரிலேயுள்ள, தண் புற்கை - குளிர்ச்சியான புல்லரிசிக்கூழானது, என்போது இயைந்த - உடம்பிற்குப் பொருந்தின, அமிழ்து - அமிர்தமாகும், எ-று.
வேறிருத்தலாவது - அன்பிற்குத்தக்க வுபசாரம் பெறாமலிருத்தல். ஒருவித பளபளப்பினால் பூனைக்கண் - கருனைக்கு உவமை யாயிற்று. வெருகு என்பதில் ககரம் வேற்றுமைச் சந்தியில் மிக்கது. "நெடி லோடுயிர்த்தொடர்" என்கிற [நன். உயிர் புணர். சூ. 33ன்] உரையைக் காண்க. விருப்பு - விரும்பு என்னு முதனிலைத் தொழிற்பெயர் வலிந்தது. வேம்பு, அமிழ்து - உவமையாகு பெயர்கள். தனக்கு அவர்கள் மேலுள்ளது போல் தன்மேல் அவர்களும் அன்பு கூர்ந்தவரா யிருக்கவேண்டுமென்பது "விருப்புடைத் தன்போல்வர்" என்று சொல்லப் பட்டது. என்பு - உடம்புக்கு ஆகுபெயர்; "என்பு முரியர் பிறர்க்கு".
22. நட்பாராய்தல்
[அதாவது சிநேகிக்கத்தக்க குணமிருப்பதைத் தெரிந்து கொள்வது.]
211. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
(இ-ள்.) கருத்து உணர்ந்து - (நூல்களின்) உட்பொருளை அறிந்து, கற்று அறிந்தார் கேண்மை - படித்தெடுத்தவரோடு கொண்ட சிநேகம், எஞ்ஞான்றும் - எப்போதும், குருத்தின் கரும்பு தின்றது அற்று - குருத்திலிருந்து கரும்பைத் தின்றாற் போலும்; என்றும் - எக்காலத்தும், மதுரம் இலாளர் தொடர்பு - (கல்வியறிவாகிய) இனிப்பில்லாதவரோடு கொண்ட சிநேகம், குருத்திற்கு -, எதிர் செல - எதிரே செல்லும்படியாக, [அடியிலிருந்து என்கிறபடி], தின்று அன்னதகைத்து - தின்றாற் போலிருக்கிற குணமுள்ளது, எ-று அரோ - அசை.
கரும்பைக் குருத்திலிருந்து தின்றால் வரவர இனிமை யதிகமாவதுபோலே கற்றோர் கேண்மையு நாளுக்குநாளினிப்பாகும்; அதற்கு எதிர்செலத்தின்றால் வர வர இனிமை குறைவது போல் கல்லாதார் நட்பு நாளுக்குநாள் உருசி குறைந்து வெறுக்கப்படும் என்பதாம். இக்கருத்தே கல்வியில் எட்டாம் பாட்டிலும் சொல்லப்பட்டது.
அற்றே என்பதில் ஏகாரம் தேற்றத்தில் வந்ததென்னலாம். உணர்ந்து என்னும் எச்சம் சற்று என்பதைக் கொண்டது. அறிந்தார் என்பதற்கு காரியா காரியங்களை அறிந்தவர்கள் என்பது பொருள். இதுதான் படித்தெடுத்தவர் என்று கூறப்பட்டது. உட்பொருள் தெரிய நூல்களைக் கற்று நன்மை தீமைகளைப் பகுத்தெடுக்குந் தன்மையுள்ளவர்கள் என்பது திரண்ட கருத்து.
தகைத்து - குறிப்புமுற்று, தகை - பகுதி, து - ஒன்றன்பால் விகுதி.
212. இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.
(இ-ள்.) பொன் கேழ் - பொன்னிறமுள்ள, புனல் ஒழுக - அருவி நீர் பெருக, புள் இரியும் - பறவைகள் ஓடுகின்ற, பூ குன்ற நாட - அழகான மலை சூழ்ந்த நாடுடையவனே!, இல் பிறப்பு எண்ணி - (அவருடைய) நற்குடிப்பிறப்பை எண்ணி, இடை திரியார் - நடுவில் மாறார்கள், என்பது ஓர் நல்புடை - எண்று சொல்லப்பட்ட ஒரு நல்ல பக்ஷத்தை, கொண்டமை அல்லது - (சிநேகிப்பதற்கு ஏதுவாகக்) கொண்டதேயல்லாமல், மனம் அறியப்பட்டது ஒன்று அன்று - அவருடைய மனநிலை யறியப்பட்டதென்கிற ஒருபக்ஷம் அல்ல, எ-று.
முற்பாட்டில் கூறியபடி சிநேகிப்பதற்கு கல்வி யறிவு காரணமானது போல் நற்குலப்பிறப்பும் காரணமாதலால் நற்குடிப் பிறந்தவர் மாறமாட்டாரென்ற உறுதியினால் சிநேகிக்கலாம்; மனம் அறிவது அசாத்தியம் என்கிறபடி. பொன் மிகுதி பற்றி அந்நிறமுள்ள நீர் ஓடி வரக்கண்டு இது யாதோ என அஞ்சிப் பறவைகள் ஓடுகின்றன என மலையைச் சிறப்பித்தது. [உயிர் புணர் சூ. 50ம்] விதியால் பூங்குன்ற என மெலிமிகுந்தது. கொண்டமை - தொழிற்பெயர்.
213. யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(இ-ள்.) யானை அனையவர் நண்பு - யானை போன்றவர்களுடைய நேசத்தை, ஒரீஇ - விட்டு, நாய் அனையார் கேண்மை - நாய் போன்றவர்களுடைய சிநேகத்தை, கெழீஇ கொளல் வேண்டும் - சேர்த்துக் கொள்வது ஆவசியகம்; (ஏனெனில்) யானை -, அறிந்து அறிந்தும் - பலதரம் அறிந்திருந்தும், பாகனையே கொல்லும் - (தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற) பாகனையே கொல்கின்றது; எறிந்த வேல் - (தன்னையுடையவன்) பிரயோகித்த ஆயுதமானது, மெய்யது ஆ - தன் உடலில் பொத்ததாயிருக்கவும், நாய் -, வால் குழைக்கும் - வாலையாட்டும், எ-று.
பாகனையே - இங்கு ஏகாரம் சிறப்புப் பொருளில் வந்ததாக் கொளல் வேண்டும். மெய்யது - குறிப்பு வினையாலணையும் பெயர், சினையடி யாப்பிறந்த பெயர் என்பது நேர்.
214. பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு.
(இ-ள்.) பல நாளும் - எந்நாளும், பக்கத்தார் ஆயினும் - அருகிலிருப்பவரானாலும், நெஞ்சில் - மனதில், சில நாளும் - சொற்ப தினங்களாகிலும், ஒட்டாரோடு - பொருந்தாதவர்களோடு, ஒட்டார் - சேரமாட்டார்கள். (புத்திசாலிகள்), தம் நெஞ்சத்து - தமது மனசிலே, யாத்தாரோடு - சேர்க்கப்பட்டவர்களோடு, [பொருந்தினவர்களோடு என்றபடி], யாத்த தொடர்பு - சேர்த்த சிநேகத்தை, பல நாளும் நீத்தார் என - பலகாலமும் (தம்மை) விட்டிருப்பவரென்று, கை விடல் உண்டோ - விட்டுவிடுவது இருக்குமா [இல்லை], எ-று.
மனம் பொருந்தாதவர் எத்தனை காலம் கிட்ட விருந்தாலும் அவரை யோக்கியர் நேசிக்கமாட்டார். மனம் பொருந்தினவர் எவ்வளவுகாலம் விட்டிருந்தாலும் அவர் சிநேகத்தைக் கைவிடமாட்டார்கள் என்பது கருத்து.
நீத்தார் - நீ - பகுதி, ஆர் - விகுதி, தகரங்கள் சந்தியும் இடைநிலையும். யாத்தார் - யா - பகுதி, மற்றவை முன் போல்.
215. கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்.
(இ-ள்.) கோட்டு பூ போல - கொம்பிலிருக்கிற பூவைப் போலே, மலர்ந்து - (முன்னே) முகமலர்ந்து, பின் கூம்பாது - பின்பு குவியாமல், வேட்டதே வேட்டது - விரும்பினதே விரும்பினதா யிருப்பது, நட்பு ஆட்சி ஆம் - சிநேக பரிபாலனஞ் செய்வதாம்; தோட்ட - தோண்டப்பட்ட, கயம் பூபோல் - குளத்திலிருக்கும் பூவைப் போலே, முன் மலர்ந்து பின் கூம்பு வாரை - முதலில் முகமலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கிப் போகின்றவர்களை, நயப்பாரும் நட்பாரும் இல் - விரும்புகின்றவர்களும் சிநேகிக்கின்றவர்களும் இல்லை, எ-று.
ஒருவரைக் கண்டவுடனே முகமலர்ச்சியோடு விரும்பியது மாறாமலிருந்தால் அதுதான் சிநேக குணம், அப்படியின்றி முன் சந்தோஷங்காட்டிப் பின் வெறுப்படைவது சிநேக குணமல்ல என்பது கருத்து.
வேட்டது - வேள் - பகுதி, ட் - இடைநிலை, அ - சாரியை, து - விகுதி, ள் ட் ஆனது சந்தி, தொழிற்பெயர்; விருப்பம் என்கிறபடி தோட்ட - தொடு என்னு முதனிலை முதனீண்டு டகரமிரட்டிக் காலங் காட்டியது; பெயரெச்சம்.
216. கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.
(இ-ள்.) கடை ஆயார் - கீழ்த்தரமானவர்கள், நட்பில் - சிநேகத்தில், கமுகு அனையர் - பாக்குமரத்தை ஒத்தவர், இடை ஆயார் - மற்ற நடுத்தரமானவர், தெங்கின் அனையர் - தென்னை மரத்தை யொத்தவர்; தலை ஆயார் - முதற்றரமானவர்கள்; எண் அரு பெண்ணை போன்று - எண்ணுதற்கு அருமையான பனைமரத்தை ஒத்து (இருப்பவர்); தொன்மை உடையார் தொடர்பு - பழமை யுடையவருடைய சிநேகம், இட்ட ஞான்று - செய்த காலத்தில், இட்டதே - செய்ததே, [பின்பு ஒரு காலும் உபசரணையை வேண்டுவதன்று என்கிறபடி], எ-று.
இப்படிச் சொன்னதனால் ஒரு நாள் உபசரணை தவிர்த்தாலும் பாக்குமரம் பயன் கெடுவதுபோல் கீழோர் சிநேகம் கெடுமெனவும், இடையிடையே உபசரணை யில்லாமற் போனால் தெங்கு பழுது படுவதுபோல் மத்திமர் சிநேகம் பழுதாமெனவும் குறிப்பிக்கப்பட்டது. தலையாயாராகிய தொன்மையுடையார் தொடர்பு எனக் கூட்டியுமுரைக்கலாமாயினும் "எடுப்பழிவுளது" என்னுங் குற்றம் வரும் என அறிக. வேறு வகை யுரைப்பாரு முளர், அதுவுங் குற்றத்திற்கே யிடமாம். இருப்பவர் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. பழமையாவது ஒரு கால் செய்த நட்பைப் பாராட்டுந் தன்மை இட்டநாளிட்டதே யன்றிப் பின் யாதோ ருபசரணையை வேண்டாதென்னுஞ் சிறப்பு நோக்கித்தான் எண்ணரும் பெண்ணை என்னப்பட்டது.
217. கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
(இ-ள்.) கழு நீருள் கார் அடகு ஏனும் - அரிசி கழுவிய நீர்ல் சமைத்த கறுத்த இலைக்கறியானாலும், ஒருவன் -, விழுமிது ஆ - சிறப்பாக [பிரியமாக], கொள்ளின் - ஏற்றுக் கொண்டால், அமிழ்து ஆம் - அமிருதம் போலாம்; விழுமிய - சிறந்த, குய் - தாளிப்புள்ள, துவை - கறிகள், ஆர் - நிறைந்த, வெண் சோறே ஆயினும் - வெண்மையான நல்லரிசிச் சோறே யானாலும், மேவாதார் - நேசியாதவருடைய, கைத்து - பொருளாகிய உணவை, உண்டல் - புசித்தல், காஞ்சிரங்காய் - எட்டிக்காயைத் தின்பது போலாம், எ-று.
உணவிலுள்ள வுருசியும், சிநேக குணம் பற்றியே சிறக்கும் என்பது கருத்து.
விழுமிது - விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறு தொக்கது, து - விகுதி.
218. நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
(இ-ள்.) நாய் கால் சிறு விரல் போல் - நாயின் கால்களிலுள்ள சிறிய விரல்களைப் போலே, நன்கு அணியர் ஆயினும் - மிகவும் நெருக்கமுள்ளவரா யிருந்தாலும், ஈ கால் துணையும் - ஈயின் காலளவாகிலும், உதவாதார் நட்பு - உதவி செய்யாதவர்களுடைய சிநேகம், என் ஆம் - என்ன பயனாம்; செய் விளைக்கும் - கழனியை விளையும்படி செய்கின்ற, வாய்க்கால் அனையார் தொடர்பு - நீர்க்காலை யொத்தவர்களுடைய சிநேகத்தை, சேய்த்து ஆனும் - தூரத்திலிருப்பதானாலும், சென்று கொளல் வேண்டும் - போய்க் கொண்டு வர வேண்டும், எ-று.
சேய்த்து - குறிப்பு முற்று, சேய் - பண்படி, பகுதி.
219. தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று.
(இ-ள்.) தெளிவு இலார் நட்பின் - விவேக மில்லாதவருடைய நேசத்தைக் காட்டிலும், பகை நன்று - அவருடைய விரோதம் நல்லது; விளியா - தீராத, அரு நோயின் - அருமையான வியாதியைக் காட்டிலும், சாதல் நன்று - செத்துப் போவது நல்லது; அளிய - (மனம்) வெந்து போம்படி, இகழ்தலின் - நிந்திப்பதைக் காட்டிலும், கோறல் - கொல்லுதல், இனிது - நல்லது; இல்ல புகழ்தலின் - இல்லாத குணங்களைச் சொல்லிப் புகழ்வதைப் பார்க்கிலும், வைதலே - திட்டுவதே, நன்று - நல்லது, எ-று. மற்று - அசை.
மூடனுடைய சிநேகத்தினால் ஏதாகிலும் துன்பம் அனுபவிக்க வேண்டி வரும்; பகையினால் ஒன்று மில்லையாம்; ஆந்தனால் தெளிவிலார் நட்பின் பகை நன்று என்றார். கோறல் - கொல் - பகுதி, தல் - விகுதி, பகுதி முதனீட்சி விகாரம்.
220. மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு.
(இ-ள்.) பலரோடு - அநேகரோடு, மரீஇ - சேர்ந்து, பல் நாள் - அநேகநாள், முயங்கி - கலந்து, பொரீஇ - (மனநிலையில்) ஒப்பாகி, பொருள் தக்கார் - பிரயோஜனமாகத் தக்கவர்களை, கோடலே வேண்டும் - கொள்வதே ஆவசியகம்; பரீஇ - கடித்து, உயிர் செகுக்கும் - உயிரை நாசப்படுத்துகின்ற, பாம்பொடும் - பாம்போடு கூடவும், மரீஇ - சேர்ந்து, பின்னை பிரிவு - பின்பு பிரிந்து போவது, இன்னா - பிரியமாகமாட்டாது, எ-று.
பலரோடும் பழகிப் பார்த்து உபயோகமானவர்களைச் சிநேகித்துக் கொள்ள வேண்டும். கெட்ட குணமுள்ள பாம்போடாயினும் நேசித்துப் பிரிவது துக்கமா யிருக்குமானால் மேலானவர்களைப் பிரிவது மகா துக்கமல்லவா என்கிறபடி.
பொரீஇ - பொருவு - பகுதி, மற்றவை செய்யு ணிலையில் வந்த விகாரம். மற்ற வினையெச்சங்களு மிப்படியே. இன்னா - இன்னாது என்பதில் ஈறு தொகுத்தல்.
23. நட்பிற் பிழை பொறுத்தல்
[அதாவது சிநேகித்தவர் தமக்குச் செய்யுங் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்.]
221. நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
(இ-ள்.) நல்லார் என - நல்லவர்களென்று; தாம் நனி விரும்பி கொண்டாரை - தாங்களே மிகவும் இச்சித்துச் சிநேகங் கொண்டவர்களை, அல்லார் எனினும் - நல்லவரல்லாதவரா யிருந்தாலும், அடக்கி கொளல் வேண்டும் - அக்குற்றங்களைத் (தம்மனதில்) அடக்கி நட்பாகவே கொள்ள வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு -, நீர்க்கு நுரை உண்டு -, பூவிற்கும் - புஷ்பத்திற்கும், புல் இதழ் உண்டு - (ஈனமான) புற இதழ் இருக்கின்றது, எ-று.
யாரும் விரும்பிக் கொள்ளத்தக்க நெல் நீர் பூ இவைகளிலும் உபயோகமற்ற தாழ்மையான பொருள்க ளிருக்கின்றமையால் சில குணங்களைக் கொண்டு நாம் சிநேகித்தவரிடத்தில் உள்ள குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றபடி, "குற்றம் பார்க்கிற் சுற்றமில்லை". அவர்களுக்கு ரகசியத்தில் புத்தி சொல்லி அடங்கச் செய்து கொள்ள வேண்டுமெனவு முரைக்கலாம்.
222. செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
(இ-ள்.) செறுத்தோறு உடைப்பினும் - (தாங்கள்) கட்டுந்தோறும் உடைத்துக் கொண்டு போனாலும், நீர் நசை வாழ்நர் - ஜலத்தை விரும்பி வாழ்கின்றவர்கள், செம்புனலோடு - நல்ல நீரோடு, ஊடார் - பிணங்காதவராய், மறுத்தும் சிறை செய்வர் - மறுபடியும் கட்டிக் கொள்வார்கள்; (அப்படியே) வெறுப்ப வெறுப்ப செயினும் - வெறுக்கும்படியான காரியங்களை அடிக்கடி செய்தாலும், தாம் வேண்டி - தாங்கள் விரும்பி, தொடர்பு கொண்டார் - சிநேகங் கொண்டவர்கள், பொறுப்பர் - பொறுத்துக் கொள்ளுவார்கள், எ-று.
வெறுப்ப என்பது பலவின்பால் வினையாலணையும் பெயர்; அடுக்கு பலமுறை செய்தலாகிய பொருணிலையால் வந்தது. அதனை வினையெச்சமா வைத்து துன்பங்களை எனச் செயப்படுபொருள் வருவித்து உரைப்பதும் அமையும். அந்தப் பக்ஷத்தில் அடுக்கு மிகுதிப் பொருளில் வந்ததாம்.
223. இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.
(இ-ள்.) தன் நாட்டார் - தன்னுடைய சிநேகிதர், இறப்ப தீய செயினும் - மிகவுந் தீங்குகளைச் செய்தாலும், பொறுத்தல் - பொறுத்துக் கொள்ளுதல், தகுவது ஒன்று அன்றோ - தகுதியான ஒரு காரியமல்லவா; நிறம் கோங்கு - நல்ல நிறமுள்ள கோங்கம் பூவிலே, உருவம் வண்டு ஆர்க்கும் - அழகுள்ள வண்டுகள் சப்திக்கப் பெற்ற, உயர்வரை நாட - உயர்வான மலைகளுள்ள நல்ல நாட்டை யுடையவனே!, ஒருவர் பொறை - ஒருவர் பொறுப்பது, இருவர் நட்பு - இருவருடைய சிநேகம் ஆகின்றது, எ-று. ஏ - அசை.
பொறை - தொழிற்பெயர், பொறு - பகுதி, ஐ - விகுதி.
224. மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
(இ-ள்.) மடி திரை தந்திட்ட - மடிந்து வீழ்கின்ற அலைகள் கொடுத்த, வான் முத்தம் - பிரகாசமான கிரணங்களையுடைய முத்துக்களை, கடு விசை நாவாய் - மிகுந்த வேகமுள்ள கப்பல்கள், கரை அலைக்கும் சேர்ப்ப - கரைகளிலே அலையச் செய்கின்ற கடற்கரை யரசனே!, விடுதற்கு அரியார் - (சிநேகம்) விடக்கூடாதவர்கள், இயல்பு இலரேல் - சற்குணம் இல்லாதவரானால், (அவர்) நெஞ்சம் சுடுதற்கு - மனதைச் சுடுவதற்கு, மூட்டிய தீ - மூட்டப்பட்ட நெருப்புப் போலாவர், எ-று.
அலைகளிலே இருந்த முத்துக்கள் கப்பலின் விசையால் கரையில் தள்ளப்பட்டு அலைந்து கொண்டிருக்கும்படியான நாடு என்று சிறப்புக் கூறியது. நேசித்தவரை விடக்கூடாதென்று முன் சொன்னோம் ஆனாலும் அவர்கள் சற்குணமிலராயின் மனதிற்கு மிகத் துயரமாயிருக்கும். எனவே சிநேகித்தவர் தவறின்றி நடக்க வேண்டும் என்றதாயிற்று. தந்திட்ட - இதில் இடு - துணைவினை.
225. இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
(இ-ள்.) பொன்னொடு நல் இல் சிதைத்த - பொன்னோடு கூட நல்ல வீட்டைக் கட்டழித்த, தீ - நெருப்பை, நாள்தோறும் - ஒவ்வொரு நாளும், நாடி - விரும்பி, தம் இல்லத்தில் - தமது மாளிகையில், ஆக்குதலால் - (யாவரும்) உண்டாக்குவதனால், இன்னா செயினும் - துன்பங்களைச் செய்தாலும், விடற்பாலர் அல்லாரை - விடக்கூடாதவர்களை, பொன்னாக போற்றிக் கொளல் வேண்டும் - பொன்போல் நினைத்து மேலாகக் கொள்ள வேண்டும், எ-று.
வீட்டையும் பொன்னையும் அழித்ததென்று கைவிடாமல் நெருப்பைச் சனங்கள் தினம் வீடுகளில் உண்டாக்காமற் போனால் எந்தச் சுகமும் வாய்க்காது, அதுபோல் துன்பஞ் செய்தாலும் உதவியான சிநேகிதரை கைவிடக் கூடாதென்பது கருத்து.
விடலாகிய பான்மையுடையவர் விடற்பாலர்; பான்மை - இயல்பு. முற்பாட்டிற் கூறியபடி. நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீயானாலும் பொறுத்தல் கடமை என்றார்.
226. இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற்று என்றுதம் கை.
(இ-ள்.) துன் அரு சீர் - சேருதற்கரிய சிறப்புள்ள, விண்குத்து - வானத்தைக் குத்துகின்ற, நீள் வரை - நீண்ட மூங்கிலை யுடைத்தான, வெற்ப - மலைக்கு உரியவனே!, இன்னா செயினும் - துன்பங்களைச் செய்தாலும், விடுதற்கு அரியாரை - விடக்கூடாதவர்களை, துன்னா - சேராமல், துறத்தல் - விட்டுவிடல், தகுவதோ - தகுந்ததோ [அன்று], கண் குத்திற்று என்று - கண்ணைக் குத்தினது என்று, தம் கை - தமது கையை, களைபவோ - நீக்கிப் போடுவார்களோ (உலகத்தார்), எ-று.
"னலமுன்றனவும்" என்கிற [மெய். புணரியல். 34வது சூத்திரத்தினால்] த ற ஆகி "குறில் செறியாலள" என்கிற [மெய். புணரியல். சூ. 26னால்] கெட்டு, துறத்தறகுவதோ என்றாயிற்று.
227. இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.
(இ-ள்.) இலங்கு நீர் தண் சேர்ப்ப - விளங்குகின்ற ஜலத்தினால் குளிர்ச்சியான கடற்கரை யுடையவனே!, இன்னா செயினும் -, சான்றோர் - பெரியோர், கலந்து - சிநேகித்து, பழி காணார் - குற்றத்தைப் பார்க்க மாட்டார்; கலந்த பின் - நேசித்த பின்பு, தீமை எடுத்து உரைக்கும் - (சிநேகிக்கப்பட்ட வருடைய) குற்றங்களை எடுத்துச் சொல்லுகின்ற, திண் அறிவு இல்லாதார் தாமும் - திடமான அறிவில்லாதவர்களும், அவரில் கடை - தீமை செய்யு நேசரைக் காட்டிலுந் தாழ்மையானவர், எ-று. தாம் - அசை.
பழி - முதனிலைத் தொழிற்பெயர், பழிக்கப்படுவதற்கு ஆகுபெயர்; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயரென்றுஞ் சொல்லலாம்.
228. ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
(இ-ள்.) கறங்கு அருவி நாட - ஒலிக்கின்ற மலையருவிகளுள்ள நாட்டுக் குடையவனே!, ஏதிலார் செய்தது - அயலார் செய்தது - அயலார் செய்தது, இறப்பவே தீது எனினும் - மிகவுங் கொடிய தானாலும், நோக்குங்கால் - (விதியை) யோசித்தால், நோதக்கது - வெறுக்கத்தக்கது, என் உண்டாம் - என்ன உண்டு, காதல் கழுமியார் - அன்பு மிகுந்தவர், செய்த - செய்த (தீமை), நெஞ்சத்துள் நின்று - மனதில் நின்றால் [சிந்தித்தால்], விழுமிது ஆம் - சிறந்த தாய்விடும், எ-று.
அயலார் செய்ததே யோசிக்குங்கால் வெறுக்கத் தகாததானால் அன்பர் செய்தது பிரியமாகும் என்பது கருத்து.
செய்தது என்பது ஈறு குறைந்தது; அல்லது விழுமிது என்பது சிறந்த பொருளுக்கு ஒரு பெயராகக் கொள்ளத்தக்கது. நோதற்குத் தக்கது நோதக்கது; நோ - முதனிலைத் தொழிற் பெயர், நான்கனுருபு தொக்கு; தக்கதோடு ஒரு மொழித் தன்மைப் பட்டதெனக் கொள்க. கழுமியார் - கழுமு - பகுதி, இன் - ஈறு குறைந்தது, ஆர் - விகுதி.
229. தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தார் ஆயின், - அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.
(இ-ள்.) தமர் என்று - தம் உறவினர் என்று, தாம் கொள்ளப்பட்டவர் - தாமே உறவு கொள்ளப் பட்டவர், தம்மை - தம்மிடத்தில், தமர் அன்மை - தம்முறவிற்கு ஏலாமை செய்ததை, தாம் அறிந்தார் ஆயின் - தாம் அறிந்து கொண்டாரானால், அவரை - அப்படிச் செய்தவரை, தமரினும் நன்கு மதித்து - தம்மவரினு மேலாகக் கொண்டு, தமர் அன்மை - (அவரிடம் காணப்பட்ட) தமரன்மையை, தம்முள் - தம்மனதில், அடக்கி கொளல் - அடக்கிக் கொள்க, எ-று.
தமரன்மை அதன் காரியத்திற்கு ஆயிற்று. தம்மை - வேற்றுமை மயக்கம் அடக்கிக் கொளல் - வியங்கோள் வினைமுற்று, [வினை. சூ. 19 உரையைக் காண்க].
230. குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
(இ-ள்.) ஒருவனை நட்டபின் - ஒருவனை நேசித்த பிறகு, குற்றமும் - (அவனிடம்) குற்றத்தையும், ஏனை குணமும் - மற்ற குணத்தையும், நாடி திரிவேனேல் - ஆராய்ந்து கொண்டு திரிவேனேயானால், நட்டான் - நேசித்தவனுடைய, மறை - ரகசியத்தை, காவா விட்டவன் - காக்காமல் வெளிவிட்ட பாவி, செல் உழி - போம் கதியில், அறை கடல் சூழ் வையம் நக - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த பூமி (இகழ்ந்து) சிரிக்கும்படி, செல்க - போகக்கடவேன், எ-று.
எவ்வித ரகசியத்தை வெளியிடுவதினாலே நேசித்தவனுக்குத் துன்பமுண்டாகுமோ அவ்வித ரகசியத்தை வெளியிட்ட பாவி போகத்தக்க நரகந்தான் சிநேகித்தபின் அவனுடைய குண தோஷங்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கும் என்றபடி.
மறை - செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர்; மறைக்கப்படுவது. நக - செயவெனெச்சம், நகு - பகுதி, அ - விகுதி, குற்றுகர விதி பெற்றது. செல்வுழி - இங்கே வகரம் தோன்றியதற்கு விதி, [உயிர் புணர். 13ம் சூத்திர வுரையிற்] காண்க.
24. கூடா நட்பு
[அதாவது பொருந்தாத சிநேகம் இப்படிப்பட்டதெனத் தெரிந்து கொள்ளுதல்.]
231. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கருமம் முற்றும் துணை.
(இ-ள்.) கறைக் குன்றம் - கறுப்பான மலைகளிலே, பொங்கு அருவி - மிகுந்த அருவிகள், தாழும் - இழியாநின்ற, புனல் - நீரோடு கூடிய, வரை - மலைகளுள்ள, நல் நாட - நல்லதேசத்தரசனே!, செறிப்பு இல் - கட்டு இல்லாத, பழங்கூரை - பழைய கூரை வீட்டிலே, சேறு அணை ஆக - சேற்றினால் அணை உண்டாக்கி, நீர் இறைத்தும் - (அதில் வீழ்ந்த) நீரைப் புறத்தில் இறைத்தும், (நீர்) ஏற்றும் - (மேல் விழு) நீரை உள்ளே விழவொட்டாமல் ஏற்றும், தம் கருமம் - தமது காரியம், முற்றும் துணை - நிறைவேறுமளவும், கிடப்பர் - இருப்பார்கள் (அதற்குடையவர்கள்), எ-று.
பழுதுபட்ட கூரை வீட்டிலுள்ளவர் மழை பெய்கையில் அதற்குப் பழுது வராமல் காத்து நிற்பது போல் நட்டாருடைய காரியத்தை முற்றுமளவுங் காப்பவர் சிநேகிக்கத் தக்கவரேயன்றி அதற்கிசையாதவர் அல்லர் என்பது கருத்து. அல்லது மழை வருமுன்னமே பழுதுபட்ட வீட்டைச் செம்மை செய்து கொள்ளாமல் வந்த போது வருந்துகின்றவரைப் போன்ற மூடர் நேசிக்கத்தகாதவர் என்னவுமாம்.
ஆக என்பதற்கு ஆகச் செய்து என்று பொருள் கொள்ளப்பட்டது.
232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு.
(இ-ள்.) சீரியார் கேண்மை - சிறந்தவர்களுடைய சிநேகம், சிறந்த சிறப்பிற்று ஆய் - மேம்பட்ட சிறப்புள்ளதாய், மாரி போல் - மழை போலே, மாண்ட - மாட்சிமைப்பட்ட, பயத்தது ஆம் - பிரயோசனமுள்ளதாகும்; வால் அருவி நாட - வெண்மையான அருவியுள்ள நாடுடையவனே! சீர் இலார் நட்பு - சற்குணமில்லாதவருடைய சிநேகம், சிறந்தக்கால் - மிகுந்தால், மாரி - மழை, வறந்தக்கால் போலும் - இல்லாமற் போனால் (இருக்கு நிலைமை) போல அப்பிரயோசனமாம், எ-று.
சிறப்பிற்று - சிறப்பு - பகுதி, இன் - சாரியை, று - விகுதி, ன் ற் ஆனது சந்தி; குறிப்பு முற்று, அல்லது குறிப்பு முற்றாலணையும் பெயர். மாண்ட - மாண் - பகுதி.
233. நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.
(இ-ள்.) நுண் உணர்வினாரொடு கூடி - நுட்பமான அறிவுடையவர்களோடு சேர்ந்து, நுகர்வு உடைமை - புசிப்பதைக் கொண்டிருத்தல், விண் உலகே ஒக்கும் விழைவிற்று - தேவலோகத்தையே ஒத்திருக்கும்படியான மேன்மையுள்ளது ஆம்; நுண் நூல் உணர்வு - நுட்பமான சாஸ்திரஞானம், இலர் ஆகிய - இல்லாதவர்களாகிய, ஊதியம் இல்லார் - பயனற்றவர்களை, புணர்தல் - சேர்தல், நிரயத்துள் ஒன்று - நரகங்களுள் ஒன்றாம், எ-று. ஆல் - அசை.
உணர்விற்கு நுட்பமாவது உள்ளுறையைக் கிரகித்தல், நூலுக்கு நுட்பம் பொறிக்கும் மனதிற்கும் சாதாரணமா யெட்டாதவைகளை அறிவிப்பது விண்ணுலகே - ஏகாரம் - பிரிநிலை.
234. பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு.
(இ-ள்.) அருகு எல்லாம் - பக்கங்களிலெல்லாம், சந்தனம் நீள்சோலை - சந்தன மரங்களுடைய பெரிய தோப்புக்களோடு கூடிய, சாரல் மலை நாட - சாரல்களையுடைய மலைகளுள்ள நாட்டரசனே!, பந்தம் இலாளர் தொடர்பு - மனப்பற்றில்லாதவருடைய சிநேகம், வை தீ போல் - வைக்கோலிற் பற்றிய நெருப்பைப் போலே, பெருகுவது போல தோன்றி - வளர்வது போலே காணப்பட்டு, ஒரு பொழுதும் -, செல்லாதே - (காரியத்தில்) உபயோகப்படாமல், நந்தும் - கெடும், எ-று.
235. செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
(இ-ள்.) செய்யாத - செய்யக்கூடாதவைகளை, நாம் -, செய்தும் என்றாலும் - செய்வோம் என்று சொல்வதும், செய்வதனை - செய்ய வேண்டியதை, செய்யாது - செய்யாமல், தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - நீடிக்கச் செய்து வைப்பதும், மெய்யாக - சத்தியமாகவே, இன்பு உறும் பெற்றி - (ஐம்புலன்களின்) இன்பமுறுந் தன்மையை, இகழ்ந்தார்க்கும் - நீக்கினவர்களாகிய துறவிகளுக்கும், அந்நிலையே - அப்போதே, துன்பு உறும் பெற்றி - துன்பத்தை அடையும் படியான தன்மையை, தரும் - கொடுக்கும், எ-று.
செய்யக் கூடாதவைகளைச் செய்வோமென்று வீண் முயற்சி செய்வதும், செய்யத் தக்கவைகளைச் செய்யாமல் சாவகாசப் படுத்திப் போடுவதும் துறந்தவர்களுக்கும் துன்பமுண்டாக்கும் என்றபடி.
செய்தும் - தனித்தன்மைப் பன்மை வினைமுற்று, தும் - விகுதியே எதிர்காலங் காட்டும்.
236. ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.
(இ-ள்.) ஒரு நீர் பிறந்ந்து - ஒரே ஜலத்திலே உண்டாகி, ஒருங்கு - ஒரே விதமாக, நீண்டக்கடைத்தும் - வளர்ந்தாலும், விரி நீர் குவளையை - விஸ்தரித்த நற்குணமுள்ள நீலோற்பலத்தை, ஆம்பல் - ஆம்பற் பூ, ஒக்க அல்லா - ஒக்கமாட்டா; பெரு நீரார் கேண்மை கொளினும் - மிகுந்த சற்குணமுள்ளவருடைய சிநேகத்தைப் பெற்றாலும், நீர் அல்லார் - குணவான்களாகதவருடைய, கருமங்கள் - காரியங்கள், வேறுபடும் - வேறாய்ப்போம், எ-று.
குணவான்களோடு கூடியிருக்கிறாரென்று குணமில்லாதவரைத் தக்க காரியங்களில் நட்புக் கொள்ளலாகா தென்பது கருத்து.
ஒருங்கு - முதனிலை வினையெச்சப் பொருட்டாய் வந்தது, நீண்டக்கடைத்தும் - இதுவும் ஒருவகை வினையெச்சம்; கடை - விகுதி, து - சாரியை.
237. முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
(இ-ள்.) முற்று அல் சிறு மந்தி - முதிராத சிறிய குரங்கு, முன்பட்ட தந்தையை - எதிரே நேர்ந்த தன் தந்தையாகிய பெருங்குரங்கை, நெற்று கண்டன்ன விரலால் - பயற்ற நெற்றைக் கண்டாற் போன்ற கைவிரல்களால், ஞெமிர்த்திட்டு - மடங்கச் செய்த, குற்றி பறிக்கும் - குத்தி (அதின் கையிலுள்ளவற்றை) பறித்துக் கொண்டு போகின்ற, மலை நாட - மலையுள்ள நாட்டரசனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்பு - தன்னோடு ஒன்றுபடமாட்டாதவருடைய சிநேகம், இன்னாது - இன்பமாயிராது, எ-று. ஏ - அசை.
சிறுகுரங்குகள் பெருங்குரங்குகளை யடித்துப் பறிக்கும் படியான பலத்தோடு வளரா நின்ற மலையெனச் சிறப்பித்தது. தான் வருவதற்கு முன்னமே வந்து அங்குள்ள குற்றியைப் பெயர்த்தெடுக்கமாட்டாத கிழக்குரங்கை விரலால் தள்ளித்தான் அக்குற்றியைப் பெயர்த்து எடுக்கும்படியான, சிறு குரங்குள்ள மலையெனவும் பொருள் கொள்ளலாம். முற்று - வினைமுதற்பொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். கண்டு என்பதற்கு கட்டியாயிருப்பது பொருளானதைக் கொண்டு நெற்றாகிய கண்டை ஒத்த எனவு முரைக்கலாம்.
238. முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
நெடுமொழி வையம் நக.
(இ-ள்.) முட்டு உற்ற போழ்தின் - (என்னுடைய நண்பன்) சங்கடத்தை அடைந்தபோது, முடுகி - துரிதப்பட்டு, என் ஆர் உயிரை - என்னுடைய அருமையான பிராணனை, நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் - சிநேகிதனாகிய ஒருவன் கையிற் கொடாமற் போவேனேயானால், நட்டான் - சிநேகிதனுடைய, கடிமனை - காவலுள்ள அல்லது கலியாணஞ் செய்த மனையாளை, கட்டு அழித்தான் - கற்பழித்தபாவி, செல்வுழி - போமிடத்தில், நெடு மொழி வையம் - மிகுந்த பேர்பெற்ற பூமியிலுள்ளோர், நக - சிரிக்கும்படி, செல்க - (நான்) போகக் கடவேன், எ-று.
நண்பனுக்குச் சங்கடநேர்ந்தபோது தன் உயிரைக் கொடுத்தாகிலுங் காப்பாற்றாதவன் நட்டான் மனையாளைக் கற்பழித்தவன் செல்லு நரகத்திற் செல்வான் என்றபடி.
முட்டு - முதனிலைத் தொழிற்பெயர். அரு உயிர் - நிலைமொழி முதனீண்டு குற்றுகரவிதி பெற்றது; "ஆதிநீடல்" என்பதும், "முற்றுமற்றோரோவழி" என்பதும் விதிகள். கடி என்பது பல குணந் தழுவிய ஓருரிச்சொல் [உரி. சூ. 16].
239. ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.
(இ-ள்.) தேம்படு நல் வரை நாட - தேன் கூடுகள் சேர்ந்த நல்ல மலைநாடனே!, நயம் உணர்வார் - சிநேகமறியும்படியானவர்களுடைய, நண்பு -, ஒரீஇ - நீக்கி, புல் அறிவினாரொடு நட்பு - அற்பஞான முடையவர்களோடு கொண்ட சிநேகம், ஆண் படு நெய் பெய் கலனுள் - பசுவினிடமுண்டாகு நெய்யை ஊற்றியிருந்த மாத்திரத்தில், அது களைந்து - அந்நெய்யை எடுத்துவிட்டு, வேம்பு அடு நெய் பெய்தது அனைத்து - வேம்பைச் சேர்ந்த நெய்யை யூற்றினாற் போலாகும், எ-று அரோ - அசை.
[மெய். புணரியல். சூ. 11ன் விதியினால்] தேன்படு தேம்படு ஆயிற்று.
240. உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
விரிபெடையோடு ஆடிவிட் டற்று.
(இ-ள்.) உருவிற்கு அமைந்தான்கண் - அழகுக்கு ஏற்றவனிடத்து, ஊர் ஆண்மை இன்மை - ஒப்புரவில்லாமையானது, பருகற்கு அமைந்த பால் - குடிப்பதற்கு ஏற்ற பாலானது, நீர் அளாயற்றே - நீர் கலந்தாற் போலாம்; தெரிவு உடையார் - விவேக முடையவர்கள், தீ இனத்தார் ஆகுதல் - தீமையான இனத்தைச் சேர்ந்தவராயிருப்பது, நாகம் - சர்ப்பமானது, விரி பெடையோடு - பெட்டை விரியன் பாம்பொடு, ஆடி விட்டற்று - புணர்ந்து நீங்கினது போலாம், எ-று.
நாகம் விரி பெடையோடு புணர்ந்தால் சாகுமென்பார்கள். ஒப்புரவாவது உபகாரஞ் செய்யுங்குணம், சிநேகிப்பதற்கு ரூபமும் ஒரு காரணமாயிருக்க அவனிடத்தில் உபகாரகுணமில்லாமையால் ருசி கெடுதலினால் பால் நீரளாயற்றே யென்றார். அளாய் - வினையெச்சம், யகரமெய் - விகுதி.
இன்பவியல்
25. அறிவுடைமை
[அதாவது காரியா காரியங்களைத் தெரிந்து கொள்ளும் படியான புத்தியுள்ளவனாதல்.]
241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.
(இ-ள்.) பகைவர் பணிவு இடம் நோக்கி - சத்துருக்கள் தளர்ந்திருக்குமிடம் பார்த்து, தகவு உடையார் - தகுதியுள்ளோர், தாமேயும் நாணி - தாங்களே வெட்கப்பட்டு, தலை செல்லார் - (வெல்வதற்கு) அவ்விடம் போகமாட்டார். காணாய் - பார்; (வெல்வதற்கு) அவ்விடம் போகமாட்டார். காணாய் - பார்; அணங்கு அரும் துப்பின் - வருந்துதலில்லாத சாமர்த்தியமுள்ள, அரா - பாம்பு [இராகு], திங்களை - சந்திரனை, இளம் பிறை ஆயக்கால் - இளம்பிறை யாயிருந்தால், சேராது - (அதனை வருத்தும்படி) போகாது, எ-று.
பகைவனானாலும் அவன் இளைத்திருக்குங் காலத்திலே அவனை வெல்ல நினையாமல் இரங்குவது விவேகம் என்பது கருத்து.
அணங்கரும் என்பதில் அருமை இன்மைக்குக் கொள்ளப்பட்டது.
242. நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும்.
(இ-ள்.) நளி கடல் தண் சேர்ப்ப - அகலமான கடலின் குளிர்ச்சியான கரைக்கரசனே!, நல்கூர்ந்த மக்கட்கு - தரித்திரப்பட்ட மனிதருக்கு, அணிகலமாவது - ஆபரணமாவது, அடக்கம் - அடங்கியிருத்தல்; பணிவு இல் சீர் - அடக்கமில்லாத சிறப்பையுடைய, மாத்திரை இன்றி - அளவில்லாமல், [அளவைக் கடந்து], நடக்குமேல் - நடப்பானாயின், வாழும் ஊர் - (அவன்) வாழ்கின்ற ஊரில், கோத்திரம் - (அவன்) குலம், கூறப்படும் - (இழித்து) சொல்லப்படும், எ-று.
தரித்திரனா யிருப்பவன் வீண் பிரசங்கங்களுக்குப் போகாமல் அடங்கியிருப்பது புத்தி; இல்லாமற் போனால் அவனைப் பற்றி அவன் குலமும் இகழப்படு மென்பது கருத்து.
243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.
(இ-ள்.) எந்நிலத்து வித்து இடினும் - எந்த நிலத்திலே விதைத்தாலும், காஞ்சிரம் காழ் - எட்டி விதை, தெங்கு ஆகா - தென்னமர மாகமாட்டா; தென் நாட்டவரும் - தென் தேசத்தாரும், சுவர்க்கம் புகுதலால் - சொர்க்கலோகம் சேர்வதனாலே, தன்னால்தான் - தன்னாலேயே, மறுமை ஆகும் - மறுபிறப்பின் கதியுண்டாகும்; வடதிசை பலரும் - வடதிசையிலுள்ள அநேகரும், சால கொன் ஆளர் - மிகவும் (மறுமைக்கு உதவியின்றி) வீண் காலங் கழிப்பவர், எ-று.
வித்தினியற்கையேயன்றி மரத்திற்கு நிலத்தினியற்கை யில்லாதது போல மறுமைப்பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினா லொன்றுமில்லை யென்பதாம். வடநாட்டார்க்கே யன்றித் தென்னாட்டாருக்கு நற்கதியில்லையென யாரோ அக்காலத்திற் சொன்னதைக் குறித்து இப்பாட்டு பாடப்பட்டது போலும்.
தான் என்பது ஏகாரத்தைப் போலே பிரிநிலையில் வந்தது; தன் + ஆற்றான் எனப் பிரிந்து தான் நடக்கும் வழியால் என்று பொருள் கொள்வதும் பொருந்தும். கொன் - பயனின்மை, அதை யாள்பவர் கொன்னாளர்.
244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.
(இ-ள்.) வேம்பின் இலையுள் கனியினும் - வேப்பிலை மேலே பழுத்தாலும், வாழை - வாழைப் பழமானது, தன் தீம் சுவை யாதும் - தன்னுடைய மதுரமான உருசி சிறிதும், திரியாது - மாறாது; ஆங்கே - அப்படியே, இனம் தீது எனினும் - சேர்ந்த கூட்டம் தீயதானாலும், இயல்பு உடையார் கேண்மை - நல்ல சுபாவமுடையவர்களுடைய நட்பு (திரியாது), மனம் தீது ஆம் பக்கம் - (அவருக்கு) மனது தீமையாகும் பக்ஷம், அரிது - இல்லை, எ-று.
சுபாவத்தில் யோக்கியருக்கு அயோக்கிய சகவாசம் செய்ய வேண்டி வந்த போதும், மனதில் கொடுமையின்றி அன்பு பாராட்டுவது விவேகத்தின் பயனென்றபடி.
வாழையின் பயனிலையாகிய திரியாது என்பதில் சுவை என்னும் எழுவாய் பகுதிப் பொருளில் முடிந்தது [பொது. சூ. 26ன்] உரையைக் காண்க.
245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.
(இ-ள்.) கடல் சார்ந்தும் - சமுத்திரத்தை யடுத்தும், இன் நீர் - இனிப்பான நீரானது, பிறக்கும் - உண்டாகும், மலை சார்ந்தும் - மலையை அடுத்தும், உப்பு ஈண்டு உவரி - உப்பு நிறைந்த உவர்நீர், பிறத்தலால் - உண்டாவதனால், எறி கடல் தண் சேர்ப்ப - அலைமோதா நின்ற சமுத்திரத்தின் குளிர்ச்சியான கரையுடையவனே!, மக்கள் என்பார் - மனிதரென்று சொல்லப்படுகிறவர், தத்தம் இனத்து அனையர் அல்லர் - தங்கள் தங்களுடைய இனத்தை ஒத்தவரல்லர்; (மற்றென்னெனின்), மனத்து அனையர் - தம் தம் மனத்தை ஒத்தவர், எ-று.
உவர்க்கடலருகே நன்னீரும், நல்லருவி பாயு மலையருகே யுவர் நீரும் பிறப்பதனால் அவரவ ரியற்கையே பிரதானமன்றிச் செயற்கை பிரதான மன்றென முற்பாட்டிற் கூறியதே இங்குங்கூறி உறுதிப்படுத்தப்பட்டது. நல்லினஞ்சேர்தலிலே தீயாரைச் சேர்வதனாற் றீமையும் நல்லாரைச் சேர்வதனா னன்மையும் உண்டாமெனக் கூறிற்று. ஈண்டு எப்போதுந் தன்னியல்பு மாறாதிருப்பது விவேகமெனச் சொல்லிற்று; ஆதலின் அவ்வதிகாரத்தோடு இதற்கு மாறுபாடில்லை யென உணர்க.
246. பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
(இ-ள்.) பரு அரை புன்னை - பருத்த அரையையுடைய புன்னை மரங்கள், படு - சேர்ந்திருக்கின்ற, கடல் தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கடற்கரையையுடைய அரசனே, தங்கும் மனத்தார் - நிலைநிற்கிற மனமுடையவர்கள், நல்ல மரூஉ - நன்மைகள் சேர்ந்திருக்கின்ற, செய்தியார் மாட்டும் - செய்கையையுடைய யாரிடத்திலும், ஓராலும் ஒட்டலும் - நீங்குவதும் சேர்வதும், செய்பவோ - செய்வார்களோ, (இப்படிச் செய்வதினும்) விராய் செய்யாமை - கலந்து சிநேகஞ் செய்யாமை, நன்று -, எ-று.
யோக்கியரோடு சில காலஞ் சேர்ந்திருப்பதும் சிலகாலம் நீங்கியிருப்பதும் விவேகச் செய்கையன்று; அதினும் அவர்களைச் சேராமலிருப்பதே நலமென்றபடி.
மரங்களுக்கு அடியிலிருந்து கிளை பிரியுமளவுமுள்ள கட்டையை அரையென்பார்கள். பரு அரை - பராரை என்பதும், ஒருவல் - ஒரால் என்பதும் மரூஉ வழக்கென அறிக. மருவு என்பது மரூஉ எனவும், விரவி என்பது விராய் எனவும் செய்யுணோர்க்கத்தால் விகாரப்பட்டன; அல்லது விரவு என்னுமுதனிலை விரா என்றாகி, யகர விகுதிபெற்ற தென்னவுமாம்.
247. உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
(இ-ள்.) உணர - (நம்முடைய குணங்களை) அறிந்து கொள்ள, உணரும் - அறிந்திருக்கின்ற, உணர்வு உடையாரை - விவேகமுள்ளவர்களை, புணர - சேர, இன்பம் புணரும் - சந்தோஷமுண்டாகும்; தெரிய - அறிந்துகொள்ள, தெரியும் தெரிவு இலாதாரை - தெளிவான புத்தியில்லாதவர்களை, புணரின் - சேர்ந்தால், பிரிய - (அவரை) விட்டு நீங்க, நோய் பிரியும் - துன்பம் நீங்கும், எ-று. ஆம் - இரண்டும் அசை.
நம்முடைய சிநேக குணங்களை அறிந்து கொள்ளும்படியான விவேகிகளைச் சிநேகிப்பதில் இன்பமும் அத்தன்மையில்லாதவரைச் சிநேகிப்பதில் துன்பமும் உண்டாமென்பது கருத்து.
தெரியும் என்பதை தெரிவோடு கூட்டுக.
248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
(இ-ள்.) நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் - நல்ல நிலையிலே தன்னை வைப்பவனும், தன்னை -, நிலை கலக்கி - (நல்ல) நிலையினின்றுங் கலங்கச் செய்து, கீழ் இடுவானும் - தாழ்ந்த நிலையிலே சேர்க்கிறவனும், நிலையினும் - (இருக்கின்ற) நிலையைக் காட்டிலும், மேல் மேல் உயர்ந்து நிறுப்பானும் - மிகவுமேலான நிலையிலே தன்னை உயர்த்தி வைப்பவனும், தன்னை -, தலை ஆக செய்வானும் - முக்கியமானவனா யாக்குகின்றவனும், தான் - அவனே ஆவான், எ-று.
ஒருவனுக்கு உயர்வு தாழ்வு முதலியவை அவனுடைய அறிவினாலேயே உண்டாகுமென்பது கருத்து.
நிறுப்பான் முதலிய நான்கும் - எழுவாய், தான் - பயனிலை.
249. கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.
(இ-ள்.) அரு மரபின் - அருமையான கிரமத்தையுடைய, ஓதம் - அலைகள், அரற்றும் - சப்திக்கின்ற, ஒலி கடல் தண் சேர்ப்ப -, கரும வரிசையால் - காரியத்தின் முறைமையால், கல்லாதார் பின்னும் - மூடர்பின்னே, பெருமை உடையாரும் - (கல்வியறிவாகிய) பெருமை யுடையவர்களும், சேறல் - செல்லுதல், பேதைமை அன்று - புத்தியில்லாமை அன்று, அது அறிவு - அது விவேகமேயாம், எ-று.
நாலாவது ஐந்தாவது பாடல்களில் கூறியபடி யோக்கியருக்கு அயோக்கியரோடு சேர்வதே புத்திக்குறைவல்லவோ என்றால் அல்ல, காரியவசத்தால் சேர்வது புத்திதான் என்றார்.
அலைகளுக்கு அருமையான கிரமமாவது மற்றொன்றுக்கு இல்லாமல் ஒரேவிதமா யோங்கி யெழுந்து மடியுந்தன்மை எனக்கொள்க.
250. கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
(இ-ள்.) கருமமும் உள் படா - (அறம் பொருள்களைச் சேர்ந்த) காரியங்களுக்கும் உட்பட்டு [அவற்றைச் செய்தென்றபடி], போகமும் துவ்வா - போகத்தையும் அனுபவித்து, தருமமும் - (கொடையாகிய) தருமத்தையும், தக்கார்க்கே செய்யா - தகுந்தவர்களுக்கே செய்து (நிற்கும்படி), ஒரு நிலையே - ஒரு பிறப்பிலேயே, மூன்றும் - இம்மூன்று காரியங்களும், முட்டு இன்றி - தடையில்லாமல், முடியுமேல் - (ஒருவனுக்கு) நிறைவேறுமானால், அஃது - அந்நிலையானது, பட்டினம் பெற்ற கலம் - (தானிருக்குங்) கடற்கரையூரைச் சேர்ந்த கப்பல், என்ப - என்று சொல்வர் (பெரியோர்), எ-று.
ஒரு கப்பல் பல தேசஞ் சென்று வியாபார முடித்துத் தன்னிலை சேர்ந்தது போலே ஒருவன் பல ஜன்மங்களெடுத்துக் கடைசியில் ஒரு ஜன்மத்தில் அறம் பொருள் தேடி போக மனுபவித்துச் சற்பாத்திரத்தில் தானஞ் செய்து கடைத்தேறுதலால் அந்தச் சனனம் பயன்பட்டுத் தேறினது என்கிறது கருத்து.
உள்படா முதலிய செய்யாவென்னும் வாய்பாட் டெச்சங்கள் நிற்கும்படி என்கிற வருவித்த வினையோடு முடிந்தன.
26. அறிவின்மை
[அதாவது முன் கூறிய பகுத்தறிவில்லாமை.]
251. நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
(இ-ள்.) நுண் உணர்வு இன்மை - நுட்பமான அறிவில்லாமையானது, வறுமை - தரித்திரமாம்; அஃது உடைமை - அப்படிப்பட்ட அறிவை யுடையவனாதல், பண்ணப் பணைத்த - மிகவும் வளர்ந்த, பெரு செல்வம் - பெரிய சம்பத்து ஆம்; எண்ணுங்கால் - யோசித்தால், பெண் அவாய் - பெண் தன்மையை விரும்பி, ஆண் இழந்த - ஆண் தன்மை இழந்த, பேடி - அலியானவள், கண் அவா தக்க - கண்கள் - விரும்பும்படியான, கலம் - ஆபரணங்களை, அணியாளோ - தரிக்க மாட்டாளோ [தரிப்பாள்], எ-று.
மனிதருக்குச் செல்வமென்பதும் தரித்திரமென்பதும் அறிவும் அறிவில்லாமையுமே யன்றிப் பொருளும் பொருளின் மையு மன்று. பேடியும் நல்ல அணிகளை அணிவாளே, அதனால் வரும் சிறப்பு சிறப்பன்று என்பது கருத்து.
விசேஷமாய் ஆபரணங்களைத் தரித்தல் பெண்களுக்கே யியல்பாதலால் ஆணிலக்கணங் குறைந்து பெண்ணிலக்கண மிகுந்த பேடி என்றார். பண்ணப்பணைத்த என்பது கன்னங் கறுத்த சின்னஞ்சிறுத்த பன்னப்பருத்த என்பவை போல் மிகுதிப் பொருள் பற்றி வந்த பணை என்பதின் அடுக்கெனக் கொள்க. ஐ அகரமானது விகாரம், பண்ண - செய்ய, (பணைக்கும்படி செய்ய) பணைத்த எனப்பொருள் கூறின் சிறப்பில்லையாம். வடமொழிகள் இங்ஙனம் அடுக்கி விகாரப்பட்டு வருவன பலவுள் இதனை "க்ரியா ஸம்ஹிகாரம்" என்பர் அவாவுதற்குத் தக்க என்பது அவாத்தக்க என்றாயிற்று.
252. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
பூவின் கிழத்தி புலந்து.
(இ-ள்.) பல் - அநேகமான, ஆன்ற - நிறைந்த, கேள்வி - கேள்விகளின், பயன் உணர்வார் - பிரயோசனத்தை அறிந்தவர்கள், பாடு அழிந்து - பெருமைகெட்டு, அல்லல் உழப்பது - துன்பங்களால் வருந்துவதை, அறிதிரேல் - அறிய விரும்புவீர்களே யானால், (சொல்லுகிறேன்), தொல் சிறப்பின் - பழமையான சிறப்பையுடைய, நாவின் கிழத்தி - சரசுவதிதேவி, உறைதலால் - வாசஞ்செய்வதனால், பூவின் கிழத்தி - திருமகள், புலந்து - பிணங்கி, சேராளே - (அவரிடம்) சேரமாட்டாளே, எ-று.
அறிவைப் பெருமைப்படுத்துகிறீரே கற்றறிந்த புலவர் வெகு சங்கடப்படுவதேன் என்று ஒருவர் வினாவினதாகப் பாவித்து, பெண்களியல்பு தெரியாதா ஒருத்தி சேர்ந்தவிடத்து மற்றொருத்தி சேர்வதில்லையே. ஆதலின் சரசுவதி சேர்ந்த விடத்தில் இலக்குமி சேர்வதில்லையெனச் சாதுரியமா வுத்தரஞ் சொல்லினார். உண்மையோ கல்விச்சுவை தோய்ந்தவர்க்குச் செல்வத்தில் மிகுந்த விருப்பஞ் செல்லாமையே காரணமென்க. கிழமை - உரிமை, அதனை யுடையாள் கிழத்தி. அறிவுடைமையிற் குற்றங் கூறுதல் தவறு என்றபடி.
253. கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
(இ-ள்.) தந்தை - பிதா, கல் என்று கழற - கல்வியைக் கற்றுக் கொள் என்று சொல்ல, அதனை ஓர் சொல் என்று கொள்ளாது - அதை ஒரு சொல்லாக ஏற்றுக் கொள்ளாமல், இகழ்ந்தவன் - தள்ளிவிட்டவன், மெல்ல - மெதுவாக, எழுத்து ஓலை - எழுத்தைக் கொண்டிருக்கிற ஓலையை, பல்லார்முன் - பலருக்கு எதிரில், நீட்ட - (படி என்று) கொடுக்க, விளியா - செத்தாற் போலாகி, வழுக்கு ஓலை - அங்கிருந்து தப்பிப் போய்விடும்படியான தொனியை, கொண்டுவிடும் - கொண்டு விடுவான், எ-று.
விளியா - கோபித்து, வழு - (அடித்தலாகிய) தப்பிதத்தைச் செய்யத்தக்க, கோலை - தடிக்கொம்பை, கொண்டுவிடும், எனவும் உரைப்பர்.
254. கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
(இ-ள்.) கல்லாது நீண்ட ஒருவன் - கல்வி கற்காமல் வளர்ந்த ஒருவன், உலகத்து -, நல் அறிவாளரிடை - நல்ல விவேகமுள்ளவர் நடுவில், புக்கு - பிரவேசித்து, மெல்ல இருப்பினும் - சும்மா இருந்தாலும், நாய் இருந்தது அற்றே - நாய் இருந்தாற் போலாம்; இராது உரைப்பினும் - சும்மாயிராமற் போனாலும், நாய் -, குரைத்தது அற்று - குரைத்தாற் போலும், எ-று.
புக்கு - புகு என்பதில் ககரம் இரட்டிக் காலங்காட்டி உகரவிகுதி பெற்றது.
255. புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
(இ-ள்.) புல்லா - (கோட்டி இலக்கணம்) சேராத, புல் கோட்டி - அற்பக்கூட்டத்தையுடைய, புலவரிடை - (புன்) புலவர் நடுவில், புக்கு - பிரவேசித்து, கடை எல்லாம் - அற்பரெல்லாம், கல்லாத - தாம் கல்லாத விஷயங்களையும், சொல்லும் - சொல்வார்கள்; சான்றவர் - பெரியோர், கற்ற - (தாம்) கற்ற விஷயங்களை, (வினாவுவோர் புத்தி தாம் சொல்லும்) பொருளின்மேல், படா - செல்லாமல், விடுபாக்கு அறிந்து - விடுபட்டுப் போவதைத் தெரிந்து, சொல்லார் - சொல்ல மாட்டார்கள், எ-று.
அற்பர் அற்ப கோட்டியிற் சென்று தாம் கல்லாதவற்றையும் சும்மாச் சொல்வர், பெரியோர்களோ வினாவினாலும் தாம் கற்றறிந்தவைகளையும் சொல்வதில்லை, ஏனெனில் கேட்போர் புத்தி தாம் சொல்வதின் மேற் படாமற்போ மென்பதை யறிந்து என்றபடி.
கடை என்பது பொருளில் உயர்திணையானாலும் சொல்லில் பால் பகா அஃறிணையானதால் எல்லாமென்பதும் சொல்லும் என்பதும் அதனொடு பொருந்தின என அறிக. கடாயினும் என்பதில் யகரம் வந்தது போலிவழக்கு, கோயில் என்பது போல; [உயிர் புணர். 13வது] சூத்திரத்தில் நெறி என்ற மிகையினால் வந்ததெனவுங் கொள்ளலாம். விடுபாக்கு - தொழிற்பெயர், பாக்கு - விகுதி.
256. கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.
(இ-ள்.) கற்று அறிந்த - நூல்களைப் படித்து அவற்றின் உட்பொருள் அறிந்த, நாவினார் - புலவர், தம் சோர்வு அஞ்சி - தமக்குப் பிழை நேரிடுவதற்குப் பயப்பட்டு, சொல்லார் - (விஷயங்களைக் கண்டபடி எடுத்து) சொல்லார்; மற்றையர் ஆவார் - கற்றறியா தவர்கள், பகர்வர் - (தோன்றியபடி) சொல்வர்; பனையின்மேல் - பனைமரத்தில், வற்றிய ஓலை - உலர்ந்த ஓலை, கலகலக்கும் - கலகல என்று சத்திக்கும்; எஞ்ஞான்றும் - எப்போதும், பச்சோலைக்கு - பச்சையாயிருக்கிற ஓலைக்கு, ஒலி இல்லை - ஓசை இல்லை, எ-று.
படித்தவர் சொல்வதில் பிழை நேரிடுமோ என்று பயந்து ஆலோசித்துச் சொல்வார்கள். கல்லாதாரோ வாய்க்குவந்தபடி சொல்வார்கள். இவர்களுக்கு உலர்ந்தவோலையும் பச்சையோலையும் உபமானம்.
பசுமை பச்சு என்றாயிற்று. நாவினார் - புலவர்க்குக் காரணப் பெயர்.
257. பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு.
(இ-ள்.) நன்று அறியா மாந்தர்க்கு - நன்மை தெரிந்து கொள்ள மாட்டாத மனிதருக்கு, அறத்து ஆறு - தருமத்தின் விழியானது, உரைக்குங்கால் - சொல்லுமளவில், பன்றி கூழ் பத்தரில் - பன்றிக்குக் கூழ்வார்க்குந் தொட்டியில், தேமா - மதுரமான மாங்கனியை, வடித்தற்று - பிழிந்தாற் போலும்; குன்றின் மேல் கொட்டும் தறி போல் - மலைமேல் அடிக்கிற கட்டுத்தறி போல், தலை தகர்ந்து - (அத்தருமவழிகள்) தலை சிதறி, செவிக்கு - காதுக்கு, சென்று இசையா ஆகும் - போய்க் கேளாதவைகளாய் விடும், எ-று.
பன்றிக்குக் கூழுருசி தெரியுமல்லது தேமாவி னுருசி தெரியாது அதுபோல் கீழ் மக்களுக்குத் தருமவுபதேசம் இனியாது ஆதலின் அவ்வுபதேசம் மலைமேல் அடிக்குந்தறி உள்ளிறங்காமல் தலைபிளந்து போவதுபோல் சிதறிப் போய் காதிலேறாது; அதனால் அது வீண் என்கிறபடி.
258. பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.
(இ-ள்.) பாலால் கழீஇ - பாலினாலே கழுவி, பலநாள் உணக்கினும் - அநேககாலம் உலர்த்தி வைத்தாலும், இருந்தைக்கு - சரிக்கு, வாலிது ஆம் பக்கம் - வெண்மையான பக்கமானது, - இருந்தன்று - இருந்ததில்லை; கோலால் கடாய் - கோல் கொண்டு அடித்து, கூறினும் - சொன்னாலும், நோலா உடம்பிற்கு - புண்ணியஞ் செய்யாத உடம்புக்கு [மனிதனுக்கு என்றபடி], அறிவு - ஞானமானது, புகல் ஒல்லா - புகமாட்டாது, எ-று.
கரியைப் பாலால் கழுவினாலும் வெண்மை யுண்டாகாதது போல் ஜன்மாந்தர புண்ணியமில்லாத மனிதனுக்கு எத்தனை சொன்னாலும் அறிவு வருவதில்லை என்பதாம்.
கடாய் - கடா - பகுதி, யகரம் - வினையெச்சவிகுதி, கூறினும் என்பது குறினும் எனக் குறுகிற்று.
259. பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
(இ-ள்.) பொழிந்து இனிது நாறினும் - (தேனைப்) பொழிந்து இனிப்பாகப் (பரிமளம்) வீசினாலும், பூ மிசைதல் செல்லாது - பூந்தேனை உண்ணுதற்குப் போகாமல், இழிந்தவை காமுறும் - ஈனமான வஸ்துக்களை விரும்புகின்ற, ஈ போல் - ஈயைப் போலே, இழிந்தவை கலந்த நெஞ்சினார்க்கு - இழிவான விஷயங்கள் பொருந்தின மனதுள்ளவர்க்கு, தக்கார் வாய் - யோக்கியருடைய வாயிலுண்டாகிற, தேன் கலந்த - மதுரஞ் சேர்ந்த, தேற்ற சொல் - தெளிவான சொற்களுடைய, தேர்வு - உண்மை, என் ஆகும் - என்ன பயனைத் தரும், எ-று. தாம் - அசை.
இனிது - குறிப்பு முற்று, இங்கே வினைபுரியா நின்றது ஆக என்னும் வருவிக்குஞ் சொல்லுக்கு எழுவாயெனக் கொள்ளவுமாம். நாறினும் என்ற வினையின் தொடர்ச்சியால் இனிய கந்தத்தை எனச் செயப்படு பொருளாக்கினும் அமையும்.
260. கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; - மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
(இ-ள்.) கற்றார் உரைக்கும் - கற்றவர் சொல்லுகின்ற, கசடு அறு நுண் கேள்வி - குற்றமற்ற நுட்பமான பிரசங்கத்தை, தன் நெஞ்சு - தன் மனமானது, பற்றாது - பிடியாமல், உதைத்தலால் - தள்ளிப்போடுவதினால், மற்றும் - பின்னும், தன் போல் ஒருவன் - தன்னைப் போன்ற ஒருவனுடைய, முகம் நோக்கி - முகத்தைப் பார்த்து, கீழ் - கீழ்மகன், தானும் -, ஓர் புன் கோட்டி கொள்ளும் - ஒரு அற்ப பிரசங்கத்தைச் செய்வான், எ-று. ஓர், ஆம் - அசைகள்.
கீழ்மக்கள் கற்றார்சொல்வது தன் மனதுக்குப் பிடியாத போது அதனை அலக்ஷியஞ்செய்து தான் மிகத் தெரிந்தவன் போல் மற்றொரு மூடனை நோக்கிப் பிரசங்கிப்பான் என்பது கருத்து.
இவ்வளவால் இத்தன்மையானது அறிவின்மையென அதன் சொரூப குணங்களை யறிவித்து அங்ஙனமிராது விவேகத்தோடிருக்க வேண்டு மென்றதாயிற்று. போல் - இங்கு வினைத்தொகை.
27. நன்றியில் செல்வம்
[அதாவது நன்மையில்லாத சம்பத்து; பயனில்லாமலும் கேடு தருவதுமான செல்வ மென்றபடி.]
261. அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
(இ-ள்.) அருகலது ஆகி - கிட்டினதாகி, பல பழுத்தக் கண்ணும் - அநேகமாய்ப் பழுத்திருந்தாலும், பொரி தாள் விளவினை - பொரிந்த அரையையுடைய விளாமரத்தை, வாவல் - வௌவால்கள், குறுகா - சேரமாட்டா; பெரிது அணிய ராயினும் - மிகவும் சமீபித்தவரா யிருந்தாலும், பீடு இலார் செல்வம் - பெருமையில்லாதவர்களுடைய செல்வமானது, கருதும் கடப்பாட்டது அன்று - நினைக்கும் படியான முறைமையுள்ள தன்று, எ-று.
விளாமரத்திற்குப் பெருமையில்லை யென்பதன்று; வௌவாலுக்கு அதனா லுபயோகமில்லை யென்பது கருத்து.
பாடு என்பது சாதாரணமான ஜனங்களுக்கு உபயோகமா யிருத்தலெனக் கொள்க. அருகலது - குறிப்பு வினையாலணையும் பெயர். பழுத்தக்கண் - வினையெச்சம்.
262. அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
(இ-ள்.) அள்ளி கொள்வ அன்ன - அள்ளி எடுக்கலாம் படியான, குறு முகிழ ஆயினும் - சிறிய முகிழ்களை உடையவையானாலும், சூடும் பூ அன்மையால் - முடிக்கத்தக்க பூ அல்லாமையால், கள்ளி மேல் கை நீட்டார் - கள்ளி மரத்தின் மேல் கைபோட மாட்டார்கள் (மனிதர்), பெரிது செல்வம் உடைய ராயினும் - மிகுந்த செல்வமுள்ளவர்களானாலும், கீழ்களை - கீழ்மக்களை, நள்ளார் - (அறிவுடையார்) விரும்ப மாட்டார்கள்; எ-று.
அதிக அழகான பொருள் மேல் அள்ளி எடுத்துக் கொள்ளும் படியான ஆசையுண்டா யிருக்கும் ஆதலால் அள்ளிக் கொள்வன்ன என்றது. அள்ளிக் கொள்வ என்பதில் ஈற்றகரம் தொகுத்தல். அன்ன - அத்தன்மையுடையன.
263. மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.
(இ-ள்.) மல்கு திரைய - மிகுந்த அலைகளையுடைய, கடல் கோடு இருப்பினும் - சமுத்திரக் கரையில் இருந்தாலும், வல் ஊற்று - வலிமையான ஊறுதலையுடைத்தான, உவர் இல் கிணற்றின் கண் - உப்பில்லாத கிணற்றிலே, சென்று உண்பர் - போய் (நீரை) உண்பார்கள்; பெரிது செல்வம் உடையராயினும் - மிகுந்த செல்வமுள்ளவர்களானாலும், (ஈயாதாரை விட்டு) சேண் சென்று - தூரத்தில் போய், நல்குவார் கட்டே - கொடுப்பவரிடத்துள்ளதே, நசை - ஆசை, எ-று.
ஆசை - எழுவாய், நல்குவார்கட்டே - பயனிலை. ஊற்றுக்கு வலிமையாவது சிறிது சிறிதாயூறுவது, உவரில் கிணறு என்பதில், [மெய்புணர். சூ. 30ம் விதியால்] லகரம் றகரமாய்த் திரியவில்லை. நல்குவார்கட்டு - குறிப்பு முற்று. நல்குவார்கண் - பகுதி, டு - ஒன்றன் விகுதி, ணகரம் டகரமானது விகாரம். திரைய - குறிப்புப் பெயரெச்சம்.
264. புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.
(இ-ள்.) புணர்கடல் சூழ் வையத்து - சேர்ந்த சமுத்திரஞ் சூழ்ந்த பூமியில், புண்ணியம் வேறே - புண்ணியமானது (யோக்கியதை யிருக்குமிடத்தைக் காட்டிலும்) வேறாகவே இருக்கிறது; உணர்வு உடையார் இருப்ப - கல்வியறிவுள்ளவர்கள் (ஒன்றுமில்லாது) இருக்க, உணர்வு இலா - அறிவில்லாத, வட்டும் வழுதுணையும் போல்வாரும் - பனவட்டையும் வழுதுணங்காயையும் ஒத்த அற்பரும், பட்டும் துகிலும் - பட்டுவஸ்திரத்தையும் வேறு நல்ல வஸ்திரத்தையும், உடுத்து வாழ்வரே - உடுத்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்களே, எ-று.
வட்டும் வழுதுணையும் எளிதில் கிடைக்கத்தக்க சாதாரணப் பொருள்கள்; இவை போன்ற அற்பர் செல்வராயிருக்க அறிவுள்ளவரோ தரித்திரராயிருப்பர் என்பது கருத்து.
வாழ்வரே - இந்த ஏகாரம் பிரசித்தத்தைக் காட்டுகிறது. முந்திய ஏகாரம் தேற்றத்தில் வந்தது. ஓ - அதிசய இரக்கச் சொல். உணர்வது - அது அசை.
265. நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
(இ-ள்.) வேல் நெடு கண்ணாய் - வேல்போல் நீண்ட கண்களை யுடையவளே!, நயவர் நல்லார் - நீதிமான்களான நல்லவர், இருப்ப - (தரித்திரரா) யிருக்க, நயம் இலா கல்லார்க்கு - நீதியில்லாத மூடருக்கு, ஒன்று ஆகிய காரணம் - ஒரு செல்வப் பொருளுண்டாகிய காரணமானது, தொல்லை வினைப்பயன் அல்லது - பழமையான வினையின் பயனே யல்லாமல், நினைப்ப - யோசிக்க, வருவது ஒன்று - தோன்றத் தக்க வேறொன்றும், இல் - இல்லை, எ - று. [நயம் - பெருமையுமாம்.]
முற்பாட்டில் கூறியபடி மூடர் செல்வம் பெற்று வாழ்தற்கு அவருடைய பூர்வ ஜனன புண்ணியமே யல்லது வேறில்லை யென நியாய முறுதிப் படுத்தியது.
266. நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
(இ-ள்.) நாறா தகடே போல் - பரிமளிக்காத புற விதழைப் போலே, நல் மலர்மேல் பொன் பாவாய் - நல்ல தாமரை மலரின் மேலிருக்கிற பொன்னின் பதுமை போன்ற திருமகளே!, நீ-, பொன்போலும் நல் மக்கள் பக்கம் துறந்து - பொன்னைப் போன்ற யோக்கியரான மனிதரிடத்து விட்டு, வேறு ஆய - (நன்மக்களில்) வேறாயிருக்கிற, புல் மக்கள் பக்கம் - கீழான ஜனங்களிடம், புகுவாய் - சேருகிறாய், (ஆதலால்) நிலத்து - பூமியில், நீறு ஆய் விளி - சாம்பலாகும்படி சாகக்கடவை, எ-று.
சுகந்தமில்லாமலே பூவிலிருக்கும் புறவிதழ்போலே நீயும் சற்குணமின்றிப் பூவிலிருக்கிறாய் என இகழ்ந்தபடி. இதுவே பொற்பாவாய் என்பதனால் திடப்படுத்தப்பட்டது. நாறா தகடு - பரிமளியாத பொற்றகடு என்னவுமாம். அரோ - அசை.
267. நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.
(இ-ள்.) நயவார்கண் நல்குரவு - நயமுடையவரிடத்துள்ள தரித்திரமானது, நாண் இன்றுகொல் - வெட்கமில்லாததோ, பயவார் கண் செல்வம் - உபயோகியாதவரிடத்துள்ள சம்பத்தானது, பரம்ப - பரவுதற்கு (ஆன), பயின்கொல் - பிசினோ, வேல் கண்ணாய் - வேல் போன்ற கண்ணுள்ளவளே!, இவ்விரண்டும் - (யோக்கியரிடத்து வறுமையும் அயோக்கியரிடத்துச் செல்வமுமாகிய) இரண்டும், ஆங்கே - அவ்வவ்விடத்திலே, நயவாது நிற்கும் நிலை - மேன்மைப்படாமல் நிற்கின்ற நிலையை, வியவாய் காண் - ஆச்சரியப்பட்டுப்பார், எ-று.
பரம்புதலாவது நாற்புறமு மொட்டும்படி வியாபித்தல். நீங்காது நிற்பது பற்றி பயின்கொல் என்னப்பட்டது. 'பறம்ப' எனப் பாடங்கொண்டு உறைகாரர் எனப் பொருள் கொண்டனர் சிலர்; அதற்குச் சந்தி யசையாதென அறிக.
268. வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய இருந்து.
(இ-ள்.) வலவைகள் அல்லாதார் - பேய்த்தனமுடையராகாதவர் [யோக்கியர்], கால் ஆறு சென்று - தூரவழிபோய், கலவைகள் உண்டு - பல கலப்பான உணவைப் புசித்து, கழிப்பர் - காலங் கழிப்பார்கள்; வலவைகள் - பேய்த்தனமுள்ளவர்களோ, கால் ஆறுஞ் செல்லார் - தூரதேசமும் போகாதவர்களாய், மேல் ஆறு பாய - தம் மேல் பாலாறு நெய்யாறு பாயும்படி, இருந்து - தம்மிடத்திலேயே இருந்து, கருனையால் - பொரிக்கறியோடு கூட, துய்ப்ப - (உணவுகளை) உண்பார்கள், எ-று.
இவ்வாறு இப்பாட்டிலும் முற்பாட்டுகளிலும் தக்கவர் வருந்த அவர்க்குப் பயன்படாமல் தகாதவரிடத் திருக்கின்ற செல்வம் நன்றியில் செல்வமென்று கூறியதாயிற்று. வலவைகள் இடாகினி காளிகளுக்கு ஊழியஞ் செய்பவராதலால் பேயெனக் கொண்டு அத்திறமுடையாரென உரைக்கப்பட்டது. அத்திறமாவது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலுமாம். கால் ஆறு - காலாற் செல்லத்தக்க ஆறு. கலவையாவது - பலரிடம் பெற்ற சோறாதலின் ஒருவ்கைப்படாதிருப்பது.
269. பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
(இ-ள்.) பொன் நிறம் செம் நெல் - பொன் போன்ற வர்ணமுள்ள நல்லநெற்கள், பொதியொடு - பொதிந்திருக்குங் கதிர்களோடு, பீள் - பயிரின் கருவானது, வாட - வாடிக் கொண்டிருக்க, மின் ஒளிர் வானம் - மின்னல் விளங்காநின்ற மேகமானது, கடலுள்ளும் - சமுத்திரத்திலேயும், கான்று உகுக்கும் - (தண்ணீரை) கக்கி உதிர்க்கும்; வெண்மை உடையார் - அறிவின்மை செல்வத்தைப் பொருந்தினால், வண்மையும் - (அவர்) கொடையும், அன்ன தகைத்து - அப்படிப்பட்ட தன்மையுள்ளது, எ-று.
நல்ல நெற்பயிர் வாடிக் கொண்டிருக்க அங்கே பெய்யாமல் உபயோகமற்ற கடலிலே மேகம் மழை பொழிவது போல் புத்தியீனர் செல்வத்தைச் சற்பாத்திரத்தி லுபயோகப்படுத்தாமல் அபாத்திரத்தில் உபயோகப்படுத்துவர் என்பது கருத்து.
கடலுள்ளு மென்பதில் உம்மை இழிவு சிறப்பு; அசையெனக் கொள்ளல் நலம்.
270. ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
(இ-ள்.) உணர்வு இலார் - பகுத்தறிவில்லாதவர்கள், ஓதியும் ஓதார் - படித்தும் படியாதவர்களே; உணர்வு உடையார் - ஓதாதும் - ஓதாமலும், ஓதி அனையர் - படித்தவர்க்குச் சமானமானவர்களாவர்; (அதுபோல்) தூய்து ஆக - சுத்தமாக, [மிகவும்], நல்கூர்ந்தும் - வறுமையுற்றும், இரவாதார் - யாசியாதவர்கள், செல்வர் - சம்பத் துள்ளவராவர்; செல்வரும் - செல்வமுடையோரும், ஈயார் எனின் - (யோக்கியருக்கு) கொடாமற் போனால், நல்கூர்ந்தார் - தரித்திரப் பட்டவர்களே, எ-று.
ஓதி - ஓதுகிறவன், இகர விகுதி கர்த்தாப் பொருளில் வந்தது, கூத்தாடி, கடலோடி என்பவை போல். தூயது - தூய்மையை உடையது, குறிப்பு முற்று; ஈண்டு ஆக என்பதோடு ஒன்றி வினையெச்சமாய் "மிக" என்னும் பொருளாய் வினையுரியாயிற்றென அறிக. பிறர் நல்குதலை ஊர்தல் [கொண்டு செல்லல்] - நல்கூர்தல், நல்குதல் - கொடுத்தல்.
28. ஈயாமை
[அஃதாவது பிறர்க்குக் கொடாமையால் வருமிழுக்கு.]
271. நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
(இ-ள்.) நட்டார்க்கும் - நேசித்தவர்க்கும், நள்ளாதவர்க்கும் - நேசியாதவர்களுக்கும், உள வரையால் - தமக்கு உள்ள அளவினால், அட்டது பாத்து உண்டல் - சமைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தான் உண்பது, அட்டு உண்டல் - சமைத்துண்பதாம்; அடைதது இருந்து - (வருகிறவர்க்குக் கதவை) மூடியிருந்து, அட்டது உண்டு ஒழுகும் - சமைத்ததைத் (தாம்) புசித்து நடக்கிற, ஆவது இல் மாக்களுக்கு - குணமில்லாத மனிதருக்கு, ஆண்டை கதவு - மேலுலகத்தின் கதவானது, அடைக்கும் - மூடப்படும், எ-று. ஆம் - அசை.
[பொது. சூ. 49] விதியால் அடைக்கும் என்னும் செய்வினை செயப்பாட்டு வினையாக் கொள்ளப்பட்டது.
272. எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
(இ-ள்.) எத்துணை ஆனும் - எவ்வளவாயினும், இயைந்த அளவினால் - தமக்கு இசைந்த பிரமாணத்தால், சிறு அறம் செய்தார் - சிறிய தருமத்தையாகிலும் செய்தவர், தலைப்படுவர் - மேன்மைப்படுவர்; மற்றை - வேறான, பெரு செல்வம் எய்தியக் கால் - மிகுந்த செல்வம் பொருந்தின போது, பின் அறிதும் என்பார் - (தருமத்தை) பின்பு பார்த்துக் கொள்வோ மென்கிறவர்கள், கடலத்துள் - கடல்சூழ்ந்த பூமியில், பழி - பழிக்கப்பட்டு, அழிந்தார் - கெட்டுப் போவார், எ-று.
கடலையுடையது = கடலத்து - கடல் - பகுதி, அ - சாரியை, து - விகுதி, பழி என்னு முதனிலை "வரிப்புனைபந்து" என்பது போல் வினையெச்சப் பொருட்டாய் வந்ததெனக் கொள்க; [வினை. சூ. 32]ன் உரையைக் காண்க. மற்றை என்பதை என்பார் என்பதோடு கூட்டுக. [பொது. 33வது சூத்திரத்தினால்] தெளிவு பற்றி அழிந்தாரென இறந்த காலத்துக் கூறப்பட்டது.
273. துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
(இ-ள்.) துய்த்து கழியான் - அனுபவித்துக் கழியாமல் துறவோர்க்கு - (ஆதரிப்பவரால்) துறக்கப்பட்டவர்களுக்கு, ஒன்று ஈகலான் - ஒருபொருள் கொடாமல், வைத்து கழியும் - (பொருளை) வீணாவைத்து இருக்கிற, மடவோனை - மூடனாகிய, அவனை - (உபயோகமற்ற) அவனை, வைத்த பொருளும் நகும் - சேர்த்து வைத்த திரவியமும் சிரிக்கும், அவனை - அப்படிப்பட்டவனை, உலகத்து அருளும் - உலகத்திலே விளங்குகிற கிருபையும், நகும் - சிரிக்கும், எ-று. ஏ - இரண்டும் அசை.
துறவோர் - துறவிகளும் ஆம், ஆயினும் சிறப்பில்லாமையின் "துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும்" என்னுந் திருக்குறளுக் குரைத்தது போல் ஈண்டும் ஆதரிக்கத்தக்கவரால் கைவிடப்பட்டவர் என்று உரைக்கப்பட்டது. வீணாக்கினதைப் பற்றி பொருளும் நகுமென உபசார வழக்காகக் கூறப்பட்டது. "அருளில்லார்க் கவ்வுலகமில்லை. பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாதியாங்கு" என்கிறபடி நற்கதியற்றானே யென அருட்கடவுள் நகும் என்பது கருத்து.
கழியான், ஈகலான் - முற்றெச்சங்கள். ஈகலான் - ஈ - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆன் - ஆண்பால் விகுதி.
274. கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
(இ-ள்.) கொடுத்தலும் துய்த்தலும் - (பிறர்க்கு) கொடுப்பதையும் (தான்) அனுபவிப்பதையும், தேற்றா - தெளியாத, இடுக்கு உடை உள்ளத்தான் - லோபகுணமுள்ள மனமுடையவன், பெற்ற பெருஞ்செல்வம் - அடைந்த மிகுந்த சம்பத்து, இல்லத்து உரு உடை கன்னியரை போல் - வீட்டிற் பிறந்த ரூபமுள்ள பெண்களைப் போலே, பருவத்தால் - (அனுபவிக்கும்) காலத்தில், ஏதிலான் துய்க்கப்படும் - அயலானாலே அனுபவிக்கப்படும், எ-று.
வீட்டிற் பிறந்த பெண் அயலா னனுபவத்திற்கே உரியளாவது போல் லோபியின் செல்வமும் அயலானுக்கே உரியதாகும் என்றபடி.
பருவத்தால் - வேற்றுமை மயக்கம்.
275. எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(இ-ள்.) எறி நீர் பெருங்கடல் - மோதுகின்ற நீரையுடைய பெரிய சமுத்திரத்தை, எய்தி இருந்தும் - அடைந்திருந்தும், அறு நீர் சிறு கிணறு - அற்றுப்போம்படியான நீரையுடைய சிறிய கிணற்றினது, ஊறல் பார்த்து உண்பர் - ஊற்றைக்கண்டு குடிப்பார்கள் (சனங்கள்); மறுமை அறியாதார் ஆக்கத்தின் - மறுமைப்பயனை அறியாதவர்களுடைய செல்வத்தைக் காட்டிலும், சான்றோர் கழி நல்குரவே - யோக்கியர்களுடைய மிகுந்த தரித்திரமே, தலை - மேலானது, எ-று.
மிகுந்த தண்ணீருள்ளதா யிருந்தும் உபயோகப்படாத கடலைப் போலே பயனற்றது அயோக்கியருடைய பணம் ஆதலின், கிணற்று ஊற்றைப் போல் சற்றுச் சற்றாகிலும் உபயோகமான யோக்கியருடைய அற்ப சம்பத்தே மேலானதென்பது கருத்து.
அற்று அற்றுச் சுரப்பதனான் அறுநீர் கிணறு என்றார். சுழி - உரிச்சொல்.
276. எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.
(இ-ள்.) ஏழை - மூடன், பொருளை - பணத்தை, எனது எனது என்று இருக்கும் - என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டிருப்பான்; யானும் - நானும், (அப்பொருளை) எனது எனது என்று -, இருப்பன் - இருப்பேன், தனது ஆயின் - அவனதனால், தானும் அதனை வழங்கான் - அவனும் அப்பொருளை (ஒருவர்க்கு) கொடான்; பயன் துவ்வான் - (அதின்) பிரயோஜனத்தை அனுபவிக்க மாட்டான். யானும் அதனை அது - நானும் அந்தத் திரவியத்தை அதுவாக, [அப்படியே செய்வேன் என்றபடி,] எ-று.
செய்வேனென்று ஒரு சொல் வருவித்து அது என்பதை முடித்துக் கொள்க.
உபயோக மில்லாமல் சம்பாதித்தவன் தனது என்று சொல்வதற்கும், சம்பாதியாதவன் அப்படிச் சொல்வதற்கும் வித்தியாசமில்லையென்றபடி.
277. வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
(இ-ள்.) வழங்காத செல்வரின் - கொடாத தனவான்களைக் காட்டிலும், நல்கூர்ந்தார் உய்ந்தார் - தரித்திரர் (துன்பங்களில்) தப்பினவர்கள்; (எப்படியெனில்) இழந்தார் எனப்படுதல் - பொருளை இழந்து போனார்கள் என்கிற அபவாதத்தினின்றும், உய்ந்தார் - தப்பினார்கள்; உழந்து - வருந்து, அதனை காப்பு - அப்பொருளைக் காப்பாற்றுவதினின்றும், உயந்தார் -, கல்லுதலும் - (அதைப் புதைத்துவைக்கும் பொருட்டு) நிலத்தைத் தோண்டுவதினின்றும், உய்ந்தார் -; தம் கை நோவ - தமது கைகள் நோவும்படி, யாப்பு - கெட்டியாய்ப் பிடித்திருப்பதினும், உய்ந்தார் -; உய்ந்த பல - (இப்படி அவர்) தப்பினவை பல(வுண்டு), எ-று.
எனப்படுதல், காப்பு, கல்லுதல், யாப்பு - இவை நான்கும் ஐந்தாம் வேற்றுமைத் தொகை. கொடாமல் பணம் வைத்திருப்பவனுக்குக் கஷ்டமேயன்றி வேறு பயனில்லை யென்பது கருத்து.
278. தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
(இ-ள்.) தனது ஆக - (பொருள்) தனதா யிருக்கையிலே, தான் கொடான் - (லோபி) தான் (ஒருவர்க்கும்) கொடுக்க மாட்டான்; தாயத்தவரும் - தாயாதர்களும், தமது ஆய போழ்து - (அப்பொருள்) கொடுக்கமாட்டார்; முன்னே - பூர்வத்திலே, தனது ஆக கொடுப்பின் - தனதாயிருக்கையிலே கொடுத்தல், அவர் கடியார் - தாயாதர் விலக்கார்கள்; பின்னை - பிற்காலத்தில், அவர் கொடுக்கும் பொழுது - அந்தத் தாயாதர் கொடுக்குங் காலையில், தான் கடியான் - தான் (அதை) விலக்கமாட்டான், எ-று.
தாயமாவது தகப்பன் பாட்டன் முதலானார் மூலமாய் வந்த பொருள்; அதனை எடுத்துக் கொள்ளத் தக்கவர்கள் தாயாதர். ஒருவன் தான் சம்பாதித்த பொருள் தன் சுவாதீனமா யிருக்கையிலே வறியவர்க்குக் கொடாமல் வைக்க, அதைப் பெற்றுக் கொண்ட தாயாதிகளும் கொடுக்க மன மிசையார்கள்; தானுயிரோ டிருக்கையிற் கொடுத்தால் தாயாதார் தடுப்பதில்லை; தானிறந்த பின் அவர் கொடுத்தால் தான் தடுப்பதில்லை. இப்படி இரு திறத்தாரும் பொருளைச் சற்பாத்திரத்தில் உபயோகியாமல் வீணாக்குகின்றவர் என்றபடி. இது அக்காலத்து யாரையோ நோக்கிச் சொன்னதுபோலும்.
279. இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
(இ-ள்.) இரவலர் கன்று ஆக - யாசகர் கன்று போலிருக்க, ஈவார் ஆ ஆக - கொடுப்பவர் பசுப்போ லிருக்க, விரகில் - உற்சாகத்தினால், சுரப்பது - பயனைத்தருவது, வண்மை ஆம் - கொடுக்குங்குணமாம்; விரகு இன்றி - உச்சாக மில்லாமல், வல்லவர் ஊன்ற - வலிமையுடையவர்கள் அழுத்தி வருந்த, வடி ஆ போல் - பால் கொடுக்கின்ற பசுவைப் போல, வாய் வைத்து கொள்ள - அவ்வவ் விடங்களிலே நிறுத்தித் துன்பப்படுத்த, சுரப்பது ஆம் - பயனைத்தரும், கீழ் - கீழ்மகன், எ-று.
கன்று வாய்வைக்கச் சந்தோஷமாய்ப் பாலைச் சுரக்கும் பசுவைப் போலே யாசகரைக் கண்டவுடனே சந்தோஷத்தோடு கொடுப்பதுதான் கொடை. வல்லவர் பலவகையில் வருத்த, மனமின்றிப் பால் சுரக்கும் பசுவைப் போல வலியோர் நேர்ந்த விடங்களிலே தூஷிக்கவும் இடுக்கண் செய்யவும் நிர்ப்பந்தமாய்க் கீழ்மக்கள் கொடுக்குங் கொடை, கொடை என்று சொல்லத்தகா தென்பதாம்.
வல்லவர் ஊன்ற அடிக்கின்ற ஆ போலே உறுப்புக்களில் கருவிகளை வைத்துக் கொல்ல எனப்பொருள் உரைப்பாருமுளர். வடித்தல் - ஊற்றல், இங்கு பால் சுரத்தலாம். வாய் - இடம். கீழ் எழுவாய், சுரக்கும் - பயனிலை.
280. ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
(இ-ள்.) ஈட்டலும் துன்பம் - பொருளைச் சம்பாதிப்பதும் வருத்தம்; மற்று - மேலும், ஈட்டிய ஒள் பொருளை - சம்பாதித்த நல்ல பொருளை, காத்தலும் - காப்பாற்றுவதும், ஆங்கே கடு துன்பம் - அப்படியே மிகுந்த துன்பம்; காத்தல் குறைபடில் - காப்பது குறைந்தால்; துன்பம் -; கெடில் - நாசப்பட்டால், துன்பம் -; (ஆதலின்) பொருள் - திரவியமானது, துன்பக்கு உறைபதி - துன்பத்திற்கு வாசஸ்தானம், எ-று மற்றை - அசை.
காத்தலிருக்கவும் பொருள் குறைபட்டால் எனவுமுரைக்கலாம். சாரியை விகற்பமாதலின் "துன்பக்கு" என்பதில் அத்துச்சாரியை வரவில்லை யென்றறிக [உருபு புணர். சூ.4].
29. இன்மை
[அஃதாவது பண மில்லாமை.]
281. அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.
(இ-ள்.) அத்து இட்ட கூறை - காவி தோய்த்த வஸ்திரத்தை, அரை சுற்றி வாழினும் - அரையிலுடுத்து வாழ்ந்தாலும், பத்து எட்டு உடைமை - பத்தாயினு மெட்டாயினு முள்ளவனாயிருத்தல், பலர் உள்ளும் பாடு எய்தும் - பல ஜனங்களுக்குள்ளே பெருமை பெறும்; ஒத்த குடி பிறந்தக்கண்ணும் - உலகத்துக்குச் சம்மதியான வமிசத்திற் பிறந்தாலும், ஒன்று இல்லாதார் - ஒரு பொருளில்லாதவர்கள், செத்த பிணத்தின் - உயிர்போன உடலைப் பார்க்கிலும், கடை - கீழ் (ஆவர்,) எ-று.
அத்து - தையலுமாம். பத்தெட்டு என்பதில் ஐயவும்மை தொக்கது.
282. நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைத்து.
(இ-ள்.) நெய் - நெய்யானது, நீரினும் நுண்ணிது என்பர் - தண்ணீரைக் காட்டிலும் சூக்ஷமம் என்று சொல்லுவர், நெய்யினும் புகை நுட்பம் - நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமாயிருப்பதை, யாரும் அறிவர்-; தேரின் - ஆலோசித்தறிந்தால், இரப்பு இடும்பையாளன் - யாசகத்தாலாகிய துன்பமுள்ளவன், புகையும் புகற்கு அரிய பூழை - புகையும் பிரவேசிப்பதற்குக் கூடாத துவாரத்தில், நுழைந்து புகும் - நுழைந்து போவான், எ-று. ஏ - அசை.
யாசகன் கண்டவிடத்திலு நுழைந்து பிச்சையெடுப்பதனால் இகழப்படுவான் என்பது கருத்து.
புகையும் புகுதற்கரிய பூழை நுழைந்து புகும் எனக் கவி அதிசயோத்தியாக் கூறியது. நெய் என்பது எண்ணெய் முதலிய நீர்த்த பொருள்களுக்கெல்லாம் பொதுப்பெயர்.
283. கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.
(இ-ள்.) கொல்லை - கொல்லைகளில், கல்லால் - கல்கொண்டு, கிளி கடியும் - கிளிகளை ஓட்டுகின்ற, கானக நாட - காடு சிறந்த நாட்டரசனே!, கல் ஓங்கு உயர் வரை மேல் - கற்கள் வளர்ந்திருக்கின்ற உயரமான மலையில், காந்தள் மலராக்கால் - காந்தள் பூக்காமற் போனால், செம் பொறி வண்டு இனம் - சிவந்த புள்ளிகளையுடைய வண்டுக் கூட்டங்கள், செல்லா - அங்கே போகமாட்டா; (அப்படியே) இல்லார்க்கு - (பொருள்) இல்லாதவர்களுக்கு, தமர் இல்லை - உறவினர் இல்லை, எ-று.
காந்தள் பூக்காத போது வண்டுகள் மலையண்டை போகாதது போல் தரித்திரனிடத்துக்கு உறவினர் வாரார்கள் என்பது கருத்து. ஆம் - அசை.
284. உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.
(இ-ள்.) உண்டாய போழ்தின் - (பொருள்) உண்டாயிருக்குங் காலத்தில், உடைந்துழி - (தேகம்) அழிந்த விடத்தில், காகம் போல் - காக்கைகளைப் போலே, ஆயிரவர் - ஆயிரம் பேர்கள், தொண்டு - அடிமையாக, தொகுப - சேருவார்கள்; வண்டு ஆய் - வண்டுகள் போலாய், திரிதரும் காலத்து - திரியுங்காலத்தில், தீது இலிரோ என்பார் ஒருவரும் - நீர் துன்பமில்லா திருக்கிறீரா என்று க்ஷேமம் வினாவுமொருவரும், இவ்வுலகத்துஇல் - இவ்வுலகத்தி லில்லை, எ-று.
வண்டாய் - வண்டு ஊணுக்காக ஓரிடமில்லாமல் பலவிடந் தேடித் திரிவது போல எனக் கொள்க. இலிர் - முன்னிலைப் பன்மைக் குறிப்பு முற்று.
285. பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.
(இ-ள்.) கறங்கு அருவி - ஒலியாநின்ற அருவிகள், கல் மேல் கழூஉம் - கற்களின் மேல் விழுந்து சுத்திசெய்கின்ற, கணம் மலை நல்நாட - கூட்டமான மலைகளுள்ல நல்ல நாடுடையவனே!, இன்மை தழுவப்பட்டார்க்கு - வறுமையால் கட்டிக் கொள்ளப் பட்டவர்களுக்கு, பிறந்த குலம் மாயும் - (அவர்) பிறந்த நல்லவமிசமும் கெடும்; பேர் ஆண்மை - கீர்த்தியுடைமை [அல்லது பெரியவல்லமை], மாயும் -; சிறந்த - மேன்மைப்பட்ட, தம் கல்வியும் - தம்முடைய கல்வித்திறனும், மாயும்-; எ-று.
தரித்திரருக்கு குலமுதலிய மேன்மைகளும் சிறக்கா என்பது கருத்து.
286. உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.
(இ-ள்.) உள் கூர் பசியால் - வயிற்றினுள்ளே நிறைந்த பசியினாலே, உழை - தன்னிடத்தில், நசைஇ சென்றார்கட்கு - விரும்பி வந்தவர்களுக்கு, உள் ஊர் இருந்தும் - ஊர்க்குளிருந்தும், ஒன்று ஆற்றாதான் - ஓருதவியுஞ் செய்ய மாட்டாதவன், உள் ஊர் இருந்து - உள்ளூரிலிருந்து, உயிர் கொன்னே கழியாது - உயிரை வீணாய்க்கழியாமல், தான் போய் - தான் (பிறதேசம்) போய், விருந்தினன் ஆதலே நன்று - (ஒருவர்க்கு) விருந்தாளி யாவதே நல்லது, எ-று.
தன்னிடம் பசித்துவந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டாத தரித்திரன் ஓரூருக்குள்ளே குடித்தனஞ் செய்வதைக் காட்டிலும் எங்கேயாகிலும் போய்ப் பிச்சை எடுப்பது நல்லதென்கிறபடி.
ஊருள் எனற்பாலது உள்ளூர் என்றானது போலிவழக்கு.
287. நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.
(இ-ள்.) கூர்மையின் - கூர்மையினாலே, முல்லை அலைக்கும் எயிற்றாய் - முல்லையரும்புகளை வருத்துகின்ற பற்களை யுடைய பெண்ணே!, நிரப்பு என்னும் அல்லல் அடையப் பட்டார் - வறுமை யென்கிற துன்பத்தால் சேரப்பட்டவர்கள்; நீர்மையே அன்றி - சற்குணங்களுமல்லாமல், நிரம்ப எழுந்த - பூர்ணமா யோங்கி நிற்கிற, தம் கூர்மையும் - தம்முடைய புத்திக் கூர்மையையும், எல்லாம் - மற்றுமுள்ள எல்லாவற்றையும், ஒருங்கு இழப்பர் - ஒரு சேர இழப்பார்கள், எ-று.
தரித்திரருடைய சற்குண முதலியவை விளங்கா என்பதாம்.
முல்லையரும்புகளினு மேலான அழகுண்மையால் அவற்றைக் கீழ்ப்படுத்தின பற்களையுடையவளே என்றது. கூர்மை என்பது மற்றுமுள்ள வெண்மை முதலான குணங்களுக்கும் உபலக்ஷணம். உப லக்ஷணமாவது தன்னினத்தையுந் தழுவல் [பொது. சூ. 7] காண்க.
288. இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
(இ-ள்.) இட்டு ஆறு - தாழ்மையான வழியில், [தரித்திரத்தில் என்கிறபடி], பட்டு - விழுந்து, ஒன்று இரந்தவர்க்கு - ஏதாகிலுமொரு பொருளை யாசித்தவர்களுக்கு, ஆற்றாது - உதவாமல், முட்டு ஆறுபட்டு - முட்டுப்பாடான வழியிலே பட்டு, [சங்கடப்பட்டு என்றபடி], முயன்று - (கொடுப்பதற்கு) முயற்சிசெய்து, வாழ்தலின் - வாழ்வதைக் காட்டிலும், நெடு ஆறு சென்று - தூரதேசத்திற் போய், நிரைமனையில் - வரிசையாயுள்ள வீடுகளில், கை நீட்டும் - கை நீட்டி யாசிக்கிற, கெடு ஆறு வாழ்க்கையே - கெட்ட வழியில் வாழ்வதே, நன்று - நலமாம், எ-று.
இதில் அமைந்தது ஆறாம்பாட்டின் கருத்தேயானாலும் ஒருவர் பாடியதாகாமையின் கூறியது கூறலாகாதென வுணர்க. இட்டு - அற்பம், ஆதலின் இட்டாறு - வறுமையெனக் கொள்ளப்பட்டது. ஆறு என்பது வேற்றுமை தொகையாகவும் [உயி. புண. 33ம்] சூத்திரத்தினால் றகர மிரட்டி நின்றது. வருந்தி முயல்வதேயன்றிக் காரியம் கைகூடவில்லையென்பது "நிறைமனை" எனவும் பாடங்கொண்டு, நிறை - பொருள் நிறைந்த, வீடு - வீட்டில் சென்று, என்றும் பொருள் கொள்ளலாம்.
289. கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.
(இ-ள்.) துப்புரவு சென்று உலந்தக்கால் - அனுபவிக்கப்படும் பொருள்கள் போய் நாசமானால், கடகம் செறிந்த தம் கைகளால் - (முன்பு) கடகம் சேர்ந்திருந்த தங்கைகளாலே, வாங்கி - (பக்கத்துள்ள தூறுகளைத்) தள்ளி, அடகு பறித்துக் கொண்டு - கீரைகளைப் பறித்துக் கொண்டு போய், அட்டு - சமைத்து, குடை - (நுங்கெடுத்த பனங்காய் முதலான) உள்ளே துளையுள்ள பொருள்களை, கலன் ஆ - பாத்திரமாக (வைத்துக் கொண்டு), உப்பு இலி வெந்தை - உப்பில்லாத அந்த வெந்த கீரையை, தின்று - புசித்து, உள் அற்று - மனவூக்கங்கெட்டு, வாழ்வ - வாழ்வார்கள் (மனிதர்), எ-று.
செல்வம் மாறினால் இலைக்கறி பறித்துண்ணும்படி நேரிடும் வறுமை மனதிற்கு மிகத் துன்பந்தரும் என்பது கருத்து.
இப்பாட்டைச் செல்வ நிலையாமையிற் சேர்த்தலுந் தகும். குடை - குடையப்படுவது குடை எனச் செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்ட பெயர். வெந்தை - வெந்தது, ஐ - விகுதி, வினை முதற்பொருளில் வந்தது.
290. ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.
(இ-ள்.) ஆர்த்த பொறிய - நிறைந்த புள்ளிகளையுடைய, அணிகிளர் - அழகு விளங்காநின்ற, வண்டு இனம் - வண்டின் கூட்டம், பூந்து ஒலி கொம்பின் மேல் - புட்பித்து நீங்கின கிளையின் மேலே, செல்லா - போகமாட்டா; நீர்த்து அருவி - நல்லதன்மையுள்ள அருவிகள், தாழா - குறையாத, உயர் சிறப்பின் - மேலான சிறப்பையுடைய, தண் குன்றம் நல் நாட - குளிர்ச்சியான மலைகளுள்ள நல்ல நாட்டரசனே!, வாழாதார்க்கு - பொருள்பெற்று வாழாதவர்களுக்கு, தமர் இல்லை - உறவினரில்லை, எ-று.
இப்பாட்டில் மூன்றாம் பாட்டின் கருத்தேயானாலும் முன்கூறிய நியாயத்தாற் குற்றமன்று. நீர்த்து - குறிப்புமுற்று, பெயரெச்சமாயிற்று. பொறிய - குறிப்புப் பெயரெச்சமாம்.
30. மானம்
[அதாவது ஒருவர்க்குள்ள கவுரவம்; எப்படிப்பட்ட சங்கடத்திலும் அதனை விடாமற் காக்குந் தன்மை.]
291. திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்.
(இ-ள்.) திரு மதுகை ஆக - செல்வம் பலமா யிருப்பதனால், திறன் இலார் செய்யும் - யோக்கியதை யில்லாதவர்கள் செய்கின்ற, பெரு மிதம் - மிகுதியை [அவமதிப்பை], கண்டக்கடைத்து - கண்ட போது, எரி மண்டி - நெருப்புப்பற்றி, கானம் தலைப்பட்ட தீ போல் - காட்டிலுண்டான அக்கினிச் சுவாலைபோல், மானம் உடையார் மனம் - மானமுள்ளவர்களுடைய இதயமானது, கனலும் - சொலிக்கும், எ-று.
செல்வச் செருக்கினால் அயோக்கியர் எல்லை கடந்து நடக்கையில் மானிகளுக்கு மனவருத்தமுண்டா மென்றபடி.
பெருமிதம் - மிதத்துக்கு விஞ்சியது. கண்டக்கடைத்து - ஒரு வகை வினையெச்சம், அதனோடிருக்கும் உம்மையை அசையெனக் கொள்ள வேண்டும்.
292. என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
(இ-ள்.) தம் உடையார் - தம்மை யுடையவர்கள் [தம்மானத்தைக் காக்குமவர்], என்பு ஆய் உகினும் - எலும்பாய்ப்போ யுதிர்ந்தாலும், இயல்பு இலார் பின் சென்று - சற்குண மில்லாதவர்களுடைய பின்னே போய், தம் பாடு உரைப்பரோ - தமது வருத்தத்தைச் சொல்வார்களோ, தம் பாடு - தமது சங்கடத்தை, உரையாமை - சொல்லாமலே, முன் உணரும் - முன்னிட்டு அறிந்து கொள்ளத்தக்க, ஒண்மை உடையார்க்கு - யோக்கியதை யுள்ளவர்களுக்கு, தாம் உற்ற நோய் - தாம் அடைந்திருக்கிற துன்பத்தை, உரையாரோ - சொல்லாம லிருப்பார்களோ, எ-று.
மானிகள் எவ்வளவு ஈன ஸ்திதியிலும் தம் வருத்தத்தை அயோக்கியருக்குச் சொல்லார்கள். ஏனெனில் அவமானமேயன்றிப் பயனின்மையால், யோக்கியரோடே சொல்வார்கள் உபயோக முண்மையால் என்கிறபடி.
உரையாமை - எதிர்மறை வினையெச்சம், மை - விகுதி.
293. யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.
(இ-ள்.) யாம் ஆயின் எம் இல்லம் காட்டுதும் - நாமானால் எமது மனையாளைக் காட்டுவோம். தாம் ஆயின் - அவரானால், காணவே கற்பு அழியும் - பார்க்கவே கற்பு அழிந்துபோம், என்பார் போல் - என்று நினைக்கிறவர்களைப் போலே, நாணி - வெட்கி, புறங்கடை வைத்து - வாசலின் புறத்திலே வைத்து, சோறும் ஈவர் - சோறும் போடுவார்கள்; (அதனால்) செல்வர் தொடர்பு - தனவான்களுடைய கூட்டுறவை, மறந்திடுக - மறந்துபோகக் கடவீர், எ-று.
செல்வர் நம்மிடம் வந்தால் நாம் கூசாமல் நம் இல்லாள் இதோ என்று காட்டுவோம். பார்த்தால் கற்பழியுமென்று நினைத்தோ நம்மை உள்ளே வரவொட்டாமல் வாசலுக்குப் புறத்திலேயே வைத்துச் சோறிடுகிறார். இப்படி அவமதிப்புச் செய்கிறதினால் அவர் சிநேகத்தை மறக்க வேண்டும் என்பது கருத்து.
இல்லம் என்பதற்கு வீடு எனப் பொருள் கொண்டு உரைக்கலாம். இங்கு போல் என்பது உவமப் பொருளில் வந்ததன்று, சம்பாவனை பொருளில் வந்தது; சம்பாவனையாவது இப்படியிருக்கலாம் என்று ஊகித்தல்; ஆகவே இது "தற்குறிப்பேற்றவணி" ஆம். சோறும் என்கிற உம்மை உயர்வு சிறப்பில் வந்தது. சோறிடுவது உள்ளேயே தகும். அதனையு மிவர் புறத்திலிடுகிறார்கள் என்றபடி.
294. இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
(இ-ள்.) செம்மையின் நானம் கமழும் - நன்றாக கஸ்தூரி பரிமளிக்கின்ற, கதுப்பினாய் - கூந்தலுடையவனே!, இம்மையும் நன்று ஆம் - இப்பிறப்பிலும் நல்லதாம்; இயல் நெறியும் கை விடாது - கூடிய நல்வழியையும் விட்டு நீங்காது, உம்மையும் - மறுபிறப்பிலும், நல்ல பயத்தலால் - நல்லவற்றைச் செய்வதனால், மானம் உடையார் மதிப்பு - மானிகனிடத்துள்ள மதிப்பானது, நன்றே - நல்லதே, எ-று. காண் - அசையுமாம்.
மதிப்பாவது மேன்மையாக நினைத்தல். கதுப்பு - கவுளுமாம்; அங்கும் கஸ்தூரி பூசுவதுண்டு.
295. பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
(இ-ள்.) பாவமும் -, ஏனை பழியும் - மற்றப்பழிப்பும், பட வருவ - உண்டாகும்படி வருகின்ற காரியங்களை, சாயினும் - சாம்படி நேரிட்டாலும், சான்றவர் - பெரியோர், செய்கலார் - செய்யமாட்டார்கள்; (ஏனெனில்) சாதல் - சாவு, ஒரு நாள் ஒரு பொழுதை துன்பம் - ஒருநாளில் சொற்பகால மனுபவிக்கத்தக்க துன்பமாயிருக்கின்றது; அவை போல் - அந்த இழிசெய்கைகளைப் போலே, அருநவை ஆற்றுதல் இன்று - (ஆத்துமாவுள்ளவும்) மிகுந்த குற்றங்களைச் செய்வதன்று, எ-று.
பழி - பழிக்கப்படுவது, பொழுதை - ஐ - சாரியை [உயிர். புணர். சூ.35.]
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
(இ-ள்.) மல்லல் மா ஞாலத்து - வளப்பமுடைய பெரிய பூமியில், வாழ்பவருள் எல்லாம் - வாழ்கின்றவர்களுக்குள்ளே யெல்லாம், செல்வர் எனினும் - தனவான்களானாலும், கொடாதவர் -, நல்கூர்ந்தார் - தரித்திரரே; நல்கூர்ந்தக்கண்ணும் - தரித்திரப்பட்டிருந்தாலும், செல்வரை சென்று இரவாதார் - தனவான்களிடம் போய் யாசிக்காதவர், பெருமுத்தரையரே - இப்பேர் கொண்ட கனவானோ டொத்தவரே [பெருஞ்செல்வர் என்றபடி], எ-று.
இப்பாட்டு முந்திய இரண்டதிகாரத்துட் சேர்க்கத்தக்கதாயினும் வறுமையிலும் பிறரிடம் போயிரவாமல் மானத்தைக் காத்தல் நலமென இங்கு சேர்க்கப்பட்டது. நல்கூர்ந்தக்கண் - வினையெச்சம்.
297. கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
(இ-ள்.) புடை பரந்த - பக்கம் விசாலப்பட்ட, வில் - வில் போன்ற, புருவம் - புருவத்தையும், வேல் நெடு கண்ணாய் - வேல்போல் நீண்ட கண்களையு முடையவளே!, கடை எல்லாம் - கடைத் திறமானவர்களெல்லாம், காய் பசி அஞ்சும் - காய்கின்ற பசிக்குப் பயப்படுவார்கள், ஏனை - அவரொழிந்த, இடை எல்லாம் - நடுத்தரமானவர்களெல்லாம், இன்னாமை அஞ்சும் - துன்பத்திற்குப் பயப்படுவார்கள்; தலை எல்லாம் - மேலானவர்களெல்லாம், சொல் பழி அஞ்சிவிடும் - உலகத்தாருடைய சொல்லால் வரும் பழிப்புக்கு அஞ்சுவார்கள், எ-று. மற்று - அசை.
பழிப்பினால் மானக்குறைவு வருமென்று அஞ்சுவார்கள் என்பது கருத்து.
கடை இடை தலை என அஃறிணையாக எடுத்ததனால் அஞ்சும் என்பதோடு முடிந்தன. கடை முதலியன இங்கே பன்மை.
298. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
(இ-ள்.) நல்லர் - நல்லவர்கள், (இவர்) பெரிது அளியர் - மிகவும் கிருபை செய்யத்தக்கவர்கள், நல்கூர்ந்தார் - வறுமையுள்ளவர்கள், என்று -, எள்ளி - அவமதித்து, செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் - அற்பப் பார்வையாகப் பார்க்கும் போது, தலை ஆய சான்றோர் மனம் - தலைமையான பெரியவர்களுடைய மனமானது, கொல்லன் உலை ஊதும் தீயே போல் - கருமான் உலைக்கடத்தில் ஊதியெழுப்புகிற நெருப்பைப் போலே, உள் கனலும் - உள்ளே சொலிக்கும், எ-று. கொல், ஓ இரண்டும் அசை.
சிறுநோக்காவது அலக்ஷியமாப் பார்த்தல். நல்லர் அளியர் என்பவை இரக்கத்தாற் சொல்லுஞ் சொற்களன்று இகழ்ச்சியாற் சொல்லுஞ் சொற்களென்றறிக. தீயே - இதில் ஏ - அசை.
299. நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண்.
(இ-ள்.) நச்சியார்க்கு - விரும்பி வந்தவர்களுக்கு, ஈயாமை - கொடாமலிருப்பது, நாண் அன்று - வெட்கமன்று; நாள் நாளும் - தினந்தோறும், அச்சத்தால் - (போர் முதலியவற்றிற் செல்ல) பயத்தினால், நாணுதல் - வெட்கப்படுதல், நாண் அன்று -; எச்சத்தின் - (தம்மிலும்) குறைபாடுடைய, மெல்லியர் ஆகி - அற்பராய் இருந்து, ஆயார் - ஆராய்ச்சி யில்லாதவர், தம்மேல் - தம் விஷயத்தில், செய்தது - செய்த எளிமையை, சொல்லாது இருப்பது - (பிறர்க்கு) சொல்லாம லிருக்குமுறுதியே, நாண் - நாணம் ஆகும், எ-று.
புத்தியீனர் தம்மிடத்துச் செய்த அவமதிப்பைப் பிறர் அறியாதிருக்கும்படி காத்தலே மானத்திற்குரிய நாணம் என்பது கருத்து.
ஆயார் - பகைவருமாம். நச்சியார் - நச்சு - பகுதி, ஈறு குறைந்த இன் - இடைநிலை, ஆர் - விகுதி, யகரம் உடம்படுமெய், நச்சினார் எனவும் வரும். எச்சம் - குலம் கல்வி முதலியவற்றிலுள்ளது.
300. கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.
(இ-ள்.) கடமா - காட்டுப்பசுவை, தொலைச்சிய - கொன்ற, கான் உறை வேங்கை - காட்டில் இருக்கின்ற புலியானது, இடம் வீழ்ந்தது - இடப்பக்கம் வீழ்ந்த அந்தப் பசுவை, உண்ணாது இறக்கும் - தின்னாமலிருந்து சாகும், இடம் உடைய - விசாலமான இடமுள்ளதாகிய, வானகம் கை உறினும் - சொர்க்கம் கைக்குவந்தாலும், விழுமியோர் - பெரியோர் [மானமுள்ளவர்], மானம் அழுங்க வரின் - மானம் கெட்டுப் போக நேரிட்டால், வேண்டார் - (அந்தச் சுவர்க்கத்தையும்) விரும்பமாட்டார், எ-று.
மானத்தாழ்வு வருவதாயிருந்தால் எப்படிப்பட்டதையும் விரும்பமாட்டார் மானிகள் என்றதாம்.
தொலைச்சிய - தொலைச்சு - பகுதி எனக் கொள்ள வேண்டும்.
31. இரவச்சம்
[அதாவது மானங் கெடுவதற் கேதுவாகிய இரப்பதை அஞ்ச வேண்டுமென அதன் இயல்பைத் தெரிவிப்பது; இரவுக்கு அச்சம் என விரியும்.]
301. நம்மாலே ஆவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.
(இ-ள்.) இ நல்கூர்ந்தார் - இந்தத் தரித்திரர், நம்மாலே -, ஆவர் - (ஆக்கமுள்ளவ) ராவார்கள், எஞ்ஞான்றும் - எப்போதும், தம்மால் ஆம் - தங்களால் சம்பாதித்த, ஆக்கம் இலர் - பொருளில்லாதவர், என்று -, தம்மை - தங்களை, மருண்ட மனத்தார் பின் - (மேலானவராகமதித்து) மயங்கின மனமுள்ளவர் பின்னே, தெருண்ட அறிவினர் தாமும் - தெளிந்த அறிவை யுடையவர்களும், செல்பவோ - செல்வார்களோ, எ-று.
நாம் கொடுத்துத்தான் தரித்திரர்க்குப் பணமுண்டே யன்றி அவர்களுடைய சொந்த முயற்சியால் ஒருகாசும் கிடையாது என்று தம்மிடத்திற் பெருமை பாராட்டுகிற அற்பரித்து இரக்கும் பொருட்டு விவேகிகள் செல்லார்கள் என்பதாம்.
பிறர் நல்குதலை மேற்கொண்டு செல்பவர் நல்கூர்ந்தார்; நல்கு - முதனிலைத் தொழிற்பெயர். இல் என்பது ஒரு பொருளின் சம்பந்தத்தை மறுக்கும்போது செயப்படுபொருள் குன்றாததாகவும் பொருளையே மறுக்கும்போது செயப்படுபொருள் குன்றியதாகவு மிருக்குமாதலால் ஆக்கம் இலர் என்பதை ஆக்கத்தை இல்லாதவர் எனவும் ஆக்கமானது இல்லாதவர் எனவும் இருவகையிலும் உரைக்கலாம். இரண்டாம் பக்ஷத்தில் "உயர்திணை தொடர்ந்த" என்கிற சூத்திர விதியை அமைத்துக் கொள்க. தம்மை மருண்ட என்பதை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு தம்மிடத்தில் மருட்சி கொண்ட எனவுமுரைக்கலாம். கடவுள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகமாய்ச் சீவனம் கற்பித்திருத்தலால் நாம் கொடுக்கிறோமென்று நினைப்பது அறிவின்மை. தாமும் - உயர்வு சிறப்பும்மை. தாம் - அசை.
302. இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.
(இ-ள்.) ஒருவன் -, இழி தக்க செய்து - தாழ்வதற்கேதுவான காரியங்களைச் செய்து, ஆர உணலின் - நிறையப் புசிப்பதினும், பழி தக்க - பழிக்கும்படியான காரியங்களை, செய்யான் - செய்யாதவனாகி, பசித்தல் - பசியோடிருத்தல், தவறோ - குற்றமோ, ஒருவன் அழிந்து பிறக்கும் பிறப்பு - ஒரு மனிதன் அழிந்து மறுபடி பிறக்கும்படியான பிறப்பு, விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ - கண்ணைத் திறந்து இமைக்கோட்டுதலாகிய அளவை உடையதல்லவா, எ-று.
இவ்வுடம்புபோனால் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினைக்க வேண்டாம். சீக்கிரத்தில் கிடைக்கும். ஆதலால் தாழ்வானவை செய்து பிழைப்பதினும் இறப்பது நலம் என்பது கருத்து.
இழித்தக்க காரியங்களாவன - யாசிப்பதற்குச் செய்யு முயற்சிகள். இழி பழி என்பவை முதனிலைத் தொழிற்பெயர்கள். இழித்தற்குத் தக்க பழித்தற்குத் தக்க என விரித்துக் கொள்க. ஆர என்னும் வினையெச்சம் இங்கு உணலின் என்பதற்கு உரியா நின்றது, அழித்து - வலித்தல் விகாரம். பிறக்கும் பிறப்பு - பிறக்கிற தொழில்.
303. இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லால்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
(இ-ள்.) இல்லாமை - பொருளில்லாமையானது [வறுமை], கந்து ஆ - ஏதுவாக [அதுபற்றி என்கிறபடி], இரவு - இரப்பதை, துணிந்து - தெளிந்து, ஒருவர் - [எவராகிலும்] ஒருவர், சிறு நெறி - (யாசிப்பதாகிய) அற்பவழியில், செல்லாரும் அல்லர் - நடவாமலுமிரார்; புல்லா - தழுவிக் கொண்டு, அகம் புகுமின் - எமது வீட்டிற்கு வாருங்கள், உண்ணுமின் - சாப்பிடுங்கள், என்பவர் மாட்டு அல்லால் - என்கிறவரிடத்து அல்லாமல், மேல் - மேலானவர், முகம் - மற்றவரிடத்தில், புகுதல் - செல்வத்தை, ஆற்றுமோ - பொறுப்பார்களோ; [முகம்புகுதல் - முகங்காட்டுதலுமாம்], எ-று.
வறுமையால் யாசிக்கும்படி நேரிட்டாலும் கண்டவிடத்துச் செல்லாமல் ஆதரிப்பவரிடமே செல்லுவர் மேலானவர்.
இல்லாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்; இல் - பண்படி, பகுதி. ஆகாரம் - சாரியை, மை - விகுதி. இரவு - தொழிற்பெயர், உ - விகுதி. செல்லாரும் - இழிவு சிறப்பும்மை. மேல் - ஆகுபெயர்; சொல்லளவில் அஃறிணையாதலால் ஆற்றும் என்கிறவினை சேர்க்கப்பட்டது.
304. திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வுள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்று
எருத்திறைஞ்சி நில்ல தாம் மேல்.
(இ-ள்.) திரு - லக்ஷ்மியானவள், தன்னை நீப்பினும் - தன்னைக் கைவிட்டாலும், தெய்வம் செறினும் - தெய்வமானது கோபித்தாலும், உருத்த - (சோர்வின்றி) எழுந்த, மனத்தோடு - மனதினால், உயர்வு உள்ளின் அல்லால் - தன் மேன்மையை நினைப்பதேயல்லாமல், அருத்தம் செறிக்கும் - பணத்தை வீணாச் சேர்த்துவைக்கிற, அறிவு இலார் பின் சென்று - விவேகமில்லாதவரிடத்திற் போய், எருத்து இறைஞ்சி - தலைகுனிந்து, நில்லாது - நிற்கமாட்டார், மேல் - மேலானவர், எ-று.
பெரியோர் தமக்குத் தரித்திரமும் பல சங்கடங்களும் சேர்ந்தாலும் அதைரியப்படாமல் தமது மேன்மையை எண்ணி இரவாதிருப்பார்களே யல்லாமல் யாசகர்க்கு உபயோகப்படுத்தாமற் பணஞ் சேர்த்து வைக்கிற அவிவேகிகளிடத்திற் போய் தலைவணங்கி நிற்கமாட்டார் என்பதாம்.
உருத்த - உரு - பகுதி, த் - இறந்த கால இடைநிலை, மற்றொன்று சந்தி, அ - பெயரெச்ச விகுதி. உள்ளின் என்பது வினையெச்சமாத் தோன்றினாலும் 'நீ வரவேண்டும்' முதலான விடத்திற் கொள்வது போல் தொழிற்பெயராக் கொள்க; வினையெச்சமாகவே கொண்டால் பொருள் பொருந்தாமை காண்க. பின் - ஏழனுருபு. எருத்து - ஆகுபெயர், பிடர்வணங்க என உரைக்கினும் பொருந்தும்.
305. கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை; - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்னை கொல்
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.
(இ-ள்.) கரவாத - (தனக்கு உள்ளதை) மறைக்காத, திண் அன்பின் - உறுதியான அன்பினாலே, கண் அன்னார்கண்ணும் - (தமக்குக்) கண்போன்றவரிடத்தும், இரவாது வாழ்வது - யாசிக்காம லிருந்து வாழ்வது, வாழ்க்கை ஆம் - நல்ல வாழ்வாகும். இரவினை - இரத்தலை, உள்ளுங்கால் - நினைத்தால், உள்ளம் உருகும் - மனம் உருகிப் போகின்றது; கொள்ளும் கால் - (ஒருவர் கைப்பொருளைக்) கொள்ளும் போது, கொள்வார் குறிப்பு - பெற்றுக் கொள்ளுகிறவருடைய மனம், என்கொலோ - எப்படிப்பட்டதா யிருக்குமோ, எ-று.
மனமொத்தவரிடத்தும் இரப்பதாகாது, ஏனெனில் இரத்தலை நினைக்கும் போதே மன முருகுமானால் பொருளை ஒருவர் கொடுக்கப் பெற்றுக் கொள்ளும் போது எப்பாடுபடுமோ என்பதாம். என்ன எண்ணிப் பிறர்பொருளைக் கொள்ளுகிறார்களோ எனவும் கருத்துக் கூறலாம்.
குறிப்பு - அதன் கருவிக்கு ஆகுபெயர். ஆல் - அசை. உள்ளுங்கால், கொள்ளுங்கால் - இரண்டும் பெயரெச்சத் தொடர், இரவினை - இரவு - தொழிற்பெயர், இன் - சாரியை, ஐ - உருபு.
306. இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற்கு - என்னைகொல்
காதல் கவற்றும் வனத்தினாற் கண்பாழ்பட்டு
ஏதில் அவரை இரவு.
(இ-ள்.) இன்னா - துன்பங்கள், இயைக - (நமக்கு) சேரட்டும், இனிய - இன்பங்கள், ஒழிக - நீங்கட்டும், என்று -, என்று -, தன்னையே - தன் மனதையே, தான் -, நிரப்ப - நிரம்பச் செய்வதனால் [திருப்திப் படுத்துவதனால்], தீர்வதற்கு - தீர்ந்து போம்படியான வறுமைக்காக, காதல் கவற்றும் - பணத்தாசை கவலைப் படுத்துகிற, மனத்தினால் -, கண்பாழ்பட்டு - அறிவு அழிந்து, ஏதிலவரை - சம்பந்த மில்லாதவர்களை, இரவு - இரப்பது, என்னகொல் - என்ன பிரயோசனம், எ-று.
இன்பத்தைத் துன்பம் போலவும் துன்பத்தை இன்பம் போலவுமெண்ணி மனதிற் திருப்தியடைந்தால் தரித்திரத் துன்பம் நீங்குவதாயிருக்க அயலாரிடம் சென்று இரப்பதேன்; அது செய்யவேண்டாம் என்கிறபடி.
இன்னா - இனிமையடியாகப் பிறந்த எதிர்மறைப் பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர். "இனையவும் பண்பிற் கியல்பே" என்றதனால் பகுதி இகரமுங் கெட ஆகாரவிகுதி புணர்ந்தது; "ஆவேயெதிர்மறைக் கண்ணதாகும்". இனிய - அந்தப் பண்பில் உட்ன்பாட்டு வினையாலணையும் பெயர். இயைக, ஒழிக - பிரார்த்தனையின் கண் வந்த வியங்கோள். தான் இரப்ப எனப்பிரித்து தன் மனதைத் தான் வேண்டிக் கொள்வதனால் என்றுரைப்பாரு முண்டு. தீர்வதற்கு - வினையாலணையும் பெயர். கொல் - அசை. கண் - ஆகுபெயர். ஏதும் [யாதொரு தொடர்ச்சியும்] இல்லாதவர் ஏதிலவர், அகரம் - சாரியை.
307. என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்து
என்றும் அவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட!
இரப்பாரை எள்ளா மகன்.
(இ-ள்.) குன்றின் பரப்பு எல்லாம் - மலையினுடைய இடங்களிலெல்லாம்; பொன் ஒழுகும் - பொன்னானது ஓடும்படியான, பாய் - பாய்கின்ற, அருவி நாட - மலைவெள்ளத்தை யுடைத்தான நாட்டை யுடையவனே!, இ உலகத்து - இவ்வுலகத்தில், என்றும் - எக்காலத்திலும், புதியார் - புது மனிதர், பிறப்பினும் - பிறந்து கொண்டிருந்தாலும், என்றும் -, பிறக்கலான் - பிறவாதவன், அவனே -, (எவனென்றால்), இரப்பாரை - யாசிப்பாரை, எள்ளாமகன் - இகழாத மனிதன்.
யாசகரை அவமதியாமல் ஆதரிப்பவனே புதிது புதிதாய் மனிதர் பிறந்து கொண்டிருக்கு மிவ்வுலகத்தில் பிறவாத நற்கதியடைவான் என்பதாம்.
பொன்னின் தொழிலைத் தெரிவிக்கிற ஒழுகும் என்னும் பெயரெச்சம் அருவியாகிய இடப்பெயரோடு முடிந்தது. புதியார் - புதுமையில் மை கெட்டு உகரம் இகரமாய் நிற்க, ஆர் விகுதி புணர்ந்தது. உம் - இழிவு சிறப்பு. பிறக்கலான் - பிற - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆன் - ஆண்பால் விகுதி, எதிர்கால உடன்பாட்டெதிர்மறை வினைமுற்று, இப்பாட்டு இரத்தலிலுள்ள துன்பத்துக் கிரங்கிக் கொடுப்போரைப் புகழ்ந்தது. இச்சங்கதித் தொடர்ச்சியால் சொல்லப்பட்டது.
308. புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென்று இரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.
(இ-ள்.) புறத்து - வெளியிலே [உடம்பில்], தன் இன்மை - தனது வறுமையானது, நலிய - வருத்த, அகத்து - மனதில், தன் நல்ஞானம் - தனது நல்ல விவேகத்தை, நீக்கி - தள்ளி, நிறீஇ - (அவிவேகத்தை) நிலைப்படுத்தி, ஒருவனை - ஒரு தனவானை, எனக்கு -, ஈயாய் என்று - (எதாகிலும்) கொடு என்று, இரப்பானேல் - யாசிப்பானாகில், மாற்றிவிடின் - (அந்தத் தனவான் இல்லையென்று) மறுத்துவிட்டால், அ நிலையே - அவ்விடத்திலேயே, மாயானோ - இறந்து போக மாட்டானா, எ-று.
தரித்திரம் பற்றி உடம்பு வருந்துவதனால் விவேகங்கெட்டு ஒருவனிடம் போய் இரக்க அவன் இல்லையென்று சொன்னால் அந்த யாசகன் உடனே சாவான் என அவனுக்கு இரங்கிச் சொன்னபடி. அவன் அங்கேயே இறந்தால் நல்லதென வெறுத்துச் சொன்ன தெனவுமாம்.
நலிய என்னுந் தன்வினை இங்கு பிறவினையாக் கொள்ளப்பட்டது. நிறீஇ - நிறுவ என்னும் வினைப்பகுதியில் ஈறுகெட்டு உகரம் இகரமாகி அளபெடுத்து வினையெச்சமாயிற்று. ஓ - இரக்கத்தின்கண் வந்தது.
309. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுதல் அல்லால் - பரிசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற்கு இன்னாதே
பையத்தான் செல்லும் நெறி?
(இ-ள்.) ஒருவர் -, ஒருவரை - மற்றொருவரை, சார்ந்து - சேர்ந்து, ஒழுகல் ஆற்றி - நடத்தலைச் செய்து, வழிபடுதல் - வணக்கமாயிருப்பது, வல்லுதல் அல்லால் - முறைமை யல்லாமல், பரிசு அழிந்து - யோக்கியதை கெட்டு, என்னானும் செய்யீரோ - ஏதாகிலு முதவி செய்யமாட்டார்களோ, என்னும் சொற்கு - என்று சொல்லுகிற சொல்லைக் காட்டிலும், தான் -, பைய - துன்பமுண்டாக, செல்லும் நெறி - செல்லத்தக்க வழியானது, இன்னாதே - இனிமையா யிராதா, எ-று.
ஒருவன் ஒரு பணக்காரனைச் சேர்ந்து தக்கபடி நடந்து வணக்கத் தோடிருத்தல் உலகத்தின் முறையல்லாமல் அவனை யாசித்தல் கூடாது. அதனினும் தான் எங்கேயாகிலும் தான் எங்கேயாகிலும் வருத்தப் பட்டுப் போகலாம் என்றபடி.
நெறி என்பதற்குத் தவஞ்செய்யப் போகும்வழி எனப் பொருள் கூறின் தவநெறியை இழித்துக் கூறியதாம். ஒருவனைச் சார்ந்து வணங்கியிருக்க அவனே ஏதாகிலும் உதவிசெய்தால் கொள்ளலாமல்லது வாய்திறந்து யாசித்தல் இழிவென்றபடி, இதுவும் அதமபக்ஷமாச் சொன்னது.
ஆனும், ஏனும், ஆகிலும் இப்படிப்பட்ட சொற்கள் உம்மையோடு கூடி விகற்பப்பொருளில் வரும்; ஐயப்பொருளென்பது மிதுவே. சொற்கு - குவ்வுருபு எல்லைப்பொருளில் வந்தது. இன்னாதே - ஏகாரம் - வினா; எதிர்மறையாகி இனியதென்னும் பொருள் பயக்கும். பைய - துன்பப் பொருளதாகிய பை என்னும் வினைப்பகுதியிற் பிறந்த வினையெச்சம், அல்லது பசுமையின் விகாரமாகிய பை என்பதின் மேல் பிறந்த குறிப்பு வினையெச்சமுமாம்; எளிமையாக என்பது பொருள்.
310. பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க; - கிழமை
பொறாஅர் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்து
அறாஅச் சுடுவதோர் தீ.
(இ-ள்.) பழமை - ஆதிகால சிநேகத்தை, கந்து ஆக - ஆதாரமாக, பசைந்த வழியே - சிநேகித்த விடத்தில், தான் -, யாதானும் கிழமை - ஏதாகிலும் ஒரு தகுந்ததை, செய்க - செய்ய வேண்டும்; அவர் - கிழமை செய்யப் பெற்றவர், கிழமை பொறர் எனில் - அந்த வுரியதை ஏற்றுக் கொள்ளாமற் போனால், (அது) தன்நெஞ்சத்து - தன் மனதில், பொத்தி - பதிந்து, அறா சுடுவது - நீங்காமல் சுடும்படியான, ஓர் தீ - ஒரு அக்கினியாகும், எ-று.
ஒருவர் பழமை பற்றி வந்தால் அவருக்குத் தக்கதே தாகிலும் செய்ய வேண்டும். அதை அவர் அதிருப்தியால் ஏற்றுக் கொள்ளாமற் போனால் செய்தவருக்கு எப்போதும் மன வருத்தமாயிருக்கும் என்றபடி.
பொறுத்தல் - சுமத்தல் எனக்கொண்டு, ஏற்றுக் கொள்ளாமற் போனால் என உரைக்கப்பட்டது.
பசை - பகுதி, ஒட்டுதல், பொறாஅர், அறாஅ - இரண்டிடத்தும் அளபெடை பாட்டினோசையை நிறைக்க வந்தவை.
32. அவையறிதல்
[அதாவது தன்னுடையதும் பிறருடையதுமான கல்வி வல்லமைகளை அறிந்து பேசவேண்டு மென்பதைச் சொல்லுகின்றது.]
311. மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.
(இ-ள்.) மெய் ஞானம் கோட்டி - மெய்யான நூலறிவினையுடைய சபையின்கண், உறழ் வழி விட்டு - சேருகிற முறைமையை நீக்கி, ஆங்கு - அவ்விடத்தே, ஓர் அஞ்ஞானம் தந்திட்டு - அறியாமைக்கு உரிய ஒரு பேச்சைச் சொல்லி, அது - அந்தப் பேச்சையே ஆங்கு - அவ்விடத்தில், அற துழாய் - மிகவும் பரப்பி, கை ஞானம் கொண்டு ஒழுகும் - கசந்த [அருவருத்த] ஞானத்தைக் கைக்கொண்டு நடக்கிற, கார் அறிவாளர்முன் - அயோக்கியமான அறிவுள்ளவரிடத்தில், சொல் ஞானம் - சொல்லத்தக்க ஞானத்தை, சோர விடல் - தளரவிட வேண்டும், எ-று.
விவேகிகள் சபையிற் சென்று தெரிந்து கொள்வதை விட்டு அங்கே மூடப்பேச்சைப் பேசி அதையே ஸ்தாபிக்கிற மூடர்களுக்கு நல்ல விவேகமொழிகளை உறுதிப்படுத்திச் சொல்லாமல் விடவேண்டுமென்பதாம்.
இது தன் மூடப்பேச்சையே ஸ்தாபிக்கிற தீப்புலவனைக் குறித்துச் சொல்லியது. துழாய் - வினையெச்சம், துழாவு - பகுதி, உகரம் கெட்டு யகர விகுதி புணர்ந்தது. கைஞ்ஞானம் - வினைத்தொகைத் தொடரானாலும் ஞகரம் விரித்தல் விகாரமாய் வந்தது. முன் - ஏழனுருபு, கோடற் பொருளில் வந்தது. இரண்டாம் ஆங்கு அசையுமாம்.
312. நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
(இ-ள்.) நா பாடம் சொல்லி - வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, நயம் உணர்வார் போல் - சாரம் அறிந்தவர்களைப் போலே, செறிக்கும் - (பிறரைச்) சேர்க்கிற, தீ புலவன் - அயோக்கியமான புலவனை, செறிவு உடையார் - அடக்கமுடைய நற்புலவர், சேரார் - சேரமாட்டார்கள்; தீ புலவன் -, கோட்டியுள் குன்ற - சபையில் இளைத்துப் போக, குடி - (நற்புலவன்) வமிசத்தை, பழிக்கும் - தூஷிப்பான், அல்லாக்கால் - அல்லாவிட்டால், தோள் - புஜங்களை, புடைக்கொள்ளா - தட்டிக் கொண்டு, எழும் - (சண்டைக்கு) எழுந்திருப்பான், எ-று.
தன் வாய்க்கு வந்த எதையோ சொல்லி உட்கருத்தறிந்தவன் போலே பாவித்துச் சனங்களைக் கூட்டுகிற டம்பக்காரனான புலவனிடத்து அடக்கமுடையோர் பேசலாகாது, ஏனெனில் அவன் தன் பேச்சுக்குத் தாழ்மை வந்தால் நியாயஞ் சொன்னவனை வமிசத்தோடு பழிப்பான் அல்லது சண்டைக்கு எழுவான் என்றபடி.
செறிக்கும் - பிறவினைப் பெயரெச்சம். தீப்புலவற் சேரார் - "இயல்பின் விகாரமும்" என்கிற விதியால் உயர்திணைப் பெயரின் ஈறுதிரிந்தது. குன்ற - நிகழ்காலம் புடை - முதனிலைத் தொழிற்பெயர். கொள்ளா - செய்யா என்னும் வாய்ப்பாட்டெச்சம்.
313. சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
(இ-ள்.) சொற்று - பேசுவதில், ஆற்று - சக்தியை, கொண்டு - ஆதாரமாகக் கொண்டு, சுனைத்து - தினவினால், எழுதல் காமுறுவர் - (வந்து செய்ய) எழுந்திருப்பதை விரும்புகிறவர்களுமாய், கற்று ஆற்றல் - (பிறர்) கற்றிருக்கும் சாமர்த்தியத்தையும், வன்மையும் - (பிரசங்கித்தல் முதலியவற்றுள்) வல்லமையையும், தாம் தேறார் - தாம் அறிந்து தெளியாதவருமாய், கற்ற - (தாம்) கற்றவற்றை, செல - (பிறர் மனதில்) புகும்படி, உரைக்கும் ஆறு - சொல்லும் விதத்தை, அறியார் - அறியாதவர்களுமாய், தோற்பது அறியார் - தோற்கும்படி யானதையும் தெரிந்து கொள்ளாதவர்களுமாய், பல உரைக்கும் - பலவற்றை (வீணாச்) சொல்லுகிற, மாந்தர் - மனிதர், பலர் - அநேகர் (இருக்கிறார்கள்), எ-று.
தமக்கு மூச்சுவிடாமல் பேசும் வல்லமை யிருப்பதைப் பற்றி வாய்பதைத்தலால் பிறர் நன்றாய்க் கற்றுப் பேசுந் திறத்தையும் அறியாமல் தெரிந்ததைப் பிரருணரச் சொல்லவும் தெரியாமல் எதனாலே தாம் தோல்வி யடைவார்களோ அதுவுந் தெரியாமல் விணாய்ப் பல பேச்சுப் பேசுகிற மூடரிடமும் சேரலாகாது என்றபடி.
பலவுரைக்கு மாந்தர் பலர் என்பதை எழுவாயாவைத்து காமுறுவர் தேறார் அறியார் எனவு முடிக்கலாம்.
சொற்று - தொழிற்பெயர், று - விகுதி, ஆற்று - முதனிலைத் தொழிற்பெயர். சுனைத்து - து - விகுதி, தொழிற்பெயர்; சொறிதல் பொருள், அதன் காரணமாகிய தினவுக்கு வந்தது. தோற்பது - இதுவும் அப்படியே.
314. கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.
(இ-ள்.) கற்றதும் இன்றி - கற்குந் தொழிலில்லாமல் [கற்காமல்], கணக்காயர் பாடத்தால் - பண்டிதராகிய உபாத்தியார் (பிறருக்குச் சொல்லிக் கொடுத்த) பாடத்தினால், ஓர் சூத்திரம் - ஒரு சூத்திரத்தை, பேதை - அறிவில்லாதவன், பெற்றது - பெற்றுக் கொண்டவனாகி, அதனை - அச் சூத்திரத்தை, நல்லாரிடை - நல்ல வித்துவான்கள் நடுவே, புக்கு - புகுந்து, நாணாது சொல்லி - வெட்கப்படாமல் சொல்லி, தன் புல் அறிவு - தன்னுடைய ஈனமான அறிவை, காட்டி விடும் - வெளிப்படுத்துவான், எ-று.
பேதையானவன் தான் உபாத்தியாயருக்கு வழிபட்டுக் கற்காமல் பள்ளியில் உபாத்தியாயர் பிறருக்குச் சொல்லுங்கால் தற்செயலாய்த் தெரிந்ததொரு சூத்திரத்தைக் கற்றோர் சபையில் நாணாமல் சொல்ல இவனை யாவரும் மூடனென்று இகழ்வார்களென்பதாம்.
இதற்குப் பள்ளியில் சொன்ன பாடத்தால் என்பபொருள் கூறிப் பள்ளியை இழிவாகக் காட்டுவாரு முண்டு. கற்றதூஉம் - அளபெடை இன்னிசைக்கு வந்தது. கணக்கை ஆய்ந்தவர் - கணக்காயர்; கணக்கு - எண்ணும் எழுத்துமாம். பெற்றது - முற்றெச்சம்; இழிவினால் பேதைக்குக் கூறப்பட்டது; "உவப்பினு முயர் வினுஞ் சிறப்பினுஞ் செறலினும் இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே" ஆம், மற்று - இரண்டும் அசை, புக்கு - புகு என்னும் பகுதி ககரமிரட்டிக் காலங்காட்டி உகர விகுதி பெற்ற வினையெச்சம்.
315. வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.
(இ-ள்.) வென்றி பொருட்டால் - பிறனை வெல்வதாகிய காரணத்தால், விலங்கு ஒத்து - மிருகங்களோடு சமானமாக, மெய் கொள்ளார் - உண்மைப் பொருள் கொள்ளாதவராகி, கன்றி கறுத்து - மிகக் கோபித்து, எழுந்து - (போருக்கு) ஆயத்தமாகி, காய்வாரோடு - ஆக்கிரகப் படுவாரோடு, ஒன்றி - சேர்ந்து, வித்தகம் உரை - கல்வியைச் சொல்வதற்கு, எழுவார் - எத்தனப் படுபவர்; சுரை வித்து போலும் - கரையின் விரை போன்ற, தம் பல் - தம்முடைய பற்களை, கையுள் - தமது கையிலே, காண்ப - காண்பார்கள், எ-று.
எதையாகிலும் சொல்லி எதிரியை ஜயிக்கப் பார்க்கிறவர்களுக்கு நற்கல்வியைச் சொல்லப் போனால் பல்லை உதிர்த்துக் கையிற் கொடுப்பார்கள். பல் உதிரும்படி அடிப்பார்கள் என்பதாம்.
உரை - முதனிலையே வினையெச்சப் பொருட்டாய் வந்தது. "வினைமுற்றே வினையெச்சமாகலும்" என்கிற சூத்திரத்தின் உரையைக் காண்க. வென்றிப் பொருட்டு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கொள்ளார் - முற்றெச்சம். கன்றிக் கறுத்து - "ஒரு பொருட் பன்மொழி சிறப்பினின்வழா" என்பதனால் அமைந்தது. எ - அசை.
316. பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
(இ-ள்.) பாடமே ஓதி - (ஒருபாட்டை) வாய்பாடமா மாத்திரஞ் சொல்லி, பயன் தெரிதல் - அதன் பொருளை அறிவதிலே, தேற்றாத - தேறாத [தெளிவில்லாத], மூடர் -, முனி தக்க - கோபிக்கும்படியான சொற்களை, சொல்லுங்கள் - சொல்லும்போது, கேடு அறு சீர் - கேடில்லாத மேன்மையையுடைய, சான்றோர் - பெரியோர், அவரை ஈன்றாட்கு - அந்த வைதவரைப் பெற்ற தாய்க்கு, இறப்ப பரிந்து - மிகவும் இரங்கி, சமழ்த்தனர் நிற்ப - வெட்கினவராகி நிற்பார்கள், எ-று.
பாடல்களின் பொருள் நுட்ப மறியாத மூடர் திட்டினால் பெரியோர் வெட்கி நிற்பார்கள், ஏனென்றால் இந்த மூடப்பிள்ளையைப் பெற்றவள் என்ன பயனடைவாளென்று என்பதாம். அன்றியும், நாம் இவனைச் சபிப்பதனால் இவன் கேடுற இவன் தாய் வருந்துவாளே என்று சும்மா நிற்கிறார்களெனவுமாம்.
பாடமே - ஏகாரம் - பிரிநிலை. முனிதக்க - முனிதலுக்குத் தக்க; முனி - முதனிலைத் தொழிற்பெயர். நிற்பவே - ஏ - அசை.
317. பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.
(இ-ள்.) எல்லா நூல் - சாஸ்திரங்களெல்லாம், பெறுவது கொள்பவர் - பெறத்தக்க பொருளைக் கொள்கிற வேசிமாருடைய, தோள் போல் - புஜங்களைப் போல, நெறி பட்டு - (ஆசிரியன்) வழிப்பட்டு, கற்பவர்க்கு - கற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு, எளிய - சுலபத்தில் கிரகிக்கத் தக்கன ஆம்; அ முறி புரை மேனியர் - தளிரை ஒத்த மேனியை யுடைய அந்த வேசிமாருடைய, உள்ளம் போன்று - மனதை ஒத்து, மற்று யார்க்கும் - (அப்படி கல்லாத) எவர்களுக்கும், அறிதற்கு அரிய பொருள் - அறிய சுலபமாகாத பொருளுடையன ஆம்; எ-று.
கிரமப்படி கற்பவர்க்கு எந்த நூலும் சுலபமாம்; அப்படி கற்காதவர்களுக்கு எதுவும் கடினமாம் என்றபடி.
எளிய - எளிமைப் பண்படியாகப் பிறந்த பலவின்பாற் குறிப்பு வினைமுற்று. அரிய - அருமையடியாப் பிறந்த பெயரெச்சம்.
318. புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
(இ-ள்.) புத்தகமே சால தொகுத்தும் - புத்தகங்களை மாத்திரம் மிகுதியாகச் சேர்த்தும், பொருள் தெரியார் - (அவற்றின்) பொருளை அறியாதவராகி, உய்த்து - கொண்டு வந்து, அகமெல்லாம் நிறைப்பினும் - வீடெல்லாம் நிறைத்தாலும், அவற்றை போற்றும் புலவரும் வேறே - அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறா யிருப்பார்கள்; பொருள் தெரிந்து - அவற்றின் அர்த்தங்களை அறிந்து, தேற்றும் புலவரும் வேறு - (பிறரை) தேறச் செய்யும் வித்துவான்களும் வேறாயிருப்பார்கள், எ-று.
புத்தகங்களை மிகுதியாச் சேர்த்ததனாலே புத்தக பரிபாலகராவார்களே யன்றி வித்துவான்களாக மாட்டார்கள். அவற்றின் பொருளைத் தாமறிந்து பிறர்க்குப் போதித்துத் தெளியச் செய்பவரே வித்துவான்களாவார் என்பதாம்.
புத்தகமே - ஏகாரம் - பிரிநிலை. அவர்களைப் புலவர் என்றது பரிகாசம். தொகுத்தும் - உம் - உயர்வு சிறப்பு, இழிவு சிறப்பெனக் கொள்ளுவாரு முண்டு. வேறு - இடம் பால்களுக்குப் பொதுவான குறிப்பு முற்று. "வேறில்லை யுண்டைம் பான் மூவிடத்தன."
319. பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?
(இ-ள்.) பழிப்பு இல் - குற்றமில்லாத, நிரை ஆ மா - கூட்டமாகிய காட்டுப்பசுக்களை, சேர்க்கும் - தம்மிடத்திலே சேரச் செய்கிற, நெடு குன்ற நாட - உன்னதமான மலைகளுள்ள நாட்டையுடைய அரசனே!, பொழிப்பு - (கருத்து விள்ளும்படி தொகுத்துச் சொல்லுகிற) பொழிப்புரையும், அகலம் - (பதப்பொருள் முதலியவற்றை நியாயங்காட்டி விரித்துச் சொல்லுகிற) அகலவுரையும், நூல் எச்சம் - (நூலில் சொல்லப் படாமற் குறைந்த விஷயங்களை எடுத்துச் சொல்லும்) - விசேஷவுரையும், நான்கின் - ஆகிய நான்கு வகையிலும், கொழித்து அகலம் காட்டாதார் சொற்கள் - நன்றாய் ஆராய்ந்து பொருள் விரிவைக் காட்ட மாட்டாதவர் செய்த நூல்கள், நூலிற்கு - நூல்களுக்கு, நன்கு உரை ஆமோ - நல்லதான உரையாகுமோ [ஆகாது], எ-று.
பல வகையிலும் பொருளை விரித்துக் காட்ட மாட்டாதவர்கள் உரை சிறப்பில்லை என்பதாம். மலைகள் தாமிருக்கும் செழிப்பினால் பசுக்களை வந்து சேரும்படி செய்கின்றன என மலைகளைச் சிறப்பித்தபடி.
நன்கு - பண்புப் பெயர், உரைக்கு விசேஷணம்.
320. இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.
(இ-ள்.) இல் பிறப்பு இல்லார் - நற்குடிப்பிறப்பு இல்லாதவர், எனைத்து நூல் கற்பினும் - எவ்வளவு சாஸ்திரங்களை வாசித்தாலும், பிறர் சொல்லை காக்கும் - (கல்லாத) பிறருடைய சொற்களை இகழாமல் காக்கும்படியான, கருவியரோ - (அடக்க முதலான) சாதனங்களை உடையவரோ, [அல்லர்], இல் பிறந்த நல் அறிவாளர் - நற்குடியிற் பிறந்த விவேகிகள், நவின்ற நூல் தேற்றாதார் - (பெரியோர்) செய்த நூல்களில் தெளியாதவருடைய, புல் அறிவு - ஈனமான அறிவை, தாம் அறிவது இல் - (உன்னிடத்து) தாம் அறிந்து கொள்வதுமில்லை. [உபேக்ஷையா யிருப்பார்கள் என்றபடி], எ-று.
குல சம்பிரதாயத்திற் பிறவாதவர்கள் எவ்வளவு கற்றும் பிறர் சொல்வதில் நேர்ந்த வழுக்களைத் தூற்றுவாரேயல்லது வெளிப்படுத்தாமல் விடார். குலப்பிறப் புள்ளவர்களோ குல சம்பிரதாயத்தால் அவ்வழுக்களைக் கவனிப்பது மில்லை; ஆன போது வெளியிட்டுத் தூற்றுவதேது என்றபடி.
எனைத்து - எனை என்பதோ ரிடைச்சொன்மேல் து - விகுதி வந்தது; ஐ - சாரியை எனவுமாம். பிறரை என்பதிலுள்ள ஐ - சாரியை எனவுமாம். பிறரை என்பதிலுள்ள ஐ யுருபைப் பிரித்துச் சொல் என்பதோடு கூட்டிக் கொள்ள வேண்டும். தேற்றாதார் - இது பிறவினையாதலின் தம்மை என ஓர் செயப்படுபொருளை வருவித்து உரைத்துக் கொள்க. இல் - இல்லை யென்பதில் ஐ விகுதி குன்றியது. இல்லை என்பது செயப்படுபொருள் குன்றியதும் குன்றாததுமா யிருப்பதனால் அறிவதில் என்றதை எழுவாய்த் தொடராகவேனும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவேனும் கொள்க. இதனால் கல்வி மாத்திரமல்ல இற்பிறப்பு முடையவர் கோட்டியிற் சென்றதால் தான் இகழ்ச்சி நேராது என்று அறிவுறுத்தியதாம். முந்தி ஆறு பாட்டால் அயோக்கிய சபையின் திறத்தைக் கற்றாலல்லது கல்வித்திற முண்டாகாதென்று முந்திச் சொன்னதின் தொடர்ச்சியாற் காட்டி அயோக்கிய சபையையும் யோக்கிய சபையையும் விவரித்தார் என அதிகாரத்துக்கு இசையக் கூட்டிக் கொள்க.
33. புல்லறிவாண்மை
[அதாவது புல் - அற்பமான, அறிவாண்மை - அறிவை ஆளுந்தன்மை. அதாவது, சாரத்தையும், அசாரத்தையும் அறிந்து கொள்ளாமையோடு கர்வப்படுவதுமாம்.]
321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.
(இ-ள்.) அருளின் - கிருபையினால், அறம் உரைக்கும் - தருமங்களைச் சொல்லுகிற, அன்பு உடையார் - (யாவரிடத்தும் இயற்கையில்) அன்புள்ளவர்களுடைய, வாய் சொல் - வாக்கிலிருந்து - (தமக்கு) ஒரு பிரயோசனமாக ஏற்றுக் கொள்வார்கள்; பொருள் அல்லா - ஒரு வஸ்துவே யாகாத, ஏழை - மூடன், அதனை - அப்பெரியோர் சொல்லை, மூழை - துடுப்பு, பால் கூழை - பாற்சோற்றினது, சுவை உணராது ஆங்கு - உருசி யறியாதது போல (அறியாமல்), இகழ்ந்து உரைக்கும் - தூஷித்துப் பேசுவான், எ-று.
பெரியோர் நற்புத்தி போதித்தால் யோக்கியர் அதைத் தமக்கொரு பேறாகக் கொள்வர், மூடரோ அதைத் தூஷிப்பார் என்றதாம்.
கூழை - வேற்றுமை மயக்கம். உணராது - உணராத, மூழை ஆங்கு எனவு முரைக்கலாம். உணராது - வினையாலணையும் பெயர்; மூழை கருத்தாவான போது தொழிற்பெயர்.
322. அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.
(இ-ள்.) தோல் கவ்வி தின்னும் - தோலைக் கவ்வித் தின்னு கொண்டிருக்கிற, குணுங்கர் நாய் - புலையருடைய நாயானது, பால் சோற்றின் -, செவ்வி கொளல் - ருசியைக் கொள்ளுதலிலே, தேற்றாது ஆங்கு - தெளிவில்லாதது போலே, அவ்வியம் இல்லார் - பொறாமை முதலிய மனக்கோட்ட மில்லாதவர், அறத்து ஆறு உரைக்கும் கால் - தருமமார்க்கங்களைச் சொல்லும் போது, செவ்வியர் அல்லார் - நற்குண மில்லாதவர்கள், செவி கொடுத்தும்-, கேட்கலார் - கேளார்கள், எ-று.
இதிலும் முந்தியபாட்டின் கருத்தே அமைந்தது. கவிகள் வெவ்வேறாகையால் ஒரு விஷயத்தையே பலவிதத்திற் கூறுதல் கவித்திற மெனினுமாம். செல்வருடைய நாயாகில் நல்லுணவு நின்றிருக்கும். குணுங்கர் நாயாதலின் அஃதில்லை; தோலைத் தின்கின்றது என்றபடி செவிகொடுத்தும் - செவிகொடுப்பது போல் பாவனையே யல்லது அஃதில்லை என்பது கருத்து.
உம்மை - இழிவு சிறப்பு. கேட்கலார் - கேள் - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறை விகுதி, ஆர் - பலர்பால் விகுதி.
323. இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்?
(இ-ள்.) இமைக்கும் அளவில் -, தம் இனி உயிர் - தமது இனிய பிராணம், போம் மார்க்கம் - போகும் வழியை, எனைத்தானும் - எல்லாப் பிரமாணங்களாலும், தாம் கண்டு இருந்தும் - தாங்கள் பார்த்திருந்தும், தினை துணையும் - தினையளவாயினும், நன்றி - (தருமங்களைக் கேட்பதும் அங்ஙனம் நடப்பதுமாகிய) நற்காரியங்களை, புரிகல்லாத - செய்யாத, நாண் இல் மட மாக்கள் - வெட்கமில்லாத மூட ஜனங்கள், பொன்றில் என் - இறந்தாலென்ன, பொன்றாக்கால் என் - இறவாம லிருந்தாலென்ன, எ-று.
பிரத்தியக்ஷம் முதலானவைகளால் உயிர்போவது தெரிந்திருக்கவும் தருமங் கேட்டு ஆசரியாதவர் இறந்தும் நஷ்டமில்லை இறவாதிருந்தும் லாபமில்லை என்றதாம்.
எனைத்தானும் - முற்றும்மை ஆகலின் எல்லாவற்றாலும் என்று உரைக்கப்பட்டது. எனைத்தானும் போம் மார்க்கம் - எவ்வகையிலாயினும் போம் வழியை எனவு முரைக்கலாம். நன்றி-பண்படியாப் பிறந்த பெயர். நாணில் - தர்மாசரணை செய்கிற பலரைக் கண்டும் நாணாத.
324. உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.
(இ-ள்.) உள நாள் சில - வாழ்தற்கிருக்கிற நாள்கள் அற்பம், உயிர்க்கு - பிராணனுக்கு, ஏமம் இன்று - (உடம்பை விட்டுப் போக வொட்டாத) காவலில்லை; பலர் - அநேகர், தூற்றும் - வியாபிக்கச் செய்கிற, பழி - நிந்தைகள், மன்னும் - அதிகமாயிருக்கின்றன. பலருள்ளும் - உலகத்திலுள்ள பலபேருக்குள்ளும், கண்டாரோடு எல்லாம் - காணப்படுகிற யாவரோடும், நகாது - (இன்பமாய்ப் பேசிச்) சிரியாமல், ஒருவன் -, தண்டி - கெட்டு, தனி - தனியாயிருந்து, பகைகோள் - பகைகொள்ளுதல், எவன் - என்னபயன்?, எ-று.
வாழ்நாளோ சிறிது, உயிரைப் போகவொட்டாமல் தடுக்கவோ வழியில்லை; உலகத்தார் தூஷணையோ அநேகம்; இப்படியிருக்க, நமக்குக்கிட்டின நல்லோரோடு சிநேகமா யிருப்பதை விட்டு மூடன் பகை கொள்வதிற் பயனென்ன, கேடுதான் பயன் என்பதாம்.
ஆல் - மூன்றும் அசை. ஏமம் இன்று என்பதற்கு சந்தோஷம் இல்லை எனவும் பொருள் கூறலாம். கோள் - முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். ஒருவன் அங்கே போய் அடிபட்டதை, அங்கே அடிபடப்போனான் என்பது போல் பகை கொள்வதினால் வருங் கேட்டை, கெட்டுப் பகைகொளல் என்றார்; நிச்சயத்தினால் கெட்டு என இறந்தகாலம் கூறப்பட்டது [பொது. சூ.33].
325. எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.
(இ-ள்.) எய்தி இருந்த அவை முன்னர் - பலர் கூடியிருந்த சபைக்கு முன்னே, ஒருவன் -, சென்று - போய், ஒருவனை - (அங்கிருக்கும்) ஒருவனை, எள்ளி - இகழ்ந்து, வைதான் - திட்டினவனாயிருக்க, வைய வயப்பட்டான் - திட்ட உட்பட்டவன், வாளா இருப்பானேல் - (பொறுத்து) சும்மா இருப்பானானால், வைதான் - திட்டினவன், வாழுமெனின் - வாழ்ந்து கொண்டிருந்தால், வியத்தக்கான் - ஆச்சரியப்படத் தக்கவன் (ஆவன்), எ-று.
புத்தியீனனாகிய ஒருவன் ஒரு சபையிற் சென்று காரணமின்றி யொருவனைத் திட்ட, அப்படி திட்டப்பட்டவன் அதைப் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க, அந்தத் திட்டினவன் வாழமாட்டானென்பது கருத்து.
முன்னர் - ஏழனுருபுமாம். முதல் வைதான் என்பதோடு ஆக என்றொரு சொற்கூட்டி வினையெச்சமா முடித்துக் கொள்க. வயப்பட்டான் - வசப்பட்டான். விய என்னு முதனிலை வியக்க என்னும் வினையெச்சமா நின்றது.
326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.
(இ-ள்.) மேல் - (தன்) மேல், மூப்பு வாராமை முன்னே - கிழத்தனம் வாராமைக்கு முன்னேயே, அற வினையை - தரும காரியத்தை, ஊக்கி - மேற்கொண்டு, அதன்கண் முயலாதான் - அந்த விஷயத்தில் முயற்சி செய்யாதவன், இல்லுள் - (தன்) வீட்டில், நூக்கி - தள்ளி, புறத்து இரு - வெளியிலே இரு, போக என்னும் - (இவ்விடம் விட்டு) போகக் கடவாய் என்கிற, இன்னா சொல் - இனிமையில்லாத சொல்லை, தொழுத்தையால் - வேலைக்காரியாலும், கூறப்படும் - சொல்லப்படுவான், எ-று.
மூப்புவராமுன்னமே தரும காரியங்களில் முயன்று நடவாதவனை வெள்ளாட்டியும் இகழ்ந்து பேசுவாள் என்பதால், நற்காரியஞ் செய்யாத புத்தியீனனிடத்து அற்பருக்கும் அலக்ஷியமுண் டென்றபடி. மூப்பு வந்தபின் எதுவும் செய்ய இயலாமை பற்றி வாராமை முன்னே என்றார்.
வாராமை - எதிர்மறைத் தொழிற்பெயர் அறமாகிய வினை அறவினை. ஊக்கி - ஊக்கு - பகுதி. மூப்பு - மூத்தல் - மூ - பகுதி. தொழுத்தை - தொழு - பகுதி, ஐ - கர்த்தாப் பொருள் விகுதி, தகரம் எழுத்துப் பேறு, மற்றொரு தகரம் விரித்தல் விகாரம், வணங்கியிருப்பவள் என்பது பொருள். கர்த்தாப்பெயர் மூன்றாம் வேற்றுமையில் வந்தவிடத்து இரண்டு செயப்படு பொருள் வருமாயின் ஒன்று இரண்டாம் வேற்றுமையிலும் மற்றொன்று முதல் வேற்றுமையிலும் வரும்.
327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.
(இ-ள்.) புல் அறிவினார் -, தாமேயும் இன்பு உறார் - தாமாகிலும் இன்ப மடையார்; தக்கார்க்கும் - யோக்கியருக்கும், நன்று ஆற்றார் - நன்மை செய்யமாட்டார்; ஏமம் சார் - (உயிருக்கு) காவலாயிருக்கும்படியான, நல் நெறியும் - நல்ல தருமவழியையும், சேர்கலார் - சேரமாட்டார்; தாம் மயங்கி - தாங்கள் மயக்கங் கொண்டு, ஆக்கத்துள் தூங்கி - செல்வத்திலேயே ஒன்றும் தோன்றாமலிருந்து, வாழ்நாளை - (தமது) ஆயுசை, அவத்தமே போக்குவார் - வீணாகவே கழிப்பார்கள், எ-று.
புத்தியீனர் செல்வத்தையே சதமாகக் கொண்டு யாதொரு நற்காரியமுஞ் செய்யாமல் தமது வாணாளை வீணாளாக்குவர் என்பதாம்.
தாமே - ஏகாரம் பிரிநிலை, விகற்பமுமாம். இன்பு - இன்பம் என்பதின் ஈறு தொகுத்தல், சேர்கலார் - சேர் கு அல் ஆர் - பகுதி சாரியை எதிர்மறை விகுதி, பலர்பால் விகுதிகள் வாழ்நாள் - வினைத்தொகை.
328. சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.
(இ-ள்.) சிறு காலையே - இளமையிலேயே, தமக்கு செல்வுழி - தாம் (மரணமடைந்த பின்) போமிடத்துக்கு, வல்சி - (தருமமாகிய) சோற்றை, இறுக இறுக - மிகவும் அழுத்தமாக, தோள் கோப்பு - தோள் மூட்டையாக, கொள்ளார் - எடுத்துக் கொள்ளாதவர்கள், இறுகி இறுகி - (பணத்தைச்) சிக்கெனவாக் கொண்டு, பின் அறிவாம் - (தருமத்தைப்) பின்னே யோசிப்போம், என்று இருக்கும் -, பேதையார் - புத்தியீனர், கை காட்டும் - (மரண காலத்தில்) கையால் உருவம் காட்டுகிற, பொன்னும் - பொன் உருண்டையும், புளி விளங்காய் - புளிப்பாகிய விளாங்காய் (ஆகும்), எ-று.
நல்ல பருவத்தில் தருமஞ் செய்யாது விட்டுப் பின்பு பார்த்துக் கொள்வோமென்று பணத்தைச் சேர்த்து வைக்கும் பேதையர் மரணகாலத்தில் வாய் அடைத்துப் போன போது தாம் வைத்திருந்த பொன்னுருண்டையைத் தம்மவர் எடுத்துக் கொள்ளும்படி கையினால் திரட்சியைக் காட்ட, அங்கிருந்த வஞ்சகர் புளிப்பான விளாங்காய் வேண்டுமென்கிறார் என்று பாவித்து அப்பொன்னைத் தாம் அபகரித்துக் கொண்டு போனாற் போல் சேர்த்து வைத்த பொருள் தம்மவருக்கும் உதவாமற்போம் என்பது கருத்து. இக்காலத்தில் அப்படி நடந்ததுமுண்டு.
தமக்கு - நான்கனுருபு கர்த்தாப் பொருளில் வந்தது. தோள்கோப்பு - தோளில் கோக்கத்தக்க மூட்டை. தொழிற் பெயர் செயப்படுபொருளுக்கு ஆயிற்று. இறுகி இறுகி என்பது இறுகிறுகி என ஈறுதொகுத்தலாயிற்று. மிகுதிப் பொருளைக் காட்ட வந்த அடுக்கு 'பொரிவிளங்காய்' என்று பாடங் கூறுவது முண்டு.
329. வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.
(இ-ள்.) வெறுமை இடத்தும் - பணமில்லாத போதும், விழு பிணி போழ்தும் - விசேஷமான வியாதி வந்த காலத்திலும், சிறு அறிவினார் - அற்பபுத்தி யுடையார், மறுமை மனத்தாரே ஆகி - மறுமைக்குரியதைச் செய்யும் மனதுள்ளவரே யாகி, ஆற்றிய காலத்து - செய்யக் கூடிய காலத்தில், மறுமையை - மறுமைக்கு உரிய தருமத்தை, ஐந்தை அனைத்தானும் - சிறு கடுகின் அளவாகிலும், சிந்தியார் - நினைக்க மாட்டார், எ-று.
புத்தியீனர் தாம் தரித்திரப்படும் போதும் வியாதியனுபவிக்கும் போதுமே தருமசிந்தை யுடையரல்லது பொருள் கைகூடி செய்யத்தகுந்த காலத்தில் அச்சிந்தை யில்லாதவர் என்பதாம்.
விழுப்பிணி - பண்புத்தொகை. பிணிப்போழ்து - ஆறாம் வேற்றுமைத் தொகையாம். மறுமை மனத்தர் - மறுமையினிடத்து மனதை யுடையவர். ஏலும் என்பது போல் ஆனும் என்பதும் வினையெச்சக்குறி; ஆயினும் என்பதின் இடைக் குறையுமாம். மூன்றனுருபெனக் கொண்டு சிந்தனைக் கருவிக்குக் கூட்டினு மமையும்.
330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
(இ-ள்.) அளவு இறந்த காதல் - அதிக ஆசைக்குப் பாத்திரமான, தம் ஆர் உயிர் அன்னார் - தம்முடைய அருமையான உயிர் போன்றவரை, கொள இழைக்கும் - கொண்டு போக முயற்சி செய்கிற, கூற்றம் கண்டும் - எமனைப் பார்த்தும், அன்னோ - ஐயோ, (புல்லறிவாளர்) இவ்வுடம்பு பெற்றும் - இந்த மனிதவுடலைப் பெற்றும், அறம் நினையார் - தருமசிந்தை யில்லாதவராகி, தம் வாழ்நாளை - தமது ஆயுளை, கொன்னே கழிப்பர் - வீணாகக் கழிக்கிறார்கள், என்னே - இது என்ன?, எ-று.
தருமங்களைச் செய்வதற்கு ஏற்ற மனுஷ்ய தேகத்தை அடைந்தும் தருமஞ் செய்யாமை என்ன காரணமோ தெரியாது. தம் உறவினருக்கு வைத்த பொருளைச் செலவழிக்கக் கூடாதன்றோ எனின் அப்படிப்பட்டவர்களை எமன் தம் கண்ணுக்கு எதிரேயே கொண்டு போக முயல்கின்றானே என்பது கருத்து. நாம் யாருக்காகப் பொருளைச் சேர்த்து வைக்கிறோமோ அவர்களும் அதை அனுபவிப்பது சதமன்று என்கிறபடி.
என்னே - ஏ - இரக்கத்தில் வந்தது. மற்று - அசை. ஆருயிர் - அரு என்னும் பண்படி முதல் நீண்டது.
இவ்வதிகாரத்துக்குப் பாடல்களை ஒருவாறு பொருத்தினாலும் இவ்வதிகாரமே பொருட்பாலுக்கு இயைந்ததன்று அறத்துப்பாலி லிருக்கத்தக்கது பின்னதுமப்படியே.
34. பேதைமை
[அதாவது முழுமூடத்தனம்.]
331. கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
(இ-ள்.) கொலை வல் - கொலைத் தொழிலில் சாமர்த்தியமுள்ள, பெரு கூற்றம் - பெரிய எமன், கோள் பார்ப்ப - எடுத்து கொண்டு போகுங் காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, ஈண்டை வலை அகத்து - இவ்வுலக வாழ்க்கையாகிய வலையினிடத்து, செம்மாப்பார் மாண்பு, இறுமாந்திருப்பவருடைய பெருமை, கொலைஞர் - கொலை செய்பவர், உலை ஏற்றி - உலையிலே போட்டு, தீ மடுப்ப - நெருப்பை மூட்ட, ஆமை - ஆமையானது, நிலை அறியாது - (தனக்கு வந்திருக்கிற) கதியை அறியாமல், அந் நீர் படிந்து - அந்தத் தண்ணீரில் மூழ்கி, ஆடியற்று - விளையாடுவது போலாம், எ-று.
இவ் வுலகவாழ்க்கையைச் சதமென நம்பிச் சந்தோஷிப்பது ஆமையைச் சமைக்கத் தீ மூட்டிய விடத்து அது உலைநீரில் விளையாடுவது போலாம். ஏனெனில் உடனே கேடுவர இருப்பதால் என்கிறபடி.
கொலைஞர் - ஞகரம் பெயர்ப்பகுபத விடைநிலை. மடுப்ப - நிகழ்காலம். ஆடி என்பது ஆடினால் என்பதின் திரிபு; ஆடினால் அதுபோலாம் என்பது பொருள்; ஈறுகெட்ட தொழிற் பெய ரென்னவுமாம். அற்று - அன் - பகுதி, று - விகுதி. வல்பெருங்கூற்றம் - பண்புத் தொகை. கோட் பார்ப்ப - கோட்பு ஆர்ப்ப எனப்பிரித்து, கொள்ளுதற்கு இரைந்து கொண்டிருக்க எனவு முரைக்கலாம். செம்மாப்பார் - செம்மா - பகுதி.
332. பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
(இ-ள்.) இல் செய் - குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய, குறைவினை நீக்கி - காரியக் குறைகளைப் போக்கி, அறவினை மற்று அறிவாம் - தரும காரியத்தைப் பின்னாலே யோசிப்போம், என்று இருப்பார் மாண்பு - என்று அலக்ஷியமாயிருக்கு மனிதருடைய பெருமையை, பெரு கடல் ஆடிய சென்றார் - பெரிய கடலிலே மூழ்கப் போனவர்கள், ஓசை - கடலோசையானது, ஒருங்கு - ஒருமிக்க - ஸ்நானஞ் செய்வோம், என்றற்று - என்றிருந்தாற் போலாம், எ-று.
சமுசார காரியங்களை நன்றாத் தீர்த்துத் தருமகாரியங்களைப் பார்ப்போமென் றிருப்பவர் கடலோசை அடங்கியபின் முழுகலாமென் றிருப்பார் போலே என்றபடி. கடலில் தொனி ஓயாதது போல் சமுசார காரியமும் ஓயாதென்றதாம்.
ஆடிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டெச்சம். ஒருங்கு, உடன் - இரண்டுக்கும் பொருளில் அதிக பேதமில்லை, ஆதலால் ஒரு பொருட் பன்மொழி என்னலாம். ஆடுதும் - தும் - விகுதி, எதிர்காலத் தன்மைப் பன்மையில் வந்தது. ஆல் - அசை. குறைவினை - இன் - சாரியை. மற்று - வினைமாற்றில் வந்தது "வினைமாற்றசைநிலை பிறிதெனுமற்றே" என்பது சூத்திரம். மாண்பு என்பது அவர் நினைப்பின்படி கூறிப் பரிகாசஞ் செய்தபடி.
333. குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
(இ-ள்.) குலம் - நற்குலமும், தவம் - நல்ல விரதமும், கல்வி - படிப்பும், குடிமை - குடித்தன இயல்பும், மூப்பு - (ஒழுக்கத்தில்) முதிர்ந்திருப்பதும், ஐந்தும் - (ஆகிய இவ்) வைந்தும், விலங்காமல் எய்தியக் கண்ணும் - (ஒருவனுக்கு) தப்பாமல் பொருந்தின போதும், நலம் சான்ற - நன்மை மிகுந்த, மை அறு தொல் சீர் - குற்றமற்ற பழமையான சிறப்பையுடைய, உலகம் அறியாமை - உலகத்துக்கு ஏற்றதை அறியாமலிருப்பது, நெய் இலா பால் சோற்றின் - நெய் இல்லாத பால்சோற்றுக்கு, நேர் - சமானமாகும், எ-று.
குலமுதலியவை ஒருவனுக்கு அமைந்தும் உலகத்துக்கு ஏற்ற நற்காரியம் அறியாமல் அவன் நடப்பது நெய்யில்லாத பால் சோறு போல் இனிப்பாயிராது என்பதாம். நெய் இலாமையைப் பாலிற்குக் கூட்டுக; சாரமற்ற பால் என்பதாம்.
இது இவ்வதிகாரத்துக்குப் பொருந்தாதே ஆயினும் ஒரு சங்கதியின் தொடர்ச்சிமேல் தொடர்ச்சியாய் வந்ததெனக் கொள்க. குல முதலியவை பெயர்ச்செவ்வெண், தொகை பெற்றது [இடை. சூ. 9]. எய்தியக்கண் - வினையெச்சம். உம்மை - உயர்வு சிறப்பு. சோற்றின் - நான்காம் வேற்றுமைத் தொகை, சோற்றினொடு என மூன்றாம் வேற்றுமைத் தொகையுமாம். நேர் - பகுதியே நேரும் என்னும் வினைமுற்றுப் பொருட்டாய் வந்தது.
334. கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.
(இ-ள்.) சொல் - (பிறர்) சொல்லுஞ் சொல்லை, நனி - நெருக்கமாக, தாம் -, உணரா ஆயினும் - அறிந்து கொள்ளாதவை யானாலும், உற்றவர்க்கு - தம்மை அடைந்தவர்களுக்கு, இன் இனியே - அப்போதே, நிற்றல் - நிற்பதும், இருத்தல் - உட்கார்வதும், கிடத்தல் - படுப்பதும், இயங்குதல் - நடப்பதும், என்று - என்று சொல்லுகிற (இவர்களுக்கு) உதவுலால் - உதவியாவதனாலே, கல் - கல்லுகள், கடை ஆய மாக்களின் - ஈனமான மனிதரைக் காட்டிலும், நனி நல்ல - மிகவும் நல்லவைகள், எ-று.
ஒருவன் கற்களினிடம் சென்று நிற்க உட்காரப் படுக்க அதன் மேல் நடக்க இப்படி எதைச் செய்ய விரும்பினாலும் அததுக்கு அக்கற்கள் உபயோகப் படுவதினால் பிறர்க்கு உதவாத மனிதரைக்காட்டிலும் மேலானவை என்பதாம்.
நனி என்னு முரிச்சொல் நெருக்கத்துக்கு வந்தது. நெருங்கிக் கேட்க மாட்டாதவை எனக்கொள்க. இது உலக இயல்பைக் குறித்தது. ஆய - யகரம் இறந்தகால இடைநிலை என்பர்; ஆகிய என்பதின் விகாரமென்னவுமாம். இனி என்பது அடுக்கி இன்னினி என்று விகாரப்பட்டது. நிற்றல் முதலிய பெயர்ச்செவ்வெண் விகாரத்தால் தொகை பெறா வாயின.
335. பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.
(இ-ள்.) பெறுவது ஒன்று இன்றியும் - தாம் பெறத்தக்க பயன் ஒன்று இல்லாதே யிருந்தும், பெற்றானே போல - ஒரு பயனை அடைந்தவன் போல், ஏலாதார் மாட்டும் - (தன் கோபத்தை) ஏற்கத் தகாதவரிடத்திலும், கறுவு கொண்டு - பகைகொண்டு, கறுவினால் - கோபத்தினால், இன்னா கோத்து - பிரியமல்லாத சொற்களைக் கூட்டி, கூறி உரையாக்கால் - சொல்லாமற் போனால், பேதைக்கு - புத்தியீனனுக்கு, நல்ல சுனைத்து - நல்லதான தினவானது, நா தின்னும் - நாக்கைத் தின்றுவிடும், எ-று.
பயனில்லாமலே எப்படிப்பட்டவர் மேலும் தூஷணைகளைக் கற்பித்துச் சொல்லாவிடின் மூடனுக்குத் திருப்தியில்லை என்பதாம்.
இன்னா - இனி என்னும் பண்படி வினைப்பகுதியிற் பிறந்த எதிர்மறை வினையாலணையும் பெயர். கூறி யுரைத்தல் - ஒரு பொருட் பன்மொழி. சுனைத்தல் - சொறிதல் காரணமாகிய தினவுக்கு ஆகு பெயர்.
336. தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
(இ-ள்.) தங்கண் மரபு இல்லார் பின் சென்று - தம்மிடத்து (ஒரு நன்மை செய்யும்) முறை யில்லாதவரிடம் போய், அவரை -, நாம் -, எங்கண் வணக்குதும் - எங்களிடத்து வணங்கிநிற்கச் செய்வோம், என்பவர் புல் கேண்மை - என்று சொல்லுகிறவர்களுடைய அற்பமான உறவு, நல் தளிர் புன்னை - நல்ல தளிர்களோடு கூடிய புன்னை மரங்கள், மலரும் கடல் சேர்ப்ப - மலரும்படியான கடற்கரை யரசனே!, கல் கிள்ளி - கல்லைக் கிள்ளி, கை இழந்தற்று - கையைப் போக்கிக் கொண்டது போலாம், எ-று.
தமக்கு யாதொரு நன்மையுஞ் செய்யும்படியான முறையில்லாதவரைச் சுவாதீனஞ் செய்ய முயல்வது கல்லைக்கிள்ளிக் கைபோவதற்கொப்பமாம் என்றால், பயன்படாமற் போவதுமன்றித் தனக்கொரு நஷ்டமுமாம் என்றபடி, இதெல்லாம் பேதைமை.
வணக்குதும் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று. கேண்மைக்குப் புன்மையாவது இவர் நினைப்பினால் மாத்திரமுண்டாயிருத்தல்.
337. ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
(இ-ள்.) ஆகாது எனினும் - கிட்டாதானாலும், அகத்து - உள்ளே, நெய் உண்டாகில் - நெய் இருக்குமானால், எறும்பு -, போகாது - (அந்தப் பாத்திரத்தை) விட்டு நீங்காமல், புறம் சுற்றும் - வெளிப்பக்கத்திலே சுற்றிக் கொண்டிருக்கும்; யாதும் கொடார் எனினும் - எதையும் கொடாதவரானாலும், உடையாரை - பொருளுள்ளவர்களை, பற்றி - சேர்ந்து, உலகத்தவர் - உலகத்திலுள்ள ஜனங்கள், விடார் - விடமாட்டார்கள், எ-று.
உள்ளே புகுந்து நெய்குடிக்கக் கூடாமலிருந்தாலும் அந்தக் கலசத்தை எறும்பு சுற்றிக் கொண்டிருப்பதுபோல் ஒரு காகம் கொடாராயினும் தனவான்களிடத்தில் பேதைகள் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதாம்.
உலகத்தவர் - உலகம் - பகுதி, அர் - பலர்பால்விகுதி, அத்தும் அகரமும் - சாரியைகள்.
338. நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.
(இ-ள்.) நாள் தொறும் - ஒவ்வொரு நாளும், நல்லவை - (பெறத்தக்க) நன்மைகளை, எய்தார் - அடையார்கள்; அறம் செய்யார் - கருமத்தைச் செய்யமாட்டார்கள்; இல்லாதார்க்கு - தரித்திரர்க்கு, யாது ஒன்றும் ஈகலார் - எதையாகிலும் கொடுக்க மாட்டார்கள்; இனியார்தோள் - இனிமையான தம் பெண்டிர்களது புஜங்களை, சேரார் அடையார்கள்; இசைபட - கீர்த்தி யுண்டாகும்படி, வாழார் - வாழ மாட்டார்கள்; (ஆதலின் மூடர்) தாம் வாழும் நாள் எல்லாம் - தாங்கள் பிழைத்திருக்குங் காலங்களையெல்லாம், முனியார்கொல் - வெறுக்கமாட்டார்களா, எ-று.
நாள்தோறும் எய்தத்தக்க நன்மைகளாவன - பின்னே தங்களுக்கு க்ஷேமலாபங்களை யுண்டாக்கத்தக்க கல்வி கேள்விகளும் பொருளுமாம். ஆகவே, அறம் பொருளின்பங்களைத் தாங்கள் அடையாமலும் பிறர்க்கு உபகாரஞ் செய்து கீர்த்தி பெறாமலும் வீணாய்க் கழிக்கிற தங்கள் வாழ்நாள் மேல் தங்களுக்கே வெறுப்பில்லாம லிருப்பது அதிசயந்தான் என்கிறபடி.
இல்லாதார்க் கியாதொன்றும் - "யவ்வரினிய்யாம்" என்பதனால் குற்றியலுகரம் இகரமாகி "யகரம்வரக் குறளுத்திரியிகரமும்" என்பதனால் குற்றியலிகரமாயிற்று. அவ்விகரம் "சீருந்தளையுஞ் சிதையின் சிறிய அ இ உவ்வளவோ டாரு மறிவ ரலகு பெறாமை" என்கிற காரிகைச் சூத்திரத்தினால் அலகு பெறாது வாளா நின்றது.
339. விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
(இ-ள்.) ஆய் நலம் இல்லாதார்மாட்டு - ஆராயப்பட்ட சற்குணமில்லாத மூடரிடத்தில், ஒருவர் - (எவராகிலும்) ஒருவர், விழைந்து - விரும்பி, தம்மை வியப்ப - தம்மைக் கொண்டாட, ஒருவர் - (கொண்டாடப்பட்ட) மற்றொருவர், விழைந்திலேம் - நாங்கள் விரும்பினோமில்லை, என்று இருக்கும் கேண்மை - என்று ஏற்பட்டிருக்கிற சிநேகமானது, தழங்கு குரல் - கோஷிக்கிற தொனியையுடைய, பாய் திரை சூழ் வையம் - பாய்ந்து வருகிற அலைகளுள்ள - கடல்சூழ்ந்த பூமியை, பயப்பினும் - தருவதாயிருந்தாலும், இன்னாது - பிரியமாயிராது, எ-று.
தம்மை விரும்பிச் சிநேகித்தவரைச் சிநேகியாத மூடருடைய கூட்டுறவு எவ்வளவு பிரயோசனந் தருவதானாலும் யோக்கியருக்கு இஷ்டமாயிராது என்பது கருத்து.
வியப்ப - நிகழ்காலத்தில் வந்தது. விழைந்திலேம் - உடன் பாட்டெதிர்மறை வினைமுற்று; விழை -, பகுதி, த் - இடைநிலை, சந்தியால் வந்த தகரம் நகரமானது விகாரம், இல் - எதிர்மறைப்பண்படி, இடைநிலை அல்லது விகுதி, ஏம் - தன்மைப்பன்மை விகுதி. பாய் திரை - அன்மொழித் தொகை. திரை - கடல், எனக்கொள்ளின் வினைத்தொகையாம்.
340. கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
(இ-ள்.) கற்றனவும் - தாம் கற்ற கல்விகளும், கண் அகன்ற - அதிகமான, சாயலும் - மேன்மையும், இல் பிறப்பும் - நற்குடிப் பிறப்பும், பக்கத்தார் - அயலார், பாராட்ட - கொண்டாட, பாடு எய்தும் - பெருமையை அடையும்; தான் உரைப்பின் - (அவைகளை உடையவன்) தானே சொன்னால், மைத்துனர் - மைத்துனர்கள், பல்கி - அதிகப்பட்டு, மருந்தில் - மருந்தினாலும், தணியாத - தீராத, பித்தன் என்று - பைத்தியக் காரனென்று, எள்ளப்படும் - இகழப்படுவான், எ-று.
ஒருவனுடைய கல்வி பெருமை முதலியவற்றைப் பிறர் கூறின் நன்றாயிருக்கும்; தானே கூறினால் பரிகாசஞ் செய்யப் படுவான் என்பது கருத்து.
பரிகாசஞ் செய்ய உரியவராதலின் மைத்துனர் என்றது. பாரில் ஆடல் செய்தல் - பாராட்டல், எள்ள - இதைத் தொழிற்பெயராக் கொள்ள வேண்டும். தணியாத என்பது பித்தன் என்பதின் பகுதியான பித்து என்பதோடு முடிந்தது.
35. கீழ்மை
[அதாவது கீழ்மக்களது தன்மை அல்லது கீழ்ச்சாதியாரது தன்மை.]
341. கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.
(இ-ள்.) காலை - காலத்தில், கப்பி - தானியத்தை, கடவது ஆ - கடமையாக, தன் வாய் பெய்யினும் - தன் வாயிலே போட்டாலும், குப்பை கிளைப்பு - குப்பையைக் கிளறுதலை, ஓவா - விட்டொழியாத, கோழி போல் - கோழியைப் போல், மிக்க கனம் பொதிந்த - மிகுந்த மேன்மை நிறைந்திருக்கிற, நூல் விரித்துக் காட்டினும் - சாஸ்திரங்களை விரித்துத் தெரிவித்தாலும், கீழ் - கீழானவன், தன் மனம் புரிந்த ஆறே - தன் மனது விரும்பியவழியே, மிகும் - மிகுந்து செல்வான், எ-று.
கோழிக்குக் காலத்தில் தானியம் போட்டாலும் குப்பை கிளறப் போவதுபோல் கீழ்மகன் எத்தனை நல்ல நூல்களை யெடுத்துச் சொன்னாலும் அதைவிட்டுத் தன் மனதுக்கு இசைந்தபடியே செல்வான் என்பதாம்.
கடவது - கடமையில் கட - பகுதி, அ - சாரியை, து - விகுதி. மிக்க - மிகு - பகுதி, அ - பெயரெச்ச விகுதி, பகுதியில் ககரம் இரட்டிக் காலங்காட்டியது. கீழ் - ஆகுபெயர்.
342. காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.
(இ-ள்.) காழ் ஆய - உறுதியான நூற்பொருள்களை, கொண்டு - கற்றுக் கொள்ள, கசடு அற்றார் தம் சாரல் - குற்றமில்லாத பண்டிதரிடத்தில், தாழாது - தாமதப்படாமல், போவாம் என உரைப்பின் - போவோம் என்று ஒருவர் சொன்னால், கீழ் -, உறங்குவாம் என்று எழுந்துபோம் - தூங்குவோம் என்று எழுந்துபோவான்; அஃது அன்றி - அதல்லாமல், மற்றொன்று உரைத்து - வேறொரு சாக்கைச் சொல்லி, மறங்கும் - மறுத்துச் சொல்வான், எ-று. தான், ஆம் - அசைகள்.
படிக்கப் போவோ மென்றால் எதையாகிலும் சொல்லி அதை மறுத்துத் தூங்கப் போவான் கீழ்மகன் என்பதாம்.
கொண்டு - கொள்ள என்பதின் திரிபு. "சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை" என்பது சூத்திரம். போவாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று; நீயும் நானும்; "அம் ஆம் என்பன முன்னிலையாரையும்" உறங்குவாம் - இதுவுமப்படியே போம்; போகும் அல்லது போவும் என்பதில் ஈற்றுயிர் மெய் கெட்டது. "செய்யுமெனெச்சவீற் றுயிர்மெய் சேறலும்" [வினை. சூத். 22].
343. பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.
(இ-ள்.) சான்றோர் - பெரியோர், பெருநடை - பெரிய சிறப்பை, தாம் பெறினும் - தாம் அடைந்தாலும், பெற்றி - (தமது) தன்மை, பிழையாது - தப்பாமல், ஒரு நடையர் ஆகுவர் - (முன்னும் பின்னும்) ஒரே விதமான நடக்கையுள்ளவர் ஆவார்கள்; பிறங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற மலையருவிகளையுடைய நல்ல நாட்டையுடையவனே!, கீழ் -, பெரு நடை - பெருஞ் சிறப்பை, பெற்றக்கடைத்தும் - பெற்ற விடத்தும், ஒரு நடை - (முந்தியநடைக்கு வேறான) நடையிலே, வற்று ஆம் - வல்லமையுடையனாவான், எ-று.
பெரியோர் அரசரால் எவ்வாறு மேன்மைப்படுத்தப் பட்டாலும் தாங்கள் முன்னிருந்தபடி அடக்கமொடுக்கங்களோ டிருப்பாரே யல்லது மாறார்; கீழ்மகனோ மாறிவிடுவான் என்றபடி. பெற்றக் கடைத்து - ஒருவகை வினையெச்சம்; இதனோடு சேர்ந்த உம் இழிவு சிறப்பு; பெறுவது அருமை என்றபடி. பெற்றி - தொழிற் பெயர்; பெற்றிருக்கும் சற்குணத்துக்கு ஆகு பெயர்; பெறு - பகுதி, இ - விகுதி ஆகுவர் - கு - சாரியை வற்று - வல் என்கிற பண்படி மேல் று - ஒன்றன்பால் விகுதி வந்தது. இழிவினால் கீழ்மகனை அஃறிணையாகவே முடித்தார்.
344. தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.
(இ-ள்.) இலங்கு அருவி நல் நாட - விளங்குகின்ற அருவிகளுள்ள நல்ல நாட்டையுடையவனே!, தினை அனைத்தே ஆயினும் - தினையளவாயினும், செய்த நன்று - (ஒருவன்) செய்த உபகாரத்தை, உண்டால் - அனுபவித்தால், சான்றோர் - நற்குணமிகுந்தவர், பனை அனைத்து ஆ - பனையளவாக, உள்ளுவர் - நினைப்பார்கள்; என்றும் - எக்காலமும், பனை அனைத்து செயினும் - பனையளவான நன்றி செய்தாலும், நன்று அறியா மாட்டு - (உபகாரத்தின் மகிமை) அறியாதவர்களிடத்து, நன்று இல - (அவை) உபகாரமாக நினைக்கப்பட மாட்டா, எ-று.
அற்பவுபகாரத்தையும் பெரிதா நினைப்பது சான்றோரியல்பு, பெரிய வுபகாரத்தையும் உபகாரமா நினையாமலிருப்பது கீழோர் இயல்பு என்பதாம்.
தினை - ஒருவகைச் சிறுதானியம். அனைத்து - அன் - இடைச்சொல், பகுதி, ஐகாரம் - சாரியை, து - ஒன்றன் விகுதி, நன்றில - குறிப்பு முற்று, ஒரு மொழியாக் கொள்க.
345. பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.
(இ-ள்.) பொன் கலந்து ஊட்டி - பொன் பாத்திரத்தில் (நல்லவுணவை) உண்பித்து, புறம் தரினும் - ரக்ஷித்து வந்தாலும், நாய் -, பிறர் எச்சிற்கு - பிறருண்ட எச்சிற் சோற்றுக்கு, இமையாது - கண்கொட்டாமல், பார்த்திருக்கும் - (கொள்ளத்தகுந்த சமயத்தை) எதிர்பார்த்திருக்கும்; அ சீர் - அத்தன்மையாக, பெருமை உடைத்து ஆ கொளினும் - சிறப்புள்ளவனாக ஏற்றுக் கொண்டாலும், கீழ் -, செய்யும் கருமங்கள் - செய்கிற காரியங்கள், வேறுபடும் - (கனவான்கள் செய்யுங் காரியங்களுக்கு) வேறாகவே யிருக்கும், எ-று.
நல்லுணவுகளைக் கொடுத்து மேன்மைப் படுத்தினாலும் இழிவான உணவுக்குக் காத்திருக்கும் நாய் போலவே மேன்மையாக் கொண்டாலும் இழிந்த காரியங்களைக் கீழோர் செய்வார்கள் என்பதாம்.
ஊட்டி - உண் என்பதின் பிறவினையெச்சம், டு - பிறவினை விகுதி, முதல் நீண்டது விகாரம்.
346. சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.
(இ-ள்.) விழுமியோர் - மேலானவர், சக்கரம் செல்வம் பெறினும் - பூமண்டல அரசாட்சியாகிய சம்பத்தை யடைந்தாலும், எக்காலும் - எந்தத் தருணத்திலாயினும், மிகுதி சொல் - அதிகமான சொல்லை [வரம்பு கடந்த பேச்சை], சொல்லார் - சொல்ல மாட்டார்; எ காலும் - எப்பொழுதாயினும், முந்திரி மேல் - முந்திரி என்கிற சிறுதொகையின் மேல், காணி மிகுவதேல் - காணி என்னும் அற்பத்தொகை அதிகப்பட்டால், கீழ் -, தன்னை -, இந்திரன் ஆ - தேவேந்திரனாக, எண்ணி விடும் - எண்ணிக்கொள்வான், எ-று.
மேலோர் எவ்வளவு செல்வத்திலும் வரம்பு கடந்து நடப்பதில்லை; கீழோரோ இருக்கிற தாழ்ந்த நிலைக்கு மேல் கிஞ்சித்துச் செல்வம் வந்தால் தம்மை மறந்து துர்மார்க்கஞ் செய்வார்கள் என்பது கருத்து.
சக்கரம் - மண்டலமாகையால் பூமண்டலத்துக்குக் கொள்ளப்பட்டது. விழுமியோர் - விழுமுதல் - விரும்புதல், பிறர் விரும்பும்படியான நல்ல இயல்பையுடையவர்; விழுமு - பகுதி, இன் - இடைநிலை, ஈறுதொக்கது, ஆர் விகுதியின் ஆ ஒ ஆயிற்று ["பெயர் வினையிடத்து னளரயவிற்றயல்" பொது. சூத். 2]. முதல் எக்காலும் என்பதில் உம்மை முற்றுப்பொருளது, இரண்டாவதில் ஐயப்பொருளது, விகற்பப் பொருளென்க; எப்பொழுதாயினு மென்றபடி. அவர்களுக்குச் செல்வம் வருதல் அருமையென்றதாயிற்று. இங்கே காணி என்பது கீழ்க்காணியை; இக்கால வழக்கத்தின்படி முந்திரியில் அறுபத்தி நான்கிலொரு பங்கு. முந்திரியென்பது முந்நூற்றிருபதி லொருபங்கு. காணிமேல் முந்திரி முகுவதேல் எனச் சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது நேர்.
347. மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
(இ-ள்.) மை தீர் - குற்றமற்ற, பசு பொன் மேல் - நல்ல பொன்னின்மேலே; மாண்ட மணி - மாட்சிமையான ரத்தினங்களை, அழுத்தி - இழைத்து, செய்தது எனினும் - செய்யப்பட்டதானாலும், செருப்பு -, தன் காற்கே ஆம் - தன் காலில் அணிவதற்கே உபயோகமாம்; எய்திய செல்வந்தர் ஆயினும் - செல்வத்தைப் பொருந்தினவர்களானாலும், கீழ்களை - தொழிலால் - அவர்கள் செய்யுங் காரியங்களால், காணப்படும் - (இவர்கள் கீழ்கள் என்று) அறிதல் கூடும் [அறியலா மென்றபடி], எ-று.
இரத்தினமிழைத்த செருப்பானாலும் காலில் அணியத் தக்கதே, அதுபோல் கீழ்மக்கள் எவ்வளவு செலவம் பெற்றாலும் கீழ்ப்படியில் வைக்கத்தக்கவரே யன்றி மேற்படியில் வைக்கத் தகார் என்பதாம்.
மாண்ட - மாண் என்கிற பண்படிமேற் பிறந்த தெரிநிலை யிறந்த காலப் பெயரெச்சம். செய்தது - இது செயப்பாட்டு வினையின் திரிபு; படு - விகுதி குன்றியது. காண - தொழிற் பெயராக் கொண்டு படு என்பதோடு முடிக்க காணப்படும் என ஒருமொழியாகவே கொண்டாலும் பொருந்தும்.
348. கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.
(இ-ள்.) விறல் மலை நல் நாட - பெருமையான மலைகளுள்ள நல்ல நாட்டையுடையவனே!, கீழ் -, கடுக்கென - கடினமாக, சொல்வற்று - சொல்லுதலிலே சாமர்த்திய முடையவன்; கண்ணோட்டம் - தாக்ஷிணியம், இன்று - இல்லாதவன்; பிறர்மாட்டு - பிறரிடம் (உண்டான), இடுக்கண் - சங்கடத்தை, உவக்கும் - சந்தோஷிப்பான்; அடுத்து அடுத்து - அடிக்கடி, வேகம் உடைத்து ஆம் - கோபாவேசத்தை யுடையவனாவான்; ஏகும் - (பலவிடத்தும்) திரிவான்; எள்ளும் - (பிறரைத் தூஷிப்பான், எ-று.
கடினமாய்ப் பேசுவதும் யாரிடத்தும் தாக்ஷிணியம் பாராமையும் பிறருக்கு நேரிடுகிற ஆபத்துக்குச் சந்தோஷிப்பதும் அடிக்கடி சும்மாக் கோபிப்பதும் கண்டவிடத்துச் சும்மாத் திரிவதும் பிறரைத் தூஷிப்பதும் கீழ்மக்களியல்பு என்றபடி. ஆம் எல்லாம் அசைகள்.
349. பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர்.
(இ-ள்.) கள் உயிர்க்கும் - தேனை ஒழுக்குகிற, நெய்தல் - நெய்தற் பூக்களையுடைய, கனை கடல் - ஒலிக்கிற கடலினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, பின் நிற்பின் - (ஒருவர்) தமது பின்னே நின்றால், இவர் - இவர்கள், பல் நாள் பழையர் என்று - பல நாள் (சிநேகித்த) பழமையானவர்கள் என்று, சான்றோற் -, உழை - அவரிடத்திலே, இனியர் ஆகுவர் - இஷ்டமுள்ளவராவார்கள்; கீழாயவர் - கீழ்மக்கள், விழையாதே - (அவர்களை) விரும்பாமலே, எள்ளுவர் - நிந்திப்பார்கள், எ-று.
சிலநாள் தம்மிடம் வந்தவர்களையும் பழைய சிநேகிதர் போல் கொள்வார்கள் பெரியோர்; எத்தனைநாள் பழகினாலும் சிநேகியாமல் நிந்திப்பார்கள் கீழோர் என்பதாம்.
'பன்னாள் பின் நிற்பின்' என உரைப்பது இழிவு. அங்கே சிநேகித்த என்கிற சொல் வருவிக்கப்பட்டது.
350. கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.
(இ-ள்.) ஐய கேள் - அரசனே கேட்கக் கடவாய், என்றும் - நாள்தோறும், கொய் புல் குறைத்து - அறுக்கத்தக்க புல்லை அறுத்து, கொடுத்து - (தின்பதற்கு) கொடுத்து, தீற்றினும் - (கழுவுதல் முதலியவைகளால்) சுத்தப்படுத்தினாலும், சிறு குண்டை - சிறிய எருதுகள், வையம் - பண்டியை, பூண்கல்லா - பூண்டு இழுக்கமாட்டா; எய்திய செல்வந்தர் ஆயினும் - செல்வத்தைப் பொருந்தினவர்க ளானாலும், கீழ்களை-, செய்தொழிலால் - (அவர்கள்) செய்யுங் காரியங்களால், காணப்படும் - (இவர்கள் கீழ்கள் என்று) அறிதல் கூடும் [அறியலாம் என்றபடி], எ-று.
எவ்வளவு மேன்மைப் படுத்தினாலும் கன்றுகள் பண்டியிழுக்க மாட்டாமை போல் கீழ்மக்களும் தக்க காரியங்களுக்கு உதவார்கள் என்றபடி.
கொய் புல்லாவது பக்குவமானபுல். குண்டை - பால்பகா அஃறிணைப் பெயராதலின் ஈண்டு பன்மை.
36. கயமை
[அதாவது மூடத்தனம். இதுவும் முந்திய அதிகாரத்தைச் சேர்ந்தது.]
351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து
எருவைபோல் போத்தறார் புல்லறிவி னார்.
(இ-ள்.) ஆர்த்த அறிவினர் - நிறைந்த அறிவுள்ளவர்கள், ஆண்டு - வருஷங்களிலே, [வயதிலே], இளையர் ஆயினும் - இளையவர்களானாலும், தம்மை -, காத்து ஓம்பி - நன்றாகக் காத்து, அடக்குப - (யோக்கிய காரியங்களிற் புகவொட்டாமல்) அடக்குவார்கள்; புல் அறிவினார் - அற்பபுத்தி யுள்ளவர்கள், மூத்தொறும் - வயது முதிருந்தோறும், தீ தொழிலே - கெட்ட காரியங்களிலேயே, கன்றி - உழன்று வருந்தி, திரிதந்து - திரிந்து, எருவை போல் - கொறுக்கையைப் போலே, போத்து அறார் - உள்ளே தொளையாயிருப்பது நீங்கமாட்டார், எ-று.
அறிவுள்ளவர் சிறியரானாலும் தாம் இந்திரியங்களுக்கு வசப்பட்டுத் தீமை செய்யாமல் அடங்குவார்கள்; புத்தியீனர் வயது முதிர முதிரத் தீத்தொழிலே செய்வார்கள் என்பது கருத்து.
எருவைபோல் - கழுகு போல், போத்து அறார் - குற்ற நீங்கார், என்றும் உரைக்கலாம். கழுகு குரூரகுணமுள்ள பக்ஷி என்பது பிரசித்தம். போத்து - பொத்து - குற்றம், அது முதல் நீண்டது. கொறுக்கைபோல் உள்ளே தொளையாயிருப்பது நீங்கார் என்றால் மேற்பார்வைக்குத் தடித்த ரூபமுள்ளவராகி உள்ளே ஒன்றுமில்லாதவர் என்பதாம். இது சிறப்பன்று என அறிக.
ஆர்ந்த என்பது ஆர்த்த என வலிந்தது. காத்தோம்பி - ஒரு பொருட்பன்மொழி. அடக்குப - இது இங்கே காலங்குறியாது தன்மை குறித்து நிற்கும். மூத்தொறும் - மூ - முதனிலைத் தொழிற் பெயர், கன்றல் - வருந்தல்.
352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.
(இ-ள்.) செழு பெரு பொய்கையுள் - செழிப்பான பெரிய குளத்தில், என்றும் வாழினும் - எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தேரை - தவளைகள், வழும்பு அறுக்ககில்லா - (தம்மேலுள்ள) வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா; வழும்பு இல் சீர் - குற்றமில்லாத சிறப்பையுடைய, நூல் - சாத்திரங்களை, கற்றக்கண்ணும் - கற்றாலும், நுணுக்கம் ஒன்று இல்லாதார் - நுட்பபுத்தியாகிய ஒரு பொருள் இல்லாதவர், தேர்கிற்கும் பெற்றி - நூற்பொருளைத் துணியுந் தன்மையானது, அரிது - இல்லை, எ-று.
பெரிய குளத்தில் வெகு நாளிருந்தும் தவளை தன்மேலழுக்கைக் கழுவிக் கொள்ள மாட்டாமைபோல் மூடன் எப்படிப்பட்ட நூலைப் படித்தாலும் அதன் தாற்பரியத்தை யறியும்படியான புத்திசூக்ஷ்ம மில்லாதவனாம்.
அறுக்ககில்லா - அறு - பகுதி, கு, அ - இரண்டும் சாரியைகள், கில் - ஆற்றலைக் காட்டும் விகுதி, ஆ - எதிர்மறைப் பலவின்பால் விகுதி. ஆம் - அசை. இல்சீர் - "இல்லெனின்மைச் சொற்கையடைய" என்கிற சூத்திரத்தால் இயல்பாயிற்று [மெய்யீ. சூ. 30], கற்றக்கண் - எதிர்கால வினையெச்சம். நுணுக்கம் - பண்புப் பெயர், நுண் - பண்படி, பகுதி, அம் - விகுதி, உகர ககரங்கள் பண்பின் விகாரம்; இது அத்தன்மையான அறிவுக்கு ஆகுபெயர்.
353. கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.
(இ-ள்.) கண மலை நல்நாட - கூட்டமாகிய மலைகளுள்ள நல்ல நாட்டின் அரசனே!, கண் நின்று - எதிரில் இருந்து, ஒருவர் குணனேயும் - ஒருவர் குணத்தையும், கூறற்கு அரிது - சொல்லுதற்கு (நா எழல்) அருமையாயிருக்கும்; (அப்படியிருக்க) உழை நின்று - அவரிடத்திலிருந்து, குணன் அழுங்க - குணம் அழியும்படி, குற்றம் கூறும் - குற்றங்களை எடுத்துச் சொல்லுகிற, சிறியவர்கட்கு - கயவருக்கு, நா - நாக்கு, எற்றால் இயன்றதோ - எப்படிப்பட்ட பொருளினால் செய்யப்பட்டதோ, எ-று.
குணங்கூறுவது சாதாரணமானாலும் அவர் என்ன நினைப்பாரோ என்று பயந்து அதைக் கூறுவதும் கூடாமலிருக்க, ஒருவரிடஞ் சென்று அவர் குணங்களெல்லா மறையும்படி கயவர் குற்றங் கூறுகிறார்களே அவர்களுக்குக் கொடிய பொருளால் நாக்கு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கவி வியந்து கூறினார்.
ஆல் - அசை, எற்றால் - என் - வினாவிடைச் சொல், பகுதி, று ஒன்றன் பால் விகுதி.
354. கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
(இ-ள்.) கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் - பக்கங்களுயர்ந் தகன்ற வல்குலையுடைய குலமக்கள், தம் பெண் நீர்மை - தமது பெண்தன்மையை, சேடியர் போல செயல் தேற்றார் - (தமக்குப் பணிசெய்யும்) பாங்கியர் போல அலங்கரித்துக் கொள்ளுதலை அறியார்; மற்றையவர் - வேசிமார், புது பெருக்கம் போல் - புதிய வெள்ளம்போல், கூடி - (ஆடவரோடு) கலந்து, தம் பெண்ணீர்மை மதித்து காட்டி - தமது பெண் தன்மை மேம்பட அலங்கரித்துக்காட்டி, இறப்பர் - (அவர்களிடத் துள்ளவற்றை யபகரித்து) நடப்பர், எ-று.
குலப்பெண்கள் அலங்காரங்களாலே, தம்மை வியக்கச் செய்து பிறரிடத்துப் பொருள் பறிப்பதில்லை, வேசிமாரோ அப்படிச் செய்வார்கள்; அதுபோல், யோக்கியர் தங்குணங்களைக் காட்டி வியக்கச் செய்யாமல் அடங்கியிருப்பார்கள், அயோக்கியர் வெகு மேன்மை யுள்ளவர் போல நடித்துக் காட்டி வஞ்சித்துப் பொருள் பறித்துக் கொண்டு போவார்கள் என்பதாம்.
355. தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
(இ-ள்.) தளிர் மேலே நிற்பினும் - துளிரின் மேல் நின்றாலும், தட்டாமல் - (ஒருவர்) தட்டித்தள்ளாமல், செல்லா - போகமாட்டாத, உளி நீரர் - உளியின் தன்மையுடையவர்கள், கயவர் -, அளி நீரார்க்கு - மெத்தென்ற தன்மையுள்ளவர்க்கு, என்னானும் செய்யார் - எந்தவுதவியுஞ் செய்யமாட்டார்கள்; இன்னாங்கு செய்வார் பெறின் - துன்பஞ் செய்பவர்களை அடைந்தால், எனைத்தானும் - எவ்வளவை யாகிலும், செய்ய - செய்வார்கள், எ-று. மாது, ஒ - இரண்டும் அசை.
உளியானது மெதுவான வஸ்துவின் மேலும் தானே வியாபியாமல் ஒருவர் தட்டித் தள்ளினால் செல்வது போல் கீழ்மக்கள் எவ்வளவு அற்ப காரியத்திலும் பிறர் ஏவாமல் பிரவேசிக்க மாட்டார்; நல்லவருக்கு ஒன்றுங் கொடார்; அடித்துக் குத்திப் பலவிதத்தில் துன்பப்படுத்துவோர்க்கு எதையுங் கொடுப்பார்கள் என்பதாம்.
"இரணங் கொடுத்தாற் கொடுப்பர் கொடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்." இயற்கையாப் பொல்லாங்கு செய்யும் அயோக்கியருக்கேயன்றி யோக்கியருக்குக் கொடார் எனினும் பொருந்தும்.
அளிநீரார் - அளிந்த நீர்மையை உடையவர்கள் அல்லது அளிக்கும்படியான [இரங்கும்படியான] நீர்மையை உடையவர்கள். ஆனும் - ஆயினும் என்பதின் இடைக்குறை; இங்கு உம்மை - ஐயம். எனைத்தானும் - இங்கு உம்மை சிறப்பு.
356. மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.
(இ-ள்.) குறவன் -, மலை நலம் - மலையின் வளத்தை, உள்ளும் - நினைப்பான்; பயந்த - பயனைத்தந்த, விளை நிலம் - விளைகின்ற நிலத்தை, உழவன் - பயிர்செய்பவன், உள்ளும் -, சான்றோர் - பெரியோர், ஒருவர் செய்த நன்று - (தமக்கு) பிறரொருவர் செய்த நன்மையை, சிறந்து உள்ளுவர் - சிறந்ததா நினைப்பார்கள்; கயம் - கயவன் [கீழ் மகன்], தன்னை -, வைததை - (ஒருவன்) திட்டினதை, உள்ளிவிடும் - (தீர) நினைப்பான், எ-று.
குறவனுக்கு மலையிற் பழக்கமாதலால் மலைநல முள்ளுவான்; அப்படியே உழவனும் சான்றோர் பிறரைச் சிறப்பித்தலை மேற்கொண்டவராதலால் செய்த நன்று உள்ளுவர். கயவனுக்கு வேறொரு நினைப்புமின்றித் தன்னை மேலாக எண்ணுவது இயற்கை யாதலால் அதற்குத் தாழ்மை வரும்படி வைததையே நினைப்பனென்பது கருத்து.
குறம் - சாதிப்பெயர் அதனையுடையவன் குறவன். உழவன் - உழு, அ, அன் - பகுதி, சாரியை, விகுதிகள், சிறந்து - சிறக்க என்பதின் திரிபு. கயவனைக் கயம் என்றது இழிவினால்.
357. ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.
(இ-ள்.) ஒரு நன்றி செய்தவர்க்கு - ஒரு உபகாரஞ் செய்தவர் திறத்தில், ஒன்றி எழுந்த - சேர்ந்து உண்டான, பிழை நூறும் - நூறு குற்றங்களேயானாலும், சான்றோர் -, பொறுப்பர் - பொறுத்துக் கொள்ளுவர், கயவர்க்கு -, எழு நூறு நன்றி செய்து - எழு நூறு நன்மைகளைச் செய்து, ஒன்று தீது ஆயின் - ஒரு தீமை செய்தானாயின், எழுநூறும் தீது ஆய்விடும் - எழுநூறு நன்மைகளும் தீதுபோலவே முடியும், எ-று.
மேலோர் அற்ப நன்மையைச் செய்தவனும் பல தீங்கு செய்தால் நன்மையாகவே எண்ணிப் பொறுத்துக் கொள்வார்கள், கீழோரோ இதற்கு மாறாயிருப்பார்கள் என்றால் அவரவரியற்கை அப்படித் தோன்றுமென்பது கருத்து.
செய்தவர்க்கு - குவ்வுருபு இடப்பொருளில் வந்தது. கயவர்க்கு - கோடற்பொருளில் வந்தது. ஆயின் என்பதோடு செய்தான் என ஒரு சொல் கூட்டிக் கொள்க. அல்லது செய்து என்பதைச் செயவெனெச்சத் திரிபாவைத்து அவற்றுள் ஒன்று தீதாயின் என்று உரைக்க தீதாய் விடும் - விடு உறுதியைக் காட்டும்.
358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.
(இ-ள்.) வாள் கண்ணாய் - வான் போன்ற கண்ணுடையவளே!, இல் பிறந்தார் - நற்குடிப்பிறந்தவர், ஏட்டை பருவத்தும் - தளர்ச்சியான காலத்திலும் [தரித்திரத்திலும்], செய்வன - செய்கிற நற்காரியங்களை, முழு மக்கள் - மூடர்கள், மோட்டிடத்தும் - உயர்வான காலத்திலும் [செல்வப்பெருக்கிலும்], செய்யார் - செய்யமாட்டார்கள்; கோட்டை - கொம்பில், வயிரம் செறிப்பினும் - பூணைப் பூட்டினாலும், பன்றி - பன்றியானது, செயிர் வேழம் ஆகுதல் - வீரங் காட்டும் படியான யானை ஆகுதல், இன்று - இல்லை, எ-று.
பன்றிக் கொம்புக்கு யானைக் கொம்புக்குப் போடுவது போலப் பூண்கட்டினாலும் அது யானையாகாதது போல், மூடர் மிகுந்த செல்வம் பெற்றாலும் நற்குடிப் பிறப்பாளர் தரித்திரத்திற் செய்யுமளவும் விருந்து பாராட்டல் முதலாகிய நற்காரியஞ் செய்யமாட்டார்கள், என்றால் மேலோரியற்கையும் கீழோரியற்கையு மாறா என்பது கருத்து.
பிறந்ததற்பின் படிப்பு முதலியவைகளாலே கிஞ்சித்தும் தளராதிருப்பது பற்றி மூடரை முழுமக்கள் என்றது. கோட்டை - வேற்றுமை மயக்கம்.
359. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.
(இ-ள்.) இன்று ஆதும் - இன்றைக்குச் (செல்வமுடையர்) ஆவோம்; இந்நிலையே - இப்பொழுதே, ஆதும் - (செல்வமுடையர்) ஆவோம்; இனி - மேல், சிறிது நின்று - சொற்ப காலமிருந்து, ஆதும் -, என்று நினைத்து இருந்து - இப்படி சிந்தித்துக் கொண்டிருந்து, ஒன்றி உரையின் மகிழ்ந்து - சேர்ந்து சொல்வதனாலே சந்தோஷித்து, தம் உள்ளம் வேறு ஆகி - தமது நினைப்பு மாறி, மரை இலையின் - தாமரையிலை போலே, பலர் - அநேகர், மாய்ந்தார் - அழிந்தார்கள், எ-று.
எமக்கு இன்று செல்வம் வரும் நாளை வரும் என்று பிறரிடம் சொல்லி மகிழ்ந்திருந்து, அது அப்படி வராமையாலே மனம் வருந்தி அழிந்தவர் பலர் என்றால், வீணெண்ணத்தினால் ஜம்பம் பேசுதல் சுயவரியற்கை என்பது கருத்து.
தாமரையிலை செழிப்பா யிருந்து நாள் வட்டத்தில் அங்கேயே அழிவது போல் அழிந்தார் என்பதாம்.
மரை - மான்கள்; அவை தின்ன இலைபோல் எனப் பொருளுறைப்பாரு முண்டு அப்பக்ஷத்தில் தின்பதற்கு முன் செழிப்பாய்க் காணப்பட்டுப் பின் சொரூபமே தெரியாமல் அழிந்தது போல் என வலிந்து கருத்து கொள்ள வேண்டும்.
ஆதும் - தன்மைப்பன்மை வினைமுற்று, எதிர்காலம் - தும் - விகுதி. "தவ்வொடிறப்புமெதிர்வும்" என்பதை நினைக்க. உரையின் - ஐந்தனுருபு, ஏதுப்பொருளில் வந்தது. உள்ளம் வேறாகி - சினைவினையாதலின் செய்தெனெச்சம், முதல் வினையொடு முடிந்தது.
360. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.
(இ-ள்.) நீருள் பிறந்து - தண்ணீரிலுண்டாகி, நிறம் பசியது ஆயினும் - நிறத்தில் பசுமையானதா யிருந்தாலும், கிடையகத்து - சடையினுள்ளே, ஈரம் இல் ஆகும் - ஈரமானது இல்லாதாகும்; நிறை பெரு செல்வத்து - நிறைவான பெரிய செல்வத்திலே, நின்றக்கடைத்தும் - இருந்தாலும், அறை பெரு கல் அன்னார் - பாறையாகிய பெரிய கல்லைப் போன்றவர்களை [மனதில் பசையில்லாதவரை], உடைத்து - (இவ்வுலகம்) உடையதா யிருக்கின்றது, எ-று.
தண்ணீரிருந்தும் உள்ளீரமில்லாத சடையைப் போலே கன்னெஞ்சுடைய மூடர் இவ்வுலகத்திற் பலருண்டென்பதாம்.
மனதிற் பசையாவது தயாதாக்ஷிணியங்கள். ஓரும் - அசை; நீர் அறியும் என்னவுமாம். நிறை - முதனிலைத் தொழிற்பெயர்; வினைத்தொகை என்றால் தொடைபற்றி ஒற்று மிகுந்ததெனக் கொள்க.
37. பன்னெறி
[அதாவது பல விஷயங்களையும் கலந்து சொல்லியது.]
361. மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.
(இ-ள்.) மழை திளைக்கும் - மேகம் தவழும்படியான, மாடம் ஆய் - மாடியுள்ளதாய், மாண்பு அமைந்த காப்பு ஆய் - சிறப்புப் பொருந்திய காவலுள்ளதாய், இழை விளக்கு - ஆபரணங்களாகிய விளக்குகள், நின்று இமைப்பின் - நிலைபெற்று விளங்கப்பெற்றாலும், விழை தக்க - விரும்பும்படியான, மாண்ட - மாட்சிமைப்பட்ட, மனையாளை - இல்லாளை, இல்லாதான் - பெற்றில்லாதவனுடைய, இல்லகம் - மனை, என் ஆம் - என்ன பயனுடையதாம், (அது) காண்டற்கு அரியது - பார்ப்பதற்குக் கூடாத, ஓர் காடு - ஒரு காடேயாம், எ-று.
எவ்வளவு செல்வமிருந்தாலும் நல்ல மனையாளில்லாத வீடு பயனில்ல தென்பதாம்.
மழைதிளைக்கு மாடமென்பது உயரத்தைக் குறிக்கின்றது. அது அன்மொழித்தொகை. பண்புத்தொகையா வுரைத்தாலும் பொருந்தும். மாண்பமைந்த காப்பும் இப்படியே.
362. வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
(இ-ள்.) (பெண்கள்) வழுக்கு எனைத்தும் இல்லாத - கொஞ்சமும் குற்றமு மில்லாத வாள் வாய் கிடந்தும் - வாளின் காவலி லிருந்தும், இழுக்கினை - குற்றத்தை, தாம் -, பெறார் ஆயின் - அடையாமலிருந்தாலும், அ சின்மொழியார் - அந்தப் பெண்கள், இழுக்கு எனைத்தும் - குற்றங்களை யெல்லாம், செய்குறா பாணி - செய்யாதகாலம், சிறிதே - சொற்பமேயாம், கை உறா பாணி - ஒழுக்கத்தைப் பெறாத காலம், பெரிது - அதிகமாம், எ-று.
இயற்கையிற் கற்பில்லாத பெண்களுக்குக் காவல் வைத்தாலும் அவர்கள் இழிவான காரியம் பெரும்பாலும் செய்வார்கள் என்பது கருத்து.
வாள் காவலாவது வாள் வைத்துக் கொண்டிருப்பவர்களுடைய காவல், வாள் போன்ற கொடிய காவல் எனினுமாம். பெறாராயின் என்பதோடு சிறப்பும்மை கூட்டிக் கொள்க. இங்கே இழுக்கென்றது முக்கியமாய்க் கற்பின் அழிவை, பெரும்பான்மையாய்ப் பெண்களின் இயல்பைச் சொன்னபடி. செய்குறா - உறு - துணைவினை, கு - சாரியை.
363. எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
(இ-ள்.) எறி என்று எதிர் நிற்பாள் - அடி என்று சொல்லி எதிரில் நிற்கிற பெண், கூற்றம் - எமன், சிறு காலை - காலையில், அட்டு இல் புகாதால் - சமையல் வீட்டிலே போகாதவள், அரு பிணி - அருமையான வியாதி; அட்டதனை - சமைத்ததை, உண்டி உதவாதாள் - உணவாகக் கொடாதவள், இல் வாழ் பேய் - வீட்டிலிருக்கிற பிசாசு; இம்மூவர் - இந்தப் பெண்கள் மூவரும், கொண்டானை - கொண்ட கணவனை, கொல்லும் படை - கொல்லும்படியான ஆயுதம், எ-று.
கணவன் ஏதாகிலும் கோபித்துச் சொன்னால் எதிர்த்து நிற்பதும், காலத்தில் சமைக்க முயலாமையும், கணவன் விரும்பிய போது சோறிடாமையும், புருடனைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்றபடி.
கூற்றம், பிணி, பேய், படை இவை உவமையாகு பெயர்கள். உண்டி என்பதனை ஏவலொருமையாக வைத்து "நீ உண்ணென்று கொடாதவள்" என உரைப்பாரும் உண்டு.
364. கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.
(இ-ள்.) கடி எனக் கேட்டும் - (இல்வாழ்க்கையை) நீக்கி விடு என்று (பெரியோர்) சொல்லக் கேட்டும், கடியான் - நீக்கான்; வெடி பட - (தலை) வெடித்துப் போம்படி, ஆர்ப்பது கேட்டும் - தம்பட்ட முதலியவை ஒலிப்பதைக் கேட்டும், அது தெளியான் - (இல்வாழ்க்கை) இத்தன்மையதெனத் தெரிந்து கொள்ள மாட்டான்; பேர்த்தும் ஓர் இல் கொண்டு - மறுபடியும் ஒரு இல்லாளைக் கட்டிக் கொண்டு, இனிது இரூஉம் ஏமுறுதல் - சந்தோஷமா யிருக்கின்ற மயக்கம், கல் கொண்டு எறியும் - கல்லால் எறியும்படியான, தவறு என்ப - குற்றம் என்று சொல்வர் (பெரியோர்), எ-று.
ஒருவன் கலியாண முயற்சியை விடு என்று பெரியோர் சொல்லவும் விடாமல் அவள் இறந்து போனதைக் கண்டும் தெரியாமல் மற்றொருத்தியைக் கலியாணஞ் செய்து கொண்டு மகிழ்ந்திருத்தல் பெருங் குற்றமென்பது கருத்து.
கடி என்பது கலியாணத்துக்கும் பேர். கடியத்தக்கது கடி என்று அதற்கு அவயவப் பொருள் கொண்டு உரைப்பாரு முளர். ஆர்ப்பது - இங்கு சாப்பறையின் ஓசை. இரூஉம் - குச் சாரியை இன்றி அளபெடுத்துப் பெயரெச்சமானது; இது சொல்லிசை யளபெடை. ஏகாரம் - அசை.
365. தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.
(இ-ள்.) ஒருவர்க்கு -, தவம் முயன்று வாழ்தல் - தவத்துக்குரிய காரியங்களில் முயற்சி செய்து வாழ்வது, தலையே - தலைமையான நிலை; இனியார்கண் தங்கல் - இனிமையான மனைவிகளிடத்துச் சேர்தல்; இடையே - நடுத்திறமானது; புணராது என்று எண்ணி - கிடைக்க மாட்டாதென்று நினைத்தும், பொருள் நசையால் - பணத்தின் ஆசையினாலே, தம்மை உணரார் பின் - தமது யோக்கியதையை அறியாதவர்கள் பின்னே, சென்று நிலை - போய் நிற்பது, கடையே - கடைசித் திறமேயாம், எ-று.
மனிதன் தவஞ்செய்து வாழ்வது முக்கியமானது; இல்லாவிட்டால் இல்லறத்தில் வாழவாவது வேண்டும். இது மத்திமம். இரண்டுமில்லாமல் இவர்களால் பணவுதவி யாகமாட்டாதென்று தெரிந்தும் தம் யோக்கியதையைத் தெரிந்து கொள்ள மாட்டாதவரைப் பின் செல்வது அதமம் என்றபடி.
எண்ணி என்பதோடு உம்மை கூட்டிக் கொள்க. நிலை - தொழிற்பெயர்.
366. கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
(இ-ள்.) தலை ஆயார் - தலைமையான அறிவினவர், கல்லா - நூல்களைக் கற்று, கழிப்பர் - (பொழுது) போக்குவர்; இடைகள் - மத்திமர், நல்லவை - கிடைத்த போகங்களை, துவ்வா - அனுபவித்து, கழிப்பர் -, கடைகள் - அதமர், இனிது உண்ணேம் - இனிமையான வுணவை உண்ணப் பெற்றிலோமே, ஆர பெறேம் - (செல்வத்தை) நிரம்பப் பெறவுமாட்டோமே, யாம் - நாம், என்னும் - என்று சொல்லத்தக்க, முனிவினால் - வெறுப்பினால், கண்பாடு - தூக்கம், இலர் - இல்லாதவராவர், எ-று.
நூல்களைக் கற்றுப் பொழுது போக்குவது மேலானவர்கள் தொழில்; கிடைத்தமட்டிலே திருப்தியாய்ச் சுகத்தை அனுபவித்தல் மத்திமர் தொழில்; அதமரோ கிடைத்ததில் திருப்தியில்லாமல் செல்வத்திற்காக ஏக்கம் பிடித்துத் தூக்கமுமில்லாமல் அலைந்து கெடுவார்கள் என்பது கருத்து.
கல்லா, துவ்வா - இரண்டும் செய்யா என்னும் இறந்தகால வினையெச்சம். துவ்வா - து - பகுதி, ஆ - விகுதி, வகரம் எழுத்துப் பேறு, உண்ணேம், பெறேம் என்பன நமக்குக் கிட்டாதென்று வெறுப்பின் விதத்தைக் காட்டும். கண்பாடு - தொழிற்பெயர், முதல் நீண்டது, கண்படுதல் - செய்கையின்றி யழிதல், இதன் காரணமான தூக்கத்திற் காயிற்று, கண்பாட்டை இலர் எனவுமுரைக்கலாம்.
367. செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.
(இ-ள்.) செம் நெல்லால் ஆய செழு முளை - நல்ல நெற்களாலுண்டாகிய செழிப்பான முளைகள், மற்றும் - பின்னும், அ செம் நெல்லே ஆகி - அந்த செவ்விய நெல்லாகவே தாம் ஆய், விளைதலால் - (மேன்மேல்) விளைகிறபடியினாலே, அ நெல் - அப்படிப்பட்ட நல்ல நெற்கள், வயல் நிறைய காய்க்கும் - வயல்கள் நிரம்பும்படி விளைகிற, வளம் வயல் ஊர - வளப்பமான வயல்கள் சூழ்ந்த வூர்களையுடைய அரசனே!, தந்தை அறிவு மகன் அறிவு - தகப்பனுடைய புத்தியே மகனுடைய புத்தியாகின்றது, எ-று.
நல்ல நெல்முளையினால் நல்ல நெல் விளைவது போல் தந்தையின் நற்புத்தியால் மகனுக்கும் நற்புத்தி யுண்டாமென்பதாம். இது காரணம் பற்றிப் பெரும்பான்மையான சம்பவத்தைச் சொல்லியது.
விளைதலால் - ஆல் உருபு ஞாபக ஹேதுப் பொருளில் வந்தது. தந்தையறிவு மகனறிவென் றறியப்படுமென்பதாம்.
368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
(இ-ள்.) உடை பெரு செல்வரும் - பெருஞ் செல்வமுடையோர்களும், சான்றோரும் - கல்வியறிவு நிறைந்தவர்களும், கெட்டு - (தம் நிலைகளிலிருந்து) மாறி, புடை பெண்டிர் மக்களும் - வைப்பாட்டி மக்களும், கீழும் - கீழ் மக்களும், பெருகி - விர்த்தியாகி, கடைக்கால் தலைக்கண்ணது ஆகி - காற்புறத்தி லிருக்க வேண்டியது தலைப்புறத்திருப்பதாகி, குடை கால் போல் - குடையினது காம்பு போல், உலகு - உலகமானது, கீழ் மேல் ஆய் நிற்கும் - கீழோன் மேலோனா நிற்கப் பெறும், எ-று.
செல்வரும் கற்றவரும் நிலைமாறி அயோக்கியர் விர்த்தியாகிக் கீழ்மேலா யிருக்கும் உலக இயற்கை என்றபடி. குடைக்காம்பு அப்படி யிருப்பது முற்காலத்தில்.
கெட்டு, பெருகி, ஆகி - இவை காரணப் பொருட்டாய் வந்த எச்சங்கள்; கெட்டதனால், பெருகினதனால், ஆனதனால் என்றது பொருள். உலகம் கீழ்மேலாவதற்கு இவை காரணம்; ஆதலின் பிற கர்த்தாவின் வினையில் முடிந்தன. செயவெனெச்சத் திரிபென்னவுமாம். இப்படியும் உலகம் மாறிவிடும் என்பது கருத்து. "வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே."
369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
(இ-ள்.) மணி வரன்றி - ரத்தினங்களை வாரிக் கொண்டு, வீழும் அருவி - வீழ்கிற அருவிகளோடு கூடிய, விறல் மலை நல் நாட - மேன்மையான மலைகளுள்ள நல்ல நாட்டின் அரசனே!, இனியார் - சிநேகிதர், தம் நெஞ்சத்து நோய் உரைப்ப - தம் மனதிலிருக்குந் துன்பத்தைச் சொல்ல, அ நோய் தணியாத - அந்தத் துன்பங்களைப் போக்காத, உள்ளம் உடையார் - மனமுடையவர்கள், வாழ்வின் - வாழ்வதைக் காட்டிலும், வரை பாய்தல் - மலையிலிருந்து குதித்து உயிர் விடுதல் நன்று - மேலானதாம், எ - று.
சிநேகிதர் துன்பத்தை நீக்க மனமில்லாதவர் வலுவில் உயிர் விடுதல் மேல் என்பது கருத்து.
தம்மாலே அத்துன்பத்தை நீக்கக் கூடினும் கூடாவிடினும் அதில் மனஞ் செல்லாத பாவிகள் என்பதற்கு "தணியாத வுள்ளமுடையார்" என்றது.
370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.
(இ-ள்.) புது புனலும் - (வெள்ளம் வந்த) புதிய நீரும், பூ குழையார் நட்பும் - அழகிய காதணியணிந்த வேசைமாதர்களுடைய சிநேகமும், இரண்டும் -, விதுப்பு அற நாடின் - துரிதமில்லாமல் யோசித்தால், வேறு அல்ல - (ஒரு தன்மை யுடையனவே யல்லாமல்) வேறு தன்மை யுடையன அல்ல; புது புனல் - புதுநீர், மாரி அறவே அறும் - மழை நீங்கினால் நீங்கும்; அவர் அன்பும் - அவ்வோசையருடைய சிநேகமும், வாரி அற - பொருளின் வரவு நீங்க, அறும் - நீங்கும், எ-று.
மழை நின்றால் புதுவெள்ளம் நிற்பது போல் பணவரவு நின்றால் வேசையர் சிநேகமும் நிற்கு மாதலால் அவ்வஞ்சகரோடு சேர வேண்டாம் என்பது கருத்து.
புனலும் நட்பும் - எண்ணும்மைகள். அறவே, அறுமே - ஏ இரண்டும் அசை அல்லது அறவே ஏகாரம் உடனே என்னும் பொருளைக் குறிப்பிக்கும். அறுமே - ஏ பிரசித்தத்தைக் குறிக்கும். அன்பும் - உம்மை எச்சப் பொருளில் வந்தது.
காமத்துப்பால்
[அதாவது இம்மை யின்பங்களில் சிறப்பாய்க் கொண்ட காமத்தைப் பற்றிச் சொல்லியது.]
38. பொது மகளிர்
[அதாவது வேசையர் தன்மையைக் குறித்துச் சொல்லியது. அவர்கள் ஒருவர்க்கே வாழ்க்கைப்படாமல் பணங்கொடுத்தவர்கெல்லாம் வாழ்க்கைப்படுதலால் பொதுமகளிர் என்னப் பட்டார்.]
371. விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
(இ-ள்.) விளக்கு ஒளியும் - விளக்கினது பிரகாசமும், வேசையர் நட்பும் - பொதுமகளிரது அன்பும், இரண்டும் - (ஆகிய) இரண்டும், துளக்கு அற நாடின் - சஞ்சலமில்லாமல் யோசித்தால், வேறு அல்ல -வேறுவகைப்பட்டன அல்ல; விளக்கு ஒளியும் - விளக்கினது பிரகாசமும், நெய் அற்ற கண்ணே - நெய் வற்றிய அப்போதே, அறம் நீங்கும்; அவர் அன்பும் - அவ்வேசையர் நட்பும், கை அற்ற கண்ணே - கைப்பொருள் நீங்கிய பொழுதே, அறும் - நீங்கும், எ-று.
விளக்கின் பிரகாசமானது நெய் வற்றிய பொழுது நீங்குதல் போல வேசிமார் நட்பும் பொருள் வறளுமளவே யன்றிப் பின்பு கிஞ்சித்தும் இராதென்பதாம். இதனால் அன்பில்லா தாருடைய போகம் இனிதன்று என்பது கருத்து.
வேசையர் - வேஸ்யா என்னும் வடசொல்லின் திரிபு. நட்பு - பண்பையுணர்த்தும் தொழிற்பெயர்; நள் - பகுதி, பு - விகுதி. வேறல்ல என்பது வெவ்வேறு தன்மைகளுள்ளன வல்ல என்பதாம்; அவ்வொரு தன்மையாவது காரணமுள்ள அளவே காரியமிருத்தல். அற்றகண் - பெயரெச்சத் தொடர். அறும் - நீங்குந் தன்மையுள்ளதெனத் தன்மையைக் காட்டினதேயன்றிக் காலங் காட்டினதல்ல; இதற்கு விதி "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்" என்பது.
372. அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
(இ-ள்.) அம் கோடு அகல் அல்குல் - அழகிய பக்கங்களுள்ள அகன்ற அல்குலை யுடையவளான, ஆய் இழையாள் - ஆய்ந்தெடுத்த ஆபரணத்தை யுடையவள் [வேசைப் பெண்], நம்மொடு - நம்மோடு கூட, செம் கோடு - செம்மையான மலையினுச்சியிலிருந்தும், பாய்துமே மன் என்றாள் - (உன்னுடன் ஏறி) கீழே விழுவோம் என்று உறுதியாகச் சொன்னாள்; காணம் இன்மையால் - (நம்மிடத்தில்) பணமில்லாமையால், செம் கோட்டின் மேல் - செம்மையான மலையுச்சியின் மேல், மேவாது - (நம்முடனே) சேராமல், கால் - (தன்) காலில், கால் நோய், வாத நோயை, காட்டி - காண்பித்து, சுலுழ்ந்து - கலங்கி அழுது, ஒழிந்தாள் - நீங்கினாள், எ-று.
ஒருவன் உயிர்க்குயிராய் வைத்திருந்த ஒரு வேசையின் நடக்கையைச் சொல்லியது. நீ மலைமேலேயேறி வீழ்ந்தாலும் நான் கூட விழுவேனே யல்லது உயிர் பிழைத்திரேன் என்று நான் பணம் கொடுத்த போதெல்லாஞ் சொல்லி, நானோர் ஆபத்தால் மலைக்கோடேறி விழும்படி நேரிட, அப்போதும் அவளைப் பிரிய மனமில்லாமல் கூட வாவென்று அழைக்க, அதற்குத் தன் காலில் நோயுண்டென்று காட்டிப் பொய்யழுகை யழுது என்னைவிட்டு நீங்கிப் போனாள் என்றான் என்பதாம். இதனால் வேசையர் வஞ்சித்தும் பணம் பறிப்பா ரென்பதாயிற்று.
பாய்தும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று; தும் - விகுதியே காலம் காட்டும் [பதவியல். சூ. 18].
373. அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.
(இ-ள்.) அம் கண் விசும்பின் - அழகிய இடமுள்ள தேவலோகத்திலுள்ள, அமரர் தொழப்படும் - தேவர்களால் வணங்கப்படுகிற, செம் கண் மால் ஆயினும் ஆக - சிவந்த கண்களையுடைய மகாவிஷ்ணுவே யானாலும் ஆகட்டும், தம் கை கொடுப்பது ஒன்று - தமது கையில் கொடுக்கும்படியான ஒரு பொருள், இல்லாரை - இல்லாதவர்களைக், கொய்தளிர் அன்னார் - கொய்யத்தக்க தளிர்போன்ற மேனியையுடைய வேசிகள், தம் கையால் - தமது கையால், தொழுது - கும்பிட்டு, விடுப்பர் - அனுப்புவார்கள், எ-று. மன் - அசை.
எவ்வளவு ரூபலாவணியம் முதலிய குணங்கள் வாய்ந்தவரானாலும் பணம் இல்லாதவர்களை இப்போது நீங்கள் வருவதற்கு சமயமில்லையென்று போக்குச் சொல்லித் தடுத்து அனுப்பிடுவார்களேயன்றி அவரைச் சேரார்க ளென்பது கருத்து. இதனால் பணம் ஒன்றையே யன்றி மற்றெந்தக் குணத்தையும் விரும்பார்களென்று அவர்களுடைய ரசமறியாக் குணத்தை யுணர்த்தினார்.
அமரர் தொழப்படுவதனால் மேன்மையும், செங்கண் என்றதனால் ரூபமும், குறிக்கப்பட்டன. ஆக - வியங்கோள் வினைமுற்று. மன் - அசை.
374. ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.
(இ-ள்.) ஆணம் இல் நெஞ்சத்து - அன்பில்லாத மனத்தையுடைய, அணி நீல கண்ணார்க்கு - அழகுள்ள நீலோற்பலம் போன்ற கண்களையுடைய வேசையர்க்கு, காணம் இல்லாதார் - தனம் இல்லாதவர்கள், கடு அனையர் - விஷம் போலப் பிரியமில்லாதவராவர், காண - யோசிக்குமளவில், செக்கு ஊர்ந்து கொண்டாரும் - செக்காட்டுவோராயினும், செய்த - தேடிய, பொருள் உடையார் - திரவியத்தையுடையவர், அவர்க்கு - அவ்வேசையர்க்கு, அக்காரம் அன்னார் - சர்க்கரை போலினியராவர், எ-று.
பணமொன்றிலே யல்லாமல் மற்றெதிலும் அன்பில்லாதவராதலால் வேசையர்கள் பணமில்லாதாரை விஷத்து கொப்பாகவும் பணமுள்ளோரை அக்காரத்துக் கொப்பாகவும் கொள்கின்றார்கள் என்றதனால் அவர் போகம் மிகவும் இனிப்பில்லாத தென்பது கருத்து.
காண - செய்வெனெச்சம், நிகழ்காலத்தில் வந்தது; இதை மத்திமதீப நியாயத்தாலே இருபுறமுங் கொள்க.
375. பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
(இ-ள்.) பாம்பிற்கு - பாம்பினுக்கு, ஒரு தலை காட்டி - ஒரு புறத்தைக்காட்டி, ஒரு தலை - மற்றொரு புறத்தை, தேன் படு - மதுரத்தைப் பெற்றிருக்கிற, தெள் கயத்து மீன் - தெளிந்த தடாகத்திலுள்ள மீனுக்கு, காட்டும் - காண்பிக்கும், மலங்கு அன்ன - விலாங்கு மீனை யொத்த, செய்கை - செய்கையையுடைய, மகளிர் தோள் - வேசையரது தோள்களை, விலங்கு அன்ன - மிருகத்தையொத்த, வெள் அறிவினார் - அறிவில்லாத மூடர்கள், சேர்வார் - அணைவார்கள், எ-று.
தன்னைப் பிடிக்கவரும் பாம்புக்கும் மீனுக்கும் இது பிடிபடும் என்னும் ஆசையைக் காட்டி ஒன்றினுக்கும் அகப்படாமல் தப்பித்துக் கொள்ளும் விலாங்கு மீனைப் போல் ஆசைகாட்டி மயக்கும் வேசையாரை விவேகமற்றவர்களே சேர்வார்கள் என்பது கருத்து.
அவர்கள் வஞ்சனை தெரிந்தால் மலம்பட்ட அமுதம் போல் அவருருவமும் போகமும் யார்க்கும் இனிக்கமாட்டா. அதனைத் தெரிந்து கொள்ள மாட்டாமையால் வெள்ளறிவினாரென்றார். மீன் காட்டும் - நான்காம் வேற்றுமைத் தொகை. ஆங்கு - அசை. வெண்மையான அறிவு வெள்ளறிவு; வெண்மையாவது கல்வி கேள்விகளாற் கலப்புறாமை.
376. பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
(இ-ள்.) நூல் - நூலிற் (கோத்த), பொத்த - தொளைத்த, கல்லும் - மணியும், புணர் பிரியா - கூடியிருத்தல் பிரியாத, அன்றிலும் போல் - அன்றிற் பறவைகளைப் போலவும், நித்தலும் - தினமும், நம்மை பிரியலம் என்று உரைத்த - நம்மை விட்டுப் பிரியமாட்டோமென்று சொல்லிய, பொன் தொடியும் - பொன்னாலாகிய வளையலையுடையவளும் [வேசையும்], போர் தகர் கோடு ஆயினாள் - போர்செய்கின்ற ஆட்டினுடைய கொம்பு போல் (திரும்பிய குணமுடையவள்) ஆயினாள்; நல் நெஞ்சே - நல்ல மனமே!, நீ நிற்றியோ - நீ (அவளிடத்தில்) நிற்கின்றாயா?, (அல்லது) போதியோ (என்னுடன்) வருகின்றாயா? (சொல்), எ-று.
நூலும் மணியும் போலவும் அன்றிலைப் போலவும் உம்மைக் கூடியிருப்பேனேயல்லது பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லி, என் கையில் பணம் வறண்ட இக்காலத்தில் சண்டை யாட்டுக்கடாவின் கொம்பு பின்னிட்டு வளைந்திருப்பது போல முன் சொன்னதற்கு விரோதமாகப் பின்னிவிட்டாள். அவள் குணந் திரிந்த இக்காலத்தும் நீ அவளிடத்தில் இருப்பையா அல்லது பிரிந் தென்னோடு வருவையா, மனமே? என்றதனால், வேசையர் குணந்தெரிந்தும் அவளைப்பற்றி யலையாமல் மனதைச் சுவாதீனப் படுத்திக் கொள்ளவேண்டுமென்பது கருத்து.
பொத்த - பொத்து - பகுதி, அ - பெயரெச்ச விகுதி. நூற்கல் - உம்மைத் தொகை. கல்லும், அன்றிலும் - எண்ணும்மைகள். பிரியலம் - உடன்பாட்டு எதிர்மறைச் சிறப்பு வினைமுற்று; பிரி - பகுதி, அல் - எதிர்மறை விகுதி, அனைத்தும், ஓர் பகுதியாகி, அதன்மேல் அம் - தன்மைப்பன்மை விகுதி, நிற்றீ, போதி - நிகழ்கால வினைமுற்றுகள். நிற்றி - நில் - பகுதி, இ - விகுதி, லகரம் றகரமானது சந்தியும் விகாரமும்; றி - விகுதியென்பது நேர். றி என்பதில் றகரம் இடைநிலை யென்றால் அது இறந்த காலத்தைக் காட்டும், ஆகையால் பொருந்தாது. போதியோ என்பதற்கு அவளை விட்டுப் போகிறாயா? எனவும் பொருள் கூறலாம். இப்பகுதிக்கு வருதலும் அர்த்தமாகிறது. ஓ - இரண்டும் வினா.
377. ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.
(இ-ள்.) ஆ மா போல் - காட்டுப் பசுவைப் போல், நக்கி - (இன்ப முண்டாக) பரிசித்து, அவர் - தம்மைச் சேர்ந்தவர்களுடைய, கை பொருள் கொண்டு - கையிலிருக்கும் பொருளைக் கவர்ந்து கொண்டு, சே மா போல் - எருதைப் போல, குப்புறும் - கவிழ்ந்து படுத்துக் கொள்ளுகிற, சில்லைக்கண் - பரத்தையினிடத்துள்ள, அன்பினை - அன்பை, ஏமாந்து - மயங்கி, எமது என்று இருந்தார் - எமக்கே யுரியதென்றிருந்தவர், பலரால் - பலர்களாலும், நகை பெறுப - நகைத்தலைப் பெறுவார்கள், எ-று. தாம், ஆம், எ - மூன்றும் அசைகள்.
ஆமா இன்புற நக்கும், அதுபோல் இவர்களும் இன்புற ஆலிங்கன முதலியவற்றைச் செய்து அவர் கைப்பணம் பறித்துக் கொண்டு, அவர் அதிக மோகங்கொண்ட சமயத்தில் எருதைப் போல கவிழ்ந்து கொண்டு மோசஞ்செய்கிற வேசையினது அன்பைத் தமக்குரியதென்று நம்புகிறவனைப் பலர் நகைப்பார்கள் என்பது கருத்து.
சேமா - இருபெயரொட்டுப் பண்புத்தொகை சில்லைக் கண் - உவமைத் தொகை; சில்லை - சிள்வண்டு, அதைப்போன்ற கண்ணுடையாள். வண்டு தேனிருக்கு மிடமெல்லாஞ் சென்று அதைக் கவர்ந்து கொண்டு நீங்குதல் போலப் பணமுடையாரிடத் தெல்லாம் நாடுங்கண்ணளாகையால் சில்லைக்கண் என்றார். கண் என்பது இங்கே உள்நாட்டத்தை. ஏமாந்து - ஏமா - பகுதி. பெறுப - பலர்பால் வினைமுற்று. ப - விகுதி, காலத்தையும் பாலையும் காட்டும்.
378. ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.
(இ-ள்.) செம் நெறி - நல்லவழியை [வீட்டுநெறியை], சேர்தும் என்பார் - அடையக் கருதுவோர், ஏமாந்த போழ்தின் - மயங்கிய போது, இனியார் போன்று - பிரியமுள்ளவர்களைப் போலிருந்து, தாம் ஆர்ந்த போது - தாம் (வறியராய்) இச்சித்த காலத்து, இன்னார் ஆய் - பிரியமில்லாதவர்களாய், தகர் கோடு ஆம் - ஆட்டுக்கடாவின் கொம்பைப்போ லாகும்படியான, மான் நோக்கின் - மான் போலும் பார்வையையுடைய, தம் நெறி பெண்டிர் - சுதந்திரப் பெண்களாகிய வேசிகளுடைய, தடம் முலை சேரார் - பெரிய முலைகளைச் சேரமாட்டார்கள், எ-று.
காமுகர் மயங்கிய போது பணத்தைப் பறிக்கும் பொருட்டுப் பிரியமானவர்களாக விருந்து பின்பு அவர் பணம் வறண்டு விரும்பிய போது உடன்படாது மாறுபடுகின்ற வேசிகள் போகத்தை, நல்வழியில் நடக்க விரும்புவோர் விரும்ப மாட்டார்கள் என்றபடி.
ஆர்தல் - விரும்புதல் மானோக்கின் - இன் - சாரியை. தம் நெறிப் பெண்டிர் - ஒருவர்க்கும் உட்படாமல் தம் மனம் போன போக்கிலே செல்கின்றவர்கள். செந்நெறி - செம்மையான நெறி; பண்புத்தொகை. சேர்தும் - தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று.
379. ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.
(இ-ள்.) ஒள் நுதலார் - பிரகாசமான நெற்றியை யுடையவர்கள், ஊறு செய் நெஞ்சம் - துன்பஞ் செய்யும் படியான எண்ணத்தை, தம் உள் அடக்கி - (பிறர் அறிய வொட்டாமல்) தம்முள்ளே மறைத்து வைத்து, தேற - (காமுகர்கள்) நிச்சயமாகக் கொள்ளும்படியாக, மொழிந்த மொழி - சொன்ன சொற்களை, கேட்டு - (காதினாற்) கேட்டு, தேறி - (இவர்கள் நல்லவர் என்று) தேறி, எமர் என்று - எமக்குரியவரென்று, கொள்வாரும் - நினைக்கிறவர்களும், கொள்ப - (அப்படி) நினைக்கக் கடவர்கள்; (வேசையர்) யார்க்கும் - எவ்வகைப்பட்டவர்க்கும், தமர் அல்லர் - உரியரல்லர்; தம் உட்மபினார் - தமக்கே உரிய உடம்பின ராவர், எ-று.
தமது வஞ்சகத்தை வெளிக்காட்டாமல், நல்லவர்களைப் போல நம்பும்படி பேசும் வேசிமாரை நல்லவர்களென் றெண்ணுகிறவர்கள் எண்ணட்டும், அவர்கள் உடம்பை யாருக்கும் வசப்படுத்தாமல் தமக்கே வசப்படுத்தி வைத்திருக்கின்றவர்களென் றறிக.
ஊறு - உறு என்னும் பகுதி முதல் நீண்ட முதனிலைத் தொழிற்பெயர். எமர், தமர் - கிளைப்பெயர்; யாம், தம - பகுதிகள்.
380. உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
(இ-ள்.) உள்ளம் ஒருவன் உழையது ஆ - மனமானது ஒருவனிடத்தில் இருக்க, ஒள் நுதலார் - விளக்கமான நெற்றியையுடைய வேசிமார், கள்ளத்தால் செய்யும் - கள்ளத்தினாற் செய்கின்ற, கருத்து எல்லாம் - நினைவுகளெல்லாம், தெள்ளி அறிந்த இடத்தும் - தெளிவாக ஆராய்ந்து அறிந்த போதும், பாவம் செறிந்த உடம்பினவர் - பாவம் நிறைந்த உடம்பை யுடையோர் [அதாவது பாவிகள்], அறியார் ஆம் - அறியமாட்டார்களாம், எ-று.
மனம் ஒருவர்மேல் நிற்க மற்றொருவர் மேல் காமமுற்றது போல் நடித்துக் காட்டும் வேசியர் கள்ளக்கருத்தை நன்றாயறிந்த போதும் அறியாத மூடரா யிருப்பவர் யாரெனில் பாவிகளென்பதேயாம்.
39. கற்புடை மகளிர்
[அதாவது பதிவிரதைகளின் தன்மை. பொதுமகளிர் போகம் விரும்பத்தக்க தன்றென்ற போது குலமகளிர் போகம் அறத்துக்குப் பொருந்தியதனால் விரும்பத்தக்க தென இவ்வதிகாரம் முன்னதின் பின்னர் வைக்கப்பட்டது.]
381. அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
(இ-ள்.) அரு பெறல் கற்பின் - பெறுதற்கரிதான, கற்பினையுடைய, அயிராணி அன்ன - அயிராணியைப் போன்ற, பெரு பெயர் - பெரிய கீர்த்தியையுடைய, பெண்டிர் எனினும் - பெண்களானாலும், பெறும் நசையால் - தன்னை அநுபவிக்கும்படியான ஆசையால், விரும்பி - அபேட்சித்து, பின் நிற்பார் இன்மையே - (தன்) பின்னால் காத்திருக்கும் படியான புருஷரில்லாமையாகிய நற்குணத்தையே, பேணும் நறு நுதலாள் - பரிபாலனஞ் செய்கிற பெண், நன்மை துணை - (தன் நாயகனுக்கு) நல்ல துணையாவாள், எ-று.
இந்திராணிக்குச் சமானமான பெண்ணானாலும், எவள் தன்னைச் சேரவேண்டுமென்று விரும்புகிற புருஷர் தன் பின்னே நிற்காதபடி நல்லொழுக்கத்தில் நிற்கின்றாளோ அவளே தன் கணவனுக்கு நல்ல துணையானவள் என்பதாம்.
பெண்ணின் குறிப்பைக் காணாமல் எவனும் அவள் பின்னே நிற்கமாட்டா னாகையால் பின்னிற்பா ரென்றார். நறுநுதலாள் - நல்ல நெற்றியையுடையவள். அருபெறல் - பெறலரும் என்று சொற்களைத் திருப்பிக் கொள்க. அயிராணி - இந்திராணி என்னும் வட சொல்லின் திரிபு.
382. குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
(இ-ள்.) குடம் நீர் - (ஒரு) குடத்து நீரை, அட்டு உண்ணும் - காய்ச்சி உண்ணும்படியான, இடுக்கண் பொழுதும் - வறுமை வந்த காலத்தும், கடல் நீர் அற உண்ணும் - சமுத்திர ஜலத்தை வற்றும்படி உண்கிற, கேளிர் வரினும் - சுற்றத்தார் வந்தாலும், கடன் நீர்மை - கடமையாகிய குணத்தை, கை ஆறு ஆ - ஒழுக்கநெறியாக, கொள்ளும் - கொள்ளுகின்ற, மடம் மொழி மாதர் - இரசமான மொழியையுடைய பெண், மனை - இல் வாழ்க்கைக்குத்தக்க, மாட்சியாள் - மேன்மையை யுடையவள், எ-று.
குடநீரட்டுண்ணும் - அரிசி முதலியவை யின்மையால் நீரையே காய்ச்சி யுண்கிற என்று வறுமையின் மிகுதி கூறப்பட்டது. கடனீர் வற்றும்படி யுண்கிற கேளிர் என்றால் எண்ணிக்கையில்லாத பந்துக்களென்பது பொருள். கடனாவது - விருந்தோம்பல், சுற்றந்தழுவுதல் என்பன. மடமொழி - சுவடு முதலியவை இல்லாத பேச்சு. இடுக்கண் - இடுக்கமுற்று நிற்பது, அதாவது துன்பம்; இங்கே அது வறுமைக்குக் கொள்ளப்பட்டது. மனை - இல்லறம்.
383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
(இ-ள். நால் ஆறும் ஆறு ஆய் - நாற்றிசையும் வழியாகி, நனி சிறிது ஆய் - மிகவும் சிறியதாகி, எ புறனும் - எல்லாப் பக்கங்களிலும், மேல் ஆறு - மேல் வழியிலிருந்து, மேல் - (தன்) மேல், உறை சோரினும் - மழைத்துளி வழிந்தாலும், மேல் ஆய - மேலான தர்மங்களை, வல்லாள் ஆய் - (செய்ய) வல்லவளாய், வாழும் ஊர் - தான் வாழ்கின்ற ஊரிலுள்ளார், தன் புகழும் - தன்னைப் புகழும்படியான, மாண் - கற்பின் - மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய, இல்லாள் - மனைவி, அமர்ந்ததே - வாழ்கின்றதே, இல் - மனையாகும், எ-று.
நாற்பக்கத்திலும் வழியுடையதாய் மிகவும் சிறியதாய் மேல் வழியிலிருந்து மழைத்துளி தன் மேல் வழிந்தாலும் பொறுத்து இல்லறம் நடாத்துவதில் வல்லவளாய் ஊரார் தன்னைப் புகழக் கற்பின் மிகுந்தவள் வசிக்குமிடமே வீடென்பதாம். வீட்டின் சீர்மை யில்லாமையைச் சொன்னது தரித்திரத்தின் மிகுதியைக் குறிப்பிப்பதற்கு எவ்வளவும் தனக்குரிய ஒழுக்கத்தில் தவறுதல் இல்லாமல் கற்பினையுடையவள் சிறந்த பெண் என்றதாயிற்று. ஆய - பலவின்பால் வினையாலணையும் பெயர்.
384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
(இ-ள்.) கட்கு இனியாள் - கண்ணுக்கு இனிய ரூபத்தையுடையவளாய், காதலன் - நாயகனது, காதல்வகை - ஆசையின்படி, புனைவாள் - (தன்னை) அலங்கரித்துக் கொள்பவளாய், உட்கு உடையாள் - அச்சம் உடையவளாய், ஊர் நாண் இயல்பினாள் - ஊருக்கு நாணும் படியான தன்மையுடையவளாய் [அல்லது ஊரார் நாணும்படியான தன்மையுடையவனாய்], உட்கி - அஞ்சி, இடன் அறிந்து - சமயம் தெரிந்து ஊடி - (நாயகனோடு) பிணங்கி, இனிதின் - பிரியமாக, உணரும் - (புணர்ச்சியைத்) தெரிந்து கொள்கிற, மடமொழி மாதராள் பெண் - கபடமில்லாத பேச்சுகளை யுடைய பெண்ணே பெண் ஆவாள், எ-று.
முகக்கோட்டம் சுடுசுடுப்பு இல்லாமல் பார்க்கப் பிரியப்படுபவளாய், நாயக னிஷ்டப்படி தன்னை அழகு செய்து கொள்பவளாய், பர புருஷரோடு பேசுதல் முதலாகியவற்றிற்கு அஞ்சுகிறவளாய், எப்படிப்பட்டவர்களுக்கும் நாணுந் தன்மையுடையவளாய், நாயகன் மனதுக்கு என்னகோட்ட முண்டாமோவென் றஞ்சி அப்படிப்பட்ட தருணத்தில் ஊடி மறுத்தும் மூர்க்கமில்லாமல் ஊடலின் நீங்கிப் புணருங் காலம் அறிபவளே குலப்பெண்ணாவாள். "ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக், கூடலிற் றோன்றிய உப்பு" என்னுங் குறளானு முணர்க.
உவப்பிற்கு ஏதுவாகையால் இங்கே இடனறிந்தூடி என்றும், அவ்வூடலே பிடிவாதமாய் நின்றால் அது வெறுப்பைத் தருமாதலால் இனிதினுணரும் என்றுங் கூறினார். "ஒரு பொருண் மேற்பல பெயர்வரினிறுதி, யொருவினை கொடுப்ப தனியு மொரோவழி" என்பதனால் இனியாள் முதலியவை 'மாதராள் பெண்' என்பதனோடு முடிந்தது. இச்சூத்திரத்தில் வினையென்றது முடிக்குஞ் சொல்லை. காதல்வகை - வகையென்பதனோடு ஆக என ஒரு சொல்லை வருவித்துக் கூட்டிக் கொள்க.
ஊர் - ஊரிலுள்ளார்க்கு ஆகுபெயர். ஊர் நாண் இயல்பினாள் - ஊரிலுள்ளவர்கள் வெட்கப்படும்படியான கற்புடைமை முதலிய நற்குணமுடையாள் என உரைப்பினும் பொருந்தும். மாதர் - அழகு, அதனையுடையவள் மாதராள்.
385. எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
(இ-ள்.) எ ஞான்றும் - எந்த நாளும், எம் கணவர் - எம்முடைய நாயகர், எம் தோண்மேல் - எம்முடைய புயங்களில், சேர்ந்து எழினும் - அணைந்தெழுந்தாலும், அ ஞான்று - அந்த நாளில், கண்டேம் போல் - (யாம்) கண்டது போல, நாணுதும் - நாணமடைகின்றோம், எ ஞான்றும் - எப்பொழுதும், பொருள் நசையால் - பொருள் ஆசையால், பல் மார்பு - பலருடைய மார்புகளை, சேர்ந்து ஒழுகுவார் - சேர்ந்து நடக்கின்ற பரத்தையர், கெழீஇயினர் - (பலர்க்கும்) உரியராயினர், என்னை - ஈதென்ன தன்மையோ? எ-று ஆல், கொல், ஒ - அசைகள்.
எம்முடைய நாயகர் எப்போதும் எம்மைவிட்டுப் பிரியாமலே இணைந்திருக்கிறார். ஆயினும் முதலில் கண்ட போது எப்படி நாணினோமோ அப்படியே இன்றும் நாணுகின்றோம். இப்படியிருக்க, பொருளாசையினால் ஒரு கால் சேருகின்ற வேசிமார் சற்றும் நாணாமல் சேர்ந்தவர்களை எப்படி அவ்வளவு சொந்தமாய்க் கையாளுகிறார்கள் என்பது கருத்து. இதனால் வேசிமாரைப் போல நாணம் அச்சங்களின்றிப் புருஷரிடத்தில் நடப்பவர்கள் குலப்பெண்களாகார்கள் என்பதாம்.
சேர்ந்தெழினும் - சேர்ந்தெழுந்தாலும். கண்டேம் - தன்மைப் பன்மை வினையாலணையும் பெயர். நாணுதும் - தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று; இங்கே இயல்பினால் நிகழ்காலத்தில் மயங்கியது. என்னை - எவன் என்னும் வினாவினைக் குறிப்புமுற்று, கடைக்குறையாய் ஐகாரச் சாரியை பெற்றது. கெழீஇயினர் - இன்னிசையளபெடை, கெழுவு - பகுதி, இன் - இடைநிலை, அர் - விகுதி, தெரிநிலை வினைமுற்று.
386. ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
(இ-ள்.) வள்ளன்மை - மிகுந்த ஈகையை, பூண்டான்கண் - அடைந்தவனிடத்துள்ள, ஒள் பொருள் - பிரகாசமான திரவியமானது, உள்ளத்து - மனத்தில், உணர்வு உடையான் - அறிவுடையவன், ஓதிய நூல் அற்று - படித்த நூலை ஒத்திருக்கும்; (அதுபோல) நாண் உடையாள் - நாணம் உடைய குலமகள், பெற்ற நலம் - அடைந்த அழகு, தெள்ளிய - விவேகமுள்ள, ஆண் மகன் - வீரனாகிய புருஷருடைய, கையில் - கையிலுள்ள, அயில் - கூர்மையான, வாள் அனைத்து - வாளை ஒத்திருக்கின்றது, எ-று.
இயற்கையில் தாதாவாயிருப்பவன் கையில் பணம் இருந்தால் அது விவேகமுள்ளவன் கற்ற நூற்பொருள் போல் பயன்பட்டு விளங்கும். அதுபோல இயற்கையில் நாணமுடைய வளுக்குள்ள அழகாவது வீரன் கையில் ஆயுதம் போல் யாவராலும் புகழப்பட்டு விளங்குமென்பதாம்.
ஆல், அரோ - அசைகள். வள்ளல் தன்மை - வள்ளன்மை. ஒள்பொருள் - ஒண்பொருள், பண்புச் சொற்களிலுள்ள லகர ளகரங்கள் பெரும்பாலும் னகர ணகரங்களாகத் திரிந்து வருவன என அறிக. வாள் அனைத்து - அனை - உவமைச்சொல். வாளனைத்து என்பது ஒரு சொல்லாக் கொள்ளத்தக்கது.
387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.
(இ-ள்.) ஊரன் - ஊருக்குடையவன், கரு கொள்ளும் - கறுத்த கொள்ளையும், செம் கொள்ளும் - சிவந்த கொள்ளையும், ஒருங்கு ஒப்ப - சமானமாய் ஒத்திருக்க, தூணி பதக்கு என்று - தூணிப்பதக்கென்னும் அளவால், கொண்டானாம் - வாங்கிக் கொண்டானாம்; (அதுபோல்) ஒருங்கு ஒவ்வா - முழுதும் ஒத்திராத, நல் நுதலார் - அழகிய நெற்றியையுடைய வேசியரை, தோய்ந்த - அனுபவித்த, வரை மார்பன் - மலை போன்ற மார்பையுடைய கணவன், நீர் ஆடாது - ஸ்நானஞ் செய்யாமல், என்னையும் தோய வரும் - என்னையும் அனுபவிக்க வருகிறான். எ-று.
ஒரு நாட்டுப்புறத்தான் கருங்கொள்ளையும் செங்கொள்ளையும் விலை வித்தியாசமில்லாமல் ஒரேயளவிற்கு வாங்கிக் கொண்டா னென்பார்கள், அப்படியே என் கணவன் பல பரத்தையரைப் புணர்ந்து ஸ்நானமுஞ் செய்யாமல் என்னையும் அனுபவிக்க வருகிறான், இதென்ன அக்கிரமம் என்று தலைவி கூறியதாகக் கொள்க. இதனால் தன் கணவன் செய்த அக்கிரமத்தையும் பொறுத்துக் கொள்வார் கற்புடை மகளிர் என்பதும், நீராடியாயினும் வந்தால் சேரலாமெனத் தம்முடைய சுத்தியையும் கூறினவாறாயிற்று.
ஒருங்கு - பகுதியே வினையெச்சப் பொருட்டாய் வந்தது. தூணி பதக்கு என்பன முகத்தலளவைப் பெயர்கள். தூணி - நாலுமரக்கால், பதக்கு - இரண்டு மரக்கால். ஆம் என்பது தாம் காணாமையைக் குறிக்கின்றது. ஊரன் என்பது தாரதம்மிய மறியாமையைக் குறிக்கின்றது. வரும் - இயல்பினால் வந்த கால வழுவமைதி.
388. கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.
(இ-ள்.) பாண - பாணனே!, கொடியவை கூறாதி - கொடுமையான சொற்களைச் சொல்லாதே; (ஏனெனில்) யாம் -, ஊரற்கு - தலைவனுக்கு, துடியின் - உடுக்கையினது, இடம் கண் அனையம் - இடது பக்கத்தைப் போல் பிரயோசனப் படாதவர்களாயிருக்கின்றோம்; அதனால் - அத்தன்மையால், நீ கூறின் - (அப்படிப்பட்ட சொற்களை) நீ சொன்னால், பைய - மெதுவாக, அடி விட்டு ஒதுங்கி சென்று - நீ இருக்குமிடத்தை விட்டு அப்புறம் போய், வலம் கண் அனையர்க்கு - அந்த (உடுக்கையின்) வலது பக்கத்தைப் போல் அவருக்குப் பிரயோசனப்படுகிற வேசியர்க்கு, உரை - சொல்லு, எ-று.
இஃது ஒருத்தி தன் தலைவன் பரத்தையரிடத்துச் செல்வதைப் பாணன் தன்னிடத்திற் கூற, அதைக் கேட்கச் சகியாமல், பிரயோசனப்படாத வென்னிடத்திற் சொல்ல வேண்டாம், பிரயோசனப்படுகிற பரத்தையரிடத்திற் சொல்லென்று சொன்னாள் என்பது கருத்து. இதனால் தன் கணவன் தூஷணையைக் காதினால் கேட்கவும் பிரியமில்லாமையாகிய நற்குணம் குலமகளிர்க் குண்டென்று கூறப்பட்டது.
உடுக்கைக்கு வலதுபக்கம் அடிபடுதலே யன்றி இடது பக்கம் அடிபடுவதில்லை. பாணன் என்பவன் பாடுகின்ற ஓர் இழி சாதியான்; இவன் தலைவன் தலைவிகளுக்குத் தூது செல்வதுண்டு. கூறாதி - முன்னிலை யேவலொருமை வினைமுற்று; கூறு - பகுதி, ஆ - எதிர்மறை விகுதி, தகரம் - எழுத்துப்பேறு, இ - விகுதி, பைய - குறிப்பு வினையெச்சம். அனையம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.
(இ-ள்.) சாய் - கோரைப்புல்லை, பறிக்க - பிடுங்க, நீர் திகழும் - நீர் விளங்குகின்ற, தண் வயல் - குளிர்ச்சியாகிய வயல் சூழ்ந்த, ஊரன் மீது - ஊர்களையுடையவனான நாயகன் மீது, ஈ பறக்க - ஈயானத் பறக்கையில், நொந்தேனும் யானே - சகியாமல் மனவருத்தப்பட்டவளும் யானே, தீ பறக்க - தழல் வீசும்படி, முலை தாக்கி - (வேசியர்) முலைகளினால் தாக்கி, பொருத - போர்செய்த [கிரீடை செய்த], தண் சாந்து - குளிர்ச்சியான சந்தனக் கலவையை, அணி அகலம் - தரித்த மார்பை, நோக்கி இருந்தேனும் யான் - கண்டிருந்தவளும் யானே, எ-று.
கூடியிருக்கையில் என் நாயகன் மேல் ஈ பறக்கவும் பார்த்துச் சகியாமல் அன்பு கொண்டிருந்தவளும் நான், வேசிமார் தீப்பறக்கும்படி அழுத்தமாய் முலைகளால் தாக்கி கிரீடை செய்து சந்தனக்குழம்பு அப்பிய மார்பைக் கண்டு நொந்து நிற்பவளும் யான் என ஒரு குலமகள் கூறியது. இதனால் குலமகளிர் தமது நாயகர் பரத்தையரைக் கூடின காலத்தும் தாமவரைத் திரஸ்காரஞ் செய்யாது இருக்க வேண்டுமென்று கூறியதாயிற்று.
பறிக்க - காரணப் பொருட்டாய் வந்த செயவெனெச்சம். மன - அசை; மிகவும், எனவும் சொல்லலாம். பொருத - பொரு - பகுதி, த - இடைநிலை, அ - பெயரெச்ச விகுதி; இறந்தகாலப் பெயரெச்சம். நொந்தேன், இருந்தேன் - தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்கள். உம் - சிறப்போடு எண்ணுப் பொருளையும் தரும். ஏ - பிரிநிலை.
390. அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.
(இ-ள்.) பாண - பாணனே!, அரும்பு அவிழ் - பூவரும்புகள் மலரும்படியான, தாரினான் - மாலையணிந்த எனது நாயகன், எம் அருளும் என்று - எமக்குக் கிருபை செய்வானென்று, பெரு பொய் - பெரிய பொய்யான வார்த்தைகளை, உரையாதி - சொல்லாதே; (ஏனெனில்) ஊரற்கு - உரையாளும் அவனுக்கு, கரும்பின் கடை கண் அனையம் நாம் - நாங்கள் கரும்பின் கடைசிக் கணுவை யொத்திருக்கின்றோம்; அதனால் - (இப்பேச்சை) இடை கண் அனையார்க்கு - (அக்கரும்பின்) இடையிலுள்ள கணுக்களையொத்த பரத்தையர்க்கு, உரை - சொல்லு, எ-று.
கரும்பின் கடைக்கணுவைப் போல் உருசி குறைந்துள்ள நம்மிடத்தில் அருள்செய்து நாயகன் வருவானென்று பாணனே நீ பொய்யுரை சொல்லாதே; அக்கரும்பின் இடைக் கணுக்களைப் போல அவருக்கு ருசியுள்ள பரத்தையரிடம் இப்பேச்சைச் சொல்லு எனத் தலைவி கூறியது.
எம் அருளும் - நான்காம் வேற்றுமைத் தொகை. உரை யாதி - முன்னிலை யேவல் வினைமுற்று. அனையம் - தன்மைப் பன்மை வினைமுற்று.
40. காம நுதலியல்
[அதாவது காமத்தின் பகுதிகளைச் சொல்லுகின்ற பிரிவு.]
[இஃது தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது.]
391. முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
(இ-ள்.) வயங்கு - விளங்குகின்ற, ஓதம் - கடலானது, நில்லா - நில்லாமல், திரை அலைக்கும் - அலைகளால் மோதுகின்ற, நீள் சுழி - நீண்ட சுழிகளினது, தண் சேர்ப்ப - குளிர்ச்சியான கரையையுடைய அரசனே!, முயங்காக்கால் - சேர்ந்திராமற் போனால், பசலை பாயும் - பசலையானது [நிறம் மாறுதல்] உடம்பில் வியாபிக்கும், ஊடி உயங்காக்கால் - ஊடி வருந்தாத போது, காமம் உப்பு இன்றாம் - காமமானது ருசியில்லாமற் போகும்; புல்லா - புணர்ந்து, புலப்பது - ஊடுவது, ஓர் ஆறு - (காமத்துக்கு) ஓர் நன்னெறியாம், எ-று.
பசலை - விசனத்தைக் குறிக்கின்ற வேறு நிறம் [நிறம் மாறுதல்]; கூடாமற் போனால் பசலையுண்டாகின்றது. இங்கே பசலை நித்திரையின்மை, உடம்பு மெலிதல், எல்லாவற்றிலும் பிரியம் இல்லாமற் போதல் இவைகளுக்கு உபலக்ஷணம். எப்பொழுதும் சேர்ந்து கொண்டிருந்தால் காமத்தில் ருசியில்லை, ஆதலால் கூடுவதும் ஊடுவதும் காமத்திற்கு அழகு.
முயங்காக்கால் - செய்யின் என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்சம். காமம் உப்பின்று - மாடுகோடு கூறியது என்பது போலக் கொள்க. 'உயர்தினை தொடர்ந்த' என்னும் சூத்திர வுரையில் இலக்கணம் காண்க. கூடலை வடநூலாரும் சம்போகமென்றும் ஊடலை விப்ரளம்பம் என்றும் சொல்லி, விப்ரளம்பத்தை மதுரதரம் என்கிறார்கள். [மதுரதரம் - மிகுந்த இனிப்பு.]
392. தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
(இ-ள்.) தம் அமர் காதலர் - தம்மால் விரும்பப்பட்ட நாயகருடைய, தார் சூழ் அணி அகலம் - மாலையை யணிந்த அழகிய மார்பை, விம்ம முயங்கும் - பூரிக்கத் தழுவும், துணை இல்லார்க்கு - அந்நா யகரைப் பிரிந்த மாதருக்கு, இம் என - இம்மென்னு மோசையோடு, எழிலி பெய்ய - மேகம் (நீரைச்) சொரிய, முழங்கும் - முழங்காநின்ற, திசையெல்லாம் - திக்குகளெல்லாம், (அம்முழக்கம்) நெய்தல் அறைந்தது அன்ன நீர்த்து - சாப்பறை யறைந்தாற் போலும் தன்மையையுடைத்து, எ-று.
மழைக்காலத்தில் தம்மைத் தழுவும்படியான நாயகரைப் பிரிந்த மாதருக்கு மழை பெய்யும் ஓசை சாப்பறை போலிருக்கும் என்றால் அவர்கள் உயிர் பொறுத்தல் கடின மென்றபடி.
அமர் - வினைத்தொகை; இச்செய்வினையைச் செயப்பாட்டு வினையாகத் திரித்துக் கொள்க. நீர்த்து - குறிப்பு முற்று.
[இஃது தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.]
393. கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
(இ-ள்.) கம்மம் செய் - கம்மியத் தொழிலைச் செய்கின்ற, மாக்கள் - மனிதருடைய [கம்மாளருடைய], கருவி - ஆயுதங்களை, ஒடுக்கிய - வேலையில்லாமல் இருக்கச் செய்த, மம்மர் கொள் - மயக்கத்தைக் கொண்ட, மாலை - சாயங்காலத்தில், மலர் ஆய்ந்து - பூக்களை யாராய்ந்தெடுத்து, பூ தொடுப்பாள் - அம்மலர்களை (மாலையாத் தொடுத்து,) கை மாலை இட்டு - கையில் அம்மாலையை வைத்துக் கொண்டு, துணை இல்லார்க்கு - நாயகனில்லாத பெண்களுக்கு, இ மாலை என் செய்வது என்று - இந்த மாலை என்ன பிரயோசனத்தைத் தருவதென்று, கலுழ்ந்தாள் - மனம் கலங்கி அழுதாள், எ-று.
ஒருத்தி சாயங்காலம் நல்ல மலர்களை மாலை தொடுத்து நாயகன் பிரிந்து பரதேசம் செல்வதைத் தோழியாற் கேள்வியுற்று இவ்வளவு வருந்தி அன்பினால் நாயகருக்கென்று விநோதமாய்க் கட்டிய இந்த மாலை அவர் இல்லாத போது இது ஏதுக்கும் உபயோகமில்லையென்று மனங்கலங்கி அழுதாள் எனத் தோழி தலைவற்குக் கூறினாள். இதனால் அவன் பகற்காலத்தில் நாயகரைப் பிரிந்திருந்தாலும் இரவிற் பிரிந்திருப்பது சகிக்கத் தக்கதன்று என்றால் இதுவும் கார்க்காலம் போல பெண்களுக்கு வருத்த முண்டாக்கும் என்றதாயிற்று.
மாலை என்பது பூமாலையேயல்ல போகத்துக்கு வேண்டிய மற்றக் கருவிகளுக்கும் உபலக்ஷணம். இப்படிப்பட்ட காரியங்களெல்லாம் பெண்களுக்குக் காமமிகுதியால் வரும் இன்பச் செய்கைகள். 'கம்மஞ்செய்... ஒடுங்கிய' என்பது அந்திக் காலத்தின் குறிப்பு. பலகுறிப்புகள் உளவாயினும் பகலெல்லாம் மிகவருந்தி வேலை செய்யும் கம்மியரும் வேலையை நிறுத்தித் தன் நாயகிமாரிடம் செல்லுங் காலமென இக்குறிப்பைக் காட்டியது. மம்மர் என்பது காமக்களிப்பு. மம்மர் செய் - இது காலத்தின் இயற்கையைக் காட்டியது.
ஒடுங்கிய என்னும் பெயரெச்சமும் பெயரெச்சத்தின் விகாரமாகிய செய் என்னும் வினைத்தொகையும் [நன். பொது. சூ.4ம்] விதியால் மாலை என்னும் தம்மெச்சம் கொண்டன. கலுழ்ந்தாள் - கலுழ் - பகுதி.
[இஃது வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது.]
394. செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.
(இ-ள்.) செல் - (அஸ்தமிக்கச்) செல்கின்ற, சுடர் - சூரியனை, நோக்கி - பார்த்து, சிதர் - சிதறிய, அரி - இரேகைகளையுடைய, கண் - கண்கள், கொண்ட - அடைந்த, நீர் - நீரை, மெல் விரல் - மெல்லிய விரல்களால், ஊழ் - முறையில், தெறியா - எடுத்தெறிந்து, விம்மி - விம்மி அழுது, தன் மெல் விரலின் - தன்னுடைய மெல்லிய விரல்களில், நாள் வைத்து - நாள்களைக் கணக்கிட்டு, (தலைவி) அணைமேல் - படுக்கையில், தன் தோள் வைத்து - தன் புஜங்களைத் தலைக் கணையா வைத்து, கிடந்து - படுத்து, நம் குற்றம் - நமது குற்றங்களை, எண்ணும் கொல் - எண்ணுவாளோ, அந்தோ - ஐயோ! (என்று பாகனோடு தலைவன் கூறினான்), எ-று.
ஒரு தலைவன் தேசாந்தரம் போயிருந்து தன்னூர் கிட்ட வரும் போது, நம்முடைய காதலி அஸ்தமன காலங் கண்டு கண்களில் வடியும் நீரை விரலால் எடுத்துத் தெறித்து நாம் போன நாள் இத்தனையென்று விரல்வைத்தெண்ணி நாம் விரைவில் வருவோ மென்றும் இன்னின்னபடி செய்வோமென்றும் சொல்லித் தவறிப் போன குற்றங்களைச் சிந்தித்து விசனப்படுவாளே யென்றிரங்கிப் பாகனோடு சொல்லியபடி.
செல் - வினைத்தொகையாகலின் ஈறுதிரியா தியல் பாயிற்று. அந்தோ - இரக்கச் சொல். "சிதரரிக்கண்கொண்ட நீர்" என்பதற்கு 'இரேகைகள் படர்ந்த கண் அழகை மறைத்துக் கொண்டு நிற்கிற நீர்' என அவள் அழகை நினைத்து இரங்கினானென்பது கருத்து.
[இஃது தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது.]
395. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.
(இ-ள்.) கண் - கண்களை, கயல் என்னும் - மச்சமென்கிற, கருத்தினால் - எண்ணத்தினால், சிறு சிரல் - சிறிய சிச்சிலிக் குருவி, காதலி பின் சென்றது - மனைவியைப் பின் தொடர்ந்து போயிற்று; பின் சென்றும் - பின் போயும், ஊக்கி எழுந்தும் - முயற்சிப்பட்டும், ஒள் புருவம் - பிரகாசமான புருவமாகிய, கோட்டிய - வளைத்த, வில் வாக்கு - வில்லின் வளைவை, அறிந்து - தெரிந்து, எறிகல்லா - எறியமாட்டாதிருந்தன [பிடியாமலிருந்தன], எ-று.
தன் தலைவியினுடைய கண்களை மச்சமென்று நினைத்து சிச்சிலிக் குருவிகள் பின்சென்று பிடிக்க முயன்றும் மேலிருக்கும் புருவத்தை வளைத்த வில்லென்று நினைத்துப் பிடியாமனின்றன வென்று தன் காதலியினுடைய அழகை வியந்து தலைவன் தோழனோடு சொல்லியது.
அம்ம - இடைச்சொல், இது அசையுமாம், கேளுங்கள் என்கிற பொருளையுந் தரும். "அம்மவுரையசை கேண்மினென்றாகும்" என்பது சூத்திரம். எறிகல்லா - எறி - பகுதி, கு - சாரியை, அல் - எதிர்மறைப் பண்படி, இங்கு விகுதியாவேனும் இடைநிலையாவேனும் கொள்க; ஆ - பலவின்பால் விகுதி. எறிதல் - தூக்கிப்போடல் வாக்கு - வாங்கு என்னு முதனிலைத் தொழிற்பெயர் வலிந்து நின்றது.
[இஃது மகளைப் போக்கிய தாய் இரங்கியது.]
396. அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.
(இ-ள்.) அரக்கு ஆம்பல் - செவ்வாம்பலைப் போல, நாறும் - தோன்றுகின்ற, வாய் - இதழையுடைய, அம் மருங்கிற்கு - அழகிய இடையே யுடையவளுக்கு, அன்னோ - ஐயோ!, பரல் கானம் - பருக்காங் கற்களையுடைய காட்டை, அரக்கு ஆர்ந்த பஞ்சி கொண்டு - சிவந்த நிறமுடைய பஞ்சினால், ஊட்டினும் - (செம்பஞ்சிக் குழம்பைத்) தடவினாலும், பை என பை என என்று - மெதுவாக மெதுவாக என்று, அஞ்சி - பயந்து, பின் வாங்கும் அடி - (சகியாமல்) இளைக்கிற பாதங்கள், ஆற்றின கொல் ஓ - பொறுத்தனவோ?, எ-று.
நம்மகள் காடு சென்றாளே அவள் செம்பஞ்சிக் குழம்பைப் பஞ்சினால் தடவினபோதும் அதைப் பொறுக்க மாட்டாமல் மெல்ல மெல்ல என்று சொன்ன அவள் தன் தலைவன் பின்னே செல்லுகையில் அவளுடைய பாதங்கள் பருக்காம் கற்களின் மேல் எப்படி நடந்தனவோ வென்றிரங்கித் தாய் விசனப்பட்டுச் சொன்னாள் என்பதாம்.
நாறும் வாய் - மணம் வீசும் வாய் எனவும் பொருள் கொள்ளலாம். அம்மருங்குல் - உரிச்சொற்றொடர்ப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அம் - உரிச்சொல்; அது பண்பாதலால் "ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி" என்பதற்கு விரோதமில்லை. அன்னோ - இரக்கச்சொல். கொல் என்பது ஐயப்பொருளில்வந்த இடைச்சொல். ஓ - வாக்கியாலங்காரத்திற்கு வந்த அசைச்சொல். (அல்லது) "ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா" என்கிற விதியினால் இரண்டும் ஐயப்பொருளையே சிறப்பித்து நின்றன வென்னவுமாம்.
பைய என என்பது பையென என ஈறு தொகுத்தலாய் நின்றது. பையெனப் பையென - அச்சப்பொருள் பற்றி அடுக்கி வந்தன.
[இஃது தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.]
397. ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
(இ-ள்.) ஓலை கணக்கர் - ஓலையெழுதும் கணக்கர்களுடைய, ஒலி அடங்கும் - ஓசை ஒழிந்து போகும்படியான, புல் செக்கர் - அற்பமான சிவப்பினையுடைய, மாலை பொழுதில் - மாலைக்காலத்தில், மணந்தார் பிரிவு உள்ளி - தலைவன் பிரிதலை நினைத்து, மாலை பரிந்திட்டு - மாலையைக் கழற்றியெறிந்து, வனம் முலை மேல் - அழகான ஸ்தனத்தின் மேல், கோலம் செய் சாந்தம் - அலங்காரம் செய்த சந்தனப் பூச்சை, திமிர்ந்து - உதிர்ந்துத்தள்ளி, அழுதாள் - துக்கித்தாள், எ-று.
சாயங்காலத்தில் தன் தலைவன் பிரிவதை எண்ணி அதைப் பொறாமல் தலைவி, தான் அணிந்திருந்த பூமாலையைக் கழற்றி யெறிந்து சந்தனக் கோலத்தைத் திமிர்த்துத் தள்ளியழுதாள் எனத் தோழி தலைவற்குச் சொன்னா ளென்பதாம்.
கணக்கர் கிராமக்கணக்கு முதலியவைகளை யெழுதிப் பேசி யோயுங்காலமாதலால், "ஓலைக்கணக்கர் ஒலியடங்கு" என்பதைச் சாயங்காலத்தின் குறிப்பாகக் கொள்ளப்பட்டது.
அடங்கு - வினைத்தொகை. மணந்தார் - விவாகஞ் செய்தவர், வினையாலணையும் பெயர். உள்ளி - உள் அல்லது உள்ளு - பகுதி, இ - விகுதி, இதனை உகரத்தின் திரிபு என்று சொல்வாரு முளர்.
[இஃது உடன்போக்குப் பொருந்தின தலைமகன் தோழிக்குச் சொல்லியது.]
398. கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.
(இ-ள்.) சுடர் தொடீஇ - பிரகாசமுள்ள வளைகளை யுடையவளே!, கடக்க அருகானத்து - கடந்துபோவதற் கரிதான காட்டிலே, காளை பின் - காளை போன்ற என் கணவன் பின், நாளை - நாளைத்தினம், நடக்கவும் வல்லையோ - நடந்து சொல்லவு மாட்டுவையோ, என்றி - என்று நீ சொன்னாய்; பெரு குதிரை - பெரிய குதிரையை, பெற்றான் ஒருவன் - பெற்றவனாகிய ஒருவன், அ நிலையே - அக்கணமே, அஃது - அதை, ஊரும் ஆறு - ஏறி நடத்து முறைமையை, கற்றான் - கற்றவனேயாவன், (ஆதலால் நாயகன் பின்போதல் அரிதன்று), எ-று.
நீ நாளைக்குக் கணவன் பின் போக வுடன்பட்டையே நடந்து செல்லமாட்டுவையோ வென்று தோழீ நீ என்னை வினாவினாய், அதற்கு நான் சொல்லுகிறேன், ஒருவன் குதிரையை வாங்கினால் அதையேறி நடத்தவும் கற்றிருப்பானல்லவோ, அப்படிப்போல ஓர் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட நான் அவன் பின் செல்லமாட்டா திருப்பேனோ என்றாள் ஒருத்தி என்பதாம்.
கடக்க அரு - கடக்கரு என ஈறுதொக்கது. காளை - உவமையாகு பெயர். வல்லை - முன்னிலைக் குறிப்பு வினைமுற்று. ஓ - வினா விடைச்சொல். என்றி - முன்னிலை யொருமைத் தெரிநிலை வினைமுற்று; என் - பகுதி, இடைச்சொல், றகரம் - இடைநிலை, இ - விகுதி. ஐயாயிகர வீற்ற மூன்று மேவலின் உரூஉம் என்னுஞ் சூத்திரத்திற் காண்க. சுடர்த்தொடி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, அளபெடுத்தது விளியுருபு.
[இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது.]
399. முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.
(இ-ள்.) முலை கண்ணும் - முலையின் காம்புகளும், முத்தும் - முத்துமாலையும் (அழுந்த) - முழுமெய்யும் - உடம்பு முழுமையும், புல்லும் இலக்கணம் யாதும் - ஆலிங்கனம் செய்து கொண்ட குறி யாதொன்றையும், அறியேன் - அறியமாட்டேன்; என் பூம்பாவை - என்னுடைய மகள், செய்த குறி - செய்த அடையாளம், கலை கணம் - மான் கூட்டம், வேங்கை வெரூஉம் - புலிக்கு பயப்படுகிற, நெறி - வழியில், செலிய போலும் - செல்லுதற்குப் போலும், எ-று.
நேற்று என் மகள் தன்னுடைய முலைக்கண்ணும் முத்துமாலையும் என் மெய்யிற் பொருந்தும்படி என்னை ஆலிங்கனஞ் செய்த குறி இன்னதென்று அறிந்திலேன். அது, மான்கள் புலிக்கஞ்சி யோடும்படியான வழியில் தான் தன் னாயகனோடு செல்லுதற்கு அடையாளமாகச் செய்தாளென்று இன்றறிந்தேன் என்று தாய் மகளைக் குறித்துக் கவலைப்பட்டுச் சொல்லியது.
பயத்துக் கேதுவானதை இரண்டாம் வேற்றுமையிற் கொள்வது தமிழ்ச் செய்யுளாட்சி; நான்காம் வேற்றுமையிற் கொள்வது உலக வழக்கு. வெரூஉம் - உகரம் அளபெடுத்தது இன்னோசைக்காக, செலிய - செயவென் வாய்பாட்டு வினையெச்சம்; செல் - பகுதி, இ - சாரியை, அ - விகுதி, இச்சாரியை பெறாதபோது செல்ல வென்றிருக்கும். போலும் - தெரிநிலை வினைமுற்று, பயனிலை இங்கு போல் என்றது உவமையைக் காட்டினதன்று; தற்குறிப்பைக் காட்டியது. "அங்ஙனம் புல்லியது" என்பதை எழுவாயாக வருவித்துக் கொள்க.
400. கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.
(இ-ள்.) பொன் ஈன்ற - பொன்போலும் தேமல் பூத்த, கோங்கு அரும்பு அன்ன முலையாய் - கோங்க மலரையொத்த முலையையுடைய தோழி!, கண் மூன்று உடையானும் - மூன்று கண்களையுடைய சிவனும், காக்கையும் - காக்கைப் பறவையும், பை அரவம் - படமுடைய சர்ப்பமும், என் ஈன்ற யாயும் - என்னைப் பெற்ற தாயும், பிழைத்தது என் - (எனக்கு அவர்கள்) செய்த குற்றம் என்ன, [ஒன்றுமில்லை]; (குற்றம் செய்ததெது வெனில்) பொருள்வயின் - பொருளினிடத்தசையால், பாங்கனார் - என் நாயகர், சென்ற நெறி - போன மார்க்கமே (யாம்), எ-று.
அந்நெறி இல்லையாயின் அவர் செல்லார், அப்போது அவையெல்லாம் நமக்கு அநுகூலமே யாகும். நாயகர் பொருள் விருப்பத்தால் தேசாந்தரம் போன நெறியை நாம் வெறுத்துப் பழிக்க வேண்டுவதென்ன? அது நமக்கு என்ன குற்றம் செய்தது. ஆகில் யார் குற்றம் செய்தவர்களென்றால், மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டிற் பொரித்த குயிற்குஞ்சைக் குத்தியெறியாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த அரவும், என்னைப் பெற்ற போதே கொல்லாமல் விட்டு வளர்த்த தாயுமே பிழை செய்தனர் என்று தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது என்றால் கணவனைப் பிரிந்த காலத்து மன்மதனும் குயிலும் சந்திரனும் வருத்துவதனாலும் தாய் கொன்றிருந்தால் இப்படிப்பட்ட துன்பங்களை யநுபவியாமலிருக்கலா மாதலாலும் அவர்கள் பிழைத்த தென்றாள். இப்பொழுது மன்மதன், குயில், சந்திரன் ஆகிய இவர்கள் இன்னின்ன காரியம் செய்ததனாலே பிழை செய்தார்களென்று நாம் வெறுக்க வேண்டியதில்லை; அவர் அந்நெறியிற் செல்லாமல் நம்மிடத்தே யிருப்பராயின் அவரெல்லாம் அநுகூலமே செய்வாராவர், ஆதலால் அவர் சென்ற நெறியே நமக்குப் பிழைத்ததென நாம் கூறவேண்டிய தாயிற்று.
கண்மூன்றுடையான் - பண்புத்தொகை; மூன்று கண் என மாற்றிக் கொள்க. பையரவு - இரண்டாம் வேற்றுமை யுருபும் பயனுமுடன்றொக்க தொகை. பிழைத்தது - தொழிற்பெயர். கண்மூன்றுடையான் முதலானோர் பிழைத்தது என்பதனோடு முடிந்தது, அது எழுவாயாகி என் என்னும் வினாவினைக் குறிப்பு முற்றோடு முடிந்தது. பொன் - தேமலுக்கு ஆகுபெயர். முலையாய் - ளகரம் யகரமானது விளியுருபு. வயின் - ஏழனுருபு. நெறி - எழுவாய், பிழைத்தது - பயனிலை.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |