இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மகாபாரதம் - 9

Mahabharata is one of the two major Sanskrit epics of ancient India, the other being the Ramayana. The Mahabharata is an extensive and complex narrative that encompasses mythology, history, philosophy, and religion, offering deep insights into human nature, morality, and dharma (righteousness).


காரணம் இல்லாமல் கடவுள் காரியம் எதையும் செய்வதில்லை. கிருஷ்ண பகவானின் சங்கொலி, போர் வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் அதிபயங்கர சப்தமாய் ஒலிக்க, பீஷ்மரின் காதில் அது தேனாய் பாய்ந்தது. உயிர் போகும் தருணத்தில் மனிதனுக்கு பயம் ஏற்படுவது இயற்கையே. எப்படி உயிர் போகிறதோ, அதற்கு தகுந்தாற் போன்ற வலியும் ஏற்பட்டு துடிக்க வைக்கும். பீஷ்மரின் உடலில் அர்ஜுனன் பாய்ச்சிய ஏராளமான அம்புகள் பெரும் வலியை உண்டாக்கியது. அந்த மகாத்மா அதைப் பொறுத்துக் கொண்டார். கிருஷ்ணரின் சங்கொலியை தெய்வீக ஒலியாக மதித்து, கோவிந்தா, கோபாலா, மதுசூதனா, திரிவிக்ரமா, புண்டரீகாக்ஷா, தாமோதரா, ஸ்ரீவிஷ்ணு, நாராயணா என பகவானின் நாமத்தை உச்சரித்தபடியே சாய்ந்தார். அவரது உடலில் பாய்ந்திருந்த அம்புகள் அவரைத் தரையில் படுக்கவொட்டாமல் தடுத்தன. அந்த அம்புப்படுக்கையில் பீஷ்மர் சாய்ந்தார். தலை தொங்கிக் கொண்டிருந்தது. அவர் உயிர் விரைவில் பிரிந்து விடும் என்பதை உணர்ந்த கிருஷ்ணரும், அர்ஜுனனும் தேரில் இருந்து இறங்கி ஓடி வந்தனர். பீஷ்மர் இருவரையும் மாறி மாறி பார்த்தார். அவரது வேதனையைக் கண்டு அந்த மாயக்கள்வனே கூட கண்ணீர் வடித்து, நானும் இப்பூமியில் ஒரு மானிடப்பிறவியே என்று நிரூபித்து விட்டான் என்றால் நிலைமையைப் பாருங்களேன்!
அர்ஜுனன் கதறி விட்டான். பிதாமகரே! இந்த கொடிய காட்சியை என்னால் காண முடியவில்லையே, என்று முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதான்.

தர்மர், பீமன், நகுல சகாதேவர் அனைவரும் அழுதனர். துரியோதனன் கதறினான். நாங்கள் இனி என்ன செய்வோம்? என்று புலம்பினான். அந்த நிமிடம் வரை போரில் ஈடுபட்ட இருதரப்பு வீரர்களும் ஓடிவந்து அழுதனர்.ஐயோ! தர்மம் சாய்ந்து விட்டதே! தந்தைக்காக பிரம்மச்சரியம் ஏற்று, அதைக் கடைசி வரை கடைபிடித்த வீர மைந்தரே! நீர் எங்களை விட்டு பிரிகிறீரா? எங்கள் வம்சத்தின் பிதா என்பதால் உம்மை பிதாமகர் என்று புகழ்வோமே! இனி, உம்மை போல் யார் ஒருவர் இந்த குரு வம்சத்தில் பிறக்கப் போகிறார்கள்! ஒழுக்கம், பெருமை, ஞானம், நீதி, தர்மம் ஆகியவற்றின் வடிவமே! இனி, எங்களுக்கு முடிசூட்டி வைக்க யார் இருக் கிறார்கள்? என்றெல் லாம் புலம்பினார்கள். பீஷ்மர் அவர்களை நோக்கி, கலங்காதீர்கள் மக்களே! விதிப்பயனைத் தடுக்க வல்லவர் யார்? அரச குடும்பத்தில் பிறந்தவன் அம்புகளுக்கு இரையாக வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன்படி, அம்புகள் பாய்ந்து வீழ்ந்து கிடக்கிறேன், என்றவர், அர்ஜுனனை அழைத்து, என் உயிரினும் மேலான மாணவனே! நீ பாய்ச்சிய அம்புகள் எனக்கு இன்பம் தருகின்றன. பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் உணர்கிறேன். ஆனால், தலை தொங்குகிறது கவனித்தாயா! என் தலையை சாய்த்து வைக்க ஏற்பாடு செய்யேன், என்றதும், அர்ஜுனன் சில அம்புகளை தரையில் பாய்ச்சினான். அது தலையணை போல் அமைய, பீஷ்மர் அதில் சுகமாக தலை சாய்த்தார். பின்னர் துரியோதனனை அழைத்த மர்,துரியோதனா! இப்போது, நமது மானம் காக்க ஒரே ஒருவன் தான் இருக்கிறான். அவன் தான் கர்ணன். எவ்வளவு பெரிய மாவீரர்களையும் அவன் அழித்து விடுவான். காலம்யாரையும் விட்டு வைப்பதில்லை.

ஆனால், அந்த காலத்திற்கே காலம் குறிப்பவன் கர்ணன். அவனது புத்திக்கூர்மை யாருக்கும் இல்லை. நான் சாய்ந்து விட்டேன். நாளை முதல் நம் படைக்கு அவனை சேனாதிபதியாக நியமித்து போரை நடத்து, என்றார். பீஷ்மரின் உடலில் இத்தனை அம்புகள் பாய்ந்தும் அவர் உயிர் பிரியாததற்கு காரணம், அவர் பெற்ற வரமே. அவர் நினைத்தாலன்றி, அவரது உயிர் பிரியாது. தட்சிணாயண காலமான, சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலத்தில் (மார்கழி) குருக்ஷேத்ர போர் நடந்தது. அவர் உத்ராயண (தை) காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். தட்சிணாயணத்தில் உயிர் பிரிந்தால், மறுபிறவி கிடைக்கும் என்பது விதி. பீஷ்மர் முக்தியடைய விரும்பினார். பிறவாநிலை பெற உத்ராயணம் வரை உயிரை உடலில் தக்க வைக்கப் போவதாக பாண்டவ, கவுரவர்களிடம் சொன்னார். விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜபித்தபடியே கண் மூடியிருந்தார்.
இந்தக் காட்சியைக் கண்டு வருணபகவான் கண்ணீர் வடித்தான். ஏனெனில், பீஷ்மர் வருணனின் மகன் என்பது முந்தைய கதை.

வருணன், தேவலோக மங்கை ஒருத்தியின் இடுப்பழகை ரசித்ததால், பிரம்மாவின் சாபத்தைப் பெற்றான். ஆடையை சரி வர அணியாத அந்தப் பெண்ணையும் பிரம்மா, மண்ணில் பிறக்கச் செய்தார். அவர்கள் மானிடராக பிறந்து பூமியில் திரிந்தனர். அவர்களே அடுத்த பிறவியில் சந்தனுவாகவும், கங்கையாகவும் பிறந்து மணந்து கொண்டனர். தான் செய்யும் எந்தச் செயலுக்கும் காரணம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையை திருமணத் துக்கு முன் சந்தனுவுனுக்கு விதித்திருந்தாள் கங்கை. சந்தனுவும் ஒப்புக் கொண்டான். ஏழு பிள்ளைகள் பிறந்ததும் அவர்களை நதியில் வீசி கொன்று விட்டாள் கங்கை.

எட்டாவது பிள்ளை பிறந்ததும், பொறுக்க முடியாத சந்தனு அவளிடம் குழந்தையை ஏன் கொல்லப்போகிறாய்? எனக் கேட்க, அவள் கோபித்தாள். ஆனாலும், அவர்களது முந்தைய பிறவி வரலாறைச் சொன்னாள். அந்த எட்டாவது மைந்தனே பீஷ்மர். பின்னர், அவர்கள் சாபம் நீங்கி தேவலோகம் சென்றுவிட்டனர். ஆக, பீஷ்மர் வருணனின் மைந்தனாகிறார். தன் மகனின் மரணம் கண்டு குளிர்ந்த வருணனின் உடல் கூட சூடாகிப் போனது.உலகில் ஒரு நல்ல மானிடன் பிறந்தான். தர்மம் பிறழாமல் நடந்தான். பெற்றவருக்காக திருமணமே செய்யாமல் வாழ்க்கையை அர்ப்பணித்தான். ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தான். அத்தகையை மானிடனுக்கு தேவர்களும் அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் மாரி பொழிந்தனர். அன்றிரவு, கர்ணன் துரியோ தனனைச் சந்தித்தான்.இப்போது சொல் துரியோதனா! நான் படைத்தளபதி ஆகட்டுமா? என்று கேட்டான். வேண்டாம்... உனக்கு தளபதி பதவி வேண்டாம், என்றான்.பீஷ்மரே சொன்ன பிறகும் ஏமாற்றமா? கர்ணன் துரியோதனனை கேள்விக் குறியுடன் நோக்கினான்.

கர்ணா! தவறாக நினைக்காதே! நீ சேனாதிபதியாகி விட்டால், போரின் பெரும் பொறுப்பு உனக்கு வந்துவிடும். என் அருகில் இருக்க உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்? என்னைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக் கிறேன், என்றான். கர்ணனும் சரியென ஒப்புக்கொண்டான். பின்பு துரோணச்சாரியாரை தனது படையின் சேனாதிபதியாக்கினான். பத்துநாட்கள் பீஷ்மர் போர் புரிந்து அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்பார்த்து படுத்திருந்த வேளையில், துரோணர் வில்லெடுத்தார். பதினோராம் நாள் போர் துவங்கியது. அன்று சகா
தேவனும், சகுனியும் மோதினர். சகாதேவனின் வில்லாற்றல் முன்பு சகுனியின் பலம் அடிபட்டு போனது. அவன் புறமுதுகிட்டு ஓடினான்.

அப்போது சிங்கக்கொடி கட்டிய தேரில் வந்த பீமன், துரியோதனனை அன்று அழித்தே தீருவதென்ற வைராக்கியத்துடன் போரிட்டான். ஆனால், பீமனின் வல்லமைக்கு முன்னால் நிற்க முடியாமல் போகவே, பின் வாங்கினான். இதைக் கண்டு நகுல, சகாதேவனின் தாய்மாமனும், சந்தர்ப்ப வசத்தால் துரியோதனின் படையில் சேர்ந்தவனுமான சல்லியன், பீமனை எதிர்க்க வந்தான். அப்போது, நகுலன் குறுக்கிட்டான். சல்லியரே! உமக்கு பீமனுடன் போராடும் ஆற்றல் இல்லை என்று தெரிந்தும் ஏன் மோதுகிறீர்? நீர் நல்ல ஆண்மகன் என்றால், முதலில் என்னுடன் மோதும். ஒரு மாத்திரைப் பொழுதில் உம்மை அழித்து விடுகிறேன், என்று வீராவேசம் பேசினான். நகுலன் தன்னை அவமானப்படுத்தி பேசியதால் உக்கிரமடைந்த சல்லியன், அவனுடன் மோதினான். நகுலன், ஐந்து அம்புகளை அவனுடைய மார்பில் பாய்ச்சினான். உயிர் தப்புவதற்காக சல்லியன் அங்கிருந்து ஓடிவிட்டான். இன்னொரு புறத்தில் கர்ணனும், விராடராஜனும் போரிட்டனர். ஓரிடத்தில் பீமனால் கொல்லப்பட்ட அசுரனின் சகோதரனான பகதத்தனும், பாஞ்சால தேச அரசன் யாகசேனனும் போரிட்டனர். பீஷ்மரை சாய்த்த சிகண்டி, சோமதத்தன் என்ற அரசனுடன் போரிட்டான். அன்றையப் போரில் முக்கிய வீரர்கள் மோதியதால், பூமியே கிடுகிடுத்தது.

ஓரிடத்தில் துரியோதனனின் மகன் லட்சணகுமாரனும், அபிமன்யுவும் மோதினர். அவர்கள் விட்ட அம்புகள் வானத்தையே மறைத்தது. ஒரு கட்டத்தில், அபிமன்யுவின் வில்லை லட்சணகுமாரன் முறித்து விட்டான். சற்றும் தைரியம் குறையாத அபிமன்யு, உடைந்த வில்லைக் கொண்டே லட்சணகுமாரனின் தேர்ச்சாரதியை ஒரே அடியில் வீழ்த்தி விட்டு, குதிரைகளையும் கொன்றான். பின்னர் தேரை அடித்து நொறுக்கி, லட்சண
குமாரனை சிறைபிடித்தான். அவனது தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான்.இதைக் கண்ட கர்ணன், தன் இடத்தில் இருந்து ஓடிவந்து, அபிமன்யுவை எதிர்த்தான். சிந்துநாட்டு அரசன் ஜயத்ரதனும் கர்ணனுடன் இணைந்தான். பெரிய வீரர்களெல்லாம் ஒரு சின்னஞ்சிறுவனை சூழ்ந்து கொண்டாலும், அபிமன்யு தன் கையில் இருந்த அம்புகளைச் சுழற்றி, அவர்களது நெற்றியில் ரத்தப் பொட்டு வைத்ததை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. கர்ணனே தோற்றோடி விட்டான் என்றால் அபிமன்யுவை எப்படி புகழ்வது? மீண்டும் லட்சணகுமாரனை இழுத்துக் கொண்டு முன்னேறும் போது, சல்லியன் அபிமன்யுவைத் தடுத்தான். அப்போது, பீமன் குறுக்கிட்டு சல்லியனை அடித்து விரட்டி விட்டான். அபிமன்யுவுக்கு வருத்தம்.

பெரியப்பா! தாங்கள் இப்படி செய்தால், என் வலிமையை நான் எப்படி வெளிக்காட்ட முடியும்! குருக்ஷேத்ர யுத்தத்தில் அபிமன்யுவுக்கு என்று ஒரு பெயர் இருந்தது என்பதை எதிர்கால சரித்திரம் எப்படி சொல்லும்? என்று தலை குனிந்தபடியே சென்றான். பீமன் அவனைத் தேற்றுவதற்காக தன்னோடு சேர்த்து அணைத்தான். இந்த உணர்ச்சிமிக்க கட்டத்தைப் பயன்படுத்தி, லட்சணகுமாரன் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டான். இப்படியாக பதினோராம் நாள் போரும், பாண்டவர்களுக்கு சாதகமாகவே முடிந்தது.அன்றிரவில், துரியோதனன் துõங்கவே இல்லை. தனது மகனை அபிமன்யு சிறைப்பிடித்து சென்ற காட்சி கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் துரோணரிடம் சென்று, வேதாச்சாரியாரே! இன்று என் மகன் போர்க்களத்தில் பட்ட அவமானத்தை நாளை தர்மர் அனுபவிக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாட்டை நீங்கள் தான் செய்ய வேண்டும், என்றான். துரோணர் சிரித்தார்.

துரியோதனா! குழந்தை மாதிரி பேசாதே. தருமரை தங்கள் கண்கள் போல் பீமனும், அர்ஜுனனும் போர்க்களத்தில் பாதுகாப்பதைக் கவனிக்கவில்லையா? ஒன்று செய். நீ அர்ஜுனனை சிறிது நேரம் மட்டும், தர்மரிடமிருந்து விலகிச் செல்லும்படி செய். தர்மனை நான் பிடித்துத் தருகிறேன், என்றார். உடனே பல நாட்டு ராஜாக்களும், துரியோதனனைத் திருப்திபடுத்தும் விதத்தில் பேசினர். ராஜாதி ராஜனே! நாங்கள் அந்த அர்ஜுனனை உணர்ச்சிவசப்படுத்தும் வார்த்தைகளால் அவன் இருக்கும் இடத்தில் இருந்து பிரித்து விடுகிறோம். பீமனுடன் ஒரு சாரார் மோதுகிறோம். இந்த குழப்பமான நிலையில், துரோணாச்சாரியார் அவரை சிறை பிடிக்கட்டும், என்றனர். துரியோதனனுக்கு முகஸ்துதி என்றால் விருப்பம். தனக்கு ஆதரவாகப் பேசிய அரசர்களுக்கு அவன் பொன்னும், பொருளும் வாரி வழங்கினான். இந்த சம்பவத்தை உளவு பார்த்த பாண்டவர் படை ஒற்றர்கள், இதை தர்மரிடம் சொல்லி விட்டனர். பன்னிரெண்டாம் போருக்கு தயாரான தர்மர் சுதாரித்து விட்டார். துரோணரின் பிடியில் சிக்கவும் கூடாது. அதே நேரம் துரோணர் ஒருஅந்தணர் என்பதால் அவரைக் கொல்லவும் கூடாது. இந்த இக்கட்டான நிலையை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் புகுந்தார். அப்போது சில அரசர்கள், அர்ஜுனின் வீரத்தைப் பழித்துப் பேசினார்கள். ஏ அர்ஜுனா! மிகப் பெரிய வில்லாளி என்கிறாயே! இதோ! என் சிறுவில்லுக்கு பதில் சொல் பார்க்கலாம், என ஏளனமாகச் சொல்லி சிரித்தார்கள். அவர்களின் கேலி மொழி கேட்டு உணர்ச்சிவசப்பட்ட அர்ஜுனன், தர்மரை விட்டு விட்டு அவர்களை நோக்கிப் பாய்ந்தான். இதற்காகத்தானே காத்திருந்தார் துரோணாச்சாரியார்?

ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. அர்ஜுனன், திருஷ்டத்யும்னன் முதலானோரின் அம்புகளுக்கு எதிரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. கவுரவப்படைகள் பின்வாங்கின. முக்கிய அரசர்களெல்லாம் புறமுதுகிட்டு ஓடினர். துரோணரால் இதைத் தாங்க முடியவில்லை. முப்பதாயிரம் படைவீரர்கள் சூழ, அவர் அர்ஜுனனைத் தாக்குவதற்காக முன்னேறி வந்தார். அவரது அம்பு மழையை தாக்குப்பிடிக்க முயன்ற நகுல, சகாதேவர்கள் அது முடியாமல் போனதால் புறமுதுகிட்டு ஓடினர். எப்படியோ தர்மரை நெருங்கி விட்டார் துரோணர். இருவருக்கும் கடும்போர் நிகழ்ந்தது. அப்போது தர்மர் விடுத்த ஐந்து கொடிய அம்புகளில் ஒன்று துரோணரின் தேரில் இருந்த வேதக்கொடியை அறுத்துத் தள்ளியது. அக்காலத்தில், கொடி சாய்ந்தால் அது மிகவும் அவமானகரமானதாகக் கருதப்படும். ஒரு அம்பு தேர்க்குதிரைகளைக் கொன்றது. இன்னொன்றால் தேர்ப்பாகன் மடிந்தான். நான்காம் அம்பு தேர் சக்கரங்களை நொறுக்கியது. கடைசி அம்பு ஒட்டுமொத்த தேரையே அழித்து விட்டது, இதையடுத்து விடப்பட்ட அம்புகள் துரோணரின் வில்லையே நொறுக்கி விட்டன. நிராயுதபாணியாக நின்ற துரோணரிடம், என் அன்புக்குரிய ஆச்சாரியரே! தாங்களோ வேதம் கற்றவர். தங்களை அழித்தால் வரும் பாவத்தை நான் அறிவேன்.

அக்கொடிய பாவத்தை நான் ஏற்கமாட்டேன். தாங்கள் இங்கிருந்து தாராளமாக பாசறைக்குச் செல்லலாம். ஓய்வெடுத்து விட்டு வேறொரு தேரில் ஆயுதங் களுடன் வாருங்கள், என்றார் தர்மர். துரோணருக்கு வெட்கம் தாளவில்லை. நமக்கு உயிர்பிச்சை கொடுப்பது போல் தர்மன் பேசுகிறானே! இதை விட அவமானம் வேறென்ன இருக்க முடியும்! இவனை இன்று விட்டு வைக்கக்கூடாது என்றவர் மற்றொரு தேரைக் கொண்டு வருவதற்காக புறப்பட்டார். சேனாதிபதியான துரோணருக்கு ஏற்பட்ட அவமானத்தால் கவுரவப்படைகள் கலங்கின. நீங்கள் தோற்றீர்கள்! தோற்றீர்கள் என்று பாண்டவர் படைகள் கவுரவ படைகளைப் பார்த்து கேலி செய்தனர். கவுரவப்படைகள் தலை குனிந்து நின்றதன் மூலம் அதை ஒப்புக்கொண்டனர்.

இந்நேரத்தில், வேறொரு தேரில் ஏறிய துரோணர் புதிய வில்லுடன் தர்மரை நோக்கிச் சென்றார். மீண்டும் இருவருக்கும் போர் துவங்கியது. துரோணருக்கு ஆதரவாக கர்ணன், சகுனி மற்றும் பலர் வந்தனர். தர்மரைக் காக்க நகுல, சகாதேவர், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, பீமன் மகன் கடோத்கஜன் ஆகியோர் வந்தனர். இருதரப்புக்கும் கொடிய போர் நடந்தது. அன்று கோடிக்கணக்கான உயிர்கள் கவுரவர் தரப்பில் பறி போயின. அபிமன்யுவிடமும், கடோத்கஜனிடமும் எதிரிகளால் தாக்குப்பிடிக்க முடியாததே இதற்கு காரணம். கர்ணனும், சகுனியும் அவர்களைக் கண்டு பயந்து ஓடியே விட்டனர். துரோணரைப் பாதுகாக்க ஆளில்லாத நிலையில், அவரும் பின்வாங்க வேண்டியதாயிற்று. பயந்து ஓடிய கர்ணன், துரியோதனனிடம் சென்று, நண்பா! கொடுமையான தகவல் ஒன்றை சொல்லவே வந்தேன். நமது சேனாதிபதி துரோணரே தர்மரின் ல்லாற்றல் முன் தோற்றுப்போனார். இனி நடப்பதற்கு என்ன இருக்கிறது? என்றான்.கோபமும் வருத்தமும் மேலிட, ஆம்...நண்பா! பாண்டவர் ஆட்சி வேரூன்றப்போகிறது என்பது தெளிவாகி விட்டது. இப்போதே நான் களத்துக்குச் செல்கிறேன். பாண்டவர்களைத் துண்டு துண்டாக்குகிறேன், என்று ஆவேசத்துடன் களத்தில் நின்றான். ஆனால், சிறுவன் அபிமன்யுவின் வில்லுக்கு கூட அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் தோற்று ஓடினான். துரோணர் மூன்றாம் முறையாகவும் ஒரு தேரில் ஏறி தர்மரை எதிர்த்தார். அப்போதும் அது நடக்கவில்லை. மூன்றாம் முறையும் அவர் தோற்றுப் போனார். அவருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது எனக் கருதிய சில வீரர்கள் அவரைச் சுற்றி அரணாக நின்று பாதுகாத்து, வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.

அந்நேரத்தில், பாண்டவர்களின் வனவாசத்தின் போது பீமனால் தோற்கடிக்கப்பட்ட பகாசுரனின் தம்பி அசுரன் பகதத்தன் கவுரவர்களுக்கு ஆதரவாகப் போரிட வந்தான். அவனது ஒரே குறி பீமன் தான்! அவன், தன் யானையின் மீதேறி சற்றும் யோசிக்காமல் படையினரின் நடுவே ஓட விட்டான். கையில் கிடைத்த பாண்டவவீரர்களை கசக்கியே துõக்கி எறிந்து விட்டான். அவனது யானையும் பாண்டவப் படையினரை துவம்சம் செய்தது. படைகள் பயந்து நடுங்கிய வேளையில், இக்கட்டான இந்த நிலையைக் கவனித்தார் தர்மர். அவர், தன் தம்பிக்கு சாரதியாக இருந்து வேறொரு இடத்தில் தேர் ஓட்டிக் கொண்டிருந்த கிருஷ்ண பகவான மனதில் தியானித்தார். பகதத்தன் இருக்கும் வரை எங்கள் படைக்கு ஆபத்து தான். பரந்தாமா நீ தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தார். நல்லவர்களின் பிரார்த்தனை இறைவனின் காதில் உடனே விழுந்து விடும். பகவான் கிருஷ்ணர் சிரித்தபடியே அர்ஜுனனிடம், அர்ஜுனா! இந்த இடத்தில் நாம் சண்டை செய்தது போதும். அங்கே பகதத்தன் நம் படையினரின் எண்ணிக்கையை வேகமாகக் குறைத்துக் கொண்டிருக் கிறான். அவனை அழிக்காவிட்டால் நம் படைக்கு பெருத்த சேதம் ஏற்படும். நான் அவன் இருக்குமிடம் நோக்கி தேரை ஓட்டுகிறேன். நீ அம்புப்பிரயோகம் செய்து பகதத்தனை அழித்து விடு, என்றார். ஒரே வினாடியில் பகதத்தன் இருக்குமிடத்தையும் அடைந்து விட்டார். பீமனை தேடிக்கொண்டிருந்த பகதத்தன், அர்ஜுனன் தன் கையில் சிக்கிவிட்டதால், பீமனைத் தேடும் எண்ணத்தைக் கைவிட்டு, அர்ஜுனனுடன் விற்போர் புரிந்தான். இருதரப்பும் சமபலத்துடன் விளங்கின. ஒரு வழியாக அர்ஜுனன் தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, பகதத்தன் அமர்ந்திருந்த யானையின் மீது அம்புகளைத் தொடுத்து அதை துண்டு துண்டாக்கினான். ஆத்திரமடைந்த பகதத்தன் ஒரு வேலை எடுத்து அர்ஜுனனனை நோக்கி வீசினான். அது அவன் மீது படாமல் இருக்கும் வகையில் கண்ணபிரான் எழுந்து நின்றார். அது அவரது உடலில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.

பகவான் நாராயணனின் அவதாரமான அந்தக் கிருஷ்ணன் மீது பகதத்தன் தொடர்ந்து அம்புகளை விடுத்தான். அந்த அம்புகள் கிருஷ்ணனின் ஸ்பரிசம் படுவதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதி, கிருஷ்ணனின் உடலில் மாலை போன்ற வடிவில் போய் விழுந்தன. அந்த அம்புமாலையைத் தாங்கிய கிருஷ்ணரின் அழகை தேவர்கள் வானுலகில் இருந்தபடி புகழ்ந்தனர். உலக உயிர்கள் பகவானின் மீது பல துõஷணைகளைச் செய்கின்றன. நீ ஆண்டவனா? உனக்கு கண் இருக்கா? காது இருக்கா? என்றெல்லாம் நாம் கூட துன்ப காலங்களில், பகவானைத் திட்டுகிறோம். பகவான் அதைப் பொருட்படுத்துகிறானா? கண்டு கொள்ளாமலே இருக்கிறான். நமது திட்டுகளையும் அர்ச்சனையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவனிடம் இருக்கிறது. அதுபோல் தான், பகதத்தன் தன் மீது தொடுத்த அம்புகளை மாலையாக ஏற்றுக் கொண்டாராம் கிருஷ்ணர். இப்போது பரமாத்மா மனித நிலைக்குத் திரும்பினார்.அர்ஜூனா, பிடி இந்த நாராயணாஸ்திரத்தை! பகதத்தன் மீது இதை எய்தால் அவன் அழிவது உறுதி, என்றார். அந்த அம்பை பணிவுடன் வாங்கிய அர்ஜுனன் அதை பகதத்தன் மீது எய்தான். மலை போல் நின்று போரிட்டுக் கொண்டிருந்த பகதத்தனை அது பல நுõறு துண்டுகளாகக் கிழித்துப் போட்டது. மேலும், அவனுடைய யானைப்படை முழுவதையும் அழித்து விட்டது. இதுகண்டு சகுனியின் புதல்வர்கள் வ்ருஷஜயன், ஜயன் என்பவர்கள் அர்ஜுனன் மீது அம்பு எய்தனர்.

அவற்றை லாவகமாக சமாளித்த அர்ஜுனன் அவ்விருவரையும் கொன்றான். இதைக் கண்ட சகுனி மிகுந்த ஆவேசத்துடன், தர்மரைக் கொல்வதற்காக வில்லுடன் தேரில் பாய்ந்தான். தர்மர் அவனிடம், ஏ சகுனி! இங்கே நடப்பது சூதாட்டமல்ல. போர். இங்கே அம்புகளுக்கு தான் வேலை. அவை ஒன்றும் பகடைக்காய்கள் அல்ல. மரியாதையாக ஓடிவிடு. இல்லாவிட்டால், இக்கணமே என் அம்புகளுக்கு பலியாவாய், என்று கடும் குரலில் எச்சரித்தார். அந்த வார்த்தைகளே சகுனியைப் பயமுறுத்த சகுனி ஆவேசம் ஒடுங்கி ஓடிவிட்டான். இன்னொரு புறத்தில் பீமன் தனியொருவனாக நின்று, துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், துரியோதனன், கர்ணன் ஆகிய வீராதி வீரர்களை சமாளித்துக் கொண்டிருந்தான். அவன் மீது தொடுக்கப் பட்ட அம்புகள், மலையில் விழுந்த மழைத்துளி போல் தெறித்து விழுந்ததே தவிர பயனேதும் ஏற்படவில்லை. ஆனால், தன் பாணங்களால் எதிர்த்து நின்ற அனைவரையும் காயமடையச் செய்தான். ஒரே நேரத்தில் தர்மர், கிருஷ்ணனுடன் கூடிய அர்ஜுனன், பீமன் ஆகியோரின் கொடிய தாக்குதலைத் தாள முடியாமல் கவுரவப்படைகள் பின்வாங்கின.

இந்த சமயத்தில் கர்ணன் துரோணரை நோக்கி கேலியாக பேச ஆரம்பித்தான். குருவே! நேற்று தாங்கள் தர்மரை சிறைபிடிப்பதாக வாக்களித்தீர். இன்று அதை நிறைவேற்றி எங்கள் மனங்களைக் குளிரச் செய்து விட்டீர். வேதம் ஓதும் உமக்கு போர்த் தொழில் சரிவராது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீரா? என்றான் சிரித்தபடியே. துரோணருக்கு அவமானமாகப் போய்விட்டது.ஏ கர்ணா! இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறாயே! உன்னால் மட்டும் தர்மரை விற்போரில் ஜெயித்து விட முடியுமா என்ன! கர்ணா! நீ மட்டுமல்ல. இங்கிருக்கும் வீரர்கள் யாராயிருந்தாலும் சரி. தர்மரை சிறைபிடிப்பவன் யாரோ அவனே இந்த உலகத்திலேயே சிறந்த வீரன் என்று கவுரவிக்கப்படுவான். முடிந்தால் செய்யுங்கள். ஆனால், அவனை எதிர்க்கச் செல்வோருக்கு ஒன்று சொல்கிறேன். தர்மனின் வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் ராமபாணத்தை விட வலிமை வாய்ந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்றார். இப்படியாக அன்றைய மாலைப் பொழுது நெருங்கவே போர் முடிவுக்கு வந்தது. கவுரவர்கள் பகதத்தன், சகுனி புதல்வர்கள் போன்றோரின் இழப்புடன் பாசறை திரும்பினர். மறுநாள் பதிமூன்றாவது தினமாக போர் தொடர்ந்தது. அன்று துரோணர் மிகச்சீக்கிரமாகப் போர்க்களத்துக்குப் போய்விட்டார். திரவுபதியின் சகோதரனும் பாண்டவர் சேனாதிபதியுமான திருஷ்டத்யும்னன், பெரும்படையுடன் வந்து சேர்ந்தான். அவனைத் துரோணர் கடுமையாகத் தாக்கினார். அவரது போர்த்திறனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவரது அம்பு வீச்சு முன் நிற்கமுடியாத அவன், பலமிழந்து ஓடிவிட்டான்.

ஒரு படையின் சேனாதிபதியே புறமுதுகிட்டு ஓடினால், நிலைமை என்னாகும் என்பதைச் சொல்லத் தேவையில்ல. திருஷ்டத்யும்னன் தலை குனிந்து தர்மர் முன் வந்ததும், தர்மர் அவனைத் தேற்றினார். வெற்றியும், தோல்வியும் மனித வாழ்வில் சகஜமானவை. திறமைசாலிகளும் தோற்றுப் போவதுண்டு, யானைக்கும் அடி சறுக்குவதுண்டு. திருஷ்டத்யும்னன் மகாவீரனா யினும் துரோணரின் தோற்று வந்து நின்றதைக் கண்ட தர்மர் அவனைக் கோபிக்கவில்லை, கேலி செய்யவில்லை. மாணவன் தேர்வில் குறைந்த மார்க் வாங்கினான் என்றால், அவனைப் புண்படுத்தும்படி பேசக்கூடாது. அடுத்தமுறை நல்ல மார்க் வாங்கு என ஆறுதல் சொல்ல வேண்டும், அது அவனை ஊக்கப்படுத்துவதாக அமையும். அப்படி ஒரு மாணவனின் நிலையில் வந்து நின்ற திருஷ்டத்யும்னனை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட தர்மர், இதற்கெல்லாம் கலங்கலாமா? உன்னி லும் சிறந்த வீரன் யார் இருக்கிறான் இந்த பூமியிலே? நீயே கலங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இருப்பினும், இப்போது நீ களைத்திருக்கிறாய். சற்று ஓய்வெடுத்து விட்டு பிமன்யுவை அழைத்துக் கொண்டு போ, என்றார்.அபிமன்யுவும், திருஷ்டத்யும்னனும் சற்றுநேரத்தில் களத்தில் புகுந்தனர். சிறுவனாயினும் அபிமன்யு அன்று கொன்றழித்த வீரர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. துர்க்கை அவனது தோளில் விளையாடினாள். அபிமன்யு சுபத்திரையின் மகன் என்பதால், கிருஷ்ணர் அவனுக்கு தாய்மாமன் இல்லையா? தாய்மாமன் தனக்கு கற்றுத்தந்த மந்திரங்களை உச்சாடனம் செய்து தொடுத்த அம்புகள் கவுரவர் படை அமைத் திருந்த வியூகத்தையே சிதறடித்தது. கவுரவப்படைத் தளபதியும், ஆச்சாரியருமான துரோணரை நோக்கி அவன் அனுப்பிய அம்புகள் அவரை நிலை குலையச் செய்தன. அவர் தடுமாறி நின்றார். ஒரு சிறுவனிடம் தோற்றோமே என்று தலை குனிந்து நின்ற வேளையில், கர்ணன் அபிமன்யுவை நோக்கி வந்தான்.

அவன் பல வலிமையான பாணங்களால் அபிமன்யுவைக் காயப்படுத்தினான். ஆனால், அபிமன்யு தன் உடலில் இருந்து கொட்டும் குருதி கண்டு மிகுந்த ஆனந்தமும் ஆவேசமும் அடைந்து கர்ணனை நோக்கி விட்ட அம்புகள் அவனை நிலைகுலையச் செய்தன. கர்ணன் தன் தேருடன் தோற்றோடினான். பின்னர் கிருபாசாரியார் அபிமன்யுவுடன் போர்செய்ய வந்தார். அத்துடன் சகுனி, அவனது மகன் ஆகியோர் அவனைச் சூழவே, கோபமடைந்த அபிமன்யு ஒரு பாணத்தை விட அது சகுனியின் மகனின் தலையை அறுத்தெறிந்தது. சகுனி மிகவும் துன்பப்பட்டு போய்விட்டான். மகன் போன வருத்தத்தாலும், பயத்தாலும் திரும்பி ஓடினான். இதைப் பார்த்த விகர்ணன், துர்முசுகன் உள்ளிட்ட துரியோதனின் தம்பிகள் அபிமன்யுவைச் சூழ அவர்களையும் விரட்டிய அபிமன்யு பெரியப்பாமார்களே! நான் உங்களையும விட பலத்தில் உயர்ந்தவன், எனவே புறமுதுகிட்டு ஓடி பிழைத்துக் கொள்ளுங்கள், என வீர வசனம் பேசி ஏளனமாகச் சிரித்தான். இதைப் பார்த்த துரியோதனின் உள்ளம் கொதித்தது. ஒரு சிறுபயல், நமக்கெல்லாம் உயிர்பிச்சை தருவதா? கிருபாச்சாரியாரின் பாணங்களுக்கு கூட பதில் தரும் அவனை விட்டு வைத்தால் நம் படைக்கே ஆபத்து என்று சிந்தித்த வேளையில், அவனது முகக்குறிப்பைப் பார்த்து விட்ட பீமன், தர்மரின் அனுமதி பெற்று, அபிமன்யு அருகில் வந்து விட்டான். அபிமன்யுவைச் சுற்றி நின்ற பலநாட்டு மன்னர்களை கையில் வைத்தே நசுக்கி விட்டான். இதனால், பயந்து போன துரியோதனன், சிந்து தேசத்தின் அரசனும், தனது தேர்ப்படை சேனாதிபதியுமான ஜயத்ரதனை அழைத்தான்.

ஜயத்ரதா! அந்த அபிமன்யு சிறுவன் என இழிவாக எண்ணியிருந்தோம். ஆனால், அவன் விடும் பாணங்கள் நம் படையைச் சின்னாபின்னமாக்குகின்றன. கிருபர், துரோணர் ஆகியோரை அவனை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் பீமன் வேறு அவனுக்கு அரணாக நிற்கிறான். முதலில் அவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி சிவபெருமான் உனக்களித்து உன் உடலில் சூடியிருக்கும் கொன்றை மாலை தான். இது உன் கழுத்தில் இருக்கும்வரை உன்னை யாராலும் கொல்ல முடியாது. அதே நேரத்தில் மூளையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் அது. எப்படியாவது சிரமப்பட்டு, பீமனுக்கும் அபிமன்யுவுக்கும் இடையில் இதை வீசி விடு. சிவனின் மாலை என்பதால், மரியாதை நிமித்தமாக. இதை அவர்கள் தாண்டமாட்டார்கள். இப்படி பீமனையும், அபிமன்யுவையும் பிரித்து விட்டு, சிவபெருமான் உனக்களித்த உன் கதாயுதத்தால் அபிமன்யுவை அடித்துக் கொன்று விடு, செய்வாயா? என்றான்.மகாப்பிரபு! தங்கள் உத்தரவு என் பாக்கியம். தாங்கள் சொன்னதை நிறைவேற்றி, தங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவேன், என துரியோதனின் பாதம் பணிந்த ஜயத்ரதன், அபிமன்யுவை நெருங்கினான். துரியோதனன் சொன்னது போலவே, சமயம் பார்த்து மாலையை பீமனுக்கும், அவனுக்குமிடையே வீசினான்.

இதைக் கண்ட அபிமன்யு, மாலையைத் தாண்டக்கூடாது என்ற நிலையில், சிவபெருமானே! உன் கொன்றை மாலை என்னை ரக்ஷிக்கட்டும், என்று பணிந்து வணங்கினான். இறைவன் எல்லாருக்கும் பொதுவானவன். அவன், ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கிறான் என்றால் அது அவர்களைத் தற்காத்துக் கொள்ளவே தவிர, அடுத்தவர்களை அழிப்பதற்காக அல்ல! அபிமன்யுவும் பீமனும் ஒன்று சேர முடியாமல் தனித்து நின்று போர் புரிந்து கொண்டிருந்தனர். இதைப்பயன்படுத்தி, கர்ணன் உள்ளிட்ட வீரர்கள் அபிமன்யு மீது எதிர்தாக்குதல் நடத்தவே, கோபமடைந்த அபிமன்யு அவர்களையெல்லாம் விரட்டியடித்தான். துரோணர் உள்ளிட்ட பெரும் வீரர்களும் கூட அபிமன்யுவின் முன்னால் தோற்றோடினர். எப்படி பார்த்தாலும் இந்த சிறுவனை வீழ்த்தமுடியவில்லையே என்று இதயம் துடித்துப் போன துரியோதனனுக்கு கெட்ட நேரம் வந்தது. அவன் தன் மகன் லக்ஷணகுமாரனை பத்தாயிரம் வீரர்கள் புடைசூழ அனுப்பினான். இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அவனும் சாதாரணப்பட்டவன் அல்ல. போர்க்களத்திலும் புன்னகை சிந்தும் முகம் அவனுடையது. அந்தப் புன்னகை தவழ்ந்த முகத்துடன், அபிமன்யு, என்னால் உன் ஆயுளுக்கு முடிவு வரட்டும், என்று வீரவசனம் பேசி அம்புகளைத் தொடுத்தான். அவனோடு வந்த வீரர்களின் சிரத்தை ஒரு சில அம்புகளிலேயே அறுத்தெறிந்த அபிமன்யு, லக்ஷணகுமாரனின் மீதும் ஒரு பாணத்தை விட்டான். அந்த அம்பு அவனது தலையைக் கொய்தது. புன்சிரிப்புடன் கூடிய அந்தத்தலை துõரத்தில் போய் விழுந்தது கண்ட துரியோதனன், மகனே! வீரமரணத்தை தழுவினாயா? என் இதயம் நொறுங்கிப் போனதே!என கலங்கினான்.

அவன் துரோணரையும், கிருபாச்சாரியாரையும், தன்னைச் சார்ந்த அரசர்களையும் வரவழைத்தான். நான் கடைசியாகச் சொல்கிறேன். இனியும் என் மனம் பொறுக்காது. என் குமாரனைக் கொன்ற அந்தச்சிறுவனை ஒரு நொடியில் நீங்கள் எல்லாருமாய் சேர்ந்து அழித்தாக வேண்டும். இல்லாவிட்டால், எனக்கு இந்த அரசாட்சியும் வேண்டாம், போரும் வேண்டாம், இந்த உயிரும் வேண்டாம், என வருத்தமும் கோபமும் பொங்கப் பேசினான். எப்படியும் அபிமன்யுவை அழித்தே தீருவோம். அப்படி செய்யாவிட்டால் இனி வில்லையே எங்கள் கையால் தொடமாட்டோம், என சபதமிட்டு, வழக்கம் போல் முழக்கமிட்டனர் துரியோதனன் தரப்பினர். துரோணரும் அவர் மகன் அஸ்வத்தாமனும் அபிமன்யு அருகில் சென்றனர். மாவீரன் அஸ்வாத்தமனுக்கு கூட அபிமன்யுவின் முன்னால் நிற்கும் தைரியமில்லாமல் போனது. அம்புகளை அவன் வரிசைக்கிரமத்தில் அனுப்பினாலும் அத்தனையையும் அவன் பொடிப்பொடியாக்கினான். சிவபெருமானின் மைந்தன் முருகப்பெருமானை வெல்ல உலகில் யாருமில்லை. அதுபோல், இந்த வீரச்சிறுவனை வெல்வார் யார் என்ற கேள்வி எல்லோர் மனங்களிலும் எழுந்தது.

துரியோதனனுக்கு இப்போது இக்கட்டான நிலை. ஒரு சிறு பையன், இத்தனை பேரை அழிக்கிறான் என்றால், துரோணர், கிருபாச்சாரியார், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி போன்ற மாபெரும் சக்திகளையெல்லாம் புறமுதுகோடச் செய்கிறான் என்றால், அர்ஜுனன், பீமன் போன்ற மகாசக்திகளுக்கெல்லாம் நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையுடன் நின்ற போது, மாவீரன் கர்ணன் அவன் முன்னால் வந்தான். துரியோதனன் அவனிடம், கர்ணா! அபிமன்யு நம்மவரை துவம்சம் செய்கிறான். இப்போது அர்ஜுனன் அவன் அருகில் இல்லை. அவனும், அவனோடு சேர்ந்து விட்டால், நம் தோல்வி எழுதப்பட்டதாக ஆகி விடும், ஏதாவது செய். அபிமன்யுவைக் கொல். இதைத்தவிர நான் உன்னிடம் சொல்வதற்கு வேறு ஏதுமில்லை, என்றான். கர்ணனும் அவனது கட்டளையை ஏற்று, அபிமன்யு முன்னால் சென்றான். தன் பலம் முழுவதையும் திரட்டி, அபிமன்யுவிடம் சண்டையிட்டான். அபிமன்யு அப்போது ஒரு தேரில் இருந்தான். அந்த தேரை நொறுக்கிய கர்ணன், சாரதியையும் கொன்றான். தேரிழந்து நின்ற அபிமன்யு களத்தில் குதித்த போது, அபிமன்யு அடங்கி விட்டதாகக் கருதிய துச்சாதனின் மகன் துச்சனி அபிமன்யுவின் மீது ஒரு அம்பை விட்டான். அதை அடித்து நொறுக்கிய அபிமன்யு துச்சனியின் தலையைக் கொய்தான். இதைப்பார்த்த துரோணர் கோபத்துடன் அபிமன்யுவைத் தாக்கவே, ஆச்சாரியரே! தாங்கள் எத்தனை முறை தான் என்னிடம் தோற்று ஓடுவீர்கள். ஒருவேளை என்னிடம் தோற்றோடுவதே தங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றால், அந்த மகிழ்ச்சியை நான் மீண்டும் மீண்டும் தங்களுக்குத் தருவேன், எனக் கேலி செய்து சிரித்தான்.

இந்த கேலி துரோணரின் கோபத்தை மேலும் கிளறவே, அவர் அர்த்த சந்திர பாணம் ஒன்றை அபிமன்யு மீது தொடுத்தார். அந்த பாணம் அபிமன்யுவுக்கு மிகுந்த சோதனையைத் தந்தது. பல சாகசங்களைச் செய்ததும், பல்லாயிரக்கணக்கான வீரர்களை வீர சுவர்க்கம் அனுப்பியதுமான அந்தச் சிறுவனின் வலது கை வாளோடு சேர்த்து துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தது. இதோடு அபிமன்யு தொலைந்தான் என்று எல்லாரும் எதிர்பார்த்த வேளையில், இவன் தெய்வமோ என்று ஆச்சரியப்படும் வகையில், கீழே கிடந்த தன் தேர்சக்கரத்தை இடது கையால் எடுத்த அபிமன்யு, தன் தாய்மாமன் கிருஷ்ணர் தனக்கு கற்றுத் தந்த மந்திரம் ஒன்றைச் சொல்லவே, அந்த சக்கரம் சக்ராயுதம் போல் அவன் கையில் சுழன்றது. துரோணரும், மற்ற பகைவர்களும் விட்ட அம்புகளை அடித்து நொறுக்கியது. துரோணர் அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென தோல்வி முகத்துடன் திரும்பி விட்டார். இப்போது துரியோதனன் ஜயத்ரதனை (சிந்துதேச அரசன்) அழைத்து, வீரனே! உனக்கு சிவபெருமான் அளித்த கதாயுதத்தால் அபிமன்யுவைக் கொன்று விடு, என்று கட்டளையிட்டான். ஜயத்ரதன் அந்தக் கதாயுதத்துடன் அபிமன்யு முன்பு வரவே, அவன் தன் கையிலுள்ள சக்கரத்தை வீசிவிட்டு, தனது கதாயுதத்தை எடுத்தான். இடது கையில் வைத்திருந்தாலும் கூட இருவரும் சமபலத்துடன் மோதினர். பலமுறை ஜயத்ரதன் தோல்வியின் விளிம்பிற்குச் சென்று திரும்பினான். மிகவும் சோர்ந்து போனான். ஆனால், ஒரு கட்டத்தில் அபிமன்யு சோர்வடைந்த நேரமாகப் பார்த்து அவனது கழுத்தில் கதாயுதத்தால் ஓங்கி அடிக்க, அபிமன்யுவின் தலை துண்டிக்கப்பட்டது. பதிமூன்றாம் நாள் போர் அபிமன்யுவுக்கு எமனாக அமைந்து விட்டது. இது கண்டு தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர், புதல்வனே! நீ இறந்தும் நாங்கள் உயிரை வைத்திருக்கிறோமே! உன்னை ஜயத்ரதன் வெல்லவில்லை. சிவன் கொடுத்த கொன்றை மாலையும், அவரது கதாயுதமுமே வென்றிருக்கிறது, என்றார். தர்மரோ மூர்ச்சித்தே விழுந்து விட்டார். துரியோதனன், கர்ணன், சகுனி, ஜயத்ரதன் ஆகியோர் இந்தச் சிறுவனின் இறப்பை பெரும் விழாப் போல் போர்க்களத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிருஷ்ணர் இதையறிந்தார். இந்த விஷயம் அர்ஜுனனுக்குத் தெரிந்தால் அவன் புத்திர சோகத்தால் இறந்து விடுவான் என்பதால், இந்திரனை வரவழைத்தார்.தேவேந்திரா! உன் மகன் அர்ஜுனனை புத்திர சோகத்தில் இருந்து காக்க வேண்டியது உன் பொறுப்பு, என்றார். அவனும் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதாகச் சொல்லி, அவரை வணங்கி ஒரு முனிவராக வேடமெடுத்தான். அவன் களத்திலேயே தீ மூட்டி அதற்குள் விழப்போவது போல் நடித்தான். கிருஷ்ணர் அர்ஜுனனிடம், வில் வித்தையில் சிறந்தவனே! இந்த முனிவர் தன் மகனை இழந்து விட்டார். புத்திர சோகத்தால் இந்தத் தீயில் விழுந்து உயிர் விடப்போவதாகச் சொல்கிறார். அவரைக் காப் பாற்று, என்றான். அர்ஜுனனும் அவ்வாறே சென்று, முனிவரே! மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கைதானே! இதற்காக நீர் இறக்க வேண்டுமா? நீர் உயிருடன் இருந்தால், இன்னும் புத்திரர்களைப் பெறவும் வாய்ப்பிருக்கிறது. வாழ்வின் உண்மையை பிறருக்கு எடுத்துச் சொல்லும் முனிவரான நீரே இப்படி செய்யலாமா? மேலும், புத்திரர்கள் இறந்து விட்டால், எந்தப் பெற்றவராவது அவர்களோடு இறந்து போனதுண்டா? என்றான். அப்போது இந்திரனாகிய முனிவன், ஏ அர்ஜுனா! பிள்ளைப்பாசம் பற்றி உனக்கென்ன தெரியும்? இருப்பினும், நான் உன் சொல் கேட்கிறேன். உனக்கு ஒருவேளை இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நீயும் சாகக்கூடாது. அந்த உறுதிமொழியைத் தருவாயா? என்றான். அர்ஜுனன் நடந்துள்ள விபரீதம் புரியமால், சரி என சத்தியம் செய்து கொடுத்தான்.

பின்னர் முனிவர் அங்கிருந்து சென்று விட்டார். இப்போது தான் கிருஷ்ணர் உண்மையை உடைக்க முற்பட்டார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது. இது கண்ட அர்ஜுனன் கலங்கி விட்டான். கண்ணா! மைத்துனரே! உமது கண்களில் கண்ணீரா? ஏதோ விபரீதம் நடந்துள்ளதோ? என்று மனம் படபடக்க அவரை ஏறிட்டுப் பார்த்தான்.

அர்ஜுனா, மனதை திடமாக்கிக் கொள். என் அன்பு மருமகன், என் தங்கை சுபத்ரையின் புதல்வன் அபிமன்யு வீர சொர்க்கம் அடைந்தான், என்று நா தழுதழுக்க கிருஷ்ண பகவான் சொன்னதும், அர்ஜுனன் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. அவனது அழுகுரலும், புலம்பலும் கல் நெஞ்சத்தாரையும் கரைத்தது. மகனே! போய் விட்டாயா? தன் பேரனான உன்னோடு விளையாடி மகிழ உன் தாத்தா இந்திரனும் (இந்திரன் அர்ஜுனனின் தந்தையல்லவா?), பாட்டி இந்திராணியும் ஆசை கொண்டு, தேவலோகத்துக்கு இவ்வளவு விரைவில் உன்னை வரவழைத்துக் கொண்டார்களோ! பாலகனே! துரோணர், கிருபர் போன்ற வீராதி வீரர்களையெல்லாம் விரட்டியடித்து, சிவபெருமானின் கொன்றை மாலையை ஜயத்ரதன் உனக்கும், பீமனுக்கும் நடுவே வீசிய சமயத்தில் கூட தீரம் மாறாமல் போர் செய்தாயே! வலதுகையை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் உன் ஆற்றலைக் காட்டினாயே! உனக்கா இந்தக்கதி! ஐயா அபிமன்யு! நீயில்லாத இந்த யுத்த களத்தில் பாண்டவர்களுக்கு ஏது இனி வெற்றி! இல்லை.. இல்லை... உன் தாய் சுபத்ரைக்கு என்னால் பதில் சொல்ல இயலாது. மகனைக் காக்கத் தவறிய தந்தை பூமியில் வாழ்ந்து பயனென்ன! நகுலா வா! இங்கே அக்னி மூட்டு. நான் அக்னியில் புகுந்து இறப்பேன், என்றதும், அண்ணன் சொல்லை தட்ட முடியாத நகுலன் வேறு வழியின்றி தீ மூட்டினான். இந்த நேரத்தில் வியாசமுனிவர் அங்கே தோன்றினார்.

அர்ஜுனா! இதென்ன முடிவு! சான்றோர்கள் தங்கள் உறவுகளைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனர் ஆகிய எந்த உறவாயினும் மாயசக்தியின் தோற்றமே! நம்மை இந்த உலக வாழ்வில் கட்டிப் போட்டிருக்கும் கயிறுகளே இவை. இவ்வுலக வாழ்வை விரைவில் விடுத்து இறைவனடியையே நாட வேண்டும். மேலும், உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. மறைந்த உயிர்கள் வேறொரு தாயிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும். மரணம் வாழ்க்கையின் யதார்த்தம். அது வயதையோ, அனுபவத்தையோ, தீரத்தையோ, வீரத்தையோ, செல்வத்தையோ பார்ப்பதில்லை. மரணத்தின் கரங்களில் சிக்காதவர் யாருமில்லை என்று உணர்ந்த நீயா இப்படி பேசுகிறாய்? பரந்தாமனிடம் கீதை கேட்டவனே! இன்னுமா உனக்கு வாழ்வைப் பற்றி புரியவில்லை, என்று ஆறுதல் சொன்னார். இவ்வளவு துõரம் வியாசபெருமானே சொல்லியும் கூட அர்ஜுனனால் புத்திர சோகத்தை அடக்க முடியவில்லை. பாவம் மனிதர்கள்! குடும்பம் என்னும் பந்தத்தை மட்டும் ஒதுக்க அவர்களால் ஏனோ முடியவே முடியவில்லை. அர்ஜுனன், வியாசரின் அறிவுரையாலும் சமாதானமாகாமல் தீயில் இறங்கச்சென்ற வேளையில், இந்திரனை மீண்டும் அழைத்தார் கண்ணபிரான். இந்திரன் முன்பு போலவே, அந்தணர் வடிவமெடுத்து வந்து, அர்ஜுனா! நில்! அன்றொரு நாள், நான் இதே போல புத்திர சோகத்தால் தவித்த வேளையில் எனக்கு புத்திமதி சொன்னாய். மேலும், உனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் மரணத்தை தழுவுவதில்லை என்ற உறுதி யளித்தாய். இப்போது, உன் உறுதிமொழியை மீறுவதன் மூலம், உனக்கு இழிவைத் தேடிக் கொள்ளப்போகிறாய்! அப்படித் தானே! என்றதும், அவன் சாகவும் முடியாமல், வாழவும் பிரியப்படாமல் பாலைவனத்தின் பயனற்ற பட்டமரம் போல சாய்ந்தான்.

கிருஷ்ணர் அவனுக்கு பன்னீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார். பின்னர் அர்ஜுனன் கோபம் பொங்க போர்க்களத்தில் சபதம் செய்தான். நாளை பகல் பொழுதுக்குள் நான் என் மகனைக் கொன்ற ஜயத்ரதனைக் கொல்வேன். அவ்வாறு கொல்லாவிட்டால் அக்னியில் விழுந்து இறப்பேன் என்றான். இதுகேட்டு தர்மர் அதிர்ந்தார். கிருஷ்ணா! ஜயத்ரதனுக்கு கவுரவப்படை நாளை தகுந்த பாதுகாப்பளிக்கும். அதை மீறி அர்ஜுனன் அவனை அழிக்க முடியாமல் போனால், அவன் நிச்சயம் இறப்பான். அவன் இறந்தபின், மற்ற சகோதரர்களான நாங்களும் உயிர் வாழ மாட்டோம். நீ தான் எங்களுக்கு கருணை காட்ட வேண்டும், என்றதும், மைத்துனரே! கலங்க வேண்டாம். ஜயத்ரதனை அர்ஜுனன் அழிப்பது நிச்சயம், எனச்சொல்லி விட்டு, அர்ஜுனனை அழைத்தார்.அர்ஜுனா! நாம் அவசரமாக சிவலோகம் செல்ல வேண்டும். சிவபெருமானிடம் சில ஆயுதங்களைக் கேட்டுப் பெற வேண்டும்,என்றார். கைலாயம் செல்ல கருட பகவானை அழைத்தார் கிருஷ்ணர். கருடன் அவரையும், அர்ஜுனனையும் ஏற்றிக்கொண்டு கணநேரத்தில் கைலாயத்தை அடைந்தான். சிவதரிசனம் கண்ட அர்ஜுனன் மகிழ்ந்தான். பலமுறை அவரைச் சேவித்தான். தான் தினமும் அர்ச்சனை செய்யும் மலர்கள் சிவனின் பாதத்தில் குவிந்து கிடப்பதைக் கண்டு ஆனந்தமடைந்தான். கிருஷ்ணர் சிவனிடம், அர்ஜுனன் போரில் ஜெயிப்பதற்குரிய ஆயுதங்களைத் தந்தருள வேண்டுமென வேண்டினார். சிவபெருமான் அர்ஜுனனிடம் ஒரு பொய்கையைக் காட்டி அதில் மூழ்கச் சொன்னார்.அர்ஜுனன் அதில் மூழ்கியதும், ஒரு முனிவர் அதனுள் இருந்து வெளிப்பட்டார். அவரது கையில் ஒரு வில்லும் அம்புகளும் இருந்தன. அவை திரிபுரங்களை சிவபெருமான் அழித்தபோது பயன்படுத்தப்பட்டவை. அதைப் பயன்படுத்தும் விதம் குறித்து அந்த முனிவர் அர்ஜுனனுக்கு கற்றுக் கொடுத்ததுடன் சில மந்திரங்களையும் உபதேசித்து மறைந்தார்.

பின்னர் சிவன் அர்ஜுனனிடம், மகனே! இந்த வில்லும், அம்பும் முனிவர் உபதேசித்த மந்திரங்களை உச்சரிக்கும்போது உன் கைக்கு வரும். இதைக்கொண்டு நீ யாரை வேண்டுமானாலும் வெற்றி கொள்ளலாம், என்றார். பின்னர் இருவரும் சிவனிடம் விடைபெற்று திரும்பினர். இந்த இடைவெளியில், பீமனின் மகன் கடோத்கஜனை தர்மர் அழைத்தார். அவனிடம், மகனே! நீ துரியோதனனிடம் சென்று, நாளை பகல் வேளைக்குள் ஜயத்ரதன் கொல்லப்படாவிட்டால், அர்ஜுனன் அக்னியில் குதித்து மாள்வதாக சபதம் எடுத்துள்ளதை சொல்லி வா. மேலும், கிருஷ்ணரும், அர்ஜுனனும் சிவலோகம் சென்று அவனைக் கொல்வதற்குரிய ஆயுதங்களைப் பெற்று வர சென்றுள்ளதையும் அவனிடம் சொல், என்றார்.

கடோத் கஜனுக்கு குழப்பமும் கோபமும் மேலிட்டது. இந்தப் பெரியப்பாவுக்கு என்னாச்சு! யாராவது எதிரியிடம் போய், நான் இன்னின்ன செய்யப் போகிறேன் என்று சொல்வார்களா? அவன் சுதாரித்துக் கொள்ள மாட்டானா? என்று யோசித்தவன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பெரியப்பா! தாங்கள் சொல்வது ஏற்றுக்கொள்கிற மாதிரி இல்லை. நம் வலிமை பற்றி எதிரிக்குத் தெரிந்தால் அது அவனுக்கு சாதகமாக அல்லவா ஆகி விடும். நம் பலத்தை நாமே குறைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? அதிலும் அபிமன்யுவை வஞ்சகமாகக் கொன்ற கொலைகாரர்கள் அவர்கள்? அவர்களை அழிப்பதற்குரிய ஆயுதங்களைப் பெறுவதற்காக கிருஷ்ணார்ஜுனர் சிவபெருமானை தரிசிக்கச் சென்றிருக்கும் இவ்வேளையில், அந்த ரகசியத்தை வெளியிடுவது என்பது அறிவீனமாக இருக்குமோ? என்று பெரியப்பாவைச் சற்று கடுமையாகவே கேட்டுவிட்டான். தர்மர் சிரித்தார். இந்த உலகத்திலேயே தர்மரைப் போன்ற புண்ணியவான்களைப் பார்ப்பது அரிது. அவரது வரலாறு, மனிதாபிமானம் என்பது செத்துப்போய் விட்ட இக்காலத்தில் அனைவராலும் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அவர் சொன்னார். மகனே கடோத்கஜா! பீமனின் புத்திரனான புஜபலம் மிக்க நீயே இப்படி பேசலாமா? எந்த ரகசியம் வெளியே கசிந்தால் என்ன? எனக்குத்தான் நீ பிள்ளையாக இருக்கிறாயே! நீ என்னைக் காப்பாற்றாமல் விடுவாயா என்ன? உன் பராக்கிரமம் என்னைக் காப்பாற்றும். ஒன்றைப் புரிந்து கொள்! நான் தர்மபுத்திரன். தர்மத்தைக் காக்கும் நிலையில் இருப்பவன். எதிரிக்கு நம் பலத்தை சொல்லி, அதன்மூலம் அவனை வெற்றி கொள்வதே தர்மமாகும். தர்மத்திற்கு புறம்பாக நடந்து வஞ்சகரைக் கொன்றால் பாவத்தையும் சேர்ப்போம், வஞ்சகம் புரிந்து விட்டோம் என்று எதிர்கால உலகம் நம்மைத் துõற்றவும் செய்யும். பாண்டவர்கள் அத்தகைய அவச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது. பொய் சொல்லாதவனே வாழ்வில் வெற்றி பெறுவான், என்றார். சொல்லி அடி என்று சொல் வார்களே...அதுதான் தர்மரின் வழி. இதைக் கேட்ட கடோத்கஜன் பெரியப்பாவின் வீர நெஞ்சைப் புரிந்து கொண்டான். அந்தப் பெருமையுடன் வேல் ஒன்றை ஏந்திக் கொண்டு, துரியோதனின் பாசறைக்குச் சென்றான்.
அவனை பாசறை வாசலில் இருந்த காவலர்கள் தடுத்தனர்.


யார் நீ? என்றனர். கடோத்கஜனுக்கு இடி போன்ற குரல் இயற்கையாகவே உண்டு. அவன் சாதாரணமாக பேசினாலே எட்டு ஊருக்கு கேட்கும். அதிலும், இப்போது எதிரியின் வாசலில் நிற்கிறான். ஆக்ரோஷமாக ஒரு சிரிப்பை உதிர்த்தபோது, அந்த இடமே அதிர்ந்தது. காவலர்களின் கையில் இருந்த வேல் நடுக்கம் காட்டியது. அடேய் காவலர்களே! நான் தான் கடோத்கஜன். பீமபுத்திரன். நான் துரியோதனனுக்கு என் பெரியப்பா தர்மரிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன், என்றான். துரியோதனனின் காதில் இது விழுந்தது. அவன் அவனை உள்ளே அனுப்ப உள்ளிருந்தே ஆட்களை அனுப்பினான். கடோத்கஜன் துரியோதனன் முன்னால் வந்து, பெரியப்பா சொல்லியனுப்பியதை தெரிவித்தான். அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனுக்கு நாளை அழிவு உறுதியாகி விட்டது என்பதை அறிவித்தான். உடனே துரியோதனன், என் மகன் லக்ஷணகுமாரனை அபிமன்யு கொன்றான். என் உற்றார், உறவினர் நண்பர்களைக் கொன்றான். அவனை நாங்கள் கொன்றோம். என் மகன் இறந்ததற்காக நான் எந்த சபதத்தையும் எடுக்கவில்லை. ஆனால், அர்ஜுனன் இத்தகைய சபதம் எடுத்துள்ளது எந்த வகையில் நியாயம்? நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. அபிமன்யுவைப் போலவே உன் சித்தப்பன் அர்ஜுனனும் ஜயத்ரதனின் அம்பால் இறப்பான். சிவனால் தரப்பட்ட ஆயுதங்கள் அவனை ஏதும் செய்ய முடியாது. மேலும், நாளை நடக்கப்போவதை பற்றி யாருமே கணிக்கமுடியாது, என்று வீராவேசமாகப் பேசியதுடன் கேலி சிரிப்பும் சிரித்தான். அவனருகில் இருந்த கர்ணன் இன்னும் கேலியாக, என் நண்பனின் மகன் கடோத்கஜன், சல்லியன் மைந்தன், சகுனியின் புத்திரர்கள் ஆகியோரெல்லாம் அழிந்தனர். உங்கள் தரப்பில் அபிமன்யு மாண்டான். உங்கள் தரப்பு உயிர்கள் உயர்ந்தது போலவும், எங்கள் உயிரெல்லாம் ஏதோ தீண்டப்படத்தகாததாகவும் பேசுகிறாயே! இது என்ன நியாயம்? ஒருவேளை பாண்டவர்கள் அழிந்து போனால், வாரிசு யாருமில்லையே என்று எண்ணி அர்ஜுனன் சபதம் செய்திருக்கிறானோ? என்று கேட்டான்.

துõதனாக வந்த தன்னைப் பரிகாசம் செய்ததை கடோத்கஜனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பீமனின் பிள்ளையான அவன் இயற்கையாகவே கோபக்காரன். அடேய் மூடர்களே! என்று கோபமாக பேச்சைத் துவங்கிய அவன், உங்கள் தலையைக் கொய்து சதையைப் பிய்த்தெடுக்க என் சித்தப்பா போர்க் களத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. நான் தனித்து நின்றே அதை முடிப்பேன். தர்மராஜரான என் பெரிய தந்தை தர்மம் தவறாமல் நடக்க என்னை உங்களிடம் அனுப்பினார். நீங்களோ பரிகாசமாகப் பேசுகிறீர்கள்? நான் ஒரு ராட்சதன் தான்! எங்கள் இனத்தவர் கூட உடன் பிறந்தவர்களுக்கும், தாயாதிகளுக்கும் துரோகம் நினைக்கமாட்டார்கள். நீங்களோ வஞ்சனையாக சூதாடி என் தந்தைமாரின் ராஜ்யத்தை சூறையாடினீர்கள். ராட்சதர்களை விட கேடு கெட்ட ஈன ஜென்மங்களே! என்னைப் போன்ற ராட்சதன் உடன்பிறந்தவனின் மனைவியின் இடுப்புச் சேலையை அவிழ்க்க மாட்டான். நீங்களோ தமயன் மனைவியின் முந்தானையைக் களைந்த காமாந்த பிசாசுகள். நீங்கள் ஏதோ தேவர்கள் போல் பிதற்றுகிறீர்கள்! ராட்சதர்களை விட கொடிய பிசாசுகள் நீங்கள், என்று பதிலுக்கு பரிகாசம் செய்து விட்டு அவர்களின் பதிலுக்கு காத்திராமல் புறப்பட்டான். உடனே துரோணரை அழைத்தான் துரியோதனன். ஜயத்ரதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அவ்வாறு நடந்து விட்டால், அர்ஜுனன் தானாகவே மடிந்து போவான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய், என்றான் துரியோதனன். துரோணர் சிரித்தார்.

துரியோதனா! பிரம்மன் கூட சொன்ன சொல்லை சில சமயங் களில் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதைப் போலத் தான் நானும்! ஜயத்ரதனைக் காப்பாற்றுவேன் என்று உன்னிடம் வாக்களிப்பதை விட செயலில் நிரூபிக்கவே விரும்புகிறேன், என்றதும், துரியோதனன் படை வீரர்களை நோக்கி, மிக மிக பணிவாக, நாளை ஒரே ஒரு நாள். ஜயத்ரதனைப் பாதுகாத்து விட்டால் அர்ஜுனன் அழிவான். அதன்பின் வெற்றி நம் பக்கம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள், என வேண்டிக்கொண்டான். கர்ணன், அஸ்வத்தாமன், துரியோதனனின் தம்பி துமார்ஷணன் உள்ளிட்ட எல்லா மாபெரும் வீரர்களும் ஜயத்ரதனைப் பாதுகாப்பதாக உறுதியளித்தனர். இதனிடையே கிருஷ்ணரும், அர்ஜுனனும் கயிலாயத்தில் இருந்து வந்து சேர்ந்தனர். கடோத்கஜனும் திரும்பி வந்து துõது விபரத்தை தர்மரிடம் சொன்னான். பதினான்காம் நாள் போர் துவங்கியது. அன்று அர்ஜுனனுக்கு மிகப்பெரும் சோதனை நாள். துரியோதனனுக்கும் இக்கட்டான நாள். ஜயத்ரதன் பலத்த பாதுகாப்புடன் களத்தில் நின்றான். துரோணர் அவனுக்கு அளித்திருந்த பாதுகாப்பு கண்டு, இந்தளவுக்கு சேனையை வழிநடத்திச் செல்வதற்கு துரோணரை விட்டால் ஆளில்லை. இன்று பகலுக்குள் அர்ஜுனன், ஜயத்ரதனைக் கொல்வான் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. வானத்தில் இருந்த தேவர்களே சொன்னார்களாம். ஆனால், நிலைமை என்னானது தெரியுமா? கிருஷ்ண பகவான் திறமையாக தேரைச் செலுத்த, அர்ஜுனன் விட்ட கோடிக்கணக்கான பாணங்களை ஒரே சமயத்தில் விடுக்க, துரியோதனனின் படையில் முன்னால் நின்ற துச்சாதனன் உள்ளிட்டவர்கள் பயந்தோடினர். துரோணர் அருகில் போய் நின்று கொண்டனர். துரோணர் சற்றும் கலங்காமல் அர்ஜுனன் மேல் அம்புமழை விடுத்தார். இருதரப்புக்கும் பயங்கர சண்டை நடந்தது. அவரவர் விட்ட அம்புகள் மோதி நொறுங்கினவே தவிர, இருவரில் ஒருவருக்கும் ஒரு காயம் கூட ஏற்படவில்லை. நேரமோ பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர், காலம் செல்கிறதே என்பதில் அக்கறையாக இருந்தார். அர்ஜுனன் படைகளை சிதறடித்தானே தவிர, அவன் நின்ற இடத்துக்கும், ஜயத்ரதன் நின்ற இடத்துக்கும் இருபது யோஜனை துõரம் இருந்தது. எனவே, அவன் நின்ற இடத்தை நோக்கி தைரியமாக தேரைச் செலுத்தினார்.

அப்போது துரோணர் தன் தேரை குறுக்காக கொண்டு வந்து நிறுத்தி இடைஞ்சல் செய்தார். அப்போது அர்ஜுனன், குருவே! நான் உமது திருப்பாதங்களை தலையில் தாங்கும் சிறியவன். என் சபதம் நிறைவேற எனக்கு அருள வேண்டும். உம்மோடு சண்டையிட எனக்கு தருணம் இல்லை. மேலும், உம் மீது இக்கணத்தில் நான் தொடுக்கும் ஒவ்வொரு அம்பும் தேவர்கள் மீது அம்பு தொடுப்பதற்கு சமமானது. நீரோ மகாதேவன், என்று புகழாரம் சூட்டினான். இந்த பணிவான வார்த்தைகள் துரோணரை மிகவும் கவர்ந்தன. அவர் அர்ஜுனனின் ரதத்துக்கு வழிவிட்டார். ஆனால், சற்று துõரத்தில் நின்ற கர்ணன் அவர்களை வழிமறித்தான். கர்ணனைச் சுற்றி நின்றவர்களின் தலைகளையெல்லாம் அர்ஜுனன் ஒருவர் விடாமல் பந்தாடினான். கர்ணன் நீண்ட நேரம் அர்ஜுனனிடம் தாக்குப்பிடித்தான் என்றாலும், ஒரு கட்டத்தில் அவனும் தோற்று ஓடினான். அப்போது வருணனின் மகனான சுதாயு, அர்ஜுனனை மறித்து சண்டையிட்டான். அவன் அழியாவரம் பெற்றவன். அர்ஜுனன் விடுத்த மந்திர அம்புகள் கூட அவனை ஏதும் செய்ய முடியவில்லை. இதைப்பயன்படுத்திக் கொண்ட சுதாயு யாரையும் எளிதில் அழித்து விடும், தனது கதாயுதத்தை அர்ஜுனன் மீது எறிந்தான். அது அர்ஜுனன் மீது பட்டால் நிச்சயம் அவன் இறந்து விடுவான். கருணைக்கடலான கிருஷ்ண பரமாத்மா, உலகத்தில் தர்மம் நிலைக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்படும் இப்போரில், பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, தனது மார்பில் தாங்கிக் கொண்டார். தான் வீசிய கதாயுதம், கிருஷ்ணர் மீது பட்டுவிட்டதே என சுதாயு வருந்தினான். பகவானின் அம்சமான நாராயணன் மீது தன் கதாயுதம் பட்டதே என வருந்திய அவன், வருத்தம் தாளாமல் சுருண்டு விழுந்து இறந்து விட்டான். இதுகண்டு அர்ஜுனனுக்கு ஆச்சரியம். கண்ணா! யார் இவன்? நீர் தான் சொல்லியருள வேண்டும்? என்றான். தேர் வேகமாக அவ்விடத்தை விட்டு செல்ல, கிருஷ்ணர் அந்தக் கதையை ஆரம்பித்தார்.

அர்ஜுனா, இவன் பெயர் சுதாயு. வருணனின் புத்திரன். இவனது தாயார் பன்னவாதை. வருணன் தன் மகனுக்கு பலம் மிக்க ஆயுதங்களையும், யாராலும் அழியாத வரத்தையும் அளித்தான். ஆனால், பூலோகத்தில் பிறக்கும் யாருக்கும் மரணம் உரியதென்பதால், விதிவிலக்காக, யாரிடமாவது ஆயுதமில்லாத நிலையில், அவன் மீது ஆயுதங்களை வீசினான் என்றால், அந்நிமிடமே மடிவான் என்ற நிபந்தனையும் அவனுக்கு விதிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆயுதமில்லாத என் மீது அந்த கதாயுதம் பட்டது. அதைப் பார்த்ததுமே அவன் மடிந்தான், என்றான். கிருஷ்ணரின் கருணையை எண்ணி அர்ஜுனன் வியந்தான். அப்போது, கிருஷ்ணர் ஓட்டிய தேரின் வேகம் குறைந்தது. மைத்துனரே! தேரின் வேகம் ஏன் குறைந்தது? மதியவேளை நெருங்கப் போகிறதே! ஜயத்ரதனை நாம் எட்டி விடலாமா? என அர்ஜுனன் கேட்டான். மாயக்கண்ணன் அழகாகப் பதில் சொன்னான். நான் தேரோட்டி. குதிரைகள் செல்ல மறுத்தால் நான் என்ன செய்வேன்? இவ்வளவு நேரமும் ஓடிக்களைத்து விட்ட இக்குதிரைகளுக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் குடித்தால் மீண்டும் வேகம் பிடிக்கும், என்றார். உடனே அர்ஜுனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தால் ஒரு பொய்கையை தரையில் உருவாக்கினான். குதிரைகள் தண்ணீர் குடிக்கத் துவங்கின. கண்ணனும் அந்நேரத்தில் தாக மேலீட்டால் தண்ணீர் குடிக்க குளத்திற்குள் இறங்கினார். அர்ஜுனன் பதைபதைப்புடன் இருந்தான். நேரம் பறந்து கொண்டிருந்தது.

கிருஷ்ணரை அர்ஜுனன் வேகப் படுத்திக் கொண்டிருந்தான். விரைவாக தண்ணீர் குடித்துவிட்டு வரும்படி அவசரப்படுத்தினான். இவர்கள் குளம் உண்டாக்கி தண்ணீர் குடிப்பதை பார்த்த எதிரி வீரர்கள் கூட்டமாக வந்து சூழ்ந்தனர். அவர்களை எல்லாம் அர்ஜுனன் வீர சொர்க்கம் அனுப்பினான். இதையடுத்து துரியோதனன் தனது தேரில் வேகமாக அர்ஜுனனை நோக்கி வந்தான். அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக போய் விட்டது. கிருஷ்ணா! இந்த துரியோதனன் என் கண்களில் இன்று படவே இல்லை. வெகுதுõரத்தில் நின்று கொண்டிருந்தான். ஆனால், இப்போது என்னை நோக்கி தைரியமாக வருகிறான் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும். அது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே,என கேட்டான். கிருஷ்ணர் தன் ஞானதிருஷ்டியால் அதை அறிந்து அர்ஜுனனிடம் சொன்னார். அர்ஜுனா! முன்னொரு காலத்தில் பிரம்மா தேவேந்திரனுக்கு ஒரு கவசத்தை கொடுத்தார். அந்த கவசத்தை யார் அணிந்துள்ளார்களோ அவர்களை வெல்ல யாராலும் முடியாது. இந்த கவசம் தேவேந்திரனிடமிருந்து துரோணாச்சாரியாருக்கு தரப்பட்டது. துரோணாச்சாரியார் அதை துரியோதனனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த கவசத்தை அணிந்து கொண்டே துரியோதனன் உன்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். அவனை அவ்வளவு எளிதில் அழிக்க இயலாது, என்றார். துரியோதனன் அர்ஜுனன் அருகில் நெருங்கி, யாராலும் அழிக்க முடியாதென்ற தைரியத்தில் பாணங்களை தொடுத்தான். கவுரவ வீரர்கள் துரியோதனனுடன் இணைந்து அர்ஜுனன் மீது அம்புகளை தொடுத்தனர். அவற்றையெல்லாம் அர்ஜுனன் சமாளித்து கொண்டிருந்தான். இந்நேரத்தில் பாண்டவ படையின் உதவி அர்ஜுனனுக்கு தேவைப் பட்டது. எனவே கண்ணபிரான் தனது சங்கை ஆரவாரமாக ஊதினார். அது எழுப்பிய பேரொலி குருக்ஷேத்திர களத்தையே கலங்கடித்தது. அனைவரும் அவர்கள் இருந்த இடம் நோக்கி ஓடி வந்தனர். சங்கொலியை கேட்ட தர்மர், தனது தம்பிக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து, கண்ணபிரானின் தம்பியும் தங்களது மகாரத சேனாதிபதியுமான சாத்தகியை அங்கு அனுப்பி என்ன ஏதென விசாரித்து வருமாறு பணித்தார்.

சாத்தகி கவுரவ படையை கடந்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. அவனை எல்லாரும் எதிர்த்தனர். அவர்களையெல்லாம் சமாளித்து சாத்தகி முன்னேறி கொண்டிருந்தான். கர்ணனின் புதல்வர்கள் அவன் மீது அம்பு மழை பொழிந்தனர். ஆனால், மதயானை போல் முன்னேறிய சாத்தகி அவர்களை கொன்று குவித்தான். இது கண்ட துரோணாச்சாரியார் அவனிடம் போருக்கு வந்தார். அவரை பணிவுடன் வணங்கிய சாத்தகி,எங்கள் அன்புத்தலைவரே! தங்களுடன் யுத்தம் செய்ய நான் விரும்பவில்லை. தாங்கள் பிராமணர். ஒரு பிராமணரை எதிர்த்து போராடுவதில் எனக்கு சிறிதளவும் விருப்பமில்லை. தயவுசெய்து எனக்கு வழிவிடுங்கள்,என்றான். துரோணாச்சாரியார் அவனை விடுவதாக இல்லை. அவனை வலுக்கட்டாயமாக போருக்கு இழுத்தார். இருவருக்கும் நடந்த கடும் போரின் முடிவில் துரோணாச்சாரியார் சோர்ந்து நின்றார். இதைப் பயன் படுத்தி சாத்தகி மேலும் முன்னேறி சென்றான். அர்ஜுனனின் நிலையை அறிந்து வர தன்னால் அனுப்பப்பட்ட சாத்தகி நீண்ட நேரமாக திரும்பி வராததால், பீமனை தர்மர் அங்கு அனுப்பி வைத்தார். பீமன் வெகு ஆவேசமாக கவுரவப்படைகளின் இடையே புகுந்து சென்றான். அவனது கால்களிலும் கைகளிலும் சிக்கி ஏராளமான வீரர்கள் மடிந்து போனார்கள்.இந்த நேரத்தில் துரியோதனின் தம்பிகளான குண்டலபோசி, தீர்க்கலோசனன், சித்திரசேனன் ஆகியோர் பீமனை எதிர்க்க வந்தனர். அவர்கள் மூவரையும் அடித்தே கொன்று விட்டான் பீமன். இதை யடுத்து துரியோதனனின் தம்பிமார்கள் முப்பத்தைந்து பேர் ஒன்றாக இணைந்து பீமனை எதிர்த்தனர். ஆனால், பீமனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் அவர்கள் அனைவரின் உயிரையும் குடித்தன. பதினான்காம் நாள் போரில் துரியோதனனின் முப்பத்தெட்டு தம்பிகள் மாண்டு போனார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

பீமன் இவ்வாறு முன்னேறும் வேளையில், துரோணாச்சாரியார் அவனை மறித்தார். சாத்தகியுடன் போராடிய களைப்பிலிருந்து சற்றே அவர் மீண்டிருந்தார். துரியோதனன் அர்ஜுனனுடன் போராடச் சென்றிருக்கும் இந்த வேளையில், பீமனும் அங்கு போய் சேர்ந்து விட்டால் துரியோதனனின் அழிவு உறுதி என்பதை உணர்ந்த அவர், பீமனை எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். ஆனால் பீமனோ தனது ஆச்சாரியாரை எதிர்க்க விரும்பவில்லை. வில்லை அவரது பாதத்தில் வைத்து வணங்கி தன்னை தடுக்காதிருக்கும்படி கேட்டு கொண்டார். உங்கள் திருவடிகளைக்கூட எனது தலையில் தாங்க தயாராக இருக்கிறேன். என்னை முன்னேற அனுமதியுங்கள்,என மிகுந்த தாழ்மையுடன் வேண்டினான். துரோணர் அதற்கு சம்மதிக்காததால், அவருடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது பலத்தை குருவிடம் காட்ட ஆரம்பித்தான். அவர் நின்ற தேரை தனது கைகளால் துõக்கி வானத்தை நோக்கி வீசி எறிந்தான். ஆகாயம் வரை பறந்து சென்ற தேர் கீழே விழுந்து நொறுங்கியது. துரோணருக்கு எலும்பு முறிந்து விட்டது. இந்நிலையில், யாராலும் அழிக்க முடியாத கவசத்துடன் சென்ற துரியோதனன் சற்றும் அஞ்சாமல் அர்ஜுனன் மீது பாணங்களை தொடுத்தான். அர்ஜுனன் எதிர்த்து போரிட்டாலும் துரியோதனனை ஒன்றும் செய்ய முடியவில்லை. மனக் கலக்கத்துடன் அவன் கண்ணபிரானை நோக்கினான்.



Share



Was this helpful?