இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


குறுந்தொகை

Kurunthogai is one of the classic Tamil literary works from the Sangam period, which is renowned for its rich poetic expression and cultural insights. It is part of the "Ettuthokai" anthology, a collection of early Tamil literature.


குறுந்தொகை

குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை நான்கு அடி, பேரெல்லை எட்டு அடி. அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடிவரையறையைக் கொண்ட பாடல் தொகுதி என்பதால் குறுந்தொகை என்று பெயர் பெற்றது. குறுந்தொகை நூலின் செய்யுள் தொகை கடவுள் வாழ்த்தை விடுத்து 401. இதனுள் 307, 391 ஆம் செய்யுட்கள் ஒன்பது அடி உடையன. எட்டு அடிப் பேரெல்லையைக் கடந்துள்ள இந்த இரண்டு பாடல்களும் ஐயத்திற்கு இடமானவை. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்' என்பது பழங் குறிப்பு. இதனைத் தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. 10 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. எஞ்சிய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 205.


கடவுள்வாழ்த்து


தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்து அன்ன மேனி, திகழ் ஒளி,
குன்றி ஏய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்,
சேவல்அம் கொடியோன் காப்ப,
ஏம வைகல் எய்தின்றால்-உலகே.

பாரதம் பாடிய பெருந்தேவனார்


1. குறிஞ்சி


செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.

தோழி, காந்தள் கையுறையை மறுத்தது

திப்புத்தோளார்


2. குறிஞ்சி


கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது

இறையனார்


3. குறிஞ்சி


நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

தோழி தலைவனை இயற்பழிக்கத் தலைவி எதிராக இயற்பட மொழிந்தது

தேவகுலத்தார்


4. நெய்தல்


நோம், என் நெஞ்சே நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.

தலைவி பற்றிக் கவன்ற தோழிக்குத் தான் ஆற்றியமை புலப்படக் கூறியது

காமஞ்சேர் குளத்தார்


5. நெய்தல்


அதுகொல், தோழி! காம நோயே-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.

பிரிவுத் துயரத்தில் கண் உறங்காமை

நரி வெரூ உத்தலையார்


6. நெய்தல்


நள்ளென்றென்றே, யாமம்; சொல்அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.

தாமரையில் அமர்ந்த பிரமன் (பிரமனார்) வரைவிடை பொருளுக்காகத் தலைவன் பிரிந்தான். தலைவி நடு இரவில் உலகுள் அனைவரும் துயிலத் தான் மட்டும் துயிலாமை பற்றி வருந்தியது

நெய்தல் பதுமனார்


7. பாலை


வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே-ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.

பாலை கண்டோர் கூற்று

பெரும்பதுமனார்


8. மருதம்


கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது

ஆலங்குடி வங்கனார்


9. நெய்தல்


யாய் ஆகியளே மாஅயோளே-
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.

தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது

சுயமனார்


10. மருதம்


யாய் ஆகியளே விழவு முதலாட்டி;
பயறு போல் இணர பைந் தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே.

தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

ஓரம்போகியர்


11. பாலை


கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.

தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது

மாமூலனார்


12. பாலை


எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.

"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

ஓதலாந்தையார்.


13. குறிஞ்சி


மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.

தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய, வேறு பட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது

கபிலர்


14. குறிஞ்சி


அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில்
மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

"மடன்மா கூறும் இடனுமார் உண்டே" என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன், "மடலேறுவல்" என்பதுபடச் சொல்லியது

தொல்கபிலர்


15. பாலை


பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித் தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது

ஒளவையார்


16. பாலை


உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?

பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது

பாலை பாடிய பெருங்கடுக்கோ


17. குறிஞ்சி


மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.

தோழியற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது

பேரெயின் முறுவலார்


18. குறிஞ்சி


வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது

கபிலர்


19. மருதம்


எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மெளவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது

பரணர்


20. பாலை


அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உருவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!

செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கோப்பெருஞ்சோழன்


21. முல்லை


வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், "கார்" எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.

பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, "அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?" என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், "கானம் அவர் வரும் கார்காலத்தைக் காட்டிற்றாயினும் யான் இது கார்காலம் என்று தேறேன். அவர் பொய் கூறாராகலின்" எனத் தான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது

ஓதலாந்தையார்


22. பாலை


நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே?-சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஓண்ணுதல்!-நின்னோடும், செலவே.

செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது

சேரமான் எந்தை

23. குறிஞ்சி


அகவன்மகளே! அகவன்மகளே!
மனவுக் கோப்பு! அன்ன நல் நெடுந் கூந்தல்
அகவன்மகளே! பாடுக பாட்டே;
இன்னும், பாடுக, பாட்டே-அவர்
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே.

கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தொடு நின்றது

ஒளவையார்


24. முல்லை


கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவந்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.

பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது

பரணர்


25. குறிஞ்சி


யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

கபிலர்


26. குறிஞ்சி


அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே-
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக் கொடியோனையே.

நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, "இஃது எற்றினான் ஆயிற்று" என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக்காண்கின்ற காலத்து, "தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம்" என்றுக் கூறக் கேட்டு, தோழி அறத்தொடு நின்றது

கொல்லன்அழிசி


27. பாலை


கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.

பிரிவிடை "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

வெள்ளி வீதியார்


28. பாலை


முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
"ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

ஒளவையார்


29. குறிஞ்சி


நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், "இவர் எம்மை மறுத்தார்" என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது

ஒளவையார்


30. பாலை


கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல்,
பெய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்
தமியேன்; மன்ற அளியேன் யானே!

"அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது, ஆற்றா யாகின்றது என்?" என வினாய தோழிக்குத் தலைமகள், "யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலிந்தது, எனக் கூறியது

கச்சிப்பேட்டு நன்னாகையார்.


31. மருதம்


மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.

நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது

ஆதிமந்தி


32. குறிஞ்சி


காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்;
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.

பின்னின்றான் கூறியது

அள்ளூர் நன்முல்லையார்


33. மருதம்


அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனி யொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.

வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது

படுமரத்து மோசிகீரன்


34. மருதம்


ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கெளவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!-
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.

வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது

கொல்லிக் கண்ணன்


35. மருதம்


நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு,
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழிதுளி தலைஇய
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.

பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது

கழார்க் கீரன் எயிற்றி


36. குறிஞ்சி


துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, "நீயலென் யான்" என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?

"வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்" எனக் கவன்று வேறுபட்ட தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது

பரணர்


37. பாலை


நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.

தோழி, "கடிது வருவர்" என்று, ஆற்றுவித்தது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ


38.குறிஞ்சி


கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது

கபிலர்


39. பாலை


"வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ் சுரம்" என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.

பிரிவிடை "ஆற்றல் வேண்டும்" என்ற தோழிக்கு, "யாங்ஙனம் ஆற்றுவேன்?" எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது

ஒளவையார்


40. குறிஞ்சி


யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது

செம்புலப்பெயனீரார்.


41. பாலை


காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே.

பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

அணிலாடு முன்றிலார்


42. குறிஞ்சி


காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட!-எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?

இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது

கபிலர்


43. பாலை


"செல்வார் அல்லர்" என்று யான் இகழ்ந்தனனே;
"ஒல்வாள் அல்லள்" என்று அவர் இகழ்ந்தனரே;
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது

ஒளவையார்.


44. பாலை


காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது

வெள்ளிவீதியார்


45. மருதம்


காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், "எல்லினன் பெரிது" என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.

தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது

ஆலங்குடி வங்கனார்


46. மருதம்


ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?

பிரிவிடை "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது

மாமிலாடன்


47. குறிஞ்சி


கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே!

இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது

நெடு வெண்ணிலவினார்


48. பாலை


"தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு" என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்.
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணரப் பொழுது பெரிதாகலின், வேறு பட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது

பூங்கணுத்திரையார்


49. நெய்தல்


அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

தலைமகன் பரத்தைமாட்டுப் பிரித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிததானாகிய தலைமகற்குச் சொல்லியது

அம்மூவனார்


50. மருதம்


ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

கிழவர்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது

குன்றியனார்


51. நெய்தல்


கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கம் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர் வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவு கூறியது

குன்றியனார்


52. குறிஞ்சி


ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையை யாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிநதனென் அல்லெனோ, இறைஇறை யானே?

வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது

பனம்பாரனார்


53. மருதம்


எம் அணங்கினவே - மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி,
சூராமகளிரோடு உற்ற சூளே.

வரைவு நீட்டித்த வழித் தோழி தலைமகற்கு உரைத்தது

கோப்பெருஞ்சோழன்


54. குறிஞ்சி


யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

மீனெறி தூண்டிலார்


55. நெய்தல்


மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிசிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல்ஊரே.

"வரைவோடு புகுதானேல் இவள் இறந்துபடும்" எனத் தோழி, தலைமகன் சிறைப் புறத்தானாகச் சொல்லியது

நெய்தற் கார்க்கியர்


56. பாலை


வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என்நெஞ்சு அமர்ந்தோளே!

தலைமகன் கொண்டு தலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி, இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது

சிறைக்குடி ஆந்தையார்


57. நெய்தல்


பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன்அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது

சிறைக்குடி ஆந்தையார்


58. குறிஞ்சி


இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!

கழற்றெதிர்மறை

வெள்ளிவீதியார்


59. பாலை


பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.

பிரிவிடை அழிந்த சிழத்தியைத் தோழி வற்புறுத்தியது

மோசிகீரனார்


60. குறிஞ்சி


குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங் கால் முடிவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல்கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.

பிரிவிடை ஆற்றாமையான் தலைமகன் தோழிக்கு உரைத்தது

பரணர்


61. மருதம்


தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.

தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது

நும்பிசேர்கீரன்


62. குறிஞ்சி


கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.

தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது

சிறைக்குடி ஆந்தையார்


63. பாலை


"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்-நெஞ்சே!

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது

உகாய்க்குடி கிழார்


64. முல்லை


பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோ ரே.

பிரிவிடை ஆற்றாமை கண்டு, "வருவர் எனச் சொல்லிய தோழிக்கு கிழத்தி உரைத்தது

கருவூர்க் கதப்பிள்ளை


65. முல்லை


வன்பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள,
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்-
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.

பருவங் கண்டு அழிந்த தலைமகன் தோழிக்கு உரைத்தது

கோவூர் கிழார்


66. முல்லை


மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை-
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாராஅளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.

பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது

கோவர்த்தனார்


67. பாலை


உள்ளார்கொல்லோ-தோழி! -கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?

பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது

அள்ளுர்நன்முல்லை


68. குறிஞ்சி


பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.

பிரிவிடைக் கிழத்தி மெலித்து கூறியது

அள்ளூர் நன்முல்லை


69. குறிஞ்சி


கருங்கண் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!

தோழி இரவுக்குறி மறுத்தது

கடுந்தோட் கரவீரன்


70. குறிஞ்சி


ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அணை மெல்லியல் யான் முயங்குங்காலே.

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

ஓரம்போகியார்


71. பாலை


மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது

கருவூர் ஓதஞானி


72. குறிஞ்சி


பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென்தோள்,
மா மலைப் பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள், பெரு மழைக் கண்ணே!

தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது

மள்ளனார்


73. குறிஞ்சி


மகிழ் நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது

பரணர்


74. குறிஞ்சி


விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.

தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது

விட்ட குதிரையார்


75. மருதம்


நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்!
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?

தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது

படுமரத்து மோசிகீரனார்


76. குறிஞ்சி


காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.

பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது

கிள்ளிமங்கலங்கிழார்


77. பாலை


அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே.

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

மதுரை மருதன் இளநாகனார்


78. குறிஞ்சி


பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.

பாங்கன் தலைமகற்குச் சொல்லியது

நக்கீரனார்


79. பாலை


கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
செல்லாது ஏகல் வல்லுவோரே.

பொருள்வயிற் பிரிந்த தலைமகணை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

குடவாயிற் கீரனக்கன்


80. மருதம்


கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும்புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர்
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடுங் காக்க, தன் கொழுநன் மார்பே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது

ஒளவையார்


81. குறிஞ்சி


இவளே, நின்சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.

தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது

வடம வண்ணக்கன் பேரிசாத்தன்


82. குறிஞ்சி


வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
"அழாஅல்" என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும்பனி அற்சிரம் வாராதோரே.

பருவங் கண்டு அழிந்த தலைமகள், "வருவர்" என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது

கடுவன் மள்ளன்


83. குறிஞ்சி


அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம்இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, "வரும்" என்றோளே!

தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழிவாழ்த்தியது

வெண்பூதன்


84. பாலை


பெயர்த்தனென் முயங்க, "யான் வியர்த்தனென்" என்றனள்;
இனி அறிந்தேன், அது தனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது

மோசிகீரன்


85. மருதம்


யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது

வடம வண்ணக்கன் தாமோதரன்


86. குறிஞ்சி


சிறை பனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.

"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது

வெண்கொற்றன்


87. குறிஞ்சி


"மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்" என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.

தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது

கபிலர்


88. குறிஞ்சி


ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ்சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.

இரவுக்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது

மதுரைக் கதக்கண்ணன்


89. மருதம்


பாஅடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப்பேதை ஊர்க்கே?-
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.

தலைமகன் சிறைப்புறத்தானகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம்

பரணர்


90. குறிஞ்சி


எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்


91. மருதம்


அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண்கை,
கடும்பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகு, நீ துஞ்சும் நாளே!

பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரைத் தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிந்து வந்த வழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதூஉம் ஆம்

ஒளவையார்


92. நெய்தல்


ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து-
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை,
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு சொல்லியது

தாமோதரன்


93. மருதம்


நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன்உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?

வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது

அள்ளூர் நன்முல்லையார்


94. முல்லை


பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்?-தோழி!-பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?-
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே.

பருவங் கண்டு ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பதுபடத் தலை மகள் சொல்லியது

கதக்கண்ணன்


95. குறிஞ்சி


மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது

கபிலர்


96. குறிஞ்சி


"அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?" என்றி; யான் அது
நகை என உணரேன் ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,

தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது

அள்ளூர் நன்முல்லை


97. நெய்தல்


யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகிய மன்றத்தஃதே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

வெண்பூதி


98. முல்லை


"இன்னள் ஆயினள் நன்னுதல்" என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.

பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்து

கோக்குளமுற்றன்


99. முல்லை


உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே? நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.

பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், "எம்மை நினைத்தும் அறிதிரோ?" என்ற தோழிக்குச் சொல்லியது

ஒளவையார்


100. குறிஞ்சி


அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.

பாங்கற்கு உரைத்தது; அல்லகுறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்

கபிலர்


101. குறிஞ்சி


விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.

தலைமகட்குப் பாங்காகினார் கேட்பச் சொல்லியது; வலித்த செஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம்

பருஉமோவாய்ப் பதுமன்


102. நெய்தல்


உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம்மரீஇயோரே.

"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, "யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?" என்றது

ஒளவையார்


103. நெய்தல்


கடும்புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.

பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

வாயிலான் தேவன்


104. பாலை


அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குக் கூறியது; "சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?" என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம்

காவன்முல்லைப் பூதனார்


105. குறிஞ்சி


புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

நக்கீரர்


106. குறிஞ்சி


புல்வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
"தான் மணந்தனையம்" என விடுகம் தூதே.

தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது

கபிலர்


107. மருதம்


குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!

பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது

மதுரைக் கண்ணனார்


108. முல்லை


மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.

பருவங் கண்டு அழிந்த தலைமகன் தோழிக்குக் கூறியது

வாயிலான் தேவன்


109. நெய்தல்


முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!

தலைவன் சிறைப்புறமாக தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது

நம்பி குட்டுவன்


110. முல்லை


வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ-தோழி!-நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?

பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம்

கிள்ளிமங்கலங் கிழார்


111. குறிஞ்சி


மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
"வென்றி நெடு வேள்" என்னும்; அன்னையும்,
அது என உணரும்ஆயின், ஆயிடைக்
கூடை இரும் பிடிக் கை கரந்தன்ன
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக-தோழி!-நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதியது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.

தீன்மதிநாகன்


112. குறிஞ்சி


கெளவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

ஆலத்தூர் கிழார்


113. மருதம்


ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே;
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது

மாதீர்த்தன்


114. நெய்தல்


நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!-
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே.

இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது

பொன்னாகன்


115. குறிஞ்சி


பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரோ?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி-இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட!-நின் அலது இலளே.

உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது

கபிலர்


116. குறிஞ்சி


யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

இளங்கீரன்


117. நெய்தல்


மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது

குன்றியனார்


118. நெய்தல்


புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்புக் கடவுநர்,
"வருவீர் உளீரோ?" எனவும்,
வாரார்-தோழி!-நம் காதலோரே.

வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது

நன்னாகையார்


119. குறிஞ்சி


சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது

சத்திநாதனார்


120. குறிஞ்சி


இல்லோன் இன்பம் காமுற்றா அங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.

அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம்

பரணர்


121. குறிஞ்சி


மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என தட மென் தோளே.

இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவழி, பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குக் கூறியது

கபிலர்


122. நெய்தல்


பைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!

தலைமகள் பொழுது கண்டு அழிந்தது

ஓரம்போகியார்


123. நெய்தல்


இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒர சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே.

பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்த, தலைமகட்குச் சொல்லியது

ஐயூர் முடவன்


124. பாலை


உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர்பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?

புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது

பாலை பாடிய பெருங்கடுக்கோ


125. நெய்தல்


இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி!-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது

அம்மூவன்


126. முல்லை


"இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?" என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

ஒக்கூர் மாசாத்தியார்


127. மருதம்


குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக,
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர், நீ அகன்றிசி னோர்க்கே.

பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது

ஓரம்போகியார்


128. நெய்தல்


குணகடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயல் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.

அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகள் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகள் கூறியதூஉம் ஆம்

பரணர்


129. குறிஞ்சி


எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது

கோப்பெருஞ்சோழன்


130. பாலை


நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ? -நம் காதலோரே.

பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; "நீ 'அவர் பிரிந்தார்' என்று ஆற்றயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்; நின் ஆற்றாமை நீங்குக!" எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது; தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம் ஆம்

வெள்ளிவீதியார்


131. பாலை


ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே.

வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது

ஓரேருழவனார்


132. குறிஞ்சி


கவவுக் கடுங்குரையன்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?-ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே.

கழற்றெதிர்மறை

சிறைக்குடி ஆந்தையார்


133. குறிஞ்சி


புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே-தோழி!-என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது

உறையூர் முதுகண்ணன் சாத்தன்


134. குறிஞ்சி


அம்ம வாழி-தோழி!-நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல-
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல்பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது

கோவேங்கைப் பெருங்கதவன்


135. பாலை


"வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.

"தலைமகன் பிரியும்" என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது

பாலை பாடிய பெருங்கடுங்கோ.


136. குறிஞ்சி


"காமம் காமம்" என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது

மிளைப்பெருங் கந்தன்


137. பாலை


மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென் ஆயின்-எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக!-யான் செலவுற தகவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது

பாலை பாடிய பெருங்கடுங்கோ


138. குறிஞ்சி


கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

ஊர் துஞ்சிய மரம் பூவின் பாடு கேட்டுத் துஞ்சும் முதல் நாள் உரியவிடத்தே வந்து தலைவியைக் காணாதவன் மறுநாள் அணிமையில் வந்து நிற்கத் தலைவி நேற்றிரவு ஈங்கு அவா வந்திலர் என்றாள்

கொல்லன் அழிசி


139. மருதம்


மனை உறை கோழிக் குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇ
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தா அங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.

வாயில் வேண்டி புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது

ஒக்கூர் மாசாத்தியார்


140. பாலை


வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே?

பொருள்வயிற் பிரிந்த இடத்து, "நீ ஆற்றுகின்றிலை" என்ற தோழிக்குத் தலை மகள் சொல்லியது

அள்ளூர் நன்முல்லை


141. குறிஞ்சி


"வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க" என்றோளே, அன்னை என, நீ
சொல்லின் எவனோ?-தோழி!-கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ எனவே.

இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது

மதுரைப் பெருங்கொல்லனார்


142. குறிஞ்சி


சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம்

கபிலர்


143. குறிஞ்சி


அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பய மலை நாடன்;
நில்லாமையே நிலையிற்று ஆகலின்,
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாள னுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.

வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது

மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்


144. பாலை


கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ-
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்


145. நெய்தல்


உறைபதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி-
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.

வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது

கொல்லன் அழிசி


146. குறிஞ்சி


அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
"நன்றுநன்று" என்னும் மாக்களோடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.

தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, "வரைவு மறுப்பவோ?" எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது

வெள்ளிவீதியார்


147. பாலை


வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைக் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி-கனவே!-
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.

தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது

கோப்பெருஞ்சோழன்


148. முல்லை


செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
"கார் அன்று" என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, "பருவம் அன்று" என்று வற்புறுத்த தலைமகள் சொல்லியது

இளங்கீரந்தையார்.


149. பாலை


அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.

உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது

வெள்ளிவீதியார்


150. குறிஞ்சி


சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்!

இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது

மாடலூர் கிழார்


151. பாலை


வங்காக் கடந்த செங் கால் பேடை
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,
குழல் இசைக் குரல குறும் பல அகவும்
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,
"மறப்பு அருங் காதலி ஒழிய
இறப்பல்" என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.

பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது

தூங்கலோரி


152. குறிஞ்சி


யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று, நெருக்கிய தோழிக்குச் சொல்லியது

கிள்ளிமங்கலங் கிழார்


153. குறிஞ்சி


குன்றக் கூகை குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சுமன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே,
ஆர் இருட் கங்குல் அவர் வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.

முற்பொருள் கங்குல் வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது

கபிலர்


154. பாலை


யாங்கு அறிந்தனர் கொல்-தோழி!-பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து, புலம்பக் கூஉம்
அருஞ் சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது

மதுரைச் சீத்தலைச் சாத்தன்


155. முல்லை


முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்' என்னும் உரை வாராதே.

தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது

உரோடகத்துக் கந்தரத்தன்


156. குறிஞ்சி


பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ ? மயலோ இதுவே.

கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்


157. மருதம்


'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது

அள்ளூர் நன்முல்லை


158. குறிஞ்சி


நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?

தலைமகள் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

ஒளவையார்


159. குறிஞ்சி


'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே.

தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்

வடம வண்ணக்கன் பேரிசாத்தன்


160. குறிஞ்சி


நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே?

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது

மதுரை மருதன் இளநாகன்


161. குறிஞ்சி


பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன் தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன் கொல் தானே-தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?

இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

நக்கீரர்


162. முல்லை


கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை-
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே?

வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது

கருவூர்ப் பவுத்திரன்


163. நெய்தல்


யார் அணங்குற்றனை-கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?

தன்னுள் கையாறு எய்திடு கிளவி

அம்மூவன்


164. மருதம்


கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பெளவம் அணங்குக-தோழி!-
மனையோள் மடமையின் புலக்கம்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது

மாங்குடிமருதன்


165. குறிஞ்சி


மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை-
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீய்ந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.

பின்னின்ற தலைமகள் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது

பரணர்


166. நெய்தல்


தண் படற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது

கூடலூர் கிழார்


167. முல்லை


முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது

கூடலூர் கிழார்


168. பாலை


மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது

சிறைக்குடி ஆந்தையார்


169. மருதம்


சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.

கற்புக் காலத்து தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம்

வெள்ளிவீதியார்


170. குறிஞ்சி


பலரும் கூறுக, அஃது அறியாதோரே-
அருவி தந்த நாட் குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே.

வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது

கருவூர் கிழார்


171. மருதம்


காண் இனி வாழி-தோழி-யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டா அங்கு,
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே?

வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது

பூங்கணுத்திரையார்


172. நெய்தல்


தாஅவல் அஞ்சிறை நொப் பளை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.

வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது

கச்சிப்பேட்டு நன்னாகையார்


173. குறிஞ்சி


பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க எறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று,
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே.

குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது

மதுரைக் காஞ்சிப் புலவன்


174. பாலை


பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார் ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது

வெண்பூதி


175. நெய்தல்


பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி,
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை,
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று,
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?

பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது

உலோச்சன்


176. குறிஞ்சி


ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே-
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.

தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது

வருமுலையாரித்தி


177. நெய்தல்


கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர் கொல் வாழி-தோழி!-நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?

கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது

உலோச்சன்


178. மருதம்


அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனீர்; நோகோ யானே.

கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது

நெதும்பல்லியத்தை


179. குறிஞ்சி


கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது

குட்டுவன் கண்ணன்


180. பாலை


பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது

கச்சிப்பேட்டு நன்னாகையார்


181. மருதம்


இது மற்று எவனோ-தோழி!-துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

தலைமகள் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது

கிள்ளிமங்கலங்கிழார்


182. குறிஞ்சி


விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?

தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது

மடல் பாடிய மாதங்கீரன்


183. முல்லை


சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?-
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.

பருவ வரவின்கன், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

ஒளவையார்


184. நெய்தல்


அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மட மகள்
கண் வலைப் படூஉம் கானலானே.

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது

ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்


185. குறிஞ்சி


'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச்
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?

தலைமகன் இராவந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை, 'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்


186. முல்லை


ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே.

பருவ வரவின் கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

ஒக்கூர் மாசாத்தியார்


187. குறிஞ்சி


செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!-
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.

வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது

கபிலர்


188. முல்லை


முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.

பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்


189. பாலை


இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.

வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது

மதுரை ஈழத்துப் பூதன் தேவன்


190. முல்லை


நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?

பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது

பூதம்புல்லன்


191. முல்லை


உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், 'போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே.

பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


192. பாலை


'ஈங்கே வருவர், இனையல், அவர்' என,
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!-
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.

பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது

கச்சிப்பேட்டு நன்னாகையார்


193. முல்லை


மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.

தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது

அரிசில் கிழார்


194. முல்லை


என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?

பருவ வரவின்கண் 'ஆற்றாளாம்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கோவர்த்தனார்


195. நெய்தல்


சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து ஏழுதரு பையுள் மாலை
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ-
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!

பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது

தேரதரன்


196. மருதம்


வேம்பின் பைங் காய் என் தோழி தரினே,
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே,
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்-
ஐய!-அற்றால் அன்பின் பாலே.

வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது

மிளைக் கந்தன்


197. நெய்தல்


யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?

பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கச்சிப்பேட்டு நன்னாகையார்


198. குறிஞ்சி


யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.

தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது

கபிலர்


199. குறிஞ்சி


பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க்
கைவள் ஒரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.

தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது

பரணர்


200. நெய்தல்


பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசுமந்து வந்து,
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!-
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே-
கால மாரி மாலை மா மலை
இன்இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.

பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்ற வழி, தலைமகள் சொல்லியது

ஒளவையார்


201. குறிஞ்சி


அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகரிப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!

கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்று ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

202. மருதம்


நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது

அள்ளூர் நன்முல்லை


203. மருதம்


மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது

நெடும்பல்லியத்தன்


204. குறிஞ்சி


'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்தாங்கு,
விருந்தே காமம்-பெரும்தோளோயே!

தலைமகற்குப் பாங்கன் உரைத்தது

மிளைப் பெருங் கந்தன்


205. நெய்தல்


மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?

வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

உலோச்சன்


206. குறிஞ்சி


அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்;
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது

ஐயூர் முடவன்


207. பாலை


'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல்வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

செலவுக் குறிப்பு அறிந்து, 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழத்தியுரைத்தது

உறையன்


208. குறிஞ்சி


ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே.

வரைவிடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கபிலர்


209. பாலை


அறந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங்காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.

பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாகக் கிழத்தியைத் தெருட்டியது

பாலை பாடிய பெருங்கடுங்கோ


210. முல்லை


திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறுது -என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

பிரிந்து வந்த தலைமகள், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது

காக்கை பாடினியார் நச்செள்ளையார்


211. பாலை


அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி,
ஆராது பெயரும் தும்பி
நீர் இல் வைப்பின் சுரன், இறந்தோரே.

'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்? எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது

காவன் முல்லைப் பூதனார்


212. நெய்தல்


கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்,
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.

குறைநேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது

நெய்தற் கார்க்கியன்


213. பாலை


நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக்
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல்
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின்
தெரித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி,
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம்
இன் துயில் முனிநர் சென்ற ஆறே.

'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது

கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன்


214. குறிஞ்சி


மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.

தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது

கூடலூர் கிழார்


215. பாலை


படரும் பைபயப் பெயரும்; சுடரும்
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர்
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக்
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்


216. பாலை


அவரே, கேடுஇல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
"அன்னள் அளியள்" என்னாது, மா மழை
இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே.

பருவ வரவின்கண், "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்


217. குறிஞ்சி


"தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம், என் இடும்பை நோய்க்கு?" என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து,
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற;
ஐதேய் கம்ம யானே;
கழி முதுக்குறைமையம் பழியும் என்றிசினே.

உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது

தங்கால் முடக்கொல்லனார்


218. பாலை


விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.

பிரிவிடை, "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கொற்றன்


219 நெய்தல்


பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
"ஆங்கண் செல்கம் எழுக" என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; முள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-"எந்நீரிரோ?" எனினே.

சிறைப்புறம்

வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


220. முல்லை


பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.

பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது

ஒக்கூர் மாசாத்தியார்


221. முல்லை


அவரோ வாரார்-முல்லையும் பூத்தன்;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.

பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

உறையூர் முதுகொற்றன்


222. குறிஞ்சி


தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
அண்டும் வருகுவள் போலும்-மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.

பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது

சிறைக்குடி ஆந்தையார்


223. குறிஞ்சி


'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை
ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, 'வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்


224. பாலை


கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.

பிரிவிடை, 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது

கூவன் மைந்தன்


225. குறிஞ்சி


கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.

வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது

கபிலர்


226. நெய்தல்


பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.

வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்


227. நெய்தல்


பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.

சிறைப்புறம்

ஓத ஞானி


228. நெய்தல்


வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.

'கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்


229. பாலை


இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுபமன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.

இடைச்ச சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது

மோதாசனார்


230. நெய்தல்


அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவனல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சின்ரைன்ன வரவு அறியானே.

வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது

அறிவுடை நம்பி


231. மருதம்


ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது

பாலை பாடிய பெருங்கடுங்கோ


232. பாலை


உள்ளார் கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார் கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது

ஊண்பித்தை


233. முல்லை


கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரைகோற் குறுந்தொடி தந்தை ஊரே.

பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

பேயன்


234. முல்லை


சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.

பருவ வரவின் கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மிளைப் பெருங்கந்தனார்


235. பாலை


ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி
மரையினம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.

வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது

மாயேண்டன்


236. நெய்தல்


விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.

வரைவிடை வைத்துப் பிரிவான், 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாக உரைத்தது

நரிவெரூஉத்தலையார்


237. பாலை


அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக்கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?

பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது

அள்ளூர் நன்முல்லை


238. மருதம்


பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே.

தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில்வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிவிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது

குன்றியன்


239. குறிஞ்சி


தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந்தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.

சிறைப்புறம்

ஆசிரியன் பெருங்கண்ணன்


240. முல்லை


பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.

வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கொல்லன் அழிசி


241. குறிஞ்சி


யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின் அழுதன-தோழி!-
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது இட்ட ஏமப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடற் கண்ட என் கண்ணே.

பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கபிலர்


242. முல்லை


கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.

கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது

குழற்றத்தன்


243. நெய்தல்


மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.

வன்புறை எதிர் அழிந்து சொல்லியது

நம்பி குட்டுவன்


244. குறிஞ்சி


பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!-
ஓரி முருங்கப் பீலி சாய
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே.

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அரிது. என வரைவு கடாயது

கண்ணனார்


245. நெய்தல்


கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே-
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மாலை மாறன்


246. நெய்தல்


'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.

தலைவன் ஓர் இரவு மனைப்படப்பையின் கண் வந்துநிற்க அறியாதாள் போன்று தலைவி கூறியது

கபிலர்


247. குறிஞ்சி


எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர் செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை
வீயா மென் சினை வீ உக, யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.

கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம்

சேந்தம்பூதன்


248. நெய்தல்


அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.

வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது

உலோச்சன்


249. குறிஞ்சி


இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம் நோக்கினென்-தோழி!-
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே?

வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கபிலர்


250. பாலை


பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,
இரலை நல் மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, கால் இயல்
கடு மாக் கடவுமதி -பாக!-நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

தலைமகன் பாகற்கு உரைத்தது

நாமலார் மகன் இளங்கண்ணன்


251. முல்லை


மடவ வாழி-மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின, பிடவும் பூத்தன;
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

பிரிவிடைத் தோழி, 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது

இடைக் காடன்


252. குறிஞ்சி


நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன்முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு
துனியல் வாழ்-தோழி!-சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?

தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன் கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது


கிடங்கில் குலபதி நக்கண்ணன்

253. பாலை


கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவது ஆயினும், நெகிழ்நூல்
பூச்சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது

பூங்கண்ணன்


254. பாலை


இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா-தோழி!-
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்' என, வரூஉம் தூதே.

பருவங் கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

பார்காப்பான்


255. பாலை


பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.

'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது

கடுகு பெருந் தேவன்


256. பாலை


'மணி வார்ந்தன்ன மாக்கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.

பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


257. குறிஞ்சி


வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.

வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது

உறையூர்ச் சிறுகந்தன்


258. மருதம்


வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலராகின்றால்-பெரும!-காவிரிப்
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம் ஆம்

பரணர்


259. குறிஞ்சி


மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகியவழித் தோழி அறத்தொடு நின்று, 'யானே பரிகரிப்பல்' என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது

பரணர்


260. பாலை


குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.

அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது

கல்லாடனார்


261. குறிஞ்சி


பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி-தோழி!-காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.

இரவுக்குறிக்கண் தலைமகள் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

கழார்க் கீரன் எயிற்றி


262. பாலை


ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது

பாலை பாடிய பெருங்கடுங்கோ


263. குறிஞ்சி


மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
'பேஎய்க் கொளீஇயள் இவள்' எனப்படுதல்
நோதக்கன்றே-தோழி!-மால் வரை
மழை விளையாடும் நாடனைப்
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.

'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற் பாலது?' எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது

பெருஞ்சாத்தன்


264. குறிஞ்சி


கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.

'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவள்' என்றது

கபிலர்


265. குறிஞ்சி


காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.

வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது

கருவூர்க் கதப்பிள்ளை


266. பாலை


நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-

வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

நக்கீரர்


267. பாலை


இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார்-நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோரே.

'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையும் அருமையும் கூறி, செலவு அழுங்கியது

காலெறி கடிகையார்


268. குறிஞ்சி


'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்;
'வருவிரோ?' என வினவலும் வினவாம்;
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு
நடு நாள் என்னார், வந்து,
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது

கருவூர்ச் சேரமான் சாத்தன்


269. நெய்தல்


சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு,
'இனி வரின் எளியள்' என்னும் தூதே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

கல்லாடனார்


270. முல்லை


தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல் அணையேமே.

வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது

பாண்டியன் பன்னாடு தந்தான்


271. மருதம்


அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வெளவும் பண்பின் நோய் ஆகின்றே.

தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது

அழிசி நச்சாத்தனார்


272. குறிஞ்சி


தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்சிலை
மான் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்
குருதியொடு பறித்த செங் கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது

ஒருசிறைப்பெரியன்


273. பாலை


அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங்காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந்தேன் கண்படு வரையில் முது
மால்புஅறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரயலன் தெளிமே.

"பிரிவர்" எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

சிறைக்குடி ஆந்தையார்


274. பாலை


புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையின் நாள் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.

பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது

உருத்திரன்


275. முல்லை


முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.

பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது

ஒக்கூர் மாசாத்தியார்


276. குறிஞ்சி


பணைத் தோட் குறுமகள் பாவை தைஇயும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவது கொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!

தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது

கூழிக் கொற்றன்


277. பாலை


ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ,
நீயே-"மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக்கால் வருவது?" என்றி;
அக்கால் வருவர், எம் காதலோரே.

தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது

ஓரிற் பிச்சையார்


278. பாலை


உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது

பேரிசாத்தன்


279. முல்லை


திரிமருப்பு எருமை இருள் நிற மைஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு அசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?

வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மதுரை மருதன் இளநாகனார்


280. குறிஞ்சி


கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.

கழற்றெதிர்மறை

நக்கீரர்


281. பாலை


வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர் கொல்லோ-சேயிழை!-நமரே?

பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது

குடவாயிற் கீரத்தன்


282. பாலை


செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவ அல்ல என்பர் கொல்-நமரே?

வினைவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது

நாகம்போத்தன்


283. பாலை


"உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு" எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.

தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறு பட்டேன்" என்று, கிழத்தி சொல்லியது

பாலை பாடிய பெருங்கடுங்கோ


284. குறிஞ்சி


பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.

வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது

மிளைவேள் தித்தன்


285. பாலை


வைகல் வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பருவங்கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து, தலைமகள் சொல்லியது

பூதத் தேவன்


286. குறிஞ்சி


உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.

இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்

எயிற்றியனார்


287. முல்லை


அம்ம வாழி-தோழி!-காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, "நம்மைத் துறந்து வாரார்" என்று கவன்றாட்கு, பருவங்காட்டி, தோழி "வருவர்" எனச் சொல்லியது

கச்சிப்பேட்டு நன்னாகையார்


288. குறிஞ்சி


கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?

தலைமகனது வரவுணர்ந்து, "நம்பெருமான் நமக்கு அன்பிலன்" என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கபிலர்


289. முல்லை


வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக் கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.

"காலம் கண்டு வேறுபட்டாள்" எனக் கவன்ற தோழிக்கு, "காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லேன்; அவரைப் புறத்தார், "கொடியர்" என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்" என்று, தலைமகள் சொல்லியது

பெருங் கண்ணனார்


290. நெய்தல்


"காமம் தாங்குமதி" என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனைமதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம் ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல்பொரு சிறு நுரை போல,
மெல்ல மெல்ல இல்லாகுதுமே.

வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது

கல்பொருசிறுநுரையார்


291. குறிஞ்சி


சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, "அவள் விளி" என, விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.

பாங்கற்கு உரைத்தது

கபிலர்


292. குறிஞ்சி


மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.

தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது

பரணர்


293. மருதம்


கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே சேயிழை, அந்தில்
கொழுநற் காணிய; அளியேன் யானே!

பரத்தையிற் பிரிந்த வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கள்ளில் ஆத்திரையன்


294. நெய்தல்


கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉ அணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு
அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.

பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது

அஞ்சில் ஆந்தையார்


295. மருதம்


உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.

வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது

தூங்கலோரி


296. நெய்தல்


அம்ம வாழி!-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன்நின்று,
கடிய கழறல் ஓம்புமதி - "தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?" என்றனை துணிந்தே.

பெரும்பாக்கன்


297. குறிஞ்சி


"அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பெருள்" என,
உணர்ந்தேன் மன்ற, அவர் உணரா ஊங்கே.

தோழி வரைவு மலிந்தது

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்


298. குறிஞ்சி


சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.

கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது

பரணர்


299. நெய்தல்


இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?

சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது

வெண்மணிப் பூதி


300. குறிஞ்சி


குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, "அஞ்சல்" என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்றுடை நட்பே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது

சிறைக்குடி ஆந்தையார்


301. குறிஞ்சி


முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.

வரைவிடை வைப்பு, ஆற்றகிற்றியோ? என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது

குன்றியன்


302. குறிஞ்சி


உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
"பிரியா நண்பினர் இருவரும்" என்னும்
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.

வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது

மாங்குடி கிழார்


303. நெய்தல்


கழிதேர்ந்து அசைஇய கருங்கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங்கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள் மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது

அம்மூவன்


304. நெய்தல்


கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகைதரு நட்பே.

வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கணக்காயன் தத்தன்


305. மருதம்


கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை-யான் உற்ற நோயே.

காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது

குப்பைக் கோழியார்.


306. நெய்தல்


"மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்" எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?

காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து கிழத்தி உரைத்தது

அம்மூவன்


307. பாலை


வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர் கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கடம்பனூர்ச் சாண்டிலியன்


308. குறிஞ்சி


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்
மா மலைநாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

வரைவிடைக் கிழத்தியை வன்சொல் சொல்லி வற்புறுத்தியது

பெருந்தோட் குறுஞ்சாத்தன்


309. மருதம்


கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
"கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்? என்னாது"
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.

பரத்தையிற் பிரிந்து வந்து கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது

உறையூர்ச் சல்லியன் குமாரன்


310. நெய்தல்


புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும்,
நம்மே போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை கழியப் புல்லென்றன்றே;
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.

வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது

பெருங்கண்ணன்


311. நெய்தல்


அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்
யான் கண்டன்றோஇலனே; பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத்
தாது சேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?

அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

சேந்தன்கீரன்


312. குறிஞ்சி


இரண்டு அறி கள்வி நம் காதலோளே
முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னது;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.

இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது

கபிலர்


313. நெய்தல்


பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனோடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.

இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, அவரொடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ! என்று சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


314. முல்லை


சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி!-தோழி!-வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க-
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது

பேரிசாத்தன்


315. குறிஞ்சி


எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்-தோழி!-
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.

வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மதுரை வேளாதத்தன்


316. நெய்தல்


ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துணைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?

வரைவிடை வேறு படுகின்றாய் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

தும்பிசேர் கீரன்


317. குறிஞ்சி


புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?

பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது

மதுரைக் கண்டராதித்தன்


318. நெய்தல்


எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயல் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.

கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத்தோழிக்குக் கிழத்தி உரைத்தது

அம்மூவன்


319. முல்லை


மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே.

பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது

தாயங் கண்ணன்


320. நெய்தல்


பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர் தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றம், தன் கொடுமையானே.

அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது

தும்பிசேர் கீரன்

321. குறிஞ்சி


மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.

தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தொடு நிற்பேன் என்றது.

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


322. குறிஞ்சி


அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.

தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது

ஐயூர் முடவன்


323. முல்லை


எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே.

வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது

பதடி வைகலார்


324. நெய்தல்


கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந்துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,
கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே.

செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து, வரைவு கடாயது

கலைமகன்


325. நெய்தல்


"சேறும் சேறும்" என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, "மருங்கு அற்று
மன்னிக் கழிக" என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங்கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.

பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது

நன்னாகையார்


326. நெய்தல்


துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே.

சிறைப்புறம்

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


327. குறிஞ்சி


"நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று" என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும், நன்றும்
நின்நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், "இன்ன மென்மைச்
சாயலள்; அளியள்" என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.

கிழவன் கேட்கும் அண்மையானாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றறோடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது

அம்மூவனார்


328. நெய்தல்


சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலிநோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

வரைவிடை வேறுபடும் கிழத்தியை, அவர் வரையும் நாள் அணித்து எனவும், அலர் அஞ்சல் எனவும், கூறியது

பரணர்


329. பாலை


கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர் மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.

பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு யான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது

ஓதலாந்தையார்


330 மருதம்


நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது

கழார்க் கீரன் எயிற்றியன்


331. பாலை


நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழில் சொல்லியது

வாடாப் பிரமந்தன்


332. குறிஞ்சி


வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?

வரையாது வந்தொழுகாநின காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது

மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்


333. குறிஞ்சி


குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
கறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக் குறை வருத்தம் வீட,
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே?

'அறத்தொடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது

உழுந்தினைம் புலவன்


334. நெய்தல்


சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,
பனி புலந்து உறையும் பல் பூங் கானல்
இரு நீரச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே?

'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குத் கிழத்தி சொல்லியது

இளம் பூதனார்


335. குறிஞ்சி


நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினைஇழிந்த,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல்
வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.

இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது

இருந்தையூர்க் கொற்றன் புலவன்


336. குறிஞ்சி


செறவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்ஙனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோரே.

தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது

குன்றியன்


337. குறிஞ்சி


முலையே முகிழ் முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு
எனயான் தன் அறிவல்; தான் அறியலளே;
யாங்கு ஆகுவள்கொல் தானே-
பெரு முது செல்வர் ஒரு மட மகளே?

தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது முறை அறியக் கூறியது

பொதுக் கயத்துக் கீரந்தையார்


338. பாலை


திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம்
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின் நலம் கேழ்
அரிவை புலம்பு அசாவிடவே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது

பெருங்குன்றூர் கிழார்


339. குறிஞ்சி


நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொல் சொல்லி வற்புறீஇயது

பேயார்


340. நெய்தல்


காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர் தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.

இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது

அம்மூவன்


341. நெய்தல்


பல் வீ படரிய பசு நனைக் குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என,
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே.

'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மிளைகிழான் நல் வேட்டன்


342. குறிஞ்சி


கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?

செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவுவேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவு கடாயது

காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்


343. பாலை


நினையாய் வாழி-தோழி!-நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென-
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை-
வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே.

தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது

ஈழத்துப் பூதன் தேவன்


344. முல்லை


நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் பிரிந்து
உறை காதலர் வர, காண்போரே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது

குறங்குடி மருதன்


345. நெய்தல்


இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர் ஆயின், தவறோ-தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல-
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?

பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது

அண்டர் மகன் குறுவழுதி


346. குறிஞ்சி


நாகு பிடி நயந்த முளைக் கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் மயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.

தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது

வாயில் இளங்கண்ணன்


347. பாலை


மல்கு சுனை உலர்ந்த நல் கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது

காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்


348. பாலை


தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார், கொல்லோ-மாணிழை!-நமரே?

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது

மாவளத்தன்


349. நெய்தல்


'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?

பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையாக, தோழிக்குக் கிழத்தி கூறியது

சாத்தன்


350. பாலை


அம்ம வாழி-தோழி!-முன் நின்று,
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச்
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ-ஆற்று
அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?

பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் மேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது

ஆலந்தூர் கிழார்


351. நெய்தல்


வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?

தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?' என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது

அம்மூவன்


352. பாலை


நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறைமுது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி!-அவர்க் காணா ஊங்கே.

பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது

கடியலூர் உருத்திரங் கண்ணனார்


353. குறிஞ்சி


ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
நிரை இதழ் பெருந்தாக் கண்ணோடு, இரவில்,
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.

பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவல் அறிந்து பின்னும் பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின் என்று, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து, தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது

உறையூர் முதுகூற்றனார்


354. மருதம்


நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனைஆயின், எம்இல் உய்த்துக் கொடுமோ-
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?

பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது

கயத்தூர் கிழான்


355. குறிஞ்சி


பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.

இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது

கபிலர்


356. பாலை


நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய
செம்பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது

கயமனார்


357. குறிஞ்சி


முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன்படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோள் வெற்பன் மணவா ஊங்கே.

தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது

கபிலர்


358. முல்லை


வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்;
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.

தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது

கொற்றன்


359. மருதம்


கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை,
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ,
புதல்வற் தழீஇயினன் விறலவன்;
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு, தோழி பாணற்குச் சொல்லியது

பேயன்


360. குறிஞ்சி


வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.

தலைமகன் சிறைப்புறத்தானாக வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது

மதுரை ஈழத்துப் பூதன் தேவன்


361. குறிஞ்சி


அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இழை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.

வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது

கபிலர்


362. குறிஞ்சி


முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;
பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?

வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்


363. பாலை


கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது

செல்லூர்க் கொற்றன்


364. மருதம்


அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி
எற் புறங்கூறும் என்ப; தெற்றென்
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர, மற்று அதன்கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.

வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது

ஒளவையார்


365. குறிஞ்சி


கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே-
துன் அரு நெடு வரைத் ததும்ப அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.

'யான் வரையுந் துணையும் ஆற்றவல்லனோ?' என வினாவிய கிழவற்குத் தோழி சொல்லியது

மதுரை நல்வெள்ளி


366. குறிஞ்சி


பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?-
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகி கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.

காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ தோழி கூறியது

பேரிசாத்தன்


367. மருதம்


கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள்கவின் பெறீஇயர்,
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.

வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராவகை உணர்த்தியது, வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூவும் ஆம்

மதுரை மருதன் இளநாகன்


368. மருதம்


மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாண் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,
சொல்ல கிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
இடிகரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.

வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது

நக்கீரர்


369. பாலை


அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.

தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது

குடவாயில் கீர்த்தனார்


370. முல்லை


பொய்கை ஆம்பல் அணி நிற்க கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின், இரு மருங்கினமே; கிடப்பின்,
வில்லக விரலின் பொருந்தி; அவன்
நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.

கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பதைக் கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது

வில்லக விரலினார்


371. குறிஞ்சி


கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.

வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகன் சொல்லியது

உறையூர் முதுகூத்தன்


372. குறிஞ்சி


பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல்
குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

விற்றூற்று மூதெயின்னார்


373. குறிஞ்சி


நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கெளவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?

அலர் மிக்க வழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது

மதுரைக் கொல்லன் புல்லன்


374. குறிஞ்சி


எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.

அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது

உறையூர்ப் பல்காயனார்


375. குறிஞ்சி


அம்ம வாழி, தோழி!-இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே-சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அறிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும்
யாமம் காவலர் அவியாமாறே.

இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய் இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


376. நெய்தல்


மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலாளே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது

படுமரத்து மோசிக் கொற்றன்


377. குறிஞ்சி


மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.

வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது

மோசி கொற்றன்


378. பாலை


ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட வா அரிவை போகிய சுரனே!

மகட் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது.

கயமனார்


379. குறிஞ்சி


இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப்
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு,
கண் அகன் தூமணி, பெறூஉம் நாடன்,
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி!
எம்மில் வருகுவை நீ' எனப்
பொம்மல் ஓதி நீவியோனே?

நொதுமலர் வரைவழித் தோழி அறத்தொடு நின்றது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


380. பாலை


விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழுங்கி,
பெயல் ஆனாதே, வானம்; காதலர்
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே;
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய
வண்ணத் துய்மலர் உதிர
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே!

பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய பருவ வரவின்கண் வேறுபடுவானாயினும், கதுமென ஆற்றுவிப்பது அரிது என்னும் கருத்தினனாய் கூதிர்ப் பருவத்து, தலைமகள் கேட்பத்தனது ஆற்றாமை விளங்கத் தோழி சொல்லியது

கருவூர்க் கதப்பிள்ளை


381. நெய்தல்


தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது,
பசலை ஆகி, விளிவது கொல்லோ-
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல்,
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி,
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனை இயற்பழித்தது.

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


382. முல்லை


தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?

வரவின்கண் வேறுபட்ட தலைமகனைத் தோழி, பருவம் அன்று, வம்பு என்று வற்புறீஇயது

குறுங்கீரன்


383. பாலை


நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணும் கெடச் சொல்லியது

படுமரத்து மோசி கீரன்


384. மருதம்


உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே.

'நின் பரத்தையர்க்கு நீ உற்ற குளுறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது

ஓரம்போகியார்


385. குறிஞ்சி


பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெருவரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.

வேற்று வரைவு மாற்றியது

கபிலர்


386. நெய்தல்


வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையே அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணோடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது

வெள்ளிவீதியார்


387. முல்லை


எல்லை கழிய, முல்லை மலர்,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி?-தோழி!-
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது

கங்குல் வெள்ளத்தார்


388. பாலை


நீர் கால் யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே.

தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன் சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது

ஒளவையார்


389. குறிஞ்சி


நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி!அத்தை-
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே.

தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது

வேட்ட கண்ணன்


390. பாலை


எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.

புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது

உறையூர் முதுகொற்றன்


391. முல்லை


உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை,
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே!

பிரிவிடை, 'பருவவரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது

பொன்மணியார்


392. குறிஞ்சி


அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!

வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

தும்பிசேர் கீரனார்


393. மருதம்


மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே,
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும் பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை,
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.

தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது

பரணர்


394. குறிஞ்சி


முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன் நாள் இனியது ஆகி, பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்ற, அவர் நகை விளையாட்டே.

வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது

குறியிறையார்


395. பாலை


நெஞ்சே நிறை ஒல்லாதே; அவரே,
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;
அருவ நுங்கு மதியிற்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்;
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்
அளிதோதானே நாணே-
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!

வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, நாம் ஆண்டுச் சேறும் எனத் தோழிக்கு உரைத்தது

ஆசிரியர் பெயர் தெரியவில்லை


396. பாலை


பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள் கொல்லோ-முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திறங்கு ஆர் இடை, அவனொடு செலவே?

மகட்போக்கிய தாய் உரைத்தது

கயமனார்


397. நெய்தல்


நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
'அன்னாய்!' என்னும் குழவி போல,
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என்தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.

வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது

அம்மூவன்


398. பாலை


தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.

பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று உலகியல் மேல் வைத்து உரைத்தாட்கத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது

பாலை பாடிய பெருங்கடுக்கோ


399. மருதம்


ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை-காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

பரணர்


400. முல்லை


'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ-
நோய் உழந்து உறைவியை நல்கலானே?

வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது

பேயனார்


401. நெய்தல்


அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!

வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது

அம்மூவன்.



Overview of Kurunthogai

1. Author: The precise authorship of "Kurunthogai" is not known, but it is attributed to poets of the Sangam period.

2. Content:

- Structure: "Kurunthogai" consists of 400 short poems or "kurunthogai," which are characterized by their brevity and depth.
- Themes: The poems explore various themes including love, nature, and the human condition. They often reflect on the intricacies of romantic relationships and the beauty of the natural world.

3. Themes and Subjects:

- Love and Relationships: Much of the content deals with the nuances of romantic love and relationships, capturing the emotions and experiences of lovers.
- Nature and Environment: The anthology describes the Tamil landscape, including its flora, fauna, and seasonal changes.
- Social and Cultural Context: The poems provide insights into the customs, traditions, and social norms of ancient Tamil society.

4. Significance:

- Literary Importance: "Kurunthogai" is highly valued for its poetic style and its role in the development of Tamil literature. It is considered a masterpiece of Sangam poetry.
- Cultural Insights: The work offers a window into the life and culture of the Sangam period, including social practices, rituals, and everyday life.

5. Language and Style:

- Poetic Form: The poems use classical Tamil poetic forms and meters. They are known for their concise yet evocative language.
- Imagery: The poems are rich in imagery and metaphor, often drawing on natural elements to convey emotional and philosophical themes.

Kurunthogai stands out as a significant contribution to Tamil literature, capturing the essence of the Sangam period's poetic and cultural landscape. Its exploration of love, nature, and human experience makes it a treasured piece of Tamil literary heritage.



Share



Was this helpful?