இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


குறள்மூலம்

குறள்மூலம் என்பது ஔவையார் என்பவரால் எழுதப்பட்ட ஒரு முக்கியமான தமிழ் நூலாகும். இது நீதி நூல்கள் என்பவற்றின் ஓரளவு விளக்கமாகக் கூறப்படுகிறது, குறிப்பாக திருக்குறள் என்றக் காவியத்தைக் குறிப்பதாகும்.

அறக்குறள்: "குறள்மூலம்" என்பது திருக்குறள் எனப்படும் நூலின் விளக்கமாகும். திருக்குறள் என்பது தமிழின் மிகப்பெரிய மற்றும் அடிப்படையான நீதி நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பொருள்: இந்த நூல் வாழ்வின் ஒழுக்கம், அறம், நீதிமுறை மற்றும் பண்புகளைப் பற்றிய பயனுள்ள கருத்துக்களை வழங்குகிறது. இதன் மூலம் கற்றுக் கொள்ளும் வாழ்க்கை நெறிகள் மற்றும் ஒழுக்கங்களை அவ்வையார் எளிமையாகவும் ஆழமாகவும் விளக்குகிறார்.

ஔவையார்: தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர், அவர் தன் கல்வியையும் பக்தியையும் கொண்டு, தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்தமான கருத்துகளை வழங்குகிறார்.

குறள்மூலம் என்பது திருக்குறள் என்பவரின் உயர்ந்த மற்றும் முக்கியமான வாழ்க்கை நெறிகளை விளக்குகிறது, மற்றும் நெறி, அறம், வாழ்க்கை முறைகள், தர்மம் மற்றும் ஒழுக்கங்களை எடுத்துரைக்கும்.

Kuralmoozham is a significant Tamil text authored by Avvaiyar. It is considered an explanatory work related to ethical literature, particularly the Thirukkural.

Thirukkural: The term "Kuralmoozham" can be seen as an elaboration or interpretation of the principles found in Thirukkural, which is one of the most esteemed and foundational ethical texts in Tamil literature.

Content: This text provides valuable insights into the ethics of living, righteousness, justice, and virtues. Through this, Avvaiyar elucidates the principles of proper conduct, morality, and ethical living in a simple yet profound manner.

Avvaiyar: A revered Tamil poet and philosopher, Avvaiyar is known for her deep and insightful contributions to Tamil literature, especially her works on ethics and devotion.

Kuralmoozham aims to elaborate on the teachings of Thirukkural, providing explanations and guidance on moral principles, righteousness, and the proper way of living.

குறள்மூலம்

1. வீட்டுநெறிப்பால்

1.1 பிறப்பினிலைமை.
1.2 உடம்பின்பயன்.
1.3 உள்ளுடம்பினிலைமை.
1.4 நாடிதாரணை.
1.5 வாயதாரணை.
1.6 அங்கிதாரணை.
1.7 அமுததாரணை.
1.8 அர்ச்சனை.
1.9 உள்ளுணர்தல்.
1.10 பத்தியுடைமை.

2. திருவருட்பால்.

2.1 அருள்பெறுதல்.
2.2 நினைப்புறுதல்.
2.3 தெரிந்துதெளிதல்.
2.4 கலைஞானம்.
2.5 உருவொன்றிநிற்றல்.
2.6 முத்திகாண்டல்.
2.7 உருபாதீதம்.
2.8 பிறப்பறுதல்.
2.9 தூயவொளிகாண்டல்.
2.10 சதாசிவம்.

3. தன்பால்.

3.1 குருவழி.
3.2 அங்கியிற்பஞ்சு.
3.3 மெய்யகம்.
3.4 கண்ணாடி.
3.5 சூனியகாலமறிதல்.
3.6 சிவயோகநிலை.
3.7 ஞானநிலை.
3.8 ஞானம்பிரியாமை.
3.9 மெய்ந்நெறி.
3.10 துரியதரிசனம்.
3.11 உயர்ஞானதரிசனம்.

ஆக அதிகாரம் 31-க்கு குறள் - 310.

நேரிசைவெண்பா.

நல்லோர் பிறர்குற்ற நாடார் நலந்தெரிந்து
கல்லார் பிறர்குற்றங் காண்பரோ-அல்லாத
என்போல்வா ரென்னை யிகழ்வரோ வென்கவிக்குப்
பின்பாரோ காண்பார் பிழை.

ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
காதலிரு வர்க்குங் கருத்தொருமித்-தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

ஒளவைகுறள்.

வீட்டுநெறிப்பால்

1.1 பிறப்பினிலைமை.

ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன். (1)

பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு. (2)

ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு. (3)

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
உருவத்தா லாய பயன். (4)

நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவையிரண் டொன்று விண். (5)

மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. (6)

மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலுந் திகழ்சத்தி யாறு. (7)

தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக ளேழு. (8)

மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. (9)

இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. (10)

1.2 உடம்பின்பயன்.

உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
உடம்பினி லுத்தமனைக் காண். (11)

உணர்வாவ தெல்லா முடம்பின் பயனே
யுணர்க வுணர் வுடையார். (12)

ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். (13)

பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. (14)

உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னியதே யாம். (15)

மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. (16)

ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. (17)

உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. (18)

உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. (19)

அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். (20)

1.3 உள்ளுடம்பினிலைமை.

கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம்
உற்றுடம்பா லாய வுணர்வு. (21)

வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
உள்ளுடம்பி னாய வொளி. (22)

சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்
பென்றுங் கெடாத திது. (23)

வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்
ஒருபயனைக் காட்டு முடம்பு. (24)

அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு. (25)

நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு. (26)

உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ளவுடம் பாகி விடும். (27)

பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு. (28)

வாயுவினா லாய வுடம்பின் பயனே
ஆயுவி னெல்லை யது. (29)

ஒன்பது வாசலு மொக்க வடைத்தால்
அன்பதி லொன்றா மரன். (30)

1.4 வீட்டுநெறிப்பால்.

நாடிதாரணை.

எழுபத்தீ ராயிர நாடியவற்றுள்
முழுபத்து நாடி முதல். (31)

நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு. (32)

உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து. (33)

காலொடு கையி னடுவிடைத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து. (34)

ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு. (35)

மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு. (36)

உந்தி முதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை. (37)

நாடிக ளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து. (38)

நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு. (39)

அறிந்தடங்கி நிற்குமந் நாடிக டோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். (40)

1.5 வாயுதாரணை.

மூலத்தினிற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். (41)

இடை பிங்கலைக ளிரேசக மாற்றில்
அடையு மரனா ரருள். (42)

அங்குலியால் மூடி முறையா லிரேசிக்கில்
பொங்குமாம் பூரகத்தி னுள். (43)

எண்ணிலி யூழி யுடம்பா யிரேசிக்கில்
உண்ணிலைமை பெற்ற துணர்வு. (44)

மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு
உயர்ப்பின்றி யுள்ளே பதி. (45)

இரேசிப்பது போலப் பூரித்து நிற்கில்
தராசுமுனை நாக்கதுவே யாம் (46)

கும்பகத்தி னுள்ளே குறித்தரனைத் தானோக்கில்
தும்பிபோ னிற்குந் தொடர்ந்து. (47)

இரேசக பூரக கும்பக மாற்றில்
தராசுபோ னிற்குந் தலை. (48)

வாயுவழக்க மறிந்து செறிந் தடங்கில்
ஆயுட் பெருக்க முண்டாம். (49)

போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்கும்
தாழ்கின்ற வாயு வடக்கு. (50)

1.6 அங்கிதாரணை.

அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கில்
பந்தப் பிறப்பறுக்க லாம். (51)

உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூறில்
கள்ளமல மறுக்க லாம். (52)

எரியுந் தழல்போல வுள்ளுற நோக்கில்
கரியுங் கனலுருவ மாம். (53)

உள்ளங்கி தன்னை யொருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து. (54)

உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சில்
அந்தி யழலுருவ மாம். (55)

ஐயைந்து மாய வகத்து ளெரிநோக்கில்
பொய்யைந்தும் போகும் புறம். (56)

ஐம்பது மொன்று மழல்போலத் தானோக்கில்
உம்பரொளி யாய் விடும். (57)

தூண்டுஞ் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறைமுடிக்க லாம். (58)

உள்ளத்தா லங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து. (59)

ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு. (60)

1.7 அமுததாரணை.

அண்ணாக்குத் தன்னை யடைத்தங் கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம். (61)

ஈரெண் கலையி னிறைந்த வமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து. (62)

ஓங்கார மான கலசத் தமிர் துண்ணில்
போங்கால மில்லை புரிந்து. (63)

ஆனகலசத் தமிர்தை யறிந் துண்ணில்
போனகம் வேண்டாமற் போம். (64)

ஊறு மமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம். (65)

ஞானவொளி விளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவயோகி யாம். (66)

மேலை யமிர்தை விலங்காமற் றானுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம். (67)

காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில்
ஞான மதுவா நயந்து. (68)

எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம். (69)

நிலாமண்டபத்தி னிறைந்த வமிர் துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல். (70)

1.8 அர்ச்சனை.

மண்டலங்கண் மூன்று மருவ வுடனிருத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு. (71)

ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை யர்ச்சித்துப்
பூசனைசெய் துள்ளே புணர். (72)

உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. (73)

ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு. (74)

பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. (75)

விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு. (76)

பிண்டத்தி னுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு. (77)

மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு. (78)

பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு. (79)

உள்ளத்தி னுள்ளே யுறப்பார்த்தங் கொண்சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. (80)

1.9 உள்ளுணர்தல்.

எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு. (81)

பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம். (82)

எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான். (83)

முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். (84)

காயக் கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல். (85)

பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல். (86)

பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். (87)

ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு. (88)

ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம். (89)

காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன். (90)

1.10 பத்தியுடைமை.

பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூல மது. (91)

பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால். (92)

அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. (93)

பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத்தேடு. (94)

கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி. (95)

நல்லானைப் பூசித்து நாதனென வுருகில்
நில்லாதோ வீச னிலை. (96)

அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல். (97)

ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள். (98)

மெய்ம்மயிர் கூர விதிர்ப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று. (99)

செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல். (100)

வீட்டுநெறிப்பால் முற்றிற்று.

2. திருவருட்பால்

2.1 அருள்பெறுதல்.

அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம். (101)

இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளுஞ் சிவசிந்தை யாம். (102)

வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள். (103)

ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம். (104)

உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னு மருள்பெற்றக் கால். (105)

எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லை யருள் பெற்றக்கால். (106)

சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும் (107)

மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும்
ஈசனருள் பெற்றக்கால். (108)

ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான வொளி. (109)

ஒவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும். (110)

2.2 நினைப்புறுதல்.

கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை. (111)

குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார். (112)

ஒர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொருளே யாம். (113)

சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு. (114)

அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து. (115)

நிற்றம் நினைந்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில்
முற்று மவனொளியே யாம். (116)

ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு. (117)

இராப்பக லன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம். (118)

மிக்க மனத்தால் மிகநினைந்து சிந்திக்கில்
ஒக்கச் சிவனுருவ மாம். (119)

வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந்தெங்குங்
காண்டற் கரிதாஞ் சிவம். (120)

2.3 தெரிந்துதெளிதல்.

தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம். (121)

உண்டில்லை யென்னு முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம். (122)

ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம். (123)

எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். (124)

ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம். (125)

ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி. (126)

தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம். (127)

எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவர்கள்
நல்லுலக நாத னடி. (128)

உலகத்திற் பட்ட வுயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து. (129)

உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம். (130)

2.4 கலைஞானம்.

சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது. (131)

அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு. (132)

அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு. (133)

ஈசனோ டொன்றி லிசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம். (134)

தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து. (135)

கூடக மான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து. (136)

வீடகமாக விழைந் தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று. (137)

பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து. (138)

இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம். (139)

சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு. (140)

2.5 உருவொன்றிநிற்றல்.

எள்ளகத்தே தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி. (141)

பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து. (142)

கரும்பினிற் கட்டியுங் காய்ப்பலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு. (143)

பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கும்
வழுத்தினா லீச னிலை. (144)

தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது. (145)

வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளேநிற்கு முணர்வு. (146)

அச்ச மாங்கார மகத்தடக்கினாற் பின்னை
நிச்சயமா மீச னிலை. (147)

மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு. (148)

நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்குந் தானா மவன். (149)

ஓசையி னுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து. (150)

2.6 முக்திகாண்டல்

மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது. (151)

வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில். (152)

உருவமொன் றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். (153)

தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. (154)

பெண்ணா ணலியென்னும் பேரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு. (155)

அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம். (156)

துனிமுகத்துக் காதியாத் துன்னறி வின்றி
அணிதா ரிரண்டு விரல் (157)

மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண்டங் காதி நிலை. (158)

தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு. (159)

உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு. (160)

2.7 உருபாதீதம்.

கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு. (161)

பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு. (162)

உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு. (163)

கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு. (164)

அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு. (165)

நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. (166)

குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு. (167)

பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு. (168)

பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றியிரு. (169)

ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு. (170)

2.8 பிறப்பறுதல்.

தன்னை யறியு மறிவுதனைப் பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (171)

அறம் பாவமாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து. (172)

சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து. (173)

உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். (174)

நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது. (175)

உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். (176)

தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (177)

மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். (178)

விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு. (179)

சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு. (180)

2.9 தூயவொளிகாண்டல்.

தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக்காற் றூய வொளி. (181)

தெளிவாய தேச விளக்கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம். (182)

மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். (183)

பளிங்கு வலம்புரி பானிரத்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி. (184)

சங்கு நிறம்போற் றவள வொளிகாணில்
அங்கையி னெல்லியே யாம். (185)

துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து. (186)

மின்மினி போன்ற விளக்காகத் தான்றோன்றில்
அன்னப் பறவையே யாம். (187)

உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி. (188)

பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி. (189)

ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதியவ னுருவ மாம். (190)

2.10 சதாசிவம்.

பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். (191)

விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். (192)

ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம். (193)

வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம். (194)

எண்ணிறைந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். (195)

ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். (196)

மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்குங்
காலமாய் நிற்குஞ் சிவம். (197)

மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். (198)

தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன். (199)

நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம். (200)

திருவருட்பால் முற்றிற்று.

3. தன்பால்

3.1 குருவழி.

தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன். (201)

சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம். (202)

குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். (203)

தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம். (204)

நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம். (205)

நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லை யில்லாத சிவம். (206)

நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப் பிரியாது சிவம். (207)

ஒன்றி லொன்றாத மனமுடையா ருடல்
என்று மொன்றாது சிவம். (208)

நாட்டமில்லாத விடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம். (209)

பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லா அல்
அஞ்ச லென்னாது சிவம். (210)

3.2 அங்கியிற்பஞ்சு.

அங்கியிற் பஞ்சுபோ லாகாயத்தே நினையில்
சங்கிக்க வேண்டா சிவம். (211)

மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம். (212)

(2)

நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்ச லென்னாது சிவம். (213)

பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். (214)

தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான். (215)

அசபையறிந் துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு. (216)

இமையாத நாட்டத் திருந் துணர்வாருக்
கமையாத வானந்த மாம். (217)

துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு. (218)

மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும். (219)

சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து. (220)

3.3 மெய்யகம்.

மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி. (221)

கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு. (222)

உண்டுபசி தீர்ந்தாற் போலுடம் பெல்லா அங்
கண்டுகொள் காதல் மிகும். (223)

உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன். (224)

தோன்றாத தூயவெளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு. (225)

வாக்குமனமு மிறந்த பொருள் காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம். (226)

கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி. (227)

ஆனந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு. (228)

மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம். (229)

விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி. (230)

3.4 கண்ணாடி.

கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி. (231)

அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை யுடம்பு. (232)

நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு. (233)

கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு. (234)

சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு. (235)

ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன். (236)

வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு. (237)

நெற்றிக்கு நேரே நிறைந்தவொளி காணில்
முற்று மழியா துடம்பு. (238)

மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு. (239)

சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு. (240)

3.5 சூனியகாலமறிதல்.

நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணையா னாகு முடம்பு. (241)

உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார். (242)

புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு. (243)

அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டு முடம்பு. (244)

ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு. (245)

அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு. (246)

தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினில்
மாயாது பின்னை யுடம்பு. (247)

தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு. (248)

ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு. (249)

பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு. (250)

3.6 சிவயோகநிலை

அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல். (251)

உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி
விண்ணோடு மெள்ள விடு. (252)

மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து. (253)

இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம்பத் தாறு புகும். (254)

கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான். (255)

முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. (256)

ஈரைந் தெழுபத் தீராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல். (257)

வாச லீரைந்து மயங்கிய வாயுவை
யீசன்றன் வாசலி லேற்று. (258)

தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய். (259)

ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப்
பேதியா தோது பினை. (260)

3.7 ஞானநிலை.

தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை. (261)

தற்புருட மாமுகமேற் றாரகைதன் மேலே
நிற்பது பேரொளி நில். (262)

ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பினை. (263)

கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது. (264)

மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. (265)

காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான். (266)

பொன்னொடு வெள்ளி யிரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம். (267)

நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக்கி லொன்றே யுள. (268)

பேசா வெழுத்துடன் பேசு மெழுத்துறில்
ஆசான் பரனந்தி யாம். (269)

அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார். (270)

3.8 ஞானம்பிரியாமை.

பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம். (271)

சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. (272)

வெளியில் விளைந்த விளவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும். (273)

மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை. (274)

குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு. (275)

சுந்தரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம். (276)

தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார். (277)

ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை. (278)

அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர். (279)

இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத்தனன் குரு பார். (280)

3.9 மெய்ந்நெறி.

செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில். (281)

பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர். (282)

இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல
நமக்குட் சிவன்செயல் நாடு. (283)

குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன். (284)

காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு. (285)

மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம். (286)

எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர். (287)

அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார். (288)

அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக வுணர். (289)

அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி. (290)

3.10 துரியதரிசனம்.

வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள். (291)

சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாரு மினிது பயன். (292)

மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண். (293)

மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல். (294)

தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான். (295)

வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். (296)

அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான். (297)

அண்டத்திலு மிந்த வாறென் றறிந்திடு
பிண்டத்திலு மதுவே பேசு. (298)

ஏறு மதிய மிறங்கி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள். (299)

உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம். (300)

3.11 உயர்ஞானதரிசனம்.

கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா. (301)

வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம். (302)

செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில். (303)

வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி. (304)

வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்து பேராது செயல். (305)

இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான். (306)

அர சறியாம லவன்பே ருரைத்துத்
தரைதனை யாண்ட சமன். (307)

கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். (308)

திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப்பா மென்று கொள். (309)

கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கிற் பரமவை வீடு. (310)


ஔவைகுறள் முற்றுப்பெற்றது.



Share



Was this helpful?