Digital Library
Home Books
Bala Kanda is the first book of the Ramayana. This section details the birth of Lord Rama and the events of his early childhood.
புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கங்கையின் உப நதி சராயு நதியாகும். கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் அனைவரும் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன், மந்தாதா, சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. அயோத்ய என்ற சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்று பொருள். அக்காலத்தில் இந்த நகரம் யாரிடமும் எவ்விதத்திலும் தோல்வி அடைந்தது இல்லை.
சூர்ய குலத்து அரசர்களுள் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப்பிறந்த தசரத சக்கரவரத்தி கோசல ராஜ்யத்தை ஆண்டுவந்தார். தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்தி ஆண்சிங்கத்தை ஒத்த உடல் வலிமையை பெற்றிருந்தான். இவருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.
மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்புகள் அனைத்தும் தசரத சக்கரவரத்தியிடம் இனிது அமைந்திருந்தது. நெடுங்காலம் செங்கோல் தாங்கி ஆட்சி புரிந்துவந்தார். அவர் ஆட்சியில் தருமம் தழைத்தோங்கியது. தடுக்க முடியாத பாங்கில் போர் வாய்த்த போது அதை தசரத சக்கரவரத்தி திறமையுடன் சமாளித்தார். தேவர்களின் நலனுக்காக அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த சிறப்பை தசரத சக்கரவரத்தி பெற்றிருந்தார். போர் இல்லாத காலத்தை குடிமக்களை நலனுக்காக நன்கு பயன் படுத்திக்கொண்டார். தம்முடைய குடிமக்களை தந்தையின் பாங்கில் நன்கு பராமரித்து வந்தார். குடும்ப காரியம் ஆனாலும் நாட்டிற்கான காரியம் ஆனாலும் சான்றோர்களையும் முனிவர்களையும் அணுகி அவரகளுடன் நன்கு ஆலோசித்து அதன் பிறகே முடிவு செய்வார். இவருக்கு உதவியாய் இருந்த மந்தரிகள் அனைவரும் ஆட்சித்திறமை வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.
நான்கு வேதங்களைக்கொண்டு வேதியர்கள் இயற்றும் வேள்விகளில் இருந்த வந்த புகைகள் வானத்தில் மேகக்கூட்டம் போல் காட்சியளிக்கும். நாட்டில் பருவமழை சரியான அளவிற்கு பொழிந்து நாடு செழிப்புடன் இருந்தது. குடிமக்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்திலும் நன்கு நிலை நின்றவர்களாக இருந்தார்கள். குடிமக்கள் நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் ஊக்கம் மிகப்படைத்த உழைப்பாளிகளாக இருந்தார்கள். அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தம் குடிகொண்டு திருப்தி நிறைந்திருந்தது. தசரத சக்கரவரத்தியின் ஆட்சியில் மனிதர்களின் முயற்சியும் தெய்வ சம்பத்தும் ஒன்று கூடி பூலோக வைகுண்டம் போல் கோசல ராஜ்யம் காட்சி கொடுத்தது. கோசல நாட்டின் வளம் காரணமாக வறுமை என்பதே இல்லை. ஆகையால் தானதர்மங்களும் தனியாக இல்லை. அனைவரும் சத்தியத்தை கடைபிடித்து பொய் பேசாத காரணத்தால் உண்மை என்ற ஒன்று தனியாக இல்லை. நாட்டில் கள்வர்களே இல்லாத காரணத்தால் காவலர் என்ற ஒருவர் தேவையற்றவராக இருந்தார்.
தசரதமன்னனுடைய வாழ்வில் அனைத்து சம்பத்துக்களும் இருந்தாலும் அவருடைய மனதில் குறை ஒன்று இருந்தது. அவருக்கு திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் மகப்பேறு வாய்க்கவில்லை. அதைப்பற்றிய துயரம் அவர் மனதில் அறித்துக்கொண்டிருந்தது. இந்த குறையை முன்னிட்டு அனைத்து மகிழ்ச்சிகளும் பயனற்றவைகளாக தசரத மன்னனுக்கு தெரிந்தது. மகப்பேறு ஒன்றை நாடி அவரின் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.
அயோத்தி மாநகரில் தசரதன் அரசவையில் இருந்தான் இப்போது குலகுருவான வசிஷ்டர் அரசவைக்கு வந்தார். அவரை அடிபணிந்த தசரதன் வழிவழியாக எங்கள் குலத்திற்கு தாயும் தந்தையாய் உயர்ந்த கடவுளாய் இருப்பவர் நீங்களே என்று போற்றி வணங்கி தக்க மரியாதை தந்து வரவேற்று அவருக்குத்தக்க ஆசனம் தந்து அமரவைத்தான். பின்பு அவரிடம் எனக்கு முன்னால் தோன்றிய சூரிய வம்சத்து அரசர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற்று அரசாட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தனர். நான் இவ்வுலகை அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தேன். பெருந்தவம் புரியும் முனிவர்கள் வேள்விகள் செய்யும் அந்தணர்கள் வரை எவ்வித குறையுமில்லாமல் நலமுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனக்குப்பின் இந்த நாட்டை ஆள வாரிசு இல்லை. ஆகையால் அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் சிக்கக்கூடும் என்று என் மனம் மிகவும் வருந்துகிறது. எனக்கு வாரிசு கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கூறவேண்டும் என்று வசிஷ்டரிடம் கூறினான். தசரதர் கூறிய அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் பிற்காலத்தில் தசரதருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தன் தவவலிமையால் அறிந்துகொள்ள கண்களை முடி பின்வருவனவற்றை கண்டார்.
இலங்கையில் வாழும் அசுர அரசனான ராவணன் தேவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்துவந்தான். மனிதனைத்தவிர எந்த மூர்த்தியாலும் கொல்லமுடியாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றிருந்தான். தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பத்தை தாங்க முடியாமல் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவும் தேவர்களுடன் சேர்ந்து வைகுண்டத்திற்கு சென்றனர். திருமாலிடம் தங்கள் குறைகளை முறையிட்டு தங்களை காக்குமாறு தேவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைக்கேட்ட திருமால் தான் தசரத சக்கிரவர்த்திக்கு மகனாக பிறக்கப்போவதாகவும் ஆதிஷேசன், சங்கு, சக்கரம் ஆகியவை எனக்கு தம்பிகளாக பிறக்கப்போகிறார்கள். விரைவில் அரக்கர்களை அழிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட வசிஷ்டர் தசரதனிடம் வருத்தப்படவேண்டாம். புத்திர காமேஷ்டி என்னும் வேள்வியை குறையின்றி செய்தால் உன் கவலை தீரும். ஏழு உலகையும் காக்கும் வலிமையுள்ள மகன் பிறப்பான் என்றார்.
இதைக்கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைந்து வசிஷ்டரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். புத்திர காமேஷ்டி வேள்வியை எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுங்கள். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றான்.
புத்திர காமேஷ்டி யாகத்தை முறையாக செய்வது மிகவும் கடினமானது. கிரியா என்ற செயல்கள் அதில் அதிகமாக உள்ளது. இம்மியளவு யாகத்தில் தவறு செய்தாலும் யாகம் தனது பலனை தராது. அதற்குரிய நியதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் வசிஷ்டர். இதனை கேட்ட தசரதர் இந்த யாகத்தை முறையாக யாரால் செய்ய இயலும் என்று கேட்டார். காசிபர் என்னும் முனிவருக்கு விபண்டகர் என்னும் முனிவர் மகன். அவருக்கு சிவபெருமானே புகழும்படி சகலகலைகளிலும் கற்றுணர்ந்த புதல்வன் சிருங்கரிஷி என்பவர் உண்டு. அவரை இங்கு வரவழைத்து இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை அவரது சொல்படி நடத்துவாயாக என்று வாழ்த்தினார் வசிஷ்டர்.
உரோமபதன் என்ற அரசனின் நாட்டில் சிருங்கரிஷி இருப்பதை அறைந்த தசரதன் அவரை முறையாக தன் நாட்டிற்கு அழைத்துவர தனது மந்திரி சுமத்திரனோடு சென்றார். தன் நாட்டிற்கு தசரதர் வருவதை அறிந்த உரோம்பதன் நாட்டின் எல்லைக்கே சென்று தசரதனை வரவேற்று விருந்தளித்தான். தசரதர் வந்த காரணத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட உரோம்பதன் தானே சிருங்கரிஷியை அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக வாக்களித்தார். தசரதர் சென்ற பின் சிருங்கரிஷி இருக்கும் இடத்திற்கு வந்த உரோமபதன் அவருக்கு உபசாரங்கள் செய்தான். இதனை கண்ட சிருங்கரிஷி வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். தாங்கள் தமக்கு ஒரு வரம் தர வேண்டும் என்று உரோமபதன் கேட்டுக்கொண்டான். தந்தோம் என்ன வேண்டும் கேள் என்றார். அசுரர்களால் துன்பப்பட்ட இந்திரனுக்கு உதவி செய்த தசரதரின் நாட்டிற்கு சென்று அவருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் உரோமபதன். வரம் தந்தோம் உடனே கிளம்புவோம் என்ற சிருங்கரிஷி உரோம்பதனுடன் அயோத்தி நோக்கி கிளம்கினார்.
உரோம்பதன் அனுப்பிய ஒற்றன் சிருங்கரிஷி அயோத்திநகர் வருவதை தசரதனுக்கு தெரியப்படுத்தினான். அதனை கேட்ட தசரதர் அயோத்தி நகருக்கு மூன்று யோசனை தூரம் (ஒரு யோசனை தூரம் என்பது தோராயமாக 15 கிமீ தூரம் ஆகும்) சென்று முரசு வாத்தியங்கள் ஒலிக்க மலர்கள் தூவி முனிவரின் அடிபணிந்து தனது வரவேற்றான். அரண்மணைக்கு வந்த சிருங்கரிஷி தசரதரை பார்த்து வசிஷ்டரை குலகுருவாக கொண்ட உன்னே போன்ற அரசர்கள் யாரும் இல்லை என்று வாழ்த்தி யாகத்திற்கு செய்ய வேண்டிய நியதிகளையும் ஒழுக்கங்களையும் விரதங்களையும் கூறினார். அவரின் ஆணைக்கு உப்பட்ட தசரதரும் அவரது மனைவியர்களும் அதற்கான விரதங்களையும் நியதிகளையும் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
யாகம் செய்யும் யாக பூமியை உழுது விதிப்படி திருத்தியமைத்தார்கள். யாக சாலையில் ஆகவானீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்று விதமான யாக குண்டங்கள் கட்டப்பட்டன. வேதம் ஓத யாக குண்டங்களில் புத்திர காமேஷ்டி யாகத்திற்கு தேவையான ஆகுதி பொருட்கள் அனைத்தும் நெய்யுடன் போடப்பட்டது. யாகம் தொடர்ந்து 12 மாதங்கள் நடந்தது. யாகம் உச்சநிலை அடைந்ததும் யாக நெருப்பில் இருந்து பிராகாசமூர்த்தி ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.
பிராகசமூர்த்தியிடம் பெற்ற கலசத்தில் இருந்த அமிர்த நீரை மூன்று மனைவிகளுக்கும் கொடுக்குமாறு சிருங்கரிஷி தசரதரிடம் கட்டளையிட்டார். தசரதர் கலசத்தில் இருந்த அமிர்தத்தில் பாதியை முதல் மனைவி கௌசலைக்கும் மீதி இருந்த பாதியை கைகேயி, சுமத்ரைக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்தார். மூவரும் அருந்திய பிறகு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறிதளவு அமிர்தத்தை மீண்டும் கௌசலைக்கு கொடுத்தார். அப்போது சங்கு முரசுகள் முழங்க ஒரு வருடமாக நடைபெற்ற யாகம் இனிது நிறைவேறியது. யாகத்தில் ஈடுபட்ட அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் பொன் பொருள் பட்டாடைகள் கொடுத்து அனைவரையும் அனுப்பிவைத்தார். தசரதர் வசிஷ்டரையும் சிருங்கரிஷியையும் வணங்கி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.
சில நாட்கள் கழித்து மகாராணிகள் மூவரும் கருத்தரித்தனர். அந்த நேரத்தில் மூவரும் இறைவனுக்கு வழிபாடுகள் செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் சென்றது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி கடக ராசியில் புனர்பூச நடசத்திரத்தன்று கௌசலைக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயிக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் சுமத்ரா தேவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். தமக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ந்த தசரதன் ஏழு ஆண்டுகளுக்கு குடிமக்கள் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று அறிவித்தார். நாட்டின் தானிய கிடங்குகளையும் கருவூலத்தையும் திறந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார். அரண்மனையில் அன்னதானமும் கோ தானமும் வஸ்திரதானமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 3 வேளைகளிலும் கோவில்களில் அலங்கார ஆராதனைகள் செய்ய தசரதர் உத்தரவிட்டார். இளவரசர்கள் பிறந்ததை நாட்டு மக்கள் 12 நாட்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வசிஷ்ட முனிவரை தசரதர் அழைத்தார். ஓவியத்தின் அழகைப்போல் கரிய திருமேனியுடைய கௌசலையின் குழந்தைக்கு ராமன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். விரதத்தை கடைபிடித்து மெய்வழியைக்காட்டக்கூடிய கைகேயிக்கு பிறந்த குழந்தைக்கு பரதன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். சுமத்ரைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை தேவர்கள் வாழவும் அசுரர்கள் அழியவும் யாராலும் வெல்ல முடியாத புகழுடைய இக்குழந்தைக்கு லக்குவனன் என்று பெயரிடுவதாக அறிவித்தார் வசிஷ்டர். முத்து பிராகசிப்பது போல முகத்துடனும் தீமையை அழிக்கும் தகுதி பெற்ற இரண்டாம் குழந்தைக்கு சத்ருக்கன் என்றும் பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார்.
ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள். குழந்தைகள் நால்வருக்கும் ஐந்து வயது ஆனதும் தசரதர் வசிஷ்டரிடம் சென்று நான்கு குமாரர்களுக்கும் வேதங்கள் மற்றும் எல்லாவிதமான கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான்கு குழந்தைகளும் கல்வியுடன் யானை குதிரை தேர் பயிற்சிகளுடன் வில் பயிற்சியும் வசிஷ்டரிடம் பயின்றார்கள். ராமனும் லட்சுமணனும் ஒருவரையொருவர் பிரியாமல் காடு மலை நதி என எங்கு சென்றாலும் சேர்ந்தே இருந்தார்கள். அதுபோலவே பரதனும் சத்ருக்கனனும் சேர்ந்தே இருந்தார்கள். இக்காரணத்தால் மக்கள் அனைவரும் ராம லட்சுமணன் என்றும் பரதன் சத்ருக்கனன் என்றும் அழைக்க ஆரம்பித்தார்கள். நால்வரும் கௌசலை, கைகேயி, சுமித்ரை மூவரையும் பாகுபாடு பார்க்காமல் தங்கள் தாய்போல இஷ்ட தெய்வம் போல் வணங்கி வந்தார்கள். ராமர் தம்பிகள் மூவரிடமும் தந்தைக்கு நிகராக நடந்து கொண்டார். தம்பிகள் மூவரும் ராமனை தந்தைக்கு நிகராகயாகவே கருதி மரியாதை செய்தார்கள். ராமருக்கு 12 வயது முற்றுப்பெற்றது.
ஒருநாள் அரசவையில் தசரதர் இருக்கும் போது விசுவாமித்ர மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தசரதர் அவருக்கு ஏற்ற சிம்மாசனத்தில் அமர வைத்து மரியாதை செய்து வணங்கினார். ராஜ்யத்தில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் ஆணையிடுங்கள் அதனை நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கூறினார். அதற்கு விஸ்வாமித்ரர் உலக நன்மைக்காக உத்தமயாகம் ஒன்று செய்யப்போகின்றேன். யாகத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு பாழ்படுத்த மாரீசன் சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தவவலிமையால் அவர்களை என்னால் சுலபமாக அழிக்க முடியும் ஆனால் மேலான லட்சியம் ஒன்றின் காரணமாக என் தவவலிமையால் அவர்களை அழித்து தவவலிமையை இழக்க விரும்பவில்லை. யாகம் செய்யும் போது காவல் காக்க போர் வீரன் ஓருவன் தேவைப்படுகிறான். சாமான்ய வீரனால் காவல் காக்க முடியாது. யாகம் முடியும் வரை 10 நாட்கள் உன்னுடைய புதல்வர்களில் ராமனை அனுப்பிவைப்பாயாக ராமனுக்கு ஒன்றும் நேராதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதனை கேட்ட தசரதர் நிலைகுழைந்து போனார். சிறிது நேரம் அமைதியான அவர் தடுமாற்றத்துடன் விஸ்வாமித்ரருக்கு பதில் கூறினார்.
ராமர் மிகவும் சிறியவன். ராமனுக்கு போர் செய்த அனுபவம் ஒன்றும் இல்லை. பாலகனான அவன் அரக்கர்களை எவ்வாறு எதிர்க்க இயலும். ஆகவே நானே தங்களுடன் வந்து யாகம் முடியும் வரை காவல் காத்து அரக்கர்களை அழிக்கின்றேன் என்றார். இதனை கேட்ட வசிஷ்டர் இந்திரனுக்கு நீ உதவி செய்வதற்காக அசுரர்களை அழித்து அவர்களை வெற்றி கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது இந்த அரக்கர்களை அழிக்க உன்னால் இயலாது தசரதா. இது ராமானால் மட்டுமே முடியும். உன்னுடைய புதல்வர்களுக்கு வரும் பெருமைகளையும் சிறப்புகளையும் தடுத்துவிடாதே. விஸ்வாமித்ரருடன் உன் புதல்வர்களை அனுப்புவை அவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.
ராமன் நான்கு சகோதரர்களிலும் தர்மத்தை கடைபிடிப்பதில் மூத்தவனாக இருக்கிறான். இவன் மீது மிக அதிகமாக பிரியம் வைத்திருக்கிறேன். நான் எப்படி இந்த குழந்தையை தருவேன் என்று மீண்டும் மீண்டும் அனுப்ப மறுத்து யாகத்தை பாழ்படுத்த நினைக்கும் மாரீசன் சுபாகு என்ற அரக்கர்கள் யார் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கேட்டார். அவர்கள் ராவணனுடைய ஆட்கள் என்று விஸ்வமித்ரர் சொன்னதும் அப்படியென்றால் நான் ராமனை நிச்சயம் அனுப்பமாட்டேன் என்று உறுதியாக கூறினார் தசரதர். இதை கேட்ட விஸ்வாமித்ரர் உன்னுடைய ரகு குலத்தை பற்றி கூறுகிறேன் கேள் என்று சொல்லி ஆரம்பிக்கிறார்.
கௌத்ஸர் என்று ஒரு ரிஷி தனது குரு குல கல்வி முடிந்தவுடன் தனது குருவான வரதந்துவிடம் தங்களுக்கு குரு தட்சணை என்ன தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு குரு நீ நன்றாக படித்தாய் அதுவே எனக்கு திருப்தி அதுவே போதும் என தட்சணை வாங்க மறுத்து விட்டார். அனால் கௌத்ஸர் தன் குருவிடம் தாங்கள் எதுவேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். குருவும் பதினான்கு கோடி வராகன் கொண்டுவா என்று ஒரு வார்த்தை கூறிவிட்டார். உடனே கௌத்ஸர் ரகு மகாராஜாவிடம் கேட்கலாம் என்று வருகிறார். இந்த ரகு மகாராஜா அப்பொழுது தான் உலகத்தையெல்லாம் வெற்றி கொண்டு விஸ்வஜித் என்கிற யாகம் செய்து வெற்றி கொண்ட அனைத்து செல்வத்தையும் தானம் செய்துவிட்டார். அவரிடம் எதுவும் இல்லை. அதனை கண்ட கௌத்ஸர் திரும்ப செல்ல முனைந்தார். இதனை கண்ட ரகு மகராஜா அவரிடம் என்ன வேண்டும் தங்களுக்கு அரண்மனை வரை வந்துவிட்டு திரும்ப செல்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு கௌத்ஸர் எனக்கு பதினான்கு கோடி வராகன் எனக்கு தேவைப்படுகிறது அதை தங்களிடம் யாசிக்கலாம் என்று வந்த பொழுது தாங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டீர்கள் என்பதை அறிந்து திரும்பப் போகிறேன் என்கிறார்.
அதற்கு ரகு மகாராஜா இன்று ஒருநாள் இங்கு தங்குங்கள் நான் நாளை நீங்கள் கேட்டதை தருகிறேன் என்று கூறி கௌத்ஸரை தங்க வைக்கிறார். நாளை நாம் குபேரனை படையெடுப்போம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உறங்க சென்றார். இதனை அறிந்த குபேரன் ரகு மகாராஜா படையெடுத்தால் அவரை எதிர்ப்பது கடினம். இந்திரனுடைய வஜ்ராயுதமே ரகுவை ஒன்றும் செய்யமுடியவில்லை நாம் என்ன செய்ய முடியும் என்று பதினான்கு கோடி வராகனுக்கு மேலாகவே இரவோடு இரவாக ரகுவின் கஜானாவில் மழையாக பொழிந்துவிட்டார். அடுத்த நாள் காலையில் இதை அறிந்த ரகு மகாராஜா கௌத்ஸரிடம் இவை எல்லாவற்றையும் எடுத்துகொள்ளுங்கள் என்று வேண்டினார். அதற்கு கௌத்ஸர் இவை அனைத்தும் எனக்கு வேண்டாம் நான் கேட்ட பதினான்கு கோடி வராகன் மட்டும் எனக்கு போதும் அதனை என் குருவிற்கு தரவேண்டும் என்று அதனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார். தன்னிடம் இல்லாத போதும் ரகு மகாராஜா கேட்டதை கொடுத்தார். நீயோ என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு நான் கேட்ட ராமனை கையில் வைத்துக்கொண்டு தர மறுக்கிறாய். உன்னுடைய ரகு குலத்தில் பிறந்த உனக்கு இது அழகா நான் வருகிறேன் என்று கோபமுடன் புறப்பட்டார்.
வசிஷ்டர் விஸ்வாமித்திரர் செல்வதை தடுத்து நிறுத்தி தசரதருக்கு அறிவுறை கூற ஆரம்பித்தார். தாங்கள் தர்மிஷ்டன் என்று பெயர் பெற்றவர். வாக்கு கொடுத்து விட்டு அதனை மீறுதல் கூடாது. கொடுத்த வாக்கினை காப்பற்றவில்லை என்றால் இது வரைக்கும் தாங்கள் சேர்த்த புண்ய பலன்கள் எல்லாம் போய்விடும். விஸ்வாமித்திரர் பற்றி தாங்கள் அறிந்து கொள்ளுங்கள். விஸ்வாமித்திரர் அரசராக இருந்த பொழுது ஐநூறு அஸ்திரங்களை பற்றி முழுமையாக தெரிந்தவர். பரமேஸ்வரனை தவம் செய்து பல அஸ்திரங்களை பெற்றிருக்கிறார். தனக்கு தெரிந்த அனைத்தையும் ராமனுக்கு உபதேசிப்பார். தனது யாகத்தை தானே காக்கும் திறமை உள்ளவர் விஸ்வாமித்திரர் ஆனாலும் ராமனை தனது யாகத்துக்கு பணிவிடை செய்ய கேட்கிறார். இதன் வழியாக அரசகுமாரனாக இருக்கும் ராமனுக்கு வாழ்க்கை பயிற்சியை கொடுக்க அவர் முடிவெடுத்திருக்கின்றார். விஷ்வாமித்ரரின் பாதுகாப்பில் இருக்கும் போது ராமனுக்கு ஒரு ஆபத்தும் இல்லை தாங்கள் கவலை கொள்ளவேண்டாம் ராமனை அனுப்பி வையுங்கள் என்று எடுத்து கூறினார்.
வசிஷ்டர் கூறியவுடன் தசரதர் மனம் தெளிந்து ராமனையும் லக்ஷ்மனையும் அழைத்துவர கட்டளையிட்டார். நடந்ததை அறிந்த கௌசலை ராமனையும் லட்சுமனனையும் அழைத்து வந்தாள். ராமனுக்கு புதிதாக வந்த கடமையை தசரதர் எடுத்து விளக்கினார். ராமன் தத்தையின் ஆணையை தலைவணங்கி ஏற்றுக்கொண்டான். தசரதர் ராமர் லட்சுமனனின் கைகளை பிடித்து ராமன் லட்சுமனன் இருவரும் இணைபிரியாதவர்கள். இவர்களை பிள்ளைகளாக பெறுவதற்கு பல ஆண்டுகள் தவமிருந்து யாகம் செய்து பெற்ற குழந்தைகள் இவர்கள். என் உயிராக இருக்கும் இவர்களை தங்களிடம் ஒப்படைக்கின்றேன். இவர்களை பாதுகாத்து தங்கள் யாகம் முடிந்ததும் என்னிடம் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என்று தழுதழுத்த குரலில் கூறி இரு மகன்களையும் விஸ்வாமித்ரரிடம் ஒப்படைத்தார். அப்போது சங்க வாத்தியம் முழங்கியது. வானத்தில் இருந்து புஷ்பமாரி பொழிந்தது. விஸ்வாமித்ரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ராமர் லட்சுமணன் இருவரும் விஸ்வாமித்ரரை வணங்கி அவரை பின் தொடர்ந்தார்கள்.
ராமன் எக்காரணத்திற்காக மண்ணுலகிற்கு வந்தானோ அக்காரியத்தை நிறைவேற்ற நல்ல பயிற்சியை வழங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விஸ்வாமித்ரருக்கு இருந்தது. தான் பெற்ற ஞானம் மற்றும் அரிய பெரிய அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ராமனை அழைத்து வந்தார். முதல் நாள் இரவை சராயு நதிக்கரையில் கழித்தனர். அப்போது இருவருக்கும் பலம் மற்றும் அதிபலம் என்னும் இரண்டு மந்திரங்களை விஸ்வாமித்திரர் உபதேசித்தார். இந்த மந்திரங்களை ஜபம் செய்வதின் பயனாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பு இருக்காது. பசியையும் தண்ணீர் தாகத்தையும் சிரமம் இல்லாமல் சமாளிக்கலாம். தூங்கும் போது யாரும் தாக்க முடியாது. விஸ்வாமித்ரரிடம் இருந்து இருவரும் கற்ற முதல் உபதேசம் இதுவாகும்.
விஸ்வாமித்ரரும் ராம லட்சுமனனும் அதிகாலையில் எழுந்து சரயு நதியும் கங்கையும் சங்கமிக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. அந்த இடத்தின் அழகை பார்த்த ராமர் விஸ்வாமித்ரரிடம் இந்த இடம் மிகவும் ரம்யமாக இருக்கின்றது. இது என்ன இடம் என்று கேட்டார். அதற்கு விஸ்வாமித்ரர் இந்த ஆசிரமத்திற்கு சிவபெருமான் ஆசிரமம் என்று பெயர். சிவபெருமான் யோகத்தில் இருந்த இடம் இது. யோகத்தில் இருந்த சிவபெருமானின் யோகத்தை கலைக்க மன்மதன் முயன்ற போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனின் அங்கத்தை (உடல்) அழித்து காமதகனம் செய்தார். அதனால இந்த நாட்டிற்கு அங்க நாடு என்றும் இந்த இடத்திற்கு காமஷ்ரமம் என்று பெயர் என்றார். இந்த இடத்தில் சில ரிஷிகள் ஆசிரமம் அமைத்து தங்கி இருக்கிறார்கள் என்று அங்கு அழைத்து சென்றார். ஆசிரமத்திற்குள் மூவரும் சென்றனர். அங்கு இருந்த ரிஷிகள் தங்கள் ஞானகண்ணால் வந்திருப்பது விஸ்வாமித்ரரும் ராம லட்சுமனனும் என்று அறிந்து கொண்டு வரவேற்று உபசரித்து சராயு நதியை கடப்பதற்கு அவர்களுக்கு ஒர் படகை கொடுத்தார்கள்.
சராயு நதிதை கடந்ததும் அங்கு இருந்த இடம் பாலைவனம் போல் பயங்கரமாக தென்பட்டது. ஒரு பறவை மிருகங்களும் இல்லை. அந்த காட்டை கடங்கும் போது ராமர் லட்சுமனன் இருவரும் மிகவும் களைப்படைந்தனர். பசியும் தாகமும் அவர்களை பற்றிக்கொண்டது. இதனை கண்ட விஸ்வாமித்ரர் இரவு உபதேசித்த மந்திரத்தை அவர்கள் உச்சரிக்க வேண்டும் என்றும் சரியான நேரத்தில் இதனை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று வாழ்க்கை முறையை பயிற்சி கொடுத்தார். இருவரும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்ததும் களைப்பு பசி தாகம் நீங்கி ஆயிரம் யானைகளின் பலம் வந்தது போல் உற்சாகமடைந்தார்கள். இந்த இடம் ஏன் இப்படி இருக்கின்றது இங்கு ஒரு உயிரினம் கூட இருப்பதற்கான அறிகூறி இல்லையே என்று ராமன் விஸ்வாமித்ரரிடம் கேட்டார்.
இங்கு தாடகை என்று ஒரு யட்சினி இருக்கின்றாள். அவளுக்கு ஆயிரம் யானை பலம் அவ கோபத்துனால இந்த இடத்தை அழித்துவிட்டாள் என்று விஸ்வாமித்ரர் கூறினார். யட்சினிகளுக்கு அவ்வளவு பலம் இருக்குமா என்று ராமர் கேட்டார். அதற்கு விஸ்வாமித்ரர் சுகேதுன்னு ஒரு யட்சன் இருந்தான் அவன் பிரம்மாவிடம் தவம் செய்து ஒரு பெண் குழந்தையை வரமாக கேட்டான், பிரம்மா அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். அவனுக்கு தாடகை என்ற பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு சுகேது ஆயிரம் யானை பலம் கொடுத்தான். அவள் வளர்ந்து சுந்தன் என்ற ஒருவனை திருமணம் செய்தாள். அவளுக்கு மாரிசன் என்ற குழந்தை பிறந்தது. இந்த சுந்தன் அகத்திய முனிவரை தொந்தரவு செய்தான். அகத்தியர் அவனை அழித்து விட்டார். இந்த தாடகையும் மாரிசனும் அகத்தியரை அழிக்க எதிர்த்தார்கள். அகத்தியர் இருவரையும் ராட்சசர்களாக போங்கன்னு சபித்தார். ராட்சசர்களான தாடகையும் இந்த ஆக்ரமிப்பு செய்து கோபத்தில் இந்த இடத்தை அழித்துவிட்டாள். இப்பொழுது நீ இந்த தாடகையை வதம் செய்துவிடு. பெண்ணை அழிக்க வேண்டுமா என்று யோசிக்காதே இதற்கு முன் தர்மத்திற்காக இந்திரன் விரோசனன் என்ற பெண்ணை வதம் செய்திருக்கிறான். விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் செய்திருக்கிறார். அதுபோல் இந்த உலகத்துக்கு கெடுதல் நினைக்கின்ற பெண்அழிக்கலாம் தவறில்லை என்று விஸ்வாமித்திரர் ராமனுக்கு கட்டளை இட்டார்.
விஸ்வாமித்ரரின் கட்டளையை கேட்ட ராமர் நான் கிளம்புபோது எனது தந்தை என்னிடம் விஸ்வமித்ரரின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று எனக்கு உத்திரவிட்டிருக்கின்றார். உங்கள் கட்டளையை நான் இப்போதே நிறைவேற்றுகின்றேன் என்று தனது வில்லில் இருக்கும் கம்பியை சுண்டினார். வில்லில் இருந்து வந்த சத்தத்தை கேட்டவுடன் இடி இடித்தாற் போல் சத்தமிட்ட தாடகை தனது குகையிலிருந்து வெளிப்பட்டு அங்கு வந்தாள். மானிடர்கள் மூவர் வந்திருக்கின்றார்கள் இன்று நமக்கு நல்ல சாப்பாடு என்று எண்ணி அவர்களை அழிக்க கல் மண் மரம் என கைக்கு கிடைத்த அனைத்தையும் தூக்கி அவர்கள் மீது எறிந்தாள். அப்போது ராமர் லட்சுமனனிடம் நான் இவளின் கைகள் மற்றும் காலை வெட்டி விடுகிறேன் வெட்டியவுடன் இவளால் எங்கேயும் போகமுடியாது என்று கூறினார். இதனை கேட்டதும் பயந்த தாடகை மறைந்திருந்து தாக்க தொடங்கினாள். இவள் கெட்ட எண்ணம் கொண்டவள் இவளிடம் கருணையை காண்பிக்காதே ராமா அவள் மறைந்திருந்து தாக்குகிறாள். இரவில் ராட்சசர்களுக்கு பலம் அதிகமாகிவிடும். ஆகவே விரைந்து அவளை அழித்துவிடு என்று விஸ்வாமித்ரர் ராமனை துரிதபடுத்தினார்.
ராமர் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எடுத்து விட்டார். அந்த அஸ்திரம் எங்கு இருந்து சப்தம் வருகிறதோ அதை தொடர்ந்து சென்று தாக்கும். மறைந்திருந்த அவளை அஸ்திரம் தாங்கியதும் அங்கிருந்து வானத்திற்கு தாவியவள் பெரிய உருவம் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தாள். ராமர் விட்ட அம்பு வானத்திலேயே அவள் மார்பை பிளந்து அவளை அழித்துவிட்டது. தாடகை அழிந்ததும் அவளது மந்திர சக்தி அனைத்தும் அழிந்தது. உடனே அந்த பிரதேசம் நந்தவனம் போல ஆகியது. இதனை கண்ட தேவர்களும் முனிவர்கள் உலக நன்மைக்காக செய்யும் பல வேள்விகளை இந்த தாடகை தடுத்து கெடுத்துவந்தாள். ராமரினால் இப்போது தாடகை அழிக்கப்பட்டாள். அனைவருக்கும் மகிழ்ச்சி. ராமனுக்கு அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுங்கள் ராமரினால் பெரிய காரியங்கள் பின்னாளில் நிறைய நடக்கப் போகிறது என்று விஸ்வாமித்ரரிடம் கூறி விட்டுச்சென்றார்கள்.
விஸ்வாமித்ரர் தனக்கு தெரிந்த எல்லா அஸ்திர சாஸ்திரங்களையும் ராமருக்கு உபதேசித்தார். பின்னர் அஸ்திரங்களை திரும்ப பெரும் மந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். அஸ்திர அதிதேவதைகள் அனைவரும் ராமர் முன்பு தோன்றி தாங்கள் அழைக்கும் போது தங்களுக்கு தேவையானதை செய்வோம் என்று உறுதியளித்துவிட்டு சென்றனர்.
விஸ்வாமித்ரர் தன்னுடைய ஆசிரமமான சித்தாஸ்ரமத்திற்கு இருவரையும் அழைத்து வந்தார். ஆசிரமத்திலுள்ள மற்ற ரிஷிகள் அனைவரும் தங்கள் யாகத்தை காக்க ராம லட்சுமனன் வந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். யாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் அதிவிரைவில் செய்யத் துவங்கினார்கள். யாகம் துவங்கும் முன் விஸ்வாமித்ரர் ராமரிடம் யாகம் முழுவதும் செய்து முடிக்க ஆறு நாட்கள் ஆகும். அந்த ஆறு நாட்களும் மௌனமுடன் இருக்கவேண்டும். ஆகவே விழிப்புடன் இருந்து காவல் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு யாகத்தை தொடங்கினார்.
வேதமந்திரங்களுடன் யாகம் துவங்கியது. முனிவர்கள் பலர் யாகத்திற்கு வேதமந்திரங்கள் சொல்லியும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை தந்தும் உதவினார்கள். யாக யாலையின் வடக்கு பக்கம் ராமரும் தெற்கு பக்கம் லட்சுமனனும் காவல் காத்து நின்றார்கள். ஐந்து நாட்கள் யாகம் சிறப்பாக சென்றது. ஆறாம் நாள் வானத்தில் கர்ஜனையுடன் மேக்கூட்டம் வருவது போல் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தாடகையின் மைந்தர்கள் மாரீசன் சுபாகு தலைமையில் அரக்கர்கள் கூட்டம் வந்தது. வந்தவர்கள் ஒன்று சேர்ந்து மாமிச துண்டுகளையும் கல்லையும் மண்ணையும் போட்டு யாகத்தை பாழ்படுத்த முனைந்தார்கள். ராமர் தனது அம்பினால் சரக்கூடம் ஒன்று கட்டி தீய பொருட்கள் ஏதும் யாகத்தில் விழாதவாறு பாதுகாத்தார். ஆக்னேய அஸ்த்திரத்தால் சுபாகுவை கொன்றார். மானவாஸ்த்ரம் என்ற அஸ்திரத்தை மாரீசன் மீது எய்தார். அந்த அம்பு மாரீசனை குத்தி கடலில் தூக்கி எரிந்தது. பல அரக்கர்கள் ஓடி ஒளிந்தார்கள். எதிர்த்தை அனைத்து அரக்கர்களையும் கொன்று யாகத்தை முழுமையாக ராமரும் லட்சுமனனும் காத்தார்கள். ஆறு நாட்கள் நடந்த யாகம் இனியாக நிறைவேறியது.
ராமரும் லட்சுமனனும் தங்களுக்கு கொடுத்த கடமையை சரியாக செய்து முடித்து விட்டார்கள். விஸ்வாமித்ரரிடம் சென்று யாகத்தை காத்து விட்டோம் என்று சொல்லி ராமரும் லட்சுமனனும் தங்கள் வணக்கத்தை தெரிவித்தார்கள். எல்லா உலகையும் தனக்குள் வைத்திருக்கும் கடவுளாகிய உனக்கு இந்த யாகத்தை காத்ததில் வியப்பேதும் இல்லை என்று சொல்லி ராமலட்சுமனர்களை விஸ்வாமித்ரர் வாழ்த்தினார்.
விஸ்வாமித்ரர் ராமரிடம் மிதிலாபுரி என்ற சிறப்பு மிக்க பட்டினத்தை ஜனகர் ஆட்சி செய்து வருகிறார். கல்வியில் மேன்மைமிக்கவராக திகழ்பவர். அவர் பண்பாட்டில் சிறந்த யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் அதிசயிக்கத்தக்க வில் ஒன்று வைத்திருக்கின்றார். யாகத்தை ஒட்டி சில நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். நிகழ்ச்சிக்கு பல நாட்டு ராஜகுமாரர்களும் வருகிறார்கள். யாகத்தில் கலந்து கொள்ள நமது சித்தாஸ்ரமத்துக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நமது ஆசிரமத்தை சேர்ந்தவர்களும் நானும் அங்கு செல்கிறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் வந்து யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்று ராமரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். தாங்கள் உத்தரவிட்டால் நிச்சயமாக தங்களுடன் வருகிறோம் என்று ராமலட்சுமனர்கள் விஸ்வாமித்ரரிடம் தெரிவித்தார்கள். ராமலட்சுமனர்கள் வருவதை எண்ணி ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். விஸ்வாமித்ரர் ராமலட்சுமனர் ஆசிரமவாசிகள் என அனைவரும் மிதிலைக்கு கிளம்பினார்கள்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |