இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அயோத்தியா காண்டம் - 1

Ayodhya Kanda is the second book of the Ramayana. It details the events in Rama’s life in Ayodhya, focusing on the decisions made by his father, King Dasharatha, and the circumstances that lead to Rama's exile into the forest.

ராமாயணம்

அயோத்தியா காண்டம் - 1

அயோத்திக்கு வலிமைமிகுந்த அரசனாக முடிசூட்டிக்கொள்ளும் தகுதி ராமருக்கு வந்து விட்டதை தசரதர் உணர்ந்தார். தன்னைப்போலவே ராமனும் இந்த உலகத்தை அரசனாக இருந்து ஆட்சி செய்வதை பார்க்க ஆசைப்பட்டார். ராமனுக்கு முடிசூட்டி இளவரசனாக்கி விடலாம் என்று தீர்மானித்தார். ஆகையால் இதனைப்பற்றி ஆலோசிக்க வசிஷ்டர் முனிவர்கள் மற்றும் வேற்று நாட்டு அரசர்கள் சிலரையும் ஆலோசனை சொல்வதில் வல்லவர்கள் சிலரையும் கலந்தாலோசிக்க வரவழைத்தார்.

ராமனை அரசனாக்க முடிவெடுத்த பின்னர் கேகய மன்னர் மற்றும் ஜனகரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று தசரதர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அரசவை கூடியது அனைவரும் வந்து அவரவர்களுக்கு தக்கபடி ஆசனங்களில் அமர்ந்தனர். அனைவரையும் வரவேற்ற தசரதர் பல ஆண்டுகாலம் இந்நாட்டை ஆட்சி செய்து பாதுகாத்து வருகிறேன். தனக்கு முதுமை வந்து விட்டபடியால் ராமனை இளவரசனாக முடிசூட்டி விடலாம் என்று ஆசைப்படுகிறேன். தங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று அனைவரிடமும் கேட்டார் தசரதர்.

ராமர் மக்களின் மனம் கவர்ந்தவராய் இருக்கிறார். எதிரிகளிடம் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் வல்லைமையும் இருக்கிறது. சத்தியத்தை கடைபிடிக்கும் ராமனை இளவரசனாக முடிசூட்டலாம் என்று அனைவரும் தரசதரின் கருத்தை வரவேற்றார்கள். இதனைக்கேட்ட தசரதர் தனக்கு இப்போது ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது அதனை இப்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளவிரும்புகின்றேன். தங்கள் கருத்தை ஒளிவு மறைவில்லாமல் யார் வேண்டுமானாலும் கூறலாம் என்று தனது சந்தேகத்தை கேட்க ஆரம்பித்தார். இத்தனை ஆண்டு காலம் நீதி நெறி தவறாமல் அயோத்தையை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றேன். நான் சொன்னதை கேட்டதும் எந்த மறுப்பேதும் சொல்லாமல் ராமரை இளவரசனாக முடிசூட்டலாம் என்று தங்கள் கருத்தை சொன்னீர்கள். இதன் காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். என்னுடைய ஆட்சியில் ஏதேனும் குறைகள் இருக்கின்றதா என்று கேட்டார்.

தங்களுடைய புதல்வன் ராமர் தேவர்களைப் போல் புத்திமானாக இருக்கின்றார். சத்தியத்தின் உருவமாகவும் நல்லொழுக்கத்தின் உருவமாகவும் இருக்கின்றார். தேவ அசுர மானிடர்கள் என் அனைவரது அஸ்திர வல்லமைகளையும் பெற்றவராக இருக்கின்றார். தந்தையான உங்களை பார்த்துக்கொள்வது போல் அன்புடன் நாட்டு மக்களை பார்த்துக்கொள்கிறார். மக்கள் துக்கப்படும் போது தானும் துக்கப்படுகிறார். மக்கள் மகிழ்ச்சி அடையும் போது தந்தை குழந்தையை பார்த்து மகிழ்வதை போல் மகிழ்ச்சி அடைகிறார். ஆசைக்கு அடிமைபடாமல் தன்புலன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். தங்கள் பரம்பரையில் வந்தவர்களில் மேன்மையானவராக இருக்கின்றார். இவ்வுலகில் அவரது பெருமைகள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இவரை தற்போது இளவரசனாக முடிசூட்டினால் தங்களுக்கும் தங்கள் பரம்பரைக்கும் மேலும் புகழை பெற்றுத்தருவார் ராமர். ஆகவே அவரை இளவரசனாக முடிசூட்டலாம் என்று கூறினோம் என்று தங்கள் கருத்தை கூறினார்கள். அனைவரது கருத்தை கேட்டு மகிழ்ந்த தசரதர் ராமரின் முடிசூட்டு விழாவுக்கு நல்ல நாள் பார்த்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

வசிஷ்டர் தசரதரை பார்த்து இது சித்திரைமாதம் மங்களமான காலம் வனங்களெல்லாம் பூத்துக்குலுங்கும் நேரம். புஷ்ய நட்சத்திரத்தில் பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறினார். வசிஷ்டர் கூறிய நாள் வர இன்னும் 3 நாட்களே இருந்தது. இதனை அறிந்து மகிழ்ந்த தசரதர் இன்றிலிருந்து 3 ம் நாளில் ராமருக்கு பட்டாபிஷேகம் என்று அனைவர் முன்னுலையிலும் அறிவித்தார். வசிஷ்டரிடமும் வாமதேவர் என்ற அந்தணரிடமும் பட்டாபிஷேகத்திற்கான பூஜைகள் யாகங்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். பட்டாபிஷேகத்திற்கான அனைத்து பணிகளையும் விரைவாக செய்யுமாறு பணியாட்களுக்கு கட்டளையிட்டார்.

தசரதர் ராமரிடம் எனக்கு வயதாகிவிட்டது. நேற்றிரவு கெட்ட கனவு ஒன்று கண்டேன். அதன்படி எனக்கு பெரிய துக்கம் சம்பவிக்கும் என்று சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். எல்லா சுகங்களும் நீண்ட ஆயுளும் அனுபவித்து விட்டேன். செய்ய வேண்டிய தேவபித்ரு காரியங்களை அனைத்தையும் செய்துவிட்டேன். இனி உலகில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. உனக்கு பட்டாபிஷேகம் செய்து சிம்மாசனத்தில் அமரவைக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே தற்போது உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றிலிருந்து 3 நாளில் பட்டாபிஷேகம் நீயும் சீதையும் பட்டாபிஷேகத்திற்காக விரதம் இருக்க வேண்டும். தரையில் படுத்துத் தூங்கி விரதம் இருந்து மங்கள பூஜைகள் செய்துவா என்றார். பரதனும் சத்ருக்கனனும் தற்போது கைகய நாட்டில் இருக்கின்றார்கள். பட்டாபிஷேகத்திற்குள் அவர்களை வரவழைக்க முடியாது. அதற்காக காலம் தற்போது இல்லை. அவர்கள் வரும் வரை பட்டாபிஷேகத்தை தள்ளி வைக்கவும் முடியாது. பரதன் மிகவும் நல்லவன் உன்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன். ஆகையால் அந்த பட்டாபிஷேகத்திற்கு எந்த ஆட்சேபனேயும் சொல்ல மாட்டான். அவர்கள் வந்ததும் அவர்களுக்கு நடந்ததை தெரியப்படுத்திக் கொள்ளலாம் என்றார். தங்கள் ஆணைப்படி நடக்கின்றேன் என்று ராமர் தசரதரிடம் கூறினார்.

தசரதர் கைகேயிக்கு பல காலங்களுக்கு முன்பு கொடுத்த வாக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதை பயன்படுத்தி ஏதேனும் விபரிதமாக கேட்டுவிடுவாளோ என்று தசரதருக்கு ஓரு பயம் வந்தது. தந்தையிடம் விடைபெற்ற ராமர் கௌசல்யையிடம் ஆசி வாங்க அவர் இருக்கும் இடம் சென்றார். ராமர் வருவதற்கு முன்பே கௌசல்யைக்கு தகவல் சென்றுவிட்டது. லட்சுமனனும் சீதையும் அவருடன் இருந்தனர். ராமர் கௌசல்யாவை வணங்கினார். சிரஞ்சீவியாக இருப்பாயாக ராஜ்யத்தை நிர்வாகித்து எதிரிகளை அழித்து விரோதிகளை அடக்கி மக்களை காப்பாற்றுவாய். உன் குணத்தினால் உன் தந்தையை திருப்தி செய்து விட்டாய் இது என்னுடைய பாக்கியம் என்று ஆசிர்வாதம் செய்தார்.

கௌசலையிடம் ஆசிர்வாதம் பெற்ற ராமர் லட்சுமனனிடம் என் உடலுக்கு வெளியில் நடமாடும் என்னுடைய இரணாடாவது உயிர் நீ. என்னோடு சமமாக இருந்து செல்வம் நிறைந்த இந்த நாட்டை நீயும் ஆட்சி செய்யவேண்டும். எனக்கு சொந்தமான இந்த ஆட்சி அதிகார பாக்கியமெல்லம் உன்னுடையதும் ஆகும் என்று கூறினார். மகிழ்ச்சி அடைந்த லட்சுமனன் ராமரின் அன்புக்கு தலைவணங்கி தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். அனைவரும் அங்கிருந்து விடைபெற்று தங்கள் இருப்பிடம் திரும்பினார்கள். ராமனுடைய இருப்பிடத்திற்கு வந்த வசிஷ்டர் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய பூஜைகள் அதற்கான நியதிகளையும் எடுத்துச்சொன்னார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட ராமர் நியதிகளை முறையாக கடைபிடிப்பதாக வசிஷ்டருக்கு வாக்களித்தார்.

ராமர் அரசனாகப்போகின்றார் என்ற செய்தி அயோத்தி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. கொண்டாட்டத்தில் மக்கள் இருந்தார்கள். அந்நேரம் கேகய சக்ரவர்த்திக்கு பணிப்பெண்ணாக இருந்த மந்தரா என்ற கூனிப்பணிப்பெண் கைகேயியை பார்க்க அயோத்திக்கு வந்திருந்தாள். ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதை பார்த்த அவள் அதற்கான காரணத்தை விசாரித்தாள். ராமன் அரசனாகப்போகின்றான் என்ற செய்தியை கேட்ட அவள் மிகவும் திகிலடைந்தாள். தன்னுடைய எஜமானி கைகேயியை பார்க்க அரண்மனைக்கு விரைவாக சென்றாள். கைகேயியை சந்தித்த மந்தரா ராஜகுமாரி அவர்களே ராமர் பட்டாபிஷேகம் செய்து இளவரசனாக போகின்றார் என்றாள். அதனைக்கேட்ட கைகேயி இந்த நல்ல செய்தி கேட்டு மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு இந்த முத்துமாலையை பரிசாக வைத்துக்கொள் என்று தன்னுடைய முத்துமாலையை பரிசளித்தாள். முத்துமாலையை வேண்டா வெறுப்பாக வாங்கிய மந்தரா அதனை தூக்கி எறிந்தாள்.

கேகய நாட்டு ராஜகுமாரி நீங்கள் ஒரு ராஜாவிற்கு மணம் முடித்து கொடுக்கப்பட்டிருக்கின்றீர்கள். இருந்தும் ஒரு குழந்தை போல் நடந்து கொள்கின்றீர்கள்.


இன்று நீங்கள் தசரத சக்ரவர்த்தியின் பேரன்புக்கு இலக்காக இருக்கிறாய் ஆகையால் மகாராணியிகள் மூவருள் முதன்மையானவளாய் இருக்கின்றாய். நாளை ராமன் இளவரசனாக முடிசூடிக்கொண்ட பிறகு ராமரின் தாய் கௌசலை முதன்மை ஆகிவிடுவாள். முதல் இடத்தில் இருக்கும் நீ இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவாய். ராமரும் பரதனும் ராஜகுமாரர்கள் என்னும் ஒரே அந்தஸ்தில் இருக்கின்றார்கள். நாளை ராமர் இளவரசனானதும் பரதன் சாதாரண குடிமகன் ஆகிவிடுவான். இந்த பாங்கில் பரதன் கீழ் நிலைக்கு சென்றுவிடுவான். உன்னுடைய வீழ்ச்சிக்கும் உனது மைந்தனின் வீழ்ச்சிக்கும் நீயே காரணமாகிவிடுவாய். இதனை கண்டும் நான் அமைதியாக இருந்தால் நாளை நீ வருத்தப்படுவதற்கு நானும் காரணமாக இருப்பேன். அதனால் உனக்கு எடுத்துச் சொல்கிறேன். இந்த அடாத செயலை எதிர்த்து நடக்கப்போகின்றவற்றை உனக்கு சொல்வது எனது கடமையாகும் நான் சொல்கின்றபடி கேள் என்று கைகேயியிடம் மந்தரா கூறினாள்.

கைகேயி மந்தரையின் பேச்சை பொருட்படுத்தவில்லை. மந்தரா ஒரு வேலைக்காரி இவளால் அரச குடும்ப விசயங்களை இவளால் புரிந்து கொள்ளமுடியாது என்ற எண்ணி மந்தரையிடம் பேச ஆரம்பித்தாள். ராமன் தசரத சக்ரவர்த்திக்கு முத்த குமாரன் அவனே இளவரசனாக பதவி எற்க உரிமையுள்ளவன். ராமர் மக்களின் அன்புக்கு பாத்திரமானவன். ஞானிகள் ராமரை தெய்வம் என்று எண்ணி போற்றுகின்றனர். சத்தியத்தின் சொரூபமான ராமன் அறநெறி பிசகாதவன். தன்னை பெற்றடுத்த கௌசலையை விட என் மீது அதிகமாக அன்பு வைத்து எனக்கு பணிவிடை செய்கின்றான். அவன் ஆட்சிக்கு வரும் போது அவனால் எனக்கு எந்த இடைஞ்சலும் வராது. தன் சகோதரர்களை தன் சொரூபமாகவே நேசிக்கின்றான். ராமனுடைய ஆட்சிக்கு பிறகு பரதனும் ஒரு நாள் அரசனாகி இந்நாட்டை ஆட்சி செய்வான். உன் கற்பனைகளை ஒதுக்கு வைத்துவிட்டு நீயும் நாளை பட்டாபிஷேக விழாவில் கலந்து கொள்வாயாக என்று கைகேயி மந்தராவிடம் கூறினாள்.

முன்பு இருந்ததைவிட இப்போது மந்தராவுக்கு முகவாட்டம் அதிகமானது. கைகேயிடம் மேலும் பேச ஆரம்பித்தாள். இப்போது ராமன் அரசனானால் அவனுக்கு பிறகு ராமனின் பிள்ளைகள் அரசனாவார்கள். ராமனுடைய சகோதரனான பரதன் ஒரு போதும் அரசனாக மாட்டான். அரச குமாரர்கள் அனைவரும் ஆட்சி புரிய எண்ணினால் சமுதாயத்தில் குழப்பமே உருவாகும். ராஜதந்திரம் அறிந்த அரசன் ஒருவன் தன் பிள்ளைகளேயே அரசனாக்கவே விரும்புவான். தனக்கு நிகரான உடன் பிறந்தவர்களை உடன் வைத்திருக்கமாட்டார்கள். ஏதேனும் சொல்லி கண்ணுக்கேட்டாத தூரத்திலேயே வைத்திருப்பார்கள். அதுபோல் ராமன் தனது ராஜதந்திரத்தால் பரதனை தூரத்திலேயே வைத்திருப்பான். இப்போதும் பரதன் பல தூரம் தள்ளி தனது தாத்தாவுடன் பல வருடங்களாக இருக்கின்றான். இதனால் மக்கள் பலருக்கு பரதனின் முகமே மறந்துபோயிருக்கும். அனைவரும் ராமரை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றார்கள். பரதனை அனைவரும் மறந்து விட்டார்கள்.

ராமன் அரசனானால் பரதனை விரோதி போலவே பார்ப்பான். விரோதிகளை அரசர்கள் எப்போதும் விட்டுவைக்கமாட்டார்கள். பயத்தினால் கொன்று விடுவார்கள். பரதனை ராமன் சந்தேகமாகவே பார்ப்பான் ஒரு நாள் பயத்தில் கொன்று விடுவான். பரதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் அவனின் தாத்தாவுடனேயே தங்க வைத்துவிடு. கௌசலை தசரதரின் முதல் மனைவியாக இருந்து அவரின் அன்புக்கு பாத்திராமாக இருந்தாள். உன்னை திருமணம் செய்ததும் அவரின் அன்புக்கு நீ பாத்திரமானாய். இதனை கௌசலை மறந்திருக்கமாட்டாள். உன் மீது கோபத்துடனே இருப்பாள். நேரம் கிடைக்கும் போது உன்னை பழி வாங்க காத்திருப்பாள். அதற்கான நேரம் இப்போது கௌசலைக்கு வந்துவிட்டது. உன்னை இப்போது பழிவாங்குவாள். உன்னை சிறு வயதில் இருந்து நான் உன்னை பேணி வருகிறேன் உன் நலனில் எனக்கு மிகுந்த அக்கரை உள்ளது. வேறு எந்த குறிக்கோளும் என்னிடம் இல்லை ஆகவே என் சொல்படி நடந்துகொள் இல்லை என்றால் ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் நீயும் பரதனும் வேலைக்காரர்களை போல இங்கு இருப்பீர்கள் என்று சொல்லி முடித்தாள்.

சத்தியம் தவறாத ராமரை மந்தரா சொல்லும் குணத்தில் கைகேயியால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ராமரை தன் பிள்ளையாகவே பாவித்து வந்த கேகேயி இப்போது மந்தரையின் வலையில் சிக்கிவிட்டாள். மந்தரையின் கேள்விக்கு கைகேயி பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள். கைகேயின் மனதில் பரதனைப்பற்றிய பயம் குடிகொண்டது. பரதன் மீதிருந்த பாசம் அவளுக்கு மேலோங்கியது. மந்தரா சொல்வதில் உண்மை இருக்கிறது என்று எண்ணினாள். மனம் மாறிய கைகேயி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்தாள். மந்தராவிடம் தஞ்சமடைந்து இதற்கு ஒரு வழி சொல் என்று ஆலோசனை கேட்டாள்

பல காலங்களுக்கு முன்பு தேவர்களுக்கும் சம்பரன் என்ற அசுரனுக்கும் போர் மூண்டது. தசரத சக்ரவர்த்தி தேவர்களுடன் இணைந்து போர் புரிந்தார். அப்போரில் சம்பரன் ஏய்த ஓர் அஸ்திரத்தில் தசரதர் சிறிது நேரம் மயக்கமடைந்தார். அப்போது நீ அவருக்கு பணிவிடைகள் செய்து உதவிகரமாக இருந்து அவர் அப்போரில் வெற்றி பெற உதவி புரிந்தாய். இதனால் மகிழ்ந்த தசரதர் உனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்களித்தார். அப்போது அந்த வரத்தை தேவையான பொழுது பெற்றுக்கொள்வதாக நீ சொல்லிவிட்டாய். இப்போது அந்த வரத்தை உன் மகனுக்காகவும் உனக்காகவும் உபயோகப்படுத்திக்கொள்.

தசரதர் இங்கு வந்ததும் அவர் கொடுத்த வரத்தை அவருக்கு ஞாபகம் செய். தனக்கு இப்பொது அந்த வரம் வேண்டும் என்று கேள். அவர் சம்மதம் தெரிவித்த பிறகு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் உறுதிமொழி பெற்றுக்கொள், அவர் சம்மதித்த பிறகு முதல் வரத்தில் ராமர் ராஜ சுகத்தைவிட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு செல்லவேண்டும். 2 வது வரத்தில் ராமனுக்காக செய்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் அதை குறிப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள். அவரால் மறுக்கமுடியாது அவர் மறுத்தால் தசரதர் சத்தியத்தில் இருந்து பிசகியவராவார். எனவே சத்தியத்தை காப்பாற்ற அவர் சம்மதிப்பார். உன் எண்ணம் முழுமையாக நிறைவேறும். பதினான்கு ஆண்டுகள் பரதன் ஆட்சி செய்தால் அவனது ஆட்சியில் பரதனை மக்கள் அன்புடன் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பதினான்கு வருடங்கள் கழித்து ராமர் வரும் போது அவரை பலர் மறந்திருப்பார்கள். நிரந்தர அரசனாகி விடுவான் பரதன் என்றாள்.

இத்திட்டத்தில் மகிழ்ந்த கைகேயி மந்தராவுக்கு செல்வங்கள் பல கொடுத்தாள். என் மகன் பரதனுக்கு கடல் சூழ்ந்த இந்த உலகத்திற்கு அரசனாக்க நல்ல திட்டத்தை கொடுத்தாய். இத்திட்டத்தை அப்படியே செயல் படுத்துகிறேன் என்று மந்தராவை அனுப்பினாள். தன்னுடைய கூந்தலில் இருக்கும் பூவை தூக்கி எறிந்தாள். நகைகளை அனைத்தையும் கழற்றினாள். பழைய உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு தரையில் படுத்துவிட்டாள்.

தசரதர் அரண்மணையில் ராமனுடைய பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் கைகேயியின் அந்தபுரத்திற்குள் நுழைந்தார். அந்தபுரத்தில் இருக்கும் பணிப்பெண் தசரதரிடம் கைகேயி நகைகளை அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பழைய உடை உடுத்திக்கொண்டு விகாரமாக தரையில் படுத்திருப்பாக கூறினாள். இதனைக்கேட்டு திடுக்கிட்ட தசரதர் விரைவாக அந்தப்புரத்திற்குள் நுழைந்து கைகேயியை தேடினார். கைகேயியின் அறையில் அவள் தலை கலைந்து அலங்கோலமாக தரையில் படுத்திருந்தாள் அழுக்குப்படிந்த ஆடைகளை அணிந்திருந்தாள். அவளது நகைகள் தரையில் சிதறிக்கிடந்ததை கண்ட தசரதர் அவளிடம் சென்று பேச ஆரம்பித்தார். என் அன்புக்குறியவளே எதைக்குறித்து நீ துன்பப்படுகிறாய். அரண்மணையில் யாராவது உன்னை ஏதேனும் சொல்லிவிட்டார்களா என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் சொல் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உனக்கென்ன ஆயிற்று உடல்நிலை ஏதும் சரியில்லையா மருத்துவரை வரவழைக்கவா எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல் இப்போதே அதனை நிறைவேற்றுகின்றேன் என்றார்.

கைகேயி எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். நோய் எதுவும் எனக்கு வரவில்லை. யாரும் என்னை எதுவும் சொல்லவுமில்லை. தீங்கு எதுவும் எனக்கு வரவில்லை. எனக்கு ஆசை ஒன்று உள்ளது. அதனை தாங்கள்தான் நிறைவேற்றி வைக்கவேண்டும். தங்களால் மட்டுமே அது முடியும் தாங்கள் நிறைவேற்றுவதாக உறுதி மொழி தந்தால் அதனை பற்றி சொல்கிறேன். இல்லை என்றால் இப்பேச்சை இப்போழுதே விட்டுவிடலாம் என்றாள்.

தசரதர் கைகேயியிடம் எனது மகன்களில் மூத்தவனான ராமன் எனக்கு எப்படி பிடித்தமானவனோ அது போல் எனது மனைவியரில் நீ என் அன்புக்கு பாத்திரமானவள் அது உனக்கும் நன்றாக தெரியும். ராமனை யாராலும் வெல்ல முடியாது. நால்வரில் தலைசிறந்தவன் அவன். எனது உயிராக இருப்பவன் அவன். என்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் உடனே சென்றுவிடும். அந்த ராமரின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் உன்னுடைய ஆசைகளை நான் நிறைவேற்றி வைக்கிறேன் என்று கைகேயியிடம் உறுதியளித்தார் தசரதர்.

அரசரே உங்களுக்கு நினைவிருக்கின்றதா பல ஆண்டுகளுக்கு முன்பு அசுரர்களுடன் போர் புரிந்தபோது யுத்த களத்தில் தாங்கள் மயக்கமடைந்தீர்கள். அப்போது ரதத்தை வேகமாக வேறு இடத்திற்கு எடுத்துச்சென்று தங்களை தங்களை காப்பாற்றினேன். அப்போது நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த வரத்தை பிறகு பெற்றுக்கொள்வதாக தங்களிடம் கூறியிருந்தேன். அதனை இப்போது நான் கேட்கின்றேன். நீங்கள் உடனே எனக்கு அதனை தாருங்கள் என்றாள் கைகேயி. அந்த வரம் உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றாள் இப்போதே தருகிறேன் உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக்கொள் என்று தசரதர் கைகேயியிடம் உறுதி அளித்தார்.

தசரதர் கொடுத்த உறுதிமொழியில் உற்சாகமடைந்த கைகேயி தனது வேண்டுதலை கேட்டாள். அரசே பஞ்ச பூதங்கள் சாட்சியாக கேட்கிறேன். சத்தியம் செய்திருக்கின்றீர்கள். எனக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுங்கள். ராமருக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்த அதே நேரத்தில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்குங்கள். ராமர் தவம் செய்யும் பொருட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு இன்றே அனுப்புங்கள் என்றாள்.

கைகேயியின் வார்த்தையை கேட்ட தசரதன் தன் மேல் இடி இடித்ததை போல் உணர்ந்தார். தன் வலிமை அனைத்தும் அழிந்தவராக சோர்வுற்று கீழே விழுந்தார். புலி ஒன்று மானை பார்த்து நடுங்குவது போல் கைகேயியை பார்த்து தசரதர் நடுங்கினார். மன்னர்கள் அனைவரும் தசரதரின் காலில் விழுந்து வணங்குவார்கள் அத்தகைய சிறப்பு மிக்க தசரதர் கைகேயியின் காலில் விழுந்தார். ராமர் உனக்கு என்ன தீங்கு செய்தான் தன் தாயை விட உன் மீது மிகவும் அன்பாக இருந்து பணிவிடைகள் செய்கின்றான். ராமர் தன்னை அறியாமல் தவறு செய்திருந்தால் அவனை மன்னித்துவிடு.

பரதன் அரசனாக விரும்ப மாட்டான். அவன் விரும்பி ஏற்றுக்கொண்டாலும் இந்த உலகம் அதனை சரி என்று ஒப்புக்கொள்ளாது. மக்கள் இதனை கேட்டால் பொறுமை இழந்து உன்னை பழிப்பார்கள். இவ்வுலகில் மக்களால் பேசப்படும் புகழை நீ அடைய மாட்டாய். இந்த நிகழ்சியால் கொடிய பழி உன்னை வந்தடையும். இந்த பழியைக் கொண்டு என்ன பயனை அடையப்போகிறாய்.

ராமன் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு அரச பட்டம் கொடுப்பதாக சொன்னதால் ராமன் அரசனாக முடிசூட்டிக்கொள்ள சம்மதித்தான். அவனிடம் நீ பரதனுக்கு இந்த பட்டத்தை கொடு என்று கேட்டால் ராமனே மனம் உகந்து பரதனை அரசனாக்கிவிடுவான். உன்னால் கேட்கப்பட்ட இரண்டாவது வரத்தை மட்டும் மறுபடியும் கேட்காதே. நீ கேட்ட முதல் வரத்தை இப்போதே தந்தேன். நீயும் பரதனும் இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்யுங்கள். இனி அதனை மாற்ற மாட்டேன். என் உயிரான ராமன் எல்லா உயிர்களுக்கும் நல்லவனாக இருக்க கூடியவன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என் உயிராக இருக்கும் ராமர் என்னை பிரிந்து காட்டிற்குள் சென்றால் உன் உயிர் என் உடலை விட்டு பிரிந்து விடும். நான் உன்னை யாசித்து கேட்கிறேன். ராமரை என்னிடம் இருந்து பிரித்து என்னை வருந்தும்படி செய்யும் இரண்டாவது வரத்தை கேட்காதே. ராமன் இந்த நாட்டை கடந்து செல்லாமல் இருக்க ஒரு நல்ல வார்த்தை சொல் உனது காலை பிடித்து கேட்கிறேன். அதர்மத்தை செய்ய என்னை தூண்டாதே என்றார்.

அனைத்தையும் கேட்ட கைகேயி கோபத்துடன் எனக்கு கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றா விட்டால் நீங்கள் சத்தியத்தை மீறியவர் ஆவீர்கள். கொடுத்த வாக்கை மீறியவர் தசரதர் என்ற பெயரை பெற்றுவிடுவீர்கள். நான் கேட்ட இரண்டு வரத்தை கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். நான் இன்றே என் உயிரை விட்டுவிடுவேன் என்று தீர்க்கமாக கூறினாள்.

அதிகாலை விடிந்தது. பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டர் செய்து முடித்தார். தசரத சக்ரவரத்தியை முடிசூட்டும் இடத்திற்கு அழைத்து வரச்சொல்லி சாரதி சுமந்தனிடம் வசிஷ்டர் தகவல் சொல்லி அனுப்பினார். கைகேயி இருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த சுமந்தன் தசரதரிடம் செய்தியை கூறினான். தசரதர் பேச இயலாமல் அமைதியாக இருந்தார். கைகேயி சுமந்தனிடம் ராமரை உடனே இங்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டார். தயங்கியபடியே தசரதரை பார்த்தான் சுமந்தன். ராமரை பார்க்க விரும்புகின்றேன் அவரை அழைத்து வா என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார் தசரதர். தசரதரின் முகவாட்டத்தை கண்ட சுமந்தன் ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது என்று எண்ணி ராமருடைய மாளிகைக்கு ரதத்தை செலுத்தினான்.

பட்டாபிஷேகத்திற்கு சீதையுடன் தயாராக இருந்தார் ராமர். தங்கள் சிற்றன்னை கைகேயியின் மாளிகையில் தசரத சக்ரவர்த்தி தங்களை காணவேண்டும் என்று தங்களை அழைத்து வரச்சொன்னார் என்று சுமந்தன் ராமரிடம் கூறினான். அலங்காரத்துடன் இருந்த சீதையை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு ராமர் லட்சுமனனை அழைத்துக்கொண்டு சுமந்தனுடன் தசரதரை பார்க்க கிளம்பினார். செல்லும் வழி எங்கும் மக்கள் ராமரை பார்த்து போற்றினார்கள். ராமர் மாளிகைக்குள் நுழைந்ததும் ராமா என்று அலறிய தசரதர் கீழே விழுந்தார். மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. இக்காட்சி ராமரை திகிழடையச் செய்தது. தன் தந்தைக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் ஏதேனும் செய்து விட்டேனோ என்று பயந்தார் ராமர். தன் தந்தையை சாந்தப்படுத்தி அவர் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். பின்பு கைகேயியின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். வழக்கமாக கைகேயியின் முகத்தில் இருக்கும் தாயன்பு தற்போது இல்லாததை ராமர் கவனித்தார்.

அம்மா எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தந்தை என்னிடம் அன்பாக பேசுவார். ஆனால் இப்போது வாடிய முகத்துடன் இருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா. தங்கள் கோபம் அடையும்படி நடந்துகொண்டேனா எதுவாக இருந்தாலும் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் சூழ்நிலைகளை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது என்றார். ராமரின் பேச்சைக்கேட்ட கையேயி தன் காரியத்தை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் அமைந்துவிட்டது என்று எண்ணி பேச ஆரம்பித்தாள். அரசருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் மனதிலுள்ள செய்தியை உன்னிடம் சொல்ல பயப்படுகிறார். அதனால் பேசாமலிருக்கிறார். அதனை நானே சொல்லுகிறேன். உன் தந்தை பல வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் தந்தார். அதனை இப்போது நான் கேட்டுப்பெற்றுக் கொண்டேன். அந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தோடு நீ தொடர்பு கொண்டிருக்கின்றாய். அதனை சொல்லவே உன் தந்தை தயங்குறார் என்றாள் கைகேயி.

ராமன் எந்த சலனமும் இல்லாமல் கைகேயியிடம் கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார். பெற்றோர்களிடமிருந்து வரும் ஆணையை செயல்படுத்துவது மகனின் கடமை. என் தந்தை மட்டுமல்ல தாங்கள் எனக்கு ஆணையிட்டாலும் கொளுந்து விட்டு எரியும் தீயில் குதிப்பேன். ஆழ்கடலில் மூழ்குவேன். விஷத்தையும் அருந்துவேன். எனக்கு எந்த ஒரு வருந்தமும் இல்லை. தாங்கள் ஆணையிடுங்கள் அதற்கு அடிபணிந்து அச்செயலை இப்போதே செய்து முடிக்கிறேன் என்றார்.

ராமர் இவ்வாறு சொன்னதும் கைகேயி நமது காரியத்தை சுலபமாக சாதித்துவிடலாம். நாம் நினைத்த காரியம் இனிது முடியப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் மகா பயங்கரமான செய்தியை ராமரிடம் சொல்ல ஆரம்பித்தாள். முதல் வரமாக உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி அரசனாக்க வேண்டும். இரண்டாவது வரமாக நீ தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு 14 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும். இதுவே நான் உனது தந்தையிடம் கேட்ட வரம். இதனை கொடுக்க உனது தந்தை மறுத்தால் கொடுத்த சத்தியத்தில் இருந்து மீறியவர் ஆவார். இந்த இரண்டு வரங்களும் என்னால் மாற்ற முடியாத திட்டங்களாகும் என்று சொல்லி முடித்தாள். ஆனால் ராமரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு இப்போதே அரச உடைகளை களைந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்கின்றேன். என் தந்தையின் வாக்கை எனது வாக்காக காப்பாற்றுவது எனக்கு கிடைத்த பாக்கியம். அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன். பரதனுக்காக எதையும் விட்டுக்கொடுத்து பரமசந்தோசத்தை அடைவேன். இதனால் எனக்கு எள் அளவும் வருத்தம் இல்லை. பரதனை தூதுவர்கள் மூலம் அழைத்து வரச்செய்து குறித்த நேரத்தில் முடிசூட்டி விடுங்கள். பரதன் அரசாள்வது எனக்கு மகிழ்ச்சியே. எனது தந்தை தாயாரிடமும் சீதையிடமும் லட்சுமனனுடனும் விடைபெற்று செல்லவேண்டும். அதற்கான கால தாமதத்திற்கு மட்டும் சிறிது அனுமதி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். ராமருடைய முகத்தில் சிறிதளவும் வருத்தத்திற்கு உண்டான அறிகுறி கூட கைகேயிக்கு தெரியவில்லை. ராமரை பார்த்து திகைப்படைந்தாள். உடன் சென்ற லட்சுமனனுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பம் தெளிவாக புரிந்தது. தாய் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக தென்பட்டான். தசரதர் ராமர் நிலை என்ன ஆகுமோ என்று நடுநடுங்கிப்போய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தார்.

ராமர் தசரதரையும் கைகேயியிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து லட்சுமனனுடன் தனது தாய் கௌசலையை பார்க்க சென்றார். கைகேயி தனக்கு பின்னால் வரும் வரப்போகும் துக்கத்தை அறியாமல் தன்னுடைய திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்.

ராமர் தன்னுடன் வந்த வெண்குடை சமாரம் என்று இளவரசனுக்கு உரிய அனைத்து சுகங்களும் தனக்கு வேண்டாம் யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தாய் கௌசலையின் மாளிகையை நோக்கி லட்சுமணனுடன் தனியாக செல்ல ஆரம்பித்தார். லட்சுமணன் கண்கள் சிவக்க கோபத்துடன் ராமரை பின் தொடர்ந்தார்.

கௌசலையின் மாளிகையில் அனைவரும் ராமரின் பட்டாபிஷேகத்தை காணச்செல்வதற்கு மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். ராமர் வந்ததை கண்ட கௌசலை ராமனை கட்டியணைத்து வரவேற்றாள். ராமருக்கு உரிய ஆசனத்தில் அமரச்சொன்னாள். ராமர் தாயே இந்த ஆசனத்தில் என்னால் அமர இயலாது. புல்லை பரப்பி உட்கார வேண்டிய தவஸ்வி தான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தியை கொண்டு வந்திருக்கின்றேன். தங்களையும் சீதையையும் லட்சுமணனையும் பிரிந்து காட்டிற்கு செல்லப்போகிறேன். தாங்கள் இச்செய்தியை பொருத்துக்கொண்டு என் செயலுக்கு ஆசி கூறி எனக்கு விடை கொடுக்கவேண்டும் என்று நடந்தவற்றை விரிவாக எடுத்துக்கூறி இன்றே நான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தார்.

ராமர் சொன்னதை கேட்ட கௌசலை அம்பினால் தாக்கப்பட்ட பெண்மானைப்போல கீழே விழுந்தார். எனக்கு பிள்ளையாக பிறக்காவிட்டால் உனக்கு இந்த தூன்பம் வந்திருக்காது. தசரதர் ஆட்சியில் இருக்கும் போது மூத்த பட்டத்து அரசிக்கான எந்த சுகத்தையும் கண்டதில்லை. உன் சிற்றன்னைகளே அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களின் பணிப்பெண் போலவே நான் நடத்தப்பட்டேன். என் கணவர் என்னை சற்று தள்ளியே வைத்திருந்தார். நீ என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது நீயும் என்னை விட்டு பிரிந்தால் என் கதி என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. நிச்சயமாக மரணித்து விடுவேன். கன்றின் மேல் உள்ள பாசத்தால் கன்றைத்தொடர்ந்து செல்லும் பசுவைப்போல் உன்னை தொடர்ந்து வருகிறேன் என்னையும் அழைத்துச்செல் என்று அழுதபடி சொன்னார்.

கௌசலையின் அழுகையினால் வருந்திய லட்சுமணன் பேச ஆரம்பித்தான். பெரியன்னையே சிற்றன்னையின் சொல்லிற்கான ராமர் காட்டிற்கு செல்வது எனக்கும் சம்மதமில்லை. நாட்டைவிட்டு காட்டிற்கு செல்லும் அளவிற்கு ராமர் குற்றம் ஒன்றும் சொல்லவில்லை. அவரிடம் மறைமுகமாக கூட யாரும் இதுவரை ஒர் குற்றத்தை கண்டதில்லை. வயோதிகரான தந்தையின் குணம் மாறிவிட்டது. கைகேயின் துர்செயலால் அவர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அவருடைய காலம் கடந்துவிட்டது. மக்கள் அனைவரும் ராமரை சிம்மாசனத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள். அண்ணா உடனே அரச பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுகிறேன் என்று கோபத்துடன் கூறினான் லட்சுமணன்.


Key Events:

Rama's Coronation: King Dasharatha decides to crown his eldest son, Rama, as the next king of Ayodhya. This decision brings immense joy to the people of Ayodhya, as Rama is loved and respected for his virtues and fairness.

Manthara’s Scheming: Manthara, the maidservant of Queen Kaikeyi, manipulates Kaikeyi into believing that her own son, Bharata, should be king instead of Rama. She sows seeds of fear and jealousy in Kaikeyi's mind, convincing her that her status will diminish if Rama becomes king.

Kaikeyi's Two Boons: Influenced by Manthara, Kaikeyi reminds Dasharatha of the two boons he had promised her long ago. She demands that Rama be sent into exile in the forest for 14 years and that Bharata be crowned as the king of Ayodhya. Dasharatha is heartbroken by these demands but feels compelled to honor his promises.

Rama's Adherence to Dharma: Despite Dasharatha's anguish, Rama accepts his father’s decision without hesitation. He remains calm and resolute, demonstrating his deep commitment to dharma (righteousness). Sita, his wife, insists on accompanying him into exile, as does his brother Lakshmana, who refuses to leave Rama's side.

The People's Grief: As Rama, Sita, and Lakshmana prepare to leave for the forest, the people of Ayodhya are devastated. They plead with Rama to stay, but he remains firm in his resolve to fulfill his father's wishes. After taking blessings from his mother and other elders, Rama departs for the forest.

Bharata's Return: Bharata, who was away during these events, returns to Ayodhya only to discover his father’s death and the exile of Rama. He is horrified by his mother’s actions and refuses to accept the throne, insisting that Rama is the rightful king.

Bharata's Meeting with Rama: Bharata goes to the forest to persuade Rama to return to Ayodhya and take the throne. However, Rama, bound by his sense of duty, refuses. Bharata then asks for Rama’s sandals as a symbol of his authority and returns to Ayodhya, where he places the sandals on the throne and rules as Rama’s representative, awaiting his return.

Themes:

Dharma (Righteousness): The central theme of the Ayodhya Kanda is the adherence to dharma, as exemplified by Rama’s willingness to accept exile to uphold his father’s word.

Family Relationships: This section of the epic explores the complexities of family dynamics, including the influence of ambition and jealousy, as seen in Kaikeyi's actions, and the unwavering loyalty between brothers, as seen in Bharata’s devotion to Rama.

Sacrifice: Rama’s sacrifice of his comfortable life and rightful place as king is a significant aspect of this Kanda, highlighting his commitment to duty and righteousness above personal desires.

The Ayodhya Kanda is crucial in the Ramayana as it sets the stage for the epic’s central events, revealing Rama’s character, his devotion to dharma, and the deep bonds within his family.



Share



Was this helpful?