இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஆரண்ய காண்டம் - 1

Aranya Kanda is the third book of the Ramayana and describes the events that take place during Rama, Sita, and Lakshmana's 14-year exile in the forest. This section of the epic is filled with adventures, challenges, and significant encounters that set the stage for the major conflict in the Ramayana.

ராமாயணம்

ஆரண்ய காண்டம் - 1

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அடர்ந்த தண்டகாரண்ய காட்டிற்குள் சென்றனர். சீதை அங்கே இருந்த அழகிய மலர்களை பார்த்து மகிழ்ந்து கொண்டே நடந்தாள். சிறிது தூரத்தில் வேத மந்திரங்கள் கேட்டது. சத்தம் வரும் திசை நோக்கி சென்றார்கள். அங்கே மிருகங்களும் பறவைகளும் ஒற்றுமையுடன் பயமின்றி சுற்றிக்கொண்டிருந்தன. அங்குள்ள ரிஷிகள் ராமரைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்று உபசரித்தனர். ராமர் அன்று இரவு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். உபசாரங்கள் அனைத்தும் முடிந்ததும் ராமரிடம் விண்ணப்பம் ஒன்று செய்தார்கள்.

தாங்கள் தர்மத்தை காப்பற்றுகின்றவர். கீர்த்தி மிக வாய்க்கப்பெற்றவர். நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் தாங்களே அரசர். இக்காட்டில் எங்களை துன்புறுத்தும் கொடிய அரக்கர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ராமர் ரிஷிகளிடம் நீங்கள் மிகப்பெரும் தபஸ்விகள். உங்கள் தவத்தின் சக்தி அளவிட முடியாதது. சாபத்தை இட்டு அரக்கர்களை அழித்துவிடலாமே என்றார். இதனைக்கேட்ட ரிஷிகள் நாங்கள் கோபத்தை வென்று விட்டவர்கள். புலன்களை வென்றவர்கள். எங்களுக்கு கோபம் வராது. நாங்கள் சாபமிட்டால் எங்களின் தவவலிமை குன்றிவிடும். தவம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ராமர் அன்று இரவு அங்கே தங்கினார்.

அதிகாலை ரிஷிகளிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அடர்ந்த காட்டிற்குள் சென்றார்கள். காட்டிற்குள் பெரிய மலை போன்ற ரட்சசன் ஒருவன் மூவரின் முன்னே வந்து நின்றான். அவன் வடிவம் கோரமாக இருந்தது. கையில் ஒரு சூலாயுதம் இருந்தது. அதில் அப்போது தான் கொல்லப்பட்ட சிங்கத்தின் தலையும் யானையின் தலையும் தொங்கிக்கொண்டு இருந்தது. இடி இடித்தாற் போல் கர்ஜனை செய்தான். நான் விராதன் அரக்கன். யாரும் உள்ளே வர முடியாத காட்டிற்குள் இருக்கும் ரிஷிகளை கொன்று தின்று சுற்றிதிரிவேன். இன்று உங்களையும் இப்போதே கொன்று சாப்பிடப்போகின்றேன். நீங்கள் பார்க்க பாலகர்கள் போலிருக்கின்றீர்கள். முனிவரைப் போல் உடை உடுத்தி இருக்கின்றீர்கள். கையில் ஆயுதம் வைத்திருக்கின்றீர்கள். உடன் ஒர் பெண்ணும் இருக்கிறாள். முனிவர்களைப் போல் வேடம் போட்டு ஏமாற்றி தப்பி விடலாம் என்று நினைத்தீர்களா? ரிஷிகளை தின்று உயிர் வாழும் எனக்கு இப்பெண் இனி மனைவியாக இருப்பாள். உங்களை இப்போதே கொன்று தின்று விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே சீதையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டான்.

சீதை ரட்சசனின் கையில் நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். சீதை நடுங்குவதை பார்த்த ராமர் எந்த விதத்தில் ராட்சசனை எதிர்ப்பது என்று தோன்றாமல் சில வினாடிகள் தன் அமைதியை இழந்தார். பார் லட்சுமணா சீதையை எதையும் பொறுக்கும் என்னால் இதனைக் கண்டு பொறுக்க முடியவில்லை. இதைக்காணத் தான் கைகேயி நம்மை இங்கே அனுப்பினாளா என்று மனம் கலங்கி பேசினார். ராமர் தைரியமும் அமைதியும் இழந்து பேசியதை கண்ட லட்சுமணன் குழப்பமடையாமல் பேசினான். நீங்கள் இந்திரனுடைய பலம் பெற்றவர். உங்களுடன் நானும் இருக்கிறேன். ஏன் இப்படி பேசுகின்றீர்கள். அயோத்தியில் என் கோபத்தை அடக்கினீர்கள். இப்போது பாருங்கள் அந்த கோபம் அனைத்தையும் இந்த ராட்சசன் மீது காட்டி இவனை கொன்று என் கோபத்தை தணித்துக்கொள்கிறேன் என்றான். உடனே ராமர் தெளிந்தார். முகத்தில் அமைதியுடன் வீரம் ஜொலித்தது. ராமரும் லட்சுமணனும் அம்பில் வில்லை பூட்டி ராட்சசனுக்கு குறி வைத்தார்கள்.

ராமர் ராட்சசனிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த ராஜ குமாரர்கள். இப்பெண் சீதை என் மனைவி. நாங்கள் வனவாசம் செய்ய இக்காட்டிற்குள் வந்திருக்கின்றோம். அப்பெண்ணை விட்டுவிடு இல்லையென்றால் இப்போதே என் அம்பு உன் உடலை துளைக்கும் என்றார். ராட்சசன் சிரித்தான். எனது தந்தை பெயர் ஜயன். தாயார் பெயர் சதஹ்ரதை என்னை அனைவரும் விராதன் என்று அழைப்பார்கள். ஆயுதத்துடன் இருக்கும் சத்ரியர்களே உங்கள் ஆயுதங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஆயுதங்களால் என் உயிர் போகாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கின்றேன். இப்பெண்ணை விட்டு ஒடிவிடுங்கள். இல்லை என்றால் உங்களை கொன்று இப்பெண்ணை கொண்டு செல்வேன் என்றான் ராட்சசன்.

ராமர் நீ எமனிடம் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று கூறி தன்னுடைய அம்பை ராட்சசன் மீது விட்டார். அம்பு ராட்சசனின் உடலை துளைத்துக் கொண்டு ரத்தத்துடன் வெளியே வந்து விழுந்தது. ராட்சசன் அப்படியே நின்று கொண்டிருந்தான். கோபத்துடன் சீதையை இறக்கிவிட்டு தன்னுடைய சூலத்தை லட்சுமணன் மீது வீச முயன்றான். ராமர் லட்சுமணன் இருவரும் ராட்சசன் மீது அம்பு மழை பொழிந்தார்கள். அம்புகள் அனைத்தும் ராட்சசனின் உடலில் பாய்ந்தது. பெரிய முள்ளம் பன்றி போல் நின்ற ராட்சசன் சிரித்தான். உடலை ஒரு சிலுப்புச் சிலுப்பினான். உடலில் இருந்த அம்புகள் அனைத்தும் கீழே விழுந்தது. ராம லட்சுமணர்களை சூலத்தை வைத்து தாக்க முயற்சித்தான் ராட்சசன். ராமரின் ஒரு அம்பு சூலத்தை இரண்டாக உடைத்தது. ராமரும் லட்சுமணனும் கத்தியை எடுத்துக்கொண்டு அவனை தாக்க ஆரம்பித்தார்கள். ராட்சசன் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு இருவரையும் இரு கைகளால் தூக்கிக்கொண்டு காட்டிற்குள் ஓட ஆரம்பித்தான்.

அடர்ந்த காட்டிற்குள் ராமரும் லட்சுமணனும் கண்ணில் இருந்து மறைந்ததை பார்த்த சீதை அழ ஆரம்பித்தாள். ராட்சசனின் கைகளில் இருந்த இருவரும் அவனது இரு கைகளையும் உடைத்து பிய்த்து எரிந்தார்கள். ராட்சசன் கீழே விழ்ந்தான். ஆயுதங்களால் இவனுக்கு மரணமில்லை என்பதை அறிந்து தன் கரங்களாலும் காலால் மிதித்தும் ராட்சசனை கசக்கினார்கள். ராமரும் லட்சுமணனும் ராட்சசனின் உடலை எவ்வளவு கசக்கினாலும் பிரம்மாவின் வரத்தால் ராட்சசன் உயிர் போகவில்லை. ஆனால் வலியினால் ராட்சசன் கதற ஆரம்பித்தான். ராமர் தனது காலை ராட்சசன் மார்பின் மீது மிதித்தார். அப்போது ராட்சசன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். பகவானே உங்கள் பாதம் என் மீது பட்டதும் எனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து விட்டது. நான் ஒரு கந்தர்வன் மேலுலகம் செல்ல நான் பெற்ற வரமும் சாபமும் எனக்கு தடையாய் இருக்கிறது. என் உயிரை எப்படியாவது தாங்கள் எடுத்துவிட்டால் நான் மேலுலகம் சென்றுவிடுவேன் என்றான். ராமரும் லட்சுமணனும் ஆயுதங்கள் ஏதும் இன்றி ராட்சசன் உடலை தனி தனியாக பிய்த்து ஒரு பெரிய பள்ளம் ஒன்று தோண்டி அதில் போட்டு முடிவிட்டனர். ராட்சசனும் கந்தர்வ உருவம் பெற்று ராமரை வணங்கி மேலுலகம் சென்றான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடம் சென்று நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னார்கள். அங்கிருந்து கிளம்பி மூவரும் சரபங்க முனிவரின் ஆசிரமம் சென்றார்கள்.

ராமர் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்கு வரும் முன்னதாகவே இந்திரன் தனது தேவகணங்களுடன் வந்து சரபங்க முனிவருடன் பேசிக்கொண்டிருந்தான். ராமர் ஆசிரமத்திற்குள் நுழைவதை அறிந்த இந்திரன் தன் பேச்சை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். சரபங்க மகரிஷியின் பாதங்களில் விழுந்து ராமர் சீதை லட்சுமணன் மூவரும் வணங்கி வழிபாடு செய்தார்கள். மூவரையும் பார்த்து மகிழ்ந்த சரபங்க மகரிஷி ராமா உங்களை பார்ப்பதில் பேரானந்தம் அடைகின்றேன். உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் ராமா. என்னுடைய உலக வாழ்க்கை வினைகள் எல்லாம் முடிந்து மேலுலகம் செல்லும் காலம் வந்து விட்டது. என்னை மேலுலகம் அழைத்துச் செல்ல சிறிது நேரத்திற்கு முன்பு இந்திரன் வந்திருந்தான். உன்னை காணாமல் மேலுலகம் செல்ல விரும்பவில்லை எனவே இந்திரனிடம் ராமனை காண ஆவலாய் இருக்கின்றேன் ராமரை கண்ட பின்பு வருகிறேன். சிறிது நேரம் காத்திருக்குமாறு இந்திரனிடம் கூறினேன். ராமரை நான் இன்னும் சந்திப்பதற்கான காலம் வரவில்லை. தற்போது ராமரை காண காத்திருப்பது சரியாக இருக்காது என்று நான் மேலுலகம் செல்ல உடலை விடும் வழிகளை சொல்லி விட்டு இந்திரன் சென்று விட்டான். நீ மண்ணுலகில் நிறைவேற்றுவதற்கான அரிய பெரிய செயல்களை செய்து முடித்த பின்பு இந்திரனே உன்னை வந்து சந்திப்பான். பகவானே இப்போது என்னுடைய புண்ணிய பலன்கள் எல்லாம் உங்களிடம் தந்தேன் பெற்றுக்கொள்ளுங்கள் சரபங்க முனிவர்.

ராமர் சரபங்க முனிவரிடம் நான் சத்ரிய குலத்தில் பிறந்தவன். என்னுடைய குல தர்மப்படி என்னிடம் கேட்பவர்களிடம் நான் தான் கொடுக்க வேண்டும். யாரிடமும் எதுவும் பெற்றுக்கொள்ள கூடாது. தாங்கள் குறிப்பிட்ட நல் புண்ணியங்களை நல் கார்மாக்கள் செய்து என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே தாங்கள் கொடுக்கும் புண்ய பலன்களை என்னால் பெற்றுக்கொள்ள இயலாது. நாடு நகரம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தபஸ்வியாய் காட்டில் வாழ வந்திருக்கின்றேன். இக்காட்டில் வசிக்க எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தேர்ந்தேடுத்து சொல்லுங்கள் என்றார்.

இக்காட்டில் சுதீட்சணர் என்ற ரிஷி இருக்கிறார். அவர் முக்காலமும் அறிந்தவர். இந்த மந்தாகினி நதியின் எதிர் திசையில் இருக்கும் புனிதமான இடத்தில் அவர் தவம் செய்து கொண்டிருக்கின்றார். அவரிடம் சென்று இந்த வனத்தில் எங்கே வசிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள். உன்னை சந்தித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் உன்னை சந்திக்கும் என்னுடைய ஆசை தீர்ந்தது. சிறிது நேரம் இங்கே இருப்பாயாக. நான் மேலுலகம் செல்லும் நேரம் வந்து விட்டது என்று சொல்லி பெரிய நெருப்பை வளர்த்து அதனுள் நுழைந்தார் சரபங்க முனிவர். நெருப்பில் இருந்து ஒரு திவ்யமான ஒளி உருவமாக தோன்றி பிரம்பலோகத்தை அடைந்தார் சரபங்க முனிவர்.

விராதன் ராட்சசன் ராமரால் கொல்லப்பட்டதை அறிந்த காட்டிலிருக்கும் முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமரை காண அனைவரும் முடிவு செய்து ராமரை காண கூட்டமாக புறப்பட்டார்கள்.

வனத்தில் ராமரை சந்தித்த முனிவர்கள் கூட்டம் ராமரை வணங்கி ராட்சசர்களிடம் தாங்கள் அனுபவித்த துன்பங்களை எடுத்துக் கூறினார்கள். தாங்கள் இங்கே தங்கியிருப்பதனால் எங்களுடைய தவங்களும் விரதங்களும் இடையூறு இன்றி இனி நடைபெறும் இது நாங்கள் செய்த பாக்கியம். பம்பை நதிக்கரையிலும் மந்தாகினி நதிக்கரையிலும் உள்ள முனிவர்களும் ரிஷிகளும் ராட்சசர்களின் கொடுமையினால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அரசனுடைய கடமை குடிமக்களைக் காப்பாற்றுவதாகும். அதை செய்யாத அரசன் அதர்மம் செய்தவனாகின்றான். குடும்பங்களில் இருப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவது போல முனிவர்களும் ரிஷிகளும் செய்யும் தவத்தின் பலனில் நான்கில் ஒரு பங்கு அரசனுக்கு சேர்ந்து விடுகின்றது. நாங்கள் படுக் கஷ்டங்கள் சொல்ல முடியாத அளவு உள்ளது. நீ இந்திரனுக்கு சமமானவனாக இருக்கின்றாய் உன்னையே சரணடைகிறோம் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.

ராமர் முனிவர்களைப் பார்த்து முனிவர்களே ஏன் வருந்துகின்றீர்கள்? நீங்கள் இட்ட கட்டளையை ஏற்று செய்ய நான் கடமைப்பட்டவன் ஆவேன். அயோத்தியில் என் தந்தை இட்ட கட்டளைக்காகவே வனத்திற்கு வந்தேன். என் தந்தையில் ஆணைப்படி நடக்கும்போது உங்களுக்கும் நன்மை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியமே. நான் வனத்தில் இருந்து கொண்டு ராட்சசர்களை அழித்து உங்களின் துன்பங்களை நீக்குவேன். தைரியமாக இருங்கள் என்று ராமர் கூறினார். முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ராமர் லட்சுமணன் சீதை மூவரும் சுதீட்சணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தை நோக்கி சென்றார்கள்.

ராமர் சுதீட்சணரின் ஆசிரமத்திற்குள் சென்று அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் செலுத்தி எனது பெயர் ராமன் தங்களை தரிசிக்க வேண்டி வந்துள்ளேன் தாங்கள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றார். அதற்கு சுதீட்சணர் தர்மத்தைக் காப்பவனே உன்னை நான் வரவேற்கிறேன். நீ இந்த ஆசிரமத்திற்குள் வந்ததால் இந்த ஆசிரமம் ஒளிபெற்று விளங்குகின்றது. நீயே இதற்கு எஜமான். உன் வரவுக்காகவே நான் காத்திருந்தேன். இல்லையென்றால் இதற்கு முன்பே எனது உடலை விட்டுவிட்டு மேலுலகம் சென்றிருப்பேன். நீ இராஜ்ஜியத்திலிருந்து வெளியே வந்து சித்திரக்கூடம் வந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். நான் சம்பாதித்திருக்கும் புண்ணியம் அனைத்தும் உன்னுடையதாகும். நீயும் உனது மனைவியும் லட்சுமணனும் அதைப் பெற்றுக் கொண்டு தர்மத்தைக் காக்க வேண்டும் என்றார்.

ராமர் சுதீட்சண முனிவரிடம் என் புண்ணியத்தை நானே தவம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது குலதர்மம். தங்களுடைய ஆசிர்வாதத்தால் அவ்வாறே செய்வேன். காட்டிலிருந்து வனவாசம் செய்ய விரும்புகின்றேன். சரபங்கர் முனிவரின் வழிகாட்டுதலின் படி வனத்தில் தங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தங்களின் ஆலோசனைகள் மூலம் கேட்டுப் பெற வந்தேன் என்றார். சுதீட்சணர் முனிவரின் முகம் மலர்ந்தது. இந்த ஆசிரமத்தையே உனது இருப்பிடமாக வைத்துக்கொள்ளலாம். ரிஷிகள் பலர் இங்கே தபஸ்விகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ரிஷிகளின் தவத்திற்கு இடையூராக கொடூரமான விலங்குகள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றன. விலங்குகளின் தொந்தரவை தவிர்த்து இங்கு வேறு எந்த குறையும் இல்லை என்று கூறினார். சுதீட்சணர் முனிவர் சொன்ன வார்த்தையின் பொருளை புரிந்து கொண்ட ராமர் தன்னுடைய வில்லின் நாணில் சத்தத்தை எழுப்பி இந்த காட்டில் தொந்தரவு கொடுக்கும் விலங்குளை ஒழிப்பது எனது பணியாக ஏற்றுக்கொள்கிறேன். தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே நாங்களும் தங்கினால் அது தங்களின் தவத்திற்கு இடையூராக இருக்கும். ஆகவே இக்காட்டில் தனியாக குடில் அமைத்து தங்கிக்கொள்ள அனுமதி தாருங்கள் என்று ராமர் கேட்டுக்கொண்டார்.

சுதீட்சணர் முனிவர் ராமரிடம் அருகில் இருக்கும் தண்டகாரணியத்து ரிஷிகள் அனைவரும் தவம் செய்து சித்தி அடைந்தவர்கள். அவர்களை பார்த்து ஆசி பெற்றுக்கொள்ளுங்கள். அங்கு மிக ரம்யமான மலர்களும் தடாகங்களும் பறவைகளும் விலங்குகளும் இருக்கின்றது. அங்கு நீங்கள் தங்குவதற்கு குடில் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான போது இங்கு வந்து தங்கிக்கொள்ளுங்கள் என்று ஆசிர்வதித்தார். சுதீட்சணர் முனிவரை மூவரும் வலம் வந்து வணங்கி அவரிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

சீதை ராமரிடம் தனக்கு ஒரு சந்தேகம் அதனை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டாள். நாதரே நான் தங்களை எதிர்த்து பேசுவதாக தாங்கள் எண்ண வேண்டாம். எனக்கு தோன்றுவதை சொல்கிறேன். எது தருமம் எது கடமை என்று தங்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் ஆசையினால் மூன்று பெரும் பாவங்களை செய்வார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 1. பொய் பேசுவது 2. தனக்கு சொந்தம் இல்லாத பெண்ணை தீண்டுவது 3. நம்மை எதிர்த்து தீங்கு செய்யாதவர்களை துன்புறுத்துவது. இந்த மூன்றில் பொய் என்ற ஒன்று தங்களிடம் இல்லவே இல்லை. மாற்ற பெண்களை மனதளவில் கூட நினைக்க மாட்டீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்பொது நான் பயப்படுவது மூன்றாவது விஷயத்தை பற்றியது. காட்டில் இருக்கும் அசுரர்களை கொல்வதாக முனிவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டீர்கள். தீயவர்களை அழிப்பதும் மக்களை காப்பதும் சத்ரிய தருமம் தான். ஆனால் இப்போது நாம் தபஸ்விகளாய் இக்காட்டில் தவம் செய்ய வந்திருக்கின்றோம். தபஸ்விகளாய் இருக்கும் நம்மை எதிர்க்காத ஒருவனை நாம் ஏன் கொல்ல வேண்டும். அரச பதவிகளில் இருப்பவர்களின் கடமை அது. அக்கடமையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் என்று கேட்டாள் சீதை.

ராமர் சீதையிடம் முனிவர்கள் ரிஷிகள் நேரில் வந்து உதவி கேட்காவிட்டாலும் அவர்களை காப்பாற்றுவது சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய கடமை. இக்காட்டிற்கு நாம் வந்தவுடன் இங்கிருக்கும் ரிஷிகள் நம்மிடம் முதலில் சொன்னது உங்களை சரண்டைகின்றோம் அபயம் எங்களை ராட்சசர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். நாம் இப்போது தபஸ்விகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தபஸ்வியாக இருப்பவர்களிடம் யார் எதை கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பது தருமம். எனவே காப்பாற்றுகின்றேன் என்று சொல்லிவிட்டேன். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக நம்மை எதிர்க்காத ராட்சசர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை. தபஸ்விகளுக்கான தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். இரண்டாவதாக நாம் தபஸ்வியாக வாழ்ந்தாலும் வில் அம்புடன் ஆயுதம் ஏந்தி நிற்கின்றோம். துன்பப்படும் மக்களை காப்பாற்றுவது அரசனுடைய கடமையாக இருந்தாலும் சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய பொது கடமை தஞ்சமடைந்தவர்களை காப்பாற்றுவதாகும். அதன்படி ராட்சசர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை. சத்ரிய தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். என்னுடைய உயிர் இருக்கும் வரை கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். இதற்காக உன்னையும் லட்சுமணனையும் கூட தியாகம் செய்ய தயங்க மாட்டேன் என்றார் ராமர். சீதை தனது சந்தேகம் தீர்ந்தது என்றாள்.

தண்டகாரண்ய காட்டில் நிறைய ரிஷிகள் குடில்கள் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மான் கூட்டங்கள், யானை கூட்டங்கள், பறவைகள், அழகிய பூக்களை உடைய செடிகள் தடாகங்கள் என அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கு ராமரும் லட்சுமணனும் தாங்கள் தங்குவதற்கு குடில் ஒன்று அமைத்துக்கொண்டார்கள். அங்கிருக்கும் ரிஷிகளின் குடிலில் மாதம் ஒரு குடிலுக்கு விருந்தினர்களாக சென்றும் தவ வாழ்க்கையை பத்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழித்தார்கள்.

அகத்திய முனிவரை சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்ற எண்ணம் ராமருக்கு வந்தது. சுதீட்சண முனிவரை சந்தித்த ராமர் அகத்திய முனிவரை காண ஆவலாக இருக்கிறது அவரின் இருப்பிடத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். சுதீட்சண முனிவர் நானே உன்னிடம் அகத்திரை சந்தித்து ஆசி பெற்று வா என்று சொல்ல எண்ணியிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய் மிக்க மகிழ்ச்சி. நாம் இருக்குமிடத்தில் இருந்து தென் திசையில் நான்கு யோசனை தூரத்தில் திப்பிலி மரங்களும் பழங்கள் வகை மரங்களும் நிறைந்த காட்டில் அகத்திய முனிவரின் தம்பி இத்மவாஹர் குடில் இருக்கிறது. அங்கு சென்று ஒர் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் தென் திசையில் ஒர் யோசனை தூரம் பயணித்தால் வரும் காட்டில் அகத்திய முனிவரின் குடில் இருக்கின்றது அங்கு சென்று அவரை சந்திக்கலாம். இன்றே புறப்படுவாய் என்று ராமருக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார் சுதீட்சண முனிவர்.

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியரின் தம்பி இத்மவாஹர் ஆசிரமத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டு அகத்தியரின் ஆசிரமம் நோக்கி சென்றார்கள். தூரத்தில் மிருகங்களும் பறவைகளும் விளையாடிக்கொண்டும் நடுவில் முனிவர்கள் சிலர் பூஜைக்காக மலர்களை சேகரித்துக் கொண்டும் இருப்பதை பார்த்தார்கள். அகத்தியரின் ஆசிரமத்திற்கு அருகில் வந்துவிட்டோம் என்பதை உணர்ந்த ராமர் லட்சுமணனிடம் முதலில் நீ மட்டும் சென்று அகத்தியரிடம் உள்ளே வருவதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டு வா என்றார். லட்சுமணன் மட்டும் தனியாக ஆசிரமத்தின் அருகில் சென்று அங்கிருந்த அகத்தியரின் சீடர் ஒருவரிடம் தசரதரின் புதல்வர்கள் ராமர் லட்சுமணன் இருவரும் ஜனகரின் மகள் சீதையும் அகத்தியரை பார்த்து ஆசி பெற காத்திருக்கின்றார்கள் வரலாமா என்று கேட்டு செய்தி சொல்லி அனுப்பினான். சீடரும் அகத்தியரிடம் லட்சுமணன் சொன்னதை அப்படியே சொன்னார். இதனை கேட்ட அகத்தியர் வெகுகாலமாக அவர்களின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன். நல்ல படியாக உபசரித்து அவர்களை விரைவாக அழைத்துவா அவர்களை பார்க்க ஆவலாக இருக்கின்றேன் என்று சீடரிடம் கூறினார். மூவரும் அகத்தியரை காண சென்றார்கள்.

ராமரை கண்டதும் அகத்தியர் தானே எழுந்து வந்து ராமரை கட்டி அணைத்து வரவேற்றார். நீங்கள் சித்திர கூடம் வந்த போதே எனக்கு தகவல் வந்தது. நீங்கள் எப்படியும் இங்கு வருவீர்கள் என்று தங்களின் வருகைக்காக காத்திருந்தேன். உங்கள் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற காட்டில் இத்தனை வருடங்கள் வனவாசம் இருந்தீர்கள். மீதி இருக்கும் சில வருடங்கள் உங்களின் விரதம் பூர்த்தியாகும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம் என்றார் அகத்தியர். அதற்கு ராமர் நான் தண்டகாரண்ய முனிவர்களுக்கு அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கின்றேன் எனவே தங்களிடம் ஆசி பெற்றவுடன் தண்டகாரண்யம் செல்ல வேண்டும் என்றார். ராமரின் கூற்றை ஏற்றுக்கொண்ட அகத்தியர் மூவருக்கும் சிறப்பான விருந்தளித்து உபசரித்தார்.

அகத்திய முனிவர் ராமரிடம் தங்கத்தால் செய்யப்பட்டு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில் எடுக்க எடுக்க குறையாத அம்புகள் உள்ள அம்பறாத்தூணி மற்றும் கத்தியை அளித்தார். இந்த ஆயுதங்கள் விஷ்ணுவுக்காக தேவலோகத்து விஸ்வகர்மா செய்திருந்தார். முற்காலத்தில் இந்த ஆயுதங்களை வைத்து விஷ்ணு பலமுறை அசுரர்களை அழித்தார். அதனை இப்போது உன்னிடம் தருகிறேன். இதனை வைத்து ராட்சசர்களை அழிப்பாயாக என்று ஆசி கூறினார். பின்பு ராமரிடம் தற்போது நீங்கள் தங்கியிருக்கும் குடிலுக்கு அருகில் இருக்கும் பஞ்சவடி என்னும் இடத்தில் குடில் அமைத்து மீதி இருக்கும் வனவாச நாட்களை கழியுங்கள் என்று ஆசி கூறினார். ராமரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து கிளம்புவதறகு அனுமதி தருமாறு கேட்டுக்கொண்டார். அகத்தியர் ராம லட்சுமணனிடம் சீதை அரண்மனையில் சுகமாக வாழ்ந்து வந்தவள். காட்டில் கடினங்களுக்கு நடுவில் வசிக்காத ராஜகுமாரி. உங்களுக்காக கடினங்களை பொருட்படுத்தாமல் உங்களுடன் வசித்து வருகிறாள். பஞ்சவடியில் சீதையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு ஆசி கூறி அவர்கள் செல்ல அனுமதி கொடுத்தார். மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடியை நோக்கி பயண்ம் செய்தார்கள்.

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியர் சொன்ன வழியை பின்பற்றி பஞ்சவடி இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். பஞ்சவடிக்கு அருகில் செல்லும் போது பெரிய கழுகைக் கண்டார்கள். அதன் வடிவத்தைக் கண்டு அது ராட்சசனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஆயுங்களை எடுத்தார் ராமர். மூவரையும் பார்த்த கழுகு வந்திருப்பவர்கள் தசரதரின் சாயலாகத் தெரிகிறதே என்று எண்ணி யார் நீங்கள் என்று கேள்வி கேட்டது. அதற்கு ராமர் நாங்கள் அயோத்தி ராஜகுமாரர்கள். எங்கள் தந்தை பெயர் தசரதர். நாங்கள் அகத்தியரின் வழிகாட்டுதலின் பெயரில் பஞ்சவடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். கழுகு வடிவத்தில் இருக்கும் நீ யார் என்றார். அதற்கு கழுகு கருட பகவானுடைய தம்பி அருணனின் மகன் நான். எனது பெயர் ஜடாயு. எனக்கு சம்பாதி என்ற தம்பி இருக்கின்றான். நான் உங்கள் தந்தை தசரதரின் நெருங்கிய நண்பர் என்றது ஜடாயு. தனது தந்தையின் நண்பர் என்ற சொல்லை கேட்ட ராமர் காட்டில் மிகப்பெரிய துணையாக ஜடாயு இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்து ஜடாயுவை கட்டி அணைத்தார்.

ஜடாயு ராமரிடம் எனது நண்பர் தசரச மன்னர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தது. சத்திய நெறியை விட்டு தவறக்கூடாது என்கின்ற உறுதியில் மிகவும் துன்பத்தின் உச்சியில் எனது தந்தை சொர்க்கம் சென்று விட்டார் என்று வருத்ததுடன் கூறினார் ராமர். இதனைக் கேட்ட ஜடாயு கண்களில் நீர் வழிய துயரப்பட்டு ராமரின் அருகில் அமர்ந்தது. தசரதர் உடலாகவும் நான் உயிராகவும் இருந்தோம். யமன் என் உயிரை விட்டுவிட்டு தசரதரின் உயிரை எப்படி கொண்டு சென்றான்? என்று ராமர் தந்தை இழந்த துயரத்தை மறுபடியும் ஞாபகமூட்டும்படி பேச ஆரம்பித்தது ஜடாயு. உங்களை எனது தந்தையின் உருவில் உங்களை காண்கின்றோம் என்று ராம லட்சுமணர்கள் இருவரும் ஜடாயுவுக்கு மரியாதை செலுத்தினார்கள். தசரதர் மேலுலகம் சென்றதும் நீங்கள் அயோத்தையை ஆட்சி செய்யாமல் இங்கு என் தபஸ்விகளை போல் உடை அணிந்து கொண்டு இக்காட்டில் வந்து கொண்டிருக்கின்றீர்கள் யார் உங்களை அயோத்தியில் இருந்து காட்டிற்கு துரத்தியது சொல்லுங்கள் அவனை இப்போதே ஒழித்து தள்ளுகிறேன் என்றது ஜடாயு.

லட்சுமணன் நடந்த அனைத்தையும் விவரமாக சொன்னான். அனைத்தையும் கேட்ட ஜடாயு தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற இத்தனை வருடங்கள் காட்டில் தபஸ்விகளை போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ராமா உன்னை சத்தியத்தின் உருவமாக காண்கின்றேன் என்று சொல்லிய ஜடாயு சீதையை பார்த்து யார் இந்த பெண் என்றது. இவள் ஜனகரின் மகள் பெயர் சீதை எனது மனைவி என்றார் ராமர். மகிழ்ந்த ஜடாயு பஞ்சவடியில் தங்கியிருக்கும் நீங்களும் லட்சுமணனும் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும் போது நான் சீதைக்கு துணையாக இருப்பேன் என்றது. ஜடாயுவிடம் விடைபெற்று மூவரும் அங்கிருந்து கிளம்பி பஞ்சவடி வந்து சேர்ந்தார்கள்.

பஞ்சவடியின் அழகைக் கண்ட மூவரும் மெய்சிலிர்த்தார்கள். ராமர் லட்சுமணனிடம் தங்குவதற்கு சரியான இடத்தில் குடிலை அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படியே லட்சுமணனும் குடிலைக் கட்டுவதற்கு சிறப்பான இடத்தை தேர்வு செய்து குடில் அமைப்பதற்குத் தேவையான பொருட்களைக் காட்டிற்குள் தேடி எடுத்து வந்து குடிலைக் கட்டி முடித்தான். குடிலின் அழகைப் பார்த்த ராமர் இவ்வளவு அழகான குடிலை அமைத்த நீ எனக்கு நமது தந்தையைப் போல தெரிகிறாய் என்று கூறி ஆனந்தக் கண்ணீருடன் லட்சுமணனைக் கட்டி அனைத்தார்.

பஞ்சவடியில் சில காலம் சென்ற பிறகு பனிக்காலம் ஆரம்பித்தது. மூவரும் நதிக்கரையை நோக்கிச் சூரிய நமஸ்காரம் செய்வதற்கும் தண்ணீர் எடுத்து வருவதற்கும் சென்றார்கள். அப்போது ராமருக்கு பரதனைப் பற்றிய நினைவு வந்தது. ராமர் லட்சுமணனிடம் நாம் இந்தக் காட்டில் குளிரில் வாழ்வது போலவே பரதனும் அனுபவிக்க வேண்டிய சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு நம்மைப் போலவே தரையில் உறங்கி விரத வாழ்க்கையை வாழ்கின்றான் என்று கூறினார். அதைக் கேட்ட லட்சுமணன் ராமரிடம் பரதனின் குணங்களைப் பார்த்தால் நமது தந்தையாரின் குணங்களைப் போலவே இருக்கின்றது. மக்கள் தாயைப் போலவே மகன் இருப்பான் என்று சொல்வார்கள் ஆனால் பரதன் விஷயத்தில் தவறாக இருக்கின்றது. குரூரம் குணம் கொண்ட கைகேயிக்கு பரதன் எப்படிப் பிறந்தான் என்று கூறி வியந்தான். ராமர் லட்சுமணனிடம் கைகேயியைப் பற்றி குறை கூற வேண்டாம். பரதனைப் பற்றி நீ கூறிய அனைத்தும் உண்மையே எனக்கு பரதனின் ஞாபகமாகவே இருக்கிறது அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. எப்போது நாம் நால்வரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம் என்று காத்திருக்கிறேன். நாம் நால்வரும் ஏற்கனவே ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியதில் பரதனின் அமிர்தம் போன்ற பேச்சு இன்னமும் என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.

நதிக்கரையில் பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்துவிட்டு தெய்வீக ஒளிவீச மூவரும் குடிலுக்குத் திரும்பி வந்தார்கள். குடிலில் மூவரும் இதிகாச கதைகளைச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராமரின் முகம் பூரண சந்திரனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்த நேரத்தில் ராட்சசப் பெண் ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். தேவர்களைப் போன்ற அழகுடன் ஒருவர் இருக்கிறாரே என்று வியந்து ராமரின் மேல் மோகம் கொண்டு பேச ஆரம்பித்தாள். தவசிகளைப் போல உடை தரித்துக் கொண்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு வில்லும் அம்புமாக ராட்சசர்கள் வாழும் காட்டிற்குள் நீ எதற்காக வந்திருக்கிறாய்? யார் நீ? உண்மையைச் சொல் என்று கூறினாள். தசரத மகாராஜாவின் மூத்த குமாரன் நான். என்னை ராமன் என்று அழைப்பார்கள். அருகில் இருப்பது என் தம்பி லட்சுமணன். எனது மனைவியின் பெயர் சீதை. என் தாய் தந்தையரின் உத்தரவின் படி தர்மத்தைக் காப்பாற்ற இந்தக் காட்டில் வனவாசம் செய்ய வந்திருக்கின்றேன் என்று கூறினார்.

ராமர் வந்திருந்த ராட்சச பெண்ணை பார்த்து நீ யார்? உனது பெயர் என்ன? உன்னைப்பார்த்தால் ராட்சச பெண் போல் தெரிகிறது. இங்கு எதற்கு வந்திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு ராட்சச பெண் ராவணனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? ராவணனின் சகோதரி நான். எனது பெயர் சூர்ப்பனகை. விச்ரவஸினுடைய மகனும் ராட்சசர்களின் அரசன் ராவணன் அவனின் சகோதர்களான விபீஷணனும் கும்பகர்ணனும் மகா பலசாலிகள். தவிர இக்காட்டின் அரசனான கரணும் தூஷணனும் என் சகோதரர்கள் ஆவார்கள். இவர்களின் அதிகார பலம் மிகவும் பெரியது. நினைக்கும் எதையும் செய்யும் பலமும் அதிகாரமும் பெற்றவர்கள். ஆனால் நான் அவர்களுக்கு கட்டுப்பட்டவள் அல்ல. என் விருப்ப்படி தான் எதையும் செய்வேன்.

இந்த வனத்தில் என்னைக் கண்டால் அனைவரும் பயப்படுவார்கள். உன்னைக் கண்டதும் உன் மேல் நான் காதல் கொண்டுவிட்டேன். இனி நீ தான் என் கணவன். இந்த பூச்சியை போலிருக்கும் இந்த பெண்ணை கட்டிக்கொண்டு ஏன் அலைகிறாய். இக்காட்டில் உனக்கு தகுந்த மனைவி நான் தான். என்னுடன் வந்து மகிழ்ச்சியாய் இரு. என் உருவத்தை பார்த்து பயப்படாதே. எனக்கு உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி உண்டு. உனக்கு பிடித்தாற் போல் அழகாக என் உருவத்தை மாற்றிக்கொள்கிறேன். நீயும் நானும் வாழ்வதற்கு உனது தம்பியும் உனது மனைவியும் தடையாய் இருந்தால் இப்போதே அவர்களை தின்று முடித்து விடுகின்றேன். எதற்கும் யோசிக்காதே உடனே என்னுடன் வந்துவிடு என்றாள் சூர்ப்பனகை.

ராமர் சூர்ப்பனகை பேசிய அனைத்தையும் கேட்டு சிரித்துவிட்டு லட்சுமணனுடன் விளையாட எண்ணம் கொண்டார். அரக்கியே எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இவள் எனது மனைவி என்னுடனேயே இருக்கிறாள். என்னை ஆசைப்பட்டு நீ அடைந்தால் இரண்டாவது மனைவியாவாய். உனக்கு துன்பம் மிகவும் வரும். இரண்டு மனைவிகள் இருவருக்குமே தொந்தரவு வரும். எனது தம்பியை என்னை போலவே அழகிலும் வலிமையிலும் பலசாலி. இன்னும் திருமணம் ஆகாமல் தனியாக இருக்கின்றான். உனக்கு தகுந்த கணவனாக இருப்பான் அவனிடம் சென்று கேட்டுப்பார் என்றார்.

ராமர் சொன்னபடி சூர்ப்பனகையும் லட்சுமனணிடம் தனது ஆசையை தெரிவித்தாள். தனது அண்ணன் தன்னுடன் விளையாடுவதை அறிந்த லட்சுமணன் தானும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான். சூர்ப்பனகையிடம் பைத்தியக்காரி நீ ஏமாந்து போகாதே. நான் எனது அண்ணனுக்கு அடிமையாக இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றேன். நீ என்னை திருமணம் செய்தால் நீயும் என்னுடன் அடிமையாக இருந்து பணி செய்ய வேண்டும். நீயோ ராஜகுமாரி என்னைப்போன்ற அடிமையுடன் சேர்ந்து நீ வாழலாமா? அண்ணன் மனைவியை பற்றி கவலைப்படாதே. எனது அண்ணனை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றான். சூர்ப்பனகை மீண்டும் ராமரிடம் வந்தாள்.


Key Events in Aranya Kanda:

Life in the Forest: After leaving Ayodhya, Rama, Sita, and Lakshmana travel through various forests, eventually settling in the Panchavati forest, near the river Godavari. They build a simple hut and live a peaceful life, adhering to their vows of exile.

Encounter with Shurpanakha: Shurpanakha, the demoness sister of Ravana, comes across Rama in the forest and is instantly infatuated with him. She disguises herself as a beautiful woman and approaches Rama, proposing marriage. Rama gently declines, explaining that he is already married. Shurpanakha then turns her attention to Lakshmana, who also rejects her. Enraged by the rejections, Shurpanakha tries to attack Sita out of jealousy. In response, Lakshmana disfigures her by cutting off her nose and ears.

Ravana’s Wrath: Humiliated and furious, Shurpanakha goes to her brothers, Khara and Dushana, who are powerful demon chieftains. They, along with their army, attack Rama and Lakshmana, but the two brothers easily defeat and kill them. Shurpanakha then flees to Lanka and tells her brother Ravana, the demon king, about the beauty of Sita and the fate of her brothers. She urges Ravana to take revenge.

Ravana’s Plan to Abduct Sita: Intrigued by Shurpanakha’s description of Sita’s beauty, Ravana decides to abduct her. He enlists the help of Maricha, a demon who can transform into different forms. Maricha transforms into a golden deer and appears near the Panchavati hermitage. Sita is captivated by the golden deer and asks Rama to capture it for her. Despite Lakshmana's warnings that the deer may be an illusion, Rama sets out to catch it.

The Golden Deer and Sita’s Abduction: Rama chases the deer deep into the forest. Realizing that he has been led away, he kills the deer, which reveals its true form as Maricha. With his dying breath, Maricha imitates Rama’s voice, calling out to Sita and Lakshmana for help. Hearing this, Sita urges Lakshmana to go after Rama. Reluctantly, Lakshmana leaves, after drawing a protective circle around the hut, known as the Lakshmana Rekha, and instructing Sita not to cross it.

Ravana, seizing the opportunity, disguises himself as a poor ascetic and approaches Sita, asking for alms. When Sita steps out of the Lakshmana Rekha to give him food, Ravana reveals his true form and abducts her, carrying her away in his chariot to Lanka.

Jatayu’s Brave Attempt: As Ravana flees with Sita, the old vulture king, Jatayu, who is a friend of Rama’s father, Dasharatha, sees the abduction and bravely tries to stop Ravana. Despite his age, Jatayu fights valiantly but is ultimately defeated by Ravana, who cuts off his wings, leaving him mortally wounded. Ravana then continues his journey to Lanka with Sita.

Rama and Lakshmana’s Despair: After realizing the trick, Rama and Lakshmana return to find Sita missing. They search the forest frantically, only to discover the dying Jatayu, who tells them about Sita’s abduction and Ravana’s involvement before he passes away. Grief-stricken but determined, Rama vows to find Sita and punish Ravana.

Meeting with Shabari: During their search, Rama and Lakshmana come across the hermitage of Shabari, an elderly devotee of Rama. Shabari has been waiting for years to meet Rama, and she offers him simple fruits as an offering. Deeply touched by her devotion, Rama blesses her, and she attains liberation.

Alliance with Sugriva: Moving further in their quest, Rama and Lakshmana encounter the monkey king Sugriva, who is living in exile after being ousted from his kingdom by his brother, Vali. Sugriva promises to help Rama find Sita in exchange for Rama’s assistance in defeating Vali. Rama agrees, and after a fierce battle, Vali is killed, and Sugriva regains his kingdom.

Hanuman’s Mission: Sugriva, now the king of the vanaras (monkeys), sends out search parties in all directions to find Sita. Hanuman, the most devoted and powerful among Sugriva’s followers, is sent southward. Hanuman’s journey to find Sita marks the beginning of the next significant phase of the Ramayana.

Themes of Aranya Kanda:

Righteousness and Duty: Despite the hardships of exile, Rama, Sita, and Lakshmana continue to uphold their dharma, reflecting their unwavering commitment to righteousness.

Loyalty and Friendship: The bond between Rama and Lakshmana, as well as the new alliance formed with Sugriva and Hanuman, highlights the importance of loyalty, trust, and friendship in times of adversity.

The Power of Evil: Ravana’s cunning and strength are showcased in this Kanda, establishing him as a formidable antagonist whose actions set the stage for the epic battle to come.

The Role of Destiny: The events in Aranya Kanda illustrate how destiny and fate play crucial roles in the lives of the characters, leading to challenges that must be faced with courage and resolve.

Aranya Kanda is a pivotal part of the Ramayana, filled with dramatic events that not only challenge the characters but also set the stage for the epic's central conflict—the battle between Rama and Ravana.



Share



Was this helpful?