இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அகிலத்திரட்டு அம்மானை 2

அகிலத்திரட்டு அம்மானை (Akilathirattu Ammanai) is the primary scripture of the அய்யா வழி (Ayyavazhi) religion, which originated in South India. It is considered a divine work that narrates the history of the world, the past, present, and future, focusing especially on the incarnation of அய்யா வைகுண்டர் (Ayya Vaikundar), the principal figure of Ayyavazhi. The scripture was written by ஹரி கந்தம்பரண் (Hari Gopalan Seedar) as per the revelations given by அய்யா வைகுண்டர்.

அகிலத்திரட்டு அம்மானை 2


கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும்
வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும்
இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும்
அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம்
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை
கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு
அஞ்ச லருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்

ருக்மணி கல்யாணம்

வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து
வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை
மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க
நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை
விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்குத்
திருமாங் கலியம் சேர்க்கத் துணிந்தனராம்
அப்போது நாரதரும் அரியோ னடிபணிந்து
இப்போது வுன்றனக்கு இசைந்த உருப்பிணியைப்
பாணிக் கிரணம் பண்ணப் பறையடித்தார்
நானிதையுங் கேட்டுநாடியுரைத்தே னென்றார்
அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு
இம்முனிந்து போக இசைந்தார்கா ணம்மானை 20

மோகத்திரு மாலை முக்கோடி பொன்னதுக்கு
வேகத்தா லுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார்
முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுடக்
கழுத்திலே யிட்டுக் காமக்கண் ணீட்டிடவே
மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம்
தேயமெங்கும் மோகம் சென்றதுகா ணம்மானை
முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும்
அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து
உருப்பிணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு
விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி
மனோன்மணியை யுங்கூட்டி மாயன் படையுடனே
வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து
வடவெல்லாந் தீர்த்து வைகுண்டப் பெம்மானும்
கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர்
இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம்
அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை

ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய்
அருந்தி முறைமா தரையணைந்து
தீயன் கொடிய கஞ்சனையும்
திருக்கி யறுத்து அசுரரையும்
உபாய முடனே கொலையடக்கி
உருப்பிணி முதலாய்ப் பெண்களையும்
தேயம் புகழ மணமுகித்துத்
துவரம் பதியிலி ருந்தளரே 40

உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும்
திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்

பாண்டவர் வரலாறு

கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும்
பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை
பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும்
சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து
அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று
எவரெவரு மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை
வளர்ந்து நிமிர்ந்து வரும்வேளை யானதிலே
இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி
துடியாய் மனுவழக்குச் சொல்லித்துரி யோதனனும்
முடிய வினைசூடி உலகாண்டா னம்மானை
பாவி யிருந்து பாராண்டச் சீமையிலே
கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது
தன்ம ரவ்வீமன் சகாதே வன்விசயன்
நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான்
குருநா டெனவே கூறுவா ரந்நகரு
திருநாடு தன்னுடைய சிறப்புக்கே ளம்மானை
துரியா தனாதி செலுத்துமஸ்தி னாபுரத்தில்
பரியொட் டகமும் பலிமிருக மானதுவும் 60

பசியால் தகையால் பட்சி பறவைகளும்
விசியாய்க் குருநகரில் மேவித்தகை யாறிவரும்
அத்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம்
பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும்
குருநாடு தன்னில் குழாங்கொண் டிருந்தனராம்
திருநாட்டுக் கொவ்வும் சிறந்த குருநாடு
ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது
பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு
தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும்
மூவரும் நன்றாய் உகந்த குருநாடு
ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும்
வேளிசமா யுள்ள வெகுவைந் தலையரவும்
வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும்
துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு
அந்நாடு நாடு அரன்நாட்டுக் கீடாகும்
பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு
அரனருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு
இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு
மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு
தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில் 80

மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி
பொய்யில்லாத் தர்மருக்குப் பேர்பாதி யாகவேதான்
ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காகத்
தாண்டவ ராயர் தண்மையா லம்மானை

பாண்டவர் வனவாசம்

இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
வணங்கா முடியுடைய மன்னன்துரி யோதனனும்
இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை
தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்ததான்
நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்று மில்லாமல்
இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும்
தனியே வனத்தில் தானனுப்பி இராச்சயத்தை
அடக்கி யரசாள அவன்நினைத்து மாபாபி
உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும்
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைத் தான்விரட்டி
சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான்
வனவாசந் தன்னில் வந்திருந் தைபேரும்
இனமா னதுபோல் இருந்தார் குகையதிலே
அப்போது வேத வியாச ரவறிந்து
செப்போடு வொத்தத் திருமா லருகேகி 100

மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து
தீயதுரி யோதனனைச் செயிக்கவந்த பெம்மானே
பஞ்சவரை மாபாவி பழுதுசூ தாடிவென்று
வஞ்சக மாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான்
ஐபேரும் பத்தினியும் அன்னை பிதாவுடனே
பைப்போ லலறிப் பசித்திருந்து வாடுகிறார்
அன்றுமகா மேர்வில் அடியே னுரைத்தபடி
இன்றுபா ரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு
என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும்
அன்று திருமால் ஐவ ரிடம்நடந்தார்
வேத வியாகரரும் வேயூதும் வாயானும்
சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர்கா ணம்மானை
நாரா யணர்வரவே நல்லதர் மாதிகளும்
பாரா னதையளந்தோன் பதம்பூண்டா ரம்மானை
கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே
மால்பிடித்துத் தர்மரையும் மார்போ டுறவணைத்துப்
பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே
கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார்
அப்போது தர்மம் அச்சுதரை யும்போற்றி
இப்பெழுது எங்களுக்கு ஏற்ற பசிதீர 120

சூரிய பாண்டம் தனையழைத்துச் சுத்தமனே
ஆரிய மான அன்ன மருளுமென்றார்
அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து
மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும்
கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுத்து
ஐயா யிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும்
என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில்
அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன்
என்பே ரரியை எடுத்ததி லிட்டதுண்டால்
அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார்
இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு
சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை
மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயின்பின்
தூயவியா கரரும் சொல்லுவார் தர்மருடன்
பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல்
தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும்
மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும்
ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை
பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று
ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும் 140

ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே
சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே
நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான்
அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை
பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி
நீதாள மான நெடியோ னதுகாத்தார்
கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும்
கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே
அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான்
விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே
தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும்
மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார்
பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி
நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே
இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம்
அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும்
பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும்
சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை

துரியோதனன் பாடு

பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி
பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு 160

மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத்
தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல்
தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு
வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே
எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான்
மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி
ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள்
கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும்
மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும்
தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து
வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து
வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத்
தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து
நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப்
புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து
மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச்
செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும்
மாயருட கையில் வளர்ந்த திருமுடியில்
ஓசையிட வொன்று ஒத்துதே பாரதப்போர்
ஐபேருட படையும் அரவக்கொடி யோன்படையும் 180

கைப்போரு விற்போரும் கணைப்போரும் வாள்போரும்
அம்புப்போ ருங்கரியின் அச்சுப்போரும் பொருது
கன்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும்
மன்னன் சிறுபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல்
சராசந் தன்வரையும் சத்தியக் கீசகனும்
பூராச வீமன் பெலியிட்டா னம்மானை
இத்தனைப்பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும்
அத்தனைபே ரையும் அறுத்தா னருச்சுனனும்
துரியோ தனன்படைகள் சேர மடிந்தபின்பு
விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி
தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல்
வம்பி லிறந்தாச்சே வாழ்வெதே னென்றுசொல்லி
எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம்
வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால்
இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே
விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்ச்சுனனை
இன்றுகொல்ல வென்று எழுந்தான் படைக்கெனவே
அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்து
இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ
அத்தினா இன்றுன்மேல் அரவக் கொடியோனும் 200

வாறான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து
உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா
என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா
வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா
எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா
என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு
வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து
வீமனுட தண்டதுக்கு விசைமால் விசைகொடுத்துப்
போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து
விசையன் பரிநகுலன் வெற்றிச்சகா தேவனையும்
இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லமென்று
வீமனை யுங்கூட்டி வெளியிலரி வந்திடவே
காமக் கனல்மீறிக் கரியோ னெழுந்ததுபோல்
வந்தானே பாவி வணங்கா முடியோனும்
சந்தான மான தமிழ்வீமன் தான்மாறி
எதிர்த்தா ரிருவர் எனக்கெனக் கென்றேதான்
செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை
மண்விண் ணதிரும் வானமது தானதிரும்
திண்திண் ணெனப்பூமி தொந்தொ மெனக்குலுங்கும்
மலைக ளசைந்து மடமடென ஓசையிடும் 220

கலைகள் கரிகள் கதறி மிகஓடும்
அலைகள் சுவறி அங்குமிங் கோடிடவே
இலைக ளுதிர்ந்து இடிந்துவிழு மாமரங்கள்
தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாம லேமறைக்கும்
வேöழுழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே
தவமுனிவர் நெட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து
திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே
வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்த மோதும் நன்மறையோர் தாம்பதற
துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும்
எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
ஒண்ணுக்கு வொண்ணு ஒல்கிப்புறஞ் சாயாமல்
மண்ணும்விண் ணுமதிர மண்டி யுத்தமிட்டார்
துரியோ தனனடிக்கத் துடிவீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறிய வனடிக்க
அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டுச்
சாயா விதத்தைத் தானறிந் திருபேரும்
வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
துட்டாள னான துரியோதன னுரைப்பான் 240

இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டுப்
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே
உன்பெலமு முன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால்
என்பெலமு முன்னோடே இயம்புகிறே னென்றுரைத்தான்
அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும்
தப்பாமல் தானுரைத்தான் சகலோ ரறிந்திடவே
கேட்டுத்துரி யோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
தீட்டுகிறே னென்னிடது செய்யபுற மென்றுரைத்தான்
கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு
மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
திடத்த முடனே சென்றவ் வீமன்பேரில்
மாறி யவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தை தனில்நினைக்கத்
திலர்தமுள்ள மாயன் செயவீ மனைநோக்கி
வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே
அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே
துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து 260

மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான்
கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே
அப்போது மாயன் அரவக்கொடி யோனிடத்தில்
தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப் போயினரே
முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய்
தென்ன னிராவணனாய்ச் சிரசுபத்தாய்த் தானிருந்தாய்
அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால்
செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி
பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி
உற்று வொருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில்
தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது
எம்பிரா ணன்வதைக்க ஏலாது என்றனையே
தம்பியொரு நூறோடே தான்படைத் துன்னையுந்தான்
கொம்பிலொரு ஆளைவிட்டுக் கொன்றேனே உன்னையென்றார்
என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது
தண்டுகொண் டேயடித்த தமிழ்வீ மனல்லாது
இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே
அப்போது மாலும் அதிகக்போ பம்வெகுண்டு
துப்புரைகள் கெட்ட தீயனுக்கங் கேதுரைப்பார்
உன்னையின்ன மிந்த உலகி லொருபிறவி 280

சின்னவன்ன மாகச் சிரசொன்றாய்த் தான்படைத்து
அறிவுபுத்தி யோடும் ஆணுவங்கள் தன்னோடும்
செறியுங் கலையோடும் சிறப்போடுந் தான்படைத்து
என்பேரி லன்பு இருக்கவெகு சாஸ்திரமும்
தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே
முன்னே வுனக்கு உற்றபிறப் பாறதிலும்
என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை
ஏழாம் பிறப்பதிலும் என்னைநினை யாதிருந்தால்
பாழாவாய் மேலும் பகையில்லை யென்றனக்கு
என்று திருமால் இயம்பித்துரி யோதனனை
அன்றவனைக் கொன்று ஐவரையுந் தான்வருத்திக்
கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார்
தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்தி லுள்ளமுறை
எல்லாச் சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும்
உல்லாச முள்ளதர்மர் ஒக்கமுறை செய்தனராம்

கர்ணனுக்கு முத்தியருளல்

முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங் கொடுக்க
மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே
அப்போது வேத வியாசரவ ரங்குவந்து
செப்போடு வொத்த திருமாலோ டேதுரைப்பார்
பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட 300

ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே
என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய்
பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து
தொண்டுபண்ணி நின்ற துய்யவா னரங்களிலே
வல்லபெல முள்ள வாலியிவன் முற்பிறப்பில்
நல்லவனாய் முன்னே நாட்டி லிருக்கையிலே
இராவணனோ டேகூடி இராமசரத் தாலிறந்தான்
சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து
வந்து பணிந்தானே வாலியவ னென்காலில்
நன்றியுள்ள மாலே நானுமுன் னேவலனாய்
முன்னேநீ ரமிழ்தம் உவரிதனிற் கடைய
என்னை யொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே
பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனைக்
கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன்
என்றந்த வாலி இறைஞ்சிநின்றா னென்னையுமே
அன்றுவா லிதனக்கு அருளினது நீர்கேளும்
எனக்கேவ லாக இப்பிறவி நீபிறந்து
தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால்
இனிமே லவனோடிருந்து என்சொல் கேட்கவைத்துக் 320

கனியான மோஷக் கயிலாச மேதருவேன்
என்றவனை யழித்து இப்பிறவி ஐவருடன்
முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை
அரவக் கொடியோன் இடத்தி லனுப்பிவைத்து
இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி
அன்னை பிதாசொல் அசராம லைபேர்க்கு
ஒன்னே வொருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண்
ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு
மானமாய் மோக்ஷம் வகுத்தே னிவனுக்கென்றார்
நல்லதுதா னென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான்
எல்லைவைத்தா பாரதப்போர் இன்று முடிந்ததென்று
கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு
வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி
ஐபேரும் பத்தினியும் அச்சுதரை யும்போற்றி
மெய்போக மான வியாசரை யுங்குவித்து
ஆண்டார்கள் சீமை அச்சுதனா ருண்டெனவே
பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே
வைகுண்ட மேக மனதிலுற்று எம்பெருமாள்
பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி
ஆங்கார மோகத்(து) அம்புக் கணுவாலே 340

ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து
பஞ்சவர்க்கு உள்ள பாரப் பெலங்களையும்
துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு
மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து
நூல்நடந்து வாருமென்று மோக்ஷத் திறவோனும்
சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது
சாரங்கர் செய்த தன்மைகே ளம்மானை

சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும்

அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது
தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும்
வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும்
சோலை மரமும் சுபசோப னமரமும்
ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும்
புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும்
தென்னை மரமும் செஞ்சந் தனமரமும்
மாவு பலமரமும் வாய்த்த பலாமரமும்
தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது
சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவை யின்பெருமை
தூல மின்னதென்று சொல்லத் துலையாது
பார்வதியும் ஈஸ்வரனும் பாவித் திருப்பதுபோல் 360

தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும்
அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல்
நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது
கயிலை யீதென்று கண்ணான மாமுனிவர்
ஒயிலாகக் கூடி உவந்திருப்ப தவ்வனத்தில்
வைகுண்டங் காண வந்ததர்மி யெல்லோரும்
மெய்குண்டங் கண்டோ மெனஇருப்பா ரவ்வனத்தில்
அப்படியே நல்ல அயோக அமிர்தவனம்
இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான்
புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு
வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காகத்
தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு
மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு
இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம்
அவ்வனத்தி லுள்ள அமிர்தகங்கை யானதிலே
குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார்
மரகத வல்லி வள்ளி சலிகையெனும் 380

சரகதக் கன்னி சரிதை அரிமடவும்
எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென
ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று
சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில்
ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி
பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டானம்
இனியெனக்கு நீங்கள் எல்லோரு மிக்கவந்து
கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள்
அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார்
எப்போதுந் தானாய் இருப்பவர்க்கே யல்லாது
மாயவர்க்கு மற்றுமுள்ள மயேசு ரர்தன்றனக்கும்
வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தன்றனக்கும்
எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற
ஒருவனுக்கே யல்லால் ஊழியங்கள் வேறில்லையே
கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும் 400

காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர்
தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம்
ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று
மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில்
சாலோக மான சத்திபர லோகமதில்
ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும்
சீருரூப மான சிவலோக மானதிலே
மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே
தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே
தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில்
சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை
சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு
பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில்
புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு
சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை
இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் 420

அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு
எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக்
கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக்
கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று
தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே
பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி
குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே
காமத் தழலாய்க் கருமேனி யானதிலே
வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய
சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள்
கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி
அரிஓம் எனவே ஆடிக் கரையேறி
தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள்
உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு
அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட
கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே
திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார்
கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ

உன்னித் திருமால் ஓங்கார மோகமதால்
மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை
சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே
உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை
தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார்
வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும்
கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி
துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை
கையில் சலந்தான் கட்டித் திரளாமல்
கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து
மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு
அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே
மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை

கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே
புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே
அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும்
இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே

அம்மைமார் தவம்

கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து
மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே
கற்புக் குழறி கயிலையுக மானதற்கு 460

அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல்
எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து
வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம்
நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை
இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர்
வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று
பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும்
ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே
மாசொன்று மில்லா மாத ரேழுபேரும்
தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும்
மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை
கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர்
பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார்
பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே
காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே
பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும்
கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும்
மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து
ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும்
நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும் 480

நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க
பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே
அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர்
சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும்
வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும்
அய்யா உரைக்க அடியே னதையெழுதி
மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே
அன்பான இந்த அகிலத்திரட் டம்மானை
தன்போத மாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக்
கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென் றெம்பெருமாள்
உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமா யுரைத்தார்
இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள்
அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க

திருமால் அமுதளித்தல்

பிள்ளை களைப்போட்டுப் புண்ணியனார் போகாமல்
வள்ளலந்த மாலும் மதலை தனையெடுத்து
ஆரிடத்தி லிம்மதலை அடைக்கலமாய் வைப்போமென்று
விசாரித்து நன்றாய் விசாரமுற்றா ரம்மானை
தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும்
கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி
நிரைவா வெனவே நியமித்தங் கூதிடவே 500

அரை நொடியிலாவு அங்கொன்று மில்லாமல்
அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம்
சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றா ரெம்பெருமாள்
பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு
நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே
கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள்
ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன்
தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே
வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை
இந்தாப்பா ரென்று எறிந்தா ரவன்பயந்து
ஆரோ வெனப்பயந்து அயிராவதத் தோனும்
போரொல்கிப் போனான் பொன்னுலோ கந்தனிலே
நல்லதென மாமுனியும் நளின முடன்மகிழ்ந்து
செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க

காளி வரவு

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி
பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது
விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது
அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி
இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே 520

ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற
தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும்
கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித்
துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு
தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில்
கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே
தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட
மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார்
ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே
பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி
காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால்
தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக
மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து
வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை
உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து
வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள்
தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே
மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும்
விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப்
படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள் 540

என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே
வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி
அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி
கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு
பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி
கண்ணான காளி காரிகையே நீகேளு
தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி
மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு
விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே
படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே
தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன்
விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும்
உன்னை யழைத்து உன்கையி லேதருவார்
முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே
அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப்
பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான்
நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே
அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து
மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக்
கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து 560

வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி
தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள்
வேத முனியே வித்தைக் கருத்தோனே
மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை
ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள்
வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து

சான்றோர்க்கு நாமம் அருளல்

உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து
வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து
முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும்
நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும்
தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும்
மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து
கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி
குணமான தந்தி குமரனை யும்வருத்தி
சத்தி உமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையும் வானோர் எல்லோரை யும்வருத்தி
சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி
மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர
இப்படியே சங்கம் எல்லோருந் தான்கூடி
அப்படியே தானிருக்க அருளுவா ரச்சுதரும் 580

பிறந்தபிள்ளை யேழதுக்கும் பேரிட வேணுமென்று
அறந்தழைக்கு மீசர்முன் அவர்வைத்தா ரம்மானை
அப்போது ஈசுரரும் அன்பா யகமகிழ்ந்து
இப்போது மாயவரே எல்லோருக் கும்போதுவாய்
நீர்தானே நாமம் இட்ட லதுபோதும்
பார்தா னளந்த பாலவண்ணா வென்றுரைத்தார்
கார்வண்ணருங் கேட்டுக் கறைக்கண்ட ரோடுரைப்பார்
தார்வண்ணரே முதற்பேர் தானுரைக்க வேணுமென்றார்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றினதால்
தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு
சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும்
முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும்
மதமான விந்து மாயமுனி சேயதற்கு
சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும்
ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார்
நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு
தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள்
அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு
வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் 600

எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும்
சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே
பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து
பாருபதி நாமம் பகருவா ளம்மானை
சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு
மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும்
பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும்
கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும்
வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள்
பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து
நன்றான வீர நகுலவேந் தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை
சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை
வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத்
தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை
கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே 620

வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை
வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார்
இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு
கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார்
இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு
அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து
சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும்
எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம்
அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து
குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து
அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க
தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள்

சரஸ்வதி தாலாட்டு

வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ
கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ
தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ
வங்கம்நிசங் கண்ட மங்காத சான்றவரோ 640

சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும்
சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ
முத்துச் சிலாப முதலாளி யானவரோ
கொத்துமுங்கை யாபரணம் கொடிவிருது பெற்றவரோ
மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ
தாலம்பா லுண்டு தானிருந்த மன்னவரோ
நடைக்கா வணங்களிட்டு நல்லதீ வட்டியுடன்
படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ
வெள்ளானை மேலே வீதிவலஞ் சுற்றிவந்து
துள்ளாடி சிங்கா சனம்வீற் றிருப்பவரோ
பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே
நாதமிரட் டையூதி நாடாளு மன்னவரோ
எக்கா ளமூதி இடமடம் மானமுடன்
மிக்கான சீமையெங்கும் மேவிவரு மன்னவரோ
வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு
தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச் சான்றவரோ
கர்மம தில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ
தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக் குற்றவரோ
உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த
சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ 660

கல்விக் குகந்த கருணாகர ரானவரோ
செல்விக் குகந்த சென்மமது கொண்டவரோ
தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும்
மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ
சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன்
மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ
சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக்
கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ
அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும்
செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ
துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக்
கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ
ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ
தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ
பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த
சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ

தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ
சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ
துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ
சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ 680

கற்பகத்தரு

சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி
வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி
வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க
மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி
ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து
வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம்
சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும்
வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று
கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு
அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை
வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும்
பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார்
அப்படியே வானோர் ஆகாய மீதேகி
செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே
ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே
சீருரூப மான சிவகயிலை யானதிலே
பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற
வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும்
அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத் 700

தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல்
ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில்
கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும்
பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக
அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள்
பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம்
உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து
வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே
சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு
நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க
அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார்
எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம்
கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார்
அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய்
மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட
இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன் 720

இப்போது இட்ட இச்சாப மானதுதான்
எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன்
நீசக் குலமறுத்து நெடிய திருமாலும்
மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு
அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர்
வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார்
உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று
தடமேலே நின்று தால மெனவளர்ந்தார்
வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும்
பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு
அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக்
குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி
உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம்
எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ
பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து
ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து

பத்திரத்தாள் பெற்றமக்கள்

பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில்
ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார்
அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும்
கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும் 740

மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும்
பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும்
அடவு மேலான அதிகப்பல வித்தைகளும்
திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி
எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும்
நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து
உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை
நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே
அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும்
கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே
அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள்
என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர்
உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி
என்றேதான் காளி இப்படியே சொல்லியபின்
பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால்
கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி
சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு
பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ
மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால்
குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று 760

சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து
வல்ல பெலமுள்ள மாடுதனி லேறியையும்
வேதாவும் நல்லநெற்றி விழியுடை யாள்தனையும்
மாதாவு மான வாய்த்தசர சோதியையும்
தேவர்முதல் வானவரை சிட்டர்முனி வோர்களையும்
மூவர்களை யுங்கயிலை ஊரேபோ மென்றனுப்பி
காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய்வள நீயென்று
ஆழி யடைத்த அச்சுதருந் தான்நடந்து
சீரங்க மாபதியில் சென்றிருந்தா ரம்மானை
சாரங்கர் சீரங்கம் தான்வந்தா ரென்றுசொல்லி
சீரங்க மெல்லாம் செழித்து மிகவாழ்ந்து
பாரெங்கு மெச்சிப் பரந்துகா ணம்மானை
அப்படியே அச்சுதரும் அப்பதியி லங்கிருக்க
எப்படியும் சீரங்கம் இனிதழைக்கு மென்றுமிக
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித்
தேவருங் கொண்டாடி சிந்தைமகிழ்ந் தேயிருந்தார்
சீரங்க மான திருப்பதியின் வளமை
சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை
மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து
ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து 780

படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது
கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும்
அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும்
கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை
மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை
மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும்
ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும்
அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும்
கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு
பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர
ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார்

சான்றோர் பெருமை

சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது
சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை
சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை
நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க
அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை
தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும்
வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி
கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு
வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப் 800

பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள்
மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில்
தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி
படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி
நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப்
போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து
ஆர்க்க முள்ளகாளி அலகைப் படையுடனே
சான்றோரை விட்டுத் தக்கனையுந் தான்வதைத்து
மூன்றோரை நெஞ்சில்வைத்து ஓங்கார மாகாளி
தக்கனையுங் கொன்று சான்றோ ரவர்தமக்கு
மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி
புட்டா புரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்துநிற்க
கட்டாத காளி கமலத்தில் வீற்றிருந்தாள்

சான்றோர் திருமணம்

அப்போது நல்ல ஆர்க்கமுள்ள பாலருக்கு
இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணுமென்று
பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி
நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை
அழைத்துநல்ல மாகாளி அந்தமுனி யோடுரைப்பாள்
விழைத்துநல்ல புத்தி விபரமிட்டுச் சொல்லுகின்ற
மாமுனியே யென்றன் மக்களேழு பேர்களுக்கும் 820

நீமுயன்று பெண்ணேழு நிச்சயிக்க வேணுமென்றாள்
நல்லதுதா னென்று நாரத மாமுனிவன்
வல்லவகை யாலுன் மக்களுக்குப் பெண்ணேழு
பார்த்துவரு வேனென்று பகர்ந்துமுனி போயினனே
சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன்
நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான்
பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே
மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத்
தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை
நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும்
செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும்
இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக
நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி
ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று
பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண்
அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து
இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில்
கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன்
தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும்
தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி 840

கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும்
மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம்
மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய
உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும்
ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது
மான முனியே மற்றெவர்க்கு மாகாதே
என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க
நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து
மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில்
சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே
அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு
இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று
சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து
நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை
நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட
தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை
மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும்
வாகான மன்னன் வாய்த்த நிருபனுட
மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு 860

மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே
என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள்
நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள்
தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள்
பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே
உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே
அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம்
செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு
கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான்
நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில்
தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த
நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும்
வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி
மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப்
பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக்
கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம்
ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள்
நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே
பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி 880

பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய்
ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே
காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க
மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது
ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி
தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே
வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது
சூதான மான தோகை யேழுபேரும்
பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு
காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது
வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க
தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும்
அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை
இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி
சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து
நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ
உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று
திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு
நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய 900

கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு
முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய
பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை
வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத்
துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி
முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக்
கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி
மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு
காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து
வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக
நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து
வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும்
திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள்
வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது
நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி
பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச்
சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி
பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று
இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து
மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க 920

தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க
பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க
ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப
பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க
நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து
மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி
வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப்
பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி
சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார்
தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு
மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை
நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள்
எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை
சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத்
தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி
அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர
விரைவாகக் காளி வித்தகலை யேறிவர
அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே
வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர
ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே 940

மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே
பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர
நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு
விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள்
நிருபன் மகளை நியமித்து மாலையிட
வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப்
பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத
இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி
அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும்
மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை
வாலையது வான மாகாளி வாழுகின்ற
மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை 952

தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்
தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும்
வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள்
மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு
வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை
நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும்
இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக
அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை
பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர
சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி
எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே
சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை
முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல்
பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன்
மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம்
ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம்
கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம்
ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம்
தாலம தேறித் தைரியப் பால்வாங்கி 20

மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார்
நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும்
மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார்
சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு
வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து
நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார்
செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு
அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து
முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து
வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து
பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து
சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து
ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை
சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை
வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று
அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார்
இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க
அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத்
தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே 40
வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே

கலியன் பிறப்பு

சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான்
பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து
ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள்
நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி
முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே
குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன்
அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி
சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே

முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து
தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால்
வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம்
இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே
வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே 60

ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா
குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து
சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய
அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து
பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால்
ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே
முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து
ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை
முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ
என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான்
நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி
பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் 80

உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே
தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து
கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும்
தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி
வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும்
கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி
இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி
சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி
அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும்
சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும்
இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே
எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார்
அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை
வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை
கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே
எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று
அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார்
முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் 100

தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென
ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே
இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது
அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால்
இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும்
அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன்
மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு
நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை
கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே
இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே
படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே
நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை
அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும்
எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும்
நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து
வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம்
பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து 120

திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே
துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி
மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார்
உடனே சிவமும் உள்ள மிகக்களித்து
இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும்
அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே
எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை
மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத
தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார்
இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும்
வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும்
தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார்
சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை
அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே
இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால்
தலந்தா னிளகி தான்வந்த தாலேதான் 140

குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே
என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி
குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார்
நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று
திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும்
சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி
சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து
வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா
இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம்
அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி
செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார்
சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும்
சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே
தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய்
மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு
விண்தா னுடம்பு விலாசக் குருவோடு
சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள் 160

வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப்
பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே
முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா
மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய்
வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி
அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச்
சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை
ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர்
அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும்
கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து
மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா
அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப்
பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர்
அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல்
கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத்
தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான் 180

புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய்
சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம்
உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும்
மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு
தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான்
வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில்
ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும்
மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது
விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது
விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும்
பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி
இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே
அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது 200

கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான்
இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மனவீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி
ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும்
சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும்
விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும்
துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை
தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை
ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே
நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும்
பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க
மருண்ட விழியால் மாகம துகலங்கி
மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல் 220

விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை
கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற
அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற
அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி
சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல்
பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல்
சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு
என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று
தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி
குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி
எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து
வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து
ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து
கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே 240

கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது
என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க
உடனே யவனும் உள்ள மிகக்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து
மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத்
தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன்
அன்று மொழிய அமர ரதையறிந்து
பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல்
எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண்
பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல்
தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும்
புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான்

கலிச்சி தோற்றம்

ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே 260
தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த
ஆனா லெனதுடைய அளவி லளவாக
மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண்
என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே
அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார்
நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று
வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து
உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார்
அப்போது நீசன் அரனார் தனைநோக்கி
ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய்
அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்
குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய்
மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய்
யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய்
கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய்
சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய்
தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய்
நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய்
இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் 280

உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு
கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல்
மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச்
சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான்
அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை
கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே
தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார்
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி
ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில்
விதியாயிடது விலாவி லொருயெலும்பைத்
தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி
திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன் 300

பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால்
நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று
வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார்
மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை
நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை
பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன்
அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம்
கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக்
கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான்
பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன் 320

மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி
ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி
நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல்
தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான்
அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை
இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி
மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித்
தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே
இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம்
கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்

கலியன் கேட்ட வரங்கள்

அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க 340

வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன்
மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான்
சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம்
மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம்
துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம்
வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான்
அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம்
பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும்
நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும்
துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு 360

அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான்
ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும்
லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும்
ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும்
கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும்
ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும்
பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா
சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும்
கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும்
மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா
அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா
மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும்
மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும் 380

இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத்
தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன்
வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும்
தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும்
மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான்
பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை
மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை
சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை
வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை
காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை
கூளிகணத் தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை
தேவரையும் வானவரைச் சென்றழைக் குங்குளிகை
மூவரை யுமழைத்து மோடிசெய்யுங் நற்குளிகை
பழிசெய்தால் வெல்லப் பாரத் தொழில்கள்முதல்
சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும்
மருட்டு விதமும் மாஞாலக் குண்டணியும்
உருட்டுங் கொடிய உரம்பேசிய மதமும்
வாள்வெடிக ளாயுதங்கள் வாய்தடுக்கத் தந்திரமும்
வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந் தந்திரமும் 400

துட்ட மிருகம் தூறுவிசங் கொண்டதெல்லாம்
கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும்
கட்டுச் சுருக்கும் கடியபல வித்தைகளும்
நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும்
தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளை யாடிருந்து
விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்துக்
கிளையோடே வாழ்வு கெறுவித மாயாண்டு
வளையான மாதை மறவாம லெப்போதும்
புத்திக் கருத்தும் பெண்பேரி லென்றனக்குச்
சற்றும் நெகிழாமல் தாரும்வர மென்றுரைத்தான்
அப்படியே வுள்ளவரம் அந்நீச னுக்கருள
எப்படித்தா னென்று எண்ணினா ரீசுரரும்
எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன்
புண்ணிய நாதன் புகலலுற்றா ரம்மானை
முப்பத்தி ரண்டறமும் முகித்திருந்த வொண்ணுதலே
செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே
வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு
இன்ன விதமென்று இயம்புநீ பெண்மயிலே
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி 420

நற்போது மறவா நல்லகன்னி யேதுரைப்பாள்
சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங் கேட்டதினால்
சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள்

அகத்தீசர் பிறப்பு

உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து
திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து
அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து
செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை
எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி
வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே
என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும்
இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார்
அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய்
மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும்
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 440

அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை
வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும்
நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம்
கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும்
வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே
இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே
அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே
அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும்
இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால்
எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும்

கலியரசன் சத்தியம்

என்று அகத்தீசர் இப்படியே தான்கூற
அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு
சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம்
நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை
ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார்
தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் 460

பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள்
அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து
இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை
மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன்
பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா
என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே
அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார்
பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ
அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய்
பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும்
சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா
என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன்
குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான்
ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல்
வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை
தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால்
ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே
தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 480

தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும்
நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ
என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும்
நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு
பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை
என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா
பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும்
ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும்
பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும்
கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும்
இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன்
சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார்
புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டார மென்றும் பரதேசி யானவரைத்
தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை
அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் 500

நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று
ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள்
வீணமட நீசன் விளம்புவா னப்போது
ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று
பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான்
அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும்
பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும்
வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால்
ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால்
வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல்
பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று
மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச்
சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று
ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று
என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும்
வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ
அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி 520
எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால்
சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும்
வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன்

சக்கராயுதம் பணமாதல்

நல்லதுதா னென்று நாட்டமுற்றுச் சன்னாசி
வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு
மந்திரங்க ளாலே மகாகோடி ஆயுதங்கள்
தந்திரங்க ளாலே தான்வருத்த லாகிடுமே
அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க
இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன
நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல்
தொனிகெட்ட வெற்றிரும்பைச் சுமவென்று தந்தார்காண்
இரும்பைச் சுமந்தால் இல்லைகா ணொன்றுபயன்
தரும்பொருள்போ லுள்ள சம்பாத்தியந் தாறேன்
மண்டலங்கள் தேசம் வாழ்வுக ளுண்டாவதற்கும்
கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல்
தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே
பருமுறுக் காயாண்டி பகர்ந்தாரே நீசனுக்கு
அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் 540

மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச்
சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும்
நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி
ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு
இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று
அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே
கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம்
வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே
பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே
இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக்
கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான்
பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி
என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி
மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான்
அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று
இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம்
தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார்
முப்போது வுள்ள முறைபோலே மாயவரும்
ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன்
நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில் 560

கலியுகம்

நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான்
ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே
வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம்
என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே
வலியான மாதே மாநீசன் கேட்டதுதான்
கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார்
சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய்
இதமான தேவர் எழுதினா ரகமத்தில்

கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில்
சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட
வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார்

மாயனுக்கு ஆணை மாநீச னிட்டதெல்லாம்
தூய பெருங்கணக்கில் தொகுத்தெகுதி வைத்தனராம்
நீசக் கலியன் நிறைவோன் பதம்போற்றித்
தேச மதில்வரவே சென்றான்கா ணம்மானை
கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே
சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை

நல்லவை மறைதல்

தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே
வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில் 580
நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும்
வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே
வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய்
தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும்
வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில்
கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன்
நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம்
வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும்வெண் காகம்
ஆளியொடு சிங்கம் ஆனையி றாஞ்சிப்புள்ளும்
வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள்
மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருக மானதெல்லாம்
அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே
பால்நிற மான பட்சிப் பறவைகளும்
மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே
வெண்சாரை யைந்துதலை விசஅரவ மானதெல்லாம்
துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும்
பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம்
நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும்
போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம் 600

முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள்
பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம்
சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ
பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம்
கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம்
தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க
சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம்
அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய
மாரி மறைய மலர்க்கண் மிகமறைய
ஏரி பாழாக எண்ணினதே யம்மானை
கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க
தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை
தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும்
பொறுமை யுடைய பெரிய மிருகமதும்
நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும்
தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும்
நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே
பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம்
நடந்தோர்க ளெல்லாம் நாடி வழிவரவே
கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே 620

காடதிலே செல்ல கனத்தபஞ்ச பாண்டவர்கள்
வாட லுடவாய் வைகுண்டந் தானேக
கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதைப்
பண்டாரத் தர்மர் பகர்ந்தா ரதினோடு
நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்துகா ணாதேசென்றால்
வீட்டி லுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப்
போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன்
சேர்வேனோ குண்டம் செய்தர்ம மில்லையென்றால்
என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்ம மேதுரைக்கும்
பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்ட தானதினால்
எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே
செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார்
அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து
இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால்
கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது
தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே
தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும்
வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில்
மேலான மாமிருகம் வேதக் காராவுகளும்
நாலா மொருதலையும் நல்ல அரவமதும் 640ந

வெண்பட்சி யான மேலான பட்சிகளும்
இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று
கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே
பதறி யழுது பறவை மிருகமொடு
நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து
பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து
ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில்
ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன
செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து
அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும்
நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால்
தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா
என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே
நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான்
பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும்
ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார்
தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை
மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம்
கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம்
சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி 660

நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள
வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று
ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து
உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே
அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே
நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி
கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான்
வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே
நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி
நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று
சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை
பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே
வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில்
அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே
வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான்
ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார்
அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும்
பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார்
சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும்
சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம் 680

கலைமுனி ஞானமுனி தவசு

இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள்
கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே
ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன்
தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு
சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது
திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி
நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில்
கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது
அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து
செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான்
கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை
ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண்
இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும்
தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி
மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே
காய மிழந்து காணா துருவெடுத்து
மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால்
சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும்
பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும் 700

உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி
கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான்
முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து
வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி
மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று
அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும்
இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று
அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம்
துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து
ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து
தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார்
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும்
இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும்
கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும் 720

தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக
வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து
ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே
ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர்
நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம்
வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும்
பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை
சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து
விலகியே போக வேணுமென் றெம்பெருமாள்
மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி
எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று
அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை
அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார்
இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில்
செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில்
நந்த கோபால நாராய ணாவெனவே
மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய்
ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள்
ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென
வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் 740

விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும்
கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே
அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க
இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில்

போகமுனி தவசு

போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று
வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில்
ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார்
மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ
குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம்
அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான்
செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த
மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க
ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே
என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள்
உன்று வசனம் உரையென்றார் மாமுனியை
என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும்
அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே
தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும்
கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா 760

நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால்
வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும்
நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே
மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால்
என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித்
தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே
மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று
அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான்
நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ
கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன
சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க

மலைப் புதுமை

அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை
இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான்
வேதா விதித்த மேலான ஆகமம்போல்
நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே
கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று
சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான்
இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது
குழைவான வேதா குறியா யதையறிந்து 780

கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால்
பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக
மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே
அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று
சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது
குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து
அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன்
இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால்
வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில்
கைகண்ட வேதக் கருணாகரக் கடலே
என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று
அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப்
போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன்
ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார்
மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு
தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண்
ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப்
போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார்

சலந்தவசு

அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன்
இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற 800
அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா
கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான்
நல்லதுதா னென்று நல்ல முனியோடே
வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண்
கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில்
சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே
ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே
தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும்
வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச்
சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல்
பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே
கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை
எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும்
பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும்
என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான்
நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும்
பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே
தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள்
அய்யாவே நானும் அதிகயி லாசமதில்
மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து 820

வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள்
அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக்
குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து
அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார்
படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம்
கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன்
ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து
தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார்
என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார்
அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும்
நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில்
தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில்
சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில்
வீரிய மான வெற்றிவிரு துக்குடையும்
தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும்
பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும்
கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும்
மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும்
உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான்
என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ 840

நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத்
தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும்
விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத்
திடமுடனே போகமுனி தேவி சலமடவும்
வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார்
சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார்
மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது
மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே
சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை
நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப்
பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை
கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக
நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை
பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து
தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே
பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான்
சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான்
மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான் 860

கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான்
வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான்
ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை
பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான்
கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான்
மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான்
கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான்
மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான்
வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான்
மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான்
ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான்
அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான்
குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது
பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து
தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான்
கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத்
தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப்
பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து
மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை 880

கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம்
அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே
சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும்
தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான்
மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி
தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள

நந்திவரவு

தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள
மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால்
ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு
வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து
மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன்
ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே
என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க
அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது
நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான்
செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது
பூலோக மேழும் பொன்னுலோக மேழும்
தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும்
ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம்
பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம் 900

சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம்
நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே
என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி
அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி
சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து
வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில்
கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி
ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை
நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை
எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி
மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து
ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை
கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம்
தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே
மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக்
காய மிழந்து காணா துருவெடுத்து
ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி
தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே
கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு
பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு 920

மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில்
பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும்
பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம்
சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று
யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும்
போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக்
கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து
தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார்
வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க
இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில்
கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில்
பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும்
முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி
பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய்
ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி
ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள்
தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப்
பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள்
ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல்
பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் 940

தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும்
வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான்
பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார்
இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால்
ஆனதா லிந்த வழிவழியே யங்குளது
போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும்
ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும்
கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி
ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில்
ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும்
மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால்
தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே
அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று
செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார்
மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம்
ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே

பேய்ப்பிறப்பு

அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி
இப்போது தானதவம் இல்லையே லோகமதில்
தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும்
பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க 960

என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான்
நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும்
இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது
மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா
ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப்
பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார்
என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து
அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து
இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று
தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே
இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில்
சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே
அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து
இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண்
என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே
அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து
பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும்
வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும்
பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில்
இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார் 980

அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார்
இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து
பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால்
இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல்
மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன்
கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார்
நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு
எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய
கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார்
வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி
கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே
வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல்
கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த்
துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும்
அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி
இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து
மந்திர சாலம் மாய்மால மாரணமும்
தந்திர சாலம் சர்வதுமே தாருமையா
கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப
வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் 1000

ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக
வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா
அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும்
இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து
மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார்
கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத்
தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை
ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால்
வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள்
தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும்
ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது
ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள்
ஞானாந்திர மான நாரத மாமுனியை
வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே
இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான்
பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால்
தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில்
முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித்
துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார்
அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி 1020

இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே
மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான்
தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம்
பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும்
ஆயனா ரோடே அருளுவா ரன்போரே
கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால்
அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே
அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி
இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம்
நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப்
பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி
நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள்
மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர்
ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை
ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி
மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை 1036




Share



Was this helpful?