இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஆபுத்திரனாடு அடைந்த காதை

Aabuthiranadu Adaindha Kaathai likely revolves around the journey, achievements, or conquests of the character Aabuthiran in a specific territory. The narrative explores how Aabuthiran reaches or gains control over this land and the significance of this accomplishment.


மணிமேகலை மாநகரொழித்து ஆபுத்திரனாடடைந்த பாட்டு


அஃதாவது மணிமேகலை சிறைவீடு பெற்றபின் அறவண வடிகளை வணங்கி இராசமாதேவியும் சித்திராபதியும் ஆகிய இருவரையும் நோக்கி அறவணவடிகளார் அறமொழியை மறவாது கடைப்பிடித்து ஒழுகி உய்யுமின் என்று கூறி இப் பூம்புகார் நகரத்தில் யான் இருப்பேனாயின் என்னைக் கண்டோர் இவளே மன்னவன் மகனுக்குக் கூற்றுவனாயினாள் என்று பழிப்பர்; யான் அமுத சுரபியைப் பெற்றவனாகிய ஆபுத்திரன் மாறிப் பிறந்திருக்கின்ற சாவகநாட்டிற்குச் செல்ல வேண்டும். பின்னர் மாசு இல் மணிபல்லவமும் தொழுது ஏத்தல் வேண்டும். பின்னர் வஞ்சி நகரத்தில் புகுந்து ஆங்குக் கோயில் கொண்டிருக்கின்ற கற்புடைத் தெய்வமாகிய என் அன்னை கண்ணகித் தெய்வத்தையும் கண்டடி தொழுதல் வேண்டும் என்று அவர்க்கெல்லாம் அறிவித்துவிட்டு யான் யாங்குச் சென்றாலும் எனக்கு இடர் வருமென்று நீவிர் வருந்துதல் வேண்டா; யான் யாங்கணும் சென்று நல்லறம் செய்குவல் என்று எல்லாரையும் வணங்கி விட்டு உலக அறவியில் சென்று சம்பாபதியையும் கந்திற் பாவையையும் கைதொழுது வலங்கொண்டு இரவின்கண் வரன்வழியே பறந்து சென்று ஆபுத்திரன் நாட்டினை அடைந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இனி இதன்கண்-சித்திராபதி மணிமேகலையைச் சிறை வீடு செய்து தன்மாளிகைக்கு அழைத்துக் கொண்டுபோக முயலுதலும் இராசமாதேவி

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவுமென்று றுரவோர் துறந்தவை

இத்தகைய தீவினைகளை எல்லாம் மேற்கொண்டிருக்கின்ற உன்னோடு அவற்றையெல்லாம் துறந்து தூய வாழ்க்கை மேற்கொண்டிருக்கின்ற மணிமேகலை உன் மனைக்கு இனி வருவாளல்லள் என்னோடு அரண்மனையிலேயே எஞ்ஞான்றும் இருப்பாலாக என்று கூறிச் சித்திராபதியின் வேண்டுகோளை மறுத்தலும்; அச் செவ்வியில் மாதவி மணிமேகலையைச் சிறை மீட்டற் பொருட்டு அரண்மனைக்கு அறவணரை யழைத்துக் கொண்டு வருதலும் அரசி அடிகளாரைக் கண்டவுடன் எழுந்து வணங்குதலும் அறவணவடிகளார் அரசிக்கு அறம் கூறுதலும் பிறவும் கூறப் பட்டிருக்கின்றன.

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி
மாதவி மகள் தனை வான் சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
அரவு ஏர் அல்குல் அருந் தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
மா இரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் 24-010

ஆங்கு அவன் புதல்வனோடு அருந் தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
திருக் கிளர் மணி முடித் தேவர் கோன் தன் முன்
உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இத்
தோன்று படு மா நகர்த் தோன்றிய நாள் முதல்
யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந்தேவி! மாதர் யாரினும்
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 24-020

பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந் நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்!
உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு
பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 24-030

பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை
தானே தமியள் ஒருத்தி தோன்ற
இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள்? என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
உற்று உணர் உடம்பினும் வெற்றிச் சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில் இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த
மலர் வாய் அம்பின் வாசம் கமழப் 24-040

பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொரு அறு பூங்கொடி போயின அந் நாள்
யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி! என்றே
வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்? 24-050

சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான்
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்
இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன்
ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது 24-060

பூங்கொடி வாராள் புலம்பல்! இது கேள்
தீவகச் சாந்தி செய்யா நாள் உன்
காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
மணிமேகலை தன் வாய்மொழியால் அது
தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய்! மெய் எனக் கொண்டு இக்
காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
வாசவன் விழாக் கோள் மறவேல் என்று
மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் 24-070

காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
மன் பெருந் தெய்வம் வருதலும் உண்டு என
அஞ்சினேன் அரசன் தேவி! என்று ஏத்தி
நல் மனம் பிறந்த நாடகக் கணிகையை
என் மனைத் தருக என இராசமாதேவி
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி 24-080

நின்னொடு போந்து நின் மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
மணிமேகலை திறம் மாதவி கேட்டு
துணி கயம் துகள் படத் துளங்கிய அதுபோல்
தௌயாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி
அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன்
மற வேல் மன்னவன் தேவி தன்பால் வரத்
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் 24-090

எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளைக் கையால்
தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க
அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
இணை வளை நல்லாள் இராசமாதேவி
அருந் தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்த பின்
யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது
நாத் தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து
மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு! என 24-100
தேவி கேளாய்! செய் தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இது கேள்
பேதைமை செய்கை உணர்வே அருஉரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப் பயன்
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர் 24-110

பேதைமை என்பது யாது? என வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல்
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம்
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்று இரு வகையான்
சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி 24-120

வினைப் பயன் விளையும்காலை உயிர்கட்கு
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும்
தீவினை என்பது யாது? என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்
பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் 24-130

பத்து வகையால் பயன் தெரி புலவர்
இத் திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
நல்வினை என்பது யாது? என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
சீலம் தாங்கித்தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் 24-140

அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்!
புரை தீர் நல் அறம் போற்றிக் கேண்மின்
மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ!
பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
இத் திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்து ஏர் நகையாய்! முன்னுறக் கூறுவல்
என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
தேவியும் ஆயமும் சித்திராபதியும்
மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின் 24-150

இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
மனக்கு இனியீர்! என்று அவரையும் வணங்கி
வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
அந்தி மாலை ஆய் இழை போகி 24-160

உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆய் இழை
இந்திரன் மருமான் இரும் பதிப் புறத்து ஓர்
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
இந் நகர்ப் பேர் யாது? இந் நகர் ஆளும்
மன்னவன் யார்? என மாதவன் கூறும்
நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் 24-170

ஈங்கு இவன் பிறந்த அந் நாள் தொட்டும்
ஓங்கு உயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என
தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்
அகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன் தான் என் 24-176

உரை

(சித்திராபதி மணிமேகலையைச் சிறைமீட்டுத் தன் இல்லதிற்கு அழைத்துப்போக முயலுதல்)

1-10: மன்னன்..........ஐவரும்

(இதன் பொருள்) மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொல்முது கணிகைதன் சூழ்ச்சியில் பேரயவன்-அரசிளங் குமரனாகிய உதயகுமரனை வஞ்சித்து மணிமேகலையோடு கூட்டுதற்குப் பெரிதும் முதுமை எய்திய நாடகக் கணிகையாகிய சித்திராபதி செய்த சூழ்ச்சியினாலே மணிமேகலையைக் கைபற்றி வருவல் என்று துணிந்துபோன உதயகுமரன் அம்பலத்தின்கண்; விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி விச்சாதரன் வாளினால் ஏறுண்டு இறந்தான் என்னும் செய்தியைச் சித்திராபதி தன் உள்ளம் நடுக்கம் எய்தும்படி கேள்வியுற்று உடல் மெலிந்து வருந்தி; மாதவி மகள்தனை வான்சிறை நீக்க-மாதவி மகளாகிய மணிமேகலையைப் பெரிய சிறையினின்றும் நீக்கித் தன் இல்லத்திற்கு அழைத்துப்போகக் கருதி அரண்மனையில் உவளகத்திற்குச் சென்று; காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு-இராசமாதேவியின் திருவடியிலே வீழ்ந்தபடியே கிடந்து அரசிக்குக் கூறுபவள் தேவியே கேள் பண்டொரு காலத்தே; அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார்-பாம்பின் படம் போன்ற அல்குலையும் அரியதவத்தையுமுடைய தேவகணிகையராகிய மகளிர்; உரவோற்களித்த ஒருபத்தொருவரும-இந்திரனுக்கு வழங்கிய பதினொருவரும்; ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள-தேவேந்திரன் முன்னிலையிலே கூத்தாடுங்கால் அபிநயம் பிழைக்க ஆடினமையால்; மாயிருஞாலத்துத் தோன்றிய ஐவரும்-சாபமேற்று நிலவுலகத்திலே வந்து தோன்றிய ஐந்து மகளிரும். என்க.

(விளக்கம்) மன்ன குமரன்: உதயகுமரன் புணர்ந்த-கூட்ட தொன்முது கணிகை என்றது சித்திராபதியை தான் செய்த சூழ்ச்சியினால் என்க. போயவன் என்றது மணிமேகலையைக் கைப்பற்றி வருவேன் என்று போன உதயகுமரனை. சித்திராபதி செய்த சூழ்ச்சியையும் அச் சூழ்ச்சியால் உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரித் தேர்மேல் சென்று ஏறி அம்பலம் புகுந்த செய்தியையும்(18) உதயகுமரன் அம்பலம் புக்ககாதையில் காண்க. அரவேர் அல்குல் அருந்தவ மடவார் என்றது தேவகணிகையரை ஒருபத்தொருவர்-பதினொருவர். ஆயிரம் கண்ணோன்: இந்திரன்.

இதுவுமது

11-18: ஆங்கவன்..........யாரினும்

(இதன் பொருள்) ஆங்கு அவன் புதல்வன் ஒரு அருந்தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும்-அவ்விந்திரனுடைய மகனாகிய சயந்தனோடு அரிய தவத்தையுடைய அகத்தியனால் வெகுண்டு சபிக்கப்பட்ட உயர்ந்த கலைச்சிறப்பினையுடைய நூற்று நான்கு மகளிரும்; திருக்கிளர் மணிமுடி தேவர் கோன் தன் முன்-அழகு திகழ்கின்ற மணிமுடியையடைய இந்திரன் முன்னிலையிலே; முனிந்த உருப்பசி என் குலத்து ஒருத்தியும்-சாபம் பெற்ற ஊர்வசியாகிய என் குலத்தில் தோன்றிய ஒருத்தியும் ஆக; ஒன்று கடைநின்ற ஆறு இருபதின்மர்-நூற்றிருபத்தொருவர் ஆகிய தேவ கணிகைமகளிர்; தொன்றுபடு இ மகளிர் தோன்றிய நாள்முதல்-படைப்புக்காலத்திலேயே தோன்றிய பழைமையையுடைய இப் பூம்புகார் நகரத்தில் வந்து பிறந்த நாள்முதல்; மாபெரும் தேவி மாதர் யாரினும் யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்-அத் தேவ கணிகையர் மரபிலே வழிவழியாகத் தோன்றி வருகின்ற நாடகக் கணிகை மகளிருள் வைத்து யான் எய்தும் துன்பம் வேறு எந்த மகளிரும் எய்தினார் இல்லை என்றாள்; என்க;

(விளக்கம்) வீழ்ந்தாங்கு-வீழ்ந்தபடியேகிடந்து. இங்குக் கூறப்பட்ட கணிகை மகளிர் வானுலகத்தினின்றும் காவிரிப்பூம் பட்டினத்திலே வந்து பிறந்து சிறப்புற்ற நாடகக்கணிகையராவர். ஈண்டுச் சித்திராபதி இந்நிலவுலகத்துக் கணிகையர் குலத்திலும் சிறந்தது தன்குலம் என்று சொல்லிக்கொள்கின்றனள். ஊர்வசி சாபமேற்று நிலவுலகில் பிறந்து மாதவி யென்னும் பெயரோடிருந்தாள் எனவும் அவள் பெயரையே அவள் மரபில் பிறந்த சித்திராபதி தன்மகளுக்கும் சூட்டினள் எனவும் வரும் வரலாறு சிலப்பதிகாரத்தில் அரங்கேற்ற காதையினும் கடலாடு காதையினும் காணப்படுகின்றன.

சித்தராபதி இராச மாதேவியை அச்சுறுத்துதல்

19-26: பூவிலே.........உண்டால்

(இதன் பொருள்) பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்-அற்றைப் பரிசம் அளித்த கோவலன் இந்தனன் என்று கேள்வியுற்ற என்மகள் மாதவி அத் துன்பம் பொறாமல் பெரிய தவத்தோருறைகின்ற பவுத்தப் பள்ளியுள் எய்தியதும்; பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயங் கொண்டதும்-பரந்து கிடக்கின்ற இல்லந்தோறும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு ஆடங்கத்தின்கண் ஏறிக் கூத்தாடுகின்ற குலத்தில் பிறந்தும், மணிமேகலை சென்று பிச்சையேற்பதும் ஆகிய இவற்றைக்கண்ட; நாடகக் கணிகையர் நகுதல் அல்லது தன்மை அன்மையின் தகுதி என்னார்-எம்மோரனைய நாடகக் கணிகையர் இகழ்ந்து சிரிப்பதன்றி இச் செயல்கள் எங்குலத்திற்கு இயல்பல்லாமையால் தகுதி என்று கூறுவாரல்லர் அன்றியும்; மாதரால் மன்னவன் மகனே அன்றியும் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்-கோப்பெருந்தேவியே! இம் மணிமேகலை காரணமாக நங்கோமகன் கொலையுண்ட துன்பம் அல்லாமலும் இப்பெரிய நகரில் வாழ்வார் அனைவர்க்கும் வரவிருக்கின்ற துன்பமும் ஒன்று உளது என்றாள்; என்க.

(விளக்கம்) பூவிலே-அற்றைப் பரிசம்; பூ இடக்கரடக்கு. பூவிலையீத் தவன்-கோவலன் என்க. பொன்றினன்-இறந்தான்: மாதவர்-அறவணவடிகளாருமாம். அரங்கக்கூத்தி: மணிமேகலை ஐயம்-பிச்சை தன்மை-இயல்பு. இவ்விரண்டும் சித்திராபதி யாவரும் படாத துன்பப்பட்டேன் என்பதற்கு ஏதுக்கூறியபடியாம். மேலே அரசி அஞ்சி மணிமேகலையைத் தன் பால் விடுத்தற்கு அரசியைச் சித்திராபதி அச்சுறுத்துகின்றாள். மணிமேகலையால் இந் நகரத்திற்கே பெருந்துன்பம் நிகழ்தல் கூடும் என்று தொடங்கி அதற்கு எடுத்துக்காட்டாக நெடுமுடிக்கிள்ளி வரலாறு ஒன்று கூறுகின்றாள்.

நெடுமுடிக்கிள்ளி வரலாறு

27-34: உம்பளம்............எய்தா

(இதன் பொருள்) உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங்கோட்டு பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்-உபபளத்தைத் தழுவிக்கிடந்த உயர்ந்த மணலால் இயன்ற கரையிடத்தே கடலினின்றும் வருகின்ற பெரிய அலைகள் உலாவுகின்ற புன்னை மரங்கள் அடர்ந்த கடற்கரைச்சோலையின்கண்; கிளர்மணி நெடுய முடியை விரும்பி அணிவதனால் நெடுமுடிக்கிள்ளி என்று அழைக்கப்படுகின்ற சோழமன்னன் நிற்கின்ற பொழுது காலமும்; இளவேனில் இறுப்ப-இளவேனில் பருவமாக இருக்க; முன்னா அச் சோழமன்னன் முன்னிலையிலே; இறும்பூது சான்ற பூநாறு சோலை-வியக்கத்தகுந்த மணம் கமழ்கின்ற அச் சோலையிலே; யாரும் இல் ஒருசிறை தானே தமியள் ஒருத்தி தோன்ற-பிறர் யாருமில்லாத துணையின்றித் தனியாக ஒரு மங்கை வந்து தோன்றாநிற்ப; ஈங்கு இவள் இன்னள் என்று யார் என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-ஈங்குத் தோன்றிய இவள் இன்னாள் என்றாதல் யார் என்றாதல் அவ்வரசன் அறியாதவனாய் அவள் அழகினால் மயக்கம் எய்தி; என்க.

(விளக்கம்) உம்பளம்-உப்பளம்: விகாரம்.கோடு-கரை நெடு முடிக்கிள்ளி-ஒரு சோழ மன்னன் இறும்பூது-வியப்பு ஒருசிறை-ஓரிடம் தமியள்-தனியன்: இன்னள் என்று யார் கொல் என்று அறியான் என்க. அறியானாகவும் அவள் அழகில் மயக்கமெய்தி என்க.

இதுவுமது

35-45: கண்ட...........தேர்வுழி

(இதன் பொருள்) கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்று உணர் உடம்பினும்-அங்ஙனம் மயங்கிய மன்னன் அவளைக் கண்ட கண்ணினும் அவள் இன்சொல்லைக் கேட்ட செவியினும் எயிற்றின் ஊறிய நீரைப் பருகிய வாயிடத்தும் மோந்த மூக்கினும் தீண்டி உணர்ந்த உடம்பிடத்தும்: வெற்றிச்சிலைக் காமன்-வெற்றியையுடைய கருப்பு வில்லையுடைய காமவேள் எய்த; மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயில் இதழ் கமலமும் பருவத்து அலர்ந்த மலர்வாய் அம்பின் வாசம் கமழ-மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும் செறிந்த இதழையுடைய தாமரையும் ஆகிய இவற்றின் பருவத்திலே விரிந்த மலராகிய தனக்கு வாய்ந்த அம்புகளின் நறுமணம் கமழாநிற்க அவளொடு புணர்ந்து; பலர் புறம் கண்டோன்-பகைவர் பலரையும் போர்களத்திலே வென்று புறங்கண்டவனாகிய அம் மன்னவன்; பணிந்து தொழில் கேட்ப அம் மடந்தையைப் பணிந்து நாள்தோறும் அவள் ஏவிய தொழில்களை எல்லாம் செய்ய; ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்-இவ்வாறே ஒரு திங்கள் முடியுந்துணையும் அவளோடிருந்து தான் இன்பமாகக் காலங் கழித்திருந்தாலும் தான் இன்னள் என்று அரசனுக்குக் கூறாதவளாய்; பொருவரு பூங்கொடி போயின் அந்நாள்-ஒப்பற்ற மலர்க்கொடி போலும் அம் மடந்தை அரசனைக் கைவிட்டு அவன் அறியாவண்ணம் போய்விட்ட அந்த நாளிலே; வேந்தரை அட்டோன்-பகை மன்னர்களை எல்லாம் கொன்று நூழிலாட்டிய அவ்வரசன் பெரிதும் ஆற்றாமையுடையவனாய்; அவ்விளங்கொடி யாங்கு ஒளித்தனள் என்றே-இளமையுடைய காமவல்லி போன்ற அவ்வழகி எங்குப்போய் ஒளித்தாளோ என்று மனம் மறுகி மெல்லியல் தேர்வுழி-மெல்லியலாகிய அந் நங்கையைத் தேடியலை இன்ற காலத்தே; என்க.

(விளக்கம்) அந் நங்கையுடைய திருமேனியைக் கண்ணால் கண்டு சுவைத்தும் இன்மொழியைக் கேட்டுச் சுவைத்தும் வாலெயிறூறிய நீரைப் பருகிச் சுவைத்தும் திருமேனியைத் தீண்டியும் கூந்தலை மோந்து சுவைத்தும் உணர்ந்தவரசன் ஆராமையோடு சுவைத்தான் என்பார் அதற்கு ஏதுவாகக் காமவேள் கண் முதலிய அவன் ஐம்பொறிகளிடத்தும் மயிலை முதலிய ஐந்து மலர் அம்புகளையும் இடையறாது எய்தான் என்பது தோன்ற அவற்றின் வாசம் அவன் பொறிகளில் கமழ என்றார். ஒருமதி-ஒரு திங்கள்; (அஃதாவது முப்பது நாள்) அந் நாள்களிலே தன்னை யாரென்று அரசனுக்கு அறிவியாமலே இருந்து, போகும் பொழுதும் அவன் அறியாவண்ணம் போயினள் என்றவாறு. ஈண்டு

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
மொண்டொடி கண்ணே உள (குறள்-1101)

என வரும் திருக்குறளை நினைக. பலர் புறங்கண்டோன் ஈண்டு ஒரு மகளுக்குப் பணிந்து தொழில் கேட்ப என்ற நயமுணர்க இக்கருத்தோடு

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088)

என வரும் திருக்குறளையும் நோக்குக.

கிள்ளியின் முன்னர் ஒரு சாரணன் தோன்றுதல்

46-57: நிலத்தில்...............அந்நாள்

(இதன் பொருள்) நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறி சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-அவ்வரசன் முன்னர் நீரில் முழுகுமாறு போல நிலத்தின்கண் முழுகியும் நெடிய வானத்திலே ஏறியும் நிலத்தில் மேல் நடப்பது போல நீரின் மேல் நடந்தும் திரிகின்ற இருத்திகள் பலவும் கைவந்த ஓரு சாரணன் தோன்றா நிற்ப; மன்னவன் அவனை வணங்கி முன் நின்று-அரசன் அவனை வணங்கி அவன் முன்னிலையிலே நின்று; அடிகள் என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள் அன்னாள் ஒருத்தியை கண்டிரோ சொல்லுமின் என்று தொழ-அடிகளே என்னுடைய ஆருயிர்க்காதலி இங்கு யான் அறியாவண்ணம் ஒளித்திருக்கின்றாள் அத்தகையாள் ஒரு நங்கையை இருத்தி பலவும் வல்ல தாங்கள் கண்டிருப்பீரோ கண்டிருப்பீராயின் எனக்குச் சொல்லியருள வெண்டும் என்று கைகுவித்துத் தொழா நிற்ப; அவன் உரைப்பான்-அச் சாரணன் சொல்லுவான்; பார்த்திப கேளாய் கண்டிலேனாயினும் காரிகை தன்னை பண்டு அறிவுடையேன்-அரசனே கேள் அவளை இப்பொழுது யான் கண்டிலேன் ஆனாலும் அவ்வழகியை யான் பண்டைக் காலத்தே அறிந்ததுண்டு அவள் யாரெனின்; நாகநாடு நடுக்கு இன்று ஆள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி-நாக நாட்டைக் குடிகள் துன்புறாத படி செங்கோல் செலுத்துபவனும் பகைவரை வென்று வாகை சூடுதற்கியன்ற வேலை ஏந்தியவனும் ஆகிய வளைவணன் என்னும் அரசனுடைய பட்டத்துத் தேவியாகிய; வாசமயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிறந்த அந் நாள்-வாசமயிலை என்னும் பெயரையுடைய அரசியினது வயிற்றில் பிறந்த பீலிவளை என்னும் நங்கையையே நீ இப்பொழுது தேடுகின்றனை அவள் பிறந்த அந்த நாளிலே; என்க.

(விளக்கம்) நீரில் குளிப்பது போல நிலத்தில் குளிப்பதும் விசும்பில் ஏறுவதும் நீரின் மேல் நடப்பதும் சித்தி பெற்ற முனிவர் செயலாகும்; சித்தியைப் பவுத்தர்கள் இருத்தி என்பர். மன்னவன்: நெடுமுடிக் கிள்ளி. ஒளித்தாள்: முற்றெச்சம். அவன் உரைப்பான்-அச் சாரணன் சொல்லுவான்; இப்பொழுது கண்டிலேன் ஆயினும் என்க. காரிகை சுட்டுப் பொருட்டு. நடுக்கின்று: குற்றியலிகரம் உகரமாயிற்று. வளைவணன்:பெயர் வாசமயிலை: பெயர் பீலிவளை: பெயர்; இதனை யான் என் இருத்தியால் உணர்ந்துரைக்கின்றேன் என்பது குறிப்பு.

சாரணன் கூற்று

58-63: இரவி............புகூஉம்

(இதன் பொருள்) கணி இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய கருவொடு வரும் என எடுத்து உரைத்தனன்-அரசனே அந் நாகநாட் டரசனுடைய கணிவன் அவனுக்கு வேந்தே நின் மகள் தன்னுடைய பெதும்பைப் பருவத்திலே கதிரவன் குலத்தில் தோன்றிய ஒரு மன்னவன் தன் இணையாகிய முலையில் தோய்தலால் அம் மன்னவனுக்கு வயிற்றில் கருவுண்டாகி மீண்டும் நின்பால் வருவாள் என்று அவளுடைய எதிர்கால நிகழ்ச்சியை எடுத்துக் கூறினன். அவன் கூறியாங்கே அவள் வயிறு வாய்க்கப் பெற்று இப்பொழுது நாக நாடு சென்று விட்டாள்; ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் புலம்பல் இது கேள்-அவ்வாறு நினக்குக் கருவாகிய அம் மகன் நின்பால் வந்து சேர்வானல்லது நின்னால் தேடப் படுகின்ற மலர்க்கொடி போலும் மெல்லியளாகிய அப் பீலிவளை மீண்டும் இங்கு வருவாள் அல்லள் ஆதலின் நீ வருந்தாதே கொள் அரசே இன்னும் ஒன்று கேள்; தீவகச் சாந்தி செய்யா நாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம்-இத் தீவகத்திற்குச் சாந்தியாகிய இந்திர விழா செய்யாதொழிந்த நாளிலே உன்னுடைய தலைநகரமாகிய காவலையுடைய பெரிய இப் பூம்புகார் நகரம் கடல் கோட்படும்; என்றான் என்க.

(விளக்கம்) இரவி குலத்தொருவன் என்றது கதிரவன் குலத்து மன்னவராகிய சோழ மன்னருள் ஒருவன் என்றவாறு கருவொடு வரும் வயிற்றில் கருவுண்டாகி வருவாள் கணி-காலக்கணிவன்; நிமித்திகன் ஆங்கு-அவ்வாறு. அப்புதல்வன்-நினக்குப் பிறந்த மகன், பூங்கொடி: பீலிவளை. புலம்பல்: எதிர்மறை வியங்கோள். வருந்தாதே கொள் என்றவாறு தீவகச்சாந்தி-இந்திர விழா. உன் காவலையுடைய மாநகருமாம் கடல் வயிறு புகுதல்-கடல் கோட்பட்டு மறைதல்

சித்திராபதி தன் அச்சம் இஃதெனல்

64-74: மணிமே............ஏத்தி

(இதன் பொருள்) அது மணிமேகலை தன் வாய்மொழி-அவ்வாறு இந்திர விழாச் செய்யாத நாளில் இந் நகரம் கடல் வயிறு புகுதல் வேண்டுமென்பது மணிமேகலா தெய்வத்தின் தப்பாத சாப மொழியாகும்; இந்திர சாபம் உண்டாகலின் தணியாது அங்ஙமேயாகுக என்று இந்திரனிட்ட சாபமும் உண்டாதலால் அது நிகழாதொழியாது; ஆங்கு பதி அழிதலும்-அவ்வாறு இந் நகரம் கடல் கோட்பட் டழிதலும் அழிந்த வழி; ஈங்குப் பதி கெடுதலும்-இங்கே அரசு கேடெய்துதலும்; வேந்தரை அடடோய்-பகை வேந்தனைக் கொன்றழித்தவனே; மெய்யெனக் கொண்டு -வாய்மையாக ;நிகழ்ந்துவிடும் என்று உள்ளத்தில் திட்பமாகக் கொண்டு; இக் காசு இல் மாநகர் கடல் வயிறு புகாமல் வாசவன் விழாக்கோள் மறவேல் என்று-இக் குற்றமற்ற பெரிய நகரம் கடலில் வீழ்ந்து அழிந்து போகாமைப் பொருட்டு நீ இந்திர விழாச் செய்தலை மறந்தொழியாதே கொள் என்று சொல்லி அறிவுறுத்தி; மாதவன் போயின அந் நாள் தொட்டும் இக் காவல் மாநகர் கலக்கு ஒழியாதால்-அச் சாரணன் போன அந்த நாளிலிருந்து இந்தக் காவலமைந்த பெரிய நகரத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம் எப்பொழுதேனும் அந் நிகழ்ச்சி விடுமோ என்றஞ்சி நெஞ்சு கலங்குதல் ஒழிந்திலர்; மன் பெரும் தெய்வம் தன் பெயர் மடந்தை துயர் உறுமாயின் வருதலும் உண்டு என-எஞ்ஞான்றும் நிலையுதலுடைய பேராற்றலுடைய அம் மணிமேகலா தெய்வம் தன்னால் நிலை நிறுத்தப் பெற்ற குடியிற் பிறந்து அக் காரணத்தால் தன் பெயரையே கொண்டுள்ள இம் மணிமேகலை சிறையிடைக் கிடந்து துன்புறுவாளானால் சினம் கொண்டு அவளைப் பாதுகாத்துற் பொருட்டு இந் நகரத்திற்கு வருதலும் கூடும் என்று நினைத்து; அரசன் தேவி அஞ்சினேன் என்று ஏத்தி-அங்ஙனம் அத் தெய்வம் வந்தக் கால் கோப்பெருந்தேவியே இந் நகரத்திற்கு இன்னும் எத்தகைய கேடு சூழுமோ என்று அடிச்சி பெரிதும் அஞ்சிக் கிடக்கின்றேன் என்று சொல்லிப் பின்னும் அரசியைத் தொழுது வாழ்த்தி; என்க.

(விளக்கம்) அது-கடல் வயிறு புகுவது. இந்திர சாபமும் உண்டாகலின் எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது செய்யுள் விகாரம். ஆங்குப் பதி-அவ்வாறு இந் நகரம் என்க. ஈங்குப்பதி-ஈங்கு நிலை பெற்றிருக்கின்ற அரசு-காசு-குற்றம். வாசவன்-இந்திரன். மாதவன்-சாரணன். மாநகர்-நகர்வாழ் மாந்தர்: ஆகுபெயர் கலக்கு-கலங்குதல் தன் பெயர் மடந்தை-மணிமேகலை தெய்வம்-மணிமேகலா தெய்வம் முன்னர்க் கடிய சாபமிட்ட அத் தெய்வம் சினந்து வருமானால் இன்னும் பெரிய கேடு சூழ்ந்து விடக்கூடும் என்று யான் அஞ்சுகின்றேன், என்று மணிமேகலையைச் சிறைவீடு செய்யக்கருதிச் சித்திராபதி அரசியை அச்சுறுத்துதலும் அத் தெய்வம் எங்கும் போய் விடவில்லை அது பேராற்றலுடையது என்பாள் மன்பெரும் தெய்வம் என்பதும், அத் தெய்வம் வருதலுக்கு ஏதுகாட்டுவாள் தன் பெயர் மடந்தை துயருறுமாயின் வருதலும் உண்டு என்பதும் பெரிதும் நுணுக்கமுடையன ஆதல் உணர்க. இங்ஙனம் அச்சுறுத்தற்கே மணிமேகலை சாபமிட்டிருக்கின்ற செய்தியை வலிந்து ஈங்கு அரசிக்குக் கூறுதலும் நினையுமிடத்தே கம்பருடைய கொடு மனக் கூனியும் நம்மகத்தே வந்து தோன்றுகின்றனள்.

சித்திராபதி மணிமேகலையைத் தன்பால் தருக எனலும் அரசி மறுத்துரைத்தலும்

75-82: நன்மனம்.........சொல்வுழி

(இதன் பொருள்) நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என் மனைத் தருக என-இப்பொழுது தனது பட்டறிவு காரணமாக அறியாமை நீங்கி நல்லுளம் தோன்றி யிருக்கின்ற நாடகக் கணிகையை மணிமேகலையை யான் என்னில்லத்திற்கு அழைத்துப் போகும்படி தந்தருளுக என்று சொல்லி நயம்பட வேண்டிய சித்திராபதியை நோக்கி; இராசமாதேவி-அக் கோப்பெருந்தேவி கூறுபவள்-ஏடி சித்திராபதி; கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை கள்ளுண்ணலும் பொய் கூறுதலும் காமமாடுதலும் கொலை செய்தலும் உள்ளத்தின்கண் பிறர் பொருளைக் களவு செய்யக் கருதுதலும் என்னும் இத் தீவினைகள் ஐந்தும் அறிஞர்களால் விலக்கப்பட்டவையாம்; தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-இவற்றையே முதன்மையாகக் கொண்டு ஒழுகுகின்ற நின்னுடைய கடைப்பட்ட வாழ்க்கையானது; புலைமை என்று அஞ்சி போந்த பூங்கொடி-புலைத் தன்மையுடையது என்று அதனை அஞ்சி நன்னெறியிலே ஒழுகுகின்ற பூங்கொடி போல்பவளாகிய மணிமேகலை; நின்னொடு போந்த நின்மனைப் புகுதாள்-இனி நின்னோடு வந்து நின் இல்லத்திலே புகுதுதற்கு உடன்படாள் அவள்; என்னோடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல் உழி-என்னோடு இவ்வுவளகத்திலேயே இருப்பாள் என்று இங்குக் கூறியவற்றை அச்சித்திராபதிக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே என்க.

(விளக்கம்) நன்மனம் பிறந்த பட்டறிவினால் இப்பொழுது மணிமேகலைக்கு நல்லுளம் பிறந்திருக்கும் என்று கூறியபடியாம் இராசமாதேவி கள் முதலியன. உரவோர் துறந்தவை என்றது மணிமேகலை தனக்குக் கூறியவற்றைத் தன்னுளம் கொண்டு கூறியபடியாம். தலைமையில் வாழ்க்கை -கடைப்பட்ட வாழ்க்கை புலைமை கீழ்மை பூங்கொடி: மணிமேகலை.

கணிகையர் வாழ்க்கை கடையே (சிலப் 11-183)

என்பதும் காண்க.

மணிமேகலை நிலைமையைக் கேட்ட மாதவியின் செயல்

83-92: மணிமே.............வணங்க

(இதன் பொருள்) மணிமேகலை திறம் மாதவி கேட்டு துணி கயம் துகள்பட துளங்கியது போல் தெளியாச் சிந்தையள் மணிமேகலையின் நிலைமையை மாதவி கேள்வியுற்றுத் தெளிந்த குளத்தின்கண் காற்றுக் கொணர்ந்து வீசிய துகள்கள் படுதலாலே கலங்கியது போல் கலங்கித் தெளிவில்லாத நெஞ்சத்தையுடையளாய்; சுதமதிக்கு உரைத்து வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந் நடுங்கி-அச் செய்தியைத் தன்னுடன் இருந்த சுதமதிக்கும் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு துன்பத்தால் சூறைக் காற்றால் தாக்குண்ட பூங்கொம்பு போலச் சுழன்று வருந்தி மெய் நடுங்கச் சென்று; அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன் மறவேல் மன்னவன் தேவி தன்பால் வர-அறவணவடிகளாருடைய அடிகளிலே வீழ்ந்து வணங்கி அவ்விடத்தே தம்மோடு எழுந்த அவ்வடிகளாரோடு மூவருமாக வீர வேலையுடைய அரசனுடைய தேவியின் மாளிகைக்குச் செல்லா நிற்ப; தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-இராசமாதேவியும் ஆயமகளிரும் அங்கிருந்த சித்திராபதியும் மணிமேகலையும் அறவணவடிகளாருடைய வரவு கண்டவுடன்; எழுந்து எதிர் சென்று இணைவளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணை அடி வணங்க-தத்தம் இருக்கையினின்றும் எழுந்து அவர் எதிரே சென்று இரு கைகளையும் குவித்து எல்லாராலும் தொழத்தகுந்த சிறப்புடைய பெரிய தவத்தையுடையவராகிய அவ்வறவணருடைய திருவடிகளிலே விழுந்து வணங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) மணிமேகலை திறம் என்றது அவள் சிறையிடப் பட்டிருத்தலை துணியகம்-தெளிந்த நீர் நிலை துகள்-தூசி. துளங்கியது-துளங்கியவது என விகாரம் எய்திற்று சுதமதியோடும் சென்று அறவணர் அடிவீழ்ந்து அவரோடு மூவருமாக என்க. ஆயம்-தோழியரும் சிலதியருமாகிய மகளிர் கூட்டம். இணைக்கை வளைக்கை எனத் தனித்தனி கூட்டுக கையால் தொழுது தொழுந்தகை மாதவன் அடி வணங்க என்க. தொழுந்தகை-எல்லாராலும் தொழத் தகுந்த சிறப்பு.

இராசமாதேவி அடிகளாரை முகமன் கூறி வாழ்த்துதல்

93-100: அறிவு.........ஆண்டென

(இதன் பொருள்) அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும் அங்ஙனம் வணங்கியவர்களை நோக்கி நுங்களுக்கெல்லாம் மெய்யறிவு உண்டாவதாக என்று அறவணடிகளார் வாழ்த்துக் கூறா நிற்ப; இணைவளை நல்லாள் இராசமாதேவி அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்-பொருந்திய வளையலையுடைய நல்லாளாகிய இராசமாதேவி அரிய தவத்தையுடைய அம் முனிவருக்குப் பொருந்திய இருக்கையைக் காட்டி அதன்கண் எழுந்தருளச் செய்து அவருடைய அடிகளில் நன்னீர் பெய்து விளக்கி ஆண்டுச் செய்யக்கடவ சிறப்பெல்லாம் செய்த பின்னர் அடிகளாரை நோக்கி முகமன் கூறுபவள்; யாண்டு பல புக்க நும் இணை அடிவருந்த என்காண் தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது-அகவை யாண்டுகள் பல சென்ற இத்தகைய முதுமைக் காலத்திலே நுங்களுடைய இணைந்த திருவடி மலர்கள் நடையால் மெலிந்து வருந்தும்படி அடியேன் செய்த நினைத்துக் காணத் தகுந்த நல்வினையே நும்மை இவ்விடத்திற்கு அழைத்துக் கொணர்ந்திருத்தல் வேண்டும்; நாத் தொலைவு இல்லை ஆயினும் இயாக்கை தளர்ந்து மூத்தது-அடிகளுடைய அறம் கூறும் செந்நாவினது வன்மை குறைந்ததில்லை யானாலும் யாக்கை மட்டும் பெரிதும் மூத்துளது இது; பல்லாண்டு வாழ்கஎன-பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தாநிற்ப; என்க

(விளக்கம்) ஒன்றற்கொன்று இணையாகிய வளையலையுடைய எனினுமாம். அருந்தவர்க்கு அமைந்த ஆசனம்-துறவோர் இருத்தற்கு எனச் சிறப்பாக அமைந்த இருக்கை. அவை மணை தருப்பை முதலியவை என்னை?

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
(தொல், மரபி, 71)

என வரும் தொல்காப்பியத்தானும் உணர்க. இங்ஙனமே,

அணிசெய் கோழரை யரை நீழ லழகனைப் பொருந்தி
மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்
றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது
பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான் (நீலகேசி: 476)

என நீலகேசியினும் வருதலுணர்க. யாண்டு-அகவை. காண்டகுநல்வினை நினைத்துப் பார்க்கத்தகுந்த நல்வினை; நா: ஆகுபெயர்; சொல்வன்மை ஈண்டு இராசமா தேவியின் முகமன் பேரின்பம் பயத்தல் உணர்க.

அறவணர் கூற்று

101-110: தேவி..........அறிகுவர்

(இதன் பொருள்) தேவி கேளாய் செய் தவ யாக்கையின் மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்-இராசமாதேவியே முற்பிறப்பிலே செய்த நல்வினை காரணமாக இம்மையினும் செய்தற்கியன்ற அத் தவத்திற்குப் பொருந்திய நல்லதொரு யாக்கையோடு பிறந்தேன், அங்ஙனமாயினும் யாக்கையின் முதிர்ச்சியால் மேற்றிசையில் மறைதற்கு வீழ்ச்சியுறுகின்ற ஞாயிற்று மண்டிலம் போல்கின்றேன்; பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார் இறந்தார் என்கை இயல்பே-உலகின்கண் பிறந்தனர் நாளுக்கு நாள் மூத்தனர் பின்னர்ப் பிணிக்கும் நோயினை எய்தினர் அது காரணமாக இறந்து பட்டார் என்பது நிலையாமையுடைய இவ்வுலகின் இயல்பேகாண், அது நிற்க இதுகேள்-உயிர்க்கு உறுதிதருகின்ற இவ்வறிவுரையைக் கேட்பாயாக; பேதைமை செய்கை உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் வினைப்பயன் இற்று என வகுத்த இயல்பு ஈராறும்-பேதைமையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனும் ஆகிய ஒவ்வொன்றும் இத் தன்மைத்து என்று வகுத்துக் கூறப்பட்ட இயற்கைப் பொருளாகிய இப் பன்னிரண்டு நிதானங்களையும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர்-பிறந்த மக்கள் அறிந்து கொள்வாராயின் பிறப்பினால் எய்தும் பெரிய பேறு இன்னதென்று அறிந்து கொள்வர் இவற்றை அறிந்திலராயின் அவர் ஆழும் நரகத்தையே அறிவார் என்பது தேற்றம் என்றார்; என்க.

(விளக்கம்) செய்தவத்திற்குப் பொருந்திய நல்யாக்கையின் என்க. வீழ்கதிர்-மேற்றிசையில் வீழ்ச்சியுறுகின்ற ஞாயிறு. பிறத்தலும் முத்தலும் பிணிநோய் உறுதலும் இறத்தலும் இவ்வுலகியல்பாகலின் அது பற்றிக் கவலுதல் வேண்டா என்பது குறிப்பு. பேதைமை முதலாக வினைப்பயன் ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டும் நிதானங்கள் எனப்படும். இவற்றின் இயல்புணர்ந்தோர் நன்னெறியில் ஒழுகி வீடு பெறுவர்; உணராதவர் தீவினைகள் செய்து நரகமே புகுவர் என்றறிவுறுத்த படியாம்.

நிதானங்களின் இயல்பு (1) பேதைமை

112-122: பேதைமை........காட்டும்

(இதன் பொருள்) பேதைமை என்பது யாது என வினவின் இவற்றுள் முன்னின்ற பேதைமை என்பது யாதென்று வினவினால் கூறுவன் கேள்; ஓதிய இவற்றை உணராது மயங்கி இயல் படு பொருளால் கண்டது மறந்து முயல்கோடு உண்டு என கேட்டது தெளிதல்-இங்குக் கூறப்பட்ட இந் நிதானங்கள் பன்னிரண்டையும் ஆராய்ந்து உணராமல் மயங்கி இயற்கையிலே தோன்றுகின்ற பொருள்களால் தாம் கண்கூடாகக் கண்டதனை மறந்து முயலுக்குக் கொம்புண்டென அறிவிலார் கூறியதனைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்துகோடலாம்; உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகில-மேலும் கீழும் நடுவும் ஆகிய மூவிடத்திலுமுள்ள மூன்று வகைப்பட்ட உயிரில் உலகங்களில் உயிருடைய உலகம் எண்ணிறந்தனவாம் அவையாவன; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்று பல் உயிர் அறு வகைத்து ஆகும்-மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் ஒருங்கு தொக்க விலங்குகளும் பேயும் என விரிவகையால் எண்ணிறந்த பலவாகிய உயிர்களெல்லாம் தொகை வகையால் இந்த ஆறு வகையுள் அடங்கும்; நல்வினை என்று இரு வகையால் சொல்லப்பட்ட கருவின் உள் தோன்றி-அவ்வுயிர்கள் நல்வினை என்றும் தீவினை என்றும் தாம் தாம் செய்கின்ற இருவகை வினை காரணமாக முன் கூறப்பட்ட மக்கள் முதலிய அறுவகைப் பிறப்பில் கருவாகிப் பிறந்து; வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்-முன் செய்த இருவகை வினைகளின் பயனும் வந்து எய்தும் காலத்தில் அவ்வுயிர்களுக்கு மனத்தின்கண் பெரிய இன்பத்தையும் பெரிய துன்பத்தையும் தோற்றுவிக்கும் என்க.

(விளக்கம்) உலகம் மூன்று என்றது மேலும் கீழும் நடுவும் என இடவகையால் மூவகைப்படுத்தோதியபடியாம். இவற்றின் விரியைச் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையின்கண் உணர்க. இவை உயிரில் உலகம் ஆம். இவற்றின்கண் உயிருடையவுலகம் அளவிறந்தன என்க. அவை பிறப்பு வகையால் மக்கள் முதலிய அறுவகைப்படும் என்றவாறு. இந்த உயிருலகம் தாம்தாம் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப அறுவகைப்பட்ட பிறப்பில் தோன்றும் என்க. நல்வினை இன்பம் காட்டும் தீவினை கவலை காட்டும் என்றவாறு. இனி உயிர்களுக்குத் துன்ப நீக்கமே குறிக்கோள் ஆதலின் துன்பத்திற்குக் காரணமான தீவினையை முதற்கண் எடுத்து, இனி விதந்து கூறுவர்.

தீவினையின் இயல்பும் பயனும் (2) செய்கை

123-134: தீவினை.................தோன்றுவர்

(இதன் பொருள்) தீவினை என்பது யாது என வினவின் வினைகள் இரண்டனுள் தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று வினவுவாயாயின்; ஆய்தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய் அழகிய வளையலணிந்த நன்மையுடைய அரசியே அங்ஙனம் கூறிய அத் தீவினையை விளக்கிக் கூறுவேன் கேட்பாயாக; கொலை களவு காமத்தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்-கொலை செய்தலும் களவு கொள்ளுதலும் காமமாகிய விருப்பத்தை எய்துதலும் ஆகிய கெடாத உடம்பினால் தோன்றும் தீவினைகள் மூன்றும்; பொய் குறளை கடுஞ்சொல் பயன் இல் சொல் என சொல்லின் தோன்றுவ நான்கும்-பொய் கூறுதலும் கோள் சொல்லுதலும் கேட்போர் உள்ளத்தைப் புண்படுத்தும்படி கடுஞ்சொல் கூறுதலும் பயனில்லாத சொல்லைச் சொல்லுதலும் எனச் சொல்லிலே பிறக்கின்ற தீவினைகள் நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்று உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என-வெஃகலும் வெகுளலும் பொல்லாக் காட்சியும் என்று உள்ளத்தில் தோன்றும் தீவினைகள்; பத்து வகையால்-பத்து வகைப்படும்; பயனை தெரி புலவர் இத் திறம் படரார்-இவற்றால் எய்தும் பயனை அறிந்துள்ள அறிவுடையோர் இத் தீய நெறியிலே ஒழுகார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்-அங்ஙனமின்றி இத் தீவினைகளை அஞ்சாது அவற்றிற்கியன்ற வழியில் செல்வாராயின் அவற்றின் பயனாக விலங்காகவாதல் பேயாகவாதல் நரகராகவாதல் கலங்கிய உள்ளத்தின்கண் துன்பத்தோடு தோன்றா நிற்பர் என்றார்; என்க.

(விளக்கம்) தீவினை கொலை களவு காமம் பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் வெகுளல் பொல்லாக் காட்சி எனப் பத்துவகைப்படும் இவற்றுள் கொலை களவு காமம் ஆகிய மூன்றும் உடம்பினால் தோன்றும் தீவினை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என்னும் நான்கும் மொழியால் தோன்றும் தீவினை. வெஃகல் வெகுளல் பொல்லாக்காட்சி என்னும் மூன்றும் மனத்தால் தோன்றும் தீவினை என்க. காமமாகிய தீவிழைவு என்க. பிணி முதலியவற்றையுடைய உடம்பில் இவை தோன்றா என்பது உணர்த்தற்கு உலையா உடம்பு என்றார். குறளை-கோள் பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களுள் ஒன்றும் பயவாத சொல் வெஃகல்-விரும்புதல் வெகுளல்-சினத்தல். பொல்லாக் காட்சி-மயக்கக் காட்சி. இவை மூன்றுமே காம வெகுளி மயக்கம் எனப்படுவன.

நல்வினையின் இயல்பும் பயனும்

135: 140: நல்வினை...........உண்குவர்

(இதன் பொருள்) நல்வினை என்பது யாது என வினவின்-நல்வினையென்று சொல்லப்படுவது யாதென்று வினவுவாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதி நீங்கி-முன்னே சொல்லப்பட்ட கொலை முதலிய பத்து வகைப்பட்ட தீவினைகளினின்றும் விலகி சீலம் தாங்கி தானம் தலை நின்று-ஐந்து வகையும் பத்து வகையும் என்று கூறப்படுகின்ற நல்லொழுக்கங்களை மேற்கொண்டு தானம் முதலிய அறச் செயல்களை இடையறாது செய்து; மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்-உயர்ந்த பிறப்பென்று சான்றோரால் வகுத்துக் கூறப்பட்ட மூன்று வகைப் பிறப்பாகிய தேவரும் மக்களும் பிரமரும் ஆகிய பிறப்புகளை எய்தி அங்கு வந்து மகிழ்ச்சியைத் தருகின்ற அந் நல்வினை பயன்களைத் துய்த்து இனிதிருப்ப என்றார்; என்க.

(விளக்கம்) சொல்லிய பத்து-முன் கூறப்பட்ட தீவினைகள் பத்தும். சீலம்-ஒழுக்கம். இவை இல்லறம் துறவறம் முதலிய நிலை வேறு பாட்டால் ஐந்து வகையும் எட்டு வகையும் பத்துவகையுமாம். மேல்-உயர்ந்த பிறப்பு. வினைப்பயன்-நல்வினைப்பயன். உண்குவர்-நுகர்வர்.

அறவணர் எழுந்து போதலும் மணிமேகலை செயலும்

141-150: அரசன்.........உய்ம்மின்

(இதன் பொருள்) அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின்-இராசமாதேவியொடு ஈங்கிருக்கின்ற மகளிர் எல்லாம் குற்றமில்லாத நல்ல அருளறத்தைப் பேணக் கேட்டு உய்யுங்கோள் என்று சொல்லி மணிமேகலையை நோக்கி; மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலை-முற்பிறப்பிலே செய்த நல்வினை காரணமாக மறு பிறப்பு உணரும் திருவுடைய மணிமேகலாய்; நீ பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்-பிற சமயக் கணக்கர் அறங்களைக் கேட்டு உணர்ந்த பின்னர் நின்பால் வந்து உனக்கு இங்குக் கூறிய தத்துவங்கள் பலவற்றையும் இவற்றின் கூறுபாடுகளையும்; முத்தேர் நகையாய் முன்உறக் கூறுவல்-முத்துப் போன்ற பற்களையுடைய உன் முன்னிலையிலேயே உள்ளத்தில் பொருந்தும்படி அறிவுறுத்துவேன் காண்; என்று அவன் எழுதலும்-என்று சொல்லி அறவணர் இருக்கையினின்றும் எழா நிற்ப; இளங்கொடி எழுந்து-அது கேட்ட மணிமேகலை எழுந்து ; நன்று அறி மாதவன் நல்அடி வணங்கி-நன்மையை முழுதும் உணர்ந்த பெரிய தவத்தையுடைய அவ்வறவணவடிகளாருடைய திருவடிகளில் விழுந்து வணங்கிய பின்னர் மகளிரை நோக்கிக் கூறுபவள்; தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின்-இராசமாதேவியம் ஆய மகளிரும் சித்திராபதியும் ஆகிய எல்லீரும் அறவணவடிகளார் கூறுகின்ற நல்லற மொழிகளைக் கேட்டு அவற்றை மறவாமல் கடைப்பிடியாகக் கொண்டு ஒழுகி உய்யுங்கோள் என்று அறிவுறுத்த பின்னர்; என்க.

(விளக்கம்) புரை-குற்றம். நல்லறம் என்றது பவுத்தர் அறங்களை முனிவர் எஞ்சியவறங்களை யாம் பின்னர்க் கூறுவாம் அவற்றைப் போற்றிக் கேண்மின் என்றார் எனக் கோடலுமாம். மணிமேகலைக்கு நிகழவிருக்கின்ற ஏது நிகழ்ச்சிகளைக் கருதி அவை நிகழ்ந்த பின்னர்க் காஞ்சியினிடத்தே நின்பால் வந்து அறம் கூறுவேம் என்பது கருத்தாகக் கொள்க. பிறவறம்-பிற சமயக் கணக்கர் அறங்கள். நகையாய் முன்-நகையையுடைய உன் முன்னிலையிலே அவன்: அறவணவடிகள் நன்றறி-நல்லறத்தை அறிந்த.

மணிமேகலை அம் மகளிர்பால் விடை பெறுதல்

151-160: இந்நகர்.......போகி

(இதன் பொருள்) இந் நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின் மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர். அன்புடையீரே! இன்னென்று கேண்மின்! இப் பூம்புகார் நகரத்தில் யான் தங்கியிருப்பேனாயின் வேந்தன் மகனுக்கு இவள் கொல்ல வருகின்ற கூற்றுவன் ஆயினன் என்று என்னை மாந்தர் பலரும் இகழ்வர் ஆதலால் யான் இங்கிருக்க நினைகிலேன்; ஆபுத்திரன் நாடு அடைந்த பின் நாள்-அறவோனாகிய ஆபுத்திரன் மாறிப் பிறந்திருக்கின்ற சாவக நாட்டிலே சென்று அவனோடளவளாவிய பின்னர்; மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி-குற்றமில்லாத மணிபல்லவத்திற்குச் சென்று அங்குப் புத்த பீடிகையைக் கைதொழுது வணங்கிய பின்னர்; மாபத்தினி தனக்கு வஞ்சியுள் புக்கு-என் அன்னையாகிய வீர மாபத்தினித் தெய்வத்தைக் கண்டு அடி வணங்குதல் பொருட்டு வஞ்சி மாநகரத்திலே புகுந்து வணங்கிய பின்னர்; யாங்கணும் எஞ்சா நல் அறம் செய்குவல்-எவ்விடத்தும் சென்று வீழ்நாள் படாமல் உயர்ந்த அறத்தைச் செய்வேன், இஃது என் உட்கொள்; மனக்கினியீர் எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா என்று அவரையும் வணங்கி-என் உளத்திற்கு இனிய அன்பர்களே யான் எங்குச் செல்லினும் எனக்கு யாதொரு துன்பமும் நிகழமாட்டாது ஆதலால் எனக்குத் துன்பம் உண்டாகுமோவென்று நீவிர் கவலுதல் வேண்டா என்று தேற்றுரை கூறி இராசமாதேவி யும் மாதவியும் சுதமதியும் முதலிய வணங்குதற்குரியவரையும் வணங்கி; வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-உலையின்கண் தீயில் வெந்து ஆறிய பொன்னைப் போல மிளிர்ந்து மேற்றிசையிலே வீழுகின்ற ஞாயிறு மறைந்துபோன அந்திமாலை பொழுதின்கண் மணிமேகலை அவர்கள்பால் விடை பெற்றுச் சென்று என்க.

(விளக்கம்) கண்டோரெல்லாம் பழி தூற்றப்பட்டு இவ்வூரில் வாழ்வதைவிட இவ்வூரை விட்டுப் போதலே நன்று என்றவாறு

தோன்றின் புகழொடு தோன்றக வஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (குறள்-236)

எனவரும் திருக்குறளும் ஈண்டு நினையற்பாலது ஆபுத்திரனாடென்றது, சாவகநாட்டினை மாபத்தினி தனக்கு வஞ்சியுள் புக்கு என மாறுக. பத்தினியை வணங்குதல் பொருட்டு என்பது கருத்தாகக் கொள்க. எஞ்சாநல்லறம்-வீழ்நாள்படாது செய்யும் நல்லறம். செய்தவமும் தெய்வக்காவலும் எனக்குண்மையின் இடருண்டு என்று இரங்கல் வேண்டா என்றாள் என்க. மனக்கு-மனத்திற்கு. அவரை என்றது இராசமாதேவியையும், தாயரையும் வெந்து ஆறு பொன் வீழும் ஞாயிற்றுக்குவமை வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப(அகம்: 71) என்பதும் காண்க. வெந்துறு பொன் என்றும் பாடம்.

மணிமேகலை வான்வழியே பறந்து ஆபுத்திரனாடடைதல்

161-168: உலக............கூறும்

(இதன் பொருள்) உலக அறவியும் முதியாள் குடிகையும் இலகு ஒளிக் கந்தமும் ஏத்தி வலம் கொண்டு அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-ஊரம்பலத்தையும் சம்பாபதியின் திருக்கோயிலையும் விளங்குகின்ற ஒளியையுடைய கந்திற் பாவையையும் கைதொழுதேத்தி வான் வழியாகப் பறந்து போய் அம் மணிமேகலை; இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து ஓர் பூம்பொழில் அகவயின் இழிந்து பொறை உயிர்த்து-இந்திரனுடைய வழித் தோன்றலாகிய புண்ணிராசனுடைய பெரிய நகரத்தின் பக்கத்தே யமைந்த பூம்பொழிலினுள்ளே இறங்கி இளைப்பாறி; ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி-அப் பூம்பொழிலின்கண் வாழுகின்ற துறவோன் ஒருவனைக் கண்டு அவன் அடிகளிலே வீழ்ந்து வணங்கி; இந் நகர் பேர் யாது இந் நகர் ஆளும் மன்னவன் யார் என மாதவன் கூறும்-அடிகளே இந் நகரின் பெயர் யாது? இந்த நகரத்தை ஆளும் அரசன் யார்? என்று வினவ அத் துறவோன் சொல்லுவான்; என்க

(விளக்கம்) உலக அறவி-ஊரம்பலம். ஆண்டுத் துறவோர் சங்கமிருத்தலின் தொழுதாள் என்க. முதியாள் குடிகை-சம்பாபதி கோயில் கந்தம்-தூண். கந்திற்பாவை என்க. ஆறாக என்பதன் ஈறுதொக்கது ஆயிழை: மணிமேகலை. இந்திரன் மருமான் என்றது புண்ணியராசனை; மருமான்-வழித்தோன்றல். பொறை உயிர்த்து-இளைப்பாறி.

அத்துறவோன் கூற்று

169-176: நாக..............தானென்

(இதன் பொருள்) நகைமலர் பூம்பொழில் அருந்தவன்-விளங்குகின்ற அம் மலர்ப் பூம்பொழில் உறைகின்ற அரிய தவத்தையுடைய அத் துறவோன்; இது நாகபுரம் நல்நகர் ஆள்வோன் பூமி சந்திரன் மகன் புண்ணியராசன்-இந் நகரத்தின் பெயர் நாகபுரமென்பது இந்த அழகிய நகரத்தை யாள்பவன் ஆவான்; ஈங்கு இவன் பிறந்த அ நாள் தொட்டு ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது-இந் நாட்டின்கண் இப் புண்ணியராசன் பிறந்த அந்த நாளிலிருந்து மிகவும் உயர்ந்த வானத்தினின்றும் மழை பெய்தல் தவறுதல் அறியாது; மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்-நிலமும் மரங்களும் தாம் வழங்குகின்ற வளங்கள் பலவற்றையும் குறைவின்றித் தருகின்றன ஆதலால்; உயிர்க்கு உள் நின்று உருக்கும் நோய் இல் என-உயிரினங்களுக்கு உடம்பினுள்ளிருந்து மெலிவிக்கின்ற பசி முதலிய நோய் சிறிதுமில்லை என்று; தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன்-அழகிய மலர் மாலையணிந்த புண்ணியராசனுடைய பெருமையை விதந்தெடுத்து விளம்பினன்; என்பதாம்.

(விளக்கம்) இது நாகபுரம் என மாறுக. இந் நன்னகர் எனச் சுட்டுச் சொல் பெய்துரைக்க. பெயல்-மழை. மரன். மகரத்திற்கு னகரம் போலி. தாரோன்: புண்ணியராசன். திறம்-பெருமை. அகைமலர் எனக் கண்ணழித்துக் கோடலுமாம்

இனி, இக் காதையை, கணிகைகேட்டு வருந்தி, வீழ்ந்து, ஏத்தி, தருக என இராசமாதேவி இவை சொல்வுழி மாதவி அடிகளுடன் வரக் கண்டலும் வணங்க அவன் அறிவுண்டாக என்று கூறுலும் இராசமாதேவி ஆசனங்காட்டி விளக்கி வாழ்க என, தேவி கேளாய் நல்லீர் கேண்மின் மணிமேகலை முன்னுறக் கூறுவல் என்று எழுதலும் இளங்கொடி எழுந்து வணங்கி என்று வணங்கிப் போகி ஏத்திச் சென்று இழிந்து உயிர்த்து வணங்கி யாது யார் என அருந்தவன் தாரோன் தன் திறம் கூறினன் என இயைத்துக் கொள்க.

ஆபுத்திரனாடடைந்த காதை முற்றிற்று.


Key Elements

Aabuthiran: The central character of the story. The narrative delves into Aabuthiran’s background, motivations, and the reasons behind their pursuit of this territory.

The Territory: The land or region that Aabuthiran aims to reach or conquer. The story explores the nature of this territory, its significance, and any challenges associated with gaining control over it.

Journey or Conquest: The process through which Aabuthiran reaches or conquers the territory. This includes the strategies employed, obstacles faced, and key events that occur during this journey or conquest.

Impact and Significance: The consequences of Aabuthiran’s achievement. The narrative examines how this conquest affects Aabuthiran, the territory, and any other characters or regions involved.

Reactions and Outcomes: The reactions of other characters or stakeholders to Aabuthiran’s success. The story may also address the long-term outcomes and changes resulting from Aabuthiran’s achievement.

Themes: Key themes might include ambition, leadership, conquest, and the impact of territorial control. The story may also address themes of power, strategy, and the challenges of achieving goals.

Significance

Exploration of Conquest and Achievement: Aabuthiranadu Adaindha Kaathai explores themes of conquest and achievement, highlighting the process and impact of gaining control over a territory. It provides insights into the motivations and strategies of the central character.

Themes of Leadership and Power: The story emphasizes themes of leadership, power, and the challenges associated with achieving significant goals. It reflects on the character’s ability to overcome obstacles and achieve their objectives.

Impact on Territory and People: The narrative examines the broader impact of Aabuthiran’s actions on the territory and its people. It provides a view of how conquests and achievements shape regions and influence relationships.

Conclusion

Aabuthiranadu Adaindha Kaathai is a narrative centered on the achievements or conquests of Aabuthiran in a specific territory. Through its exploration of the journey or conquest, the impact of the achievement, and the broader implications, the story highlights themes of ambition, leadership, and power. It offers a detailed look at the processes and consequences of reaching or gaining control over a land and the significance of such accomplishments.



Share



Was this helpful?