விநாயகர் புராணம்

(பகுதி-7)


அதிதியின் மடியில் படுத்திருந்த குழந்தை மகோற்கடன், ஒரு பருந்தாக வடிவெடுத்தான். மின்னல் வேகத்தில் கிளிகளை நோக்கிப் பறந்தான். அந்தக் கிளிகளை வாயால் கவ்வினான். அதன் இறக்கைகளை பிய்த்து எறிந்தான். தலையைக் குதறினான். அந்த இரண்டு கிளிகளும் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து மடிந்த போது, தங்கள் சுயரூபத்தை அடைந்து ஓவென்ற பேரிரைச்சல் கேட்டது. இதெல்லாம் அரக்கர்களின் வேலை என்பது அப்போது தான் அதிதிக்குப் புரிந்தது. அவள் காஷ்யபரிடம் ஓடிச்சென்று விஷயத்øதைச் சொல்ல, அவரும் வந்து பார்த்து குழந்தையின் வீரத்தை எண்ணி அதிசயித்தார். மேலும், பால விநாயகனின் லீலையையும் ரசித்தார். தங்களால் அனுப்பப்பட்ட அசுரர்கள் கிளிவடிவில் சென்று குழந்தையின் கையால் இறந்தார்கள் என்பதைக் கேள்விப்பட்ட தேவாந்தக, நராந்தகருக்கு கிலி பிடித்துக்கொண்டது. மேற்கொண்டு சில காலம் குழந்தை மகோற்கடனுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்து விட்டனர். அதிதியும் நிம்மதியாக குழந்தையை வளர்த்தாள். குழந்தைக்கு மூன்று வயதான போது, அவனை ஒரு முறை சோமவதி என்ற குளத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே சில முனிபத்தினிகளும், முனிவர்களும் அவரவர்க்குரிய துறைகளில் நீராடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு முதலை தண்ணீருக்குள் இருந்து வெளிப்பட்டது. குழந்தை மகோற்கடன் விளையாட்டுத்தனமாக, அதோ! பூச்சி வருகிறது. நான் அதைப் பிடிக்கப் போகிறேன் என சொல்லிவிட்டு, யார் பதிலுக்கும் காத்திராமல், தண்ணீரில் குதித்து விட்டான். அதிதி அலறினாள். குழந்தை தண்ணீரில் குதித்து விட்டானே என்று பிற துறைகளில் குளித்துக் கொண்டிருந்த முனிவர்களும் ஓடோடி வந்தனர். ஆனால், யாருக்கும் தண்ணீரில் குதிக்க தைரியமில்லை. என்னாகப் போகிறதோ என்று பதைபதைப்புடன் பேசிக் கொண்டனர். மகோற்கடன் அந்த முதலையை நிஜமாகவே பூச்சியைப் பிடிப்பது போலவே பிடித்தான். ஆனால், அந்த முதலை தன் பிறவிக்குணத்தைக் காட்டி விட்டது. குழந்தையை வாலால் சுழற்றி அடித்து அப்படியே விழுங்கிவிட்டது.  அதிதியும் முனிபத்தினிகளும் கதறி அழுதனர். முனிவர்கள் வருத்தம் தாளாமல் கண்ணீர்  வடித்தனர்.

மகோற்கடா! உன் தந்தைக்கு என்ன பதில் சொல்வேன். குளத்திற்கு குளிக்க வராதே. வீட்டிலேயே நீராடு என்று சொன்னேனே! உன்னை அங்கே பாலிலும், பன்னீரிலும் குளிக்க வைத்திருப்பேனே! இப்படி சேஷ்டை செய்து, வீணாக உயிர் துறந்தாயே! விநாயகப்பெருமானே! தவமிருந்து பெற்ற உம்மை எப்படி மீட்பேன், என புலம்பியபோது, குழந்தையை விழுங்கிய முதலையின் வாயைப் பிளந்து கொண்டு, மகோற்கடன் வெளிப்பட்டதை எல்லாரும் பார்த்தனர். அவன் முதலையின் முதுகில் ஏறி அமர்ந்தான். மகோற்கடா! முதலையைக் கொன்றுவிட்டு தப்பி வந்துவிடு. அல்லது சமயோசிதமாக கரைக்கு வந்து சேர், என அதிதி கத்தினாள்.மகோற்கடன் அந்த முதலையைப் பார்த்து, கரையை நோக்கிச் செல், என்று ஆவேசமாக சொன்னான். முதலை வேகமாக கரைக்கு வந்தது. அது கரை முகப்பைத் தொட்டதும் இறந்து விட்டது. அதன் உடலில் இருந்து அழகே வடிவான ஒரு இளைஞன் வெளிப்பட்டான். அவன் மகோற்கடனின் பாதங்களில் விழுந்து பணிந்தான். ஐயனே! நான் ஒரு கந்தர்வன். எனது பெயர் சித்திரன். எங்கள் லோகத்தில் நடந்த திருமணத்துக்கு பிருகு முனிவரை அழைத்திருந்தோம். அவரும் வந்தார். எல்லா கந்தவர்களும் அவருக்கு தகுந்த மரியாதை அளித்தனர். நான் திருமண வேலையில் மும்முரமாக இருந்தததால், அவரை வரவேற்காமல் விட்டுவிட்டேன். இதனால், கோபமடைந்த அவர் என்னை முதலையாக மாறும்படி சபித்து விட்டார். நானும் முதலையாகி இந்த தடாகத்திலே கிடந்தேன். அவரிடம் சாபவிமோசனம் கேட்ட போது, சிவமைந்தரான விநாயகர், பூமியில் மகோற்கடராக அவதரிக்கும்போது, அவரது ஸ்பரிசத்தால் சுயரூபம் பெறுவேன் என்றார். அதன்படி என் நிலை இன்று மாறியது என்றான். பின்னர் கந்தவர்கள் சிலர், புஷ்பக விமானத்தில் பூமிக்கு வந்தனர். அவர்களுடன் சித்திரனும் ஏறி தன்லோகம் சென்றான்.தங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி... அவர்களை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி வரவேற்காதவர்கள் முதலையாகவோ இன்னும் உயிர்களைப் பறிக்கும் பூச்சிகளாகவோ பிறந்து மக்களால் வெறுக்கப்படுவார்கள். ஒதுக்குப்புறமான இடங்களில் தனிமையில் சொந்த பந்தமின்றி வாழ்வார்கள் என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு தத்துவத்தையும் பால விநாயகரின் லீலையில் இருந்து இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். ஏதாவது சிறப்பாக செய்து விட்டவர்களை ஆஹா...ஊஹூ என பாராட்டுவோம். இந்த ஆஹா, ஊஹூ என்ற வார்த்தைகள் எப்படி பிறந்தது தெரியுமா?

ஆஹா, ஊஹூ என்பவர்கள் கயிலாய லோகத்திற்கு சென்று அடிக்கடி சிவபெருமானை தரிசிப்பவர்கள். வழிபாடுகளிலேயே மிகவும் உயர்ந்தது இசையால் இறைவனை வழிபடுவதாகும். உள்ளம் உருகி, தாள வாத்தியங்களுடன் பாட்டுப்பாடி இறைவனை வணங்கினால் அவன் மிகவும் மகிழ்வான். இசைக்கலைஞர்கள் பாடும்போது ரசிகர்கள் பாடலில் லயித்து ஆஹா, ஊஹூ என சொல்லி பாராட்டுவதில்லையா? அதனால் அவர்கள் அந்த வார்த்தைகளையே தங்களுக்கு பெயராக சூட்டிக் கொண்டனர். இவர்களது நண்பர் தும்புரு. குதிரை முகம் கொண்ட இவரும் சிறந்த இசைஞானி. இவர்கள் மூவரும் சிவபெருமானைத் தரிசிக்க தங்கள் தாளவாத்தியங்களுடன் கயிலைமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் காஷ்யபரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். அந்த மகரிஷியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். காஷ்யபரும், அதிதியும் அவர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்று, விருந்து சாப்பிட வேண்டினர். அந்த கலைஞர்களும் தாங்கள் நீராடி விட்டு, பஞ்சமூர்த்தி பூஜை செய்த பிறகு சாப்பிடுகிறோம் என்றனர். அவர்களிடம் விநாயகர், சிவன், பார்வதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரின் சிலைகள் இருந்தன.

நீராடிவிட்டு வந்த அவர்கள் தங்களிடம் இருந்த விக்ரகங்களுக்கு பூஜை செய்ய துவங்கினர். பூஜை முடிந்ததும், அப்படியே தியானத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தபோது, தங்கள் முன்னால் இருந்த விநாயகர்,சிவன்,பார்வதி, விஷ்ணு, சூரியன் விக்ரங்களால் காணாமல் போனது கண்டு திகைத்தனர். அவர்கள் பெரும் அதிர்ச்சியுடன் காஷ்யப முனிவரிடம் சென்று, விக்ரகங்கள் காணாமல் போய்விட்டது பற்றி கண்ணீர் வடித்தனர். முனிவரே! தங்கள் ஆஸ்ரமத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததை தாங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்களது விக்ரகங்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை கிடைக்காமல் போனால், நாங்கள் உயிர் தரிக்க மாட்டோம் என்பது வேறு விஷயம். ஆனால், இந்த அநியாயத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும், என முறையிட்டனர். காஷ்யபர் வருத்தமும், கோபமும் அடைந்தார். தனது சீடகோடிகளை அழைத்து, யாராவது இவர்களது சிலைகளைத் திருடியிருந்தால், உடனே கொண்டு வந்து கொடுத்துவிடுங்கள். இப்போதே கொடுத்துவிட்டால் உயிராவது மிஞ்சும். நானாக கண்டுபிடித்தால், உங்களை சாம்பலாக்கி விடுவேன், என கடுமையாக எச்சரித்தார். சீடர்கள் நடுநடுங்கி நின்றனர்.  குருவே! உங்கள் சீடர்களான எங்களுக்கு, யாரும் சொல்லிக்கொடுத்தாலும்கூட திருட்டுப்புத்தி வராது என்பதை தாங்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதை அறியும்போது, நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். எங்களைத் திருடர்கள் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது? துறவையே வாழ்க்கையாகக் கொண்ட நாங்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படுவோமா? என வருத்தத்துடன் கூறினர். அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இதைப்பார்த்த ஆஹா, ஊஹூ, தும்புரு ஆகியோர் நெகிழ்ந்து போனார்கள். காஷ்யபரிடம் சீடர்கள் பற்றி புகார் கூறியதற்காக வருந்தி நின்றார்கள். ஆயினும், விக்ரகங்களைக் காணவில்லை என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்நேரத்தில் காஷ்யபர், தனது ஞான திருஷ்டியின் மூலம் விக்ரகங்கள் எங்கிருக்கின்றன என்பதை கண்டு பிடித்து விட்டார். சீடர்களிடம், நீங்கள் உடனே சென்று என் மகன் மகோற்கடனை அழைத்து வாருங்கள் என்றார்.

விநாயகப்பெருமானாகிய மகோற்கடன் அழைத்து வரப்பட்டார். அவரது உடம்பெல்லாம் வெண்ணிற திருநீறு பளபளவென மின்னியது. அவரைப் பார்த்தவுடனேயே, கையெடுத்து வணங்க வேண்டுமென அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. காஷ்யபர் மிகவும் கண்டிப்பான குரலில், மகோற்கடா! நம் இல்லத்திற்கு வந்தவர்களின் பொருளைத் திருடி எனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே? நீதான் அவர்கள் கொண்டு வந்த சிலைகளை மறைத்து வைத்திருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொண்டேன். உடனே அதைக் கொடுத்துவிடு! இல்லாவிட்டால் பிரம்பை எடுத்து வந்து உன்னை உதைப்பேன். என்ன செய்யப்போகிறாய்? என்றார். மகோற்கடன் சிரித்தான். தந்தையே! விக்ரகங்கள் என்னிடம்தான் உள்ளன. நான் யார் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். என்னால் உங்களுக்கு பெருமைதான் வருமே ஒழிய, சிறுமை ஏற்படாது. இப்போது பாருங்கள். உங்களுக்கே நான் யார் என்பது தெரியும், என்று சொல்லியவர், தனது வாயைத் திறந்தார். அண்ட சராசரங்களும் அவரது வாய்க்குள் தெரிந்தன. அது அகலமாகிக் கொண்டே போனது. வயிற்றுக்குள் ஈரேழு லோகங்களும் அடங்கியிருந்தன. வல்லமை பொருந்திய இறைவனே, காஷ்யபருக்கு மகனாக அவதரித்துள்ளதை ஆஹா, ஊஹூவும், தும்புருவும் புரிந்து கொண்டனர். காஷ்யப முனிவர், தங்களுக்குப் பிறந்துள்ளது விநாயகப்பெருமான் என்பதை அறிந்திருந்தாலும், அவரே முழுமுதல்கடவுள் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார். அவர் வாயைத்திறந்தபோது, சகல உலகங்கள் மட்டுமின்றி காணாமல் போன, விக்ரகங்களும் உள்ளே இருந்ததை அனைவரும் கண்டனர். விநாயகப்பெருமான் புன்னகை செய்தபடியே, அந்த விக்ரகங்களை வாயில் இருந்து எடுத்து ஆஹா, ஊஹூவிடம் ஒப்படைத்தார். சிலைகளைக் காணாமல் செய்ததன் மூலம், தான் யார் என்பதை மகோற்கடனாகிய விநாயகர் உலகுக்கு அறிவித்துள்ளார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். பின்னர், அவர்கள் காஷ்யபரின் ஆஸ்ரமத்தில் உணவை முடித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மகோற்கடனுக்கு ஐந்து வயதானது. அவருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்கை நடத்த காஷ்யபர், ஏற்பாடு செய்தார். அந்த விழாவிற்காக பல முனிவர்களை தங்கள் ஆஸ்ரமத்திற்கு அழைத்திருந்தார். ஏராளமானோர் அங்கு வந்து சேர்ந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட நராந்தகன், மகோற்கடனைக் கொல்வதற்காக பிங்காட்சன், பிங்களன், சபலன், விகிர்தன், விசாலன் என்ற ஐந்து அசுரர்களுக்கு முனிவர் போல வேடமிட்டு அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தான். அந்த அசுரர்கள் விபூதி, ருத்ராட்சம் அணிந்து, கையில் கமண்டலத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். பூணூல் அணிவிக்கும் சடங்கு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. முனிவர்கள் எல்லாம் குழந்தை மகோற்கடனை ஆசிர்வதிப்பதற்காக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஐந்து அசுரர்களும் இணைந்து கொண்டனர். எல்லாரும், அட்சதை தூவி குழந்தையை ஆசிர்வதித்துக் கொண்டிருந்தனர். ஐந்து அசுரர்களும் தாங்கள் கொண்டு வந்த அஸ்திரங்களை அட்சதையாக மாற்றி தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, அட்சதையை தூவுவது போல அஸ்திரங்களை ஏவி, மகோற்கடனை கொன்றுவிட வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தனர். அவர்கள் மகோற்கடனை நெருங்கினர்.

© Om Namasivaya. All Rights Reserved.