விநாயகர் புராணம்

(பகு தி-10)


வித்ருமையின் கணவர், சுக்கிலர் உஞ்சவிருத்திக்காக வெளியே சென்றிருந்தார். அக்காலத்தில் வேதியர்கள், உஞ்சவிருத்தி எனப்படும் பிøக்ஷ எடுத்து வரும் அரிசியை சமைத்து ஆண்டவனுக்கு நைவேத்யம் செய்வார்கள். அதையே சாப்பிடுவார்கள். மீதியிருந்தால் தானம் செய்து விடுவார்கள். சில சமயங்களில் ஏதும் கிடைக்காமல் போனால் பட்டினி தான். இந்நிலையில், மகோற்கடருக்கு விருந்து வைக்க வேண்டும் என்றால் நடக்கிற செயலா? ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனி போல, வித்ருமையின் வீட்டிலும் தவிடும், வெல்லமும் இருந்தது. அந்த தவிட்டில் மோதகம், அதிரசம் முதலானவை செய்தாள் வித்ருமை. அன்புத்துணைவரே! மகோற்கடர் கருணை மிக்கவர். நம் காசி தேசத்துக்கு ஒளிகாட்ட வந்துள்ள அவர், நம்மைப் போன்ற ஏழைகளைப் புறக்கணிக்க மாட்டார். மேலும், நான் செய்துள்ள இந்த மோதகத்தில் ஒரு சிறு துளி அவர் வாயில் பட்டால் போதும், நான் மகிழ்வேன், என்றாள். சுக்கிலரும் அதை ஆமோதிப்பது போல் தலையாட்டினார். அன்றைய தினம் வழக்கத்தை விட முன்னதாகவே, மகோற்கடர் சுக்கிலரின் வீட்டுக்கு எழுந்தருளினார்.  உலகைக் காக்க வந்துள்ள உத்தமரே, வரவேண்டும், வரவேண்டும், என முகமன் கூறி வரவேற்றனர் தம்பதியர். அவரது திருவடியை தாம்பாளத்தில் தாங்கி நீராட்டி, மஞ்சள், குங்குமம் முதலானவை பூசி, பாத தீர்த்தத்தை தலையில் தெளித்து, லோக நாயகரே! நாங்கள் ஏழைகள். ஏதோ எங்களால் இயன்ற பலகாரங்களைத் தவிடு கொண்டு செய்திருக்கிறோம். தாங்கள் அமுது செய்ய வேண்டும், என்று பணிவுடன் வேண்டினர். ஆஹா.... தவிட்டில் கூட பலகாரமா? காசி மக்களின் அன்பை நான் என்னவென்று புகழ்வேன்! நான் இதுவரை போன இடங்களில் எல்லாம் கற்கண்டு சாதம், பால் சாதம், தயிர்சாதம், புளியோதரை, இன்னும் கோதுமை வகைகளில் செய்த பண்டங்கள் என சாப்பிட்டு அலுத்துப் போனேன். உங்கள் வீட்டில் எனக்குப் பிடித்த உயர்ந்த வகை பலகாரத்தை தந்திருக்கிறீர்கள். வித்ருமை தாயே! எனக்கு இது போதாது. இன்னும் இருப்பதையெல்லாம் எடுத்து வாருங்கள், என்றார். வித்ருமைக்கு மகிழ்வதா அல்லது வருந்துவதா என்பதே புரியவில்லை.

ஒரு நபருக்கு தேவையான அளவுக்கே தவிடு இருந்தது. வெல்லமும் காலி. அதைக் கொண்டு பலகாரம் செய்தாயிற்று. மகோற்கடர் இன்னமும் கேட்கிறாரா? அவள் கையைப் பிசைந்தது கண்டும், சுக்கிலரின் முகத்தில் பதட்டம் தெளிவது கண்டும் மகோற்கடர் சிரித்தார்.என் அன்பு பக்தர்களே! உங்களை நான் அறிவேன்! எனக்கு ஆடம்பரமும் அளவும் பெரிதல்ல! பக்தியுடன் ஒரு சிறு உருண்டையைத் தந்திருந்தாலும் ஏற்பேன், ஒரு கைப்பிடி பொரி தந்தாலும் எனக்குப் போதும்! என்னை உங்களுக்கு தெரியவில்லையா? என்றவர் கர்ஜனையுடன் சிரித்தபடியே, விஸ்வரூபம் எடுத்தார். சிங்க வாகனத்தில்,சித்தி புத்தி இருவரும் அமர, பதினாறு கரங்களுடன் ஆயுதம் தாங்கி விநாயகப்பெருமானாக காட்சியளித்தார். காசியில் யாருக்கும் கிடைக்காத அந்த திவ்ய காட்சி, வித்ருமையின் பக்திக்கு கிடைத்தது. விஷயம் காசிராஜனுக்கு தெரிய, அவனும், நகர மக்களும் ஓடோடி வந்து அந்த திவ்ய தரிசனத்தைக் கண்டனர். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை போல, வித்ருமையின் களங்கமற்ற எளிய பக்தி, காசி நகருக்கே விநாயகரின் தரிசனத்தைக் கொடுத்தது. பின்னர் காசிராஜன், விநாயகப் பெருமானே! தாங்களே எங்கள் அருகில் இருக்கும் போது, நாங்கள் யாரைக் கண்டு கலங்க வேண்டும்? தங்களின் திருப்பாதத்தில் என்னையும் என் தேசமக்களையும் சேர்த்து முக்தியருள வேண்டும், என்றான். விநாயகர் அவர்களிடம், இந்த தேசத்தில் பிறப்பவர்களுக்கும், இங்கே வருவர்களுக்கும், தங்குபவர்களுக்கும் முக்தியருள்வேன், என அருள்பாலித்து, அனைவரும் பூலோகத்தில் இன்னும் நீண்டகாலம் செல்வச்செழிப்புடன் வாழ அருள் செய்தார். வித்ருமை - சுக்கிலர் தம்பதிக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்து, தக்கவர்களுக்கு தானம் செய்து இறுதியில் தன் திருவடிகளை அடைய வரம் கொடுத்தார்.

இந்நேரத்தில், தன்னால் அனுப்பப்பட்ட அனைத்து அசுரர்களும் அழிந்ததால் ஆத்திரமடைந்த நராந்தகன், மகோற்கடரை நேரில் சென்று அழிக்கப் புறப்பட்டான். இதையறிந்த காசிராஜன், விநாயகரே தங்களுடன் இருக்கும் தைரியத்தில், அவரைச் சென்று வணங்கி, போரில் வெற்றி பெற ஆசி வேண்டினான்.மகோற்கடர் அவனிடம், காசிராஜா! நராந்தகனுக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. உன்னுடன் நானும் ஒரு போர்வீரனாக வருகிறேன், என்று சொல்லி, கவசமணிந்து வாளேந்தி புறப்பட்டார். நராந்தகனின் அசுரப்படைக்கும், காசிராஜனின் படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இருதரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் இறந்தனர். மகோற்கடரை நராந்தகன் கடுமையாக எச்சரித்தான். ஏ யானை முகத்தோனே! சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. சிறுவன் என்பதற்காக உன்னை விடுகிறேன். இல்லாவிட்டால், இதற்குள் உன் தலை என் கையில் இருந்திருக்கும், என்று வீரவசனம் பேசினான். மகோற்கடர் சிரித்தார். தலை தானே கையில் வேண்டும். இந்தா பிடி, என்றவர், ஒருபாணத்தை எடுத்து நராந்தகனின் தலைக்கு குறி வைத்தார். அது அவனது சிரத்தை அறுத்து தள்ளியது. காசிராஜனின் வீரர்கள், நராந்தகன் அழிந்தான் என கோஷமிட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்... மற்றொரு தலை முளைத்தது. முளைத்த தலையை மீண்டும் மகோற்கடர் கொய்ய, புதிது புதிதாக தலை முளைத்தது. அப்போது சிவனிடம் பெற்ற அஸ்திரம் ஒன்றை அவன் தலையில் எய்ய, நராந்தகனின் ஆவி பறந்தது. அவனது தலை தேவலோகத்தில் ஆட்சியில் இருந்த தேவாந்தகனின் காலில் போய் விழுந்தது. ஆ சகோதரா! போய் விட்டாயா? உன்னைக் கொன்றவர்கள் யார்? தேவாந்தகன் வாளை உருவினான்.

தம்பி! நீ போய்விட்ட பிறகு நான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? ஆனால், உன்னைக் கொன்றவர்களை பழிவாங்காமல், நான் மடிந்தால், உன் ஆத்மா சாந்தி பெறாது. இப்போதே புறப்படுகிறேன்! உன் சிரமறுத்தவனின் சிரத்தை பதிலுக்கு அறுத்து, உனக்கு படையலிட்ட பிறகே உன்னை வந்தடைவேன், என முழங்கினான். தம்பியைக் கொன்ற மகோற்கடரை பழிக்கு பழி வாங்க பெரும்படையுடன் புறப்பட்டான். இதையெல்லாம் மகோற்கடர் அறிந்தே இருந்தார். நராந்தகனை விட பத்தாயிரம் மடங்கு பலம் வாய்ந்த தேவாந்தகனை எப்படி அழிக்கப் போகிறோம் என காசிராஜன் கவலையில் மூழ்கியிருந்தான். அவனைத் தேற்றிய அவனது மனைவி, மகோற்கடர் வந்த பிறகு, நமக்கு தோல்வி என்பதே ஏற்படவில்லை. நீங்கள் அவரையே சரணடையுங்கள், என்றாள். அதன்படி, காசிராஜனும் மகோற்கடரை வணங்கி நிற்க, சித்தி, புத்தியர் அவனை ஆசிர்வதித்து, இம்முறை எங்கள் கணவருடன் நாங்களும் போருக்குச் செல்கிறோம். பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை, என்றனர். மகோற்கடர் தனக்கு வாய்த்த வீர மனைவியர் கண்டு ஆனந்தம் கொண்டார். இருப்பினும், போர்க்களத்திற்கு வரத்தேவையில்லையே என்றார். சித்தி, புத்தியரோ அவரது பாதத்தில் விழுந்து, கணவருக்கு ஒரு துன்பம் வந்தால், மனைவி அதைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல! இவ்வளவு நாளும் தாங்கள் போரிட்டவர்கள் எல்லாம் வலிமையற்ற கோழைகள். இப்போது வரும் தேவாந்தகனும் அப்படிப்பட்டவனே! இருப்பினும், அவனது தந்தை ரவுத்திரகேது மாயாஜாலம் தெரிந்தவன். மாயத்தை மாயத்தாலேயே வெல்ல முடியும், என்றனர். மகோற்கடரும் அவர்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். சித்திதேவி தனக்கு அடங்கிய அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய அஷ்டமாசித்தியரை வரவழைத்தாள். தேவியரே! தாங்கள் எட்டுவித சக்திகளாக இருந்து மாயங்கள் புரிந்து தேவாந்தகனை வெற்றி கொள்ள வேண்டும், என்றாள். அந்த சக்திகள் ஆயுதம் தாங்கி போர்க்களத்தில் அணிவகுத்ததுடன், தங்களுக்கு கீழ் ஏராளமான வீரர், வீராங்கனைகளையும் உருவாக்கினர். சித்த, புத்தி புடைசூழ சிங்க வாகனத்தில் மகோற்கடரும் போர்க்களத்தில் புகுந்தார்.

தேவாந்தகனும் தனது அசுரப்படையுடன் வந்து சேர்ந்தான். பெரும் சண்டை நடந்தது. எட்டுவகை சக்திகளின் மத்தியிலும் புகுந்து போரிட்டது அசுரப்படை. தேவாந்தகனின் உக்கிரம் வாய்ந்த அம்புகளின் வலிமை தாங்காமல், மகோற்கடரின் படை சற்று பின்வாங்கத்தான் செய்தது, இந்நேரத்தில் புத்திதேவி தன் புத்தியைப் பயன்படுத்தினாள். தனது உடலில் இருந்து பவுத்தேவி என்ற பூதப்பெண்ணை உருவாக்கி, தேவாந்தகனின் படையினரை விழுங்கி விடுமாறு உத்தரவிட்டாள். பவுத்தேவி ஆக்ரோஷமாகச் சென்று, அசுரப்படையினரைப் பிடித்து குவியல் குவியலாக வாயில் போட்டு விழுங்கினாள். அவளது கையில் தேவாந்தகனும் சிக்கினான். அவனையும் பிடித்து வாயில் போட்டு விழுங்கிவிட்டாள் பவுத்தேவி. அவ்வளவு தான்! எஞ்சியிருந்தவர்கள் தப்பியோடினர். என்ன ஆச்சரியம்! தன் மாயாஜால வல்லமையால், தேவாந்தகன் அவளது காது வழியாக வெளியில் பாய்ந்து தப்பி ஓடினான். நேராக, தன் தந்தை ரவுத்திரகேதுவை சரணடைந்தான். பதறி ஓடி வந்த தந்தையிடம், தம்பி இறந்து போனதையும், அவனைக் கொன்ற மகோற்கடரை அழிக்கச் சென்று தோற்று திரும்பியதையும் சொல்லி புலம்பினான். ரவுத்திரகேது இளையமகனின் மறைவுக்காக வருந்தினார். தேவாந்தகனிடம், சரி..சரி.. நடந்ததை நினைத்து வருந்துவதில் பலனில்லை. நீ வெற்றி பெற தகுந்த உபாயத்தை நான் சொல்கிறேன். இன்றிரவு அறுகோண வடிவ குண்டம் அமைத்து யாகம் செய்.  நான் சொல்லும் மந்திரங்களைச் சொல். யாக குண்டத்தில் இருந்து ஒரு கருப்பு குதிரை வெளியே வரும். அதில், அமர்ந்து போரிட்டால் உன்னை வெல்ல யாராலும் முடியாது, என்றார். தந்தையின் ஆலோசனைப்படி, இரவோடு இரவாக யாகம் செய்தான் தேவாந்தகன். அதிகாலை வேளையில் அந்த குதிரை வெளிப்பட்டது. அதில் ஏறியமர்ந்த தேவாந்தகன், மிகுந்த தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் போர்க்களத்தில் புகுந்தான்.

சித்தி, புத்தியரும் தங்கள் சக்தி படையையும், பவுத்தேவி தலைமையில் மற்றொரு படையையும் நிறுத்தியிருந்தனர். அந்தப் படையை அழிக்க, தேவாந்தகன் ஒரு உபாயம் செய்தான். தன் மானசீக சக்தியால், யாரும் அறியாமல் போர்க்களத்தின் ஒரு ஓரத்தில் யாக குண்டம் ஒன்றை வரவழைத்தான். மனதுக்குள் சில மந்திரங்களை ஓதினான். யாக குண்டத்தில் தானாகவே தீப்பற்றியது. அந்த வேள்வித்தீயில் இருந்து ஒரு பெண் பூதம் புறப்பட்டு வந்து, தேவாந்தகன் முன்னால் நின்றது.எஜமானரே! ஏன் அழைத்தீர்! எனக்கு பசி வாட்டுகிறது. உடனே உணவிடும், என்றது.  தேவாந்தகன் சிரித்தபடியே, பூதமே! இதோ என் எதிரே நிற்கும் மகோற்கடரின் படையிலுள்ள சக்திகளையும், அவர்களோடு நிற்கும் பெண் பூதப் படையிலுள்ள ஒருவர் விடாமல் சாப்பிட்டு உன் பசியைப் போக்கிக் கொள், என்றான். அந்த பூதம் மிகுந்த மகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கியது. ஆனால், புத்திதேவி உருவாக்கிய பவுத்தேவி, அந்த பெண் பூதத்தை மடக்கி விட்டாள். அதனுடன் உக்கிரமாக சண்டையிட்டு, அந்த பூதத்தை கொன்று வீசினாள். பெரும் ஆத்திரமடைந்த தேவாந்தகன், மகோற்கடரின் படையைக் கட்டிப் போடும் மோகனாஸ்திரத்தை எய்தான். அது அவனுக்கு பலன் தந்தது. மகோற்கடரின் படைகள் அந்த அஸ்திரத்துக்கு மயங்கி சாய்ந்தன. காசிராஜன் கலங்கி விட்டான். மகோற்கடரே! படைகள் எல்லாம் மயங்கி விட்டன. காசிநகரம் என்னாகுமோ? எனக் கதறினான்.

கடவுளே அருகில் இருந்தாலும் கூட பயம் என்ற தொற்று வியாதி மட்டும் ஏனோ மனிதனை விட்டு மறைய மறுக்கிறது. மனித இனத்தின் ஸ்பாவம் அப்படி? என்ன நடந்தாலும் நடக்கட்டுமே! இறைவன் நம் அருகில் இருக்கிறான் என்ற எண்ணம் ஏனோ மனிதனின் மனதுக்குள் நிரந்தரமாகத் தங்கிக் கொள்ள மறுக்கிறது. காசிராஜனின் அருகில் சாட்சாத் விநாயகப்பெருமானே பூலோக அவதாரம் எடுத்து அருகில் இருந்தபோதும் கூட, அவன் கலங்கி நின்றான். மகோற்கடர் அவனைத் தேற்றினார். காசிராஜா! பைத்தியக்காரன் போல உயிர் பயத்தில் பிதற்றுகிறாயே! உன் தேச மக்கள் அழிந்து போகாத வரம் பெற்று வந்தவர்களா என்ன! ஆனால், நம் எதிரில் நிற்கும் தேவாந்தகன், ஐம்புலன்களையும் அடக்கி, சிவனை எண்ணி தவமிருந்து, அவரிடம் அழியா வரம் பெற்றிருக்கிறான். அது எப்படிப்பட்ட வரம் என்பது உனக்குத் தெரியுமா? இரவிலும், பகலிலும் நான் அழியக்கூடாது. ஆயுதங்களாலோ, விலங்குகளாலோ, பிற உயிரினங்களாலோ அழிவு வரக்கூடாது. இன்னும் பல நிபந்தனைகளின் பேரில் வரம் வாங்கியிருக்கிறான். என் தந்தை தன்னை மனதார நினைத்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்து விடுவார். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அவனை அழிக்கவும் தயங்கமாட்டார். ஒன்றைச் சொல்கிறேன் கேள்! மனிதர்கள் தங்களைப் புத்திசாலிகள் எனக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேவாந்தகனும் அப்படியே! தான் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் தனக்கு அழிவே வராது என எண்ணிக்கொண்டிருக்கிறான். ஆனால், எப்பேர்ப்பட்ட அறிவாளியும், எங்காவது இடறி விடுவான். இவன் பகலிலும், இரவிலும் சாகக் கூடாது என வரம் வாங்கினானே ஒழிய, பகலும் அல்லாத இரவும் அல்லாத இரண்டும் கலந்திருக்கும் வைகறையாகிய அதிகாலைப் பொழுதில் சாகக் கூடாது என்ற வரம் பெறவில்லையே! அந்த நேரத்திற்காக காத்திருக்கிறேன். அப்படியே அந்தப் பொழுது வந்தாலும், இவனை ஆயுதங்களால் அழிக்க முடியாதே! எனவே, ஆயுதமல்லாத ஒரு பொருளால் தான் இவனை அழிக்க முடியும், பொறுத்திரு! வேடிக்கை பார்! எனச் சொல்லி விட்டார்.

மகோற்கடர் தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை அவனுக்குள் இருந்தாலும், காசிராஜன் மனம் பதைக்க காத்திருந்தான். அன்று விடியவிடிய போர் நடந்தது. தனது படைகளைக் காப்பாற்ற மகோற்கடர் பினாகம் என்னும் வில்லை எடுத்தார். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான அம்புகளை பல திசைகளிலும் சிதறடிக்கச் செய்யும் வகையிலான வில் இது. இதைக் கொண்டு, அசுரப் படைகளில் பெரும் பகுதியைக் கொன்று குவித்து விட்டார். மயங்கிக் கிடந்த படைகளை எழுப்ப, அதில் ஞானாஸ்திரம் ஒன்றை இணைத்து அனுப்பினார் மகோற்கடர். அந்தப் பாணம் வெளிப்பட்டதுமே படைகள் எழுந்தன. எஞ்சியிருந்த படைகளை அவர்கள் அழிக்க ஆரம்பித்து விட்டனர். மனிதர்கள் அசுர குணங்களால் சூழப்பட்டு, கடவுளை மறந்து, தங்கள் இஷ்டம் போல் உலக இன்பங்களில் மயங்கிக் கிடப்பதை தேவாந்தகன் எய்த மோகானாஸ்திரம் குறிக்கிறது. ஆசைகளில் கட்டுண்டு கிடப்பதில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்ற பேரறிவாகிய ஞானத்தைக் கொடுப்பதையே, மகோற்கடர் எய்த ஞானாஸ்திரம் குறிக்கிறது. இப்படி விடிய விடிய நடந்த சண்டைக்குப் பின் விடியல் பொழுதை நெருங்கி விட, காசிராஜன் மனம் பதைத்து நின்றிருந்தான். எதற்கும் கலங்காமல் போரிட்டுக் கொண்டிருந்த தேவாந்தகனின் அருகில், மகோற்கடர் சென்றார். விநாயகப்பெருமானாக விஸ்வரூபமெடுத்தார். தன் கொம்பை ஒடித்தார். யானை தந்தத்தை ஆயுதம் எனக்கூற முடியாதே! அதை அப்படியே தேவாந்தகனின் தலையில் பாய்ச்சினார். அவனது ஆவி பிரிந்து, விநாயகரை வலம் வந்தது. ஒரு காலத்தில் சிவபெருமானை எண்ணி தவம் செய்த பெருமையுடையவன் என்பதால், அந்த பாக்கியம் தேவாந்தகனுக்கு கிடைத்தது. பின்னர் அவரது திருவடியில் சரணடைந்து அவருடனேயே ஐக்கியமாகி விட்டது. படை வீரர்கள் ஆர்ப்பரித்தனர்.

காசிராஜன் ஆனந்தக்கண்ணீர் வடித்தான். விநாயகப்பெருமானே! தாங்களே வந்து காசியைக் காத்தமைக்கு நன்றி. தாங்கள் இந்த தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும், என்று வேண்டினான். விநாயகரும் அதை ஏற்றார். பின்னர் தன்னை மகோற்கடராக சுருக்கிக் கொண்டு, அரண்மனைக்கு புறப்பட்டார். தனது மகனின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என காசிராஜன் கேட்டுக்கொள்ளவே, தந்தை காஷ்யபர் இட்ட உத்தரவுப்படி, புரோகிதராக இருந்து சிறப்புற நடத்தி வைத்தார். பின்னர், தன் இல்லத்துக்கு சித்தி, புத்தியருடன் திரும்பினார். காசிராஜனும், அவனது படைகளும் அவருடன் சென்றனர். காசிராஜன், காஷ்யபரிடமும், அதிதியிடமும் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தங்கள் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பிரஸ்தாபம் செய்தான். அதைக்கேட்டு அவர்கள் மகிழ்ந்தனர். மகோற்கடரும் தனது மானிடப்பிறவி முடிந்து விட்டதாக காஷ்யபர், அதிதியிடம் விடைபெற்று விண்ணுலகம் புறப்பட்டார். மகனை ஆரத்தழுவிய பெற்றோர் தங்களையும் விநாயகரின் ஆனந்தலோகத்துக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். பூமியில் இன்னும் பல நற்செயல்கள் செய்து தன்னை வந்தடையும்படி விநாயகர் அருள்பாலித்து புறப்பட்டார். காசிராஜன் கண்ணீர் வடித்தார். கணங்களின் தலைவரே! தங்கள் பெற்றோருக்கு அருள் செய்த தாங்கள், என்னைப் போன்ற லோகாதயங்களை விரும்பும் ஈன ஜென்மங்களையும் உமது லோகத்துக்கு அழைத்துச் செல்லமாட்டீரா? அதற்காக, எந்த விலையையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றதும் விநாயகர் கலகலவெனச் சிரித்தார். சித்தி புத்தியரும் சிரித்தனர். காசி மன்னா! எனது உலகத்தை அடைய விரும்பும் பக்தர்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன தெரியுமா? என்றதும், அவர் கேட்கும் விலையைத் தங்களால் கொடுக்க முடியுமா என காசிராஜனும், அவனுடன் வந்தவர்களும் ஆவலுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தனர்.

பக்தர்களே! நான் சொல்லும் இந்தக் கதையைக் கேளுங்கள். இதைக் கேட்ட பின், என் லோகத்தை அடைய, இங்கே கூடியிருக்கும் அனைவரும் கொடுக்க வேண்டிய விலையைத் தெரிந்து கொள்வீர்கள், என்று சொல்லி தன்னால் சம்ஹரிக்கப்பட்ட அனலாசுரன் பற்றி சொன்னார். ஒருமுறை, எமதர்மராஜா தேவலோகப் பெண்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த மோக மயக்கத்தில், அவரிடம் இருந்து அனலாசுரன் என்ற அசுரன் வெளிப்பட்டான். அவன் நின்ற இடம் தகித்தது. எமதர்மராஜா தன்னைப் பெற்றவர் என்பதால், அவரை விட்டுவிட்டு, மற்ற தேவர்களை விரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் நெருங்கினாலே கடும் வெப்பம் ஏற்பட்டதால் அவர்கள் தீயில் நிற்பதைப் போல உணர்ந்தனர். தங்களுக்கு புகலிடம் தேடி அவர்கள் திருமாலிடம் சென்றனர். திருமால் அவர்களைச் சமாதானம் செய்து, இந்த அசுரனை அழிக்கும் சக்தி என் மருமகன் கணபதிக்கு மட்டுமே உண்டு. எல்லோரும் கணபதியைத் தியானியுங்கள், எனசொல்லிவிட்டார். அனைத்து தேவர்களும் மானசீகமாக தங்கள் மனதில் விநாயகரை ஆவாஹனம் செய்து வழிபட்டனர். அப்போது விநாயகர், மனித முகத்துடன் ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக அவர்கள் முன் வந்து நின்றார். தேவர்களே! நீங்கள் ஏன் கலங்க வேண்டும்? அந்த அசுரனை என்னால் கொல்ல முடியும்? என்றதும், நீயோ சிறுவன், அவனோ அசுரன். உன்னால் எப்படி அவ்வளவு பெரிய அசுரனைக் கொல்ல முடியும்? என்று ஆதங்கத்துடன் கேட்டனர். அந்த இளைஞன் சிரித்தான். அந்நேரத்தில், தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி நின்று, ஒரு பிரம்மச்சாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் அனலாசுரனுக்கு கிடைக்கவே, அவன் வேகமாக அங்கே வந்தான். தேவர்கள் வெம்மை தாங்காமல் அங்குமிங்கும் சிதறி ஓடினர். அந்த இளைஞனோ எதையும் கண்டு கொள்ளாமல் நின்றான். தேவர்கள் ஆச்சரியப்பட்டனர். அனலாசுரன் இளைஞனின் அருகில் வந்து, வெப்பத்தால் உலகத்தையே அழிக்கும் சக்தி என்னிடம் உண்டு. நீயோ அப்படியே நிற்கிறாய். யார் நீ? என் உடலில் இன்னும் சூடேற்றினால் நீ உருகிப்போவாய், என எச்சரித்து கடைவாய் கோரைப் பற்கள் வெளிப்படும்படியாக சிரித்தான்.

அப்போது அவனது வாயில் இருந்து தீ வெளிப்பட்டது. விநாயகர் அதை ஊதி அணைத்தார். அவன் வெம்மையைக் கடுமையாக்கி பூலோகத்தில் பாய்ந்தான். அங்கிருந்த உயிர்களை அழிக்க முயன்ற போது, இளைஞனான கணபதி பூமியை விழுங்கி வயிற்றுக்குள் தள்ளிவிட்டார். இவ்வாறாக ஏழு லோகங்களையும் அவன் தீ வைக்க முயன்ற போது, எல்லா உலகங்களையும் தன்னுள் அடக்கினார் கணபதி. அவரது வயிறு பானை போல் ஆனது. பின்னர் அந்த இளைஞனிடம், சிறுவனே! மரியாதையாக ஓடிவிடு. மாயவேலைகளை எல்லாம் என்னிடம் காட்டாதே. ஏழு லோகங்களையும் விழுங்கி வேடிக்கை காட்டும் உன்னை அந்த லோகங்களுடன் விழுங்கி விடுவேன், என எச்சரித்தான். உடனே இளைஞனாக வந்த கணபதி சுயவடிவம் கொண்டு, தன் தும்பிக்கையால் அவனை வளைத்து இறுக்கி அந்தரத்தில் தூக்கினார். அவன் தும்பிக்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே குதித்தான். கணபதி அவனிடம், அனலாசுரா! உனக்கு கொடிய பசி போலும். என் வயிற்றுக்குள் போ. அங்கே ஏழு உலகங்கள் இருக்கின்றன. அத்தனையையும் எடுத்துக் கொள், என்றார். அவனும், நல்லது, நல்லது என்றபடியே வயிற்றுக்குள் சென்றான். அவன் உள்ளே சென்றானோ இல்லையோ, மூடிய வாயைக் கணபதி திறக்கவில்லை. தப்ப வழியின்றி அவன் தவித்தான். விநாயகரோ அவனை உள்ளடக்கிக் கொண்டு வெப்பம் தாளாமல் தவித்தார். தேவர்கள் அவருக்கு கொடுத்த இளநீர், பால் எதுவும் சூட்டைத் தணிக்கவில்லை. சித்தி, புத்தியர் தங்கள் அங்கங்களால் அவரது வெப்பத்தைத் தணிக்க முயன்று தோற்றனர். என்ன தான் செய்வது! அவர்கள் விநாயகரையே சரணடைந்தனர். விநாயகர் அவர்களிடம், நீங்கள் செய்யும் எந்த பரிகாரமும் என்னை திருப்திப்படுத்தாது.

எனக்குத் தேவை அருகம்புல். அதை உங்களால் முடிந்த அளவு கொண்டு வந்து குவியுங்கள். வெப்பம் தணிந்து விடும், என்றார். தேவர்கள் அருகம்புல்லைக் கொண்டு வந்து குவித்தனர். அவரது உடலையே அருகம்புல்லால் மூடுமளவு கொட்டினர். விநாயகரின் வெப்பம் தணிந்தது. அனலாசுரனும் உள்ளுக்குள்ளேயே ஜீரணமாகி விட்டான். இந்த வரலாற்றை பக்தர்களிடம் சொன்ன கணபதி, இப்போது சொல்லுங்கள், என் லோகத்தை அடைய நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை! என சொல்லவே, ஆஹா... கருணைக் கடலே! பல்வகை நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க மாலைகளும், ஏராளமான பிரசாத வகைகளும் தங்களுக்கு தரப்பட வேண்டுமோ என நாங்கள் அறியாமையால் ஆளுக்கொரு வகையில் கற்பனை செய்தோம். எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் சாதாரண அருகம்புல்லால் உங்களை அடைந்து விடலாம் என்றால் நாங்கள் செய்த பாக்கியம் தான் என்னே! என்றனர். அன்றுமுதல், விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அருகம்புல் தவிர தங்களுக்கு பிடித்தமான பூக்களையும் நாங்கள் அணிந்து மகிழ ஆசைப்படுகிறோம். அதையும் சொல்லுங்கள், என்றனர் பக்தர்கள். ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி இன்னும் பல்வேறு வாசனையுள்ள மலர்களை இங்கே கூடியிருக்கும் பெண்களே வைத்துக் கொள்ளுங்கள். ஆடவர்கள் தங்கள் மார்புகளில் மாலையாகத் தரித்துக் கொள்ளுங்கள். எனக்கு அவை தேவையில்லை. உங்களுக்கு எது தேவையில்லை எனக் கருதுகிறீர்களோ, அதை எனக்கு மாலையாக அணிவித்தால் போதும், என விநாயகர் கருணை உள்ளத்துடன் சொன்னார். அது என்ன வகை பூ? என்று மக்கள் கேட்டதும், இதோ! இந்த பூவை யாராவது சூடுவீர்களா? என்று அங்கு நின்ற செடி ஒன்றைச் சுட்டிக்காட்டினார் விநாயகர். மக்கள் அதிசயித்துப் போயினர்.

© Om Namasivaya. All Rights Reserved.