விநாயகர் புராணம்

(பகுதி-1)


அடியே குடும்பினி! உன் நகைகளை எங்கே மறைத்து வைத்தாய்? நான் அதைக் கேட்பேன் என்று உன் தாய் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டாயா? உடனே அவற்றை என்னிடம் கொடு. இல்லாவிட்டால், உன்னை அடித்தே கொன்றுவிடுவேன், என்று மிரட்டினான் காமந்தன். இவன் குடும்பினியின் கணவன். உலகத்திலுள்ள அனைத்து கெட்ட பழக்கங்களுக்கும் சொந்தக்காரன். குறிப்பாக வேசியர் சுகத்தில் திளைத்துக் கிடந்தவன். குடும்பினி அழுதாள். அடி உக்கிரமாக விழவே, வேறு வழியின்றி, பானைக்குள் ஒளித்து வைத்திருந்த நகைகளைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள். என்ன தைரியமிருந்தால், வீட்டுக்குள்ளேயே ஒளித்து வைத்து விட்டு இவ்வளவு நேரம் காக்க வைத்திருப்பாய். அங்கே, என் காதலி அல்லிராணி என் வரவுக்காக காத்துக் கிடப்பாள். அவள் உன்னைப் போல அழுமூஞ்சியல்ல. அழகே, வடிவானவள். சோகத்திலும் புன்னகை சிந்துபவள். என் இதயராணியான அவளுக்கே இந்த நகைகள் இனி சொந்தம், என்றவன், தன்னை காக்க வைத்ததற்காக மீண்டும் அவளை தன் கோபம் தீர உதைத்து விட்டு கிளம்பி விட்டான். குடும்பினிக்கு துயரம் தாங்க முடியவில்லை. இனியும் இந்த பாவியுடன் வாழ்ந்தால், கட்டிய தாலியையும் பறித்து விடுவான். இவன் நமக்கு இனி பொட்டு வைக்க மட்டுமே பயன்படும் ஒரு கணவன். இன்னும் கொஞ்ச நாளில் நம் குழந்தைகளையும் இம்சை செய்ய ஆரம்பித்து விடுவான். ஆண்டவன் எனக்கு ஏழு மகன்களையும், ஐந்து பெண்களையும் தந்திருக்கிறான். கடைசிகாலத்தில், இவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியத்தில் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறி, தாய் வீட்டில் போய் அடைக்கலமாகி விட்டாள். தாய் வீட்டில் நல்ல வசதியுண்டு. தன் பேரன், பேத்திகள் சகிதமாக குடும்பினியின் பெற்றோர் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனர். கணவனைப் பிரிந்து வந்தது அவர்களுக்கு வருத்தத்தைத் தந்தாலும், தன் மகளின் உயிருக்கே ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் மேலிட அங்கேயே அவள் தங்கிவிட்டாள்.

அல்லிராணியின் வீட்டுக்குச் சென்ற காமந்தன், அவளோடு ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருந்தான். நீ கொண்டு வந்த குறைந்த நகைக்கு, இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது. மேலும், ஏதாவது கொண்டு வா, எனச் சொல்லி விரட்டி விட்டாள் அல்லி. வீட்டில் இன்னும் ஏதாவது கிடைக்குமென நம்பி வந்த காமந்தனுக்கு அதிர்ச்சி. வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு செம்பு கூட இல்லை. பக்கத்தில் விசாரித்தான். நீ செய்த கொடுமைக்கு எவள் தான் உன்னோடு வாழ்க்கை நடத்துவாள். அவள் பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள், என்றனர். காமந்தன் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.உழைத்து பொருள் சேர்க்க தன்னால் முடியாது. ஆனால், கொள்ளையடித்தால் என்ன என்று தோன்றியது. பெரிய கடாமீசை ஒன்றை வளர்த்தான். இடுப்பில் பிச்சுவா கத்தியை செருகிக் கொண்டான். இரவு நேரங்களில், சாலைகளில் போவோர் வருவோரை மிரட்டி கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டான்.  தர மறுத்தோரை கொலையும் செய்தான். காலப்போக்கில், பணத்தை தந்தவர்களையும் கொலை செய்வதை பொழுது போக்காக கொண்டு விட்டான். பணம் மிக அதிகமாக கொட்டவே, அல்லியை மட்டுமின்றி, இன்னும் பல பெண்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, எந்நேரமும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தான். பணம் கிடைக்காத நாட்களில், காட்டு வழியே செல்லும் தம்பதிகளை மறித்து, கணவனைக் கொன்று விட்டு, அவனுடைய மனைவியைக் கெடுத்து கொன்று விடுவான். அவன் செய்யாத பாவமே இல்லை. ஒருநாள், உச்சகட்டமாக ஒரு பாவம் செய்தான். ஒரு பிராமண இளைஞன் அவனிடம் சிக்கினான். அவனிடம் இருந்த பொருளைக் கேட்டதும் பயந்து போன இளைஞன் கொடுத்து விட்டான். கத்தியை எடுத்து அவனைக் கொல்லப் பாய்ந்த போது, அந்த இளைஞன் கதறினான்.திருடனே! என்னைக் கொன்று விடாதே. எனக்கு இரண்டு மனைவிகள், மூத்தவளுக்கு குழந்தை இல்லை. இரண்டாம் மனைவியோ இன்னும் வயதுக்கு வராதவள். அவள் வயதுக்கு வந்த பின்னர், பித்ருகடன் செய்ய ஒரு ஆண்பிள்ளையை பெற்ற பின்பே மடிய வேண்டும் என நினைப்பவன் நான். ஆண் குழந்தை இல்லாதவனுக்கு நற்கதி கிடைக்காது என்பதை நீ அறிவாய். பொருளைத் தான் கொடுத்து விட்டேனே. என்னை விட்டுவிடு, என கெஞ்சினான். ஆனால், எதையும் காதில் கேட்காமல் அவனைக் கொன்று விட்டான் காமந்தன்.

பிராமணனைக் கொல்வது பெரும் பாவம். இறந்து போன பிராமணன், பிரம்மஹத்தி என்ற பூதமாக மாறி அவனைப் பீடித்தான். அன்றுமுதல், காமந்தனுக்கு எதுவுமே சரிவர நடக்கவில்லை. உடலுக்கு முடியாமல் போனது. பலமிழந்து தவித்தான். தன் நிலையை தன் சகா ஒருவனிடம் சொல்லி, தன் மனைவியை அழைத்து வரும்படி கூறினான். அவன், அங்கே போய் அதனைச் சொல்ல, பாவம் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். நான், அவனோடு  வாழ முடியாது என சொல்லிவிடு, என குடும்பினி சொல்லிட்டாள். சகா இதை காமந்தனிடம் சொன்னதும், நொந்து போன அவனது வாழ்விலும் திருப்பம் வந்தது. சில பிராமணர்கள் ஒருநாள் காட்டு வழியே வந்தனர். நோயின் வேதனை தாளாமல் முனகிக் கொண்டே, அவர்களை அவன் அணுகினான். அவர்களை வணங்கி, தன்னிடமிருந்த பொருட்களை தானம் செய்தான். ஊருக்குள் இருக்கும் மற்ற பிராமணர்களையும் அனுப்பி வைக்க கூறினான். விஷயமறியாத அந்த வெளியூர் பிராமணர்கள், காமந்தனின் ஊரைச் சேர்ந்தவர்களிடம் இது பற்றி கூறினர். உள்ளூர் பிராமணர்களும் தர்மம் பெறுவதற்காக வந்தபோது தான், தர்மம் செய்தவன் கொள்ளைக்காரன் காமந்தன் என்பது புரிய வந்தது. உன்னிடம் தர்மம் பெற்றால் பாவம். தானத்தைச் செய்ய தகுதியுள்ளவர்களிடம் தான் தானம் பெற வேண்டும். உனக்கேது அந்தத்தகுதி, நீ கொலைகாரன், கொள்ளைக்காரன், பெண்பித்தன், எனச் சொல்லிவிட்டு போய்விட்டனர். இந்த சம்பவம் காமந்தனை மிகவும் பாதித்தது. அப்போது, காட்டில் ஒரு தபஸ்வியை அவன் சந்தித்து தன் கதையைச் சொல்லி அழுதான். மகனே! ஊழ்வினையின் படியே இவையெல்லாம் நிகழ்ந்தன. உன் பாவத்திற்கு பரிகாரம் சொல்கிறேன் கேள்! இந்த காட்டில் பாழடைந்து போன விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அதைப் புதுப்பித்து கட்டு. உன் பாவத்தின் பெரும்பகுதி குறைந்து விடும், என்றார். தன்னிடமிருந்த பொருளைக் கொண்டு தபஸ்வி சொன்னதைப் போலவே கோயிலைக் கட்டி முடித்தான் காமந்தன். சில ஆண்டுகளுக்கு பிறகு அவன் இறந்து போனான்.

எமகிங்கரர்கள் அவனை எமதர்மராஜா முன்பு நிறுத்தினர். ராஜாதி ராஜா! இந்த மனிதன், பூலோகத்தில் செய்யாத அட்டூழியமே இல்லை. பல பெண்களின் கற்பை சூறையாடிய கயவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை வேண்டுமானா<<லும் கொடுக்கலாம். எனக்குத் தெரிந்து இவனால் பாதிக்கப்பட்டு இங்கே வந்து சேர்ந்த பெண்களைக் கொண்டே எண்ணெய் பானைக்குள் தூக்கிப் போட்டு கொதிக்க வைக்கலாம், என்றான் கிங்கரர் தளபதி. எமதர்மன் சிரித்தான். தளபதி! உயிர்கள் செய்யும் கொடுமைகளை மட்டுமல்ல! நன்மையையும் கருத்தில் கொண்டே தண்டனை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவன் தன் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்யவில்லையா? என்றதும், காமந்தன் எமதர்மனின் கால்களில் விழுந்து பணிந்தான். ஐயனே! நான் கொடும்பாவி. நீங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்கிறேன். ஆனால், கடைசி நேரத்தில் மனம் திருந்தி, அந்தணர்களுக்கு தானதர்மம் செய்ய எண்ணினேன். ஆனால், கொடியவனான என்னிடம் தானம் பெற்றாலே பாவம் என அந்தணர்கள் சொல்லிவிட்டனர். எனவே, ஒரு தபஸ்வியின் அறிவுரைப்படி, விநாயகப்பெருமானுக்கு கோயில் எழுப்பினேன். இது மட்டுமே, நான் பூலோகத்தில் செய்த நல்ல காரியம், என்றான். காமந்தா! தவறுகளை ஒப்புக்கொள்பவனாயினும், திருந்துபவனாயினும், தெய்வத்திற்குரிய அன்றாடக் கடமைகளை செய்தவனாயினும், வேறு ஏதோ தவறு செய்திருந்தால் மன்னிப்பு உண்டு. ஆனால், பெண்களைக் கொடுமை செய்பவனுக்கு மன்னிப்பும் கிடையாது. விமோசனமும் கிடையாது. இப்போது முடிவை உன் பொறுப்பிலேயே விடுகிறேன். நீ கடைசி நேரத்தில் மனம் திருந்தி, கையிலுள்ள பொருளை விநாயகருக்காக செலவிட்டாய். இங்கே தண்டனை முடிந்த பிறகு, நீ பூலோகத்தில் மீண்டும் பிறப்பாய். அங்கு சென்றதும், விநாயகர்கோயிலை கட்டியதற்குரிய நற்பலனை அனுபவிப்பாய். அந்த பலனை இளமையில் அனுபவிக்கிறாயா அல்லது முதுமையில் அனுபவிக்கப் போகிறாயா? என்றான்.

காமந்தன் எமதர்மனிடம், மகாபிரபு! இளமையில் இன்பங்களை ஏற்கிறேன், என்றான். சரி.. உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஒருவன் ஒரு பிறவியில் செய்த பாவம், நரகத்தில் துன்பங்களை அனுபவித்த பிறகும், பூலோகத்திலும் மீண்டும் தொடரும். நீ செய்த பாவங்களின் பலனை முதுமையில் அனுபவித்தாக வேண்டும், என்ற எமதர்மன், இவனை எந்தளவுக்கு கொடுமைப் படுத்த முடியுமோ அந்தளவுக்கு செய்யுங்கள், என உத்தரவிட்டு சென்றான். எமகிங்கரர்கள் அவனை வாட்டியெடுத்தனர். தண்டனை காலம் முடிந்ததும், பூலோகத்தில் சவுராஷ்டிரம் என்ற நாட்டில் பிறந்தான். செழிப்பு மிக்க அந்த நாட்டின் மன்னர் மகனாக பிறந்த அவனுக்கு சோமகாந்தன் என பெயரிட்டனர். அவன் பல இன்பங்களை அனுபவித்தான். சுதைமை என்ற அழகுமிக்க மனைவி வாய்த்தாள்.  ஏமகண்டன் என்னும் மகனைப் பெற்றான். செல்வம் கொழித்தது அவனது நாட்டில். பெற்றோருக்கு பிறகு நாடாண்டான். பல போகங்களை அனுபவித்தான். வயதும் ஏறியது. முற்பிறவி வினைகள் தாக்கும் காலம் நெருங்கியது. அவனை தொழுநோய் பற்றியது. கலங்கி அழுதான். தன் அமைச்சர்களை அழைத்து, நான் என் மகன் ஏமகண்டனுக்கு முடிசூட்டி விட்டு கானகம் சென்று தவவாழ்வில் ஈடுபடப்போகிறேன். தொழுநோய் வந்தவனை கட்டியவள் கூட ஏற்கமாட்டாள். புறப்படுகிறேன், என்றான். அமைச்சர்கள் வருந்தினர். அவனுக்கு வாய்த்த மனைவி மாதரசியான சுதைமை, இதனினும் கொடிய நோய் வந்தாலும் உங்களைப் பிரியேன், எனச்சொல்லி, ராமனைப் பின் தொடர்ந்த சீதையைப் போல உங்களுடன் வருவேன் எனச்சொல்லி கிளம்பினாள். பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமகண்டன், தானும் அவர்களுடன் வருவதாகவும், அரசை அமைச்சர்களிடம் ஒப்படைக்கும்படியும் சொன்னான். அமைச்சர்களும் மன்னர் மீது கொண்ட பாசத்தால் உடன் வருவதாகக் கூறினர். முற்பிறப்பில், ஒரு விநாயகர் கோயில் கட்டியதன் பலன் இது என்பதை சோமகாந்தன் உணரமாட்டான்.

நன்றாக வாழும் காலத்தில் காட்டும் பாசத்தை விட, கஷ்டப்படும் காலத்தில் ஒருவனுக்கு செய்யும் உதவியே மகத்தானது. கணபதியின் வரலாற்றை படிக்கும் வாசகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது பெற்றோர் நம்மை வளர்த்து ஆளாக்க எவ்வளவோ சிரமப்பட்டிருப்பார்கள். ஆனால், வயதான காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்காமல், முதியோர் இல்லம் என்ற சிறைகளுக்குள் அவர்களை பூட்டி விடுகிறோம். இந்த நன்றி கெட்ட செய்கையை இத்தொடரை வாசிக்கும் எவரும் செய்யக்கூடாது. ஆன்மிகம் நன்மையை மட்டுமே போதிக்கவல்லது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகனை அருகில் அழைத்த சோமகாந்தன், அவனை தழுவக்கூட முடியாமல், வருத்தத்தில், ஏமகண்டா ! என்ன கொடிய பாவம் செய்தேனோ புரியவில்லை. <உன்னைத் தழுவக்கூட இயலவில்லை. என் இதயம் வெடித்துக் கிடக்கிறது. நாடாளும் மன்னனுக்கு சில கடமைகள் உண்டு. அதில், தன்னை அடுத்து வரும் மன்னனும், தன்னைப் போலவே செங்கோல் ஆட்சி நடத்த வேண்டும் என்பது முக்கிய கடமை. அதற்கு தகுதியானவன் நீ மட்டுமே! நானும், உன் அன்னையும் கிளம்புகிறோம். நீ நாடாள வேண்டும். ஒன்றை மட்டுமே மறந்து விடாதே. எல்லாருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். ஆனால், உலகத்திற்கே குலதெய்வம் விநாயகர். அவரை தினமும் வழிபடு. உன்னை எந்தக் கஷ்டமும் அணுகாது, என புத்திமதி சொல்லி புறப்பட்டான். காட்டிற்கு சென்ற அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். ஆடம்பர உடைகளையும், வகை வகையான உணவுகளையும் அனுபவித்த அவர்கள், இங்கே மரவுரிகளைத் தரித்தும், பச்சை காய்கறி, கிழங்குகளை சாப்பிட்டும் உயிர் வாழ வேண்டிய தாயிற்று. ஒன்றை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் கிளம்பியவுடனேயே மனைவியும் உடன் கிளம்பி விட்டாள். தம்பதியர் என்றும் பிரியக்கூடாது என்பது இங்கே சொல்லப்படும் தத்துவம். ஒரு பிறவியில் மனிதன் செய்யும் தவறு, மறுமையிலும் பின் தொடர்ந்து, அவனை மட்டுமின்றி, அவனைச் சார்ந்திருக்கும் எந்தப் பாவமும் செய்யாத அவனது மனைவி மக்களையும் தொடரும் என்பது இன்னொரு தத்துவம். இங்கே சுதைமை சோமகாந்தனுடன் கஷ்டப்பட்டாள். பெற்றவர்களைப் பிரிந்து அவன் வேறிடத்தில் வாழ வேண்டியதாயிற்று. இதற்காகத்தான் ஆன்மிகம், பாவம் செய்யாதே, பாவம் செய்யாதே என தலையில் அடித்து அடித்து சொல்கிறது. காட்டில் கஷ்டப்பட்ட இந்த தம்பதிகளை நோக்கி, ஒரு இளைய தபஸ்வி வந்து கொண்டிருந்தார்.

© Om Namasivaya. All Rights Reserved.