Books / பன்னிரு திருமுறைகள்


முதல் திருமுறை


திருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று திருமுறைகளில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 பாடல்களும், இரண்டாம் திருமுறையில் 1331 பாடல்களும், மூன்றாம் திருமுறையில் 1346 பாடல்களும் அடங்கியுள்ளன.

அதில் முதல் திருமுறையில் பாடிய 1469 பாடல்களும் அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1. தோடுடைய செவியன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்தஅருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !

2. முற்றல்ஆமையிள நாகமோடுஏனம்
முளைக்கொம்புஅவை பூண்டு
வற்றலோடுகல னாப்பலி தேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கற்றல்கேட்டல்உடை யார்பெரியார்கழல்
கையால்தொழுது ஏத்தப்
பெற்றம்ஊர்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : ஆமையோடு, நாகம் முதலானவைகளை ஆபரணமாகக் கொண்டு திருஓடு ஏந்தி பிச்சை கொள்ளும் சிவபெருமான், என் உள்ளத்தைக் கவர்ந்தவன். நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களும், கேள்வி ஞானம் பெற்றவர்களும், திருத்தொண்டு செய்யும் பெருமக்களும் கரங்கூப்பி வணங்கி நிற்க இடபவாகனத்தில் காட்சி தரும் பெருமான் இவனல்லவா ?

3. நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர்
நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
ஊர்பரந்தஉல கின்முதலாகிய
ஓரூர்இது என்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : கங்கை தங்கும் சடையில் குளிர்ந்த வெண்ணிலவைச் சூடி, அழகிய வளைகள் கைகளிலிருந்து நழுவிச் செல்லுமாறு என் உள்ளத்தையும் மேனியையும் உருகச் செய்து கவர்ந்தவன் சிவபெருமான். உலகிலுள்ள ஊர்கள் யாவும் பிரளய காலத்தில் அழிந்தாலும், அழியாது எப்போதும் நிலவும் பிரமபுரத்தில் இருக்கும் பெருமான் இவனல்லவா !

4. விண்மகிழ்ந்தமதில் எய்ததும்அன்றி
விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை
மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : வானத்தில் பரந்து சென்று துன்புறுத்தும் தன்மையில் மகிழ்ச்சி கொண்ட முப்புரக் கோட்டைகளை எரித்ததும் அன்றி, பிரமனுடைய கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்று என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அரவமும் கொன்றை மலரும் மார்பினில் பொலிய உமாதேவியை மகிழ்ந்து இடப்பாகத்தில் வைத்து பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

5. ஒருமைபெண்மைஉடை யன்சடையன்விடை
ஊரும்இவன் என்ன
அருமையாகஉரை செய்யஅமர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ள மதிந்ததோர்
காலம்இது என்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : ஒரே வடிவத்தில் பெண்ணுருவும் ஆணுருவும் கொண்டு இரு உருவங்களைக் காட்டுபவனாகி, சடைமுடியுடன் இடபத்தில் அமரும் சிவபெருமான் அருமையான உரைகளைக் சொல்லும் பொருட்டு எனது உள்ளம் அமர்ந்து என்னைக் கவர்ந்தவன். ஊழிக் காலத்திலும் அழியாத பெருமையுடைய பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

6. மறைகலந்தஒலி பாடலோடு ஆடலர்
ஆகிமழு வேந்தி
இறைகலந்தஇன வெள்வளைசோரஎன்
உள்ளம்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர்
சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : வேத ஒலி முழங்க, பாடலுடன் ஆடலும் செய்து மழு ஏந்தி இருப்பவன் ஈசன். அவன் என்னுடைய கைகளில் உள்ள வளைகள் தாமே கழன்று விழும்படி என் உள்ளத்தைக் கவர்ந்து உருகச் செய்தவன். அடர்ந்த சோலைகள் திகழ்ந்து நறுமணம் வீச நிலவின் தன்மையுடைய பிரம்மபுரத்தில் மேவிய பெருமான் இவனல்லவா !

7. சடைமுயங்குபுன லன்அனலன்எரி
வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்குஅர வோடுஉழிதந்துஎனது
உள்ளம்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம்
பொன்னஞ்சிறகு அன்னம்
பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : சடையில் கங்கையும் கரத்தில் நெருப்பும் ஒளிதந்து பெருமை கொள்ளவும், நாகமானது இறுகப் பற்றி உடலின் மீது திரியவும் காட்சி தந்து என் உள்ளத்தைக் கவர்ந்த சிவபெருமான், உப்பங்கழி பொருந்திய சோலையில் அன்னப் பறவைகள் தம் பேடைகளுடன் கூடியுள்ள பிரமாபுரத்தில் இருப்பவன். அவன் இவனல்லவா !

8. வியர்இலங்குவரை உந்திய தோள்களை
வீரம்விளை வித்த
உயர்இலங்கைஅரை யன்வலிசெற்றுஎனது
உள்ளம்கவர் கள்வன்
துயர்இலங்கும்உல கில்பலஊழிகள்
தோன்றும்பொழுது எல்லாம்
பெயர்இலங்குபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : சினத்தின் வயப்பட்டு வீரத்தைக் காட்டும் வகையில் கயிலையைப் பெயர்த்த இலங்கை அரசனுடைய வலிமையை அழித்து எனது உள்ளத்தைக் கவர்ந்த ஈசன், வினையின் கன்மத்தைச் சேர்த்துத் துயரை விளைவிக்கும் இந்த உலகில் ஊழிக்காலத்திலும் அழியாமல் நிலைத்து நின்று தனது சிறப்பினை நல்கும் பதியாகிய பிரமபுரத்தில் மேவியவன். அவன் இவனல்லவா !

9. தாள்நுதல் செய்துஇறை காணியமாலொடு
தண்தாமரை யானும்
நீணுதல்செய்துஒழிய நிமிர்ந்தான் எனது
உள்ளம்கவர் கள்வன்
வாள்நுதல்செய்மக ளிர்முதலாகிய
வையத்தவர் ஏத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : திருவடியைக் காணத் திருமாலும் திருமுடியைக் காணப் பிரமனும் முயற்சி செய்ய, அவர்கள் செயல் பயனற்றவாகச் செய்யும் வகையில் நீண்டு வளர்ந்தவனாகிய ஈசன் எனது உள்ளத்தைக் கவர்ந்தவன். வாள்போன்ற நெற்றியை உடைய மகளிர் முதலாக உலகத்தவர் அனைவரும் ஏத்தப் பேணிக் காக்கும் பிரமாபுரம் மேவிய பெருமான் இவன் அல்லவா !

10. புத்தரோடுபொறி யில்சமணும்புறம்
கூறநெறி நில்லா
ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தெனது
உள்ளம்கவர் கள்வன்
மத்தயானைமறுக அவ்உரிபோர்த்ததோர்
மாயம்இது என்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.

தெளிவுரை : புலன் உணர்வுகளை நீத்த புத்தரும் சமணரும் நன்னெறியில் அமையாத மாற்றுக் கருத்துக்களைக் கூறிடினும் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கவர்ந்து, செருக்குற்ற யானையை அழித்து அதன் தோலைப் போர்வையாக்கிக் கொண்டு பின்னர் மாயை காட்டிப் பித்தனைப் போன்று பிரமாபுரம் மேவிய பெருமான் இவனல்லவா !

11. அருநெறியமறை வல்லமுனியகன்
பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய
பெம்மான்இவன் தன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்
பந்தன்உரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை
தீர்தல்எளி தாமே.

தெளிவுரை : மறைவல்ல பிரமன் பூசித்த பிரமாபுரம் மேவிய பெருமானை ஒன்றிய மனத்தினால் உணர்ந்து ஞானசம்பந்தன் உரைத்த திருநெறிய இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவருடைய தொல்வினை எளிதாகத் தீரும்.

திருச்சிற்றம்பலம்

2. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

12. குறிகலந்தஇசை பாடலினான்நசை
யால்இவ்உலகு எல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாய்எருது
ஏறிப்பலி பேணி
முறிகலந்ததொரு தோல்அரைமேல்உடை
யான்இடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்துஅயலேபுயல்
ஆரும்புக லூரே.

தெளிவுரை : பேரின்பத்தை நோக்கமாகக் கொண்டு இசைப் பாடலில் பொருத்தும் ஒருவனாய் இந்த உலகில் நன்னெறியை இழைக்கும் விருப்பத்தினாலும் தன்மையினாலும் இடப வாகனத்தில் வீற்றிருந்தும், பிச்சையேற்றும் தோலாடையை உடையவனாகிய ஈசன் விளங்கும் இருப்பிடமானது நறுமணம் கமழும் நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூர் ஆகும்.

13. காது இலங்குகுழை யன்இழைசேர்திரு
மார்பன்ஒரு பாகம்
மாது இலங்குதிரு மேனியினான்கரு
மானின்உரி யாடை
மீதுஇலங்க அணிந்த தான்இமையோர்தொழ
மேவும்இடம் சோலைப்
போதும்இலங்குநசை யால்வரிவண்டுஇசை
பாடும்புகலூரே.

தெளிவுரை : ஒரு காதில் குழையை உடையவன்; பூணூல் இழையும் மார்பினன்; உமாதேவியார் ஒரு பாகத்தில் விளங்கும் திருமேனி யுடையவன்; யானையின் தோலை உரித்து மேலாடையாகக் கொண்டவன்; அத்தகைய ஈசன் தேவர்கள் எல்லாம் தொழுது வணங்க இருப்பிடமாகக் கொண்ட இடம் சோலைகள் விளங்க வண்டுகள் இசைபாடும் புகலூர் ஆகும்.

14. பண்நிலாவும்மறை பாடலினான்இறை
சேரும்வளை அங்கைப்
பெண்நிலாவஉடை யான்பெரியார்கழல்
என்றும்தொழுது ஏத்த
உள்நிலாவியவர் சிந்தையுள்நீங்கா
ஒருவன்இடம் என்பர்
மண்நிலாவும்அடி யார்குடிமைத்தொழில்
மல்கும்புக லூரே.

தெளிவுரை : பண் திகழும் வேதத்தினன்; முன்கையில் வளையணிந்த அழகிய கரத்தையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் உடையவன்; திருத்தொண்டர்களின் திருவடிகளைத் தொழுது போற்றும் சிந்தையுடையவர்களின் சிந்தையில் நீங்காது விளங்குபவன் ஈசன்; அவன் விளங்கும் இடமானது வேளாண்மைத் தொழில் வளரும் புகலூர்.

15. நீரின்மல்குசடை யன்விடையன்அடை
யார்தம்அரண் மூன்றும்
சீரின்மல்குமலை யேசிலையாக
முனிந்தான்உலகு உய்யக்
காரின்மல்குகடல் நஞ்சமதுஉண்ட
கடவுள்இடம் என்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினால்உயர்வு
எய்தும்புகலூரே.

தெளிவுரை : நீரின் மேலதாகிய கங்கையைச் சடைமுடியில் கொண்டவன்; இடப வாகனத்தை உடையவன்; நன்மை யடைய மாட்டாதவர்களாகிய மூன்று கோட்டைகளை உடைய அசுரர்களை, மேரு மலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன்; உலகம் உய்தி பெறும் பொருட்டு பாற்கடலில் அமுதம் கடையும் போது தோன்றிய நஞ்சினை உண்டு ஊர்களில் திகழ்ந்து நல்லொழுக்கத்தினால் உயர்வு அடையும் புகலூர்.

16. செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்
சேரும்அடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்து
என்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மான்உறையும்இடம்
என்பர்அருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ
ருந்தும்புக லூரே.

தெளிவுரை : தனது சிவந்த திருமேனியில் வெண்மை தோன்றுமாறு திருநீற்றைப் பூசுவர்; தன்னை வணங்கும் அடியாரிடம் மெள்ள மெள்ளச் சேர்ந்து நின்ற தீவினையைச் சிதறி வெளியேறுமாறு செய்வர்; தன்னைப் பணிந்து போற்றிப், பாடல்களால் துதி செய்யும் அடியார்பால் மெய்யாய் நின்றருளும் அப்பெருமான் உறையும் இடம், வாக்காலும் மனத்தாலும் பொய்மை கொள்ளாத மனத்தினர் பொருந்தி வாழும் புகலூர் ஆகும்.

17. கழலின்ஓசைசிலம் பின்ஒலியோசை
கலிக்கப்பயில் கானில்
குழலின்ஓசைகுறள் பாரிடம்போற்றக்
குனித்தார்இடம் என்பர்
விழவின்ஓசைஅடி யார்மிடையுற்று
விரும்பிப்பொலிந்து எங்கும்
முழவின் ஓசைமுந் நீர்அயர்வுஎய்த
முழங்கும்புக லூரே.

தெளிவுரை : ஒரு காலில் கழலொலியும் பிறிதொரு காலில் சிலம்பின் ஒலியும் எழுமாறு, குழலோசையைப் பூதங்கள் எழுப்ப நடனம் புரியும். சிவபெருமான் விளங்கும் இடமானது, திருவிழாக்களால் உண்டாகும் ஓசை அடியார்களை மகிழ்ச்சியுறுமாறு செய்கிறது. முழவின் ஓசை கடல் அலைகள் முழங்கும் ஓசையை வெல்லும் தன்மை கொண்டது புகலூர் ஆகும்.

18. வெள்ளம்ஆர்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல்
விளங்கும்மதி சூடி
உள்ளம் ஆர்ந்தஅடி யார்தொழுதேத்த
உகக்கும்அருள் தந்துஎம்
கள்ளம்ஆர்ந்துகழி யப்பழிதீர்த்த
கடவுள்இடம் என்பர்
புள்ளைஆர்ந்தவய லின்விளைவால்வளம்
மல்கும்புக லூரே.

தெளிவுரை : கங்கை பொருந்தி விளங்கும் சிவந்த சடை முடியின்மேல் பிறைமதி சூடிய ஈசன், பொருந்திய உள்ளத்தால் வணங்கிப் போற்றும் அடியவர்களுக்கு அவர்கள் மகிழுமாறு அருள்புரிபவன். அவன் எம் மருங்கும் மறைந்து நின்று துன்பத்தைத் தரும் மும்மலத்தை நீக்குபவன். அவனுடைய இடம் பறவைகள் தங்கும் நீர்வளம் நிலவளம் பெருகும் புகலூர் ஆகும்.

19. தென்னிலங்கையரை யன்வரைபற்றி
எடுத்தான்முடி திண்தோள்
தன்குலங்குவிர லால்நெரிவித்துஇசை
கேட்டுஅன்றுஅருள் செய்த
மின்இலங்குசடை யான்மடமாதொடு
மேவும்இடம் என்பர்
பொன்இலங்குமணி மாளிகைமேல்மதி
தோயும்புக லூரே.

தெளிவுரை : தென்னிலங்கையின் அதிபதியாகிய இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுக்கும் போது அம்மலையின் மீது எழுந்தருளியுள்ள ஈசன், மலையைப் பெயர்த்த அரக்கனுடைய முடியும் உறுதியான தோள்களும் நெரிய அடர்த்து, பின்னர் அவ்வரக்கன் பக்தியால் எழுப்பிய இசையில் மகிழ்ந்து அருள் புரிந்தான். அப்பெருமான் உமாதேவியுடன் மேவும் இடம் பொன்னும் மணியும் திகழும் மாளிகையின் மேல் குளிர்ந்த நிலவு தோயும் புகலூர்

20. நாகம் வைத்தமுடி யான்அடிகைதொழுது
ஏத்தும்அடி யார்கள்
ஆகம்வைத்தேபெரு மான்பிரமன்னொடு
மாலும்தொழுது ஏத்த
ஏகம் வைத்தஎரி யாய்மிகஓங்கிய
எம்மான்இடம் போலும்
போகம்வைத்த பொழி லின்நிழலால்மது
ஆரும்புக லூரே.

தெளிவுரை : நாகத்தைத் தரித்த ஈசன், தனது திருவடியைப் பணியும் அடியவர்களைத் தன்பால் பொருத்திக் கொள்பவன். அவன் பிரமனும் திருமாலும் போற்றுமாறு ஜோதி வடிவாய் வளர்ந்து ஓங்கியவன். அப்பெருமான் விளங்கும் இடமானது மகிழ்ச்சியைத் தரும் சோலைகள் திகழும் புகலூர் ஆகும்.

21. செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்
செப்பில்பொருள் அல்லாக்
கைதவத்தர் மொழி யைத்தவிர்வார்கள்
கடவுள்ளிடம் போலும்
கொய்துபத்தர்மல ரும்புனலும்கொடு
தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம்
எய்தும்புக லூரே.

தெளிவுரை : நல்ல தவம் செய்தவர்களும், நன்றாகத் தேர்ந்து அறியும் பாங்குடையவர்களும், சாக்கியர்கள் கூறும் மெய்ப்பொருள் இல்லாத மற்றும் வஞ்சித்துத் துன்பம் தரும் மொழிகளை மனத்தில் கொள்ள மாட்டார்கள். பக்தர்கள் நன்னீரால் பூசித்தும், மென் மலரால் அருச்சித்தும் தோத்திரம் செய்து மெய்த் தவத்தில் விளங்க உயர் வானகம் எய்துவர். அதற்கு இடமாக இறைவன் உள்ள இடம் புகலூர்.

22. புற்றில்வாழும்அர வம்அரைஆர்த்தவன்
மேவும்புக லூரைக்
கற்றுநல்லஅவர் காழிஉண்ஞானசம்
பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றும்இசை பாடியமாந்தர்
பரமன்அடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழி யாப்புகழ்
ஓங்கிப்பொலி வாரே

தெளிவுரை : நாகத்தைத் தரித்தவனாகிய ஈசன் மேவிய புகலூரை, கல்வியில் தேர்ந்த ஊராகிய சீகாழியில் வாழும் ஞானசம்பந்தரின் திருப்பதிகத்தை விரும்பி எக்காலத்திலும் இசையுடன் பாடும் மக்கள் சிவபெருமான் திருவடியில் சேர்ந்து பொலிவார்கள். அத்தகையோர் குற்றம் இல்லாதவராகவும், குறைபாடு நீங்கியவராகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் பெருகும் புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

3. திருவலிதாயம்(அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம், சென்னை)

திருச்சிற்றம்பலம்

23. பத்தரோடுபல ரும்பொலியம்மலர்
அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழுது
ஏத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுஉறை
கின்றவலி தாயம்
சித்தம்வைத்தஅடி யார்அவர்மேல்அடை
யாமற்றுஇடர் நோயே.

தெளிவுரை : பக்தி செய்யும் அடியவர்களுடன், உடனிருந்து போற்றும் ஏனையோரும் வேத முறைப்படி மந்திரங்களைச் சொல்லி ஏத்த அதனை ஏற்ற பெருமான் நீங்காது உறையும் திருவலிதாயத்தை நினைக்கும் அடியவர்கள்பால் இடர்செய்யும் துன்பங்கள் இல்லை. இடர்நோய் என்பது பிறவி நோயையும் உணர்த்தும்.

24. படைஇலங்குகரம் எட்டுடையான்படிறு
ஆகக்கலன் ஏந்திக்
கடைஇலங்குமனை யிற்பலிகொண்டுஉணும்
கள்வன்உறை கோயில்
மடைஇலங்குபொழி லின்நிழல்வாய்மது
வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்குஅடையாவினை
அல்லல்துயர் தானே.

தெளிவுரை : மழு, சூலம் முதலான படைகளைத் தரித்த எட்டுக் கரங்களையுடையவன். இது என்ன கொடுமை என்று பலரும் அஞ்சுமாறு பிச்சை ஏற்றவன். அவன் உறையும் கோயில் நீர்வளத்துடன் சோலைகளும் நிரம்பிய திருவலிதாயம் ஆகும். அத்தலத்தைச் சாரும் அடியவர்களுக்கு வினை இல்லை; துன்பமும் இல்லை.

25. ஐயன்நொய்யன்அணி யன்பிணிஇல்லவர்
என்றும்தொழுது ஏத்தச்
செய்யன்வெய்யபடை ஏந்தவல்லான்திரு
மாதோடுஉறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்து<உயர்
கின்றவலி தாயம்
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்வினை
தீரும்நலம் ஆமே.

தெளிவுரை : பெரியவன், நுண்ணியன், அண்மையில் இருப்பவன், பற்றற்றவர் தொழுது ஏத்திடச் செம்மையுறு சோதி வடிவினன்; யாராலும் வெல்ல முடியாத படையைத் தரித்திருப்பவன். அப்பெருமான் உமாதேவியுடன் விளங்குகின்ற இடம், உலகத்தோர் வணங்கப் பிணி தீர்த்து மேன்மைச் சிறப்பினைப் பெறும் திருவலிதாயம் ஆகும். இத்தலத்தை, ஆன்மா நற்கதி பெறும் விதத்தில் நினைக்க வேண்டும். அவ்வாறு ஒன்றிய சிந்தனையில் ஈடுபட்டால் வினை தீரும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

26. ஒற்றைஏறதுஉடை யான்நடமாடியோர்
பூதப்படை சூழப்
புற்றின்நாகம்அரை ஆர்த்துஉழல்கின்றஎம்
பெம்மான்மட வாளோடு
உற்றகோயில்உல கத்துஒளிமல்கிட
உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்அது வேசரண்ஆவது
பாடும்அடி யார்க்கே.

தெளிவுரை : இடபத்தை வாகனமாக உடையவன்; நடனம் புரிபவன்; பூத கணங்கள் சூழ இருப்பவன்; நாகத்தை இடுப்பில் தரித்தவன். அத்தகைய பெருமான் உமையுடன் வீற்றிருக்கும் கோயில் உலகத்தின் பெருமையாவும் சேரத் திகழும் திருவலிதாயம் ஆகும். இறைவனைப் பாடித் துதி செய்யும் அடியவர்களுக்கு அதுவே சரணாலயமாகும்.

27. புந்திஒன்றிநினை வார்வினையாயின
தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியான்அமர்
கோயில்அயல் எங்கும்
மந்திவந்துகடு வன்னொடும்கூடி
வணங்கும்வலி தாயம்
சிந்தியாதஅவர் தம்அடும்வெந்துயர்
தீர்தல்எளி தன்றே.

தெளிவுரை : சிந்தை ஒன்றி நினைப்பவரின் வினையாவும் தீரும் வகையாக மாலை நேரத்துச் செவ்வொளி போன்ற திருமேனியை உடைய ஈசன் அமர்கின்ற கோயில், பெண் குரங்கு ஆண் குரங்குடன் சேர்ந்து வணங்கும் திருவலிதாயம் ஆகும். அத்தகைய இடத்தைச் சிந்திக்காதவருடைய துன்பம் தீர்வது எளிதன்றே.

28. ஊன்இயன்றதலை யில்பலிகொண்டு உல
கத்துள்ளவர் ஏத்தக்
கான்இயன்றகரி யின்உரிபோர்த்துஉழல்
கள்வன்சடை தன்மேல்
வான்இயன்றபிறை வைத்தஎம்ஆதி
மகிழும்வலி தாயம்
தேன்இயன்றநறு மாமலர்கொண்டுநின்று
ஏத்தத் தெளிவு ஆமே !

தெளிவுரை : பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு பிச்சையேற்று, உலகத்தோர் போற்றுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு எக்காலத்திலும் சஞ்சாரம் (அசைதல்) புரிந்தும், தோற்றத்தை மறைத்து கள்வனாய்த் தனது சடைமுடியில் வெண்பிறை சூடிய எமது ஆதி மூர்த்தியாகிய ஈசன் மகிழும் திருவலிதாயம் என்னும் பதியை மாமலர் கொண்டு ஏத்தத் தெளிவு உண்டாகும்.

29. கண்நிறைந்தவிழி யின்அழலால்வரு
காமன்உயிர் வீட்டிப்
பெண்நிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய
பெம்மான்உறை கோயில்
மண்நிறைந்தபுகழ் கொண்டுஅடியார்கள்
வணங்கும்வலி தாயத்து
உள்நிறைந்தபெரு மான்கழல்ஏத்தநம்
உண்மைக்கதி யாமே.

தெளிவுரை : தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவன் ஈசன், அவன் உமாதேவியைத் தனது இடப் பாகத்தில் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். அப் பெருமானுடைய இருப்பிடம் உலகம் போற்றும் புகழ்மிக்க அடியவர்கள் வணங்குகின்ற திருவலிதாயம் ஆகும். எனவே அத் திருத்தலத்தில் உள்ள இறைவன் திருவடிமலர்களைத் துதிக்க முத்தியின் நிலை உண்டாகும்.

30. கடலின்நஞ்சம்அமுது உண்டுஇமையோர்தொழுது
ஏத்தநடம் ஆடி
அடல்இலங்கைஅரை யன்வலிசெற்றுஅருள்
அம்மான்அமர் கோயில்
மடல்இலங்குகமு கின்பலவின்மது
விம்மும்வலி தாயம்
உடல்இலங்கும்உயிர் உள்ளளவும்தொழ
உள்ளத்துயர் போமே.

தெளிவுரை : பாற்கடலைக் கடைந்து அமுதம் எதிர் பார்த்த நிலையில் நஞ்சு வெளிப்பட்டது. அதனையே அமுதமென உண்டு தேவர்களைக் காத்தவன் இறைவன்; நடனம் புரிந்து மகிழ்வித்தவன் வன்மையுடைய இலங்கையின் வேந்தனான இராவணனுடைய வலிமையை அடக்கி அருள் புரிந்தவன். அத்தகைய கடவுள் அமர்ந்து விளங்கும் இடம் பலா கமுகு முதலான மரங்கள் பெருகியுள்ள திருவலிதாயம் ஆகும். அத் திருத்தலத்தை உடலில் உயிர் உள்ள அளவும் தொழுது வணங்கிட மனத்துயர் நீங்கும்.

31. பெரியமேருவரை யேசிலையாமலை
உற்றார்எயில் மூன்றும்
எரியஎய்தஒரு வன்இருவர்க்குஅறி
வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற ஒங்கியவன்வலி
தாயம்தொழுது ஏத்த
உரியர்ஆகஉடை யார்பெரியார்என
உள்கும்உல கோரே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு, தன்னை எதிர்த்துப் போர் செய்த அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்துச் சாம்பலாக்கியவன் ஈசன். அவன், திருமாலும் பிரமனும் முயற்சி செய்தும் காண்பதற்கும் அறிவதற்கும் முடியாதவனாய், சோதி வடிவானவன். அத்தகையவனுக்குரிய வலிதாயம் என்னும் பதியை ஏத்திடும் அடியவர்கள் அவனுக்கே உரிமையுடையவர்கள் ஆவர். உலகத்தவர், அத்தகைய பெருமக்களைப் பெரியவர்களாக  திருத்தொண்டர்களாகக் கருதுவர்.

32. ஆசியாரமொழி யார்அமண்சாக்கியர்
அல்லாதவர் கூடி
ஏசிஈரம்இல ராய்மொழிசெய்தவர்
சொல்லைப் பொருள் என்னேல்
வாசிதீரஅடி யார்க்குஅருள்செய்து
வளர்ந்தான்வலி தாயம்
பேசும்ஆர்வம்உடை யார்அடியார்எனப்
பேணும்பெரி யோரே.

தெளிவுரை : ஆசி வழங்கும் மங்கலச் சொற்களைச் சொல்லாதவர்களாகிய சமணரும் சாக்கியரும் மற்றும் புறம்பானவர்களும் சேர்ந்து குறை கூறி அன்பற்றவர்களாய் மொழியும் சொற்களை உறுதி பயக்கும் வார்த்தைகளாகக் கொள்ள வேண்டாம். குறைவு இன்றி அடியவர்களுக்கு அருள்செய்து கொண்டு ஓங்கி வளரும் ஈசனுடைய திருவலிதாயம் என்னும் பதியைப் போற்றும் விருப்பத்தை உடையவர்கள் அடியார் எனப் புகழப் பெறும் பெருமக்கள் ஆவர்.

33. வண்டுவைகும்மணம் மல்கியசோலை
வளரும்வலி தாயத்து
அண்டவாணன்அடி உள்குதலால்அருள்
மாலைத்தமிழ் ஆகக்
கண்டல்வைகும்கடற் காழியுள்ஞானசம்
பந்தன்தமிழ் பத்தும்
கொண்டு வைகிஇசை பாடவல்லார்குளிர்
வானத்துஉயர் வாரே.

தெளிவுரை : தேனை நுகரும் வண்டுகளும், நறுமணம் வீசும் மலர்களும் நிறைந்த சோலைகள் திகழும் திருவலிதாயத்தில் விளங்கும் ஈசனின் திருவடியை மனத்தில் பதித்திட இந்தத் தமிழ் மாலை அருளப் பெற்றது. தாழை மடல் ஓங்கும் சீகாழி நகர் ஞானசம்பந்தன் பாடிய இப் பத்துப் பாடல்களையும் ஏற்று இசையுடன் பாடுபவர்கள் இனிமையான தேவலோகத்தில் சிறந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

4. திருப்புகலியும் திருவீழிமிழலையும் (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்  திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

34. மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
வாள்நுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்கள்ஏத்தப்
புகலிநி லாவிய புண்ணியனே
எம்மிறை யேஇமை யாதமுக்கண்
ஈச! என் நேச! இதுஎன் கொல்! சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : கருமையான கூந்தலும் வாளைப் போன்ற நெற்றியும் மானின் விழியும் உடைய உமையை உடனாகி, மறையோர்கள் போற்றிடப் புகலிப் பதியில் உள்ள புண்ணியனே! எமது இறைவனே! இமையாத மூன்று கண்களையுடைய ஈசனே! எனக்கு நேசமானவனே! இது என்ன விந்தை! மெய்ம்மை நான்மறையோர் மேவும் திருவீழிமிழலையில் இருக்கும் விமானத்தில் திருப்புகலியில் உள்ள கோலத்தைக் காட்சி தருகின்றாய் !

35. கழல்மல்கு பந்தொடுஅம் மானைமுற்றில்
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழில்மல்கு கிள்ளையைச் சொல்பயிற்றும்
புகலிநி லாவிய புண்ணியனே !
எழில்மல ரோன்சிரம் ஏந்திஉண்டோர்
இன்புறு செல்வம்இது என்கொல் சொல்லாய் !
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : கழற்ச்சிக்காய், பந்து, அம்மானை முதலான விளையாடும் இளம் பெண்கள் தாம் விரும்பி வளர்க்கும் கிளிகளுக்குச் சொற்களைப் பயிற்றுவிக்கும் திருப்புகலியில் நிலவும் ஈசனே! பிரமனுடையஒரு தலையைக் கையில் ஓடாக ஏந்தி இன்புறும் செல்வமே! திருவீழிமிழலையின்கண் நின்காட்சியைத் தருகின்றனை! இது என்கொல்? இது திருக்காட்சியை வியந்து வினா வழி உரைத்தமையாகும்.

36. கன்னியர் ஆடல் கலந்துமிக்க
கந்துக ஆடை கலந்துதுங்கப்
பொன்இயல் மாடம் நெருங்குசெல்வப்
புகலிநி லாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாள்ஓர்பாகத்து
எம்இறை யே!இது என்கொல் சொல்லாய்
மின்இயல் நுண்ணிடை யார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : கன்னியர்கள் பந்து விளையாட்டில் ஈடுபட்டு அதற்கு உரிய ஆடை தரித்து ஒளிமிக்க மேல் தளத்தில் சூழந்து இருக்கின்றனர். அத்தகைய செல்வம் நிறைந்த புகலியில் நிலவும் ஈசனே ! இனிய யாழின் இசை போன்று மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள எம் இறைவனே ! திருவீழிமிழலையின் திருக்கோயிலை விரும்பி இங்கு காட்சி தருவது என்கொல் !

37. நாகப ணம்திகழ் அல்குல்மல்கு
நல்நுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ னம்பொழில் சூழ்ந்தஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
எம்இறையே !இது என்கொல்சொல்லாய்
மேகம்உ ரிஞ்சுஎயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : நாகத்தின் படத்தைப் போன்ற அல்குலும் நல்ல நெற்றியும் மான்விழியும் உடைய மங்கையர்களுடன் கமுகமரங்கள் சூழ்ந்துள்ள பிரமன் போற்றும் புகலியில் நிலவும் ஈசனே ! எல்லாமும் தாமே என்று ஏகம் ஆகிப் பெருந்தகையாய் விளங்கும் எம் இறைவனே! மேகங்கள் சூழும் விமானத்தில் விரும்பிப் பொலிவது என் கொல்! சொல்!

38. சந்துஅளறு ஏறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டும்தள ராதவாய்மைப்
புந்தியில் நான்மறை யோர்கள்ஏத்தும்
புகலிநி லாவிய புண்ணியனே
எந்தமை ஆளுடை ஈச! எம்மான்
எம்இறை யே ! இது என்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறுஅணி வார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : சந்தனக் குழம்பைத் தமது மார்புகளில் தடவிய நங்கையர்களுடன், ஐம்புலன்களால் அரிக்கப்படாத உறுதிமிக்க வாய்மையை நெஞ்சில் பதித்த நான்கு மறையிலும் வல்லவர்கள் போற்றி வழிபடும் புகலியில் நிலவும் புண்ணியனே ! எம்மை ஆளாக உடைய ஈசனே ! எம்பெருமானே ! எம் இறைவனே ! திருவெண்ணீறு அணியும் அடியார்களையுடைய திருவீழிமிழலையில் இனிது அமர்ந்து இருப்பது என்கொல் !

39. சங்குஒளி இப்பி சுறாமகரம்
தாங்கி நிரந்து தரங்கம் மேன்மேல்
பொங்குஒலி நீர்சுமந்து ஓங்குசெம்மைப்
புகலிநி லாவிய புண்ணியனே
எங்கள்பி ரான்இமை யோர்கள்பெம்மான்
எம்இறை யேஇது என்கொல்சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : சங்கு, அழகிய கிளிஞ்சில் மற்றும் சுறா, மகரம் யாவும் செறிந்துறையும் கடல் அலைகள் மேலும் மேலும் பொங்கிக் குளிர்ந்து ஒலித்துச் செம்மையுறும் புகலியின் நிலவும் புண்ணியனே ! எங்கள் தலைவனே ! இறைவனே ! தேவர்கள் போற்றும் கதிர்கள் பரவும் திருவீழிமிழலையில் நீர் விரும்பிப் பொலிந்தது என்கொல் ! சொல் !

40. காமன்எ ரிப்பிழம்பு  ஆகநோக்கிக்
காம்பன தோளியொ டும்கலந்து
பூமரு நான்முகன் போல்வர் ஏத்தப்
புகலிநி லாவிய புண்ணியனே
ஈமவ னத்துஎரி யாட்டுஉகந்தி
எம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : மன்மதன் எரியுமாறு தனது நெற்றிக் கண்ணால் நோக்கிய பின்னர், உமாதேவியைத் திருமணம் புரிந்து, மலர்மீது விளங்கும் நான்முகன் முற்றுமுள்ள மேலோர்களும் தொழுது ஏத்தப் புகலி நிலவும் புண்ணியனே ! இடுகாட்டில் கோரத்தாண்டவம் விழைந்த எம்பெருமானே ! மலர்கள் சூழும் குளிர்ந்த சோலைகள் பரந்த மிழலையில் விரும்பிக் காட்சி நல்கியது என்கொல்! சொல்?

41. இலங்கையர் வேந்துஎழில் வாய்த்ததிண்தோள்
இற்றுஅலற அவ்விரல் ஒற்றிஐந்து
புலங்களை கட்டவர் போற்றஅந்தண்
புகலிநி லாவிய புண்ணியனே
இலங்குஎரி ஏந்திநின்று எல்லியாடும்
எம்இறை யே! இது என்கொல்சொல்லாய்
விலங்கல்ஒண் மாளிகை சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : இலங்கை வேந்தனாகிய இராவணனுடைய உறுதியான தோள்கள் துன்புறுமாறு தனது திருப்பாத விரலால் ஊன்றி, ஐம்புலன்களின் களைகளைக் கட்டி அடக்கிய திருத்தொண்டர்கள் போற்றப் புகலியில் நிலவும் புண்ணியனே ! திருக்கரத்தில் தீப்பிழம்பை ஏந்தி இரவில் நடனம் புரியும் எம் இறைவனே ! மலை போன்று உயர்ந்து ஒளி திகழும் மாளிகைகள் சூழ்ந்த மிழலையில் விரும்பித் திகழ்வது என்கொல் ! சொல்லுக !

42. செறிமுள ரித்தவிசு ஏறிஆறும்
செற்றுஅதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்துஅணை யானும்காணாப்
புகலிநி லாவிய புண்ணியனே
எறிமழு வோடுஇள மான்கைஇன்றி
இருந்தபி ரான்இது என்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : தாமரை மலர்மேல் வீற்றிருந்து ஆறு வகையான <உட்பகைகளை வென்ற நான்முகனும், நாகத்தைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாகிப் புகலி நகரில் நிலவும் புண்ணியனே! நினக்குரிய மானும் மழுவும் தரிக்காமல் ஒருகாலத்தில் காட்சியுற்ற பாங்கில், மிழலையில் மீண்டும் அக்காட்சியைப் புரிந்தனை. இது என் கொல்! சொல்லுக!

43. பக்தர்க ணம்பணிந்து ஏத்தவாய்த்த
பான்மையது அன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றுஅலர் தூற்றஅந்தண்
புகலிநிலாவிய புண்ணியனே !
எத்தவத் தோர்க்கும்இ லக்காய்நின்ற
எம்பெருமான் இதுஎன்கொல் சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.

தெளிவுரை : பக்தர்கள் பணிந்து போற்றும் தன்மையிலும் சமணரும் புத்தரும் தூற்றவும் புகலி நகரில் நிலவும் புண்ணியனே ! பல வகையான தவநெறியில் உள்ளவர்களுக்கும் அவர்கள் அனைவரும் நோக்கி அடைய வேண்டிய இலக்காகி விளங்கும் எம்பெருமானே ! ஞானிகள் வாழும் வீழிமிழலையில் விரும்பி அமர்ந்தனை ! இது என்கொல் ! சொல்லாய் !

44. விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
வித்தகம் என்கொல் இதுஎன்றுசொல்லிப்
புண்ணிய னைப்புகலிந்நிலாவு
பூங்கொடி யோடுஇருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்கள்இந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.

தெளிவுரை : புகலிப் பதியில் நிலவும் புண்ணியன், உமாதேவியுடன் இருப்பவன்; திருவீழிமிழலையில் உள்ள திருக்கோயிலில் காட்சி தந்தருளினன்; இது என்ன விந்தை என்று வினவி, நண்ணிய புகழும் நலந்தரும் கேள்வி ஞானமும், நான்கு வேதங்களும் கைவரப் பெற்ற ஞானசம்பந்தர் சொன்ன இவ்வரிய இசைப் பாடல்களைப் பாடுபவர்கள் இந்த உலகத்தில் மட்டும் அன்றி தேவலோகத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

5. கீழைத் திருக்காட்டுப் பள்ளி (அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

45. செய்யரு கேபுனல் பாயஓங்கிச்
செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழைஈன்று
கானல்எல் லாம்கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேஅழல் வாயவைவாய்ப்
பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேஉடை யானைஉள்கி
விண்டவர் ஏறுவர் மேலுலகே.

தெளிவுரை : வயலருகே தண்ணீர் பாயவும், கயல்கள் துள்ளி ஆடவும், மருத நிலத்தின் மலர்கள் தேன் சொரியவும் கைக்கு எட்டும் அளவில் வாழைக் கனிகள் இருக்கவும், சோலையின் மணம் கமழும் திருக்காட்டுப் பள்ளி திகழ்கின்றது. ஐந்தலை நாகத்தைப் (ஆதிசேஷன்) படுக்கையாகக் கொண்ட திருமால், உமாதேவியைப் பாகமாக உடைய ஈசனைத் தியானித்து நெகிழ்ந்து இன்புற்றார். இதனைக் கருதுவார்க்கு <உயர்ந்த உலகம் கிட்டும்.

46. திரைகள்எல் லாமல ரும்சுமந்து
செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகள்எல் லாம்அணி சேர்ந்துஉரிஞ்சிக்
காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகள்எல் லாம்உணர்வு எய்திநல்ல
உத்தம ராய்உயர்ந் தார்உலகில்
அரவம்எல் லாம்அரை ஆர்த்தசெல்வர்க்கு
ஆட்செய அல்லல் அறுக்கலாமே.

தெளிவுரை : காவிரி ஆற்றின் நீர் அலைகள் எல்லா விதமான மலர்களையும் ஏற்றுச் சுமந்து தன்பால் தேக்கி; செழுமையான மணிகளும் முத்துக்களும் பொன்மணிகளும் வாரி வாய்க்கால்களின் வழியாக இருகரைகளும் மோதும்படி எடுத்துச் செல்கின்றன. அத்தகைய சிறப்புடைய ஊர் காட்டுப்பள்ளி. ஆங்கு உரை செய்யப்படுகின்ற பொருள்களை நன்றாக உணர்ந்து அவ்வழியே ஒழுகி உத்தமர்களாய் செல்வனாகிய அந்த ஈசனுக்கு அடியவர் ஆக, அல்லல் தீரும்.

47. தோலுடை யான்வண்ணப் போர்வையினான்
சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடை யான்இமை யோர்பெருமான்
நுண்ணறி வால்வழி பாடுசெய்யும்
காலுடை யான்கரிது ஆயகண்டன்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
மேலுடை யான்இமை யாதமுக்கண்
மின்னிடை யாளொடும் வேண்டினானே.

தெளிவுரை : புலித்தோலை உ<டையாகக் கொண்டவன்; யானையின் தோலை உரித்து அழகிய போர்வையாக ஆக்கிக் கொண்டவன்; ஒளிமயமான திருவெண்ணீறு பூசியவன்; விளங்கும் முப்புரி நூலைத் தரித்த மார்பினன்; தேவர்களின் தலைவன்; மெய்ஞ்ஞானத்தால் வழிபாடு செய்யத்தக்க திருப்பாதத்தை உடையவன்; கருமையான கண்டத்தை உடையவன். அத்தகைய ஈசன் விரும்பிக் காட்டுப்பள்ளியில் பொருந்தி இருப்பவன். அப்பெருமான் உமாதேவியாரை விருப்பத்தோடு தனது பாகத்தில் ஏற்றுக் கொண்டான்.

48. சலசல சந்துஅகி லோடும்உந்திச்
சந்தன மேகரை சார்த்திஎங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்துமண்டிப்
பாய்ந்துஇழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றுஅதி ரும்கழலான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்கள் ஏத்தநின்ற
சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.

தெளிவுரை : சலசல என்னும் ஒலியுடன் சந்தனமும் அகிலும் உந்திச் சென்றாலும் சந்தனத்தைக் கரையில் சேர்த்து எல்லா இடங்களிலும் வாய்க்கால்களாகப் பரவும் காவிரியின் பக்கம் கலகல என்று ஒலி தரும் கழலை யுடையவனாகிய ஈசன் விழையும் காட்டுப் பள்ளியைப் போற்றும் திருத்தொண்டர்கள் மகிழ்ந்து ஏத்தும் சிவன் கழலைப் போற்றுவோம்.

49. தளையவிழ் தண்ணிற நீலநெய்தல்
தாமரை செங்கழு நீரும்எல்லாம்
களையவி ழும்குழ லார்கடியக்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளித்
துளைபயி லும்குழலி யாழ்முரலத்
துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்புஅரை ஆர்த்தசெல்வர்க்கு
ஆட்செய அல்லல் அறுக்கலாமே.

தெளிவுரை : நீல நிறமுடைய நெய்தல் பூக்களும் தாமரை மலர்களும் பொய்கை நீரும், கூந்தலையுடைய மகளிரால் மணம் பரவும் தன்மையுடையவனாய் விரும்பப்படும் பெருமை பெற்றது காட்டுப்பள்ளி. அத்திருத்தலத்தில் குழலோசையும் யாழ் ஒலியும் இணைந்து சேர, அதனால் ஆட்கொள்ளப் பெற்ற பாம்பினை இடையில் பொருந்தச் செய்த செல்வனாகிய ஈசனுக்கு அடியவராக இருந்து திருத்தொண்டு செய்தால் துன்பம் இல்லை.

50. முடிகையி னால்தொடும் மோட்டுழவர்
முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையினால்எறி காட்டுப்பள்ளி
காதல்செய் தான்கரிது ஆயகண்டன்
பொடியணி மேனியி னானைஉள்கிப்
போதொடு நீர்சுமந்து ஏத்திமுன்னின்று
அடிகையி னால்தொழ வல்லதொண்டர்
அருவினை யைத்துரந்து ஆட்செய்வாரே.

தெளிவுரை : நாற்று முடிகளை வேர் அறுதல் கொள்ளாமல் பக்குவமாகக் கட்டியும், கரும்பின் கட்டிகளைக் கைகளால் வலிமையுடன் உடைத்தும் விளங்கும் உழவர்கள் நிறைந்த காட்டுப்பள்ளியை விழைந்து மேவும் ஈசன் கருமையான கண்டத்தை (கழுத்து) உடையவன். திருவெண்ணீறு தரித்த திருமேனி உடையவன். அவனை நினைத்து, மலரால் அருச்சித்து, நன்னீரால் பூசித்து, நல்லுரையால் ஏத்தி முன்னிருந்து திருவடியை வணங்கும் திருத்தொண்டர்கள் கண்களுக்குப் புலப்படாத வினையைக் களைந்து அடியவர் ஆவார்கள்.

51. பிறைஉடை யான்பெரி யோர்கள் பெம்மான்
பெய்கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறைஉடை யான்மழு வாள்உடையான்
வார்தரு மால்கடல் நஞ்சம்உண்ட
கறைஉடை யான்கனல்  ஆடுகண்ணால்
காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறைஉடை யான்குறள் பூதச் செல்வன்
குரைகழ லேகைகள் கூப்பினோமே.

தெளிவுரை : பிறை மதியுடையவன்; பெரியோர்களுடைய தலைவன்; வேதங்களால் போற்றப் படுபவன்; மழுவுடன் வாளையும் ஆயுதமாக உடையவன்; ஓங்கி வளர்ந்து நெடியவனான திருமால் உறையும் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் கண்டம் கருமையுற்றவன்; நெற்றியில் விளங்கும் நெருப்புக் கண்ணால் மன்மதனை எரித்தவன்; காட்டுப்பள்ளியில் எக்காலும் இன்றியமையாப் பொருளாக இருப்பவன்; குறள் தன்மை கொண்ட பூதங்களின் தலைவன்; அவனுடைய திருவடியைச் கைகளால் கூப்பித் தொழுதனம்.

52. செற்றவர் தம்அரணம் அவற்றைச்
செவ்வழல் வாய்எரி யூட்டிநின்றும்
கற்றவர் தாம்தொழுது ஏத்தநின்றான்
காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம்உணர்வு எய்திநல்ல
உம்பர்உள் ளார்தொழுது ஏத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானை யல்லால்
பேசுவது மற்றொர் பேச்சிலோமே.

தெளிவுரை : பகைவர் தம் அரணாக இருந்து முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கி எக்காலத்திலும் நிலை பெற்றவனாகி, கற்றவர்கள் தொழுது போற்ற இருப்பவனாகிய ஈசன் விழைவது காட்டுப்பள்ளி. அதனை அடைந்தவர் இப்பிறவி எடுத்ததன் சிறப்பினை அறிந்தவராய், தேவர்களால் வணங்கப் பெறும் பெருமானை யல்லாது வேறு பேச்சுப் பேசுவது இல்லை.

53. ஒண்துவர் ஆர்துகில் ஆடைமெய்போர்த்து
உச்சிகொ ளாமை<உண் டேஉரைக்கும்
குண்டர்க ளோடுஅரைக் கூறைஇல்லார்
கூறுவ தாம்குணம் அல்லகண்டீர்
அண்டம றையவன் மாலும்காணா
ஆதியி னான்உறை காட்டுப்பள்ளி
வண்டுஅம ரும்மலர்க் கொன்றைமாலை
வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.

தெளிவுரை : காவி நிறத் துணியை ஆடையாக உடம்பில் போர்த்து உயர்வாகக் கொள்ளப்படாத உணவை உட்கொண்டு உரைப்பவர்களுடன் சேர்ந்து அரையில் ஆடை அற்றோர் கூறும் மொழிகள் நன்மையாகாது. மறைவனாகிய பிரமனும் திருமாலும் காணமுடியாத மூலப் பொருளாகக் காட்டுப்பள்ளியில் கொன்றை மாலையும் நீண்டு வளரும் சடைமுடியும் கொண்டு உறையும் அப் பெருமானுடைய திருவடியை வாழ்த்துவோமாக.

54. பொன்னியல் தாமரை நீலநெய்தல்
போதுக ளால்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாம்குடை காட்டுப்பள்ளிக்
காதல னைக்கடல் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யால்துதைந்து
சொல்லிய ஞானசம் பந்தனல்ல
தன்னிசை யால்சொன்ன மாலைபத்தும்
தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

தெளிவுரை : சிவந்த தாமரை மலர்களும் நீலநிற நெய்தல் மலர்களும் இணைந்து சிறப்பினை எய்தும் குளத்தில் கன்னிப் பெண்கள் குடைந்து நீராடும் காட்டுப் பள்ளியை விரும்பியவனை  ஈசனை ஞான சம்பந்தர் பெருமான் இசையுடன் சொன்ன இத்திருப்பதிகத்தை இசைந்து ஏற்றுப் பாடுபவர்கள் புகழ் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

6. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

55. அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கயல் ஆர்புனல் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்குஎரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : வேதமும் அதன் அங்கங்களும் திருவாயால் ஓதவும், மறைவல்ல அந்தணர்கள் திருவடியைத் தொழுது போற்றவும், நிலவின் ஒளி தவழும் மாட வீதியுடைய திருமருகலில் நிலவும் அழகனே ! கயல் மல்கும் நீர்வளம் செல்வத்தைப் பெருக்க, சிறப்புகளைக் கொண்ட திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் கணபதி ஈச்சரத்தில் இரவில் திருக்கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடும் காட்சியை விரும்பித் தருவது எதன் பொருட்டு ! சொல்லாய் !

56. நெய்தவழ் மூவெரி காவல்ஓம்பு
நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த
மைதவழ் மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்
கணபிதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : நெய் சொரிந்து மூன்று வகையான வேள்வித் தீயைப் பேணி வளர்க்கும் அந்தணர்கள் ஏத்த, மேகம் தவழும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த திருமருகலில் வீற்றிருக்கும் அழகனே ! அவ்வேள்வி செய்தலைத் தவமாகப் போற்றும் நான்மறையாளர்கள் பாராட்டும் செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் பெரிய தீயை ஏந்தித் திருநடனம் புரிகின்ற கணபதி ஈச்சரத்தின்பால் விருப்பம் கொண்டு அக்காட்சியைப் நல்கினை ! அஃது எதன் பொருட்டு ? சொல்லாய்.

57. தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர்
தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழல் ஆர்க்கஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே

தெளிவுரை : மான் தோலும் பூணூலும் மார்பில் பொலிய, மறையவர்கள் எழுப்பும் வேள்வித் தீயின் புகை மாட வீதிகளில் பரவுமாறு உள்ள திருமருகலில் வீற்றிருக்கும் அழகனே ! சேல்கள் நிறைந்த நீர் வளம் மிக்க வயல்களும் சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில், திருவடியில் கழலொலி ஆர்க்க புரியும் திருநடனத்தை கணபதி ஈச்சரத்தில் விரும்பி நல்கினை ! இஃது எதன் பொருட்டு ? சொல்லாய் !

58. நாமரு கேள்வியர் வேள்விஒவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழில் சேலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்
கண்பதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : நடுநிலை தவறாததும் பொலிவு மிக்கதும் ஆன கேள்வி ஞானத்தை உடையவர்களும், ஓய்தல் இன்றி வேள்வி புரியும் நான்மறை வல்ல அந்தணர்களும் வழிபாடு செய்ய, பெருமை இழையும் மணிக்கோயில் உள்ள திருமருகலில் நிலவும் அழகனே ! நல்ல மணம் தரும் பூம்பொழில் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் விளங்கும் அழகிய சிறப்பினை மகிழ்ந்து இரவில் நடனம் புரிகின்றனை ! இக்காட்சியை கணபதி ஈச்சரத்தில் விரும்பிக் கொண்டனை ! இஃது எதன் பொருட்டு ? சொல்லாய்.

59. பாடல் முழவும் விழவும் ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்தடவு
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேஇடமாக ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : எல்லாக் காலங்களிலும் முழவின் ஒலியுடன் கூடிய இசைப்பாடலும் திருவிழாக்களும் நடைபெற, மறையவர்கள் போற்ற, வானத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களை யுடைய திருமருகலில் நிலவும் அழகனே ! வளைந்த நெருக்கமான இலைகளையுடைய பெருமை மிக்க மலர்ச் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் இடுகாட்டினை இடமாகக் கொண்டு ஆடும் கணபதி ஈச்சரத்தினை விரும்பியது யாது பற்றி சொல்லாய் !

60. புனைஅழல் ஓம்புகை அந்தணாளர்
பொன்னடி நாள்தொறும் போற்றிஇசைப்ப
மனைகெழு மாடம் மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயல் சேலைசூழ்ந்த
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கனைவளர் கூர்எரி ஏந்தி ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : சிறப்பிக்கப்படும் வேள்வித் தீயைத் தமது கையால் உபசரிக்கும் அந்தணர்கள் நின் திருவடியைத் தினந்தோறும் போற்றி வேத கீதத்தால் வணங்கித் திகழ, அத்தகையோரின் மாட மாளிகைகள் நிறைந்த திருமருகலில் நிலவும் அழகனே ! அரும்புகள் நிறைந்த சோலைகளும் தண் வயல்களும் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில், திரண்டு நெடிது ஓங்கி எரியும் நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தி ஆடும் கணபதி ஈச்சரத்தினை விரும்பியது எதன் பொருட்டு ? சொல்லாய் !

61. பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்
பொன்நெடும் தோள்வரை யால்அடர்ந்து
மாண்தங்கு நூல்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : அணிகலன்கள் திகழும் மார்பினையுடைய இலங்கை வேந்தனின் ஒளி திகழும் நெடிய தோளை, அவன் எடுத்த மலையினாலேயே தண்டனையுறச் செய்து, மாட்சிமையுடைய முப்புரிநூலைத் தரித்த மறையவர்கள் வணங்க, மருகலில் நிலவும் அழகனே ! உயர்ந்து நிற்கும் பெருமையான மலர்ச் சோலை சூழ்ந்த சிறப்பு மிகுந்த செங்காட்டங்குடியில் அழகிய தோள்களை வீசி, இரவில் ஆடும் கணபதி ஈச்சரத்தின் காட்சியினைப் புலப்படுத்தினீர், எதன் பொருட்டு ? சொல்லாய் !

62. அந்தமும் ஆதியும் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவிஏத்தும்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம்அ கில்புகை யேகமழும்
கணபதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : திருவடியைத் திருமாலும் திருமுடியை நான்முகனும் காணவேண்டும் என்று முயற்சி செய்தும் அறிவதற்கு அரியவனாய் மந்திரமாக விளங்கும் வேதங்களை ஓதும் பெருமக்கள் திகழும் மருகலில் நிலவும் அழகனே ! இனிமை மிக்கவர்கள் பரவிப் போற்றும் சிறப்பினைக் கொண்ட செங்காட்டங் குடியில் அகிற் புகையின் மணங்கமழும் கணபதி ஈச்சரம் என்னும் திருக்கோயின்கண் விருப்பமுற்று காட்சி நல்குதல் எதன் பொருட்டு ? சொல்லாய் !

63. இலைமரு தேஅழ காகநாளும்
இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலைஅமண் தேரரை நீங்கிநின்று
நீதர்அல் லார்தெழு மாமருகல்
மலைமகள் தோள்புணர் வாய்அருளாய்
மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோல்உடுத்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.

தெளிவுரை : வெற்றிலை பாக்குடன் சுக்கும் வாயில் மென்றும் மருதாணி இலையின் சாயம் பூசியும் நிலவும் சமணர் மற்றும் சாக்கியரை விலகி, மற்றும் கீழ்மை அற்றவர்கள் போற்றும் சிறப்பின் மிக்க மருகலில் உமாதேவியுடன் விளங்கும் ஈசனே, அருள்புரிவாய். குற்றமில்லாத செங்காட்டங்குடியில் மான்தோலை உடுத்து இரவில் நடனம் ஆடும் கணபதி ஈச்சரத்தில் விரும்பியது எதன்பொருட்டு?

64. நாலும் குலைக்கமுகு ஓங்குகாழி
ஞானசம் பந்த னலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடம் ஓங்கு
மருகலில் மற்றுஅதன் மேல்மொழிந்த
சேலும் கயலும் திளைத்த கண்ணார்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழல் ஏத்துபாடல்
சொல்லவல் லார்வினை இல்லையாமே.

தெளிவுரை : தொங்கி வளரும் குலைகளையுடைய கமுக மரங்கள் மிகுந்த சீகாழியின் ஞானசம்பந்தப் பெருமான், நலமும் பெருமை பெற்ற மாடமும் ஓங்கித் திகழும் மருகல் என்னும் கயலும் திளைத்த கண்மாய்கள் (மதகுகள் பொருந்திய கால்வாய்கள்) சிறப்புடன் விளங்கும் செங்காட்டங்குடியிலும் சூலப்படையுடன் விளங்கும் ஈசனின் திருவடியைப் போற்றி மொழிந்த பாடலைச் சொல்பவர்களுக்கு வினை இல்லை.

திருச்சிற்றம்பலம்

7. திருநள்ளாறும் திருவாலவாயும்(அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

65. பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடகம்ஆடு நள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடும்தொழுது ஏத்திவாழ்த்த
ஆடக மாடம் நெருங்குகூடல்
ஆல வாயின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : பாடகம் என்று சொல்லப் படுகின்ற அணியை மென்மையான திருப்பாதத்தில் அணிகலனாகக் கொண்ட உமா தேவியுடன், பிணங்கள் நிறைந்த காட்டினை இடமாகக் கொண்டு நடனம் ஆடும் நள்ளாறுடைய பெருமானே ! முன் கையில் சூடகம் என்று சொல்லப்படும் வளையலை யணிந்த மகளிர் தத்தமது கணவன்மார்களோடும் தொழுது போற்றி வாழ்த்த பொன் மாளிகைகள் நெருக்கமாக உடைய கூடல் நகரில் ஆலவாய் எனப்படும் கோயிலின்கண் அமர்ந்த பாங்கு என்கொல் ! சொல்லாய் !

66. திங்கள்அம் போதும் செழும்புனலும்
செஞ்சடை மாட்டுஅயல் வைத்துஉகந்து
நங்கண் மகிழுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பொங்குஇள மென்முலை யார்களோடும்
புனமயில் ஆட நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : திங்களையும் அழகிய கொன்றை மலரையும் வளமையான கங்கையையும் சிவந்த தன் சடைமுடியில் பொருந்துமாறு தனித்தனியே வைத்து மகிழ்ந்து நம் நெஞ்சத்திலும் இருந்து மகிழும் நள்ளாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! இளம் மகளிருடன் மயில்கள் ஆடும்போது நிலவு எழுந்து ஒளிபரப்பச் சத்சங்கத்தின் இருப்பிடமாக மண்டபங்களை யுடைய மாளிகைகள் நிறைந்த கூடலின்கண் அமர்ந்த விதம் என்கொல் ? சொல்லாய் !

67. தண்ணறு மத்தமும் கூவிளமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : குளிர்ச்சியான ஊமத்தம் பூவும் வில்வ இதழும் வெண்மையான தலைகளை மாலைகளாகவும் தாங்கி, யாரும் அடைதற்கு அரியவனாய் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே, புண்ணியம் செய்தவர்களும், பெருந்தவம் செய்தவர்களும் சென்று போற்றச் சிறப்பாக விளங்கும் பெருமானின் பாடலைத் தொடுக்கும் ஆலவாயின்கண் அமர்ந்திருக்கும் அழகு என்கொல் ? சொல்லாய் !

68. பூவினில் வாசம் புனலில் பொற்புப்
புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடநள் ளாறுடைய
நம்பெரு மன்இது என்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
தரர்கணத் தோடும் சிறந்துபொங்கி
ஆவினில் ஐந்துஉகந்து ஆட்டும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : பூவினில் நறுமணமும், நீரின் பொலிவும், சந்தனத்தின் மணமும், நாவினால் பாடுதலும் ஆகிய ஐம்பொறிகளுக்கும் சார்வாய் நள்ளாற்றில் வீற்று இருக்கும் பெருமானே ! தேவர், அசுரர், சித்தர், வித்யாதரர் முதலான கணத்தினரோடும் சிறந்து மேலோங்கி, பசுவின் வாயிலாகப் பெறப்படும் ஐந்து வகையான பொருள்களையும் உகந்து பூசனையாகக் கொள்ளும் மதுரையின் திருக்கோயிலில் அமர்ந்தவாறு என் கொல் ? சொல்லாய் !

69. செம்பொன்செய் மாலையும் வாசிகையும்
திருந்துபு கையும்அ வியும்பாட்டும்
நம்பும்பெரு மைநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய் !
உம்பரும் நாகர்உ லகம்தானும்
ஒலிகடல் சூழ்ந்த உலகத்தோரும்
அம்புத நால்கால் நீடும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : பொன் மாலையுடைய அலங்காரமும், வாசிகை என்னும் திருவொலியும், அடர்ந்து பரவி மணக்கும் அகிற் புகையும், நைவேத்தியமும் இசைப் பாட்டும், அரனை வழிபடுபவர்களுக்கு அருள் நிலவும் என்னும் வாய்மையில் பக்தி சிரத்தையுடன் வழிபடும் நம்பிக்கைக்குரிய சிறப்பும் <உடைய நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! தேவருலகத்தாரும் நாகர் உலகத்தாரும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூவுலகத்தாரும் ஏத்த மேகங்கள் போன்று குளிர்ந்து நீண்ட நான்மாடக் கூடலில் அமர்ந்தவாறு என் கொல் ? சொல்லாய் !

70. பாகமும் தேவியை வைத்துக்கொண்டு
பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம்உ டையவர் சேரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும் பிளந்த வாயையும் உடைய நாகமும் அணிகலனாகப் பூண்டு, நள்ளாற்றில் வீற்று இருக்கும் பெருமானே ! புண்ணியர் நின்னை மனத்தில் இருத்திப் போகத்தில் சேரும் பண்பினராய்த் திருமேனி உ<டையவர்கள் விளங்கும் கூடலின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !

71. கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : கோவணத்தை ஆடையாகக் கொண்டும், திருநீற்றை மேனியில் பூசியும் வளைந்த மழு ஆயுதத்தை ஏந்தியும், செம்மை திகழும் சடைமுடி கொண்டு பலவண்ணங்களை உடைய திருப்பாடல்களை நாவினால் இசைக்கத் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! பூப்போன்ற மென்மையான மேனியை உடைய இளம் மகளிர் பொன்னும் மணியும் திரளாகச் சேர்த்து கடை வீதியில் உலவும் கூடலின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !

72. இலங்கை இராவணன் வெற்பெடுக்க
எழில்விரல் ஊன்றி இசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
புந்தியி லும்நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தாவாறே.

தெளிவுரை : இலங்கை வேந்தனாகிய இராவணன், திகழும் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்கும் போது உயர்ச்சியை நல்கும் அழகிய விரலை அம்மலையின்மீது ஊன்றி, மற்றும் அவ் வரக்கனுடைய இசையை விரும்பி அவனுக்கு நலன்களைக் கொள்ளுமாறு அருள் புரிந்து நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! ஐந்து இந்திரிய வயம் மயங்கியும் அந்தந்த புலன்வழிச் சேராமல் பாதுகாத்தும் மனத்தால் நின்னை எக் காலத்திலும் சிந்தித்து மகிழும் பெருமையுற்ற நல்லோர்கள் அமரும் ஆலவாயின்கண் அமர்ந்தவாறு என்கொல்? சொல்லாய்!

73. பணியுடை மாலும் மலரினோனும்
பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை
மாமுர சின்ஒலி என்றும்ஓவாது
அணிகிளர் வேந்தர் புகுதும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : படம் விரித்துள்ள ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமால் பன்றி வடிவத்தில் பூமியைக் குடைந்து சென்றும், மலரின்மேல் உறையும் நான்முகன் அன்னப் பறவை வடிவத்தில் ஆகாயத்தில் பறந்து சென்றும் அடைய முடியாதவனாய்த் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! தேரில் பொருத்தப் பெற்றுள்ள மணிகளின் ஒலியும் புடைசூழும் படைகள் முழங்கும் சங்கொலியும், முரசொலியும் எக்காலத்திலும் ஓய்வின்றி அணிஅணியகாகப் பல நாட்டு வேந்தர்கள் சாரும் ஆலவாயின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !

74. தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
இரும்பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

தெளிவுரை : தாம் அமர்வதற்காக ஓலையினால் செய்த தடுக்கையுடைய சமணர்களும் மற்றும் சாக்கிய மதத்தினரும், மரபில் திரிந்த தவத்தினராய் அதிர்ந்து இருக்கத் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! திருவிழாக்கள் நடத்தியும் காத்தல் செய்ய வேண்டும் என்னும் குறிக்கோளில் இன்பம் பெருக எல்லாத் திசைகளிலும் பெருமையுறும் ஆலவாயின்கண் அமர்ந்தவாறு என்கொல் ? சொல்லாய் !

75. அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவர் ஏத்த இருப்பர்தாமே.

தெளிவுரை : அன்புடையவனாகிய அரனைக் கூடல் ஆலவாய் மேவியது என்கொல் என்று திருநள்ளாறு என்னும் பதியில் வீற்றிருக்கும் தலைவனை. விருப்பத்துடன் போற்றி எல்லோருடைய நலத்தையும் விளங்கச் செய்யும், பொன்னால் அழகு படுத்தப்படும் மாட மாளிகையுடைய சீகாழியின் அந்தணர் பெருந்தமையாம் ஞானசம்பந்தப்பெருமான் மொழிந்த, இன்பம் பெருக்கும் பாடல்கள் பத்தினையும் ஏற்றுப் பாடுபவர்கள், தேவர்களெல்லாம் போற்றுமாறு திகழ்வர்.

திருச்சிற்றம்பலம்

8. திருஆவூர்ப் பசுபதீச்சரம் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

76. புண்ணியர் பூதியர் பூதநாதர்
புடைபடு வார்தம் மனத்தார்திங்கள்
கண்ணியர் என்றென்று காதலாளர்
கைதொழுது ஏத்த இருந்தஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி
விரைகமழ் சோலை சுலாவிஎங்கும்
பண்ணியல் பாடல்அ றாதஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : புண்ணியமூர்த்தி, செல்வம் உடையவர், பூதகணங்களின் தலைவர், அணுகிப் பக்கம் சார்பவரின் மனத்தில் பொருந்துபவர், திங்களைச் சூடியவர் எனப் பலவாறு அன்பர்கள் கை தொழுது ஏத்தும் ஊர், உயர்ந்த மாளிகைகளும் மாட வீதிகளும் மற்றும் மணம் கமழ் சோலைகள் பரந்து எல்லா இடங்களிலும் பண்ணிசை மேவும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் ஆவூர். அத்தகைய ஊரில் விளங்கும் பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்கவேண்டும்.

77. முத்தியர் மூப்பிலர் ஆப்பின்உள்ளார்
முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்தியர் என்றென்று அடியர்ஏத்தும்
ஐயன்அ ணங்கொடு இருந்தஊராம்
தொத்துஇயலும் பொழில் மாடுவண்டு
துதைந்து எங்கும் தூமதுப் பாயக்கோயில்
பத்திமைப் பாடல்அ றாதஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : முத்தி தருபவர், முதுமை இல்லாதவர், மூன்று கண்களை உடையவர், தக்கன் புரிந்த தகாத வேள்வியை அழிக்கும் யானை போன்றவர் எனப் பலவாறு அடியவர்கள் போற்றும் தலைவன் உமாதேவியுடன் இலங்கும் இடம், பூங்கொத்துக்கள் விளங்கும் சோலைகளின் பக்கம் வண்டு படிந்து நல்ல தேனைச் சேர்க்க, அது பெருக்கெடுத்துப் பாயும் கோயில், பக்திப் பாடல்களை ஓயாது இசைக்கும் ஆவூரின்கண் மேவும் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

78. பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்
போம்வழி வந்துஇழிவு ஏற்றம்ஆனார்
இங்குஉயர் ஞானத்தர் வானோர்ஏத்தும்
இறையவர் என்றும்இ ருந்துஊராம்
தெங்குஉயர் சோலைசேர் ஆலைசாலி
திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : பொங்கி வரும் புனலாகிய கங்கையைத் திருமுடியில் வைத்தார், ஈசன், அவரை, மானிடராய்த் தோன்றி பிறவித் தளையிலிருந்து விடுபட்டு ஏற்றம் பெற்றவர்களும், உயர்ந்த ஞானிகளும், வானோரும் ஏத்துகின்றனர். யாண்டும் விளங்கும் தென்னை மரங்களும், கரும்பும் செந்நெலும் திளைக்க வயல்களும், நீர்நிலை பெருக்கும் பொய்கை(குளம்)களும் சேரத் தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் விரும்பும்படி அவ்வூர் உள்ளது. அத்தகைய ஊர் ஆவூர். அவ்வூரின் கண் விளங்கும் பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

79. தேவியோர் கூறினர் ஏறதுஏறும்
செலவினர் நல்குரவு என்னைநீக்கும்
ஆவியர் அந்தணர் அல்லல்தீர்க்கும்
அப்பனார் அங்கே அமர்ந்த ஊராம்
பூவியலும் பொழில் வாசம்வீசப்
புரிகுழ லார்சுவடு ஒற்றிமுற்றப்
பாவியில் பாடல்அ றாதஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாக வைத்து இருப்பவர்; இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து அடியவர்பால் சென்று காட்சி தருபவர்; வறுமை என்னைச் சாராதபடி காப்பவர்; உயிரைப் போன்றவர்; அந்தணர்; துயரைத் தீர்க்கும் தந்தையானவர். அப் பெருமான் அமர்ந்த ஊர் என்பது சோலைகள் பூவின் மணத்தைப் பரப்பவும் மகளிர் இசையுடன் பாடல்கள் ஒலித்துக் கொண்டு விளங்கும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அங்கு எழுந்தருளியுள்ள ஈசனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

80. இந்துஅணை யும்சடை யார்விடையார்
இப்பறிப்பு என்னை அறுக்கவல்லார்
வந்துஅணைந்து இன்னிசை பாடுவார்பால்
மன்னினர் மன்னி இருந்தஊராம்
கொந்துஅணை யும்குழ லார்விழவில்
கூட்டம் இடைஇடை சேரும்வீதிப்
பந்தணையும் விரலார் தம்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : இளஞ் சந்திரனைச் செஞ்சடையில் அணிந்தவர். இடபத்தை வாகனமாக உடையவர், பிறவி என்னும் தளையிலிருந்து அறுத்து விடுவிப்பவர், திருக்கோயிலை நாடி வந்து இசையுடன் பாடும் தொண்டரிடம் பதிந்து பொருந்தி விளங்கும் ஊர் எனப்படுவது விழாக்காலங்களில் பூங்கொத்துக்களைக் கூந்தலில் அணிந்தும் கூட்டம் கூட்டமாகக் சேரும் மகளிர்கள் கொண்ட வீதிகளையுடைய ஆவூர் ஆகும். மேலும் அத்தகைய மகளிர் சுறுசுறுப்பான பந்தாட்டத்தை விரும்புவார்கள். அங்கு எழுந்தருளியுள்ள பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

81. குற்றம் அறுத்தார் குணத்தின்உள்ளார்
கும்பிடு வார்தமக்கு அன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
உறைபதி யாகும் செறிகொள்மாடம்
சுற்றிய வாசலின் மாதர் விழாச்
சொற்கவி பாடநி தானநல்கப்
பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : பாவச் செயல்களை நீக்கியவர்தம் உள்ளத்தில் உறைபவர்; தம்மை வணங்கும் அடியவர்களுக்கு விரும்பும் யாவையும் தருபவர்; இடபவாகனத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; இத்தகைய சிறப்புடைய பெருமான் உறைகின்ற இடம், நெருங்கிய மாடங்களை யுடைய வாயிலின் முன் திருவிழாக் காலங்களில் பெண்கள் மொழியலங்காரம் மிக்க இசைப் பாடல்களைப் பாடவும் அவற்றின் பரிசாகப் பொன்னும் மணியும் வழங்கும் கரங்களையுடையவர்கள் வாழும் ஆவூர் ஆகும். அத்தகைய வளம்மிக்க ஊரின்கண் எழுந்துள்ளது பசுபதீச்சரம். அதனை நாவானது பாடித்துதிக்க வேண்டும்.

82. நீறுடை யார்நெடு மால்வணங்கு
நிமிர்சடை யார்நினை வார்தம்உள்ளம்
கூறுடை யார்உடை கோவணத்தார்
குவலயம் ஏத்தஇ ருந்தஊராம்
தாறுடை வாழையில் கூழைமந்தி
தகுகனி யுண்டுமின் டிட்டுஇனத்தைப்
பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை :  திருவெண்ணீற்று மேனியர்; உலகினை அளந்தவரான திருமாலால் வணங்கப் பெறுபவர்; தன்னை நினைத்து வணங்கும் அடியவர்தம் உள்ளத்தில் அங்கமாக வீற்றிருப்பவர்; கோவண ஆடையை உடையாகக் கொண்டவர். அத்தகைய பெருமான் உலகமெல்லாம் போற்றுமாறு விளங்கும் ஊரானது, மந்திகள் வாழைக் கனிகளை உண்டு மகிழ்ந்து இனத்தொடு மேவும் ஊர் ஆவூர். அவ்வூரின் கண் ஈசன் விளங்கும் பசுபதீச்சரத்தை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

83. வெண்தலை மாலை விரவிப்பூண்ட
மெய்யுடை யார்விறல் ஆர்அரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த
மைந்தர்இ டம்வளம் ஓங்கிஎங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
கதியருள் என்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : வெண்மையான தலையும், மாலையும் கலந்து அணிந்த திருமேனியுடையவர்; வலிமை பொருந்திய அரக்கனின் தலையைத் துன்புறுமாறு செய்த அழகர். அவருடைய இடம் வளம் பெருகி, அவரைக் கருத்தில் பதித்து நற்கதி வேண்டும் என்று கைகூப்பித் தொழும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

84. மாலும் அயனும் வணங்கிநேட
மற்றுஅவ ருக்குஎரி யாகிநீண்ட
சீலம் அறிவரி தாகிநின்ற
செம்மையி னாரவர் சேரும்ஊராம்
கோல விழாவின் அரங்கதுஏறிக்
கொடிஇடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந்து ஏத்தும்ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் வணங்கித் தேடும் போது அவர்களுக்குப் புலப்படாமல் பின்னர் நீண்ட சோதி வடிவாய்த் தோன்றிய சீலம் மிக்கவர் சேரும் ஊரானது, விழாக் காலங்களில் பெண்கள் தம் துணைவருடன் சேர்ந்து இனிமையாக ஏத்தும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

85. பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
பேதைய ராம்சமண் சாக்கியர்கள்
தன்இய லும்உரை கொள்ளகில்லாச்
சைவர் இடந்தளவு ஏறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
கனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப்
பசுபதி ஈச்சரம் பாடுநாவே.

தெளிவுரை : பின்னப்பட்ட சடையையுடைய சமணர்களும் சாக்கியர்களும் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வனவற்றைப் பொருட்படுத்தாத சைவர்களுடைய இடமாவது, முல்லை மலர்ச் சோலை செறிந்த சுனையில் மாதரும் அவர்தம் துணைவரும் மூழ்கி நீராடி சிந்தையில் பதித்துப் பக்திப் பாக்களைப் பயிலும் ஆவூர்ப் பசுபதீச்சரம் ஆகும். அதனை நாவானது பாடித் துதிக்க வேண்டும்.

86. எண்திசை யாரும்வ ணங்கிஏத்தும்
எம்பெரு மானைஎ ழில்கொள்ஆவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
பசுபதி ஈச்சரத்து ஆதிதன்மேல்
கண்டல்கண் மிண்டிய கானல்காழிக்
கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாய்இசை பாடிஆடிக்
கூடும வர்உடை யார்கள்வானே.

தெளிவுரை : எண் திசையும் விரிந்து பரவிய மக்கள் வணங்கிப் போற்றும் எம்பெருமானை எழில் மிக்க ஆவூரில், வழிவழியாய்த் தொன்மைக் காலத்திருந்தே உரிமை பூண்ட தொண்டர்கள் போற்றித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமையுற்ற பசுபதீச்சரத்தின் இறைவன் மீது தாழை மடல்கள் வளரும் சோலையுடைய சீகாழியின் கவுணியர் கோத்திரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை இனிதாய் இசையுடன் பாடியும் ஆடியும் கூடி விளங்கும் அடியவர்கள் சிறப்படைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

9. திருவேணுபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

87. வண்டார்குழல் அரிவையொடு
பிரியாவகை பாகம்
பெண்டான்மிக ஆனான்பிறைச்
சென்னிப் பெருமான்ஊர்
தண்டாமரை மலராள்உறை
தவளம்நெடு மாடம்
விண்தாங்குவ போலும்மிகு
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : வண்டுகள் பொருந்திச் சுழன்று ரீங்காரம் செய்யும் மணம் மிகுந்த கூந்தலையுடைய நங்கையாகிய உமாதேவியோடு எக்காலத்திலும் பிரிந்து இல்லாதவாறு தனது இடப் பாகத்திலும் வரித்துத் தானே பெண்ணாகியவன் பிறைச் சந்திரனை முடியில் சூடினான். அவனுடைய ஊரானது திருமகள் உறையும் வெண்மையான உயர்ந்த மாட மாளிகைகள் உள்ள வேணுபுரம் ஆகும்.

88. படைப்புந்நிலை இறுதிப்பயன்
பருமையொடு நேர்மை
கிடைப்பல்கணம் உடையான்கிறி
பூதப்படை யான்ஊர்
புடைப்பாளையின் கமுகின்னொடு
புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் புரிபவனாய், அதன் பயனாகிய முத்திப் பேற்றினை நல்குபவனாய், விளக்கமாகவும் நீதி நெறிகளைச் செம்மையாக வடிக்கும் வேதத்தை ஓதும் சிவகணங்களை உடையவனாய், பூதப் படை உடையவனாய் விளங்கும் பெருமானுடைய ஊரானது, பாக்கு மரங்களும் புன்னை மலரின் மணமும் மிகுந்து தென்றலாகிய இனிமை பொருந்திய வேணுபுரம் ஆகும்.

89. கடம்தாங்கிய கரியைஅவர்
வெருவஉரி போர்த்துப்
படம்தாங்கிய அரவக்குழைப்
பரமேட்டிதன் பழவூர்
நடம்தாங்கிய நடையார்நல
பவளத்துவர் வாய்மேல்
விடம்தாங்கிய கண்ணார்பயில்
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : மதம் பெருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அடக்கி அதன் தோலை உரித்து, அந்த யானை ஏவிய தாருகாவனத்து முனிவர்கள் அஞ்சுமாறு போர்த்து அரவக்குழை யுடையனின் பழைமையான ஊரானது, நடனக்கலையில் வல்லவர்களும், பவளம் போன்ற செந்நிற இதழ்களை உடையவர்களும், விடத்தைப் போன்று தாம் கண்களால் ஈர்த்துத் தம்வழி மயங்கி நிற்கச் செய்யும் சக்தி மிகுந்த பார்வை உடையவர்களும் நிலவும் வேணுபுரம் ஆகும்.

90. தக்கன்றன் சிரம்ஒன்றினை
அரிவித்தவன் தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம்
விண்ணோர்பெரு மான்ஊர்
பக்கம்பல மயில்ஆடிட
மேகக்முழவு அதிர
மிக்கம்மது வண்டார்பொழில்
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : தக்கன் சிரம் அறுத்து அவன் வேள்வியைத் தகர்த்த வீரபத்திரக் கடவுளுக்கு அளவற்ற வரங்கள் அருளிய தேவர்கள் தலைவனாகிய எம்பெருமானது ஊரானது, மேகங்கள் முழவொலி போன்று அதிர்ந்தும் பக்கங்களில் மயில்கள் தோகை விரித்து ஆடவும், தேனை அருந்திய வண்டுகள் சோலைகளில் பொருந்தி இருக்கவும் உள்ள வேணுபுரம் ஆகும்.

91. நானாவித உருவால் நமை
ஆள்வான்நணு காதார்
வானார்திரி புரமூன்றுஎரி
யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி
உண்பான்திகழ் மந்தி
மேனோக்கிநின்று இறங்கும்பொழில்
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : ஈசன் தன்னை நினைத்துத் தியானம் செய்யும் அடியவர்களின் விருப்பத்திற்கேற்றாவாறு உருவத்தை வெளிப்படுத்தி ஆள்பவன்; அப்பெருமானை அணுகாத அசுரர்களை அவர்களுடைய மூன்று கேட்டைகளுடன் எரியுண்ணுமாறு செய்து அழித்தவன். அவனுடைய ஊரானது வாழைக்கனியிலிருந்து பெருகும் தேனை உண்ணும் நோக்கில் குரங்குகள் அருந்திப் பின்னர் மரத்திலிருந்து பூமியை நோக்காது மேல் நோக்கியவாறு இறங்கி வரும் செம்மைப் பொழில் கொண்ட வேணுபுரம் ஆகும்.

92. மண்ணோர்களும் விண்ணோர்களும்
வெருமிம்மிக அஞ்சக்
கண்ணார்சலம் மூடிக்கடல்
ஓங்கவ்உயர்ந் தான்ஊர்
தண்ணார்நறும் கமலம்மலர்
சாயல்இள வாளை
விண்ணோர்குதி கொள்ளும்வியல்
வேணுபுரம்அதுவே.

தெளிவுரை : மண்ணுலகத்தவர்களும் விண்ணுலகத்தவர்களும் அதிர்ச்சியுற்று அஞ்சுமாறு, பிரளய காலத்தில் எல்லாம் நீரால் மூடுமாறு, கடல் பெருகி ஓங்கி இருக்கும் போதும் மேலோங்கி இருப்பவனது ஊரானது, குளிர்ந்த மணம் மிகுந்த தாமரை மலர்ச் சாயலுடைய இளம் வாளை மீன்கள் மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இயல்புடைய வேணுபுரம் ஆகும்.

93. மலையான்மகள் அஞ்சவ்வரை
எடுத்தவ்வலி யரக்கன்
தலை தோளவை நெரியச்சரண்
உகிர்வைத்தவன் தன்னூர்
கலைஆறொடு சுருதித்தொகை
கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொல்தேர்தரு
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : மலைமகளாகிய பார்வதிதேவியும் ஈசனும் கயிலை மலையில் வீற்றிருந்தபோது, பெருமாட்டி கலங்குமாறு மலையைப் பெயர்த்த இராவணன் வலிமையையும், தலையையும், தோளையும் கலங்கும்படி தனது கால் விரலின் நகத்தால் செய்தவன் ஈசன். அப் பெருமானுடைய ஊரானது, கலையொழுக்கத்துடன் வேதத்தையும் கற்றோர் மிகுந்திருக்க, மதிப்பு மிக்க சொற்களைப் பலரும் ஏற்று ஒழுகுமாறு செய்யும் சிறப்புடைய பெருமக்கள் வாழும் வேணுபுரம் ஆகும்.

94. வயம்உண்தவ மாறும்அடி
காணாது அலம் ஆக்கும்
பயனாகிய பிரமன்படு
தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கம்தரு
கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவந்து உறங்கும்பொழில்
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : வெற்றியைத் தரும் நற்றவத்தைச் செய்த திருமால் ஈசனின் திருவடியைக் காணுமாறு முயற்சி செய்தும் காண முடியவில்லை. பிரமனுடைய தலை ஒன்றினைக் கிள்ளி, தன் கையில் திருவோடாகக் கொண்டு சஞ்சலம் தருமாறு ஏந்தினான் அரன். சங்குகள் உப்பங்கழி வழியாகச் சென்று நெல் வயலில் வந்து தங்கும் நிலப்பகுதியுடைய வேணுபுரம் ஆகும்.

95. மாசுஏறிய உடலார்அமண்
குழுக்கள்ளொடு தேரர்
தேசு ஏறிய பாதம்வணங்
காமைத்தெரி யானூர்
தூசுஏறிய அல்குல்துடி
இடையார்துணை முலையார்
வீசுஏறிய புருவத்தவர்
வேணுபுரம் அதுவே.

தெளிவுரை : அழுக்கு மெய்யுடைய அமணரும், பௌத்தரும் ஒளி பொருந்திய திருவடியை வணங்கித் துதிக்கவும் அறியவொண்ணாதவானாகிய ஈசன் ஊரானது, ஆடை பொருந்திய மெல்லிடையும் அச்சமற்று நேர்கொண்டு வீசும் பார்வையும் <உடைய நங்கையர் மிக்க வேணுபுரம் ஆகும்.

96. வேதத்தொலி யானும்மிகு
வேணுபுரம் தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு
பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லாஇவை
பத்தும்மிசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ
கெதியைப்பெறு வாரே.

தெளிவுரை : வேதங்கள் எக் காலத்திலும் ஓதப்பட்டு, அவ்வொலியானது பரவி இருக்கும் வேணுபுரம் என்னும் நகரைப் போற்றி, ஈசன் திருவடிக் கமலத்தின்பால் மனத்தைப் பதித்து அதனால் எழப்பெற்ற ஞானசம்பந்தப் பெருமானுடைய திருப்பாடல்கள், தினையளவும் குற்றம் இல்லாதவை. எனவே இப்பதிகத்தை ஓதுபவர்கள் தினையளவும் துன்பம் இன்றி உலகத்தில் வாழ்வார்கள். பின்னர் சிவகதியாகிய முத்தி இன்பத்தைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

10. திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)

திருச்சிற்றம்பலம்

97. உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே.

தெளிவுரை : உண்ணாமுலை என்னும் திருநாமம் தாங்கிய உ<மாதேவியோடு உறைகின்ற ஒப்பற்றவனாகிய ஈசன் அத்தேவியைத் தன் இடப்பாகத்தில் வரித்துப் பெண் ஆயினான். அப்பெருமானுடைய மலையாகிய திருவண்ணாமலை செல்வம் மிக்க மணிகளைக் கொண்டுள்ளது. அம் மலையிலிருந்து மண்ணில் பொருந்த வீழும் அருவியானது இளமுழவின் ஓசையைத் தருகின்றது. அத்தகைய அண்ணாமலையைத் தொழுபவர்தம் வினைகள் தவறாமல் அறுந்து வீழும்.

98. தேமாங்கனி கடுவன்கொள
விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகல் மிசை
சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி
நினைவார்வினை இலரே.

தெளிவுரை : உயர்ந்த மாங்கனிகளை ஆண் குரங்கு பறித்துக் கொள்ளவும், அதனால் அசையும் மாங்கொம்புகள் மேகத்தைத் தொட்டு சிறிய நீர்த்துளிகளைச் சிதறும்படி செய்ய பெருமையான பசுக்கள் எருதுகளுடன் சாரும் சோலைகளையுடைய அண்ணாமலை அண்ணலின், பூப்போன்று மென்மையாயும் செம்மை தருவனவாயும் திகழும் திருவடியை நினைப்பவர்களுக்கு வினை இல்லை.

99. பீலிம்மயில் பெடையோடுறை
பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை
சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில்
அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி
தொழுவாரன புகழே.

தெளிவுரை : தோகை விரித்தாடும் மயில் தன் பெடையோடு உறையும் பொழிலும், முத்தும் மணியும் தரையில் பரவச் சிதறி ஒளி திகழவும், நீர்த்திரள் பொருந்திக் குளிர்ச்சி மலரவும் உள்ள இடம் அண்ணாமலை. அவ் அண்ணல், மார்க்கண்டேயனைக் காக்கும் பொருட்டுக் காலனை அழித்தவன். அப் பெருமானுடைய திருவடியை, வணங்குபவர் புகழ் பெறுவர்.

100. உதிரும்மயிர் இடுவெண்தலை
கலனாஉல கெல்லாம்
எதிரும்பலி உணல்ஆகவும்
எருதுஏறுவது அல்லால்
முதிரும் சடை இளவெண்பிறை
முடிமேல்கொள அடிமேல்
அதிரும்கழல் அடிகட்குஇடம்
அண்ணாமலை அதுவே.

தெளிவுரை : ஈசன், ஒரு காலத்தில் பிரமனுடைய ஒரு தலையைக் கொய்து மறக்கருணை ஆற்ற. அதுவே திருஓடு எனத் திருக்கரத்தில் சேர்ந்தது. அது பலியேற்கும் பிச்சைப் பாத்திரமாக அமைய எல்லோரும் எதிர்வந்து பிச்சை இட்டனர். அதனை உணவாகவும் இடபத்தை வாகனமாகவும் மற்றும் முதிர்ந்த சடையும் இளவெண் மதியும் முடியில் தரித்துத் திருவடியில் ஒலிக்கும் கழலினையுடைய அடிகளாகிய ஈசனுக்குரிய இடமாவது. அண்ணமலையே ஆகும்.

101. மரவம்சிலை தரளம்மிகு
மணிஉந்துவெள் ளருவி
அரவம்செய முரவம்படும்
அண்ணாமலை அண்ணல்
உரவம்சடை உலவும்புனல்
உடனாவதும் ஓரார்
குரவம்கமழ் நறுமென்குழல்
உமைபுல்குதல் குணமே.

தெளிவுரை : அழகிய ஒளி வீசும் முத்துக்களும் இரத்தினங்களும் மிகுந்திருக்கத் தூய்மையான அருவியின் ஒலி பரவுதலால் கலகலவெனச் சலனத்தையுடைய அண்ணாமலையின் அண்ணலாகிய ஈசன் பாம்பும் கங்கையும் தன் சடையில் பொலிவதையும் ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் <உமாதேவியுடனாய் விளங்கி இருப்பது மேன்மை தருவதாகும்.

102. பெருகும்புனல் அண்ணாமலை
பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி
அணிவார்அது பருகிக்
கருகும்மிடறு உடையார்கமழ்
சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக்கு
உறுநோய்அடை யாவே.

தெளிவுரை : பெருகும் புனலை யுடைய அண்ணாமலையார், கடலில் தோன்றிய நஞ்சைப் பருகும் வல்லமை உடையவர்; அந்த நஞ்சினைப் பருகியதன் விளைவாகக் கண்டம் கருமை நிறம் அடையப் பெற்றவர்; திருநீற்று மேனியர்; மணங்கமழும் சடையை உடையவர். அப்பெருமானுடைய திருவடியைப் போற்றி மனம் உருகி வழிபடும் அடியவர்களுக்கு பிறவி எடுக்கின்ற தன்மைத்தாகிய நோய் இல்லை. எத்தகைய பிணியும் இல்லை என உணர்த்துவதாயிற்று.

103. கரிகாலன் குடர்கொள்வன
கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்தலை
உதையுண்டுஅவை உருள
எரியாடிய இறைவர்க்குஇடம்
இனவண்டு இசைமுரல
அரியாடிய கண்ணாளொடும்
அண்ணாமலை அதுவே.

தெளிவுரை : கரிய கால்களையுடைய நரிகள் குடல்களைத் தின்றும், வெண்மையான மண்டை ஓட்டினை உருளும்படி கால்களால் உ<தைத்தும் ஆடிக் கொண்டிருக்கப் பேய்கள் ஆடும் இடுகாட்டில் திருக்கரத்தில் தீப்பிழம்பை ஏந்தி ஆடும் இறைவனுக்கு <உரிய இடம் என்பது கூட்டம் கூட்டமாக வண்டுகள் இசை எழுப்ப, ஈரமும் குளிர்ச்சியும் கலந்த கண்களையுடைய உமாதேவியுடன் விளங்கும் அண்ணாமலையாகும்.

104. ஒளிறூபுலி அதள்ஆடையன்
உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண
வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய
விகிர்தன்இரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம்
அண்ணாமலை அதுவே.

தெளிவுரை : ஒளிரும் புலியின் தோலை ஆடையாக <உடையவன்; உமாதேவி அச்சம் கொண்டதையொட்டி, பிளிர்ந்து வந்து எதிர்த்த மதயானையின் முகத்தைப் பிடித்தும் அதன் தோலை உரித்தும் திருவிளையாடல் நடத்தியவன்; யாவராலும் கணித்துக் கூற முடியாதவாறு வேறுபாட்டையுடையவன்; மலை எடுத்த இராவணனைச் சேற்றில் அழுந்துமாறு தண்டித்தவன். அப்பெருமானுடைய இடமாவது அண்ணாமலையே.

105. விளவார்கனி படநூறிய
கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை
கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய
அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை
தலைவனடி சரணே.

தெளிவுரை : விளா மரமாய் நின்றவனை மாய்த்த திருமாலும், தாமரை மலர்மேல் உறைந்து வேதத்தில் தோய்ந்த குறைவற்ற புகழையுடைய நான்முகனும் அளிவிட முடியாதபடி நெருப்புப் பிழம்பாகிய அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையாகிய உமையின் தலைவன். அப்பெருமான் திருவடியையே சரணம் ஆகக் கொள்ள வேண்டும்.

106. வேர்வந்துற மாசுஊர்தர
வெயில்நின்று உழல்வாரும்
மார்பம்புதை மலிசீவரம்
மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின்
அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல
கழல்சேர்வது குணமே.

தெளிவுரை : வேர்வை உண்டாகி அதனால் அழுக்குத் தோய வெயிலில் திரிபவரும் மரவுரியை மார்பு மறையாதவாறு தரித்துக் கொண்டு வருபவர்களாய், முற்றிய தன்மையில்லாத நிலையில் உரை செய்பவர்களுடைய மொழிகளை ஏற்க வேண்டாம். மழுப்படை தாங்கியுள்ள அண்ணாமலையாரின் நல்ல கழலை எண்ணித் துதிப்பது குணம் தரும்.

107. வெம்புந்திய கதிரோன்ஒளி
விலகும்விரி சாரல்
அம்புந்தீமூ எயில்எய்தவன்
அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயில்ஆலுவ
குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர்
அடிபேணுதல் தவமே.

தெளிவுரை : வெம்மை தரும் கதிரவனுடைய ஒளியும் அற்றுப் போகுமாறு மேகத்தில் திரிந்த மூன்று கோட்டைகளைச் செயலிழக்கச் செய்தவன் ஈசன். அவ் அண்ணாமலையானைப் பாடிய, குளிர்ந்த சீகாழியின் ஞானசம்பந்தன் தமிழாகிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லார்தம் திருவடி பேணுதல் பெருந்தவம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்

11. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

108. சடையார்புனல் உடையான்ஒரு
சரிகோவணம் உடையான்
படையார்மழு உடையான்பல
பூதப்படை உடையான்
மடமான்விழி உமைமாதுஇடம்
உடையான்எனை உடையான்
விடையார்கொடி உடையான்இடம்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : சடையின்கண் பொருந்திய கங்கையை உடையவன்; சரிந்த கோவண ஆடை யுடையவன்; ஆயுதமாக விளங்கும் மழுவை யுடையவன்; பூதகணங்களைப் படை வீரர்களாக உடையவன்; மான் விழியன்ன உமை நங்கையை இடப்பாகத்தில் உடையவன்; என்னை ஆளாக உடையவன்; இடபத்தைக் கொடியாக உடையவன். அவனுடைய இடம் என்பது திருவீழி மிழலை ஆகும்.

109. ஈறாய்முதல் ஒன்றாய்இரு
பெண்ஆண்குணம் மூன்றாய்
மறாமறை நான்காய்வரு
பூதம்அவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொடு
எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒடுங்குங்காலத்தில் அவற்றைத் தானே ஏற்று நின்று விளங்குவதால் முடிவுப் பெருளாகவும், அவ் உயிர்களை மீண்டும் தோன்றச் செய்யும் முதற் பொருளாகவும், தான் ஒருவனே ஆண் உருவிலும் பெண் உருவிலும் இரண்டாகத் தோன்றுபவனாகவும் மூன்று குணங்களாகவும், நான்கு வேதங்களாகவும், ஐந்து பூதங்களாகவும், ஆறு வகையான சுவைப் பொருளாகவும் ஏழு இசையாகவும் எட்டுத் திக்குகளாகவும் உடையவன் ஈசன். எல்லாம் தானேயாய் விளங்கும் இறைவன் அவ்வப் பொருளின் கண் இணைந்து உடனிருப்பவனாகவும், அவ்வப்பொருளில் கலவாமல் வேறாய் விளங்குபவனாகவும் இருப்பவன். அவன் வீற்றிருக்கின்ற இடமாவது திருவீழிமிழலை ஆகும்.

110. வம்மின்னடி யீர்நாள்மலர்
இட்டுத்தொழுது உய்ய
உம்மன்பினொடு எம்மன்புசெய்து
ஈசன்னுறை கோயில்
மும்மென்றுஇசை முரல்வண்டுகள்
கொண்டித்திசை எங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : அடியவர் பெருமக்களே, வாருங்கள் ! புது மலர்களால் ஈசன் பாதத்தை அருச்சித்து வணங்கிப் போற்றி இவ்வுலகில் பிறவி எடுத்ததைப் பயனாக்கும் வகையில் உய்தல் வேண்டும். உமது அன்போடு எண் அன்பும் இணைந்து நிற்க விளங்கும் ஈசன் உறைகின்ற கோயில் (இடம்) திருவீழி மிழலை ஆங்கு. வண்டுகள் பூக்களில் அமர்ந்து நன்கு மலரச் செய்து இசைக்கப் பெருகி வளரும் சோலைகளும் நீர்வளம் சார்ந்த வயல்களும் உள்ளன.

111. பண்ணும்பதம் ஏழும்பல
ஓசைத்தமிழ் அவையும்
உள்நிறைதொர் சுவையும்உறு
தாளத்துஒலி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு
காற்றும்சுடர் மூன்றும்
விண்ணும்முழுது ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : இசையுடன் ஏழு சுரங்களில் எழுப்பப்படும் தமிழ்ப் பாடல் தாளத்தின் இயல்பு சேர, அப்பாடலுக்குள் பொதிந்து விளங்கும் <உயர்ந்த பொருளை உணர்ந்து மகிழும் சிறப்பும் மலர், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றுடன் சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய மூன்றும் சேர, அட்ட மூர்த்தியாக முழுமை பெற்று விளங்கும் இடம் திருவீழிமிழலை ஆகும்.

112. ஆயாதன சமயம்பல
அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன்
தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவன்எம்இறை
செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்இடம்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : சைவத்தைத் தவிர பிற சமயங்கள் இறையுண்மையை ஆராயும் கொள்கை பொறாமையால் அவற்றால் அறியப்படாதவன். பல்வேறு சமயத்திற்கும் தோற்றுவாய் ஆகித் தாய்போல் காத்து அருள்பவன். எல்லா உயிர்களுக்கும் தோற்று வாயாக இருப்பவன். வேதத்தால் மொழியப்பெறும் மூன்று வகையான தீயாக விளங்குபவன். அத்தகையவன் எமது தெய்வமாகிய சிவபெருமான். அப்பெருமான் செல்வம் திகழும் திருவாரூரில் பொருந்தி இருப்பவன். அவன் உறையும் இடம் திருவீழி மிழலை ஆகும்.

113. கல்ஆல்நிழல் கீழாய் இடர்
காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன்
மறைபூட்டிநின்றுஉய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி
கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த பெருமானே ! எங்களைக் காப்பாற்றுக என்று தேவர்கள் எல்லாம் வணங்கி வேண்டி நிற்க, ஒளி திகழும் சூரிய சந்திரர்கள் தேர்சக்கரங்களாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும் திகழக் காற்றுப் போன்று வேகமாகச் செல்லும் எரிக்கும் தன்மையுடைய நெருப்பைக் கொள்ளுமாறு திருமாலாகிய அம்பினால் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அசுரர்களின் மூன்று கேட்டைகளையும் எரித்தான். அவனுடைய இடமாவது திருவீழிமிழலை.

114. கரத்தான்மலி சிரத்தான்கரி
உரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி
பணிமூவர்கட்கு ஓவா
வரத்தால்மிக அளித்தான்இடம்
வளர்புன்னைமுத்து அரும்பி
விரைத்தாதுபொன் மணிஈன்றுஅணி
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : ஈசன், பிரமனது ஒரு தலையைக் கையில் கபாலமாகக் கொண்டவன். யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்; தன்னை எதிர்த்த மூன்று கோட்டைகளும் எரியுமாறு செய்து அதற்கு உள்ளிருந்து அவனுடைய திருவடியைப் பணிந்த மூவருக்கு ஓய்வில்லாத நித்தியப்பணி ஆற்றும் விதத்தில் வாயிற் காவலர் ஆகும் வரம் அளித்து வாழ்வித்தவன். அவனது இடமானது, புன்னை முத்துப் போல் அரும்பி பொன்தாதுக்களை ஈன்று அழகு சேர்க்கும் திருவீழிமிழலை ஆகும்.

115. முன்நிற்பவர் இல்லாமுரண்
அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித்து எடுத்தான்முடி
தடந்தோள்இற வூன்றிப்
பின்னைப் பணிந்து ஏத்தப்பெரு
வாள்பே ரொடும் கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : தனக்கு எதிராக முன்னிருந்து போர் புரிபவர் யாரும் இல்லாத இராவணன், ஈசன் திருஇருக்கையாகிய வடகயிலை மலையைப் பெயர்த்து (பிடித்து) எடுத்த போது, அவனுடைய அகன்ற வலிமையான தோள் துன்புறுமாறு தனது திருப்பாத விரலால் ஊன்றினான் சிவபெருமான். பின்னர் அவ் அரக்கன் பணிந்து ஏத்த, உயர்ந்த வாளும் பேரும் கொடுத்த மின் போன்று பொலியும் சடையை உடைய அப் பெருமானுடைய இடம் திருவீழிமிழலை ஆகும்.

116. பண்டுஏழ்உலகு உண்டான்அவை
கண்டானும் முன்அறியா
ஒண்தீஉரு ஆனான்உறை
கோயில்நிறை பொய்கை
வண்தாமரை மலர்மேல்மட
அன்னம்நடை பயில
வெண்தாமரை செந்தாதுஉதிர்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : படைப்புத் தொழிலை உ<டைய பிரமனும், ஒருகாலத்தில் அவ் உலகங்களை உண்டு உமிழ்ந்த திருமாலும் நேரில் காண்பதற்கு அரியவனாய் சோதிப் பிழம்பாய் வடிவு கொண்ட ஈசன் உறைகின்ற கோயிலானது திருவீழிமிழலை ஆகும். அது நீர் நிறைந்த குளத்தில் வளமிக்க தாமரை மலர்மீது அன்னப் பறவை நடை பயிலவும் வெண்தாமரை செவ்விய பூந்தாதுகளைச் சிந்தவும் வளத்தைப் பெருக்கும் இயல்புடையது.

117. மசங்கல்சமண் மண்டைக்கையர்
குண்டக்குணம் இலிகள்
இசங்கும்பிறப்பு அறுத்தான்இடம்
இருந்தேன்களித்து இரைத்துப்
பசும்பொன்கிளி களிமஞ்ஞைகள்
ஒளிகொண்டுஎழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில்
வீழிம்மிழ லையே.

தெளிவுரை : மயக்கம் தரும் சொற்களைக் கூறும் சமணர்களின் சொற்களை நீக்கி, வினைவயத்தால் நேரும் பிறவித்தளை அறுத்தவனாகிய சிவபெருமான் உறையும் இடமாவது திருவீழிமிழலை ஆகும். அது, பசும்பொன் நிறமுடைய கிளிகளும், மயில்களும் விளக்கத் தேன்சொரியும் மலர்களும் குலுங்கக் கதிரவன் ஒளியைப் பெறும் உயர்ந்த சோலைகளை உடைய ஊர் ஆகும்.

118. வீழிம்மிழ லைம்மேவிய
விகிர்தன்தனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம்
பந்தன்தமிழ் பத்தும்
யாழின்இசை வல்லார்சொலக்
கேட்டார்அவர் எல்லாம்
ஊழின்மலி வினைபோயிட
உயர்வான்அடை வாரே.

தெளிவுரை : திருவீழிமிழலையில் பொருந்தி வீற்றிருக்கும் சிவபெருமானைப் பக்தி மணம் கமழும் சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த இனிய பதிகத்தை யாழில் அமைத்து இசையுடன் பாட வல்லவர்களும், வல்லார் சொல்லக் கேட்போரும் ஊழித்தோறும் மலிந்து துன்புறுத்தும் வினை களையப் பெற்று சிவபெருமானுடைய திருவடிப் பேற்றினை அடைந்து இன்புற்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

12. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

119. மத்தாவரை நிறுவிக்கடல்
கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச்
சுவர்வண்ணனது இடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகில்
ஒளிர்குங்குமம் கொண்டு
முத்தாறுவந்துஅடி வீழ்தரு
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : மந்தர மலையை மத்தாகக் கொண்டும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டும், பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்ட, நெருப்பைப் போன்ற சிவந்த வண்ணம் உடையவனாகிய சிவபெருமானுடைய இடம் திருமுதுகுன்றம் ஆகும். ஆங்கு, மலர்க் கொத்துகளும் குளிர்ந்த சந்தனம், அகில் ஒளிரும் குங்குமப் பூ ஆகியவற்றைக் கொண்டு முத்தாறு மகிழ்ச்சியுடன் ஈசன் திருவடியை வணங்குகிறது. அத்தகைய சிறப்புடைய பதியை அடைந்து இறைவனைத் துதிப்போமாக.

120. தழைஆர்வட வியவீதனில்
தவமேபுரி சைவன்
இழைஆர்இடை மடவாளொடும்
இனிதாஉறை இடமாம்
மழைவான்இடை மழுவஅவ்எழில்
வாளைவாள்உகிர் எரிகண்
முழைவாள்அரி குமிறும்உயர்
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : தழைகள் நிறைந்த ஆல மர நிழலில் யோகீஸ்வரனாக இருந்து தவக்கோலத்தில் விளங்கும் சிவபெருமான், மெல்லிய இடையை உடைய உமாதேவியோடு இனிதாய் உறையும்  இடமானது, மேகத்தில் இடி முழக்கம் நிகழ அவ்வொலியானது குகையில் இருக்கும் சிங்கத்தையும் கர்ச்சிக்குமாறு செய்யவல்ல திருமுதுகுன்றம் ஆகும். அங்கு சென்று இறைவனை வணங்கித் துதிப்போமாக.

121. விளையாததொர் பரிசில்வரு
பசுபாசவே தனைஒண்
தளையாயின தவிரவ்வரு
தலைவன்அது சார்பாம்
களையார்தரு கதிர்ஆயிரம்
<உடையவ்வவ னோடு
முளைமாமதி  தவழும்முயர்
முதுகுன்றுஅடை வோமே

தெளிவுரை : உயிரானது பாசத்தால் கட்டப்பட்டுத் துன்பத்தில் ஆழ்தலை மீண்டும் விளையாதவாறு தவிர்க்கும் ஒளிமயமான தலைவனாகிய ஈசன் சார்ந்த இடமாவது, ஆயிரம் கதிர்களையுடைய சூரியனோடு பிறைச் சந்திரனும் தவழும் திருமுதுகுன்றம் ஆகும். அப்பதியை அடைந்து இறைவனைத் துதிப்போமாக.

122. சுரர்மாதவர் தொகுகின்னரர்
அவரோதொலை வில்லா
நரர்ஆனபல் முனிவர்தொழ
இருந்தான்இடம் நலமார்
அரசார்வர அணிபொற்கலன்
அவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : தேவர்களும், தவசிகளும், கின்னரர் முதலானோரும், மக்கள் பிறவி யுடைய பல முனிவர்களும் தொழுமாறு வீற்றிருக்கும் இடமாவது திருமுதுகுன்றம். அது நலம் திகழும் அரசாட்சியை நல்கும் மன்னர்கள் பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு முரசு ஒலி ஆர்க்க வரும் சிறப்புடையது. அங்கு அடைந்து இறைவனைத் துதிப்போமாக.

123. அறையார்கழல் அந்தன்தனை
அயில்மூவிலை அழகார்
கறையார்நெடு வேலின்மிசை
ஏற்றான்இடம் கருதில்
முறையாயின பலசொல்லிஒண்
மலர்சாந்துஅவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : அந்தகாசுரன் தேவர்களைத் துன்புறுத்திய காலத்தில், தேவர்களுடைய வேண்டுகோளின்படி சிவபெருமான் பைரவமூர்த்தியை ஏவ, அப்பெருமான் முத்தலைச் சூலத்தால் அவ் அசுரனை மாய்த்தான். அவ்வாறு யாவராலும் போற்றித் துதி செய்யுமாறு உள்ள திருவடியை உடைய ஈசன் இடமாவது. திருமுதுகுன்றம் ஆகும். முறையாக ஓதும் வேதத்தால் பரவிப் பூக்களாலும் சந்தனம் முதலான வாசனைப் பொருள்களாலும் பூசை நடத்தி, அங்கு முறைப்படி முனிவர்கள் வணங்குகின்றனர். அத்தகைய இடத்தை அடைந்து ஈசனைத் துதிப்போமாக.

124. ஏவார்சிலை எயினன்னுரு
வாகிஎழில் விசயற்கு
ஓவாதஇன் னருள்செய்தஎம்
ஒருவற்குஇடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர்
தவமேமிக உடையார்
மூவாதபல் முனிவர்தொழு
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : வில்லும் அம்பும் ஏந்திய வேடன் உருவில் வந்து எழில் மிக்க அர்ச்சுனருக்கு எப்போதும் நிலைத்திருக்குமாறு அருள் செய்த எமது நாதனாகிய ஈசனுக்குரிய இடமானது உலகில் இறப்பில்லாதவர்களும் மீண்டும் பிறப்புக்கான வினையைக் கொள்ளாதவர்களும் ஆகிய மிகுந்த தவத்தை உடையவர்களும், இளமை நீங்காத பல முனிவர்களும் தொழுது போற்றும் திருமுதுகுன்றம் ஆகும். அங்குச் சென்று இறைவனை வணங்குவோமாக.

125. தழல்சேர்தரு திருமேனியர்
சசிசேர்சடை முடியர்
மழமால்விடை மிகஏறிய
மறையோன்உறை கோயில்
விழவோடுஒலி மிகுமங்கையர்
தகும்ஆடக சாலை
மழுவோடுஇசை நடமுன்செயு
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : தழல்போன்ற சிவந்த திருமேனியை உடையவர்; சந்திரனைச் சடைமுடியில் சூடியவர்; பெரிய இடபத்தின்மேல் ஏறிய மறையோன்; அவன் உறையும் இடமானது விழாக்கள் நடத்தியும், காலில் சலங்கை பூட்டி நடனம் புரியும் நடன சாலைகளும் முழவோசையும் இசைப்பாடலின் ஓசையும் முற்படும் திருமுதுகுன்றம் ஆகும். ஆங்கு சார்ந்து இறைவனைத் துதிப்போமாக.

126. செதுவாய்மைகள் கருதிவ்வரை
எடுத்ததிறல் அரக்கன்
கதுவாய்கள்பத்து அலறீஇடக்
கண்டான்உறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர்
நிறையக் குறை வில்லா
முதுவேய்கண்முத்து உதிரும்பொழில்
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : தனது வலிமையைத் தவறுதலாகக் கணித்துக் கயிலையை எடுத்த அரக்கனின் தாடைகள் பத்தும் அலறும்படி செய்த சிவபெருமான் உறையும் கோயிலானது. செங்காந்தன் மலர்கள் தேனைச் சொரியவும், மூங்கில்கள் முத்துக்களை உதிர்க்கவும் விளங்கும் சோலைகளையுடைய திருமுதுகுன்றம் ஆகும். அதனை அடைந்து துதிப்போமாக.

127. இயலாடிய பிரமன்னரி
இருவர்க்குஅறி வரிய
செயலாடிய தீயார்உரு
வாகிஎழு செல்வன்
புயல்ஆடுவண் பொழில்சூழ்புனல்
படப்பைத்தடத் தருகே
முயல்ஓடவெண் கயல்பாய்தரு
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : தமக்குள் உயர்ந்தவர் என்று தற்பெருமை கூறிய பிரமன், திருமால் ஆகிய இருவரும் அறிந்து கொள்வதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் உருவாகி எழுந்த செல்வன், மேகம் பரவும் சோலைகளும் நீர்பரப்புகளும் கயல்பாயும் வயல்களும் திகழும் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருக்க ஆங்கு சென்றடைந்து துதிப்போமாக.

128. அருகரொடு புத்தர்அவர்
அறியாஅரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி
உடையான் இடம்அலர்ஆர்
கருகுகுழல் மடவார்கடி
குறிஞ்சிஅது பாடி
முருகன்னது பெருமைபகர்
முதுகுன்றுஅடை வோமே.

தெளிவுரை : சமணரும் பௌத்த மதத்தினரும் அரனை அறியார். ஈசன், இமவான் மருகன், இடபக் கொடியை உடையவன். அவனுடைய இடமாவது, மலர் சூடிய கருங்கூந்தலை யுடைய பெண்கள் குறிஞ்சிப்பண் இசைத்து முருகனது பெருமையைப் புகலும் திருமுதுகுன்றம் ஆகும். அப்பதியை அடைந்து இறைவனைத் துதிப்போமாக.

129. முகில்சேர்தரு முதுகுன்றுடை
யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம்
பந்தனுரை செய்த
நிகரில்லா தமிழ்மாலைகள்
இசையோடுஇவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கு இடர்
பாவம்மடை யாவே.

தெளிவுரை : முகில் பொருந்தி விளங்கும் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை மிகப் பழமை பொருந்திய சிறப்புடைய புகலி நகரின் ஞானசம்பந்தப் பெருமான் உரைசெய்த நிகரில்லாத இந்தத் திருப்பதிகத்தை இடையோடு கூறும் அடியவர்களுக்குத் துன்பமும் இல்லை பாவமும் அணுகாது.

திருச்சிற்றம்பலம்

13. திருவியலூர் (அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

130. குரவம்கமழ் நறுமென்குழல்
அரிவையவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன்
உரிவைஉடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள
மதியும்நகு தலையும்
விரவும்சடை அடிகட்குஇடம்
விரிநீர்விய <லூரே.

தெளிவுரை : குரவம் என்னும் மலரின் மணம் கமழும் கூந்தலை உடைய உமாதேவி நடுங்குமாறு, யானையின் முகத்தைக் கிழித்து அதன் தோலை உரித்துப் போர்வையாய் அணிபவனாகிய சிவபெருமான், நாகம், கங்கை, இளைய பிறைச் சந்திரன் மற்றும் வெண்மையான மண்டை ஓடும் கொண்டுள்ளவன். அவனுடைய சடைமுடி பரந்துள்ளது. அத்தகைய அடிகளுக்கு உரிய இடமாக உ<ள்ளது நீர்வளம் மிக்க திருவியலூர்.

131. ஏறுஆர்தரும் ஒருவன்பல
உருவன்நிலை ஆனான்
ஆறுஆர்தரு சடையன்அனல்
உருவன்புரி உ<டையான்
மாறுஆர்புரம் எரியச்சிலை
வளைவித்தவன் மடவாள்
வீறுஆர்தர நின்றான் இடம்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : இடப வாகனத்தில் அமர்ந்து காட்சி நல்கும் ஒப்பற்றவன்; பல வடிவங்களை உடையவன்; கங்கையைச் சடையில் கொண்டவன்; தீவண்ணம் போன்று சிவந்த திருமேனி உடையவன்; என்றும் நிலைத்து இருப்பவன்; அன்புடையவன்; நன்னெறியிலிருந்து மாறுபட்டு நின்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளை எரியுமாறு செய்தவன்; உமாதேவி பெருமையுடன் மகிழுமாறு விளங்கி நின்றவன்; அப்பெருமையுடன் மகிழுமாறு விளங்கி நின்றவன்; அப் பெருமானின் இடமாக உள்ளது நீர்வளம் மிக்க திருவியலூர் ஆகும்.

132. செம்மென்சடை அவைதாழ்வுற
மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றுஇசை
பகர்வார்அவர் இடமாம்
உம்மென்றுஎழும் அருவித்திரள்
வரைபற்றிட உரைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : செம்மையான மெல்லிய சடையுடன் அழகிய தோற்றம் கொண்டு தாருகாவனத்து முனிவர் தம் மனைகள்தோறும் சென்று பிட்சை ஏற்கும் சிவபெருமானுடைய இடமாவது, நீர்மல்கு சோலைகளும் மூங்கில்களும் வயல்களும் மருவித் திகழும் திருவியலூர் ஆகும்.

133. அடைவுஆகிய அடியார்தொழ
அலரோன்தலை யதனில்
மடவார்இடு பலிவந்துஉணல்
உடையான்அவன் இடமாம்
கடையார்தர அகில்ஆர்கழை
முத்தம் நிரைசிந்தி
மிடைஆர்பொழில் புடைசூழ்தரு
விரிநீர்விய <லூரே.

தெளிவுரை : புகலிடமாக அடியவர்கள் எல்லாம் தொழுது போற்ற, பிரமன் தலையைத் திரு ஓடாகத் தன் கரத்தில் ஏந்தி, தாருகாவனத்தில் உள்ள முனிவர்களின் பத்தினிப் பெண்களிடம் பிச்சை ஏற்றவன் சிவபெருமான். அவனுடைய இடமாவது அகிலும் மூங்கில்களிலிருந்து தோன்றிய முத்துக்களும் கடைவீதிகளில் பொலிந்து விளங்கும், செறிந்த பொழிலைச் சூழ்ந்த நீர் வளம் மிக்க திருவியலூர் ஆகும்.

134. எண்ணார்தரு பயனாய்அயன்
அவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாய்உயர்
பொருளாய்இறை யவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய
கடவுள்ளிடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : நினைப்பவர்தம் எண்ணத்தில் பொருந்தும் பயனாகவும், படைப்புத் தொழில் புரிபவனாகவும், மிகுந்த ஞானமாகவும், இசையில் விளங்கும் வேதமாகவும், உயர்ந்த பேற்றைத் தரும் இறைவனாகவும். காட்சிக்கு இனிமை தரும் வடிவப் பொருளாகவும் உடைய கடவுளிடம் இடம், தேவர்களுடன் மண்ணுலகத்தவரும் தொழுது வணங்கும் நீர்வளம் மிக்க வியலூர் எனப்படுவதாகும்.

135. வசைவில்கொடு வருவேடுவன்
அவனாய்நிலை அறிவான்
திசைஉற்றவர் காணச்செரு
மலைவான் நிலைஅவனை
அசையப்பொருது அசையாவணம்
அவனுக்குயர் படைகள்
விசையற்குஅருள் செய்தான்இடம்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : வளைந்து தோன்றும் வேடுவத் திருக்கோலத்தில் வந்து விசயனிடம் எல்லோரும் காணுமாறு போர் செய்து, பின்னர் அவனுக்குச் சிறப்பான படைக்கலன்களை அருள் செய்தவனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமானது, நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.

136. மான்ஆர்அரவு உடையான்இரவு
உடையான்பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரான்உயர்
விசையான் விளை பெருள்கள்
தானாகிய தலைவன்னென
நினைவார்அவர் இடமாம்
மேல்நாடிய விண்ணோர்தொழும்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : மானையும் அழகிய பாம்பையும் <உடையவன்; இரத்தல் தொழிலைக் கொண்டு பிச்சை ஏற்பவன்; நடனம் ஆடுபவன்; உடலின்கண் பரவி இருக்கும் உயிராவன்; உயர்வாக நினைத்துப் போற்றுபவர்கள்பால் இசைவுடன் விளங்குபவன், தோன்றும் பொருள் யாவற்றிலும் தானேயாய் இருந்து செய்பவன்; அத்தகைய முதன்மையானவன் என்று நினைக்கப்படும் ஈசன், விளங்கும் இடமாவது தேவர்கள் தொழுது போற்றும் நீர் வளம் மிக்க வியலூர் ஆகும்.

137. பொருவார்எனக்கு எதிர்ஆர்எனப்
பொருப்பை எடுத்தான்தன்
கருமால்வரை கரம்தோள்உரம்
கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி
கழல்சேர்திரு வடியின்
விரலால்அடர் வித்தான்இடம்
விரிநீர்விய <லூரே.

தெளிவுரை : தன்னை எதிர்த்துப் போர் புரிய யாரும இல்லை என்னும் அகந்தையால் கயிலையை எடுத்தான் இராவணன். அவனுடைய மலைபோன்ற தோள்களும். கரங்களும் ஒளி வீசும் கிரீடம் நெரிதலால் தலைகளும் துன்புறுமாறு, தனது வீரக் கழலணிந்த திருப்பாத விரலால் அம் மலையை அழுத்தித் தண்டனை செய்தான். அப்பெருமான் விளங்கும் இடம். நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.

138. வளம்பட்டுஅலர் மலர்மேல்அயன்
மாலும்மொரு வகையால்
அளம்பட்டுஅறிவு ஒண்ணாவகை
அழலாகிய அண்ணல்
உளம்பட்டுஎழு தழல்தூணதன்
நடுவேஒரு உருவம்
விளம்பட்டுஅருள் செய்தான்இடம்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : வளமான பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும். அத்திருமாலும் ஈசனைக் காண் வேண்டும் என முற்பட்டு அது இயலாமையால் அயர்ந்து இருக்க, அறியவொண்ணாதபடி பேரழல் ஆகித் தோன்றினான் அப்பெருமான். பின்னர் அந்நெருப்புப் பிழம்பின் நடுவில் ஒப்பற்ற திருக்காட்சியை நல்கிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், நீர்வளம் மிக்கவியலூர் ஆகும்.

139. தடுக்கால் உடல் மறைப்பார்அவர்
தவர்சீவர மூடிப்
பிடக்கேஉரை செய்வாரொடு
பேணார்நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடம்உண்டுஅமுது
அமரர்க்கு அருள் செய்த
விடைசேர்தரு கொடியான்இடம்
விரிநீர்விய லூரே.

தெளிவுரை : மரவுரியை ஆடையாக உடையவர்கள், பிடகத்திலிருந்து உரைப்பவர்கள் ஆகியவர்களைப் பெரியோர்கள் போற்றமாட்டார்கள். கடலில் தோன்றிய விடத்தை தான் அருந்தி, அமுதத்தைத் தேவர்களுக்கு அளித்து அவர்கள் நீண்ட காலம் வாழுமாறு அருள் செய்த இடபக் கெடியுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம், நீர்வளம் மிக்க வியலூர் ஆகும்.

140. விளங்கும் பிறை சடைமேல்உடை
விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு
தமிழ்ஞானசம் பந்தன்
துளங்குஇல்தமிழ் பரவித்தொழும்
அடியார்அவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுஉயர்
விண்ணும்முடை யாரே.

தெளிவுரை : விளங்குகின்ற வெண்பிறைச் சந்திரனைச் சடையின் மீது தரித்துள்ள ஈசன், விகிர்தன். அப்பெருமான் வியலூரை இருப்பிடமாகக் கொண்டுள்ளதை ஞானசம்பந்தப் பெருமான் இசைத்த தமிழ்ப் பதிகமாகிய இப் பத்துப் பாடல்களையும் இசைத்து இறைவனை வணங்குபவர்கள், இம்மையில் செல்வமும் புகழும் சேர நலங்கள் யாவும் பெற்று தேவலோகச் சிறப்புகளையும் <உடையவராவர்.

திருச்சிற்றம்பலம்

14. திருக்கொடுங்குன்றம் (அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

141. வானில்பொலி வெய்தும்மழை
மேகம்கிழித்து ஓடிக்
கூனல்பிறை சேரும்குளிர்
சாரல்கொடுங் குன்றம்
ஆனில்பொலி ஐந்தும்அமர்ந்து
ஆடிஉலகு ஏத்தத்
தேனில்பொலி மொழியாளொடு
மேயான்திரு நகரே.

தெளிவுரை : வானத்தில் திகழும் மழை மேகம் குளிர்ந்த மழையைப் பொழிய விளங்கும் கொடுங்குன்றத்தில் பசுவிலிருந்து தோன்றும் ஐந்து பூசைப் பொருள்களையும் விரும்பி ஏற்று மகிழ்ந்து உமாதேவியோடு அந்நகரில் இருப்பவன் ஈசன்.

142. மயில்புல்குதண் பெடையோடுஉடன்
ஆடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடும்குளிர்
சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர்
அனல்ஏந்திநின்று ஆடி
எயில்முன்பட எய்தான்அவன்
மேய்வஎழில் நகரே.

தெளிவுரை :  ஆண் மயில் பெண் மயிலோடு சேர்ந்து ஆடவும், குயிலின் இசை பாடவும் உள்ள குளிர்ச்சி பொருந்திய சோலை <உடையது கொடுங்குன்றம். கூர்மையான வேலை மிக்க நெடிய வெஞ்சுடர் போன்ற நெருப்பைக் கரத்தில் ஏந்தி நின்று தாண்டவம் செய்து மூன்று கோட்டைகளை அழியுமாறு செய்த சிவபெருமான் இருப்பது அந்த எழில் நகர் ஆகும்.

143. மிளிரும்மணி பைம்பொன்னொடு
விரைமாமலர் உந்திக்
குளிரும்புனல் பாயும்குளிர்
சாரல்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொடு இளவெண்மதி
கெழுவும்சடை தன்மேல்
வளர்கென்றையு மதமத்தமும்
வைத்தான்வள நகரே.

தெளிவுரை :  பிரகாசம் உடைய மாணிக்க மணிகளும், பொன்னும், நறுமணம் கமழும் மலர்களும் முற்பட நீர் பெருகும் குளிர்ந்த சாரலை உடையது கொடுங்குன்றம். அது கங்கையுடன் பிறை மதியும் நட்புடன் பொருந்தி இருக்குமாறு செய்து. கொன்றை மலரும் ஊமத்தை மலரும் சேரத் தன் சடையில் வைத்த ஈசனுடைய வளமையான நகர் ஆகும்.

144. பருமாமதி கரியோடுஅரி
இழியும்வரி சாரல்
குருமாமணி பொன்னோடுஇழி
அருவிக் கொடுங் குன்றம்
பெருமாஎயில் வரைவில்தரு
கணையில்பொடி செய்த
பெருமான்அவன் உ<மையாளொடு
மேவும்பெரு நகரே.

தெளிவுரை : பெருத்த மதம் பொருந்திய யானையும் சிங்கமும் உலவ, ஒளிமிக்க மணிகளும் பொன்னும் கொழிக்கும் அருவியைக் கொண்டது கொடுங்குன்றம். அது, போர் செய்த மூன்று கோட்டைகளை மேருமலையை வில்லாகக் கொண்டு எய்த கணையால் பொடி படுத்திய சிவபெருமான் உமாதேவியோடு விரும்பி இருக்கும் பெருமையான நகர் ஆகும்.

145. மேகத்துஇடி குரல்வந்துஎழ
வெருவில்வரை இழியும்
கூகைக்குலம் ஓடித்திரி
சாரல்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை
சூடிந்நல மங்கை
பாகத்தவன் இமையோர்தொழ
மேவும்பழ நகரே.

தெளிவுரை :  மேகத்தில் முழங்கும் இடியோசை கேட்டு இருள் வாழ்க்கையுடைய கூகை (கோட்டான்) கள்பரந்து திரியும் தன்மை கொண்டது கொடுங்குன்றம். பாம்பும், பிறைச்சந்திரனும் சூடி உமாதேவியை இடப்பாகமாக உ<டைய பரமன், தேவர்கள் தொழப் பொருந்தி இருப்பது இப் பழநகர் ஆகும்.

146. கைம்மாமத கரியின்னினம்
இடியின்குரல் அதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக
மண்டும்கொடுங் குன்றம்
அம்மான்என உள்கித் தொழு
வார்கட்கருள் செய்யும்
பெம்மான்அவன் இமையோர்தொழ
மேவும்பெரு நகரே.

தெளிவுரை : யானையானது தனது இனமாக உள்ள மற்ற யானைகளின் இடி முழக்கம் போன்ற ஓசையைக் கேட்டு அவை நிலவும் மலர்ச் சோலசைகளைச் சாரும் பாங்குடையது கொடுங்குன்றம். அது, தந்தை என்றும், கடவுள் என்றும் கருதித் தொழுபவர்களுக்கு அருள் புரியும் பெருமான் மேவும் பெருமை மிக்க நகர் ஆகும்.

147. மரவத்தொடு மணமாதவி
மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில்
சூழ்தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை
விரவும்மலர்க் கொன்றை
நிரவச் சடை முடிமேல் உடன்
வைத்தான்நெடு நகரே.

தெளிவுரை : மணம் தரும் வெண்கடம்பு, கருக்கத்தி, முல்லை மற்றும் அதனின் மிக்க குரவம் ஆகிய மலர்களையுடைய பொழில் சூழ்ந்தது குளிர்ச்சி மிக்க கொடுங்குன்றம். அது, பாம்பும், பிறைமதியும் கொன்றை மலரும் நிரவச் சடைமுடியின் சேர வைத்தவனாகிய ஈசனது நகராகும்.

148. முட்டாமுது கரியின்னின்
முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை அவைமண்டிநின்று
ஆடும்கொடுங் குன்றம்
ஒட்டாஅரக் கன்தன்முடி
ஒருபஃதுஅவை உடனே
பிட்டான்அவன் உமையாளொடு
மேவும்பொரு நகரே.

தெளிவுரை : யாராலும் தடுத்து நிறுத்துவதற்கு அரிய யானைக் கூட்டங்கள் முற்றிய மூங்கில்களை முறித்து, இயல்பாகவே ஆழம் உடைய சுனை நீரில் நின்று ஆடி மகிழும் தன்மை கொண்டது, கொடுங்குன்றம். அது, அன்பில்லாத அரக்கனான் இராவணனுடைய பத்துத் தலைகளையும் ஒடியுமாறு தெய்தவனான பரமன் உமாதேவியோடு மேவி விளங்கும் பெருமையான நகர் ஆகும்.

149. அறையும்மரி குரல்ஓசையை
அஞ்சி அடும்ஆனை
குறையும் மன மாகிம்முழை
வைகும்கெடுங் குன்றம்
மறையும்மவை உ<டையான்என
நெடியான்என இவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன்
மேயவ்வெழில் நகரே.

தெளிவுரை : வீறுகொண்டு அறைந்து கொல்லும் இயல்புடைய சிங்கம். அதன் குரலைக் கேட்டு அஞ்சிப் போராடும் தன்மையுடைய யானை, ஆகிய இருவகை விலங்குகளும் தமது இயல்பிலிருந்து மாறுபட்டுக் கொல்லுதலும் அஞ்சுதலும் ஆகிய குணத்தை நீக்கித் தத்தம் இடத்தில் வாழும் நெறியை உடையது கொடுங்குன்றம். அது, ஓதப்பெறும் வேதத்தை உடையவனாகிய பிரமனும், <உலகத்தை அளப்பதற்காக நெடிய உருவம் கொண்ட திருமாலும் சிறிதளவும் அறிய வொண்ணாதவனாகிய சிவபெருமான் விளங்கும் எழில் மிக்க நகர் ஆகும்.

150.மத்தக்களிறு ஆளில்வர
அஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை
வைகும்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச்
சமணர்புறம் கூறப்
புத்தர்க்கு அருள் செய்தான் அவன்
மேயபழ நகரே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையும் யானியும் தமது இருப்பிடத்திலிருந்து வெளியே வருவதற்கு அச்சம் கொண்டு வாழும் தன்மையுடையது கொடுங்குன்றம். அது, பௌத்த சமண மதத்தினர் புறம்பாகக் கூறினும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு வேண்டியவாறு அருள்செய்த ஈசன் விளங்கும் பழமையான நகர் ஆகும்.

151. கூனல்பிறை சடைமேல்மிக
உடையான்கொடுங் குன்றைக்
கானல்கழு மலமாநகர்
தலைவன்னல கவுணி
ஞனாத்துஉயர் சம்பந்தன
நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துஉலகு
ஏத்தும்எழி லோரே.

தெளிவுரை : வளைந்த பிறைச் சந்திரனைச் சடை மீது பெருமையாகத் தரித்துள்ளவனாகிய சிவபெருமானுக்கு உரிமையானது கொடுங்குன்றம். அதனை ஞானசம்பந்தப்பெருமான் நலங்கொள் தமிழாகத் தந்தருள, இப்பதிகத்தைப் பாடிப் போற்றுபவர்களின் குறைபாடுகள் யாவும் தீர்ந்து விலகும்; துன்பம் தீரும்; உலகத்தவர் பாராட்டும் சிறப்பையும் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

15.  திருநெய்த்தானம் (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

152. மையாடிய கண்டன்மலை
மகள்பாகமது உடையான்
கையாடிய கேடில்கரி
உரிமூடிய ஒருவன்
செய்யாடிய குவளைம்மலர்
நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமான்இடம்
நெய்த்தானம்எ னீரே.

தெளிவுரை : கரிய கண்டத்தை (கழுத்து) உடையவன். மலைமகளாகிய உமாதேவியைப் பாகமாக உடையவன்; தனது திருக்கரத்தால் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட ஒப்பற்றவன்; நீர்வளம் மிக்க வயல்களில் திகழும் குவளை மலர் போன்ற விழியை உடைய தேவியோடு தானும் நெய்யால் அபிடேகம் கொள்பவன். அப்பெருமானுடைய இடமாவது நெய்த்தானம் ஆகும். அதனை உரைப்பீராக.

153. பறையும்பழி பாவம்படு
துயரம்பல தீரும்
பிறையும்புனல் அரவம்படு
சடைஎம்பெரு மான்ஊர்
அறையும்புனல் வருகாவிரி
அலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில்
நெய்த்தானம்எ னீரே.

தெளிவுரை : தன்பால் உண்டான பழி நீங்கும்; பாவம் மற்றும் அதனால் நேரும் துன்பமும் தீரும். சடை முடியில் வெண்மையான பிறைச்சந்திரனும், கங்கையும், அரவும் (பாம்பும்) உடைய எமது பெருமானாகிய ஈசனது ஊரானது, காவிரியின் வடகரை மேல் நிறைந்த மாண்பினை உடைய மகளிர் விளங்கும் நெய்த்தானம் ஆகும். அதனை உரைப்பீராக.

154. பேயாயின பாடப்பெரு
நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு
பாகம்மிக உடையான்
தாயாகிய உலகங்களை
நிலைபேறுசெய் தலைவன்.
நேயாடிய பெருமான்இடம்
நெய்த்தானம்எ னீரே.

தெளிவுரை : பேயானது பாடிட, மகாபிரளயக் காலத்தில் நடனமாடும் சிவபெருமான், மூங்கில் போன்ற மெல்லிய தேளையுடைய உமாதேவிக்குத் தானே ஒரு பாகம் ஆனவன். எல்லா உலகங்களையும் அப்பெருமானுடைய இடம் நெய்த்தானம் என்று <உரைப்பீராக.

155. சுடுநீறணி அண்ணல்சுடல்
சூலம்மனல் ஏந்தி
நடுநள்ளிருள் நடமாடிய
நம்பன்னுறை இடமாம்
கடுவாள்இள அரவாடுஉமிழ்
கடல்நஞ் சம்அதுஉண்டான
நெடுவாளைகள் குதிகொள்ளு யர்
நெய்த்தானம்எ னீரே.

தெளிவுரை : சுடுதலால் தோன்றும் தீருநீற்றை அணியும் அண்ணல், ஒளி திகழும் சூலமும் நெருப்பும் திருக்கரத்தில் ஏந்தி நள்ளிருளில் நடமாடும் சிவபெருமான் ஆகும். அப்பெருமான் உறைகின்ற இடமாவது, அரவாகிய வாசுகி என்னும் பாம்பைத் கயிறாகக் கொண்டு ஆட்டிக் கடையும்போது உமிழ்ந்த கொடிய நஞ்சினை உண்டு விளங்கும் நெய்த்தானம் ஆகும். அதனை உரைப்பீராக.

156. நுகர்ஆரமொடு ஏலம்மணி
செம்பொன்னுரை உந்திப்
பகராவரு புனல்காவிரி
பரவிப் பணிந்து ஏத்தும்
நிகரால் மணல் இடுதண்கரை
நிகழ்வாயநெயத் தான
நகரான்அடி யேத்தந்தமை
நடைலயடை யாவே.

தெளிவுரை : நுகரும் மணம் மிக்க சந்தனம். ஏலம், மணிகள், பொன் ஆகியவற்றைப் பெருகும் நுரையால் உந்தி வரும் வெள்ளப் பெருக்கினை உடைய காவிரியானது. பணிந்து போற்றும் தன்மையில் மணலைக் கரை மருங்கில் சேர்க்கின்றது. அத்தகைய பெருமையுடைய நெய்த்தானத்திற்கு உரியவனாகிய ஈசன் திருவடியை வணங்கித் துதிக்கத் துன்பம் நம்மை அடையாது.

157. விடையார்கொடி உடையல்வணல்
வீந்தார்வெளை எலும்பும்
உடையார்நறு மாலைசடை
உடையார்அவர் மேய
புடையேபுனல் பாயும்வயல்
பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவர் என்றும்அமர்
உலகம்அடை யாரே.

தெளிவுரை : இடபக் கொவியை உடையவரும், எலும்பையும் கொன்றை மலரையும் மாலையாகக் கொண்டவரும் சடை முடியுடையவரும் ஆகிய ஈசன் விளங்கி நிற்கும் இடமாவது, பெருக்கெடுத்துப் பாயும் நீர்நிலைகளும் வயல்களும் சோலைகளும் சூழ்ந்த எக்காலத்திலும் அமர்ந்து விளங்கும் உலகமாகிய வீட்டு உலகத்தை அடைய மாட்டார்கள்.

158. நிழல்ஆர்வயல் கமழ்சோலைகள்
நிறைகின்றநெய்த் தானத்
தழலானவன் அனல்அங்கையில்
ஏந்திஅழ காய
கழலான்அடி நாளும்கழ
லாதேவிடல் இன்றித்
தொழலார்அவர் நாளும்துயர்
இன்றித்தொழு வாரே.

தெளிவுரை : கண்களுக்குக் குளிர்ச்சியான ஒளியைத் தருமாறு ஓங்கி வளர்ந்த வயல்களும், மணங் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானம் என்னும் நகருக்குரிய சோதியாக இருப்பவனான் சிவபெருமான் அழகிய திருக்கரத்தில் நெருப்பினை ஏந்தியவன். அப்பெருமானின் அழகிய திருவடியை நாள்தோறும் முறையாகத் தொழும் இயல்பினை உடையவர்கள் எந்நாளும் துயரின்றி மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். அத்தகைய பெருமை மிக்க அடியவர்கள் ஏனையோராலும் தொழப்படும் சிறப்பு உடையவராவர்.

159. அறையார்கடல் இலங்கைக்கு இறை
அணிசேர்கயி லாயம்
இறையாரமுன் எடுத்தான்இரு
பதுதோள்இற ஊன்றி
நிறைஆர்புனல் நெய்த்தானனன்
நிகழ்சேவடி பரவக்
கறைஆர்கதிர் வாள்ஈந்தவர்
கழல்ஏத்துதல் கதியே.

தெளிவுரை : ஒலிக்கும் கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனான் இராவணன், பெருமை மிக்க கயிலைமலையைத் தனது உடல் பலத்தின் காரணமாகத் கையார முன்னர் எடுத்தான்.  அவனது இருபது தோள்ளும் நலியுமாறு தன் திருப்பாத விரலால் ஊன்றினான், நீறைவான நீர் வளம் கொண்ட நெய்த்தானத்தில் விளங்கும் சிவபெருமான். தமது செம்மையான திருவடியைப் போற்றி வணங்கி அவ் அரக்கனுக்கு சந்திகாசம் என்னும் வாளை ஈந்து அருள் புரிந்தவர். அப்பெருமான் அவர்தம் திருவடி மலர ஏத்துதல் நல்ல கதியாகும்.

160. கோலம்முடி நெடுமாலொடு
கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாய்ஒளி
திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீர்அவை
தூவித்தொழுது ஏத்தும்
ஞாலம்புகழ் அடியார்உடல்
உறுநோய்நலி யாவே.

தெளிவுரை : பன்றி வடிவத்தைத் தாங்கிய திருமாலும், தாமரை மலர்மீது உறையும் பிரமனும், சிவபெருமானுடைய பெருமையை அறிதற்கு அரியதாகிய  பேரொளியாகத் திகழும் பெருமான் விளங்குவது நெய்த்தானம். விடியற்காலையில் மலரால் தூவி அருச்சனை செய்து தொழுது போற்றும் அடியவர்கள் உலகத்தாரால் போற்றப்படுவார்கள். அவர்களுக்கு உடற்பிணி இல்லை.

161. மத்தம்மலி சித்தத்துஇறை
மதிஇல்லவர் சமணர்
புத்தர்அவர் சொன்னம்மொழி
பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை
நெய்த்தானம்அது ஏத்தும்
சித்தம்உடை அடியார்உடல்
செறுநோய் அடை யாவே.

தெளிவுரை :  தெய்வ சித்தத்தைத் துறந்த சமணர் மற்றும் பௌத்தர்தம் சொற்களைப் பொருட்படுத்தாமல் நெய்தானத்தில் வீற்றிருக்கும் பெருமானைப் போற்றி வணங்கும் தன்மையுடையவர்ரகள் உடற்பிணி அடைய மாட்டார்கள்.

162. தலமல்கிய புனல்காழியுள்
தமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழால்மிகு
நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை
பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி
சேர்வர்சிவ கதியே.

தெளிவுரை : திருத்தலச் சிறப்பு மிக்கவர், சீகாழியின் தமிழ் ஞானசம்பந்தர். நிலவுலகின் புகழால் மிருந்த  நெய்த்தானத்தில் எழுந்தருளிய சிவபெருமானை நிகரில்லாத பல சிறப்புகளை உடைய பாடலாகிய அவர்தம் இத்திருப்பதிகத்தினை ஓதுபவர்கள் சிவகதி எனவும் உணர்த்தப் பெற்றது.

திருச்சிற்றம்பலம்

16. திருப்புள்ளமங்கை (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

163. பால்உந்தறு திரள்ஆயின
பரமன்பிர மன்தான்
போலும்திறல் அவர்வாழ்தரு
பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திறல் அறச்சாடிய
கடவுள்ளிடம் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை
அடையாவினை தானே.

தெளிவுரை : பாலின் திரட்சியைப் போன்று இனிமையானவன் பரமன். அவன் காலனுடைய வலிமையை இழக்கச் செய்தவன். அவனுடைய இடமாவது, பிரமனைப் போன்ற வேதத்தினை நாளும் ஓதும் சிறப்பினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புள்ளமங்கை என்னும் பதியில் விளங்கும் ஆலந்துறையாகும். அதனைத் தொழுபவர்களை வினை அடையாது.

164. மலையான்மகள் கணவன்மலி
கடல்சூழ்ந்த தன்மைப்
புலையாயின களைவான்இடம்
பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோர் அவர்
கருதித்தொழுது ஏத்த
அலைஆர்புனல் வருகாவிரி
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : கடல் சூழ்தலால் விளையும புலை மீசர் மணமானது மேலெழாதவாறு நறுமணத்தை நல்கும் பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்மை என்னும் ஊரில், கல்வியிலும் ஒழுக்கத்திலும் மிக்க மறைவர்கள் மனதாரத் தொழுது ஏத்திட, காவிரியாறு அலைகøளுயுடைய தீர்க்கத்தைத் தருமாறு திகழும் ஆலந்துறை உள்ளது. அங்கு கோயில் கொண்டு இருப்பவன் மலைமகள் தலைவன் ஆவன்.

165. கறைஆர்மிடறு உடையான்கமழ்
கொன்றைச்சடை முடிமேல்
பொறைஆர்தரு கங்கைப்புனல்
உடையான்புள மங்கைச்
சிறைஆர்தரு களிவண்டுஅறை
பொழில்சூழ்திரு ஆலந்
துறைஆனவன் நரைஆர்கழல்
தொழுமின்துதி செய்தே.

தெளிவுரை : விடத்தை <உண்ட கறை தோய்ந்த மிடறு உடையவன், வாசனை பொருந்திய கொன்றை மலரைச் சடை முடிமேல் தரித்துக் கங்கையை <உடையவன். அவன் திருப்புள்ளமங்கையில் வண்டுகள் சூழும் பொழிலை உடைய திரு ஆலந்துறையில் விரும்பி இருப்பவன். அப்பெருமானுடைய மணம் மிகுந்த மலர்ப்பதத்தைத் துதி செய்து வணங்குமின்.

166. தணிஆர்மதி அரவின்னொடு
வைத்தான்இட மொய்த்தெம்
பணியாய்அவன் அடியார்தொழுது
ஏத்தும்புள மங்கை
மணிஆர்தரு கனகம்மவை
வயிரத்திர ளோடும்
அணிஆர்மணல் அணைகாவிரி
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : குளிர்ச்சியான சந்திரன் பாம்புடன் சேர்ந்து இருக்குமாறு, தன் முடியில் வைத்திருப்பவனுடைய இடமாவது, அடியவர்கள் எல்லாம் மொய்த்து இருக்குமாறு கூடித்தொழுது ஏத்தும் திருப்புள்ளமங்கை. அவன் வீற்றிருக்கும் திருத்தலம், மாணிக்கம், பொன், வயிரம் யாவும் மணலொடு கொண்டு வரும் காவிரியின் இயல்பு கொள் ஆலந்துறை ஆகும்.

167. மெய்த்தன்னுறும் வினைதீர்வகை
தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்துஆர்அகில்
கொணர்காவிரி கரைமேல்
பொத்தின்னிடை ஆந்தைபல
பாடும்புள மங்கை
அத்தன்நமை ஆள்வான்இடம்
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : வினைப் பயனால் இப் பிறவி வாய்க்கப் பெற்றதையொட்டி அவ் வினை தீரும் வகையாக வேண்டும். ஈசனைத் வணங்கித் தொழுவதற்கு ஏற்ற வகையில் காவிரியானது மலர்களையுமம் சந்தனத்தையும் கொண்டு வருகின்றது. அக்காவிரியின் கரையில் சார்ந்த மரப் பொந்துகளில் வாழும் ஆந்தைகள் பாடும் திருப்புள்ளமங்கையில் வீற்றிருக்கும். அத்தன் நம்மை ஆள்பவன். அவனுடைய திருக்கோயில் ஆலந்துறை.

168. மன்ஆனவன் உலகிற்குஒரு
மழையானவன் பிழைஇல்
பொன்ஆனவன் முதல்ஆனவன்
பொழில்சூழ்புள மங்கை
என்ஆனவன் இசைஆனவன்
இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம்
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : உலகில் உள்ள பொருட்களில் பதிந்து ஒளிர்பவன்; மழையானவன்; குற்றமற்ற பொன் போன்று பிரகாசிப்பவன்; யாவற்றுக்கும் முதற்பொருளானவன்; பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் எனக்கு ஆனவன்; பாடும் இசையானவன்; இளஞாயிறு போன்ற செம்மையான சோதி வடிவானவன். அவன் வீற்றிருக்கும் இடம் ஆலந்துரை ஆகும்.

169. முடிஆர்தரு சடைமேல்முளை
இளவெண்மதி சூடிப்
பொடியஆடிய திருமேனியர்
பொழில்சூழ்புள மங்கைக்
கடிஆர்மலர் புனல்கொண்டுதன்
கழலே தொழுது ஏத்தும்
அடியார்தமக்கு இனியான்இடம்
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : திருமுடியில் விளங்கும் சடையில் இளமையான சந்திரனைச் சூடி, திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் நீரும் மலரும் கொண்டு பூசித்து வணங்குபவர்களுக்கு இனியவனாக இருப்பவன் ஈசன். அவன் வீற்றிருக்கும் இடம் ஆலந்துறை ஆகும்.

170. இலங்கைமனன் முடிதோள்இற
எழில்ஆர்திரு விரலால்
விலங்கல்லிடை அடர்த்தான்இடம்
வேதம்பயின்று ஏத்திப்
புலன்கள்தமை வென்றார்புகழ்
அவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையான்இடம்
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : இலங்கை மன்னன் தலைமுடியும் தோளும் நலியுமாறு அழகிய தனது திருப்பாத விரலால் மலைக்குக் கீழே துன்பம் கொள்ளத் தண்டித்தவன் இடமாவது, வேதம் நன்கு பயின்று, அதனை ஓதி, புலன்கள் ஐந்தினையும் வெற்றி கொண்டு ஆளும் தன்மையுடையவர்களாய், புகழ் கொள்ளும் பெருமக்கள் வாழும் திருப்புள்ளமங்கை ஆகும். அதில், கொன்றை மாலை அணிந்த சடையை உடையவனாகிய அவ் ஈசன் வீற்றிருப்பது ஆலந்துறை.

171. செறிஆர்தரு வெள்ளைத்திரு
நீற்றின்திரு முண்டப்
பொறிஆர்தரு புரிநூல்வரை
மார்பன்புள மங்கை
வெறிஆர்தரு கமலத்துஅயன்
மாலும்தனை நாடி
அறியாவகை நின்றான்இடம்
ஆலந்துறை அதுவே.

தெளிவுரை : நெருங்கி மேவி தூய்மை தரும் திருவெண்ணீற்றை திருநுதலில் தரித்து, முப்புரி நூல் மார்பில் திகழ விளங்குபவன் சிவபெருமான். அவன் தாமரை மலரின் மீது அமர்ந்துள்ள பிரமனும், திருமாலும் நாடிச் சென்றும் அறியாவகையில் திருப்புள்ளமங்கையில் நின்றான். அவன் இருப்பது ஆலந்துறை ஆகும்.

172. நீதிஅறி யாதார்அமண்
கையரொடு மண்டைப்
போதியவர் ஓதும்முரை
கொள்ளார்புள மங்கை
ஆதிஅவர் கோயில்திரு
ஆலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு
தன்மைபெறல் ஆமே.

தெளிவுரை : முறைமை அறியாத சமணர் மற்றும்ல பௌத்தர்கள் கூறும் உரைகளைக் கொள்ளாதவர்கள் வாழ்கின்ற திருப்புள்ளமங்கையில், மூலப்பொருளாக உடையவனுடைய கோயில் ஆலந்துறை ஆகும். ஆங்கு சென்று வணங்குபவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களும் மற்றும் அவ்வினத்தைச் சார்ந்த கின்னரர் முதலானோரும் ஏத்திடும் சிறப்பைப் பெறுவார்கள்.

173. பொந்தின்னிடைத் தேனூறிய
பொழிலசூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி
ஆலந்துறை யானைக்
கந்தமல்லி கமழ்காழியுள்
கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி
ஆடத்தவம் ஆமே.

தெளிவுரை : பொழில்கள் சூழ்ந்த நிலையில் மரப்பொந்துகளில் தேன் ஊறும் வளம் மிக்கது திருப்புள்ளமங்கை. ஆங்கு, குளிர்ந்த நீர் வரும் காவிரி சூழ்ந்த இடம் ஆலந்துறை அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை, மணம் கமழும் சீகாழியில் மேவும் ஞானசம்பந்தப்பெருமான் இசைத்த சந்தம் பெருகும் இத்திருப்பதிகத்தைப்பாடி, அதன் வழி மனம் இலயித்துத் தன்னை மறந்து பக்திப் பரவசத்தால் ஆடும் நிலையுடையவர்கள், தவம் செய்து அதனால் பெறுகின்ற பயனை உடையவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

17. திருஇடும்பாவனம் (அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம், திருவாரூர் மாவட்டம்)
 
திருச்சிற்றம்பலம்

174. மனம்ஆர்தரு மடவாரொடு
மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம்ஆர்தரு சங்கக்கடல்
வங்கத்திரள் உந்திச்
சினம்ஆர்தரு திறள்வாள்எயிற்று
அரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : மனத்திற்கு இசைந்த மகளிரொடு மகிழும் இளைஞர்கள் மலர் தூவி இருக்க, அரக்கனுடைய குன்றளூரில் செல்வப் பெருக்கை நிலை நாட்டும் தனங்கள் பெருக, யோகிகளாகிய தவசிகள் இறைவனை ஏத்துகின்றனர். அந்த இடம் இடும்பாவனம் ஆகும்.

175. மலைஆர்தரு மடவாள்ஒரு
பாகம்மகிழ்வு எய்தி
நிலைஆர்தரு நிமலன்வலி
நிலவும்புகழ் ஒளிசேர்
கலைஆர்தரு புலவோர்அவர்
காவல்மிகு குன்றில்
இலைஆர்தரு பொழில்சூழ்தரும்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழ்வெய்திய ஈசன், ஒளிமிகுந்த குன்றளூரில், அடர்த்தியான பொழில்கள் சூழ்ந்த தேவர்கள் தொழுது ஏத்துவது, விளங்கும் இடும்பாவனம் ஆகும்.

176. சீலம்மிகு சித்தத்தவர்
சிந்தித்து எழும்எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்த்தரும்
உலகத்தவர் நலம்ஆர்
கோலம்மிகு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
ஏலம்கமழ் பொழில்சூழ்தரும்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : நல்லொழுக்கம், எளிமை, தூய்மை, தவம் முதலான நற்பண்புகள் செழிப்பாகக் கொண்ட, சீலம் மிகுந்த சிந்தனை யுடையவர்களின் மனத்தில் எழும் எந்தையாகிய ஈசன், உலகத்தவர் நலம் பெறுவதற்காக, அழகிய மகளிர் வாழும் குன்றளூரில் வாசனை பொருந்திய மலர்கள் சூழும் இடும்பாவனத்தில் கோயில் கொண்டுள்ளவன்.

177. பொழில்ஆர்தரு குலைவாழைகள்
எழில்ஆர்தரு போழ்தில்
தொழிலால்மிகு தொண்டர்அவர்
தொழுதுஆடிய முன்றில்
குழல்ஆர்தரு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
எழில்ஆர்தரும் இறைவர்க்கு இடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : பொழில்கள் நிறைந்த அந்தக் குன்றில் வாழை மரங்கள் குலைகள் ஈன்று அழகையும் வளத்தையும் தருவனவாகும். இறைபக்தி மேலீட்டால் பணி செய்யும் திருத்தொண்டர்கள் தொழுது ஆடி மகிழவும், மலர் சூடிய கூந்தலை உடைய மகளிர் மிகுந்து உடன் பணி ஆற்றும் எழில் மிக்கது, இடும்பாவனம். இதுவே இறைவனுக்கு உரிய இடமாயிற்று.

178. பந்தார்விரல் உமையாள்ஒரு
பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய
செழுநீர்வயல் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ்
குரவம்கமழ் குன்றில்
எந்தாய்என இருந்தான் இடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை :  பந்தணையும் விரலி என்னும் திருநாமம் கொண்ட உமாதேவியை ஒரு பாகத்திலும், கங்கையைத் திருமுடியிலும் உடையவன் ஈசன். அவன், செந்தாமரை மலர்கள் விளங்கும் நீர்நிறைந்த வயல்களும் புன்னையும் குரவமும் கமழும் குன்றளூரில் இடும்பாவனம் திகழ எம் தந்தையாக வீற்றுள்ளான்.

179. நெறிதீர்மையர் நீள்வானவர்
நினையும் நினைவாகி
அறிநீர்மையில் எய்தும்அவர்க்கு
அறியும் அறிவு அருளிக்
குறிநீர்மையர் குணம் ஆர்தரு
மணல்ஆர்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : ஒழுக்க நெறியின்கண் நின்று மேவும் இனிமை மிக்கவர்களும், உயர்ந்தவர்களாகிய வானவர்களும் நினைந்து போற்றும் நிலையில் நெஞ்சிற் பதியும் பொருளாகி, மெய்ஞ்ஞான நிலையால் அறிபவர்களுக்கு ஏற்ப உயர்ந்த ஞானத்தை அளித்து, அத்தகையவர்களுக்கு மெய்ஞ்ஞானப் பொருளாகி, உருவத் தோற்றத்தில் மகிழந்து அந்த நெறியில் அதற்கே உரிய குண விசேடத்தோடு மணம் பரப்பும் குன்றளூரில் நீர்பாயும் வயல்கள் நெருங்கிச் சூழ்ந்த இடும்பாவனத் தில் ஈசன் விளங்குகின்றான்.

180. நீறுஏறிய திருமேனியர்
நிலவும்முல கெல்லாம்
பாறுஏறிய படுவெண்தலை
கையில்பலி வாங்காக்
கூறுஏறிய மடவாள்ஒரு
பாகம்மகிழ் வெய்தி
ஏறுஏறிய இறைவர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : திருவெண்ணீறு பதியுமாறு மிக்கப் பூசிய திருமேனி உடையவர், கையில் கபாலம் ஏந்திப் பிச்சை கொண்டவர், உமாதேவியை ஒரு பாகமாக உடையவர், இடபத்தின் மீது ஏறியவர்; இத்தகைய தன்மையுடைய இறைவனுக்கு இடமாக உடையது இடும்பாவனம்.

181. தேர்ஆர்தரு திகழ்வாள் எயிற்று
அரக்கன்சிவ மலையை
ஓராதுஎடுத்து ஆர்த்தான்முடி
ஒருபஃதுஅவை நெரித்துக்
கூர்ஆர்தரு கொலைவாளொடு
குணநாமமும் கொடுத்த
ஏர்ஆர்தரும் இறைவர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : வானத்தில் தேர்மீது இவர்ந்து வந்து ஒளி போன்ற பற்களை உடைய அரக்கன், ஆராய்ந்து பார்க்காமல் கயிலை மலையைப் பெயர்த்து ஆராவாரம் செய்தான். அஞ்ஞான்று அவனது பத்துத் தலைகளையும் நெரியுமாறு செய்த இறைவன், பின்னர் அவ்வரக்கனின் இசையால் மகிழ்ந்து தெய்வத்தன்மை பொருந்திய வாட்படையும் இராவணன் என்னும் பெயரையும் நல்கினான். சிறப்புப் பொருந்திய அவ்ஈசன் விளங்கும் இடம் இடும்பாவனம்.

182. பொருள்ஆர்தரு மறையோர்புகழ்
விருத்தர்பொலி மலிசீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு
சந்தம்மலர் பலதூ
மருளார்தரு மாயன்னயன்
காணார்மயல் எய்த
இருளார்தரு கண்டர்க்குஇடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : உண்மைப் பொருள் விளக்கும் மறையை ஓதுபவர்களும், புகழ் மிக்க முதுபெரும் மாந்தர்களும் பொலிய, நன்றாகத் தெளிந்த சிந்தையால் மணம் பொருந்திய மலர்களால் ஈசனைப் பூசிக்கின்றனர். மருள் உற்ற திருமாலும், நான்முகனும் மயங்கிய தன்மையால் இறைவனைக் காண முடியாதவாறு ஆயினர். அத்தகைய ஈசன் கரிய கண்டத்தை உடையவன். அவனுக்கு இடமாக விளங்குவது இடும்பாவனம் ஆகும்.

183. தடுக்கைஉடன் இடுக்கித்தலை
பறித்துச் சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க் கூறைகள்
உடம்புஇட்டுஉழல் வாரும்
மடுக்கண் மலர் வயல்சேர்செந்நெல்
மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவான்இடம்
இடும்பாவனம் இதுவே.

தெளிவுரை : தலை முடியைக் களைந்தும் காவியுடை கொண்டும் இருக்கும் சமணர்களும் பௌத்த மதத்தினரும் இடுக்கண் நீங்குமாறு செய்பவனாகிய ஈசன் இடம், மலர்களும் நெல் வயல்களும் நீர்நிலைகளும் மலிந்த இடும்பாவனம் ஆகும்.

184. கொடிஆர்நெடு மாடக்குன்ற
ளூரிற் கரைக்கோல
இடிஆர்கடல் அடிவீழ்தரும்
இடும்பாவனத்து இறையை
அடிஆயும்அந் தணர்காழியுள்
அணிஞானசம் பந்தன்
படியால்சொன்ன பாடல்சொலப்
பறையும்வினை தானே.

தெளிவுரை : அலங்காரத் தோரணங்களையுடைய நெடிய மாடமாளிகைகள் கொண்ட குன்றளூரில் எழுந்தருளியுள்ள இடும்பாவனத்து இறைவனை ஞானசம்பந்தப் பெருமான் அவ் அவர்க்குப் பொருந்தியபடி சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதிட வினை அழியும்.

திருச்சிற்றம்பலம்

18. திருநின்றியூர் (அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

185. சூலம்படை கண்ணப்பொடி
சாந்தம்கடு நீறு
பாலம்மதி பவளச்சடை
முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு
போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி
யூரின்நிலை யோர்க்கே.

தெளிவுரை : திருநின்றியூரில் நிலைபெற்றுள்ள ஈசனுக்குச் சூலம் படையாகவும், திருவெண்ணீறு சாற்றும் பொடியாகவும் உள்ளது; பவளம் போன்ற சிவந்த சடை முடியில் பால்போன்ற வெண்மையான சந்தரன் அழகுடன் விளங்குகின்றது; மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனுடைய வலிமையைத் தனது திருப்பாதத்தால் போக்கிய பெருமையால், என்றும் குளுமை நிலைத்து விளங்குவதாகிறது.

186. அச்சம்மிலர் பாவம்மிலர்
கேடும்மிலர் அடியார்
நிச்சம்முறு நோயும்மிலர்
தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிடறு உடையார்நறுங்
கொன்றைநயந்து ஆளும்
பச்சம்முடை அடிகள்திருப்
பாதம்பணி வாரே.

தெளிவுரை : திருநின்றியூரில் எழுந்தருளியுள்ள ஈசனைப் பணியும் அடியவர்களுக்கு அச்சம் ஏற்படுவதில்லை; பாவ காரியங்களைச் செய்ய மாட்டார்கள்; கால பேதத்தாலும் மற்றும் காரிய பேதத்தாலும் அவ்வப் போது உடலுக்கு ஏற்படும் நோயும் இல்லை. அப்பெருமான், நஞ்சு அருந்திய கண்டத்தை உ<டையவராய் நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சூடியவர். அவர் அன்பு உடையவர்.

187. பறையின்னொலி சங்கின்னொலி
பாங்காரவும் ஆர
அறையும் மொலி எங்கும்மவை
அறிவார்அவர் தன்மை
நிறையும்புனல் சடைமேல்உடை
அடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதுஎனது
உள்ளம்உண ராதே.

தெளிவுரை : நின்றியூரில் திருவிழாக்கள் நடைபெறுவதை யொட்டி எழும் வாத்தியங்களின் ஒலியும், சங்கின் ஒலியும் பாங்குடன் பொருந்தி எழ, அர, அர என்றும் சிவ, சிவ என்றும் பக்தர்கள் ஒலிக்கும் சிவ ஒலிகள் எல்லா இடத்திலும் பரவ, அவற்றை நன்கு அறியும் தன்மையுடையவர் நிறைந்த கங்கையைத் தன் சடைமேல் தரித்திருக்கும் ஈசன் ஆவார். அத்தகைய இறைவனை யல்லாது வேறு வகையான பொருளின் மீது என் உள்ளம் சாராது.

188. பூண்டவ்வரை மார்பில்புரி
நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு
பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு
நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழில்அல்லது
அறியார்அவர் அறிவே.

தெளிவுரை : நாகத்கை அணிகலனாகப் பூண்ட மலை போன்ற விசாலமான மார்பில் பூணூல் திகழவும், சடையில் நன்கு விரிந்த கொன்றை மலரும், பால் போன்ற சந்திரனும் தரித்து விளங்குபவன் பரமன். அப்பெருமான் , சோலை சூழ் நின்றியூரில் இருப்பவன். அவனைத் தொழுதால் அன்றி அப்பெருமானின் சிறப்பினை அறிய முடியாது.

189. குழலின்னிசை வண்டின்னிசை
கண்டுகுழில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில்
சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கைஅது
ஏந்திஅனல் ஆடும்
கழலின்னொலி ஆடும்புரி
கடவுள்களை கண்ணே.

தெளிவுரை : புல்லாங்குழலின் வழி எழும் இசையானது, வண்டின் இசையாய்த் தோன்றுமாறு செய்ய, அதனை யொட்டிக் குயிலும் உடன் சேர்ந்து கூவி இசை எழுப்ப, அடர்த்தியான நிழலைத் தரும் சோலை சூழ்ந்த நின்றியூரில், நெருப்பைப் போன்று வலிமையான படையாகிய மழுவை ஒரு கரத்தில் ஏந்தி மற்றொரு கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடவும், நடனம் புரியும் திருப்பாதம் கழலின் ஒலி சேர்க்கவும், ஈசன் திகழ்கின்றான். அத்தகைய கடவுள் நமக்குப் பற்றுக் கோடாக உள்ளவன்.

190. மூரல்முறு வல்வெண்நகை
உடையாள்ஒரு பாகம்
சாரல்மதி அதனோடுடன்
சலவம் சடை வைத்த
வீரன்மலி அழகார்பொழில்
மிடையும்திரு நின்றி
யூரன்கழல் அல்லாதுஎனது
உள்ளம்உண ராதே.

தெளிவுரை : புன்முறுவல் விளங்கும் ஒளிதிகழ் உமாதேவியை ஒரு பாகத்திலும், சந்திரனும் கங்கையும் அழகிய சடைமுடியிலும் வைத்த சிவபெருமான் பொழில் சூழும் திருநின்றியூரன் ஆவான். அவனுடைய திருக்கழலை யல்லாது வேறு எதிலும் என் உள்ளம் சாராது.

191. பற்றிஒரு தலைகையினில்
ஏந்திப்பலி தேரும்
பெற்றிஅது வாகித்திரி
தேவர்பெரு மானார்
சுற்றிஒரு வேங்கைஅத
ளோடும்பிறை சூடும்
நெற்றிஒரு கண்ணார் நின்றி
யூரின் நிலை யாரே.

தெளிவுரை : ஒரு கரத்தில் பிரம கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாக ஏந்திப் பலி கொள்வதைத் தேர்ந்தெடுத்த பெற்றியில் திரிந்த தேவர் பெருமான். புலியின் தோலை ஆடையாகக் கொண்டும், சந்திரனைத் திருச்சடையில் சூடிக் கொண்டும், நெற்றியில் ஒரு கண் கொண்டு நின்றியூரில் நிலைபெற்றவர் ஆயினார்.

192. நல்லம்மலர் மேலானொடு
ஞாலம்மது உண்டான்
அல்லர்என ஆவர்என
நின்றும்அறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி
யூரின்நிலை யார்எம்
செல்வர்அடி அல்லாதுஎன
சிந்தைஉண ராதே.

தெளிவுரை : அழகிய நல்ல மலராகிய தாமரை மலர் மேல் உறையும் பிரமனோடு, உலகத்தை உண்டு உமிழ்ந்தவனாகிய திருமாலும், காணவில்லை எனவும். காணப்பட்டான் எனவும் தமக்குள் விவாதம் செய்தும் அறிவரியவனாய் நெல் வயல் சூழ்ந்த நின்றியூரில் நிலைத்துள்ளார், ஈசன். அவரே எம் செல்வர். அப்பெருமானுடைய திருவடியை அல்லாது என் சிந்தை வேறொன்றினை உணராது.

193. நெறியில்வரு பேராவகை
நினையாநினை ஒன்றை
அறிவில்சமண் ஆதர்உரை
கேட்டும்மய ராதே
நெயில்லவர் குறிகள்நினை
யாதேநின்றி யூரில்
மறிஏந்திய கையான்அடி
வாழ்த்தும்மது வாழ்த்தே.

தெளிவுரை : நன்னெறியில் வருவனவற்றை அந்நெறியில் இருந்து மாறுபடாதவாறு உரைத்தலை நினையாத சமணர் போன்றோர் உரைகளைக் கேட்டு மயக்கம் கொள்ளாமல், நின்றியூரில் மழு ஏந்திய திருக்கரத்தை உடைய ஈசனைப் போற்றுவது மெய்யான வாழ்த்து ஆகும்.

194. குன்றம்மது எடுத்தான்உடல்
தோளும் நெரிவு ஆக
நின்றுஅங்கு ஒரு விரலால்உற
வைத்தான் நின்றி யூரை
நன்றுஆர்தரு புகலித்தமிழ்
ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை
வின்றிநிறை புகழே.

தெளிவுரை : கயிலாய மலையை எடுத்தவனாகிய இராவணன் உடலும் தோளும் நெரியுமாறு புரிந்து, ஒரு விரலால், பின்னர் நன்மை உறுமாறு செய்தான், அவன் வீற்றிருந்து அருளும் நின்றியூரை ஞானசம்பந்தப் பெருமான் இசைத்த எக்காலத்தும் குறைவுபடாத தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை உரைப்பவர்களுக்கு நிறை புகழ் உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

19. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

195. பிறைஅணி படர்சடை முடிஇடை பெருகிய
புனல்உடை யவன்இறை
இறைஅணி வளைஇணை முலையவள் இணைவனது
எழில்உடை இடவகை
கறைஅணி பொழில்நிறை வயல்அணி கழுமலம்
அமர்கனல் <உருவினன்
நணைஅணி மலர்நறு விரைபுல்கு நலமலி
கழல்தொழல் மருவுமே.

தெளிவுரை : இறைவன், சடை முடியில் பிறைச் சந்திரனும், கங்கையும் <உடையவன்.  முன் கையில் வளையலை அணியாகப் பெற்ற உமாதேவியை எழிலுடன் இடப்பாகமாகக் கொண்டு, அடர்த்தியான சோலையும், நிறைவாய்ப் பயன் தரும் வயல்களும் அழகுடன் விளங்கும் கழுமல நகரில் வீற்றிருக்கும் தழல் உருவினன் அவன். அவனுடைய திருவடி நறுமணம் உடையதும் தேன் ததும்பும் மலர் போன்றதும் ஆகும். அத்தகைய திருவடியைத் தொழுது பற்றி இருக்க வேண்டும்.

196. பிணிபடுகடல்பிற விகள்அறல் எறிதுஉளது
அதுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதுஅமர் அனல்உரு
வினன்அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வளர் இளமதி புனைவனை
உமைதலை வனைநிற
மணியடு கறைமிட றனைநல மலிகழல்
இணைதொழல் மருவுமே.

தெளிவுரை : பிறவி என்பது கடல் போன்று பரந்து ஆசையாகிய பெரிய பெரிய அலைகளைக்  கொண்டது. அது அனைவரையும் பிணித்துக் கட்டும் தன்மையுடையது. அதிலிருந்து நீங்குவதற்கு எளிய வழி உள்ளது. அது, அணி மிகுந்த கழுமலத்தில் இனிமையுடன் வீற்றிருக்கும் நெருப்புப் போன்ற செம்மேனியனாகவும், ஒளிரும் சடையின் மீது குளிர் இளஞ் சந்திரனைச் சூடியுள்ளவனாகவும் உள்ளவனாகிய உமாதேவியின் தலைவனை, நீல மணியைப் போன்ற கரிய கண்டம் உடைய ஈசனை, அவனது நலம் தரும் திருவடிகளைத் தொழுது அன்புடன் பற்றி நிற்றல் சிறந்ததாகும்.

197. வரியுறு புலிஅதள் உடையினன் வளர்பிறை
ஒளிகிளர்கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில் விழஒலி
மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி இரவொடு
பகல்பர வுவர்தமது
எறியுறு வினைசெறி கதிர்முனைஇருள்கெட
நனினினை வெய்துமதே.

தெளிவுரை : ஈசன், வரிகளையுடைய புலித்தோல் உடையை உடையவன்; வளரும் பிறைச்சந்திரனும் ஒளியைக் கிளர்ந்து நல்கும் அடர்த்தியான சடை முடியும் உடையவன், அவ் இறைவன். அவன், திருவிழாக்களின் ஒலி மிகுந்த கழுமல நகரில் வீற்றுள்ளான். தீப்போன்ற சிவந்த திருமேனியனாகிய அப் பெருமானுடைய திருவடியை, இரவும் பகலும் போற்றி வணங்குபவர்களுக்கு, அவர் தம் துன்புறுத்தும் வினைகள், சூரியனைக் கண்ட இருள்போன்று கெடுவதற்கு, இறைவன்பால் பற்று உண்டாகும்.

198. வினைகெட மனநினை வதுமுடி கெனின்நனி
தொழுது எழு குலமதி
புனைகொடி இடைபொருள் தருபடு களிறினது
உரிபுதை உடலினன்
மனைகுட வயிறுடை யனசில வருகுறள்
படையுடை யவன்மலி
கனைகடல் அடைகழு மலம்அமர் கதிர்மதி
யினன் அதிர் கழல்களே.

தெளிவுரை : வினை யாவும் தீர்வதற்கு மனமானது இறைவனை நினைக்க வேண்டும். அது முடிய வேண்டும் என்றால், இளம் பிறை சூடி, உமாதேவியை இடமாகக் கொண்டு, யானையின் தேலை உரித்துப் போர்வையாக்கி, குடம் போன்ற பெரிய வயிற்றையுடைய பூதம் படையுடையவனாகிய, கழுமலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் ஒலிக்கும் திருவடியைத் தொழுது போற்ற வேண்டும்.

199. தலைமதி புனல்விட அரவுஇவை தலைமையது
ஒருசடையிடை யுடன்
நிலைமரு வவூர்இடம் அருளினன் நிழல்மழு
வினொடுஅழல் கணையினன்
மலைமரு வியசிலை தனில்மதில் எரியுண
மணமருவினன் நல
கலைமரு வியபுறவு அணிதரு கழுமலம்
இனிதுஅமர் தலைவனே.

தெளிவுரை : இளம்பிறை, கங்கை, விஷம் பொருந்திய பாம்பு இவற்றைத் தலைமையாகக் கொண்டவற்றை ஒப்பற்ற சடையின்  இடையில் தத்தமது இயல்பான குணமான யாவும் நீங்கி விளங்குமாறு பொருந்தச் செய்தவன் ஈசன். அவன் ஒளிமிகும் மழுப்படையை உடையவன்; மேருமலையை வில்லாகவும், அக்னியைக் கணையாகவும் கொண்டு முப்புரத்தை எரியுமாறு செய்து அன்புடையவர்கள் நெஞ்சில் கலந்தவன். அவன், காடுகளைப் போன்ற அடர்த்தியான மரங்களுடைய அழகு வளர் கழுமல நகரில் இனிது வீற்றிருக்கும் தலைவனே.

200. வரைபொருது இழிஅரு விகள்பல பருகுஒரு
கடல்வரி மணலிடை
கரைபொரு திரைஒலி கெழுமிய கழுமலம்
அமர்கனல் உருவினன்
அரைபொரு புலிஅதள் உடையினன் அடிஇணை
தொழவரு வினைஎனும்
உரைபொடி படஉறு துயர்கெட உயர்உலகு
எய்தல்ஒரு தலைமையே.

தெளிவுரை : மலைகளைக் கடந்து, பெருகிப் பாயும் அருவிகள் பலவற்றைக் கொள்ளும் கடலின் கரைமேல் அலைகள் ஒலி எழுப்ப விளங்கும் கழுமலத்தின்கண் எழுந்தருளியுள்ள தீவண்ணன், அரையில் பொருந்திய புலித்தோல் ஆடை உடையவன். அவனது இணை படியைத் தொழுத ஞான்று, மக்கட் பிறவிக்கு வினை தான் காரணம் என்று சொல்லப்படும் சொல்லானது பொருள் அற்றதாகும். உற்ற துயரும் கெடும். உயர்ந்த உலகமாகிய சிவனடி சார்தல் உறுதி.

201. முதிர்உறு கதிர்வளர் இளமதி சடையனை
நறநிறை தலைதனில்
உதிர்உறு மயில்பிணை தவிர்தசையுடைபுலி
அதள்இடை இருள்கடி
கதிர்உறு சுடர்ஒளி கெழுமிய கழுமலம்
அமர்மழு மலிபடை
அதிர்உறு கழல்அடி களது அடிதொழும்அறிவு
அலதுஅறி அறியமே.

தெளிவுரை : தேன் சொரியும் மலர் நிறைந்த சடையை உடைய முடியில் முற்றிய கதிர்களை உமிழும் இளமதியைச் சூடியவன் ஈசன். அவன், புலித்தோலை உடுத்தி ஒளி மிகும் கழுமல நகரில் மழுப்படை ஏத்தி வீற்றிருப்பவன். அப்பெருமானின் ஒலிக்கும் திருவடியைத் தொழுது போற்றும் அறி பெற்றவர் ஆவோம். அதைத்தவிர வேறு யாதும் அறிய மாட்டோம்.

202. கடல்என நிறநெடு முடியவன் அடுதிறல்
தெறஅடி சரண்என
அடல்நிறை படைஅரு ளியபுகழ் அரவுஅரை
யினன்அணி கிளர்பிறை
விடநிறை மிடறுடை யவன்விரி சடையவன்
விடையுடை மிடறுடை யவன்விரி சடையவன்
விடையுடை யவன்உமை
உடன்உறை பதிகடல் மறுகுஉடைஉயர்கழு
மலவியன் நகரதே.

தெளிவுரை : கருமையான நிறமுடைய இராவணனுடைய முடியின் வலிமையை அழித்து, பின்னர் அவ் அரக்கன் சரணாகதியாய்த் திருவடியை வணங்கிய போது தெய்வப் படை அருளியவன் ஈசன். புகழ் மிக்க நாகத்தை அணிந்து, வளர்ந்து எழுச்சி கொளும் சந்திரனைச் சூடி, நஞ்சினைக் கழுத்தில் இருத்தி, விரிந்த சடை முடியும், இடப வாகனமும் கொண்டு, உமாதேவியுடன் விளங்கும் அத் தலைவன், கடல் பெருக்கெடுத்துப் பிரளயம் தோன்றும் காலத்திலும் நிலையாக உள்ள கழுமலம் என்னும் பதியில் உறைபவன்.

203. கொழுமலர் உ<றைபதி <உடையவன் நெடியவன்
எனஇவர் களும்அவன்
விழுமையை அளவறி கிலர்இறை விரைபுணர்
பொழில்அணி விழவுஅமர்
கழுமலம் அமர்கனல் உருவினன் அடிஇணை
தொழுமவர் அருவினை
எழுமையும் இலநில வகைதனில் எளிதுஇமை
யவர்வியன் உலகமே.

தெளிவுரை : வளமையான தாமரை மலரில் மேவும் பிரமனும், நெடியவனாகிய திருமாலும் ஈசனுடைய சிறப்பினைச் சிறிதளவும் அறியாதவராயினர். மணம் பொருந்திய சோலைகளும் திருவிழாக்களும் எப்போதும் விளங்கும் கழுமல நகரில் வீற்றிருக்கும் தீவண்ணனின் திருவடியைத் தொழுபவர்களுக்கு, வினையானது ஏழு பிறப்புக்களுக்கு இல்லை. தேவலோகத்தில் உள்ள அத்தனை பெருமையும் இந்த உலகத்தில் எளிதாக அமையும்.

204. அமைவன துவர்இழு கியதுகில்அணி உடை
யினர்அமண் உருவர்கள்
சமையமும்ஒரு பொருள் எனும்அடை சலநெறி
யனஅற உரைகளும்
இமையவர்தொழு கழுமலர் அமர்இறைவனது
அடிபரவுவர்தமை
நமையல வினைநலன் அடைதலில் உயர்நெறி
நனிநணு குவர்களே.

தெளிவுரை : துவர் ஆடையை உடைய பௌத்தர்களும் சமணர்களும் ஒன்றினைச் சொல்வதாகக் கூறுவது நிலைத்து நிற்காத நெறி. எனவே அதனை விடுத்து, தேவர்கள் தொழுது போற்றும் கழுமலத்தில் வீற்றிருக்கும் ஈசனைப் போற்றுபவர்கள், வருத்தம் தரும் வினைகளே நன்மை பயப்பனவாய் உயர்ந்த நெறியில் விளங்குவார்கள்.

205. பெருகிய தமிழ்விர கினன்மலி பெயர்அவன்
உ<றைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடல்அடை கழுமலம்
உறைவிடம் எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி
யனஒரு பதும்உடன்
மருவிய மனம்உடை யவர்மதி உடையவர்
விதியுடை யவர்களே.

தெளிவுரை : திருப்பதிகத்தால் இனிமை தரும் தமிழை விரும்பும் திருஞானசம்பந்தர், கருமையான நிறமுடைய கடலின் அலைகள் பொருந்தும் கழுமலமானது சிவபெருமான் உறைகின்ற இடமாகக் கொண்டு போற்றிப் பாடிய இத் திருப்பாடல்களை மனத்தால் பொருந்திப் பாடுபவர்கள் அறிவுடையார் ஆவார்கள். நல்விதியை உடையவர்களும் அவர்களே.

திருச்சிற்றம்பலம்

20. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

206. தடநிலவியமலை நிறுவியொர் தழல்உமிழ்
தருபட அரவுகொடு
அடல்அசுரரொடுஅம ரர்கள் அலைகடல்கடை
உழிஎழு மிகுசின
விடம் அடைதருமிட றுடையவன் விடைமிசை
வரும்அவன் உறைபதி
திடமலிதருமறை முறைஉணர் மறையவர்
நிறைதிரு மிழலையே.

தெளிவுரை : மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்கிற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறத்திலும், அசுரர்களண ஒருபுறத்திலும் பாற்கடலைக் கடைந்தபோது கொடிய விடம் எழ, அதனை மிடற்றில் தேக்கியவன், இடபவாகனத்தில் வரும் ஈசன் ஆவான். அப்பெருமான் உறைகின்ற பதி வேதத்தை முறையாகக் கற்றுணர்ந்த மறையவர்கள் வாழும் திருவீழிமிழலை யாகும்.

207. தரையொடு திவிதல நலிதருதகுதிறல்
உறுசலதரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை
அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதிபொதிசடை
யவன்உறை பதிமிகு
திரைமலிகடல்மணல் அணிதரு பெறுதிடர்
வளர்திரு மிழலையே.

தெளிவுரை : பூவுலகத்தையும் விண்ணுலகத்தையும் நலிவடையச் செய்த வெண்மையான பலத்தை உடைய சலந்தராசுரனுடைய மலை போன்ற தலை அறுந்து விழுமாறு செய்த சக்கராயுதப் படையைத் திருமால் பெறுவதற்கு அருள் புரிந்தான் ஈசன். அப்பெருமான், புகழ் மிக்க கங்கையும் சந்திரனும் தன் சடை முடியில் இருக்கச் செய்தவன். அவன் உறைகின்ற பதியானது அலைகடல் மணல் மேட்டைப் போன்ற திட்டுகள் உடைய திருவீழிமிழலை ஆகும்.

208. மலைமகள் தனைஇகழ் வதுசெய்த மதியறு
சிறுமனவனது உயர்
தலையினொடு அழல்உரு வனகரம் அறமுனி
வுசெய்தவன் உறைபதி
கலைநில வியபுல வர்கள் இடர்களைதரு
கெடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில்
வளர்திரு மிழலையே.

தெளிவுரை : உமாதேவியை மதியாமல் இழிவு செய்த மதியற்ற தட்சப் பிரமனுடைய தலையோடு அக்கினி தேவனுடைய கரங்களையும் அறுந்து வீழுமாறு சினம் கொண்டு தண்டித்த ஈசன் உறையும் நகரானது, கலைப் பண்பு நிலவும் புலவர்களும், பிறருடைய இடரைப் போக்கும் வகையில் கொடைமிக்க செல்வந்தர்களும் உடைய, உயர்ந்த மதில்களும் அதனைச் சூழ்ந்த சோலைகளும் உள்ள திருவீழிமிழலை யாகும்.

209. மருவபர்புரமெரி யினன்மடிதரஒரு
கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நல மலிதருகரன்உர
மிகுபிணம் அமர்வன
இருளிடை அடைஉற வொடுநட விசைஉறு
பரன்இனிது உறைபதி
தெருவினில் வருபெரு விழஒலிமலிதர
வளர்தரு மிழலையே.

தெளிவுரை : ஈசன், அன்பு துளியும் இன்றி தீங்கு செய்யும் தொழிலும் பகைமையும் உடைய மூன்று அசுரர்களின் கோட்டைகளும் எரிந்து அழியுமாறு, ஓர் அம்பினை ஏவும் பெரும் வலிமையுடையவன்; நல்லருள் யாண்டும் புரியும் கரங்களை யுடையவன்; இடுகாட்டில் நள்ளிரவில் நடம் பயில்பவன். அவன் இனிது உறையும் பதியானது விழாக்கள் பெருகும் திருவீழிமிழலை.

210. அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும்
அடிஇணை இருவர்கள்
பணிதர அறநெறி மறையொடும் அருளிய
பரன்உறை விடம்ஒளி
மணிபொருவரு மரகத நிலமலிபுனல்
அணைதரு வயல்அணி
திணிபொழில் தருமணம் அதுநுகர் அறுபதம்
முரல்திரு மிழலையே.

தெளிவுரை : அழகு பெறும் ஆல் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் தெளிவுறுமாறு அறநெறி புகன்ற இறைவன் உறைகின்ற இடமாவது, மாணிக்க மணிகளும் மரகத மணிகளும் விளங்க, நீர் வளம் பெருகும் வயல்களும், அழகிய சோலைகளும் பெருக, வண்டுகள் ஒலி எழுப்பித் தேனைப் பருகி மகிழும் பெற்றியை உடைய திருவீழிமிழலை ஆகும்.

211. வசையறு வலிவன சரஉரு வதுகொடு
நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகள்அணிவுறுதிறல்
அமர்மிடல் கொடுசெய்து
அசைவில படைஅருள் புரிதரும் அவன்உறை
பதியது மிகுதரு
திசையின் இனமலர்குல வியசெறிபொழில்மலி
தருதிரு மிழலையே.

தெளிவுரை : குற்றம் இல்லாத வலிமையுடைய வேடன் உருவம் தாங்கி உமாதேவியார் காணுமாறு, தவம் செய்து விசயனுடைய திறமையை அறியுமாறு காட்டும் வலிமை மிக்க போர் செய்து, அசைக்க முடியாத பாசுபதம் என்னும் படையை அருளிய சிவபெருமான் உறைகின்ற பதியானது, எல்லாத் திசைகளிலும் கொத்துக் கொத்தாக மலர் விளங்கும் பொழிலை உடைய திருவீழிமிழலை யாகும்.

212. நலமலிதருமறை மொழியொடு நதியுறு
புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவன்
உயிரது கொளவரு
சலமலி தருமறலிதன்உயிர்கெடஉதை
செய்தஅரன் உறைபதி
திலகம் இதுஎனஉல குகள்புகழ்தருபொழில்
அணிதிரு மிழலையே.

தெளிவுரை : நலந்தரும் வேத மந்திரங்களை ஓதியும், புனிதமான தீர்த்தம் மற்றும் தூப தீபம், மலர், இவற்றால் பூசித்து ஆராதனை செய்து வழிபடும் மார்கண்டேயரின் உயிரைக் கொண்டு செல்வதற்காக வந்த வஞ்சனையுடைய எமனின் உயிர் கெடுமாறு திருப்பாதத்தால் உதைத்த சிவபெருமான் உறைகின்ற பதியானது, நகர்களுள் திலகம் போன்ற சிறப்புடையது என்று உலகத்தோரால் புகழப்படும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை ஆகும்.

213. அரன்உறை தருகழி லையைநிலைகுலைவது
செய்த தசமுகனது
கரம்இரு பதுநெரி தரவிரல்நிறுவிய
கழல்அடி உடையவன்
வரள்முரை உலகவை தருமலர் வளர்மறை
யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதருசிவன்உறை
பதிதிரு மிழலையே.

தெளிவுரை : தனது இருப்பிடமாகிய திருக்கயிலையைப் பெயர்த்து எடுத்த, பத்துத் தலைகள் உடைய இராவணனுடைய இருபது கரங்கள் துன்புறுமாறு திருப்பாத விரலால், அழுத்தியவன் ஈசன். அப்பெருமான், தன் திருஉளப் பாங்கின்படி அவ்வவர்க்கு உரியவாறு படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமன், தவறு செய்தபோது அவன் தலைகளுள் ஒன்றைக் கொய்து அதனைத் திரு ஓடாகக் கொண்டு பலியேற்றுத் திரிந்தவன். அத்தகைய சிவபெருமான் உ<றைகின்ற பதி, திருவீழிமிழலை.

214. அயனொடும் எழில்அமர் மலர்மகள் மகிழ்கணன்
அளவிடல் ஒழியஒர்
பயம்உறுவகை தழல் நிகழ்வதொர்படி உரு
வதுவர வரன்முறை
சயசய எனமிகு துதிசெயவெளியுரு
வியஅவன் உறைபதி
செயநில வியமதில் மதியதுதவழ்தர
உயர்திரு மிழலையே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் அளவிட முடியாதவாறு அச்சம் உற்று அயர்ந்து நிற்கும் வகையாய், சோதி உருவாகித் திகழ, வானத்தையும் கடந்து நின்றவனாய் யாவரும் போற்றித் துதி செய்யுமாறு விளங்கினான், பரமன். அவன் உறையும் பதி திருவீழிமிழலை.

215. இகழ்உருவொடுபறி தலைகொடும்இழிதொழில்
மலிசமண் விரகினர்
திகழ்துவர்உடை உடல் பொதிபவர்கெடஅடி
யவர்மிக அருளிய
புகழ்உடை இறைஉறை பதிபுனல் அணிகடல்
புடை தழுவியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு
திகழ்திரு மிழலையே.

தெளிவுரை : பிறரால் இகழப்படுமாறு வடிவத்தைக் கொண்டவராகிய சமண மற்றும் பௌத்தர்கள் நன்மைகளைப் பெறாமல் அயலே இருக்க, அடியவர்களுக்குப் பேரருள் புரியும் புகழ் உடைய இறைவன் உறையும் பதியாவது, நதிகள் யாவும் சேரும் கடல் சூழ்ந்த நிலவுலகில் திகழும் தேவநாந்தர்களுக்கு நிகராகக் கொடை மல்கும் பெருமக்கள் பொருந்தி விளங்கும் திருவீழிமிலையாகும்.

216. சினமலி கரிஉரி செய்தசிவன் உறைதிரு
திருமிழலையை மிகு
தனமனர் சிரபுர நகர்இறை தமிழ்விர
கனதுஉரை ஒருபதும்
மனமகிழ் வொடுபயில் பவர்எழில்மலர்மகள்
கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர இருநிலன்
இடைஇனிது அமர்வரே.

தெளிவுரை : மிகுந்த சினத்தோடு ஏவப்பட்ட யானையின் தோலை உரித்தவர் சிவபெருமான். அவர் உறைகின்ற திருவீழிமிழலையை, செல்வம் கொழிக்கும் மனத்தை யுடையவர் விளங்கும் சீகாழி நகர் இறைவனுடைய திருஞானசம்பந்தர் உரைத்த இத் திருப்பதிகத்தைப் பெருமகிழ்வுடன் ஓதுபவர்கள் எழில் மிக்க செல்வம் பெறுவர்; கல்வி ஞானமும் பெரும் புகழும் அடைவர்; இவ் உலகத்தில் இனிது மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

21. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

217. புவம்வளி கனல்புனல் புவிகலை உரைமறை
திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியேர்திகழ்தரும்
உயிர்அவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன்
மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநிலன்
இனிநிலை பெறுவரே.

தெளிவுரை : ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண், அறுபத்தி நான்கு கலைகள், உரைக்கும் வேதம், சத்துவ, ரஜோ, தாமசம் ஆகிய முக்குணங்கள் அமையும் நெறிமுறை யாவும் விண்ணுலகத்தில் விளங்கும் தேவர்கள் மற்றும் உயிர் வகைகளுக்கு அவ்வற்றின் வினைக்கு ஏற்ப, படைத்தல் அவன் சிவபெருமான் திருஉருவத்தை மனத்தில் பதித்தமையால் இத்தொழிலைச் செய்பவனாகிறான். இச் சிறப்புடன் சிவபுரத்தை நினைத்து வணங்குபவர்கள் செழுமையான இந்நிலவுலகில் இனிய நிலையைப் பெறுவார்கள்.

218. மலைபல வளர்தரு புவிஇடை மறைதரு
வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு
வகை நினைவொடு மிகும்
அலைகடல் நடுஅரி துயில்அமர்அரிஉரு
இயல்பரன் உறை பதி
சிலைமலி மதிள்சிவ புரநினைபவர்திரு
மகளொடு திகழ்வரே.

தெளிவுரை : மலைகள் வளர்ந்தோங்கும் புவியில் வேதங்களை வழிவழியாக ஓதும் மாந்தர்களும், தேவர்களும் மற்றும் எல்லா உலகங்களும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்ற நினைப்புடன் பாற்கடலின் நடுவே அரிதுயில் கொள்ளும் திருமால் உருவின் இயல்புடன் சிவன் உறையும் பதியாகிய சிவபுரத்தை நினைத்து வணங்குபவர்கள் பொருட் செல்வத்தை வளமுடன் பெற்றவர்கள் ஆவார்கள்.

219. பழுதிலகடல்புடை தழுவியபடிமுத
லிய உலகுகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்குலமலி
தருமள் உயிர்அவை யவை
முழுவதும் அழிவகை நினைவொடுமுதல்உரு
இயல்பரன் உறைபதி
செழுமணி அணிசிவ புரநகர் தொழுமவர்
புகழ்மிகும் உலகிலே.

தெளிவுரை : பழுது இல்லாத கடலால் சூழப்பட்ட இவ்உலகம் முதலாக எல்லா உலகங்களும், தேவர்கள் மற்றும் மக்கட் குலமும் பிரளய காலத்தில் அழியும் போது எல்லாவற்றையும்  அவ்வவ் உயிர்களையும், தமது திருமேனியில் ஒடுங்குமாறு செய்து அவ் இயல்புடன் பரன் உறையும் பதியாகிய சிவபுரத்தை வணங்கித் தொழுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவார்கள்.

220. நறைமலி தரும்அள றொடுமுகை நகுமலர்
புகைமிகு வளர்ஒளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும்
வழிபடும் அடியவர்
குறைவில பதம்அணை தரஅருள் குணம்உ<டை
இறைஉறைவன பதி
சிறைபுனல் அமர்சிவ புரமது நினைபவர்
செயமகள் தலைவரே.

தெளிவுரை : மணம்மிக்க சந்தனம், அரும்பு அவிழ்ந்த மலர், தூபம், தீபம், புனித நீர், இவ்வாறான அபிஷேகப் பொருள்களால் ஒன்றிய சிந்தையுடன் விதிப்படி வழிபடும் அடியவர்கள், குறைவற்ற சிவனடியை நல்கும் அருள்குணம் உடைய இறைவன் உறையும் வனப்பு மிகுந்த பதியாகிய நீர்ப் பொய்கையுடைய சிவபுரத்தை நினைத்து வணங்குபவர்கள் ஆவர். அத்தகையோர், யாவற்றிலும் வெற்றி பெறுவர்.

221. சினமலி அறுபகை மிகுபொறி சிதைதரு
வகைவளி நிறுவிய
மனன் உணர் வொடுமலர் மிசைஎழு தருபொருள்
நியதமும் உணர்பவர்
தனதுஎழில் உருவது கொடுஅடைதகுபரன்
உறைவது நகர்மதிள்
கனமருவியசிவ புரநினை பவர்கலை
மகள்தர நிகழ்வரே.

தெளிவுரை : சினம் மற்றும் ஆறுவகையான பகையாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் (பொறாமை) இவைகளையும் புலன்களின் நாட்டத்தினால் மனம் சிதையாமல் ஒருமுகப்படுத்தி, இதய மலரின்கண் எழுதுவதற்கும் எண்ணுவதற்கும் அரும் பொருளாகிய பரம்பொருளைத் தியானம் செய்து யாண்டும் ஒழுகுபவர்கள், எழில் உருவாக விளங்கும் பரன் <உறையும் நகராகிய சிவபுரத்தை நினைப்பவர் ஆவர். அத்தகையோர் மெய்ஞ்ஞானம் உற்றவர்கள்.

222. சுருதிகள் பலநல முதல்கலை துகள்அறு
வகைபயில் வொடுமிகு
உருவியல் உலகவை புகழ்தர வழிஒழுகு
மெய்உறு பொறிஒழி
அருதவ முயல்பவர் தனதுஅடிஅடைவகை
நினைஅரன் உறைபதி
திருவருள் சிவபுர நினைபவர்திகழ்குலன்
நிலன்இடை நிகழுமே.

தெளிவுரை : வேதங்களைக் குற்றமில்லாமல் நன்கு தெளிவாகப் பயின்று, அதனால் அகத்தின் அழகு பெருகவும், பொலிவு பெற்றுப் புகழும்படி அவ்வழி நின்று ஒழுகியம், மெய்முதலாகிய ஐம்புலன் வழி மனத்தைச் செல்லவிடாமல் காத்து அருந்தவத்தைக் கடைப்பிடித்தும் விளங்குபவர்கள், தனது திருவடியை அடையுமாறு திருஉளம் கொள்ளும் ஈசன் உறையும் பதியானது திருவருளைப் பொழியும் சிவபுரம் ஆகும். அப்பதியை நினைத்து வணங்குபவரின் குலமானது இவ்வுலகத்தில் திகழ்ந்திருக்கும்.

223. கதமிகு கருஉரு வொடுஉகிர் இடவட
வரைகண கணஎன
மதமிகு நெடுமுகன் அமர்வளை மதிதிகழ்
எயிறுஅதன் நுதிமிசை
இதம்அமர் புவியது நிறுவிய எழில்அரி
வழிபட அருள்செய்த
பதம்உடை யவன்அமர் சிவபுரம் நினைபவர்
நிலவுவர் படியிலே.

தெளிவுரை : சினம் மிகுந்த கருமையான வடிவம் கொண்டு நகங்கள் பதியுமாறு உயரமாகிய மலைகள் அதிர, மதம் பொருந்திய நீண்ட முகத்தில் இருக்கும் பிறை மதியைப் போன்ற பிரகாசமான பற்களின் நுனியின் மீது உலகத்தை இதமாகத் தாங்கிய எழில் மிகுந்த திருமால் வழிபட, அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவபுரத்தை நினைத்து வணங்குபவர், உலகத்தில் நலமுடன் விளங்குவர்.

224. அசைஉறு தவமுயல வினில்அயன் அருளினில்
வருவலி கொடுசிவன்
இசைகயிலையை எழு தருவகை இருபது
கரம்அவை நிறுவிய
நிசிசிரன் முடிஉடை தரஒரு விரல்பணி
கொளும்அவன் உறைபதி
திசைமலி சிவபுர நினைபவர்செழுநிலன்
இனிநிகழ் உடையரே.

தெளிவுரை : உடம்பினை வருத்திக் தவம் புரிந்து பிரமனிடம் பல வரங்களைப் பெற்றவன் இராவணன். அந்த வர பலத்தைக் கொண்டு புகழ் மிக்க கயிலை மலையைப் பெயர்க்குமாறு தனது இருபது கரங்களைப் பயன்படுத்திய அவ் அரக்கன் தலையைப் பிளவு படுமாறு திருப்பாத விரலால் அழுத்திய சிவபெருமான் உறையும் பதி, எல்லாத் திசைகளிலும் புகழைப் பெருக்கும் சிவபுரம் ஆகும். அப்பதியை நினைத்து வணங்குபவர் <உலகில் இனிய வாழ்க்கையை உடையவராவர்.

225. அடல்மலி படைஅரி அயனொடும் அறிவரி
யதொர்அழல் மலிதரு
சுடர்உருவொடு நிகழ் தரஅவர் வெருவொடு
துதியது செயஎதிர்
விடமலிகள நுதல் அமர்கணது உடைஉரு
வெளிபடும் அவனகர்
திடமலி பொழில் எழில் சிவபுரநினைபவர்
வழிபுவி திகழுமே.

தெளிவுரை : வலிமை மிக்க சக்கராயுதத்தை உடைய திருமாலும், பிரமனும் அறிதற்கு அரியதோர் சோதி வடிவாகித் தோன்றி, பின்னர் அவர்கள் அதிர்ந்து வணங்கித் துதி செய்த காலத்தில் விடம் அருந்தி  (நீல) கண்டமும், நெற்றிக் கண்ணும் தோன்றுமாறு  தமது காட்சியை வெளிப்படுத்திய ஈசன் திருநகர் அடர்த்தியான சோலைகள் சூழ்ந்த அழகிய சிவபுரம் ஆகும். அப்பதியை நினைத்து வணங்குபவர்களுக்கு அவர்கள் எண்ணியவாறு உலகம் வளத்துடன் திகழும்ற.

226. குணம்அறிவுகள் நிலை இலபொருள்உரைமரு
வியபொருள் களும்இல
திணம்எனும் அவரொடு செதுமதிமிகுசம
ணருமலி தமதுகை
உணல்உடை யவர்உணர் வருபரன்உறைதரு
பதிஉலகினில் நல
கணமருவியசிவ புரநினைபவர்எழில்
உருஉடை யவர்களே.

தெளிவுரை : குணம், அறிவு முதலான யாவும் நிலையற்றன என்னும் கொள்கையுடைய சமணர் முதலானோர்களுக்கு உணரப்படாதவனாகிய பரமன் உறையும் பதியானது, நலம் திகழ் அடியார் திருக்கூட்டம் மருவும் சிவபுரம் ஆகும். அதனை நினைத்து வணங்குபவர்கள் அழகிய வடிவத்தை அடைவார்கள்.

227. திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி
இணை பணிசிரபுர
நகர்இறை தமிழ்விரகனது உரைநலமலி
ஒருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருஉரு நிகரில
கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி அடிமையின் மிகைபுணர்
தரநல மிகுவரே.

தெளிவுரை : சிவபுரத்தில் எழுந்தருளியுள்ள ஈசனின் இணையடி மலரைப் பணியும் சீகாழித் தலைவரான திருஞானசம்பந்தர் உரைத்த இத் திருப்பதிகத்தை நவில்பவர்கள், குலம், நிலம், நிறைந்த செல்வம், நல்ல அழகு தோய்ந்த வடிவம், நிகரில்லாத கொடைப்பாங்கு, வெற்றி, புகழ், உலகம் சிறக்குமாறு கொள்ளும் நன்மார்க்கம் ஆகியவற்றை நலமுடன் வாய்க்கப் பெறுவர். மேலும் பணி செய்வதற்குரிய ஏவலர்கள் மிகையான அன்புடன் வாய்க்கப் பெற்று தரத்தில் சிறப்புற்று விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

22. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

228. சிலைதனை நடுவிடை நிறுவியொர்சினமலி
அரவது கொடுதிவி
தலமலி சுரர்அசு ரர்கள்ஒலிசலசல
கடல்கடை உழிமிகு
கெலைமலி விடம்எழ அவர்உடல் குலைதர
அதுநுகர்பவன் எழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பினைக் கயிறாகவும் கொண்டு விண்ணுலகத்தின் தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மற்றொரு புறமும் இருந்து சலசல என்னும் ஒலி எழுமாறு பாற்கடலைக் கடையும்போது கொடிய விடமானது எழுந்தது. அது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அச்சமும் நடுக்கமும் கொடுத்தது. சிவபெருமான் அக்கொடிய நஞ்சினை அருந்திய பரமன். அவன், மலைபோன்ற பெரிய மதில்கள் சூழ்ந்த மறைக் காட்டில் வீற்றிருக்கின்றான்.

229. கரம்முத லியஅவ யவம்அவை கடுவிட
அரவது கொடுவரு
வரன்முறை அணிதரும் அவன்அடல்வலிமிகு
புலிஅதன் உடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை இமையவர்
புரம்எழில் பெறவளர்
மரநிகர் கொடை மனி தர்கள்பயில் மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : திருக்கரம் முதலாகத் திருமேனியில் உள்ள அவயவங்கள் யாவற்றினும், கடுமையான பாம்பு மற்றும் பிற அனைத்தையும் வரான் முறையுடன் அணிகலனாகச் சூடியவன், சிவபெருமான். அவன் வலிமை மிக்க புலியின் தோலை உடையாகக் கொண்டவன். இல்லை என்று யாசிப்பவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கவும், தேவலோகம் சிறப்புக் கொள்ளவும் செய்யும் கற்பக மரத்தை ஒத்த நற்பண்பு நிறைந்த மாந்தர்கள் விளங்கும் மறைக் காட்டியல் அப்பெருமான் வீற்றுள்ளான்.

230. இழைவளர் தருமுலை மலைமகள் இனிது உறை
தரும்எழில் உருவினன்
முழையினில் மிகுதுயில் உறும்அரிமுசிவொடும்
எழமுளரியொடு எழு
கழை நுகர்தருகிரி இரிதரு கயிலையில்
மலிபவன் இருள்உறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : அழகிய ஆபரணங்களைத் தனங்களில் பொருந்துமாறு அணிந்த உமாதேவி இனிதாய் இடப் பாகத்தில் உறையுமாறு செய்த அழகிய வடிவம் கொண்டவன் சிவபெருமான். அப்பெருமான், குகையில் நீண்ட துயில் கொள்ளும் சிங்கம் தனது கொடூரத்தை நீக்கி எழவும், கரும்பை உணவாகக் கொள்ளும் யானையின் மதம் பொருந்திய உணர்வு கெடுமாறும் இனிய தன்மையுடைய திருக்கயிலையில் விளங்குபவன். அவன், இருண்ட மேகம் போன்று பொழிலை யுடைய மறைக்காட்டில் வீற்றிருக்கும் பரமன்.

231. நலமிகு திருஇத ழியின்மலர் நகுதலை
யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி
சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல்
தருமுனி வர்கள்தம
மலம்அறு வகைமன நினைதரு மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : நலத்தின் மிக்க கொன்றை மலரும், தலை மாலையும், ஊமத்தை மலர், கங்கை, அரவம், இளம் பிறை மதி யாவும் சடை முடியில் தரித்து உள்ளவன், ஈசன். திருத்தலங்களில் வாயும் மாந்தர்களும் தலமுனிவர்களும் தத்தம் மலங்கள் அற்று வீழும்படி நினைக்குமாறு செய்யும் மறைக்காட்டில் அப்பெருமான் வீற்றுள்ளான்.

232. கதிமலி களிறது பிளிறிட உரிசெய்த
அதிகுணன் உயர்பசு
பதிஅதன் மிசைவரு பசுபதி பலகலை
அவைமுறை முறைஉணர்
விதிஅறி தருநெறி அமர்முனி கணனொடு
மிகுதவமுயல் தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : மிகுந்த சினத்துடன் வந்த யானை, பிளிறல் செய்து ஓலம் இடும்படி அதன் தோலை உரித்த சிறப்பான குண விசேடனாகியவன். ஈசன், அவன் பசுபதியானவன். அதற்கு மேலும், உயிரைப் பற்றியும் பதியைப் பற்றியும் நன்கு முறைப்படி சிந்தித்து உணர்ந்து, அதற்குரிய விதிகள் வழி நிற்கும் அறிஞர்களுடன் சேர்ந்து தவத்தை மேற்கொள்பவர்களும் அவற்றில் பாண்டித்தியம் பெற்ற அதி நிபுணர்களும் வழிபடும் திருமறைக்காட்டில் அப்பெருமான் வீற்றிருப்பவர்.

233. கறைமலிதிரிசிகை படைஅடல் கனல்மழு
எழுதர வெறிமறி
முறைமுறை ஒலிதம ருகம்உடைதலை முகிழ்
மலிகணி வடமுகம்
உறைதருகரன்உல கினில் உயர்ஒளிபெறு
வகை நினை வொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை :  மாற்றாரை அழிப்பதனால் உண்டாகும் குருதிக்கறை படர்ந்த திரிசூலம், நெருப்பை ஒத்த மழு, வெறித்த நோக்குடைய மான், முறையான ஒலி எழுப்பும் உடுக்கை, பிரம கபாலம், கூரிய ஆயுதம், வடவாக்கினி போன்ற சுவாலைமிகுந்த தீ ஆகியவற்றை உடையவன் ஈசன். உலகத்தில் புகழ் ஓங்கி நிற்குமாறு, தாமரை மலர் மீது விளங்கும் பிரமன், வேத விதிப்படி வழிபடும் மறைக்காட்டில், அப்பெருமான் வீற்றுள்ளான்.

234. இருநிலனது புனல் இடையடி தரஎரி
புகஎரி அதுமிகு
பெருவெளி யினில்அவி தரவளி கெடவியன்
இடைமழு வதுகெட
இருவர்கள் உடல்பொறை யொடுதிரி எழில்உரு
உடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : பூமியானது (நிலம்) நீரிலும், அது தீயிலும், தீயானது வளியிலும், வளி வானிலும் ஒடுங்கும் நிலையில், திருமாலும் பிரமனும் சுமையாகிய உடலைக் கொண்டு திரிந்தனர். ஐம்பெரும் பூதங்களும் உடலைக் கொண்டு திரிந்தனர். ஐம்பெரும் பூதங்களும் ஒன்றின் ஒன்றாய் ஒடுங்கவும், அவற்றைத் தன்னில் ஒடுக்கவும் எழில் மிக்கவனாகிய ஈசன், வண்டுகள் ரீங்காரம் செய்யும் மறைக்காட்டில் வீற்றுள்ளான்.

235. சனம்வெரு வுரவரு தசமுகன் ஒருபது
முடியொடும் இருபது
கனமரு வியபுய நெறிவகை கழலடி
யில்ஒர் விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ்வுறஅருள்
செய்த கருணையன் என
மனமகிழ் வொடு மறை முறைஉணர் மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : நிலவுலக மக்கள் நடுங்குமாறு இராவணன் பத்துத் தலையும் வலிமை மிக்க இருபது தோள்களும் கொண்டு கயிலையைப் பெயர்த்தபோது அவ் அரக்கன் துன்புறுமாறு ஒரு விரலால் ஊன்றி, பின்னர் அவன் மகிழுமாறு நல்வரங்களைத் தந்தருளியவன் ஈசன். அக்கருணை வள்ளலாகிய பரமன், வேதங்கள் மகிழ்ச்சியுடன் முறையோடு வணங்கும் மறைக் காட்டில் அமர்ந்துள்ளவன்.

236. அணிமலர் மகள்தலை மகன்அயன் அறிவரி
யதொர் பரிசினல் எரி
திணிதரு திரள்உரு வளர்தர அவர்வெரு
வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுறு வியபரன் அவன்உரை
மலிகடல் திரள்எழும்
மணிவளர் ஒளிவெயில் மிகுதரு மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : அழகு பொருந்திய தாமரை மலரில் திகழும் திருமகள் தலைவனாகிய திருமாலும், பிரமனும் அறியமுடியாதபடி சோதி வடிவாகிப் பெருகி வளர்ந்தவனாய், பின்னர் அவர்கள் பணிந்து துதி செய்தபோது வெளிப்பட்டுத் தோன்றித் திருக்காட்சி நல்கிய பரமன், ஒலி தரும் கடல் அலைகளும், மாணிக்கத்தை ஒத்த சுடர் ஒளிசேர் வெயிலும் தரும் மறைக்காட்டில் அமர்ந்துள்ளவன்.

237. இயல்அழிதர விதுசெலவுற இனமயில்
இறகுஉறு தழையொடு
செயல்மருவிய சிறுகட முடிஅடைகையர்
தலைபறி செய்து தவம்
முயல்பவர் துவர்பட முடல்மொழி பவர்அறி
வருபரன் அவன்அணி
வயலினில் வளைவள மருவிய மறைவனம்
அமர்தரு பரமனே.

தெளிவுரை : இயல்பாகிய வெப்பம் கெடுமாறு மயில் இறகால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு தண்மையைக் கொள்பவர்களும், தலையின் சிகை நீக்கித் தவக்கோலத்தைப் புனைந்தவர்களுமாகிய புறச் சமயத்தவர்களுக்கு அறிய மாட்டாதவனாகிய பரமன், அழகிய வயல்களில் சங்குகளின் வளப்பமாகிய முத்துக்கள் பரவிய மறைக்காட்டில் அமர்ந்துள்ளவன்.

238. வசைஅறு மலர்மகள் நிலவிய மறைவனம்
அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள்
புகழ்வழி வளர்தரு
இசைஅமர் கழுமல நகர்இறைதமிழ்விர
கனதுஉரை இயல்வல
இசைமலி தமிழ்ஒரு பதும்வல அவர்உல
கினில் எழில் பெறுவரே.

தெளிவுரை : வசை இல்லாது திருமகள் வாசம் புரிந்து செல்வ வளம் பெருக்கும் மறைக்காட்டில் வீற்றிருப்பவன் ஈசன். அவனை, விருப்பத்துடனும் பக்தியுடனும் பல சாத்திரங்களைப் பயிலும் அறிஞர் பெருமக்களால் புகழ்ப்படுகின்ற பெருமைமிக்க கழுமல நாதனால் ஆட்கொள்ளப்பெற்ற திருஞானசம்பந்தர் போற்றி உரை செய்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள் எழில் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

23. திருக்கோலக்கா (அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

239. மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீழ்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ

தெளிவுரை : மடைகளில் வாளை மீன்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கவும், மாதர்கள் குளத்தில் குடைந்து நீராடி மகிழவும் விளங்குகின்றது கோலக்கா என்னும் ஊர். அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், சடைமுடியும், இளம் பிறைமதியும், திருநீற்றின் பூச்சும், கோவண ஆடையும் கொண்டுளுள்ள வடிவம் உடையவன். இது என்கொல்

240. பெண்தான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியைப் பாகமாகவும், வெண்பிறைச் சந்திரனைத் தலையிலும் கொண்டவன். அப்பெருமான், கோலக்காவை இருப்பிடமாகக் கொண்டான். தேவர்கள் அவன் திருவடியைக் கூப்பித் தொழுது வணங்க, உலக நன்மையைக் கருதி நஞ்சை உண்டு பாதுகாத்தான்.

241. பூண்நல் பொறிகொள் அரவம் புன்சடை
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.

தெளிவுரை : அரவத்தை ஆபரணமாகப் பூண்டு, சடைமுடியில் வளைந்த பிறைச் சந்திரனைக் கொண்ட அழகனாகக் கோலக்காவில் விளங்கும் ஈசனைப் பெருமையோடு துதித்துப் பாடி, மறைவல்லவனாகிய அவனை நன்கு பூசித்துப் பேணுதல் செய்யப் பிணிகள் யாவும் நீங்கும்.

242. தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

தெளிவுரை : வினையாகிய தழுவைக் கொள்ளும் பாவத்தைப் போக்க வேண்டும் என்று வேண்டுபவர்களே ! திருக்கோலக்காவில் திருக்கரத்தில் மானும், மழுவும் ஏந்தி பூதப்படைகள் சூழ, விளங்கும் ஈசனை ஒழுக்கம் தவறாமல் துதித்து வாழ்வீர்களாக.

243. மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாப எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிறகப் பறையும் பாவமே.

தெளிவுரை : மயில்போன்ற வண்ணமிகு சாயலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடைய ஈசன், மும்மதில்களையுடைய கோட்டைகளை எரித்து அழித்தவன். அவன், குயில்கள் பாடிப் பொருந்தும் சோலை சூழ்ந்த கோலக்காவை நெஞ்சார நினைத்துப் போற்ற பாவம் விலகும்.

244. வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுள்எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

தெளிவுரை : கண்ணுக்குப் புலனாகாமல் திடீரென்று தாக்க வல்ல தீய வினைகள் அகற்ற வேண்டும் என்று வேண்டுபவர்களே ! மணம் மிக்க கொன்றை மலரைச் சென்னியில் சூடிய எம் அடிகளாகிய, விழாக்கள் பெருகும் கோலக்கா மேவியவனை அடைந்து அவனது திருவடியைப் பணிந்து வாழ்வீர்களாக.

245. நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

தெளிவுரை : நிழல் தரும் சோலைகளில் உள்ள மலர்களைச் சூழந்து கரிய வண்டுகள் புல்லாங் குழலை நிகர்த்த பண் இசைத்துப் போற்ற, கோலக்காவுள் ஈசன் மேவினன். அவன் திருவடியைத் தொழுபவர்களுக்குத் துயரம் இல்லை.

246. எறிஆர் கடல்சூழ் இலங்கைக் கோன்தனை
முறிஆர் தடக்கை அடர்த்த மூர்த்திதன்
குறிஆர் பண்செய் கோலக் காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

தெளிவுரை : அலைகளைக் கரையில் எறிந்து வீசும் கடல் சூழந்த இலங்கைக் கோனாகிய இராவணனுடைய முறியும் தன்மையுடைய நீண்ட கைகளைத் துன்புறுத்தியவன். ஈசன். தன்னையே குறியாகக் கொண்டு பண்பாடிப் போற்றும் நெறியுடையவராய்க் கோலக்காவில் தொழுபவர்களுக்கு வினைகள் யாவும் நீங்கும். ஆதலால் அப்பெருமானை நெறி முறைப்படி வணங்குதல் வேண்டும்.

247. நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்றல் அணைமே லவனும் காண்கிலாக்
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

தெளிவுரை : நறுமணம் கமழும் தாமரை மலர்மீது விளங்கும் பிரமனும், அரவணையில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலும் காண்கிலாதவனாகிக் காலனை உதைத்த அழகனான ஈசன் திருக்கோலக்காவை இடமாக உடையவன். அவனுடைய திருவடியை வணங்கி வாழ்வீர்களாக.

248. பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர்தோழ் உருவி லாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.

தெளிவுரை : சமணர் மற்றும் குற்றமுள்ள நெறியுடைய பிறர், நன்மையைக் கொள்ள மாட்டார்கள். கோலக்காவில் மேவும் ஈசன்மீது பற்றுக்கொண்டு வணங்கிப் போற்றுபவர்களின் பாவம் நீங்கும்.

249. நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

தெளிவுரை : ஞானப்பால் அருந்தி எல்லா நன்மைகளும் கைவரப்பெற்ற ஞானசம்பந்தர், திருத் தொண்டர்தம் குலங்களைக் கொண்டு விளங்கும் திருக்கோலக்காவில் உறையும் ஈசனைப் போற்றி நன்மைகள் யாவும் கொண்டு விளங்கும்படி இசைத்த இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள், பாறை போன்ற வினை யாவும் நீங்கி ஓங்கி வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

24. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

250. பூவார் கொன்றைப் புரிபுன் சடைஈசா
காவாய் எனநின்று ஏத்தும் காழியார்
மேவார் புரமூன்று அட்டார் அவர்போலாம்
பாஆர் இன்சொல் பயிலும் பரமரே.

தெளிவுரை : கொன்றை மாலை சூடிப் புரிபுரியாக முறுக்கேறிய புல்லிய சடையுடைய ஈசா ! எம்மைக் காத்தருள் புரிவாய் எனத் தேவர்கள் நின்று தொழுது ஏத்த, பகைவர்களாகிய மூன்று அசுரர்களையும் கோட்டைகளுடன் அழத்த பரமர், பாடல்களில் விளங்கும் இன் சொற்களின் பொருள்களை ஏற்கும் காழிப் பதியில் உறை நாதனேபோலும்

251. எந்தை என்றுஅங்கு இமையோர் புகுந்துஈண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

தெளிவுரை : எமது தந்தை என்று தேவர்களால் போற்றப்பட்டு மாலை சாற்றி வழிபடும் காழிப் பதியின் நாதனாகிய ஈசன், திருநீற்று மேனியர், விமலர், பிரளய காலத்தில் நட்டம் பயிலும் நடன மூர்த்தியாவார்.

252. தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கான மான்கைக் கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயில் அவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே.

தெளிவுரை : தேனினும் இனிய மொழியுடைய ஞானாம்பிகையாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்து, மானைக் கரத்தேந்தியவர் காழியார். அப்பெருமான் ஆனந்தத் தாண்டவம் புரிபவர். அவர் இடங்கொண்டிருப்பது அவரை நிகர்த்து ஓங்கும் சிறப்புடைத்து.

253. மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்கு அளித்த காழியார்
நாணார் வாளி தொட்டார் அவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

தெளிவுரை : காலனுடைய வெற்றி மாட்சிமையற்றது. ஈசனைத் தவிர பிறிதொன்றும் காணாத மார்க்கண்டேயர் உயிரைக் காக்கும் பொருட்டு, காலனை மாய்த்தவர், ஈசன் பேணிக்காத்தற்கு ஒவ்வாத முப்புர அசுரர்களை எரித்துப் பொடி படுத்துவதற்குச் சரம் தொடுத்தவர் அப்பெருமான். அவர் காழிநகரில் விளங்குபவர் போலும்.

254. மாடே ஓதம் எறிய வயல்செந்நெல்
காடே றிஇச்சங்கு ஈனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர்போலாம்
ஏடார் புரமூன்று எரித்த இறைவரே.

தெளிவுரை : கடலின் ஓதம், பக்கம் சார்தலால் அவ்வழியாகச் சங்குகள் போந்து செந்நெலுடன் பொருந்தி விளங்குகின்றன. குற்றம் புரிந்த முப்புர அசுரர்களை எரித்த இறைவர் வாடா மலர் போன்ற உமாதேவியாரைப் பாகமாக உடையவர். அவர் காழிப் பதியில் விளங்கும் ஈசனே போலும்.

255. கொங்கு செருநதி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

தெளிவுரை : தேன் பெருகும் கொன்றை மலரும் கங்கையும் புனைந்த சடையுடைய ஈசன் அரவத்தை ஆடச் செய்பவராயும் விளங்கி, அரக்கர்தம் முப்புரங்களை எரித்தவர். அவர் காழிப்பதிநாதர் போலும்.

256. கொல்லை விடைமுன் பூதம் குனித்தாடும்
கல்ல வடத்தை உகப்பார் காழியார்
அல்ல இடத்து நடந்தார் அவர்போலாம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே.

தெளிவுரை : இடப வாகனத்தின் முன் பூத கணங்கள் குதித்து ஆடவும் செய்யும். தன்னை ஏற்காதவர்கள் இடத்திலும் மற்றும் வேற்றுமையின்றி எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பவர் ஈசன். அவர் கல்லால மரத்தின் அடியிலும் <உகப்பவர். அவர் காழிப் பதியில் உறைபவர் போலும்.

257. எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கு இரங்கும் அவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.

தெளிவுரை : மலையை எடுத்த அரக்கன் நெரியுமாறு விரலை ஊன்றி, சினத்தால் தண்டித்தார் ஈசன். பின்னர் அவ் அரக்கன் இசை எழுப்பித் துதி செய்ய இரக்கம் கொண்டு அருள் செய்தார். அவர் திருநீற்று மேனியராகிய காழியார் போலும்.

258. ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறுஅங்கு ஏறும் அவர்போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

தெளிவுரை : ஆற்றல் மிக்கவர்களாகிய மும்மூர்த்திகளுள் இருவரான திருமாலும், பிரமனும் ஈசனுடைய தோற்றத்தைக் காணாதவர்கள். கூற்றுவனைத் திருப்பாதத்தால் மாய்த்த ஈசன், ஏற்றம் மிகுந்த இடப வாகனத்தில் ஏறி காழிப் பதியில் விளங்குபவர். அவர் உமையைப் பாகமாக உடைய காழியார் போலும்.

259. பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

தெளிவுரை : பொருந்தாதவற்றைக் கூறும் சமணர், சாக்கியர் உரைகளைக் கொள்ளார் ஈசர். அவர் இருக்கு வேதத்தில் விளங்குபவர். அவர் உமையைப் பாகமாக உடைய காழியார் போலும்.

260. காரார் வயல்சூழ் காழிக் கோன்தனைச்
சீரார் ஞானசம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத்து இனிதா இருப்பரே.

தெளிவுரை : பசுமையான வயல் சூழந்த சீகாழித் தலைவனாகிய ஈசனைப் போற்றி, சீர் மிக்க திருஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை இவ் உலகமெல்லாம் பரவுமாறு ஓதி வழிபடுவர்கள் அழகிய வானுலகில் இனிமையாக இருப்பர்.

திருச்சிற்றம்பலம்

25. திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில், நாகப்பட்டினம்  மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

261. மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவா தவர்மேல் மன்னும் பாவமே.

தெளிவுரை : மருவார் குழலி என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டுள்ளவர் திருவார் செம்பொன் பள்ளியார் என்னும் திருநாமம் பூண்ட ஈசன். அவர் நீல கண்டத்தை உடையவர். அப் பெருமான் திருக்கழல்களைச் சாராதவர்பால் விளையும் பாவம் தீராது.

262. வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடைஎம் மீசனைச்
சேரா தவர்மேல் சேரும் வினைகளே.

தெளிவுரை : மார்பில் கச்சு அணிந்துள்ள உமாதேவியைப் பாகமாக உடைய சீரார் செம்பொன்பள்ளி மேவிய சடை முடியுடைய எம் ஈசனை நினைத்து வணங்காதவர்பால் வினை சேரும். இது ஈசன் திருவடியை நினைத்துத் தொழுதல் வேண்டும் என உணர்த்தியது.

263. வரைஆர் சந்தோடு அகிலும் வருபொன்னித்
திரைஆர் செம்பொன் பள்ளி மேவிய
நரைஆர் விடைஒன்று ஊரு நம்பனை
உரையா தவர்மேல் ஒழியா ஊனமே.

தெளிவுரை : மலைப் பகுதியில் உள்ள சந்தனத்தையும் அகிலையும் அலைகளின் மூலம் காவிரியானது கொணர்ந்து செம்பொன்பள்ளியில் சேர்க்கும். அத்திருத்தலத்தில் வெள்ளை இடபத்தில் ஊர்ந்து காட்சி நல்கும் பரமனைப் போற்றித் துதிக்காதவர்களிவம் உள்ள குறைகளை தீராது. குறை தீர இறைவனைப் போற்ற வேண்டும் என்பது தெளிவுபடுத்தப் பெற்றது.

264. மழுவாள் ஏந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடைஎம் இறைவனைத்
தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

தெளிவுரை : மழுவையும், வாளையும் ஏந்தி, <உமா தேவியைப் பாகமாகக் கொண்டு செழுமை மிக்க செம்பொன்பள்ளி மேவிய சடையுடைய எம் இறைவனைத் தொழுபவர்களுக்குத் துயரம் இல்லை.

265. மலையான் மகளோடு உடனாய் மதில்எய்த
சிலைஆர் செம்பொன் பள்ளி யானையே
இலைஆர் மலர்கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.

தெளிவுரை : மலையரசன் மகளாகத் தோன்றிய பார்வதி தேவியை உடனாகியும், முப்புரங்களின் கோட்டை மதில்களை எரிக்க மேருவை வில்லாகக் கொண்டவனாகவும் உள்ள செம்பொன்பள்ளி மேவிய சிவனை, இலையும், மலரும் கொண்டு இரவும் பகலும் ஒன்றிய மனத்தினராய் வணங்கிட, வினைகள் யாவும் நீங்கும்.

266. அறைஆர் புனலோடு அகிலும் வருபொன்னிச்
சிறைஆர் செம்பொன் பள்ளி மேவிய
கறைஆர் கண்டத்து ஈசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே.

தெளிவுரை : திரைகள் மிக்க நீரில், அகில் சேரப் பெருகி வரும் காவிரியின் கரையில் விளங்கும் செம்பொன் பள்ளியில் வீற்றிருக்கும் நீலகண்டத்து ஈசன் கழல்களை, முழு மனத்துடன் வணங்க, வினைகள் யாவும் நீல்லாது நீங்கும்.

267. பையார் அரவுஏர் அல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கைஆர் சூலம் ஏந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவாத வினைகளே.

தெளிவுரை : விஷம் பொருந்திய அரவத்தை ஒத்த அல்குலை யுடைய உமாதேவியோடு செம்மை மிக்க செம்பொன்பள்ளி மேவிய, திருக்கரத்தில் சூலம் ஏந்திய கடவுளாகிய ஈசனைக் காயத்தால் வணங்க வினைகள் சாராது.

268. வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையில் பலிகொண்டு உழல்வாழ்க்கை
ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.

தெளிவுரை : பிறைத் திங்களைச் சடையில் வைத்துத் தேன்போன்ற இனிமை மிக்க செம்பொன் பள்ளிமேவிய ஈசன், பிரம கபாலத்தை ஓடாக ஏந்திப் பலி கொண்டான். அவன் திருக்கழலைப் பணிந்து வாழ்வீராக.

269. காரார் வண்ணன் கனகம் அனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடைஎன் நிமலனை
ஓரா தவர்மேல் ஒழியா ஊனமே.

தெளிவுரை : கார்வண்ணனாகிய திருமாலும், பொன் வண்ணனாகிய பிரமனும் செம்பொன்பள்ளி மேவிய கங்கையைச் சடையில் தரித்த என் நிமலனாகிய ஈசனைத் தேர்ந்து அறியாதவர்கள், அப்பெருமானை நினையாதவர்களிடம் உள்ள குறைபாடுகள் தீராது. ஈசனை நினைத்த ஞான்று ஊனமானது கதிரோனைக் கண்ட பனி போல் நீங்கும் என்பதாம்.

270. மாசார் உடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா என்ன நில்லா இடர்களே.

தெளிவுரை : உடம்பின்மீது மாசு உடையவர்கள் முதலானோர் பொருந்தாதவற்றைப் பேசித் திரிந்தாலும், ஒளி மிக்க செம்பொன்பள்ளி மேவிய ஈசனே என்று வணங்கித் துதிக்க, இடர்கள் யாவும் நீங்கும்.

271. நறவுஆர்புகலி ஞான சம்பந்தன்
செறுஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமாறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல ஓங்கி வாழ்வரே.

தெளிவுரை : தேன் பெருகும் புகலியின் ஞான சம்பந்தன் வயல்கள் திகழும் செம்பொன்பள்ளி மேய ஈசனைப் போற்றி உயிர்கள் நின்று அறியுமாறு பாடிய இத் திருப்பதிகத்தை உள்ளம் பொருந்துமாறு சொல்ல, வளமுடன் ஓங்கி வாழ்வர்.

திருச்சிற்றம்பலம்

26. திருப்புத்தூர் (அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

272. வெங்கள் விம்மு வெறிஆர் பொழில்சோலை
திங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

தெளிவுரை : தேன் சொரியும் மலர்களை உடைய மணம் பொருந்திய அடர்ந்த சோலையானது, நிலவைப் போன்று தண்மையுடன் விளங்கும் திருப்புத்தூர், எங்கள் மேலான இறைவன் கங்கையைச் சடையில் தாங்கி இருக்கும் இடம் ஆகும்.

273. வேனல் விம்மு வெறிஆர் பொழில்சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்
ஊனம் இன்றி உறைவார் அவர்போலும்
ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.

தெளிவுரை : வேனிற் காலத்தில் மலரும் மணம் பொருந்திய அடர்ந்த சோலையில் தேனும் அதை நுகரும் வண்டும் திளைத்துப் பெருகும் இயல்புடையது திருப்புத்தூர். அங்கு எழுந்தருளியுள்ள ஈசன், திருமால் வராகவதாரம் கொண்ட பின்னர், அப்பணி நிறைவடைந்ததும் சினம் தணியாதவராய்ச் செருக்குற்று நிற்க, அதனை அடக்கும் முகத்தான் ஏனத்தின் முள்ளும் பல்லும் அகற்றி அதனைத் தான் அணிந்து ஆபரணமாகக் கொண்டார். அவர் அடியவர்களுக்குக் குறைவின்றி அருள் புரியும் இறைவனே போலும்.

274. பாங்கு நல்ல வரிவண்டு இசைபாடத்
தேன்கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்
ஓங்கு கோயில் உ<றைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.

தெளிவுரை :  தேன் சொரியும் கொன்றை மலர்கள் பெருகித் திகழ விளங்கும் திருப்புத்தூரின் கண் வரிவண்டுகள் எல்லாப் பக்கங்களிலும் சார்ந்து இசை பாடுகின்றன. ஆங்கு, புல்லிய சடையின் கண் திங்கள் சூடிய ஓங்கி வளர்கின்ற அத் திருக்கோயிலில் உறைபவர் போலும்.

275. நாறவிண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை உடையார் அவர்போலும்
ஏறுகொண்ட கொடிஎம் இறையாரே.

தெளிவுரை : மணம் வீசி மலரும் அழகிய மலர்களில் உள்ள தேனை, வண்டுகள் கவ்விப் பருகும் சிறப்புடையது திருப்புத்தூர். இடபக் கொடி உடைய எம் இறைவர் ஆங்கு ஊறிய வாழ்க்கை உடையவர் போலும்.

276. இசைவி எங்கும் எழில்சூழ்ந்து இயல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தார் அவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே.

தெளிவுரை : எழில் மிக்கதாய்ப் புகழ் விளங்கவும், நாற்புறமும் சோலைகள் விளங்கவும் திகழ்வது திருப்புத்தூர். ஆங்கு, அழகிய நுதலில் பிறையைக் கொண்ட வடிவினராகிய ஈசன் அன்புடன் விளங்குபவராய்ப் பற்றி அருள் புரியப் பழகியவர் போலும்.

277. வெண்நி றத்த விரையோடு அலர்உந்தித்
தெள்நி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒள்நி றத்த ஒளியார் அவர்போலும்
வெண்நி றத்த விடைசேர் கொடி யாரே.

தெளிவுரை : வெண்மையான மணம் நிறைந்த வண்ண மலர்களை உந்தித் தள்ளித் தெளிந்த நீர் பாயும் தன்மையுடையது திருப்புத்தூர். ஆங்கு, வெண்மையான இடபக்கொடியை உடையவரும் ஒளிப் பிழம்பாகி ஒளி தருபவரும் ஆகிய பெருமானே போலும்.

278. நெய்தல் ஆம்பல் கழுநீர் மலர்ந்துஎங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாக மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்ச மருவு மிடற்றாரே.

தெளிவுரை : நெய்தல் காட்டும் ஆம்பல் மலரவும், மருத வயல்கள் மல்கிப் பெருகவும் திருப்புத்தூர் விளங்கி மேவும். ஆங்கு, நீலகண்டராய் ஈசன் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தார் போலும்.

279.கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
திருக்கொள் செம்மை விழரார் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

தெளிவுரை : வான்வெளி யாவிலும் மணம் கமழும் பொழில்களை உடையதும், நற்செல்வமாகிய சிவனடிப் பேற்றை நல்கும் செம்மையான திருவிழாக்களை உடையதுமான ஊர், திருப்புத்தூர் என்னும் பதியாகும். இராவணனைத் தமது விரலால் அழுத்தி, அவனை வருத்திய இறைவர் அங்கு வீற்றிருப்பவர் போலும்.

280. மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

தெளிவுரை : மயில்கள் எல்லா இடங்களிலும் சூழ்ந்து இருக்க, தெருக்களில் மகிழ்ந்து உலாவுகின்ற பெருமையுடையது திருப்புத்தூர். பிரமனும் திருமாலும் அறிய முடியாமல் ஓங்கி வளர்ந்தவனாக ஈசன் ஆங்கு விளங்கி நின்று வாழ்கின்றான் போலும்.

281. கூறைபோர்க்கும் தொழிலார் அமணகூறல்
தேறல் வேண்டா தெளியின் திருப்புத்தூர்
ஆறு நான்கும் அமர்ந்தார் அவர்போலும்
ஏறு கொண்ட கொடிஎம் இறையாரே.

தெளிவுரை : சமணர் முதலான பிறர் கூறும் சொற்களைக் கொள்ள வேண்டாம். நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் ஆகிய ஈசன் திருப்புத்தூரில் இடபக் கொடி உடையவராய் வீற்றிருப்பவர் போலும்.

282. நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே.

தெளிவுரை : வேதத்தில் மேம்பட்டவராகிய ஞானசம்பந்தர், செல்வராகிய ஈசன் உறையும் திருப்புத்தூர் என்னும் பதியைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லார் தமக்குத்தாமே உ<ண்டாக்கிக் கொள்ளும் துன்பமும் இல்லை; பிறரால் சூழப்பெறும் இடையூறும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

27. திருப்புன்கூர் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

283. முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.

தெளிவுரை : முந்தி நின்று, விளைவினைத் தருகின்ற வினைகள் நீங்கிப் போவதற்கு, நெஞ்சமே ! சிவன் பொருந்தியுள்ள திருப்புன்கூர் என்னும் பதியைச்  சிந்தனை செய்வாயாக. ஆங்கு உறையும் ஈசன் மணம் கமழும் புன்சடையுடன் விளங்கும் அடிகள் போலும்.

284.மூவர் ஆய முதல்வர் முறையாலே
தேவர் எல்லாம் வணங்கம் திருப்புன்கூர்
ஆவர் என்னும் அடிகள் அவர்போலும்
ஏவின் அல்லார் எயில்மூன்று எரித்தாரே

தெளிவுரை : பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும், ஈசன் திருஉளப்பாங்கின்படி தம்தம் பணி ஆற்றுபவர். யாவர்க்கும் முதல்வராயும், தேவர்களால் வணங்கப் பெறுபவராயும் சரம் தொடுத்துப் பகைவரின் மூன்று கோட்டைகளை எரித்த ஈசன், திருப்புன்கூர் என்னும் பதியில் உறையும் இறைவனே போலும்.

285. பங்க யங்கள் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையார்அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் மிறையாரே.

தெளிவுரை :  பொய்கையில் தாமரை மலர்களும் கயல்களும் திளைக்க விளங்கும் இடமாவது திருப்புன்கூர். கங்கை தங்கும் சடையுடன் ஆங்கு உறைபவர் எங்கள் மேலான இறைவனே போலும்.

286. கரைஉலாவு கதிர்மா மணிமுத்தம்
திரைஉ லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையின் நல்ல பெருமான் அவர்போலும்
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.

தெளிவுரை : கரைகளில் மாணிக்கம் போன்ற கதிர் மணிகளும் வயல்களில் முத்துக்களும் உடைய சிறப்பு உடைய பதி திருப்புன்கூர். மணம் பொருந்திய திருவடி உடைய பெருமானாய் அடியவர்க்கு நல்லவராய் இனிமை பெருக்கும் ஈசன், ஆங்கு உறைபவரே போலும்.

287. பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ண முறையும் திருப்புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.

தெளிவுரை : பவள வண்ணம் போன்ற திருமேனி உடையவராய் புகழும்படியான செஞ்சடை கொண்டு விளங்கும் ஈசன், திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகள் போலும்.

288. தெரிந்து இலங்கு கழுநீர் வயல்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும்
விரிந்து இலங்கு சடைவெண் பிறையாரே.

தெளிவுரை : நல்ல நீர்வளமும், செந்நெல் வளமும் மிக்க உடையது திருப்புன்கூர். அங்கு விரிந்து பரந்த சடையில் வெண்பிறை சூடிய ஈசன், பொருந்தி உறைபவரே போலும்.

289. பாரும் விண்ணும் பரவித் தொழுதுஏத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற அடிகள் அவர்போலும்
கூர நின்ற எயில்மூன்று எரித்தாரே.

தெளிவுரை : மண்ணுலகத்தவர்களும் தேவர்களும் பரவித் தொழுது போற்றும்படி தேர்கள் செல்லுமாறு அகன்ற வீதிகளையும் திருவிழாக்களையும் உடையது திருப்புன்கூர். அங்கு, மிகுதியாய்ச் சென்று இடரைச் செய்த மூன்று மதில்களையும் எரித்த ஈசன் பொருந்தி உள்ளனர் போலும்.

290. மலைய தனார் உடைய மதில்மூன்றும்
சிலைய தனால் எரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலைய தனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

தெளிவுரை : சண்டை செய்யும் கீழ்மையுடைய முப்புரத்தின் கோட்டைகளையும், அவ்வசுரர்களையும், மேருடை வில்லாகக் கொண்டு எரித்தவர் திருப்புன்கூர் மேவும் ஈசன். அப்பெருமான், அரக்கனாகிய இராவணனுடைய தருக்கினை அவன் பெயர்த்த மலையைக் கொண்டு அடக்கியவர்.

291. நாடவல்ல மலரான் மாலுமாய்த்
தேடநின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆடவல்ல அடிகள் அவர்போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே.

தெளிவுரை :  நான்கு திசைகளும் அறிந்து நாடு அதற்குரிய நான்கு முகங்களை உடைய பிரமனும், திருமாலும் காணுதற்கு இயலாமல் தேடுமாறு செய்து திருவிளையாடல் புரியும் ஈசன், பாடலும் ஆடலும் பயிலும் திருப்புன்கூர் நாதன் போலும்.

292. குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல்கொளேல்
வண்டு பாட மலர்ஆர் திருப்புனகூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.

தெளிவுரை : அறிவின் மயக்கம் உற்றவர்களாகிய வேற்றுச் சமயத்தவர்கள் கூறும் மொழிகளைப் பெருட்டாகக் கொள்ள வேண்டாம். வண்டுகள் இசைக்க மலர்கள் மலர்ந்து மணம் தரும் திருப்புன்கூர் இறைவனைத் தொழுது போற்றுமின்.

293. மாடமல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.

தெளிவுரை : திருப்புன்கூர் என்னும் பதியுறை ஈசனைப் போற்றி மாட மாளிகைகளும், நெடிய மதில்களும் சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தர் சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதி வாழ்மின்.

திருச்சிற்றம்பலம்

28. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

294. செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்பன் என்னாது அருளே துணையாக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்று
அப்பர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : உலகத்தில், இவ்வாழ்க்கையின் பயனாக அடையக் கூடிய சிற்றின்பத்தில் திளைக்காது, சமநிலையால் ஒப்ப நோக்கி, ஈசன் அருளைத் துணையாகக் கொண்டு வாழ வேண்டும். அத்தகைய தன்மையை ஒளியுடைய வெண்ணீறு அணிந்த பெருமான் ஒப்புவர். நெஞ்சமே ! ஈசன் விளங்கும் சோற்றுத்துறை சென்று அவன் தாள் மலரை வணங்கி நற்கதி அடைக.

295. பாலு நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலு நாலும் துதைந்த வரைமார்பர்
மாலும் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத் துறை சென்றுஅடைவோமே.

தெளிவுரை : பாலும், நெய்யும், தயிரும் முதலான அபிடேகப் பொருள்களால் பூசிக்கப்படும் ஈசன் புலித் தோலையும் மான் தோலையும் உ<டுத்தி பூணூல் தரித்த மார்பினர். சோலையில் மயில்கள், தம்மை மறந்து ஆடும் எழில் உடைய சோற்றுத்துறை சென்று இறைவனை வணங்கித் துதித்து நற்கதி அடைவேமாக.

296. செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாகம் ஆயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : சிவந்த திருமேனியும் சடையும் உடையவர்; இடப வாகனத்தில் ஊர்ந்து வருபவர்; கையில் சூலத்தைக் கொண்டிருப்பவர்; வீரக்கழல் அணிந்த பாதத்தை உடையவர்; இடுகாட்டில் ஆடுபவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடைய எம் தலைவர். அவர் வீற்றிருக்கும் சோற்றுத்துறை சென்று நற்கதி அடைவோமாக.

297. பிணிகொள் ஆக்கை ஒழியப் பிறப்புளீர்
துணிகொள் போர்ஆர் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேயவார் பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : பிணியைக் கொள்ளும் உடலை விட்டுவிட வேண்டும் என்பதன் பொருட்டு, இப்பிறவியைப் பெற்றுள்ளவர்களே ! துணிந்து ஆற்றும் போர்ப் படையாய் விளங்கும் மழுவேந்திய ஈசன். நீலகண்டத்தை உடையவர். அவர்தம் நீண்ட பொழிலை உடைய சோற்றுத்துறை சென்று வணங்கி நற்கதியை அடைவோமாக.

298. பிறையும் அரவும் புனலும் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும், அரவும், கங்கையும் சடையில் வைத்து, வேதம் புகன்று, மயானத்தை இடமாகக் கொண்டு உறையும் செல்வராகிய இறைவன் விளங்கும் காவிரி நீர் பாயும் சோற்றுத்துறை சென்று இறைவனை வழிபட்டு நற்கதி அடைவோமாக.

299. துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்காடு அரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகொள் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை :  உடுக்கையும் முழவும் ஒலிக்க, வெண்பொடி பூசிச் சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டுப, தாளமும் பாடலும் முறையாகப் பயின்றாடும் ஈசன் விளங்கும் சோற்றுத்துறை சென்று நற்கதி அடைவோமாக.

300. சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடிஆடிப் பரவு வார்உள்ளத்து
ஆடி சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் காலனை மாய்த்தும், தலையோட்டினை மாலையாய் அணிந்தும் விளங்கும் ஈசன், தன்னைப் போற்றி வாழ்த்துபவர்; உள்ளத்தில் மகிழ்ந்து இருப்பவர். அப்பெருமான் வீற்றிருக்கும் சோற்றுத் துறை சார்ந்து நற்கதி அடைவோமாக.

301. பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : ஈசன், உமாதேவியைப் பாகமாக உடையவர்; பிறையைச் சென்னியில் சூடியவர்; நெற்றியில் கண்ணுடையவர்; பின்விளைவை ஆராய்ந்து பார்க்காமல் அரக்கன் மலையைப் பெயர்க்க, தனது திருப்பாத விரலால் ஊன்றி, அவ் அரக்கனின் செருக்கை அடக்கியவர். அத்தகைய அண்ணல் விளங்கும் சோற்றுத்துறையை நாடிச் சென்று நற்கதி அடைவோமாக.

302. தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
எழில்ஆர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் தன்னைக் காணாதவராய்த் துயர்கொண்டு வருந்தி நிற்க, அத்துயர் நீங்கும் பொருட்டுத் தழல் உருவாய் ஓங்கி ஈசன் அருள் செய்தான். அவ் இறைவன் விளங்கும் விழாக்கள் நடைபெறும் திருவீதிகளையும் வேத முறைப்படி பூசனைகளும் திகழும் சோற்றுத்துறை சென்று வணங்கி நற்கதி அடைவோமாக.

303. கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதம் ஓத்தை உணராது எழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென்று அடைவோமே.

தெளிவுரை : புறச் சமயத்தார் கூறும் சாரமற்ற உரைகளை ஏற்காமல் ஈசன் திருப்பதத்தை மனத்தில் தேக்கி எழுகின்ற நெஞ்சமே ! சைவ நெறிப்படி நின்று ஒழுகி அவர்தம் சிந்தையானது விரும்புகின்ற தோற்றத்தில் காட்சி தரும் முதல்வன் வீற்றிருக்கும் சோற்றுத்துறை சென்று நற்கதி அடைவோமாக.

304. அந்தண் சோற்றுத் துறைஎம் மாதியைச்
சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.

தெளிவுரை : அழகிய குளிர்ச்சி பொருந்திய சோற்றுத் துறையில் எழுந்தருளிய எம் ஆதி முதல்வனைச் சிந்தித்துப் போற்றுமின். அது அடியார் ஆகும் சிறப்பு நல்கும். மேலும் சந்தம் மல்கிய ஞானசம்பந்தரின் இத்திருப்பதிகத்தை ஓதுதல் வழிபாடு ஆகும்.

திருச்சிற்றம்பலம்

29. திருநறையூர்ச் சித்தீச்சரம் (அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

305. ஊர்உ லாவு பலிகொண்டு உலகேத்த
நீர்உ லாவு நிமிர்புன் சடைஅண்ணல்
சீர்உ லாவு மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச் சரம்சென்று அடைநெஞ்சே.

தெளிவுரை : பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு ஊர்களில் திரிந்து பிச்சையேற்று, கங்கையைச் சடை முடியில் வைத்து உலகத்தவர்கள் வணங்கும்படி சீர்மிக்க மறைகள் போற்றும் ஈசன் நறையூரில் எழுந்தருளியுள்ளான். அவன் திருக்கோயில் கொண்டுள்ள சித்தீச்சரத்தை, நெஞ்சமே நினை.

306. காடு நாடும் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
வீடும்ஆக மறையோர் நறையூரில்
நீடும் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

தெளிவுரை : காடுகளிலும் நாடுகளிலும் கலந்து ஓடும் கங்கையைச் சடையில் வைத்தவன் முத்திப் பேறு வாய்க்கச் செய்தவன், இறைவன். அவன் நிலவும் மறைவல்ல நறையூரில் உள்ள சீத்தீச்சரத்தை நெஞ்சே நினை.

307.கல்வியாளர் கனகம் மழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரம் சென்று அடைநெஞ்சே.

தெளிவுரை : பொன்போன்ற தழல் வண்ணத் திருமேனி உடைய ஈசன், சடையில் கங்கையை ஏற்று கல்வியில் வல்ல அறிஞர்கள் மிக்க, சந்திரனைப் போன்ற குளிர்ந்த பொழில் சூழ்ந்த நறையூரில் நிலவும் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவன். நெஞ்சே, அவனை நினை.

308. நீடவல்ல நிமிர்புன சடைதாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

தெளிவுரை : நீண்டு விரிந்த சடையானது தாழ திருநடம் புரியும் ஈசன் இடமாவது, வண்டுகள் பாடும் சிறப்புடைய நறையூரில் நிலவும் சித்தீச்சரம் ஆகும். நெஞ்சே, இதனைத் தெளி.

309. உம்ப ராலும் உலகின் னவராலும்
தம்பெ ருமைஅ ளத்தற்கு அரியானூர்
நண்பு உலாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

தெளிவுரை : தேவர்களாலும், உலக மக்களாலும் அளவிட்டுச் செல்லுதற்கு அரியவனாகிய ஈசன் விளங்குவது, நட்புடன் விளங்கும் மறையவர்கள் மிகுந்த நறையூரில் நிலவும் சித்தீச்சரம் ஆகும். நெஞ்சே, இதனைத் தெளி.

310. கூர்உ லாவு படையான் விடையேறி
போர்உ லாவு மழுவான் அனலாடி
பேர்உ லாவு பெருமா னறையூரில்
சேரும் சித்தீச் சரமே இடமாமே.

தெளிவுரை : கூர்மையான சூலப் படையான்; இடப வாகனம் உடையவன்; மழுப் படை கொண்டவன்; நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடியவன்; பெரும் புகழை உடையவன். அவனுடைய இடமாவது நறையூரில் பொருந்திய சித்தீச்சரம் ஆகும்.

311. அன்றி நின்ற அவுணர் புரம்எய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

தெளிவுரை : பகையாய் நின்ற மூன்று அசுரர்களின் புரங்களை வெற்றிகொண்டவன், மேருமலையை வில்லாகக் கொண்ட ஈசன். அவன் விரும்பி விளங்குவது நறுமணம் கமழும் நறையூரில் நிலவும் சித்தீச்சரம். இதனை நெஞ்சே தெளி.

312. அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்புமூர்
பரக்கும் கீர்த்தி யுடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

தெளிவுரை : இராவணனுடைய வலிமை அழியுமாறு விரலால் மலையை ஊன்றும் பெருமான் விரும்புகின்ற ஊர், விரிந்த புகழையுடையவர் விளங்கும் நறையூர். ஆங்கு செல்வம் கொழித்து ஓங்கும் சித்தீச்சரத்தை நெஞ்சே ! தெளி.

313. ஆழி யானு மலரில் உறைவானும்
ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
சூழ நேட எரியாம் ஒருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

தெளிவுரை : சக்கரப் படையுடைய திருமாலும், மலரில் உறைபவனாகிய பிரமனும் ஓர் ஊழிக் காலம் வரை தேடிச் சென்றும் உணரதவராய்த் திரிய, பின்னர் எரியாகித்  தழல் வடிவாகி நின்ற ஈசன் சீர் கொண்டு வீற்றிருப்பது சித்தீச்சரம். இதனை நெஞ்சே ! நினை.

314. மெய்யின் மாசர் விரிநுண் துகில்இலார்
கையில் உண்டு கழறும் உரைகொள்ளேல்
உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்
செய்யும் சித்தீச் சரமே தவமாமே.

தெளிவுரை : வேற்றுச் சமயத்தார் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். உய்ய வேண்டுமானால் நறையூரில் இருந்து அருள் பாலிக்கும் இறைவன் மேவும் சித்தீச்சரத்தை  எண்ணுதல், செய்யும் தவமாகும்.

315. மெய்த்து உலாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.

தெளிவுரை : மெய்ம்மை விளங்க மறையவர் உ<லவும் நறையூரில் நிலவும் சித்தன் மேவும் சித்தீச்சரத்தை, உயர் காழி நாதனாகிய ஈசனின் திருவடியைத் தரித்த ஞான சம்பந்தன் பாடிய பத்தும் பாடப் பாவம் தீரும்.

திருச்சிற்றம்பலம்

30. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

316. விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின்று அலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலின் நகர்தானே.

தெளிவுரை : மார்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்காலம் பதினாறு ஆண்டுகள் என்பதன் விளைவாய்ச் சிவனடி பொருந்திய உயிரைக் கவருமாறு போந்த, கூற்றுவனை உதைத்த ஈசன் சேரும் பதியாவது தாமரை மலர்களும், தேன் சொரியும் மலர்ச் சோலைகளும் சூழும் புகலி நகர்.

317. ஒன்னார் புரமூன் றும்எரித்த ஒருவன்
மின்னார் இடையா ளொடும்கூ டியவேடம்
தன்னால் உறைவா வதுதண் கடல்சூழ்ந்த
பொன்னார் வயல்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : பகைவருடைய புரங்கள் மூன்றும் எரித்த ஒருவனாகிய ஈசன், மின்னலைப் போன்ற இடையுடைய உமாதேவியோடு கூடிய வடிவத்துடன் உறையும் இடம், குளிர்ந்த கடம் சூழ்ந்து, ஒளிமிக்க பொன் போன்ற நெற்கதிர்கள் விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலி ஆகும்.

318. வலியில் மதிசெஞ் சடைவைத் தமணாளன்
புலியின் னதள்கொற்டு அடைஆர்த் தபுனிதன்
மலியும் பதிமா மறையோர் நிறைந்துஈண்டிப்
பொலியும் புனல்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : ஒளி வலிமை குன்றிய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் சூடிய மணாளனாகிய ஈசன், புலியின் தோலை இடையில் அணிந்த புனிதன். அவன் நயந்து விளங்கும் பதியாவது, மறையவர்கள் நிறைந்தும் சேர்ந்தும் வேதங்களை ஓத, தூய்மையான தீர்த்த மகிமையுடன் விளங்கும் புகலி நகர் ஆகும்.

319. கயல்ஆர் தடங்கண் ணியொடும் மெருதேறி
அயலார் கடையில் பலிகொண் டஅழகன்
இயலால் உறையும் மிடம்எற் திசையோர்க்கும்
புயல்ஆர் கடல்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : உமாதேவியோடு இடப வாகனத்தில் ஏறி அருள் புரிபவன் ஈசன். அவன் தாருகாவனத்தில் மேவிய முனிவர்களின் மனைவாயிலில் நின்று பலி ஏற்றவன். அவ் அழகன், எண் திசையோர்க்கும் அன்பின் உரிமையோடு இடம், மேகம் தவழும் கடல் விளங்கும் அழகிய புகலி நகர் ஆகும்.

320. காதார் கனபொன் குழைதோ டதுஇலங்கத்
தாதுஆர் மலர்தண் சடையே றமுடித்து
நாதான் உறையும் மிடமா வதுநாளும்
போதுஆர் பொழில்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : காதில் கனமான பொன்குழையும், தோடும் ஆபரணமாகத் திகழ, தேன் சொரியும் மலரைக் குளிர்ந்த சடையில் தரித்து ஈசன் உறையும் இடமாவது நாள்தோறும் மலரும் பொழிலை உடைய அழகிய புகலி நகர் ஆகும்.

321. வலம்ஆர் படைமான் மழுவேந் தியமைந்தன்
கலம்ஆர் கடல்நஞ்சு அமுதுஉண் டகருத்தன்
குலம்ஆர் பதிகொன் றைகள்பொன் சொரியெத்தேன்
புலம்ஆர் வயல்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : வலிமை பொருந்திய சூலப்படை, மான், மழு ஏந்திய அழகன், பாற்கடலில் இருந்து தோன்றிய நஞ்சினை அமுதமெனும் பண்பு கொள்ளுமாறு உண்டவன். அவனுடைய அழகான பதி, பொன் போன்ற கொன்றை மலர்கள் தேன் சொரியத் திசைகள்தோறும் வயல்கள் சூழ்ந்த அழகிய புகலி நகர் ஆகும்.

322. கறுத்தான் கனலான் மதில்மூன் றையும்வேலச்
செறுத்தான் திகழும் கடல்நஞ்சு அமுதாக
அறுத்தான் அயன்றன் சிரம்ஐந் திலும்ஒன்றைப்
பொறுத்தான் இடம்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : ஈசன், கனலான், சினமுற்றான், மும்மதில்களைச் செறுத்தான், கடல்நஞ்சை அமுதாக மாற்றி அதன் நச்சுத் தன்மையை அறுத்தான்; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் களைந்து, கபாலமாக ஏந்திச் சுமந்து பலியேற்றான். அவன் விளங்கும் இடம் புகலி நகரே.

323. தொழிலால் மிகுதொண் டர்கள்தோத் திரம்சொல்ல
எழிலார் வரையால் அன்றுஅரக் கனைச்செற்ற
கழலான் உறையும் மிடம்கண் டல்கண் மிண்டிப்
பொழிலால் மலிபூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : பணி செய்யும் இயல்புடைய திருத்தொண்டர்கள் தோத்திரப் பாடல்களைச் சொல்ல, எழில் மிக்க, கயிலை மலையால் இராவணனைத் தண்டித்த ஈசன் உறையும் இடம், நெருங்கிய தாழைகள் மலிந்த அழகிய புகலி நகர் ஆகும்.

324. மாண்டார் சுடலைப் பொடிபூ சிமயானத்து
ஈண்டா நடமா டியஏந் தல்தன் மேனி
நீண்டான் இருவர்க்கு எரியாய் அரவுஆரம்
பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : சுடலையில், மாண்டவர்களின் சாம்பலைப் பூசி நடனமாடிய ஈசன், திருமால், பிரமன் ஆகிய இருவரும் காண இயலாதபடி நீண்ட வடிவினனாய்ச் சோதிப் பிழம்பாகி, பாம்பினை ஆபரணமாகப் பூண்டான். அவனுடைய நகர் புகலியே.

325. உடையார் துகில்போர்த்து உழல்வார் சமண்கையர்
அடையா தனசொல் <லுவர்ஆ தர்கள் ஓத்தைக்
கிடையா தவன்றன் நகர்நன் மலிபூகம்
புடையார் தருபூம் புகலிந் நகர்தானே.

தெளிவுரை : சமண நெறி உடையவர்கள், மேல் நிலை அடைவதற்கு ஒவ்வாத சொற்களைக் கூறுவர். கீழ்மையான அவர்கள் கூற்றினை ஏற்காமல் உள்ளவனாகிய ஈசன் உறையும் நகர், கமுக மரங்கள் பொலியும் புகலி ஆகும்.

326. இரைக்கும் புனல்செஞ் சடைவைத் தஎம்மான்தன்
புரைக்கும் பொழில்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்கும் தமிழ்ஞான சம்பந் தன்ஒண்மாலை
வரைக்கும் தொழில்வல் லவர்நல் லவர்தாமே.

தெளிவுரை : பாய்ந்து செல்லும் நீராகிய கங்கையை எம்தலைவன், தன் அழகிய சடையில் வைத்தவன். அப்பெருமானுடைய, உயர்ந்த பொழில் விளங்கும் புகலிநகர்மேல் புகழ்ந்து உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் திருப்பதிகத்தைத் தம் அளவில் வரைப் படுத்திப் பயில வல்லவர், நல்லவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

31. திருக்குரங்கணில்முட்டம் (அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில் முட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

327. விழுநீர் மழுவாள் படையண் ணல்விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணில்முட்டம்
தொழுநீர் மையர்தீ துறுதுன் பம்இலரே.

தெளிவுரை : கங்கை, மழு, வாள் படை ஆகியன விளங்க, நீரில் குவளை மலரவும், கயல் பாயும் வளமான் நீர் மிக்க வயல்களும் சூழ்ந்த குரங்கணில்முட்டம் என்னும் ஊரில் ஈசன் கோயில் கொண்டுள்ளான். அப் பெருமானைத் தொழும் சிறப்புடையவர், தீமையைத் தரும் துன்பம் இல்லாது இருப்பர்.

328. விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக்
கடைசேர் கருமென் குளத்துஓங் கியகாட்டில்
குடைஆர் புனல்மல் குகுரங் கணில்முட்டம்
உடையான் எனைஆள் உடைஎந் தைபிரானே.

தெளிவுரை : இடபக் கொடியை அண்ணலாகிய ஈசன், உயர் மாட மாளிகைகளின் கடைப் பக்கம், வனம்மிகுந்து, நீர் மல்கும் குரங்கணில்முட்டத்தில் உடையவன். அவன் என்னை ஆளாக உடைய என் தந்தையும் தலைவனும் ஆவன்.

329. சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் தனைஆ ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணில்முட்டத்து
ஏலம் கமழ்புன் சடைஎந் தைபிரானே.

தெளிவுரை : சூலத்தைப் படையாக உடையவன்; இடபவாகனத்தைக் கொண்டவன்; திருவெண்ணீற்றைத் தரித்தவன்; காலனாகிய கூற்றுவன் உயிரைக் கவர்ந்து காலனுக்குக் காலன் ஆனவன்; அழகிய பொழில் சூழ்ந்த குரங்கணில்முட்டத்தில் மணம் மிக்க சடையுடன் விளங்கும் என் தந்தை அவன் என் தலைவன்.

330. வாடா விரிகொன் றைவலத்து ஒருகாதில்
தோடுஆர் குழையா னலபா லன்நோக்கிக்
கூடா தனசெய் தகுரங் கணில்முட்டம்
ஆடா வருவார் அவர்அன் புடையாரே.

331. இரைஆர் வளையா ளையொர்பா கத்தடக்கிக்
கறைஆர் மிடற்றான் கரிகீ றியகையான்
குறைஆர் மதிசூ டிகுரங் கணில்முட்டத்து
உறைவான் எமைஆ ளுடை ஒண் சுடரானே.

தெளிவுரை : மணிகட்டின் பொருந்திய வளையை அணிந்த உமாதேவியைத் தனது மேனி பாகத்தில் அடக்கியவன் நீலகண்டம் உடையவன். யானையைத் தனது திருக்கரத்தால் மாய்த்துக் கொன்றவன், ஈசன். அப் பெருமான் குறை பொருந்திய பிறை மதியைச் சூடிக் குரங்கணில்முட்டத்தில் உறைபவன். அவன் எம்மை ஆளுடைய ஒண்சுடர்.

332. பலவும் பயனுள் ளனபற் றும்ஒழிந்தோம்
கலவம் மயில்கா முறுபே டையொடுஆடிக்
குலவும் பொழில் சூழ்ந் தகுரங் கணில்முட்டம்
நிலவும் பெமுõ னடிநித் தநினைந்தே.

தெளிவுரை : தோகை விரித்த மயில், விரும்பும் பெண் மயிலுடன் மகிழ்ந்து ஆடிக் குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில்முட்டம் நிலவும் ஈசன் திருவடியை நித்தமும் நினைந்ததன் பயன், பலவாகும். அதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் பற்றற்ற நிலை அடைந்தோம் என்பது ஆகும்.

333. மாடுஆர் மலர்கொள் றைவளர் சடைவைத்துத்
தோடுஆர் குழைதான் ஒருகா தில்இலங்கக்
கூடார் மதில்எய் துகுரங் கணில்முட்டத்து
ஆடார்அரவம் மரை யார்த்து அமர்வானே.

தெளிவுரை : செல்வத்தை நிகர்த்த மலராகிய கொன்றையைச் சடை முடியில் வைத்து, ஒரு காதில் தோடும், மற்றொரு காதில் குழையும் அணிந்து விளங்கி, நன்நெறி யுடைய தேவர்களுடன் கூடிப் பொருந்தி நிற்காதவர்களாகிய மூன்று அசுரர்களுடைய கோட்டை மதில்களை எரித்துப் பொடியாக்கிக் குரங்கணில்முட்டத்தில், சிவபெருமான் ஆடுகின்ற அரவத்தை அரையில் பொருத்தி அமர்பவன்.

334. மையார் நிறமே னிஅரக் கர்தம் கோனை
உய்யா வகையால் அடர்த்துஇன் னருள்செய்த
கொய்யார் மலர்சூ டிகுரங் கணில்முட்டம்
கையால் தொழுவார் வினைகாண் டல்அரிதே.

தெளிவுரை : கரிய நிற மேனியுடைய இராவணன் எந்த வகையாலும் தப்ப முடியாதபடி தண்டனை செய்து, பின்னர் இன்னருள் செய்தான் ஈசன். அவன், அன்பர்கள் மனம் விரும்புமாறு கொய்து சாற்றும் மலர்களைச் சூடி, குரங்கணில்முட்டத்தில் வீற்றிருக்கின்றான். அவனை இரு கைகளாலும் கூப்பித் தொழுபவர்களுக்கு வினை இல்லை.

335. வெறிஆர் மலர்த்தா மரையா னொடுமாலும்
அறியா துஅசைந்துஏத் தஓரார் அழல்ஆகும்
குறியா நிமிர்ந்தான் தன்குரங் கணில்முட்டம்
நெறியால் தொழுவார் வினைநிற் ககிலாவே.

தெளிவுரை : மணம் கமழ் தாமரை மலர்மேல் உள்ள பிரமனோடு திருமாலும் அறியாது அயர்ந்து நிற்கவும் பின்னர் போற்றித் துதிக்க, நினைப்பதற்கு அரிய தீப்பிழப்பின் வடிவாகி ஓங்கினான். அப்பெருமான் விளங்கும் இடம், குரங்கணில்முட்டம். ஆங்கு, கோயில் கொண்டு விளங்குபவனை, நெறிமுறையோடு தொழுபவர்கள் வினையானது நிற்காது.

336. கழுவார் துவரா டைகலந் துமெய் போர்க்கும்
வழுவாச் சமண்சாக் கியர்வாக்கு அவைகொள்ளேல்
குழுமின் சடைஅண் ணல்குரங் கணில்முட்டத்து
எழில்வெண் பிறையான் அடிசேர் வதுஇயல்பே.

தெளிவுரை : துவராடையை மெய்யில் போர்த்துத் தம் கொள்கையில் மாறுபாடு இன்றி சமணர்களும், சாக்கியர்களும் உள்ளனர். அவர்கள் கூறும் சொற்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம். மின்னலைப் போன்று பளிச்சென்று சிவப்பான சடையுடைய அண்ணல் ஆகும் பெருமான், அழகிய பிறையணிந்து குரங்கணில்முட்டத்தில் உள்ளான். அவன் திருவடியின்பால் மனத்தைப் பொருத்தி வணங்குவது உயிர்களுக்கு இயல்பாக இருக்கு வேண்டிய பண்பு ஆகும்.

337. கல்ஆர் மதில்காழியுள் ஞான சம்பந்தன்
கொல்ஆர் மழுஏந் திகுரங் கணில்முட்டம்
சொல்ஆர் தமிழ்மா லைசெவிக்கு இனிதாக
வல்லார்க்கு எளிதாம் பிறவா வகைவீடே.

தெளிவுரை : கற்களால் கட்டப்பெற்ற மதில்களை உடைய சீகாழியை உள்ளத்தில் தேக்கிக் கொண்ட ஞானசம்பந்தன், மழுப்படை ஏந்திய ஈசன் விளங்கும் குரங்கணில்முட்டம் பற்றி சொல்லில் சிறந்த தமிழ் மாலையாகச் சொன்ன இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிமையாகச் சொல்லவும், கேட்டு மகிழவும் உள்ளவர்களுக்குப் பிறவாமை என்னும் பேறு வாய்க்கும்; முத்தி இன்பம் எளிதாய் வரும்.

திருச்சிற்றம்பலம்

32. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

338. ஓடே கலன்உண் பதும்ஊ ரிடுபிச்சை
காடே இடமா வதுகல் ஆல்நிழற்கீழ்
வாடா முலைமங் கையும்தா னும்மகிழ்ந்து
ஈடா <உறைகின் றஇடை மருதுஈதோ.

தெளிவுரை : திருவோடு கொண்டு, ஊர் இடும் பிச்சை ஏற்று அதனையே உண்கலனாகக் கொண்டும் இடுகாட்டை இருப்பிடமாகவும், ஆல் நிழற் கீழ் குருமுகமாக இருந்தும் விளங்கும் ஈசன், உமாதேவியும் தானும் மகிழ்ந்து பெருமையாக உறைகின்ற இடைமருது இதுவோ !

339. தடம்கொண் டதொர்தா மரைப்பொன் முடிதன்மேல்
குடம்கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படம்கொண் டதொர்பாம்பு அரைஆர்த் தபரமன்
இடங்கொண்டு இருந்தான் தன்இடை மருதுஈதோ.

தெளிவுரை : பெருமை மிக்க தாமரை மலரைத் தரித்த திருமுடியின் மேல், குடத்தினால் நீர் முகந்து குளிர்ந்த நீரை ஆட்டி அபிடேகம் செய்ய ஏற்று, அரவத்தை அரையில் கட்டிய பரமன் வீற்றிருக்கும் இடைமருது இதுவோ !

340. வெண்கோ வணங்கொண்டு ஒருவெண் தலையேந்தி
அம்கோல் வளையா னையொர்பா கம்அமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோன் உறைகின் றஇடை மருதுஈதோ.

தெளிவுரை : ஒளிதிகழ் வேதத்தைக் கோவணமாகக் கொண்டு, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி, அழகிய வமையல்களைத் திரட்சியாக உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு இனிது இருந்து விளங்கும் ஈசன் பொங்கி வரும் காவிரியின் அழகிய கரையின்மேல் உறைகின்ற இடைமருது இதுவோ !

341. அந்தம் மறியா தஅரும் கலம்உந்திக்
கந்தம் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை உறைகின் றஇடை மருதுஈதோ.

தெளிவுரை : ஆதியும் அந்தமும் அறியப்பட முடியாதவன் ஈசன், அரியதாக விளங்கும் அணிகலன்களைத் தமது அலைகளாய் உந்திக் கொண்டு வரும் காவிரியின் மணம் பொருந்தி வீசும் அழகிய கரையின் மேல் விளங்குபவன்; வெண்பொடி பூசிய வேதமுதல்வன். அவன் என் தந்தை அப்பெருமான் உறைகின்ற இடைமருது இதுவோ !

342. வாசம் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே
தேசம் புகுந்துஈண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
பூசம் புகுந்துஆ டிப்பொலிந்து அழகாய
ஈசன் உறைகின் றஇடை மருதுஈதோ.

தெளிவுரை : வாசம் கமழும் சிறப்பான மலர்களைக் கொண்டு விளங்கும் சோலையில் வண்டுகள் பெருமையுடைதாய் விளங்க, பூசத் திருநாளில் மகிழ்ந்து பொலிந்து ஈசன் உறைகின்ற இடைமருது இதுவோ !

343. வன்புற்று இளநா கம்அசைத்து அழகாக
என்பிற் பலமா லையும்பூண்டு எருதேறி
அன்பிற பிரியா தவளோ டும்<உடனாய்
இன்புற்று இருந்தான் தன்இடை மருதுஈதோ.

தெளிவுரை : புற்றின்கண் விளங்கும் கொடிய நாகத்தை தரித்து, எலு<ம்பு மாலையை அழகாகப் பூண்டு, இடபவாகனத்தில் ஏறி, அன்பு பிரியாதவளாகிய உமாதேவியோடு உடனாகிய இருந்து இன்புற்று வீற்றிருக்கும் ஈசனுடைய இடைமருது இதுவோ !

344. தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்திப்
 போக்கிப் புறம்பூ சல்அடிப் பவருமால்
ஆர்க்கும் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க இருந்தான் தன்இடை மருதுஈதோ.

தெளிவுரை : காவிரி ஆறு தேக்கு, வேங்கை, பலா மரங்களை அடித்துக் கொண்டு வந்து கரையில் இரு பக்கங்களிலும் சேர்க்கும். அவ்வாறு நிகழ்வதால் உண்டாகும் ஒலி ஆர்க்க அழகிய கரைமேல் வீற்றிருக்கும் ஈசனுடைய இடைமருது இதுவோ !

345. பூவார் குழலார் அகில்கொண் டுபுகைப்ப
ஓவாது அடியார் அடியுள் குளிர்ந்துஏத்த
ஆவா அரக்கன் றனைஆற் றல்அழித்த
ஏவார் சிலையான் தன்இடை மருதுஈதோ.

தெளிவுரை : மென்மையான மலர் சூடும் கூந்தலையுடைய மகளிர் அகிற் புகைகொண்டு விளங்க, அடியவர்கள் சற்றும் ஓய்தல் இன்றி இடையறாது. திருவடியை நெஞ்சில் இருத்தி மகிழ்ந்து ஏத்த, வரையெடுத்த இராவணனுடைய வலிமை யழித்த பெருமை மிக்க கயிலை நாதனின் இடைமருது இதுவோ!

346. முற்றா ததொர்பால் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்துஏத்தப்
பொற்றோ ளியும்தா னும்பொலிந்து அழகாக
எற்றே உறைகின் றஇடை மருது ஈதோ.

தெளிவுரை : இளவெண்மதி சூடும் முதல்வன், பிரமனும் திருமாலும் விரும்பி ஏத்தி வழிபட, உமாதேவியும் தானும் பொலிந்து எவ்வளவு அழகாக உறைகின்றான் ! அந்த இடைமருது இதுவோ !

347. சிறுதே ரரும்சில் சமணும் புறம்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதுஏத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறிஆர் மழுவா ளன்இடை மருதுஈதோ.

தெளிவுரை : சில சமணர்களும் பௌத்தர்களும் நன்னெறிக்குப் புறம்பானவற்றைக் கூற, நன்னெறியின் பாற்பட்டுப் பலவகையால் அன்பு செய்யும் பக்தர்கள் கைதொழுது வணங்கி நிற்க, ஆவேசத்தோடு நீர் பெருகி வரும் காவிரியின் கரையில் விளங்கும், எறிந்து தாக்கும் மழுப்படையை ஆளும் ஈசன் இடைமருது இதுவோ !

348. கண்ணார் கமழ்க ழியுள்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழ்எந் தைஇடை மருதின்மேல்
பண்ணோடு இசைபா டியபத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத் தினில்வீற்று இருப்பாரே.

தெளிவுரை : கண்ணுக்கும் கருத்துக்கும் பொருந்தி விளங்கும் காழியை உள்மகிழும் ஞானசம்பந்தன் எண்ணத்தில் மிளிரும் புகழ் மிக்க எந்தையாகிய ஈசன் இருக்கும் இடைமருதின் மேல், பண்ணோடு பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் தேவர் உலகத்தில் வீற்றிருப்பர்.

திருச்சிற்றம்பலம்

33. திருஅன்பில்ஆலந்துறை (அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

349. கணைநீடு எரிமால் அரவம் வரைவில்லா
இணையா எயில்மூன் றும்எரித் தஇறைவர்
பிணைமா மயிலும் குயில்சேர் மடஅன்னம்
அணையும் பொழில்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : நீண்டு எரிதரும் அக்கினிக் கடவுள், திருமால், ஆகியோரைத் கணையாகவும், அரவத்தை நாணாகவும், மேரு மலையை வில்லாகவும் இணைத்து,  முப்புரங்களை எரித்த இறைவர் மயில்கள் தம் பெடையுடன் மகிழ்ந்தும், குயில்கள் இசைத்தும், அன்னப் பறவைகள் சேர்ந்தும் உள்ள பொழில் சூழ் அன்பில் என்கின்ற பதியில் விளங்கும் ஆலந்துறையில் இருப்பவர்.

350. சடைஆர் சதுரன் முதிரா மதிசூடி
விடைஆர் கொடியொன்று உடைஎந் தைவிமலன்
கிடைஆர் ஒலிஓத்து அரவத்து இசைகிள்ளை
அடைஆர் பொழில்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : ஈசன், சடையை உடையவன்; ஆற்றல் உடையவன்; இளைய பிறை மதிசூடி இடபக் கொடியுடைய எந்தை; விமலன், அப்பெருமான், மாந்தர், கூட்டமாக இருந்து வேதங்களை இசையுடன் ஓத, அவ் ஒலியைக் கேட்ட கிளிகள் இசைக்க விளங்கும் பொழில் சூழ் அன்பில் ஆலந்துறையில் மேவியுள்ளவர்.

351. ஊரும் மரவம் சடைமேல் உறவைத்துப்
பாரும் பலிகொண்டு ஒலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோடு
ஆரும் புனல்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : ஊரும் அரவத்தைச் சடையில் இருக்குமாறு செய்து, கபாலம் ஏந்திப் பலியேற்று ஒலி செய்யும் பரமன், கயல், வாளை, வரால் ஆகிய மீன்வகைகள் நீர் நிறைந்த வயங்களில் விளங்கப் பெருகும், அன்பில் ஆலந்துறையில் மேவியுள்ளவர்.

352. பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண்டு எழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியர்ஓ தஒலிசென்று
அறையும் புனல்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : பிறைச்சந்திரனும் அரவும் பகை நீங்கி ஒரு தன்மையில் அமையுமாறு வைத்துள்ள முடிமேல், மணம் கொண்டு எழும் நெருப்பை ஒத்துச் சிவந்த சடையை உடைய ஈசனார், வேத விற்பன்னர்கள் பலர், மறைகள ஓத, அவ்வொலியானது நீர்மல்கு ஒலிசேர் அன்பில் ஆலந்துறை சேர, மேவி இருப்பவர்.

353. நீடும் புனல்கங் கையும்தங் கமுடிமேல்
கூடும் மலையாள் ஒருபா கம்அமர்ந்தார்
மாடும் முழவம் மதிர்அம் மடமாதர்
ஆடும் பதிஅன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : கங்கையை முடிமேலும், மலையரசன் மகளாகிய உமாதேவியை இடப்பாகத்திலும் வைத்த இறைவர், முழவு ஒலிக்க இளமை யுடைய மாதர்கள் நடனம் ஆடும் பதியாகிய அன்பில் ஆலந்துறை மேவி இருப்பவர்.

354. நீறுஆர் திருமே னியர்ஊ னம்இலார்பால்
ஊறுஆர் சுவையா கியஉம் பர்பெருமான்
வேறுஆர் அகிலும் மிகுசந் தனம்உந்தி
ஆறுஆர் வயல்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : ஈசன், திருநீறு பூசிய திருமேனி உடையவர்; குற்றமற்ற மனத்தினர்தம் நற்சுவையானவர்; தேவர்தம் தலைவர். அவர், அகிலும் சந்தன மரங்களும் உந்திவரும் ஆற்றின் நீர் பாயும் வயல்கள் விளங்கும் அன்பில் ஆலந்துறையில் இருப்பவர்.

355. செடியார் தலையில் பலிகொண்டு இனிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்று ஏத்தும்
அடியார் தொழும்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : குற்றமுடைய ஒரு சிரத்தைக் கொய்து அதன் ஓட்டில் (பிரமகபாலம்) பலிகொண்ட முறைமையுடைய பரமன், பரமேட்டியின் சீரைப் போன்று மணத்துடன் மலரும் நீரும் சொரிந்து அடியவர்களால் தொழப்பெறும் அன்பில் ஆலந்துறை மேவியவர்.

356. விடத்தார் திகழும் மிடறன் நடமாடி
படத்தார் அரவம் விரவும் சடைஆதி
கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரைஆர
அடரத்துஆர் அருள்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : விடத்தை மிடற்றில் தேக்கி, நடனம் ஆடி, படம் எடுத்து ஆடும் அரவத்தையும் சடைமுடியையும் உடையவனாகிய ஆதிமுதல்வன், இராவணனைக் கயிலைமலை நன்று அழுந்துமாறு செய்து தண்டித்துப் பின்னர் பொருந்திய அருள் புரிந்து, அன்பில் ஆலந்துறை மேவியவரே.

357. வணங்கிம் மலர்மேல் அயனும் நெடுமாலும்
பிணங்கி அறிகின் றிலர்மற் றும்பெருமை
கணங்கும் முகத்தம் முலையாள் ஒருபாகம்
அணங்கும் நிகழ்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : தாமரை மலர்மேல் விளங்கும் அயனும், நெடியவனாகிய திருமாலும், பிணங்கும் நெறியால், ஈசனைத் தேடிக் காணாதவர்களாய் அயர்ந்து நிற்க, பின்னர் வணங்கிப் போற்ற, நெடுஞ் சோதி வடிவாய் நின்ற பெருமை யுடையவனாகிய ஈசன், உமையை ஒரு பாகம் கொண்டு திகழும் அன்பில் ஆலந்துறை மேவி இருப்பவர்.

358. தறிஆர் துகில்போர்த்து உழல்வார் சமண்கையர்
நெறியா உணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண்டு அடிவீ ழும்அவரை
அறிவார் அவர்அன் பில்ஆலந் துறையாரே.

தெளிவுரை : செம்மையான பொருளை உணராத சமணர் கேட்டினையுடையவர். மணம் பொருந்திய மலர்கொண்டு தனது அடி போற்றும் அடியவர்களை அறியும் ஈசன், அன்பில் ஆலந்துறை மேவியுள்ளவர்.

359. ஆரவுஆர் புனல்அன் பில்ஆலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
பரவுஆர் தமிழ்பத்து இசைபா டவல்லார்போய்
விரவுஆ குவர்வா னிடைவீ டுஎளிதாமே.

தெளிவுரை : ஒலிபெருகக் கலித்து ஓடும் புனல் பெருகும் அன்பில் ஆலந்துறையின் மேல், கரத்தல் குணம் இல்லாத காழிப்பதியின் ஞானசம்பந்தன் பரவிப் பாடிய இத்திருப்பதிகத்தை இசையாகப் பாடவல்லவார்கள், வானுலகத்தில் நன்கு விளங்குவார்கள்; முத்திப் பேறும் எளிதாகக் கூடும்.

திருச்சிற்றம்பலம்

34. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

360. அடல்ஏ றுஅமரும் கொடியண்ணல்
மடல்ஆர் குழலா ளொடுமன்னும்
கடல்ஆர் புடைசூழ் தருகாழி
தொடர்வார் அவர்தூ நெறியாரே.

தெளிவுரை : ஈசன், இடபவாகனம் அமர்பவர்; இடபக் கொடியை உடைய அண்ணல்; பூப்போன்ற மென்மையான் சூழலை உடைய உமாதேவியோடு சீகாழியில் விளங்கும் அவரைத் தொழுது வழிபடுபவர், தூய நெறியினர் ஆவார்.

361. திரைஆர் புனல்சூ டியசெல்வன்
வரைஆர் மகளோடு மகிழ்ந்தான்
கரைஆர் புனல்சூழ் தருகாழி
நிரைஆர் மலர்தூ வுமின்இன்றே.

தெளிவுரை : அலைகளையுடைய கங்கையைச் சூடிய செல்வன், மலைமகளாகிய உமாதேவியோடு மகிழ்ந்து வீற்றிருப்பவன். அவன் வீற்றிருக்கும் புனல் சூழ்ந்த காழியை மலர்தூவிப் போற்றிப் பரவுமின்.

362. இடிஆர் குரல்ஏ றுடைஎந்தை
துடிஆர் இடையா ளொடுதுன்னும்
கடிஆர் பொழிசூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.

தெளிவுரை : இடிமுழக்கம் போன்ற குரலையுடைய இடபத்தையுடைய என் தந்தை. துடிபோன்ற அமைப்புடைய இடையையுடைய உமாதேவியோடு சேர்ந்து விளங்கும் மணம் பொருந்திய பொழில் சூழ் சீகாழியில் விளங்க, அவரை வணங்கும் அடியவர்கள் அவலம் அடையாதவர்களாவர்.

363. ஒளிஆர் விடமுன் டஒருவன்
அளிஆர் குழல்மங் கையொடு அன்பார்க்
களிஆர் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவர்இன்பே.

தெளிவுரை : விடத்தை உட்கொண்ட ஒருவன், வண்டு ஒலித்துச் சூழும் கூந்தலை உடைய உமாதேவியோடு பொழில் சூழ் காழியில் அன்பாய் இருக்க, அத் திருக்காட்சியைக் காண்பவர்கள் இன்பம் உறுவர்.

364. பனிஆர் மலர்ஆர் தருபாதன்
முனிதான் உமையோ டுமுயங்கிக்
கனிஆர் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவர்ஈடே.

தெளிவுரை : குளிர்ந்த மலர் போன்ற திருவடியையுடைய ஈசன், உமையோடு இணைந்து கூடிக் கனிதரும் பொழில் சூழ்ந்த சீகாழியில் இனிது விளங்க, அத்திருக்காட்சியைக் கண்டு தரிசித்தவர்கள் இனிதே பெருமை யுற்றவர்கள் ஆவர்.

365. கொலைஆர் தரும்கூற் றம்உதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதுஏத் தியாகாழி
தலையால் தொழுவார் தலையாரே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய கூற்றுவளை உதைத்து, மலை மகளாகிய தேவியுடன் மகிழ்ந்தான். சிவபெருமான். ஞானிகள் தொழுது போற்றுக் காழியில் விளங்கும் அப்பெருமானைத் தலை வணங்கித் தொழுபவர்கள் சிறப்படைவர்.

366. திருவார் சிலையால் எயில்எய்து
உருவார் உமையோடு உடன்ஆனான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.

தெளிவுரை : மேருமலையை அழகிய வில்லாகக் கொண்டு, முப்புரங்களின் கோட்டைகள் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, மேன்மையான உமா தேவியை உடனாகக் கொண்டு, அடர்ந்த பொழில் சூழ்ந்த காழியில் விளங்கும் ஈசனைக் காணாதவர்களுக்குச் சிறப்பு இல்லை.

367. அரக்கன் வலிஒல் கஅடர்த்து
வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ டுநினைந்தே,

தெளிவுரை : இராவணனுடைய வலிமையைக் கெடுமாறு தண்டித்து, மலைமகளாகிய உமாதேவியோடு மகிழ்ந்து விளங்கிய ஈசன், ஊற்று நீர் பெருக்கும் சீகாழியில் மேவி இருக்கின்றான். அப்பெருமானை மனத்தில் கொண்டு, ஏராளமான மலர்களால் தூவிப் போற்றுக.

368. இருவர்க்கு எரியா கிநிமிர்ந்தான்
உருவில் பெரியா ளொடுசேரும்
கருநல் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.

தெளிவுரை : திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும், தீப்பிழம்பாகி வளர்ந்தோங்கிய ஈசன், உமாதேவியோடு சேர்ந்து கரிய கடல் சூழ் காழிப் பதியில் விளங்க, அதனைச் சாரும் மக்கட்கு வினை நீங்கி மாயும்.

369. சமண்மாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோடு உடன்அன் பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் குறை மொழியைச் சொன்னாலும், அதனை ஏற்காதவனாய் உமாதேவியுடன் அன்பு சேர விளங்கும் காழிப்பதி யுடையவனை, மலர்தூவிப் போற்றுவது நற்றொண்டாகும்.

370. நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே.

தெளிவுரை : மன்னுயிர்களுக்கு நலத்தை அளிப்பவராகிய ஞானசம்பந்தன், காழிப்பதியை நிலையாக உடைய ஈசன்பால் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் சிறப்பு அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

35. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

371. அரைஆர் விரிகோ வணஆடை
நரைஆர் விடைஊர் திநயந்தான்
விரைஆர் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் <உணர்வார் உயர்வாரே.

தெளிவுரை : அரையில் கோவண ஆடையும், வெள்விடை ஊர்தியும் நயந்த, மணம் பொருந்திய பொழில் சூழ் வீழிமிழலையின் நாதனை, நல்லுரை கொண்டு போற்றியும், தியானம் செய்தும் வழிபடுபவர்கள், உயர்நிலை அடைவார்கள்.

372. புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே.

தெளிவுரை : அழகுடன் பொருந்திய சடைமுடியில் ஒலி செய்து ஆர்க்கும் கங்கைய வைத்த ஈசனை, வீழிமிழலையில் தரிசித்து வினை இன்மை எனும் சிறப்பைக் கொள்ளாமலும், அப் பெருமானை நினைத்துப் போற்றி வணங்காமலும் இருக்கும் நெஞ்சம் ஒரு நெஞ்சம் ஆகுமா ?

373. அழவல் லவர்ஆ டியும்பாடி
எழவல் லவர்எந் தைஅடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

தெளிவுரை :  பக்திப் பெருக்கால் அழுதும், ஆடியும், பாடியும் எழும் தொண்டர்கள், ஈசன் திருவடியைப் போற்றி ஆனந்தப் பரவசம் கொண்டு பேரின்பத்தில் திளைத்துத் திருவீழிமிழலையில் எழுந்தருளியுள்ள நாதனைத் தொழுவார்கள். அவர்கள் வல்லவர்கள்; நல்லவர்கள், தொண்டில் சிறந்தவர்கள்.

374. உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரைஆர்த் தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே.

தெளிவுரை : வலிமையுறும் சடையிலும் அரையிலும் அரவத்தைக் கொண்ட அழகனாகிய பொழில் சூழ் வீழிமிழலை நாதனைப் பரவித் தொழுபவரே அடியார்கள் ஆவர்.

375. கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண்டு அறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.

தெளிவுரை :  நஞ்சை அருந்தியதால் கண்டம் கரியதாகிய ஈசன், வண்டு சூழும் கொன்றை மரங்கள் சூழ் வீழிமிழலையில் விளங்க, அவனை உரிமையோடு நினைத்துத் தொழுபவர்கள் உயர்ந்த நிலை பெறுவர்.

376. சடைஆர் பிறையான் சரிபூதப்
படையாள் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே.

தெளிவுரை : ஈசன், சடையில் வெண்பிறை சூடியவன்; கூட்டமாக உள்ள பூதப்படை கொண்டவன்; இடபக் கொடியை உடையவன். அப்பெருமான் உறையும் வீழிமிழலையை அடைந்து, அவனடி பணிபவரே அடியவர்கள் ஆவர்.

377. செறிஆர் கழலும் சிலம்புஆர்க்க
நெறிஆர் குழலா ளொடுநின்றான்
வெறிஆர் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் மறியாரே.

தெளிவுரை : உறுதி மிக்க வீரக்கழலும் சிலம்பும் ஒலிக்க சுருண்ட குழலையுடைய உமாதேவியுடன் விளங்கும் ஈசன், மணம் பொருந்திய சோலைசூழ் வீழிமிழலையில் மேவ, நன்கு அறிந்து அப்பெருமானை வழிபடுபவர்கள் வாழ்வில் துன்பத்தைச் சற்றும் அடையாதவர்கள் ஆவர்.

378. உளையா வலிஒல் கஅரக்கன்
வளையா விரல்ஊன் றியமைந்தன்
விளைஆர் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவார் அடியாரே.

தெளிவுரை : அழிவைத் தரும் வலிமை படைத்த இராவணனுடைய ஆற்றல் குன்றுமாறு விரல் ஊன்றிய ஈசன் திருவீழி மிழலையில் வீற்றிருக்க, அப்பெருமானை அன்புடன் மனம் தழுவிப் போற்றுபவர்களே அடியவர் ஆவர்.

379. மருள்செய்து இருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அஞ்ஞானத்தால் மருட்சி அடைந்து மயங்கி நிற்க, நெருப்புப் பிழம்பாகி வெருளும்படி செய்து அருள் புரிந்த ஈசன் விளங்கும் வீழிமிழலையில், தெளிந்த மனத்தினராய்ப் போற்றித் துதிப்பவர்தம் தீவினை, தேய்ந்து அழியும்.

380. துளங்கும் நெறியார் அவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புனல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினைஓய்வே

தெளிவுரை : பக்தி நெறியில் உறுதிப்பாடி இல்லாமல் அசைவை யுடைய புறச்சமயத்தவர்களின் மொழிகள ஏற்றுக் கொள்ள வேண்டாம். வீழிமிழலையில் விளங்கும் ஈசனாரை உள்ளத்தில் பதித்துத் துதிபர்பவர்களுடைய வினை அசைவுற்று நீங்கும்.

381. நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
குளிர்ஆர் சடையான் அடிகூற
மிளிர்ஆர் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க்கு இலைகேடே.

தெளிவுரை : குளிர்ச்சி பொருந்திய காழியின் ஞான சம்பந்தன், குளிர்ந்த கங்கையைச் சடையில் தரித்தவனாகிய ஈசன் அடிபோற்றி, மிளிர்பொழில்சூழ் வீழிமிழலையைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுக்குக் கெடுதியானது எக்காலத்திலும் இல்லை.

திருச்சிற்றம்பலம்

36. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

382. கலைஆர் மதியோடு உரநீரும்
நிலைஆர் சடையார் இடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோடு
அலைஆர் புனல்சே ரும்ஐயாறே.

தெளிவுரை : கலையுடைய சந்திரனும் மிகுதியாக உள்ள கங்கையும் சடையில் தரித்து விளங்கும் ஈசன் திகழும் இடமாவது, மலையில் தோன்றும் முத்துக்களும், சிறப்பான மணிகளும். சந்தன மரங்களும் காவிரியில் அடித்துக் கொண்டு சேரும் வளம் மிக்க ஐயாறு ஆகும்.

383. மதிஒன் றியகொன் றைவடத்தான்
மதிஒன் றஉதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதிஅம் பயில்கின் றஐயாறே.

தெளிவுரை : ஈசன், சந்திரனையும் கொன்றை மாலையையும் முடியில் சூடியவன்; வீரபத்திரக் கோலத்தில் தக்கன் யாகத்தை அழித்த போது, சந்திரனைக் காலால் மிதித்துத் தேய்த்தவன். சந்திரமண்டலம் அருகில் சேரும்படி உயர்ந்த மாடங்களையுடைய திங்கள் தவழும் ஐயாறு, அப்பெருமான் வீற்றிருக்கும் இடம் ஆகும்.

384. கொக்கின் னிறக்கின் னொடுவன்னி
புக்க சடையார்க்கு இடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதுஐயாரே.

தெளிவுரை : உருத்திராக்க மாலையை நன்கு அணிந்தும், கொக்கிறகும் நெருப்பும் கொண்டுள்ள சடைமுடியுடையவராகிய ஈசனுக்குத் தேவர்களெல்லாம் வணங்கும் ஐயாறு இடமாகும்.

385. சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ரும்ஐயாறே.

தெளிவுரை : மும்மதில்களை எல்லையாகக் கொண்டு தீங்கிழைத்த மூன்று புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, நீலகண்டனாக உள்ள இறைவர் விரும்பும் கோயிலானது, மக்கள் கண்களுக்குப் புலனாகாமல் தேவர்கள் துதிக்கும் ஒலி திகழும் ஐயாறு ஆகும்.

386. உமையாள் ஒருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடம்ஆகும்
அமைஆர் உடல்சோர் தரமுத்தம்
அமையா வரும்அந் தண்ஐயாறே.

தெளிவுரை : உமாதேவி ஒரு பாகத்தில் விளங்க, ஈசன் சார்ந்து இருக்கும் இடமாவது, மூங்கில்கள் முற்றி வெடிக்க, அதிலிருந்து முத்துக்கள் அழகோடு வரும் அழகிய குளிர்ச்சி பொருந்திய ஐயாறு ஆகும்.

387. தலையில் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் கும்ஐயாறே.

தெளிவுரை : தலையில் பூங்கெத்துக்களை மாலையாக அணிந்தும், மானைத் திருக்கரத்தில் ஏந்தியும் விளங்கும் ஈசன் சேரும் இடமாவது, நிலைத்த மனத்தினராய் நித்தம் மலர்கொண்டு வணங்கும் சிறப்புப் பொருந்திய ஐயாறே.

388.வரம்ஒன் றியமா மலரோன்றன்
சிரம்ஒன் றைஅறுத் தவர்சேர்வாம்
வரைநின்று இழிவார் தருபொன்னி
அரவம் கொடுசே ரும்ஐயாறே.

தெளிவுரை :  தெய்வப் பேறுடைய பிரமனுடைய சிரம் ஒன்றை அறுத்த ஈசனார் சேர்கின்ற இடமாவது மலையிலிருந்து வீழும் பொன்னி நதியின் ஒலி திகழும் ஐயாறே.

389. வரைஒன் றதுஎடுத் தஅரக்கன்
சிரம்அங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ரும்ஐயாறே.

தெளிவுரை : மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனுடைய சிரத்தையும், அங்கத்தையும் நெரித்த ஈசனார் சேர்கின்ற இடமாவது, மணம் பொருந்திய மலர்களைத் திரைகள் மூலமாகக் கரையில் சேர்க்கும் ஐயாறே.

390. சங்கக் கயனும் அறியாமைப்
பொங்கும் கடரா னவர்கோயில்
கொங்கில் பொலியும் புனல்கொண்டு
அங்கிக்கு எதிர்காட் டும்ஐயாறே.

தெளிவுரை : சங்கைக் கையில் உடைய திருமாலும் அறியமாட்டாதவராய்ப், பூக்கும் நெருப்புப் பிழம்பாய் விளங்கும் ஈசனார்  திருக்கோயில், தேன் எனச் சுவையுடைய நீர்கொண்டு வேள்வி முதலான சுபச் செயல்களுக்கு அர்க்கியம்  அர்ப்பணம் காட்டும் ஐயாறே.

391. துவர்ஆ டையர்தோல் உடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோடு
அவர்தாம் அணைஅந் தண்ஐயாறே.

தெளிவுரை : துவர் ஆடையுடைய வஞ்சனையாளர் கூறும் மொழிகளை நாடாது, தவமுனிவர்களும் பிரமனும் சார்ந்து விளங்கும் இடம் ஐயாறே.

392. கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலம்ஆர் தருஞா னசம்பந்தன்
அலைஆர் புனல்சூழும் ஐயாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.

தெளிவுரை : கலை ஞானியர் ஒலி செய்யும் காழியில் நலம் சிறக்கப் புரியும் ஞானசம்பந்தன். நீர் சூழும் ஐயாற்றைப் பற்றி உரைத்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர்களின் துயர் வீழ்ச்சி அடையும்.

திருச்சிற்றம்பலம்

37. திருப்பனையூர் (அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

393. அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவன்ஊராம்
நிரவிப் பலதொண் டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

தெளிவுரை : அரவம் பொருந்திய சடையில் சந்திரனும் ஊமத்தை மலரும் விரவிப் பொலிகின்ற ஈசனின் ஊர். பல தொண்டர்கள் யாண்டும் இருந்து, தினமும் தொழுது சிறப்புக் கொள்ளும் பனையூர் ஆகும்.

394. எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்த் தவன்ஊராம்
கண்ணின்று எழுசோ லையில்வண்டு
பண்நின்று ஒலிசெய் பனையூரே.

தெளிவுரை : ஒன்றிய மனத்தினராய், ஈசனை நினைத்து வழிபடும் தொண்டர்களின் உள்ளத்தில் பொருந்தி நின்று, அவர்கள் துயரை அகற்றி, அடையும் மகிழ்ச்சியையும் தானே ஏற்று, அத் தொண்டர்களுக்கு இருவினையும் ஒத்த பாங்குடையதாக வைத்து, மீளவும் பிறக்கும் இயல்பை நீக்கி அருள் நல்குபவனுடைய ஊரானது, தேன் சொரியும் மலர்ச்சோலையில் வண்டுகள் இசை பாடும் பனையூர் ஆகும்.

395. அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறைஒன்று உடையான்ஊர்
சிலர்என் றும்இருந்து அடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.

தெளிவுரை : மலர்களால் போற்றி அர்ச்சனை செய்யப்படுகின்ற சிவந்த சடை முடியில் மலரும் பிறைச் சந்திரனை உ<டைய ஈசனது ஊர், அணுக்கத் தொண்டர்களாக விளங்கும் அடியவர்களும், திருத்தொண்டர்களும் எல்லாக் காலங்களிலும் இருந்து திருவடியைப் பேணிப் பரவி வழிபடும் பனையூர் ஆகும்.

396. இடிஆர் கடல்நஞ் சமுதுஉண்டு
பொடிஆ டியமே னியினான் ஊர்
அடியார் தொழமன் னவர்ஏத்தப்
படியார் பணியும் பனையூரே.

தெளிவுரை : அலைகளால் கரையை இடித்து மோதும் கடலில் இருந்து தோன்றிய நஞ்சை அமுதமாக ஏற்று உட்கொண்டு, வெண்பொடியாகிய திருநீற்றைப் பூசிய மேனியை உடையவனின் ஊரானது, அடியவர்களும், மன்னவர்களும் தொழுது போற்றவும், உலகத்தில் உள்ள பிற மாந்தர்களும் வணங்கும் பனையூர் ஆகும்.

397. அறைஆர் கழல்மேல் அரவுஆட
இறைஆர் பலிதேர்ந் தவன்ஊராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறைஆர் ஒலிசெய் பனையூரே.

தெளிவுரை : ஒலிக்கும் கழலும் அரவமும் ஆட, கையில் திருவோடு ஏந்தி, பிட்சாடன மூர்த்தித் திருக்கோலம் பூண்டு பலி கொண்டவனுடைய ஊரானது, உலகத்தில் சிறப்பாகச் செய்யப்படும் பெருமையான விழாக்கள் விளங்க, ஒலிப்பறை முழங்கும் பனையூர் ஆகும்.

398. அணியார் தொழவல் லவர்ஏத்த
மணிஆர் மிடறுஒன்று உடையான்ஊர்
தணிஆர் மலர்கொண்டு இருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.

தெளிவுரை : ஈசனைத் தொழுது போற்ற வல்லவர்கள் அவனுக்கு அண்மையில் உள்ளவர் ஆவர். அத்தகையோர் விளங்க, நீலகண்டத்தை உடையவனாகிய ஈசன் இருக்கும் ஊரானது, குளிர்ந்த நீரும் பூக்களும் கொண்டு இருவேளையும் பணிந்து வழிபடும் அடியார்கள் நிலவும் பனையூர் ஆகும்.

399. அடையா தவர்மூ எயில்சீறும்
விடையான விறல்ஆர் கரியின்தோல்
உடையான் அவன்எண் பலபூதப்
படையான் அவன்ஊர் பனையூரே.

தெளிவுரை : முப்புரத்து அசுரர்களைச் சினந்து அழக்கும் இடப வாகனனாகிய ஈசன், வலிமை மிக்க யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன். அப்பெருமான் பூத கணங்களைப் படையாகக் கொண்டவன். அவனுடைய ஊர் பனையூர் ஆகும்.

400. இலகும் முடிபத்து உடையானை
அலல்கண்டு அருள்செய் தஎம்அண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவன்ஊர் பனையூரே.

தெளிவுரை : சிறுமை யுடைய பத்துத் தலைகளையுடைய இராவணன் மலையின் கீழ் அடையும் துன்பத்தைக் கண்டு, இரக்கம் கொண்டவராய் அருள் செய்த எம் அண்ணலாகிய ஈசன், உலகத்தில் எல்லாக் காலங்களிலும் உயிர்கள், நீர், நிலம் மற்றும் உள்ள அனைத்துக் கண்டவர். அவர் ஊர் பனையூர் ஆகும்.

401. வரம்உன் னிமகிழ்ந்து எழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமால் அறியாத
பரமன் னுறையும் பனையூரே.

தெளிவுரை :  ஈசனின் பெருங் கருணையால் வரங்கள் பல பெற்று, அதை நினைத்து மகிழ்ச்சி கொண்டு வணங்கித் தொழும் அன்பர்காள் ! சிரம் தாழ்த்தி வணங்கும் பிரமனும், திருமாலும் அறியாத பரமன் உறையும் ஊர் பனையூர் ஆகும்.

402. அழிவல் லமண ரொடுதேரர்
மொழிஅல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினான்ஊர்
பழிஇல் லவர்சேர் பனையூரே.

தெளிவுரை : சமணர்களும், பௌத்தர்களும் உயர்ந்த மொழி யல்லாதனவற்றைச் சொன்ன போதிலும் குறையற்ற செம்மை வழங்கும் ஈசனது ஊர், பழியில்லாதவர்கள் விளங்கும் பனையூர் ஆகும்.

403. பார்ஆர் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொல்மா லைகள்பத்தும்
ஊர்ஊர் நினைவார் உயர்வாரே.

தெளிவுரை : பூவுலகத்தில் சிறப்புடைய பனையூர் மேல், சீரார் தமிழ் ஞானசம்பந்தன் <உரைத்த, எக்காலத்திலும் சிறந்து விளங்கும் சொல் மாலையாகிய இத்திருப்பதிகத்தை மிகுதியாக நினைத்து ஓதுபவர்கள் உயர்வு அடைவர்.

திருச்சிற்றம்பலம்

38.திருமயிலாடுதுறை (அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

404. கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரமா மயிலா டுதுறையே.

தெளிவுரை : தலை மாலை பூண்ட செஞ்சடையண்ணல் வீற்றிருக்கும் மயிலாடுதுறையில், அடியவர்கள் வஞ்சனை இன்றி நன்மலர்களைக் கொண்டு இரவும் பகலும் தூவித் தொழுகின்றனர்.

405. உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.

தெளிவுரை : குரவம், சுரபுன்னை, வன்னி ஆகிய மலர்கள் விளங்கும் மயிலாடுதுறையானது வலிமையான கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட பரமன் உறையும் பதியாகும்.

406. ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலா டுதுறையே.

தெளிவுரை : அஞ்ஞானம் என்னும் இருள் ஆன்மாவை ஊனப்படுத்துகிறது. அஃதாவது, ஆன்மாவானது  உயிரானது, ஈசனோடு பொருந்தி மகிழ்ந்து உறைவதற்கு அஞ்ஞானம் தடையாக உள்ளது. அது நீங்க வேண்டுமானால் ஞானப் பொருள் கொள்ள வேண்டும். அது, தேனை ஒத்து இனிமை தரும் பதியாகிய ஈசன் அடிபோற்றுவதால் உண்டாகும். அவ் ஈசன் அமர்ந்துள்ள இடம், உயர்ந்த தன்மையில் விளங்கும் மயிலாடுதுறை.

407. அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சள் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைந்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே.

தெளிவுரை : ஐந்து புலன்களின் வழி செல்லும் ஆசையை அழித்தவன் இறைவன். மயிலாடுதுறையில் அப் பெருமான் வீற்றுள்ளான். அப் பெருமானை ஒன்றிய சிந்தனையால் வணங்குபவர்களிடம் உள்ள பிணிகள் யாவும் மறையும்.

408. தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.

தெளிவுரை : குளிர்ந்த சந்திரனைச் செஞ்சடையில் தரித்தவன் ஈசன். அவன், தன்னை அடைந்து வழிபடுபவர்களுக்கு அருள்புரிபவன். அவன் மயிலாடுதுறையில் வீற்றிருந்து பிணிகளைத் தீர்த்து அருள் செய்யும் மணி போன்றவன்.

409. தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வண்டார் மயிலா டுதுறையே.

தெளிவுரை : தொண்டர்கள் பக்தியாகக் கூடி இருந்து இசைப் பாடல்களைப் பாடி, ஈசனைக் கண்டு தரிசித்து மகிழ்கின்றனர். அப்பெருமான் உறையும் ஊரானது  இதே போன்று முற்காலத்திலும் பல வேதவிற்பன்னர்கள் கூடி இருந்து ஓதிய மயிலாடுதுறை ஆகும்.

410. அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு, அக் கருணைத் தாயின் அருள் பாங்கின்படியும் அடியவர்தம் வேண்டுதலின்படியும் இணங்கி அருள் புரிபவன் ஈசன், அப்பெருமான், நுண்மையாய் ஆயும் முப்புரிநூல் அணிந்த பெருமக்கள் கூடி வணங்கும் மயிலாடுதுறையில் வீற்றிருப்பவன். எனவே அது அவனுடைய ஊர் ஆகும்.

411. சிரம்கை யினில்ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடுதுறையே.

தெளிவுரை : பிரம கபாலத்தைக் கையில் ஏந்திப் பலி கொண்ட ஈசன், <உமாதேவி தன்பால்பற்றிச் சூழுமாறு சேர, அதற்குக் காரணமாகிய அரக்கனின் வலிமை குறையும்படி வரையால் அடர்த்தினான். அப்பெருமான் வீற்றிருப்பது மயிலாடுதுறை.

412. ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே.

தெளிவுரை : பூமியை உண்டு உமிழ்ந்த திருமாலும் அழகிய பிரமனும் அறியாதவாறு ஓங்கியும், மறைந்தும் இருந்த ஈசன் வீற்றிருக்கும் இடமாவது, மயக்கத்தைத் தீர்க்கும் பெற்றியை உடைய மயிலாடுதுறை.

413. நின்று<உண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மை<உயர்ந்த
வென்றி அருளான் அவன்ஊரான்
மன்றல் மயிலா டுதுறையே.

தெளிவுரை :  சமணரும், பௌத்தரும் உயர் பொருளை அறியாதவாராய் இருக்க, வெற்றியைத்தரும் அருமை <உடையவனாகிய ஈசன் உறைவது மணம் கமழும் மயிலாடுதுறை ஆகும்.

414. நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலால் உரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே.

தெளிவுரை : நயம் மிக்கவர் விளங்கும் காழியின் ஞான சம்பந்தன், மயலைத் தீர்க்கும் மயிலாடுதுறையின்மேல் ஈசன் திருவருளால் உரை செய்த இத் திருப்பதிகத்தை உணர்ந்து ஓதுபவர்களுக்கு எல்லா உயர்வும் உண்டாகும்.

திருச்சிற்றம்பலம்

39. திருவேட்களம் (அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

415. அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
ஆர்அழல் அங்கை அமர்ந்திலங்க
மந்தமுழவம் இயம்ப
மலைமகள் காண நின்றாடிச்
சந்தம் இலங்கு நகுதலை கங்கை
தண்மதியம் மயலேததும்ப
வெந்தவெண் ணீறுமெய்பூசும்
வேட்கள நன்னகராரே.

தெளிவுரை : ஆதியும் அந்தமும் ஆகிய அண்ணல். நெருப்பை அழகிய கரத்தில் கொண்டு முழவு ஒலிக்க, கபாலமும் கங்கையும் குளிர்ச்சி பொருந்திய சந்திரனும் மயங்கித் திளைக்க, மலைமகள் கண்டு மகிழுமாறு நின்று ஆடுகின்றார். அவர் திருநீற்றை மெய்யில் பூசி வேட்கள நகரில் இருப்பவர்.

416. சடைதனைத் தாழ்தலும் ஏறுமுடித்துச்
சங்கவெண் தோடு சரிந்திலங்கப்
புடைதனில் பாரிடம் சூழப்
போதருமாறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவணஆடை
உண்பதும் ஊரிடு பிச்சைவெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார்
வேட்கள நன்நகராரே.

தெளிவுரை : ஈசன், சடையைத் தாழ முடித்துக் காதில் வெண்குழையும் தோடும் விளங்கவும், பூதங்கள் நாலா பக்கங்களிலும் சூழ்ந்திருக்கு வருபவர். இவரது உடை கோவணம். இவர் ஊர் இடுகின்றி பிச்சையை ஏற்று உண்டு, இடபத்தைத் தனது வாகனமாக விரும்பியவர். இவரே வேட்களம் என்னும் நன்நகரில் இருப்பவர்.

417. பூதமும் பல்கண மும்புடைசூழப்
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையும் ஆகிச்
சீரொடு நின்றஎம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை
உள்ளம் கலந்து இசையால்எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன் நகராரே.

தெளிவுரை : பூதம் மற்றும் பல கணங்களும் புடைசூழவும், பூவுலகமும் விண்ணுலகமும், உடன் சேர்ந்து பொருந்துமாறும் தாமே ஆகும் சிறப்புடன் இருக்கும் ஈசன் எம் செல்வர். அவர் காட்சிக்கும் கருத்துக்கும் இனிமையும் குளிர்ச்சியும் தரும் கடல் சூழ்தரும் சோலையைப் போன்று, உள்ளத்தில் கலக்கும் இசையால் எழும் வேத வேள்விகள் ஓய்வில்லாது விளங்கும் வேட்கள நகரில் உள்ளவரே.

418. அரைபுல்கும் ஐந்தவை ஆடல்அரவம்
அமையவெண் கோவணத் தோடுஅசைத்து
வரைபுல்கு மார்பில் ஓர்ஆமை
வாங்கி அணிந் தவர்தாம்
திரைபுல்கு தெண்கடல் தண்கழி ஓதம்
தேனலங்கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்கராரே.

தெளிவுரை : ஈசன், ஐந்து தலைகளையுடைய அரவு இடையில் ஆட, ஒளிமிக்க கோவணம் அணிந்து ஆடி, மாலைபோன்று வலிமையான திரண்ட மார்பில் ஆமையை அணிந்து இருப்பவர். அவர், அலைகள் கொண்ட தெளிந்த கடலில் உப்பங்கழி ஓதம் விளங்க, இருமருங்கும் தேன் மலர்ச் சோலைகளில் வண்டுகள் இனிய பண்களை இசைக்கும் சிறப்பு பொருந்திய வேட்களம் என்னும் நன்நகரில் உள்ளவர்.

419. பண்ணுறு வண்டறை கொன்றைஅலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கள்
கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னகாரரே.

தெளிவுரை : வண்டுகள் இசைபாடும் கொன்றை மாலையணிந்தும், பால்போன்ற திருவெண்ணீறு பூசி வெண்ணூல் திகழ, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட பெருமான், நன்னெறியை பேணிக்காதவர்களான முப்புர அசுரர்களை அழித்தவர். அவர், நெற்றியில் ஒரு கண்ணும், வெண்பிறைச் சந்திரனும் சூடி உள்ளவர்; தேவர்கள் தொழுது போற்ற, வெண்மையான இடப வாகனத்தை உடையவர். அவர் வேட்கள நகரில் இருப்பவரே.

420. கறிவளர்குன்றம் எடுத்தவன் காதல்
கண்கவர் ஐங்கணை யோன்உடலம்
பொறிவளர் ஆரழல்உண்ணப்
பொங்கிய பூதபுராணர்
மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மான்உரி தோலுடை ஆடை
வெறிவளர் கொன்றைஅம் தார்ஆர்
வேட்கள நன்நகராரே.

தெளிவுரை : மிளகுச் செடிகள் பெருகி வளரும் கோவர்த்தன மலையை எடுத்து, பசுகூட்டங்களுடன் மக்களையும் பாதுகாத்த திருமாலின் புதல்வனாகிய ஐந்து மலர்கணைகளை யுடைய மன்மதனை, நெற்றிக் கண்ணிலிருந்து எழும் நெருப்புப் பொறியால் எரித்தவர், ஈசன். அப்பெருமான், மானைத் திருக்கரத்தில் ஏந்தியவர்; உமாதேவியை ஒரு பாகமாக உடையவர்; கரிய மானின் தோலை உரித்து அதனை ஆடையாகக் கொண்டவர்; மணம் பெருக்கும் கொன்றை மலரை அழகிய மாலையாகச் சூடியவர். அவரே வேட்கள நகரில் இருப்பவர்.

421. மண்பொடிக் கொண்டுஎரித் தோர்சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்தலை யோடுகை÷ந்திக்
காலனைக் காலால் கடிந்துஉகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
வேட்கள நன்நகராரே.

தெளிவுரை : பிரளய காலத்தில் யாவற்றையும் எரித்துப் பொடியாக்கி, அந்தச் சாம்பலைப் பூசி, உமாதேவி மகிழுமாறு நடனம் புரிந்து நுட்பத்தைச் செய்ய விரும்பியவர், ஈசன். அவர், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; காலனைக் காலால் உதைத்தவர்; திருநீற்றை மார்பில் அணிபவர். அவர் வேட்களம் என்னும் நகரத்தில் உள்ளவரே.

422. ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார்
அமுதம் அமரர்க்கு அருளிச்
சூழ்தரு பாம்புஅரை ஆர்த்துச்
சூலமோடு ஒண் மழுவேந்தித்
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித்
தண் மதியம்மய வேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்நகராரே.

தெளிவுரை : திருமால் பள்ளிகொண்டுள்ள பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தாமே ஏற்று உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு அருள் செய்து, பாம்பை அரையில் கட்டி, சூலமும் மழுவும் கரத்தில் ஏந்தி தாழும் சடை யொன்றில் குளிர்ந்த சந்திரனை இன்ப மயக்கம் உறுமாறு சூடி, கங்டகடயத் தம் திருமுடியில் ஏற்றுக் கொண்டவர் ஈசன். அவர் வேட்களம் என்னும் நகரில் இருப்பவரே.

423. திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுகனும் திசைமேல் அளந்த
கருவரை யேந்திய மாலும்
கைதொழ நின்றதும் அல்லால்
அருவரை ஒல்க எடுத்த அரக்கன்
நாடெழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான்
வேட்கள நன்நகராரே.

தெளிவுரை : ஈசனுடைய பேரொளியாகிய திருமேனியைக் காண விரும்பியவர்கள் திசைமுகனாகிய பிரமனும், திசைகளுக்கும் மேலாக மூவுலகத்தையும் அளந்து, கோவர்த்தனகிரியைக் கையில் ஏந்திய திருமாலும் ஆவர். அவர்கள் இருவரும் கைதொழுது நிற்கின்றனர். அருமையான கயிலையை எடுத்த அரக்கனின் விரும்பத்தக்க தோள்கள் கீழே அழுந்துமாறும் அச்சம் கொள்ளுமாறும் விரலால் உன்றியவன் அப் பெருமான். அத்தகைய பெருமை உடையவர் வேட்கள நன்நகரில் இருப்பவரே.

424. அந்த மண் தோய்துவர் ஆர்அமண்குண்டர்
யாதும்அல்லார்உரை யேஉரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லால்
புறன்உரை யாதொன்றும் கொள்ளேன்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரிபோர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்நகராரே.

தெளிவுரை : செம்மண் தோய்த்துத் துயர் ஆடை அணியும் அமணர்கள் கூறும் பயனற்ற உரைகள், பொய்த் தவத்தையே பேசும். எனவே அதனை யான் ஏற்றுக் கொள்வதில்லை. முத்துப் போன்ற வெண்மை யான முறுவல் புரியும் உமாதேவி அஞ்சுமாறு வலிமையான கொடிய யானையைப் பிளந்து சாய்ந்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்ட வித்தக தேவ முதல்வர் வேட்கள நன்நகரில் உள்ள ஈசன் ஆவர்.

425. விண்ணியல் மாடம் விளங்குஒளிவீதி
வெண்கொடிஎங்கும் விரிந்துஇலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணி னல்லாள்ஒரு பாகம் அமர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள்
பழியொடு பாவம் இலாரே.

தெளிவுரை :  உயர்ந்த மாட மாளிகைகளும், தூய்மையான ஒளிமிக்க வீதிகளும், சாந்தமும் அமைதியும் காட்டும் வெண்ணிறக் கொடிகளும் எல்லா இடங்களிலும் விரிவாகத் திகழச் சீர் மிகுந்து வளரும் காழியின் நற்றமிழ் ஞானசம்பந்தன், பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை உடனாகக் கொண்டு அமர்ந்து காத்தருளும் வேட்கள நகரின்மேல் மொழிந்த இசைப் பாடல்களைப் பாட வல்லவர்கள், பழியும் பாவமும் அற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

40. திருவாழ்கொளிபுத்தூர் (அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

426. பொடிஉடை மார்பினர் போர்விடை ஏறிப்
பூதகணம் புடைசூழக்
கொடி உடை ஊர்திரிந்து ஐயம்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடும் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலர் இட்டு
கறைமிடற்றான்அடி காண்போம்.

தெளிவுரை :  திருநீறு அணிந்த மார்பினர், ஈசன். பூதகணங்கள் புடைசூழப் போர்த்தன்மையுடைய வீரம் பொருந்திய இடப வாகனத்தில் ஏறி, ஊர்ஊர் திரிந்து பிச்சை கொண்டவர் அவர். அப்பெருமான் பிச்சை கொள்ளும்போது பலர் பலவாகக் கூறினும், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு வாழ்கொள புத்தூரில் மேவியுள்ளவர். நீலகண்டனாகிய அப்பெருமான் திருவடியை மணம் பொருந்திய உயர்ந்த மலர்களால் போற்றித் தரிசனம் செய்வோம்.

427. அரைகெழு கோவண ஆடையின் மேல்ஓர்
ஆடரவம் மசைத்து ஐயம்
புரை கெழு வெண்தலை ஏந்திப்
போர்விடை ஏறிப் புகழ
வரைகெழு மங்கையது ஆகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர் தூவி
விரிசடை யான்அடி சேர்வோம்.

தெளிவுரை : கோவண ஆடை அரையில் திகழ, மேல் ஆடும் அரவத்தைக் தரித்தவன் ஈசன். அபபெருமான், பிரமனது தலையைத் திருஓடாகக் கைக்கொண்டு பிச்சை யேற்றவன்; போரில் வெற்றி கொள்ளும் வீரமிக்க இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தனது திருமேனியில் பாகமாகக் கொண்டவன்; வாழ்கொளி புத்தூரில் மேவியுள்ளவன்; விரிந்த சடையுடைய அப்பெருமான் திருவடியை மணம் கமழ் மலர்களால் அர்ச்சித்து வணங்குவோம்.

428. பூண்நெடு நாகம் அசைத்து அனல்ஆடிப்
புன்தலை அங்கையில் ஏந்தி
ஊண்இடு பிச்சைஊர் ஐயம்
உண்டி என்று பலகூறி
வாள்நெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தாள்நெடு மாமலர் இட்டுத்
தலைவன தாள்நிழல் சார்வோம்.

தெளிவுரை :  நீண்டு வளர்ந்த நாகத்தை ஆபரணமாகப் பூண்டும், அனலைக் கரத்தில் ஏந்தியும் ஆடிப் பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சை ஏற்கும் பாவனையில் பல சொற்களைக் கூறி, வாளைப் போன்று கூரிய நோக்குடைய கண்களைக் கொண்ட உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் இறைவன். அவ் இறைவனின் தாளினை மலர்களால் போற்றி வணங்கி அடைக்கலம் ஆவோம்.

429. தார்இடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேல் அவை சூடி
ஊர்இடு பிச்சைகொள் செல்வம்
உண்டி என்று பலகூறி
வார்இடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கார்இடு மாமலர் தூவிக்
கறைமிடற் றான்அடி காண்போம்.

தெளிவுரை :  கொன்றை மாலை, வெண்மதி, கங்கை ஆகியவற்றைச் சடைமேல் சூடி, ஊரில் பிச்சை இடுமாறு பலவற்றைக் கூறி, உமையை ஒரு பாகம் உடையவன் வாழ்கொளிபுத்தூரில் உள்ளவன். அவனடியை, மலர் தூவிப் போற்றிக் காண்போம்.

430. கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழையோடு
புனமலர் மாலை புனைந்து ஊர்
புகுதி என்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி
எம்பெரு மானடி சேர்வோம்.

தெளிவுரை :  பொன்போன்ற பெருமை மிக்க கொன்றை மாலை விளங்கவும், காதில் வெண்குழையும் அணிந்து, காட்டு மலர்களையும் புனைந்து சூடி ஊரில் பிச்சை கொள்ளுமாறு பல கூறி, உமாதேவியை ஒரு பாகம் கொண்டு, வாழ்கொளி புத்தூரில் உள்ளவன் ஈசன். அர்ச்சனை செய்வதற்குரிய மலர்களால் அப்பெருமான் திருவடியைப் போற்றிச் சரணடைவோம்.

431. அளைவளர் நாகம் அசைத்து அனல்ஆடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யில்பலி கொள்ளும்
கருத்தனே கள்வனே என்னா
வளையொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளைஅவிழ் மாமலர் தூவித்
தலைவன தாளிணை சார்வோம்.

தெளிவுரை :  புற்றில் வளரும் நாகத்தையும், அனலையும் அசையுமாறு ஆடி, பிரமனின் கபாலத்தைக் கரத்தில் ஏந்தி, வளையலை அணிந்த உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசன், வாழ்கொளிபுத்தூரில் உள்ளவன். அப்பெருமானை என் கருத்திற்கிசைந்த தலைவனே ! உள்ளம் கவர்ந்த கள்வனே ! என்று போற்றி, நன்கு விரிந்த மலர்களால் திருவடியை அர்ச்சனை செய்து சார்ந்திருப்போம்.

432. அடல்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
அழிதலை அங்கையில் ஏந்தி
உடல்இடு பிச்சையோடு ஐயம்
உண்டிஎன்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணயொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமலர் ஆயின தூவித்
தலைவன தாள்நிழல் சார்வோம்.

தெளிவுரை :  அடர்ந்த காதுகளை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தும், தலையோட்டைக் கையில் ஏந்திப், பிச்சை, ஐயம், உண்டி தருவீர் எனப் பலவாறு கூறியும், நீண்ட இதழ்களை யுடைய மலர்க் கண்களைக் கொண்ட உமாதேவியைப் பாகம் வைத்தவன், வாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானைப் பெருமை மிக்க மலர்களால் தூவி வழிபட்டு அவன் தான் நிழல் சார்வோம்.

433. உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன்
ஒளிர் கடகக் கை அடர்த்து
அயல்இடு பிச்சையோடு ஐயம்
ஆர்தலை என்றுஅடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித்
தாழ்சடை யான்அடி சார்வோம்.

தெளிவுரை :  உயர்ந்த கயிலை மலையை எதிர் கொண்டு எடுத்த அரக்கனின், ஒளிமிக்க கடகம் பூண்ட கரங்களை அடர்த்துப் பலி யேற்று, நீல நெடுங்கண்ணியுடைய உமாதேவியைப் பாகம் கொண்டு, வாழ்கொளி புத்தூரில் வீற்றிருப்பவன் ஈசன். அப்பெருமானை மலர் தூவிப் போற்றி அடிசார்ந்து இருப்போம்.

434. கரியவநான்முகன் கைதொழுது ஏத்தக்
காணலும் சாரலும் ஆகா
எரிஉரு வாகிஊர் ஐயம்
இடுபலி உண்ணிஎன்று ஏத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமலர் ஆயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம்.

தெளிவுரை :  கரியவனாகிய திருமாலும், நான்முகனும் கை தொழுது ஏத்தி, காண்பதற்கும், சார்ந்து நெருங்குவதற்கும் ஆகாத எரியும் தீப்பிழம்பாடி, பிரமகபாலம் கொண்டு பிச்சை யேற்று, உமாதேவியை ஒரு பாகம் கொண்டவன், வாழ்கொளிபுத்தூரில் வீற்றிருக்கும் ஈசன். அப்பெருமானை மலர்கொண்டு தூவிப் போற்றி, அடி சேர்வோம்.

435. குண்டுஅமணர்துவர்க் கூறைகள் மெய்யில்
கொள்கையினார் புறம்கூற
வெண்தலை யில்பலி கொண்டல்
விரும்பினை என்று விளம்பி
வண்டுஅமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
தோன்றிநின்றான் அடி சேர்வோம்.

தெளிவுரை :  மெய்ம்மையுடைய கொள்கை யில்லாதவர்கள் புறம் கூறி நிற்கப் பலி கொள்வதை விரும்பினை எனக்கூறித் தொண்டர்கள் <உமைபாகனாகிய நின்னை, வாழ்கொளிபுத்தூர் மேயவன் எனப் போற்றுகின்றனர். அத்தகைய ஈசன் திருவடி சேர்வோம்.

436. கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும்
கரைபொரு காழி மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடுதல் லெளி தாமே.

தெளிவுரை :  கடல் அலைகள் முழங்கிக் கரையைச் சாரும் மூதூர் ஆகிய காழிப் பதியின் நான்கு மறைகளிலும் <உயர்ந்த நாவன்மை கொண்ட நற்றமிழ் ஞானசம்பந்தன், சூலம், மழு, வாள் ஆகியவற்றில் வல்லமையுடன் விளங்குபவனாகிய ஈசன் வளர், வாழ்கொளிபுத்தூரைப் பற்றிச் சொல்லிய பாடல்களைச் சொல்ல வல்லவர்களுக்குத் துயரானத எளிதில் தீரும்.

திருச்சிற்றம்பலம்

41. திருப்பாம்புரம் (அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

437. சீர்அணி திகழ்திரு மார்பில்வெண் ணூலர்
திரிபுரம் எரிசெய்த செல்வர்
வார்அணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி ஏந்திய மைந்தர்
கார்அணி மணிதிகழ் மிடறுடை அண்ணல்
கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பார்அணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே.

தெளிவுரை :  ஈசன், அழகு திகழ் திருமார்பில் வெண்ணூல் பூண்டவர்; திரிபுரத்தை எரித்து செல்வர்; வனப்பு மிகுந்த தனங்களையுடைய உமாதேவியை ஒரு பங்காகக் கொண்டவர்; இளமையான மானைக் கரத்தில் ஏந்திய அழகர்; கரிய அழகிய மணி போன்று திகழும் கழுத்தை உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர். அவர், தேவர்கள் போற்றி வழிபடும், நான் மறையில் வல்லவர்கள் திகழும் பாம்புர நகரில் விளங்குபவர்.

438. கொக்கிறகோடு கூவின மத்தம்
கொன்றையோடு எருக்கணி சடையர்
அக்கினொடு ஆமை பூண்டுஅழகாக
அனலது ஆடும்எம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுள் எங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  கொக்கின் இறகு, வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்கம் பூ ஆகியன பஅணியும் சடையை உடையவர் ஈசன். உருத்திராக்கமும் ஆமையும் தரித்து ஒரு கரத்தில் நெருப்பை ஏந்தி ஆடுகின்ற அடிகள் அவர். அப்பெருமான், தேவர்கள் மணம் மிக்க மலர்களைத் தூவிப் போற்றவும், பூதகணங்கள் பாடித் துதிக்கவும், வேத முறையில் நல்ல வேள்விகள் ஆற்றவும் உள்ள பாம்புர நகரில் மேவி இருப்பவர்.

439. துன்னலின் ஆடை உடுத்துஅதன் மேல்ஓர்
சூறைநல்லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட்டுஆடிப்
பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளு
மாமலை யாட்டியும் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  பொருந்திய ஆடை உடுத்தி, அதன்மேல் காற்றை ஆகாரமாக உடைய அரவத்தைச் சுற்றி, முறுக்கிய சடைகள் தாழ்ந்து விழுமாறு ஆடி, பித்தர் போத் திரியும் எம்பெருமான், பிரகாசிக்கும் மாமலர்கள் தூவிப் போற்றி, நான்கு மறைகளையும் சொல்ல உமாதேவியுடன் விளங்குபவர். அவர் பாம்புர நன்நகரில் இருப்பவர்.

440. துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச்
சுடர்விடு சோதி எம் பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடையஎன் நாதர்
நள்ளிருள் நடம்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயில்ஆட
மாட மாளிகை தன்மேல் ஏறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  தோற்றமும் மறைவும் இல்லாத சுடர்மிகு சோதியாகிய எம்பெருமான், கண்டத்தில் நஞ்ச பொருந்திய தலைவர்; நள்ளிருளில் நடம்புரியும் நம்பர். அவர், மேகம் சூழ் சோலையில் மாமயில்களும், மாட மாளிகைகளில் பஞ்சு போன்ற மென்மையான பாதங்களை உடைய பாவையர்களும் ஆடல் பயிலும் பாம்புர நகரில் இருப்பவர்.

441. நதியதன் அயலே நகுதலை மாலை
நாள்மதி சடைமிசை அணிந்து
கதியது பாகக் காளிமுன் காணக்
கானிடை நடம்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஒத்தொலி ஓவாப்
பதியதுவாகப் பாலையும் தாமும்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  கங்கையும் தலை மாலையும் கொண்டு பிறைச் சந்திரனைச் சடைமிசைச் சூடி, இடுகாட்டில் காளியானவள் காணுமாறு நடம் புரிந்த ஈசன், விதி வழுவாது வேதியர்கள் வேள்வியாற்ற, அவ் வேதத்தின் ஒலியானது ஒய்வின்றி ஒலிக்கும் பதியெனும் பாம்புர நகரில் உமாதேவியுடன் விளங்குகின்றார்.

442. ஓதிநான்கு உணர்வார்க்கு உணர்வுடை ஒருவர்
ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்தஎம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ அருள் என்று அமரர்கள் பணிய
அலைகடல் கடைய அன்று எழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தஎம் பரமர்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  சிவனுடைய திருநாமத்தை ஆத்மார்த்தமாக ஓதுபவர்களின் நெஞ்சத்தில் ஊறி நிற்கும் ஒப்பற்ற ஒருவராகி, சோதி வடிவாய் விளங்குபவர் ஈசன். அவர், உமாதேவியை இடப்பாகத்தில் வைத்த எம் அண்ணல்; இளமை பொருந்திய மான் ஏந்திய கரத்தை உடைய அழகர். ஆதி முதல்வனே ! அருள்வாயாக ! எனத் தேவர்கள் பணிய, அலைகடலில் கடைய, அதில் எழுந்த பொருளான பிறைச் சந்திரனைச் சடையில் வைத்த பரமர், பாம்புர நகரில் விளங்கும் ஈசன்.

443. மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து
மலரவற்கு ஒருமுகம் ஒழித்து
ஆலின்கீழ் அறம்ஓர் நால்வருக்கு அருளி
அனலது ஆடும்எம் அடிகள்
காலனைக் காய்ந்து தம்கழல்அடியால்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கு அருள்கள் செய்தஎம்அடிகள்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  திருமாலுக்குச் சக்கரப் படையை நல்கி, பிரமனுக்குரிய ஐந்து முகங்களுள் ஒன்றினைக் களைந்து நான்முகம் <உடையவனாகச் செய்து, சனகாதி முனிவர்களுக்குக் கல்லால மரத்தின்கீழ் அறம் <உணர்த்தி, நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தி ஆடுகிறவர் எம் அடிகள். அவர் வீரக்கழல் அணிந்த தம் திருப்பாதத்தால் உதைத்து அழித்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி எரித்துச் சாம்பலாக்கி, பாலகனாகிய <உபமன்யுவுக்கு பாற்கடல் ஈந்து அருள் புரிந்த அடிகள். அவர் பாம்புர நகரில் இருப்பவர்.

444. விடைத்தவல்அரக்கன் வெற்பினை எடுக்க
மெல்லிய திருவிரல் ஊன்றி
அடர்ந்தவன் தனக்குஅன்று அருள்செய்த அடிகள்
அனலது ஆடும்எம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுனல்ஆட
வந்துஇழி அரிசிலின் கரைமேல்
படப்பையில் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  குற்றம் புரியும் வலி அரக்கன் கயிலை மலையைப் பெயர்தெடுக்க, அதனைத் தனது மென்மையான திருப்பாத விரலால் ஊன்றியவன் ஈசன். தகாத செயலைச் செய்தவனுக்கும் அன்று அருள் செய்த அவ் அடிகள், அனலைக் கரத்தில் ஏந்தி ஆடுபவர், இளம் நங்கையர்கள் அரிசில் ஆற்றில நீராடக் கரையில் உள்ள தோட்டங்களில் மணிகள் சிதறி மல்கும் பாம்புர நகரில் அப்பெருமான் விளங்குபவர்.

445. கடிபடுகமலத்து அயனொடு மாலும்
காதலோடு அடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யும்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடை அமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை அடிபணிந்த ஏத்தப்
பிடியது வாகப் பாவையும் தாமும்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  மணம் திகழ தாமரை மலரின்மேல் <உறையும் பிரமனோடு, திருமாலும், விருப்பத்துடன் அடியும் முடியும் தேடிச் செல்ல, தீமை தரும் வினைகளைத் தீர்த்து அருள் புரியும் எமது செல்வர், தீவண்ணம் உடையவர். அப்பெருமான், தேவர் தலைவர்களும், முனிகணத்தவர்களும் முறைப்படி திருவடியைப் பணிந்து ஏத்த, இவ்வுலகின்கண், தேவியும் தானும் திகழ விளங்குவது பாம்புர நகர்.

446. குண்டர்சாக் கியரும் குணமிலாதாரும்
குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்
கண்டவாறு உரைத்துக் கால்நிமிர்ந்து உண்ணும்
கையர்தாம் உள்ளவாறு அறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னகராரே.

தெளிவுரை :  சாக்கியர், மற்றும் பேணும் நற்குணங்கள் இல்லாதவர்களும், நின்று கொண்டு கையில் உணவை ஏந்தி <உண்பவர்களும், உண்மைப் பொருளை உள்ளவாறு அறியமாட்டார்கள். மலைமகள் நடுக்கம் கொள்ளுமாறு வீரத்துடன் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட ஈசர், பாம்புர நன்நகரில் வீற்றிருந்து முற்காலத்தில் செய்த பாவங்களைத் தீர்ப்பவர் ஆவர்.

447. பார்மலிந்து ஓங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந்து அழகார் கழனிசூழ்மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந்து ஓங்கு நான்முறைஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்து அழகார் செல்வமது ஓங்கிச்
சிவனடி நண்ணுவர்தாமே.

தெளிவுரை :  உலகில் மிக ஓங்கிய அகன்ற மதில் சூழ்ந்த பாம்புர நகரில் பொருந்திய ஈசனைப் போற்றி நீர்வளம் மிக்க வயல்களும், மாடமாளிகைகளும் <உடைய பழைமையான கழுமல நகரில், கவுணியர் கோத்திரத்தில் <உதித்த நான்மறைகளில் வல்லவரும், அன்பின் மிக்கவருமாகிய ஞானசம்பந்தர் <உரைத்த இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், சிறப்பும் செல்வமும் ஓங்கி வாழ்ந்து சிவனடியை நண்ணுவர்.

திருச்சிற்றம்பலம்

42. திருப்பேணுபெருந்துறை (அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, தஞ்சாவூர் மாவட்டம்)

448. பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண் கொம்புஒன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்க என்றுசொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மான்நோக்கிய அந்தளிர்மேனி
அரிவையோர் பாகம் அமர்ந்த
பெம்மானல்கிய தொல்புகழாளர்
பேணு பெருந்துறையாரே.

தெளிவுரை : படம் கொண்ட நாகம், கொன்றை மலர், பன்றியின் வெண்மையான கொம்பு ஆகியவற்றைப் பூண்டு, கம்பீரமாக பிச்சையேற்கும் தொழிலை ஆற்றிய செல்வர், பரமன் ஆவர். அழகி மானின் நோக்கும், தளிர் மேனியும் உடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்குபவர் அப்பெருமான். அவர் பெரும்புகழ் நல்கும் பெருமக்கள் பேணும் பெருந்துறையில் உள்ளவர்.

449. மூவரும் ஆகி இருவரும் ஆகி
முதல்வனுமாய் நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதின் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார்
தீதில் பெருந்துறை யாரே.

தெளிவுரை : பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் முத்தொழில்களைச் செய்யும் நிலையில் வேறு வேறாகக் காட்சியில் தோன்றினாலும், ஈசன் அவ்இயலில் இருந்து ஒன்றி விளங்குபவன். அவனே சிவனும் சக்தியென இரண்டாய் விளங்குபவன். அவன் யாவற்றையும் தம்பால் ஒடுக்கவல்ல பரசிவனாய்  ஏகனாகியவன். பல்கணத்தவர்களும் பணிந்து பாவங்களைத் தீர்த்தும் நல்வினைகளக் கைக் கொண்டும் விளங்க, மேருமலையை வில்லாலாகக் கொண்டு முப்புரங்களை எரித்த, தேவதேவராகிய எம்பெருமான், தீமையே இல்லாத பெருந்துறையில் இருப்பவர்.

450. செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுள் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகம்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோல் நான்ற கனிகுலை வாழை
காய்குலையில் கமுகு ஈனப்
பெய்பூம் பாளை பாய்ந்து இழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே.

தெளிவுரை : புனையப்பட்ட கொன்றை மற்றம் வில்வ மாலை அணிந்து தலையில் கங்கை தரித்து, <உமாதேவியை ஒரு பாகத்தில் கூடி இருக்குமாறு வைத்துப் பெருமை மிக்க வடிவம் கொண்டவர் ஈசன். அவர், வாழைக் குலையும் கமுகமும் ஈனும், தேன் வழியும் பெருந்துறையில் உள்ளவரே.

451. நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவும் ஆகிஓர் ஐந்து
புலனொடு வென்று பொய்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்கும் தான்அலது இன்றி
நன்குஎழு சிந்தையர் ஆகி
மலனொடு மாகம் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே.

தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவர் ஈசர், அவர், ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கி வென்ற, பொய்ம்மை தீர்ந்த புண்ணியர்; திருவெண்ணீறு பூசியுள்ள திருமேனியர். நல்லன விளைந்தாலும், தீங்கு நேரிட்டாலும், ஈசனை யன்றி வேறு எப்பொருளும் நினைப்பதற்கில்லை என்ற உறுதியான சிந்தையுடையவர்களாகி, ஆணவம், கன்மம், மாலை ஆகிய குற்றங்களை அகற்றி வாழ்பவர்கள் பெருகி மல்கும் பெருந்துறையில் அப்பெருமான் வீற்றிருக்கின்றார்.

452. பணிவாய் உள்ள நன்கு எழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ளம் இலாத
சுமடர்கள் சோதிப்பு அரியார்
அணிஆர் நீலம் ஆகிய கண்டர்
அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறையாரே.

தெளிவுரை : ஈசன்பால் எக் காலத்திலும் பணிவாக விளங்கிப் பணிந்து பக்திமை பெருக நாவினால் போற்றும் பக்தர்கள் உள்ளனர். அறியாமை சிறிதும் இல்லாதவர்களாய், இறை நெறிக்குப் புறம்பாகச் செய்யாதவர்களாய் உள்ளனர். அவர்கள் துன்பங்கள் வரப்பெற்றுச் சோதனைக்கும் ஆளாவது இல்லை. அழகு மிக்க நீலகண்டராகிய பெருமான் தேன்கமழும் சிறப்புடைய அரிசில் ஆற்றங்கரையில் விளங்கும் பெருந்துறையில் இருப்பவர்.

453.எண்ணார் தங்கள் மும்மதிள்வேவ
ஏவலம் காட்டிய எந்தை
விண்ணோர்சாரத் தண்ணருள் செய்த
வித்தகர் வேதமு தல்வர்
பண்ணார் பாடல் ஆடல் அறாத
பசுபதி ஈசனோர் பாகம்
பெண்ஆண் ஆய வார்சடை அண்ணல்
பேணு பெருந்துறை யாரே.

தெளிவுரை : ஈசனையும், நற்றவத்தின் மேன்மையினையும், சிறிதும் நெஞ்சத்தில் கொள்ளாத அசுரர்களுடைய மூன்று கோட்டைகள் எரியுமாறு அம்பின் வலிமையைக் காட்டிய எந்தை, தேவர்கள் சார்ந்து போற்ற, இனிமையாக அருள் செய்யும் வித்தகர், வேத முதல்வர்; அப்பெருமான் பண் பெருகும் பாடலும் ஆடலும் மல்கிப் பெருகும் பெருந்துறையில், அழகிய சடையும், உமாதேவியை ஒரு பாகமும் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் ஒப்பற்ற பதியாய், பெண்ணும் ஆணும் கலந்து விளங்கும் அர்த்தநாரியாய் விளங்குபவர்.

454. விழைஆர்உள்ள நன்குஎழுநாவில்
வினைகெட வேதம்ஆறு அங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றால்
பெரியோர் ஏத்தும் பெருமான்
தழைஆர் மாவின் தாழ்கனி உந்தித்
தண்ணரசில் புடை சூழ்ந்து
குழைஆர் சோலை மென்னடை அன்னம்
கூடு பெருந்துறை யாரே.

தெளிவுரை : பிழை இல்லாமலும் விருப்பம் மிக்கும் வினை நீங்குமாறு, வேதமும் அதன் ஆறு அங்கங்களையும் ஓதவல்ல பெரியோர்கள் ஏத்தும் பெருமானாக விளங்கும் ஈசன், மாங்கனியைத் தரும் சோலைகளை உடைய அரிசிலாற்றின் கரையில் நடை பயிலும் அன்னப் பறவை கூடும் பெருந்துறையில் வீற்றிருப்பவர்.

455. பொன்னங் கானல் வெண்திரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்னன்ஒல்க மால்வரை ஊன்றி
மாமுரண்ஆகமும் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னம் கன்னிப் பேடையொடு ஆடி
அணவு பெருந்துறை யாரே.

தெளிவுரை : அழகிய சோலைகளும், வெண்மையான நுரைகளுடன் கூடிய அலைகள் கரைகளில் மோதும் கடலை நாற்புறங்களிலும் வேலியாகக் கொண்ட இலங்கையின் மன்னனாகிய இராவணன் கெடுமாறு, பெருமை மிக்க கயிலை மலையைத் தம் விரலால் ஊன்றி, அவன் உடலும் தோளும் வாட்டியவர் ஈசர். பின்னர், அவ் அரக்கன் வணங்கிப் போற்றி செய்ய, அருள் செய்தவர் அவர். சூலப்படை கொண்டுள்ள மூர்த்தியாகிய அப்பெருமான், அன்னப்பறவைகள் தம் பேடைகளுடன் மகிழந்து கூடும் பெருந்துறையில் வீற்றிருப்பவரே.

456. புள்வாய் போழ்ந்து மாநிலம் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வாழ் அல்லி மேலுறை வானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின்
முகமலரக் கயல் பாயக்
கள்வாழ் நீலம் கண்மலர் ஏய்க்கும்
காமர் பெருந்துறை யாரே.

தெளிவுரை : கொக்கு வடிவம் கொண்ட அசுரனின் வாயைப் பிளந்து மாய்த்தவனும், பூமியைத் தோண்டிச் செல்பவராக அவதாரம் கொண்டவனும், ஆகிய திருமாலும், தாமரை மலரின் அகத்தில் <உள்ள இதழில் <உறையும் பிரமனும் உணர்வதற்கு அரியவனாகிவன் ஈசன். அப்பெருமான் உமாதேவியின் நாயகன். அவர், தாளில் முள் பொருந்திய தாமரை மலரின் மொட்டு போன்ற நீண்ட முகம் மலரவும், கயல் போன்ற கண்கள் நீலமலர்போல் மலரவும் விளங்கும் மாதர்கள் மகிழும் பெருந்துறையில் வீற்றிருப்பவரே.

457. குண்டும் தேரும் கூறைகளைந்தும்
கூப்பிலர் செப்பிலர் ஆகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
மிண்டுசெயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்தலை சூலம்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டும் தேனும் வாழ்பொழற்சோலை
மல்கு பெருந்துறை யாரே.

தெளிவுரை : சமணர்களும், பௌத்தர்களும் ஈசனை வணங்கிலர்; அவன் திருநாமத்தைக் கூறிலர். தன் முனைப்புக் கொண்டு அறிவற்ற தன்மையில் செய்யும் தொல்லைக்கு ஆட்பட்டு இடர்ப்பாடானதைச் செய்யாது மெய்யடியார்கள் இறைவனை விரும்பி ஏத்துகின்றனர். அவர், தண்டும், பாம்பும், கபாலமும், சூலமும் தாங்கியுள்ள தலைவர், அப்பெருமான் வண்டும் தேனும் மல்கும் சோலை சூழ்ந்த பெருந்துறையில் இருப்பவரே.

458. கடைஆர் மாட நன்கு எழு வீதிக்
கழுமலவூரன் கலந்து
நடைஆர் இன்சொல் ஞானசம்பந்தன்
நல்லபெருந்துறை மேய
படைஆர் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி உள்ளமும் ஒன்றி
உலகினில் மன்னுவர் தாமே.

தெளிவுரை : வாயில்கள் பொருந்திய மாட மாளிகைகள் விளங்கும் வீதிகள் உள்ளது கழுமல நகர். அவ் ஊரினாராகிய திருஞானசம்பந்தர், ஒழுக்கமும் இனிமையும் சேர்ந்த சொற்களால் நன்மை திகழும் பெருந்துறை மேவிய சூலப்படையுடைய ஈசன்பால் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினார். இதனை நன்கு உரைக்க வல்லவர்கள், எல்லா செல்வமும் உடையவர்களாய், அருட் செல்வம் மிக்கு விளங்குமாறு, உள்ளமும் ஈசன் பால் ஒன்ற இருக்க உலகில் சிறந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

43. திருக்கற்குடி (அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

459. வடம்திகழ் மென்முலையாளைப்
பாகம் தாக மதித்துத்
தடம்திரை சேர்புனல் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடம் திகழ் முப்புரி நூலர்
துன்பமொடு இன்பம்அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : உயர்வான யாவும் <உடைய உமாதேவியைத் தனது உடம்பில் ஒரு பாகத்திலும், நீர் நிலைகளில் சேரும் கங்கை என்னும் மங்கையைச் சடை முடியிலும் வைத்துள்ளவர், எல்லாவற்றிலும் வல்லவராகிய ஈசன், அவர், முப்புருட நூலை அணிந்தவர். ஈசனுக்குத் துன்பம் என்பதும் இல்லை; அவர் இன்பமாகக் கருதுவதும் எதுவும் இல்லை. எல்லாம் கடந்தவராகிய ஈசன் விருப்பத்தோடு கற்குடியில் உள்ள பெருமையான மலையின்கண் வீற்றிருப்பவர்.

460. அங்கம்ஒரு ஆறுடை வேள்வி
ஆன் அருமறை நான்கும்
பங்கம்இல் பாடலோடு ஆடல்
பாணி பயின்ற படிறர்
சங்கமதுஆர் குற மாதர்
தங்கையில் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : அருமையாகப் போற்றப்படுகின்ற வேதமும், அதன் ஆறு அங்கமும், வகுத்தவாறு வேள்வியும், குறை வில்லாத பாடலும், ஆடலும், தாளமும் பயில் விளங்குபவர் ஈசன். சங்குகளால் ஆகிய வளையல் களை அணிந்துள்ள குறவர்குல மாதர்களின் கரங்களில் திகழும் மைந்தர்கள், மேகத்தில் இருக்கும் நிலவைத் தொடுவதற்குத் தாவுகின்றனர். அத்தகைய பெருமைக்குரிய கற்குடி மலையில் ஈசன் வீற்றிருக்கிறார்.

461. நீர்அக லம்தரு சென்னி
நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை பின்னொளி சூழ்ந்த
தண்மதி சூடிய சைவர்
போர் அகலம்தரு வேடர்
புனத்திடை இட்ட விறகில்
கார்அகி லின்புகை விம்மும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : பரந்த கங்கை நீரைச் சடையில் கொண்டுள்ள ஈசன், நீளமான ஊமத்தம் மலரைச் சூடியவர். விண்மீனின் ஒளி திகழும் குளிர்ந்த சந்திரனைத் தரித்த சைவர். போர் செய்யும் பாங்குடைய வேடர்கள், மேகத்தைப் போன்று அகிற்புகை எழுப்பிப் பெருமை கொள்ளும் கற்குடி மலையில் அப்பெருமான் வீற்றிருப்பவர்.

462. ஒருங்குஅளி நீஇறைவா என்று
உம்பர்கள் ஓலம்இடக் கண்டு
இருங் களம் ஆர விடத்தை
இன்னமுது உண்ணிய ஈசர்
மருங்கு அளியார் பிடி வாயில்
வாழ் வெதிரின் முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்கும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : உடலும், உள்ளமும் நடுங்குமாறு தோன்றிய கொடிய விடத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், இறைவா ! நீரே எம்மைக் காத்து அருள்வீராக என்று இறைஞ்சி ஓலம் இட, அவ் விடத்தைப் பெருமையான் கண்டத்தில் ஆரப் பொருந்த வைத்து உட்கொண்டவர் ஈசர். அவர், அன்பின் மிக்க பெண் யானைகளின் வாயில், மூங்கில்களை உணவாகக் கொடுக்கும் ஆண் யானைகள் நிலவும் கற்குடி மாமலையில் விளங்குபவர்.

463. போர்மலி திண்சிலை கொண்டு
பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுரு வாகிப்
பண்டு ஒருவர்க்கு அருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த
இன்னொளி மாமணி எங்கும்
கார்மலி வேடர் குவிக்கும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : போர்த் தொழில் மிக்க உறுதியான வில்லைக் கரத்தில் கொண்டு, பூதகணங்கள் புடைசூழ உலகத்தில் தோற்றம் பெறும் வேடுவ வடிவம் தாங்கி, அர்ச்சுனருக்கு அருள் புரிந்தவர் ஈசர், அழகிய பன்றிகள் பெருகி, இருக்க, சிறப்பான மணிகளைக் குவித்துச் செல்வர் பெருக்கும், கரிய நிறமுள்ள வேடர்கள் சூழும் கற்குடி மாமலை அவர் இடமாகும்.

464. உலந்தவர் என்புஅது அணிந்தே
ஊர்இடு பிச்சையர் ஆகி
விலங்கல்வில் வெங்கன லாலே
மூஎயில் வேல முனிந்தார்
நலம்தரு சிந்தையர் ஆகி
நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : எலும்பு மாலை அணிந்து, கபாலத்தைக் கைக் கொண்டு பிச்சையேற்பவராகி, மலையை வில்லாகவும் நெருப்பைக் கணையாகவும் கொண்டு முப்புரங்களை எரியுமாறு செய்தவர் ஈசன். அவர் நலத்தைத் தரும் பக்திச் சிந்தனையுடையவர்களாய் நாவினால், விரும்பித் தோத்திரப் பாடல்களை அன்பு ததும்பும் நெஞ்சினராய்க் கூறும் அடியவர்கள் வாழும், கற்குடி மாமலையில் வீற்றிருப்பவர்.

465. மான்இடம் ஆர்தரு கையர்
மாமழு ஆரும் வலத்தர்
ஊனிடை ஆர்தலை யோட்டில்
உண்கல னாக உகந்தார்
தேனிடை ஆர்தரு சந்தின்
திண்சிறை யால்தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்கும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : ஈசன், மானைக் கையில் கொண்டுள்ளனர், சிறப்பான மழுப்படையை உடைய வலிமை மிக்கவர்; பிரமகபாலம் ஏந்தி அதனை உணவு கொள்ளும் பாத்திரமாக மகிழ்ந்து ஏற்றவர். தேன் கூடுகள் மிகுந்துள்ள சந்தன மரங்களையுடைய கானில் தினை வித்துக்களை விதைக்க, விளைச்சலைத் தருகின்ற கற்குடி மாமலையில் அப்பெருமான் வீற்றிருக்கின்றார்.

466. வாள்அமர் வீர நினைந்த
இராவணன் மாமலை யின்கிழ்த்
தோள்அமர் வன்தலை குன்ற
தொல்விரல் ஊன்று துணைவர்
தாள்அமர் வேய் தலை பற்றித்
தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளமது ஆர்முகில் கீறும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை :  வீரத்தின் சிறப்பினைக் காட்டுவதாக நினைத்து மலையைப் பெயர்த்த இராவணனைக் கீழே அழுத்தி, அவன் தோளும் தலையும் குன்றுமாறு விரலை ஊன்றியவர் ஈசர். அப்பெருமான், மூங்கிலின் நுனிப்பகுதியைப் பற்றி இழுத்துப் பின்னர் அதனை விட்டுவிட, அதன் விசையானது வேகமாகச் சென்று கரிய மேகத்தைக் கிழிக்கும் தன்மையுடைய கற்குடி மலையில் வீற்றிருப்பவர்.

467. தண்டுஅமர் தாமரை யானும்
தாவிஇம் மண்ணை அளந்து
கொண்டவ னும்மறி வொண்ணாக்
கொள்கையர் வெள்விடை ஊர்வர்
வண்டிசை யாயின பாட
நீடிய வார்பொழில் நீழல்
கண்டு அமர் மாமயில் ஆடும்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : தண்டு உடைய தாமரை மலரின்மேல் அமர்ந்த பிரமனும், நெடிய வடிவெடுத்து இவ்வுலகத்தை மூவடியாக அளந்து தனதாக்கிக் கொண்ட திருமாலும், அறிய வொண்ணாத குறிப்பில் உள்ளவர் ஈசன். அவர் வெண்மையான இடப வாகனத்தில் ஊர்பவர். அவர், வண்டுகள் இசை பாடவும், நீண்ட பொழிலின் நிழலில் கண்டு இனிது விளங்கும் மயில்கள் ஆடவும் உள்ள கற்குடி மலையில் வீற்றிருப்பவர்.

468. மூத்துவர் ஆடையி னாரும்
மூக கடுப்பொடி யாரும்
நாத்துவர் பொன்மொழி யார்கள்
நயமில ராமதி வைத்தார்
ஏத்துஉயர் பத்தர்கள் சித்தர்
இறைஞ்ச அவர்இடம் எல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
கற்குடி மாமலை யாரே.

தெளிவுரை : முற்றிய காலி உடையை புறச் சமயத்தினர், நாவானது துவர்ப்பு கொள்ளுமாறு பொய்ம்மொழியை உரைப்பவர் ஆவர். அவர்கள் மென்மை யற்றவர்கள். அவ்வாறு இன்றி ஈசரைப் பக்தி செய்யும் மதி உடையவர்கள், அவரை ஏத்தி உயர்வடைவார்கள். அவர்கள் சித்தர்கள் ஆவர். அத்தகையோரின் இடர் யாவும் தீரும். இவர் ஏத்த விளங்குபவர் கற்குடி மலையில் வீற்றிருப்பவர்.

469. காமரு வார்பொழில் சூழும்
கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி
நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை
பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும்
பொன்னுல கில்பொலி வாரே.

தெளிவுரை : அணிபெறும் அழகிய நெடிய சோலை சூழும் கற்குடி மலையில் எழுந்தருளியுள்ள பெருமானை, நாவானது மணக்கும் வள்ளன்மையுடைய காழியின் புகழும் நலமும் திகழும் ஞானசம்பந்தர் பாக்களில் சிறந்த செந்தமிழ்ப் பாடல்களைப் பாட, அதனை ஓத வல்லவர்கள் தேவலோகத்தில் சிறந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

44. திருப்பாச்சிலாச்சிராமம்  (அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

470. துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
ஆரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலம் எலாம்செய்து பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வ தோஇவர் மாண்பே.

தெளிவுரை : ஒற்றைக் கீற்றுடைய சந்திரன் வளர்ந்து ஒளி கொண்டு விளங்க, அதனைச் சுடர் விடும் சடை முடியில் தரித்துப் பாம்புகள் பொருந்துமாறு ஏற்றுப் பூத கணங்கள் சூழ்க கையில் கபாலம் ஏந்தி, இவர், இன்னார் என்று கருதாமல் எல்லோரிடமும் பலியேற்பவர், ஈசன், இவர், அழகிய திருக்கோலம் புனைந்து, பாச்சில் ஆச்சரமத்தில் உறைகின்ற நீலகண்டர். இவரோ இந்த நங்கையை முயலகன் என்னும் நோயால் வாடுதல் அடைந்து மயல் கொள்ளுமாறு செய்வது ! இதுவோ இவர் மாண்பு !

471. கலைபுனை மான்உரி தோல்<உடை ஆடை
கனல்சுட ரால்இவர் கண்கள்
தலைஅணி சென்னியர் தார்அணி மார்பர்
தம் மடிகள் ளிவர்என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்துஅமர்பாச்சில்
ஆச்சிரா மத்து உறை கின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர் செய்வதோ இடர் ஈடே.

தெளிவுரை : கலைமானின் தோலை ஆடையாகக் கொண்டு சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முச்சுடர்களைக் கண்களாகவும், சுடர்மிகும் சென்னியும்யுடைய ஈசன், மாலை அணிந்த மார்பினர். இவர் அலைகளையுடைய நீர்வளம் மிக்க பூம்பொழில்கள் சூழும் பாச்சில் ஆச்சிரமத்தில் வேல்கொண்டு உறைகின்றவர். இவரோ இந்த நங்கை வாடுமாறு இடர் செய்வது ! இதுவோ இவருக்குப் பெருமை தருவது !

472. வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சுஅடை கண்டர் நெஞ்சு இடமாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சுஅடை மாளிகை  சூழ்தரு பாச்சில்
ஆச்சிரமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோஇவர் சீரே.

தெளிவுரை : ஈசன், வெம்மையான நெருப்பைக் கரத்தில் ஏந்தி ஆடுபவர்; பிரளய காலத்தில் கரிய இருளில் தலை மாலையை விரும்பி இருப்பவர்; வெண்மையான முப்புரி நூல் பூணும் மார்பினர்; நஞ்சு பதியப் பெற்ற கழுத்தை உடையவர்; அப்பெருமான் பக்தர்களின் நெஞ்சினை இடமாகக் கொண்டு விரும்பி அருள் புரிவர். மேகம் சூழ்ந்து அடையுமாறு உயர்ந்த மாட மாளிகைகள் சூழ்ந்த பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற செஞ்சுடர் வண்ணத்தராகிய ஈசன், இப்பெண் வாடிச் சிதையுமாறு செய்வதோ ! இவருக்கும் இதுவோ சிறப்புத் தரும் !

473. கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
கனதரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து அழகாய
புஞிதர்கொ லாம்இவர் என்ன
வனமரி வண்பொழில் சூழ்தரு பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கைழை வாட
மயல் செய்ய தோஇடர் மாண்பே.

தெளிவுரை : பெருமையுடைய கொன்றைமலர் மாலை விளங்கப் பெருமை தரும் தூய பிறைச் சந்திரனைத் தரித்து, மற்றும் புனங்களில் உள்ள எருக்கம், ஊமத்தம் முதலான மலர்களைச் சூடி, அழகாக மேவும் புனிதர் இவர்தான் என்று வியந்து போற்றி மகிழுமாறு உள்ளவர், பொழில் சூழ் பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற மைந்தர்  ஈசர். இத்தகைய மைந்தரோ மங்கையை வாடுமாறு மயல் செய்வது ! இதுவோ இவருடைய மாண்பு.

474.மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந்து ஆடி
வளர்சடை மேல் புனல் வைத்து
மேந்தை முழாக்குழல் தாளமொர் வீணை
முதிரஓர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
சாந்துஅணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வதோ இவர் சார்வே.

தெளிவுரை : மாந்தர்கள் விரும்பியவாறு பசுக்களிலிருந்து கிடைக்கப்பெறும் பால், நெழ் முதலான பூசைப் பொருள் ஏற்று அபிடேகம் கொண்டு மகிழ்பவர் ஈசன், இவர், சடை முடியில் கங்கையை வைத்தவர்; மோந்தை, முழவின் வகை, தாளம், வீணை முதலான இசைக் கருவிகள் இயங்கவும் வாயினால் பாடியும் மகிழும் அகன்ற விழிகளையுடைய பூதகணங்கள் விளங்கும் பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்றவர். சந்தனம் அணிந்துள்ள மார்பினராகிய இவரோ நங்கையை வாடச் செய்வது ! இதுவோ இவர் சார்வு !

475. நீறுமெய்பூசி நிறைசடைதாழ
நெற்றிக்கண் ணால் உற்று நோக்கி
ஆறது சூடி ஆடரவு ஆட்டி
ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர் பூதத்தர் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர் செய்வதோ இவர் ஈடே.

தெளிவுரை : திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர், நிறைந்த சடையுடையவர், மன்மதனை நெற்றிக்கண்ணால் உற்று நோக்கியவர், கங்கையைச் சூடியவர், ஆடுகின்ற அரவத்தை ஆட்டுபவர், ஐவிரற்கிடை அளவு கோவண ஆடை உடையவர், பால் போன்ற தூய திருமேனியர், பூதப்படை உடையவர், ஈசன். இவர் இடபவாகனத்தை உடையவர். பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற இப்பெருமான் இப் பெண்ணை வாடுமாறு செய்வதோ ! இதுவோ இவர் பெருமை !

476. பொங்கு இள நாகம்ஒரு ஏக வடத்தோடு
ஆமைவெண்ணூல் புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்துஅழகாய
குழகர் கொலாம் இவர் என்ன
அங்கு இள மங்கையோர் பங்கினர்பாச்சில்
ஆச்சிரா மத்து உறை கின்ற
சங்கு ஒளி வண்ணரோ தாழ்குழல்வாடச்
சதிர் செய்வதோ இவர் சார்வே.

தெளிவுரை : சீறி வரும் இள நாகம், ஆமையோடு, வெண்ணூல், கொன்றை மலர், மற்றும் தேன் சொரியும் மாலைகள் புனைந்து அழகுடன் விளங்கும் ஈசர், உமாதேவியைப் பாகமாக உடையவர். இவர் பாச்சில் ஆச்சிரமத்தில் சங்கின் ஒளி வண்ணத்துடன் தாழ்ந்த சடையுடையவராய் உறைகின்றவர். இவர் இந்த நங்கை வாடுமாறு சதி செய்வதோ ! இதுவோ இவருக்குச் சார்வு !

477. ஏவலத்தால்விச யற்குஅருள் செய்து
இராவண னைஈடு அழித்து
மூவரி லும்முத லாய்நடு வாய
மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர் களும்பர வும்எழில் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோஇவர் சேர்வே.

தெளிவுரை : பாசுபதம் என்னும் வலிமையான அத்திரத்தினை விசயற்குத் தந்து அருள் செய்தும், இராவணனுடைய பெருமையைச் சிதைத்தும் மும்மூர்த்திகளுள் தலைமை யுடையவராயும், பிரமன் திருமால் ஆகியோர் தேடிச்செல்லும் காலத்தில் இடைநின்ற நடுநாயகமாகவும் உள்ளவர் ஈசன். இங்கு மயல் கொண்டு வாடி, நோயால் பீடிக்கப்பட்டுள்ள இப்பெண், அத்தகைய பெருமை மிக்க மூர்த்தியை யல்லாது வேறு ஒருவரையும் அறியாதவள் அப்பெருமானுடைய திருநாமத்தையே கூறுபவள். இவ்வாறு இருக்க, எல்லோரும் போற்றிப் பரவும் நங்கையை வாட விடுவதோ ! இதுவோ இவரைச் சேர்ந்தவர்கள் அடையக்கூடிய பயன் !

478. மேலது நான்முகன் எய்தியது இல்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை
எனஇவர் நின்றதும் அல்லால்
ஆலது மாமதி தோய்பொழில் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோஇவர் பண்பே.

தெளிவுரை : நான்முகன் அன்னப் பறவை வடிவம் தாங்கி மேலே உயரப் பறந்து சென்று, ஈசனார் முடியைக் கண்டதும் இல்லை; பூமியைக் குடைந்து சென்று நீலவண்ணனாகிய திருமால் ஈசன் திருவடியைக் கண்டதும் இல்லை; இவர்கள் இருவரும் திகைத்து நின்றவர் ஆயினர். நிலவைத் தொடும் உயர்ந்த ஆலமரங்கள் சூழ பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற பால் போன்ற வெண்மை நிறத்தவராகிய இவ் ஈசனோ, இந்த நங்கையை வாடுமாறு துன்பம் செய்வது ! இதுவோ இப் பெருமானுடைய பண்பு !

479. நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவர் இவர்இரு போதும்
ஊணொடு கூடிய உள்கு நகையால்
உரைகள் அவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடிவு ஆயினர் பாச்சில்
ஆச்சிரா மத்துஉறை கின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய் வதோஇடர் பொற்பே.

தெளிவுரை : நாணம் முதலான நற்பண்புகளை இழந்தவராய்ப் பயனற்ற மொழிகளைக் கூறி உணவு கொள்வதையே நோக்கமாக உடையவர்கள் சொற்களை ஏற்க வேண்டாம். ஆண் வடிவம் பெண் வடிவம் ஆகி பாச்சில் ஆச்சிரமத்தில் உறைகின்ற நெடிய மார்பில் அணிகலன்கள் கொண்ட ஈசரோ, இந்த நங்கை வாடுமாறு செய்வது ! இதுவோ இவரது மேலான குணம் !

480. அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துஉறை கின்ற
புகைமலி மாலை புனைந்துஅழ காய
புனிதர்கொ லாம்இவர் என்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டுஇவை ஏத்தச்
சாரகி லாவினை தானே.

தெளிவுரை : உள்ளம் நிறைந்த அன்புடன் திருத்தொண்டர்கள் வணங்க, ஆச்சிரமத்தின் உறைகின்ண ஈசரே, புனிதர் என்று புகலிடமாக விளங்கும் தமிழ் மாலை சாற்றிய நற்றமிழ் ஞானசம்பந்தரின் இத் திருப்பதிகத்தை ஓதுபவர்களிடம் வினை சாராது.

திருச்சிற்றம்பலம்

45. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

481. துஞ்சவரு வாரும் தொழுவிப் பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப் பாரு முனைநட்பாய்
வஞ்சப் படுத்த ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு
அஞ்சும்ப ழையனூர் ஆலங்காட்டு எம் மடிகளே.

தெளிவுரை : பரமர், இரவு துயிலும் போது கனவில் தோன்றி காட்சி தருபவர், தொழுமாறு செய்பவர். மனமானது வழுவிச் சென்றாலும் என் நெஞ்சுகள் புகுந்து என்னை நினைக்கச் செய்பவரும் அவர். வஞ்சமாக ஒருவனுடைய வாழ்நாளைக் கொண்டதை அறிந்த தன்மை கேட்டுத் துறந்தவர்தம் நிலையுணர்ந்து அஞ்சும் பழையனூரின் ஆலங்காட்டில் விளங்குபவர் எம் பெருமைக்குரிய தலைவர்.

482. கேடும் பிறவியும் ஆக்கி னாரும் கேடிலா
வீடு மாநெறி விளம்பினார்எம் விகிர்தனார்
காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லிக் கணப்பேயோடு
ஆடும் பழையனூர் ஆலங் காட்டெம் மடிகளே.

தெளிவுரை : கெடுதி செய்யும் தன்மையும், அதன் வாயிலாகப் பிறவி கொள்ளுதலும், கெடுதியை நீக்கி முத்திப் பேறும் அதற்குரிய நெறிகளும் வழங்குபவர் ஈசன். அவர், சுடுகாட்டில், இருளில் பேய்க் கணத்தவரோடு பழையனூர் ஆலங்காட்டில் ஆடும் அடிகள். அவர் எம் தலைவர்.

483.  கந்தம் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை அரவில்தோன்றிக் கோடல்பூத்து
அந்தண் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : நறுமணம் கமழும் கொன்றை மலர்சூடி, நெருப்புக் கனலைக் கரத்தில் ஏந்தி திருவெண்ணீறை நன்றாக விளங்குமாறு பூசும் இறைவர், நெருங்கிய பூங்கொத்துகள் உள்ள சோலைகளில் அரவத்தைப் போன்று நுனிப்பகுதியில் பூக்கள் மலர்ந்து பூத்து விளங்கும் பழையனூர் ஆலங்காட்டில் உள்ளவர் எம் தலைவர்.

484. பால மதி சென்னி படரச் சூடிப் பழியோராக்
காலன் உயிர் செற்ற காலனாய் கருத்தனார்
கோலம் பொழிற் சோலைப் பெடையோடுஆடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : இளைய சந்திரனைத் தலையில் படருமாறு சூடிப் பழிச் சொல்லை நினையாமல் மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த எமனுடைய உயிரைக் கவர்ந்த கால வல்லமையுடைய கருத்தராகியவர் ஈசர், அழகிய சோலைகளில் ஆண் மயில் தனது பேடையோடு மகிழ்ச்சியுடன் உலவும் பழையனூர் ஆலங்காட்டில் உள்ளவர் எம் தலைவர்.

485. ஈர்க்கும் புனல்சூடி இளவெண் திங்கள் முதிரவே
பார்க்கும் அரவம்பூண்டு ஆடிவேடம் பயின்றாரும்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்து
ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : நீராடுகின்றவர்தம் பாவங்களைத் தன்பால் ஈர்த்துக் கொண்டு, புண்ணியர்கள் ஆக்கும் நீராகிய கங்கையைச் சூடி, இளமையான ஒரு கலையுடைய பிறைச் சந்திரன் முற்றிப் பூரணமாகத் திகழும் தன்மையைப் பார்க்கின்ற அரவத்தைப் பூண்டு, நடனம் புரிபவர் ஈசர். அப்பெருமான் அத் திருக்கோலத்தில் திருநடனம் புரிபவர் கார்காலத்தில் மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரத்தில் படர்ந்து ஏறித் தேனில் பரவும் நிலையை உடைய பழையனூர் ஆலங்காட்டில் உள்ளவர் எம் தலைவர். இங்கு நடராசப் பெருமான் நடனக் காட்சி உணர்த்தப்படுதல் காண்க.

486. பறையும் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துஉறையு மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் மடிகளே.

தெளிவுரை : பறை, குழல், யாழ் இவற்றைப் பூதகணங்கள் வாசிக்க, வேதங்கள் ஓதி மயானத்தில் உறைகின்றவர் ஈசர். அவர், சந்திரனும் கங்கையும் சடையில் கொண்டு பெண் வண்டுகள் ஒலிக்கும் பழையனூர் ஆலங்காட்டில் விளங்கும் தன்மையர்.

487. நுணங்கு மறைபாடி ஆடிவேடம் பயின்றாரும்
இணங்கு மலை மகளோடு இருகூறு ஒன்றாய் இசைந்தாரும்
வணங்கும் சிறுத்தொண்டர் வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் மடிகளே.

தெளிவுரை : நுட்பமான, உயர்ந்த கருத்துக்களைக் கூறும் வேதம் பாடும் திருக்கோலத்தை ஏற்றவரும், உமாதேவியுடனாகிய நிலையில் இருவேறு தனித்தனி கூறாக இன்றி, ஒரே கூறாக அர்த்தநாரியாக இசைந்துள்ள வரும், திருத்தொண்டர்களை வணங்கிப் போற்றும் சிறுத்தொண்டரால் ஏத்தியும் வாழ்த்தியும் கூறும் பக்தி மொழிகளைக் கேட்டும் விளங்குகின்ற ஈசன், தெய்வத் தன்மை பொருந்தும் பழையனூர் ஆலங்காட்டில் இருப்பவரே.

488. கணையும் வரிசிலையும் எரியும்கூடிக் கவர்ந்துஉண்ண
இணைஇல் எயில்மூன்றும் எரித்திட்டார்எம் மிறைவனார்
பிணையும் சிறுமதியும் கலையும்எல்லாம் கங்குல்சேர்ந்து
அணையும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : தீமைக்கு வேறெதனையும் இணையாகச் சொல்ல முடியாத கொடிய தன்மை யுடைய மூன்று கோட்டைகளையும், அதன் அசுரர்களையும் வில், அம்பு, நெருப்பு, ஆகியவற்றால் எரித்துச் சாம்பலாக்கியவர். எம் இறைவனாகிய ஈசர். எல்லாவகையான மான்களும் இரவில் சேர்ந்து விளங்கும் பழையனூர் ஆலங்காட்டில் உள்ள அவர், எம் தலைவர்.

489. கவிழமலை தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள்
பவழ நுனை விரலால் பையஊன்றிப் பரிந்தாரும்
தவழும்கொடி முல்லை புறவம்சேர நறவம்பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : கயிலை மலையைக் கவிழுமாறு முத்துக் கடகத்தைப் பதித்த கையால் எடுத்த இராவணனைத் தனது பவழம் போன்ற சிவந்த விரல் நுனியால் மெல்ல  ஊன்றி, பின்னர் பரிந்து நல்வரங்களை நல்கியவர், ஈசன். முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கும் பழையனூர் ஆலங்காட்டில் அப்பெருமான் உள்ளார். அவர் எம் தலைவர்.

490. பகலும்இர வும்சேர் பண்பினாரு நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும்வழி பாடுவல் லார்க்கு என்றும் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : வெண்மை பரவும் பகல் ஒளி போன்ற நிறத்தை உடையவர் பிரமன்; இருளை ஒத்த கரிய நிறத்தை உடையவர் திருமால்; இவர்கள் இருவரும் தத்தமக் குரியதான மகிமையாகிய படைத்தல், காத்தல் ஆகிய தொழில் முறையும், மும்மூர்த்தி எனப்படும் பெருமையும், தந்தை, புதல்வர் எனும் உறவு முறையும் கருத்தில் கொள்ளாது, தமக்குள் பேதம் ஏற்பட்டுப் பகை கொள்ளலாயினர். அதனை அளவிடுவதற்கு உரிய செயலாக, ஈசனைக் காண முற்பட்டனர். ஆங்கு, தீப் பிழம்பாகத் தோன்றி உயர்ந்தவர், வழிபாடு செய்ய வல்லவர்களுக்குத் தீமையான யாவும் களைந்து, நன்மைகளை அளிக்கும் பழையனூர் ஆலங்காட்டில் விளங்கும் அடிகள்.

491. போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.

தெளிவுரை : நன்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசிப் பொழுதை வீணாக்கியும், வயிற்றுப் பசி மிகுந்திருந்தால் பகலெல்லாம் உணவு கொள்பவர்களும் புற நெறியினர். பிறவிகள்தோறும் ஒட்டி வருகின்ற வினைகள் கெடுமாறு ஈசனைப் போற்றி வழிபடுவர்கள் தீமையின்றித் திளைத்திருப்பார்கள். அவ்வாறு செய்தருள்பவர் பழையனூர் ஆலங்காட்டில் உறையும் எம் தலைவர்.

492. சாந்தம் கமழ் மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தன் பழையனூர் ஆலங்காட்டுஎம் அடிகளை
வேந்தன் அருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த இடமெல்லாம் தீர்த்தமாகச் சேர்வாரே.

தெளிவுரை : சந்தன மரங்கள் கமழப் பரவும் சண்பை நகர் ஞானசம்பந்தன், குளிர்ந்த நீரும், அழகும் உடைய பழையனூர் ஆலங்காட்டில் மேவும் எம் அடிகளைப் போற்றி, அப்பெருமானுடைய திருவருளால் விரிவாகப் பாட்டிசைத்த இத்திருப்பதிகத்தைப் பாடவல்லவர்கள், செல்லும் இடங்கள் தோறும் புனிதமாகிய தீர்த்தமாக விளங்கிப் பிறர் பாவங்கள் தாமாகவே தீரும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

திருச்சிற்றம்பலம்

46. திருவதிகை வீரட்டானம் (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

493. குண்டைக் குறட்பூதம் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலான் ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : பருத்துக் குட்டையான பூத கணங்கள் குழுமி இருக்க, கெண்டை மீன்கள் உடைய கெடில நதியின் வடக்குப்பக்கத்தில் வண்டுகள் மருள் என்னும் பண்ணில் பாட்டு இசைக்க,  பொன் போன்ற வண்ணம் உடைய விரிந்த கொன்றை மாலைகள் சூடித் திருக்கரத்தில் அனலை ஏறந்தி, ஈசன் வீரட்டானத்தில் நடம் புரிகின்றார்.

494. அரும்பும் குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோடு உடன்கை அனல்வீசிச்
கரும்புஉண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பும் அதிகையுள் ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : மென்மையான மார்பகங்களும், இனிமையான மொழியும் உடைய <உமாதேவியோடு, கரத்தில் நெருப்பு ஏந்தி அனல் வீசவும், வண்டுகள் பரந்து சூழ்ந்து தேன் உண்ணும் கொன்றை மலரைச் சூடி ஒளி விடும் சடை தாழ்ந்து விளங்க, யாவரா<லும் விரும்பப்படுகின்ற ஈசன், திருவதிகையுள் வீரட்டானத்தில் நடம்புரிகின்றார்.

495. ஆடல் அழல் நாகம் அரைக்குஇட்டு அசைத்து ஆடப்
பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லான் ஆடும் வீரட் டானத்தே.

தெளிவுரை : ஆடி அசைந்துகொண்டு இருக்கும் கொடிய விடம் உள்ள நாகத்தை ஆபரணமாகக் கொண்டு, பாடுகின்ற மறையில் வல்லவனாகிய பரமன், படுதம் என்று சொல்லப்படும் கூத்தினை ஆடிப் பலியேற்று, வானத்தில் உள்ள சந்திரனைத் தொடும் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய அதிகையுள், வீரட்டானத்தில் இருந்து, பல்வேறு வடிவங்களைப் புனைய வல்லவனாகி, தடம் புரிகின்றான்.

496. எண்ணார் எழில்எய்தான் இறைவன் அனல்ஏந்தி
மண்ணார் முழவுஅதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின்று ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : நன்மையை எண்ணிப் பாராது முரண்பட்டு நின்ற மூன்று அசுரர்களையும், அவர்களுடைய கோட்டை மதில்களையும் எரியுமாறு செய்தவர் இறைவன். அப்பெருமான், கரத்தில் அனலை ஏந்தி, முழவு ஒலி அதிர, இளமையான பிறைச் சந்திரனைச் சூடிப் பண்கள் தோய்ந்த வேதங்களைப் பாடவும், தேவர்கள் போற்றித் தொழவும், அதிகையில் <உள்ள வீரட்டானத்தில் நடம் புரிபவர்.

497. கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின்று ஒரு கையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : இறந்தவர்களை ஊர்ப்புறத்தில் எரித்துச் சாம்பலாக்கப்படும் இடுகாட்டில், நெருப்பை ஏந்தித் திருமகள் நின்று இணையும் திருவாகும் அதிகையுள், வீரட்டானத்தில் இறைவன், சுடர்விடும் சடை தாழுமாறு கங்கையைத் தரித்து நடம் புரிபவர்.

498. துளங்கும் சுடர்அங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோடு இசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயல்ஆர் அதிகையுள்
விளங்கும் பிறைசூடி ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : சுடர்விட்டு அசைந்து எரியும் நெருப்பினைக் கரத்தில் நெருக்கமாகப் பதித்துத் திருவிளையாடல் புரிந்து, இளமையான மெல்லிய கொம்பு போன்ற சாயலையுடைய உமாதேவியோடு இசைபாடி, ஒளிதிகழ் பிறைச் சந்திரனைச் சூடி, நீர்வளம் பெருகிச் சூழந்த வயல்களையுடைய அதிகையுள், வீரட்டானத்தில் ஈசன் நடம் புரிபவர்.

499. பாதம் பலர்ஏத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின்று ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : பரமனாகிய பரமேட்டி பூத கணங்கள் புடை சூழ விளங்குகின்றார். பரமன் திருவடியைப் பலரும் போற்றி நிற்கின்றனர். புலித் தோலை உடையாகக் கொண்டு விளங்கும் முதல்வனின் ஆட்டத்திற்கு உமாதேவி இனிய இசைகொண்டு பாடுகின்றார். கெடில நதியின் வடப் பக்கத்தில் உள்ள வீரட்டானத்தில் ஈசன் நடனக் காட்சியை நல்குகின்றார்.

500. கல்லார் வரைஅரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை அடர்ந்துஅவனுக்கு அருள்செய்து அதிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் தலைசூடி
வில்லால் எயில்எய்தான் ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : கல்போன்ற உறுதியான மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனுடைய பெரிய தோளின் அழகு குலையுமாறு, விரைவாகத் தண்டித்தும், பின்னர் அவ் அரக்கன் வணங்கிப் போற்றித் துதிக்க, அருள் புரிந்தும் விளங்குபவர் பரமன். அவர், பற்கள் நன்கு விளங்கியும் பிளந்த வாயை உடையதும் ஆகிய மண்டை ஓடுகளை மாலையாகச் சூடுபவர். வில்லேந்தி முப்புரங்களை எரித்தவர். அப்பெருமான், அதிகையுள் உள்ள வீரட்டானத்தில் நடம் புரிபவர்.

501. நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூல் உடையானைக்
கடிஆர் கழுநீலம் மலரும் மதிகையுள்
வெடிஆர் தலையேந்தி ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் நிமிர்ந்து அழகாகத் தீப்பிழம்பாக ஓங்கிய ஈசனைக் காண்பதற்கு இயலாதவர் ஆயினர். அப்பெருமான், திருநீறு அணிந்த மார்பினர்; முப்புரிநூல் அணிந்துள்ளவர்; அவர் மணம் மிக்க நிலப் பூக்கள் மலரும் அதிகைப் பதியின் வீரட்டானத்தில் பிரம கபாலம் ஏந்தி நடம் புரிபவர்.

502. அரையோடு அலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோடு உடன்ஏந்தி உடைவிட்டு உழல்வார்கள்
உடையோடு உரைஒவ்வாது உமையோடு உடன்ஆகி
விரைதோய் அலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.

தெளிவுரை : உணவின் வகைக்கு ஏற்றம் கொடுத்துக் குண்டிகையும் கரைக்குடுக்கையும் ஏந்தி உள்ளவர்கள் உலகில் உழல்பவர்கள் ஆவர். அவர்கள் உரைகள் ஏற்கத் தகாதன. உமாதேவியோடு வீற்றிருக்கும், மணம் பரவும் மலர்களை மாலையாக உடைய பரமன், வீரட்டானத்தில் நடம் புரிகின்றார். அப்பெருமானை வணங்குதல் வேண்டும்.

503. ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழும் துணையாக நினைவார் வினைஇலரே.

தெளிவுரை : கொன்றை மலர் மணம் பரப்பும் சீகாழிப்பதியின் ஞானசம்பந்தர், தெளிந்த நீர்மிகும் கரைகளில் நாணல்கள் செழித்து ஓங்கும் அதிகைப் பதியில் உள்ள வீரட்டானத்தில் விளங்கும் பரமனைப் போற்றிப் பாடிய இத் தமிழ் மாலையை ஓதி, அதனையே, ஈசனைப் போன்று வாழும் துணையாகப் பற்றி நினைப்பவர்கள், வினையில்லாதவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்.

47. திருச்சிரபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

504. பல்லடைந்த வெண்தலையில்
பலிகொள்வது அன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள்
மேனியில் வைத்தல்என்னே
சொல்லடைந்த தொல்மறையோடு
அங்கம்க லைகள்எல்லாம்
செல்லடைந்த செல்வர்வாழும்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : திரண்ட மேன்மையான சொற்களும், அதன் பொருள்களும், பழமையான வேதம் மற்றும் அதன் அங்கம் ஆகியவற்றில் சொல்லப்பட்ட கலைகள் யாவும் அருள்வயத்தால் சென்று அடையப் பெற்ற செல்வப் பெருமக்கள் வாழும் சிரபுர நகரில் விளங்கும் பெருமானே ! மண்டை ஓட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கையில் ஏந்திப் பிச்சை கொள்வதும், வில்லைப் போன்ற வளைந்த புருவத்தை உடைய பெண்ணின் நல்லாளாகிய உமையைத் திரு மேனியில் பாகமாக வைத்திருப்பதும் ஏன் ? என்னே என வியந்தவாறு.

505. கொல்லை முல்லை நகையினாள் ஓர்
கூறுஅது அன்றியும்போய்
அல்லல் வாழ்க்கைப் பலிகொண்டு உண்ணும்
ஆதரவு என்னைகொலாம்
சொல்ல நீண்ட பெருமையாளர்
தொல்கலை கற்றுவல்லார்
செல்ல நீண்ட செல்வமல்கு
சிரபுர மேயவனே.

தெளிவுரை : சொல்லற்கு அரிய பெருமை மிக்கவர்கள், பழைமையான கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள், அளவற்ற பெரும் பொருட் செல்வங்களும் கொண்டு விளங்கும் சிரபுரத்தில் மேவும் ஈசனே ! முல்லை மலர் போன்ற இனிய பற்களை உடைய தேவியை ஒப்பற்ற பாகமாகக் கொண்டும், இரத்தல் தொழிலை ஏற்றுப் பிச்சை எடுத்து உண்ணும்படி ஆசை கொண்டது ஏன் ?

506. நீர் அடைந்த சடையின்மேலோர்
நிகழ்மதி அன்றியும்போய்
ஊர் அடைந்த ஏறது ஏறி
உண்பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து
காமரம் வண்டிசைப்பர்
சீர் அடைந்த செல்வம்ஓங்கு
சிரபுர மேயவனே.

தெளிவுரை : மேகம் தவழும் சோலை சூழ்ந்து, வண்டுகள காமரம் என்னும் பண்ணிசை எழப்பி, யாங்கணும் பரவச் செல்வம் ஓங்கும் சிரபுர நகரில் விளங்கும் ஈசனே ! கங்கை தங்கிய சடையில் சந்திரனைச் சூடியதும் அன்றி, இடப வாகனத்தில் ஏறி ஊர்தோறும் பலியேற்றதும் ஏன் ?என்னே என வியந்தவாறு.

507. கைஅடைந்த மானினோடு
கார்அரவு அன்றியும்போய்
மெய்அடைந்த வேட்கையோடு
மெல்லியல் வைத்தல்என்னே
கைஅடைந்த களைகளாகச்
செங்கழு நீர்மலர்கள்
செய்அடைந்த வயல்கள் சூழ்ந்த
சிரபுர மேயவனே.

தெளிவுரை : களைகள் பறித்துச் செம்மையுடைய வயல்களும், செங்கழுநீர் மலர்கள் உடைய நிலைகளும் கொண்ட சிரபுரத்தில் விளங்கும் ஈசனே ! மானைக் கரத்தில் கொண்டு விடம் கொண்ட அரவும் வைத்ததும் அன்றித் திருமேனியில் மெல்லியளாகிய உமாதேவியைப் பாகமாக வைத்து இருப்பது ஏன் ? என்னே என வியந்தவாறு.

508. புரம் எரித்த பெற்றியோடும்
போர்மத யானைதன்னைக்
கரம் எடுத்துத் தோல்உரித்த
காரணம் ஆவதென்னே
மரம்உரித்த தோல்எடுத்த
மாதவர் தேவரோடும்
சிரம்எடுத்த கைகள்கூப்பும்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : மரவுரியை ஆடையாகக் கொண்டுள்ள மாமுனிவர்களும் தேவர்களும், சிரத்தின் மேலாகக் கைகளைக் கூப்பி வணங்கும் சிரபுரத்தில் விளங்கும் ஈசனே ! முப்புரத்தை எரித்து வெற்றி கொண்டு பின்னர், போர்க்கோலம் பூண்டு வந்த மத யானையின் தோலை உரித்த காரணம் என்ன ? என்னே என வியந்தவாறு.

509. கண்ணுமூன்றும் உடையதுஅன்றிக்
கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு
பாம்புடன் வைத்தல்என்னே
எண்ணுமூன்று கனலும்ஓம்பி
எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : ஆகவனீயம், காருக பத்தியம், தட்சிணாக்கினி ஆகிய மூவகையான கனலை ஓம்பி, எழுவகையான பிறப்பு வகையான தேவ, ரிஷி, பித்ரு வேள்விகளைப் புரிய விளங்கும் சிரபுர நகரில் மேவிய ஈசனே ! சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்களை உடையதும் அல்லாமல், கரத்தில் வெண்மழுவும் ஏந்தி, ஆதாரம், கீழ், உச்சம் என மூன்று வகையான சுருதிகளுடைய வீணையும், பாம்பும் வைத்திருப்பது என்னே !

510. குறைபடாத வேட்கையோடு
கோல்வளை யாள்ஒருபால்
பொறைபடாத இன்பமோடு
புணர்தரு மெய்ம்மை என்னே
இறைபடாத மென்முலையார்
மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடல்ஓங்கு
சிரபுர மேயவனே.

தெளிவுரை : கன்னிப் பெண்கள் மாளிகையின் மேலிருந்து குற்றமற்ற பாடல்களை இசைக்க ஓங்கும் சிரபுரத்தில் விளங்கும் ஈசனே ! உமையவன் குறைவில்லாத நிறைவான விருப்பத்துடன் இணைந்து மகிழ்வதற்கு உரிய மெய்ம்மை நும்மிடம் உள்ளது. அது என்னே !

511. மலை எடுத்த வாளரக்கன்
அஞ்சஒ ருவிரலால்
நிலைஎடுத்த கொள்கையானே
நின்மல னேநினைவார்
துலைஎடுத்த சொல்பயில்வார்
மேதகு வீதிதோறும்
சிலைஎடுத்த தோளினானே
சிரபுர மேயவனே.

தெளிவுரை : நடுநிலை தவறாது துலாக்கோல் போன்ற துல்லியமாக மொழியும் பெருமக்கள் திகழும் சிரபுர நகரில் விளங்கும் ஈசன், மøயை எடுத்த இராவணன் அஞ்சும்படி ஒரு விரலால் அடர்த்த கொள்கையினால் சிறப்புற்று, மேரு மலையை வில்லாக எடுத்த தோளையுடையவன்.

512. மாலினோடு மலரினானும்
வந்துஅவர் காணாது
சாலும்அஞ்சப் பண்ணிநீண்ட
தத்துவ மேயதுஎன்னே
நாலுவேதம் ஓதலார்கள்
நம்துணை என்றுஇறைஞ்சம்
சேலுமேயும் கழனிசூழ்ந்த
சிரபுர மேயவனே.

தெளிவுரை : நான்கு வேதங்களையும் ஓதும் வேத விற்பன்னர்கள் என்று போற்றவும், சேல் விளங்கும் நீர் வளத்துடன் வயல்கள் செறிந்தும் திகழும் சிரபுர நகரில் மேவும் ஈசனே ! திருமாலும், பிரமனும் வந்து காண முடியாது மிகவும் அச்சம் கொள்ளுமாறு செய்து பின்னர். தீப்பிழம்பாக எல்லையில்லாது நீண்டு வளர்ந்து ஓங்கிய தத்துவம் யாது ! என்னே !

513. புத்தரோடு சமணர்சொற்கள்
புறன்உரை என்று இருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
பான்மையது என்னை கொலாம்
மத்தயானை உரியும்போர்த்து
மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியும்செல்வச்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்து, உமாதேவியுடன் விளங்கிச் சித்தர்கள் வந்து பணிகின்ற செல்வச் சிரபுர நகரில் மேவும் ஈசனே ! புத்தர்களும் சமணர்களும் நின்னை வணங்காது விலகி நின்றும், பக்தர்கள் வந்து பணியுமாறு செய்த பாங்கு என்னே !

514. தெங்குநீண்ட சோலை சூழ்ந்த
சிரபுர மேயவனே
அங்க நீண்ட மறைகள்வல்ல
அணிகொள்சம் பந்தன்உரை
பங்கநீங்கப் பாடவல்ல
பக்தர்கள் பாரிதன்மேல்
சங்கமோடு நீடிவாழ்வர்
தன்மையி னால்அவரே.

தெளிவுரை : தென்னை மரங்களும், சோலைகளும் சூழ்ந்த சிரபுரத்தில் விளங்கும ஈசனை, நான்கு வேதங்களிலும், அதன் நெடிய அங்கங்களிலும் வல்ல ஞானசம்பந்தன் உரை செய்த  இத் திருப்பதிகத்தைக் குறைவு இல்லாமல் பாடவல்ல பக்தர்கள் , இவ் உலகில் தம் மக்கள் புடைசூழ நெடிது வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

48. திருச்சேய்ஞலூர் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

515. நூலடைந்த கொள்கையாலே
நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி
அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச்
சேய்ஞலுஆர் மேயவனே.

தெளிவுரை : சேல் விளங்கும் குளிர்ந்த வயல்சூழ் சேய்ஞலூரில் மேவும் பெருமானே ! பல நூல்களைக் கற்ற பெருமக்களாக விளங்கிய சனகாதி முனிவர்கள் உண்மைப் பொருளைக் காணமாட்டாதவர்களாய் நும் அடி வணங்கி விண்ணப்பிக்க, ஆல் நிழலில் அமர்ந்து சொன்ன அருமறை யாது ?

516. நீறடைந்த மேனியின்கண்
நேரிழை யாள்ஒருபால்
கூறடைந்த கொள்கையன்றிக்
கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி
அரவம் அணிந்ததென்னே
சேறணிந்த தண்கழனிச்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : சேறு குழையப்பெற்ற வளமான கழனிகளையுடைய சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! ஒருபுறம் நீறு விளங்கும் திருமேனியில் உமாதேவி பாகமாகக் கொண்டு விளங்கி நிற்க, சடைமுடியில் கங்கை என்னும் தேவியைக் கொண்டும், திங்களும் அரவமும் தரித்தும் இருப்பது என்னே !

517. ஊனடைந்த வெண்தலையின்
ஓடுபலி திரிந்து
கானடைந்த பேய்களோடு
பூதம் கலந்துடனே
மான்அடைந்த நோக்கிகாண
மகிழ்ந்துஎரி ஆடல்என்னே
தேனடைந்த சோலைமல்கு
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : தேன்மல்கு சோலைசூழ் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! பிரமகபாலம் ஏந்திப் பலியேற்றுப் பிட்சாடன மூர்த்தியாகத் திரிந்து, இடுகாட்டில் பேய்க்கணங்களுடன் பூத கணங்கள் சூழக் கலந்து மான் போன்ற நோக்குடைய உமாதேவி கண்டு மகிழுமாறு கரத்தில் நெருப்பு ஏந்தி ஆடல் புரிந்தது என்னே !

518. வீண்அடைந்த மும்மதிலும்
வில்மலையா அரவின்
நாண்அடைந்த வெஞ்சரத்தால்
நல்லெரி யூட்டல்என்னே
பாண்அடைந்த வண்டுபாடும்
பைம்பொழில் சூழ்ந்துஅழகார்
சேண்அடைந்த மாடமல்கு
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : வண்டுகள் இசைக்கப் பைம்பொழில் சூழ்ந்தும், வானத்தைத் தொடும் உயர்ந்த மாட மாளிகைகள் கொண்டும் விளங்கும் சேய்ஞலூரில் சேவும் ஈசனே ! மேருமலையை வில்லாகவும், அரவத்தை நாணாகவும் வெம்மையான நெருப்புக் கணையால் பயனற்றனவாக இருந்த முப்புரத்தை நன்றாக எரிந்து சாம்பலாகுமாறு செய்த அற்புதம்தான் என்னே !

519. பேய்அடைந்த காடுஇடமாப்
பேணுவது அன்றியும்போய்
வேய்அடைந்த தோளிஅஞ்ச
வேழம் உரித்ததென்னே
வாய்அடைந்த நான்மறைஆறு
அங்கமோடு ஐவேள்வித்
தீஅடைந்த செங்கையாளர்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் வாய் மணக்க ஓதி மேன்மையான ஐவகை வேள்வித் தீயை வளர்க்கும் செம்மையான கரத்தினர் விளங்கும் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! பேய்கள் உறையும் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பேணுவதுடன் மூங்கிலையொத்த மெலிந்த தோளையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்தது என்னே ! விந்தை !

520. காடுஅடைந்த ஏனம்ஒன்றின்
காரணம் ஆகிவந்து
வேடுஅடைந்த வேடனாகி
விசயனொடு எய்த்துஎன்னே
கோடுஅடைந்த மால்களிற்றுக்
கோச்செங்க ணாற்குஅருள்செய்
சேருஅடைந்த செல்வர்வாழும்
சேய்ஞலூர் மேயவனே

தெளிவுரை : தந்தங்களை உடைய, பெருமை மிக்க கோச்செங்கட சோழ மன்னருக்கு அருள் செய்தவரும், பெருமை மிக்க செலர்வர்களும் வாழும் சேய்ஞலூரில் விளங்குபவரும் ஆகிய ஈசனே ! காட்டிற்குச் சென்ற ஒரு பன்றியைக் காரணமாகக் கொண்டு வேட்டுவத் திருக்கோலம் பூண்டு விசயனோடு போரிட்டது என்னே ! விந்தை !

521. பீரடைந்த பாலது ஆட்டப்
பேணாத வன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை
வேர்த்தடிந் தான்தனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித்
தலைமைவ குத்ததுஎன்னே
சீரடைந்த கோயில்மல்கு
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : சீரும் சிறப்பும் கொண்டு திகழும் சேய்ஞலூரில் திருக்கோயில் கொண்டு விளங்கும் ஈசனே ! சுரப்புற்ற ஆவின் பாலைச் சிவலிங்கத் திருமேனிக்கு பாலகன் அபிடேகம் செய்ய, அதன் மெய்ம்மையை உணராது, சினந்த அப் பாலகனின் தந்தையின் கால் தடியப் பெற்றது; பக்தி மிகுந்த அப் பாலகனின் செயலைக் கண்டு மகிழந்து, மாலை சூட்டிச் சண்டேசப்பதம் நல்கியதுடன் தலைமைப் பதவியும் வகுத்துத் தந்தது என்னே !

522. மாவடைந்த தேர்அரக்கன்
வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு
நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போல்
பூசுரர் போற்றிசெய்யும்
சேவடைந்த ஊர்த்தியானே
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : தாமரை மலரில் உறையும் பிரமனைப் போன்று தேவர்கள் எல்லாம் போற்றவும், இடப வாகனத்தில் விளங்கியும் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! குதிரைகளைப் பூட்டிய தேரில் சென்ற அரக்கனுடைய வலிமையை அழித்துப் பின்னர் அவன் அமுது இசைத்த பாடல் கேட்டு இரக்கம் கொண்டு அருள் செய்த தன்மை என்னே !

523. காரடைந்த வண்ணனோடு
கனகம் அனையானும்
பாரடைந்தும் விண்பறந்தும்
பாதமுடி காணார்
சீரடைந்து வந்துபோற்றச்
சென்றுஅருள் செய்தது என்னே
தேரடைந்த மாமறுகில்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : தேர் செல்லும் சிறப்பான வீதிகளையுடைய சேய்ஞலூரில் மேவும் பெருமானே ! கரிய வண்ணனாகிய திருமாலும் பொன் வண்ணத்தவனான் பிரமனும் முறையே பூமிக்குள்ளும், விண்ணில் பறந்து சென்று பாதமோ அல்லது முடியோ காணாதவர் ஆயினர். பின்னர் அவ் இருவரும் சீர்மையுற்றுத் தத்தம் ஆற்றலை உணர்ந்து போற்ற, சோதி வடிவத்தில் விளங்கி அருள் செய்த தன்மை என்னே !

524. மாசடைந்த மேனியாரு
மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த ஊணினாரு
நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட
விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடும்
சேய்ஞலூர் மேயவனே.

தெளிவுரை : வீசும் இயல்புடைய மயில் தோகை விரித்து ஆட, மணம் வீசும் பொழிகளில் ஒளிமிக்க வண்டுகள் பாடும் சேய்ஞலூரில் மேவும் ஈசனே ! மாசு அடைந்த தேகமும் ஊணில் நேசம் உடையவரும் ஆகிய புறச் சமயத்தினர் நின்பால் நேசமில்லாமல் இருத்தல் என்னே !

525. சேயடைந்த சேய்ஞலூரில்
செல்வன சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ்
தோணிபு ரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு
சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார்
வானுலகு ஆள்பவரே.

தெளிவுரை : முருகப் பெருமான் பூசித்த சேய்ஞலூரில் எழுந்தருளியுள்ள ஈசன் சீர்பரவி, வளம் திகழ் வயல்சூழ் தோணிபுர நாதன்; புகழும், ஞானமும் மல்கும் ஞானசம்பந்தன் மொழிந்த இத் திருப்பதிகத்தை வாய் மணக்கப் பாடவல்லவர்கள் வானுலகு ஆள்பவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

49. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

526. போகம்ஆர்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகம்ஆர்த்த பைங்கண்வெளள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகம்ஆர்த்த தோலுடையன்
கோவண ஆடையின்மேல்
நாகம்ஆர்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : ஈசன், போகம் ஆர்த்த பூண் முலையாள் என்னும் திருநாமம் தாங்கிய உமாதேவியை உடனாகக் கொண்டு வேறாகவும், இடப வாகனத்தை உடையவராய் விளஙகுபவர். அவர் தன்னுடைய கூறாகவும் பெருமாட்டியை உடையவர். தோலுடையும், கோவண ஆடையும், நாகமும் கொண்டுள்ள அப்பெருமான் பொருந்தி இருப்பது நள்ளாறு.

527. தோடுடைய காதுடையன்
தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன்
பெண்ணும்ஓர் பால்உடையன்
ஏடுடைய மேல்உலகோடு
ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : ஈசன், தோடு அணிந்து காது உடையவன். தோலை ஆடையாக உடையவன். எக்காலத்திலும் குறையாத சிறப்புடைய போர்த் தன்மையுடைய இடபத்தை வாகனமாக உடையவன். உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ளவன். ஒன்றின்மேல் ஒன்றாக மலரிதழ் போன்று, விளங்கும் ஏழு உலகங்களும் கடல்களும் சூழ்ந்த நாடுகளில் விளங்கும் நம் பெருமான் பொருந்தி விளங்குவது நள்ளாறே.

528. ஆன்முறையால் ஆற்றவெண்ணீறு
ஆடிஅ ணிஇழையோர்
பால்முறையால் வைத்தபாதம்
பத்தர்ப ணிந்துஏத்த
மான்மறியும் வெண்மழுவும்
சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : பசுவிலிருந்து முறையா விதிப்படி தயாரிக்கப்பெற்ற திருவெண்ணீறு புனைந்து, இழைத்த ஆபரணங்களைப் பூண்ட உமையை ஒரு பக்கம் முறையாக வைத்தவர் ஈசன். அவருடைய திருப்பாதத்தைப் பத்தர்கள் பணிந்து ஏத்துகின்றனர். மானும், மழுவும், சூலமும் கரத்தில் பற்றி நிற்கும் நான்மறையாளனாகிய நம் பெருமான் மேயது நள்ளாறே.

529. புல்க வல்ல வார்சடைமேல்
பூம்புனல் பெய்துஅயலே
மல்கவல்ல கொன்றைமாலை
மதியோடு உடன்சூழப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற்
பாதநி ழல்சேர
நல்கவல்ல நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : வரிசையாகச் சேர்ந்து பொருந்தும் சடைமேல் கங்கையை வைத்து, அடுத்துக் கொன்றை மாலை, சந்திரன் சூடி விளங்குப் பல்கிப் பெருகும் திருத் தொண்டர்கள் பொற்பாத நிழலில் சேர்ந்து பக்தியுடன் இருக்க, நல்லவை நல்கும் நம்பெருமான் மேவி இருப்பது நள்ளாறே.

530. ஏறுதாங்கி ஊர்திபேணி
ஏர்கொள்இ ளமதியம்
ஆறு தாங்கும் சென்னி மேல்ருஓர்
ஆடு அரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த
மார்பில் நிரை கொன்றை
நாறுதாங்கு நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : இடபக் கொடி தாங்கி, வாகனமாகவும் அவ் இடபத்தை ஏற்றுக் காத்து, அழகிய இளஞ் சந்திரனையும் கங்கையையும் தரித்து, ஆடிக் கொண்டிருக்கும் அரவத்தைச் சூடி, திருநீறு தரித்து, முப்புரிநூல் திகழும் மார்பில் கொன்றை மலரின் மணம் வீச, நம் பெருமான் மேவி விளங்குவது நள்ளாறே.

531. திங்கள் உச்சி மேல்விளங்கும்
தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம்மிறைவன்
என்றுஅடி யேஇறைஞ்சத்
தங்கள் உச்சி யால்வணங்கும்
தன்னடி யார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : ஈசன், சந்திரனை உயர்ந்த இடத்தில் வைத்தவன். தேவர்கள் எல்லோரும், எங்களுக்கு மேலான இறைவன் அவனே என்று திருவடியை வணங்கிப் போற்றுகின்றனர். தலையால் வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், மேன்மையாவது நம் பெருமான், அவர் மேவி விளங்குவது நள்ளாறே.

532. வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி
விண்கொள்மு ழவுஅதிர
அஞ்சிடத்துஓர் ஆடல்பாடல்
பேணுவது அன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித்
திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : வெம்மையான சுடர்மிகும் தீயை அழகிய கையில் ஏந்தி, விண்ணையும் அதிரச் செய்யும் முழவு ஒலிக்க, அஞ்சும் இடமாகிய இடு காட்டில் ஒப்பற்றி ஆடலும் பாடலும் நடைபெறுமாறு விரும்பி மகிழ்வதும் அல்லாமல், சிவந்த சடைக்கு ஒருகலைப் பிறைச் சந்திரனைச் சூடி, நஞ்சினைக் கண்டத்திலே திகழுமாறு வைத்துள்ள நம் பெருமான் மேவி விளங்குவது நள்ளாறே.

533. சிட்டம் ஆர்ந்த மும்மதிலும்
சிலைவரைத் தீஅம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீறு
ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னி மேலோர்
பால்ம தியம்சூடி
நட்டம் ஆடு நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை :  வலிமையின் சிறப்புப் பெருந்திய மூன்று மதில்களையும், மேரு மலையை வில்லாகவும் தீயை அம்பாகவும் கொண்டு, சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கித் திருவெண்ணீறு பூசுவதும் அல்லாமல், நெற்றிப்பட்டம் உடைய தலையின்மேல் வெண்மதியைச் சூடி நடனம் ஆடுகின்ற நம் பெருமான் மேவி விளங்குவது நள்ளாறே.

534. உண்ணலாகா நஞ்சுகண்டத்து
உண்டுஉட னேஒடுக்கி
அண்ணலாகா வண்ணநீழல்
ஆரழல் போல்உருவம்
எண்ணலாகா உள்வினைஎன்று
எள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே.

தெளிவுரை : யாரும் உட்கொள்வதற்குப் பொருந்தாத நஞ்சை உட்கொண்டு, கண்டத்தில் தேக்கி ஒடுக்கி நிறுத்தியவர் ஈசன். அவர், யாரும் அண்டி நெருங்க முடியாதவாறு வண்ணமிகு ஒளி பொருந்திய நெருப்புப் போன்ற உருவம் கொண்டவர். அப்பெருமான், எண்ணுவதற்கு அரிதாகிய வினையால் உண்மையை உணராது நிற்கும் பிரமனும் திருமாலும் வலிந்து சென்று நண்ணவேண்டும் என முயன்றும் நண்ண முடியாதவராய் மேவி விளங்குவது நள்ளாறே.

535. மாசு மெய்யர் மண்டைத்தேரர்
குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்று எண்ணி
அந்நெறி செல்லன்மின்
மூசு வண்டார் கொன்றைசூடி
மும்மதி ளும் முடனே
நாசம் செய்த நம் பெருமான்
மேய்து நள்ளாறே.

தெளிவுரை : மாசுடைய தேகத்தையுடைய பௌத்தர் மற்றும் குணமற்றவர்களும் பேசுவனவற்றை மெய்ம்மை எனக் கருதி அவ்வழியில் செல்ல வேண்டாம். கொன்றை மலர் சூடி, மும்மதில்களையுடைய முப்புரத்தை உடனே அழியுமாறு செய்த நம் பெருமான், மேவி விளங்குவது நள்ளாறே.

536. தண்புனலும் வெண்பிறையும்
தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்கு காழி
ஞானசம் பந்தனல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல்
பத்தும்இ வைவல்லார்
உண்பு நீங்கி வானவரோடு
உலகில் உறைவாறே.

தெளிவுரை : குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறைச் சந்திரனையும் தரித்திருப்பவர் ஈசன். அப்பெருமானைப் போற்றி, நட்பின் மிக்க நல்லோர்கள் பெருகி வாழும் காழியின் ஞானசம்பந்தன், நற்பண்பின் சிகரமாக நள்ளாற்றில் மேவி நிற்கப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், இப் பிறவியில் அடைவதற்கு உரிய வினைப் பயன் நீங்கப் பெற்று வானவர்களுடன் அவ்வுலகில் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

50. திருவலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

537. ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக்
கள்ளம் ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து
காமவினை அகற்றி
நல்லவாறே உன்றன்நாம
நாவில் நவின்று ஏத்த
வல்லவாறே வந்து நல்காய்
வலிவலமே யவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவி விளங்கும் ஈசனே ! உலகப் பொருள்களின்மேல் பற்றுக் கொண்டு பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச் சாந்தப் படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய். வஞ்சனை அற்றி நிலையும் பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும் தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின்மேல் செய்யப்படும் செயல்களை அகற்றுக. உன்னுடைய திருநாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அநத நன்னெறியில் நவிலுமாறு அருள்புரிவாய். என்னுடைய தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் யான் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து எனக்கு நல்கி அருள்புரிக.

538. இயங்குகின்ற இரவிதிங்கள்
மற்றுநல் தேவரெல்லாம்
பயங்களாலே பற்றி நின்பால்
சித்தம்தெ ளிகின்றிலர்
தயங்கு சோதீ சாமவேதா
காமனைக் காய்தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் பெருமானே ! எக்காலத்திலும் சூரியன், சந்திரன் முதலான தேவர்கள் யாவரும் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவும், நின்பால் சித்தம் வைக்கத் தெளிவற்றவர் களாகவும் உள்ளனர். ஒளிமிகும் சோதியாய்ச் சாம வேதப் பிரியனாய் விளங்குபவனே ! மன்மதனை எரித்தவனே ! உலக மாயையில் மயங்கும் என்முன் வந்து யான் ஈடேறுமாறு நல்குக.

539. பெண்டர் மக்கள் சுற்றும் என்னும்
பேதைப் பெருங் கடலை
விண்டு பண்டே வாழமாட்டேன்
வேதனை நோய் நலியக்
கண்டு கண்டே உன்றன் நாமம்
காதலிக்கின்றது உள்ளம்
வண்டு கிண்டிப் பாடும் சோலை
வலிவல மேயவனே.

தெளிவுரை : வண்டுகள் பூக்களைக் கிண்டி இசைக்கும் வலிவல ஈசனே ! பெண்டிர், புதல்வர், சுற்றத்தார் என்னும் பேதைப் பெருக்கத்தில் சூழ்ந்து திளைத்து, முந்தைக் காலங்களிலும் கிடந்து, நன்மை தருகின்ற நெறியான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளாதவனாயினேன். அதன் பயனாக வேதனையான பிறவி முதலான தீராத நோய்கள் உற்று நலிவடைந்தேன். இப்போது நின் நாம மகிமையின் சிறப்பினை எண்ணி மகிழ்கின்றது என் மனம். அருள் புரிக.

540. மெய்யர்ஆகிப் பொய்யைநீக்கி
வேதனையைத் துறந்து
செய்யர் ஆனார் சிந்தையானே
தேவர் இலக் கொழுந்தே
நைவன் நாயேன் உன்றன்நாம
நாளும் நவிற்று கின்றேன்
வையமுன்னே வந்து நல்காய்
வலிவல மேயவனே

தெளிவுரை : வலிவல நகரில் மேவும் பெருமானே ! பொய்யான, நிலையற்ற பொருள்களை ஒதுக்கித் தள்ளி, மெய்யான பொருமையே பற்றி, அதன் பயனாகத் துன்பத்தை ஒழித்துச் செம்மையாளர்களாய் விளங்குபவர்களின் சிந்தையில் விளங்குபவனே ! நாளும் உன் திருநாமத்தை உரைக்கின்றேன். நாய் போன்று கீழ்மையனாக இருந்து சீரழியும் என்பால் போந்து இவ்வுலகில் நல்லருள் புரிவாய்.

541.துஞ்சும் போதும் துற்றும் போதும்
சொல்லுவன் உன் திறமே
தஞ்சம் இல்லாத் தேவர் வந்துஉன்
தாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சை உண்டாய்க்கு என்செய்கேனோ
நாளு நினைந்து அடியேன்
வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவல நகரில் மேவும் பெருமானே ! துயிலும்போதும், உண்பது முதலாக உலகப் பொருள்களை ஏற்று நுகரும்போதும், உன்னுடைய பெருமையையே நினைத்துப் பாரட்டுபவனாய் யான் இருப்பவன். வேறு யாரிடத்திலும் தஞ்சம் அடையும் நிலையில்லாத தேவர்கள், நின் தாள் பணிந்து நிற்க, அவர்கள் உய்ய வேண்டும் என்பதற்காக நஞ்சினை உட்கொண்டாய், அத்தகைய கருணையுடைய ஈசனே ! நினக்கு நான் எவ்வøயில் ஆற்றிப் போற்றுவதற்கு இயலும் ! நின்னை, நாள்தோறும் போற்றி வணங்குகின்றேன். உலக மாயை என்னைப் பற்றி நின்னைவணங்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்தி வஞ்சித்து வணங்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்தி வஞ்சித்து விடுமோ என்று அஞ்சிகின்றேன். என் அச்சம் நீக்கி அருள்புரிவாயாக.

542. புரிசடையாய் புண்ணியனே
நண்ணலார்மூ வெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான்
என்று இமையோர் பரவும்
கரி உரியாய் காலகாலா
நீல மணி மிடற்று
வரி அரவா வந்து நல்காய்
வலிவல மேயவனே.

தெளிவுரை : சுருண்டு நீண்ட சடையை உடைய புண்ணியனே ! வலி வலத்தில் மேவும் ஈசனே ! முப்புரங்களை எரியுமாறு செய்தனை என்று தேவர்கள் போற்ற விளங்குபவனே ! யானையின் தோலை உரித்தவனே ! காலனுக்குக் காலனாக இருப்பவனே ! நீலகண்டத்தை உடையவனே ! அழகிய ஒளிமிக்க அரவம் தரித்தவனே ! அடியேற்கு நல்லருள் புரிக !

543. தாயு நீயே தந்தை நீயே
சங்கரனே அடியேன்
ஆயு நின்பால் அன்பு செய்வான்
ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயந்தன்னுள்
ஐவர் நின்றுஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவல நகரில் மேவும் பெருமானே ! யான் நோக்காத காலத்திலும் எனது நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு பேணும் தாயும் நீயே ! என்னைப் பக்குவப் படுத்தி மேலானவர்க்கும் பொறுப்பினை ஏற்றுப் பிரியமுடன் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்யும் தந்தையும் நீயே ! சங்கரனே ! எல்லாவற்றையும் ஆய்ந்து செய்யும் நின்பால், அடியேன் அன்பு செய்தலையே விரும்புகின்றது என் உள்ளம். ஐந்து புலன்கள் இந்த உடம்பில் பொருந்தி நின்று நின்னை நினைய ஒட்டாமல் செய்ய, மனம் மாயையின் வசம் உற்றதோ என அச்சம் கொள்கின்றேன். அடியேற்கு நல்லருள் புரிவாயாக.

544. நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்
நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தலுற்ற
வேந்தன் இரா வணனைத்
தேரொடும் போய் வீழ்ந்தலறத்
திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கைபங்கா
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் ஈசனே ! உமாதேவியைப் பாகமாக உடையவனே ! கங்கையைச் செஞ்சடையில் தரித்தவனே ! நின்னுடைய பொன் மலையாகிய கயிலையைப் பெயர்த்த இராவணனைத் திருவிரலால் தண்டித்து, அவனை அலறுமாறு செய்தவனே ! அருள் புரிக !

545. ஆதியாய நான்முகனும்
மாலும்அறி வரிய
சோதியானே நீதியில்லேன்
சொல்லுவன் நின் திறமே
ஓதிநாளும் நின்னையேத்தும்
என்னை வினை அவலம்
வாதி யாமே வந்து நல்காய்
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் பெருமானே ! நான்முகனும் திருமாலும் அறிய முடியாத ஆதியாகவும் விளங்கிச் சோதியாகக் காட்சி நல்கிய ஈசனே ! நின்னுடைய சிறப்புக்களைக் கூறும் தகுதி இல்லாதவன் ஆயினும், உன் திருநாமத்தை ஓதி நாள்தோறும் போற்றி வழிபடும் என்னை வினையின் தாக்கத்தால் நேரும் இடையூறு துன்புறுத்தாதபடி
எனக்குக் காட்சி தந்து அருள்புரிக.

546. பொதியிலானே பூவணத்தாய்
பொன்திகழும் கயிலைப்
பதியிலானே பத்தர் சித்தம்
பற்று விடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியர் என்று இவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ
வலிவல மேயவனே.

தெளிவுரை : வலிவலத்தில் மேவும் ஈசனே, பொதிய மலையிலும் பூவணத்திலும், பொன் திகழும் கயிலைப் பதியிலும், பக்தர் நெஞ்சத்திலும் பற்றுக் கொண்டு விளங்குபவன். விதியைப் பற்றி நினையாத சமணர் மற்றும் சாக்கியர்கள், ஈசனைக் கருதி வணங்காதவர்களாய் இருக்க என் செய்வார்களோ !

547. வன்னி கொன்றை மத்தம்சூடும்
வலிவல மே யவனைப்
பொன்னி நாடன் புகலி வேந்தன்
ஞானசம் பந் தன்சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார்
மெய்த்தவத் தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே
மன்னி இருப் பாரே.

தெளிவுரை : வன்னி, கொன்றை மலர், ஊமத்தம் மலர் ஆகியன சூடி, வலிவல நகரில் மேவி விளங்கும் ஈசனைப் போற்றிக் காவிரி பாயும் நாட்டினை உடைய புகலியின் தோன்றலாகிய ஞானசம்பந்தர் சொன்ன புகழ் விளங்கும் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உண்மையான தவவேந்தர்கள் விரும்புகின்ற சோதி வடிவினராகத் திகழும் ஈசனோடு, பொருந்தி மகிழ்ந்து விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

51. திருச்சோபுரம் (அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

548. வெங்கண்ஆனை ஈர்உரியை
போர்த்து விளங் குமொழி
மங்கை பாகம் வைத்துகந்த
மாண்பது என் னைகொலாம்
கங்கையோடு திங்கள் சூடிக்
கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய்
சோபுர மேயவனே.

தெளிவுரை : கங்கையுடன், சந்திரனையும் தரித்து மணம் பெருகும் கொன்றை மலர் மாலை சூடித் தூய வெண்ணீறு அணிந்த ஈசனே ! சோபுரத்தில் மேய பெருமானே ! கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்தி, இனிய மொயியாளாகிய உமாதேவியைப் பாகம் கொண்ட மாண்பு என்னே !

549. விடை அமர்ந்து வெண் மழு ஒன்று
ஏந்தி விரிந்து இலங்கு
சடை ஒடுங்கத் தண்புனலைத்
தாங்கியது என் னைகொலாம்
கடை உயர்ந்த மும்மதிலும்
காய்ந்து அனலுள் ளழுந்தத்
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : உயரமாக நீண்ட மதில்களையுடைய முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்யும் சரங்களைத் தொடுக்கும் வலிமையான வில்லையுடையவனே ! சோபுரத்தில் மேவும் பெருமானே ! இடப வாகனத்தில் அமர்ந்து, வெண் மழுப் படையைக் கரத்தில் ஏந்தி, விளங்குகின்ற சடை முடியில் ஒடுங்குமாறு, குளிர்ந்த புனலாகிய கங்கையைத் தாங்கியது என்னே !

550. தீயராய வல்லரக்கர்
செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து வானவரைத்
தாங்கியது என் னைகொலாம்
பாயும் வெள்ளை ஏற்றை ஏறிப்
பாய்புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே
சோபுரமே யவனே.

தெளிவுரை : பாய்து செல்லும் வெள் விடையை வாகனமாகக் கொண்டு ஏறிப் பாய்ந்து தாக்கும் புலியின் தோலை உடுத்தித் தூய்மையான திருவெண்ணீற்றைத் தரித்துச் சோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! தீயவர்களாகிய கொடிய முப்புரத்து அசுரர்களைத் தீக்கு இரையாக்கி, வானவரை ஆதரித்துக் காத்தது என்னே !

551. பல்இல்ஒடு கையில் ஏந்திப்
பல்கடையும் பலிதேர்ந்து
அல்லல் வாழ்க்கை மேலதான
ஆதரவு என் னைகொலாம்
வில்லை வென்ற நுண்புருவ
வேல்நெடுங்கண் ணியொடும்
தொல்லைஊழி யாகிநின்றாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : வில்லினையும், வெல்லும் ஆற்றலுடைய நுண்புருவமும், வேலைப் போன்ற நெடிய கூர்மையான நோக்குடைய விழியும் உடைய உமாதேவியைப் பாகமாக கொண்டு, மிகப்பழைய ஊழிக்காலம் முதற்கொண்டு சோபுரத்தில் மேவிய பெருமானே ! பற்கள் உதிர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரிந்தனை, துன்பத்தைத் தரக்கூடிய இச் செயலை ஏற்க விழைந்தது என்னே !

552. நாற்றமிக்க கொன்றைதுன்று
செஞ்சடை மேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த
காரணம் என் னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை
ஒல்க உதைத்து அருளி
தோற்றம் ஈறும் ஆகிநின்றாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : வலிமையில் மிக்கவனான காலனைத் திருப்பாதத்தால் உதைத்து, அவனுடைய ஆற்றலை ஒடுக்கி, எல்லாவற்றுக்கும் தோற்றமும், முடிவும் தானேயாகிச் சோபுரத்தில் விளங்கும் பெருமானே ! மணம் மிகுந்த கொன்றை மலர் பொருந்த விளங்கும் சிவந்த சடையின் மேல் சந்திரனை ஏற்றம் கொள்ளுமாறு வைத்த காரணமே என்னே !

553. கொன்நவின்ற மூவிலைவேல்
கூர் மழுவாள் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை
சூடும் பொற்புஎன் னைகொலாம்
அன்னம் அன்ன மென் நடையாள்
பாகம் அமர்ந்து அரைசேர்
துன்ன வண்ண ஆடையினாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : அன்னப் பறடையைப் போன்று மென்மையான நடையுடையவளாகிய உமையைப் பாகமாகக் கொண்டு அமர்ந்து, அரையில் பொருந்திய வண்ணமிகு ஆடையும் அணிந்து, சோபுரத்தில் மேவும் பெருமானே ! மூன்று இலைகளையுடைய வேல் என்று சொல்லப்படுகின்ற பெருமை கொண்ட சூலமும், கூரிய மழுவாளும் படையாகக் கொண்டு, பொன்னை வென்ற சிறப்புமிக்க கொன்றை மாலை சூடும் பொற்பு என்னே !

554. குற்றம் இன்மை உண்மை நீஎன்று
உன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான
காரணம் என் னைகொலாம்
வற்றல் ஆமை வாளரவம்
பூண்டு அயன்வெண் தலையில்
துற்றல்ஆன கொள்கையானை
சோபுரமே யவனே.

தெளிவுரை : ஆமையின் ஓடும் அரவமும் பூண்டு, பிரம கபாலத்தை ஏந்திப் பலிகொண்டு சோபுரத்தில் மேவி இருப்பவனே, நின்பால் விருப்பும் பக்தியும் கொண்டு குற்றம் இல்லாதவர் நீவிர், உண்மைப் பொருளாக விளங்குபவரும் நீரே என்று நின் அடியவர்கள் பணிவார்கள். இவர்கள் கற்ற கல்வியானது பெரு ஞானமாகத் திகழ்ந்து விளங்குவதற்குக் காரணம்
என்னே !

555. விலங்கல்ஒன்று வெஞ்சிலையாக்
கொண்டு விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த
கொள்கை இது என் னைகொலாம்
இலங்கை மன்னு வாள் அவுணர்
கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றி வைத்துகந்தாய்
சோபுரமே யவனே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணன், மலையைப் பெயர்க்கும்போது, தன் விரலால் ஊன்றி உகந்து, சோபுரத்தில் மேவும் பெருமானே ! மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்து அழித்ததன் நோக்கம் என்னே !

556. விடங்கொள் நாக மால்வரையைச்
கற்றிவிரி திரைநீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த
காரணம் என் னைகொலாம்
இடந்து மண்ணை உண்ட மாலும்
இன் மலர்மேல் அயனும்
தொடர்ந்து முன்னம் காண மாட்டாச்
சோபுரமே யவனே.

தெளிவுரை : மண்ணை உண்ட திருமாலும், தாமரை மலர்மீது உறையும் பிரமனும் நின்னைக் காண வேண்டும் என்று தொடர்ந்து சென்றும் காணற்கு அரியவனாய்ச் சோபுரத்தில் விளங்கும பெருமானே ! மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடையும்போது தோன்றிய நஞ்சினை உண்டு உகந்த காரணம் என்னே !

557. புத்தரோடு புன்சமணர்
பொய் உரையே உரைத்துப்
பித்தராகக் கண்டுஉகந்த
பெற்றிமைஎன் னைகொலாம்
மத்த யானை ஈருரிவை
போர்த்து வளர் சடைமேல்
துத்தி நாகம் சூடினானே
சோபுரமே யவனே.

தெளிவுரை : மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்துச் சடையில் நாகத்தைச் சூடி சோபுரத்தில் விளங்கும் பெருமானே ! புத்தரும், சமணரும் பொய்ம்மை கூறினும், அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் பெருமைதான் என்னே !

558. சோலைமிக்க தண்வயல்சூழ்
சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார்
சிரபுரக்கோ நலத்தான்
ஞாலமிக்க தண்தமிழால்
ஞானசம்பந் தன்சொன்ன
கோல மிக்க மாலைவல்லார்
கூடுவர்வான் உலகே.

தெளிவுரை : சோலைகளும் குளிர்ச்சியான வயல்களும் சூழ் சோபுரத்தில் மேவும் ஈசனைச் சீலமிக்க புகழுடைய சிரபுரத்தின் கோனாக விளங்கும் தலைவனாகிய ஞானசம்பந்தன் ஞாலம் நலத்தில் மிகுந்து விளங்குமாறு சொன்ன இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர் வானுலகத்தைச் சென்றடைந்து மகிழ்வர்.

திருச்சிற்றம்பலம்

52. திருநெடுங்களம் (அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம், திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

559. மறையுடையாய் தோல் உடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
என்று உனைப்பே சின்அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய்
கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய்
நெடுங்களமே யவனே.

தெளிவுரை : நெடுங்களம் என்னும் பதியில் விளங்கும் பெருமானே ! உன்னதமாகப் போற்றப்படும் வேதத்தை உடையவராகிய நீவிர் தோலை உடையாகக் கொண்டர், நீண்ட அழகிய சடையின்மேல் வளர்ந்து ஒளிரும் பிறைச் சந்திரனையும் கொண்டுள்ளீர் பிஞ்ஞகனே ! என்று உம்மைப் பேசிப் புகழ்வதையன்றி யாம் வேறு ஆற்றுவது ஒன்றும் இல்லை. குறைகளை உடையவர்களாயினும், அவர்கள் புரிந்த குற்றங்களைக் கருதாது, உயர்ந்து விளங்கும் கருணைத் திறந்தால் அருள் புரிபவராகிய நீவிர், உம்மை வணங்கிப் போற்றும் கொள்கையால் நிறையுடையவராக விளங்கும் அடியவர்களின் இடரைக் களைந்து, அருள்புரிவீராக.

560. கனைத்துஎழுந்த வெண்திரைசூழ்
கடலிடை நஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த
திருந்திய தே வநின்னை
மனத்தகத் தோர் பாடல்ஆடல்
பேணிஇராப் பகலும்
நினைத் தொழுவார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : ஆரவாரித்து எழும் வெண்மையான நுரைகளையுடைய அலைகள் கொண்ட கடலில் தோன்றிய நஞ்சினைத் தினைத்தனையாகக் குறைவு படுத்திக் கண்டத்தில் இருத்திக்கொண்ட தேவனே ! நெடுங்களத்தில் விளங்கும் பெருமானே ! நின்னை மனத்தால் நினைந்து, பாடிப் பக்திப் பரவசம் கொண்டு, ஆடிப் பணியும் அடியவர்களின் இடரைக்களைவீராக.

561. நின்னடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல்
என்று அடற் கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும்
பூ வொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் விளங்கும் பெருமானே ! நின்னடியையே வணங்கிப் போற்றும் மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச்சென்ற கூற்றுவனை, என்னுடைய அடியவன் அவன்; அவன் உயிரைக் கொண்டு செல்லற்க ! என்று தெளிவித்து, அடர்த்து, உதைத்த திருவடியைப் பரவி, நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து போற்றும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

562. மலைபுரிந்த மன்னவன்றன்
மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும்
அவிர்சடையா ரூரா
தலை புரிந்த பலிமகிழ்வாய்
தலைவ நின்தாள் நிழல்கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய்
நெடுங்களமே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் ஈசனே ! மலையரசன் மகளாகிய பார்வதியை ஒரு பாகத்தில் கொண்டு மகிழ்ந்து, கங்கையைச சடை முடியில் தங்குமாறு செய்தவனே ! பிரம கபாலம் ஏற்று ஊர்தொறும் பலி கொண்டவனே ! தலைவனாக விளங்குபவனே ! நின் திருவடியைத் தியானம் செய்யும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

563. பாங்கின் நல்லார் படிமம் செய்வார்
பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு
தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடும்
தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் ஈசனே ! நற்பண்பின் மிக்க நின் பக்தர்கள் விரதம் பூண்டு தோற்க, பூத கணங்கள் நின்பால் அடைக்கலமாகி ஒன்றிப் பொருந்தி நன்மையானவற்றைத் தரவல்ல தோத்திரப் பாடல்களைப் பாடி, யாவராலும் தொழப்படும் நின் திருக்கழலை வணங்குகின்றன. அளவற்ற அன்பு செய்து பெருக்கெடுத்தோடும் தன்மையில் நின் திருவடி நிழலில் அல்லாது வேறு கதி அறியாவதவர்களின் இடரைக் களைவீராக.

564. விருத்தனாகிப் பாலனாகி
வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக்
கமழ்சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன்
அடி இணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய்
நெடுங்களமே யவனே

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! வயது முதிர்ந்த கோலத்திலும், இளமையான வேதங்கள் உணரும் கருத்தனாகிக் கங்கையைச் சடையில் ஏற்று, யாவற்றுக்கும் பொருளாக விளங்கும் ஆதி தேவனே ! நின்னை ஆனந்தத்தால் ஆடிப்பாடிப் போற்றும் அடியவரின் இடரைக் களைவீராக.

565. கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக்
கூட்டியோர் வெங் கணையால்
மாறு கொண்டார் புரமெரித்த
மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈதென்று
எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர்களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! உமாதேவியை ஒரு பாகத்தில் கூறாகக் கொண்டாய் ! நெருப்பு, காற்று, திருமால் ஆகிய மூன்றும் இணைத்து ஓர் அம்பு ஆக்கி, அதனைச் செலுத்தி முப்புரங்களை எரியுண்ணச் செய்தாய் ! இடபத்தைக் கொடியாகக் கொண்டாய் ! திருவெண்ணீறு ஒன்றே சாந்தம் தருவது என்னும் கொள்கையில், எம்பெருமான் அணிந்து பெருமையைப் புகல, அதனைச் செல்வமாகக் கொண்டு தரிக்கும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

566. குன்றின் உச்சி மேல் விளங்கும்
கொடிமதில்சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை
அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால்
ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர்களையாய்
நெடுங்கள மேயவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! குன்றின் உச்சியில் விளங்கும் கொடியும் மதிலும் சூழ் இலங்கையின் அரக்கர் கோனாகிய இராவணன் மாறுபட்டு நின்று, மலையைப் பெயர்த்து எடுத்தபோது அவனை அடர்த்து வலிமையை இழக்கச் செய்தவனே ! நின் பெருமைகளாக இச் செயலுடன் மற்றும் பிறவும் உரைத்துப் போற்றி மனங்கசிந்து உருகும் அடியவர்களின் இடரைக் களைவீராக.

567. வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும்
விளங்கிய நான் முகனும்
சூழ எங்கு நேடஆங் கோர்
சோதியுள் ஆகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்
கேடிலாப் பொன் னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையார்
நெடுங்களளே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! கம்சனுடைய பட்டத்து யானையின் கொம்பினை ஒடித்த திருமாலும், விளங்கும் புகழ்மிகு பிரமனும் எல்லா இடங்களிலும் சூழந்து தேடச் சோதி வடிவாக மேவிய பொருளே! பன்றியின் கொம்பினை வீரம் செறிய அணிந்துள்ள பெருமானே ! கெடுதல் இல்லாப் பொன்னடிகளையுடைய நின் நிழற்கண் வாழ்பவர்களின் இடரைக் களைவீராக.

568. வெஞ்சொல் தம்சொல் ஆக்கிநின்ற
வேடமிலாச் சமணும்
தஞ்சம் இல்லாச் சாக்கியரும்
தத்துவம் ஒன்று அறியார்
துஞ்சல்இல்லா வாய்மொழியால்
தோத்திர நின் னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய்
நெடுங்கள மே யவனே.

தெளிவுரை : நெடுங்களத்தில் மேவும் பெருமானே ! கொடிய சொற்களைக் கூறும் சமணரும் நின்னைத் தஞ்சம் அடையாத சாக்கியரும் உண்மையின் தத்துவத்தை அறியாதவர்கள். அழிதல் இல்லாத வேதத்தாலும் தோத்திரங்களாலும் நின்னையே சரணாக அடைந்து நினைத்து வாழ்பவர்களின் இடரைக் களைவீராக.

569. நீடவல்ல வார்சடையான்
மேய நெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகில்
சிரபுரக் கோ நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை
ஞானசம் பந் தன்சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார்
பாவம்ப றையுமே.

தெளிவுரை : நீண்ட சடையையுடைய ஈசன் மேவிய நெடுங்களத்தைச் சிறப்பின் மிக்க பெருமக்கள் வாழும் சிரபுரத்தில் கோவாகிய ஞானசம்பந்தன், நலங்கள் நாடப் பாடிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் பாவமற்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

53. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

570. தேவராயும் அசுரராயும்
சித்தர் செழு மறைசேர்
நாவராயு நண்ணுபாரும்
னிண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமல ரோன்
செங்கண் மால்ஈசன் என்னும்
மூவராய முதல் ஒருவன்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : தேவர், அசுரர், சித்தர், வேதம் ஓதும் அந்தணர், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என ஐந்தும் பிரமன், திருமால், ஈசன் என மும்மூர்த்திகளாயும்  விளங்கும் முழு முதல் கடவுளாகும் ஒருவன் விளங்கி இருப்பது முதுகுன்றம் என்னும் பதி.

571. பற்றுமாகி வானுளோர்க்குப்
பல்கதிரோன் மதிபார்
எற்று நீர் தீக் காலுமேலை
விண்ணியமா னனோடு
மற்று மாதோர் பல்லுயிராய்
மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : வானவர்களுக்குப் பற்றாக இருப்பவன் ஈசன். வானவர்கள் பற்றிப் போற்றும் பரம் பொருளும் அவன். சூரியன், சந்திரன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயமானன் (புருவன்) என ஆகிப் பல உயிர்களும் ஆகித் திருமால், பிரமன், வேதங்கள் என ஆகி இவை அனைத்தும் சேர்ந்த முற்றும் ஆகி, வேறாகவும் திகழும் முழு முதலான பரமன் விளங்குவது முதுகுன்றம்.

572. வார்மாகம் வைகுதிங்கள்
வாளரவம் சூடி
நாரிபாக நயந்துபூமேல்
நான்முகன்றன் தலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன்
செற்றலும் தோன் றியதோர்
மூரி நாகத்து உரிவைபோர்த்தான்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : கங்கை, வானத்தில் இருக்கும் சந்திரன், ஒளிமிக்க அரவம், இவற்றைச் சூடி, உமா தேவிய ஒரு பாகத்தில் விரும்பித் தாமரை மலரில் விளங்கும் நான்முகனுடைய சிரத்தை ஓடாகக் கரத்தில் ஏந்திப் பிச்சை யேற்ற செல்வனாகிய ஈசன், வலிமையான யானையின் தோலை உரித்துப் போர்த்தியவன். அவன் மேவி இருப்பது முதுகுன்றம்.

573. பாடுவார்க்கு அருளும் எந்தை
பனிமுதுபௌ வமுந்தீர்
நீடு பாரு முழுதும் ஓடி
அண்டர் நிலை கெடலும்
நாடுதானும் ஊடும் ஓடி
ஞாலமு நான் முகனும்
ஊடு காண மூடும் வெள்ளத்து
உயர்ந்தது மு துகுன்றே.

தெளிவுரை : தன்னைப் போற்றித் துதிப்பவர்களுக்கு அருள் புருடபவன், எந்தையாகிய பரமன். கடல் நீரானது பெருகி, உலகம் முழுவதும் பரவி, தேவர்கள் நிலையும் கெடுமாறு சூழும் பிரளய காலத்திலும் உயர்ந்து அழியாமல் இருக்கும் முதுகுன்றில், அப்பெருமான் விளங்கி இருப்பவர்.

574. வழங்கு திங்கள் வன்னிமத்த
மாகணமீ தணவிச்
செழுங் கல்வேந்தன் செல்விகாணத்
தேவர்திசை வணங்கத்
தழங்கு மொந்தை தக்கைமிக்க
பேய்க்கணம் பூ தம்சூழ
முழங்கு செந்தீ ஏந்தியாடி
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : கலைகளை வழங்கும் அமுத தாரைகள் கொண்ட சந்திரனும், வன்னி, ஊமத்த மலர், பாம்பு இவற்றையும் கலந்து பொருந்த வைத்து, முலையரசன் மகளாகிய உமாதேவி கண்டு மகிழவும், தேவர்கள் தொழுது வணங்கவும், மொந்தை, தக்கை ஆகிய கருவிகள் ஒலிக்கப் பூதகணங்களும் பேய்க் கணங்களும் சூழ, நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரியும் ஈசன், விளங்குவது முதுகுன்றம்.

575. சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள்
தொல்லரா நல் லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம்
தாளிணைந்து ஐம் புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு
அறம் பொருள்இன் பம்வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : சுழிகளை உடைய கங்கையும், தொய்ந்து சிதைந்த சந்திரனும், இயல்பான விடத்தைத் தன்னகத்தே உடைய தொன்மையான அரவத்தையும், நல்ல மணம் கமழும் கொன்றை மலரையும் நெருக்கமாகக் கலந்து பொருந்துமாறு சென்னியின் வைத்தவன் ஈசன். சனகாதி முனிவர்கள், சைவத் திருக்கோலம் பூண்டவர்களாய், கால்களைப் பத்மாசனத்தில் பாங்கில் பொருத்தி ஐம்புலன்களை அடக்கித் திரியும் மனத்தைத் தடுத்து நிறுத்தி, ஒருமுகப் படுத்தி இருக்க, அவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு எனும் பொருள்களை உணர்த்தியவனாகிய முக்கண்ணுடைய ஆதி முதல்வன், மேவி இருப்பது முதுகுன்றம்.

576. மயங்குமாயம் வல்லராகி
வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனாய
இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன்
புணர்முலை மாது உமையாள்
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : மயக்கத்தை உண்டாக்கும் மாயையில் வல்லவர்களாய், ஆகாயத்திலும் நீரிலும் இயங்கும் தோளைப் புழங்க நடனத்தின் வாயிலாக நெரித்து, உமா தேவியோடு விளங்கும் ஈசன், முனிவர் பெருமக்கள் போற்றித் துதிக்க விளங்குவது முதுகுன்றம்.

577. ஞாலம் உண்ட மாலுமற்றை
நான்முகனும் மறியாக்
கோலம் அண்டர் சிந்தை மலரால்
ஆயினும்கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம்
இøச்ய எப்போ தும்ஏத்தும்
மூலமுண்ட நீற்றர் வாயாள்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : உலகத்தை உண்டு பாதுகாத்து வெளியே உமிழ்ந்த திருமாலும், மற்றும் பிரமனும் தேடியும் அவர்களுக்குப் புலப்படாதவாறு ஈசன் இருந்தனர். ஆயினும், அடியவர்கள், கொய்த நறுமணம் கமழும் தாமரை மலர்களால் மாலை தொடுத்துத் திருவைந்தெழுத்து ஓதி மனம் பொருந்துமாறு ஏத்தித் திருநீறு தரித்தவர்தம் திருவாயிலிருந்து எழும் மந்திர வடிவாக விளங்குபவன் பரமன். அப் பெருமான் மேவி விளங்குவது முதுகுன்றம்.

578. உறிகொள் கையர் சீவரத்தர்
உண்டு உமல்மிண் டர்சொல்லை
நெறிகள் என்ன நினைவுறாதே
நித்தலும் கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப்
பொங்குவிடத் தையுண்ட
முறிகொள் மேனி மங்கைபங்கன்
மேயது மு துகுன்றே.

தெளிவுரை : குண்டிகையைக் கையில் கொண்டவராயும், காவியுடையை உடையவராகவும், உடல்வன்மைய ராயும் உடையவர்கள் சொல்லை நன்னெறி பயப்பனவாகக் கொள்ளாது, ஈசனை நாள்தோறும் தொழுது போற்றுமின். மரக்கலம் செலுத்தப்படும் கடலில் தோன்றிய நஞ்சை உண்ட தளீர் போன்ற திருமேனியுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டவனும், மானை ஏந்தும் கரத்தை உடையவனும் ஆகிய அப்பெருமான் மேவி இருப்பது முதுகுன்றம்.

579. மொய்த்து வானோர் பல்கணங்கள்
வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமை என்னும்
பிரமபுரத் தலைவன்

தெளிவுரை : வானோர்கள் மற்றும் பல கணத்தவர்களும் வணங்கும் பெருமை மிக்கது முதுகுன்றம். பித்தர் போன்று சிவபோதம் வயப்படும் திருக்கோலம் பெருமையைத் தர வல்லது. (இறுதி இரு வரிகள் கிடைக்கவில்லை.)

திருச்சிற்றம்பலம்

54. திருவோத்தூர் (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

580. பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தா தார்இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளிமழு வாள்அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே.

தெளிவுரை : பூசைக்கு ஏற்ற மலர்களைத் தேர்ந்து அதனைக் கொண்டு உம்முடைய பொன் போன்ற திருவடியைப் போற்றி வணங்காதவர் யாண்டும் இல்லை. ஒளிமிக்க கூர்மையான மழுப் படையை, அழகிய கரத்திந் ஏந்தி, ஓத்தூரில் விளங்கி நடம் புரியும் கூத்தப் பெருமானே ! உமது அருள் குணத்தை நினைக்குந்தோறும் மனம் மகிழும்.

581. இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மான்உரி
உடையீ ரேஉம்மை ஏத்ததும் ஓத்தூர்ச்
சடையீ ரேஉம் தாளே.

தெளிவுரை : உமாதேவியை உடனாகக் கொண்டு, புள்ளிமான் தோலை உடையாகத் தரித்து, விளங்கும் சடையை உடையவரே ! ஓத்தூரில் உமது திருவடியை ஏத்துதும்.

582. உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீர் அல்குல்ஓர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி ஓத்தூர்க்
கள்வீ ரேஉம காதலே.

தெளிவுரை : அடிவேரைப் போன்று நெஞ்சில் பழிப்புடையவர்களின் திறனையும் அறியக் கூடியவர், அரையில் கோவணம் கொண்டு, வாழைக் கனியில் தேன் சொரியும் ஓத்தூரில் விளங்கும் ஈசர், கள்ளர்க்குக் கள்ளர் ஆதலை வியந்தவாறு.

583. தோட்டீ ரேதுத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீ ரேஅடி யார்வினை
ஓட்டீ ரேஉம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீ ரேஅருள் நல்குமே.

தெளிவுரை : கட்டழகு உடையவரே ! படம் கொண்ட ஐந்து தலை நாகத்தை ஆட்டுவிப்பவரே ! அடியவர்களுடைய வினைகளை ஓட்டுவிப்பவரே ! ஓத்தூர் என்னும் நகரில் விளங்குபவரே ! உம்மை ஏத்துதும் ! அருள் நல்குவீராக !

584. குழையார் காதீர் கொடுமழு வாள்படை
உழைஆள் வீர்திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவார்
அழையா மேஅருள் நல்குமே.

தெளிவுரை : குழையை ஆபரணமாக உடைய செவியை உடையீர் ! கொடுமையான மழு வெனும் கூர்மையான வாள்படையும் பக்கத்தில் கொண்டு இருப்பீர் ! திருவோத்தூரில் விளங்கி அருளாட்சி புரிவீர் ! குற்றங்கள் இன்றி உம்மைப் போற்றிப் பாடும் பெருமக்களுக்கும், பக்திப் பெருக்கால் மனங்கசிந்து உருகித் தம் நிலை மறந்து ஆடும் பேரன்பர்களுக்கும், அவர்கள் அழைக்காமலே அவர்களுக்கு முன்னின்று அருள் புரிவீராக.

585. மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீர்என்று
உட்கா தார்உள ரோதிரு ஓத்தூர்
நக்கீ ரேஅருள் நல்குமே.

தெளிவுரை : திருஓத்தூரில் மேவி மகிழ்ந்திருக்கும் பெருமானே ! நீவிர், பிரம கபாலம் ஏந்திப் பலியேற்ற காலத்தில், நும் அடியவர்கள் அச்ச உணர்வைப் பெறாதவர்களாய் உளரோ ! அருள் நல்குவீராக !

586. தாதுஆர் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்புகழந்து
ஓதா தார்உள ரோதிரு ஓத்தூர்
ஆதீரே அருள் நல்குமே.

தெளிவுரை : மகரந்தத் தாதுகள் கொண்ட கொன்றை மலரை ஒளியுடைய முடியில் சூடிய நாதனே என்று தும்மைப் புகழ்ந்து போற்றாதவர்களும் உளரோ ! திருவோத்தூரில் விளங்கும் ஆதிப் பொருளே, அருள் நல்குவீராக !

587. என்றான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல்வினை ஏகுமே.

தெளிவுரை : கயிலை மலையை எளிமையாகவும், தன் ஆற்றலுக்குக் குறைந்ததாகவும் கருதிய இராவணனை விரலால் வென்றவர் பரமன். இறைவன் திருவடியை ஒன்றி வணங்காத  மூன்று அசுரர்களையும், கோட்டை மதில்களையும் எய்தவன் விளங்குவது ஓத்தூர் என்று மொழிந்தவர்பால் மேவிய வினை தீரும்.

588. நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலும் திசையெலாம்
ஒன்றாய் ஒள்ளெரி யாய்மிக ஓத்தூர்
நின்றீ ரேஉமை நேடியே.

தெளிவுரை : ஓத்தூரின்கண் ஒருங்கு திரண்ட சோதி வடிவாக நின்று விளங்கிய உம்மைத் தேடி, நான் மறையாளனாகிய பிரமனும், திருமாலும் திசையெலாம் சென்றார் போலும் ! நான்முகனும், திருமாலும் திசையெலாம் சென்று தேடியும் காண்கிலர் என்றவாறு.

589. கார்அ மண்கலிங் கத்துவர் ஆடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓர்அம் பால்எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீர்அ வன்கழல் சேர்மினே.

தெளிவுரை : சமணர், சாக்கியர்தம் சொற்களைப் பொருட்டாகக் கொள்ளன்மின். ஒரே அம்பைச் செலுத்தி முப்புரம் எரித்தவன் உறையும் ஓத்தூரில் மேவும் பெருமானுடைய சீர்மை மிகும் கழல் பணிந்து மகிழ்வீராக.

590. குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

தெளிவுரை : திருவோத்தூரில் ஆண் பனை, காய்களை ஈன்று பெண் பனையாயின. ஆங்கு, கொன்றை மலர் சூடிய அடிகளைப் பெருமை கெழுமிய புகலியின் ஞானசம்பந்தன் போற்றிச் செல்லிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதுபவர்கள் வினை நீங்கும்.

திருச்சிற்றம்பலம்

55. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

591. ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டுஉமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றியின்
மாறி லாமணி கண்டரே.

தெளிவுரை : கடலில் நன்றாக ஊறிக் கிளம்பிய நஞ்சினை உட்கொண்டு உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு திருநீற்றைத் திருமேனியில் திகழப் பூசியணிந்து, வயல்களில் வளம் பெருக்கும் அழகிய திருமாற்பேற்றில், இவருக்கு ஒப்பாக வேறு யாரையும் கூற முடியாதவாறு தனிப்பெரும் தலைவராக விளங்குபவர் மணிகண்டர். (மணிகண்டர்  திருத்தலத்தில் மேவும் ஈசனார் திருநாமம்).

592. தொடைஆர் மாமலர் கொண்டுஇரு போதுஉம்மை
அடைவா ராம்அடி கள்ளென
மடைஆர் நீர்மல்கு மன்னிய மாற்பேறு
உடையீ ரேஉமை உள்கியே.

தெளிவுரை : வயல்களின் மடைகளில் நீர் மல்கும் மாற்பேற்றில் வீற்றிருக்கும் பெருமானே ! உம்மை நெஞ்சார நினைத்து, மலர் மாலைகள் கொண்டு அடியவர்கள் இரு வேளைகளிலும் சாற்றி வழிபடுகின்றனர்.

593. பைஆ ரும்அர வம்கொடு வாட்டிய
கையான் என்று வணங்குவர்
மைஆர் நஞ்சுண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.

தெளிவுரை : திருமாற்பேற்றில் இருக்கின்ற ஐயனே ! படத்தைப் பொருந்திய அரவத்தை ஆட்டும் கரத்தை உடையவன் என்றும் நின்னை நஞ்சு உண்ட பெருமான் என்றும், நின் அடியார்கள் வணங்குவர்.

594. மால மாமலர் கொண்டு சரண்என்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.

தெளிவுரை : நீலகண்டர் என்னும் திருநாமம் தாங்கிய பெருமானே ! மாற்பேற்றில் விளங்குபவனே ! திருமால் நின்னை வழிபாடு செய்ததைத் தொடர்ந்து மேலானவர்கள் மிகுதியான சிறந்த மலர்களைக் கொண்டு சரணம் அடைந்து வழிபடுவார்கள்.

595. மாறி லாமணி யேஎன்று வானவர்
ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வும்திரு மாற்பேற்றின்
நீற னேஎன்று நின்னையே.

தெளிவுரை : அன்பு நிலவும் திருமாற்பேற்றின் அங்கமாக உடையவனே என்றும், திருநீற்றினை உடையவனே என்றும், ஒப்புமை இல்லாத சோதியாக ஒளிவிடும் மணியே என்றும், தாம் நற்கதி அடைய வேண்டும் என்றும் வானவர்கள் நின்னை ஏத்தி மகிழ்வார்கள்.

596. உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்
திரை ஆர்பாலியின் தென்கரை மாற்பேற்று
அரையா னேஅருள் நல்கிடே.

தெளிவுரை : பாலாற்றின் தென்கரையில் விளங்கும் மாற்பேற்றின் அரசனே ! எல்லா நாட்களிலும் அடியவர்கள் நின்னைப் போற்றிப் புகழ்ந்து மனம் ஒன்றி வணங்குகினறனர். அருள் நல்குக.

597. அரசு அளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தஎம் மாற்பேற்று அடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

தெளிவுரை : இலங்கையின் வேந்தனாகிய இராவணனின் புகழ் கெடுமாறு அவனை விரலால் தண்டித்துப் பின்னர் அவனுக்கு, மனம் அடங்கித் துதி செய்ய வரம் கொடுத்த மாற்பேற்று அடிகளை வணங்கிப் போற்றிடப் பாவம் தீரும்.

598. இருவர் தேவரும் தேடித் திரிந்துஇனி
ஒருவ ரால்அறி வொண்ணிலன்
மருபு நீளகடில் மாற்பேற்று அடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் எங்குத் தேடியும் காண்கிலராய், இனி யாராலும் அறியவொண்ணாதவன் எனத் தெளிவுற்று மாற்பேற்றில் விளங்கும் அடிகளின் திருவடியை மருவி வணங்கினர். அப்பெருமானைப் பரவுபவர் வினை நீங்கும்.

599. தூசு போர்த்துஉழல் வார்கையில் துற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்திரு மாற்பேற்றின்
ஈசன் என்றுஎடுத்து ஏத்துமே.

தெளிவுரை : ஆடையைப் போர்த்தும், உணவைக் கையில் ஏந்தியும், உழலும் நீசர்களாகிய கீழ்மக்களின் சொற்களைக் கொள்ளன்மின். புகழ் மிக்க திருமாற்பேற்றின் ஈசனைப் போற்றித் துதிப்பீராக.

600. மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற்று அடிகளை
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வே வினை பாறுமே.

தெளிவுரை : திருமாலுடன், சந்திரனும் சிறப்பாக வழிபட்ட மாற்பேற்று அடிகளப் போற்றி ஞான சம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினை நீங்கப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

56. திருப்பாற்றுறை (அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

601. காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரார் ஆதி முதல்வரே.

தெளிவுரை : உலகத்தவர்கள் நாள்தோறும் வணங்கிப் பரவும் ஆதிமூலநாதராகிய பாற்றுறையார் கார்காலத்தில் விளங்கும் கொன்றை மலரைத் திருமுடியில் தரித்தவர். அவர் அடியவரின் சிறப்பான சிந்தையைத் தம்பால் சென்று பதியுமாறு செய்தவர்.

602. நல்லா ரும்மவர் தீயர் எனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்தலைச் செல்வர்எம் பாற்றுறை
எல்லா ரும்தொழும் ஈசரே.

தெளிவுரை : பற்கள் கொண்ட வெண்மையான தலையோட்டை (பிரம கபாலம்) உடைய செல்வராகிய எம்பாற்றுறை ஈசர் தேவர், முனிவர், ஞானிகள், சித்தர்கள் முதலான் எல்லா சீவர்களும் தொழ வல்லவர். அவர் தீயைக் கரத்தில் ஏந்தியவர். இவர் நல்லவராய் அடியவர்தம் உள்ளத்தில் திகழந்து மகிழ்வினை நல்கிப் பக்திப் பெருக்கால் மொழியப்படும் தோத்திரச் சொல் மலர்களைச் சூடியவர் ஆயினார்.

603. விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்துஎன் எழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளும் உறைவரே.

தெளிவுரை : எண்ணத்தில் புகுந்து என் எழிலைக் கவர்ந்து செல்லலானார். அவர், வண்டுகள் இசைப் பாடல்களை ஓதும் பாற்றுறையுள் நாள்தோறும் உறைபவரே.

604. பூவும் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லார் எழில்எய்தார்
பாவம் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓ என் சிந்தை ஒருவரே.

தெளிவுரை : பூவும் திங்களும் முடியில் புனைந்த ஈசர், பகைவர்களின் முப்புரங்களை அம்பினால் எய்து அழத்தார். அப்பெருமான், பாவங்கள் தீர்க்கும், தீர்த்த மகிமையுடைய பாற்றுறையில் விளங்குபவர். என் சிந்தை அவர் ஒருவரையே பற்றி நிற்கும் ஓ வினாவிளி.

605. மாகம் தோய்மதி சூடி மகிழ்ந்துஎனது
ஆகம் பொன்னிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

தெளிவுரை : வானத்தில் தோய்ந்து விளங்கும் சந்திரனைச் சூடி மகிழ்ந்து, எனது உடலைப் பசலை கொள்ளுமாறு பொன் வண்ணம் ஆக்கிய ஈசனார், ஒர பாகத்தில் பெண்ணை உடையவராய், நாகத்தை அணியாகப் பூண்டவராய் பாற்றுறை மேவிய நலத்தினர்.

606. போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்துஎன் நலங்கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.

தெளிவுரை : பொன் போன்று விளங்குகின்ற கொன்றை மலரை முடியில் புனைந்த நாதர், என் உள்ளத்தைக் கவர்ந்து, எனது மேனியைத் தளர்ச்சியுறுமாறு செய்தார். அவர் பாதத்தைத் திருத்தொண்டர்கள் தொழுது போற்ற, வேதப் பொருளை உணர்த்தும் விகிர்தராய்ப் பாற்றுறையில் விளங்குபவர்.

607. வாடல் வெண்தலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆட நாகம் அசைத்தாரே.

தெளிவுரை : ஈசர், மண்டை ஓடுகளை மாலையாகச் சூடி, பெரிய இடபத்தை வாகனமாகக் கொண்டு, வண்டுகள் பண்ணிசைக்கும் பாற்றுறையில் ஆடுகின்ற நாகத்தைப் பூண்டு என் மனத்தை அசைத்தவர்.

608. வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்துஎன் எழில்கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டர்எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

தெளிவுரை : வெம்மை தரும் நெருப்பை ஒத்த சிவந்த மேனியர்; வெண்மையான திருநீற்றை அணிந்தவர்; கடல் நஞ்சைக் கண்டத்தில் வைத்தவர்; முல்லை சூடிப் பாற்றுறை மேவியவர் ஈசர். அவர் என் உள்ளத்தைக் கவர்ந்து என் எழிலைக் கொண்டவராவர்.

609. ஏனம் அன்னமும் ஆனவ ருக்குஎரி
ஆன வண்ணத்துஎம் அண்ணலார்
பானல் அம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

தெளிவுரை : பன்றியும் அன்னமும் ஆக வடிவம் கொண்டு தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்குத் தீப்பிழம்பாகத் தேன்றி, காட்சி நல்கிய அண்ணலார், உயர்ந்த வெண்பிறை சூடிய மைந்தராய்ப் பானல் என்னும் மலர்கள் நிறைந்த பாற்றுறையில் விளங்குபவர்.

610. வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்துஎன் நன்னலம் வெளவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாம்ஓர் மணாளரே.

தெளிவுரை : திருநீறு புனைந்தவர்; சூலப்படையுடையவர்; மார்பில் முப்புரீநூல் திகழ விளங்குபவர்; பசுமையான மாதவி மலர்கள் சூழும் பாற்றுறையில் மேவும் அழகர். அவரே யான் ஓர்ந்து கொண்ட மணாளர். அவர் என் நெஞ்சுள் புகுந்து என் நலத்தைக் கவர்ந்து கொண்டார்.

611. பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தனது இன்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

தெளிவுரை : பத்தர்கள் விளங்கும் பாற்றுறை மேவிய ஆயிரம் திருநாமம் கொண்ட ஈசனைப் போற்றிப் பக்திப் பெருக்கில் திகழும் ஞானசம்பந்தர் பாடிய இனிய தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை, அனைவரும் பாடி, பரமனைத் துதிக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

57. திருவேற்காடு (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

612. ஒள்ளிது உள்ளக் கதிக்காம் இவன்ஒளி
வெள்ளி யான்உறை வேற்காடு
உள்ளி யார்உய்ந் தார்இல் உலகினில்
தெள்ளி யார்அவர் தேவரே.

தெளிவுரை : உயர்ந்த பொருளை நினைப்பவர்களுக்கு நல்ல கதியைத் தரும் ஈசன், வெள்ளியங்கிரியில் ஒளி வடிவாக உயர்ந்து இருப்பவன். அப்பெருமான் உறைவது வேற்காடு. அவனை நினைந்த பெரியோர்கள் உயர்ந்தார்கள். அன்னோர் உலகில் தெளிந்தவர்கள் ஆவர். அவர்கள் தேவர்கள்.

613. ஆடல்நாகம் அசைத்து அளவு இல்லதோர்
வேடம் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தார்இல் உலகினில்
சேடர் ஆகிய செல்வரே.

தெளிவுரை : தானாகவே ஆடும் நாகத்தைத் தன் இச்சைக்கேற்ப அசைத்து, அளவற்ற வடிவங்களைக் கொண்டுள்ளவன் வேற்காட்டில் மேவும் பரமன். இவ் உலகில் அப் பெருமானைப் பாடித் துதித்துப் பணிபவர்கள், பெருமை மிக்க செல்வம் உற்றவர் ஆவர்.

614. பூதம் பாடப் புறங்காட்டு இடைஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

தெளிவுரை : பூத கணங்கள் பாடவும், அதற்கு ஏற்ப இடுகாட்டின் இடையில் ஆடுபவனாகிய ஈசன், வேதத்தில் வல்லவன். அப் பெருமான் வேற்காட்டில்  விளங்க, மலரும் சந்தனமும் அகிலும் கொண்டு வழிபடுபவர்களுக்குத் துன்பம் இல்லை.

615. ஆழ்க டல்எனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தால்பணிந்து ஏத்திடப்
பாழ்ப டும்மவர் பாவமே.

தெளிவுரை : நதிகளைத் தன்னகத்தே சேர்த்துக் கொள்ளும் ஆழ்கடலைப் போன்று, கங்கையைத் தன் சடையில் கரந்து கொண்டவன் ஈசன். நீண்டு வீழும் சடையையுடைய அப்பெருமான், வேற்காட்டில் வீற்றிருக்கச் செருக்கு அற்ற மனத்தினராய்ப் பணிந்து ஏத்தும் அடியவர்களின் பாவமானது விலகும்.

616. காட்டி னாலும் அயர்த்திட அக் காலனை
வீட்டி னான்உறை வேற்காடு
பாட்டி னால் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஓல்லையே.

தெளிவுரை : மார்கண்டேயரின் உயிரைக் கவரச் சென்ற காலத்தில், ஈசன் முழு முதல்வன் எனப் புகலும் பாங்கில், பலவாறு செயல்கள் வாயிலாகப் புலப்புடுத்தியும் அதனை ஏற்காது, வன்மை நிகழ்த்திய காலனை வீழ்த்தியவனான் ஈசன் உறைவது வேற்காடு. ஆங்கு மேவிய அப்பெருமானைத் துதிப் பாடல்களால் பாடிப் பணிந்து வழிபடுபவர்களுடைய வினை விரைவில் விலகும்.

617. தோலி னால்உடை மேவவல் லான்சுடர்
வேலி னால்உறை வேற்காடு
நூலி னாற் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.

தெளிவுரை :  தோலை உடையாகக் கொண்டு சுடர் வேல் பொருந்த உறையும் வேற்காட்டில் மேவும் வேற்காட்டு நாதர், அம்பிகை வேற்கண்ணி அம்மை, தல விருட்சம் வேல மரம் ஆகிய சிறப்புக்களும் சுடர் வேலினால் உறைவேற்காடு என உணர்த்தப்பெற்றது.

618. மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னான்உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
சொல்ல வல்லவர் தீர்க்கமே.

தெளிவுரை : வலிமை பொருந்திய மூன்று மதில்கள் மாயுமாறு எய்த ஒப்பற்ற மேருமலையை வில்லாகக் கொண்டவன் உறைவது வேற்காடு. அப்பெருமானைக் குறைவில்லாத மனத்தினராய்ப் போற்றித் துதிப்பவர்களும், கண்டு தரிசிப்பவர்களும், அறிவும் தெளிவும் கொண்டு நீடு வாழ்வார்கள்.

619. மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.

தெளிவுரை : இளநகை புரியும் தன்மையில் மெல்லிய கீற்றுடைய வெண்மையான சந்திரனைச் சூடும் முடியுடைய வீரம் பொருந்திய ஈசன், மேவி விளங்கும் வேற்காட்டில் அன்புடன் வழிபாடு செய்பவர்கள் அப்பெருமான் கழலைச் சேர்வது திண்ணம்.

620. பரக்கி னார்படு வெண்தலை யில்பலி
விரக்கி னான்உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட் டான்இறை
நெருக்கி னானை நினைமினே.

தெளிவுரை : ஈசன் கபாலம் ஏந்திப் பலி கொண்டார். அப் பெருமான் உறையும் ஊர் வேற்காடு. கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய ஆண்மை கெடுமாறு ஈசனை நினைத்துப் போற்றுமின்.

621. மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லான் உறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாஎழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.

தெளிவுரை : மாற்றம் இல்லாத பிரமனும் திருமாலும் காணுதற்கு அரியவனாய், வாகையாய் நின்ற ஈசன் உறைகின்ற வேற்காட்டில், ஈறிலா மொழியாக விளங்கும் தோத்திரங்களை மொழிபவர்களுக்கு எவ்விதமான குற்றஙகளும் உண்டாகாது.

622. விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

தெளிவுரை : திருவேற்காட்டில் ஈசனைக் கண்டு தொழுது திருவடியைப் போற்றி ஞானசம்பந்தர் பாடிய இத் திருப்பதிகத்தை மனத்திற் கொண்டு மகிழ்ந்து பாட எல்லா மேன்மைகளும் விளையும்

திருச்சிற்றம்பலம்

58. திருக்கரவீரம் (அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

623. அரியு நம்வினை உள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டம்
கரிய வன்திக ழும்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.

தெளிவுரை : அழகிய சுடர்விடும் மணியைப் போன்று கரிய கண்டத்தையுடையவனாகிய ஈசன், திகழந்து ஓங்கும் கரவீரத்தில் விளங்குகின்றான். பெரியோனாகிய அப்பெருமான் திருக்கழலைப் போற்றித் துதிக்க, வினைகள் யாவும் சிதைந் அழியும்; குற்றங்களும் அறுந்து ஒழியும்.

624. தங்கு மோவிளை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுஉடன் சூடிய
கங்கை யான்திக ழும்கர வீரத்துஎம்
சங்க ரன்கழல் சாரவே.

தெளிவுரை : தாழ்ந்து விளங்கும் சடையின்மேல் திங்களோடு கங்கையைத் தரித்தவனாகிய ஈசன் திகழும் கரவீரத்தில், எம் சங்கரனின் திருக்கழலைச் சார்ந்திருக்கு, வினையானது தங்கித் துன்புறுத்துமோ. (வினையானது நீங்கும் என்பது குறிப்பு).

625. ஏதம் வந்தடை யாஇனி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லால்திக ழும்கர வீரத்துஎம்
நாதன் பாத நணுகவே.

தெளிவுரை : பூத கணங்களைப் படையாகக் கொண்ட விருப்பத்தால் திகழும் கரவீரத்தில் விளங்கும் நாதன் பாதத்தை நண்ணி வணங்கக் குற்றங்கள் எதுவும் சாராது; இனிமேல் நடப்பது நல்லனவாகவே விளங்கும்.

626. பறையு நம்வினை உள்ளன பாழ்பட
மறையு மாமணி போல் கண்டம்
கறைய வன்திக ழும்கர வீரத்துஎம்
இறைய வன்கழல் ஏத்தவே.

தெளிவுரை : ஒளிபொருந்திய மணியைப் போன்ற கறையை உடைய கண்டத்தினனாகிய ஈசன் திகழும் கரவீரத்தில், எமது இறைவனின் திருக்கழலை ஏத்தி வழிபட, முன் செய்த வினையும் கெடும். உள்ள வினையும் பாழ்பட்டு மறையும்.

627. பண்ணின்ஆர்மறை பாடலன் ஆடலன்
விண்ணில் ஆர்மதில் எய்தமுக்
கண்ணி னாள்உறை யும்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.

தெளிவுரை : பண்களில் சிறந்து விளங்குகின்ற சுருதி மேவும், வேதத்தில் திளைத்து, ஆடலிலும் பாடலிலும் மேலானவனாகிய ஈசன்; ஆகாயத்தில் ஆரவாரித்து எழுந்த முப்புரங்களை எரித்துப் பொடிபடுத்திய முக்கண்ணுடைய செல்வன் உறையும் கரவீரத்தை நண்ணி, அப் பெருமானை வணங்குபவர்களின் வினையானது அழியும்.

628. நிழலின் ஆர்மதி சூடிய நீள்சடை
அழலின் ஆரழல் ஏந்திய
கழலி னார்உறை யும்கர வீரத்தை
தொழவல் லார்க்குஇல்லை துக்கமே.

தெளிவுரை : ஒளி பொருந்திய சந்திரனைச் சிவந்த நீண்ட நெருப்பை ஒத்த சடையில் சூடிக் கரத்தில் நெருப்பை ஏந்தி, வீரக்கழல் ஒலிக்க விளங்கும் பெருமான், கரவீரத்தில் வீற்றிருக்கின்றார். அப் பெருமானைத் தொழ வல்லவர்களுக்குத் துயரம் இல்லை.

629. வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்ட னார்அழல் போல்ஒளிர்
கண்ட னார்உறை யும்கர வீரத்துத்
தொண்டர் மேல்துயர் தூரமே.

தெளிவுரை : தீயவர்களாகிய முப்புராரிகளின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய கடவுள், நெருப்பைப் போல் சுயம் பிரகாசம் உடைய கழுத்தை உடையவராய், உறைகின்ற கரவீரத்தில் தொண்டு செய்து போற்றி வாழும் அடியவர்களுக்குத் துயரம் இல்லை.

630. புனல்இ லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவல் ஆண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்குஇடர் இல்லையே.

தெளிவுரை : கடல் சூழ்ந்த இலங்கையர் கோனாகிய இராவணனுடைய பத்துத் தலைகளின் வலிமையை அழித்து, அவ் அரக்கனுடைய சினத்தால் எழுந்த செருக்கினையும் ஒழித்து விளங்குபவன் ஈசன். அப்பெருமான், தன்னைச் சினந்தவர்களுக்குக் கனலாக விளங்குபவன். அவன் உறையும் இடமாகிய கரவீரத்தினை, நினைத்து ஏத்த வல்லார்க்கு, இடர் இல்லை.

631. வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திரள் ஆகிய
கள்ளத் தான்உறை யும்கர வீரத்தை
உள்ளத் தான்வினை ஓயுமே.

தெளிவுரை : நீரில் விளங்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தெளிவடைந்து ஏத்துமாறு, தீப்பிழம்பாகிய ஈசன் உறையும் கரவீரத்தை நினைத்து ஏத்து, வினை செயலற்று ஒடுங்கி நலியும்.

632. செடிஅ மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்து
அடிய வர்க்கில்லை அல்லவே.

தெளிவுரை : சமணர்களும் பிறரும் கூறும் கொடிய உரைகளைக் கொள்ள வேண்டாம். சிறப்பும் நறுமணமும் கமழும் ஈசன் உறைகின்ற கரவீரத்தில் மேவும் திருத்தொண்டர்களுக்கு அல்லல் என்பது இல்லை.

633. வீடி லான்விளங் கும்கர வீரத்துஎம்
சேடன் மேல்கசி வால்தமிழ்
நாடு ஞானசம் பந்தன் சொல்லிலை
பாடு வார்க்குஇல்லை பாவமே.

தெளிவுரை : எக்காலத்திலும் வீழ்ச்சியோடும், அழிதலும் அற்றவனாய், விளங்கும் கரவீரத்தில் பெருமையோடு வீற்றிருக்கும் எம் ஈசன் மேல், அன்பு மீதூரத் தமிழைப் போற்றும் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்களுக்குப் பாவம் இல்லை.

திருச்சிற்றம்பலம்

59. திருத்தூங்கானை மடம் (பெண்ணாகடம்) (அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

634. ஒடுங்கும் பிணிபிறவி கேடென்று இவை
உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீர் எல்லாம்
அடிகள் அடிநிழற்கீழ் ஆளாம்வண்ணம்
கிடங்கும் மதிலும் கலாவிஎங்கும்
கெழுமனை கள்தோறு மறையின்னொலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : உடலை ஒடுக்கும் பிணி, பிறவி, கேடுகள் என உடைய அவலம் பொருந்திய வாழ்க்கையி லிருந்து விடுபவ வேண்டும் என்று கருதி, அதற்குரிய மார்க்கமாவது தவம் புரிதலே என்று தீர்மானித்து, அவ் இடத்தைத் தேடிச் செல்பவர்களே ! ஈசன் திருவடிக்கீழ் அடியவர் ஆகும் வண்ணம், அகழியும் மதில்களும் சூழ்மனைகள் தோறும் வேதத்தின் ஒலியானது எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும் கடந்தை என்னும் பதியில் விளங்கும் தூங்கானை மாடத்தில் மேவியருளும் ஈசனைத் தோழுமின்கள்.

635. பிணிதீர சாதல் பிறத்தல்இவை
பிரியப் பிரியாத பேரின்பத்தோடு
அணி நீர மேலுல கம்எய்தலுறில்
அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணி நீல கண்டம் உடையபிரான்
மலைமக ளும் தானு மகிழ்ந்து வாயும்
துணிநீர்க் கடந்தைத் தடங் கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பிணிக்கப்படும் நோய் எனப்படும் இறத்தலும் பிறத்தலும் ஆகியவற்றை ஒழித்து எக்காலத்தும் பிரியாத பேரின்பத்தோடு அழகு பொருந்திய உயர்ந்த உலகத்தை அடைய வேண்டும் எனக் கருதுவீராயின், அதற்கு யாதொரு குறைபாடும் இல்லை. அறிவீராக ! இடப வாகனத்தில் விளங்கும் நீலகண்டப் பெருமான். மலை மகளாகிய உமாதேவியும் தானும் மகிழந்து வீற்றிருக்கும் தெளிந்த பாங்குடைய கடந்தை நகரின் பெரிய கோயிலாக விளங்கும் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்.

636. சாநாளும் வாழ்நாளும் தோற்றம்இவை
சலிப்பாய் வாழ்க்கை ஒழியத்தவம்
ஆமாறு அறியாது அலமந்து நீர்
அயர்ந்தும் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்கு கொன்றை
புனல்பொ திந்தபுன் சடையினான் உறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : இறக்கின்ற நாள், வாழ்கின்ற நாள், பிறக்கின்ற தன்மை இவைகளால் சலிப்புற்ற வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்குரிய தவமானது எவ்வகையில் கைகூடும் என அறியாது வருத்தித் தளர்வுறல் வேண்டாம். அதற்கு யாதொரு குறையும் இல்லை. இடப வாகனத்தை உடையவனும், மாட்சிமை மிக்க கொன்றை மாலை சூடியவனும், கங்கை தரித்த சடையுடையவனும் உறையும் தூய்மையான மாண்பின் மிக்க கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் நாடித் தொழுமின்கள்.

637. ஊன்றும் பிணிபிறவி கேடென்றுஇவை
உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லா
மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர்
மூன்று மதில்எய்த மூவாச் சிலை
முதல்வர்க்கு இடம்போலு மதில்தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பிணியை நிலைப்படுத்தும் பிறவியானது கேடென்று கருதி, அதனை உடைய வாழ்க்கையிலிருந்து விடுபட வேண்டும் எனக் கொண்டு, தவத்தை மேற்கொள்ள வேண்டும் என்னும் நெஞ்சினராய், மயக்கத்தில் நிற்பவர்களே ! நீவிர் அனைவரும் மனத்தில் மாறுபாடு கொண்டு உலகில் மயங்காது, மூன்று மதிலகளை எரித்து அழித்த மூப்படையாத மேருமலையை வில்லாகக் கொண்ட முதல்வர்க்கு உரிய இடம் என்று, மேகங்கள் தொழும் கொடிகளையுடைய கடந்தை நகரில், தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள், ஆங்கு வீற்றிருக்கும் இறைவன் நீங்கள் கருதியதைக் கைகூடுமாறு நல்குவர்.

638. மயல்தீர்மை இல்லாத தோற்றம்மிவை
மரணத்தொடு ஒத்துஅழிவு மாறாதலால்
வியல்தீர மேலுலகம் எய்தலுறின்
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர ஓங்கிய நாமங்களால்
ஓவாது நாளும்அடி பரவல்செய்
துயர்நீர் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : மயக்கம் தீர்வதற்கான உபாயம் யாது எனக் கருத வேண்டாம். மரணத்துடன் இம் மாயை நிலைகள் யாவும்  ஒத்து அழிந்து விடும் தன்மை உடையன. ஆதலால், உயர்ந்த உலகத்திற்குச் செல்ல வேண்டும் என்று, பலவிதமான திறத்தில் முனைப்படுதலைப் பற்றி, வேறொன்றும் கொள்ள வேண்டாம். ஈசனுடைய திருநாமங்கள் உயர்ந்த தன்மை உடையவை. அவற்றை இடைவிடாது துதித்து, உச்சரித்து, அவ் விமலனுடைய திருவடியைப் பரவி, அவன் இடமாகிய கடந்தைத் தடங்கோயில் சேர்தூங்கானை மாடம் தொழுமின்கள். அச்செயல் உமது துயரைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

639. பல் நீர்மை குன்றிச் செவி கேட்பிலா
படர்நோக் கில்கண் பவளந் நிற
நல்நீர்மை குன்றித் திரை தோலொடு
நரை தோன்றும்கால நமக்காதன்முன்
பொன்நீர்மை துன்றப் புறந்தோன்றுநற்
புனல்பொ திந்தபுன் சடையினான் உறையும்
தொல்நீர்க் கடந்தைத் தடங் கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பலவிதமான சிறப்புக்கள் குறைவுபடத் தோன்றுமாறு, செவிகளின் கேட்கும் திறம் குறையவும். கண்கள் மங்கிப் பார்க்கும் திறன் தளர்ச்சி கொண்டும் உடல் வலிமை குன்ற நரையும் திரையும் தோன்றவும், ஆகியன யாவும் மூப்பின் வலிமையால் நிகழ்கின்றது. இந்நிலைக்கு நாம் ஆளாகும் முன்னர், பொன் மயமாய்ப் பொருந்தி காட்சி நல்கும், கங்கை நீர்மல்கு கடந்தை நகரில் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.

640. இறை யூண் துகளோடு இடுக்கண் எய்தி
இழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
நிறை யூண் நெறிகருதி நின் றீர்எல்லா
நீள்கழ லேநாளு நினைமின் சென்னிப்
பிறைசூழ் அலங்கல் இலங்கு கொன்றை
பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : சிறிதமவாகிய புன்மையான உணவு கொண்டு துயரம் அடைந்து இழிவாக இருக்கும் வாழ்க்கையை ஒழித்துவிட வேண்டும் என்று முனைப்புக் கொண்டு, தவம் என்று சொல்லப்படும் பெருமை தரும் நிறைவான உணவைக் கருதி நாடும் அன்பர்காள் ! எல்லோரும் ஈசனுடைய நெடிய திருவடியை நினைமின் ! சென்னியில் பிறைச் சந்திரன் விளங்கவும், கொன்றை மலர் மாலை திகழவும், வைத்துள்ள பெருமான் பிரியாது வீற்றிருக்கும் நீர்த்துறை சூழ்ந்த கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.

641. பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
பழிப்பாய் வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூழ் இடங்கருதி நின்றீர்எல்லாம்
இறையே பிரியாது எழுந்தபோதும்
கல்சூழ் அரக்கன் கதறச் செய்தான்
காதலியும் தானும் கருதி வாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : மூப்பு, பிணி உற்ற தன்மையால் பற்கள் வீழ்ந்தும், நாவானது தளர்ச்சியுற்று வாய்ச் சொற்கள் குழறியும், மெய்யானது (தேகம்) சுருங்கி வாட்டம் கொண்டும், பிறரால் கிழம் என்று பழிக்கப்படுகின்ற இல்வாழ்க்கை ஒழிய வேண்டும் என்றும், அதற்காகத் தவம் மேற்கொள்ள வேண்டும் என்று கருதி, அதனை ஒட்டிப் பொருத்தமற்ற இடங்களில் நிற்பவர்களே ! எல்லோரும் வாருங்கள் ! சிறிதும் தாமதியாது வாருங்கள் ! ஈசன் மலையைப் பெயர்த்த அரக்கனை வதைத்து, உமா தேவியும், தானும் கருதி வாழும் பழைமையான சீரினைக் கொண்ட கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்கள் ! அது நற்கதியை அளிக்கும் என்பது குறிப்பு.

642. நோயும் பிணியும் அருந்துயரமு(ம்)
நுகருடைய வாழ்க்கை ஒழியத்தவம்
வாயு மனங்கருதி நின்றீர்எல்லா
மலர்மிசைய நான்முகனு மண்ணும் விண்ணும்
தாய அடிஅளந்தான் காணமாட்டாத்
தலைவர்க்கு இடம் போலும் தண்சோலை விண்
தோயும் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : நோயும், துயரமும் மற்றும் மனத்தைப் பிடித்துள்ள அச்சம் முதலானவைகளும் நுகரும் தன்மையுடைய இவ்வாழ்க்கை ஒழியத் தவ வழியே நன்றெனக் கருதி நிற்பவர்களே ! மலர்மிசை உடையவனாகிய நான்முகனும், பூவுலகத்தையும் தேவருலகத்தையும் உரிமையாக அளந்தவனாகிய திருமாலும், காணற்கு அரியவனாகிய தலைவர் ஈசன். அவர் விண்ணளவு ஓங்கி வளர்ந்த சோலைகளையுடைய கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடத்தில் வீற்றிருக்க எல்லோரும் தொழுமின்கள். அவர் உமக்கு நற்கதி அளிப்பவர் என்பது குறிப்பு.

643. பகடூர் பசிநலிய நோய்வருதலால்
பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரு
மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
திருந்திழை யும்தானும் பொருந்திவாழும்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.

தெளிவுரை : பசி மிக்க அடைந்து நலிய, நோய் தாக்கி வருதலால் பழியும் கொள்ளும் இவ்வாழ்க்கை ஒழிய வேண்டும் என்று எண்ணி, அதற்காகச் சிகை நீக்கியும், துவராடையும் கொண்டவர்கள் சொல்பவை பொய்ம் மொழிகளாகும். அவற்றை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டாம். உமாதேவியோடு தானும் பொருந்தி குற்றங்களைத் தீர்க்கும் கடந்தைத் தடங்கோயில் சேர்தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் ஈசனைத் தொழுமின்கள். அதுவே நற்கதி தரவல்லது.

644. மண்ணார் முழவதிரு மாடவீதி
வயற்காழி ஞானசம் பந்தனல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
பிறை உரிஞ்சும் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்தும்
கருத்துணரக் கற்றாரும் கேட்டாரும் போய்
விண்ணோர் உலகத்து மேவிவாழும்
விதியது வேஆகும் வினை மாயுமே.

தெளிவுரை : வீதிகள்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவதால் உண்டாகும் முழவம் அதிருமாறு ஒலிக்க, வயல்கள் பெருகும் காழியின் ஞானசம்பந்தன், நல்லருளும் வளப்பமும் மிகுந்த பெண்ணாடகத்துப் பெருங்கோயில் சேர் வானத்தை எட்டும் அளவு உயர்ந்து ஓங்கிய தூங்கானை மாடத்தில் மேவிய ஈசனைப் போற்றி உரைத்த, கண்ணுக்கினிய காட்சியைப் பரவும் பாடல்கள் பத்தினையும் கருத்துணரக் கற்றவர்களும், பாடக் கேட்டவர்களும், விண்ணோர் உலகத்தில் பொருந்தி வாழ்வார்கள். அது விதியாகி விளங்கும். அவர்கள் வினை மாயும்.

திருச்சிற்றம்பலம்

60. திருத்தோணிபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

645. வண் தரங்கப் புனற்கமல
மதுமாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசைபாடும்
அளி யரசே ஒளிமதியத்
துண்டர் அங்கப் பூண்மார்பர்
திருத் தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை
பரிந்து ஒருகால்பகராயே.

தெளிவுரை : வளப்பம் பெருகிய அலைகள் மோதும் நீரில் விளங்கும் தாமரை மலரில் உள்ள தேனைச் சுவைத்துப் பருகி இன்புற்று, பெடையினொடும் ஒளி பொருந்திய வெண்மையான அலையோசை போன்று இசை பாடும் வண்டரசே ! ஒளிசேர் சந்திரனின் பிறையைத் தரித்து உள்ளவரும், உடலின் அங்கமாகும் எலும்பை மாலையாகக் கொண்ட மார்பினரும், பழைமையான நடனம் புரிந்து திருத்தோணிபுரத்தில் உறைபவரும் ஆகிய அப் பெருமானுக்கு என் நிலையை நன்கு அறிந்து பரிவோடு ஒருமுறை பகர்வாயாக.

646. எறி கறவம் கழிக்கானல்
இளங்குருகே என்பயலை
அறிவுறாது ஒழிவதுவும்
அருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதம் ஓதும்
திருத்தோணி புரத்துஉறையும்
வெறி நிறார் மலர்க்கண்ணி
வேதியர்க்கு விளம்பாயே.

தெளிவுரை : துள்ளும் சுறா மீன்கள் விளங்கும் உப்பங்கழியின் கானலில் நிலவுடும் இளங்குருகே ! நான் கொண்டுள்ள பசலை நோயை, இறைவனிடம் அறிவிக்காது விடுவதும் வினைப் பயன் ஆகும் தரத்ததோ ! மிகுந்த பயனை அடையும் தன்மையில் சிறுவர்கள் திருவைந்தெழுத்து ஓதும் பெருமைமிக்க தோணிபுரத்தில், மணமும் வண்ணமும் பொருந்திய மலரைச் சூடியுள்ள வேதநாயகராகிய ஈசனிடம் எனது நிலையை விளம்புவாயாக.

647. பண்பழனக் கோட்டகத்து
வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே
கடுவினையேன் உறுபயலை
செண்பகம்சேர் பொழில்புடைசூழ்
திருத் தோணி புரத்துறையும்
பண்பனுக்குஎன் பரிசுரைத்தால்
பழியாமோ மொழியாயே.

தெளிவுரை : நன்றாகப் பண்படுத்தப்பெற்ற வயல்களின் கரைகளில் வாடுதல் கொள்ளாத சிவந்த கொண்டையுடன் சண்பங் கோரையின் இடையே விளங்கும் வாரணமே ! தலைவனாகிய ஈசனைப் பிரிந்து ஆற்றாது கொடிய வினையுடைய யான் பசலையுற்றேன். செண்பக மலர்ப்பொழில்சூழ் திருத்தோணிபுரத்தில் உறையும் பண்பின் மிக்கு விளங்கும் தலைவனுக்கு எனது நிலையை எடுத்து ஓதினால் நினக்கு எவ்விதப் பழியும் நேராது. எனவே மொழிவாயாக.

648. காண்தகைய செங்கால்ஒண்
கழி நாராய் காதலால்
பூண் தகைய முலை மெலிந்து
பொன் பயந்தாள் என்றுவளர்
சேண்தகைய மணிமாடத்
திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற்கு இன்றே சென்று
அடியறிய உணர்த்தாயே.

தெளிவுரை : ஒப்பற்ற உப்பங்கழியில் காண்பதற்கு அழகிய செங்காலகளையுடைய நாராய் ! அன்பின் மேலீட்டால், அணிகள் பூணப்பெற்ற மார்பகங்கள் மெலிவுறவும், பொன் நிறத்தின் பசலையுறவும், ஆயினாள் என்று, விண்ணை நெருங்கும் உயர்ந்த மணிமாடத் திருத்தோணிபுரத்து உறையும் ஆண்தகையாற்கு, இன்றே சென்று எனது உள்ளத்தின் வேட்கையை உணர்த்துவாயாக.

649. பாராரே எனை ஒருகால்
தொழுகின்றேன் பாங்கமைந்த
காராரும் செழு நிறத்துப்
பவளக்காற் கபோதங்காள்
தேராரு நெடுவீதித்
திருத்தோணி புரத்துறையும்
நீராரும் சடையாருக்கு
என்நிலைமை நிகழ்த்தீரே.

தெளிவுரை : செழுமை கூடிய நிறத்துடைய பவளம் போன்ற சிவந்த கால்களையுடைய கார்வண்ண மாடப் புறாக்களே ! இதற்கு முன்னதாகத் தூதாக அனுப்பிய வண்ரசு, இளங்குருகு, சேவல், நாரை ஆகியவர்கள் திரும்பி வந்து என்னைப் பாராது உள்ளனர். உம்மைத் தொழுகின்றேன். தேர் செல்லும் நெடிய வீதிகளையுடைய தோணிபுரத்தில் உறையும் கங்கை தரித்த சடையுடைய நாதருக்கு எனது நிலைமையை இயம்புவீர்.

650. சேற்றெழுந்த மலர்க்கமலச்
செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள்
விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி
புரத்தீசன் துளங்காத
கூற்று தைத்த திருவடியே
கூடுமா கூறீரே.

தெளிவுரை : தாமரை மலர்களும் செஞ்சாலிக் கதிர்களின் நெல் மணிகளும் திகழ வீற்றிருக்கும் அன்னப் பறவைகளே ! திருத்தோணிபுரத்தில் விளங்கும் ஈசன், வித்தவன். யாராலும் அசைக்க முடியாத கூற்றுவனை உதைத்த வல்லமையுடையவன், அப்பெருமான். அவனுடைய செல்வப் பெருங்கழலை யான் கூடி மகிழுமாறு அவனிடம் சென்று மொழிவீரே. ஏகாரம் விண்ணப்பத்தின் மாண்பினை மொழிவதாயிற்று.

651. முன்றில் வாய் மடல் பெண்ணைக்
குரம்பை வாழ் முயங்கு சிறை
அன்றில் காள் பிரிவுறுநோய்
அறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவும்
திருத்தோணி புரத்துறையும்
கொன்றை வார் சடையார்க்கு என்
கூர்பயலை கூறீரே.

தெளிவுரை : முற்றங்களிலும், மட்டைகள் விளங்கும் பனை மரங்களிலும் கூடுகளை அமைத்து, நெருங்கிய சிறகுகளை உடைய அன்றில் பறவைகாள் ! நீங்கள் எக்காலத்தும் இணையோடு கூடி ஒருமித்து விளங்குவதால், யான் படும் பிரிவுத் துன்பத்தை உங்களால் அறிய முடியாது. ஆயினும் இணைந்து வாழ்வதில் வல்லவர்களாகிய நீவிர் தூது உரைப்பதற்கு ஏற்றவர்கள் ஆவீர். இனிமையான தென்றல் புகுந்து எல்லா இடங்களில் பரவி விளங்கும் திருத்தோணிபுரத்தில் உறையும் மணங்கமழும் கொன்றை மாலை சூடிய செஞ்சடையராகிய ஈசற்கு, என்னை வாட்டும் பசலை நோய் பற்றிக் கூறுவீர்.

652. பானாறு மலர்ச் சூதப்
பல்லவங்கள் அவை கேதி
ஏனோர்க்கும் இனிதாக
மொழியும்எழில் இளங்குயிலே
தேன்ஆரும் பொழில்புடைசூழ்
திருத்தோணி புரத்தமரர்
கோனாரை என்னிடைக்கே
வர ஒருகால் கூவாயே.

தெளிவுரை : சாறும், மணமும் மிக்க மலர்களையும் மாந்தளிர்களையும் விரும்பி ஏனோர்க்கும் இனிதாக மொயியும் எழிலை உடைய இளங்குயிலே ! தேன் சொரியும் பொழில்களைப் பக்கத்தில் சூழத் திகழும் திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும், தேவர்களுக் கெல்லாம் தலைவராக விளங்கும் ஈசனை, என் இடத்திற்கே வருமாறு ஒருமுறை கூவுவாயே.

653. நற்பதங்கண் மிக அறிவாய்
நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாய்அலகில்
பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதம்சேர் மறையாளர்
திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்குஎன்
மெய்பயலை விளம்பாயே.

தெளிவுரை : அழகான அலகினையுடைய நாகணவாய்ப் பறவையே ! நல்ல மொழிகளை மிக நன்றாக அறிவாய் ! நீயே நல்லாய். உன்னைப் போற்றுகின்றேன். உன்னை வேண்டிக் கொள்கின்றேன். பக்திச் சொற்களின் பதப் பொருளாகவும், வேதத்தின் நாயகனாகவும், திருத்தோணிபுரத்தில் உறையும், மேருமலையை வில்லாகக் கொண்ட தோளினையுடைய விகிர்தனுக்கு, என்னுடைய மெய்யான பசலையை விளம்புவாய்.

654. சிறையாரு மடக்கிளியே
இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத் தருவன்
மொய்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடல்தோணி
புரத்தீசன் துளங்கும் இளம்
பிறை யாளன் திருநாமம்
எனக்கு ஒருகால் பேசாயே.

தெளிவுரை : தலைவன்பால் கொண்ட மேலான விருப்பத்தால், அரச வண்டு, இளங்குருகு, சேவல், நாரை, கபோதங்கள்(புறா), அன்னங்கள், அன்றில் பறவை, இளங்குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றைத் தூது விடுத்தும் பயன் விளையாத நிலையைக் கண்டாள் தலைவி. அவள் மனம் ஆற்றொணாத் துயரில் மூழ்குகின்றது. தான் வளர்த்த கிளி நினைவிற்கு வருகின்றது. தான், தலைவனுடைய திருநாமங்களை மொழிந்து மகிழ்ந்த நிலையில், கிளியானது தலைவனுடைய திருநாமத்தைச் செவி மடுத்திருக்கும் என நம்புகின்றாள். இறைவன் திருநாமத்தை தான் வளர்த்த கிளியின் வாயிலாகக் கேட்டு மகிழ்வடைய வேண்டும் எனக் கருதுகின்றாள். மகிழ்ச்சியைத் தருகின்ற ஈசன் திருநாமத்தைக் கூறும் கிளிக்குத் தேனும் பாலும் தருவதற்கு இசைகின்றாள். இந்நிலையில் அவள் கூற்று எழுகின்றது.

கூண்டில் மகிழ்ச்சியுடன் விளங்கும் கிளியே ! இங்கே வா !தேனும் பாலும் நீ உட்கொள்ளும் முறைப்படியே தருவன். முத்தும் பவளமும் பெருகும் கடல் துறையாகிய தோணிபுரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன். அவனுடைய திருநாமத்தை என்னிடம் பேசி மொழிவாய்.

655. போர்மிகுத்த வயல் தோணி
புரத்துறையும் புரிசடைஎம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து
இறையவனை வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்
சம்பந்தன் உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ்வல்லார்
சிவ லோகம் சேர்வாரே.

தெளிவுரை : வைக்கோற் போர் மிகுந்து தோன்ற நிலவளத்தை உடைய தோணிபுரத்தில் உறையும் சடையும், நீலகண்டமும் உடைய எம் இறைவனைத் தாமரை மலர் மாலை அணிந்த ஞானசம்பந்தன் ஏத்தி உரை செய்த சிறப்புகள் மிகுந்த இத் திருப்பதிகத்தை ஓதி உரைப்பவர்கள், சிவலோகம் சேர்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

61. திருச்செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

656. நறைகொண்ட மலர்தூவி
விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார்
முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும்
செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான்
கண்பதீச் சரத்தானே.

தெளிவுரை : சிறகுகளையுடைய வண்டுகள் பறக்கும் செங்காட்டங்குடியில் கரிய கண்டத்தையுடைய கணபதீச்சரத்தானைத் தொண்டர்கள் தேன் நிறைந்த மலர்களால் தூவிப் போற்றி, மணம் அளிக்க நாள்தோறும் குறைவின்றி, விதிப்படி பணி செய்கின்றனர்.

657. வாரேற்ற பறையொலியும்
சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோடு
ஓங்கியசீர் விழவுஓவாச்
சீரேற்றம் உடைத்தாய
செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : தோல் வாரினால் கட்டப்பெற்ற பறையின் ஒலியும், முழங்கும் சங்கின் ஒலியும் திகழ, ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து செல்வச் செழிப்பு தோன்றுமாறு சிறப்பான திருவிழாக்கள் ஓய்வில்லாமல் ஆற்றப் பெருமையின் ஏற்றத்தைக் கொண்டுள்ள செங்காட்டங் குடியில் கார்காலத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர் சூடிய கணபதீச்சரத்தான் விளங்குகின்றான்.

658. வரந்தையான் சோபுரத்தான்
மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான்
கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : ஈசன் வரந்தை, சோபுரம் ஆகிய திருத்தலங்களில் வீற்றிருப்பவன்; வேதமும் ஆகமும் ஆகி அதன் எழுத்தாகவும் ஒலியாகவும் விளங்குபவன்; கோவண ஆடையுடையவன்; கிண்கிணிச் சலங்கையுடையவன்; கரத்தில் பிரம கபாலம் ஏந்திச் செங்காட்டங்குடியில் உள்ளவன்; செஞ்சடையில் கங்கை நீரைக் கரந்து சேமித்தவன்; திருவெண்ணீறு தரித்தவன். அவன் கண்பதீச்சரத்தில் வீற்றிருப்பவன்.

659. தொங்கலும் கமழ்சாந்தும்
அகிற்புகையும் தொண்டர்கொண்டு
அங்கையால் தொழுதுஏத்த
அருச்சனைக்குஅன்று அருள்செய்தான்
செங்கயல்பாய் வயல்உடுத்த
செங்காட்டாங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : மலர் மாலை சாற்றிக் கமழ்கின்ற சந்தனம், அகிற்புகை கொண்டு தொண்டர்கள் கைகளால் கூப்பித் தொழுது வணங்கி அருச்சனை புரிய அருள் புரிந்தவன். கயல் பாயும் வயல் சூழ்ந்த செங்காட்டங்குடியில், கங்கை தரித்த நீண்ட சடையுடையவனாகிய கணபதீச்சரத்தில் மேய பரமன்.

660. பாலினால் நறுநெய்யால்
பழத்தினால் பயின்றுஆட்டி
நூலினால் மணமாலை
கொணர்ந்துஅடியார் புரிந்துஏத்தச்
சேலினார் வயல்புடைசூழ்
செங்காட்டங் குடியதனுள்
காலினால் கூற்றுதைத்தான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : நெய், பால் ஆகியவற்றைக் கொண்டு பழங்கள் முதலான பஞ்சாமிர்தமும் கொண்டு அபிடேகம் செய்து, வேதாகம விதிப்படி மணங் கமழும் மாலைகள் கொணர்ந்து, அடியவர்கள் மகிழந்து ஏத்தச் சேல்கள் திகழும் வயல்கள் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருப்பாதத்தால் கூற்றுதைத்த கணபதீச்சரத்தான் வீற்றிருக்கின்றான்.

661. நுண்ணியான் மிகப்பெரியான்
நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்அந்
தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங்
குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : மிக நுண்ணிய பொருளாகவும், மிகப் பெரியவனாகவும், மனங்கசிந்து உருகும் அடியவர்தம் வாயிலிருந்து மலரும் சொல்லாகவும், தண்மையும் வெம்மையும் உடையவனாகவும், தலையின் மேலாகவும் மனத்தகத்தும் இருப்பவன், ஈசன். திண்ணியனாக விளங்கும் அப் பரமன் செங்காட்டங்குடியில் உள்ளவனாகவும், செஞ்சடையில் சந்திரனைத் தரித்துள்ளவனாகவும், நெற்றிக் கண்ணையுடையவனாகவும் இருப்பவன். அவன் கணபதீச்சரத்தான்.

662. மையினார் மலர்நெடுங்கண்
மலைமகள்ஓர் பாகமாம்
மெய்யினான் பையரவம்
அரைக்கசைத்தான் மீன்பிறழ்அச்
செய்யின்ஆர் அகல்கழனிச்
செங்காட்டங் குடியதனுள்
கையினார் கூர்எரியான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : மை பொலிந்து குளிர்ந்த மலர் போன்ற நெடுங்கண்களையுடைய மலைமகளை, ஒப்பற்ற பாகமாக உடைய திருமேனியில், படத்துடன் கூடிய நாகத்தை அரையில் அசைத்து, மீன்கள் துள்ளிக் களிக்கும் வயல்களும், அகன்ற கழனிகளும் உள்ள செங்காட்டங்குடியில், கூர்மையான சுடர்விட்டு எரியும் நெருப்பை ஏந்திய ஈசன், கணபதீச்சரத்தான்.

663. தோடுடையான் குழையுடையான்
அரக்கன்றன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான்
பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங்
குடியடையான் சேர்ந்தாடும்
காடுடையான் ஆடுடையான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : ஒரு காதில் தோடும், மற்றொன்றில் குழையும் உடைய ஈசன், அரக்கன் தோளை நெரித்தவன்; பெருமையுடையவன். போர்த்தன்மையுடைய வீரம் மிக்க இடபத்தை உடையவன், பெண்ணைப் பாகமாக உடையவன், அழகும் இளமையும் உடையவன். பூத கணங்களுடன் சேர்ந்து ஆடும் இடுகாட்டினன், வெற்றியுடையவன். அவன் செங்காட்டாங்குடியுடைய கணபதீச்சரத்தானே.

664. ஆனூரா உழி தருவான்
அன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான்
வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டங்
குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : ஈசன், இடபத்தில் மீதேறி வருவான், பிரமன் திருமால் ஆகியோர்களுக்கு உணர முடியாதவாறு விண்ணில் உயர்ந்தான், வையகத்தில் வாழ்த்துவார்தம் மனத்தில் உள்ளான், அவர்தம் உள்ளத்தில் ஊறி நின்று தேன் போன்று இனிப்பவன். அவன் சிற்றம்பலம், கானூர், கழுமலம் ஆகிய தலங்களிலும் விளங்கி, செங்காட்டங்குடியில் மேவும் கணபதீச்சரத்தானே.

665. செடிநுகரும் சமணர்களும்
சீவரத்த சாக்கியரும்
படிநுகராது அயர்உழப்பார்க்கு
அருளாத பண்பினான்
பொடிநுகரும் சிறுத்தொண்டர்க்கு
அருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
கணபதீச் சரத்தானே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும், உலகத்தில் நன்மை தீமைகளை நுகராது துன்பத்தில் நெஞ்சைப் பதித்துக் கொள்ள, அன்னார்களுக்கு அருள் புரியாதவன் ஈசன். திருநீற்றை விரும்பி அணியும் சிறுத்தொண்டருக்கு அருள் செய்யும் பொருட்டுக் காவல்பதியாக வீற்றிருந்தான், கணபதீச்சரத்தான்.

666. கறை இலங்கு மலர்க்குவளை
கண்காட்டக் கடிபொழிலின்
நறைஇலங்கு வயல்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
சிறைஇலங்கு புனல்படப்பைச்
செங்காட்டங் குடிசேர்த்தும்
மறைஇலங்கு தமிழ்வல்லார்
வானுலகத்து இருப்பாரே.

தெளிவுரை : விளங்கும் குவளை மலர்களும் மணம் பொருந்திய பொழிலில் தேன் பெருகவும் வயல்கள் சிறக்கும் காழியின் தமிழ் ஞானசம்பந்தன் நீர் வயல்களும் தோட்டங்களும் உடைய செங்காட்டங்குடியை இணைத்துப் பாடிய மறை விளங்கும் இத் திருப்பதிகத்தைக் கூற வல்லவர், வானுலகில் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

62. திருக்கோளிலி (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

667. நாளாய போகாமே
நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
அடல்நெஞ்சே அரநாமம்
கேளாய்நம் கிளைகிளைக்கும்
கேடுபடாத் திறம்அருளிக்
கோளாய நீக்கும்அவன்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல், நஞ்சையுடைய நீலகண்டனாக விளங்கும் ஈசனுக்கே உரிய ஆளாகி, அன்பு செய்வோமாக. பேதைமை உடைய நெஞ்சே ! அரனுடைய திருநாமத்தைச் செவிகுளிரக் கேட்பாயாக. அது நம் வழி வழியாக வரும் தலைமுறையினருக்கும் கெட்டுப் போகாத உயர்ந்த தரத்தில் நிலைத்த பொருளாய் இருந்து, இடையூற்றை நீக்கும். அத்தகைய பெருமான் கோளிலியில் உள்ளவனே.

668. ஆடரவத்து அழகுஆமை
அணிகேழல் கொம்புஆர்த்த
தோடரவத்து ஒருகாதன்
துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத்து இசைபயின்று
பணிந்துஎழுவார் தம்மனத்தில்
கோடரவம் தீர்க்கும் அவன்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : ஆடிக்கொண்டிருக்கும் அரவத்தில் அழகிய ஆசை ஓடும் பன்றியின் கொம்பும் கட்டி அணிபவன் ஈசன். அரவத்தைக் காதில் தோடாக உடையவன். திருவடியில் மலர்களைத் தூவிப் பாடல்களை இசையுடன் பயின்று பணிபவர் மனத்தின் துன்பத்தைத் தீர்க்கும் பரமன், கோளிலியில் வீற்றிருப்பவன்.

669. நன்றுநகு நாண்மலரால்
நல்லிருக்கு மந்திரங்கொண்டு
ஒன்றிவழி பாடுசெயல்
உற்றவன்றன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலன்உயிர்
கண்டுஅவனுக்கு அன்றளித்தான்
கொன்றைமலர் பொன்திகழும்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : நன்று மலர்ந்து மலர்கள் தூவி, இருக்கு வேத மந்திரங்களை ஓதி, மனம் ஒருமித்த வழிபாடு செய்த மார்க்கண்டேயரின் உன்னதமாக ஓங்கும் உயிரைக் கவரச் சினந்து வரும் காலனின் உயிரைப் போக்கிக் காத்தவன், பொன் போன்ற கொன்றை மலர் சூடும் கோளிலியில் வீற்றிருக்கும் பெருமான்.

670. வந்தமண லால்இலிங்க
மண்ணியன்கண் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமம்
தேர்ந்துசிதைப் பான்வரும்அத்
தந்தைதனைச் சாடுதலும்
சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : மண்ணியாற்றின் கரையில் மணலால் இலிங்கத் திருமேனி அமைத்துப் பால் அபிடேகம் செய்த பாலனுடைய செயலை விரும்பாத தந்தையைச் சாடிய அம் மகனுக்குச் சண்டீசன் எனும் சிறப்பினைத் தந்தருளி, மலர்களைக் கொடுத்தவன் கோளிலிப் பெருமான்.

671. வஞ்சமனத்து அஞ்சுஒடுக்கி
வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளு
நம்பியென வேநினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப்
பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சுஅணவும்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : வஞ்சனை பெருந்திய மனத்தில் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் வழி செல்லாது ஒடுக்கி, நாள்தோறும் நல்ல மெய்ப்பாடு கொள்ளும் பூசனையால், நஞ்சினை அமுது கொண்ட ஈசனையே கருதும் பார்த்தனுக்குப் பாசுபத அத்திரம் ஈந்து மகிழ்ந்தவன் கோளிலிப் பெருமான்.

672. தாவியவன் உடனிருந்தும்
காணாத தற்பரனை
ஆவிதனில் அஞ்சொடுக்கி
அங்கணன்என்று ஆதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி
அடிகளுக்கு நல்கும்அவன்
கோவியலும் பூவெழுகோற்
கோளிலியெம் பெருமானே.

தெளிவுரை : எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கும் ஈசன் தன்னிடத்தும் உள்ளவன் என உணராதவனாகி உலகத்தைத் தாவி நின்று அளந்த திருமாலும் காண முடியாத தற்பரன், ஐம்புலன்களை ஒடுக்கி விரும்பிப் போற்றி வழிபடும் நமி நந்தி அடிகளுக்குப் பெருமையும் புகழும் நல்கிய கோளிலிப் பெருமான்.

673. கல்நவிலு மால்வரையான்
கார்திகழு மாமிடற்றான்
சொல்நவிலு மாமறையான்
தோத்திரம்செய் வாயின்உளான்
மின்நவிலும் செஞ்சடையான்
வெண்பெடியான் அங்கையினில்
கொல்நவிலும் சூலத்தான்
கோளிலியெம் பெருமானே.

தெளிவுரை : உறுதியான பெருமைமிக்க கயிலை மலையை உடையவன், கரிய கண்டத்தையுடையவன், வேதங்களையுடையவன், தோத்திரம் செய்பவர் வாய்ச் சொல்லில் உறைபவன், மின்னலைப் போன்ற ஒளி மயமான சிவந்த சடையுடையவன், திருநீற்று மேனியன், அழகிய கரத்தில் பெருமையான சூலத்தை உடையவன், கோளிலிப் பெருமான்.

674. அந்தரத்தில் தேர்ஊரும்
அரக்கன்மலை அன்றுஎடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால்
ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்தை மறைபாட
வாள்அவனுக்கு ஈந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : வானத்தின்கண் தேர் ஊர்ந்து சென்ற இராவணன் கயிலை மலையை எடுத்தபோது ஈசன் அழகிய தன் திருப்பாத விரலால் ஊன்ற, உடல் நெரிந்து துன்புற்று சாம கீதத்தை ஓதினான். அதனைக் கேட்டு மகிழ்ந்து, மந்திரவாளை அவ்வரக்கனுக்கு வழங்கியவன் பிறைசூடிய கோளிலிப் பெருமான்.

675. நாணமுடை வேதியனு
நாரணனு நண்ணவொணாத்
தாணுஎனை ஆளுடையான்
தன்னடியார்க்கு அன்புடைமை
பாணன்இசை பத்திமையால்
பாடுதலும் பரிந்தளித்தான்
கோணல்இளம் பிறைச்சென்னிக்
கோளிலியெம் பெருமானே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் நண்ணமுடியாத ஈசன், என்னை ஆளுடையவன், அடியவர்பால் அன்புடைய பாணம் யாழ் மீட்டிப் பக்திப் பெருக்கால் இசைத்துப் பாட அருள் புரிபவன், வளைந்த இளம் பிறையைச் சென்னியில் தரித்த கோளிலிப் பெருமான்.

676. தடுக்குஅமரும் சமணரொடு
தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளாது
ஈசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம்
நண்ணலும்ஆம் அண்ணல்கழல்
கொடுக்கிலா வரங்கொடுக்கும்
கோளிலிஎம் பெருமானே.

தெளிவுரை : தடுக்கில் அமரும் சமணர்களும், மற்றும் தர்க்க சாத்திரத்தில் வல்லவர்களும் சொல்பவை துன்பத்தைத் தருவதாகும். அவற்றை ஏற்காது ஈசனை வழிபடுமின். அப்பெருமான் அரிய வரங்களைத் தருபவர். அவன் அருள் அச்சமற்ற வானுலகத்தில் அடியவர்களை மகிழ்ந்திருக்கச் செய்யும். அத்தகைய அண்ணல் எம் கோளிலியில் வீற்றிருக்கும் பெருமானே.

677. நம்பனைநல் லடியார்கள்
நாம்உடைமாடு என்றிருக்கும்
கொம்பனையாள் பாகன்எழில்
கோளிலிஎம் பெருமானை
வம்புஅமரும் தண்காழிச்
சம்பந்தன் வண்தமிழ்கொண்டு
இன்புஅமர வல்லார்கள்
எய்துவர்கள் ஈசனையே.

தெளிவுரை : ஈசனை, நன்மையே உற்ற அடியவர்கள் தமது செல்வம் எனக் கருதும் உமையவளைப் பாகமாக உடைய கோளிலிப் பெருமானைப் போற்றி மணங்கமழும் குளிர்ச்சி பொருந்திய காழிச்சம்பந்தன் வளப்பம் மிக்க உரைத்த இத் திருப்பதிகத்தை இன்பம் பெருக ஓத வல்லவர்கள் ஈசன்பால் எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

63. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

678. எரியார்மழுவொன்று ஏந்திஅங்கை
இடுதலையே கலனா
வரியார் வளையார் ஐயம்வல்லாய்
மாநலம் வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன்
தாமரைநான் முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட
பிரமபுரத் தானே.

தெளிவுரை : நெருப்பைப் போன்ற மழுப்படையைக் கரத்தில் ஏந்திக் கபாலம் ஒரு கரத்தில் ஏந்திப் பிச்சை ஏற்று அழகிய வளையலை அணிந்த நங்கையரிடம் அவர்தம் நலத்தையும் கவர்ந்தவன் பிரமபுரத்து மேவிய பெருமான் ! தவறுதல் இல்லாது வேதங்களை ஓதும் தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகத்தனாகிய பிரமன் பூசிக்க ஆட்கொண்டவன்.

679. பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப்
பெய்பலிக்குஎன்று அயலே
கயலார்தடங்கண் அஞ்சொல் நல்லார்
கண்துயில் வவ் வுதியே
இயலான் நடாவி இன்பம்எய்தி
இந்திரன்ஆள் மண்மேல்
வியலார் முரசம் ஓங்குசெம்மை
வேணுபுரத் தானே.

தெளிவுரை : இந்திரன் மூங்கில் (வேணு) வடிவத்தில் பூசிக்க அருள் புரிந்த வேணு புரத்தானே, கங்கை பொருந்திய சடையில் சந்திரனைச் சூடி பலியேற்க வேண்டும் என்று கயல் போன்ற அகன்ற கண்களையுடைய மாதர்கள்பால் சென்று, அவர்கள் நின்னைக் கண்டு நின்னையே நினைத்துத் துயில் துறக்க வவ்வுதல் செய்தனை !

680. நகலார் தலையும் வெண்பிறையு
நளிசடைமாட்டு அயலே
பகலாப் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய்
பாய்கலை வவ் வுதியே
அகலா துறையும் மாநிலத்தில்
அயலின்மை யால் அமரர்
புகலான் மலிந்த பூம்புகலி
மேவிய புண்ணியனே.

தெளிவுரை : தலையோடும், வெண் பிறையும் சடையில் விளங்கப் பலியேற்கும் தன்மையனே ! அமரர்கள் அடைக்கலம் புகுந்து இருந்தமையால் பூம்புகலி எனப்படுமாறு விளங்கும் ஈசனே, பலியேற்கப் பரந்த ஆடையைக் கவர்ந்தது ஏன் ?

681. சங்கோடு இலங்கத் தோடுபெய்து
காதிலொர்தாழ் குழையன்
அங்கோல் வளையார் ஐயம்வல்லா
யானலம்வவ் வுதியே
செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும்
செய்வினை மெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட
வெங்குரு மேயவனே.

தெளிவுரை : வெங்குரு மேவும் பெருமானே ! சங்குடன் தோடும் குழையும் காதில் அணிந்து, அழகிய வளையலை அணிந்த மாதர்களிடம் பிச்சை கொள்ளாது, அவர்தம் நலனை வவ்விக் கொள்வையோ ! செங்கோல் சிறப்புற நடைபெறும் முகத்தான் செய்கின்ற தம் பணி சிறப்புறுமாறு குருபகவான் போற்ற அருள் புரிந்தனை !

682. தணிநீர் மதியம் சூடி நீடு
தாங்கிய தாழ் சடையன்
பிணி நீர் மடவார் ஐயம்வவ்வாய்
பெய்கலை வவ்வுதியே
அணிநீர் உலகம் ஆகி எங்கும்
ஆழ்கடலால் அழுங்கத்
துணி நீர் பணியத் தான்மிதந்த
தோணி புரத் தானே.

தெளிவுரை : நீரானது உலகெங்கும் விரிந்து சூழ்கடலால் ஆழ்ந்த காலத்து தான் மட்டும் மிதந்து மேல் நிற்கும் தோணிபுரத்து ஈசனே ! தணிந்த நீர் போன்ற குளிர்ந்த வெண் மதியைச் சூடித் தாழ்ந்த சடையுடன் விரகதாகம் உடைய பெண்களிடம் பிச்சை யேற்காது அவர்களுடைய ஆடைகளை வவ்வியது ஏனோ !

683. கவர்பூம் புனலும் தண்மதியும்
கமழ்சடைமாட்டு அயலே
அவர்பூம் பலியோடு ஐயம்வவ்வா
யானலம் வவ்வுதியே
அவர் பூண் அரையர்க்கு ஆதியாய
அடல் மன்னன் ஆள் மண்மேல்
தவர்பூம் பதிகள் எங்கும் எங்கும்
தங்குதரா யவனே.

தெளிவுரை : மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக விளங்கிக் காக்கும் தொழிலை மேவும் திருமால் மண்மேல் பூக்களால் (பூர்தராய்) திகழ வழிபடும் பூந்தராய் மேவும் பெருமானே ! கங்கையும் சந்திரனும் கமழ்சடையில் திகழ மாதர்களிடம் பிச்சை யேற்காது அவர்தம் நலத்தை வவ்வியது ஏன் ?

684. முலையாழ் கெழுவ மொந்தை கொட்ட
முன்கடை மாட்டு அயலே
நிலையாப் பலிதேர்ந்து ஐயம் வவ்வாய்
நீ நலம் வவ்வுதியே
தலையாய்க் கிடந்து அவ் வையம் எல்லாம்
தன்னதொரு ஆணை நடாய்ச்
சிலையான் மலிந்த சீர்சிலம்பன்
சிரபுர மேயவனே.

தெளிவுரை : திருமால், மோகினி அவதாரம் தாங்கத் தேவர்களுக்கு அமுதம் வழங்கிய ஞான்று, சிலம்பன் என்னும் அசுரன் அவ்வரிசையில் நிற்கக் கண்டு சிரத்தை அறுத்தார். அந்த சிரம் மண்மிசை கிடந்து தன் ஆணை நடத்தும் வண்ணம் பூசிக்க, விளங்கும் சிரபுரம் மேவும் பெருமானே ! முல்லை யாழும் மொந்தை என்னும் ஒலியும் பொருந்தி ஒலிக்க, வாயிலின் முன் மாதர்கள் இடும் பிச்சை ஏற்பதை விடுத்து அவர்கள் நலத்தினை வவ்வினையே !

685. எருதே கொணர்க என்று எறிஅங்கை
இடுதலையே கலனாக்
கருதேர் மடவார் ஐயம் வவ்வாய்
கண்துயில் வவ்வுதியே
ஒருதேர் கடாவி ஆர்அமருள்
ஒருபது தேர் தொலையப்
பெருதேர் வலவன் மேவிஆண்ட
புறமவர் புண்ணியனே.

தெளிவுரை : புறாவின் எடைக்குத் தன் தசையை அறுத்துக் கொடுக்குமாறு புறா வடிவத்தில் போந்த அக்கினிக் கடவுள், ஒரு தேரினைத் தன்னகத்தே கொண்டு பத்துத் தேர்களை வெல்லும் போர் வல்லமையுடைய சிபிச் சக்கரவர்த்தியின்பால் போந்து நற்கதியடையச் செய்த புறவம் நகர் மேவும் புண்ணியனே ! எருது வாகனத்தில் அமர்ந்து அழகிய கையில் கபாலம் ஏந்தி நினைக் கருதியிருக்கும் மடவார் இடும் பிச்சையைக் கொள்ளாமல் அவர்கள் நினைத்து வாடுமாறு துயிலை வவ்வினையே !

686. துவர்சேர் கலிங்கப் போர்வையாரும்
தூய்மையிலாச் சமணும்
கவர்செய்து உழலக் கண்டவண்ணம்
காரிகைவார் குழலார்
அவர்பூம் பலியோடு ஐயம்வவ்வா
யானலம் வவ்வுதியே
தவர்செய் நெடுவேல் சண்டன்ஆளச்
சண்பை அமர்ந்தவனே.

தெளிவுரை : சண்பை என்னும் கோரைப்புல்லால் தனது குலம் அழிதலுக்குண்டான பாவம் அணுகாதவாறு திருமால் (கண்ணபிரான்) பூசித்த சண்பை நகரில் நெடுவேலுடைய சண்டன் எனும் காலனை உதைத்து ஆளும் பெருமானே ! துவாரடையையுடைய சாக்கியரும், சமணரும் மனம் தேராது உழலுதலைப் போலத் தாருகவனத்து மாதர்களும் தேராது உழன்று திகைக்க, அவர்கள் இடும் பிச்சையை வவ்வாது, நலங்கள் யாவினையும் வவ்வுதல் செய்தனையே !

687. நிழலால் மலிந்த கொன்றைசூடி
நீறுமெய் பூசி நல்ல
குழலார் மடவார் ஐயம் வவ்வாய்
கோல்வளை வவ்வுதியே
அழலாய் உலகம் கவ்வைதீர
ஐந்தலை நீள்முடிய
கழல் நாகஅரையன் காவலாக
காழி அமர்ந்தவனே.

தெளிவுரை : உலகத்தின் துன்பம் தீரும் பொருட்டு ஐந்து தலைகளையுடைய நாகராசன் காவலாக விளங்கக் காழி நகரில் அமர்ந்த பெருமானே ! ஒளிரும் கொன்றை மலர் சூடித் திருநீறு மெய்யில் விளங்க நீண்டு வளர்ந்த குழலையுடைய மடவார் இடும் பிச்சை கொள்ளாது வளையல்களை வவ்வினை !

688. கட்டார் துழாயன் தாமரையான் என்று
இவர்காண் பரிய
சிட்டார் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய்
செய்கலை வவ்வுதியே
நட்டார் நடுவே நந்தன் ஆள
நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல்சூழ்
கொச்சை அமர்ந்தவனே.

தெளிவுரை : மேன்மையில் விளங்கும் பிரமன் புதல்வனாகிய பராசரன் படகோட்டியின் மகளான மச்சகந்தியை மணந்ததால் கருதப்பட்ட இழிவு நீங்கும் பொருட்டுக் கொச்சை நீங்க அமர்ந்து, விளங்கும் வயல்சூழ் கொச்சைவயம் அமர்ந்தவனே ! துளசி மாலை அணிந்த திருமாலும், தாமரை மலரனாகிய பிரமனும் காணற்கு அரியவனாய்ப் பலி தேர்ந்து பிச்சை கொள்ளாது ஆடைகளை வவ்வினை !

689. கடையார் கொடிநன் மாடவீதிக்
கழுமலவூர்க் கவுணி
நடையார் பனுவல் மாலையாக
ஞானசம்பந்த னல்ல
படையார் மழுவன் மேல்மொழிந்த
பல்பெயர் பத்தும் வல்லார்கும்
அடையா வினைகள் உலகில் நாளும்
அமர்உலகு ஆள்பவரே.

தெளிவுரை : வாயில்கள்தோறும் தோரணங்களைக் கொண்ட நல்ல மாடவீதிகள் உடைய கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் உதித்த ஞானசம்பந்தர் நன்னடை மிகும் சந்தப் பாடல் மாலையாக மழுப்படையுடைய ஈசன் மேல் மொழிந்த பல பெயர்களைச் சிறப்பாகப் பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாட வல்லவர்களுக்கு, உலகில் எந்நாளும் வினைகள் சாராது. பிற்றைக் காலங்களில் தேவர் உலகில் விளங்கித் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

64. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

690. அறையார்புனலு மாமலரும்
ஆடரவார் சடைமேல்
குறையார் மதியும் சூடிமாதோர்
கூறுடையான் இடமாம்
முறையார் முடிசேர் தென்னர்சேரர்
சோழர்கள் தாம் வணங்கும்
திறையார் ஒளிசேர் செய்மை ஓங்கும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பரம்பரையாக வந்துதித்த முடி மன்னர்களாய பாண்டிய வேந்தர்கள், சேர சோழ மன்னர்கள் அனைவரும் வணங்க, கப்பம் செலுத்தும் பொருள்களும் நிலவளமிக்க வயல்களும் பெருகும் தென் திருப்பூவணமானது, கங்கையும் மாமலரும் ஆடும் அரவமும் சடைமேல் திகழ, பிறைச் சந்திரனைச் சூடி மாதொரு பாகனாக விளங்கும் ஈசனார் இடமாகும்.

691. மருவார் மதில்மூன்று ஒன்ற எய்து
மாமலையான் மடந்தை
ஒருபால் பாகிமாகச் செய்த
உம்பர்பிரான் அவர்ஊர்
கருவார்சாலி ஆலை மல்கிக்
கழல் மன்னர் காத்தளித்த
திருவான் மலிந்த சேடர்வாழும்
தென் திருப் பூவணமே.

தெளிவுரை : சாலி நெல்மணிகள் வளமாகத் திகழுமாறு வீரக் கழல் அணிந்த மன்னர்கள் பாதுகாத்து வரவும், திருத்தக்க செல்வம் மலிந்த பெருமை மிக்கவர்கள் வாழும் தென் திருப்பூவணமானது, பகைவரின் மூன்று மதில்களையும் ஒரே நேரத்தில் எரித்து, மலையரசன் மகளாகிய பார்வதியை ஒரு பாகமாகச் செய்த தேவர் தலைவனுடைய ஊராகும்.

692. போரார் மதமா உரிவை போர்த்துப்
பொடியணி மேனியனாய்க்
காரார்கடலின் நஞ்சம் உண்ட
கண்ணுதல் விண்ணவன்ஊர்
பாரார்வைகைப் புனல்வாய் பரப்பிப்
பன்மணி பொன் கொழித்துச்
சீரார் வாரி சேரநின்ற
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பூமியில் பொலியும் வைகைக் கரையில் பொன்னும் மணிகளும் கொழிக்கச் செம்மையான நீர்வளம் பொருந்தி விளங்கும் தென் திருப்பூவணமானது, போர்முகத்து மத யானையின் தோலை உரித்துப் போர்த்துத் திருநீற்று மேனியனாய்க் கடல் நஞ்சுண்ட கண்ணுதல் மேவும், தேவனுடைய ஊர் ஆகும்.

693. கடியார் அலங்கல் கொன்றைசூடிக்
காதிலொர் வார் குழையன்
கொடியார் வெள்ளை ஏறுஉகந்த
கோவணவன் னிடமாம்
படியார்கூடி நீடி யோங்கும்
பல்புக ழாற் பரவச்
செடியார் வைகை சூழநின்ற
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : உலகத்தவர் ஒருங்குகூடி நிலைத்து, ஓங்கி நிற்கும் புகழ் விளங்கப் புதர்கள் போன்று செடிகள் மண்டிக் கிடக்கும் வைகைக் கரையில் இருக்கும் தென் திருப்பூவணமானது, மணம் கமழும் கொன்றை மாலை சூடிக் காதில் வெண்குழை அணிந்து வெண்மையான இடபக் கொடி விரும்பிய, கோவணம் அணிந்த ஈசன் இடமாகும்.

694. கூரார் வாளி சிலையில் கோத்துக்
கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாள் ஓர்
பால்மகிழ்ந் தான்இடமாம்
ஆராஅன்பில் தென்னர்சேரர்
சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார் வீதி மாடநீடும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பெருகி வளரும் பக்திப் பெருக்குடன் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போற்றி வணங்குகின்ற தேர்கள் செல்லும் மாடவீதிகள் கொண்ட திருப்பூவணமானது, கூர்மையான அம்பினை வில்லில் கோத்து வாங்கி, மூன்று கொடிய மதில்களையுடைய புரங்களின் கூட்டை அழித்த, போர் செய்வதிற் சிறந்த வில்வீரராகிய ஈசர், மென்மையான இயல்பினை உடையவளாகிய உமாதேவியை ஒரு பக்கம் இருத்தி மகிழும் இடமாகும்.

695. நன்று தீதுஎன்று ஒன்று இலாத
நான் மறையோன் கழலே
சென்று பேணி யேத்த நின்ற
தேவர்பிரான் இடமாம்
குன்றில் ஒன்றி ஓங்க மல்கு
குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றில் ஆரும்
தென் திருப் பூவணமே.

தெளிவுரை : குன்றுகளில் தவழ்ந்தும் ஓங்கிப் பெருகும் குளிர்ச் சோலைகளில் விளங்கும் மலர்கள் மீதும் பொருந்தி, மருந்தும் மணமும் பெருக வரும் தென்றல் காற்று வீசும் முற்றங்களையுடைய பூவணமாவது, எதனாலும் நன்மையோ அன்றித் தீமையோ, அடையாதவனாய், நான்மறையோனாய்த் தேவர் தலைவனாய், அவன் கழலையே யாவரும் ஏத்தக் கூடியதாய் உள்ள இடம் ஆகும்.

696. பைவாய் அரவம் அரையில்சாத்திப்
பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய் மேனி நீறுபூசி
ஏறுகந்தான் இடமாம்
கைவாழ் வளையார் மைந்தரோடும்
கலவியினால் நெருங்கிச்
செய்வார் தொழிலின் பாடல்ஓவாத்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : கை வளையல்கள் அணிந்த மகளிர் தம் கணவன்மார்களுடன் மகிழ்வு எய்தியும், செய்யும் தொழிலின் நாட்டத்தால் பாடல் இசைத்துப் பணி செய்யும் தன்மை குறையாது, எப்போதும் மேவும் திருப்பூவணமானது, படம் எடுத்து ஆடும் அரவத்தை அரையில் கட்டிப், பூதங்கள் போற்றிப் பாட, மெய்ம்மை வழியாய் விளங்கும் திருமேனியில் நீறு பூசி, ஏற்றினை வாகனமாகக் கொண்டவன் இடமாகும்.

697. மாட வீதி மன்னிலங்கை
மன்னனை மாண் பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள்
கொள்கையினார்க்கு இடமாம்
பாடலோடும் ஆடல் ஓங்கிப்
பன்மணி பொன்கொழித்து
ஓடி நீரால் வைகை சூழும்
உயர்திருப் பூவணமே.

தெளிவுரை : பக்திப் பெருக்குடன் கூடிய பாடலும் ஆடலும் விளங்கவும், பலவிதமான உயர்ந்த மணிகளும் பொன்னும் கொழித்துப் பெருகி, வைகையின் நீரால் சூழ்ந்த திருப்பூவணமானது, மாட வீதிகளையுடைய இலங்கையின் மன்னனுடைய மாண்பினை அழித்துப் பின்னர் அவன் மனம் பொருந்திக் கூட , வெற்றி தரும் வாளைக் கொடுத்த பண்புடைய ஈசனார்க்கு இடமாகும்.

698. பொய்யாவேத நாவினானும்
பூமகள் காதலனும்
கையால் தொழுது கழல்கள் போற்றக்
கனல்எரி யானவன்ஊர்
மையார் பொழிலின் வண்டுபாட
வைகை மணிகொழித்துச்
செய்யார் கமலம் தேனரும்பும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : பசுமையான பொழிலில் வண்டுகள் இசைத்து ரீங்காரம் செய்ய, வைகை நதியானது மணிகளைக் கொழிக்கச் சிறப்பான நீர்வளம் நிறைந்த வயல்களில் தாமரை மலரில் தேன் துளிர்க்கும் பூவணமானது, பொய்ம்மை யடையாத வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும், கையால் தொழுது போற்றித் துதிக்கச் சோதிப் பிழம்பாகத் தோன்றிக் காட்சி நல்கிய ஈசனார் ஊராகும்.

699. அலையார்புனலை நீத்தவரும்
தேரரும் அன்பு செய்யா
நிலையா வண்ண மாயம் வைத்த
நின்மலன்றன் னிடமாம்
மலைபோல் துன்னி வெற்றியோங்கு
மாளிகை சூழ்ந்து அயலே
சிலை ஆர்புரிசை பரிசு பண்ணும்
தென்திருப் பூவணமே.

தெளிவுரை : மலை போன்று உயர்ந்த மாட மாளிகைகள் வெற்றிவாகை சூடியதைப் போன்று பொலிவடைந்து இருக்க, உறுதியான மலை போன்று மதில்கள் சூழ்ந்த பயன்தரும் பூவணமானது, நீராடலை விடுத்தவரும், பௌத்தரும், அன்பு செய்யாதவாறு மாயையைத் தோற்றுவித்த நின்மலனாகிய ஈசனின் இடமாகும்.

700. திண்ணார் புரிசை மாடம் ஓங்கும்
தென்திருப் பூவணத்துப்
பெண்ணார் மேனி எம்மிறையைப்
பேரியலின் தமிழால்
நண்ணார் உட்கக் காழிமல்கு
ஞானசம் பந்தன் சொன்ன
பண்ணார் பாடல் பத்தும் வல்லார்
பயில்வது வாளிடையே

தெளிவுரை : வலிமையான மதில்களும் மாட மாளிகைகளும் ஓங்கும் பூவணத்தில், உமா தேவியைப் பாகமாக உடைய எம் இறையைப் பெருமைமிக்க இயல்பினதாகிய தமிழ் மொழியால், பகைவர்கள் அச்சம் பெறும் காழியில் விளங்கும் ஞானசம்பந்தன் சொன்ன இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானுலகில் விரும்பித் திகழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

65. காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் (அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

701. அடையார்தம் புரங்கள் மூன்றும்
ஆரழலில் அழந்த
விடையார் மேனி யராய்ச் சீறும்
வித்தகர் மேய இடம்
கடைஆர் மாட நீடிஎங்கும்
கங்குல் புறம்தடவப்
படைஆர் புரிசைப் பட்டினஞ்சேர்ப்
பல்லவ னீச் சரமே.

தெளிவுரை : அடைக்கலம் புகுந்து, பணியாத முப்புரத்து அசுரர்களை நெருப்பால் அழித்துத் தீக்கு இரையாக்கி, சீற்றம் மிக்க இடபத்தை வாகனமாக உடைய திருமேனியராய், எல்லாம் வல்ல வித்தகராய் விளங்கும் ஈசன் மேவும் இடமானது, மதில்களையுடைய மாட மாளிகைகள் வானத்தைத் தொடும் அளவு உயர்ந்து பொலியும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்வனீச்சரம் ஆகும்.

702. எண்ணார் எயில்கண் மூன்றும் சீறும்
எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற
கண்ணுதல் நண்ணும் இடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு
வைகலும் தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : நன்மையை எண்ணிப் பாராத பகைவர்களின் மூன்று கோட்டைகளையும் சீற்றங் கொண்டு அழித்த எந்தை பிரான், தேவர்களைக் கண் போன்று காக்கின்ற கண்ணுதல். அப்பெருமான் நண்ணி விளங்கும் இடமானது, மண்ணுலகில் உள்ள சோலைகளில் வண்டுகள் தேன் அருந்தி எஞ்ஞானறும் மகிழ்ந்து பண் இசைக்கும் காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

703. மங்கை அங்கோர் பாகமாக
வாள்நிலவு ஆர் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த
கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம்சேர் புணரிஓத
மீதுயர் பொய் கையின்மேல்
பங்கயம்சேர் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : உமாதேவி ஒரு பாகத்தில் பொருந்தி விளங்க, ஒளி பொருந்திய நிலவு நீண்ட சடையில் இருக்க, அதன்மேல் கங்கையை எப்போதும் திகழுமாறு வைத்த கள்வனாகிய ஈசன் இருக்கும் இடம், ஆழ்கடலின் நீர் ஓதம் கொள்ளவும், பொய்கையில் தாமரை மலர்கள் விளங்கவும் உள்ள காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

704. தார்ஆர் கொன்றை பொன்தயங்கச்
சாத்திய மார்பகலம்
நீர்ஆர் நீறு சாந்தம் வைத்த
நின்மலன் மன்னும் இடம்
போர்ஆர் வேற்கண் மாதர்மைந்தர்
புக்கிசை பாடலினால்
பார்ஆர்கின்ற பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : கொன்றை மலர்மாலை மார்பில் தவழ்ந்து பொன்னொளியை நல்க, இனிமை பொருந்திய திருவெண்ணீறு, சந்தனம் ஆகியன உடன் பொருந்தக் கமழ வைத்துள்ள நின்மலனாகிய ஈசன் விளங்கும் இடமாவது, பகைவரை அழிக்கும் வேல் போன்ற கண்களையுடைய மாதர்கள் தம் கணவருடன் சேர்ந்து இசைப் பாடல்களைப் பார் மணக்கப் பாடும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் ஆகும்.

705. மைசேர்கண்டர் அண்டவாணர்
வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியன் அடியார்ஏத்த
மேவி இருந் தஇடம்
கைசேர் வளையார் விழைவினோடு
காதன்மை யால் கழலே
பைசேர் அரவார் அல்குலார்சேர்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : கரிய வண்ணமுடைய நஞ்சினைக் கொண்ட கண்டத்தை உடையவராய், அண்டங்கள் யாவற்றிலும் விளங்குபராய், வானவர்கள் துதித்துப் போற்றத் திருமேனியில் திருவெண்ணீற்றைத் தரித்தவராய், அடியவர்கள் ஏத்தி வணங்க, மேவும் ஈசன் விளங்கும் இடமாவது, கைகளில் வளையல் அணிந்த மகளிர் விருப்பத்தோடு இறைவன் கழல் பணிந்து வாழும் பல்லவனீச்சரம் ஆகும்.

706. குழலினோசை வீணை மொந்தை
கொட்ட முழவதிரக்
கழலினோசை ஆர்க்க ஆடும்
கடவுள் இருந்த இடம்
சுழியில்ஆரும் கடலில்ஓதம்
தெண் திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரின்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : புல்லாங்குழல், வீணை ஆகிய இசைக் கருவிகளும், மொந்தை, கொட்டு வாத்தியம், முழவு ஆகிய வாத்தியங்களும் இயம்ப, காலில் சலங்கை அணிந்து, அவ்வொலிகள் யாவும் இணைந்து பொருந்த, நடம் புரியும் கடவுளாகிய ஈசன் விளங்கும் இடமாவது நீர்ச்சுழிகளையுடைய கடலின் ஓதம் அலைகளை வாரி எறியவும், பழிப்பு அற்ற நற்குணத்தை உடையவர்கள் விளங்கவும் திகழும் பூம்புகாரின் பல்லவனீச்சரமே.

707. வெந்தலாய வேந்தன் வேள்வி
வேர்அறச் சாடி விண்ணோர்
வந்துஎலாமுன் பேண நின்ற
மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும்
புன்னை வளர்குரவின்
பந்தலாரும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : தெய்வத்தன்மை வெந்து மாயுமாறு நிகழ்த்திய தக்கன் வேள்வியை மூவரோடு அழித்துத் தேவர்கள் எல்லாம் தொழுமாறு நின்று விளங்கும் இடமாவது, மலர்ந்து விரிந்து மயலைத் தரவல்ல மல்லிகையும் புன்னை மற்றும் குரவமும், பந்தல் போன்று படரும் காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் ஆகும்.

708. தேர்அரக்கன் மால்வரையைத்
தெற்றி எடுக்க அவன்
தார்அரக்கும் திண்முடிகள்
ஊன்றிய சங்கரன்ஊர்
கார்அரக்கும் கடல்கிளர்ந்த
கால மெலாம் உணரப்
பார்அரக்கம் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : தேரை உடைய அரக்கன் பெருமை பொருந்திய கயிலையைத் தான் செல்லும் பாதைக்குத் தடையாக உள்ளதென எண்ணிப் பெயர்த்து எடுக்க, அவனுடைய மாலை பதிந்த திண்மையான முடிகள் அழுந்துமாறு ஊன்றிய சங்கரனுடைய ஊரானது, கடலானது கிளர்ந்து எழுந்த காலத்திலும் விளங்கி, உலக மக்கள் உருத்திராக்கம் அணிந்து நல்லொழுக்கம் பயிலும் நெறியுடைய புகாரின் பல்லவனீச்சரமே ஆகும்.

709. அங்கம்ஆறும் வேத நான்கும்
ஓதும் அயன் நெடுமால்
தம்கணாலும் நேடநின்ற
சங்கரன் தங்கு மிடம்
வங்கும்ஆரும் முத்தம்இப்பி
வார்கடல் ஊடு அலைப்பப்
பங்கம்இல்லார் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : நான்கு வேதங்களும் அதனுடைய ஆறு அங்கங்களும் ஓதும் அயனும், திருமாலும், தமது கண்களாலும் தேட நின்ற சங்கரன் தங்கி இருக்கும் இடமாவது, மரக்கலங்கள் செல்லும் கடலில் உள்ள சிப்பிகள் முத்துக்களை நல்க, பங்கம் இல்லாத பெருமக்கள் பயிலும் பூம்புகாரின் பல்லவனீச்சரமே யாகும்.

710. உண்டு உடுக்கை இன்றியே நின்று
ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார்
கண்டு அறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை
சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும்
பல்லவ னீச்சரமே.

தெளிவுரை : உடுக்கை இன்றி உணவினைப் பெரிதாகக் கருதுபவர்களும், உடுக்கையை மெய்யில் போர்த்து அணிந்தவர்களும் ஆகிய புறநெறியாளர், ஈசனையும் அவன் அருளையும் கண்டு மகிழ்ந்து தரிசிக்க இயலாத இடமானது, தண்டும், உடுக்கை என்னும் வாத்தியமும், தாளம், தாக்கை முதலான வாத்தியங்களும் பயில, முன் வினைப் பயனால் உண்டாகும் துன்பம் தீர அருள் நல்கும் பல்லவனீச்சரம் ஆகும்.

711. பத்தர் ஏத்தும் பட்டினத்துப்
பல்லவனீச்சரத்து எம்
அத்தன் தன்னை அணி கொள்காழி
ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேரச் செப்பு மாந்தர்
தீவினை நோய் இலராய்
ஒத்துஅமைந்த உம்பர்வானில்
உயர்வினொடு ஓங்குவரே.

தெளிவுரை : பக்தர்கள் எல்லோரும் தொழுது ஏத்தும் காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் மேவும் எம் அன்பிற்குரிய ஈசனைப் போற்றிக் காழியின் ஞானசம்பந்தன் சொல்லிய இத் திருப்பதிகத்தைச் சித்தத்தில் பதித்துச் சொல்ல வல்லவர்கள், தீவினையாகிய நோய் அற்றவராய், தேவர் உலகில் ஒத்த உரிமை பூண்டு உயர்வுடன் ஓங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

66. திருச்சண்பை நகர் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

712. பங்கம் ஏறு மதிசேர் சடையார்
விடையார் பல வேதம்
அங்கம் ஆறு மறை நான்கவையும்
ஆளார் மீன்ஆரும்
வங்க மேவு கடல்வாழ் பரதர்
மனைக்கே நுனைமூக்கின்
சங்கம்ஏறி முத்தம் ஈனும்
சண்பை நகராரே.

தெளிவுரை : குறைவு உடைய சந்திரனைத் தரித்துச் சடைமுடியும் இடப வாகனமும் உடையவராய், நான் மறையாகவும் அதன் ஆறு அங்கமும் ஆகியவராய் விளங்கும் ஈசன், பல் வண்ணங்களை உடைய மீன்கள் திகழ, தோணிகள் மேவ, கடற்புரத்தில் வாழும் பரதர்கள் மனைக்குக் கூரிய மூக்குகளை உடைய சங்குப் பூச்சிகள் ஏறி முத்துக்களை ஈனுகின்ற சண்பை நகரத்திற்கு உரியவராவர்.

713. சூதகம் சேர் கொங்கையாள் ஓர்
பங்கர் சுடர்க் கமலப்
போதகம் சேர் புண்ணியனார்
பூத கண நாதர்
மேதகம் சேர் மேகம் அந்தண்
சோலையில் விண்ணார்ந்த
சாதகம் சேர் பானை நீர்சேர்
சண்பை நகராரே.

தெளிவுரை : தீண்டரிய தனங்கள் கொண்ட உமாதேவியை ஒரு பங்குடைய ஈசனார், ஒளிர்விடும் கமல மலரில் விளங்கும் புண்ணியனார்; பூத கணங்களுக்கெல்லாம் நாதனார். அவர், மேன்மையான மேகம் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க சோலை விண்ணார்ந்து விளங்கத் தேன், கமுகு முதலான மரங்களின் பாளைகளில் தேன் சொரியும் சண்பை நகரினர்.

714. மகரத்துஆடு கொடியோன்உடலம்
பொடிசெய்தவ னுடைய
நிகர்ஒப்பில்லாத தேவிக்குஅருள்செய்
நீலகண் டனார்
பகரத் தாரா அன்னம் பகன்றில்
பாதம் பணிந்து ஏத்தத்
தகரப் புன்னை தாழைப்பொழில்சேர்
சண்பை நகராரே.

தெளிவுரை : மன்மதனை எரித்துச் சாம்பலாக்கி, அவனுடைய தேவியாகிய இரதிக்கு மட்டும் தெரியுமாறு, அருள் செய்த நீலகண்டனாராகிய ஈசன், தாரா, அன்னும் முதலான பறவைகள் ஏத்திப் பணியப், புன்னை, தாழைப் பொழில்கள் சேர் சண்பை நகருடையவர்.

715. மொய்வல்லசுரர் தேவர்கடைந்த
முழுநஞ்சது உண்ட
தெய்வர்செய்ய உருவர்கரிய
கண்டர்திகழ் சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியின்
உருடயர் காதலால்
சைவர்பாசு பதர்கள் வணங்கும்
சண்பை நகராரே.

தெளிவுரை : வலிமையான அசுரர்களும், தேவர்களும் பாற்கடலில் அமுதம் நாடிக் கடைந்தபோது, முதற்கண் தோன்றிய நஞ்சு முழுவதும் உண்ட தெய்வநாயகர், சிவந்த வடிவினர்; கரிய கண்டத்தை உடையவர்; திகழும் மழுப்படையைக் கரத்தில் உடையவர்; வாள் படை உடையவர்; யானையின் தோலை உரித்தவர்; அன்புடன் பழகுவதில் சைவர்; பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகரார் ஆவர்.

716. கலம்ஆர் கடலுள் விடம்உண்டு அமரர்க்கு
அமுதம் அருள் செய்த
குலம்ஆர் கயிலைக் குன்றது உடைய
கொல்லை எருது ஏறி
நலமார் வெள்ளை நாளி கேரம்
விரியா நறும்பானை
சலம்ஆர் கரியின் மருப்புக்காட்டும்
சண்பை நகராரே.

தெளிவுரை : கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் ஏற்று உண்டு, தேவர்கள் அமுதம் அருந்துமாறு அருள் செய்த, கயிலைமலை நாயகர் இடபவாகனத்தில் அமரும் ஈசர், அப்பெருமான், தென்னை மரத்தின், விரியாத பாளையானது, யானையின் வெண்மையான கொம்பினை ஒத்து விளங்கும் எழில் கொண்ட சண்பை நகரத்தினர்.

717. மாகரம்சேர் அத்தியின் தோல்
போர்த்து மெய்ம் மாலான்
சூகரம்சேர் எயிறு பூண்ட
சோதியன் மேதக்க
ஆகரமகசேர் இப்பி முத்தை
அந்தண் வயலுக்கே
சாகரம்சேர் திரைகள் உந்தும்
சண்பை நகராரே.

தெளிவுரை : சிறப்பான நீண்ட துதிக்கையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருமால் பன்றி அவதாரம் மேற்கொண்ட ஞான்று, வெற்றிக் களிப்பில் திரிய, அவ்வாற்றலை அடக்கும் விதத்தில் அதன் பல்லை உகுத்து அணியாகப் பூண்ட சோதி வடிவினராய் விளங்குபவர் ஈசன். அவர், முத்துக்களின் பிறப்பிடமாகிய, கடலில் விளங்கும் சிப்பிகளைத், தம் அலைகளால் அழகிய வயலுக்கு உந்திச் செலுத்தும் சிறப்பினையுடைய சண்பை நகரினர் ஆவர்.

718. இருளைப் புரையு நிறத்தில் அரக்கன்
தனைஈடு அழிவித்து
அருளைச் செய்யும் அம்மான் ஏரார்
அந்தண் கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி அளக்கர்
வரையார் திரைக்கையால்
தரளத் தோடு பவளம் ஈனும்
சண்பை நகராரே.

தெளிவுரை : இருள் போன்ற கரிய நிறத்தினனாகிய இராவணனுடைய பெருமையைக் குலைத்துப் பின்னர் அவ் அரக்கன் பணிந்து வேண்ட அருள் செய்த அழகிய தலைவன், ஈசன். அப்பெருமான், வாசனை பொருந்திய மலர்களில் மருள் எனும் இசையை வண்டுகள் பாடவும், கடல் தனது உயர்ந்து விளங்கும் அலைகளாகிய கைகளால் முத்தும் பவளமும் வழங்கும் சண்பை நகரத்தினர்.

719. மண்தான் முழுதும் உண்டமாலும்
மலர்மிசை மேல்அயனும்
எண்தான் அறியா வண்ணநின்ற
இறைவன் மறையோதி
தண்டுஆர் குவளைக் கள்ளருந்தித்
தாமரைத் தாதின்மேல்
பண்தான் கொண்டு வண்டு பாடும்
சண்பை நகராரே.

தெளிவுரை : உலகத்தை முழுதும் உண்டு பாதுகாத்துப் பின்னர் வெளியே விடுத்த திருமாலும், மலர்மேல் உறைபவனாகிய பிரமனும், என்னளவும் அறியாதவாறு விளங்கி நின்ற இறைவன், ஈசன். வேதங்களால் போற்றிப் புகழப்பெற்றும் அப்பெருமான், வண்டானது குவளை மலரில் உள்ள தேனை அருந்தித் தாமரை மலரின்மேல் வட்டமிட்டு இசை பாடும் சண்பை நகரத்தவர் ஆவார்.

720.போதியாரும் பிண்டியாரும்
புகழ்அல சொன்னாலும்
நீதியாகக் கொண்டு அங்கு அருளு(ம்)
நின்மலன் இருநான்கின்
மாதிசித்தர் மாமறையின்
மன்னிய தொல்நூலர்
சாதிகீத வர்த்தமானர்
சண்பை நகராரே.

தெளிவுரை : பௌத்தர்களும், சமணர்களும் புகழற்ற சொற்களைக் கூறினாலும், அவற்றைப் புகழ்ச் சொல்லாக ஏற்று நடுநிலை பேணி அருள் நல்குபவர் ஈசன். அப்பெருமான், அட்டமாசித்திகளில் வல்லவர்; வேத விற்பன்னர்; சாதகம் செய்யப்படும் இசைக் கீதங்களில் மிக்கவர்; சண்பை நகரில் விளங்குபவர்.

721. வந்தியோடு பூசையல்லாப்
போழ்தின் மறைபேசிச்
சந்திபோதிற் சமாதி செய்யும்
சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னைஅழகார்
ஞானம் பந்தன்சொல்
சிந்தைசெய்து பாடவல்லார்
சிவகதி சேர்வாரே.

தெளிவுரை : வந்தனை செய்து வழிபட்டுப் பூசனை ஆற்றும் உமாதேவியுடன் வேதத்தின் சாரங்களை உபதேசித்து, ஏனைய காலை, மாலை முதலான சந்திக் காலத்தில் சமாதி நிலை கொண்டு அடியவர்களின் பக்த கோடிகளின் பூசைகளை ஏற்று விளங்கும் சண்பை நகர் மேய செவ்வண்ணனாகிய ஈசனை, ஞானசம்பந்தன் ஏத்திப்பாடிய அழகு பொருந்திய இச்சொல் மாலையைச் சிந்தித்துப் போற்றிப் பாடவல்லவர்கள் சிவகதி அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

67. திருப்பழனம் (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

722. வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு
வெள்ளை எருதேறிப்
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரி தோலார்
நாதா எனவு(ம்) நக்கா எனவு(ம்)
நம்பா எம் நின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார்
பழன நகராரே.

தெளிவுரை : வேதத்தை ஓதி, முப்புரி நூல் தரித்து வெண்மையான இடபத்தில் அமர்ந்து, பூத கணங்கள் புடை சூழ, புலியின் தோலை ஆடையாக உடுத்தி, பொலியும் சிறப்புடன் காட்சி நல்கும் ஈசன், நாதா ! தொழுபவர்களின் பாவம் தீர்ப்பவர். அவர் பழன நகரில் விளங்குபவர்.

723. கண்மேல் கண்ணும் சடைமேல் பிறையும்
உடையார் காலனைப்
புண்ணாறுதிரம் எதிர்ஆறுஓடப்
பொன்றப்புறம் தாளால்
எண்ணாதுஉதைத்த எந்தை பெருமான்
இமவான் மகளோடும்
பண்ணார் களிவண்டு அறைபூஞ்சோலைப்
பழன நகராரே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணும் சடையின்மேல் பிறைச் சந்திரனும் உடைய ஈசன், மார்க்கண்டேயருக்கு உதவும் வகையில், காலனைப் புண்படுத்தி உதிரம் வெளிப்பட்டு ஆறாக ஓடுமாறு, புறந்தாளால், அவனை ஒரு பொருட்டாகக் கருதாமல் உதைத்தவர். அப்பெருமான், உமாதேவியோடு, வண்டுகள் மகிழ்வுடன் பண்ணிசைக்கும் பழன நகரில் விளங்குபவர்.

724. பிறையும் புனலும் சடைமேல் உடையார்
பறைபோல் விழிகட்பேய்
உறையு மயானம் இடமா உடையார்
உலகர் தலைமகன்
அறையு மலர்கொண்டு அடியார் பரவி
ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப்
பழன நகராரே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும், கங்கையும் சடைமேல் உடையவர்; பறை போன்ற அகன்ற விழிகள் உடைய போய் உறையும் மயானத்தை இடமாக உடையவர்; உலகில் தேன் துளிர்க்கும் மேலான மலர்கள் கொண்டு தூவி, அடியவர்கள் பாடியும் ஆடியும் மகிழ, ஒலிக்கும் சங்கும், நைவேத்தியப் பிரசாதங்களும் எஞ்ஞான்றும் மல்கிப் பெருகும் பழன நகரில் விளங்குபவர், ஈசன்.

725. உரமன்னுயர் கோட்டு உலறுகூகை
அலறு மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி
எழிலார் அவர் மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற
பெம்மான் எமையாளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன்
பழன நகராரே.

தெளிவுரை : வலிமையான உலர்ந்து போன் கிளைகளில் கோட்டான்கள் அலறும் மயனாத்தில், இரவில் பூத கணங்கள்  பாடியும் ஆடியும் களிக்க, பிரம கபாலம் ஏந்தி உணவு கொண்ட பெருமான், எமை ஆள்கின்ற பரமன்; கடவுள்; பரமேஸ்வரன். அவர் பழன நகரில் வீற்றிருப்பவர்.

726. குலவெஞ்சிலையான் மதில் மூன்றெரித்த
கொல் ஏறுடை அண்ணல்
கலவ மயிலும் குயிலும் பயிலும்
கடல்போல் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள்
குதிகொண்டு எதிர் உந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும்
பழன நகராரே.

தெளிவுரை : மலைகளில் சிறப்புடைய மேருவை வில்லாக உடையவன், மூன்று மதில்களை எதிர்த்து அழித்தவன், இடபவாகனம் உடைய அண்ணலாகிய ஈசன். அவர், தோகையுடைய மயிலும் குயிலும் விளங்கும் நீர்வளம் மிக்க விரிந்த காவிரியின் கரைகளில், மேலான அழகிய மாங்கனிகளும், பலாப்பழங்களும் அலைகளால் கொண்டு சேர்க்கும் பழன நகரில் விளங்குபவர்.

727. வீளைக்குரலும் விளிச் சங்கொலியும்
விழவின்னொலி ஓவா
மூளைத்தலை கொண்டு அடியார் ஏத்தப்
பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலைஆர் தெங்கில்
குலை ஆர் வாழையின்
பாளைக் கமுகின் பழம்வீழ்சோலைப்
பழன நகராரே.

தெளிவுரை : பேரிரைச்சலும், சங்கின் ஒலியும், திருவிழாக்களின் ஆராவாரமும் ஓயாத வகையில், சேறுகள் ஈரம் பொருந்தி ஈளை கொண்டு விளங்கும் ஆற்றுப் படுகையில், தென்னை, வாழை, கமுகு ஆகியவற்றின் குலைகள் வீழும் சோலைகள் உடையது பழனநகர். ஆங்குப் பிரம கபாலம் ஏந்தி, அடியவர்கள் போற்றி நிற்க, யாராலும் வெல்ல முடியாத மதில்களை எரித்த ஈசன் விளங்குகின்றார்.

728. பொய்யமொழியார் முறையால் ஏத்திப்
புகழ்வார் திருமேனி
செய்யார்கரிய மிடற்றார் வெண்ணூல்
சேர்ந்த அகலத்தார்
கைஆடலினார் புனலாய்மல்கு
சடைமேல் பிறை யோடும்
பையாடு அரவம் உடனே வைத்தார்
பழன நகராரே.

தெளிவுரை : பொய்ம்மை நயவாதவர்களாகிய அடியவர்கள் பூசா விதிப்படி ஈசனை ஏத்திப் புகழவும், சிவந்த திருமேனியில் கரிய கண்டத்தவராகிய அவர், முப்புரிநூல் விரிந்த மார்பில் விளங்க, கைகளை வீசி ஆட, கங்கை சடையில் மல்க, அதன் மீது பிறைச் சந்திரன் திகழ, படம் திகழும் அரவத்தை உடன் வைத்தவர் ஆவார். அவர் பழன நகரில் வீற்றிருப்பவர்.

729. மஞ்சோங்குஉயரம் உடையான் மலையை
மாறாய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறுநான்கும்
அடர ஊன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறு அணிந்த
நம்பால் வம்பு ஆரும்
பைந்தா மரைகள் கழனிசூழ்ந்த
பழன நகராரே.

தெளிவுரை : ஆகாயத்தை ஓங்கி உயரமாய் விளங்கும் கயிலை மலையை இயல்பிற்கு மாறாக எடுத்தவனுடைய இருபது தோள்கள் அழியுமாறு விரலால் ஊன்றிய ஈசனார், திருநீறு அணிந்து மணம் மிக்க தாமரைகள், கழனிகள் சூழ்ந்த பழன நகரில் வீற்றிருப்பவர். (அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும் (5+5+6+4=20) இருபது).

730. கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை
கமழ்புன் சடையார் விண்
முடியாப் படிமூ வடியால் உலக
முழுதும் தாவிய
நெடியான் நீள்தா மரைமேல் அயனு(ம்)
நேடிக் காணாத
படியார் பொடியாடு அகலம்உடையார்
பழன நகராரே.

தெளிவுரை : வண்டுகள் சூழும் மணம் பொருந்திய கொன்றை மாலை கமழ் புன்சடை யுடைய ஈசன், வானத்தை உச்சியாகக் கொண்ட உலகத்தை மூவடியால் தாவி அளந்த திருமால் மற்றும் தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமன் ஆகியோர் தேடியும் காணாதபடி திருநீறு பூசியவராய், விரிந்து பெரிதாய் நீண்டார். அவர் பழன நகரில் வீற்றிருப்பவர்.

731. கண்தான் கழுவா முன்னே ஓடிக்
கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும்சிறுசொல்
ஓரார் பாராட்ட
வண்தா மரையில் மலர்மேல் நறவ
மதுவாய் மிகவுண்டு
பண்தான் கெழும வண்டியாழ் செய்யும்
பழன நகராரே.

தெளிவுரை : உடல் தூய்மை முதலான புறத் தூய்மை செய்து கொள்ளாதவர்களாய் உணவைக் கொள்பவர்களுடைய உரைகள் சிறுமையானவை யாகும். அவற்றை ஏற்காது, அடியவர்கள் பாராட்டுமாறு, தாமரை மலரில் உள்ள தேனை வண்டுகள் மாந்தி யாழின் இசைபாடும் பழனநகரில் ஈசன் வீற்றிருக்கின்றார்.

732. வேய்முத்து ஓங்கி விரைமுன் பரக்கும்
வேணுபுரம் தன்னுள்
நாஉய்த்து அனைய திறலான்மிக்க
ஞானசம் பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும்
பெருமான் பழனத்தை
வாயிற் பொலிந்த மாலை பத்தும்
வல்லார் நல்லாரே.

தெளிவுரை : மூங்கில் முதிர்ந்து முத்துக்கள் பெருகிச் சேரும் வேணுபுரத்தில், உய்யும்படியான உறுதிபயக்கும் சொல்திறன் மிக்க ஞானசம்பந்தன், பேசற்கு இனிய பாடலாய்ப் பழனத்தில் வீற்றிருக்கும் பெருமானைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லார்கள் நல்லவராய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

68. திருக்கயிலாயம் (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)

திருச்சிற்றம்பலம்

733. பொடியகாள் உருவர் புலியின்அதளர்
புரிநூல் திகழ் மார்பில்
கடிகொள் கொன்றை கலந்த நீற்றர்
கறைசேர் கண்டத்தர்
இடயகுரலால் இரியுமடங்கல்
தொடங்கு முனைச்சாரல்
கடிய விடைமேல் கொடியொன்றுடையார்
கயிலை மலையாரே.

தெளிவுரை : ஈசன் திருநீற்று மேனியர்; புலியின் தோலை உடையாகக் கொண்டவர்; முப்புரிநூல் அணிந்த மார்பில் மணம் பொருந்திய கொன்றை மலர் சூடித் திருநீறு தரித்தவர்; கறை பதிந்த கண்டத்தை உடையவர்; இடி முழக்கத்தைக் கேட்ட சிங்கம் அஞ்சி நடுங்கும் சாரலில் இடபக் கொடியுடையவர். அவர் கயிலை மலை நாயகர்.

734. புரிகொள் சடையர் அடியர்க்கு எளியார்
கிளிசேர்மொழி மங்கை
தெரிய உருவில் வைத்து உகந்த
தேவர்பெரு மானார்
பரிய களிற்றை அரவு விழுங்கி
மழுங்க இருள்கூர்ந்த
கரிய மிடற்றர் செய்யமேனிக்
கயிலை மலையாரே.

தெளிவுரை : சடையுடைய ஈசன், அடியவர்க்கு எளிமையானவர்; உமாதேவியை, யாவரும் காணுமாறு ஒரு பாகத்தில் வைத்து மகிழந்த தேவர் பெருமான்; பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்க இருள் பரவுதலைப் போன்ற கரிய கண்டத்தை உடையவர். அவர் சிவந்த திருமேனியுடைய கயிலைமலை நாதர்.

735. மாவின் உரிவை மங்கைவெருவ
மூடிமுடி தன்மேல்
மேவு மதியு(ம்) நதியம் வைத்த
இறைவர் கழல் உன்னும்
தேவர் தேவர் திரிசூ லத்தர்
திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கல் கனைசூழ்
கயிலை மலையாரே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துச் சடைமுடியில், பிறைச் சந்திரனும், கங்கை நதியும் வைத்த இறைவர், எல்லோரும் அவர் திருவடியைத் தியானிக்க விளங்கும் திரிசூலத்தினர். அவர் வானரங்கள் சேர் சோலைகளும், அஞ்சத்தக்க கற்சுனைகளும் சூழ் கயிலைமலையார்.

736. முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட
முதல்வர் மதனன்றன்
தென்நீர்உருவம் அழியத்திருக்கண்
சிவந்த நுதலினார்
மன்னீர் மடுவும் படுகல் லறையின்
உழுவை சினம் கொண்டு
கல்நீர் வரைமேல் இரைமுன் தேடும்
கயிலை மலையாரே.

தெளிவுரை : கடலில் சூழ்ந்த நஞ்சினை உண்ட முதல்வராகிய ஈசன், மன்மதனுடைய அழகிய உருவத்தை அழித்த திருவிழியை உடைய நெற்றியினர். நிலைத்த நீர் நிலையுடைய சுனைகளும் ஆங்கு நிறைந்து உள்ளன. கற் குகைகளில் உள்ள புலி சினம் கொண்டு எழுந்து கல்லூற்றுக் கரையில் நின்று இரைதேடும் அமைப்புடைய கயிலையின் நாதர், ஈசனார்.

737. ஒன்றும் பலவு மாய வேடத்து
ஒருவர் கழல் சேர்வார்
நன்று நினைத்து நாடற்கு உரியார்
கூடித் திரண்டு எங்கும்
தென்றி இருளில் திகைத்த கரிதன்
சாரல் நெறி யோடிக்
கன்றும் பிடியும் அடிவாரம் சேர்
கயிலை மலை யாரே.

தெளிவுரை : ஒருவனாகியும் பலவாகியும் விளங்கும் வடிவத்தை யுடைய ஒப்பற்றவராகிய ஈசன், கழலை வணங்குபவர்களும்  பக்தர்களும், பேரின்பத்தை முத்திப்பேற்றை விரும்பும் ஞானிகளும் கூடித்திரண்டு விளங்க, திகைத்த களிறு தன் கன்றுடன் அடிவாரம் சேரும் சிறப்புடைய கயிலை மலையார்.

738. தாதார் கொன்றை தயங்கு முடியர்
முயங்கு மடவாளைப்
போதார் பாக மாகவைத்த
புனிதர் பனிமல்கும்
மூதார் உலகின் முனிவர் உடனாய்
அறநான்கு அருள்செய்த
காதார் குழையர் வேதத்திரளர்
கயிலை மலையாரே.

தெளிவுரை : மகரந்தம் விளங்கும் கொன்றை மலரும், ஒளிரும் சடைமுடியும் கொண்டு, பொருந்திய உமாதேவியை மெல்லிய இடப் பாகத்தில் வைத்த புனிதராகிய ஈசன், முதிர்ச்சி யடைந்த சனகாதி முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனப் பெறும் நான்கு அறங்களையும் அருளிச் செய்த, காதில் குழையும், நாவில் வேதத் திரட்சியும் உடைய கயிலை மலையார் ஆவார்.

739. தொடுத்தார் புரமூன்று எரியச்சிலைமேல்
எரிஒண் பகழியார்
எடுத்தான் திரள்தோள் முடிகள் பத்தும்
இடிய விரல்வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளாக்
குறுகி வரும் கூற்றைக்
கடுத்து ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார்
கயிலை மலையாரே.

தெளிவுரை : முப்புரங்கள் எரியுண்ணுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு, நெருப்பை அம்பாகத் தொடுத்த இறைவன், மலையைப் பெயர்த்த அரக்கனுடைய முடிகளும் திரட்சியான தோள்களும் நொறுங்குமாறு தமது திருப்பாத விரலால் அழுத்தினார். பின்னர், அவ்வரக்கன் இசைத்துப் போற்ற, தெய்வப் படைகளை வழங்கி அருள்புரிய, தன்பால் நண்ணிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவரும் பொருட்டுக் குறுகிவந்த கூற்றுவனை வெகுண்டு, திருப்பாதத்தால் உதைத்தவர் கயிலைமலையார்.

740. ஊணாப் பலிகொண்டு உலகில் ஏற்றார்
இலகு மணி நாகம்
பூண் நாண் ஆரமாகப் பூண்டார்
புகழும் இருவர்தாம்
பேணா ஓடி நேடஎங்கும்
பிறங்கும் எரியாகிக்
காணா வண்ணம் உயர்ந்தார்போலும்
கயிலை மலையாரே.

தெளிவுரை : பிரம கபாலத்தை ஏந்தி உணவுக்காக, உலகில் பிச்சையேற்ற ஈசன், மாணிக்கக் கற்களையுடைய நாகத்தைப் பூணும் மாலையாகப் பூண்டவர். திருமாலும் பிரமனும் போற்றித் துதிக்காது தேடித் திரியக் காண இயலாது ஒளித்து, பின்னர்ப் பேரொளிப் பிழம்பாகி உயர்ந்தவர் கயிலை மலையாரே.

741. விருதுபகரும் வெஞ்சொல் சமணர்
வஞ்சச் சாக்கியர்
பொருது பகரு(ம்) மொழியைக் கொள்ளார்ஃ
புகழ்வார்க்கு அணியராய்
எருதுஒன்று உகைத்துஇங்கு இடுவார்தம்பால்
இரந்து உண்டு இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார்போலும்
கயிலை மலையாரே.

தெளிவுரை : பட்டங்கள் கொண்டு பெருமை பேசி நிலவும் சமணர் மற்றும் சாக்கியர்கள், விவாதம் செய்து தர்க்கித்துக் கூறும் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர், ஈசன். அப்பெருமான், புகழ்ந்து போற்றும் அன்பர்களுக்கு அண்மையில் இருப்பவராய், இடப வாகனத்தில் ஏறி அமர்ந்து, பிச்சை இடுபவர்களிடம் இனிதுடன் ஏற்று, உண்டு, தன்னை இச் செயல் குறித்து இகழ்ந்து பேசினாலும் அவற்றை விரும்பி ஏற்று கயிலைமலையில் இருப்பவர்.

742. போர்ஆர் கடலில் புலைசூழ்காழிப்
புகழார் சம்பந்தன்
கார்ஆர் மேகம் குடிகொள் சாரல்
கயிலை மலையார் மேல்
தேரா உரைத்த செஞ்சொல் மாலை
செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள் வானோர் உலகில்
மருவு மனத்தாரே.

தெளிவுரை : அலைகள் மோதுகின்ற கடலின் நீர் சூழ் காழியின் புகழ் மிக்க ஞானசம்பந்தன், கரிய குளிர்ந்த மேகங்கள் தங்கும் சாரலை யுடைய கயிலை மலையார் மேல் தேர்ந்து உரைத்த செஞ்சொல் மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் சொல்கின்ற அடியவர் மேல் பிணிகள் வாரா. வானோர், உலகத்தவர் எவ்வகையில் மகிழ்வுடன் விளங்குகின்றனரோ அவ்வகையில் இன்பம் மருவும் மனத்தினராய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

69. திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)

திருச்சிற்றம்பலம்

743. பூவார் மலர்கொண்டு அடியார் தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று
மூவர்க்கு அருள்செய்தார்
தூமா மழைநின்று அதிரவெருவித்
தொறுவின் நிரையோடும்
ஆமா(ம்) பிணைவந்து அணையும் சாரல்
அண்ணாமலை யாரே.

தெளிவுரை : பூவுலகத்தில் உள்ள அடியவர்கள் மலர் கொண்டு தூவித் தொழவும், வானவர்கள் புகழ்ந்து ஏத்தவும், ஈசனார் முப்புரங்களை எரித்த காலத்தில் மூவர்க்கு அருள் செய்தார். இருள் போன்ற புகை சூழ்ந்த மேகம் குமுற மழை பொழிய, வெருவிய ஊர்ப் பசுக் கூட்டங்களும், காட்டுப் பசுக்களும் தமது பிணையுடன் வந்து சேரும் மலைச் சாரலை உடையது அண்ணாமலை. ஆங்கு வீற்றிருப்பவர் அண்ணாமலை நாதர்.

744. மஞ்சைப் போழ்ந்த மதியம்சூடும்
வானோர் பெருமானார்
நஞ்சைக் கண்டத்து அடக்கும் அதுவும்
நன்மைப் பொருள் போலும்
வெஞ்சொல் பேசும் வேடர் மடவார்
இதணம் அது ஏறி
அஞ்சொற் கிளிகள் ஆயோஎன்னும்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : மேகத்தைக் கிழித்து ஊடுருவிச் செல்லும் சந்திரனைச் சூடும் வானோர் பெருமான், நஞ்சினைக் கண்டத்தில் அடக்கிய செயலும் ஒரு தன்மையை ஈட்டது போலும் ! கொடுமைக் குணம் பதிந்த விலங்குகளை வேட்டையாடும் வேடர்கள் வாயிலிருந்து, வெட்டு, குத்து போன்ற சொற்கள் வெளிவருதலை விடுத்துத் தினைப்புனம் காத்தல் பொருட்டு அமைக்கப் பெற்ற காவற் பரணியில் உள்ள மகளிர், அழகாகச் சொற்பயிலும் கிளிகளை விரட்ட, ஆயோ என்று கூறலானார். இச்சொற்கள் ஈசன் நஞ்சு அருந்திய செயல். அமையப் பெற்றது எனும் நயம் தோன்றலாயிற்று. இத்தகைய தன்மையுடையது அண்ணாமலை. அவ் அண்ணாமலைக்கு உரியவர் ஈசன்.

745. ஞானத்திரளாய் நின்ற பெருமான்
நல்ல அடியார் மேல்
ஊனத்திரளை நீக்கும் அதுவும்
உண்மைப் பொருள் போலும்
ஏனத்திரனோடு இனமான் கரடி
இழியும் இரவின் கண்
ஆனைத் திரள்வந்து அணையும்சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : ஈசன் ஞானத்திரட்சியாக விளங்கித் தன்னை வணங்கும் அடியவர்கள்பால் உள்ள அஞ்ஞானமாகிய ஊனத் திரட்சியைத் தீர்க்கின்றார். அவர், பன்றிக் கூட்டங்கள் மான் கரடிகள் மற்றும் யானைக் கூட்டங்கள் சாரும் அண்ணாமலைக்கு உரியவர்.

746. இழைத்த இடையாள் உமையாள் பங்கர்
இமையோõ பெருமானார்
தழைத்த சடையார் விடையொன்று ஏறித்
தரியார் புரம் எய்தார்
பிழைத்த பிடியைக் காணாது ஓடிப்
பெருங்கை மதவேழம்
அழைத்துத் திரிந்து அங்கு உறங்கும் சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : நூலிழை போன்ற மெல்லிய இடையை உடைய உமாதேவியைப் பங்குடைய, தேவர் தலைவராகிய ஈசன், தழைத்து விரிந்த சடையுடையவர், இடப வாகனம் ஏறி முப்புரத்தை எரித்தவர். அவர், பெண் யானையைத் தேடிய ஆண் யானையானது திரிந்து களைத்து உறங்கும் சாரலையுடைய அண்ணமலையில் வீற்றிருப்பவர்.

747. உருவில் திகழும் உமையாள் பங்கர்
இமையோர் பெருமானார்
செருவில் லொருகால் வளையஊன்றிச்
செந்தீ எழுவித்தார்
பருவில் குறவர் புனத்தில்குவித்த
பருமாமணி முத்தம்
அருவித் திரளோடு இழியும் சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : ஒரே உருவாக உமையவள் இடப்பாகமும் ஈசன் வலப்பாகமுமாக, அர்த்தநாரியாய், தேவர் பெருமானாய், போர் செய்தற்குரியதாக மேருமலையை வில்லாக்கி வளைத்து, முப்புரத்தை எரிக்கு இரையாக்கியவர், இறைவன். அவர், வில்லை உடைய குறவர்கள் புனத்தில் குவித்த மணிகளும் முத்துக்களும் அருவிகளில் கலந்து செல்லும் சாரலையுடைய அண்ணாமலையார் ஆவார்.

748. எனைத்துஓர் ஊழி அடியார் ஏத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவம்தீர்க்கு(ம்)
நிமலர்உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன்
கைம்மேல் குழலூத
அனைத்தும் சென்று திரளும்சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : எத்தகைய ஊழிக்காலத்திலும் அடியவர்களால் வணங்கப் பெறும் ஒரே கடவுளாகிய தேவர்பெருமான், நினைத்து வணங்கும் அன்பர்களுடைய பாவங்களைத் தீர்க்கும் நிமலர். அப்பெருமான் உறையும் இடமாவது, எருமைகளைத் தமது கையில் உள்ள வேய்ங்குழலால் ஆயர்கள் இசை எழுப்பச் சேரும் மலைச்சாரலையுடைய அண்ணாமலை ஆகும்.

749. வந்தித்திருக்கும் அடியார் தங்கள்
வருமேல் வினையோடு
பந்தித் திருந்த பாவம்தீர்க்கும்
பரமன் உறை கோயில்
முந்தி எழுந்த முழவின் ஓசை
முதுகல்வரை கண்மேல்
அந்திப் பிறைவந்து அணையும்சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : வணங்கிப் போற்றும் அடியவர்களின் மேல், பற்றியிருக்கும் வினையோடு பாவத்தையும் தீர்க்கின்ற பரமன் உறையும் இடமாவது, முழவின் ஓசை ஒலிக்கப் பிறைச் சந்திரன் சாரும் அண்ணா மலையாகும்.

750. மறந்தான் கருதி வலியை  நினைந்து
மாறாய் எடுத்தான் தோள்
நிறந்தான் முரிய நெரிய ஊன்றி
நிறைய அருள் செய்தார்.
திறந்தான் காட்டி அருளாய் என்று
தேவர் அவர் வேண்ட
அறந்தான் காட்டி அருளிச் செய்தார்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : அறநெறியை விட்டு நீங்கி மறநெறியாகிய வன்மையை மனத்தில் தேக்கித் தன் வலிமையான ஆற்றலை நினைத்துக் கொண்டு, இயல்பிற்கு விரோதமாக மலையைப் பெயர்த்த இராவணன் தோளின் அழகு அழியுமாறும், துன்புற்று வருந்துமாறும், தன் திருப்பாத விரலால் ஊன்றிய ஈசனார், பின்னர் அருள் புரியுமாறு அவ்வரக்கன் வேண்டிப் போற்றித் தொழ அறத்தின் வழி நின்று அருள் செய்தார். அவர் தேவர் பெருமானாகிய அண்ணாமலையார் ஆவார்.

751. தேடிக் காணார் திருமால் பிரமன்
தேவர் பெரு மானை
மூடி ஓங்கி முதுவேய் உகுத்த
முத்தம் பலகொண்டு
கூடிக் குறவர் மடவார் குவித்துக்
கொள்ள வம்மின் என்று
ஆடிப்பாடி அளக்கும் சாரல்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவராய் விளங்கியவர் தேவர் பெருமானாகிய ஈசர். அவர், மூங்கில்களிலிருந்து உண்டான முத்துக்களைக் குறமகளிர் குவித்து இவற்றைப் பெற்றுக் கொள்ள வம்மின் என் அழைக்குமாறு விளங்கும் சாரலை உடைய அண்ணாமலையார் ஆவார்.

752. தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழி மின்கள்
வட்ட மலையாள் உமையாள் பங்கர்
மன்னி உறை கோயில்
அட்டம் ஆளித் திரள்வந்தணையும்
அண்ணா மலையாரே.

தெளிவுரை : சமணர் மற்றும் பிறர் தூற்றிக் கூறும் சொற்களை மனத்தில் கொள்ளாது, ஈசனைப் போற்றித் தொழுமின்கள். அப்பெருமான் உமாதேவியோடு உறையும் இடம் சிங்கங்கள் திரளாகச் சேர்ந்து பக்கம் சாரும் அண்ணாமலை ஆகும்.

753. அல்லாடு அரவம் இயங்கும் சாரல்
அண்ணாமலை யாரை
நல்லார் பரவப் படுவான் காழி
ஞான சம் பந்தன்
சொல்லால் மலிந்த பாடலான
பத்தும் இவை கற்று
வல்லார்எல்லாம் வானோர் வணங்க
மன்னி வாழ்வாரே.

தெளிவுரை : அரவம் இயங்கும் சாரலையுடைய அண்ணாமலையாரை, நல்லோர்களால் போற்றி மதிக்கப்படும் காழியின் ஞானசம்பந்தன் பாடிய, மந்திரம் போன்ற உயர்ந்த சொற்கள் மலிந்த இத் திருப்பதிகத்தை நன்கு கற்றுத் தேர்ந்து பாட வல்லார்கள், வானவர்களால் போற்றி வணங்கத் தக்கவர்களாய்ச் சிறப்புடன் வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

70. திருஈங்கோய்மலை (அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

754. வானத்துயர்தண் மதிதோய் சடைமேல்
மத்த மலர் சூடித்
தேனொத்தனமென் மொழிமான் விழியாள்
தேவி பாகமாக்
கானத்து இரவில் எரிகொண்டாடும்
கடவுள் உலகேத்த
ஏனத் திரள்வந்து இழியும் சாரல்
ஈங்கோய் மலை யாரே.

தெளிவுரை : ஆகாயத்தில் உயர்ந்து இருக்கும் குளிர்ந்த சந்திரனை வைத்த சடையின்மீது, ஊமத்த மலர் சூடி, தேன்போன்ற இனிமையான மொழியும், மான் விழியும் உடைய உமாதேவியை பாகமாகக் கொண்டு, மயானத்தில், இரவில் அனல் ஏந்தி ஆடும் கடவுள், உலகத்தவர் போற்றித் தொழுமாறு விளங்கும், பன்றியின் கூட்டங்கள் சாரும் ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர் ஆவர்.

755. சூலப்படையொன்று ஏந்திஇரவில்
கடுகாடு இடமாகக்
கோலச் சடைகள் தாழக்குழல்யாழ்
மொந்தை கொட்டவே
பாலொத் தனைய மொழியாள்காண
ஆடும் பரமனார்
ஏலந்தொடு நல் லிலவம்கமழும்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : சூலப்படையைக் கரத்தில் ஏந்தி சுடுகாட்டினை இடமாகக் கொண்டு, அழகிய சடைகள் தாழ்ந்து பரவ, இரவில், யாழிசையும் மொந்தை என்னும் ஒலிக்கருவியும் அதிர்ந்து கொட்ட பால் போன்ற இனிய மொழியுடைய உமாதேவி மகிழுமாறு நடனம் புரியும் பரமனார், ஏலமும், இலவங்கமும் கமழும் ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

756. கண்கொள் நுதலார் கறைகொள் மிடற்றார்
கரியின் உரிதோலார்
விண்கொள் மதிசேர் சடையார் விடையார்
கொடியார் வெண்ணீறு
பெண்கொள் திருமார் பதனிற் பூசும்
பெம்மான் எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல்
ஈங்கோய் மலை யாரே.

தெளிவுரை : ஈசன், நெற்றியில் கண்ணுடையவர்; கறையுடைய கண்டத்தை உடையவர்; யானையின் தோலை உரித்துப் போர்த்தி யிருப்பவர்; வானத்தில் விளங்கும் சந்திரனைச் சடையில் சேர்த்தவர்; இடபக் கொடி உடையவர்; தேகத்தில் ஒரு பெண்ணைப் பாகத்தில் கொண்டிருந்து மார்பல் திருவெண்ணீறு பூசுபவர் இத்தகைய பெருமான் எம்மை ஆள்பவர். அவர் கரடியும் சிங்கமும் திரியும் சாரலைக் கொண்ட ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

757. மறையின் னிசையார் நெறிமென் கூந்தல்
மலையான் மகளோடும்
குறைவெண் பிறையும் புனலும் நிலவும்
குளிர்புன்சடை தாழப்
பறையும் குழலும் கழலும் ஆர்ப்பப்
படுகாட்டு எரியாடும்
இறைவர் சிறைவண்டு அறைபூஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : வளைந்து சுருண்ட மெல்லிய கூந்தலையுடைய வேதத்தின் இசை பொருந்திய உமாதேவியோடு சடையில் வெண்மையான பிறைச் சந்திரனும் கங்கையும் நிலவ, பறை முழங்கவும் குழல் இசைக்கவும் வீரக்கழல் ஆர்க்கவும் சுடுகாட்டில் நெருப்பை ஏந்தி ஆடும் இறைவர், சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் பூஞ்சாரலைக் கொண்ட ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

758. நொந்த சுடலைப் பொடிநீறு அணிவார்
நுதல்சேர் கண்ணினார்
கந்த மலர்கள் பலவும் நிலவு
கமழ்புன் சடைதாழப்
பந்தண் விரலான் பாகமாகப்
படுகாட்டு எரியாடும்
எந்தம் மடிகள் கடிகொள் சாரல்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : ஈசன், வெந்த  சுடலையின் சாம்பலாகிய திருநீற்றை அணிபவர்; நெற்றியில் கண்ணுடையவர்; மணம் வீசும் மலர்கள் பலவும் நிலவி நிற்கக் கமழும் சடை விரவ, உமாதேவியைப் பாகமாக உடையவர், சுடுகாட்டில் நெருப்பு ஏந்தி ஆடும் எம் அடிகள்; மணம் கமழும் சாரலையுடைய ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

759. நீறுஆர் அகலம் உடையார் நிரையார்
கொன்றை அரவோடும்
ஆறுஆர் சடையார் அயில் வெங்கணையால்
அவுணர் புர மூன்றும்
சீறா எரிசெய் தேவர் பெருமான்
செங்கண் அடல் வெள்ளை
ஏறுஆர் கொடியார் உமையா ளோடும்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : திருவெண்ணீறு தரித்தவரும், கொன்றை மலரும், அரவும் கங்கையும் சடையில் கொண்டவரும், கூர்மையான கொடிய கணை தொடுத்து முப்புரங்களை எரித்துச் சாம்பலாக்கியவருமாகிய தேவர் பெருமான், வெண்மையான இடபக் கொடியேந்தி உமாதேவியுடன், ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

760. வினையாயின் தீர்த்து அருளே புரியும்
விகிர்தன விரிகொன்றை
நனைஆர் முடிமேல் மதியம்சூடு
நம்பான் நல மல்கு
தனையார் கமல மலர்மேல் உறைவான்
தலையோடு அனல் ஏந்தும்
எனையாள் உடையான் உமையாளோடும்
ஈங்கோய் மலை யாரே.

தெளிவுரை : வினைகளால் உண்டாகும் தீயவற்றைத் தீர்த்து நல்லவற்றைப் புரியும் விகிர்தன், விரிந்த கொன்றை யரும்பும் மலரும் பொருந்திய சடைமுடிமேல் வெண்மதியைச் சூடி நன் நலத்தைப் பெருகச் செய்பவன். அப்பெருமான் மலர்களில் சிறந்த தாமரையில் உறையும் பிரமனின் தலையோட்டினைக் கொண்டும், அங்கையில் அனல் ஏந்தியும் என்னை ஆட் கொள்பவர், உமாதேவியோடு ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

761. பரக்கும் பெருமை இலங்கை என்னும்
பதியிற் பொலிவாய
அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும்
அணி ஆர் விரல் தன்னால்
பெருக்கி அடர்த்து நிமலா போற்றி
என்று நின்றேத்த
இரக்கம் புரிந்தார் உமையாளோடும்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : பரந்த பெருமையுடைய இலங்கையின் வேந்தனான இராவணன் முடியும் தோளும் தன் அழகிய விரலால் அடர்த்துப் பின்னர் அவ்வரக்கன் வணங்கித் தொழுது ஏத்த இரங்கி அருள் புரிந்தவர், உமா தேவியுடன் வீற்றிருக்கும் ஈங்கோய் மலை ஈசர்.

762. வரியார் புலியின் உரிதோலுடையான்
மலையான் மகளோடும்
பிரியாது உடனாய் ஆடல் பேணும்
பெம்மான் திருமேனி
அரியோடு அயனும் அறியாவண்ணம்
அளவில் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : வரிகளையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டு, மலையான் மகளாகிய உமாதேவியோடு பிரியாது எப்போதும் உடனாய் விளங்கி, ஆடலை விரும்பும் பெருமான் திருமேனியை அரியோடு அயனும் அறியாத வண்ணம் பெரிய சோதிப் பிழம்பாய் நிமிர்ந்து ஈங்கோய் மலையில் வீற்றிருப்பவர்.

763. பிண்டி ஏன்று பெயரா நிற்கும்
பிணங்கு சமணரும்
மண்டை கலனாக் கொண்டு திரியு(ம்)
மதியில் தோரரும்
உண்டி வயிறுஆர் உரைகள் கொள்ளாது
உமையோடு உடனாகி
இண்டைச் சடையான் இமையோ பெருமான்
ஈங்கோய் மலையாரே.

தெளிவுரை : சமணரும் பௌத்தரும் கூறும் உரைகளைப் பெருட்டாக மதியாது, உமையோடு உடனாய் விளங்கும் இண்டை மாலையும் சடையும் உடையவராய் தேவர் தலைவராய் ஈங்கோய் மலையில் விளங்கும் நாதன், ஈசன்.

764. விழவார் ஒலியு(ம்) முழவும் ஓவா
வேணு புரந் தன்னுள்
அழலார் வண்ணத்து அடிகள் அருள்சேர்
அணிகொள் சம்பந்தன்
எழிலார் கனையும் பொழிலும் புடைசூழ்
ஈங்கோய் மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார்
கவலை களை வாரே.

தெளிவுரை : விழாக்களின் ஒலியும் முழவின் ஒலியும் ஓயாது விளங்கும் வேணுபுரத்தில் விளங்கும் அழல் போன்ற சிவந்த வண்ணம் உடைய அடிகளாகிய ஈசன் திருவருளைப் பெற்ற அழகு மிக்க ஞானசம்பந்தன், எழில் பொருந்திய சுனையும், பொழிலும் புடைசூழ விளங்கும் ஈங்கோய் மலையில் வீற்றிருக்கும் ஈசனார் திருவடிக்குச் சேர்ப்பித்த இத் திருப்பதிகத்தை உரைக்க வல்லவர்கள், கவலைகள் யாவும் நீங்கப் பெற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

71. திருநறையூர்ச் சித்தீச்சரம் (அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

765. பிறைகொள் சடையர் புலியின் உரியர்
பேழ்வாய் நாகத்தர்
கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும்
கையர் கங்காளர்
மறைகொள் கீதம் பாடச் சேடர்
மனையின் மகிழ் வெய்திச்
சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், பிறையைச் சூடிய சடையினர்; புலியின் தோலை உடையவர்; பிளந்த வாயையுடைய நாகத்தைப் பூண்டவர்; நீல கண்டத்தினர்; கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; எலும்பு மாலை கொண்டவர். அவர் வேத கீதங்கள் இசைக்கப் பெறும் பெருமை மிக்க இல்லங்களும், மகிழ்ச்சியுடன் தேன் உண்ணும் வண்டுகள் மிக்க விளங்கும் நறையூர் சித்தீச் சரத்தில் விளங்கும் ஈசனாரே !

766. பொங்கார் சடையர் புனலர் அனலர்
பூதம் பாடவே
தம்கா தலியும் தாமும் உடனாய்த்
தனியோர் விடையேறிக்
கொங்கார் கொன்றை வன்னிமத்தம்
சூடிக் குளிர் பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், நீண்டு வளரும் சடையினர்; கங்கையும், நெருப்பும் உடையவர். அவர் பூதகணங்கள் பாட்டு இசைக்கத் தம் காதலியாகிய உமா தேவியுடன் இடப வாகனத்தில் ஏறித் தேன் சொரியும் கொன்றை மலர், வன்னி, ஊமத்தம் சூடி, குளிர்ந்த பொய்கையில் அன்னம் தம் பெடையுடன் விளங்கும் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

767. முடிகொள் சடையர் முளைவெண் மதியர்
மூவா மேனி மேல்
பொடிகொள் நூலர் புலியின் அதளர்
புரிபுன் சடை தாழக்
கடிகொள் சோலை வயல்சூழ் மடுவில்
கயலார் இனம் பாயக்
கொடிகொள் மாடக் குழாம்ஆர் நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், சடைமுடியுடையவர், இளமையான பிறைமதி சூடியவர், மூப்பு அடையாத திருமேனி உடையவர், திருநீறு தரித்து, முப்புரிநூல் அணிந்து புலியின் தோலை உடுத்தியவர். அவர், சடைகள் தொங்க, மணம் மிகுந்த சோலையும் வயலும், கயல் விளங்கும் நீர் நிலைகளும் விளங்கும் தோரணங்கள் கொண்ட மாடங்களும் உடைய நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவர்.

768.  பின்தாழ் சடைமேல் நகுவெண் தலையர்
பிரமன் தலை யேந்தி
மின்தாழ் உருவில் சங்குஆர் குழைதான்
மிளிரும் ஒரு காதர்
பொன்தாழ் கொன்றை செருந்தி புன்னை
பொருந்து செண்பகம்
சென்றார் செல்வத் திருவார் நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : தாழ்ந்து விளங்கும் சடையின்மேல் தலைமாலை அணிந்து, கையில் பிரம கபாலம் ஏந்தி, மின்னலை விஞ்சிய ஒளி பொருந்திய சங்கால் ஆன குழையை ஒரு காதில் அணிந்து, பொன்னையும் விஞ்சிய கொன்றையும், செவ்வந்தி, புன்னனை, செண்பகம் ஆகிய மலர்களைச் சூடித் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவர் பரமன்.

769. நீரார் முடியர் கறைகொள் கண்டர்
மறைகள் நிறை நாவர்
பாரார் புகழால் பத்தர் சித்தர்
பாடி ஆடவே
தேரார் வீதி முழுவார்விழவின்
ஒலியும் திசைசெல்லச்
சீரார் கோலம் பொலியு(ம்) நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், கங்கையை முடியில் கொண்டவர்; நீலகண்டர்; வேதங்களாகிய உயர்ந்த சொற்களை மொழிபவர்; உலகத்தில் விளங்கும் புகழால் பக்தர்களும், சித்தர்களும் போற்றிப் பாடி ஆட, தேர் ஓடும் அகன்ற வீதிகளும், முழவு ஒலிக்கும் திருவிழாக்களின் ஒலி நான்கு திசைகளிலும் பரவப் பொலியும் நறையூர்ச் சித்தீச்சரத்தினர். அவர் அழகிய வடிவில் வீற்றிருக்கின்றார்.

770. நீண்ட சடையர் நிரைகொள் கொன்றை
விரைகொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன்னொளி கொள் மேனிப்
பவ ளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம் எழிலார் சோலை
இலங்கு கோபுரம்
தீண்டு மதியம் திகழு நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : ஈசன், நீண்டு வளர்ந்த சடை யுடையவர்; சரம் போன்று நீண்டுள்ள மணம் மிக்க கொன்றை மலரை மாலையாக உடையவர்; பொன் போன்று ஒளியுடைய திருமேனி உடையவர். அவர், பவளம் போன்ற செம்மையான எழில் மிக்க திருத்தொண்டர்கள் வந்து வணங்க, மாட மாளிகைகளும், சோலைகளும், வானத்தில் உள்ள சந்திரனைத் தீண்டும் உயர்ந்த கோபுரத்தையும் உடைய திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கின்றார்.

771. குழலார் சடையர் கொக்கின் இறகர்
கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர்
சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடைமேல்
இசைத்து விடை யேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார்
சித்தீச் சராத்தாரே.

தெளிவுரை : ஈசன், கூந்தலும் சடையும் உடையவர்; கொக்கின் இறகைச் சூடியவர்; அழகிய நிறத்தையுடைய ஊமத்தம்பூ தரித்தவர்; தழல் போன்ற சிவந்த திருமேனியில் வெண்மையான நீற்றினை அணிபவர்; சரிந்த கோவணத்தையுடையவர். அவர், அழகிய நாகத்தைப் புலித்தோல் உடையின் மேல் இசையப்பூண்டு, இடப வாகனத்தில் ஏறித் திருப்பாதத்தில் சிலம்பு ஒலிக்கச் சித்தீச்சரத்தில் வீற்று இருக்கும் பரமன் ஆவார்.

772. கரைஆர் கடல்சூழ் இலங்கை மன்னன்
கயிலை மலை தன்னை
வரைஆர் தோலை எடுக்க முடிகள்
நெரித்து மனம் ஒன்றி
உரைஆர் கீதம் பாட நல்ல
உலப்பில் அருள் செய்தார்
திரைஆர் புனல்சூழ் செல்வ நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : இலங்கை மன்னனாகிய இராவணன், கயிலை மலையைத் தன் தோளால் எடுக்க, அவன் முடிகளை நெரித்துப் பின்னர் மனம் ஒன்றிக் கீதம் இசைத்து வணங்கி வேண்ட, தெவிட்டாத நல்லருளைப் புரிந்தவர், செல்வம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்.

773.நெடியான்பிரமன் நேக்காணார்
நினைப்பார் மனத்தாராய்
அடியார் அவரும் அருமா மறையும்
அண்டத்து அமரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி
முதல்வா அருள் என்னச்
செடியார் செந்நெல் திகழு நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : நெடியவனான திருமாலும், பிரமனும் தேடிக் காணாதவராய் விளங்கித் தன்னை நினைத்துப் போற்றும் மனத்திடை உறைபவராய் விளங்குபவர் ஈசன். அடியவர்களும், வேதங்களும், அமரர்களும் தாழ்ந்து வணங்கி, அருள் குணங்களைக் கூறிப் போற்றி, முதல்வனே ! அருள் புரிவாயாக என்று வாழ்த்த, செந் நெற் கதிர்கள் புதர்போல் திகழும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருப்பவர் அவர்.

774. நின்றுஉண் சமணர் இருந்துஉண் தேரர்
நீண்ட போர்வையார்
ஒன்றும் உணரா ஊமர்வாயில்
உரைகேட்டு உழல்வீர்காள்
கன்றுஉண் பயப்பால் உண்ண முலையில்
கபாலம் அயல் பொழியச்
சென்று உண்டு ஆர்ந்துசேரு நறையூர்ச்
சித்தீச் சரத்தாரே.

தெளிவுரை : சமணர்களும், தேரர்களும் நற்பொருள் ஒன்றினையும் உணராதவராய்ப் பொருளற்றவைகள் மொழிய, அதனைக் கேட்டு வாடும் மக்களே ! கன்று, உண்ணும் விருப்பால் பாலை உண்ணவும், பின்பு பாத்திரம் வழியுமாறு தாய்ப் பசு பால் பொழியவும், மீண்டும் கன்று பால் உண்ணும் வளப்பம் மிக்க நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனைச் சேர்ந்து வணங்குவீராக.

775. குயிலார் கோல மாதவிகள்
குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேருநறையூர்ச்
சித்தீச் சரத்தாரை
மயிலார் சோலை சூழ்ந்தகாழி
மல்குசம் பந்தன்
பயில்வார்க்கும் இனிய பாடல்வல்லார்
பாவ நாசமே.

தெளிவுரை : அழகிய குயில்களும், மாதவி, சுரபுன்னை போன்ற மரங்களும், வயல்களும் சூழ்ந்த நறையூர்ச் சித்தீச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமானை, மயில் விளங்கும் சோலை சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தன் ஏத்திப்பாடிய பாடல்களைச் சொல்பவர்களின் பாவம் நலிந்து அழியும்.

திருச்சிற்றம்பலம்

72. திருக்குடந்தைக் காரோணம் (அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

776. வாரார் கொங்கை மாதோர் பாகம்
ஆகவார் சடை
நீரார் கங்கை திங்கள்சூடி
நெற்றி ஒற்றைக்கண்
கூரார் மழுவொன்று ஏந்திஅந்தண்
குழகன் குடமூக்கில்
காரார் கண்டத்து எண்தோள் எந்தை
காரோணத் தாரே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, நீண்ட சடையில் கங்கை ஏற்றுத் திங்கள் சூடி, நெற்றியில் ஒரு கண்ணுடன், கூரிய மழுவைக் கரத்தில் ஏந்திய குழகன், குடமூக்கில் கரிய மேகம் போன்ற கருமையான கண்டத்தினராய் எட்டுத் தோள்களுடன் விளங்கும் எந்தை காரோணத்தார் ஆவார்.

777. முடியார் மன்னர் மடமான் விழியார்
மூவுலகும் ஏத்தும்
படியார் பவள வாயார் பலரும்
பரவிப் பணிந்தேத்தக்
கொடியார் விடையார் மாடவீதிக்
குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவமயிலார்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : முடியுடை வேந்தர்களும், மான் விழி மாதர்களும், மற்றும் மூவுலகத்தவரும் ஏத்தும் உலகத்தில் பவளம் போன்ற செம்மையான சொற்கள் கூறும் பலரும், பணிந்து போற்ற இடபக் கொடியுடையவராகி ஈசர், மாட வீதிகளை யுடைய குடந்தைக் குழகரும், நறுமணம் கமழும் சோலையில் மயில்விரித்தாடும் எழில்மிக்க காரோணத்தார் ஆவார்.

778. மலையார் மங்கை பங்கர் அங்கை
அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள்வாழை
அழகார் குடமூக்கில்
முலையார் அணிபொன் முளைவெண் நகையார்
மூளா மதியினார்
கலையார் மொழியார் காதல்செய்யும்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : மலை மங்கையாகிய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு, அழகிய கையில் நெருப்பை ஏந்தியவர் ஈசர், அவர், வாழையும் தென்னையும் பெருகும் குடமூக்கில், இளமை தவழும் முகம் உடையவராய் விளங்கும் வெண் நகை உடையவராய். ஞான மொழியினராய் விளங்குபவர், பெருமக்களால் மிகவும் விரும்பப் படுகின்றவர், அப்பெருமான், காரோணத்தாரே ஆவார்.

779. போதார் புனல்சேர் கந்தம் உந்திப்
பொலிஅவ் அழகாரும்
தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில்
அந்தண குடமூக்கில்
மாதார் மங்கை பாகமாக
மனைகள் பலி தேர்வார்
காதார் குழையர் காளகண்டர்
காரோணத் தாரே.

தெளிவுரை : தாமரை முதலான மலர்கள் நீரில் சேர்ந்து மணம் பரப்ப, அவ்வழகு தவழ் பொழில் சூழ்ந்து எழில் மிக்க காடுகள் போல் குளிர்ச்சியாக விளங்கும் குடந்தையில், உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மனைகள்தோறும் பிச்சை நாடுபவர், காதில் குழையணிந்த நீலகண்டராய்க் காரோணத்தில் விளங்குபவர்.

780. பூவார் பொய்கை அலர்தாமரை செங்
கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்தணாளர்
சீரால் அடி போற்றக்
கூவார் குயில்கள் ஆலு மயில்கள்
இன்சொற் கிளிப்பிள்ளை
காவார் பொழில் சூழ்ந்து அழகார் குடந்தைக்
காரோணத் தாரே.

தெளிவுரை : தாமரை முதலான மலர்களால், தெய்வ சிந்தனை உடைய அடியவர்கள் எல்லாம் சிறப்பு மிக்க ஈசன் அடி போற்றுகின்றனர். குயில்கள் கூவ, மயில்கள் அகவ, கிளிகள் இன்சொல் பயில, காவார் பொழில்சூழ் அழகு மிக்க குடந்தைக் காரோணத்தார் வீற்றிருப்பர்.

781. மூப்பூர் நலிய நெதியார் விதியாய்
முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண்டு அருளும்
குழகர் குட மூக்கில்
தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம்
வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா வண்ணம்
காரோணத் தாரே.

தெளிவுரை : தேகத்தில் முதுமை அடைவதால் உண்டாகும் நலிவைத் தீர்பவரும், முப்புரங்களை எரிப்பதற்கு நெறிமுறையாக அனல் அம்பைக் கோர்த்தும், பார்த்தன் தவநிலை கண்டு அருளியவரும் ஆகிய குழகர் குடமூக்கில் விளங்குபவர். அவர் நோயினால் மெலியாதவாறும், வினைகளால் துன்பம் நேராதவாறும் காப்பவர். காலன் நம்மைக் குறுகாத வண்ணம் பாதுகாப்பவர் காரோணத்தாரே.

782. ஊனார் தலைகை ஏந்தி உலகம்
பலிதேர்ந்து உழல்வாழ்க்கை
மானார் தோலார் புலியின் உடையார்
கரியின் னுரி போர்வை
தேனார் மொழியார் திளைந்து அங்குஆடித்
திகழும் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார் செல்வக்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : பிரம கபாலம் கையில் ஏந்தி, உலகத்தில் பிச்சை எடுத்து உழலும் வாழ்க்கையை உடையவர், மான் தோலையும், புலித் தோலையும் உடையாகக் கொள்பவர், அப் பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்வையாகக் கொண்டு கொண்டு, உமாதேவி மகிழுமாறு ஆடித் திகழ்கின்ற குடமூக்கி, மயானத்திலும் நடனம் புரிபவர். அவர், செல்வம் தழைக்கும் காரோணத்தில் வீற்றிருப்பவரே.

783. வரைஆர் திரள்தோள் மதவாள் அரக்கன்
எடுப்ப மலைசேரும்
விரைஆர் பாத நுதியால் ஊன்ற
நெரிந்து சிரம் பத்தும்
உரைஆர் கீதம் பாடக் கேட்டுஅங்கு
ஒளிவாள் கொடுத்தாரும்
கரைஆர் பொன்னி சூழ்தண குடந்தைக்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : மலை போன்ற திரட்சியான தோளையுடைய ஆணவத்தை வாளாக உடைய, அரக்கனாகிய இராவணன் பெயர்த்த மலையானது, அவனையே சேர்ந்து தாக்குமாறு தனது திருவிரலால் ஊன்ற, அவற்றால் நெரிந்து துன்புற்ற பத்துத் தலைகளும் சாமகானம் இசைக்கவும், அவற்றைக் கேட்டு ஒளிமிக்க வாளைக் கொடுத்து அருள் புரிந்தவர் ஈசன். அப்பெருமான் காவிரிக் கரையில் விளங்கும் குடந்தைக் காரோணத்தில் வீற்றிருப்பவர்.

784. கரிய மாலும் செய்ய பூமேல்
அயனும் கழறிப் போய்
அரிய அண்டம் தேடிப்புக்கும்
அளக்க ஒண்கிலார்
தெரிய அரிய தேவர் செல்வம்
திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர்
காரோ ணத்தாரே.

தெளிவுரை : திருமாலும் நான்முகனும், தமக்குள் தர்க்கம் செய்துகொண்டு அண்டங்கள் எல்லாம் தேடியும் அறி வொண்ணாதவராகிய தேவர், குடமூக்கில் காலகாலராய்க் கரிய கண்டத்தராய்க் காரோணத்தில் வீற்றிருப்பவர்.

785. நாணார் அமணர் நல்லது அறியார்
நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை மாசுகழியார்
பேசேல் அவரோடும்
சேணார் மதிதோழ் மாடமங்கு
செல்வ நெடு வீதிக்
கோணா கரம் ஒன்று உடையார்குடந்தைக்
காரோணத் தாரே.

தெளிவுரை : நன்மை அறியாதவராய்க் குரலை உயர்த்திப் பேசும் தன்மையுடைய சமணர் தம் உரைகளை ஏற்காது, உயர்ந்த மாட மாளிகைகளும் நீண்ட வீதிகளும் உடைய குடந்தையில் வரையாது அருள்பவர் காரோணத்தில் எழுந்தருளியுள்ள ஈசனார்.

786. கருவார் பொழில்சூழ்ந்து அழகார் செல்வக்
காரோணத் தாரைத்
திருவார் செல்வ மல்குசண்பைத்
திகழும் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலை இவைபத்து
உரைப்பார் உலகத்துக்
கருவார் இடும்பைப் பிறப்பதுஅறுத்துக்
கவலை கழிவாரே.

தெளிவுரை : வளம் மிக்க அடர்த்தியான பொழில் சூழ்ந்து அழகுடன் விளங்கும் செல்வம் திகழும் காரோணத்தில் விளங்கும் ஈசனைத் திருநலம் பொருந்திய செல்வச் செழிப்புடன் விளங்கும் சண்பை நகரின் ஞானசம்பந்தன் செஞ்சொல் மாலையாக உருவாக்கிய இத் திருப்பதிகத்தை உரைப்பவர்கள், உலகத்தில் கருப்பையில் நேரும் பிறப்பாகிய துன்பத்தை அறுத்து மனக் கவலையும் நீங்கப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

73. திருக்கானூர் (அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

787. வானார் சோதி மன்னு சென்னி
வன்னி புனங் கொன்றைத்
தேனார் போது தானார் கங்கை
திங்களொடு சூடி
மாஜேர் நோக்கி கண்டங்கு உவப்ப
மாலை ஆடுவார்
கானூர் மேய கண்ணார் நெற்றி
யானூர் செல்வரே.

தெளிவுரை : வானத்தில் ஒளிரும் சோதியாகிய சூரியனும் சந்திரனும் முறையே வலக் கண்ணும் இடுக் கண்ணும் ஆகி விளங்க, சென்னியில் வன்னியும் கொன்றை மலரும், கங்கையும், மதியும் சூடி, உமாதேவி கண்டு மகிழுமாறு பெருமையாக ஆடுபவர், நெற்றியில் கண்ணுடைய கானூர் மேய செல்வராகிய ஈசர்.

788.நீந்தலாகா வெள்ளமூழ்கு
நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு
கொன்றை எழிலாரப்
போந்த மென்சொல் இன்பம் பயந்த
மைந்தர் அவர்போலாம்
காந்தள் விம்மு கானூர் மேய
சாந்த நீற்றாரே.

தெளிவுரை : பெருக்கெடுத்து ஓடிய கங்கை, சிறிதளவும் வெறியேறாதபடி சடையில் ஏற்றுக் கொண்டு, அதன் மேல் வளைந்த பிறைமதியும், அரவம், கொன்றை மலரும் தரித்து, இனிய சொற்களால் இன்பம் நல்கும் அழகர் போன்று, சாந்தம் மலரும் திருநீற்றைப் பூசி கானூர் மேவி விளங்குபவர் ஈசன்.

789. சிறையார் வண்டும் தேனும் விம்மு
செய்ய மலர்க் கொன்றை
மறையார் பாடல் ஆடலோடு
மால்விடை மேல்வருவார்
இறையார் வந்தென் இல்புகுந்தென்
னெழில் நலமுங் கொண்டார்
கறையார் சோலைக் கானூர் மேய
பிறையார் சடையாரே.

தெளிவுரை : சிறகுகள் உடைய வண்டும் தேனும் விளங்கும் கொன்றை மலர் சூடி, வேதங்கள் ஓதிப் பாடவும், ஆடவும், பெருமை மிகுந்த இடப வாகனத்தில் வரும் இறைவராகிய தலைவர், என்னிடம் வந்தார், வந்த அவ் இறைவர், என் இல்லம் புகுந்து என் உள்ளத்தையும் கவர்ந்து கொண்டார். அவர் அடர்த்தியான சோலைகளை யுடைய கானூரில் மேவும் பிறைச்சந்திரனும் சடை முடியும் கொண்டுள்ள ஈசரே.

790. விண்ணார் திங்கள் கண்ணி வெள்ளை
மாலை யதுசூடித்
தண்ணார் அக்கோடு ஆமை பூண்டு
தாழ்புன் சடைதாழ
எண்ணா வந்தென் இல்புகுந்துஅங்கு
எவ்வ நோய் செய்தான்
கண்ணார் சோலைக் கானூர் மேய
விண்ணோர் பெருமானே.

தெளிவுரை : ஈசன், விண்ணில் திகழும் சந்திரனைத் தரித்து, வெள்ளெருக்க மாலை சூடி, குளிர்ந்த எலும்பும் ஆமையோடும் பூண்டு, நீண்ட சடைகள் விரிந்து பரவ, என்பால் எண்ணம் கொண்டு நாடி வந்து, என் இல்லத்தில் புகுந்து பிற பொருள்கள் மீது யான் வெறுப்பு அடையுமாறு என்னை ஆக்கினான். அத்தகைய தலைவன் (ஈசன்) சோலைகள் விளங்கும் கானூரில் மேவும் விண்ணோர் பெருமான்.

791. தார்கொள் கொன்றைக் கண்ணியோடும்
தண் மதியம்சூடி
சீர்கொள் பாடல் ஆடலோடு
சேடராய் வந்து
ஊர்கொள் தோறும் ஐயம் ஏற்றுஎன்
னுள்வெந் நோய் செய்தார்
கார்கொள் சோலைக் கானூர்மேய்
கறைக் கண்டத்தாரே.

தெளிவுரை : கொன்றை மாலையும் குளிர்ந்த சந்திரனும் சூடி, புகழ் விளங்கும் ஆடல் பாடல்களுடன், பெருமையுடையவராய் வந்து, ஊர்கள்தோறும் பிச்சை ஏற்கும் செயல் புரிந்து, என் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டவர், கானூர் மேவும் நீலகண்டத்தவரே.

792. முளிவெள் ளெலும்பு நீறுநாலு
மூழ்கு மார்பராய்
எறிவந்தார் போல் ஐயம் என்றென்
இல்லே புகுந்து உள்ளத்
தெளிவு நாணும் கொண்ட கள்வர்
தேறல் ஆர் பூவில்
களிவண்டு யாழ்செய் கானூர்மேய
ஒளிவெண் பிறை யாரே.

தெளிவுரை : உலர்ந்த எலும்பும், முப்புரிநூலும், திருநீறும் மார்பில் விளங்க, எளிமையான திருக்கோலத்தில் பிச்சை என்று கேட்டு என் இல்லம் புகுந்து, என் உள்ளத்தையும் , தெளிவினையும், தன்மானத்தையும் கவர்ந்து கொண்ட கள்வர், தேன் சொரியும் பூவில் வண்டு களிப்புடன் யாழ்போன்று இசை யெழுப்பும் கானூரில் மேவும், வெண்பிறை சூடிய தலைவரே.

793. மூவா வண்ணர் முளைவெண் பிறையர்
முறுவல் செய்து இங்கே
பூவார் கொன்றை புனைந்து வந்தார்
பொக்கம் பல பேசிப்
போவார் போல மால்செய்து உள்ளம்
புக்க புரி நூலர்
தேவார் சோலைக் கானூர்மேய
தேவ தேவ ரே.

தெளிவுரை : ஈசனார், மூப்பு அடையாத எழில் வண்ணமான இளமையுடையவர்; முளைத்தெழும் இளமையான வெண்பிறைச் சந்திரனைச் சூடியுள்ளவர்; இளமுறுவல் செய்து, கொன்றை மாலை புனைந்து என்பால் வந்து, வஞ்சனையாகப் பேசிப் போவார் போல, மயக்கத்தை உண்டாக்கி, என் உள்ளத்தில் புகுந்தவர், முப்புரி நூலணிந்தவராகிய, சிறப்பான சோலையுடைய கானூரில் மேவும் அவர் தேவதேவரே.

794. தமிழின் நீர்மை பேசித் தாளம்
வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல்
செய்கை இடம் ஓவார்
குமிழின் மேனி தந்து கோல
நீர்மை யது கொண்டார்
கமழும் சோலைக் கானூர்மேய
பவள வண்ணரே.

தெளிவுரை : தமிழ் போன்ற இனிமையாகப் பேசியும், தாளம், வீணை, முழவம், மொந்தை ஆகிய இசைக் கருவிகளுடன் விளங்கும் பாடல்களைப் பாடியும், அப் பாடல்களுக்கு ஏற்ற அசைவுகளைப் புரிவித்தும், என்னுள்ளத்தில் மகிழ்ச்சியைத் தந்து, என்னை அவனையே நினைக்கச் செய்து, என் மேனியில் குமிழம் பூ வண்ணத்தை உண்டாக்கிக் கவர்ந்து கொண்டவர். சோலை கமழும் கானூர் மேய பவளவண்ணரே.

795. அந்தம்ஆதி ஆயனுமாலும்
ஆர்க்கும் அறிவரியான்
சிந்தையுள்ளு நாவின்மேலும்
சென்னியு மன்னினான்
வந்துஎன் னுள்ளம் புகுந்துமாலை
காலை ஆடுவான்
சுந்த மல்கு கானூர்மேய
எந்தை பெம்மானே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறிவரியவனாகிய ஈசன், என் சிந்தையில் புகுந்தும் நாவின் உறைந்தும் சென்னியிலும் விளங்குகின்றான்; என் உள்ளத்தில் புகுந்து காலையிலும் மாலையிலும் ஆடுகின்றான். அவ் ஈசன் மணம் மல்கும் கானூர் மேய எந்தை பெருமான்.

796. ஆமைஅரவோடு ஏனவெண்கொம்பு
அக்குமாலை பூண்டு
ஆமோர்கள் வர் வெள்ளர்போல
உள்வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும்
கோண் நாகணை யானும்
சேமமாய செல்வர் கானூர்
மேய சேடரே.

தெளிவுரை : ஆமையோடு, அரவம், பன்றியின் வெண்கொம்பு, எலும்புமாலை பூண்டு உள்ள கள்வராகிய ஈசன், தூய்மையாக உள்ளவர் போல் எனது உள்ளத்தில் புகுந்து நோய் உறுமாறு செய்தார். வேத நெறியில் வேள்வியாற்றும் நான்முகனும், வளைந்த நாகத்தைப் படுக்கையாக உடையவனும் ஆகிய திருமாலும் பாதுகாப்பாக நலம் கொள்ளப் புரியும் அச்செல்வர், கானூரில் மேவும் கடவுள்.

797. கழுது துஞ்சும் கங்குல் ஆடும்
கானூர் மேயானைப்
பழுதுஇல் ஞான சம்பந்தன்சொல்
பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள்
சொல்லித் துதித்து நின்று
அழுது நக்கும் அன்புசெய்வார்
அல்லல் அறுப்பாரே.

தெளிவுரை : பேயும் உறங்கும் இருளில் நின்று நடனம் பயிலும் ஈசனை, கானூரில் விளங்கும் பெருமானைப் போற்றிப் பழுதில்லாத சொல் புகலும் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை பாடியும் ஈசனைப் போற்றித் தொழுதும், தோத்திரங்களைச் சொல்லி வணங்கி நின்று, கசிந்து கண்ணீர் மல்கி அன்பு செய்பவர்கள் துன்பங்கள் அற்றவர்களாய் விளங்குவர்.

திருச்சிற்றம்பலம்

74. திருப்புறவம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

798. நறவ நிறைவண்டு அறைதார்க் கொன்றை
நயந்து நயனத்தால்
கறவம் செறி வண் கொடியோன் உடலம்
பொடியா விழி செய்தான்
புறவம் உறைவண் பதியா மதியார்
புறமூன்று எரிசெய்த
இறைவன தவன் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : தேன் அருந்திய வண்டு நயந்து மேவும் கொன்றை மாலை சூடிய பரமன். மகரக் கொடியுடைய மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் உறையும் அப்பெருமான் மதியாத முப்புரங்களை எரியாக்கிய இறைவனாய், தேவர்கள் போற்ற, உமாதேவியோடு வீற்றிருந்தான்.

799. உரவன் புலியின் உரிதோலாடை
உடைமேற் படநாகும்
விரவி விரிபூங் கச்சா அசைத்த
விகிர்தன் உகிர் தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்துப்
புறவம் பதியாக
இரவும் பகலும் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : வலிமையான புலியின் தோலை உரித்து ஆடையாகக் கொண்டு, அதன் மீது படம் விரித்தாடும் நாகத்தைக் கச்சாகக் கட்டிய ஈசன், நகத்தினால் யானையின் தோலை உரித்து, புறவம் பதியாகக் கொண்டு, இரவும் பகலும் இமையவர்கள் ஏத்த, உமா தேவியுடன் வீற்றிருந்தான்.

800. பந்தம் உடைய பூதம் பாடப்
பாதம் சிலம்பார்க்கக்
கந்த மல்கு குழலிகாணக்
கரிகாட்டு எரியாடி
அந்தண் கடல்சூழ்ந்து அழகார் புறவம்
பதியா அமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : இரவில் தீப்பந்தங்களை ஏந்திய பூத கணங்கள் பாட, சிலம்பு ஒலித்து, கந்தம் கமழும் தேவி காணுமாறு சுடுகாட்டில் நெருப்பைக் கையில் கொண்டு நடனம் ஆடி, கடல் சூழ்ந்த அழகிய புறவத்தைப் பதியாகக் கொண்டு, எம் பெருமான் தேவர்கள் போற்ற உமாதேவியுடன் வீற்றிருந்தான்.

801. நினைவார் நினைய இனியான் பனியார்
மலர்தூய் நித்தலும்
கனையார் விடையொன்று உடையான் கங்கை
திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான்கடல்சூழ்
புறவம் பதியாக
எனைஆளுடையான் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : அன்று மலர்ந்த மலர்களைத் தூவி நினைத்துப் போற்றும் அடியவர்தம் நெஞ்சில் இனிமை தருபவனாகி, கனைத்து ஒலி முழக்கும் விடையை (இடபம்) வாகனமாகவும், சடையில் கங்கை, சந்திரன், கொன்றை மலர் தரித்து புறவத்தைப் பதியாகக் கொண்டும், என்னை ஆளுடையவனாகிய பெருமான், தேவர்கள் எல்லோரும் போற்றுமாறு உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

802. செங்கண் அரவு நகுவெண் தலையு(ம்)
முகிழ்வெண் திங்களும்
தங்கு சடையன் விடையன் உடையன்
சரிகோவண ஆடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்து அழகார்
புறவம் பதியாக
எங்கும் பரவி இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : அரவம், மண்டையோடு, இளஞ் சந்திரன் ஆகியவற்றைத் தன் சடை முடியில் வைத்த இடப வாகனன், கோவண ஆடை கொண்டு, கடல் சூழ்ந்த புறவம் என்னும் பதியை இடமாகக் கொண்டு, தேவர்கள் ஏத்த, உமாதேவியோடு வீற்றிருந்தனன்.

803. பின்னு சடைகள் தாழக் கேழல்
எயிறு பிறழப் போய்
அன்ன நடையார் மனைகள் தோறும்
அழகார் பலி தேர்ந்து
புன்னை மடலின் பொழில்சூழ்ந்து அழகார்
புறவம் பதியாக
என்னை உடையான் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : பின்னப்பட்டு முறுக்கு ஏறிய சடைகள் தாழ்ந்து விரிந்து விளங்க, பன்றியின் பல்லைக் கழற்றி, தாருக வனத்தில் உறையும் முனிவர்களின் மனைகள் தோறும், முனிபத்தினிகள் விருப்பத்துடன் முன் வந்து அளிக்குமாறு உடைய அழகிய பலியைத் தேர்ந்து செய்து, புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய புறவம் என்னும் பதியில், என்னை ஆளாக உடையவனாகிய ஈசன், தேவர்கள் ஏத்த உமாதேவியோடு வீற்றிருந்தான்.

804. உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு
ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த
விடைசேர் கொடி அண்ணல்
பண்ணில் சிறை வண்டு அறைபூஞ் சோலைப்
புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : உண்பதற்கு அரியதான் நஞ்சினை உண்டு, தேவர்கள் விண்ணுலகத்தில் சிறந்து விளங்குமாறு புரிந்து, அமுதம் அளித்த இடபக் கொடியுடைய அண்ணல், சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை எழுப்பும் பூஞ்சோலையுடைய புறவம் எனும் பதியில், தேவர்கள் ஏத்துமாறு உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

805. விண்தான்அதிர வியனார் கயிலை
வேரோடு எடுத்தான்றன்
திண்டோள் உடலு(ம்) முடியு(ம்) நெரியச்
சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான்
புறவம் பதியாக
எண்டோள் உடையான் இமையோ ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : விண்ணுலகம் அதிருமாறு, பெருமை பொருந்திய கயிலையை எடுத்த இராவணனுடைய வலிமையான தோளும், உடலும், தலையும் நெரியுமாறு சிறிது ஊன்றி, அதனால் ஏற்பட்ட புண் நீங்குமாறு அருள் செய்த பெருமான், புறவம் எனும் பதியில் எட்டுத் தோள்களுடன் இமையவர்கள் ஏத்த உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

806. நெடியான்நீள்தா மரைமேல் அயனு(ம்)
நேடிக் காண்கில்லாப்
படியா மேனி உடையான் பவள
வரைபோல் திருமார்பில்
பொடியார் கோலம் உடையான்கடல் சூழ்
புறவம் பதியாக
இடியார் முழவார் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : நெடியவனாகிய திருமாலும், தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் காண முடியாதவாறு, எதிலும் படியாதபடி திருமேனி உடைய ஈசன், பவளம் போன்ற சிவந்த திருமார்பில் திருவெண்ணீறு அணிந்து, புறவம் பதியெனக் கொண்டு, இடிபோன்ற முழவம் அதிர, தேவர்கள் ஏத்த, உமாதேவியுடன் வீற்றிருந்தனன்.

807. ஆலும் மலியின் பீலி அமணர்
அறிவில் சிறுதேரர்
கோலும் மொழிகள் ஒழியக் குழுவும்
தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான் கடல்சூழ்
புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த
உமையோடு இருந்தானே.

தெளிவுரை : அகவுகின்ற மயிலின் இறகுடைய சமணர்களும் பௌத்தர்களும் கூறுகின்ற மொழிகளை ஒதுக்கி வைத்து, திரண்ட தீப் பிழம்பு போன்று வானம் முழுமையும் எழில் பெறச் செய்யும் வடிவினனாகிய ஈசன், புறவம் என்னும் பதியில் பொருந்தி அருள் புரிபவனாக இமையோர்கள் ஏத்த உமாதேவியுடன் வீற்றிருந்தான்.

808. பொன்னார் மாட நீடும் செல்வப்
புறவம் பதியாக
மின்னார் இடையாள் உமையாளோடும்
இருந்த விமல னைத்
தன்ஆர்வம் செய் தமிழின் விரகன்
உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடி ஆடப் பிரியார்
பரலோகம் தானே.

தெளிவுரை : பொன்போன்றும் திகழும் மாட மாளிகைகளும், நீண்டு வளரும் செல்வச் செழிப்பும் உள்ள புறவம் என்னும் நகரினை இடமாகக் கொண்டு, மின்னலைப் போன்ற இடையுடைய உமாதேவியோடு வீற்றிருக்கின்ற விமலனாகிய ஈசனை, தானாக, உள்ளுணர்வால் எழும் அன்பின் காரணமாக  நன்மைகளைச் செய்யும் தமிழின் மீது பற்றுக் கொண்டவராகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தைப் பல நாட்கள் பாடி, மனங்கசிந்து பக்தியினால் ஆட, பரனுடைய உலகமாக விளங்கும் இனிய உலகத்தில் எக்காலத்திலும் பிரியாதவராய் மகிழ்ந்திருப்பர்.

திருச்சிற்றம்பலம்

75. திருவெங்குரு (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

809. காலைநன் மாமலர் கொண்டு அடிபரவிக்
கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்
ஓலமது இடமுன் னுயிரொடு மாள
உதைத்தவன் உமையவள் விருப்பன் எம்பெருமான்
மாலை வந்துஅணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவள(ம்)முன் உந்தி
வேலைவந்து அணையும் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவிஉள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : காலை நேரத்தில், சிறப்பான மலர்கள் தூவித் திருவடியைப் பரவித் தொழுத மார்க்கண்டேயர்பால் சினங்கொண்டு உயிரைக் கவரவந்த கூற்றுவன், ஓலம் இட்டு அலறுமாறு உதைத்து, அவன் உயிரைக் கவர்ந்தவனாகிய ஈசன், உமாதேவிக்கு மிக விருப்பமானவன்; எம் தலைவன். மாலை நேரத்தில் கடல் அலைகள் சுருளாகக் கரையை அணுகி, சங்கும் பவளமும் உந்திச் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு எனும் பதியில் மேவி அப் பெருமான் வீற்றிருந்தனர்.

810. பெண்ணினைப் பாகம் அமர்ந்து செஞ்சடைமேல்
பிறையொடும் அரவினை அணிந்து அழகாகப்
பண்ணினைப் பாடி ஆடிமுன் பலிகொள்
பரமர் எம்மடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினைமூடி வான்முகடு ஏறி
மறிதிரை கடல்முகந்து எடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாக மகிழந்து, சிவந்த சடையின் மீது பிறைச் சந்திரனும் அரவமும் அணிந்து, அழகிய வடிவம் தாங்கி, பாடியும் ஆடியும் பிச்சையேற்ற எம் அடிகள் ஆகிய ஈசனார், நன்மைகள் பேணி, உயர்ந்த அலைகள் பரப்பி, தேவலோகத்தில் உள்ள செல்வங்களையும் முகந்து பெறும், கடல் சிறப்புடைய வெங்குரு என்னும் பதியில் இடமாகக் கொண்டு வீற்றிருந்தனர்.

811. ஓர்இயல்பு இல்லா உருவமது ஆகி
ஒண்திறல் வேடனது உருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக்
கறுத்து அவற்கு அளித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசை யாக அறுபதமுரன்று
நிரைமலர்த் தாதுகண் மூசவிண் டுதிர்ந்து
வேரிகள் எங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : இத்தகைய உருவம்தான் உடையவன் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத வடிவத்தை உடையவனாய்த் திறல்மிக்க வேடன் உருவத்தைத் தாங்கி, உமாதேவி காணுமாறு அர்ச்சுனனுடன் சினந்து வழக்கிட்டுப் போர் செய்து, பின்னர் வரம் நல்கி அன்பு சொரியும் ஈசன், வண்டு நேரிசை என்னும் பண் எழுப்பி, மகரந்தம் உதிர்ந்து கண்ணை மறைக்கத் தேன் சொரியும் சோலைகள் உடைய வெங்குரு எனும் பதியில் வீற்றிருந்தனர்.

812.வண்டுஅணை கொன்றை வன்னியு மத்த
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதம்
கொடுகொட்டி குடமுழாக் கூடியுமுழவப்
பண் திகழ்வாகப் பாடியொர் வேதம்
பயில்வர்முன் பாய்புனல் கங்கையைச்சடைமேல்
வெண்பிறை சூடி உமையவளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : வண்டுகள் மொய்த்துச் சேரும் கொன்றை வன்னி, ஊமத்தம், வில்வம், எருக்கு ஆகியவற்றைச் சடையில் உடைய இடப வாகனர், கொடி கொட்டி முழவு முதலியவை பூதங்கள் முழங்கவும், பாடவும் வேதங்கள் பயில, கங்கையும் வெண்பிறையும் தரித்து உமாதேவியோடு வெங்குருமேவி வீற்றிருந்தனர்.

813. சடையினர் மேனி நீறதுபூசித்
தக்கைகொள் பொக்கணம் இட்டுடனாகக்
கடை தொறும்வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந்தழகாகப்
படையது ஏந்திப் பைங்கயற்கண்ணி
உமையவள் பாகமும் அமர்ந்தருள்செய்து
விடையொடு பூதம் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : சடையை உடைய ஈசன், திருமேனியில் வெண்ணீறு பூசி, தக்கை என்கிற வாத்தியத்தை ஒரு பையில் இட்டு, வாயிற்படிதோறும் வந்து பிச்சையேற்று, இவரைக் கண்ணுற்றவர் மனத்தைக் கவர்ந்து, அழகிய தோற்றப் பொலிவுடன் விளங்கி, கரத்தில் மழு, சூலம் முதலான படைகளை ஏந்தி, உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்து அமர்ந்து அருள் செய்து இடப வாகனமும், பூத கணங்களும் சூழ வெங்குருவில் மேவி வீற்றிருந்தனர்.

814. கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி
உரையடை முத்த மணலிடை வைகி
ஓங்கு வான் இருள்அறத் துரப்பஎண் திசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள் ஆகுதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : கடலலைகள் கரையில் மோதிச் செல்ல, அந்த ஓதத்தில் கரையை அடைந்த சங்குகளும், முத்துக்கள் ஈனும் சிப்பிகளும் மணலில் விளங்கி, இரவில் இருளை அகற்றி ஒளியை உமிழ், எட்டுத் திசைகளும் சிறந்து விளங்கும், வேதம் ஓதுகின்ற  பூவுலகின் தேவர்களாகிய அந்தணர்கள், நலத்தை நாடிப் புரியும் வேள்வித் தீயிலிருந்து தோன்றும் புகையானது விசும்பினில் சென்று, அவ்வொளியை மறையச் செய்யும் சிறப்புடைய தெய்வீக மணம் கமழும் இடமாகிய வெங்குரு மேவி, ஈசன் வீற்றிருந்தனர்.

815. வல்லி நுண்ணிடையாள் உமையவள்தன்னை
மறுகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லை யில்பிடித்தங்கு உரித்து அவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில்மிகு திருஆலில்
நல்லறம் உரைத்து ஞானமோடு இருப்ப
நலிந்திடல்உற்று வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமாதேவியைக் கலங்கச் செய்யுமாறு வந்த மதயானையை விரைவில் பிடித்துத் தாக்கி அழித்து, அவள் அச்சத்தைப் போக்கிய ஈசர், கல்லால நிழலில் சனகாதி முனிவர்களுக்கு நல்லறப் பொருள்களை உரைத்துத் தட்சிணாமூர்த்தியாக ஞானமுத்திரை காட்டி இருக்க, அவரை அந்நெறியிலிருந்து வழுவுதல் செய்யும் பொருட்டு வந்த கரும்பு வில்லையுடைய மன்மதனைத் தன் நெற்றிக் கண்ணால் பொடியாக்கியவர், விருப்பத்துடன் வெங்குரு எனும் பதியில் மேவி வீற்றிருந்தனர்.

816. பாங்கிலா அரக்கன் கயிலை அன்று எடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றி அன்று அவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத்து அழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன் மலரார் விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : நற்குணம் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலையை எடுக்க, அவன் பத்துத் தலைகளும் தோளும் நொறுங்கி வதைபடுமாறு, பெருமை மிக்க திருப்பாத விரலால் ஊன்றி, அவ்வரக்கனுக்கு ஒளி திகழ் வாளும் கொடுத்து, அழகாக விளங்கும் கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்தம், கொன்றை மலர்கள் விரவிய சிவந்த சடையுடைய செல்வராகிய ஈசன் மலைபோன்ற ஏற்றம் பொருந்திய வெங்குருவில், மணம் மல்கும் கோயிலில் வீற்றிருந்தனர்.

817.ஆறுசடைச் சடைஎம் மடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற்காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்கும்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
ணீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழுது ஏத்த
வேறுஎமை ஆள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : கங்கை தரித்த சøயுடைய எம் அடிகளைக் காண்பதற்குத் திருமாலும், பிரமனும் அளவிடுவதற்கு என, பூமிக்குக் கீழேயும், வானத்திடையிலும் புகுந்து செல்ல, காண்பதற்கு இயலாமல் அச்செயலைத் தவிர்த்தனர், அவர், எழில் திகழும் திருவெண்ணீறு பூசிய கோலம் உடையவர்; நெற்றியில் கண்ணுடையவர்; விண்ணுலகத்தவர் தொழுது ஏத்தி நிற்க எம்மை ஆட்கொள்ள விரும்பிய விகிர்தர்; வெங்குரு மேவி வீற்றிருந்தனர்.

818. பாடுடைக்குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டுஅழகாக
ஏடுடை மலரான் பொருட்டு வன்தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்து அருள்செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெளிவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே.

தெளிவுரை : துன்பத்தில் ஆழும் சாக்கியர் மற்றும் சமணர் உரைசெய்யும், மறம் தோயும் புன் சொற்களை ஒதுக்கி, உமாதேவியுடன் பொருட்டு கொடிய தக்கன் வளர்த்த வேள்வியைத் தகர்த்து அழித்துப் பின்னர் அருள் செய்து, சுடுகாட்டில் வேட்டை நாய்கள் சூழவும், காண்கின்றவர்கள் கீழ்மையறிவினன் எனக் கருதுமாறும் வேட்டுவக்கோலம் விரும்பிய விகிர்தர், வெங்குரு மேவி வீற்றிருந்தனர்.

819. விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணிய நூலன் ஞானசம்பந்த(ன்)
நவின்ற இவ் வாய்மொழி நலமிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியும் ஆடியும் பயிலவல் லோர்கள்
விண்ணவர் விமானம் கொடுவரவு ஏறி
வியன் உலகுஆண்டு  வீற்று இருப்பவர்தாமே.

தெளிவுரை : உயர்ந்த நிலையுடைய விமானத்தை விரும்பிய ஈசன், வெங்குருமேவி வீற்றிருந்த பெருமான். அவரை ஏத்தி ஞான நூல் வல்லவனாகிய உரைத்த இத்திருப்பதிகத்தை, பண்ணிசையாகவும், பக்தியாகவும், பாடி, மனங்கசிந்து உள் மகிழ்ந்து நெக்குருகி ஆடி ஓத வல்லவர்கள், தேவர்கள் விமானத்தைக் கொண்டு வந்து அதில் ஏற்றிச் சென்று பெருமையான உலகத்தில் சேர்க்க, அதில் திளைத்து இருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

76. திருஇலம்பையங்கோட்டூர் (அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன் கோட்டூர்,காஞ்சிபுரம் மாவட்டம்)

820. மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு
மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுஉரை தனதுஉரை யாக
நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடும்துயிலக்
கானலம் பெடைபுல்கிக் கணமயில்ஆலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கைøயாப் பேணிஎன் னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : பருப்பத மலையை (ஸ்ரீசைலம்) உடையவர், திருத்துருத்தி, திருமாற்பேறு, திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய திருத்தலங்களில் நிலைத்து விளங்குபவர், ஈசன். அவர், என்னுடைய உரையைத் தன்னுடைய உரையாக ஏற்றுத் திருநீறு அணிந்து, இடப வாகனம் விரும்பிய நிமலன். கலைமான் தன் துணையாகிய பெண் மானுடன் துயிலவும், சோலையில், ஆண் மயில் கூட்டங்கள் பெண் மயில்களுடன் சேர்ந்து மகிழ்ந்து விளங்கவும், சோலைகள் பொலியும் இலம்பையம் கோட்டூரை இடமாகக் கொண்டுள்ள இடர், என் உள்ளத்தைக் கவர்ந்து கொள்ளை கொண்டு, என் எழிலையும் கவர்ந்து, என்பால் நாடி மகிழ்விக்காமல் இருப்பது நல் இயல்பு ஆகுமோ !

821. திருமலர்க்கொன்றையான் நின்றியூர் மேயான்
தேவர்கள் தலைமகன் திருக்கழிப்பாலை
நிருமலன் எனதுஉரை தனதுஉரை யாக
நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலன்
கருமலர்க் கமழ்கனை நீண்மலர்க்குவளை
கதிர்முலை இளையவர் மதிமுகத்து உலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன்னெழில்கொள்வது இயல்பே.

தெளிவுரை : சிறப்பான கொன்றை மலர் சூடிய பரமன், திருநின்றியூரில் மேயவன்; தேவர்களுள் முதலாமவன்; திருக்கழிப்பாலையில் விளங்கும் நின்மலன். அவன் எனது உரையைத் தனது உரையாக ஏற்றுக்கொண்டு திருநீறு தரித்து, இடப வாகனத்தை விரும்பி அமர்ந்த நிமலன், நீலவண்ணமலர் கமழ் சுனைகளும், நீண்ட குவளை மலர் போன்ற மதிமுகத்து மாதர்களும், பெரிய தாமரை மலர் சூழ்ந்து பொய்கையும், விளங்கும் இலம்பையங்க கோட்டூரில் வீற்றிருக்கும் ஈசன், என் எழிலைக் கவர்ந்து என்னை வாடுமாறு புரிவது நல்லியல்பு ஆகுமோ !

822. பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டுவெங் கூற்றுதைத்து அடியவர்க்கு அருளும்
காலனாம் எனதுஉரை தனதுஉரை யாகக்
கனல்எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமாமலர்சினை வண்டுப ண்செய்ய
நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்
ஏலநாறும் பொழில் இலம்பையம் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : ஈசன், பாலனாகவும், விருத்தனாகவும், பசுபதியாகவும் வந்தவன். ஒரு காலத்தில், கொடுமையான கூற்றுவனைத் திருப்பாதத்தால் உதைத்து மாய்த்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்தவன், காலனுக்குக் காலனாகிய பரமன். அப்பெருமான், எனது உரையைத் தனது உரையாக ஏற்றுக் கொண்டு, எரியும் அனலைக் கையில் ஏந்திய கடவுள். நீல மலர்களை உடைய சுனைகளில் வண்டு இரைக்கவும், நீரில் திகழும் குவளை மலர்கள் மகரத்தைப் பொழிய, மணம்கமழும் பொழில் உடைய இலம்பையங் கோட்டூரில் வீற்றிருக்கும் அப்பெருமான் என் எழிலைக் கவர்ந்து செல்வது நல்லியல்பு ஆகுமோ !

823. உளங்கொள்வார் உச்சியார் கச்சியேகம் பன்
ஒற்றியூர் உறையும்அண் ணாமலை அண்ணல்
விளம்புவான் எனதுஉரை தனது உரையாக
வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக்கலை துள மலைகளும் சிலம்ப
கொழுங்கொடி எழுந்தெங்கும் கூவிளம்கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன் னெழில்கொள்வ தியல்பே.

தெளிவுரை : தன்னைத் தியானம் செய்பவர்களுடைய உள்ளத்தில் உயர்வாக உறைபவர் திருக்கச்சியேகம்பன். அவர் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உறைபவராகிய அண்ணாமலை அண்ணல்; எனது உரையைத் தான் உரைக்கும் உரையாகக் கொண்டு விளம்புபவர்; கங்கையை, விரித்த சடையில் ஏற்றுத் தாங்கிய விமலன். கலைமான் குளம்பு பதியத் துள்ள மலைகளிலும் ஓசைகள் நிலவ, பூங்கொடிகள் தாவி வில்வமரங்களைப் பற்றிப் படர்ந்திருக்கும், பிறைதிகழ் பொழில் உடைய இலம்பையங் கோட்டூரில் இருக்கையாகக் கொண்டு அவர் வீற்றிருக்கும், என்னுடைய எழிலைக் கவர்ந்து என்னை வாடுமாறு செய்வது நல்லியல்பு ஆகுமோ !

824. தேனுமாய்அமுதமுமாய்த்  தெய்வமும் தானாய்த்
தீயொடு நீருடன் வாயுவாம் தெரியில்
வானுமாம் எனதுரை தனதுரையாக
வரிஅராஅரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிரல் ஊகம்
கடுவனோடு உகளும்ஊர் கற்கடும்சாரல்
ஏலநாறும் பொழில் இலம்பையம் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : தேனாக இனிமை தருபவனாயும், அமுதமாய் விளங்கி நிலைத்த தன்மையை வழங்குபவனாயும், தெய்வமாக இருந்து முத்திப் பேற்றினை அருள்பவனாகவும் திகழ்ந்து, ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வான் ஆகிச் சூழ்ந்து, நான் சொல்லும் உரையைத் தான் சொல்லும் உரையாகக் கொண்டு மெய்ம்மைப்படுத்தி அழகிய அரவத்தை இடையில் பொருத்திக் காட்சி தரும் அழகனாகிய ஈசன், சோலைகளில் உள்ள மான்கள் மருட்சியடைந்து அச்சம் கொள்ள, குரங்குகள் தாவித் திரிய, கற்கள் மிகுந்த சாரலில், பன்றிகளும் பசுக் கூட்டங்களும் திரியவும் விளங்கும் இலம்பையங் கோட்டூர் என்னும் தலத்தில் வீற்றிருந்து என்னைப் பாதுகாத்து என் எழிலைக் கவர்ந்தது அவன் நல்லியல்பு ஆகுமோ !

825. மனம்உலாம் அடியவர்க்கு அருள்புரிகின்ற
வகையலால் பலிதிரிந்து உண்பிலான் மற்றோர்
தனம்இலான் எனதுரை தனதுரையாகத்
தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்
புனம்எலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
பொன்னொடு மணிகொழித்து ஈண்டிவந்தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : தன்னை எக்காலத்திலும் நினைத்துக் கொண்டிருக்கும் அடியவர்களுக்கு அருள்புரிகின்ற தன்மையினால் அல்லாது, தான் பிச்சையேற்று உண்ணும் தன்மை இல்லாதவன், ஈசன். அவன் என்னுரையைத் தன்னுரையாகப் பொறுப்பு ஏற்று மெய்ம்மை புரிபவன். அவன் தாழ்ந்த சடை முடியும், இளமையான சந்திரனையும் உடையவன். அத்தகைய தலைவன், தினைப்புனத்தில் உள்ள அருவிகளில் தினைத்தாள்களும், முத்தும் பொன்னும் கொழிக்கும் வண்ணம் செய்து, மற்றும் செல்வத்தின் இனங்கள்யாவும் அடையும் இலம்பையங் கோட்டூரில் வீற்றிருந்து, என் எழிலைக் கவர்ந்து கொள்வது நல்லியல்பு ஆகுமோ !

826. நீர்உளான்தீயுமான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊர்உளான் எனதுரை தனதுரையாக
ஒற்றைவெள் ளேறுஉகந்து ஏறிய ஒருவன்
பார்உளார் பாடலோரு ஆடல்அறாத
பண்முரன்று அஞ்சிறை வண்டினம் பாடும்
ஏர்உளார் பைம்பொடல் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : நீராகவும், நெருப்பாகவும், ஆகாயமாகவும் நினைத்து வழிபடும் அடியவர்களின் மனத்தின் உள்ளும் உறையும் ஈசன், தினந்தோறும் ஆகம விதிப்படி திருக்கோயில்களில் பூஜை செய்யும் ஊர்களிலும் உள்ளவன். அவன் என்னுடைய உரைகளை எல்லாம் தன்னுடைய உரையாகக் கொண்டு ஏற்று மெய்ம்மைப் படுத்தி அருள் புரிபவன். அவன், வெண்மையான இடபத்தில் மகிழ்ந்து ஏறி, வாகனமாகக் கொண்ட ஒப்பற்றவன். அப்பெருமான், பாடலும் ஆடலும் கொண்டு திகழும் பொழிலில் வண்டினம் பண் அமைத்துப் பாடவும் விளங்கும் இலம்பையங் கோட்டூரில் வீற்றிருந்து, என் எழிலைக் கவர்வதும் நல்லியல்பு ஆகுமோ !

827. வேருலாம் ஆழ்கடல் வருதிரை இலங்கை
வேந்தன் தடக்கைகள் அடர்த்தவன் உலகில்
ஆர்உலாம் எனதுறை தனதுரையாக
ஆகம்ஓர் அரவுஅணிந்து உழிதரும் அண்ணல்
வாருலா நல்லன மாக்களும் சார
வாரணம் உழிதரு மல்லல்அம் கானல்
ஏருலாம் பொழில்அணி இலம்பையங் கேட்டூர்
இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.

தெளிவுரை : கடலால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய வலிமையான கைகளை அடர்த்து, உலகில் யாவும் நிரம்பப் பெற்ற எனது உரையைத் தனது உரையாக ஏற்று மகிழ்ந்து, உடலில் அரவம் அணிந்து காட்சி தரும் அண்ணலாகிய ஈசன், சாந்தம் திகழும் நல்விலங்குகள் சாரவும், யானைகள் சாரும் வளம் பொருந்திய பொழில் சூழ் இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்து, பேணி, என்னுடைய எழிலைக் கவர்ந்து கொண்டது நல்லியல்பு ஆகுமா !

828. கிளர்மழை தாங்கினான் நான்முகம் உடையோன்
கீழ்அடிமேல் முடி தேர்ந்து அளக்கில்லா
உளம்அழை எனதுரை தனதுரையாக
ஒள்ளழல் அங்கையில் ஏந்தியஒருவன்
வளமழை எனக்கழை வளர்துளி சோர
மாகணம் உழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வதியல்பே

தெளிவுரை : கிளர்ந்து எழுந்து பெய்த மழையின் இடரைக் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து தாங்கிய திருமாலும், பிரமனும் பூமிக்கு அடியில் ஈசன் திருவடியையும், மேலே முடியையும் காணவேண்டும் என்று தேர்ந்தும், அதனை அடையாதவர்களாக இருந்தனர். அப்பெருமான், என் உள்ளம் விரும்பி அழைக்க எனது உரையைத் தனத உரையாக ஏற்றவன்; ஒளிபொருந்திய நெருப்பை அழகிய கரத்தில் ஏந்தியவன். மூங்கில் இலைகளிலிருந்து மழையெனத் துளிகள் வீழவும் மலைப்பாம்புகள் பக்கம் சார, அழகிய மணி மாலைகள் போல் தவழ் பொழில் திகழ் இலம்பையங்கோட்டூரில் அப்பெருமான் வீற்றிருந்து என் எழிலைக் கவர்ந்து கொள்வது நல்லியல்பு ஆகுமோ !

829. உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி
உழிதரு சமணரும் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரையாகப்
பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞசுனை முல்லைநன் பொன்னடை வேங்கை
களிமுக வண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணிஎன் னெழில்கொள்வதியல்பே.

தெளிவுரை : உரித்த தன்மை கொண்ட ஆடைகள் கொண்டு உலவும் சமணரும் சாக்கியரும் ஒருபுறம் தனித்திருக்கின்ற நிலையில், பெருஞ் செல்வனாகிய ஈசன், எனதுரையைத் தனதுரையாய்க் கொண்டு பலியேற்கும் பெரியோன், சுனையும், முல்லை வேங்கை முதலான பூங்கெத்துக்களில் வண்டுகள் களித்துத் தேன் உண்ணும் பொழில்களும் உடைய இலம்பையின் கோட்டூரில் வீற்றிருக்கும் பெருமான், என் எழிலைக் கவர்ந்து கொள்வது நல்லியல்பு ஆகுமோ !

830. கந்தனை மலிகனை கடலொலியோதம்
கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியார் உறைபதி நான்மறை நாவன்
நற்றமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
இசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
வீடுபெற்று இம்மையின் வீடெளிதாமே.

தெளிவுரை : நறுமணமும், திரண்டெழு ஒலியும் உடைய கடலின் ஓதம் மிகுந்து ஈசன் உறையும் கழுமலம் என்னும் நகரில் நான்மறை வல்ல நாவினையுடையவனும், நற்றமிழுக்கு இனிய துணையும் ஆகிய ஞானசம்பந்தன், எந்தை விளங்கும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரினைப் பற்றி இசையொடு உரைத்த இத் திருப்பதிகத்தை உரைக்க வல்லவர்கள். வெந்துயர் நீங்கப் பெற்றவராய் விளங்குவர். பின்னர் அவர் தேவர்களோடும் கூடி இருந்து மகிழ்ந்து, வீடுபேறு அடைவார்கள். இம்மையிலும் அவர்கள் வீடு பேற்றுக்குரிய மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

77. திருஅச்சிறுபாக்கம் (அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

831. பொன்திரண் டன்ன புரிசடை புரளப்
பொருகடல் பவளமொடு அழல்நிறம்புரையக்
குன்றுஇரண்டன்ன தோளுடை யகலம்
குலாயவெண் ணூலொடு கொழும் பொடியணிவர்
மின்திரண்டன்ன நுண்ணிடைஅரிவை
மெல்லியலாளையோர் பாகமாப் பேணி
அன்று இரண்டு உருவம் ஆயஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்ட கொண்டாரே.

தெளிவுரை : பொன் திரண்டாற் போன்ற சடைபுரளவும், கடலில் தோன்றும் பவளம் போன்ற அழல் நிறம் பொலியும் இரண்டு குன்றுகளைந் போன்ற தோள்களும், அகன்ற அதனிற் பொலிந்து தவழும் முப்புரி நூலும், வளம்மிக்க திருநீறும் விளங்க, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியைப் பாகமாகப் பேணி, இரு உருவமாக விளங்கும் எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ளார்.

832. தேனினும் இனியர் பாலன நீற்றர்
தீங்கரும்பு அனையர்தம் திருவடிதொழுவார்
ஊனயந்து உருக உவகைகள் தருவார்
உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது ஊரார்
வானகம் இறந்து வையகம் வணங்க
வயங்கொள் நிற்பதோர் வடிவினை உடையார்
ஆனையின் உரிவை போர்த்தஎம்மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : தேனைவிட இனிமையனவர்; பால் போன்ற வெண்ணீற்றைத் திருமேனியில் தரித்தவர்; இனிய கரும்பு போன்றவர்; தமது திருவடியைத் தொழும் அடியவர்கள் ஊன்நயந்து உருக, மகிழ்ச்சியைத் தருபவர்; உச்சியாகிய தலையின்மேல் உறைபவர்; இடப வாகனத்தையன்றி வேறு எதிலும் ஊர்ந்து செல்லாதவர்; போகத்தலமாகிய வானுலகத்தைக் கடந்து கர்மத்தலமாகிய பூவுலகத்தவர் வணங்கத், தன் வயப்படும் வடிவத்தை உடையவர்; ஆனையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவராவர் எம் அடிகள். அவர் அச்சிறுபாக்கத்தில் மேவி ஆட்சி கொண்டவர்.

833. காரிருள்உருவ மால்வரை புரையக்
களிற்றனது உருவுக்கொண்டு அரிவைமேல்ஓடி
நீர்உரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலர்
பேரருளாளர் பிறவியில் சேரார்
பிணியிலார் கேடிலர் பேயக்கணம்சூழ
ஆர்இருள் மாலை ஆடும்எம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : கன்னங்கரிய வடிவத்தை யுடைய பெண் யானையின் உருவைத் தாங்கிய உமாதேவியை நோக்கி, ஆண் யானையின் உருவத்தை சடையில் தாங்கி, நீறு அணிந்து இடபத்தில் உகந்து ஏறிய நிமலர். அவர் பேரருளாளர். எப் பிறவித் தொகையிலும் சேராதவராய், எதனாலும் கட்டுபடாதவராய், அழிவில்லாதவராய், பேய்க் கணங்கள் சூழ, அடர்த்தியான இருள் மயக்கம் நிறைந்த சுடுகாட்டில் நடனம் ஆடும் எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

834. மைம்மலர்க் கோதை மார்பினர் எனவு(ம்)
மலைமகளவளொடு மருவினர் எனவும்
செம்மலர்ப் பிறையும் சிறையணி புனலும்
சென்னிமேல் உடையர்எம் சென்னிமேல் உறைவார்
தம்மலர் அடியொன்று அடியவர்பரவத்
தமிழ்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை அணிந்தஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : மலர் மாலை சூடிய மார்பினர்; மலைமகளுடன் மருவி இருப்பவர்; மலர் போன்ற பிறைச் சந்திரனும், கட்டுப்படுத்தப்பட்ட நீராகிய கங்கையும் சென்னியில் சூடியவர்; என் சிரசின்மேல் உறைபவர், தமது மலர்போன்ற திருவடியை மனத்தில் பதித்து அடியவர் பரவவும் இனிய தமிழ்ச் சொல்லும் உயர்ந்த வடசொல்லும் திருத்தாள் நிழலில் சேர்ந்து பெருமை கொள்ள, அழகிய கொன்றை மலர் அணிந்த எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

835. விண்ணுலா மதியம் சூடினர் எனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீர் எனவும்
பண்ணுலா மறைகள் பாடினர் எனவும்
பலபுகழ் அல்லது பழியிலர் எனவும்
எண்ணலாகாத இமை யவர் நாளும்
ஏத்த வரங்களோடு எழில்பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும்எம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : வானத்தில் உலவும் சந்திரனைச் சூடியவர் எனவும் பெருக்கெடுத்தோடும் கங்கையைச் சடையில் தேக்கியவர் எனவும், பண்கள் விளங்கப்பெறும் வேதங்களைப் பாடி மொழிந்தவர் எனவும், எச்செயலைச் செய்தாலும் புகழேயன்றிப் பழியற்ற தன்மை யுடையவர் எனவும் உள்ளவர், ஈசன். திரிதரும் எண்ணங்கள் இல்லாத போகத் தலத்தில் உள்ள தேவர்கள், நாள்தோறும் ஏத்தி வழிபடவும் நல்ல வரங்களும் எழிலும்பெற்று விளங்க, அண்ணலாகிய இடபத்தை வாகனமாக ஏறும் எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டார்.

836. நீடுஇரும் சடைமேல் இளம் பிறை துலங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய்பூசித்
தோடு ஒருகாதினில் பெய்துவெய்தாய
சுடலையில் ஆடுவர் தோலுடையாகக்
காடு அரங்காகக் கங்குலும் பகலும்
கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த
ஆடுஅரடுஆட ஆடும் எம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : நீண்ட பெரிய சடைமுடிமீது இளம்பிறைச் சந்திரன் விளங்க, ஒளிதிகழ் மழுப்படை கொண்டு, திருநீறு செய்யில் பூசி, ஒரு காதில் தோடு அணிந்து, வெம்மை பொருந்திய சுடலையில் ஈசன் நடம்புரிவர். அப்பெருமான் புலித்தோலை உடுத்திச் சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு இரவும் பகலும், பேயும் பூதமும் கைதொழுது ஏத்த, ஆடுகின்ற அரவர் மேனியில் ஆடுமாறும், நடம் புரிகின்ற எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

837. ஏறும்ஒன்று ஏறி நீறு செய்பூசி
இளங்கிளை அரிவை யொடு ஒருங்குஉடனாகிக்
கூறும்ஒன்று அருளிக் கொன்றையந் தாரும்
குளிர்இள மதியமும் கூவிள மலரும்
நாறு மல்லிகையும் எருக்கொடுமுருக்கு
மகிழிளவன்னியும் இவைநலம்பகர
ஆறும் ஓர் சடைமேல் அணிந்தஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : இடபத்தில் ஏறி அமர்ந்து, திருவெண்ணீறு மெய்யில் பூசி, உமாதேவியுடன் வீற்றிருந்தும், தனது பாகத்தில் ஒரு கூறும் அருள் செய்து, கொன்றை மலர், இளம் பிறைச்சந்திரன், வில்வம், மல்லிகை, எருக்கம், முருக்கு, மகிழம்பூ, வன்னி ஆகியவற்றுடன், கங்கையும் சடைமேல் அணிந்த எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

838. கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்ணணங்காய
பிறை நுதலவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
பருவரை எடுத்ததிண் தோள்களை அடர்வித்து
அச்சமும் அருளும் கொடுத்தஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.

தெளிவுரை : கச்சையில் ஒளிமிக்க வாளைக் கட்டிய உடையைக் கொண்ட அரக்கனாகிய இராவணனை, பெண்கள், அழகன் என்றும், வீரம் மிக்கவன் என்றும் போற்றிப் பெருமை செய்து பேணியதைக் கொண்டு, வலிமை கொண்டவன் எனக் கருதி மலை எடுத்த தோள்களை அடர்த்து, மண்ணில் அழுத்தி அச்சத்தைக் கொடுத்தும், பின்னர் அருள்புரிந்து எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

839. நோற்றலாரேனும் வேட்டலாரேனு(ம்)
நுகர் புகர்சாந்தமொடு ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும் இன்னவாறு என்றும்
எய்தலாகாததொர் இயல்பினை உடையார்
தோற்றலார் மாலு(ம்) நான்முகம் உடைய
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணார் ஆயஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : நோன்பு, விரதம் முதலியவற்றால் தவம் செய்யாதவர்களும், வேத மந்திரங்கள் கூறி வேள்வி செய்யாதவர்களும், தூப, தீப, நைவேத்தியம் செய்து பூசனை ஆற்றி, மலர்கள் தூவிச் சாற்றிப் பக்திப் பாடல்களைக் கூறி வணங்காதவர்களும், ஈசனை அறியவும், அவன் திருவடியை எய்துதலும் ஆகாதவர்களாவர். அவதாரங்கள் கொண்ட திருமாலும், நான்முகத் தோன்றலாகிய பிரமனும், திருவடியையும் திருமுடியையும் தங்கள் ஆற்றலால் தேடியும் காணாதவராய் விளங்கிய எம் அடிகள், அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

840. வாது செய்சமணும் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார்
உள்கலாகாததோர் இயல்பினை உடையார்
வேதமும் வேத நெறிகளும் ஆகி
விமல வேடத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் மடிகள்
அச்சிறு பாக்கமது ஆட்சிகொண்டாரே.

தெளிவுரை : விவாதம் செய்கின்ற சமணரும், சாக்கியரும் நல்வினை நீக்கி வல்வினையாளர்களாய், நல்லுரைகள் ஓதியும் அதனைக் கேட்டும் உணர்வு கொள்ளாதவர்களாய், ஈசனை நெஞ்சில் நினைத்துப் போற்றாத இயல்பினை உடையவர்கள். அவர்களால் இறைவனை அணுக முடியாது. வேதமும், அவ்வேத நெறிகளும் ஆகி விளங்கி, மலமற்ற விமலராய்க், குளிர்ச்சி பொருந்திய அழகிய சந்திரனைப் போல் ஒளிர்ந்து ஆதியும் ஈறும் ஆகும் எம் அடிகள் அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டார்.

841. மைச்செறிகுவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய் கையில் புதுமலர் கிழியப்
பச்சு இறவுஎறிவயல் வெறிகமழ்காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன் தமிழ்கொண்டு
அச்சிறு பாக்கத்து அடிகளை யேத்தும்
அன்புடை அடியவர் அரவனை இலரே.

தெளிவுரை : நீலவண்ணக் குவளை மலரில் உள்ள தேன், பொய்கையில் உள்ள தவளையின் வாயில் நிறையவும். பசிய இறா மீன்கள் வயல்களில் துள்ள, புதுமலர் கிழியவும், மணம் கமழ் காழிப்பதியில் உள்ள பெருமான் கழலைத் தவிர வேறொன்றைக் கருதாத கருத்துடைய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தால், அச்சிறுபாக்கத்தில் வீற்றிருக்கும் அடிகளை, ஏத்திப் பணிந்து அன்பு செய்யும் அடியவர்கள், வினை நீங்கப் பெற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

78. திருவிடைச்சரம் (அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

842. வரிவளர்அவரிஒளி அரவுஅரைதாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வலன் ஏந்திக்
கனல்எரியாடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழில் இளமயில்ஆல
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவளர் இனமணி புனமணிசாரல்
இடைச்சுர மேவிய இவர் வணம்என்னே.

தெளிவுரை : வரிகளை உடைய ஒளிமிக்க அரவு அரையில் விளங்க சடைமுடியின்மேல் வளரும் பிறைச் சந்திரன் சூடி,யானையின் வடிவம் பொறித்த வீரக்கழல் வலக்காலில் ஒலிக்க, எரியும் கனலைக் கரத்தில் ஏந்தி சுடுகாட்டில் ஆடுகின்ற ஈசர், விரிந்த சோலையில் மயில்கள் அகவ, அருவிகள் திண்ணெனும் ஓசையை எழுப்பி வீழ, ஒளி பொருந்திய மணிகள் திகழும் மலைச் சாரலில் விளங்கும் இடைச்சுரத்தில் மேவிய இவர் அழகிய திருமேனியின் வண்ணம் தான் என்னே !

843. ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை அருளுவர் குழகு அலது அறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையைஉடையர்
நடுஇருள் ஆடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன் மிளிர்வன கயல்குள வாளை
செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், கங்கையைச் சடைமுடியில் ஏற்ற அழகு பொலிய அருள்புரிபவர்; இளமை பொருந்திய குழகர்; கூற்றுவனை உதைத்துக் கொடுமை செய்தவர்; நள்ளிரவில் இருளில் ஆடுபவர்; கொன்றை மாலை சூடியவர், சேற்றில் கயல்களும், வாளை மீன்களும் முட்டிக்கொண்டு போர் செய்வதைப் போன்று உள்ள காட்சியை பெண் குரங்கும் ஆண் குரங்கும் கூர்ந்து போக்கும் எழில்திகழ் சாரலில் இடைச்சுரத்தில் மேவிய இவர் வண்ணம்தான் என்னே !

844. கானமும் சுடலையும் கற்படு நிலனும்
காதலர் தீதிலர் கனல் மழுவாளர்
வானமு நிலமையும் இருமையும் ஆனார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடுகமழ
நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையாலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், காடும், சுடலையும், மலைப்பகுதியும் விரும்பி உறையும் பெற்றியுடையவர்; எவ்விதமான தீதும் இல்லாதவர்; நெருப்புப் போன்று மழுப்படையுடையவர்; வானுலகமாகிய மறுமையும், நிலவுலகமாகிய இவ்வுலகமும், இம்மை, மறுமை ஆகிய இரு உலகமும் ஆகியவர்; யாவராலும் வணங்கப்படுவர்; அன்பிற்கு இணங்குபவர். ஞானிகளால் வாழ்த்தப்படுபவர். கத்தூரி, அகில் முதலான நறுமணம் கமழ மென்மையான பூஞ்சோலையில் மயில்கள் சூழவும், மான்களும் பன்றிகளும் உடைய சாரலில், இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே !

845. கடமணி மார்பினர் கடல்தனில் உறைவார்
கதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மடறினர் மிளிர்வதோர் அரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடம்உலை அயலன கருங் குருந்து ஏறி
வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும்
இடமுலை அரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், மணி மார்பினர்; கடற்புறத்தில் உறைபவர், அன்புடையவர்; தீது இல்லாதவர்; கனல் போன்ற மழுப்படையாளர்; விடத்தை மணி போன்று மிடற்றில் கொண்டவர்; ஒளி மிக்க நாகத்தை உடையவர்; நன்னெறியும் தவ வேடமும் உடையவர்; ஆலின் அயலில் பொலியும் குருந்தையில் தேன் எடுக்கின்ற எழில் மகளிர் திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமான் வண்ணம் தான் என்னே !

846. கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடைஉயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புனல் அனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொடு எழில்திகழ்சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், கார்காலத்தில் கடிமணம் கமழ விரியும் கொன்றை மலரைச் சூடியவர்; ஒளிவிடும் சந்திரனும், கங்கை நீரும் கொண்ட சடையினர்; இடபக் கொடியுடையவர்; ஒளி திகழும் மழுப்படை உடையர்; நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவர்; சிறப்பான மெல்லிய சிறகுகளை யுடைய வண்டுகள் பண்ணிசைக்க, நீர்வளத்துடன், வாழை, பலா மரங்களின் சுவை மிக்க கனிகள் திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம் தான் என்னே !

847. தோடுஅணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையில் ஆடுவர் தோலுடையாகப்
பீடுஉயர் செய்ததோர் பெருமையை உடையர்
பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவதும்பி
குரவமும் அரவமு(ம்) மன்னியபாங்கர்
ஏடுஅவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், தோடு அணிந்த காது உடையவர்; திருவெண்ணீறு தரித்தவர்; மயானத்தில் ஆடுபவர்; தோலை உடையாகக் கொண்டு, பெருமையை உயர்த்திய பெருமை உடையவர்; பேய்க்கணங்களுடன் ஆடுபவர்; பெருமையுடையவர்களுக்கும் பெருமானாக விளங்குபவர்; கோட்டுப் பூக்கள் தேனைச் சொரிய வண்டுகள் அதில் முழுகித் திளைக்க புது மலர்களின் மணம் கமழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே !

848. கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கும் எரியொடு மணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங்கு உடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவ
மன்னிய கவட்டிடைப் புணர்குயில்ஆலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச் சுரமேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், வீரக் கழல் அணிந்த திருப்பாதம் உடையர்; சூலப் படை உடையவர்; முப்புரிநூல் அணிந்த திருமார்பினர்; ஐந்தலை நாகமும், உருத்திராக்க மணியும் பூண்டவர்; நெருப்பினைக் கரத்தில் ஏந்தியவர்; ஒளிரும் மழுப்படை ஏந்தியவர்; நடம் புரிபவர்; வேதம் ஓதுபவர்; தெய்வத் தன்மை மிக்க உமாதேவியை உடையவர்; பொழில்களும், மராமரக் கிளைகளிலும் குயில்கள் கூவ, வண்டுகள் இசை பாட விளங்கும் இடைச்சரம் மேவிய இப்பெருமானின் வண்ணம்தான் என்னே !

849. தேன்கமழ் கொன்றைஅம் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும்உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந்து அலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங்குஇடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ்சாரல்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசன், தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலரைப் புனைபவர்; திகழ்ந்து விளங்கும் சடையின்மீது சந்திரனைச் சூடி, இறந்தவர்களின் சாம்பலைத் திருவெண்ணீறு எனக்கொண்டு பூசுபவர்; உலகத்தவர் பொதுவாகக் கருதும் தன்மையில் அல்லாது அவருக்கு எனத் தனியாக வேறு ஒழுக்க நெறியை உடையர்; பல வடிவங்களைக் கொண்டு விளங்குபவர்; சந்தனம், அகில் ஆகிய மரங்களும் உயர்ந்த நவமணிகள் முதலானவைகளும் அருவியின் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு திகழும் சாரலில் இடைச்சுரம் மேவிய இப் பெருமானின் வண்ணம் தான் என்னே !

850. பலஇலம் இடுபலி கையில் ஒன்று ஏற்பர்
பலபுகழ் அல்லது பழியிலர் தாமும்
தலைஇலங்கு அவர்ஒளி நெடுமுடி அரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை உடையர்
மலைஇலங்குஅருவிகள் மணமுழவு அதிர
மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசனார், பல வீடுகளில் இடுகின்ற பிச்சையைக் கையில் ஏற்பவர்; பலவகைப்பட்ட புகழேயல்லாது எவ்வகையான பழிப்பும் இல்லாதவர்; தலையில் ஒளி உமிழும் மணி முடியை உடைய அரக்கனான இராவணனுடைய வலிமையான கைகள் நலியுமாறு செயத தன்மையுடையவர். மலையிலிருந்து வேகமாக வீழும் அருவிகள் திருமண வாத்தியம் போன்று அதிருமாறு ஒலிக்க, மேகம் நோக்கி இனிமை கண்டு மயில்கள் தோகை விரிக்கும் சாரலில் ஏலம், இலவங்கம் ஆகிய வாசனைப் பொருள்களை வழங்கும் தருக்கள் திகழும் வண்ணம்தான் என்னே !

851. பெருமைகள் தருக்கியோர் பேதுறுகின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர் அடிநிழல் பரவிநின்று ஏத்தும்
அன்புடை அடியவர்க்கு அணியரும் ஆவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலின் வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுர மேவிய இவர்வணம் என்னே.

தெளிவுரை : ஈசனார், பெருமைகளை நினைத்துத் தருக்கிப் பேசி மயக்கத்தில் ஆழ்ந்த திருமாலும், பிரமனும் ஓர்ந்து காணமுடியாத பெருமையை உடையவர்; திருவடியைப் போற்றிப் பரவி நின்று வணங்குகின்ற அன்புடைய திருத்தொண்டர்களுக்கு மிகவும் அண்மையில் இருப்பவர். நீர்ச் சுனைகளின் நீல வண்ணக் குவளை மலர்கள் விளங்க, கயல்களும், வயல்களில் உள்ள வாளை மீன்களும் அச்சம் கொண்டு விலகிச் செல்லுமாறு எருமைகள் படி, அன்னப் பறவைகள் அதிர்ந்து ஒலி எழுப்பும் இடைச்சுரம் மேவிய இப்பெருமானின் இனிய வண்ணம்தான் என்னே !

852. மடைச்சுர மறிவன வாளையும் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனல்காழிச்
சடைச்சுரத்து உறைவதோர் பிறையுடை அண்ணல்
சரிதைகள் பரவி நின்று உருகுசம்பந்தன்
புடைச்சுரத்து அருவரைப் பூக்கமழ் சாரல்
புணர் மடநடையவர் புடைஇடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணிஇலர்தாமே.

தெளிவுரை : நீர்மடைகளில் வாளையும் கயலும் துள்ளி மகிழும் வளப்பம் உடைய வயல் வளம் மருவிய காழிப் பதியின்கண், சடைமுடியில், பிறையுடன் திகழும் அண்ணலாகிய ஈசனார் அருள் நிலைகளைப் பரவி நின்று உள்ளம் உருகும் ஞானசம்பந்தன், அருமையான மலைச்சாரலில், பூக்கள் கமழ அமர்ந்துள்ள இடைச்சுரத்தை ஏத்திய இத்திருப்பதிகத்தை இசையோ சொல்ல வல்லவர்கள், பிணியற்றவராய் விளங்கி மகிழ்ந்து இருப்பர்.

திருச்சிற்றம்பலம்

79. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

853. அயில்உறு படையினர் விடையினர் முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயில்உறு சாயல வனமுலை ஒருபால்
மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்உறு சரிதையர் எருதுஉகந்துஏறிப்
பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடம்என உடையார்
கழுமல நினையநம் வினைகரிக அறுமே.

தெளிவுரை : ஈசனார், கூர்மையான சூலமும், மழுவும் படையாக உடையவர்; இடப வாகனம் உடையவர்; சடைமடியில் பாம்பும், சந்திரனும் தரித்த அழகர்; மயில் போன்ற சாயலை உடைய உமாதேவியை ஒரு பாகம் ஏற்று மகிழ்பவர்; சிவந்த வானத்தில் கருமுகில் சேர்ந்ததைப் போன்ற மிடற்றை உடையவர்; நன்னெறியில் சஞ்சரிப்பவர்; இடபவாகனத்தில் ஏறிப்பாடியும் ஆடியும் பிச்சை ஏற்பவர்; வலிமை மிக்க திருக்கயிலையையும், பொதிய மலையையும் தமது இடமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமான் கழுமல நகரில் வீற்றிருந்து அருள் புரிய, அதனை நினைத்துப் போற்ற நம் வினையின் தீமை அறும்.

854. கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி உறைபவர் படுதலைக்கையர்
பண்டுஅவர்அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
படர்சடை அடிகளார் பதியதன்அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் கறவு
மறிகடல் திரை கொணர்ந்து எற்றியகரைமேல்
கண்டலும் கைதையு நெய்தலும் குலவும்
கழுமல நினையநம் வினை கரிசுஅறுமே.

தெளிவுரை : ஈசனார், மேகமும் நீலமும் பொருந்திய மிடறுடையவர்; கொடுமுடியில் உறைபவர்; மண்டை ஓட்டினைக் கையில உடையவர்; பிரமனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்து நான்முகனாகச் செய்தவர்; சடை முடி யுடையவர். அப்பெருமான், ஊருக்கு அயலாக, வண்டல் மண்ணும், தோணியும், சங்குகளும், சுறா மீன்களும் அலைகள் வாயிலாகச் சேர்க்கும் கடல் கரையில் நீர் முள்ளியும், தாழையும் நெய்தற் பூக்களும் சேரும் கழுமல நகரில் வீற்றிருக்கு, அதனை நினைத்து வணங்கிட வினையின் தீமைஅறும்.

855. எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின்று அடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமல நினையநம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : ஈசனார், எண்ணத்தில் ஒன்றாகக் கலந்திருந்து மகிழ்விப்பர்; உருவத் திருமேனி கொண்டு, உமாதேவியுடன் ஒரு பாகத்தை உடைய அர்த்தநாரியாகவும், வேறாகத் தனித்தும் ஆக இரண்டும் உடையவர்; எரியினில் சூட்டின் பரிசம், ஒளியின் வண்ணம் எரிகின்ற போது வினையும் ஓசை ஆக மூன்று தன்மையுடையவர்; நான்கு மறைகளையும் ஆள்பவர்; மண்ணிடையில் ஐந்து தன் மாத்திரைகள் கொண்டவர்; வேதத்தின் ஆறு அங்கம் ஆகியவர்; ஏழிசையாக விளங்கும் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் நிஷாரம் (ச, ரி, க, ம, ப, த, நி) என விளங்குபவர்; அட்டாவதானம் முதலான் எட்டு அரங்கலையானவர்; ஒன்பது வகையான பண்களும் ஆனவர்; பத்தர்கள் பாடி நின்று தொழுது போற்றி நிற்க, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரியுண்ணச் செய்தவர். அத்ததைய பெருமான் கருதிய கோயிலாகிய கழுமலத்தை நினைக்க நம்வினையானது அற்றொழியும்.

856. எரிஒரு கரத்தினர் இமையவர்க்கிறைவர்
ஏறுஉகந்துஏறுவர் நீறுமெய்பூசித்
திரிதரும் இயல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் மேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவரல்அஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக்கு இடமாம்
கழுமல நினையநம் வினைகரிசுஅறுமே.

தெளிவுரை : ஈசனார், நெருப்பினை ஒரு கரத்தில் உடையவர்; தேவர்களின் இறைவர்; இடப வாகனத்தை உகந்து ஏறுபவர்; திருநீற்றை மெய்யில் பூசித் திரியும் இயல்பினர்; முப்புரங்களை எரித்தவர்; உமாதேவி அஞ்சி நடுங்கமாறு வந்த கரிய யானையின் தோலை உரித்தவர். அத்தகை பெருமானுக்கு இடமாகிய கழு மலத்தை நினைக்க நம் வினையின் தீமை அறும்.

857. ஊர் எதிர்ந்திடு பலி தலைகலனாக
உண்பவர் விண்பொலிந்து இலங்கிய உருவர்
பார்எதிர்ந்து அடிதொ விரைதரு மார்பில்
படஅரவு ஆமைஅக்கு அணிந்தவர்க்கு இடமாம்
நீர்எதிர்ந்து இழிமணி நித்தில் முத்த
நிரைகரி சங்கமொடு ஒண்மணிவரன் றிக்
கார்எதிர்ந்து ஓதம் வன் திரைகரைக்கு எற்றும்
கழுமல நினையநம் வினகரிசு அறுமே.

தெளிவுரை : ஈசனார், பிரம கபாலம் ஏந்தி ஊர்களில் திரிந்து பிச்சை யேற்பவர்; ஆகாயம் பொலியுமாறு விரிந்த திருமேனி கொண்டவர்; உலகத்தவர் வணங்குமாறு மணம் திகழும் மார்பில் நாகம், ஆமையோடு, உருத்திராக்க மணி அணிந்தவர். அப் பெருமானுக்கு இடமாக உள்ள, முத்துக்களும் சங்குகளும் திரைகள் வாயிலாகக் கடற்கரைக்குக் கொண்டு சேர்க்கும் கழுமல நகரினை நினைக்க நம் வினையின் தீமை அறும்.

858. முன்னுயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி
முடியுடை அமரர்கள் அடிபணிந்து ஏத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த
பேரருளாளனார் பேணிய கோயில்
பொன்னியல் நறுமலர் புனலொடு தூபம்
சாந்தமும் ஏந்திய கையினர் ஆகிக்
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும்
கழுமல நினைய நம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : உலகம் தோன்றுவதற்கு முன்னர் தோன்றியும் பிரளய காலத்திலும் விளங்குதல் செய்து தேவர்கள் எல்லோரும் அடிபணிந்து ஏத்த, சடையின் மீது பிறை சூடிய பேரருளாளராகிய ஈசனார், பேணிய கோயிலானது, பொன்போன்ற உயர்ந்த மணம் பொருந்திய மலர்களும், தூபம், சந்தனம் ஆகியவற்றுடன் பூசனை செய்து, கன்னியர்கள் நாள்தோறும் வழிபாடு இயற்றும் தன்மையில், ஈசன் திருவடியையே போற்றுகின்ற கழுமல நகர் ஆகும். அந்நகரை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

859. கொலைக்கு அணித்தவாரு கூற்றுஉதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின்
நிலைக்கு அணித்தா வர நினையவல்லார்தம்
நெடுந்துயர் தவிர்த்த என் நிமலருக்கு இடமாம்
மலைக்கு அணித்தா வர வன்திரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும்
கழுமல நினையநம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : ஈசனார், மார்க்கண்டேயரின் உயிரைக் கவருவதற்கு என வந்த கூற்றுவனை, தன் திருப்பாதத்தால் உதைத்தார். கழல் பணிந்து போற்றுபவர்க்கு அண்மையாய் இருந்து அருள் செய்து, அவரவர்தம் நெடிய துயர்களைத் தவிர்ப்பவர் ஈசன். அத்தகைய நிமலருக்கு இடமாவது, அருகில் வரவேண்டும் எனக் கடலலைகள் ஒலி செய்ய, புன்னை மலர்கள் முத்துப் போன்று அரும்ப, கலை மான்கள் சோலைகளின் நிழலில் வாழும் கழுமல நகர் ஆகும். அதனை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

860. புயம் பலஉடைய தென் னிலங்கையர் வேந்தன்
பொருவரை எடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம்பல படஅடர்த்து அருளிய பெருமான்
பரிவொடும் இனிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினு(ம்) மண்ணினும் எங்கும்
வேறுவேறு உகங்களில் பெயருளதுஎன்னக்
கயம்பல படக்கடல் திரைகரைக்கு எற்றும்
கழுமல நினைய நம்வினை கரிசு அறுமே.

தெளிவுரை : பல தோள்களை யுடைய தென்னிலங்கையின் வேந்தனாகிய இராவணனுடைய தலையையும் தோளையும் அச்சம் கொள்ளுமாறு அடர்த்துப் பின்னர் அருள் செய்த பெருமான், பரிவுடன் இனிது உறையும் கோயிலாவது, பல பெயர்களை யுகங்கள்தோறும் கொண்டுள்ள கழுமலம் என்னும் நகரில் உள்ளதாகும். இத் தலத்தை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

861. விலங்கல் ஒன்று ஏந்திவன் மழை தடுத்தோனும்
வெறிகமழ் தாமரை யோனும் என்று இவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரிதாய
பரிசினன் மருவி நின்று இனிதுறை கோயில்
மலங்கிவன் திரைவரை யெனப் பரந்தெங்கு
மறிகடல் ஓங்கிவெள் ளிப்பியும் சுமந்து
கலங்கள் தன் சரக்கொடு நிரக்கவந்துஏறும்
கழுமல நினைய நம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : கோவர்த்தன மலையை ஏந்திக் கொடிய மழையைத் தடுத்து உயிர்களைப் பாதுகாத்த திருமாலும், தாமரை மலரில் விளங்கும் பிரமனும் தமது பலத்தின் திறமை கொண்டு தேடியும் அறிய இயலாத பெருமையுடைய ஈசன், மருவி விளங்குகின்ற இனிய கோயிலான வன்மையான கடல் அலைகள் பரவி வெண்மையான இப்பிகளைச் சுமந்தும், மரக்கலங்களில் சரக்குகள் ஏறும் கழுமலத்தை நினைக்க நம் வினையின் தீமையானது அறும்.

862. ஆம்பலதவம் முயன்று அறவுரைசொல்லும்
அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்
நோம்பல தவம் அறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்
சாம்பலும் பூசி வெண் தலைகல னாகத்
தையலார் இடுபலி வையகத்து ஏற்றுக்
காம்பன தோளியொடு இனிதுறை கோயில்
கழுமல நினைய நம் வினைகரிசு அறுமே.

தெளிவுரை : ஆகும் பல தவங்களை முயன்று அறவுரைகள் சொல்லும் சமணரும் பௌத்தரும், மெய்யாக நோற்றுச் செய்யும் தவம் அறியாதவராய் இருக்க அவ் உரைகளைக் கொள்ளாதவராகிய ஈசன், திருமேனியில் சாம்பலைப் பூசிக் கபாலத்தைக் கையில் ஏந்தி மாதர்கள் இடுகின்ற பிச்சையை உலகில் ஏற்று, உமாதேவியுடன் இனிது வீற்றிருக்கும் கோயிலாகிய கழுமலத்தை நினைக்க நம் வினையின் தீமை அறும்.

863. கலிகெழு பாரிடை ஊர்என உளதாம்
கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர்மேல்
வலிகெழு மனமிக வைத்தவன் மறைசேர்
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலை என்று உரைசெய்த பத்தும்
உண்மையினால் நினைந்து ஏத்தவல்லார்மேல்
மெலிகெழு துயர்அடை யாவினை சிந்தும்
விண்ணவர் ஆற்றிலின் மிகப்பெறு வாரே.

தெளிவுரை : ஒலிமிக்க உலகில் ஊர் என எக்காலத்திலும் விளங்கும் கழுமலம் என்னும் நகரை விரும்பிக் கோயில் கொண்ட ஈசன்மேல், வலிமைமிக்க பற்றுக் கொண்டு, கலை ஞானத்திலும், வேதத்திலும் வல்ல ஞானசம்பந்தன், தமிழில் இசை மிக்க மாலையாய் உரை செய்த இத் திருப்பதிகத்தை உள்ளத் தூய்மையினால் நினைந்து பாடுபவர்கள் மீது, மெலிவைத் தருகின்ற துன்பம் அடையாது, அவர்களிடம் பற்றி இருக்கும் வினை அகலும் அவர்கள் தேவர்களுடைய ஆற்றலை விட மிகுதியான ஆற்றலைப் பெறுவர்.

திருச்சிற்றம்பலம்

80. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

864. கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

தெளிவுரை : வேதத்தை நன்கு கற்றுத் தேர்ந்து, உலகத்தில் துன்பத்தை நாடாதவாறு வேள்வி செய்யும் மறையவர்கள் வாழ்கின்ற தில்லையின், சிற்றம் பலத்தில் இளமையான சந்திரனைச் சூடி விளங்கும் முதல்வனாகிய ஈசன் பாதத்தைப் பற்றி வணங்குபவர்களுக்குப் பாவம் அணுகாது.

865. பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டு எரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.

தெளிவுரை : வேள்விச் சாலை அமைத்து, ஆன்மா மகிழ்ந்து விளங்குவதற்கு உரிய வேள்வி புரிந்து, ஓம்புதல் செய்யும் சிறப்பினை யுடைய மறையவர்கள் வாழ்கின்ற தில்லை நகரின் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கும் பிறப்பிலாப் பெருமானை, தாழ் சடையுடையவனை மறவாது, எஞ்ஞான்றும் நினைத்து, வழிபடுபவர்கள் உலக மாலையயிலிருந்து நீங்கியவராய்த் திகழ்வார்கள்.

866. மையார் ஒண்கண்ணார் மாடநெடுவீதிக்
கையால் பந்துஓச்சும் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தான் உலகேத்தச்
செய்யாள் உறைகோயில் சிற்றம் பலம்தானே.

தெளிவுரை : மை பூசிய கண்களையுடைய மகளிர்பந்து வீசி விளையாடும் நெடிய வீதிகளைக் கொண்ட தில்லையுள், எக்காலத்திலும் பொய்ம்மையடையாத வேத பாடல்களை விரும்பி, உலகத்தோர் ஏத்தி வணங்குகின்ற செம்மையுடைய ஈசன், உறைகின்ற கோயில் சிற்றம்பலம்தான்.

867. நிறைவெண் கொடிமாட நெற்றிநேர் தீண்டப்
பிறைவந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறைவண்டு இறைஓவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

தெளிவுரை : வெண்மையான கொடிகளைக் கொண்ட மாடங்களில் முகப்பில், சந்திரன் ஒளி சாரும் பேரம்பலம் உடைய தில்லையில், சிறகுகள் உடைய, ஓய்வில்லாது ஒலித்து மகிழும் சிற்றம்பலம் மேவும் நடராசப் பெருமானின் திருக்கழலைப் போற்றி வணங்குதலே இன்பம் தரும்; மற்றவை இன்பம் ஆகாது என வெளிப்படுத்தப்பட்டது.

868. செல்வ நெடுமாடம் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே.

தெளிவுரை : செல்வ வளத்தைக் காட்டும் உயர்ந்த மாட மாளிகைகள் விளங்க, ஞானமாகிய செல்வம் தோய, அச் செல்வத்தில் மிக்க மறைஞானச் செல்வர்கள் வாழும் தில்லையில், சிற்றம்பல நாதனாகிய செல்வக் கழலை ஏத்துதல் நல்ல மாண்பு  உண்மையான செல்வம் ஆகும்.

869. வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுள் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்துஎம்
பெருமான் கழல்அல்லால் பேணாது உள்ளமே.

தெளிவுரை : மாந்தளிர்போல் வண்ணம் உடைய உமாதேவியை ஒரு பாகமாய்த், திருமகள் வாசம் புரியும் தில்லையுள் யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தும், நஞ்சு அருந்திய கண்டத்தை உடையவரும் ஆகிய சிற்றம்பலவன் கழலையன்றி என் உள்ளம் வேறு பொருளை நாடாது.

870. அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடு மகிழந்தான் உலகேத்தச்
சிலையால் எயில்எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.

தெளிவுரை : கங்கையைத் தலையில் சூடி, உடலின் ஒரு பாகத்தில் மலையான் மகளாகிய உமாதேவியை வைத்து மகிழந்தவன், உலகத்தோர் போற்றி வணங்குமாறு, மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரக் கோட்டைகளை எரித்து அழத்த, அப்பெருமானுடைய இடமாக விளங்கும் சிற்றம்பலத்தை தலையால் வணங்குபவர்கள், சிறப்பினை அடைந்தவர்கள் ஆவர்.

871. கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய்எல்லாம் தீர்தல் திண்ணமே.

தெளிவுரை : கூரிய வாளையுடைய அரக்கனான இராவணனின் வலிமையை அடக்கி, புகழ் பெருகும் சிற்றம்பலம் மேவும், கங்கை தரித்த சடையுடைய ஈசனை, நாள்தோறும் ஏத்துபவர்களுக்குத் தீர்க்க முடியாத எல்லா நோயும் தீரும். பிறவி நோயும் தீரும். இது உறுதி.

872. கோண்நா கஅணையானும் குளிர்தா மரையானும்
காணார் கழல்ஏத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

தெளிவுரை : வளைந்த நாகத்தைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரைமேல் உள்ள பிரமனும் காணாதவராய் நிற்க, பின்னர் திருவடியை ஏத்தத் தீப்பிழம்பாய் ஓங்கிக் காட்சி நல்கியவன் ஈசன். அப்பெருமான் விளங்கும், தேவர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்தை ஏத்த எல்லாவகையான நோய்களும் தாமாகவே மாயும்.

873. பட்டைத் துவராடைப் படிமம் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

தெளிவுரை : துவாராடையை அணிந்து, அறியாளையுடையவராய் உள்ளவர்கள் சொற்களைக் கேட்டு மயக்க கொள்ளது, ஒழுக்கம் மிக்க பெரியோர்கள் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் மேவி நடம்புரியும் பெருமானை, தினந்தோறும் தொழுவோமாக.

874. ஞாலத்து உயர்காழி ஞான சம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப்படை யானைச் சொன்ன தமிழ்மாலை
கோத் தால்பாட வல்லார் நல்லாரே.

தெளிவுரை : உலகத்தில் உயர்ந்து விளங்கும் காழிப் பதியில் ஞான சம்பந்தன், ஆசார ஒழுக்கத்தால் விளங்கும் சிற்றம்பலத்தில் சூலப் படையுடன் மேவும் ஈசனைப் போற்றிச் சொன்ன இத் தமிழ் மாலையை அழகுடன் பாட வல்லவர் நல்லவர்.

திருச்சிற்றம்பலம்

81. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

875. நல்லார் தீமேவும் தொழிலார் நால்வேதம்
சொல்லார் கேண் மையார் சுடர்பொன் கழலேத்த
வில்லால் புரஞ்செற்றாள் மேவும் பதிபோலும்
கல்லார் மதிழ்சூழ்ந்த காழிந் நகர்தானே.

தெளிவுரை : நன்மை தரும் வேள்வித் தீ வளர்த்துச் செயல் புரியும் நான்கு வேதத்தையும் கற்று, மந்திரச் சொற்களைக் கூறும் அந்தணர்கள் பொற்கழலைப் போற்றி இருக்க, முப்புரத்தை எரித்த ஈசன் மேவும் பதி, மதில் சூழ்ந்த காழிநகர்.

876. துனிவண் தேன்பாயும் இதழி தூமத்தம்
தெளிவெண் திங்கள் மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களிவண்டு யாழ்செய்யும் காழிந் நகர்தானே.

தெளிவுரை : வளமான தேன் துளி யுடைய கொன்றை மலர், ஊமத்தம், தெளிந்த வெண்மதி, நாகம், கங்கை ஆகியன திகழ்கின்ற சென்னியில் மண்டை ஓட்டு மாலையை உகந்த ஈசன் ஊரானது, வண்டு களிப்புடன் தேன் அருந்தி ரீங்காரம் செய்யும் காழி நகர்.

877. ஆலக் கோலத்தின் நஞ்சுண்டு அமுதத்தைச்
சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால்
பாலற்காய் நன்றும் பரிந்து பாதத்தால்
காலன் காய்ந்தான் ஊர் காழிந் நகர்தானே.

தெளிவுரை : ஆலகால விடத்தைத் தான் உண்டு, அமுதத்தை வேதர்களுக்கு அளித்து அருள் புரிந்து தன்மையைப் போன்று, மார்கண்டேயருக்கு நன்றாகப் பரிந்து திருப்பாதத்தால் காலனை உதைத்து மாய்த்த ஈசனது, ஊர், காழி நகர்.

878. இரவில் திரிவோர்கட்கு இறைதோள் இணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தான் இடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீறு அணிவோர்க்கும்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.

தெளிவுரை : இரவில் திரிகின்ற அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனுடைய இருபது தோள்களும் அடங்குமாறு செய்தும், வானினை அளித்து துதிப்போர்க்கும், திருவெண்ணீறு அணிபவர்களுக்கும் வரையாது வழங்கும் வண்மைக் குணம் உடையவர்கள் வாழும் காழி நகர் ஆகும்.

879. மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறியாத மாட்சிமையுடையவன், தோலால் ஆகிய உடையும் அணிந்து மார்பில் முப்புரி நூல் பொருந்த விளங்கும் ஈசன் விளங்கும் பதியானது, இரந்து வருபவர்களுக்கு எல்லா நாட்களிலும் எல்லாக் காலங்களிலும் இல்லை என்று உரைக்காமல் வழங்கும் வள்ளல் தன்மையுடையவர் வாழும் காழி நகர் ஆகும்.

880. தம்கைஇட உண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை உணராதே பேணித் தொழு மின்கள்
மங்கை ஒரு பாக மகிழ்ந்தான் மலர்சென்னிக்
கங்கை தரித்தான்ஊர் காழிந் நகர்தானே.

தெளிவுரை : கையில் உணவு ஏந்தி உண்பவர், காவியுடை கொண்டவர் ஆகியோரின் தீயொழுக்கத்தைத் ஏற்றுக் கொள்ளாது, மங்கையைப் பாகம் கொண்டு மகிழ்ந்து, கொன்றை மலர் முதலானவைகளும், கங்கையும் சென்னியில் தரித்த ஈசனைத் தொழுமின்கள். அவனது ஊர் காழி நகர்.

881. வாசம் கமழ்காழி மதிசெஞ் சடை வைத்த
ஈசன் நகர்தன்னை இணைஇல் சம்பந்தன்
பேசும் தமிழ்வல்லோர் பெருநீர் உலகத்துப்
பாசம் தனைஅற்றுப் பழியில் புகழாரே.

தெளிவுரை : சந்திரனைச் செஞ்சடையில் வைத்த ஈசன் நகராகிய மண் கமழ் காழியின் இணையில்லாத ஞானசம்பந்தன் தமிழ்ப் பதிகத்தை உரைப்பவர்கள், கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில், பாசத்தை நீத்துப், பழியற்ற புகழை அடைவர்.

திருச்சிற்றம்பலம்

82. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

882. இரும்பொன் மலைவில்லா எரிஅம் பாநாணில்
திரிந்த புரமூன்றும் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

தெளிவுரை : பெரிய பொன்மலையாகிய மேருவை வில்லாகவும் அக்கினியை அம்பாகவும் கொண்டு வாசுகி என்கின்ற நாணில் ஏற்றிப் புரங்கள் மூன்றையும் எரித்து அழித்த ஈசன் உறையும் கோயில், அடியவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சிறப்புடைய வீழிமிழலையாகும்.

883. வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத் திசை யோடும் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலிஓரா வீழி மிழலையே.

தெளிவுரை : துன்பத்தால் வேதனையுற்ற வானோர்கள் துயர் தீரக் கடல் நஞ்சினை உண்ட ஈசனார் கோயிலானது, வேத பாடசாலையில் வேத பாராயண ஒலி ஓய்வில்லாது ஒலிக்கும் வீழிமிழலையாகும்.

884. பயிலும் மறையாளன் தலையில் பலிகொண்டு
துயிலும் பொழுதுஆடும் சோதி உறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் இளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

தெளிவுரை : மறையாளன் எனப்படும் பிரமாவின் சிரசினைக் (பிரமகபாலம்) கொண்டு பிச்சையேற்று எல்லோரும் துயிலும் காலமாகிய இரவில் ஆடும் சோதியாகிய ஈசன் உறையும் கோயிலாவது, மயில் சந்திரனைப் போன்ற முகமும், இள மூங்கிலைப் பொலிகின்ற மாதர்கள் திகழும் வீழிமிழலையாகும்.

885. இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை
நிரவிட்டு அருள்செய்த நிமலன் னுறைகோயில்
குரவம் சுரபுன்னை குளிர்கோங்கு இளவேங்கை
விரவும் பொழில்அந்தண் வீழி மிழலையே.

தெளிவுரை : சந்திரனும் சூரியனும் எஞ்சிய தேவர்களும் உரிய வழியில்  தக்கனது யாகத்தில் பங்கேற்ற குற்றத்திற்காகத் தண்டனை செய்து அருள் புரிந்த ஈசன் உறையும் கோயிலாவது, குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை மரங்கள் சூழும் பொழிலையுடைய வீழிமிழலையாகும்.

886. கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணில் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணில் புயல்காட்டும் வீழி மிழலையே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணால் மன்மதனைப் பொடியாக்கி, அவன் மனைவியாகிய இரதி பணிந்து வேண்டுதல் செய்ய அருள் புரிந்த ஈசன் உறையும் கோயிலானது, பூவுலகத்தில் பெரிய வேள்வியைப் புரிந்து அதன் புகை நாள்தோறும் வானத்தில் சென்று மேகம் போன்று காட்டும் வீழிமிழலையாகும்.

887. மால்ஆ யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோடு ஈந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலால் எரிகாட்டும் வீழி மிழலையே.

தெளிவுரை : திருமால் ஆயிரம் மலர்களுடன் தன் மலர் போன்ற கண்ணை இட்டுப்போற்ற, ஆழிப்படையாகிய வலயத்தைச்  சக்கரத்தைத் தந்த ஈசன் உறையும் கோயிலானது, பொய்கையில் சேல்கள் சூழ்ந்திருக்க மேலே தீச்சுடர் போல் விளங்கும் செந்தாமரை மலர் கள் உடைய வீழிமிழலையாகும்.

888. மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தாள் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

தெளிவுரை : நல்ல ஞானத்தால் வழிபட்ட மார்க்கண்டேயரின் உயிரைக் கொண்டு செல்லக் கொதித்து வந்த கூற்றுவனை அழித்த ஈசன் உறையும் கோயிலாவது, ஆசார அனுட்டானங்களில் மிக்கவராய் விளங்கும பெருமக்கள், விதிப்படி நியமங்கள் புரியும் வீழிமிழலையாகும்.

889. எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள் ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

தெளிவுரை : மலையைப் பெயர்த்த இராவணனுடைய தருக்கினை அழித்துத் திருப்பாத விரலால் ஊன்றி அடர்த்து, பின்னர் மந்திரவாளைக் கொடுத்து ஆட்கொண்ட ஈசன் உறைகின்ற கோயிலாவது, வேதங்களை நன்று கற்றுத் தேர்ந்து வேள்விகளைப் பயின்று பாவத்தை வீழ்த்தியவர்கள் மிக வாழும் வீழிமிழலையாகும்.

890. கிடந்தான் இருந்தானும் கீழ்மேல் காணாது
தொடர்ந்து ஆங்கு அவர்ஏத்தச் சுடர்ஆ யவன்கோயில்
படந்தாங்கு அரவு அல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.

தெளிவுரை : கிடந்து பள்ளி கொள்ளும் திருமாலும், இருந்து தொழிலாற்றும் பிரமனும், அடியும் முடியும் காணாது தொடர்ந்து, அவர்கள் அயர்ந்து ஏத்தி வணங்கத் தீச்சுடர் ஆகிய ஈசன் உறையும் கோயிலானது, பாம்பின் படம் போன்ற அல்குலும், பவளம் போன்ற வாயும், விடம் தாங்கிய கண்களும் உடைய மாதர்கள் விளங்கும் வீழிமிழலையாகும்.

891. சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்
நக்கு ஆங்கு அலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு
மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.

தெளிவுரை : தட்டும், துவராடையும் கொண்டு ஏளனமாக நகை செய்து பழிச்சொல் கூறப்படும் ஈசன் உறையும் கோயிலானது, தகுதி வாய்ந்த வேத விற்பன்னர்கள் வேள்விகளை ஆற்றி உலகத்தின் தலை சிறந்தவர்களாக வாழும் வீழிமிழலையாகும்.

892. மேல்நின்று இழிகோயில் வீழிமிழலையுள்
ஏனத்து எயிற்றானை எழிலார் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவைசொல்ல வல்லோர் நல்லோரே.

தெளிவுரை : விண்ணுலகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த கோயிலாகிய வீழிமிழலையுள் வீற்றிருக்கும் பன்றியின் பல்லை அணியாகக் கொண்டுள்ள ஈசனை ஏத்தி, எழில் மிக்க பொழில்திகழ் காழியின் ஞானசம்பந்தன் மெய்யாகக் கூறிய இத் திருப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லோர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

83. திருஅம்பர்மாகாளம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

893. அடையார் புரமூன்றும் அனல்வாய் விழவெய்து
மடையார் புனல்அம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

தெளிவுரை : முப்புரங்களைத் தீக்கிரையாக்கி, வாய்க்கால்களில் நீர் பெருகும் அம்பர்மாகாளத்தில் மேவிய இடபக் கொடி யுடைய எந்தை, வெண்பிறைச் சந்திரனைச் சூடிய ஈசன் ஆவர். சடையுடைய அப்பெருமான் கழல் ஏத்த வினை அணுகாது.

894. தேனார் மதமத்தம் திங்கள் புனல்சூடி
வானார் பொழில்அம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னில் பலிகொண்டு உழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.

தெளிவுரை : தேன் மிகுந்த ஊமத்த மலருடன், சந்திரனும், கங்கையும் சூடி வானளவு உயர்ந்த மரங்கள் கொண்ட பொழில் சேர் அம்பர்மாகாளம் மேவி, பிரம கபாலம் ஏந்திப் பலியேற்று உழலும் வாழ்க்கை உடையவனாகிய ஈசனார் கழல் ஏத்த, அல்லல் அடையாது.

895. திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழில்அம்பர் மாகாளம்மேய
நரையார் விடையூரு நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கள்மேல் ஒழியா ஊனம்மே.

தெளிவுரை : அலைகள் கொண்ட நீராகிய கங்கையுடன், செல்வம் மிக்க மதி சூடி, நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர்மாகாளம் மேவிய, கம்பீரமாகப் பீடுடையுடைய வெண்மையான இடப வாகனத்தில், ஊர்கின்ற நண்பனாகிய ஈசன் கழலை வணங்கித் தினந்தோறும் போற்றி உரைக்க வேண்டும். அவ்வாறு உரைக்காதவர்கள் குறைகள் தீராது. ஈசன் கழலை வணங்கிப் போற்ற குறைகள் தீரும்.

896. கொந்து அண்பொழில் சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலிஅம்பர் மாகாளம்மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன்சடைவைத்த
எந்தை கழலேத்த இடர்வந்து அடையாவே.

தெளிவுரை : கெத்தாகப் பூக்கும் பொழில்கள் நிறைந்த சோலைகளில் வண்டுகள் மகிழ்ந்து தேனருந்தவும், தென்றல் காற்று வீசும் அம்பர்மாகாளம் மேவி, கந்தம் கமழும் கொன்றை மலரை, நறுமணம் கமழும் சடையில் வைத்துள்ள, எந்தையாகி ஈசனார் கழலை ஏத்தி வணங்க, இடர் இல்லை.

897. அணிஆர் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணிஆர் புனல்அம்பர் மாகா ளம்மேய
துணிஆர் உடையினான் துதைபொன் கழல்நாளும்
பணியா தவர்தம்மேல் பறையா பாவம்மே.

தெளிவுரை : அழகு பொருந்திய மலை மங்கையான உமாதேவியை உடலில் ஒரு பாகமாக வைத்து, சங்கு, முத்துக்கள் விளங்கும் நீர்நிலைகள் கொண்ட அம்பர் மாகாளம் மேவி, துணிக்கப்பெற்ற  கிழிந்த, கோவணத்தை உடுத்திய ஈசனார் பொற்கழலை, நாள் தோறும் பணியாதவர்களின் பாவம் அழியாது. பணிபவர்கள் பாவம் அழியும் என்றவாறு.

898. பண்டுஆழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டார் பொழில்அம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.

தெளிவுரை : கடல் நஞ்சை உண்டு மகிழ்ந்து அம்பர் மாகாளத்தில், முப்புரம் எரிசெய்வதற்காக, மேருவை வில்லாகக் கொண்டு, மேவிய ஈசனார் திருக்கழல் ஏத்தக் குற்றம் சாராது.

899. மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழில்அம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாரும் தவந்தானே.

தெளிவுரை : மிளிர்ந்து ஓங்கும் அரவுடன் வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடி, கிளர்ந்து எழுகின்ற சடையுடைய அண்ணலாகிய ஈசனார், வளர்கின்ற பொழிலையுடைய, அம்பர்மாகாளத்தில் மேவியுள்ளார். அவருடைய, கெடுதியில்லாத திருக்கழலை ஏத்திப் பணிய, நோய்கள் யாவும் நீங்கும்; தவம் சார்ந்து மேவும்.

900. கொலைஆர் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலைஆர் புனல் அம்பர் மாகா ளம்மேய
இலைஆர் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.

தெளிவுரை : கொலைத் தன்மையுடைய படைக்கலமாகிய மழுவும், அழகிய வில்லும் ஏந்தி, மூவிலையுடைய சூலம் கொண்டு, மலையிலிருந்து வீழும் நீர் வளம் மிக்க அம்பர்மாகாளத்தில் மேவிய ஈசனார் திருக்கழலை, நாள்தோறும் உறுதியாக நினைப்பவர்களுக்கு வினையானது, நின்று தீங்கு செய்யாது.

901. சிறைஆர் வரிவண்டு தேனுண்டு இசைபாட
மறைஆர் நிறைஅம்பர் மாகா ளம்மேய
நறைஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா
இறையான் கழல்ஏத்த எய்தும் இன்பமே.

தெளிவுரை : சிறகுகளை யுடைய வண்டுகள் தேன் உண்டு இசைத்து ரீங்காரம் செய்ய, வேதங்கள் முழங்கும் அம்பர்மாகாளம் மேவியவன் ஈசன். தேன் பொருந்திய தாமரை மலர்மீது உறையும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு முடியாத அப்பெருமான் திருக்கழலை ஏத்த, இன்பம் உண்டாகும்.

902. மாசூர் வடிவின்னார் மண்டை உணல்கொள்வார்
கூசாது உரைக்கும்சொல் கொள்கை குணமல்ல
வாசார் பொழில் அம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே.

தெளிவுரை : மாசு படிந்த வடிவம் உடையவர்கள், கூசாது உரைக்கும் பொய்யுரை குணம் மிக்கதாகாது. நறுமணம் மிக்க பொழிலுடைய அம்பர் மாகாளம் மேவிய ஈசன் திருநாமத்தை உரைப்பவர்களுக்கு, இடர் இல்லை.

903. வெரிநீர் கொளஓங்கும் வேணுபுரந் தன்னுள்
திருமா மறைஞான சம்பந்தன் சேணார்
பெருமான் மலிஅம்பர் மாகா ளம்பேணி
உருகா உரைசெய்வார் உயர்வான் அடைவாரே.

தெளிவுரை : தேன்போன்ற இனிமையான நீர் கொண்டு ஓங்கும் வேணுபுரத்தில் விளங்கும், செல்வ வளம் மிக்க மறைவல்ல ஞானசம்பந்தன், தேவர் பெருமானாக வீற்றிருந்து அருள்புரியும் ஈசன் திகழும் அம்பர் மாகாளத்தைப் பேணி, மனம் உருகி இத் திருப்பதிகத்தை ஓத, அவ்வாறு உரைப்பவர்கள் உயர்ந்த வானுலகத்தில் உள்ள பெருமையை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

84. திருநாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)

திருச்சிற்றம்பலம்

904. புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையும் சடைமேலோர் நகுவெண் தலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையும் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : அழகினைத் தரும் விரிந்த கொன்றை மலர் சூடிய கடவுள், கங்கை திகழும் சடைமேல், மண்டையோட்டினைத் தரித்து, வினையிலிருந்து நீங்கிய மெய்யடியார்கள் விதிமுறைப்படி வழிபாடு செய்ய, ஒலி எழுப்பும் கடற்கரையில் உள்ள நாகையில், காரோணத்தில் வீற்றிருப்பவர்.

905. பெண்ஆண் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாடன் ஆரூர் உறைஅம்மான்
மண்ஆர் முழவுஓவா மாடம் நெடுவீதிக்
கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : சத்தியும் சிவனும் என நின்ற பெருமான், பிறைச் சந்திரனைச் சென்னியில் சூடிய அண்ணாமலையானாகவும், திருவாரூரில் உறைபவனாகவும், முழவு ஒலி ஓய்வின்றி மேவும் மாட மாளிகைகள் உடைய நீண்ட வீதிகளைக் கொண்ட, கடல் சூழ் நாகையில் காரோணத்தின்கண்ணும் விளங்கின்றான்.

906. பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழல்ஊட்டி அடியார்க்கு அருள்செய்தான்
தேரார் விழவுஓவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ னத்தானே.

தெளிவுரை : பூவுலகத்தவர் தொழ, தேவர்கள் பணிய மூன்று மதில்களை நெருப்புக்கு இரையாக்கி, அடியவர்க்கு அரும் செய்தவன், தேர்த் திருவிழா நடைபெறும் செல்வச் சிறப்புடையவனாக, அலைகடல் சூழ் நாகையின் காரோணத்தில் விளங்குபவனே.

907. மொழிசூழ் மறைபாடி முதிரும் சடைதன்மேல்
அழிசூழ் புனல்ஏற்ற அண்ணல் அணியாய
பழிசூழ் விலர்ஆய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : மந்திர மொழி யுடைய வேதங்களை ஆய்ந்து, சடையின்மேல், கங்கையை ஏற்ற அண்ணலாகிய ஈசன், எத்தகைய பழியையும் அடைதற்கு இல்லாத சிறப்புடைய பக்தர்கள் பணிந்து ஏத்த அண்மையனாய் உப்பங்கழி சூழ்ந்த கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவன்.

908. ஆணும்பெண் ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச்
சேண்நின் றவர்க்கு இன்னம் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : சிவனும் சக்தியுமாய் விளங்கி, அடியவர்களுக்குப் போகமும் ஞானமும் அருள் புரிந்து, தேவர்களுக்கு மேலும் வழங்குதற்கு வல்லவனாகிய ஈசன், அன்பு கொண்ட வழிபாடு புரியும் திருத்தொண்டர்கள், நாள்தோறும் கண்டு வழிபடும் கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவன்.

909. ஏனத்து எயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத்து இளந்திங்கள் வளரும் சடையண்ணல்
ஞானத்து உரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானல் கடல் நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : பன்றியும் பல்லும் அரவமும் அணியாகப் பூண்டு சந்திரனைச் சடையில் கொண்ட அண்ணலாகிய ஈசன், ஞான நூல்களில் வல்லவர்கள் நாள்தோறும் பணிந்தேத்தும் நாகைக் காரோணத்தானே !

910. அரையார் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு
விரையார் வரைமார்பில் வெண்ணீறு அணிஅண்ணல்
வரைஆர் வனபோலவளரும் வங்கங்கள்
கரைஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : அரையில் நாகம், மணி ஆகியவற்றைக் கட்டி அசைத்து மணம் கமழும் மார்பில் வெண்ணீறு தரித்த அண்ணல், மலைபோல் கப்பல்கள் வரும் கடல் நாகைக் காரோணத்தில் வீற்றிருப்பவரே.

911. வலங்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண் டோள்
இலங்கைக்கு இறைவாட அடர்த்து அங்கு அருள் செய்தான்
பலங்கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : வளமான புகழ்கொண்டு, மலை போன்ற தோள்களும் உடைய, இலங்கையின் வேந்தனாகிய இராவணன் மெலியுமாறு அடர்த்து, பின்னர் வணங்கித் துதிக்க அருள் செய்த ஈசன், வலிமை மிக்க புகழுடைய பக்தர்கள் பணிந்து ஏத்தப் பூவுலகத்திற்கு அணிகலமாக உள்ள கடல் நாகைக் காரோணத்தானே.

912. திருமால் அடிவீழத் திசைநான் முகன்ஏத்தப்
பெருமான் எனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூரும் செல்வன் திரைசூழ்ந்த
கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை :  திருமால், திருவடியைத் தொழுது விழுந்து வணங்கவும், பிரமன் போற்றித் துதிக்கவும், பெருமானே என்று ஏத்தி வழிபடுபாறு நின்று ஈசன். பிறைச் சந்திரனைத் தலையில் சூடி மால்விடையூரும் செல்வன். அப்பெருமான், அலைகள் சூழ்ந்த கரிய பெருமையுடைய கடல் சூழ்ந்த நாகையில் விளங்கும் காரோணத்தில் வீற்றிருப்பவனே.

913. நல்லார் அறம்சொல்லப் பொல்லார் புறம்கூற
அல்லார் அலர்தூற்ற அடியார்க்கு அரும்செய்வான்
பல்லார் தலைமாலை அணிவான் பணிந்து ஏத்தக்
கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

தெளிவுரை : நல்லோர்கள் அறநூல் பொருள்களை நவிலவும், தீயவர்களும், அறியாமையுடையவர்களும் பயனற்றவைகளைப் பேசியிருப்பினும், பணிந்து ஏத்தும் அடியவர்களுக்கு அரும் செய்யும் ஈசன், தலை மாலை அணிபவனாகிய கடல் நாகைக் காரோணத்தானே.

914. கரை யார்கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலும் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்
கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே.

தெளிவுரை : கடற்கரையில் விளங்கும் நாகையில் காரோணத்தில் வீற்றிருக்கும் வெள்ளிடையானை ஏத்தி நவிலும் ஞானசம்பந்தன் தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் அனைவரும், அழியாத வடுவுடைய அழகினராய் விளங்கி, மங்கல ஒலி முழங்கும் வானுலகை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

85. திருநல்லம்  (அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

915. கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழு தேத்த
வில்லால் அரண்மூன்றும் வெந்துவிழ எய்த
நல்லா(ன்) நமையாள்வா(ன்) நல்ல நகரானே.

தெளிவுரை : கல்லால மரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்த நீலகண்டப் பெருமானே ! என்று, எல்லா மொழியாலும் தேவர்கள் தொழுது ஏத்தி நிற்க, முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்து மேருமலையை வில்லாகக் கொண்டு விளங்கும், எல்லோரும் நல்லவனாகிய ஈசன், நம்மை ஆண்டு அருள்புரியும் நல்லம் என்னும் நகரை உடையவனே.

916. தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : ஈசனைப் புறம்பாக வைத்து, தக்கன் செய்த யாகத்தில் பங்கேற்ற தேவர்களைத் தண்டித்து, பொன் சடை தாழ்ந்து விளங்கி இருக்க, கொக்கின் இறகும், வெண்பிறைச் சந்திரனும் சூடும் பெருமான், நம்மை எல்லாம் ஆட்கொண்டு அருள் புரிபவன். அவன் நல்லம் என்னும் நகரை உடையவன்.

917. அந்திமதி யோடும் அரவச் சடைதாழ
முந்தி ஆனலேந்தி முதுகாட்டு எரியாடி
சிந்தித்து எழவல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : தேய்ந்த பிறைச் சந்திரனும் நாகமும், சடையில் விளங்க, நெருப்பைக் கரத்தில் ஏந்தி, மயானத்தில் நடம் புரிந்து சிந்தையால தொழுது போற்றும் அடியவர்களுடைய தீராத வினை யாவும் தீர்க்கும் ஈசன், நம்மை ஆட்கொண்டு அருள்புரிபவன். அவன் நல்லம் என்னும் நகரில் விளங்கபவன்.

918. குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே.

தெளிவுரை : குளிர்ந்த சந்திரனும் கொன்றையும் சடையில் விளங்க, மிளிர்ந்து விளங்கும் அரவமும் முப்புரிநூலும் திகழ் மார்பும், தளிர் போன்ற திருமேனியுடைய உமாதேவியைப் பாகமாக உடையவன், தண்வயல் சூழந்த நல்லம் என்னும் நகரத்தில் விளங்கும் ஈசன்.

919. மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடைஎந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : நீலமணி போன்று திகழும் கண்டத்தை உடையவன்; மலர்கள் சூடி பிணித்துக் கட்டப்பட்ட நீண்ட சடையுடைய எந்தையாகிய பெருமான் ஆவர். அப்பெருமானைத் தெளிந்த மனத்தை உடைய தொண்டர்களை மலர்கொண்டு கழல் பேணிப் போற்றித் தொழுது ஏத்த, நாடி வந்து நம்மை ஆட்கொண்டு அருள்புரிவான். அவன் நல்லம் என்னும் நகரில் வீற்றிருப்பவன்.

920. வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசும் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் எனஉள்கி எழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வா னல்ல நகரானே.

தெளிவுரை : வாசம் பொருந்திய மலர்கள் பெருகும் மலையான் மகளாகிய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு திருநீற்றை அழகாகத் தரித்து, விரிந்த கொன்றை மலரைச் சூடிய ஈசன், தன்னை நினைத்து வணங்குபவர்களுக்கு வினை நாசன் ஆகுபவன். அப்பெருமான் நம்மை ஆட்கொண்டு அருள் புரிபவன். அவன் நல்லம் எனும் நகரத்தில் விளங்குபவன்.

921. அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ(ன்) நமையாள்வா(ன்) நல்ல நகரானே.

தெளிவுரை : அழகிய வளையலை யணிந்த உமாதேவி கண்டு மகிழுமாறு, நெருப்பைக் கையில் ஏந்தி, தேன் சொரியும், வாசனைமிக்க கொன்றை மலர்சூடி, இளமை யழகு பொலிய, சுடுகாட்டில் ஊழித்தீயின் விளையாட்டை நிகழத்தும் நம் தலைவன், நம்மை ஆட்கொண்டு அருள்புரிபவன். அவன் நல்லம் என்னும் நகரில் விளங்குபவன்.

922. பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலின் கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரலூன்றி
நண்ணார் புரம்எய்தா(ன்) நல்ல நகரானே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகமாகத் திருமேனியில் கொண்டுள்ள பெருமான், பிறை சூடிய நெற்றியை உடையவன்; கருத்து இன்றிக் கயிலையை எடுத்த இராவணனை, ஒரு நொடிப்பொழுதில் விரலை ஊன்றி அடக்கியன்; அப்பெருமான், பகைவராய்த் திரிந்த முப்புராரிகளை எரித்து அழித்த நல்லம் என்னும் நகரத்தினன்.

923. நாகத்து அணையானு நளிர்மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்துஅங்கு அழகாரும்
நாகம் முரையார்த்தா னல்ல நகரானே.

தெளிவுரை : நாகத்தை அணையாகக் கொண்டு பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ச்சியான தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் போகத்தில் பொலிவடைந்து இருத்தலை யொட்டி உமா தேவியைப் பாகமாகக் கொண்டு, அழகிய நாகத்தை அரையில் கட்டி மகிழ்ந்தவன் நல்லம் என்னும் நகரில் வீற்றிருக்கும் ஈசன்.

924. குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறவில் லுரைகேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் ளரவுஆர்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.

தெளிவுரை : குறிக்கோள் இல்லாத சமணர்களும் தேரர்களும் கூறும் உரைகளை ஏற்காது, அரவத்தை அணியாகக் கொண்டுள்ள ஈசன், வினை தீர்ப்பவன்; பொழில் சூழ்ந்த நல்லம் எனும் நகரத்தில் வீற்றிருப்பவன்.

925. நலமார் மறையோர் வாழ் நல்ல நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைகள் இவைவல்லார் கவலை கழிவாரே.

தெளிவுரை : வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்து வேள்விகள் செய்து நலம் பரப்பும் மறையவர்கள் வாழ்கின்ற நல்லம் என்னும் நகரில் மேவிய, மழுப் படையேந்திய ஈசனை, காழிப்பகுதியில் திகழும் ஞானசம்பந்தன், கருதிச் சொன்ன சாத்திரக் கலைபோன்ற இத்திருப்பதிகத்தை உரைப்பவர்கள், கவலை யற்றவராவர்.

திருச்சிற்றம்பலம்

86. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

926. கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின்று இருபோது முனியாது எழுந்துஅன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.

தெளிவுரை : கொட்டும் பறைக்கு ஏற்றாற் போன்று அனலைக் கையில் ஏந்திச் சீராக நடனம் ஆடுகின்ற நல்லூர்ப் பெருமானை, காலை மாலை ஆகிய இரு காலங்களிலும் தடை இல்லாது, அன்பு பொருந்திய நெஞ்சினராய் வழிபடுகின்றவர்களுக்குப் பாவம் இல்லை.

927. ஏறில் எருதேறும் எழிலாய் இழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்தர் அவர்என்ன
நாறும் மலர்ப் பெய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட்கு அடையா குற்றமே.

தெளிவுரை : எருது வாகனம் அன்றி வேறு எதிலும் வாகனமாகக் கொள்ளாது, உமாதேவியுடனாகி அர்த்தநாரியாயும், வேறாயும் விளங்கும் விகிர்தராகிய ஈசன் வாசம் பொருந்திய பொய்கைசேர் நல்லூரில் விளங்கும் பெருமானே என்று கை தொழுது போற்றும் அடியவர்களுக்குக் குற்றங்கள் சாராது.

928. சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடைதாழ
ஓடுஉண் கலனாக ஊர்இடு பிச்சை
நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட்கு அடையா பாவமே.

தெளிவுரை : இளைய பிறைச் சந்திரனைச் சூடி, பொன் போன்ற சடை விரிந்து தாழ, பிரம கபாலம் ஏந்தி ஊர் இடுகின்ற பிச்சையை நாடும் நெறியுடைய நல்லூர்ப் பெருமானை, பக்தியால் பாடிப் போற்றும் அடியவர்களுக்கு, பாவம் சாராது.

929. நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெரியானைக் கைகூப்பித் தொழுது
ஏத்தும் அடியார்கட்கு இல்லை இடர்தானே.

தெளிவுரை : பந்த பாசங்களிலிருந்து நீத்து விளங்கும் தனித்துள்ள நெறியுடையவன், தவத்தினின்று நீங்காத் தன்மையன், உலகுக்குப் பொருந்திய நெறியினை வகுத்து, அந்நெறியாக விளங்குபவன் நல்லூரில் விளங்கும் ஈசன். உயிர்களைக் காத்தருளும் நெறியுடைய அப்பெருமானைக் கைகளால் கூப்பித் தொழும் அடியவர்களுக்கு இடர் இல்லை.

930. ஆகத்து உமைகேள்வன் அரவச் சடைதாழ
நாகம் அசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்துஅண்மித் தாள்கள் தொழும்தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே.

தெளிவுரை : தனத உடம்பில் ஒரு கூறாகிய உமாதேவிக்குத் துணைவனாகிய ஈசன், அரவம் சடையில் தாழ்ந்து அசைய நல்லூரில் வீற்றிருக்க, மிக்க ஆர்வம் கொண்டு நாடித் திருவடியைத் தொழும் தொண்டர்கள் போகம் கொண்டு மகிழ்ந்து புகழுடன் விளங்குவார்கள்.

931. கொல்லும் களியானை உரிபோர்த்து உமைஅஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தார் இடர்தீரச்
சொல்லும் அடியார்கள் அறியார் துக்கமே.

தெளிவுரை : உமாதேவி அஞ்சுமாறு, கொல்லும் நோக்கத்துடன் வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்து, நன்னெறியாகிய முத்திவழங்கும் நல்லூர்ப் பெருமானையே அந்நெறியாகக் கொண்டு, அவன் திருவடியினைச் சிந்தித்துத் துதிக்கும் அடியவர்களுக்குத் துக்கம் இல்லை; துன்பமும் இல்லை. இம்மையில் துன்பமற்ற நிலையும், மறுமையில் முத்திப் பேறும் ஆகும் என்பதாம்.

932. எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி ஆள்என்று அடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

தெளிவுரை : எங்கள் பெருமான், தேவர்களால் தொழப் பெறும் பெருமான்; நல்லூரில் எக்காலத்திலும் நீங்காது விளங்கும் பெருமான்; தமது கைகளைத் தலைமேல் ஏற்றித் தூக்கி, அப்பெருமானுக்கு ஆட்படும் அடியவராய், திருவடி நிழலில் தங்கும் திருத்தொண்டர்கள், மனத் தடுமாற்றம் அற்றவர்களாய் உறுதியுடன் விளங்குவார்கள்.

933. காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக் கோன்
நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாராய் இகழாது எழும்தொண்டர்
தீப மனத்தார்கள் அறியார் தீயவே.

தெளிவுரை : மன்மதனுடைய அழகைத் தீய்த்து, கடல் சூழந்த இலங்கையின் தலைவனாகிய இராவணனுடைய பெயரைக் களங்கம் உறுமாறு அடர்த்து, நல்லூரில் வீற்றிருக்கும் ஈசனை, இகழ்ந்து கூறாது, இனப் மனத்தோடு துதித்துப் போற்றும் தொண்டர்கள், ஒளி பெறும் மனத்தினராய் விளங்கி தீமையற்ற வராய் இருப்பார்கள்.

934. வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியாணை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே.

தெளிவுரை : மலரோனாகிய பிரமனும், உலகம் அளந்த திருமாலும் நண்ணுவதற்கு அரிய நல்லூரில் விளங்கும் ஈசனை, மலர்கள் கொண்டு தூவித் திருவடியைத் தொழுது போற்ற நினைக்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை.

935. பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கிய
நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சும் அடியார்கட்கு இல்லை இடர்தானே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் நாள்தோறும் பழிச் சொற்களைக் கூறித் தூற்றி நின்றாலும், நிலைத்து நின்ற ஈசனை, நஞ்சினை மிடற்றில் கொண்ட நல்லூர்ப் பெருமானை, உயர்வாகக் கொள்ளும் அடியவர்களுக்கு இடர் இல்லை.

936. தண்ணம் புனல்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.

தெளிவுரை : தண்மையான நீர்சூழ்ந்த காழியின் ஞானசம்பந்தன், நண்ணி நீர்சூழ்ந்த நல்லூரில் விளங்கும் ஈசனைப் போற்றி அழகாகப் புனைந்த சொல் மாலையாகிய இத் திருப்பதிகத்தை ஏத்தி உரைப்பவர்கள் நிலஉலகத்திலும் விண்ணுலகத்திலும் புகழுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

87. திருவடுகூர் (அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில், புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

937. கடுகூர் எரிமாலை அணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாள் ஒன்று உடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமம் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூர் அடிகளே.

தெளிவுரை : ஈசன் சுடுகின்ற எரியை அணிபவர், கொடிய கூர்மையான மழுப்படையேந்தியவர், இடப வாகனத்தில் ஊர்பவர். கடுமையான பசி, காமம், மனக்கவலை முதலான பிணிகள் இல்லாதவர். கரிய நுண்ணிய மணலில் நீர் சூழ்ந்த வடுகூரில் விளங்கும் அடிகள் ஆவர்.

938. பாலும் நுறுநெய்யும் தயிரும் பயின்றுஆடி
ஏலும் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
 ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : பால், நெய், தயிர், ஆகியவற்றைப் பூசனைப் பொருள்களாக ஏற்று மகிழந்து ஆடி, எலும்பு மாலையும், மணம் பொருந்திய திருவெண்ணீறும் கொண்டு, ஒளி மல்கும் அழகிய திருக்கோலத்தில், கொண்டும், ஒளி மல்கும் அழகிய திருக்கோலத்தில், சோலைகளில் அன்னப் பறவைகள் மகிழ்ந்து ஒலி செய்யும் வடுகூரில் ஈசன் நடம்புரிபவர்.

939. சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடைதன்மேல்
ஓடும் களியானை உரிபோர்த்து உமையஞ்ச
ஏடு மலர்மோந்தங்கு எழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : சுடர்கின்ற பொன்போன்று விளங்கும் சடையில் பிறைச் சந்திரனைச் சூடி, உமையவள் அஞ்சுமாறு ஓடி வந்த மதயானையின் தோலை உரித்துப் போர்த்து, இதழ்கள் விரிந்த மலர்களை அழகிய வண்டுகள் முகர்ந்து ரீங்காரம் செய்யும் வடுகூரில் ஈசன் நடம் புரிபவர்.

940. துவரும் புரிசையும் துதைந்த மணிமாடம்
கவர வெரி யோட்டிக் கடிய மதில்எய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : நவமணிகள் விளங்கும் வாசனை மலர்கள் சூழும் முல்லை நிலத்தில், மகளிர் விளங்கித் திகழும் வடுகூரில், ஆடல்புரியும் அடிகளாகிய ஈசன், துவர்வண்ணத்தில் மதில்கள்களும் மாடங்களும் கவருமாறு மும்மதில்களை எரித்தவர்.

941. துணியார் உடையாடை துன்னி அரைதன்மேல்
தணியா அழல்நாதம் தரியாவகை வைத்தார்
பணியார் அடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் அடிகளே.

தெளிவுரை : கிழிந்த துணியாகிய கோவணத்தை ஆடையாக உடுத்தி, அரையில் நாகத்தைத் தரித்து, பணி செய்யும் அடியவர்கள் பலர் வணங்கிப் போற்ற, அழகிய வடுகூரில் ஈசன் நடம் புரிபவர்.

942. தளரும் கொடியன்னாள் தன்னோடு உடனாகிக்
கிளரும் அரவுஆர்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண்டு இசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

தெளிவுரை : இளமையான கொடிபோன்ற உமாதேவியை உடனாகக் கொண்டு, கிளர்ந்து எழும் அரவத்தை முடிமேலே, வைத்துப் பிறை சூடி, வரி வண்டுகள் இசை பாடும் வடுகூரில் ஈசன் நடம் புரிபவர்.

943. நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வா கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்கலன் மடிய உதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : நெடிது ஓங்கியவர், சிறிய இளம்பிறைச் சந்திரனைச் சூடியவர், இடப வாகனத்தில் அமர்பவர், கொடிய சொற்களால் கூறப்படும் பழிச் சொற்களை ஏற்காதவர், கடுமையான தொழிலையுடைய காலன் மடியுமாறு உதைத்த பாதத்தை உடையவர், வடுகூரில் வீற்றிருந்து நடம் புரியும் ஈசர்.

944. பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டுஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : பிறைச் சந்திரனும் கங்கையும் நீங்காது சூடிய முடியுடையவர், வேதமும் ஓதி, மயானத்தில் உறைந்து, யாழ் ஒலி போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழும் வடுகூரில் நடம் புரியும் அடிகளாவர், ஈசன்.

945. சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்துஎம்மை நன்று மருளசெய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : அழகிய மலர்கள் சூடிய சடையின் இடையில், அந்த மணத்தையுடைய சந்திரன் உதிர்க்கும் கதிர் அலைகள் விரும்பி வந்து நல்லருள் புரியுமாறும் செய்பவர், அழகிய குளிர்ச்சி பொருந்திய வடுகூரில் நடம்புரியும் அடிகளாகிய ஈசன்.

946. திருமால் அடிவீழத் திசைநான் முகனாய
பெருமான் உணர்கில்லாப் பெருமா(ன்) நெடுமுடிசேர்
செருமால் விடையூரும் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் உணர்வதற்கு அரிய பெருமான், மால் விடையூர்ந்து செல்லும் செம்மையுடையவன் ஆகிய ஈசன், எல்லாத் திசைகளிலும் ஒளிபரவும் சிறப்புடைய வடுகூரில் நடம்புரியும் அடிகள் ஆவார்.

947. படிநோன்பு அவையாவர் பழியில் புகழான
கடி நாள்திகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழிஆர் சம்பந்தன்
அடிஞா னம்வல்லார் அடிசேர் வார்களே.

தெளிவுரை : உலகத்தில் நோற்கப்படும் விரதங்கள் யாவும் ஆகியவர், பழியில்லாத புகழுடன், நறுமணம் கமழும் சோலைசூழ் வடுகூரில் விளங்க, சிந்தை பதித்து ஒருமைகொண்டு பாடிய, ஞானசம்பந்தன் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், ஈசன் திருவடியான முத்தி நலம் அடைந்து, பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

88. திருஆப்பனூர் (அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை)

திருச்சிற்றம்பலம்

948. முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம் அதுகொண்டு அரைக் கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்
பற்று மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : முதிர்ந்த சடைமுடியின் மீது, முதிராத இளைய பிறைச் சந்திரனைச் சூடி, படம் கொண்டு விளங்கும் அரவத்தை அரையில் அணிந்து சினம் அற்றவனாகி, சிறப்புடைய திருஆப்பனூரில் வீற்றிருக்கும் ஈசனை, பற்றுதல் கொண்டு வணங்கும் மனம் உடையவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

949. குரவம் கமழ் குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவும் திருமேனி விளங்கும் வளைஎயிற்றின்
அரவம் அணிந்தானை அணிஆப்ப னூரானைப்
பரவு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : குரவம் கமழ் குழலி என்னும் திருநாமம் கொண்ட உமாதேவி வீற்றிருக்க, உடனாகி வளைந்த பல்லையுடைய பாம்பினை அணிந்து, ஆப்பனூரில் விளங்கும் ஈசனைப் போற்றித் துதிப்பவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

950. முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவம் அணிந்தனை அணிஆப்ப னூரானைப்
பரவு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : அழகிய மணம் வீசும் கூந்தலையுடைய பெண்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் மன்மதனை, முன்னர் சினந்து எரித்துச் சாம்பலாக்கிப் பின்பு, உயிர் பெற்று எழுமாறு செய்த ஈசன், சுடுகாட்டில அரவம் அணிந்து விளங்கி, ஆப்பனூரில் வீற்றிருக்க, அப் பெருமானைத் துதிப்பவர்கள், வினையும் பற்றும் நீங்கியவர்கள் ஆவார்கள்.

951. பிணியும் பிறப்புஅறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியின் உடைதாழச் சுடரேந்தி ஆடுவான்
அணியும் புனலானை அணிஆப்ப னூரானைப்
பணியு மனம் உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : பிணிக்கப்படும் காரணமாகிய பிணி தீர்த்தலும், பிணிக்கப்படும் பிறவியின் துன்பத்தைத் தீர்த்தலும், இம்மையில் உடலில் தோன்றும் பிணியும், மீளவும் பிறவா நிலையை அளிப்பவனும் உடையவன் ஈசன் எனும் பொருள் தோன்ற, பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் என உணர்த்தப்பட்டது. இதனைப் பிணியும் பிறப்பும் அறுப்பான் எனலும் பொருந்தும்.

952. தகரம் அணியருவித் தடமால் வரைசிலையா
நகரம் ஒருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை அணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : மயிர்ச்சாந்து அணிகொளும் பெரிய மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு, மும்மதில்களை எரித்து வெற்றிகொண்டு, அகரமாக விளங்கி, எழுத்துக்கெல்லாமும், ஒலிக்கெல்லாமும் ஆதாரமாகிய முதற்பொருளாய் உள்ளவன், அழகிய ஆப்பனூரில் வீற்றிருப்பவனாகிய ஈசன். அப்பெருமானைத் தியானித்து வணங்குபவர்கள் வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

953. ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவியக்
காடது இடமாகக் கனல்கொண்டு நின்றுஇரவில்
ஆடும் தொழிலானை அணி ஆப்ப னூரானைப்
பாடு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : ஓடி, இறக்கைகள் கொண்டு பறந்து திரியும் மாயங்களையுடைய மூன்று புரங்களை விரைவில் எரிந்து சாம்பலாகுமாறு செய்து, சுடுகாட்டை இடமாகக் கொண்டு, கையில் நெருப்பு ஏந்தி, இரவில் நடனம் புரியும் தொழில் உடையவன், ஈசன். அப் பெருமான் அழகிய ஆப்பனூரில் வீற்றிருக்க, அவனை வணங்கிப் பாடித் துதிக்கும் சிறப்புடையவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்கள்.

954. இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்
கயலின் இணைக் கண்ணாள் ஒருபால் கலந்துஆட
இயலும் இசையானை எழில்ஆப்ப னூரானைப்
பயிலு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : ஈசனார் திருமணம் கொள்ளும் வகையில் இயங்கும் இடப வாகனத்தில் ஏறி, எரியைப் போன்ற ஒளிதரும் மழுப்படையை வீசி, கயல் போன்ற கண்ணையுடைய உமாதேவி ஒரு பக்கம் இணைந்து ஆடும் தன்மையுடையவன், எழில் கொண்ட ஆப்பனூரில் வீற்றிருப்பவன். அப்பெருமானை வணங்கும் மனத்தினர்க்கு. வினையும் பற்று அறுந்தொழியும்.

955. கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
அரக்கன் திறல்அழித்தான் அணிஆப்ப னூரானைப்
பருக்கு மனம்உடையார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : கரிய கண்டத்தை உடையவன்; சினம் கொண்ட நாகத்தை அரையில் கட்டியவன்; ஒளி மிக்க வெண்பிறை சூடி அடியவர்கள் பக்தியால் உருகி நிற்குமாறு செய்பவன்; இராவணனுடைய திறனை அழித்தவன் ஈசன். அப்பெருமான், அழகிய ஆப்பனூரில் வீற்றிருக்க, அவனை உள்ளத்தால் பருகி மகிழும் அடியவர்கள், வினையும் பற்றும் அற்றவர்கள் ஆவார்.

956. கண்ணன் கடிக்கமல மலர்மேல் இனிதுறையும்
அண்ணற்கு அளப்பரிதாய் நின்றுஆங்கு அடியார்மேல்
எண்ணில் வினைகளைவான் எழில்ஆப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர் வார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : திருமாலும், திருமாலின் உந்திக் கமலத்தில் இனிது உறையும் பிரமனும், அளப்பரியவாறு ஓங்கி, சோதிப் பிழம்பாகி நின்று, அடியவர்களிடம் பற்றியுள்ள எண்ணற்ற வினைச் சுமைகளைக் களைகின்ற, எழில் மிக்க ஆப்பனூரில் வீற்றிருக்கும் ஈசனை, பண்சேர்ந்து இசைகொளும், பக்திப் பாடல்களைக் கூறிப் போற்றும் அடியவர்கள் வினையும் பற்றும் அற்றவர் ஆவார்.

957. செய்ய கலிங்கத்தார் சிறுதட்டு உடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்து அடியாரை
ஐயம் அகற்று வான் அணிஆப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற்று அறுப்பாரே.

தெளிவுரை : சிவந்த காவித் துணியும், தட்டும் உடையவர்கள் பொய்ம்மை கூற, தன்னை நன்கு புரிந்த அடியார்களின் சந்தேகங்களை நீக்கி அருள் புரிபவன், அழகிய ஆப்பனூரில் வீற்றிருக்க, அப்பெருமானை ஆழ்ந்து தியானம் செய்து நினைப்பவர்களின் வினையும் பற்றும் அறும்.

958. அந்தண் புனல்வைகை அணி ஆப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை
நந்தி அடிபரவு நலஞான சம்பந்தன்
சந்தம் இவைவல்லார் தடுமாற்று அறுப்பாரே.

தெளிவுரை : அழகிய தண்புனலாகிய வைகையின் வளப்பத்தினால் அணிபெறும் ஆப்பனூரில் மேவும், அழகிய கொன்றை மலரைச் சடையில் கூடிய ஈசன், அடியை வணங்கியொழுகும் ஞானசம்பந்தன் உரைத்த சந்தப் பாடலாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், மனம் தடுமாற்றம் அற்றவராய், உறுதியான தன்மையுடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

89. திருஎருக்கத்தம் புலியூர் (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

959. படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனாய் இடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்தகு கோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.

தெளிவுரை : படைகள் உடைய பூதங்களையும் யானையை உரித்த தோலைப் போர்வையாகவும் உடையவனாகிய ஈசன், உமாதேவியை உடனாகிக் கங்கையைச் சடையில் கொண்டவனாய், எருக்கத்தம் புலியூர் மேவி உள்ளவன். இடப வாகனம் கொண்ட அப்பெருமான் திருவடியை வணங்கித் துதிக்க, வினையானது சாராது.

960. இலைஆர் தருசூலப் படைஎம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழஎய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.

தெளிவுரை : இலைபோன்ற சூலத்தைப் படையாகக் கொண்ட எம்பெருமானாய், மூன்று கோட்டைகளைச் சாம்பலாக்கிய வில்லை யுடையவன், எருக்கத்தம்புலியூரில் திகழும் கோயிலில் உள்ளவன். அப்பெருமானை, வேதத்தால் பாடித் தொழுது திருவடியைப் போற்ற, வினைகள் நாடாது.

961. விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ஆண் அலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற
அண்ணா எனவல்லார்க்கு அடையா வினைதானே.

தெளிவுரை : தேவர்களுடைய தலைவனே ! விகிர்தா ! இடப வாகனத்தில் ஊர்பவனே ! பெண்ணும் ஆகி, ஆணும் ஆகி, இரண்டும் இல்லாத அலியும் ஆகிய பித்தா ! பிறை சூடிய பெருமானே ! எண்ணத்தில் பொருந்துகின்ற எருக்கத்தம் புலியூரில் மேவும் அண்ணா ! எனப் போற்றி வழிபடும் அடியவர்களுக்கு, வினை அடையாது.

962. அரைஆர் தருநாகம் அணிவான் அலர்மாலை
விரைஆர் தருகொன்றை உடையான் விடையேறி
வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரைஆர் சடையானைச் சேரத் திருவாமே.

தெளிவுரை : அரையில் நாகத்தை அணிந்து, மணம் கமழும் கொன்றை மாலை தரித்து, இடப வாகனத்தில் அமர்ந்து, கயிலை மலையுடைய ஈசனை, எருக்கத்தம் புலியூரில் மகிழந்து உறையும், கங்கை பதிந்த சடையுடையவனை, மனம் ஒன்றி வணங்க, செல்வம் தரும்.

963. வீறுஆர் முலையாளைப் பாக மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை அழிவித்தான்
ஏறான் எருக்கத்தம் புலியூர் இறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.

தெளிவுரை : தனிச்சிறப்புடைய தனங்களையுடைய உமாதேவியை பாகம் வைத்தும், சீற்றம் மிகுந்த காலனை அழிவித்தும், ஏறுபோன்ற எருக்கத்தம் புலியூர் மேவும் இறைவனைத் தனித்திருந்து தியானம் செய்பவர்களுக்கு, வினை இல்லை.

964. நகுவெண் தலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவான் அயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்துஅங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.

தெளிவுரை : கபாலம் ஏந்தி, நாலாவிதமான பாட்டுகளைப் பாடி பிச்சை எடுத்து, புலித்தோலை மேலே உடுத்தித் தகுந்தவாறு எருக்கத்தம்புலியூரில் விளங்கி, முழுமை கொண்டுள்ள ஈசனின் கழலை ஏத்தி வணங்க, வினைகள் அணுகாது.

965. ஆவா எனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா என அருளார் செல்வம் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே எனஅல்லல் தீர்தல் திடமாமே.

தெளிவுரை : மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணன், ஆ! ஆ! என அலறித் துன்புறுமாறு அடர்த்து, பின்னர் அவன் தேவா ! என்று, சாமகீதம் கொண்டு இசைத்துப் போற்ற, அருள் மிகுந்த செல்வத்தைக் கொடுத்த தலைவரே, எருக்கத்தம் புலியூரில் கோயில் கொண்டுள்ளவர். அப்பெருமானை தேவன் என வணங்கித் தொழுபவர்களுக்கு, அல்லல் இல்லை.

966. மறையா(ன்) நெடுமால்காண்பு அரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையான் எருக்கத்தம் புலியூர் இடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவனாகிய ஈசன், மழுப்படை யேந்தி, நிறைவில்லாத பிறைச் சந்திரனைச் சூடி முத்துக் குவியலாக உள்ள இறைவன், எருக்கத்தம்புலியூரில் வீற்றிருந்து கறையுடைய கண்டத்தனாய் விளங்குகின்றான். அப்பெருமானை நினைக்க, வினை கெடும்.

967. புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
கத்தி தரித்துறையும் சோதி உமையோடும்
நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய்
அத்தன் அறவன்றன் னடியே அடைவோமே.

தெளிவுரை : புத்தர்களும் அருகர்களும் கூறும் உரைகளைப் புறம்பாகத் தள்ளி வைத்து, தூய்மையாய் உறையும் சோதி வடிவான உமாதேவியை உடனாகக் கொண்டு, நித்திப் பொருளாகியவனாய், அத்தனாய், அறநெறியனாய், எருக்கத்தம்புலியூரில் வீற்றிருக்கும் ஈசன் திருவடியைச் சார்வோமாக.

968. ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்
பார்ஆர் அவரேத்தப் பதிவான் உறைவாரே.

தெளிவுரை : சிறப்பு மிக்க எருக்கத்தம்புலியூரில் உறையும் ஈசனைச் சீர்மிக்க காழிப்பதியில் செல்வமாக விளங்கும் ஞானசம்பந்தன், ஏத்தி அளித்த இனிய அருந்தமிழ் மாலையாகிய இத் திருப்பதிகத்தை உலகத்தவர் பொருந்தி ஏத்த வானுலகில் இனிது வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

90. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

969. அரனை உள்குவீர் பிரமன் ஊருள்எம்
பரனையே மனம் பரவி உய்ம்மினே.

தெளிவுரை : ஈசனை நெஞ்சில் நினைமின். பிரமன் பூசித்த ஊராகிய பிரமபுரத்தில் எம் பரனை மனத்தால் பரவி ஏத்தி உய்து பெறுவீராக.

970. காண உள்குவீர் வேணு நற்புரத்
தாணு வின்கழல் பேணி உய்ம்மினே.

தெளிவுரை : ஈசனைக் கண்டு தரிசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே ! சீகாழியில் மேவும் ஈசன் கழல் பேணி தரிசித்து உய்தி பெறுவீராக.

971. நாதன் என்பரீர்கள் காதல் ஒண்புகல்
ஆதி பாதமே ஓதி உய்ம்மினே.

தெளிவுரை : என் தலைவனே என ஈசனைப் போற்றுகின்றவர்களே ! ஆதிபரஞ்சுடராக விளங்கும் நாதன் பாதத்தை விரும்பி ஏத்தி உய்தி பெறுவீராக.

972. அங்க மாதுசேர் பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

தெளிவுரை : உடம்பில் உமாதேவியைப் பங்குடையவனாகிய சீகாழியில் விளங்குபவன் எங்கள் ஈசன்.

973. வாள்நி லாச்சடைத் தோணி வண்புரத்து
ஆணி நற்பொனைக் காணு மின்களே

தெளிவுரை : ஒளி மிக்க நிலவைச் சடையில் கொண்டவன், தோணிபுரத்தின் வள்ளல், உயர்ந்த வகையாகிய ஆணிப்பொன்னானவன், அத்தகைய ஈசனைக் கண்டு மகிழ்வீராக.

974. பாந்தள் ஆர்சடைப் பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே.

தெளிவுரை : பாம்பினைச் சடையில் கொண்டு பூந்தராய் எனப்படும் சீகாழியில் விளங்கும் ஈசனை, உமையவன் தலைவனை, நாமத்தால் ஏத்தி வணங்குவீராக.

975. கரிய கண்டனைச் சிரபுரத்துள்எம்
அரசை நாள்தொறும் பரவி உய்ம்மினே.

தெளிவுரை : கரிய கண்டத்தையுடைய ஈசனைச் சிரபுரம் எனும் சீகாழியில் விளங்கும் அரசனாகிய தலைவனை, நாள்தொறும் வணங்கி உய்திபெறுவீராக.

976. நறவம் ஆர்பொழில் புறவ நற்பதி
இறைவ(ன்) நாமமே மறவல் நெஞ்சமே.

தெளிவுரை : தேன் சொரியும் பொழிலையுடைய புறவம் என்கிற சீகாழியின் இறைவன் திருநாமத்தை, நெஞ்சமே ! மறவாதிரு !

977. தென்றில் அரக்கனைக் குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா நின்று நினைமினே.

தெளிவுரை : தென்திசையின் அரக்கனாகிய இராவணன் குன்றுமாறு, விரலால் ஊன்றி நெரித்த சண்பை என்னும் சீகாழியின் மன்னனாகிய ஈசனை, மணம் ஒருமிக்க நிறுத்தித் துதிப்பீராக.

978. அயனு மாலுமாய் முயலும் காழியாள்
பெயல் வைஎய்திநின்று இயலும் உள்ளமே.

தெளிவுரை : பிரமனும், திருமாலும் முயன்று தேடியும் காணதற்கு அரியவனாய் மறைந்து நிற்க, அவனை உள்ளத்தில் பதிப்பீராக.

979. தேரர் அமணரைச் சேர்வில் கெச்சைமன்
நேரில் கழல்நினைந்து ஓரும் உள்ளமே.

தெளிவுரை : பௌத்தர், சமணர் உரைகளைக் கொள்ளாது, கொச்சைமன் எனப்படும் சீகாழியின் ஈசன் இணையில்லாத திருவடியை நினைத்து உள்ளத்தில் தியானிப்பீராக.

980. தொழும னத்தவர் கழுமலத் துறை
பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

தெளிவுரை : கழுமலத்தில் உறை ஞானசம்பந்தன் உரைத்த இத் திருப்பதிகம் ஓதத்தொழும் மனத்தவர் உயர்ந்தோராவர்.

திருச்சிற்றம்பலம்

91. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

981. சித்தம் தெளிவீர்கள் அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ முத்தி யாகுமே.

தெளிவுரை : சித்தம் தெளிய விழையும் பெரியோர்களே ! ஆரூர்த் தலைவனாகிய ஈசனைப் பக்தியால் போற்றி மலர் தூவி நின்று ஏத்தி வழிபடுவீர்களாக. அது முத்தியைத் தரவல்லது.

982. பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின் துறவி யாகுமே.

தெளிவுரை :  பிறவியை அறுக்க வேண்டும் என்று விழைபவர்களே ! தரும நெரியில் விளங்கும் ஆரூர்ப் பெருமானை மறவாது ஏத்துவீர்களாக. அது துறவு நிலையைத் தரும்.

983. துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணிஆரூர்
நன்பொன் மலர்தூவ இன்பம் ஆகுமே.

தெளிவுரை : துன்பம் தீர வேண்டும் எனக் கருதுபவர்களே ! அழகிய ஆரூரில் விளங்கும் பெருமான் மிக்க அன்புடையவன். நல்ல பொன் போன்ற மலர்களால் தூவித் தொழுமின்கள். அது இன்பத்தை உண்டாக்கும்.

984. உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரைக்
கையி னால்தொழ நையும் வினைதானே.

தெளிவுரை : உய்ய வேண்டும் என நினைப்பவர்களே ! தலைவனாகிய ஆரூர்மேவும் செல்வனைக் கையினால் கூப்பித் தொழுவீராக. வினையானது நைந்து அழியும். உய்தி பெற்று விடுவீர்கள் என்றவாறு.

985. பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரைக்
கண்டு மலர்தூவ விண்டு வினைபோமே.

தெளிவுரை : பிறவியைத் தரக்கூடிய வினையிலிருந்து மீள வேண்டும் என்று கருதுபவர்களே ! அண்டங்களுக்குத் தலைவனும் ஆகி, தானே முற்றுமாகவும் இருக்கும் ஆரூர்ப் பெருமானைக் கண்டு மலர் தூவிப் போற்றுவீராக. உங்கள் வினை யாவும் மாய்ந்து போகும்.

986. பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணிஆரூர்
வாச மலர்தூவ நேசம் ஆகுமே.

தெளிவுரை : பாசம் அறுத்து ஒதுக்க வேண்டும் என்று நினைப்பவர்களே ! அணிமிகும் ஆரூரின் ஈசன் திருவடியில் வாம மலர் தூவிப் பணிவீர்களாக. அது உலக பாசத்தைப் போக்கி ஈசன் மீது நேசம் கொள்ளுமாறு செய்யும்.

987. வெய்ய வினைதீர ஐயன்அணி ஆரூர்
செய்ய மலர்தூவ வையம் உமதாமே.

தெளிவுரை : கொடிய வினைகள் தீருவதற்கு, அழகிய ஆரூரின் தலைவனாகிய, ஈசனின் சேவடியைச் செம்மையான மலர்களால் தூவிப் போற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் இவ்வுலகம் உம்முடையதாகும்.

988. அரக்கன் ஆண்மையை நெருக்கி னான்ஆரூர்
கரத்தி னால்தொழத் திருத்தம் ஆகுமே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணனுடைய வன்மைமிக்க ஆணவத்தை அடக்கிய ஆரூரின் நாதனைக் கரத்தினால் தொழுது போற்ற, ஆணவ மலம் முதலான மலத் தொகுதிகள் களையப்பெற்று திருத்தம் பெறும்.

989. துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளும் அவர்தம் மேல் விள்ளும் வினைதானே.

தெளிவுரை : தாமே பெரியவர் என்று தருக்கிய திருமால், பிரமன் ஆகியோருக்குக் காண்பரிதாய் விளங்கிப் பின்னர் அருள் வழங்கிய வள்ளற் பெருமானாகிய ஆரூரில் விளங்கும் ஈசன் திருவடியைத் தியானிக்கும் உள்ளம் உடையவர்களுக்கு வினையானது நிற்காது.

990, கடுக்கொள் சீவரை அடக்கி னான்ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே.

தெளிவுரை : தீய எண்ணங்களையுடைய சீவர்களை அடக்கிய ஆரூர் ஈசனை வாழ்த்துபவர்கள் பற்றற்றவர் ஆவார்கள்.

991. சீரூர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார் பேரார் இன்பமே.

தெளிவுரை : சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூரைச் சொன்ன, பாரில் பரவி விளங்கும் இத் திருப்பதிகத்தைப் பேணுபவர்கள், பெருமை மிக்க இன்பத்தில் திளைப்பார்கள். பேரின்பம் அடைவர்.

திருச்சிற்றம்பலம்

92. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

992. வாசிதீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே.

தெளிவுரை : குற்றமற்ற மிழலையில் வீற்றிருக்கும் பெருமானே ! வேறுபாடு இல்லாது இருப்பதற்கு உரிய காசு நல்குவீராக. அவ்வாறு நல்கினால் நிந்தனை சொல்வதற்கு யாதும் இல்லை.

993. இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறையகாள் காசினை முறைமை நல்குமே.

தெளிவுரை : வேதத்தைக் கொண்டுள்ள மிழலையின் பெருமானே ! இறைவராக உள்ள நீவிர், கறை கொண்ட காசினை வழங்குதலை ஒயித்து, முறைமையான நல்ல காசினை நல்குவீராக.

994. செய்யமேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.

தெளிவுரை : செம்மேனியராக, மெய்ம்மை கொண்டு மிழலையில் விளங்கும் பெருமானே ! படம் கொண்ட பாம்பினை உடையவரே ! நாங்கள் உய்யுமாமறு நல்ல காசு தந்தருள்வீராக.

995. நீறு பூசினீர் ஏறது ஏறினீர்
கூறு மிழலையீர் பேறும் அருளுமே.

தெளிவுரை : திருநீறு மெய்யில் பூசினீர், இடபவாகனத்தில் ஏறினீர், மிழலை நகரின் அங்கம் உடையீர், நற்பேறும் அருள்வீராக.

996. காமன் வேவஓர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

தெளிவுரை :  புகழ் மிக்க மிழலையில் உள்ள பெருமானே ! மன்மதன் எரியுமாறு நெருப்புக் கண் உடையவர் ஆயினீர்; பாதுகாப்பும் நலமும் புரிவீராக.

997. பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே.

தெளிவுரை : பிணித்துக் கட்டிய சடையை உடைய பெருமானே ! நீலகண்டத்தை உடைய நாதனே ! அழகிய மிழலையில் வீற்றிருப்பவனே ! எமது பணியை ஏற்றுக் கொண்டு அருள் புரிவீராக.

998. மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசனே ! சாந்தமான மிழலையின் நாதனே ! கங்கையைத் தரித்த முடியுடையவரே ! எஙகள் ஐயத்தைப் போக்கிக் குற்றமற்ற காசு தருவீராக.

999. அரக்க னெரிதர இரக்களம் எயிதினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணன், குற்றம் செய்தமையால் நெரிக்கப்பட்டு வருந்தினாலும், அவன் அழுகை கேட்டு இரக்கம் கொண்டு அருள் புரிந்த பெருமானே ! புகழ்பரவும் மிழலையில் வீற்றிருப்பவரே ! வஞ்சகம் தவிர்த்து நல்ல பொற்காசு தந்தருள்வீராக.

1000. அயனு மாலுமாய் முயலு முடியி னீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் முயன்று தேடிய தலைமை உடையவரே ! இயல்பின் மிக்க மிழலையில் வீற்றிருப்பவரே ! பயனை அருள்புரிவீராக.

1001. பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே.

தெளிவுரை :  மணம் கொள் மிழலையின் ஈசனே ! சமணர்கள், அறியும் பொருளை அறிந்திடாது நிற்க வேறு உரைப்பது அரியதாகும்.

1002. காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.

தெளிவுரை : காழியின் ஞானசம்பந்தன் வீழிமிழலை மேல் பதியக் கூறிய பதிகத்தை உரைப்பவர்கள் மேலாவார்கள்.

திருச்சிற்றம்பலம்.

93. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1003. நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

தெளிவுரை : பத்தியுடன் முதுகுன்று மேவும் ஈசன் திருமுன்னர் நின்று, பக்திச் சிரத்தையுடன் மலர் தூவிப் போற்றும் உங்களுக்கு எக் காலத்திலும் இன்பம் பெருகும்.

இது பக்தர்களை முன்னிலைப்படுத்தி உரைக்கு அருளுரை ஆயிற்று.

1004. அத்தன் முதுகுன்றைப் பத்தி யாகிநீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உயத்தல் செல்வமே.

தெளிவுரை : அத்தனாக விளங்கும் முதுகுன்றுடைய ஈசனைப் பக்தியுடன் போற்றித் துதிக்கும் உங்களுக்குக் கிடைத்தது பயன்தரத் தக்கதான செல்வம் ஆகும்.

1005. ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையம் உமது ஆமே.

தெளிவுரை : பொய்ம்மையான பந்தபாசம் முதலான மலக்கட்டிகளைக் கெட்டு அழியுமாறு, தன்னை மறந்து, முதுகுன்று நகரில் மேவும் தலைவனாகிய ஈசன் திருமுன்னர் நின்று, கைகளைத் தலைக்குமேல் கூப்பி வணங்குவீராக. இவ்வுலகமானது உமக்கு உரியதாகும்.

1006. ஈசன் முது குன்றை நேசம் ஆகிநீர்
வாச மலர்தூவப் பாசவினை போமே.

தெளிவுரை : ஈசனார் விரும்பும் முதுகுன்றத்தை விரும்பி நாடி, அங்கு வீற்றிருக்கும் பெருமானை மலர் தூவிப் போற்றி வணங்குவீராக. அது உங்களைப் பாசத்தில் ஆழ்ந்தும் வினையை நீக்கும்.

1007. மணிஆர் முதுகுன்றைப் பணிவார் அவர்கண்டீர்
பிணியாயின கெட்டுத் தணிவார் உலகிலே.

தெளிவுரை :  மணிகள் பொருந்திய முதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பணிபவர்கள், உடற்பிணி யாவும் நீங்கப் பெறுவர். உலகில் சாந்த மயமான வாழ்க்கையை உடையவர்கள் ஆவார்கள்.

1008. மொய்யார் முதுகுன்றில் ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச் செய்யாள் அணியாளே.

தெளிவுரை : மக்கள் குழுமி முதுகுன்றநாதரை ஐயா எனப் போற்றி பக்தியால் இரந்து வணங்குபவர்களுக்குப் பொய்க்காது, திருமகள் கடாட்சம் கைவரப்பெறும்.

1009. விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படையாயின சூழ உடையார் உலகமே.

தெளிவுரை : முதுகுன்றில் விளங்கும் இடப வாகனத்தை உடைய நாதரை, இடைவிடாது வணங்கித் தொழுபவர்கள், படைசூழ இவ்வுலகத்தில் யாவும் உடையவர்களாய்ப் புகழோடு விளங்குவர்.

1010. பத்துத் தலையோனைக் கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே.

தெளிவுரை : பத்துத் தலைகளுடன் கூடிய இராவணன் மலையைப் பெயர்த்த ஞான்று கத்தித் துன்புறுமாறு விரலை ஊன்றி, அடர்த்த முதுகுன்றநாதரைப் போற்றி நெருங்கிச் சூழ்ந்து பணிவீராக.

1011. இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

தெளிவுரை : திருமாலும், பிரமனும் அறிய முடியாதவனாய் விளங்கி நின்ற ஒப்பற்றவராகிய முதுகுன்றத்தில் விளங்கும் நாதரை, பக்தியால் உருகி நினைத்து மகிழ்பவர்கள், மேற்கொள்ளும் எல்லா செயல்களும் துலங்கி வளர்ந்து பெருகி நிறைவேறும்.

1012. தேரர் அமணரும் சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை நீர்நின்று உள்குமே.

தெளிவுரை : பௌத்தர், சமணர் சேர்ந்து வணங்கும் வகையில்லாத தன்மையராய் இருக்க, ஒப்புமையில்லாத முதுகுன்றத்தின் நாதரை, நீவிர் உறுதியாகப் பற்றி நின்று தியானிப்பீர்களாக.

1013. நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.

தெளிவுரை : முதுகுன்றம் மேவிய பழமலை நாதரை, உறுதியாகப் பற்றி நின்று நன்மை தரும் ஆக்கத்தையுடைய ஞானசம்பந்தன், மனம் ஒன்றியவாறு உரைத்த இத் திருப்பதிகத்தை உரைக்க வல்லவர்கள், எல்லாக் காலங்களிலும் தாம் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றியடைந்து உயர்ந்த நிலையைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

94. திருவாலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)

திருச்சிற்றம்பலம்

1014. நீல மாமிடற்று ஆல வாயினான்
பாலது ஆயினார் ஞாலம் ஆள்வாரே.

தெளிவுரை : நீலகண்டத்தை உடைய ஆலவாய்க் கடவுள்பால் மனம் ஒன்றி நினைத்துத் திருவடியைத் தொழுபவர்கள், உலகத்தில் உள்ள பேறுகளைப் பெற்றவர் ஆவர்.

1015. ஞாலம் ஏழுமாம் ஆல வாயிலார்
சீலமே சொலீர் காலன் வீடவே.

தெளிவுரை : ஏழு உலகங்களையும் ஆட்கொள்ளும் ஆலவாய்க் கடவுளை வணங்கி, அப்பெருமான் அருட்குணங்களைச் சொல்வீராக காலன் வீழ்ந்து மடிவான்.

1016. ஆல
நீழலார் ஆல வாயிலார்
கால காலனார் பால தாமினே

தெளிவுரை :  காலனுக்குக் காலன் ஆகிய ஆலவாய்க் கடவுள், ஆல் நிழலில் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் உணர்த்தியவர். நம்பால் உள்ளவர்தாம்.

1017. அந்தமில் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே.

தெளிவுரை : எல்லையுற்ற புகழுடைய எந்தையாகிய ஆலவாய்க் கடவுளின் அருள்புரிந்து ஈர்க்கும் திருக்கழலைச் சிந்தை செய்வீராக.

1018. ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்
பாடி யேமனம் நாடி வாழ்மினே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டு கூடல் ஆலவாயில் விளங்கும் கடவுளை மனம் விரும்பிப் பாடி மகிழ்ந்து வாழ்வீராக.

1019. அண்ணல் ஆலவாய் நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத் திண்ணம் இன்பமே.

தெளிவுரை : ஆலவாயில் மேவும் அண்ணலை அடைந்து தியானம் செய்து வணங்குபவர்கள், இன்பம் உறுதியாகப் பெறுவர்.

1020. அம்பொன் ஆலவாய் நம்ப னார்கழல்
நம்பி வாழ்வர் துன்பம் வீடுமே.

தெளிவுரை : அழகுடன் ஒளிரும் ஆலவாயில் வீற்றிருக்கும் நம்பனாகிய ஈசன் திருக்கழலை நம்பி வாழ்க்கை நடத்துபவர் துன்பம் கெடும்.

1021. அரக்க னார்வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே.

தெளிவுரை : கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணன் வல்லமையை நெருக்கியவனாகிய ஆலவாய் அடிகளை, பக்திப் பெருக்கினால் போற்றித் துதிக்கும் உள்ளம் உடையவர்களுக்கு, ஈசன் அருள் கிடைப்பது உண்மை.

1022. அருவன் ஆலவாய் மருவி னான்றனை
இருவர் ஏத்தநின்று உருவம் ஓங்குமே.

தெளிவுரை : திருமால், பிரமன் ஆகிய இருவரும் தேடிய காலத்தில் கண்ணுக்குப் புலப்படாது அருவனாய் விளங்கி நின்று, பின்னர் அவ் இருவரும், ஆலவாய் மேவிய கடவுளை ஏத்தி நின்று, வழிபட்டு நிற்க, தோற்றம் கொண்டு உருவப் பொருளாகித் தீப்பிழம்பாய் ஓங்கினான் ஈசன்.

1023. ஆர நாகமாம் சீரன் ஆலவாய்த்
தேர்அ மண்செற்ற வீரன் என்பரே.

தெளிவுரை : புத்தகர்களும், சமணர்களும் பகையாகக் கருதியவன், நாகத்தை மாலையாகக் கொண்டு புகழ் மிக்க ஆலவாய்க் கடவுள்.

1024. அடிகள் ஆலவாய்ப் பிடிகொள் சம்பந்தன்
முடிவில் இன்தமிழ் செடிகள் நீக்குமே.

தெளிவுரை : உலகில் நன்மைகள் சேர்க்கும் ஞானசம்பந்தன், ஆலவாய் மேவியுள்ள அடிகளைப் பற்றி, எல்லையற்ற இனிய தமிழ்ப் பதிகத்தை உரைக்க, அதனை ஓதுபவர்கள் தீமைகளிலிருந்து நீங்கியவராவர்.

திருச்சிற்றம்பலம்

95. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1025. தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணி நின்று ஆடு மருதனே.

தெளிவுரை : காதில் ஒரு தோடு அணிந்தவன்; வேதம் மொழிபவன்; சுடுகாட்டை இடமாகப் பேணி நின்று நடனம் புரியும் திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் நாதனே.

1026. கருதார் புரம்எய்வர் எருதே இனிதுஊர்வர்
மருதே இடமாகும் விருதாம் வினைதீர்ப்பே.

தெளிவுரை : ஈசன், பகைகொண்ட முப்புர அசுரர்களை அழிப்பர்; இடபவாகனத்தில் இனிது ஊர்ந்து வருவர்; திருவிடைமருதூரில் பெருமையாக இடம் கொண்டு வீற்றிருப்பர்; அப்பெருமானை வணங்க, வினை தீர்ந்து விடும்.

1027. எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணும் தமதாமே.

தெளிவுரை : இடைமருதில் வீற்றிருக்கும் பெருமானாகிய ஈசனை, எண்ணித் துதித்து வழிபடும் அடியவர்கள், பண்ணுடன் இசைத்துப் பாடித் தோத்திரம் செய்ய, விண்ணுலகும் தமதாக்கிக் கொள்வார்கள்.

1028. விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே.

தெளிவுரை : அங்கையில் நெருப்பு ஏந்திய ஈசன், இடை மருதூரில் திகழ்பவர்; விரிந்த சடையை உடையவர். அப் பெருமானைத் தாமதம் செய்யாது ஏத்தி வழிபடுபவர் உலகத்தில் பெருமை வாய்ந்தவர் ஆவர்.

1029. பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

தெளிவுரை : சேவை எனும் பந்தத்தில் விளங்கும் இடபத்தை வாகனமாக உடைய எந்தையராகிய இடைமருதூரில் விளங்கும் ஈசனை, சிந்தையில் தேக்கி வழிபாடு செய்பவர்கள், நல்ல புத்தியை வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள்.

1030. கழலும் சிலம்புஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழிலே பேணுவார்க்கு உழலும் வினைபோமே.

தெளிவுரை :  ஒரு காலில் வீரக்கழலும், மற்றொரு காலில் சிலம்பும் ஒலிக்க, நடனம் புரிகின்ற எழில் மிக்க இடை மருதில் விளங்குபவர், ஈசன். அப்பெருமானை, எஞ்ஞான்றும் மனத்தால் சிந்தித்துத் தொழுதும், பூசித்துப் பேணுதல் செய்தும், விளங்கி அன்பு கொள்ளும் அடியவர்களுக்கு, உழலும் வினை நீங்கிச் செல்லும்.

1031. பிறைஆர் சடையண்ணல் மறைஆர் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே.

தெளிவுரை : வேதத்தின் நிறைவாகிய இடைமருதூரில் விளங்குபவராகிய ஈசன், பிறைச் சந்திரனை இனிது சடையில் சூடிய அண்ணல் ஆவார். அப்பெருமானை, மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனப்படும் அந்தக் கரணங்கள் நான்கும் பதியுமாறு நினைந்து வழிபடுபவர்களுக்கு, இன்ப வாழ்க்கை நிலையாகி, எக்காலத்திலும் குறைவில்லாது விளங்கும்.

1032. எடுத்தான் புயந் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே.

தெளிவுரை : கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய தோள்களை அடர்த்தவராகிய ஈசன், விளங்கும் திருவிடைமருதூரில் வீற்றிருக்க, அப்பெருமானை, அழகிய மலர்களால் மாலை தொடுத்துச் சூடி வணங்குபவர்களுக்குப் பற்றானது நீங்கும்.

1033.இருவர்க்கு எரியாய உருவ மருதரைப்
பரவி யேத்துவார் மருவி வாழ்வரே.

தெளிவுரை : திருமால், பிரமன் ஆகிய இருவரும், ஈசனை அறிய முடியாதவாறு ஏக்கம் கொண்டு நின்று, வணங்கிப் போற்ற, தீப்பிழம்பாகி உருவத் தோற்றம் வெளிப்படுத்திய இடைமருது நாதரை வணங்கிப் போற்றும் அடியவர்கள், உலகியலில் தேவைப்படும் எல்லாவற்றையும் பொருந்தப் பெற்று, இனிது வாழ்வார்கள்.

1034. நின்றுஉண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி உரைசொல்ல நன்று மொழியாரே.

தெளிவுரை : நின்று கொண்டு உணவு கொள்ளும் சமணரும் பௌத்தரும், திருவிடைமருதூரில் வீற்றிருக்கும் பெருமானைத் தவிர, பிறவற்றை மனங் கொண்டு பேசுவதால், அவர்கள் வாயிலிருந்து நற்சொற்கள் வராது. அப் பெருமானை வணங்குபவர்கள் வாயிலிருந்து நல்லுரைகள் தோன்றும் என்பது குறிப்பு.

1035. கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே.

தெளிவுரை : ஈசனையே எஞ்ஞான்றும் மனம் மொழி மெய்களால் கருதிப் போற்றும் ஞானசம்பந்தன், வணங்கிப் பாடிப் போற்றி, பெரிதாகும் கருத்துக்களும் பக்திமையும் மல்க, உரைத்த இனிமை மிகுந்த இத் திருப்பதிகத்தைச் சொல்ல, நம்மை வருத்திக் கொண்டிருக்கும் வினையானது நீங்கிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

96. திருஅன்னியூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1036. மன்னி யூரிறை சென்னி ஆர்பிறை
அன்னி யூர்அமர் மன்னு சோதியே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சடை முடியில் சூடி ஊர்தோறும் ஒளிர்ந்து அருள் தரும் ஈசன், அன்னியூரில் விளங்கும் சோதியே.

1037. பழகும் தொண்டர்வம் அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.

தெளிவுரை : ஈசன் திருவடியைத் தொழுது, பக்தி மிக்க அடியார்களுடன் பழகுபவர்களே ! வம்மின். அன்னியூரில் அழகனாய் விளங்கும் பெருமான் திருவடியைத் தொழுது வாழ்வீர்களாக.

1038. நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி உய்ம்மினே.

தெளிவுரை : நியதிப்படி விளங்க வேண்டும் என்று கருதுபவர்களே ! ஆதிப் பிரானாகிய, அன்னியூரில் விளங்கும் சோதியின் திருநாமத்தை ஓதி, உய்தி பெறுவீராக.

1039. பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ முத்தர் ஆவரே.

தெளிவுரை : ஈசன்பால் பேரன்பு பூண்டு, பக்திமை கொண்டுள்ளீர். அதன் தொடர்பாக முத்திநலம் பெற்றவர் ஆக வேண்டும். எனவே, எல்லோருக்கும் இனிமையான தலைவராக அன்னியூரில் வீற்றிருக்கும் பெருமானாகிச் சித்தராக உள்ளவர்தம் திருவடியை, வணங்கித் துதி செய்வீராக. அது முத்தி நலனைக் கூட்டுவிக்கும்.

1040. நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற்கு உறவு செய்ம்மினே

தெளிவுரை : நிறைவான இனிய வாழ்க்கை அமைய வேண்டும் என்று கருதுபவர்களே ! அறத்தின் வடிவினராகிய, அன்னியூரில் வீற்றிருக்கும், வேதப் பொருளாகும் ஈசன் கழலை, நாள்தோறும் சென்று வழிபடுவீராக.

1041. இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன்பொன் என்னுமின் உம்பர் ஆகவே.

தெளிவுரை : இன்பப் பெருக்கில் திளைக்க வேண்டும் என விரும்புபவர்களே ! எல்லோருக்கும் அன்புடையவனாக அன்னியூரில் வீற்றிருக்கும் ஈசன் நல்ல பொன் போன்றவன் என்பீராக. தேவர்கள் ஆகலாம்.

1042. அந்த ணாளர்தம் தந்தை அன்னியூர்
எந்தை யேஎனப் பந்த நீங்குமே.

தெளிவுரை : தூய நெறியில் நின்று வேதம் ஓதும் அந்தணர்கள் தம் தந்தை, அன்னியூரில் விளங்கும் எந்தையே என்று துதித்துப் போற்ற, பந்தபாசம் முதலான கட்டுகளாய் உள்ள தடைகள் நீங்கும்.

1043.தூர்த்த னøச்செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாஅடைந்து ஏத்தி வாழ்மினே.

தெளிவுரை : கொடியவனாகிய இராவணனைச் செருக்கு அழியுமாறு செற்று அடக்கி தீர்த்தன், அன்னியூரில் வீற்றிருக்கும் பெருமான். அப்பெருமானை, விருப்பத்தோடு சார்ந்து அன்பு பெருகப் போற்றி வாழ்வீராக.

1044. இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவு வார்விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் நாடிய அரவினை உடையவனாகிய, அன்னியூரில் வீற்றிருக்கும் பெருமானைப் பரவி, பக்திப் பெருக்கினால் தொழுபவர்கள், விண்ணுலகில் ஒப்பற்றவராய் விளங்கும் தேவேந்திரராவார்கள்.

1045. குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.

தெளிவுரை : மாற்றுக் கருத்துடையவர்களாகிய சமணர், பௌத்தர் ஆகியோர், அண்டி நெருங்க முடியாதவனாகிய அன்னியூர் மேவும் ஈசன், தொண்டு செய்பவர்களுடைய வினையானது சிதறிப் போகுமாறு அருள் புரிபவன்.

1046. பூந்த ராய்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே.

தெளிவுரை : பூந்தராய் என்று சொல்லப்படும் சீகாழியில் மேவும் ஞானசம்பந்தரின், மெய்ப்பொருள் விளங்கும் பாடலால், அன்னியூரில் விளங்கும் ஈசனைப் போற்றிய இத் திருப்பதிகத்தைப் பொருந்த உரத்து வாழ்வீராக.

திருச்சிற்றம்பலம்

97. திருப்புறவம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1047. எய்யாவென்றித் தானவர்ஊர்மூன்று எரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகும் திருமேனிச்
செய்யான்வெண்ணீறு அணிவான்திகழ்பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர்வாழும் புறவம்மே.

தெளிவுரை : எக்காலத்திலும் வெற்றியைக் கொள்ள முடியாதவர்களாகிய மூன்று புரங்களையுடைய அசுரர்களின் கோட்டைகளை எரிசெய்த பெருமான், நீலகண்டத்தை உடைய கடவுள். அப்பெருமான், சிவந்த திருமேனி உடையவன்; உமாதேவியைப் பாகமாக உடையவன்; திருவெண்ணீறு அணிபவன். அப்பெருமான் வீற்றிருக்கும் அழகிய பதியானது. பொய்ம்மை கலவாத வேதத்தை ஓதும் நாவினையுடைய அந்தணர்கள் வாழும் புறவம் எனப்படும் சீகாழியாகும்.

1048. மாதொருபாலு மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதன்என்றேத்து நம்பரன்வைகும் நகர்போலும்
மாதவியே வண்டிசை பாட மயிலாடப்
போதுஅலர் செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.

தெளிவுரை : உமாதேவி ஒரு பக்கமும் திருமால் ஒரு பக்கமும் மகிழ்கின்ற நாதன் என்று ஏத்தப்படுகின்ற நம் பரமன் வீற்றிருக்கின்ற நகர் புறவம் என்பதாகும். அந்த நகரானது, மாதவி மலரில் வண்டுகள் மொய்த்து ரீங்காரம் செய்து இசை பாடவும், மயில்கள் தோகை விரித்து ஆடவும், புன்னை மலர்கள் பொன்போன்ற மகரந்தத் தூள்களைக் கொடுக்கவும் உள்ள பொலிவை உடையது.

1049. வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
புற்றுஆர் அரவின் பம்ஆடவும்இப் புவனிக்கோர்
பற்றாய்இடுமின் பலிஎன்றுஅடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவம்மே.

தெளிவுரை : வற்றாத நதியாகிய கங்கையும் சந்திரனும் பொதிந்து விளங்கும் சடையில், புற்றுள் விளங்கும் அரவத்தையும் வைத்திருக்க, அது ஆடவும், இந்த உலகத்திற்கு ஒரு பற்று என்கின்றதைப் போல, பிச்சை இடுவீராக ! என்று கேட்டு அடைபவராய், ஈசன் விளங்கும் பதியானது, பொற்றாமரைக் குளம் திகழும் புறவம் ஆகும்.

1050. துன்னார்புரமும் பிரமன்சிரமும் துணிசெய்து
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
பன்னாள் இடுமின் பலிஎன்று அடைவார் பதிபோலும்
பொன்னார் புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.

தெளிவுரை : பகைமை கொண்ட முப்புரங்களையும், பிரமன் சிரத்தையும் அழித்து, மின்னல்போன்று ஒளிரும் சடைமேல் அரவமும், சந்திரனும் பகையொழித்து மகிழ்ந்து விளையாடுமாறு பொருந்த வைத்து பல நாட்கள் பிச்சையிடுமின் என்று மொழிந்து விளங்குகின்ற பரமன் பதியானது, அழகிய முப்புரிநூல் அணிந்த அந்தணர்கள் வாழும் புறவம் ஆகும்.

1051. தேவாஅரனே சரண்என்று இமையோர் திசைதோறும்
காவாய்என்று வந்தடையக்கார் விடம் உண்டு
பாவார் மறையும் பயில்வோர்உறையும் பதிபோலும்
பூவார் கோலச் சோலைசுலாவும் புறவம்மே.

தெளிவுரை : தேவாதி தேவனே ! அரனே ! சரணம் ! என்று எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து காவாய் என்று வந்து குழுமி ஏத்த, கரிய விடத்தை உட்கொண்டு வீற்றிருக்கும் பதியானது, பாடல்களோடு விளங்கும் வேதங்களை ஓதுபவர்களும் பூக்கள் விளங்கும் சோலைகளும் திகழும் புறவம் ஆகும்.

1052. கற்றுஅறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரண்என்னும் அடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதிஎன்பர்
பொற்றிகழ்மாடத்து ஒளிகள் நிலாவும் புறவம்மே.

தெளிவுரை : யாவும் கற்றறிந்தவனாகி, காமவேள்முகத்தை அறுமாறு செய்த அரனே ! நின் திருவடி சரணம் என்னும் அடியவர்களுக்குப் பற்றாகி இருந்து பற்றி, அருள் புரியும் ஈசன் சேர்ந்து விளங்குகின்ற பதி என்பது அழகிய மாட மாளிகைகளின் ஒளிசூழ் புறுவம்.

1053. எண்திசையோர் அஞ் சிடுவகைகார்சேர் வரைஎன்னக்
கொண்டெழு கோல முகில்போல்பெரிய கரிதன்னைப்
பண்டுஉரி செய்தோன் பாவனைசெய்யும் பதிஎன்பர்
புண்டரிகத் தோன் போல்மறையோர்சேர் புறவம்மே.

தெளிவுரை : எட்டுத் திசையில் உள்ளவர்களும் அஞ்சி நடுங்குமாறு கரிய மலைபோன்றும், எழுகின்ற முகில் போன்றும் தழைய வந்த பெரிய யானையை உரித்து வீரம் புரிந்த பாவனையில், ஈசன் விற்றிருந்து திழும் பதி என்று சொல்லப்படுவது, தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமனைப்போல் மறை வல்லார்கள் சேர்ந்து விளங்கும் புறவம்.

1054. பரக்கும்தொல்சீர்த் தேவர்கள் சேனைப் பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல்அமர் செய்யும் தொழில்மேவும்
அரக்கன்திண்டோள் அழிவித்தானக் காலத்தில்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.

தெளிவுரை : தேவர்களுடைய சேனைகளைக் கடலில் மூழ்குமாறு விரட்டி, ஊழித் தீயைப் போன்று கடுமையாகப் போர் புரியும் தொழிலையுடைய அரக்கனாகிய இராவணனின் தோள் அழியுமாறு செய்த ஈசன், காத்தல் செய்து புரக்கும் மூதூர் புறவமே.

1055. மீத்திகழ் அண்டம் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டுஆங்கு
ஏத்தவெளிப்பாடு எய்தியவன்றன் இடம்என்பர்
பூத்திகழ் சோலைத் தென்றல்உலாவும் புறவம்மே.

தெளிவுரை : மேல் ஒளிர்கின்ற அண்டங்களை எல்லாம் படைக்கும் பிரமனும், மிக்க பெருமையுடைய திருமாலும் ஈஸ்வரமூர்த்தியும் நாட வேண்டும் என்று பலவாறு முயற்சி செய்தும் அச்செயல் கைகூடப் பொறாமையால் கைவிட்டு, ஆங்குப் பக்தி சிரத்தையுடன் ஏத்த, வெளிப்பட்டுக் காட்சி நல்கிய இடம் காணாது, பூக்கள் திகழ் சோலைகளில் தென்றல் உலாவும் புறவமே.

1056. வையகநீர்தீ வாயுவும் விண்ணும் முதலானான்
மெய்யலதோர் உண்டுஇலை என்றே நின்றுஏதம்
கையினில் உண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகம்இல்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களுக்கும் ஆதியான ஈசன் விளங்கி நிற்க, மெய்ம்மையில்லாத உண்டு, இல்லை எனும் கொள்கையால் வாழும் தேரர்கள் கருதவொண்ணாத நகர், பொய்ம்மை சிறிதளவும் அகத்தில் கொள்ளாத அந்தணர்கள் வாழும் புறவம் என்பர்.

1057. பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர் கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசை ஈரைந்து ஏத்தவல்லோர்கட்கு இடல்போமே.

தெளிவுரை : அழகிய மாட மாளிகைகளும் மதில்களும் நிலவும் புறவம் என்னும் பதியில் விளங்கும் ஈசன் சேவடியை நாள்தோறும் பணிகின்ற தன்னியல்பிலிருந்து அகன்று, ஈசன் அருள்வண்ணத்தின் இயல்புடைய சண்பையர் கோனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு மொழியலுற்ற இத்திருப்பதிகத்தை, ஏத்திப் பாடவல்லவர்களுக்கு, இடரானது நீங்கிப் போகும்.

திருச்சிற்றம்பலம்

98. திருச்சிராப்பள்ளி (அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி)

திருச்சிற்றம்பலம்

1058. நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளம் குளிரும்மே.

தெளிவுரை : நன்றுடையான் தீயதில்லான் என்னும் மகிமை வாய்ந்த தீர்த்தங்கள் உடையவனை, வெண்மையான வண்ண இடபம் உடையவனை, உமாதேவியைப பாகம் கொண்டவனை, இயல்பாகவே செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றின் மேல் விளங்கும் நாதனைப் போற்றிக் கூற, என் உள்ளமானது மகிழ்ச்சி கொள்ளும்.

1059. கைம்மகவுஏந்திக் கடுவனொடுஊடிக் கழைபாய்வான்
செம்முக மந்தி கருவரையேறும் சிராப்பள்ளி
செம்முகவேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தாநீ
டபம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.

தெளிவுரை : பெண் குரங்கு தன் குட்டியை அணைத்துக் கொண்டு ஆண் குரங்குடன் பிணக்குற்றுக் கரிய மலையேறும் தன்மையுடையது சிராப்பள்ளி. அத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே ! கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட விகிர்தனே ! நாகத்தைச் சந்திரனுடன் பொருந்துமாறு வைத்த நின் செயல் பழியாகாது.

1060. மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண் புனமும் சுனையும்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் மடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.

தெளிவுரை : பொருள் விளக்கம் புலனாகாதவாறு அமையப் பெற்ற, மழலை ததும்பும் முழவத்தின் ஒலி போல் இழும்... என ஓசையுடன் கூடிய மலையின் நீழலில், சோலையும் சுனையும் விளங்கச் சிராப்பள்ளியில், அழகிய மலர்களைச் சடைமேல் தரித்து இடபவாகனத்தில் அமர்ந்திருப்பவர், எம் அடிகளாகிய ஈசன், அவர்தம் அடியவர்களுக்கு, அல்லல் இல்லை.

1061. துறைமல்குசாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறைமல்கு வண்டும் தும்பியும்பாடும் சிராப்பள்ளிக்
கறைமல்கு கண்டன் கனலெரியாடும் கடவுள்ளெம்
பிறைமல்கு சென்னி யுடையவன்எங்கள் பெருமானே.

தெளிவுரை : சிராப்பள்ளிக் குன்றின் சாரலில் சுனைகள் விளங்கவும் நீலவண்ண மலர்கள் இடை மல்க, சிறகுகளையுடைய வண்டும் தும்பியும் பாட, நீலகண்டக் கடவுளாகிய எம்பரமன் சந்திரனைத் தலையில் சூடி நெருப்பைக் கையில் கொண்டு ஆடுபவன்.

1062. கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர்அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரைநீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே.

தெளிவுரை : அளவில்லாத கொலைகளைச் செய்யும் முப்புரத்தின் அசுரரின் மூன்று கோட்டைகளையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு போரிட்டு அழித்தவர் ஈசன். அவர் சிராப்பள்ளியில் விளங்கும் தலையாயவர். அப்பெருமானை அவ்வாறு அல்ல என்று உரைப்பவர்களே! நீல வண்ணம் நிலத்தின்பால் பதிந்து இருக்க, அது வெண்மை நிறம் கொண்டது என்று உரைப்பது பொருந்துமோ !

1063. வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேரும் சிராப்பள்ளிமேய சொல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமும்கொள்வர் ஆர்இவர்செய்கை அறிவாரே.

தெளிவுரை : விருப்பம் மிகுந்த குளிர்ந்த சாரலில் வேங்கை மரத்தின் மலர்கள் பொன்போன்று திகழக் கூடிய சிராப்பள்ளி மேவும் செல்வனாகிய பரமன், உமாதேவியை ஒரு பாகம் கொண்டு மகிழ்வர்; நஞ்சு உட்கொள்வர்; பிரம கபாலம் ஏந்திப் பிச்சை எடுப்பர். அத்தகைய வேறுபட்ட செயல்களைப் புரியும் இவரை, யார்தான் அறிந்து கொள்ள இயலும்.

1064. வேயுயர்சாரல் கருவிரல்ஊகம் விளையாடும்
சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேய்உயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்து ஆடல் திருக்குறிப்பாயிற்று ஆகாதே.

தெளிவுரை : மூங்கில்கள் உள்ள மலைச் சாரலில் கருங்குரங்கு விளையாடிக் களிக்க, மலையின்மேல் உள்ள சிராப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் செல்வனாகிய ஈசன், பேய்கள் உயர்ந்த தீப்பந்தங்களைக் கைவிளக்காகக் கொண்டு, கையில் அனலை ஏந்திஆடும் கொள்கையே, திருக்குறிப்பாயிற்று என்றால், அது ஆகாது.

1065. மலைமல்குதோளன் வலிகெடஊன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்து உண்பர் பழிஓரார்
சொலவலவேதம்  சொலவலகீதம் சொல்லும்கால்
சிலவலபோலும் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.

தெளிவுரை :  மலைபோன்ற வலிமையும் உறுதியும் உடைய தோளினை உடைய இராவணனுடைய வலிமை கெடுமாறு, திருப்பாத மலரால் ஊன்றி, மலர்மீது உறைபவனாகிய பிரமன் கொண்டிருந்த ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, அதனைச் கபாலமாக ஏந்தி, பிச்சையேற்றுத் திரிந்து உண்பவராய், அதனால் உண்டாகும் பழிச்சொல்லையும் ஆராயாதவர் ஈசன். அப் பெருமானைப் பற்றிச் சொல்லப்படும் வேதம், கீதம் முதலானவற்றை ஆய்ந்து பார்க்கும் போது, சில செய்திகள் இல்லாத தன்ளை உடையன போல் சிராப்பள்ளியில் பெருமை கொள்ளும் ஈசன் செயல் தோற்றம் கொள்ளும்.

1066. அரப்பள்ளியானும் அலர்உறைவானும் அறியாமைக்
கரப்புஉள்ளிநாடிக் கண்டிலரேனும் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர்உம்மை ஏதிலர்கண்டால் இகழாரே.

தெளிவுரை : பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், மலர்மேல் உறையும் பிரமனும், அறியாமை கொள்ளக் சுரந்து உள்ளவர் ஆகி, மறைந்தவர் ஆனாலும், சிராப்பள்ளி மலையில் விளங்கும் அழகிய சடையுடைய செல்வராகிய ஈசன், மனைகள்தோறும் பிச்சை எடுத்தவர் ஆயினார். இச்செயலை அயலவர் கண்டால் இகழ்ச்சி கொண்டு பழி சொல்லமாட்டார்களோ !

1067. நாணாது உடைநீத் தோர்களும் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல்உண்டு ஓதுவோர்கள் உரைக்கும்சொல்
பேணாதுறுசீர் பெறுதும்என்பீர்எம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

தெளிவுரை : நாணத்தைக் கைவிட்டும், உணவைப் பெரிதாகக் கொள்ளும் பான்மையர்கள் புறம் உரைக்கும் சொற்களைக் கொள்ளாது, பெறத்தகுந்த நல்ல சிறப்புகளைப் பெறவேண்டும் என்று விரும்புகின்றவர்களே ! எம்பெருமான் வீற்றிருக்கும் உயர்ந்த திருக்கோயிலாகிய சிராப்பள்ளி அடைந் ஈசனை வணங்குவீராக.

1068. தேனயம்பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறும் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம் பந்த னலமிகுபாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.

தெளிவுரை : தேன் இசைத்துப் பாடும் சிறப்புடைய சிராப்பள்ளியில் விளங்கும் பெருமானைக் கனிந்து கண்டு, கடல் சூழ்ந்த கானலில் சங்குகள் திகழும் கழுமலநகரின் ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தேவர்களுடன் மகிழ்ந்து இருப்பர்.

திருச்சிற்றம்பலம்

99. திருக்குற்றாலம் (அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1069. வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டுயாழ்செய் குற்றாலம்
அம்பால் நெய்யோடு ஆடல்அமர்ந்தான் அலர்கொன்றை
நம்பால்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

தெளிவுரை : அன்பர்காள் ! அழகிய குன்றும் நீண்டு வளர்ந்த சாரலில் வேங்கை மரங்களும் சோலைகளும் திகழ, அழகிய வடிவத்தை உடைய வண்டுகள் யாழ் போன்று ரீங்காரம் செய்யும் குற்றாலமானது, அழகிய ஆடல் புரியும் ஈசன், பாலும் நெய்யும் பூசனைப் பொருளாய் ஏற்று மகிழ்ந்து கொன்றை மலர் சூடி நமக்கு அருள் புரிவதற்காக வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.

1070. பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடும் நாள்விழமல்கு குற்றாலம்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலும் மடியீர்காள்.

தெளிவுரை : அடியவர் பெருமக்களே ! திருவெண்ணீறு தரித்துத் தொண்டர்கள் குழுமிப் பின் செல்ல, புகழ் மிக்க கொடி தோரணங்கள் குழுமிப் பின் செல்ல, புகழ் விழாச்சிறப்பு மல்கும் குற்றாலமானது, மணம் மிக்க கொன்றை மலரும் வில்வமாலையும் விரும்பி அணியும் அடிகளாகிய ஈசனார் மேவும் நல்ல நகர் ஆகும்.

1071. செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றுஏறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்புஈனும் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதில்எய்து வினைபோக
நல்குநம்பான் நன்னகர்போலும் நமரங்காள்.

தெளிவுரை : அன்பர்களே ! வளம் பெருக்கும் செண்பகம், வேங்கை ஆகியவற்றின் மீது படர்ந்து காட்டு முல்லை அரும்புகளை வழங்கும் தன்மை கொண்ட குற்றாலமானது, முப்புரங்களை வில்லால் எய்து அழித்து, வினைகள் கெடுமாறு வரங்கள் நல்கும் நம்பனாகிய ஈசன் விளங்கும் நல்ல நகர் ஆகும்.

1072. பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்தேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்கும் குற்றாலம்
அக்கும்பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகமபோலும் நமரங்காள்.

தெளிவுரை : அன்பர்களே ! வாழை, பலா, மாங்கனிகள் மல்கிப் பெருகும் குற்றாலமானது; எலும்பு, பாம்பு, ஆமை ஆகியவற்றைப் பூண்டு, கையில் நெருப்பு ஏந்தி, கோவண ஆடையுடன் விளங்கும் ஈசன் விளங்கும் நல்ல நகர் ஆகும்.

1073. மலைஆர்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலைஆர்வாழைத் தீங்கனிமாந்தும் குற்றாலம்
இலைஆர்சூலம் ஏந்திய கையான் எயில்எய்த
சிலையான்மேய நன்னகர்போலும் சிறுதொண்டீர்.

தெளிவுரை : தொண்டு செய்பவர்களே ! மலையின் சாரலில் குட்டியுடன் வந்த பெண் குரங்கு, வாழைத் கனிகளைக் மாந்தித்தின்னும் குற்றாலமானது, சூலத்தை ஏந்தி, மேருமலையை வில்லாகக் கொண்டு, முப்புரங்களை எரித்து விளங்கும் ஈசன், வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.

1074. மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாஏனல் உண்கிளிஒப்பும் குற்றாலம்
கைம்மாவேழத்து ஈர்உரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.

தெளிவுரை : பெரியோர்களே ! அழகிய நீலமலர் போன்ற கண்களை உடைய குற மாதர்கள்; மணிகள் விளங்கித் திகழும் மலைச்சாரலில் தினைப்புனத்தில் உள்ள தினைக்கதிர்களை உண்ணும் கிளிகளை ஓட்டும் தன்மைசூழ் குற்றாலமானது, யானையின் தோலை உரித்துப் போர்த்து, எம் கடவுளாகிய பெருமான் விளங்கும் நல்ல நகர் ஆகும்.

1075. நீலநெய்தல் தண்கனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடுஆடும் குற்றாலம்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெம்
சூலபாணி நன்னகர்போலும் தொழுவீர்காள்.

தெளிவுரை : இறைவனைத் தொழுது போற்றும் பெருளை படைத்தவர்களே ! நீலநிறமுள்ள நெய்தல் பூக்கள், கனைகளில் சூழ்ந்து விளங்க, அகன்ற சோலைகளில், அழகிய மயில்கள் தம் பெடையோடு ஆடி மகிழ்கின்ற குற்றாலமானது, காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளாகிய, சூலத்தைக் கையில் கொண்ட ஈசன், வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.

1076. போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதல்மாரி நுண்துளிதூங்கும் குற்றாலம்
மூதூர்இலங்கை முட்டியபோனை மிறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

தெளிவுரை : அன்பர்களே ! பொன்னும் மலர்களும் உந்தித் தள்ளும் நீர் அருவிகள் புடைசூழ, குளிர்ந்த மழைத்துளிகள் வீசும் குற்றாலமானது, இலங்கை வேந்தனாகிய இரவணனை நெருக்கி வருத்திய நாதனாகிய ஈசன் விளங்கும் நல்ல நகர் ஆகும்.

1077. அரவின்வாயின் முற்ளெயிறுஏய்ப்ப அரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்கள்.

தெளிவுரை : இறைவனைப் பணிந்து மகிழ்பவர்களே ! பாம்பின் வாயில் உள்ள கூர்மையான முள்போன்ற குரவம் முதலான அழகிய மலர்கள் சூழ்ந்த சோலையுடைய குற்றாலமானது, பிரமனும் திருமாலும் அறியாத பெருமையுடைய எமது பரமன் வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.

1078. பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழிபாடும் குற்றாலம்
குருந்து உண்டேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.

தெளிவுரை : இறைவனுக்கு எப்போதும் மெய்யடியாராய் உள்ளவர்களே ! அகன்ற குளிர்ச்சி பொருந்திய சாரலில் வாழும் சிறகுகளை உடைய வண்டு, தன்பெடையுடன் சேர்ந்து குருந்தம் ஏறிச் செவ்வழி என்னும் இனிய பண்ணிசைக்கும்  எழில் கொள்ளும் குற்றாலமானது, இருந்து உணவு கொள்ளும் தேரரும் நின்று உண கொள்ளும் சமணர்களும் ஏற்று நுகர்ந்து மகிழ்தற்கு அரியவனாய்த் தண்மையனாய் மேவும் ஈசன் வீற்றிருக்கும் நல்ல நகர் ஆகும்.

1079. மாடவீதி வருபுனல்காழி ஆர்மன்னன்
கோடல்ஈன்று கொழுமுனைகூம்பும் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.

தெளிவுரை : மாட வீதிகளும், வளம் பெருகும் நீர் நிலைகளும் உடைய காழிப்பதியில் விளங்கும் வேந்தனாகிய கோடல் எனப்படும் செம்மையான பூக்களைத் தந்து உச்சி கூம்பி விளங்குதலையுடைய குற்றால நாதனை நாடிப் போற்றி உரைத்த நற்றமிழ் ஞானசம்பந்தனின் திருப்பதிகத்தைப் பாட நம்பாவமானது விலகிச் செல்லும்.

திருச்சிற்றம்பலம்

100. திருப்பரங்குன்றம் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1080. நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன்அந்திச் சுடர்எரியேந்திச் சுடுகானில்
ஆடலன்அஞ்சொல் அணிஇழையாளை ஒருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

தெளிவுரை : ஈசன் நீடித்து மலரவல்ல வெண்மையான பிறைச் சந்திரனும், கொன்றை மலரும் சூடுபவன்; இரவில் கையில் நெருப்பு ஏந்தி, சுடுகாட்டில் ஆடுகின்றவன்; ஞானவல்லியாக விளங்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவன். அப் பெருமான் மேவி விளங்கும் நல்ல நகர், பரங்குன்றம் ஆகும்.

1081. அங்கமொருஆறும் மருமறைநான்கும் அருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்பும் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

தெளிவுரை : நான்கு வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் அருளிச் செய்து, திருவெண்ணீறும், முப்புரிநூலும் மார்பில் பொலிய, சந்திரனும் பாம்பும் திகழ்கின்ற சடையில் வைத்துத் தேன் போன்ற மொழி பேசும் உமாவேதயைப் பாகமாக உடைவனாகிய ஈசன் மேவும் நல்ல நகர் பரங்குன்றம் ஆகும்.

1082. நீரிடம்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை
சீரிடம்கொண்ட எம்மிறைபோலும் சேய்தாய
ஓருடம்புஉள்ளே உமையொருபாகம் உடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.

தெளிவுரை : கங்கையைத் தாங்கிய சடை முடியில் கொன்றை மலரைச் சிறப்பாகச் சூடிய எம்இறையாகிய ஈசன், தனது தேகத்தில் ஒரு பாதியில் உமா தேவியைப் பாகங்கொண்டு உடனாகிப் பூதகணங்கள் பாட இனிது உறைகின்ற கோயில் பரங்குன்றம் ஆகும்.

1083. வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போல்மேனித் தையல்நல்லாளோடு ஒருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.

தெளிவுரை : மாதவி, கோங்கு, மல்லிகை வளரும் பூஞ்சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, இளந்தளிர் போன்ற மென்மையான மேனியையுடையமங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்து, கொன்றை மலரைச் சூடியவனாகிய ஈசன் மேவும் நகர் பரங்குன்றம் ஆகும்.

1084. பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி ஆகியஈசன் தொல்மறை
பன்னியபாடல் ஆடலன்யே பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.

தெளிவுரை : பொன்னைப் போன்று ஒளிரும் தன்மை உடைய கொன்றை மலரும், பாம்பும், ஒளி திகழுமச் செஞ்சடையும் உடைய ஈசன், தொன்மையான வேதப் புகழ் விளங்கும் பாடலின் இயல்பிற்கு ஏற்ப ஆடலும் கொண்டு பரஙகுன்றத்தில் மேவி வீற்றிருக்கின்றான். அப்பெருமானைச் சிந்தை ஒருமித்து நினைப்பவர்களுக்கு நோய் இல்லை.

1085. கடைநெடுமாடக் கடியரண்மூன்றும் கனல்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.

தெளிவுரை : நெடிய மாடங்களையுடைய மூன்று மதில்களையும் எரியில் மூழ்கிச் சாம்பலாகுமாறு செய்து, அம்பினைச் செலுத்தும் வில்லையுடையவனாகி, சுடுகாட்டில் பூதங்கள் பாட, ஆட்டம் ஆடியும், சூலப்படை கொண்டு விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் நல்ல நகர் பரங்குன்றம் ஆகும்.

1086. அயிலுடைவேலோர் அனல்புல்குகையில் அம்பொன்றால்
எயில்படஎய்த எம்இறைமேய இடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடல்அறாத பரங்குன்றே.

தெளிவுரை : கூர்மையான சூலமும், அனலும் கொண்ட கரத்தை யுடையவன், ஓர் அம்பினால் கோட்டையின் மூன்று மதில்களையும் எய்து, எரித்துச் சாம்பலாக்கிய எமது கடவுள். மயிலானது தன் பெடையுடன் பொருந்திச் சிறப்பான நடனம் புரிந்து ஆடும் வளமிக்க சோலையில் வாசம்புரியும் வண்டு, தன் பெடையுடன் ரீங்காரம் புரிந்து கொண்டு எப்போதும் விளங்கும் பரங்குன்றம், எம்பெருமான் வீற்றிருக்கும் இடம் ஆகும்.

1087. மைத்தமேனி வாளரக்கனறன் மகுடங்கள்
பத்தினதிண்தோள் இருபதும்செற்றான் பரங்குன்றைச்
சித்தமது ஒன்றிச் செய்கழல்உன்னிச் சிவன்என்று
நித்தலும்ஏத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.

தெளிவுரை : மைபோன்ற கரிய நிறம்கொண்ட மேனியையுடைய கொடிய அரக்கனாகிய இராவணனுடைய பத்து மகுடங்களும் இருபது தோள்களும் வலிமை குன்றுமாறு செய்த ஈசன் வீற்றிருக்கும் பரங்குன்றத்தை  பரங்குன்ற நாதனை, ஒருமித்த சித்தம் உடையவராய்த் திருவடியை நினைந்து சிவனே என்று நாள்தோறும் போற்றி வணங்கத் தொல்வினையானது நம்மீது நில்லாது நீங்கும்.

1088. முந்திஇவ்வையம் தாவியமாலு(ம்) மொய்யொளி
உந்தியில்வந்திங்கு அருமறைஈந்த உரவோனும்
சிந்தையினாலும் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியல்அங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.

தெளிவுரை : முற்காலத்தில் இவ் உலகத்தைப் பேருருக் கொண்டு, ஒருங்கித் தாவி அளந்த திருமாலும், மொய்த்துச் சூழும் ஒளி பொருந்திய உந்திக் கமலத்தில் உதித்து, இங்கு அரிய மறையாகிய வேதத்தைத் தந்த அறிஞனாகிய பிரமனும், சிந்தையாலும் தெரிந்து கொள்வதற்கு அரிதாகிப் பின்னர் சோதி வடிவாகி, பந்து ஆர் விரலையுடைய அழகிய கரத்தைக் கொண்டு விளங்கும் மங்கையாகிய உமாதேவியைப் பாகங்கொண்டுகள் ஈசன், வீற்றிருக்கும் பதி பரங்குன்றம் ஆகும்.

1089. குண்டாய்முற்றும் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டுஆல்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்
தொண்டால்ஏத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.

தெளிவுரை : சமணரும், பௌத்தரும் விவாதம் புரிந்து சொல்கின்ற மொழிகள் மெய்ம்மை ஆகாது. பண்டைய காலத்தில் ஆல மர நிழலில் மேவி, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள் விளக்கிய ஈசன், பரங்குன்றத்தில் ÷வி விளங்க, அப் பெருமானுடைய திருத்தொண்டி திகழும் தெண்டர்கள்பால் உள்ள தொல்வினையானது நீங்கும்.

1090. தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொலைமலிபாடல் பத்தும்வல்லார்தம் துயர்போகி
விடமலிகண்டன் அருள்பெறும்தன்மை மிக்கோரே.

தெளிவுரை : அகன்ற பொய்கையுடைய சண்பையில் சிறந்து விளங்கும் ஞானசம்பந்தன், படங்கொண்ட நாகத்தை அரைக்குக் கட்டிய பரங்குன்றத்தில் விளங்குச் ஈசனை ஏத்திப் பாடிய இத்திருப்பதிகத்தை உரைக்கவல்லவர், துயர் அற்றவராய், நீல கண்டப் பெருமான் அருளைப் பெறுகின்ற தன்மையில் மிக விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

101. திருக்கண்ணார்கோயில் (அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1091. தண்ணார்திங்கள்பொங்கர வம்தாழ் புனல்சூடிப்
பெண்ஆண் ஆய பேரருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவார்கட்கு இடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாக நணுகும்மே.

தெளிவுரை : தணிந்து அடக்கமாக உள்ள சந்திரனும், பொங்கிச் சீறும் அரவமும், தாழ்ந்து பாயும் நீரகிய கங்கையும், பெண்ணுமாய் ஆணுமாய் ஆகிய பேரருளாளனாகிய ஈசன், எஞ்ஞான்றும் பரியாது கண்ணார் கோயிலின்கண் வீற்றிருக்கின்றான். அப்பெருமான் திருவடியைத் தொழுது போற்றும் அடியவர்களுக்கு, வாழ்க்கையில் நேரும் இடரும், செயல், சொல், சித்தம் ஆகியவற்றால் நேரும் பாவமும் அணுகாது. நல்வினையானது நாடி அடைந்து, மகிழ்ச்சிக்கு ஆதாரமாக அமையும்.

1092. கந்தமர்சந்தும் கார்அகிலும்தண் கதிர்முத்தும்
வந்துஅமர்தெண்ணீர் மண்ணீவளம்சேர் வயல்மண்டிக்
கொந்தலர் சோலைக் கோகிலம்ஆடக் குளிர்வண்டு
செந்திசை பாடும் சீர்திகழ்கண்ணார் கோயிலே.

தெளிவுரை : மணம் திகழ் சந்தனமும் கரிய அகிலும் கதிர்களும் முத்துக்களும் வந்து விளங்கச் செய்யும் தெளிந்த நீர்மல்கும் மண்ணியாற்றின் வளம்சேர் வயல்களும், கொத்தாகப் பூத்துக் குலுங்கும் சோலை களில் குயில்கள் ட, தேன் அருந்தி மகிழந்த வண்டு, செவ்வழி என்னும் பண்ணை எழுப்பி விளங்குவதும், ஆகிய சிறப்புடன் திகழ்வது கண்ணார் கோயில் ஆகும்.

1093. பல்லியல்பாணிப் பாரிடம்ஏத்தப் படுகானில்
எல்லிநடம்செய் ஈசன்எம்மான்றன் னிடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகை மௌவல் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.

தெளிவுரை : பலவகைப்பட்ட இயல்புடைய பண்களைப் பூதங்கள் இசைத்துப் பாடி ஏத்தி நிற்க, சுடுகாட்டில் இரவில் நடம் புரியும் ஈசனாகிய எம் தலைவனுடைய இடம் என்று சொல்லப்படுவது, முல்லை நிலத்தில் விளங்கும் மல்லிகை, முல்லை, மௌவல் ஆகிய மலர்க் கொடிகள் கல்லால் ஆன மதில்களில் பின்னிச் சூழ, மேகம் தவழும் கண்ணார் கோயில் ஆகும்.

1094. தருவளர்கானம் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர் கோதை அஞ்சஉரித்து மறைநால்வர்க்
குருவளர்ஆல நீழல்அமர்ந்துஈங்கு உரைசெய்தார்
கருவளர் கண்ணார் கோயில்அடைந்தோர் கற்றோரே.

தெளிவுரை : தாருகவனத்தில் உள்ள முனிவர்களால் ஏவப்பட்ட மலை போன்ற பெரிய யானையைச் செருத்து உமாதேவியும் அச்சம் கொள்ளுமாறு, வீரம்காட்டி, அதன் தோலை உரித்து. கல்லால் மரநீழலில் சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும், தட்சணாமூர்த்தி வடிவினராகி, அறத்தின் உண்மைப் பொருளை உபதேசம் செய்து, யாவற்றுக்கும் கருப்பொருளாய் விளங்கும் ஈசன் வீற்றிருக்கும் கண்ணார் கோயிலை அடைந்து பெருமானை வணங்கியவர்களே கற்றோர் எனப்படுவர்.

1095. மறுமாண்உருவாய் மற்றினைஇன்றி வானோரைச்
செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
குறுமாண்உருவன் தன்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.

தெளிவுரை : தேவர்களைத் துன்புறுத்திய மாவலிச் சக்கரவர்த்தியின்பால் சென்று, மூவடி நிலம் வேண்டிப் பெற்று, அவனை வருத்தி மறுக்கம் செய்யும் மிகப் பெரிய வடிவம் தாங்கியவனாய், தனக்கு இணை என  யாரையும் சொல்ல முடியாதவாறு உலகத்தை எல்லாம் அளவு கொண்ட, குறுகிய சிறந்த உருவினனான திருமால் தனது வழிபடும் பொருளாகக் கொண்டாடும் நீலகண்டனாகிய ஈசன், மேவி விளங்குவது, கண்ணார் கோயிலே ஆகும்.

1096. விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்குஅமுதீந்துஎவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட்கு இல்லைநமன்பால் நடலையே.

தெளிவுரை : தேவர்களுக்கு நல்வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பதற்காக, கடலில் தோன்றி நஞ்சினை விரும்பி உண்டு, அவர்கள் அமுதம் கொள்ளுமாறு அளித்து, எல்லா உலகங்களுக்கும் கண்ணாக விளங்கும் பெருமானாகியும், கண்ணார் கோயிலில் திகழும் கனி போன்று விளங்கியும், தன்னை வழிபடுபவர்களுக்கு இனியவனாகிய ஈசனை நாடுபவர்க்கு, காலனால் உண்டாகும் துன்பம் இல்லை.

1097. முன்னொருகாலத்து இந்திரன்உற்ற முனிசாபம்
பின்னொருநாள் அவ் விண்ணவர்ஏத்தப் பெயர்வெய்தி
தன்னருளாற்கண் ணாயிரம்ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளும் துன்னமர்கண்ணார் கோயிலே.

தெளிவுரை : காம வயப்பட்டு அகலிகையை நாட, அதனால் கௌதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன், அது தீரும் வண்ணம் பூசித்து வேண்ட, அந்த சாபத்திலிருந்து விடுவித்துக் கண்ணாயிரம் என்னும் பெயரையும் ஈந்த, ஈசன் வீற்றிருப்பது, கன்னிப் பெண்கள் ஏற்றமாகப் போற்றும் கண்ணார் கோயில் ஆகும்.

1098. பெருக்குஎண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணார்என் பார்சிவலோகம் சேர்வாரே.

தெளிவுரை : நல்ல ஆக்கத்தை எண்ணிப் பார்க்காத பேதையாகிய அரக்கன்  இராவணன், மலையின் கீழ் நெருக்குற, ஈசன் திருவடியை நினைத்துப் போற்றித் துதித்தனன். அதனால் அழிதல் இல்லாத ஒளி பொருந்திய வாளும் தேரும் பெற்றவனானான். அப்பெருமானைக் கண்ணார் கோயில் உடையவனே ! என்று ஏத்தும் தொண்டர்கள், சிவலோகப் பேறு பெற்றவர் ஆவர்.

1099. செங்கமலப்போ தில்திகழ்செல்வன் திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோடு ஏத்திஅண்டத்து அமர்வாரே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தமது கண்களால் நோக்குவதற்கு அரியவனாகிய, வண்ணமிகும் சோதிப் பிழம்பால், கண்ணார் கோயிலில் வீற்றிருப்பவனைத் தூய்மையாய் ஏத்தி வழிபடுவோர், தேவர் உலகத்தில் விளங்கி இருப்பார்கள்.

1100. தாறிடுபெண்ணைத் தட்டுடையாரும் தாம்உண்ணும்
சோறுடையார்சொல் தேறன் மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பரன் என்புஅணிவான்நீள் சடைமேலோர்
ஆறுடைஅண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.

தெளிவுரை : குலை தருகின்ற பெண்பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட தடுக்கு உடையவர்களாய் விளங்கும் புறச் சமயத்தார் கூறும் சொற்களை ஏற்காதீர்கள். முப்புரி நூல் அணிந்த மார்பினனும், இடப வாகனத்தை யுடையவனும் ஆகிய பரமன், எலும்பு அணிபவன்; நீளமாக விளங்கும் சடையின்மேல் ஒப்பற்ற ஆறாகத் திகழும் கங்கையைச் சூடிய அண்ணல். அப்பெருமான் பொருந்தி விளங்கும் இடமாவது, கண்ணார் கோயில் ஆகும்.

1101. காமருகண்ணார் கோயில்உளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்
பாமரு பாடல் பத்தும்வல்லோர்மேல் பழிபோமே.

தெளிவுரை : மகிழதற்குரிய கண்ணார் கோயிலில் வீற்றிருக்கும் ஈசனை. கடல் சூழ்ந்த பூமருவு சோலையும் பொன்னொளிர் மாடங்களும் பொலியும், புகலிநகரின் வேந்தனாகிய, பழம் பெருமையை நன்கு உள்கும் ஞான சம்பந்தன், கனிந்து அளித்த இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் மீது பழியானது இல்லை.

திருச்சிற்றம்பலம்

102. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1102. உரவார்கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவாவண்கைக் கற்றவர்சேரும் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன்று எரிசெய்த
சரவாஎன்பார் தத்துவஞானத் தலையாரே.

தெளிவுரை : ஞானம் மிக்க கவிதைகளைக் கூறும் புலவர்களுக்கு எல்லாக் காலங்களிலும், கரவாது வழங்கும் வள்ளல் தன்மை உடையவர்கள் சேரும் காழி நகரில், விளங்கும் அரவத்தையுடைய அரசே ! முப்புரத்தை எரித்த சரத்தினை உடையவரே ! என் போற்றி மகிழ்பவர்கள் தத்துவஞானத்தில் தலைப்பட்டு உயர்ந்த பெரியோர்கள் ஆவர்.

1103. மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனும் கலிக்காழி
மைசேர்கண்டத்து எண்தோள்முக்கண் மறையோனே
ஐயாஎன்பார்க்கு அல்லல்களான அடையாவே.

தெளிவுரை : வண்டுகள் உண்கின்ற மும்மதம் பொருந்திய, தொங்கும் வாயைப் போன்ற வேழத்தின் துதிக்கை போன்று, நீண்டு பெருகிய வாழை, குலையினும் காழியில், நீலகண்டமும், எண்தோளும், முக்கண்ணும் கொண்ட மறையவனே! ஐயா ! என்று, ஈசனைப் போற்றிப் பணிபவர்களை அல்லல் அடையாது.

1104. இளகக்கமலத்து ஈன்கள் இயங்கும் கழிசூழக்
கனகப்புரிசை கவினார்சாரும் கலிக்காழி
அளகத்திருநல் நுதலிபங்கா அரனேஎன்று
உளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாமே.

தெளிவுரை : தாமரை மலரிலிருந்து இளகி வெளிவரும் தேன் வழியும் உப்பங்கழி சூழ, சுண்ணாம்பு பூசப் பெற்ற மதில்கள் அழகு பொலிய விளங்கும் காழியில், அழகிய கூந்தலும் நல்ல நெற்றியும் உடைய உமாதேவியைப் பாகங்கொள்ளவனே ! அரனே ! என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு நோய் அடையாது.

1105. எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போல்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே என்பார்க்கு
நண்ணாவினைகள் நாள்தொறும்இன்பம் நணுகும்மே.

தெளிவுரை : கண்களுக்கு விருந்தாகும் கமுக மரங்கள் எண்ணுதற்கு அரியதாக நிரம்ப, முத்துக்களைப் போல் ஈன்று, மரகதம் போல் காய்த்து, பவளம் போல் பழுக்கும் வளம் பொருந்திய காழியில், உமையைப் பங்காக உடையவரே ! பித்தப்பெருமானே ! எம்பிரானே ! என்று துதிப்பவர்க்கு வினைகளானவை அணுகாது. நாள்தோறும் இன்பமானது பெருகிச் சேரும்.

1106. மழைஆர்சாரல் செம்புனல்வந்துஅங்கு அடிவருடக்
கழைஆர் கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழைஆர்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
குழையா என்று கூறவல்லார்கள் குணவோரே.

தெளிவுரை : மலைச்சாரலில் இருந்து பெருகும் செம்புனல், கழை என்னும் வளம்பெருக்கும் கரும்பின் சோலையில் பாயும் காழியில், மான் ஏந்திய கரத்தை உடையவனே ! உமாதேவியின் நாயகனே ! ஒளிவிடுகின்ற வெண்சங்கினைக் காதில் குழையாக உடையவனே ! என்று கூறிப் போற்ற வல்லவர்கள் நற்குணத்தவர் ஆவர்.

1107. குறியார்திரைகள் வரைகள்நின்றும் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசம்கொடுக்கும் கலிக்காழி
வெறியார் கொன்றைச் சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.

தெளிவுரை : மலைப் பகுதிகளிலிருந்து வளைந்த ஆறுகள் கடலலைகளில் கலக்கும் கழியின் பகுதிகளில் மிளகுகள் பெருக்கெடுத்து விளையுமாறு உள்ள காழியில், மணம்கமழும் கொன்றை தரித்த சடையுடையவனே ! இடப வாகனத்தை உடையவனே ! என்று வணங்கும் அடியவர்களை, வினையும், நோயும், பாவமும் அடையாது.

1108. உலங்கொள்சங்கத்து ஆர்கலிஓதத் துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயல்ஏறும் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னைஇடர்கண்டு அருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவம்ஆமே.

தெளிவுரை : திரட்சியான சங்குகளும் தோணிகளும் கடலில் ஓதத்தால் கார் வயல்  ஏறும் தன்மை உடையது காழி. ஆங்கு இலங்கையின் மன்னவனான இராவணன் இடர் கண்டு அருள் செய்த, கங்கையைச் சென்னியில் சூடிய மன்னவனே ! என்று போற்றத் தவம் கைவரப் பெறும்.

1109.ஆவிக்கமலத்து அன்னம்இயங்கும் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவில்தோன்றும் புத்தேளொடுமா லவன்தானும்
மேவிப்பரவும் அரசேஎன்ன வினைபோமே.

தெளிவுரை : தாமரைக் குளத்தில் அன்னப் பறவைகள் இயங்குகின்ற தன்மையும், குவளை மலர் போன்ற கண்களை உடைய பெண்கள் மங்கல ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் காழியில், தாமரை மலரில் விளங்கும் பிரமனும், திருமாலும் பொருந்திப் பரவும் அரசே ! என்று தோத்திரம் செய்ய வினை நீங்கும்.

1110. மலையார்மாட நீடுயர்இஞ்சி மஞ்சாரும்
கலையார்மதியம் சேர்தரும் அந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்குஎன்றும் அறிவொண்ணா
நிலையாய்என்னத் தொல்வினையாய நில்லாவே.

தெளிவுரை : மலைபோன்ற உயர்ந்த மாட மாளிகைகளும் நீண்டு உயர்ந்த மதில்களும் மேகம் தவழுமாறு, திங்களின் ஒளி சேரும் அழகிய குளிர்ச்சி பொருந்திய காழியின் தலைவனே ! சமணர், சாக்கியர் ஆகியோருக்கு அறிய வொண்ணாத நிலையாய் உள்ளவனே ! என்று துதிக்க, வினை யாவும் நீங்கும்.

1111. வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகும் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேல் பழிபோமே.

தெளிவுரை : அழகிய பொய்கையில் விளங்கும் செங்கழுநீர்ப் பூவில் பொலியும் தேன் அளைந்து மணம் பெருகம் தென்றல், முற்றத்தில் திகழும் காழியில் வீற்றிருக்கும் அடிகளாகிய ஈசனை, ஞானசம்பந்தன் ஏத்திப் பாடிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் மேல் உள்ள பழியானது விலகிப் போகும்.

திருச்சிற்றம்பலம்

103. திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1112. தோடுடையான்ஒரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : தோடு என்னும் அணியை ஒரு காதிலும் குழை என்னும் அணியை மற்றொரு காதலும் உடையவன் ஈசன். பிரமனின் ஒரு தலையைக் கபாலமாக ஏந்திப் பிச்சையேற்று உண்ணும் நாட்டத்தை உடைய அப்பெருமான். நள்ளிருளில் ஆனந்தமாய் நடனத்தைப் புரியும் சுடுகாடு உடையவன். அத்தகைய ஈசன் மகிழ்ந்து வீற்றிருக்கும் கோயில் கழுக்குன்று ஆகும்.

1113. கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேண்வல்லான் பெண்மகள்தன்னை ஒருபாகம்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : பன்றியின் வெண்கொம்பும் ஆமையோடும் விரும்பி அணிந்து, சடை முடியின்மேல் கங்கையும் கொன்றை மலரும் பூண்டு, பேணிக் காக்கும் மலையரசன் மகளாகிய, பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு காட்சி தருபவனாகிய ஈசன், மிக் விரும்பி வீற்றிருக்கும் கோயிலானது கழுக் குன்றம் ஆகும்.

1114. தேனகத்தார் வண்டதுஉண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : தேனை உண்ணும் தன்மையுடைய வண்டு, கொன்றை மலரின் மீது பொருந்தி உண்ண, அவ்வழகிய மலரைத் தன்னகத்தே உடைய ஈசன், குளிர்ந்த சந்திரனைத் தலையின்மேல் சூடி, தேவர்களும், வையக மாந்தர்களும் தொழுது போற்றும் தன்மையினன். அப்பெருமான், மயானத்தில் நடம்புரிபவன். அவன், விரும்பி வீற்றிருக்கும் இடமானது கழுக்குன்றம் ஆகும்.

1115. துணையல்செய்தான் தூயவண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல்செய்யா இலங்கு எயில்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : சேர்ந்து பூத்துக் குலுங்கும் மலர்களில், தூய வண்டானது யாழின் ஒலியை எழுப்புகின்ற சுடர்போன்ற கொன்றையைச் சடை முடியில் பிணைத்துக் கட்டி, பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகம் கொண்டு இணைத்து, அர்த்தநாரியாய் விளங்கி, மூன்று மதில்களை எரியில் மூழ்சிச் சாம்பலாகுமாறு அம்பு எய்த ஈசன், மகிழ்ந்து வீற்றிருக்கும் இடம், கழுக்குன்றம் ஆகும்.

1116. பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : படத்தைக் கொண்டு ஆடும் பாம்பினை அணிந்து, திருநீறு மெய்யில் பூசி, வெண்பிறைச் சந்திரனும் கொன்றை மலரும் விளங்க, கரிய சிறந்த கண்டத்தையுடைய அண்ணலாகிய ஈசன், மானைக் கரத்தில் ஏந்தி, விரும்பி வீற்றிருக்கும் இடமாவது கழுக்குன்றம் ஆகும்.

1117. வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழல்ஏத்தும் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றுஆங்கே உடன்ஆடும்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : கங்கையை, விரிந்து பரந்த சடையின்மேல் கொள்ளுமாறு செய்து, கொன்றை மலர் சூடிய ஈசன் திருக்கழலைப் போற்றி மகிழும் சிறுத்தொண்டராகிய பெருந்தகையாளரின் உள்ளத்தில் எக்காலமும் விளங்கி நின்று, நடம் புரியும் தன்மையுடையவனாகி, ஊனக் கண்ணுக்குப் புலப்படாதவாறு மறைந்து விளங்கும் ஆற்றல் பொருந்தியவனாகிய ஈசன், விரும்பி வீற்றிருக்கும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

1118. ஆதல்செய்தான் அரக்கர்தம்கோனை அருவரையின்
நோதல்செய்தா(ன்) நொடிவரையின்கண் விரலூன்ணிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோடு ஒருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : நல்லருள் செய்தவனாகிய ஈசன், மலையைப் பெயர்த்த இராவணனைத் தன் விரலால் ஊன்றி, ஒரு நொடியில் வலிமையை இழக்கச் செய்தவன். அப் பெருமான், உமாதேவியை ஒரு பாகம் விரும்பி ஏற்று, மகிழந்து விளங்கும் கோயில் கழுக்குன்று ஆகும்.

1119. இடந்தபெம்மான் ஏனமதாயு(ம்) அனமாயும்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வாரகழல்ஓச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : பன்றியாய் பூமிக்குள் தோண்டிச் சென்ற திருமாலும், அன்னமாய் மேலே பறந்து சென்ற பிரமனும் தேடிய ஈசன், தூய்மையான சந்திரனைச் சூடி, மலைமகளாகிய உமாதேவியை மணம் கொண்ட பெருமான். அப்பெருமான். அவன் திருப்பாதத்தால்
காலனை வீழ்த்தியவன். அவன் விரும்பி வீற்றிருக்கும் கோயில் கழுக்குன்று ஆகும்.

1120. தேயநின்றான் திரிபுரம்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த உலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

தெளிவுரை : ஈசன், திருபுரத்தை அழித்து வெற்றி கொண்டவன்; கங்கையைச் சடைமேல் பாய்ந்து நிற்குமாறு செய்தவன்; பலரும் புகழ்ந்து ஏத்த உலகம் எல்லாம் அமிழுமாறு பிரளயகால மூர்த்தியாய் நின்றவன்; வன்மைக் குணம் மிக்க சமணர், சாக்கியர்கள் துன்புறுமாறு விளங்கியவன். அப்பெருமான் விரும்பி வீற்றிருக்கும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.

1121. கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பால் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

தெளிவுரை : நெற்றிக் கண்ணுடைய ஈசன் விரும்பி வீற்றிருக்கும் கோயிலாகிய கழுக்குன்றை நண்ணிய, புகழ் மிக்க ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைப்  பண்ணின் இயல்பினால் பாடிய இத்திப்பதிகத்தை ஓதவல்லவர்கள் புண்ணியவான்கள் ஆவார்கள்; தேவர்களுடனும் சேர்ந்து மகிழந்திருப்பார்கள்.

(இப் பதிகத்தில் ஒரு பாடல் கிடைக்கவில்லை).

திருச்சிற்றம்பலம்

104. திருப்புகலி (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1122. ஆடல் அரவசைத்தான் அருமாமறை
தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடு
அமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம்
அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம் மிறையூர்
புகலிப் பதியாமே.

தெளிவுரை : ஈசன், ஆடுகின்ற அரவத்தை அசைத்தவன்; அரிய வேதத்திற்கு விளக்கம் செய்தவன்; கொன்றை மலரைச் செஞ்சடையில் சூடியவன்; சுடுகாட்டில் அமர்ந்து விளங்கும் பிரான். ஏடு அவிழ்ந்த மலர் போன்ற, மலையரசன் திருமகளாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, அடியவர்கள் வணங்குமாறு, நடம்புரியும் எமது இறைவன் வீற்றிருக்கும் பதியானது புகலி ஆகும்.

1123. ஏல மலிகுழலார் இசைபாடி
எழுந்தருளால் சென்று
சோலை மலிசுனையில்
குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை
மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும்
புகலிப் பதியாமே.

தெளிவுரை : நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிர் இசை பாடி, காலையில் எழுந்து ஈசன் வண்ணத்தில் பதிந்து சோலைகளில் விளங்கும் சுனையில் குடைந்து நீராடித் துதி செய்ய, ஆலைகளிலிருந்து எழும் புகையானது மேலே ஆகாயத்தில் பரவி மூடும்படியாகத் தவழ்ந்து, கதிரவன் ஒளியைத் தடுத்து நிறுத்தும் அமைப்பில் திகழ, அது மாலை நேரம் போன்று பொலியச் செய்யும் எழில் மிக்க புகலி நகர் ஆகும்.

1124. ஆறணி செஞ்சடையான் அழகார்புர
மூன்றும்அன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை
எம்மிறைவன்
பாறணி வெண்தலையில் பகலேபலி
என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும்
புகலியதே.

தெளிவுரை : ஈசன், கங்கையினைச் சிவந்த சடையில் அணிந்தவன்; புரங்கள் மூன்றினையும் எரித்தவன்; திருவெண்ணீறு அணிந்து விளங்கும் எம் இறைவன். பிரம கபாலம் கையில் கொண்டு பிச்சையேற்று உவந்து கோவண ஆடையுடைய அவ் ஈசன், விரும்பும் பதியானது புகலியே.

1125. வெள்ளம் அதுசடைமேல் கரந்தான்
விரவார்புரங்கள் மூன்றும்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி
உறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத்
தாமரைமேல் அன்னம்
புள்ளிமை வைகிஎழும் புகலிப்
பதிதானே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் கரந்து கொண்ட ஈசன், பகைவராகிய மூன்று அசுரர் புரங்களை எரித்துக் குறைவின்றி நல்லருள் புரிய உறையும் கோயிலாவது, சேறு மிகக் கொண்ட கழனிகளும் அழகிய தாமரை மலர்களில் அன்னம் முதலான புள்ளினங்கள் அமர்ந்து எழுகின்ற புகலிப்பதி ஆகும்.

1126. சூடு மதிச்சடைமேல் கரும்பார்மலர்க்
கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை
யோடும் உடன்
வேடு படநடத்த விகிர்தன்
குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப்
பதியாமே.

தெளிவுரை : சந்திரனைச் சூடிய சடையின் மீது வண்டு சூழும் கொன்றை மலர் பொருந்தி விளங்க, நடனம் புரியும் தேவர்பிரான், அழகு மிக்க உமாதேவியோடு வேட்டுவ வடிவம் தாங்கி, நடந்து அர்ச்சுனருக்கு அருள் புரிந்த விகிர்தன் ஆவார். அப்பெருமானுடைய புகழைப் பரவிப் போற்றி, தொண்டர்கள் இனிது பாட மகிழ்ந்து உறைகின்ற பதி புகலி ஆகும்.

1127. மைந்துஅணி சோலையின்வாய் மதுப்பாய்வரி
வண்டினங்கள் வந்து
நந்துஇசை பாடநடம் பயில்கின்ற
நம்பன் இடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள்
பரவிஎழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப்
பதி தானே.

தெளிவுரை : அழகாக அலங்கரிக்கப்பட்ட சோலையில் தேன் உண்ணும் வரி வண்டுகள் நெருங்கி இசையெழுப்ப, நடனம் புரியும் ஈசன் இடமாவது, சந்தியாவந்தனம் செய்யும் அடியவர்கள் வணங்கி எழவும், யாவரும் விரும்பும், நான்மறையோர்கள் விளங்குகின்ற புகலிப்பதி ஆகும்.

1128. மங்கையோர் கூறுகந்த மழுவாளன்
வார்சடைமேல் திங்கள்
கங்கை தனைக்கரந்த கறைக்கண்டன்
கருதும் இடம்
செங்கயல் வார்கழனி திகழும்
புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம்
அறியாரே.

தெளிவுரை : உமாதேவியை உடம்பில் ஒரு பாகமாக உகந்து ஏற்ற மழுப்படையை உடையவன், சடைமுடியின் மீது சந்திரனையும் ஏற்று, கங்கையைக் கரந்து கொண்ட, விடம் பொருந்திய கண்டத்தையுடையவன். அப் பெருமான் விரும்பிய இடமாவது, கயல்கள் விளங்கும் கழனிகளையுடைய புகலி. ஆங்கு சென்று கரங்கூப்பித் தொழுபவர்களுக்குத் துயரம் இல்லை.

1129. வில்லிய நுண்ணிடையான் உமையாள்
விருப்பன்அவன் நண்ணும்
நல்லிடம் என்றறியா நலியும்
விறல் அரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப்
பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும்
புகலி யதே.

தெளிவுரை : ஒளி பொருந்திய நுண்ணிய இடையுடைய உமாதேவியை விரும்பும் ஈசன் விளங்கி மேவும் இடம் என்று அறியாத இராவணன், கயிலையைப் பெயர்க்க, பல்லும் தோளும் நெரியுமாறு விரலால் ஊன்றி, பின்னர் பாடலுக்காக இசைந்து மந்திர வாளைக் கொடுத்து, விரைவில் அருள்புரிந்த பரமன் உறையும் இடம் புகலி ஆகும்.

1130. தாதலர் தாமரைமேல் அயனும்
திருமாலும் தேடி
ஓதியும் காண்பரிய உமைகோன்
உறையும் இடம்
மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும்
விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள் சூழ்
புகலிப் பதிதானே.

தெளிவுரை : மகரந்தம் விளங்கும் தாமரையின்மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும், ஓதி அழைத்தும் காண்பதற்கு அரியவனாய், உமாதேவியின் தலைவனாகிய ஈசன் உறையும் இடமாவது, மாதவியுடன் மகிழமலர்கள் சேர்ந்து எங்கும் மணம் பரப்ப, போதுகள் மலரும் சோலைகள் சூழும் புகலிப் பதியாகும்.

1131. வெந்துவர் மேனியினார் விரிகோவண
நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர்
பொருள் என்னேல்
வந்தெதிரும் புரமூன்று எரித்தான்
உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப்
பதிதானே.

தெளிவுரை : துவராடை கொண்டவர்களாகிய பௌத்தர்களும், மற்றும் திகம்பரர்களும் கூறும் பேதம் கலந்த ஞானம் யாவும் பொருளுடையதெனக் கருதற்க. எதிர்த்துப் பொருத முப்புரத்தை எரித்த ஈசன் உறைகின்ற கோயிலானது, நல்ல அறிஞர்கள் பயிலும் புகலிப் பதியாகும்.

1132. வேதமோர் கீதமுணர் வாணர்தொழுது
ஏத்த மிகுவாசப்
போதனைப் போல்மறையோர் பயிலும்
புகலி தன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன்
தமிழ்மாலை நாவில்
ஓதவல் லார்உலகில் உறுநோய்
களை வாரே.

தெளிவுரை : வேத கீதங்களை உணர்ந்துள்ள அறிஞர்கள் தொழுது ஏத்த, மிகுந்த வாசனையுடைய தாமரை மலரில் விளங்கும் பிரமனைப் போன்ற, மறைவல்ல அந்தணர்வாழும் புகலியில், ஈசனைப் பரவிய ஞானம் மிகுந்த ஞானசம்பந்தன் தமிழ் மாலையை நாவினால் மருவும் பாடற் சுவை கொண்டு ஓத வல்லவர்கள், உலகத்தில் நோயின்றி வாழ்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

105. திருவாரூர்  (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)

திருச்சிற்றம்பலம்

1133. பாடல னான்மறையன் படிபட்ட
கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலையை சூலம்
வலன்ஏந்திக்
கூடலர் மூவெயிலும் மெரியுண்ணக்
கூரெரிகொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர்
அமர்ந்தானே.

தெளிவுரை : பாடுவதற்கு வல்ல நான்மறைகளை உடையவன், ஈசன். அப்பெருமான் உலகில் தோன்றுகின்ற எல்லா வடிவங்களையும் உடையவன்; திங்களைச் சடையில் சூடியுள்ளவன்; மூன்று இலைகளையுடைய சூலத்தை ஏந்தியவன்; பகைமை கொண்ட மூன்று கோட்டை மதில்களையும் எரித்துக் கொழுந்துவிட்டு எரியும் நெரிப்பைக் கையில் கொண்டு இரவில் நடனம் புரிபவன்; ஆதிரைத் திருநாளில் மகிழ்ந்து சிறப்பாக விளங்கிக் காட்சி தருபவன். அப்பெருமான், ஆரூரில் அமர்ந்தனன்.

1134. சோலையில் வண்டினங்கள் சுரும்போடு
இசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும்
பரமேட்டி பாதம்
காலையும் மாலையும்போய்ப்
பணிதல் கருமமே.

தெளிவுரை : சோலைகளில் சுரும்பு முதலான வண்டினங்கள் இசையெழுப்ப, சூழ்ந்துள்ள ஆலைகளிலிருந்த வெளியறும் புகையானது, மேகம் போல் பரவும் ஆரூரில், பால், நெய், தயிர், ஆகியவற்றால் பூசைகள் பயின்றாடும் பரமனின் திருக்கழலை, காலை, மாலை ஆகிய இரு காலங்களிலும் சென்று வணங்குதல் கடமையாகும்.

1135. உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித்
தொழுமின்தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடு மின்கரவாது
இரு பொழுதும்
வெள்ளம்ஓர் வார்சடைமேல் கடந்திட்ட
வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர்
அடைவோமே.

தெளிவுரை : தொண்டு செய்பவர்களே ! உள்ளத்தில் மிகுந்த வேட்கை கொண்டு, மகிழந்து போற்றித் தொழுவீராக. உண்மையாகவே உம்முடைய அஞ்ஞான இருள் ஒழிந்துவிடும். தடையில்லாது காலை, மாலை ஆகிய இருபொழுதும், கங்கைவார் சடையுடையவனை, வெண்மையான இடப வாகனத்தைக் கொண்டவனை, சேறு மிகக் கூட்டிய அகன்ற கழனிகளையுடைய ஆரூர் அண்ணலை, நாடிச் செல்வோமாக.

1136. வெந்துறு வெண்மழுவாள் படையான்
மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை ஆடரவம் அசைத்தான்
அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன்
அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாள்தொறு(ம்)
நல்லனவே.

தெளிவுரை : வெம்மை மிக்க ஒளிபொருந்திய மழுவாட்படையுடையவன் ஈசன். அப்பெருமான், நீலகண்டத்தவன்; அரையில் ஐந்து தலைகளையுடைய ஆடுகின்ற நாகத்தை அசைத்துக் கட்டியவன்; அழகு மிக்க ஆரூரில் வீற்றிருக்கும், கொன்றைமாலை சூடிய பரமன். அவனுடைய திருவடியைத் தொழுது போற்ற, பாவமானது இற்றழியும்; நல்லன யாவும் நாள்தோறும் வந்து சேரும்.

1137. வீடு பிறப்புஎளிதாம் அதனை
வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக்
கைவீசி
ஆடும் அவிர்சடையான் அவன்மேய
ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல்
கருமமே.

தெளிவுரை : முத்தி நலம் எளிதாகப் பெறுவதற்குரிய வழி யாது என வினவுவீரானால்; கொடிய சுடுகாட்டை இடமாகக் கொண்டு, கையில் நெருப்பு ஏந்தி வீசி ஆடும், சடையுடைய ஈசன் மேவி விளங்கும் ஆரூரை நாடிச் சென்று, பாடிக் கை தொழுது பணிவதைக் கடமை எனக் கொள்வீராக.

1138. கங்கையோர் வார்சடைமேல் கரந்தான்
கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான்
மழுவேந்தும்
அங்கையி னான்அடியே பரவி
அவன்மேய ஆரூர்
தம்கையி னால்தொழுவார் தடுமாற்று
அறுப்பாரே.

தெளிவுரை : கங்கையைச் சடைமேல் கரந்து, கிளி போன்ற மென்மையாகக் கூறும், கெடுதல் இல்லாத மங்கையாகிய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு விளங்கும் மறைவல்லனாய், மழுவேந்திய அழகிய கரத்தை உடைய ஈசனின் திருவடியையே நெஞ்சில் பதித்து, அப்பெருமான் விளங்கும் ஆரூரை, தம் கையினால் தொழுபவர்கள் மனத் தடுமாற்றம் அற்றவராய், தெளிவு பெற்றவராய் இருப்பார்கள்.

1139. நீறணி மேனியனாய் நிரம்பா
மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர்
இனித மர்ந்தான்
சேறணி மாமலர்மேற் பிரமன்
சிரம்அரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவன்எம்
பெருமானே.

தெளிவுரை : திருநீறு மேனியில் தரித்தவனாய், பிறைச் சந்திரனைச் சூடிக் கங்கையினைச் சடைமுடியில் ஏற்று ஆரூரில் இனிது அமர்ந்த ஈசன் சேற்றில் திகழும் தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் சிரம் கொய்த ஈசன், சிவந்த கண்ணையுடைய இடபக் கொடியுடையவன், அவன் எம் பெருமானார் ஆவார்.

1140. வல்லியம் தோலுடையான் வளர்திங்கள்
கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின்
நறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத்து
அமர்ந்தருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும்
புண்ணியரே.

தெளிவுரை : புலித் தோலுடையவன்; வளர்கின்ற சந்திரனைச் சூடியவன்; பிரமன் தலையின் ஓடு கொண்டு பலியேற்றவன்; அல்லியங் கோதையைத் தன் மேனியில் அமர்ந்து பொருந்துமாறு செய்து ஆரூரில் வீற்றிருக்கும் புண்ணியன்; அப்பெருமானைத் தொழுபவர்கள் புண்ணியர் ஆவர்.

1141. செந்துவர் ஆடையினார் உடைவிட்டு
நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்து இன்புற
வேண்டுதி ரேல்
அந்தர மூவெயிலும் மரணம்
எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாஉடையான் அவன்என்
தலைமையனே.

தெளிவுரை : காவி உடையை அணிந்தவர்களும், ஆடையை நீத்தவரும் சொன்ன மயக்க மொழிகளை ஒழித்து, ஈசன் திருவடிக்கீழ் இருந்து இன்புற வேண்டும் என வேண்டுவீராயின், தீமை செய்த மூன்று மதில்களையுடைய கோட்டைகளை எரியூட்டி ஆரூரில் உள்ள ஈசன் என் தலைமையாக உடையவன். அவன் உமக்கு எல்லா ஞானமும் வழங்குவான் என்றவாறு.

1142. நல்ல புனற் புகலித் தமிழ்ஞான
சம்பநத னல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர்
அமர்ந் தானை
வல்லதோர் இச்சையினால் வழிபாடுஇவை
பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பம்
துடைப் பாரே.

தெளிவுரை : நல்லன புரியும் தீர்த்த மகிமையுடைய புகலியின் தமிழ் ஞானசம்பந்தன், அல்லி மலர்கள் சாரும் கழனிகளையுடைய ஆரூரில் அமர்ந்து அருள் வழங்கும் பரமனை, உறுதியான பற்றுடன் உரைத்த இவ்வழிபாட்டுத் திருப்பதிகத்தை மனத்தில் கொண்டு கற்றும், சொல்லியும் சொல்லக் கேட்டும் விளங்கி நிற்பவர்கள், துன்பத்திலிருந்து நீங்கியவர் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

106. திருவூறல் (அருள்மிகு சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1143. மாறில் அவுணர்அரணம் அவைமாயஓர்
வெங்கணையால் அன்று
நீறெழ எய்தஎங்கள் நிமலன்
இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்
பாய்வயலும் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல்
உள்குதுமே.

தெளிவுரை : பகைமைத் தன்மையிலிருந்து மாறாத அசுரர்களுடைய கோட்டைகளை அழிப்பதற்கு ஒப்பற்ற ஒரே ஒரு கொடிய கணை கொண்டு எரிந்து சாம்பலாகுமாறு செய்த எங்கள் நிமலனுடைய இடம் யாது என வினவினால், தேன் கமழ் பெரிய சோலை திகழ, செம்மையான கயல் பாயும் நீர்வளம் மிக்க வழல் சூழ்ந்த ஊறல் ஆகும். அப் பெருமானுடைய ஒலிக்கும் கழலை நினைந்து போற்றுவோமாக.

1144. மத்த மதக்கரியை மலையான்மகள்
அஞ்சஅன்று கையால்
மெத்த உரித்த எங்கள் விமலன்
விரும்பும் இடம்
தொத்துஅல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர்
நீல நாளும் நயனம்
ஒத்தலரும் கழனித் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : செருக்குற்ற மத யானையை, உமாதேவி கண்டு அஞ்சுமாறு, அக்காலத்தில் கையால் மிகுதியாக உரித்த எங்கள் விமலன், விரும்பி வீற்றிருக்கும் இடமானது, பூத்துக் கொத்தாக மலரும் பொழில் சூழ, வயல்கள் சேர்ந்து, ஒளிர்கின்ற நீல மலர்கள் நாள் தோறும் கண்களைப் போன்று மலரும் கழனிகளை உடைய திருவூறல். அதனை நினைந்து போற்றுவீராக.

1145. ஏன மருப்பினொடும் எழிலாமையும்
பூண்டு அழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள்
கருதும் இடம்
வான மதிதடவும் வளர்சோலைகள்
சூழ்ந்து அழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : பன்றியின் கொம்பும், எழில்மிக்க ஆமையின் ஓடும் அணியாகப் பூண்டு, நன்று விளங்கும் சோலைகளில் கடவுள் விரும்புகின்ற இடமானது, வளம்மிக்க சோலைகளில் வானத்தில் விளங்குகின்ற சந்திரனின் தண்கதிர்கள் மருவித் திகர, நம்முடைய குறைபாடுகளை அறுத்த தலைவனாகிய பரமனின் அழகிய திருவூறல் ஆகும். அதனை நினைந்து துதிப்பீராக.

1146. நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழுவும்
அனலும் அன்று
கையணி கொள்கையி னான் கடவு
ளிடம் வினவில்
மையணி கண்மடவார் பலர்வந்து
இறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : சூலமும், ஒளிமிக்க மழுவும், நெருப்பும் நிறைவாகக் கையில் கொண்டுள்ள கடவுள் வீற்றிருக்கும் இடமானது யாது என வினவுவீர்களாயின், அது, கையணிந்து மகளிர் பலர் பணிந்து போற்ற, அதனால் பரிந்து விளங்கி நம்மை உய்யும் வகையில் அருள் புரிந்த ஈசனின் திருவூறல் ஆகும். அதனை நினைந்து, தொழுவீராக.

1147. எண்திசை யோர்மகிழ எழில்மாலையும்
போனகமும் பண்டு
சண்டி தொழஅளித்தான் அவன்தாழும்
இடம் வினவில்
கொண்டல்கள் தங்குபொழில் குளிர்பொய்கைகள்
சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரான் அமரும் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : எண் திசையில் உள்ள மக்கள் அனைவரும் மகிழும் வண்ணம், தான் அணிந்து எழில் பெற்ற மலர் மாலையும், உண்டியும் சண்டீசருக்கு அணிவித்து வணங்குமாறு அருள்புரிந்த பரமன் உறையும் இடம் வினவில், அது, மேகம் சூழும் பொழில்களும், குளிர்ந்து விளங்கும் பொய்கையும் சூழ்ந்து விளங்க, நஞ்சை அருந்திய ஈசன் அமர்கின்ற திருவூறல் ஆகும். அதனை நினைந்து வணங்குவீராக.

1148. கறுத்த மனத்தினொடும் கடுங்காலன்வந்து
எய்தலும் கலங்கி
மறுக்குறு மாணிக்குஅருள மகிழ்ந்தான்
இடம் வினவில்
செறுத்தொழு வாளரக்கன் சிரம்தோளு(ம்)
மெய்யும் நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : சினங்கொண்டவனாய்க் கொடிய காலன் வந்துற்ற போது, அஞ்சிக் கலக்கம் அடைந்த மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்து, கூற்றவனை உதைத்து அழித்து மகிழ்ந்தவனாகிய ஈசன் வீற்றிருக்கும் இடம் யாது என வினவில், பகைகொண்டு, மலையைப் பெயர்க்க எழுந்த இராவணரின் சிரமும், தோளும், மெய்யும் நெரிய விரலால் ஊன்றித் தண்டனை வழங்கி, பின்னர் அருள் செய்த அப் பிரான் விளங்கும் திருவூறல் ஆகும். அதனை எண்ணி வணங்குவீராக.

1149. நீரின் மிசைத்துயின்றோன் இறைநான்
முகனும் அறியாது அன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும்
இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந்து
இறைஞ்ச மகிழந்து ஆகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அறியாது பின்னர் உணரும் வகையால் ஓங்கி நின்ற ஈசன் பொருந்தி விளங்கும் இடம் யாது என வினவில், உலகில் அடியவர்கள் பலர் வந்து துதிக்க, மகிழந்து திருமேனியில் ஊர்ந்து செல்லும் நாகத்தையுடையன் வீற்றிருக்கும் திருவூறல் ஆகும். அதனை எண்ணி வணங்குவீராக.

1150. பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையார்
மோட்டு அமணர் குண்டர்
என்னும் இவர்க்கு அருளா ஈசனிடம்
வினவில்
தென்னன வண்டினங்கள் செறியார்பொழில்
சூழ்ந்து அழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான் திருவூறலை
உள்குதுமே.

தெளிவுரை : பொன்போன்ற காவியுடை யுடையவர்கள் மற்றும் சமணர்கள் ஆகியோர்க்கு, அருள் தோயாது ஈசன் விளங்கும் இடம் யாதென வினவில், வண்டினங்கள் சேர் பொழில் சூழ்ந்து, தன்னை நினைப்பவர்களின் வினை தீர்ப்பவனாகிய பரமன் மேவும் திருவூறல் ஆகும். அதனை எண்ணித் துதிப்பீராக.

1151. கோடல் இரும்புறவிற் கொடிமாடக்
கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேற் கரந்தான்
திருவூறல்
நாடல் அரும்புகழால் மிகுஞான சம்
பந்தன் சொன்ன
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து
இருப்பாரே.

தெளிவுரை : கங்கையைச் சடையில் கரந்த சீகாழியில் வீற்றிருக்கும் ஈசனைத் துதிக்கும் ஞானசம்பந்தன் திருவூறல் மேவும் ஈசனைச் சார்ந்து இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், பரனுடைய உலகில் விளங்குவார்கள்.

(இத் பதிகத்தில் இரு பாடல்கள் கிடைக்கவில்லை).

திருச்சிற்றம்பலம்

107. திருக்கொடிமாடச் செங்குன்றூர் (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1152. வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்
திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலாள் ஒருபாகம்
அமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
அந்தண னைத் தொழுவார் அவலம்
அறுப்பாரே.

தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்து, முப்புரி நூல் மார்பில் திகழ, உமாதேவியை ஒரு பாகத்தில் அமர்ந்து விளங்குமாறு அருள் செய்து, கொத்தாக விளங்கும் பொழில் சூழும் கொடிமாடச் செங்குன்றூர் மேவி விளங்கும் ஈசனைத் தொழுபவர்கள், துயரம் அற்றவராய் இருப்பார்கள்.

1153. அலைமலி தண்புனலோடு அரவம்
சடைக்குஅணிந்து ஆகம்
மலைமகள் கூறுடையான் மலைஆர்
இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற்று
அறுப்பாரே.

தெளிவுரை : கங்கையுடன் அரவும் சடையில் அணிந்து, உடம்பில் உமாதேவியைக் கூறாக வைத்து, மலையில் விளங்கும் வாழைக் குலைகள் உடைய பொழில் சூழ்ந்த கொடிமாடச்செங்குன்றூர் மேவிய பரமனைத் தொழுபவர்கள், மனக்கலக்கம் அற்றவர் ஆவர்.

1154. பாலன நீறுபுனை திகழ்மார்பில்
பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலாள் ஒருபாகம்
அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல்
நீதியே.

தெளிவுரை : பால் போன்ற வெண்மையான திருநீறு புனைந்து திகழ்கின்ற மார்பில், உமாதேவியை ஒரு பாகமாக அமருமாறு அருளி அழகிய மலர்ப் பொழில் சூழும் கொடிமாடச் செங்குன்றூர் விளங்கும் நீலகண்டனாகிய பரமன் திருக்கழலை வணங்குவது, கடமையாகும்.

1155. வாருறு கொங்கைநல்ல மடவாள்
திகழ்மார்பில் நண்ணும்
காருறு கொன்றையொடும் கதநாகம்
பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழல்ஏத்தல்
நீதியே.

தெளிவுரை : உமாதேவியார் ஒரு பாகத்தில் திகழ்ந்து விளங்க, நண்ணும் கார்காலத்தில் சிறந்து மல்கும் கொன்றை மலரும், சினம் மிக்க நாகமும் அணிந்து, புகழ்மிக்க அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் நின்று, கங்கை தரித்த செஞ்சடை நாதனாகிய பரமன் திருக்கழலை வணங்குதல் கடமையாகும்.

1156. பொன்திகழ் ஆமையொடு புரிநூல்
திகழ் மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத் தோளியோர்
பாக மாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச்
செங்குன் றூர் வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல்ஏத்தல்
மெய்ப்பொருளே.

தெளிவுரை : அழகியதாய் விளங்கும் திருமால், வடிவுகாண் ஆமையோட்டுடன், முப்புரி நூல் திகழும் மார்பில், பன்றியின் கொம்பு அணிந்து, மூங்கிலையொத்த மென்மையான தோளையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு, குன்றனைய வலிமையும் உயர்ச்சியும் கொண்ட மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில், வானில் விளங்கும் மின்னலைப் போன்ற சிவந்த சடையுடைய ஈசன் திருக்கழலைப் பரவிப் போற்றுதல், உண்மையான ஞானம் ஆகும்.

1157. ஓங்கிய மூவிலைநற் சூலம்
ஒருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம்
சடைக்குஅணிந்து
கோங்கு அணவும் பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினையாய
பற்றறுமே.

தெளிவுரை : வெற்றியோடு நல்லருளும் ஓங்கச் செய்யும் மூவிலை வேல் நற்சூலம் ஒரு கையில் திகழவும் கங்கையும், சந்திரனும் சடையில் தரித்து, தேன் திகழும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூரில் மேவிய ஈசனின் அருட்பாங்கான திருவடியைத் தொழுபவர்களுக்கு, பற்றியுள்ள வினைகள் யாவும் விலகி அறும்.

1158. நீடலர் கொன்றையொடு நிமிர்புன்
சடைதாழ வெள்ளை
வாடல் உடைதலையில் பலிகொள்ளும்
வாழ்க்கையானாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் நினையாய
தேயுமே.

தெளிவுரை : நீண்டு மலரும் கொன்றையுடன் சடை முடி தாழ்ந்து நீண்டு விளங்க, பிரம கபாலம் ஏந்திப் பச்சை கொள்ளும் வாழ்க்கை உடையவனாய், கோடல் என்னும் பூக்கள் விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் நின்று மேவும் பெருமையுடன் விளங்கும் ஈசன் திருத்தாளைத் தொழுபவர்களுக்கு, வினையானது நீங்கும்.

1159. மத்த நன் மாமலரும் மதியும்வளர்
கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய
உடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார் தடுமாற்று
அறுப்பாரே.

தெளிவுரை : ஊமத்த மலரும், சந்திரனும், கொன்றை மலரும் கொத்தாக விளங்கும் சடையின்மேல் திகழச் சூடி, கொத்தாக மலரும் குளிர்ந்த பொழில் சூழும் கொடிமாடச் செங்குன்றூர் மேவிய மெய்ப் பொருளாகிய ஈசனைத் தொழுபவர்கள் மனத் தடுமாற்றம் இல்லாதவர் ஆவர்.

1160. செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு
மாலும் தேட நின்று
அம்பவளத் திரள்போல் ஒளியாய
ஆதிபிரான்
கொம்புஅண வும்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய
நாசமே.

தெளிவுரை : செம்பொன் போன்ற திருமேனியுடையவன், பிரமனும் திருமாலும் தேடுமாறு செய்து அழகிய செம்மையான பவளத் திரள் போன்று ஒளியாகிய ஆதிப்பிரான், பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேவிய ஈசன். அப்பெருமானுடைய திருவடியைத் தொழுபவர்களுக்கு வினையானது மாயும்.

1161. பேதியர் பிண்டியர்என்று இவர்கள்
புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுறை கேட்டு உழல்வீர்
வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச்
செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழுநும் வினையான
வீடுமே.

தெளிவுரை : புத்தர், சமணர் என்பவர் கூறும் பொய்யுரை கொள்ளன்மின். குயில்கள் சூழும் தண்பொழில்கள் விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் நிலவி நின்று மேவும் வேத நாயகனாகிய ஈசனைத் தொழ, உமது வினை யாவும் அழியும்.

1162. அலைமலி தண்புனல்சூழ்ந்து அழகார்
புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான
சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச்
செங்குன்றூர் ஏத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான
நாசமே.

தெளிவுரை : நீர்வளம் மிக்க அழகிய புகலி நகரைப் பேணும் தலை மகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், சூலம் ஏந்தியவனாகிய ஈசன் விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரை ஏத்திய நலம் மிகுந்த இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களுடைய வினை யாவும் அழியும்.

திருச்சிற்றம்பலம்

108. திருப்பாதாளீச்சரம் (அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1163. மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி
மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப்
பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்து
அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : மின்னலைப் போன்று விளங்கும் சிவந்த சடையின்மீது, விளங்கும் சந்திரன், ஊமத்த மலர், பொன் போன்ற கொன்றை மலர், கங்கை ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு, மலையரசன் மகளாகிய அன்னம் போன்ற நடையுயை உமாதேவி ஒரு பாகத்தில் வீற்றிருக்க, நாள்தோறும் துதிப்பாடல்களால் ஏத்தப்படுபவனாகிய ஈசன், உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1164. நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான்
சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னால்இனியான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : நீண்ட கொன்றை மலரும், சந்திரனும் சூடி, வெண்மையான ஒளி மிக்க தோடும், நல்ல இசை பொழியும் கந்தருவர்களைக் குழைகளாகவும் காதில் அணிந்து, திருவெண்ணீறு பூசி, ஆடுகின்ற அரவம் திகழ, கையில் அனலையேந்தி வீசி, வேத கீதங்களால் போற்றப்படும் இனிமை உடையவனாகிய ஈசன், உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1165. நாகமும் வான்மதியும் நலமல்கு
செஞ்சடை யான்சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்று
எரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல்
தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : நாகமும், சந்திரனும் நலமுடன் திகழும் செஞ்சடையை உடையவன், உரிய காலத்தில், மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தவன், மயில் போன்ற சாயலையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு மகிழ்ந்த ஈசன், உறைகின்ற கோயிலானது, பாதாளீச்சரம் ஆகும்.

1166. அங்கமு நான்மறையும் அருள்செய்து
அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன்
உறைகோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில்
திகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றுஅலரும் வயல்சூழ்ந்த
பாதாளே.

தெளிவுரை : வேதமும், அதன் அங்கமும் அருளி, அழகிய அஞ்சொல் விளம்பும் மங்கையாகிய உமாதேவியைப் பாகங்கொண்ட வேதநாயகன் உறைகின்ற கோயிலானது, கயல்கள் திரியும் குளத்தில் செந்தாமரை மலர்கள் விளங்கும் வயல் சூழ்ந்த பாதாளீச்சரம் ஆகும்.

1167. பேய்பல வும்நிலவப் பெருங்காடு
அரங்காகஉன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும்
திகழ்வித்துத்
தேய்பிறை யும்அரவும் பொலிகொன்றைச்
சடை தன்மேற் சேரப்
பாய்புன லும்உடையான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : பேய்கள் சூழச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு, தீயும், மானும் மழுவும் திகழ, சடை முடியில் பிறைச் சந்திரனும், அரவமும் கொன்றை மலரும் பொருந்தி விளங்க, கங்கை தரித்த ஈசன், உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1168. கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மேல் நன்று
விண்ணியல் மாமதியும் உடன்வைத்
தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்காடு
அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : நெற்றியில் கண்ணுடையவன், கொன்றை மலர் சூடியுள்ள சடையின் மீது சந்திரனை உடன் வைத்தவன்; தன்னால் விரும்பப்படும் உமாதேவியை உடனாகக் கொண்ட அர்த்த நாரியாய் விளங்குபவன்; சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடுகின்றவன்; பண்ணோடு கூடிய இசையை விழைத்த ஈசன், அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1169. விண்டலர் மத்தமொடு மிளிரும்இள
நாகம் வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு
வார் சடையான்
விண்டவர் தம்புரமூன்று எரிசெய்துரை
வேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : நன்கு மலர்ந்த ஊமத்தம், ஒளிமிக்க நாகம், வன்னி இலை, வண்டுகள் திகழ் கொன்றை, பிறைச் சந்திரன் இவற்றைச் சடையில் கொண்டு, பகைவரின் மூன்று புரங்களை எரித்து, நான்கு வேதங்களின் இசையில் மிக்கவனாகிய ஈசன் உறையும் கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1170. மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை
மறுகஅன்று கையால்
தொல்லை மலைஎடுத்த அரக்கன்தலை
தோள்நெரித்தான்
கொல்லை விடை யுகந்தான் குளிர்திங்கள்
சடைக்குஅ ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : நுண்ணிய மெல்லிடையுடைய உமாதேவி கலங்குமாறு, கையினால் கயிலையை எடுத்த இராவணனுடைய தலையும், தோளும், கால்விரல் ஊன்றி நெரித்தவன், இடப வாகனத்தை உகந்து, குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சடைக்கு அணியாகக் கொண்டு பலவிதமான இசைப் பாடலுக்கு உரியவனாகிய ஈசன், உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1171. தாமரை மேல்அயனும் அரியும்தமது
ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பிலர்
ஆய் அகன்றார்
பூமரு  வும்குழலான் உமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வும்குணத்தான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : தாமரை மலரின்மேல் விளங்கும் பிரமனும், திருமாலும் தமது ஆற்றலின் வயத்தால், காமனை எரித்த ஈசன் கழலைக் காணாதவாறு விலகி நிற்கவும், மலர்போன்ற மென்மையான கூந்தலை உடைய உமாதேவியைப் பாகமாகப் கொண்டு பக்திப் பாடல்களில் விளங்கும் குணத்தினனாகிய ஈசன் உறையும் கோயில், பாதாளீச்சரம் ஆகும்.

1172. காலையில் உண்பவரும் சமண கையரும்
கட்டுரை விட்டுஅன்று
ஆல விடநுகர்ந்தான் அவன்றன்னடி
யே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுஉண்டு
இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப்ப பாட்டுகந்தான் உறைகோயில்
பாதாளே.

தெளிவுரை : சமணர் முதலான பிறர் கூறும் வரைகளை ஒதுக்கிவிட்டு, தேவர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உண்டவனும், வண்டினங்கள் மாலை நேரத்தில் தேனை உண்டு இசை எழுப்ப, பாலைப் பண் விரும்பியவனும் ஆகிய ஈசன் உறைகின்ற கோயில் பாதாளீச்சரம் ஆகும்.

1173. பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த
பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடமல்கு புகலிநகர்
மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான
சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்துவல்லார் எழில்வானத்து
இருப்பாரே.

தெளிவுரை : பலவகையான மலர்கள் கொண்ட பொழில்கள் சூழ்ந்த பாதாளீச்சரத்தைப் பொருந்த, புகலி நகரில் சிறப்புடன் விளங்குபவனாகிய தனது இயல்பால் ஒளி மிக்கு உயர்ந்த, தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன, இனிய இசைமிக்க இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், தேவலோகத்தில் எழிலுடன் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

109. திருச்சிரபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1174. வாருறு வளமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலன்இடம்
காருறு கடிபொழில் சூழ்ந்து அழகார்
சீருறு வளவயல் சிரபுரமே.

தெளிவுரை : அழகிய கச்சு அணிந்த உமாதேவியைப் பாகம் கொண்டு, கங்கை தரித்த சடை முடியுடைய நிமலன் இருக்கும் இடமானது, வளமையான மணம் கொண்ட பொழில் சூழ்ந்த, அழகின் சிறப்பினை உடைய வளம் மிகுந்த வயல்களை யுடைய சிரபுரம் ஆகும்.

1175. அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்
திங்களொடு அரவுஅணி திகழ்முடியன்
மங்கையொடு இனிதுறை வளநகரம்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.

தெளிவுரை : வேதங்களும் அதன் அங்கங்களும் தோற்றுவித்து, சந்திரனும் அரவும் திகழும் முடியடன் உமாதேவியுடன் இனிது உறையும் ஈசனின் வளமையான நகரானது, கயல்கள் மிகுந்த நீர் வளம் மிக்க வயல்களைக் கொண்ட சிரபுரம் ஆகும்.

1176. பரிந்தவன் பன்முடி அமரர்க்கு ஆகித்
திரிந்தவர் புரமவை தீயில்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித்து அடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.

தெளிவுரை : கருணையின் வயத்தால் தேவர்களின் பதவியைக் காக்கும் வகையில், முப்புர அசுரர்களை அழிக்கவல்லதும், கோட்டைகளைத் தீயில் வேகுமாறு கொடிய வில்லும் அதில் தொடுக்கும் அம்பும் தெரிந்து பயன்படுத்தி, ஈசன் வீற்றிருக்கும் வளநகர் சிரபுரம் ஆகும்.

1177. நீறுஅணி மேனியன் நீள்மதியோடு
ஆறுஅணி சடையினன் அணி இழையோர்
கூறுஅணிந்து இனிதுஉறை குளிர்நகரம்
சேறுஅணி வளவயல் சிரபுரமே.

தெளிவுரை : திருவெண்ணீறு அணிந்த திருமேனியை உடையவன்; சந்திரனும் கங்கையும் சடையில் அணிந்தவன்; உமாதேவியை ஒரு பாகத்தில் அங்கமாகக் கொண்டு இனிது உறையும் நகரானது, வயல் வளம் மிக்க சிரபுரம் ஆகும்.

1178. அருந்திறல் அவுணர்கள் அரண்அழியச்
சரம்துரந்து எரிசெய்த சங்கரன்ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.

தெளிவுரை : வலிமைமிக்க அசுரர்களின் கோட்டைகள் அழியுமாறு சரம் தொடுத்து எரித்த சங்கரன் ஊரானது, குருந்த மரத்தில் மாதவிக் கொடிகள் படர, காடுகள் சூழும் சிரபுரம் ஆகும்.

1179. கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணும்அவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.

தெளிவுரை : ஈசன், கல்வியால் திகழும் ஞானமாகியவன்; வேதமாகியவன்; காற்றும் நெருப்பும் ஆகியவன்; உறுதியான மலையாகியவன்; விண்ணும், மண்ணும் ஆகியவன்; கொலைத் தன்மை கொண்ட வன்மை மிக்க கொடிய மதில்களை  முப்புரத்தினை அதன் கூட்டோடு, ஒரு சேர அழித்த வில்லையுடையவன். அப்பெருமானின் வளநகர் சிரபுரம் ஆகும்.

1180. வானமர் மதியொடு மத்தம்சூடித்
தானவர் புரம்எய்த சைவன்இடம்
கானமர் மடமயில் பெடைபயிலும்
தேனமர் புரம்எரி சிரபுரமே.

தெளிவுரை : சந்திரனொடு ஊமத்த மலரினைச் சென்னியில் சூடி, அசுரர்களின் புரம் எரித்த சைவனாகிய ஈசன் இடமானது, சோலைகளில் மயில்கள் பெடையுடன் ஆட, தேன் கமழும் ஒளிமிக்க சிரபுரம் ஆகும்.

1181. மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் கார்அரக் கன்முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

தெளிவுரை : பகைவரின் திரிபுரத்தை மாய்த்து அழியுமாறு செய்து, சினம் கொண்ட கரிய அரக்கனாகி இராவணனுடைய முடியும் தோளும் நலியச் செய்து, மார்க்கண்டேயரின் உயிரைச் சினத்தின் வயம் கொண்டு கவர்வதற்கு வந்த காலனைக் காலால் உதைத்து மாய்த்த ஈசன் வீற்றிருக்கும் வளமையான நகர், சிரபுரம் ஆகும்.

1182. வண்ணநன் மலர்உறை மறையவனும்
கண்ணனும் கழல்தொழக் கனல்உருவாய்
விண்ணுற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நன் மதில்அணி சிரபுரமே.

தெளிவுரை : வண்ணம் மிக்க தாமரை மலர்மேல் உறைகின்ற பிரமனும், திருமாலும், திருவடியைப் போற்றித் துதிக்க, கனல் உருவாய், விண்ணளவு சோதியாய் ஓங்கிய விமலன் வீற்றிருக்கும் இடமானது, உறுதியான மதில்களின் அழகு பெறும் சிரபுரம் ஆகும்.

1183.வெற்று அரை உழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறன்உரைக்கப்
பற்றவர் திரிபுர மூன்றும் வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.

தெளிவுரை : ஆடையின்றிக் கல்லாதவராய் உள்ளவர்கள், உண்மைக்கு மாறாகப் புறம் உரைக்க, அச்சொற்களை ஏற்றுக் கொள்ளாது, அன்பற்ற பகைவரின் திரிபுரத்தை எரித்து சாம்பலாகுமாறு செய்த ஈசன் வீற்றிருக்கும் வளநகர், சிரபுரம் ஆகும்.

1184. அருமறை ஞானசம் பந்தன்அந்தண்
சிரபுர நகர்உறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.

தெளிவுரை : அருமறையில் மிகுந்த ஞானசம்பந்தன் சிரபுர நகரில் உறையும் சிவனடியைப் பரவி உரைத்த செந்தமிழ்ப் பதிகமாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், செல்வராய் விளங்கிப் புகழ் மிக்க ஒளியை உடையவர்களாவர்.

திருச்சிற்றம்பலம்

110. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1185. மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான்
அருந்தவ முனிவரொடு ஆல்நீழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.

தெளிவுரை : உள்ளத்திற்கும் யாக்கைக்கும் யாண்டும், ஈசன் மருந்தென விளங்குபவன்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெருந்தகையாய்ப் பிறப்பும் இறப்பும் நிகழ்விக்கும் காராணன்; சனகாதி முனிவர்களுடன் ஆல் நிழலில் அமர்ந்து குருமூர்த்தம் ஆனவன். அப்பெருமான் வீற்றிருப்பது, இடைமருது ஆகும்.

1186. தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோல் அசைத்த
நீற்றவ(ன்) நிறைபுன(ல்) நீள் சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடை மருதே,

தெளிவுரை : ஈசன், யாவற்றையும் செய்பவன்; மாயச் செய்பவன்; உமாதேவியைக் கூறாகக் கொண்டு அர்த்த நாரியாய் விளங்குபவன்; கொலைப் பண்பு கொண்ட புலியின் தோலை ஆடையாகக் கொண்டவன்; திருநீறு அணிந்தவன்; கங்கையைச் சடையின் மீது ஏற்றவன். அப் பெருமான் வீற்றிருக்கும் இடம், இடைமருது ஆகும்.

1187. படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினான் ஞாலமெல்லாம்
உடைதலை யிடுபலி கொண்டுழல்வான்
இடைமருது இனிதுஉறை எம் மிறையே.

தெளிவுரை : ஈசன் மழுப்படை உடையவன்; பால் போன் வெண்ணீறு அணிந்தவன்; இடப வாகனம் பிச்சையேற்றவன்; அப் பெருமான் இடைமருதில் இனிது உறையும் எம் இறை.

1188. பணைமுலை உமையொரு பங்கன் ஒன்னார்
துணைமதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்து அடுதிறல் காலன்செற்ற
இணையிலி வளநகர் இடை மருதே.

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டுள்ள ஈசன், பகைவரின் மூன்று மதில்களையும் நெருப்பில் மூழ்குமாறு கணை தொடுத்து, திறல் மிக்க காலனைச் செற்று, இணையற்ற வளம் மிக்க நகராகிய இடைமருதில் வீற்றிருப்பவன்.

1189. பொழிலவன் புயலவன் புயல்இயக்கும்
தொழிலவன் துயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.

தெளிவுரை : ஈசன், பொழிற் சோலையாய், மேகமாய், அதனை இயக்கும் அதிகாரியாய், வினை வழி உறும்துயராய், அதனை நீக்குபவனாய் விளங்கும் திருவடிச் சீரை உடையவன். யானையின் தோலை உரித்துப் போர்த்திய எழிலுடையவனாகிய அப்பெருமானின் வளநகர், இடைமருது ஆகும்.

1190. நிறையவன் புனலொடு மதியும் வைத்த
பொறையவன் புகழவன் புகழ நின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடை மருதே.

தெளிவுரை : ஈசன், யாவும் நிறைந்த நிலையுடையவன்; கங்கையும், சந்திரனும் வைத்த சடையையுடையவன்; புகழாகவும், அதற்குரிய மறையாகவும் விளங்குபவன்; கலக்கம் உறுமாறு தோன்றிய நஞ்சினை உட்கொண்ட இறையவன். அப் பெருமான் வீற்றிருக்கும் வளநகர், இடைமருது ஆகும்.

1191. நனிவளர் மதியொடு நாகம் வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொடு அமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடை மருதே.

தெளிவுரை : நன்று வளரும் பிறைச் சந்திரனோடு நாகத்தையும், கொன்றை மலரையும் சடை முடியில் வைத்த ஈசன், தேவர்களும் முனிவர்களும் வணங்க இனிது உறையும் வளநகரானது, இடைமருது ஆகும்.

1192. தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவ(ன்) நெடுங்கைமா மதகரியன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.

தெளிவுரை : அகந்தை கொண்ட அரக்கனான இராவணனுடைய தாளும் தோளும் நெரித்த ஈசன், மத யானையின் தோலை உரித்தவன்; பகைவரின் முப்புரங்களை எரித்தவன். அப் பெருமான் வீற்றிருக்கும் வளநகர், இடைமருது ஆகும்.

1193. பெரியவன் பெண்ணினொடு ஆணும் ஆனான்
வரியர வணைமறி கடல் துயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.

தெளிவுரை : எவர்க்கும் முந்தியவனாய் விளங்கம் பெரியவனாகிய ஈசன், பெண்ணுமாய் ஆணுமாய் விளங்கி, பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் ஒளிவடிவாகிய பரமன். அவன் நகர் இடைமருது ஆகும்.

1194. சிந்தையில் சமணொடு தேரர் சொன்ன
புந்தியில் உரையவை பொருள் கொளாதே
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா
எந்தைதன் வளநகர் இடை மருதே.

தெளிவுரை : சிந்தனை கொள்ளாத சமணர்களும் பௌத்தர்களும் அறிவுக்குப் பொருந்தாத உரை சொல்ல, அவற்றை ஏற்காது, அந்தணர்கள் ஓதும் வேத ஒலிகள் ஓய்வில்லாது விளங்க, எந்தையாகிய ஈசன் வீற்றிருக்கும் வளநகர், இடைமருது ஆகும்.

1195. இலைமலி பொழிலிடை மருது இறையை
நலமிகு ஞானசம் பந்தன் சொன்ன
பலமிகு தமிழ்இவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொடு ஓங்குவரே.

தெளிவுரை : இலைகள் மலிந்து பெருகிய சோலைகளை உடைய இடைமருதில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பரவி, நலத்தால் மிகுந்த ஞானசம்பந்தன் சொன்ன சக்தி மிகுந்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், உலகத்தில் பெரும் புகழோடு ஓங்கி விளங்கி நிற்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

111. திருக்கடைமுடி (அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1196. அருந்தனை அறவனை அமுதனை நீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : எல்லாவற்றுக்கும் பொருளாக விளங்குபவனாகிய ஈசனை, அறத்தின் பொருளாகியவனை, அமுதமாகி விளங்குபவனை, யாவர்க்கும் மூத்தோனாகியும் யாண்டும் இளமையுடையவனாயும் உள்ளவன் யார் என வினவுவீர்களாயின், அவன், யாவராலும் போற்றப்படும் ஒருவனாகிய ஈசன். அவன் உலகம் ஏத்திப் பரவும் கருத்துடையவனாகிக் கடைமுடி நகரில் வீற்றிருப்பவன்.

1197. திரைபொரு திருமுடி திங்கள் விம்மும்
அரைபொரு புலியதன் அடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : கங்கையும் சந்திரனும் சடையில் பொலிய, புலியின் தோலை ஆடையாகக் கொண்ட அடிகளின் இடம், அலையொடு நுரை மிகும் தெளிந்த சுனைநீர் மோதும் கடைமுடி என்னும் வளநகர் ஆகும்.

1198. ஆலின மதியினொடு அரவு கங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுது இறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : இளம் பிறைச் சந்திரனும் அரவும், கங்கையும் கொண்டு அழகியய திருநீறு தரித்தவனாகிய ஈசனை, மணம் கமழ் மலரோடு ஏத்தித் தொழ அப்பெருமான் தன் வளநகராகிய கடைமுடியில் வாசனை மிக்க திருத்தாள் கொண்டு அருள் புரிகின்றான்.

1199. கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவன்ஊர்
பையணி அரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடம் கடைமுடியே.

தெளிவுரை : கொய்து அணியும் நறுமலராகிய கொன்றை சூடிய, கரிய மிடற்றினை உடைய வேதியனாகிய ஈசனின்பால் ஊர்ந்து அசையும் படம் கொண்ட அரவமும் மானும் மழுவும் கையில் கொண்டு அணிபவனுடைய இடமானது, கடைமுடி ஆகும்.

1200. மறையவன் உலகவன் மாயம் அவன்
பிறையவன் புனலவன் அனலும்அவன்
இறையவன் எனஉலகு ஏத்தும்கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : ஈசன், மறையாக உள்ளவன்; உலகமாக உள்ளவன்; மாயைப் பொருளாக மனத்தின்கண் பதிபவனும் அவன்; பிறைச் சந்திரனைச் சூடியவன்; கங்கையும் ஆனவன்; நெருப்பும் ஆனவன்; உலகம் எங்கிலும் இறையவன் என ஏத்தப் பெருபவன்; நீலகண்டத்தையுடையவன். அப் பெருமானின் நகர் கடைமுடி ஆகும்.

1201. படஅரவு ஏர்அல்குல் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம் வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : உமாதேவியைப் பாகம் வைத்து பிறைச் சந்திரனைச் சூடும் சென்னியை உடைய கடவுள் வீற்றிருக்கும் வளநகர் கடைமுடி ஆகும்.

1202. பொடிபுல்கு மார்பினில் புரிபல்குநூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகள்இடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : திருவெண்ணீறு மார்பினில் பொலியவும், முப்புரிநூல் விளங்கவும், திருவடியில் ஒலிக்கின்ற அழகிய கழலும் உடைய அடிகள் வீற்றிருக்கும் இடமானது, குளிர்ந்த சுனைகளில் வாசனை மிக்க மலர்களையுடைய கொடிகள் பரவ, அந்த நறுமணமானது விளங்கும் வளநகராகிய கடைமுடி ஆகும்.

1203. நோதல்செய்து அரக்கனை நோக்கு அழியச்
சாதல்செய் தவன்அடி சரண்எனலும்
ஆதரவு அருள்செய்த அடிகள்அவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : இராவணனைத் துன்பத்திற்கு ஆளாக்கி, அவனுடைய நோக்கத்தையும் அழியச் செய்து, சரணம் என அடைக்கலம் ஆன நிலையில் அன்பு கொண்டு, அருள் செய்த அடிகள், விரும்பி இருக்கும் வளநகர் கடைமுடியாகும்.

1204. அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி அருள்என்று போற்றிசைப்பச்
சடை யிடைப் புனல்வைத்த சதுரனிடம்
கடைமுடி அதன்அழல் காவிரியே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காண்கிலராய்ப் புலம்பி நின்று போற்றிசைக்கச் சோதி வடிவாகிய ஈசன், கங்கையினைச் சடையில் வைத்த சதுரன். அப் பெருமான் விளங்கும் இடம், காவிரியின் அயல் விளங்கும் கடை முடி ஆகும்.

1205. மண்ணுதல் பறித்தலும் மாயம்இவை
எண்ணிய கால்அவை இன்பம்அல்ல
ஒண்ணுதல் உமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

தெளிவுரை : சிகை நீக்குதல் முதலான விரதங்கள், அதன் சார்பான ஒழுக்கங்கள் யாவும் மாயை. அது உண்மையான இன்பத்தை வழங்காது. உமாதேவியைப் பாகம் கொண்ட, கண்ணுதல் கொண்ட ஈசன் வளநகர் கடைமுடியாகும், அப் பெருமானைத் தொழுவீராக என்றவாறு.

1206. பொன்திகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்தமிழ் இவை சொல இன்பமாமே.

தெளிவுரை : புகழ் விளங்கும் காவிரியின் நீரானது சென்றடையும் கடைமுடியில் வீற்றிருக்கும் சிவனடியை நன்றாக உணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன, இனிய இத் தமிழ்த் திருப்பதிகத்தைச் சொல்பவர்கள், யாண்டும் இன்புற்று விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

112. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1207. இன்குரல் இசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொரு பழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.

தெளிவுரை : இனிய குரலின் இசையினை யாழ் எழுப்பத் தன் கரத்தைப் பதித்த சதுரனாகிய ஈசன் நகரானது காவிரியின் அழகிய தென்கரையில் மருவிய சிவபுரம் ஆகும். ஈசன் வீணை வாசித்த வரலாற்றைச் சுட்டியது.

1208. அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதநகர்
வென்றிகொள் எழிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.

தெளிவுரை : மார்கண்டேயருக்காகக் காலனை உதைத்து அழித்த புனித நகர், வெற்றி கொண்ட திருமால் வெண் பல்லுடைய பன்றியாய் ஈசனடியை அடைந்து வணங்கிய சிவபுரம் ஆகும்.

1209. மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்கு உரிசெய்த குழகனகர்
அலைமல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதிள்அணி சிவபுரமே.

தெளிவுரை : உமாதேவியும் கலங்குமாறு எதிர்த்து வந்த மத யானையைக் கொன்று, அதன் தோலை உரித்த அழகனாகிய ஈசன் விளங்கும் நகரானது, அரிசிலி ஆற்றை மருவியுள்ள உயர்ந்த மதிள்களை உடைய சிவபுரம் ஆகும்.

1210. மண்புனல் அனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்த(ன்)நகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழில் சிவபுரமே.

தெளிவுரை : நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் ஆகி விகிர்தனாகிய ஈசன், விளங்கும் நகரானது பண்ணிசை போன்று குரல் எழுப்பும் வண்டுகள் சூழும் செண்பக மலர்ச் சோலையுடைய சிவபுரம் ஆகும்.

1211. வீறுநன்கு உடையவள் மேனிபாகம்
கூறுநன்கு உடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறல்உண்டு எழுதரு சிவபுரமே.

தெளிவுரை : பெரும் ஆற்றல் உடையவனாகிய உமாதேவியை ஒரு பாகம் அங்கமாகக் கொண்டு, அர்த்தநாரியாய் உடைய ஈசனின் குளிர்ச்சி பொருந்திய நகரானது, மணம் கமழும் குரவ மலரில் வண்டு பதிந்து தேன் உண்டு மகிழ்ந்து எழும் சிவபுரம் ஆகும்.

1212. மாறுஎதிர் வருதிரி புரம்எரித்து
நீறது ஆக்கிய நிமலனகர்
நாறுடை நடுபவர் உழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே.

தெளிவுரை : பகை கொண்டு எதிர் நின்ற திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய, நிமலனாகிய ஈசனுடைய நகரானது, நாற்றுகளை நடுகின்ற உழவர்கள் தம்முடன், சேறுடைய வயல்களின் அணி கொண்ட சிவபுரம் ஆகும்.

1213. ஆவில்ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்ததொர் வியனகர்தான்
பூவில் வண்டு அமர்தரு பொய்கைஅன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.

தெளிவுரை : பசுவிலிருந்து தோன்றும் பால், தயிர் என ஆகும் பஞ்சகவ்வியத்தைப் பூசனையாக ஏற்று மகிழ்ந்த ஈசன், உமாதேவியோவு மேவி, நன்கு இருந்த பெருமை மிக்க நகரானது, பூவில் உள்ள தேனை அருந்திக் களிக்கும் வண்டாது அமர்ந்திருக்கும் எழிலார்ந்த பொய்கையில், அன்னச் சேவல் தன் பெடையொடு புல்கும் இயல்பினையுடைய சிவபுரம் ஆகும்.

1214. எழில்மலை எடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி அடக்கிய முதல்வனகர்
விழவினில் எடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகில் அடுக்கும்வண் சிவபுரமே.

தெளிவுரை : எழில் மிக்க கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய முழு வலிமையும் அடக்கிய பரமனுடைய நகரானது, திருவிழாக் காலங்களில் அமையப்பெறும் வெண்கொடி, மேகத்தை நெருங்குமாறு உயர்ந்த நிலையுடன் விளங்கும் சிவபுரம் ஆகும்.

1215. சங்குஅள வியகையன் சதுர்முகனும்
அங்குஅள வறிஅரி யவனகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

தெளிவுரை : சங்கினைக் கரத்தில் ஏந்திய திருமாலும், நான்முகனும் அளவிடுவதற்கு அறியாதவராய், அவர்களுக்கு அரியவனாகிய ஈசன் நகரானது, கமுக மரங்களில் வாழும் பறவைகள், இரவிலும் கனிகளை நுகரும் தனிச்சிறப்புறும் சிவபுரம் ஆகும்.

1216. மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியில்
தெண்டிரை பொருதுஎழு சிவபுரமே.

தெளிவுரை : விவாதம் செய்து மாசு புரியும் சொற்களை விலக்கிய விமலன் நகரானது, தொன்மைக் காலத்திலிருந்து காவிரியின் நீர் வளம் சேரும் எழில் உடைய சிவபுரம் ஆகும். இது ஈசன் அருளால் நீர்வளமும், நிலவளமும், மக்கள் தம் மகிழ்ச்சிப் பெருக்கும் உணர்த்துவதாயிற்று.

1217. சிவன்உறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழ்இவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

தெளிவுரை : சிவபெருமான் உறைகின்ற சிவபுர நகரினைக் கவுணியர் கோத்திரத்தின் வழிவந்த காழி நகரின் தலைவனின் தவம் பெருகும் இத் தமிழ்ப் பதிகத்தைச் சொல்ல வல்லவர்கள் புதுமை திகழுமாறு சிவகதியை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

113. திருவல்லம் (அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1218. எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : ஈசன், முப்புரத்தை எரித்து சாம்பலாகுமாறு செய்தவன்; தாழ் சடையின் மேல் கங்கையைத் தரித்தவன்; வேதங்களை விரித்து அதன் பொருட் சிறப்பினைப் பலவாறு விளங்கச் செய்தவன். அவன் உறைவிடம் திருவல்லம் ஆகும்.

1219. தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் தூமதி சூடியெல்லாம்
ஆயவன் அமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவன் உறவிடம் திருவல்லமே.

தெளிவுரை : ஈசன், உலகுக்கெல்லாம் தாயாகிக் காப்பவன். தனக்கு இணையாக யாரும் சொல்ல முடியாதவாறு மலம் அற்று விளங்கும் தூயவன்; தூயமதி சூடி எல்லாமாய் விளங்குபவன்; ஞானம் கைவரப் பெறாத வேதர்களுக்கும், முனிவர்களாயினும் அவர்களுக்கும் தொலைவாக இருப்பவன். அப்பெருமான் உறையும் இடம், திருவல்லம் ஆகும்.

1220. பார்த்தவன் காமனைப் பண்புஅழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிமை
ஆர்த்தவ(ன்) நான்முகன் தலையைஅன்று
சேர்த்தவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : ஈசன், தலைமேல் அம்பு தொடுத்த மன்மதனை நெற்றிக் கண்ணால் பார்த்து எரித்தவன்; எதிர்த்து வந்த யாதனையின் தோலை உரித்துப் போர்த்துவன்; ஆணவத்தின்பால் திரட்சி கொண்டு நின்ற பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றினைக் கொய்து நான்முகனாக்கியவன். அப்பெருமான் உறையும் இடம் திருவல்லம் ஆகும்.

1221. கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை உலகம்உய்யச்
செய்தவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : கொய்து அழகிய மலரைக் கொண்டு, மனம் ஒருமித்து தூவிப் போற்றி வழிபடுபவர்களுக்குத், திருமகள் செல்வச் செழிப்பினை இணங்கி அருளுமாறு செய்யவைத்தும், உலகம் உய்ய பெருமழை பெய்யுமாறு செய்து பஞ்சத்தைப் போக்கும் ஈசன் உறையும் இடம், திருவல்லம் ஆகும்.

1222.  சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவ(ன்) நேரிழை யோடும் கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : தன்னைச் சார்ந்து உள்ள அடியவர்களுக்கு எல்லாவிதமான இன்பங்களும் தழைக்கும் வண்ணம் புரியும் ஈசன், உமாதேவியுடன் கூடியிருப்பவனாய், தன்னைத் தேர்ந்து தேடுவார் தம்மைத் தேடுமாறு செய்து, அவர்களிடம் எப்போதும் சேர்ந்து இருப்பவன். அப்பெருமான் உறைவிடம் திருவல்லம் ஆகும்.

1223. பதைத்துஎழு காலனைப் பாதம் ஒன்றால்
உதைத்துஎழு மாமுனிக்கு உண்மை நின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வி யன்று
சிதைத்தவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : பதை பதைத்துச் சினந்து எழுந்த காலனைத் திருப்பாதத்தால் உதைத்து அழித்து, தன்னை வழிபட்ட மாமுனியாகிய மார்க்கண்டேயருக்கும் மெய்ப்பொருளாய் விளங்கி அருள்புரிந்து, நன்னெறியிலிருந்து பிறழ்ந்து தடுமாறிய, தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த ஈசன் உறைவிடம், திருவல்லம் ஆகும்.

1224. இகழ்ந்துஅரு வரையினை எடுக்கலுற்றுஆங்கு
அழ்ந்தவல் லரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : இகழ்ச்சியாக நினைத்து அருவரையான கயிலை மலையை எடுக்க வேண்டும் என்று அகழ்ந்த, கொடிய அரக்கனாகிய இராவணனைத் தண்டித்த திருப்பாதத்தைத் தேடுமாறு செய்த ஈசன் உறைவிடம், திருவல்லம் ஆகும்.

1225. பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன் அருமறை அங்கம் ஆனான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.

தெளிவுரை : ஈசன், யாவற்றுக்கும் முதற்பொருளாய் இருத்தல் போன்று யாவர்க்கும் பெரியவனாய் விளங்குபவன்; சிறியவர்களாய பிறர்க்குச் சிந்தை செய்வதற்கு அரியவன்; வேதங்களும் அதன் அங்கங்களும் ஆனவன்; திருமாலும், பிரமனும் காண வொண்ணாதவன். யாவும் தெரிந்தவனாய் விளங்கி, சீவன் முத்தர்கள்பால் விளங்கும் அப்பெருமான் உறைவிடம், திருவல்லம் ஆகும்.

1226. அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலன்ஐந்தும் விளங்கஎங்கும்
சென்றவன் உறைவிடம் திருவல்லமே.

தெளிவுரை : அன்று எனும் இன்மை கூறும் சமணர் மற்றும் சாக்கியர்தம் அறவுரைகள் வளம் அற்றனவாகும். அவ்வுரைகள் மேலாகாதவாறு வென்றவனாய், ஐந்து புலன்களுக்கும் கடந்தவனாய் விளங்கும் ஈசன் உறைவிடம், திருவல்லம் ஆகும்.

1227. கற்றவர் திருவல்லம் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.

தெளிவுரை : கற்றவர் விளங்கும் திருவல்லத்தைக் கண்டு மகிழந்து நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன குற்றமற்ற செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை கூற வல்லவர்கள், ஈசனார் திருவடியைப் பற்றி, நின்று விளங்குவார்கள். இது, பேரின்பம் உண்டாகும் என உணர்த்தியவாறு.

திருச்சிற்றம்பலம்

114. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர், வேலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1228. குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணும்அவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : ஈசன், கொழுந்தாக விளங்கி செழுமையைப் புலப்படுத்துபவனாகவும், நுண்மையாக விளங்குபவனாகவும் பெருந்தகைமை பூண்டுள்ளவனாகவும், பெண்ணும் ஆகி, ஆணும் ஆகியவனாகவும், உமாதேவியார் விரும்பி ஏத்தும் அமுதனாகவும் உள்ளவன். அவன் வளநகர் மாற்பேறு ஆகும்.

1229. பாறணி வெண்தலை கையில் ஏந்தி
வேறணி பலிகொள்ளும் வேட்கையனாய்
நீறணிந்து உமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : பிரம கபாலம் கையில் ஏந்திப் பிச்சையேற்கும் வேட்கை உடையவனாய்த் திருநீறு மெய்யில் பூசி, உமாதேவியைப் பாகமாகக் கொண்ட, மாறு பாடில்லாதவனாய் விளங்கும் ஈசனின் வளநகர் மாற்பேறு ஆகும்.

1230. கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை யேறியும் சென்றுநின்று
உருவிடை யாள்உமை யாளும்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : கருமையுடைய இருள் மனத்தினராகிய முப்புராரிகளையும் அவர்தம் மதில்களையும் வேகுமாறு எரிசெய்து, இடப வாகனத்தில் ஏறிய ஈசன் அழகிய இடையுடைய உமாதேவியும் தானும் மருவி விளங்கும் வளநகர் மாற்பேறு ஆகும்.

1231. தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகன்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : ஈசன், யாவற்றுக்கும் தலைமையாவன்; தலைமாலையைப் பூண்டவன்; கொலை நவிலும் கூற்றுவனைக் காலால் உதைத்துக் கொன்றவன்; மானைக் கரத்தில் விரும்பி ஏற்றவன். கயிலாயம் என்னும் திருமலையான் அப்பெருமானின் வளநகர் மாற்பேறு ஆகும்.

1232. துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர் பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : ஈசன், உயிர்கள் எல்லாம் பேணுகின்ற நெறிகள் யாவும் தானாகவே இருப்பவன்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்து தொழில்களுக்கும் தானே தலைவன் ஆனவன்; சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்தவன்; உமா தேவியை ஒரு பாகமாக உடையவன்; கறையுடைய கண்டம் கொண்டு விளங்கும் நீலகண்டன்; காலனை உதைத்த வேதத்தின் நாயகன். அவனுடைய வளநகர் மாற்பேறு ஆகும்.

1233. பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

தெளிவுரை : பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகம் வைத்து, காமனை நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கிய ஈசன், தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும், பூவுலகத்தவர்களும் வணங்கும் நல்ல மாற்பேற்றில் வீற்றிருப்பவரே.

1234. தீதிலா மலைஎடுத்த (அ)வ்வரக்கன்
நீதியால் தேவகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணல்எங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : யாவருக்கும் தீமை விளையாதவாறு நன்மையே புரியும் கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணன் நியதிப்படி சாமவேத கீதம் பாட, ஆதியானாகிய அண்ணல், எங்கள் மாதாவாகிய உமாதேவியைப் பாகங் கொண்ட ஈசன்றன் வளநகர் மாற்பேறு ஆகும்.

1235. செய்ததண் தாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி யதனைஉள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : செந்தாமரை போன்ற கண்ணுடைய திருமாலும், கொய்ய அணிகொள் நறுமலராகிய தாமரையின் மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய ஈசன் சேவடியை நினைத்து விரும்பியேத்தும் வளநகர், மாற்பேறு ஆகும்.

1236. குளித்துஉணா அமணர்குண்டு ஆக்கர்என்றும்
களித்துதன் கழலடி காணல்உறார்
முளைத்த வெண் மதியினொடு அரவம்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

தெளிவுரை : உடல் தூய்மையின்றி உணவு கொள்ளும் அமணர் முதலானோர் மனம் மகிழுமாறு ஈசன் திருவடியைக் காணாதவர்கள் ஆவர். வளர்பிறைச் சந்திரனையும் அரவத்தையும் இணைத்துச் சென்னியில் பொருந்துமாறு வளைத்துச் சேர்த்தவனாகிய பிரமனின் வளநகர் மாற்பேறு ஆகும்.

1237. அந்தமில் ஞானசம் பந்தன் சொன்ன
செந்துஇசை பாடல்செய் மாற்பேற் றைச்
சந்தம்இன் தமிழ்கள் கொண்டு ஏத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே.

தெளிவுரை : அழிதல் இல்லாத ஞானசம்பந்தன் சொன்ன செவ்விய இசைப் பாடல் செம்மை வளர் மாற்பேற்றை, சந்தம் மிகுந்த இனிய தமிழ் கொண்டு ஏத்தவல்லவர், எந்தையாகி ஈசன் திருவடிப் பேற்றை எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

115. திருஇராமனதீச்சரம் (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1238. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளும் அவன்கோபப்
பொங்கரவு ஆடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : சங்கு வளையலை அணிந்த தாருகவனத்து முனிபத்தினிகளிடையே பிச்சையேற்று ஈசன், சினம் மிக்க அரவம் திருமேனியில் ஆட உலகமானது ஓங்கித் திகழ, எங்கும் சிறப்புக் கொண்டு ஒளிர்வது இராமனதீச்சரமே.

1239. சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்த மதத்தவன் தாதையோதான்
அந்தமில் பாடலோன் அழக(ன்)நல்ல
எந்தவன் இராமனது தீச்சரமே.

தெளிவுரை : ஈசன், அழகிய மலரை அணிந்த நீண்ட சடையுடையவன்; தந்தமும், மதமும் கொண்ட விநாயகப் பெருமானின் தந்தையானவன்; அழகனாக விளங்குபவன்; என்னுடைய நற்றவன் ஆனவன்; அவன் இராமனதீச்சரத்தானே.

1240. தழைமயில் ஏறவன் தாதையோதான்
மழைபொழி சடையவன் மன்னுகாதில்
குழையது இலங்கிய தோலமார்பின்
இழையவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : ஈசன், தோகையைத் தழைத்து விளங்கும் மயில் வாகனத்தை உடைய குமரவேளின் தாதையானவன்; கங்கை விளங்கும் சடையுடையவன்; காதில் குழையணிந்து விளங்க திருமார்பில் முப்புரி நூல் திகழ உடையவன். அவன் இருப்பது இராமன தீச்சரமே.

1241. சத்தியுள் ஆதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : ஈசன், ஆதிசக்தியானவன்; உமையவனை ஒரு பாகமாக உடையவன்; முத்திக்குத் தலைவனாக விளங்கி அருள்புரிபவன்; செவ்வையான திருக்கரத்தில் அழகிய சூலப் படை தரித்தவன்; அவன் இராமன தீச்சரத்தினனே.

1242. தாழ்ந்த குழற்சடை முடியதவன்மேல்
தோய்ந்த இளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்த கங்கையொடு படஅரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : நீண்ட குழலும், சடைமுடியின்மேல் இளம் பிறைச் சந்திரன் தோய்ந்து விளங்க, கங்கையும், படம் கொண்டு ஆடும் அரவமும், பொருந்த வைத்தவன் இராமனதீச்சரத்தானே.

1243. சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
எரியவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : நீண்டு சரிந்த கூந்தலையுடைய உமையவன் கண்டு மகிழும் பெருமையை உடையவன்; காளியின் சிறப்பான நடனத்திற்கு அரியவனாகி ஆடுகின்றவன்; அழகிய கரத்தில் நெருப்பினை ஏந்தியவன் ஈசன், இராமனதீச்சரத்தான்.

1244. மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது ஆடலோன் நீள்சடைமேல்
ஆறது சூடுவான் அழகன்விடை
ஏறவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : மாறுதல் அடையாத உமாதேவியைத் தனது தேகத்தின் ஒரு பாகத்தில் கொண்டு விளங்குபவனாகி, திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நடனம் புரிபவனாகி, நீண்ட சடை முடியின்மேல் கங்கை சூடும் அழகனாகி, இடப வாகனத்தில் ஏறி வீற்றிருப்பவன், இராமனதீச்சரத்தினன்.

1245. தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்
படஅரவு ஆட்டிய படர்சடையான்
நடமது ஆடலா னான்மறைக்கும்
இடமவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : மலைபோன்ற பெரிய தோளுடைய அரக்கனாகிய இராவணனின் தலை நெரியுமாறு அடர்த்து படங்கொண்டு ஆடும் அரவத்தைச் சடையில் பொருந்தச் செய்து, நடம் புரியும் நாதனாகி, நான்கு வேதங்களுக்கும் தானே புகலிடம் என விளங்கும் ஈசன், இராமனதீச்சரத்தான்.

1246. தனமணி தையல்தன் பாகன்தன்னை
அனமணி அயன்அணி முடியும்காணான்
பனமணி அரவுஅரி பாதம்காணான்
இனமணி இராமன தீச்சரமே.

தெளிவுரை : ஈசன், உமைபாகனாகியவன்; அன்னப் பறவை வடிவு கொண்ட பிரமன் ஈசனார் திருமுடியைக் காண வேண்டும் என்று முயன்றும்
முடியவில்லை. பல மணிகளை உடைய அரவத்தின் மீது பள்ளி கொள்ளும் திருமால், பாதத்தைக் காண முடியவில்லை. அத்தகைய ஈசன் விளங்கும் இடம் இராமனதீச்சரம் ஆகும்.

1247.தறிபோலாம் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா நாமம் அறிந்துரைமின்
மறிகையோன் றன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சரமே.

தெளிவுரை : பயனற்றதாகிய சமணர், சாக்கியர் தம் சொற்களை மனத்தில் கொள்ளற்க. அறிவின் வயத்தால் ஓர்ந்து அறிதற்கு இயலாததாயும், உள்ளத்தின் உணர்வினால் ஒன்றி இயைந்து அறியக் கூடியதும் ஆன, இறைவன் திருநாமத்தை அறிந்து உரை செய்க. அத்தகைய திருநாமத்திற்கு உரிய பெருமான், மானைக் கரத்தில் ஏந்தி, செம்மையுடன் ஒளிரும் சடைமுடியில் விளங்கும் கங்கையை, உலக நலத்தினைக் கொண்டு, உலகுக்கு வழங்கும் இராமனதீச்சரத்தான்.

1248. தேன்மலர்க் கொன்றையோன் . . . . . .

(இறுதிப் பாடல் முற்றுப் பெறவில்லை)

திருச்சிற்றம்பலம்

116. பொது (திருநீலகண்டம்) (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1249. அவ்வினைக்கு இவ்வினை யாம்என்று
சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருபத்தும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்துஎம் பிரான்கழல்
போற்றது நாம்அடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : முன் செய்த வினையின் பயனாக இப்போது, இப்பிறவியில் யாம் துன்பம் அடைகின்றோம் என்று சொல்பவர்களே ! இதனைப் பிராரத்தகன்மம் என்று அறிந்து உரைப்பவர்களே ! இதிலிருந்து உய்தி பெற்றுக் கடைத் தேறும் வழியை நாடிச் செய்யாமல் இருப்பதும் உமக்குக் குறைவு தந்து ஊனத்தைத் தரும் அல்லவா ! எனவே, அக்குறையைப் போக்க, கைகளால் செய்யும் செயலாகிய மலர் பறித்தல், குவித்து வணங்குதல் போன்ற செயல்களைச் செய்து எம்முடைய தலைவனாகிய ஈசன் திருவடியைப் போற்றுவோமாக. நாமெல்லாம் அப் பெருமானின் அடியவர்கள். ஆகையால் வினையானது வந்து தீண்டாது. திருநீலகண்டம் அவ்வினையை நிர்மூலமாக்கும் என்றவாறு.

1250. காவினை யிட்டும் குளம்பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினை யால்எயில் மூன்றெரித்
தீர்என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றது நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : மலர்ச் சோலைகள் அமைத்தும் திருக்குளம் தோண்டியும், கனிந்த மனத்துடன், முப்புரம் எரித்த ஈசனே எனக் கொண்டு காலை மாலை ஆகிய இருவேளையும் பூப்பறித்து மலரடி போற்றுவீராக நாம் அனைவரும் அடியவர்களாய் ஈசனுக்குத் தொண்டு புரிபவர்கள். தீயவினையானது வந்து நம்மைத் தீண்டித்துன்பம் தராது. திருநீலகண்டம் துணை நின்று தடுத்துக் காக்கும்.

1251. முலைத்தட மூழ்கிய போகங்
களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணம் கொண்டெமை
யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டு
மழுவும் இவை யுடையீர்
சிலைத் தெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : காம நுகர்ச்சியின் வயங்கொண்டு, கொள்ளும் போகங்களால் நின் திருவடிக்கழலை விலகிச் சென்று தலைப்பட்டும் அலையாத வண்ணம், ஆளாகக் கொண்டு, எம்மை ஆட்கொண்ட சடையுடைய ஈசனே ! சூலமும் மழுவும் திருக்கரத்தில் உடைய பெருமானே ! ஆரவாரம் செய்து மலைபோல் பெருகி வரும் தீவினையாது, எம்மைத் தீண்டவிடாது திருநீலகண்டம் காத்தருளும்.

1252. விண்ணுல காள்கின்ற விச்சா
தரர்களும் வேதியரும்
புண்ணியர் என்றிரு போதும்
தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை
யீரும் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்

தெளிவுரை : விண்ணுலகத்தில் விளங்குகின்ற வித்யாதரர்களும், வேதவிற்பன்னர்களும் புண்ணியர் என்று இரு வேளையிலும் தொழப்படுகின்ற புண்ணியரே ! இமைத்தல் புரியாத மூன்று கண்களை உடையவரே ! உமது திருவடியை அடைந்தோம். திணிக்கப்பட்டு வரும் தீவினையானது தீண்டப்பெறாமல் திருநீலகண்டம் காக்க.

1253. மற்றிணை யில்லா மலைதிரண்
டன்னதிண் தோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளாது
ஒழிவதும் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துஉம்
திருவடி யேஅடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : இணையில்லாத மலைபோன்ற திரட்சியான தோள்களை உடைய பெருமானே ! வலிமையுடன் உறுதியாக எம்மை உமது ஆளாக்கிக் கொண்ட பின்னர், எம்மைப் பாராமுகமாய் விடுவதும் நற்பண்பு ஆகுமோ ! வெறும் வாய்ச் சொற்கள் நற்பண்பு துணை என்று சொல்லப்படுகின்ற வாழ்க்கையைத் துறந்து, உம்முடைய திருவடியே சரண் என்று அடைந்தோம். தீவினையானது எம்மைச் செற்றுத் தீண்டப் பெறாது, திருநீலகண்டம் விளங்குமாக.

1254. மறக்கு மனத்தினை மாற்றியெம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்
கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துஉமை
யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : உலக மாயையால் மறக்கும் தன்மையுடைய மனத்தை மாற்றி, எம்மை வற்புறுத்திப் பிறவாப் பெரியோனாகிய நின் திருவடிக்கு ஆளாக்கி, நெஞ்சில் மாசற்ற நிலையாய்ச் செய்து, மலர்தூவி உம்மை ஏத்திப் பணி செய்யும் அடியவர்கள் நாங்கள், பெருமானே ! எக்காலத்திலும் சிறப்பினைப் பெறாத தீவினையானது தீண்டப் பெறாது, திருநீலகண்டம் துணை நிற்க.

1255. கருவைக் கழித்திட்டு வாழ்க்கை
கடிந்தும் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துஉமை
யேத்தது நாமடியோம்
செருவில் அரக்கனைச் சீரில்
அடர்த்தருள் செய்தவரே.
திருவிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : இப் பிறவியில் உமது திருவடிக்கு மலர் தூவிப் போற்றுகின்ற செயலைப் புரிந்து உருகி நின்று மீண்டும் பிறவா நிலையைப் பெறுவதற்கு ஏத்து அடியவர்கள் ஆயினம், பகை ஏதும் இல்லாதவனாயினும் வினைவலி காரணமாகி, சீர் அற்ற செயலைப் புரிய, அடர்த்துப் பின்னர் அருள் செய்த பெருமானே ! எம்மைத் திருவற்ற தீவினையானது தீண்டப் பெறாது, திருநீலகண்டம் விளங்குக.

1256. நாற்ற மலர்மிசை நான்முக
நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியு
முடியும் தொடர்வரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது
வணங்குதி நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்

தெளிவுரை : மணம் மிக்க தாமரை மலரில் விளங்கும் பிரமனும், திருமாலும், ஒருவருக்கு ஒருவர் வாதுபுரிந்து அடிமுடி காணாத பெருமானே ! காணப் பெறினும் பெறுவீர் நீவிர் ! யாம் உம்மைத் தொழுது வணங்கும் அடியவர்கள். சீற்றம் கொள்வதாகிய வினையானது தீண்டப் பெறாது, திருநீலகண்டம்.

1257. சாக்கியப் பட்டும் சமணுரு
வாகி உடையொழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்
போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை
யீர்அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம்.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் பாக்கியம் அற்றவராய் இருதலைப் போகமாக விளங்கும் இம்மை நலமும் மறுமைப் பேறும் பற்றுகின்ற தன்மையை ஒழித்தனர். கொன்றை மலரைச் சடைமுடியில் தரித்த பெருமானே ! உமது திருவடியைப் போற்றுகின்றோம். தீக்குழியைப் போன்று கனல்வீசும் தீவினையானது எம்மைத் தீண்டப் பெறாது, திருநீலகண்டம்.

1258. பிறந்த பிறவியில் பேணிஎம்
செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில்
இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன்
செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடும் கூடுவரே

தெளிவுரை : எம்செல்வனாகிய ஈசன் கழலடியில் சேர்வதற்காக வழங்கப்பட்ட இப்பிறவியில், மீண்டும் பிறவி இருக்குமானால், திறன் மிக்க ஞானசம்பந்தன் செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள், விண்ணுலகத்தில் தேவவேந்திரனுவன் சேர்ந்திருப்பார்கள்.

திருச்சிற்றம்பலம்

117. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1259. காடது அணகலம் காரர
வம்பதி காலதனில்
தோடது அணிகுவர் சுந்தரக்
காதினில் தூச்சிலம்பர்
வேடது அணிவர் விசயற்கு
உருவம் வில்லும் கொடுப்பர்
பீடது அணிமணி மாடப்
பிரம புரத்தாரே.

தெளிவுரை : அணிமிக்க மாடங்கள் கொண்ட பெருமை மிகுந்த பிரமபுரத்தில் விளங்கும் பெருமான், கொடிய விடம் கொண்ட அரவத்தினை ஆபரணமாகக் கொண்டவர்; சுடுகாட்டை இருப்பிடமாக உடையவர்; அழகிய காதில் தோடு அணிபவர்; திருப்பாதத்தில் சிலம்பு அணிபவர்; வேடுவர் வடிவுகொண்டு விசயருக்கு பாசுபத அத்திரம் கொடுப்பவர்; அப் பெருமானைப் போற்றுவீராக.

1260. கற்றைச் சடையது கங்கண
முன்கையில் திங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத்
தோன்றலை கட்டதுபண்டு
எற்றித்துப் பாம்பை அணிந்தது
கூற்றை எழில் விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு
புரத்தெங்கள் வேதியரே.

தெளிவுரை : எழில்மிக்கு ஓங்கிய மதில்களை உடைய வேணுபுரம் என்னும் நகரில் விளங்கும் வேத நாயகராகிய எங்கள் பெருமான், சடைமுடியில் சந்திரனும் கங்கையும் தரித்துள்ளவர்; முன் கையில் அரவத்தைக் கங்கணமாகக் கட்டியுள்ளவர்; முப்புரத்தை எரித்தவர்; உலகத்தைப் படைக்கும் தொழிலையுடைய பிரமனின் ஐந்து தலைகளுள் ஒன்றைப் பற்றிக் கொய்தவ; மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த கூற்றுவனைக் காலால் உதைத்தவர்; பாம்பினை அணிகலனாகக் கொண்டவர்; அப்பெருமானின் திருவடியைத் தொழுவீராக.

1261. கூவிளம் கையது பேரி
சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது
பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் கும்நுத வாளையும்
பாகம் உரித்தனரின்
பூவிளம் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே.

தெளிவுரை : பூக்கள் மல்கும் அழகிய சோலைகள் உள்ள புகலியுள் மேவிய புண்ணியனாகிய பெருமான், சடையில் வில்வம் தரித்தவர்; ஒலிக்கும் உடுக்கையைக் கொண்டுள்ளவர்; நாதத்தை அணிகலனாகக் கொண்டிருப்பவர்; தூய்மையாக விளங்கும் திருவெண்ணீறு பூசிய திருமேனியுடையவர்; அம்பு போன்று விளங்கும் நுதலை உடைய உமையவளை ஒரு பாகத்தில் கொண்ட உரிமை உள்ளவர்; அவரைத் துதிப்பீராக.

1262. உரித்தது பாம்பை உடன்மிசை
இட்டதோர் ஒண்களிற்றை
எரித்ததொர் ஆமையை இன்புறப்
பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத்
தக்கனை வேள்விபன்னூல்
விரிந்தவர் வாழ்தரு வெங்குரு
வில்வீற் றிருந்தவரே.

தெளிவுரை : தருக்கன் சூழ்ந்த வெங்குருவில் வீற்றிருக்கும் பெருமான்,யானையின் தோலை உரித்தவர்; பாம்பினை உடம்பின் மீது அணிகலனாகக் கொண்டவர்; முப்புரத்தை எரித்தவர்; ஆமை ஓட்டினைப் பூண்டவர்; தக்கன் வேள்வியைச் செருத்து அழித்தவர்; சூலத்தை ஏந்தியவர்; வேதங்களை விரித்தவர். அவரைத் தொழுக.

1263. கொட்டுவர் அக்குஅரை ஆர்ப்பது
தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதம் கலப்பில
ரின்புகழ் என்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர்
மத்தமும் ஏந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி
புரத்துறை சுந்தரரே.

தெளிவுரை : வானத்தைத் தொடுகின்ற உயர்ந்த கொடித் தோரணங்கள் கொண்டுள்ள தோணிபுரத்தில் வீற்றிருக்கும் சுந்தரராகிய பெருமான், தக்கை என்னும் பறை கொட்டுபவர்; சங்குமணி அரையில் கொண்டுள்ளவர்; குறுகிய பாதங்களை உடைய பூதங்கள் இனிய புகழைச் சொல்ல ஏற்பவர்; கலப்பில்லாத என்பு பொருந்த இருப்பவர்; மடுத்து வரும் தழலைக் கரத்தில் ஏந்துபவர்; ஊமத்தம் சூடுபவர். அப்பெருமானை வணங்குக என்றவாறு.

1264. சாத்துவர் பாசம் தடக்கையில்
ஏந்துவர் கோவணம்தம்
கூத்தவர் கச்சுக்குலவி நின்று
ஆடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை
சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய்
மேவிய புண்ணியரே.

தெளிவுரை : மாதவத்தோர் பூக்கையால் தொழும் பூந்தராய் மேவிய புண்ணியராகிய பரமன், கோவணத்தினைச் சாத்தி அணிபவர்; பாசம் தடக் கையில் ஏந்துபவர்; தம் கூத்தவர்; கச்சு பொருந்தி ஆடுபவர்; கொக்கிறகு சூடுபவர்; பேய்ப் படை பல சூழப் பேர் எழில் ஆர்க்கக் காரணமானவர். அவரைத் துதிப்பீராக.

1265. காலது கங்கை கற்றைச்
சடையுள்ளாற் கழல்சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது
பாகம் வளர்கொழுங் கோட்டு
ஆலது ஊர்வர் அடலேற்று
இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர்
சிரபுர மேயவரே.

தெளிவுரை : சேல்போன்ற கண்ணுடைய உமையவனை ஒரு பங்குடையவராய்ச் சிரபுரம் மேவிய ஈசன் காலில், கழலும் சிலம்பும் அணிந்தவர். கற்றையாக உள்ள சடைமுடியில் கங்கை தரித்தவர்; மாலினைப் பாகமாகக் கொண்டவர்; மழு ஏந்தியவர்; வளர்ந்த செழுமையான கல்லால மர நிழலில் வீற்றிருப்பவர்; இடபத்தில் ஏறுபவர்; அவரை வணங்கி மகிழ்க என்றவாறு.

1266. நெருப்புரு வெள்விடை மேனியர்
ஏறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக்
காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை
யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற
வந்தணி புண்ணியரே.

தெளிவுரை : பெருமை மிக்க சிறந்த தவமுனிவர்கள் வாழ்கின்ற சிறப்பும், மலை போன்று உயர்ந்த மாளிகைகளும் விளங்கும் அழகிய புறவம் என்னும் நகரில் அணியாக விளங்கும் புண்ணியராகிய ஈசன், நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியர்; வெள்விடையேறுபவர்; நெற்றிக் கண் உடையவராகி வீரம் காட்டுபவர்; யானையின் கொம்புடைய விநாயகரின் தாதை; விரும்பி இலங்கும் பாம்பிற்குத் தன் மெய்யைக் காட்டி இருக்கச் செய்பவர்; மரமுருகன் தந்தை அவரை வணங்குக.

1267. இலங்கைத் தலைவனை யேந்திற்று
இறுத்தது குரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது
மாணி குமைபெற்றது
கலங்கினர் மொந்தையின் ஆடுவர்
கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள்
மேவிய தத்துவரே.

தெளிவுரை : நீர் வளம் பெருக்கும் வயல் வளம் மிக்க சண்பை நகரில் மேவிய உண்மைப் பெருளாகிய ஈசன், இராவணனை இறுத்துத் துன்புறுத்தி வலியிழக்கச் செய்து, கரத்தில் மானை ஏந்திச் காலனின் உயிரைக் கவர்ந்து, வாழ்நாள் இன்மையைக் குறித்துக் கலங்கிய மாணியை மீட்டு உயிர் தந்து. மொந்தை என்னும் பறையைக் கொட்டுவர்; சுடுகாட்டில் ஆடுவர். அப்பெருமானை வணங்குமின்.

1268. அடியிணை கண்டிலன் தாமரை
யோன்மால் முடிகண்டிலன்
கொடியணி யும்பலி யேறுகந்து
ஏறுவர் தோலுடுப்பர்
பிடியணி யும்நடை யாள்வெற்பு
இருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழில் காழியுள்
மேய கறைக்கண்டரே.

தெளிவுரை : நறுமணர் மிக்க பொழில்சூழ் காழியுள் மேய, கறை பொருந்திய கண்டத்தை யுடையவராகிய பெருமான், பிரமன் முடி கண்டிலராய்த் திருமால் அடி இடபத்தை வாகனமாக ஏறுவர்; புலியின் தோலை உடுப்பர்; பெண் யானை போன்ற நடையுடைய உமாதேவியைப் பாகமாக உடையவர்; கயிலை மலையில் வீற்றிருப்பர். அவரைத் தொழுவீராக.

1269. கையது வெண்குழை காதது
சூலம் அமணர்புத்தர்
எய்துவர் தம்மை யடியவர்
எய்தார் ஓர் ஏனக் கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்பது
உடுப்பது தேகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள்
மேவிய கொற்றவரே.

தெளிவுரை : மேன்மையான தகைமையுடைய மலர்கள் சூழ்ந்த பூம்பொழிலைக் கொண்ட கொச்சை வயம் என்னும் பதியில் மேவும் கொற்றவராகிய ஈசனார் கையில் சூலம் விளங்க, காதில் வெண்குழை இருக்க, அமணரும் புத்தரும் எய்தாதவராவர்; அடியவர்கள் எய்துவர். அப்பெருமான், ஏனக் கொம்பினை அணியாகக் கொண்டு மெய்யில் திகழும் கோவண ஆடையை உடுத்தி விளங்குபவர். அவரைத் துதிப்பீராக.

1270. கல்லுயர் கழுமல விஞ்சியுள்
மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்
ஞானத் தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை
வானவர் தங்களோடும்
செல்குவர் சீரரு ளாற்பெற
லாம்சிவ லோகமதே.

தெளிவுரை : கல்லால் ஆன மதில்களையுடைய கழுமல நகரில் மேவிய கடவுளை, நல்லுரை புகலும் ஞானசம்பந்தன், கடவுள் ஞானத்தை உணர்த்தும் தமிழால் நன்கு உணரச் சொல்லிய இத் திருப்பதிகத்தைச் சொல்லவும், சொல்லிக் கேட்கவும் வல்லவர்கள் தொன்மையாக விளங்கும் தேவர்களுடன் வதிந்து, பின்னர் தேவர்களும் புண்ணியத்தின் பயனை உற்றவராய் அவர்களுடன், புகழ் மிக்க ஈசன் அருள் தன்மையால் சிவலோகத்தையே பெறலாம்.

திருச்சிற்றம்பலம்

118. திருப்பருப்பதம் (அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் மாவட்டம் ஆந்திரா)

திருச்சிற்றம்பலம்

1271. சுடுமணி யுமிழ்நாகம் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி எழிலானை ஏறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கேட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : ஒளிவிடும் மாணிக்கத்தை உமிழும் நாகத்தை அரையில் கட்டி, எழில் மிக்க யானைமீது ஏறாது, இடபத்தின்மீது ஏறி, நீலகண்டனாய் நெடிய மலையின் மீது பிரகாசம் பொருந்தி விளங்கும் பருப்பதத்தைப் பரவுவோமாக.

1272. நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலம்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : நோய், சேர்ந்து, தோல் சுருங்கி, நரை வந்து நுகரும் உடம்பில் நெஞ்சமே ! நீ அடைய வேண்டியதை நினைப்பது பற்றிச் சிந்தித்துப் பார், வாயினால் தோத்திரங்கள் பாடி வணங்கி, புலித்தோல் உடையானின் பருப்பதத்தைப் பரவுதும்.

1273. துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
கனியுறு மறமேறிக்கருமுகக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை :  வினைத் துயர் நீங்க இவ்வுலகத்தில் பிறவி எடுத்ததன் பயனாய், இனி கொள்ளப்போகும் பிறவியைக் கருதி மனத்தைத் திரியச் செய்யற்க. கனிகள் தரும் மரத்தின்மேல் ஏறி மூங்கில்கள் அசையக் களிக்கும் கருங்குரங்குகள் சாரும் கதிர்ஒளி பரவும் பருப்பதத்தைப் பரவித் துதிப்பீராக.

1274. கொங்குஅணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோய் அகலநின்றான் எனவருள் ஈசனிடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : தேன் விளங்கும் வாசனை பொருந்திய கொன்றை மாலையும், கங்கை பொருந்திய சடையும் கொண்டவன், எங்கள் பிறவி நோயை நீக்குவதற்காக வீற்றிருப்பவன் எனச் சொல்லப்படும் ஈசனுடைய இடமாவது, மன்மதனை அழித்த இடபவாகனத்தை உடையவனாகிய, பரம்பொருளின் பருப்பதம் ஆகும். அதனைப் பரவித் துதிப்பீராக.

1275. துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலும் தேனினம் ஒலியோவாப்
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : புண்ணியத் தீர்த்தங்கள் பல ஆடி, தூய மலர்களைச் சுமந்து சென்று, வேதங்கள் இசைத்துப் போற்றவும், வானவர்கள் மகிழ்ந்து வணங்கவும், சிறகுகள் ஒலிக்கக் கிளியானது மொழியவும், வண்டுகள் ரீங்காரம் செய்யவும், அருவிகள் விழும் ஒலியானது பறை கொட்டுவது போன்று அதிரவும், விளங்குகின்ற பருப்பதம் சென்று, ஈசனைப் போற்றுவீராக.

1276. சீர்கெழு சிறப்புஓவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே இரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம்வகையால்
பார்கெழு புக÷ழுõவாப் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : புகழ் மிக்கதும், சிறப்பு அகலாது செய்யப் படும் தவநெறி வேண்டுதிர் ஆயின், நெஞ்சமே ! மனத்தின்கண் வேறுபாடின்றி ஒன்றிய நிலையில் கொன்றை சூடும் கடவுளின் இடம் என்னும் வகையில் பெருகும் புகழுடன் விளங்கும் பருப்பதத்தைப் பரவி ஏத்துமின்.

1277. படைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : நல் வேள்வி புரிதலை யொட்டி எழும் புகையும் தாமரை மலரின் நறுமணமும் பரவத் தொடுக்கப்பெற்ற மலர்மாலை திருமுடியில் திகழ, இடபக் கொடி ஏந்தி, திருவெண்ணீறு அணிபவனாகியும் மழுப் படையுடையவனாயும் விளங்கும் ஈசன் பருப்பத்ததைப் பரவித் தொழுமின்.

1278. நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந்து அடையாமைக்
கனைத்தெழு திரள் கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரன் பாய்அருவிப் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : நெடுங் கிணற்றை நெடிது நோக்கி நோக்கி அச்சம் கொண்டு அயர்தலைப் போன்று, நெஞ்சில் தோன்றும் பலதரப்பட்ட எண்ணங்கள் அவலத்தை உண்டாக்கும். ஆதலினால் மனத்தைக் கட்டுப்படுத்தி வலித்து அடக்கி அவலத்தை விட்டொழிந்தேன். உம்மை துன்பமானது அடையாதிப்பதற்கு, ஒலித்துத் திரண்டு எழும் கங்கையைக் கமழ்கின்ற சடையில் தரித்தவனின் பருப்பதத்தைப் பரவிப் பணிவீராக.

1279. மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்
திருஉரு அமர்ந்தானும் திசைமுகம் உடையானும்
இருவரும் அறியாமை எழுந்ததோர் எரிநடுவே.
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : ஊழ்வினையின் காரணமாக இப்பிறவியில் பற்றுக் கொண்டிருக்கும் கொடிய வினையாகிய பிணியால் துன்பம் அடையாமல் இருக்கும் நிலைக்குத் திருமாலும் பிரமனும் அறியப்படாதவராய் விளங்கிய சோதி வடிவான ஈசன் விளங்கும் பருப்பதத்தைப் பரவித் தொழுக.

1280. சடம்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடம்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடம்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சாரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

தெளிவுரை : அறிவு சார்ந்த பொருள்களைப் புகலாத சாக்கியர் மற்றும் சமணர்களின் சொற்சாத்திரங்களை விரும்பி, பேதையர்களாய் மயங்கிக் கானல் நீர் போன்று தோன்றும் காட்சியில் பதிந்து யாரேனும் சொல்வார்களோ ! சொல்ல மாட்டார்களோ. யானையை உரித்துப் போர்வையாகக் கொண்டவனாகிய ஈசனின் பருப்பதம் பரவும் அடியவர்கள் நன்மை பெறுவார்கள்.

1281. வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம்ப பந்தனல்ல
ஒண்சொலின் இவை மாலை உருஎணத் தவம்ஆமே.

தெளிவுரை : பண்ணிசையால் பாடல்கள் இசைக்க வல்ல பருப்பதத்தை, வெண்மையாகவும் செம்மையாகவுமுள்ள நெல் விளையும் கழனிகளும், திருவிழாக்களும் உடைய கழுமல நகரினனாகிய, நற்சொற்களால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல ஞானத்தால் இனிமையாகச் சொல்லப்பட்ட இத்திருப்பதிகத்தை மன்னம் செய்து எண்ண, தவமானது கைகூடும். தவத்தின் பயனைத் தரும் என்றவாறு.

திருச்சிற்றம்பலம்

119. திருக்கள்ளில் (அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம், திருவள்ளூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1282. முள்ளின்மேல் முதுகூகை முரலும்சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளைந்த
கள்ளின்மே யஅண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே.

தெளிவுரை : முட்கள் பொருந்திய கூகைகள் ஒலி செய்யும் சோலை உடையதும், வெள்ளை வண்ணம் கொண்ட வீடுகளில் துகில்களால் ஆன கொடிகள் திகழும் திருக்கள்ளில் என்னும் நகரில் விளங்கும் அண்ணலாகிய எந்தை ஈசனார் திருவடியை, நாள்தோறும் நினைத்து வணங்கி நிற்க, உயர்வு அடைதல் உறுதியாகும்.

1283. ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடுஅலாற் கலன்இல்லான் உறை பதியால்
காடுஅலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடுஎலாம் பெரியார்கள் பரசுவாரே.

தெளிவுரை : ஆடலும் பாடலும் விரும்பி அரவங்கள் பூண்டு திருவோட்டைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு, சுடுகாட்டினை இடமாக உடைய ஈசன், கள்ளில் எனும் பதியில் விளங்கி நிற்க, அப் பெருமானைப் பெருமக்கள் பெருமையாய்ப் போற்றித் துதிப்பர்.

1284. எண்ணார்மும் மதில்எய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின்மேயான்
பெண்ணாணாம் பெருமான்எம் பிஞ்ஞ கனே.

தெளிவுரை : நன்மை எண்ணாத பகைவரின் மூன்று மதில்களை நெருப்புக் கணைகொண்டு எய்து எரித்த, இமையாத மூன்று கண்ணுடையவனும், பண்விளங்கும் நான்கு மறைகளைப் பாடும் பரமயோகி கண்ணார நீறு அணி மார்பினராகிக் கள்ளில் என்னும் பதியில் மேவிப் பெண்ணும் ஆணும் ஆகிய பரமன், எம் பிஞ்ஞகனே.

1285. பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண்டு ஆலும்
நறைபெற்ற வரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே.

தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சூடிய சடையுடைய எம் அண்ணல், பெண் வண்டு ஒலி செய்து, தேன் பெற்ற கொன்றை மாலையை விரும்பிய நீல மணிமிடற்றண்ணலாய்க் கள்ளில் என்னும் நகரில் மேவி, நிறைவாகத் துதிக்கும் அடியவர்கள் நெஞ்சில் விளங்கி நிற்பவர்.

1286. விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர்கொள்ள ஊரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக்கள்ளின் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல்தானே.

தெளிவுரை : சிறப்பான பெரிய கரைகளையுடைய தூய நீர்நிலைகளைக் கொண்ட, கள்ளில் என்னும் நகரில் மேவி, அரையில் வெண்கோவண ஆடை துருக்கம், தகரம், அகில், சந்தனம் ஆகிய ஐவகை விரையாலும், கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய நான்கு வகையான மலராலும், விழுமை குன்றாத வேத உரைகளாலும் எதிர் கொள்ளுகின்றனர்.

1287. நலனாய பலிகொள்கை நம்பால் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளின்மேயான்
மலனாய தீர்த்து எய்து மாதவத்தோற்கே.

தெளிவுரை : நம்பால் நலன்கள் வினையும் தன்மையில் பலி ஏற்கும் கொள்கையனாய் வலிமை மிக்க மழுவும் சூலமும் கொண்டு விளங்குபவனாகிய ஈசன், வல்லவனாகிய பிரமனின் தலையை ஓடாகக் கொண்டவன். அப்பெருமான், கள்ளில் என்னும் பதியில் மேவி, மும்மலங்களைத் தீர்க்கும் அருளைப் புரிகின்றான். தவம் உடையவர்கள் அதனை எய்துகின்றனர்.

1288. பொடியார்மெய் பூசினும் புறவின் நறவம்
குடியாவூர் திரியினும் கூப்பி டினும்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார் பண்பு இகழ்வார்கள் ஆதர்களே.

தெளிவுரை : மணம் பொருந்திய சோலைகள் சூழும் கள்ளில் என்னும் பதியில் மேவும் ஈசனின் அடியவர்கள், திருவெண்ணீறு பூசி நற்கோலத்தில் காட்சி தந்தாலும், காட்டியல் தோன்றும் தேன் குடித்து ஊரில் திரிந்தாலும், கைகளைக் கூப்பித் தொழுதாலும், ஆக எத்தன்மையில் இருக்க நேர்ந்தாலும் அவர்களை இகழ்பவர்கள், கீழ்மக்கள் ஆவர்.

1289. திருநீல மலர்ஒண்கண் தேவி பாகம்
புரிநூலும் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளில் என்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.

தெளிவுரை : ஒளிமிக்க நீல மலர்போன்ற கண்களை உடைய உமையவனை ஒரு பாகம் கொண்டு, முப்புரிநூலும், திருவெண்ணீறும் மார்பில் பெருந்தித் திகழ, கருநீல மலர் பெருகும் கள்ளில் என்னும் பதியில், எக்காலத்திலும் நீல மிடற்றுடைய ஈசன் பேரண்ணலாய் விரும்பி வீற்றிருக்கின்றனர்.

1290. வரியாய மலரானும் வையம் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்குஅங்கு
அரியானும் அரிதாய கள்ளின் மேயான்
பெரியான்என்று அறிவார்கள் பேசுவாரே.

தெளிவுரை : அழகியதாகிய தாமரையில் விளங்கும் பிரமனும், உலகத்தைக் காக்கும் தொழில் மேவும் தன்மையில் உரிமை தோன்றியவாறு அளந்த திருமாலும், நினைப்பதற்கு அரியவனாய் வீற்றிருப்பவன் சிறப்பின் மிக்க கள்ளில் என்னும் நகரில் மேவிய பெருமான், என்று அறிஞர்கள் பேசுவர்.

1291. ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணுமின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந்துஅடியே.

தெளிவுரை : நகைப்பிற்கு இடமளிக்கும் சமணர் முதலானோர் பேச்சுக்கள் நெறியற்றவையாகும். வளம் மிக்க வயல்கள் பெருகும் பெருமைøயான கள்ளில் என்னும் நகரில் விளங்கும் சிவந்த சடையுடைய அண்ணலாகிய ஈசன் திருவடியைப் பேணித் துதிப்பீராக.

1292. திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல
முகை மேவு முதிர்சடையன் கள்ளில் ஏத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.

தெளிவுரை : நான்கு திசைகளிலும் புகழ் மல்கும் காழியின் செல்வம் பெருகவும் சூரியனைப் போன்ற பேரொளி படைத்த ஞானசம்பந்தன், நல்ல மணம் தரும் மலர் போன்ற சடையுடையவனாகிய ஈசன் வீற்றிருக்கும் கள்ளில் என்னும் நகரை ஏத்திப் பாடிய இத் திருப்பதிகத்த ஓத வல்லவர்கள், புகழும் பேரின்பமும் அக்கணமே வாய்க்கப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

120. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1293. பணிந்தவர் அருவினை பற்றறுத்து அருள்செய்த
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழில் ஆமைகொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : அடியவர்கள்பால் பற்றியுள்ள வினையை நீக்கி அருள் செய்த பரமன், தோலுடை தரித்து, முப்புரி நூல் பொருந்திய மார்பில், அரவமும் ஆமையின் ஓடும் அணிந்தவன். அப் பெருமானின் வளநகர் என்பது, அழகிய குளிர்ச்சி மிக்க ஐயாறு ஆகும்.

1294. கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடன்அடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியதன் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : ஈசன், கீர்த்தி மிக்கவன்; பகைத்துக் கிளர்ந்து, எழுந்த முப்புரத்தை நெருப்பில் எரியுமாறு நோக்கியவன்; குளிர்ந்த சந்திரனை விரிந்த சடையில் வைத்தவன்; யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவன்; புலியின் தோலையும் அரவததையும் அரையில் கட்டியவன். அப்பெருமானுடைய அழகிய குளிர்ச்சி பொருந்திய வளநகரானது ஐயாறு ஆகும்.

1295. வரிந்த வெஞ்சிலை பிடித்து அவுணர்தம் வளநகர்
எரிந்துஅற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : வரிக்கப் பெற்ற மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்கள் எரிந்து சாம்பலமாகுமாறு சினந்தவனாகிய ஈசனார், எழில் திகழும் தாமரை மலரோனாகிய பிரமனின் ஐந்து சிரங்களில், ஆணவத்தோடு கூடிய உச்சி நோக்கிய சிரத்தினைத் தேவர்களுடைய குறை தீருமாறு கொய்தவர். அப்பெருமானுடைய வள நகரானது குளிர்ச்சி பொருந்திய ஐயாறு ஆகும்.

1296. வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
மாய்ந்துஅற வெய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொல்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : முப்புரத்தை எரித்த ஈசன், வளர்கின்ற சந்திரனும், பெருக்கெடுத்தோடும் கங்கையும் சடையும் உடையவன்; வேதமும் அதன் அங்கங்கள் ஆறும் ஆய்ந்தவன். அவன் வளநகர் ஐயாறு ஆகும்.

1297. வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மான்அன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : வானத்தில் விளங்கும் சந்திரனைச் சடையில் வைத்து, அதன் இடையில் அரவமும், கொன்றை மலரும் திகழ விளங்கும் மார்பினனாய், மான் போன்ற விழியுடைய உமையவனை ஒரு பாகத்தில் உள்ளவனின் வளநகரானது, ஐயாறு ஆகும்.

1298. முன்பனை முனிவரோடு அமரர்கள் அடிதொழும்
இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
என்பொனை ஏதமில் வேதியர் தாம் தொழும்
அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : யாவர்க்கும் முன்னவனாய் விளங்கும் பழைமையானவனை, முனிவர்களும் தேவர்களும் அடிதொழும் இன்பப் பொருளாகியவனை, இணையில்லா இறைவனாய் உள்ளவனை, எழில் திகழும் என் பொன்போன்ற அழகிய உயர்ந்த பொருளாகியவனை, வேதவிற்பன்னர்கள் தொழும் அன்பனாகிய ஈசனை உரிமையாக உடைய திருத்தலம், ஐயாறு.

1299. வன்திறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : கொடிய அசுரர்கள் நகரை, எரியின் வளம் பெருகுமாறு வெந்து சாம்பலாக்கித் தீய்த்த ஈசன், உமையவளைப் பாகம் கொண்டு அழிவில்லாத நிலையாய் வீற்றிருக்கும் வளநகரானது, ஐயாறு ஆகம்.

1300. விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை எடுத்தலும்
அடித்தலத் தால்இறை ஊன்றிமற்று அவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : செருக்கினால் சினங்கொண்ட கொடிய அரக்கனாகிய இராவணன், நன்மை வழங்கும் கயிலை வெற்பினை எடுத்தலும், திருப்பாதத்தால் சிறிது ஊன்றி அரக்கனது கிரீடம் கொண்ட தலையும், தோளும் துன்புற்று வருந்துமாறு அடர்ந்த ஈசன் வளநகரானது, ஐயாறு ஆகும்.

1301. விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோன்நல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : எண்ணற்ற தேவர்களுடன் சூரியன், இந்திரன் முதலானோர் வழிபடவும்; திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரிதாகிய அண்ணலாகிய ஈசனுடைய வளநகர் குளிர்ச்சி பொருந்திய ஐயாறு ஆகும்.

1302. மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை அடிகள்தம் அந்தண் ஐயாறே.

தெளிவுரை : மருள் உற்ற மனத்தினராகிய சமணர்கள் மாசு நீங்கப் பெறாது ஒரு புறத்தே நிற்க, தெளிந்த மனத்துடையீர் ! அருள் தரும் அடிகள் ஐயாற்றில் வீற்றிருப்பவர் என்று திண்ணமாகக் கொள்வீராக.

1303. நலமலி ஞானசம் பந்தனது இன்தமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்
கலைமலி தமிழ்இவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையார் தாமே.

தெளிவுரை : நலம் மிக்க ஞானசம்பந்தனது இனிய தமிழால், நீர் வளம் மல்கும் ஐயாற்றைச் சிவஞானம் மிக்க தமிழ்ப் பதிகமாக அருளிச் செய்ய, இதனைக் கற்று வல்லவர் ஆனவர்கள் நலங்கள் பெருகவும், புகழ் மிகுந்து ஓங்கவும் யாவர்க்கும் நன்மை செய்பவராயும் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

121. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1304. நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழ்ல்எழ மழுவல பகவன்
புடைமருது இளமுகில் வளம்அமர் பொதுளிய
இடைமருது அடையநம் இடர்கெடல் எளிதே.

தெளிவுரை : ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்கு நகர்ந்தும் பறந்தும் இயங்கித் தீமை விளைவித்த திரிபுரமானது, எரியுண்டு சாம்பலாகுமாறு நகை செய்து, அதனையே படையாக்கித் தழல் எழுமாறு ஆக்கி, மழுப் படையை வலக்கரத்தில் ஏந்திய இறைவன் இடைமருதினைச் சென்றடைய நம் இடரானது எளிதில் கெடும்.

1305. மழைநுழை மதியமொடு அழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடம்இடை மருதே.

தெளிவுரை : மேகங்களின் ஊடே செல்லும் சந்திரனும், பிரம கபாலமும், கங்கையுடைய சடையும் கொண்டு, குழையணிந்த செவியுடன் முப்புரி நூல் விளங்க மேவும் ஈசன் இடமானது, இடை மருது ஆகும்.

1306. அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடையணல் இடம் இடை மருதே.

தெளிவுரை : ஈசன், அரியனாகவும், எளியனாகவும், நீலமணியைக் கண்டத்தில் உடையவனாகவும், பெருமையான ஒளிமிக்க சடையுடையவனாகவும் விளங்குபவன், பெரிய அண்டமாகி யாவற்றுக்கும் பெரியவனாகவும், யாவற்றுக்கும் சிறிய நுண்பொருனாயும் விளங்கும் அப்பெருமான், பிணைத்துத் தம் அங்கத்தில் ஒரு கூறாக உள்ள தேவியுடன் சேர்ந்து அர்த்தநாரியாகவும், சிவன்சக்தி என இரு வடிவமாயும் உடைய அண்ணல். அவனுடைய இடம் இடை மருது ஆகும்.

1307. பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி ஒளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடம்இடை மருதே.

தெளிவுரை : நரிகள் சூழும் சுடுகாட்டில் நடம் புரிபவனாகிய ஈசன், அழகிய கலைகள் பெருகும் குளிர்ந்த சந்திரனின் ஒளியைப் பெருகச் செய்யுமாறு, ஒளியை வழங்கும் சோதி வடிவான சிவந்த சடையுடைய அண்ணல் ஆவர். அவர் வீற்றிருக்கும் இடம் இடை மருது ஆகும்.

1308. வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையினை பிணைசெய்த பெருமான்
செருநல மதில்எய்த சிவன்உறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடம்இடை மருதே.

தெளிவுரை : மயில் போன்ற சாயலும், அன்னம் போன்ற நடையும் கொண்ட மலைமகள் உடனாக விளங்கச் செய்த பெருமான், முப்புரத்தை எரியுமாறு செய்த சிவன், அவன் உறையும் செழுநகர் இம்மை, மறுமை ஆகிய இருவகை நலத்தின் புகழ் மல்கும் இடைமருது ஆகும்.

1309. கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனைஇடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலன்என மழுவினோடு
இலையுடை படையவன் இடம்இடை மருதே.

தெளிவுரை : கலை வண்ணம் உடைய ஆடையும், அகிலின் புகை கமழும் கூந்தலும் உடைய உமையவனை இடப்பாகத்தில் கொண்ட ஈசன், விலை மதிப்புள்ள அணிகளைக் கொள்ளாது, மழுவும் சூலப்படையும் கொண்டுள்ளான். அப்பெருமானின் இடம், இடைமருது ஆகும்.

1310.வளம்என வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை இசைசெயும் இடைமருது
உளம்என நினைபவர் ஒலிகழல் இணையடி
குளம்அணல் உறமூழ்கி வழிபடல் குணமே.

தெளிவுரை : இடை மருது என்னும் திருத்தலமானது வளமுடையது என்றும், நாம் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்றும், அழகிய பறவைகள் மற்றும் வண்டுகள் அணைந்து ஒலித்து இசைக்க, அத்தகைய தலத்தில் உள்ளோம் எனும் மகிழ்ச்சியுடன் உள்ள மக்கள், ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த ஈசன் திருவடியை நினைத்துத் திருக்குளத்தில் கழுத்தளவு படிந்து மூழ்கி நீராடி வழிபடுவது சிறப்பாகும். (புனித தீர்த்தத்தில் நீராடும் சிறப்பு உணர்த்தப் பெற்றது)

1311. மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடம்இடை மருதே.

தெளிவுரை : ஈசனை, வேதநாயகன், உலகமே அவனாகியவன், அறிவு ஆனவன், சந்திரனைச் சூடியவன் என்று சொல்லவல்ல அடியவர்கள், துயர் அற்றவர் ஆவர். நீலகண்டத்தை உடையவனாகத் தழல் போன்ற சிவந்த சடையுடைய இறைவனாகிய அப்பெருமான் உறையும் இடமானது, இடை மருது ஆகும்.

1312. மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொடு இகலினர் இனதுஎனக்
கருதிடல் அரியதொரு உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடம்இடை மருதே.

தெளிவுரை : மருத மரத்தின் இடையில் உரலோடு நடைபயின்ற மணிவண்ணனாகிய திருமாலும், பிரமனும் பூமிக்கடியிலும் மேலே வானத்தை நோக்கியும் இருபக்கங்களிலும் அகன்று சென்று தேடியும், இன்னது எனக் கருதுவதற்கு இயலாது நிற்கப் பேருருவாகிய ஈசன், இடப வாகனத்துடன் விளங்கும் இடமானது, இடை மருது ஆகும்.

1313. துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர்உறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதுஎழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.

தெளிவுரை : நீண்ட துவராடை கொண்ட பௌத்தரும், சமணரும் கூறும் சிறுமையான சொற்களைக் கொள்ளற்க. இடை மருது உறையும் நாதனைத் தொழுபவர்கள் தாம் உற்ற வினையிலிருந்து நீங்கப் பெறுவர்.

1314. தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை இசைசெய்த
படமலி தமிழ்இவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.

தெளிவுரை : தமிழ் விரும்பியவனாகிய புகலியின் ஞான சம்பந்தன், இடை மருதினை இசைத்த இத் திருப்பதிகத்தைப் பரவிப் பாட வல்லவர்கள், வினை யாவும் கெட, புகழும் ஒளியும் பெற்றவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

122. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1315. விரிதரு புலியரி விரவிய அரையினா
திரிதரும் எயிலவை புனைகணை யினில்எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக உளதே.

தெளிவுரை : ஈசன், புலித் தோலை ஆடையாகக் கொண்டவர்; முப்புரத்தை எரித்தவர்; நெருப்புப் போன்ற சிவந்த சடைமுடி உடையவர். அப்பெருமான் வீற்றிருக்கும் இடைமருதினை அடைய வேண்டும் என்று நினைக்கும் மனம் உடையவர்களுக்கு மிகுந்த புகழ் உண்டு.

1316. மறிதிரை படுகடல் விடம்இடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமருது எனுமவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறும்உடல் பெறுகுவது அரிதே.

தெளிவுரை : கடலில் தோன்றிய விடத்தை மிடற்றின் இடையில் வைத்த ஈசனுடைய இடமானது, இடைமருது என்று சொல்பவர்கள் மூப்பினை உணர்த்தும் நரை, திரை ஆகியவற்றை நீத்தவராயும், உலகினில் மறுபிறவி கொண்டு உடல் வளர்க்கும் நிலையும் அற்றவராயும் திகழ்வர். மீண்டும் பிறவாமைøயாகிய செல்வம் வாய்க்கப்பெறும் என்பதாம்.

1317. சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
இலர்என இடுபலி யவர்இடை மருதிணை
வலமிட உடல்நலிவு இலதுள வினையே.

தெளிவுரை : சலசல என்று சொரியும் கங்கையைச் சடையில் கொண்ட ஈசன், மலைமகளை ஒரு பாகமாக உடையவர்; நிறைவாகிய வேத மொழியினர்; பலிஇடுமின் என்று யாசிப்பவர். அவர் வீற்றிருக்கும் இடைமருதை வலம் வருதலானது, உடல் நலிவைத் தீர்த்து, வினை அற்றதாக்கும்.

1318. விடையினர் வெளியதொர் தலைகலன் எனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிடல் அரியவர் இடைமருது எனுநகர்
உடையவர் அடியிணை தொழுவதுஎம் முயர்வே.

தெளிவுரை : ஈசன், இடப வாகனத்தினர்; பிரம கபாலம் ஏந்தி உண்கலனாகக் கொண்டு வீதிதோறும் சென்று பிச்சை விழைபவர்; மன்னுயிர்களால் இடையறாது தியானிக்கப்படுபவர்; இடைமருது என்னும் நகருக்கு உரியவர். அவர்தம் இணையடியைத் தொழுவது, எமக்கு உயர்வைத் தரும்  இம்மையில் புகழும் மறுமையில் முத்திப்பேறும் ஆகும் என்பதாம்.

1319. உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
இரைமரும் அரவினர் இடைமருது எனஉளம்
உரைகள்அது உடையவர் புகழ்மிக உளதே.

தெளிவுரை : ஈசன், உரைகளால் விளக்கிக் கூறமுடியாதவாறு திருவடிவத்தை உடையவர்; மனத்தால்  சிந்தனையால், உணர்ந்து கொள்வதற்கு அரியவர்; அரையில் புலியின் தோலை ஆடையாக உடையவர்; புலித்தோலடையின் மேல் அரவத்தைக் கட்டியுள்ளவர். அப்பெருமான் விளங்கும் இடைமருது என உள்ளத்தால் ஒன்றி உரைத்துத் தியானம் செய்பவர்களுக்கு, மிக்க புகழ் உண்டாகும்.

1320. ஒழுகிய புனல்மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடியுடை அடிகளது அறைகழல்
எழிலினர் உறைஇட மருதினை மலர்கொடு
தொழுதல்செய்து எழுமவர் துயர்உறல் இலரே.

தெளிவுரை : ஒழுகும் புனலாகிய கங்கையும், சந்திரனும் அரவமும் உறையும் அழகிய சடை முடியுடைய அடிகளின் கழலினையும், அவ் எழிலினாரின் உறைவிடமாகிய இடை மருதினையும், மலர்கொண்டு தொழுபவர்களுக்குத் துயர் இல்லை.

1321. கலைமில விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடம்இடை மருதே.

தெளிவுரை : ஈசன், கலைத்தன்மை மிக்கு தோன்ற வீணை மீட்டிய விரலையுடையவர்; மழுப்படை உடையவர்; கங்கை உலவிய சடையுடையவர்; மலைமகளை மருவிய வடிவத்தை உடையவர்; சூலப்படை உடையவர். அவருடைய இடமானது இடைமருது ஆகும்.

1322. செருவுஅடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினில்ஒரு பதுமுடி நெரிதர
இருவகை விரல்நிறி யவர்இடை மருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.

தெளிவுரை : போர் செய்யும் தன்மையின்றி, வலிமை செய்யும் திறத்துடன் திண்ணிய மலையை எடுத்த அரக்கனின் உடல் வலிமையும் உள்ளத்தின் செருக்கும் கெடுமாறு, திருப்பாத விரலால் நிறுத்தியவராகிய ஈசனார் வீற்றிருக்கும் இடைமருதினைப் பரவித் தொழுபவர்கள், அருவினையானது நீங்குதல் பெரிதாகுமோ ! வினை நீங்குதல் எளிது என்பது குறிப்பு.

1323. அரியொடு மலரவன் எனஇவர் அடிமுடி
தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவுறல்
புரிதரு மனனவர் புகழ்மிக உளதே.

தெளிவுரை : திருமாலும் பிரமனும் அடிமுடி தெரியாத வகையில் அரியவராகிய ஈசனார் திருவடியைத் தொழுது எழ, சோதி வடிவாகிய அப்பெருமானுடைய இடை மருது நகரை அடைதல் வேண்டும் என்னும் மனத்தை உடையவர்கள், புகழ் பெறுவர்.

1324. குடைமயி லினதழை மருவிய உருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதுஎழு கழலவர்
இடைமருது எனமன நினைவதும் எழிலே.

தெளிவுரை : குடையும், மயிற் பீலியும், மருவிய துவர் ஆடையும் கொண்டவர்கள் பல சொற்களைப் புறம்பாகக் கூற, அவற்றை உற்றவையாகக் கொள்ளற்க. திருவுடைய சீலர்களாய்த் தொழுது எழும் கழலையுடைய ஈசன் வீற்றிருப்பது, இடைமருது என மனத்தில் நினைப்பது எழில் ஆகும்.

1325. பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவர்இடர்
விரவிலர் வினையொடு வியன்உலகு உறவே.

தெளிவுரை : கடற்கரையின் அடைவு தரும் புகலியில், தமிழ் விரும்பியவனாகிய ஞானசம்பந்தர், பொழில் திகழ் இடை மருது தலத்தைப் பரவிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு, இடர் என்பது இல்லை; வினையில்லை; பெருமை மிக்க தேவர் உலகு வாய்க்கப் பெறும்.

திருச்சிற்றம்பலம்

123. திருவலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1326. பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு உடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை இறையே.

தெளிவுரை : மலர்களால் பின்னப்பட்ட சுருண்ட கூந்தலும், அழகிய வில் போன்ற நெற்றியும் அம்பினையொத்த விழியும் கொண்ட உமையவள், பாகத்தில் பொருந்திய திருவடிவத்தை உடையவனாகிய ஈசன், நறுமண மலர் சிறப்பாக விளங்கும் பொழிலையுடைய வலிவலத்தில் உறையும் கடவுள்.

1327. இட்டம தமர்பொடி இசைதலில் நசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு உடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை இறையே.

தெளிவுரை : விருப்பத்துடன் திருநீறு இசைய அணிந்த, சிவந்த திருமேனியுடையவராகிய ஈசன், பட்டு அணிந்த பவளம் போன்ற திருவுடையவராய், மணம் பொருந்திய பொழில்சூழ் வலிவலத்தில் உறைகின்ற இறைவர் ஆவர்.

1328. உருமலி கடல்கடை வுழிஉலகு அமர்உயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலைமணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலம்உறை இறையே.

தெளிவுரை : பாற்கடலைக் கடைந்தபோது, உலகத்தின் உயிர்கள் யாவும் அஞ்சுமாறு எழுந்த விடத்தை வெள்ளி மலையில் கருமணி ஒளிர்வதைப் போன்று, தன் சிவந்த திருமேனியில் கறை கொள்ள மிடற்றில் தேக்கி, நீலகண்டனாய் விளங்கும் ஈசன், மணம் திகழ் பொழில்கள் நெருங்கித் திகழும் வலிவலத்தின்கண் உறையும் இறைவனாகும்.

1329. அனல்நிகர் சடையழல் அவியுற எனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரும் இதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை இறையே.

தெளிவுரை : அனலை நிகர்த்த சடையின் அழலைக் குளிரச் செய்யும் காட்சியைப் போன்று, கங்கையானது மிகுந்து தோன்றவும், அதில் விளங்கும் அரவமும், மதியை விழுங்க நோக்கவும், இதன் இயல்புகளைக் கண்ட ஈசன், அச்சிந்தையுடையவராய் விளங்குபவர். அவர் வலிவலத்தில் உறையும் கடவுள் ஆவர்.

1330. பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.

தெளிவுரை : உமாதேவி பெண் யானை வடிவம் கொண்டு மேவ, ஆண் யானை வடிவம் தாங்கி, அடியவர் தம் இடம் போக்கும் கணபதிநாதன் தோன்றுமாறு அருள் புரிந்த ஈசன், மிகுந்த வள்ளல் தன்மை மிக்க சிறந்வர் வாசம் புரியும் வலிவலத்தில் உறைகின்ற இறையாவார்.

1331. தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழல்உமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுஅரு னினன்எழில்
வரைதிகழ் மதில்வலி வலம்உறை இறையே.

தெளிவுரை : பூவுலக முதல்கொண்டு உலகம்  யாவையும் உயிர்கள் போகியாய் நிற்றல் பொருட்டு, உமாதேவியோடு விரவி இருந்து, தன்னைத் தொழுபவர்களுக்கு நரை திரை முதலானவை கெடுமாறு அருள் புரிபவன், எழில் மிக்க மதில்களையுடைய வலிவலம் என்னும் பதியில் உறைகின்ற இறைவன்.

1332. நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலம்உறை இறையே.

தெளிவுரை : தரையில் நடந்து செல்லுதற்கும் அரியவராய் மென்மையான இடையை உடைய மாதர்கள் மனை சென்று பிச்சையேற்க வருபவன், எழில் மிக்க தொழில் பெருகவும் வலிவான மதில் உடையதும் ஆகிய வலிவலத்தில் உறையும் இறைவன் ஆவார்.

1333. இராவணன் இருபது கரம்எழில் மலைதனில்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை இறையே.

தெளிவுரை : இராவணன், தனது இருபது கரங்களைக் கொண்டு எழிலார்ந்த கயிலை மலையை இல்லாத வண்ணம் (இராவணம்) நினைத்துப் பெயர்க்க, அவன் முடியைப் பொடியாக்கி நசித்து, அவன் கலங்கி அழ, இராவணன் என்னும் பெயரானது விளங்குமாறு (இராவணன்  அழுதவன்) செய்து அருளித் திருப்பாதத்தின் நுனியால் வருத்தி, இரந்து (இரவு கொண்டு) அணைந்து வேண்டும் அடியவர்க்கு அருள் புரிபவன். வலி வலம் உறையும் இறைவன்.

1334. தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி அடிமுடி
தான்அணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை இறையே.

தெளிவுரை : தேனமர் தாமரையில் உறையும் பிரமனும், வலிமை மிகுந்த ஏனமாய் நிலம் அகழ்ந்த திருமாலும், அடி முடி காணாதவராய் விளங்கிய ஈசன், உயர்ந்த மதில்களை உடைய வலிவலத்தில் உறையும் இறையே.

1335. இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை உருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை இறையே.

தெளிவுரை : துவராடை கொண்ட பௌத்தர்களும், உணவினைப் பொருட்டாக உடையவர்களும், பகர்தலை விடுமின். வேதம் தேடித் தொடரும் தன்மையனாய் மதில் சூழந்த வலிவலம் மேவிய இறைவனை ஏத்துமின்.

1336. மன்னிய வலிவல நகருறை இறைவனை
இன்னியல் கழுமல நகரிறை எழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

தெளிவுரை : சிறப்பு மிக்க வலிவல நகரில் உறையும் இறைவனை, இனிய இயல்கொள்ளும் கழுமல நகர் இறையின்  எழில் மறையின் ஞானம் வல்ல தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன், நினைத்து ஓதிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்களுக்கு உயர்ந்த பொருள் கைகூடும்.

திருச்சிற்றம்பலம்

124. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1337. அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர்
நலமலி உருவுடை யவர்தகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : மலர் போன்ற கூந்தலையுடைய உமையவளைத் தனது இடப்பாகத்தில் கொண்டு மகிழும் நல்ல வடிவம் பொருந்தி ஈசன் விளங்கும் நகரானது, பூவுலகில் மிக்க புகழைக் கொண்ட மிழலையாகும். அதனை நினைக்க வல்லவர்கள், மலர்மீது வாசம் புரியும் திருமகளின் அம்சமாக, உலகில் செல்வம் மிக்கு விளங்குவார்கள்.

1338. இருநிலம் இதன்மிசை எழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளது மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : பிறப்பின் வயப்பட்டு கன்மத்தை நுகரும் தன்மையால் விளங்கும் புவியாக உள்ள இந்த உலகத்தில் இருளற்ற மனத்தினராகிய ஞானிகளும் தேவர்களும் தொழுது எழும் சிறப்பினை உடைய மிழலையை நினைத்து வணங்குபவர்கள், உலகில் எழில் மிக்க வடிவழகு உடையவராவர்.

1339. கலைமகள் தலைமகன் இவன்என வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : கங்கையும், அரவமும், மண்டை ஓடும், கொன்றை மலரும் பொருந்திய சடையும் உடைய ஈசன் நிலைபெறும் மிழலையை நினைத்து வணங்குபவர்கள், கலைமகள் தலைவராகிய பிரமனைப் போன்று கல்வி மிக்கவர் ஆவர்.

1340. மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுகள் அவைமுழ வொடுமிசை
பாடலில் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : சுடுகாட்டில் பேய்கள் முழவும், பாடலும் இசைக்க, நடம் புரியும் பெருமான், உலகில் நெடிது விளங்கும் மிழலையை, நினைக்க வல்லவர்கள் சுற்றங்கள் சூழ அன்பு மிக்கவராய் விளங்குவார்கள்.

1341. புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை எழில்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : உமாதேவியை இகழந்த பிரமனுடைய ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்த பெருமானாகிய ஈசன் வீற்றிருக்கும் மிழலையை நினையவல்லவர்கள் புகழுடன் விளங்குவார்கள்.

1342. அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினில்எரி
சென்றுகொள் வøகிறு முறுரல்கொடு ஒளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : திரிபுரமானது ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகுமாறு, சென்று அடையும் தன்மை கொண்ட சிறு முறுவல் செய்து, ஒளி பெற நின்றவனாகிய ஈசனது மிழலையை நினைய வல்லவர்கள், பகைவர்களுக்குச் சிங்கமள் போன்று கம்பீரமாக எதிர் நின்று விளங்குவார்கள்.

1343. கரம்பயில் கொடையினர் கடிமலர் அயனதொர்
சிரம்பயில்வு அறஎறி சிவன்உறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : மலர்மேல் உறையும் பிரமனின் ஒரு சிரத்தினை, அதன் இயல்பினை அறுமாறு அரிந்து எரிந்த சிவபெருமான் உறையும் செழுமையான நகரானது, மேன்மைகள் பல விளங்கும் வேதங்களை முறையாகப் பயின்றும், அறநெறி நிரம்பப் பெற்றவர்களும் வாழும் மிழலை. அதனை நினைய வல்லவர், கொடை மிகு கரத்தராய் விளங்குவார்கள்.

1344. ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலும்அவர்
அரக்கனன் மணிமுடி ஒருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : அரக்கனாகிய இராவணன் மணி முடிகள் பத்தும், இருபது கரங்களும் நெரியுமாறு, திருப்பாத விரலால் ஊன்றியவன் உறையும் மிழலையை நினைக்க வல்லவர்கள், ஒன்றிய சிந்தனை உடையவர்களாய், ஞானம் திகழப் பெறுவார்கள்.

1345. அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன்அரி கருதரு வகைதழல்
வடிவுரு இயல்பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் கருதுதற்கு அரியவனாகிச் சோதி வடிவமாய் உலகம் யாவையும் நிறைந்து கலந்தவனாகிய ஈசனின் மிழலையை நினைக்க வல்லவர்கள், அடியவர்கள் கூட்டத்தில் இணைந்து உலகில் மகிழ்வார்கள்.

1346. மன்மதன் எனஒளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களு மதியிலர்
துன்மதி அமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.

தெளிவுரை :  காவி அணிந்தவர்களும் சமணர்களும் தொடர்ந்து வணங்குவதற்கு அரியவனாய், மிகுந்த புகழையுடைய நினைந்து போற்ற வல்லவர், மன்மதன் என்று சொல்லப்படும் பேரழகு உடையவர்கள் ஆவார்கள்.

1347. நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவர்உல கினில்அடி யவரே.

தெளிவுரை : முத்தனாகிய ஈசன் விளங்கும் மிழலையை, நிகரற்ற புகலியில், வேதமும் ஞானமும் வல்ல தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன், பத்திப் பெருக்கினால் அருளிய இத் திருப்பதிகத்தை, மனத்தில் பதித்து ஓத வல்லவர்கள், உலகத்தில் அடியார் பெருமக்களாய் விளங்குவார்கள்.

திருச்சிற்றம்பலம்

125. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1348. கலைமலி அகல்அல்குல் அசிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு உருவமது உடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையும்இடம் கெடுமே.

தெளிவுரை : உமையவனைக் கூறாகக் கொண்டு காட்சி தரும் அந்த்தநாரியானவன், ஈசன். உயர்ந்த மதிலை உடைய சிவபுரத்தில் விளங்கும் அப்பெருமானைத் தொழுது வணங்க, நலிவு தரும் வினையானது, இல்லாமை ஆகும். இம்மை, மறுமை ஆகிய இரு பிறவிகளிலும் இடம் தீரும்.

1349. படர்ஒளி சடையினான் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.

தெளிவுரை : ஒளிர்கின்ற சடையும் இடப வாகனமும் உடையவனாய், முப்புரம் எரித்த சிவன் உறையும் பதியாகிய சிவபுரத்தை அடைய, நமது இடம் நீங்கும்; உயர்கதி உறுதியாகும்.

1350. வரைதிரி தரஅரவுஅகடு அழல் எழவரு
துரைதரு கடல்விட நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனல்அரி சிலதுஅடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.

தெளிவுரை : பாற்கடலில் மேருமலையை நாட்டி, வாசுகி என்னும் அரவத்தைக் கயிறாகக் கொண்டு கடைய, அரவத்தின் உடலிலிருந்து அழல் போன்று வெளிப்பட்ட நஞ்சை நுகர்ந்தவனாகிய ஈசன், அரிசிலின் கரையில் திகழும் சிவபுரம் என்னும் நகரை மொழிந்து ஏத்துபவர் உயர்கதியைப் பெறுவார்கள்.

1351. துணிவுடை யவர்சுடு பொடியினர் உடல்அடு
பிணியடை விலர்பிற வியும்அற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய
மணிமிட றனதடி  யிணைதொழு மவரே.

தெளிவுரை : சிவபுரத்தில் மருவிவிளங்கும் நீலகண்டனாகிய ஈசனைத் தொழுபவர்கள், துணிவு மிக்கவர்; நீறணிபவர்; பிணியற்றவர்; பிறவியினையும் அறுமாறு வினைத் தொகுதினை வீசி எறிவார்கள்.

1352. மறையவன் மதியவன் மலையவ னிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நட நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென வுடையவன் எமையுடை யவனே.

தெளிவுரை : எம்மை உடையவனாகிய ஈசன், வேத முதல்வன்; அறிவானவன்; மலைபோன்று உயர்ந்து நிலைத்து இருப்பவன்; யாவிலும் நிறைந்தவன் உமையவள் மகிழுமாறு நடம் பயில்பவன்; மேலான இறைவன்; தேவர்களின் பணி கொள்ளப்பெற்றுச் சிவபுரத்தில் இருப்பிடமாய் உள்ளவன்.

1353. முதிர்சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து
அதிர்கழல் ஒலிசெய அருநட நவில்பவன்
எதிர்பவர் புரம்எய்த இணையிலி அணைபதி
சதிர்பெறும் உளம்உடை யவர்சிவ புரமே.

தெளிவுரை : சடை முடியில் இளம்பிறைச் சந்திரனும் கங்கையும் பதித்து வீரக்கழல் ஒலிக்க நடம் புரியும் ஈசன், பகை கொண்டவர்களின் முப்புரத்தை எரிசெய்த இணையற்றவனாகி விளங்கிச் சேர்கின்ற நகரானது, பெருமை மிக்கவர் வாழ்கின்ற சிவபுரம் ஆகும்.

1354. வடிவுடை மலைமகள் சலமகள் உடன்அமர்
பொடிபடும் உழைஅதள் பொலிதரு உருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை இலரே.

தெளிவுரை : அழகிய மலைமகளும் கங்கையும் பொருந்த, திருநீறு பூசி, மான் தோல் பொலியும் காட்சியுடன் பலியேற்கும் சிவன் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர்கள், வினையற்றவர் ஆவர்.

1355. கரம்இரு பதுமுடி ஒருபதும் உடையவன்
உரநெரி தரவரை அடர்வுசெய் தவன்உறை
பரன்என அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் உயர்கதி அதுவே.

தெளிவுரை : இருபது கரங்களும், பத்துத் தலைகளும் உடைய இராவணனுடைய வலிமையை அடக்கும் வகையில், கயிலை மலையை ஊன்றிய ஈசனைப் பரம் பொருள் என அடியவர்கள் பணிந்து எழ, அப்பெருமான் உறையும் சிவபுர நகரைப் புகுதல் நம் உயர்கதிக்கு வழியாகும்.

1356. அன்றியல் உருவுகொள் அரிஅயன் எனும்அவர்
சென்றுஅள விடல்அரி யவன்உறை சிவபுரம்
என்றுஇரு பொழுதுமுன் வழிபடும் அவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையர்இவ் உலகே.

தெளிவுரை : தமது இயல்பான உருவத்தை விட்டு அல்லாத வேறு உருவமாகிய ஏனம் (பன்றி), அன்னம் ஆகிய திருமாலும் பிரமனும் காணரிய, ஈசன் உறையும் தலம் சிவபுரம் என்று எண்ணிக் காலை மாலை இருவேளையும் வணங்கும் அடிவர்களுக்கு, துயர் ஏதும் இல்லை; புகழ் சேரும்; இவ்வுலகில் யாவும் உடைமையாகும்.

1357. புத்தரொடு அமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிஇல விடையுடை அடிகள்தம்
இத்தவ முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

தெளிவுரை : புத்தர்களும் அமணர்களும் கூறும் அறவுரைகள் புறம்பானவை. ஞானம் ஆகாது. இடப வாகனத்தினை உடைய அடிகளாகிய சிவபுரத்தில் உறையும் ஈசன் திருவடிகள், மெய்ம்மையுடையன. அவற்றை வழிபடுவது சிறப்பானது ஆகும்.

1358. புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமுன் உறவுயர் கதிபெறு வர்களே.

தெளிவுரை : அறிவு சார்ந்த பெருமக்கள் வேதங்களை நவிலும் புகலி நகரில் சிறப்பாக விளங்கும் ஞானசம்பந்தனது தமிழைக் கொண்டு, சிவபுரத்தில் உறைகின்ற எந்தையை உரை செய்த புகழ் மொழியாகிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர், வினை நீங்கி முன்னேற்றம் கொண்டு உயர்கதியைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்

126. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1359. பந்தத்தால் வந்தெப்பால் பயின்று நின்ற வும்பரப்
பாலே சேர்வாய் ஏனோர்கான் பயில்கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடும்
சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாம்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணால்
தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதுஇடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவும் கழுமல வளநகரே.

தெளிவுரை : நல்வினையின் பந்தம் கொண்ட தேவர்களும், அதற்கு அப்பால் மேலோங்கி நிற்கும் ஏனையவர்களும், தவமுனிவர்களும் ஆரச் சிந்தைனை செய்து போற்றித் துதிக்க, சிலம்பினை பணிந்த உமையவளுடன் பாகம் கொண்டு, திருக்கயிலையில் நாள்தோறும் திகழ்கின்ற பரிசெலாம் இவ்வுலகத்து மக்கள் நேரில் தம்முடைய கண்களால் காணும் சிறப்பினைத் தாம் பெற்ற பிறவியின் சிறப்பாகக் கொள்ளும் தகவினைப்பு புரியும் ஈசனது இடம் என்று சொல்லப் படுவது, எண் திக்கும் சந்தன மரங்களும் மணமும் சோலைகளும் திகழ, பூவுலகத்தின் பெருமை மேவும் கழுமல வளநகர் ஆகும்.

1360. பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணேறு
ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய்இசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள் கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடம்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திங்கு வண்டினம்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.

தெளிவுரை : பிச்சை எடுப்பதற்கு இச்சை கொண்டு திருவெண்ணீறு குழையப் பூசி, பெருமையுடைய நீண்ட, சிறந்த பிறைபோன்ற நெற்றியுடைய உமயவளைப்  பாகங்கொண்டு உச்சிப் பகலில் விரும்பி, இடப வாகனம் தொடர ஊர்ந்தும், ஊர்கெல்லாம் நீண்ட வீதிகள்தோறும் சென்று, ஒலி செய்து, தன் நிலையை விளம்புதலும் செய்து வைத்தமையால், கச்சு அணிந்த தாருகாவனத்து மங்கையர் நேரில் வந்து மயங்கி நிற்க, வசீகரிக்க வல்லனாகிய பரமனின் இடமானது, திருமாலின் உந்திக் கமலத்தில் விளங்கும் பிரமன் பொருந்தி விளங்க, கருமை நிறம் படிந்தா மேகங்கள் சூழ் சோலைகளில் வண்டினம் இசைக்கும் கழுமல வளநகர் ஆகும்.

1361. திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரே சேரே நீராகச் செறிதரு கரந்தியோடு
அங்கைசேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்தலைப்
பாலமேலே மாலேயப் படர்வுறும் அவன்இறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கன் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையன் இடம்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

தெளிவுரை : பிறைச் சந்திரன், தும்பை, ஊமத்தை ஆகியன சேரவும், சுரநதியாகிய தேவகங்யைம் அழகிய கரத்தில் அமையாது, தலையில் திகழந்து விளங்க,  வெண்தலையோட்டிற்கு மேல்பக்கம் பிரமன் அஞ்ஞான மயக்கம் கொண்டு பறந்த அன்னத்தின் இறகும், பொங்கும் நஞ்சுடைய பாம்பும் கொன்றை மலர் மாலையும் மேவிய சடையுடையவனாகிய பரமனது இடமானது, கங்கையின் சிறப்பின் அமைந்த பொன்னியாகிய காவிரியானது வாய்க்கால் வழியாகப் பாயும் கழுமல வளநகர் ஆகும்.

1362. அண்டத்தால் எண்திக்கும் அமைந்தடங்கு மண்தலத்து
ஆறேவேறே வானாள்வார் அவரவர் இடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்து அலைந்த உம்பரு
மாறுஏலாதார் தாமேவும் வலிமிகு புரம்எரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதுரா முனிவுசெய்த வனதுஇடம்
கண்டிட்டே செஞ்சொற் சேர் கவின்சிறந்த மந்திரக்
காலே யோவா தார்மேவும் கழுமல வளநகரே.

தெளிவுரை : அண்டத்திலும், எண் திசைகள் அமைந்த இந்த மண்ணுலகத்தின் வழியும் வானாளும் தேவர்கள் இடத்திலும் சென்று போர் செய்து, தமக்கு மாறுபட்டு எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை எனும் வலிமை மிகுந்த முப்புரத்தை எரிக்க, நெற்றிக் கண்ணால் வேகுமாறு செய்து முடித்த ஈசன் இடமானது, வேதங்கள் ஓதி வேள்வித் தீயை ஓய்வின்றி ஆற்றிப் பெருமை கொள்ளும் கழுமல வளநகர் ஆகும்.

1363.திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலம்
சீறார்வீறார் போரார் தாரகனுடல் அவனெதிரே
புக்கிட்டேவெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகால்மீப் புணர்தரும் உயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்மங்கை செங்கதத்
தோடே யாமே மாலோகத் துயர்களை பவனதுஇடம்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே.

தெளிவுரை : எட்டுத் திக்குகளிலும் தேவர்கள் அங்கங்கே, திகழ்ந்து விளங்கும் இந்த உலகத்தில், சீற்றமும் வீறு கொள்ளும் எழுச்சியும், போர்த் தன்மையும் உடைய தாருகனது உடலை, அவன் எதிர்ப்படவும், வெட்டி வீழ்த்த, சண்டத் தீப்போன்று ஐம்பூதங்கள் சீற்றம் கொண்டு உயிர்களின் நல்ல வண்ணத்தைக் குலைக்காமல், தம் நிலையில் இன்புறுமாறு செய்து, நடனத்தில் தோல்வி கண்டு சினந்த காளியின் செந்தீக் கனல் ஊழித் தீபோல் தோன்றி அழியாதவாறு நிலைத்திருக்குமாறு செய்யும் ஈசனது இடம், கழுமல வளநகர்.

1364. செற்றிட்டே வெற்றிச்சசேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறும்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைசேர் முற்றக்கொம்பு உடைத்தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேரா நோய் தாம் ஏயாமைப் பிரிவுசெய்த வளதிடம்
சுற்றிட்டே எட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செல்க
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.

தெளிவுரை : சலந்தரன் முதலான் அசுரர்களைச் செற்று வெற்றி கொண்ட பரமனாகிய ஆண் யானையின்பால் விருப்புக் கொண்டு, பொருந்திச் சேரும்முகத்தான் உமாதேவியார் பெண் யானை வடிவு கொண்டு விளங்க, நீண்ட துதிக்கையும் ஒற்றைக் கொம்பும் உடைய இறைவனாகிய விநாயகரைத் தந்து, உலகினில் பெருத்துக் காண்கின்ற துன்பமும் நோயும் இல்லாது செய்யும்படி அருள் புரிந்த ஈசனது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்து விளங்கவும், அவ்வாறு ஒழுகாதார் சேராததும் ஆகிய கழுமல வளநகர் ஆகும்.

1365. பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலே போகாமே காவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கல் வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும்இடம்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவும் கழுமல வளநகரே.

தெளிவுரை : பெருமையுடைய பக்திக்கு வித்திட்டு, பரந்து சென்று சீர் அழிக்கும் ஐம்புலன்களின் வழியின்பால் போகாது காத்து, பகையாகிய பஞ்சமா முக்குணங்களின் வழியை அடைத்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் நான்கு அந்தக் கரணங்களை ஒரு நெறியாய்ச் சித்தத்தில் உய்த்து, பரம்பொருளைச் சேரும் தன்மையரைத் தானாகவே விளங்கச் செய்யும் ஈசன் உறையும் இடம், வேதத்தின் ஆறு அங்கங்களையும் கற்று, அப் பொருளின் மெய்ம்மையுணர்ந்து எக் காலத்திலும் மேவும் கழுமல வளநகர் ஆகும்.

1366. செம்பைசேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழில்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தம்செய்திட்டு இருந்தரன் பயின்ற வெற்பு
ஏரார்பூநேர் ஓர்பாதத்து எழில்விரல் அவண்நிறுவிட்டு
அம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்து வந்தனம்செய்தாற்கு
ஆரார்கூவாள் வாணாளன்று அருள்புரிபவனதிடம்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார் சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.

தெளிவுரை : செம்பினால் ஆகிய மதில் சூழ்ந்து, செறிந்த பைம்பொழில் சேரக் கடலின் அலைகள் வீசும் இலங்கையின் வேந்தன், இவ்வுலகத்தவர்க்குத் தீமை விளைவித்து, ஈசன் விளங்கும் மலையினையும் எடுக்க, மலர் போன்ற ஒப்பற்ற பாதத்தின் அழகிய விரல் அந்து நிறுவி, தோள் அழியுமாறு புரிந்து, அவன் வணங்கி ஏத்த, ஆர்த்து விளங்கும் கூர்வாளும் வாழ் நாளும் தந்தவன் இடம், கம்பத்தில் கட்டப்பெற்ற யானையின் மத நீர் கரிய சேறு ஆக்கும் சிறந்த வீதிகளைக் கொண்ட கழுமல வளநகர் ஆகும்.

1367. பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமால்தா னாமேயப் பறவையின் உருவுகொள
ஒன்றிட்டே அம்புச்சேர் உயர்ந்தபங் கயத்தவன்
ஓதான்ஓதான் அஃதுஉணராது உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால் வேறோர் ஆகாரம் தெரிவுசெய் தவனதிடம்
கன்றுக்கே முன்றிக்கே கலந்திலம் நிறைக்கவும்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

தெளிவுரை : பன்றிக் கோலம் கொண்டு பூமியில் இடந்து சென்ற திருமால், மற்றும் தான் விரும்பிய பறவையின் உருவுக்கொண்டு ஒன்றிய நீரில் விளங்கும் தாமரைமேல் உள்ளவனாகிய வேதத்தை ஓதியவனாய் இருந்தும் இவ்வுண்மை ஓதப்பெறாத பிரமன் ஆகிய இருவரும் அடிமுடியை வந்திக்க, அழகிய கண்ணுக்குக் காட்சி தருபவனாய் வேறோர் உருவத்தினைத் தேர்ந்து விளங்கிய ஈசனது இடம், இல்லங்களில் கறவைப் பசுக்கள் விளங்கவும், வயல்களில் வாய்க்கால் வழியாக நீர் வற்றாது மேலே சென்று பாயவும் உள்ள கழுமல வளநகர் ஆகும்.

1368. தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளும் சமணொடும் உழல்பவரும்
இட்டத்தா லத்தம்தான் இதன்றதென்று நின்றவர்க்கு
ஏயாமேவா  யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாம் ஓராமேபோய்ப் புணர்வுசெய்த வனதிடம்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

தெளிவுரை : பனையோலையால் செய்யப்பட்ட தடுக்குகளை அக்கத்தில் இடுக்கி, நின்ற தன்மையில் உணவு உட்கொண்டும், தாம் எதைப் பற்றியும் பேணாது நாள்தோறும் சமணர்கள் தம்மொடு உழல்பவரும், தமது மன விருப்பத்திற்கேற்ப இதன் பொருள் இது அல்ல அது என்று கூறிக்கொண்டு, பொருந்தாதென சொல்லி, மருதாணி முதலான வண்ணங்களை மெய்யில் பூசித் தடவி மகிழும் பௌத்தரும் போன்றவர்களால் உணர முடியாதவனாகிய ஈசன் பொருந்தி விளங்கும் இடம், கால்வாய்களில் நீர் பாய்ந்து மேலே செல்ல கரும்பின் சாரும் கலந்து சுவை நீராய்ச் செல்லும் கழுமல  வளநகர் ஆகும்.

1369. கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராரும் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தாற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்த கொண்டு
ஏழேஏழே நாலேமூன்று இயலிசை இசையியல்பா
வஞ்சத்தோய் வின்றிக்கே மனம்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதர் மடவரலே.

தெளிவுரை : தாமரை மலரில் உள்ள தேனை உண்டு களித்த வண்டானது, சண்பகச் சோலையில் தேன் பருகும் வண்டுடன் பொரும் தன்மையுடைய கழுமல நகரில் வீற்றிருக்கும் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்த பண்பைக்கோன் வழங்கும் ஞானமானது, தாமே (ஈசனே) போன்று நன்மை ஆர்ந்த தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் மொழிகள், வார்க்கும் தேனாய் எக்காலத்திலும் குறைவு இன்றி எஞ்சி நிற்கக் கூடியதாய்  விளங்க, இசைந்து அமைத்தாகிய இச் சொற்கள் கொண்டு இருபத்தோரு பண் செறியும் இசையின் இயல்பால் வேறுபாடு இன்றி மனத்தில் விருப்பம் கொண்டு உரைப்பவர்கள், இதயத்தில் திருமகள் வாசம் புரிவாள்.

திருச்சிற்றம்பலம்

127. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1370. பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்
பிரம புரத்துறை பெம்மான் எம்மான்.

தெளிவுரை : பிரமன் ஈசனைப் பூசித்த திருத்தலமானது பிரமபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரமன் புரத்தில் வீற்றிருந்த நகருக்கு உரிய பெருமான், அவனே எம் தலைவன். மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமன், ஏடுடைய மலர்களால் அருச்சிக்க அருள் செய்த பெருமான், ஈசன். எம்முடைய தலைவனாகிய ஈசன் பிரமபுரத்துறையும் பெருமானாய் அருள் புரிபவன். யாவருக்கும் பெருமானாகிய ஈசன், எம் தலைவன் அவன் பிரமபுரத்தில் விளங்குபவன்.

1371. விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தவன்.

தெளிவுரை : ஈசன் மூங்கில் (வேணு) வடிவில் தோன்றி விளங்கியவன். விரிந்த மலர்கள் கொண்ட சோலைகள் அழகுற விளங்கும் வேணுபுரத்தில் விளங்குபவன், ஈசன். அழகிய வேணுபுரத்தில் விஷ்ணு (திருமால்)வால் பூசிக்கப்பெற்றவன். விஷ்ணுவின் உந்தக் கமலத்தின் மீது அலர்ந்த தாமரையில் விளங்கும் நான்முகனுக்கு அணியாகி விளங்கி, படைத்தல் தொழில் செய்பவன்.

1372. புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே
புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

தெளிவுரை : தேவர்களுக்கு அடைக்கலமாகிய புகலியில் மேவிய பரமன், இதயத் தாமரையாய் விளங்கி மன்னுயிரை இயக்குபவன். தாமரை மலர் மேவிய பிரமனால் பூசிக்கப் பெற்றவன். திருமாலால் வணங்கப் படுபவன். நெற்றித் திலகமாக விளங்கும் திருநீறு போன்றவன். புகலியே பரம்பொருளாய் வியாபித்து நின்று, மணம் வீசும் இனிய தன்மையும், தேன் சொரியும் பாங்கும், செம்மையின் ஒளி வண்ணமும் வண்டின் இனிய கீதமும், குளிர்ச்சியான பரிசமும் தந்து ஐம்புலன்களுக்கும் நல்விருந்து படைத்து சிவனடிக்கு உந்தச் செய்து விளங்குகின்றது.

1373. விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

தெளிவுரை : பிரகஸ்பதியாகிய வியாழபகவான் பூசித்துப் பேறு பெற்ற வெங்குரு எனும் பதியில் மேவியி பரமன், விளங்குகின்ற ஒளியின் வண்ணம் பெருக வீற்றிருக்கின்றவன். அறியாமை என்னும் வெம்மை தவிர்க்கும் குருவாகவும், ஆல் நிழல் நின்ற நிலையை ஒத்த குளிர்ச்சி மிக்க தெய்வ பீடமாகிய வெங்குருவில் வீற்றிருந்து ஞானம் வழங்குபவனாய் உள்ளவன். ஒளி வண்ணமாகத் திகழ்தரும் ஈசன், அவன் அருள் வடிவாய் மேவி விளங்குபவன்.

1374. சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிøத் தோணி புரத்தவன்

தெளிவுரை : பிரளய காலத்தில் யாவும் வெள்ளத்தில் மூழ்கி நிற்கத் தோணியில் விளங்கும் பரமன், மெய்யடியார்களைத் தமது காயத்தில் ஆரோகணித்து அருள் வழங்குபவன். சுடர் விடும் வண்ணமிகு செம்மேனியனாய், மாணிக்கமாய் விளங்குகின்றவன், அடியவர் மனத்தில் சுடர்விடும் சோதியாய் விளங்குபவன். ஏகாந்த நிலையினருக்கும் விஞ்ஞானகலர் என்று பேசப்படும் ஒரு மலத்தார்க்கும் நித்தியச் சுடராய் விளங்கும் அவன், ஒளி பொருந்திய மணிகளால் பதிக்கப்பெற்ற மாடமாளிகையுடைய தோணிபுரத்துப் பெருமான் ஆவன்.

1375. பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி.

தெளிவுரை : இரணியாக்கதனை வதம் செய்த வராக மூர்த்தியான திருமால் வழிபட்ட பூந்தராய் மேவிய பொன்னடி, பூவுலகத்தின் உயர்ந்தோராகிய அந்தணர் களால் வழிபடப் பெறுவதாகும். அப்பொன்னாகிய ஒளி மிக்க திருவடியைச் சார்ந்து விளங்க, மென்மை மிக்க தேவர் ஆவர். தாயாக விளங்கிப் பாதுகாக்கும் ஈசனின் பொன்னார் சேவடி, எல்லா போகத்தையும் இவ்வுலகத்தில் சேர்த்து வழங்க வல்லது. தெய்வத் தன்மையை. இவ்வுலகில் சேர்க்கும் ஈசன் திருவடிக் கமலத்தை, மலர்கொண்டு தூவிப் போற்றுவோமாக.

1376. செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுரம் என்னில்.

தெளிவுரை : சிரம் அறுபட்ட ராகு பூசித்த திருத்தலத்தில் எழுந்து அருளி , பேறு நல்கும் பெருமான், யான் எனது என்னும் செருக்கும் அறுமாறு செய்பவன். செருக்கின் முனைந்து ஆணவ மலம் தோன்ற நின்ற பிரமனின் சிரத்தை அறுத்துப் புடைத்தவன். என்னிடம் தலையானவனாய் விளங்கி மொழியும் பெரும் சொற்களாக மலர்பவன். மன்னுயிர்கள் செருக்குற்று நலியாதவாறு, அவர்தம் சிரத்தில் பதிந்து காத்தருள்பவன். பக்தர்களின் உள்ளத்தில் பதிந்து நின்று விளங்கி, அச்சமற்ற செம்மையுடையவர்களாய்ச் செய்பவன். அவ் இறைவனை வணங்கித் துதிப்பீராக.

1377. பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

தெளிவுரை : புறா வடிவத்தில் தோன்றி அக்கினி தேவன் வழிபட்ட பெருமான், அழகிய ஒளி பெறும் திருவடியை உடையவன். மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுதற்கு உரியவன். மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுதற்கு உரியவன். தவத்தின் மேலாய், மாதவத்தின் சீராயய், அவன் பொன்னடிக் கமலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மேலான சிறப்புகளைத் தருபவன். உலக மாதாவாகிய உமையவனைச் சேர்நஅத அர்த்தநாரியாக இணைந்தும், வேறாகியும் விளங்குபவன். அப்பெருமான் திருவடியைப் போற்றுதல் தவமாகும்.

1378. தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்.

தெளிவுரை : சண்பை என்னும் கோரையால் விளைந்த சாபம் திருமாறு, திருமால் (கண்ணபிரான்) வழிபட்ட சண்பை நகரில் விளங்கும் பெருமான், மலை எடுத்த தசமுகனாகிய இராவணன் முடிகள் நெரியுமாறு, கயிலை மலையைத் திருப்பாத விரலால் ஊன்றி அருள் புரிந்தவன். மன்னுயிர்களின் பத்து வகையான குற்றங்களை நீக்கும்முகத்தால் ஞானம் அருள வல்லவன். பலவிதமான கொடுமைகளைப் புரிந்த அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்தவன். நறுமணம் பொருந்தி விளங்கும் அப் பரமனை உகந்து தொழுமின்.

1379. காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே.

தெளிவுரை : காளிதேவி வழிபடப் பேறு நல்கிய காழியில் விளங்கும் பெருமான், பிரமனால் பூசிக்கப் பெற்றவன். அன்பின் வயத்தால் வணங்குபவர்களுக்குக் காட்சி நல்குபவன். ஊழிக் காலத்திலும் அழியாது விளங்கும் காழியில் நிலைகொள்ளும் பெருமான். அவன் தன்னைப் பற்றும் மயத் தொண்டர்களுக்கு உறுதியான பற்றாய் விளங்கி, உள்ளத்தில் பதிந்து இனிய காட்சி நல்குபவன். நினையாதவர்களுக்கு அயலாய் நிற்பவன். அவ்ன பெருமையை, உள்ளவாறு யாராலும் அறிந்து ஓதற்கு அரியவன். அவனைத் தொழுது போற்றுவீராக.

1380. கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.

தெளிவுரை : கொச்சையாம் பழியை நீக்கக் கோரி பராசர முனிவரால் பூசிக்கப்பெற்ற கொச்சை வயம் என்னும் நிழலைப் பேணாதவர் பேதையர் ஆவர். ஈசன் புகழ் போற்றாது அவமாய்த் திரிபவர்கள் அறியாமையுற்று, அஞ்ஞானத்தவராய் உலகில் உழல்வார்கள்  பிறவி எடுத்ததன் பேற்றை இழந்து, குற்றத்தொகுதிக்கண் மூடப்பெற்றவராய் நன்னிலையை நீத்தவராவர்.

1381. கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

தெளிவுரை : குற்றத் தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்ட கழுமல நகரில் வீற்றிருக்கும் ஞானத்தின் தலைவனாக விளங்கும் ஈசன், கவுணியர் கேத்திர மரபில் தோன்றிய ஞானசம்பந்தரின் சொற்களாக மலர்ந்தருள்பவன். இத்தகைய மொழிகளைக் கொள்கின்ற நன்மனத்தினர்கள் வினைக் கட்டு அறும்; பிறவித்தளை நீங்கும்; எக்காலத்திலும் அழியாது மூத்து நிலையாக நின்று விளங்கும் பதியாகிய கழுமலத்தில் வீற்றிருக்கும் பெருமான் திருவடியை அன்பினால் கட்டிப் பிணைத்து மேன்மையடைவீராக.

திருச்சிற்றம்பலம்

128. திருப்பிரமபுரம்  (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1382. ஓருரு வாயினை மானாங் காரத்து
ஈரியல் பாய்ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்பமும் மூர்த்திகள் ஆயினை
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை

தெளிவுரை : ஈசன், ஏகரூபனாய் இருந்து ஐந்து தொழில்களுக்கும் அதிபதியாக விளங்குபவன். மான் போன்ற உமாதேவியுடன் விளங்கிச் சிவன், சக்தி எனும் இருவகையான இயல்புடன் உயிர்களைப் பதியை நோக்கிச் சாரவும், ஆணவம் கன்மம் மாயை ஆகிய குற்றத்தொகுதிகளிலிருந்து நீங்கவும் புரிபவன். விண்ணில் தொடங்கிப் பூவுலகம் வரையில் ஒன்றிக் கலந்த இரு சுடர்களாகிய சூரியன், சந்திரன், மற்றும் தேவர்முதல் யாவும் படைத்தும், காத்தும், அழித்தும் செய்யவல்ல மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ஆயினன். பிரமனும் திருமாலும் உடனாகிச் சேர்த்து, உருத்திரத் தன்மையைத் தன்பால் தேக்கி, ஒப்பற்ற ஒருவனாய் ஆகி நின்றவன்.

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கும் ஒளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை

தெளிவுரை : ஓர்ந்து அறிதற்குரிய ஆலமரத்தின் நீழலில் வீற்றிருந்து, திருக்கழலை முப்போதும் ஏத்தித் தொழுத சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு, உயர்ந்த நெறியைச் சின்முத்திரை கொண்டு காட்டி, உண்மைப் பொருளை உணர்த்தி, மும்மலங்களை அறுத்து மேன்மை கொள்ளும் வகை காட்டினன், பரமன்.

இருநதி அரவமோடு ஒருமதி சூடினை
ஒருதாள் ஈரயின் மூவிலைச் சூலம் 
நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடுஅழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்  
கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை

தெளிவுரை : கங்கை, அரவம் ஆகியவற்றுடன் சந்திரனைச் சூடியவன், ஈசன். அவன் ஈர்க்கும் கூர்மை கொண்ட மூன்று இலைகளையுடைய சூலமும், நான்கு தேவங்களையும் கால்களாக உடைய மானும், பஞ்சாட்சரமாகிய ஐந்து தலையுடைய அரவமும் ஏந்தியவன். நீர் வற்றித் தொங்கும் வாய் உடைய மதம் பொருந்தியதும் இரு தந்தங்களையுடையதும் ஆன யானையின் பெருமையை அழித்து, அதன் தோலை உரித்தவன்; மேருமலையை வில்லாகக் கொண்டு வளைய வாங்கி உலகம் அஞ்சி வியக்குமாறு முப்புரத்தை அழித்து அதில் இருந்த தீய அசுரர்களை அழித்தவன்.

ஐம்புல நாலாம் அந்தக் கரணம்
முக்குணம் இருவலி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை ஒருங்கி மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து

தெளிவுரை : மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐம்புலன்களையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக்கரணங்கள் நான்கும், சாத்துவீகம், ராஜோகுணம், தமோகுணம் ஆகிய முக்குணங்களும் பிராணன், அபானன் என்னும் இருவகையான காற்றும் ஒருங்குதல் மேவிய வானோர் ஏத்த நின்ற ஈசன், ஒன்றிய மனத்தினராய், இப்பிறவியின் தன்மை ஓர்ந்து, மூன்று வேளைகளிலும் அனுட்டானம் முதலான கிரியைகள் செய்து,

நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆரங்கமுதல்எழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை,
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை 
இகலிய மைந்துணர் புகலி அமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை தொலையாஇருநிதி
வாயந்த பூந்தராய் ஏய்ந்தனை  
வரபுரம் என்றுணர் சிரபுரத்து உறைந்தனை
ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை.

தெளிவுரை :  நான்கு தேவங்களாகிய ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை ஓதி; ஐந்து வகையான வேள்வியாக சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, பிராமண உபசரிப்பு, அதிதி உபசாரம் ஆகியன ஆற்றி; ஆறு அங்கங்களாகிய சந்தசு, கற்பம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தி ஆகியவற்றின் பிரதான எழுத்தாகிய பிரணவத்தை ஓதி; ஒழுங்கு முறைப்படி பயின்று வளமை தரும் பிரமபுரம் என்னும் பதியை விரும்பினன், ஈசன். அப்பெருமான் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை என்றும் வழங்கப்படும் அப்பதியில் விழைந்து விளங்குபவன்.

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும்  
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மதுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியனறியும்
அனைய தன்மையை ஆதலி னின்னை
நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தே.

தெளிவுரை : ஈசன், ஐயம் கொண்ட சமணரும், தேரரும் உணராதவராய் இருக்கக் காழியில் அமர்ந்து விளங்குபவன்; ஆறு சமய நெறிகளிலும், ஐந்தெழுத்தாகும் ஞானத்திலும், நான்கு மறைகளிலும் தோய்ந்தவன்; முக்காலமும் தோன்ற நின்றவன்; இம்மை, மறுமை ஆகிய இரண்டும் ஆயவன்; ஒருமை வயத்தனாய்த் திகழ்ந்து அதன் பெருமைக்கு உரியவன்; மறையோர் வாழ் கழுமல முதுபதியினன். அப்பெருமானை ஏத்திய கவுணியனாகிய ஞானசம்பந்தர் உரைத்த இவ் அருள் மொழியை நினைய வல்லவர்கள், பிறவி நோயைக் களைந்தவராய் மீண்டும் பிறவாமையாகிய செல்வத்தை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்

129. திருக்கழுமலம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1383. சேவுயரும் திண்கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்தான்
வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச்
செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவி யிருங் கருங்குவளை கருநெய்தல்
கண்காட்டும் கழுமலமே.

தெளிவுரை : இடபக் கொடியுடைய ஈசன் திருவடியே சரண் என்று சிறப்பாகக் கண்டு, தன் தேவியாகிய கலைமகளுடன் இணைந்து வழிபட்ட பிரமன் நலத்தைப் பெற்ற கோயில், பொய்கையில் மகளிர்தம் முகத்தைத் தாமரை மலரும், பவள வாயைக் குமுத மலரும் காட்ட, கண்களைக் கருங்குவளையும் நெய்தலும் காட்டி விளங்குகின்ற கழுமலம் ஆகும்.
பிரமன் பூசித்த தலம் குறிப்பு உணர்த்தியது காண்க.

1384. பெருந் தடங்கண் தெந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய கண்ணவெண்ணீறு அலங்கரித்தான்
அமரர்தொழ அமரும்கோயில்
கருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந்துஅம்மானைப்
பாட்டயரும் கழுமலமே.

தெளிவுரை : மலையரசன் மகளாகிய உமாதேவியைப் பிரியாத திருமேனியாய், அருந்தகைமையுடைய திருவெண்ணீறு பூசி அலங்கரித்துத் தேவர்கள் தொழுதேத்த விளங்குகின்ற ஈசன் கோயில், வள்ளல் தன்மை மிக்க கரத்தையுடைய அந்தணர்கள், மனைகள் தோறும் வேள்விகள் புரியவும், கரிய பெரிய கண்களையுடைய மகளிர் அவன் பெருமைகளைப் பாடி, அம்மானை, கழங்கு, பந்து முதலானவை விளையாடும் கழுமலம் ஆகும்.

1385. அலங்கல்மலி வானவரும் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதம்
கலங்கஎழு கடுவிடம் உண்டு இருண்டமணி
கண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல்அமர் புயன்மறந்து மீன்சனிபுக்கு
ஊன்சலிக்கும் காலம்தானும்
கலங்கல்இலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே.

தெளிவுரை : மாலைகளுடன் விளங்கும் தேவரும் அகரரும் பாற்கடலைக் கடைய, பஞ்ச பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய விடத்தை உட்கொண்டு, கரிய கண்டத்தையுடைய ஈசன் கருதி அமரும் கோயில், மலையின்மேல் தவழும் மேகம் மழை பொழிதலை மறுந்து, மகரராசியில் சனிக்கோள் புகுதலால் இயற்கையின் நியதியாக, வறட்சி நேர்ந்த காலத்திலும், கலங்காது வழங்கும் வள்ளல் தன்மையுடைய சத்தியவான்கள் வாழும் கழுமலம் ஆகும்.

1386. பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றஒரு
சிலைவளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்கும் கணம்கேட்டு
மகிழ்வெய்தும் கழுமலமே.

தெளிவுரை : உலகம் நலியுமாறும் தேவர்கள் அச்சம் கொள்ளுமாறும் செய்த முப்புரத்தை வெற்றி கொள்ளப் போர்ப் பரணி இசைத்துச் சலை வளைத்துப் பொருத ஈசன் பொருந்தும் கோயில், மகளிர் மாளிகையின் மேல்தளத்தில் இருந்து தம் குழந்தைகளைப் பாராட்ட, அதன் இனிய ஒலியை மடுத்தி மேகங்கள் வானத்தில் இடி குரல் மெல்ல எழுப்பத் தேவகணங்கள் கேட்டு மகிழ்ச்சி கொள்ளும் கழுமலம் ஆகும்.

1387. ஊர்கின்ற அரவம்ஒளி விடுதிங்க
ளொடு வன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
செஞ்சடையா(ன்)நிகழும் கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே.

தெளிவுரை : ஊர்ந்து மேவும் அரவம், சந்திரன், வன்னி, ஊமத்தம், கங்கை, கபாலம் ஆகியவற்றை உடைய செஞ்சடைகொண்ட ஈசன் கோயில், அழகிய மலர்கள் நிலவும் வெள்ளியங்கிரி போன்ற வெண்மையான மாளிகைகள் கொண்ட கழுமலம் ஆகும்.

1388. தரும்சரதம் தந்தருள்என்று அடிநினைந்து
தழலணைந்து தவங்கள் செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
ழமையளித்த பெருமான் கோயில்
அரிந்தவயல் அரவிந்த மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ் சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயும் கழுமலமே.

தெளிவுரை : மெய்ப்பொருளைத் தந்தருள்க என்று திருவடியை நினைந்து, தழல் வளர்த்துத் தவங்கள் செய்த அறிஞர் பெருதகையாளர்களுக்குப் பெருமை மிக்க தோழமை நல்கிய பெருமான் உறையும் கோயில், அறுவடை செய்யப்பெற்ற நிலத்தில் விளங்கும் தாமரையிலிருந்து தேன் சிந்த அதனைப் பருகிய வாளை மீன்கள் களித்துச் சக்கரம் போன்று சுழல கரும்புக் தோட்டங்களில் உள்ள பிஞ்சுக் கரும்புகள் விலகி நிற்கவும், தண்ணீர் உள்ளே பாயும் வளம்திகழ் கழுமலம் ஆகும்.

1389. புலிமுதல்ஐம் பூதமாய்ப் புலன்ஐந்தாய்
நிலன்ஐந்தாய்க் கரணநான்காய்
அவையவைசேர் பயனுருவாய் அல்லவுரு
வாய்நின்றான் அமரும்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவண்எறிகல் போல்சுனையிற் கரைசேரப்
புள்ளிரியும் கழுமலமே.

தெளிவுரை : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களாய்; மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாய்; குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலத்தின் வகை ஐந்தாய்; மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அந்தக்கரணங்கள் நான்காய்; அவ்வவற்றின் பயனாய், உருவாய், உருஅல்லாத அருவாய் நின்ற ஈசன் அமரும் கோயில், தவம் முயல்வோர் பூசனை ஆற்றுவதற்காக மலர்கள் பறிக்கப்பட்ட பூங்கொம்புகள் விடுவித்த ஞான்று, வேகமாகச் சென்று சென்று அண்மையில் உள்ள மாமரத்தில் தாக்க, மாங்காய்கள் கவணில் எறிந்த கற்களைப் போன்று சுனைக்கரையில் விழ, பறவைகள் அஞ்சி அகலும் கழுமலம் ஆகும்.

1390. அடல்வந்த வானவரை அழித்துலகு
தெரித்துழலும் அரக்கர் கோமான்
மிடல் வந்த இருபதுதோள் நெரியவிரல்
பணிகொண்டோன் மேவும் கோயில்
நடவந்த உழவர்இது நடவொணா
வகை பரலாய்த்து என்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்கும் கழுமலமே.

தெளிவுரை : எதிர்த்துப் போர்க்கு வந்த தேவரை அழித்து, உலகத்தை வருத்தி உழல்கின்ற அரக்கர் தலைவனாகிய இராவணின் வலிமையான இருபது தோள்கள் நெரிந்து வாடுமாறு விரலால் அடர்த்து, அவன் பாடிப் பணியச் செய்த பரமன் மேவுகின்ற கோயில், உழவர்கள் விதைக்கும்போது இது விதையன்று, முத்துப் பரல் என்று ஆய்ந்து கரையில் குவிக்கும் கழுமலம் ஆகும்.

1391. பூமகள்தன் கோன் அயனும் புள்ளினொடு
கேழல்உரு பாகிப்புக்கிட்டு
ஆமளவும் சென்றுமுடி அடிகாணா
வகைநின்றான் அமரும்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்÷ற்தும் கழுமலமே.

தெளிவுரை : திருமகள் தலைவனாகிய திருமாலும், பிரமனும், முறையே பன்றியும் அன்னப் பறவையும் ஆகி, தங்களால் முடிந்த அளவு சென்றும் அடியும் முடியும் காணாதவராய் நின்ற ஈசனார் அமரும் கோயில், பாக்களைக் கனிந்து பாடும் புலவர்கள் பன்மலர்களால் விரும்பி ஏத்தும் கழுமலம் ஆகும்.

1392. குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல் மருவும் சமணர்களும் உணராத
வகைநின்றான் உறையும் கோயில்
மணமருவும் வதுவையொலி விழவின்ஒலி
இவைஇசைய மண்மேல் தேவர்
கணமருவு மறையின்ஒலி கீழ்ப்படுக்க
மேற்படுக்கும் கழுமலமே.

தெளிவுரை : புத்தர்கள் பொய்த் தவத்தை மெய்த் தவமாய்க் கருத, சமணர்களும் அவ்வாறு இருக்க, அவர்கள் உணரமுடியாதவாறு நின்ற ஈசன் உறையும் கோயில் திருமண ஒலியும், திருவிழாக்கள் ஒலியும் இசைக்கப் பூவுலகில் தேவகணங்கள் மருவுதலால் வேத ஒலியும், ஒன்றுக்கொன்று மேலோங்கும் கழுமலம் ஆகும்.

1393. கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்
ஈசன்றன் கழல்மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞான
பந்தன்தான் நயந்துசொன்ன
சொற்றுணையோர் ஐந்தினொடு ஐந்து இவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.

தெளிவுரை : நான்மறை கற்றுணர்ந்தவர்கள் பணிந்து ஏத்துகின்ற கழுமலத்துள் வீற்றிருக்கும் ஈசன் கழல்மேல், நல்லவர்களின் நற்றுணையாய் விளங்கும் பெருந்தன்மை மிகுந்த ஞானசம்பந்தன் விரும்பிச் சொன்ன, சொல்லின் துணையாகிய இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள், தூய மலராளாகிய திருமகளின் துணை கொண்டவராகி உலகம் முழுவதும் தன் ஆட்சியில் கண்டு, ஈசன் திருவடியில் சேரும் முயற்சியுடையவர்கள் ஆவார்கள்.

திருச்சிற்றம்பலம்

130. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1394. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டு ஐம்மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல்என்று
அருள்செய்வான் அமரும்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி
முகில்பார்க்கும் திவையாறே

தெளிவுரை : ஐம்புலன்களும் தமது இயல்பிலிருந்து திரிந்து, தனது வழியிலிருந்து மயங்கி அதற்குரிய அறிவும் கெட்டு, பித்த, வாயு, சிலேத்தும நாளங்களின் மாறுபாட்டால் கபம் பெருக வருந்தும்போது, அஞ்சேல் என்று அருள் செய்பவனாகிய ஈசன் அமரும் கோயில், திருக்கோயிலை வலம் வரும் பெண்கள் நடனம் ஆட, முழவின் அதிர்ஒலி கேட்ட சில மந்திகள் தடுமாற்றம் கொண்டு மேகத்தின் இடியோசை எனக் கருதி, மரத்தில் ஏறி வானத்தைப் பார்க்கும் திருவையாறு ஆகும்.

1395. விடலேறு படநாகம் அரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும்
அடலேறுஒன் றதுஏறி அஞ்சொலீர்
பலியென்னும் அடிகள் கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி
னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் கரிசங்கம் செழுமுத்தங்கு
ஈன்றலைக்கும் திருவையாறே.

தெளிவுரை : வலிமை மிக்க நாகத்தை அரையில் கட்டி, உமையவனைப் பாகமாக கொண்டு இடபத்தில் ஏறி, அழகிய சொல்லுடையவர்களே !! என்று கூறிப் பிச்சையேற்ற அடிகளின் கோயில், கடலலைகள் வாயிலாகக் காவிரியினுடன் கலந்து இரவுக் காலங்களில் கரையடைந்த சங்குகள் ஈன்ற முத்துக்கள் விளங்கும் திருவையாறு ஆகும்.

1396. கங்காளர் கயிலாய மலையாளர்
கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர்
விடையாளர் பயிலும்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல்
இரைதேரும் திருவையாறே.

தெளிவுரை : கபாலம் ஏந்தியவர், கயிலாய மலையுடையவர், கானப் பேராளர், உமை பங்காளர், சூலப்படையாளர், இடப வாகனர் ஆகிய ஈசன் கோயில், தேன் சொரியும் சோலையில் ஈரமான சிறகுகள் உலர்ந்து குளிர் நீங்கிய வெண்மையான இருகுகள் இரை தேடும் திருவையாறு ஆகும்.

1397. ஊன்பாயு முடைதலைகொண்டு ஊரூரின்
பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறும் சங்கரனார்
தழலுருவர் தங்கும் கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல
மொட்டலரும் திருவையாறே.

தெளிவுரை : பிரம கபாலம் கையில் கொண்டு ஊர்தெறும் பலிக்கு உழலும் உமையவள் பங்கினர், இடப வாகனம் ஏறும் சங்கரனார், தழல் உருவானவர். அவர் தங்குகின்ற கோயில், மான் பாய, வயல்களின் அருகே மந்தி பாய, தேன் பாயும் மடுக்களில் மீன் பாயத் தாமரையின் மொட்டு மலரும் திருவையாறு ஆகும்.

1398. நீரோடு கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த
தத்துவனார் தங்கும் கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொயிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்
நடம்பயிலும் திருவையாரே.

தெளிவுரை : கங்கையும், வில்வமும், பிறைச் சந்திரனும், வெள்ளெருக்கும், கொன்றை மாலையும், குளிர்ச்சி பொருந்தி கரந்தையும் சடைக்கணிந்த தத்துவனார் தங்கும் கோயில், மேகத்தைத்  தொடும் ஓங்கிய பொழிலும் மலர்செறிந்த தேரோடும் வீதிகளில் உள்ள அரங்குகளில் மகளிர் நடம் பயிலும் திருவையாறு ஆகும்.

1399. வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார் வீதித்
தேந்தாம் என்று அரங்கேறிச் சேழியிழையார்
நடமாடும் திருவையாறே.

தெளிவுரை : ஆட்சிகொண்டு காப்பவனாய், விண்ணுலகத்தினர்க்கும் மண்ணுலகத்தினர்க்கும் நல்ல நெறியைக் காட்டும் விகிர்தனாய், நறுங்கொன்றை மாலை சடைக்கு அணிந்த புண்ணியனார் நாடும் கோயில், காந்தார இசையில், மகளிர் பண்பாட நடம் பயிலும் திருவையாறு ஆகும்.

1400. நின்றுலா நெடு விசும்பில் நெருக்கிவரு
புரமூன்று நீள்வாய்அம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்
குன்றெலாம் குயிலகூவக் கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு
கண் வளரும் திருவையாறே.

தெளிவுரை : வானத்தில் நெருக்கித் துன்புறுத்திய புரங்கள் மூன்றினையும் அம்பு செல்லுமாறு தொட்ட வில்லையுடைய கயிலை மலைநாதன் சேரும் கோயில் குன்றிடை இருந்து குயில் கூவ, மலரில் தேன் சொரிந்து வாசமலரின் மணம் சேர, தென்றல் பெருகி கருபினைக் கணுக்கள்தோறும் பெருகி வளரச் செய்யும் திருவையாறு ஆகும்.

1401. அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள் பத்தும்
மஞ்சோடு தோள்நெரிய அடர்த்தவனுக்கு
அருள்புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி இரிந்துஅங்கு ஓடிச்
செஞ்சாலிக் கதிர்உழக்கிச் செழுங்கமல
வயல்படியும் திருவை யாறே.

தெளிவுரை : சற்றும் சிந்தித்துப் பாராமல் அச்ச உணர்வு அற்று, கயிலாய மலையெடுத்த இராவணன் பத்துத் தலைகளும் வலிமையான தோள்களும் நெரியுமாறு அடர்த்து, அருள் புரிந்த அழகரின் கோயில், இனிய தென்னை நெற்று கீழே விழுந்தøக் கண்டு, எருமைக் கன்றுகள் அலைந்து சிதறி ஓடி, செஞ்சாலிக் கதிரை உழக்கித் தாமரை மலர் விளங்கம் வயலில் படியும் திருவையாறு ஆகும்.

1402. மேலோடி விசும்பணவி வியனிலத்தை
மிக அகழந்து மிக்க நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத
வகைநின்றான் மன்னும்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தில்நின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடும் திருவை யாறே.

தெளிவுரை : ஆகாயத்திலும் பூமிக்கடியிலும் நாடிச் சென்ற பிரனும் திருமாலும் அறியாத வகை நின்ற ஈசன் கோயில், செவ்வரி படர்ந்த நீண்ட கண்களையும், திரண்ட கொங்கைகளையும் வளையல்களையும் அணிந்த மகளிர் நடம்புரியும் திருவையாறு ஆகும்.

1403. குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாக்கியரும் குணம் ஒன்றில்லா
மிண்டாடு மிண்டர்உறை கேளாதே
ஆளாமின் மேவதித்தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம்மீசர்
இறைவர் இனிது அமரும் கோயில்
மெண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்
வந்து அலைக்கும் திருவையாறே.

தெளிவுரை : சமணரும் சாக்கியரும் தர்க்கம் செய்து உரைப்பனவற்றைக் கேளாது ஈசனார்க்கு ஆளாகித் தொண்டு செய்மின் ! எண்தோள் முக்கண்ணராய் விளங்கும் எம் ஈசன் இனிது அமரும் கோயில், பூக்களும் மணிகளும் திரண்ட காவிரி அணைதரும் திருவையாறு ஆகும்.

1404. அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால்
ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடு அமருலகில் தவநெறிசென்று
எய்துவார் தாழாதன்றே.

தெளிவுரை : அன்னப் பறவைகள் மலிந்த பொயிலைச் சூழ்ந்த ஐயாற்று எம்பெருமானைப் பாடிய அந்தண் காழி மன்னிய சீர்மறை நாவலனாகிய வளர் ஞானசம்பந்தன் மருவிய இத்திருப்பதிகத்தை இசைத்து ஏத்தவல்லவர்கள், தாழ்வு அற்றவராய் இனிய தவநெறியில் சென்று தேவர் உலகத்தை எய்துவர்.

திருச்சிற்றம்பலம்

131. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1405. மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
எண்குணங்களும் விரும்புநால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட்கு ஒருதலைவன்
கருதுமூர் உலவு தெண்ணீர்
முத்தாறு வெதிர்உதிர நித்திலம்வா
ரிக்கொழிக்கு முதுகுன்றமே.

தெளிவுரை : மெய்யின்கண் உடைய உப்பு, புளிப்பு துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, இனிப்பு என்னும் ஆறு சுவையும்; சஞ்சமம், ரிஷபம், காந்தாரம் மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழிசையும்; தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல். இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை ஆகிய எட்டுக் குணங்களும்; விரும்பிப் போற்றும் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் அறியவொண்ணாது நிலவிப் பளிங்கு அன்ன தேவியைப் பாகமாகக் கொண்டு, சௌரம், காணபத்யம், கௌமாரரம், வைணவம், சாக்தம், சைவம் என்னும் ஆறு சமயங்களுக்கும் ஒப்பற்ற தலைவனாய் விளங்கும் ஈசன் கருதி விளங்கும் ஊரானது, மூங்கிலில் விமைந்து முதிர்ந்த முத்துக்கள் உதிர்ந்து முத்தாற்றில் பெருகிச் சென்று கரையில் கொழிக்கும் முதுகுன்றம் ஆகும்.

1406. வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
வெங்கானில் வசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
புரிந்தளித்த புராணம் கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலர் உதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளம் கிளர்கின்ற திருமுன்றில்
புகுந்துலவு முதுகுன்றமே.

தெளிவுரை : தேன் மணக்கும் கூந்தலையுடைய தேவியொடு வேடுவ வடிவம் தாங்கி, கொடிய கானகத்தில் விசயனுடன் போர் புரிந்து வலிமையிழந்து, பாசுபதம் அளித்த புராணராகிய பெருமான் கோயில், பொழில்கள் கனிகளையும், மலர்களையும் உதிர்த்து, குளிர்ந்த நீர்நிலைகளில் சுவையின் மணம் பரப்பி, இல்லங்களில் தென்றல் புகுந்து இனிமை சேர்க்கும் முதுகுன்றம் ஆகும்.

1407. தக்கனது பெருவேள்விச் சந்திரனிந்
திரன்எச்சன் அருக்கன் அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும் வருக்கை கதலிகமுகு
உயர்தெங்கின் குவைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா
நீள்வழல்சூழ் முதுகுன்றமே.

தெளிவுரை : தக்கன் புரிந்த வேள்வியில் பங்கேற்ற சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அக்கினி, பிரமன் ஆகியோரை விதிவழியே தண்டத்த விமலர் கோயில், மா, வளமையான வகையைச் சேர்ந்த வாழை, கமுகு, தேங்காய் மற்றும் முக்கனிகள் சாறும் பெருக, உலராத சேறு உடைய வயல் சூழும் முதுகன்றம் ஆகும்.

1408. வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன் மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
அரிஎரிகால் வாளியாக
மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிடம் முதுகுன்றமே.

தெளிவுரை : கொடுமை மிக்க முப்புரத்தின் அசுரர்கள் தீங்கு செய்ய அதனால் தமது வளமையழிந்த தேவர்களும், பிரமன், இந்திரன் திருமாலும் சென்று துதித்து வேண்ட, தேவர்கள் தேராகவும், அழகிய மேருமலை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பு நாணாகவும், திருமால், அக்கினி தேவன், வாயுதேவன் ஆகியோர் அம்பாகவும் கொண்டு மூன்று மதில்களையும் ஒருசேரநொடியளவு நேரத்தில் எரிந்து சாம்பலாகுமாறு செய்த முதல்வனாகிய ஈசன் இடமானது, முதுகுன்றம் ஆகும்.

1409. இழைமேவு சுலையல்குல் ஏந்திழையாள்
ஒருபாலாய் ஒருபால் எள்காது
உழைமேவும் உரியுடுத்த ஒருவன்இருப்
பிடம்என்பர் உம்பர்ஓங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை இரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே.

தெளிவுரை : இழைக்கப் பெற்ற மேகலையை உடைய, உமாதேவியாகிய பெண்பால் ஒரு பக்கமும், மான் தோல் திகழ ஒரு பக்கமும் ஆகி, அர்ந்த்த நாரியாகிய ஒருவன் இருப்பிடம் எனப்படுவது, தேவர் உலகு வரைக்கும் நீண்டு வளர்ந்த மூங்கிலின் மேல் இருக்கும் பெண் குரங்கு மழை வரும் எனத் தெரிந்ததும் தன் குட்டியுடன் பாதுகாப்பான இடத்தில் புக, யானை உணவு கொள்ள உலவும் சாரலையுடைய முதுகுன்றம் ஆகும்.

1410. நகையார்வெண் தலைமாலை முடிக்கணிந்த
நாதனிட நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டம் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்புஇடறிச் சாலிகழு
நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைக்கண் முகமலர
வயல்தழுவு முதுகுன்றமே.

தெளிவுரை : மண்டை ஓடுகளை மாலையாக அணிந்த ஈசன் இடமானது, மணிமுத்தாறு என்னும் ஆறு, மலையில் திகழும் செல்வங்களை இருகரைகளிலும் பெருகுமாறு சேர்த்து, நெல்லும் கழுநீர் மலர்களும் சாயுமாறு புகுந்து ஓடி, தாமரை மலருமாறு வயலைத் தழுவும் முதுகுன்றம் ஆகும்.

1411. அறங்கிளரு நால்வேதம் ஆலின்கீழ்
இருந்தருளி அமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்
ஒன்றுஅறுத்த நிமலர்கோயில்
திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண் டங்கு
எழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்து மணி செலவிலக்கி
முத்துலைப்பெய் முதுகுன்றமே.

தெளிவுரை : ஆலமரத்தின்கீழ் இருந்து அறத்தின் பொருளாகிய வேதங்களை, சனகாதி முனிவர் களுக்கு உணர்த்தி அருள் செய்து, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, பிரமனின் ஐந்து சிரங்களுள் ஒன்றை அறுத்த நிமலர் கோயில், மாணிக்கங்களும், முத்துக்களும் ஒருசேரத் திரண்டிருக்க, குறச் சிறுமியர்கள் முறத்தினால் கொழித்து மாணிக்கங்களை விலக்கி முத்துக்களை உலையில் சேர்க்கும் முதுகுன்றம் ஆகும்.

1412. கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும் வாயும்
பிதிரொளிய கனல் பிறங்கப் பெருங்கயிலை
மலையை நிலை பெயர்த்த ஞான்று
மதிலளகைக்கு இறைமுரல மலரடி யொன்று
ஊன்றி மறை பாட ஆங்கே
மதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
வாயந்தபதி முதுகுன்றமே.

தெளிவுரை : ஒளிக்கதிர்கள் உடைய நீண்ட முடிகள் பத்து உடைய இராவணன், கண்ணும், வாயும் மருண்டு கலங்க, அவன் கயிலையைப்  பெயர்த்தபோது, தனது புஷ்பக விமானத்தைப் பறித்த அரக்கன் மாய்ந்தான் எனக் குபேரன் கருதுமாறு, திருப்பாத விரல் ஊன்றி சாமகீதம் பாட மந்திரவாள் தந்த ஈசன் விளங்கும் பதி, முதுகுன்றம் ஆகும்.

1413. பூவார்பொன் தவிசின்மிசை இருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாய்உயர்ந்துஆழ்ந்து
உறநாடி உண்மைகாணாத்
தேவாரும் திருவுருவன் சேருமலை
செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே.

தெளிவுரை : பூவினை அழகிய இருப்பிடமாக உடைய பிரமனும், துளசி மாலை அணிந்த திருமாலும் அன்னமாக உயர்நஅது பறந்தும், ஏனமாய் ஆழ்ந்து பூமியின் குடைந்து சென்றும், உண்மை காணாதவாறு ஆகிய திருவடிவு கொண்ட ஈசன் சேரும் இடம், மகாப்பிரளய காலத்திலும் மூழ்காதவாறு மேலுயர்ந்து விளங்கும் முதுகுன்றம் ஆகும்.

1414. மேனியிற் சீவரத்தாரும் விரிதரு தட்டு
உடையாரும் விரவலாகா
ஊனிகளாய் உள்ளார்சொற் கொள்ளாதும்
உள்ளுணர்ந்து அங்கு உய்மின்தொண்டீர்
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை
முழுதுணர்ந்துஐம் புலன்கள் செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரிய முதுகுன்றமே.

தெளிவுரை : உடலை வளர்க்கும் கொள்கையுடையவர்களாய்ப் புறச்சமயத்தார் இருக்க, அவர்கள் சொற்களை ஏற்காது, உண்மை கொள்வீராக. தொண்டர்காள் ! ஞானிகளாய் நான்கு வேதங்களை உணர்ந்து, ஐம்புலனை அடக்கி நிட்டை கொண்டு தவம் புரியும் பேறு பெற்றது முதுகுன்றம் அவ் ஊர்ப் பெருமானை ஏத்துமின் என்றவாறு.

1415. முழங்கு ஒலிநீர் முத்தாறு வலம்செய்யு
முதுகுன்றத்து இறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக் கொண்டு
தழங்கெரிமூன்று ஓம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர்
நீடுலகம் ஆள்வர்துமே.

தெளிவுரை : முழங்குகின்ற ஒலியுடன் நீர்மிக்க முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்து இறைவனை, எக்காலத்திலும் தொன்மைபூண்டும் நிலைத்து நிற்கவல்ல பன்னிரண்டு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலத்தை இருப்பிடமாகக் கொண்டு, ஆகவனீயம், காருகபத்தியம், தட்சணாக்கினி எனப்படும் எரிகள் மூன்றும் ஓம்பும், தமிழ் ஞானசம்பந்தன் வழங்கிய இத்திருப்பதிகத்தை, வழங்குகின்ற இசையுடன் பாடுபவர்கள், உலகத்தை நெடிது ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

132. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1416. ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு
ஈரிருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான் மறைப்பொருளை உரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்ற கோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றபோதும் ஓசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருட்சொல்லு(ம்) மிழலையாமே.

தெளிவுரை : சிறப்பான புகழ் மிக்க பெருமைமிகு ஆலமரத்தின்கீழ் இருந்து சனகாதி முனிவர்களாகிய நால்வர்க்கு இரக்கம் கொண்டு உரிய வேதத்தின் பொருளை உரைத்து, ஒளி மிக்க மெய்ந்நெறி அளித்த ஈசன் நிலை கொண்டு விளங்கும் கோயில், உலகில் புகழ்மிக்க பண்டிதர்கள் பல நாட்களாகப் பயின்று ஓதுகின்ற ஓசையை நன்கு கேட்டு, தேன் சொரியும் சோலைகளில் உள்ள கிளிகள் வேதங்களின் பொருள் சொல்லும் வீழிமிழலை ஆகும்.

1417. பொறியரவ மதுகற்றிப் பொருப்பேமத்
தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத் தோன் மன்னும்கோயில்
செறி யிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும்
இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிட்ட இளஅன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே.

தெளிவுரை : படம் கொணட வாசுகி என்ற பாம்பை நாணாக்கி, மேரு மலையைய மத்தாக்கி, தேவர்கள் கூடிப் பாற் கடலைக் கடைய எழுந்த விடத்தை, உட்கொண்ட கண்டத்தையுடைய ஈசன் விளங்கும் கோயில், தாமரை மலர்மீது, இலை குடையாகவும் நெற்கதிர்கள் சாமரையாகவும் திகழ இள அன்னம் மகிழந்திருக்கும் மிழலை ஆகும்.

1418. எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
புரமூன்றும் எழிற்கணாடி
உழுந்தருளும் அளவையின் ஒள்ளெரிகொளவெஞ்
சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந்தரள நகைகாட்டக் கோகநத
முகம்காட்டக் குதித்து நீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டு மிழலையாமே.

தெளிவுரை : ஓரிடத்தில் நில்லாது நகரும் தன்மையில் உலகத்தை நலியச் செய்த அசுரர்களின் முப்புரத்தை எழில் மிக்கு நோக்கி, நொடிப் பொழுதில் எரியாக்கும் வண்ணம், கொடிய சிலைவளைத்த ஈசன் உறையும் கோயில், முத்துப் போன்ற புன்னகையும், தாமரை போன்ற முகமும், கயல் போன்ற விழியும், பவளவாயும் கொண்ட மகளிர் விளங்கும் மிழலையாகும்.

1419. உரைசேரும் எண்பத்து நான்குநூறு
ஆயிரமாம் யோனிபேத
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான் கோயில்
வரைசேரு முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தன்
கையேற்கு மிழலையாமே.

தெளிவுரை : எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களை நிரைசேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிராய் நின்று விளங்கும் ஈசன் கோயில், மலையைத் தொடும் மேகம் முழவம் போன்று அதிர்ந்து ஒலிக்க, மயில்கள் நடம்புரிய, வண்டு இசை பாட, மணம் மிக்க கொன்றை மரங்கள் பொன்போன்ற மலர்களை வழங்க, காந்தன் மலர் கையேந்தி வாங்குமாறு விளங்கும் மிழலையாகும்.

1420. காணுமாறு அரியபெரு மானாகிக்
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன்று உருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
உத்தமனை இறைஞ்சீர்என்று
வேறுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே.

தெளிவுரை : காட்சிக்குப் புலப்படாத அரிய பெருமானாகி, கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என வரும் மூன்று காலமாயும்; சாத்விகம், ரஜோ குணம், தமோகுணம் என்னும் முக்குணமாய், உலகைப் பேணும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று வடிவமும் ஆகி அண்டங்கள் யாவற்றையும் படைத்து அளிக்கும் ஈசன் கோயில், பரப்பிரம்மமாய் விளங்கும தத்துவனை, உத்தமனை இறைஞ்சிப் பணிவீர் என்று மூங்கில்களில் படர்ந்திருக்கும் கொடிகள், தேவர்களை அழைப்பதைப் போன்று விளங்கும் மிழலையாகும்.

1421. அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று
ஐம்புலனும் அடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
துள்ளிருக்கும் புராணர் கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழ்ச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்கு மலர்ப் பொரியட்ட
மணம்செய்யு மிழலை யாமே.

தெளிவுரை : அகத்தில் நிறைந்த அன்பினராய்க் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மார்சரியம், (பொறாமை) ஆகிய ஆறு வகையான பகைகளையும் அழித்து, ஐம்புலன்களின்வழிச் செல்லும் உணர்வுகளை அடக்கிய ஞானிகளின் உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் புராணராகிய ஈசன் கோயில், அன்பாகிய நீர் விளங்கும் குளிர்ந்த தடாகத்தில் சங்குகளின் இனம் திகழ, இதயத் தாமரையாகிய சுடரில் மிகையான புன்கம் என்னும் வாசனைப் பொரி தூவி உயிரானது இறைவனைப் பொருந்துமாறு அட்டமணம் நிகழ்த்தும், மிழலையாகும்.

1422. ஆறாடு சடைமுடியன் அனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடும்
குணமுடையோன் குளிரும்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிந்தவண்டு
வேறாய உருவாகிச் செல்வழிநற்
பண்பாடு மிழலையாமே.

தெளிவுரை : கங்கை தரித்த சடை முடியும், நெருப்போந்திய கரமும், இமய் பாவையாகிய உமாதேவியை ஒரு பாகமாக உடைய திருவடிவமும், நடனம் ஆடும் குணப்பாங்கும் உடைய ஈசன் மகிழந்து விளங்குகின்ற கோயில், சேற்றில் திகழும் செங்கழு நீர்ப் பூக்களில் உள்ள மகரத்தத்தில் பொருந்தி தேன் உண்டு மயங்கி வண்டு, தமது கோலத்தில் மாற்றம் கொண்டு செவ்வழி என்கிற நல்ல பண் இசைக்கும் மிழலையாகும்.

1423. கருப்ப மிகும் உடல்அடர்த்துக் காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறும்அரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர் கோயில்
தருப்பமிகு மலந்தரன்றன் உடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யஇழி
விமானம்சேர் மிழலையாமே.

தெளிவுரை : கன்மத்தில் வழி உண்டாகும் கருவின் வழி கொண்ட உடலின் தினவு மிக்கு, கயிலயை எடுக்கலுறும் இராவணனின் முடியும் தோளும் திருப்பாதவிரல் ஊன்றி நலியச் செய்த புனிதராகிய ஈசன் கோயில், சலந்தராசுரனை அழிக்கும் பொருட்டுத் தோற்றிவித்த ஆழிப்படையை நாடி, விருப்பத்துடன் திருமால் வழிபடாடு செய்வதற்கு விண்ணிலிருந்து இறக்கிய விமானம்சேர் மிழலையாகும்.

1424. செந்தளிர்மா மலரோனும் திருமாலும்
ஏனமோடு அன்னமாகி
அந்தம்அடி காணாதே அவர்ஏத்த
வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியினால் மறைவழியே புல்பரப்பி
நெய் சமிதை கையிற் கொண்டு
வெந்தழலின் வேட்டுலகில் மிகஅளிப்போர்
சேருமூர் மிழலையாமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும், ஏனமும் அன்னமும் ஆகி முடியும் அடியும் காணாது நிற்க, அவர்கள் வணங்கி ஏத்த வெளிப்பட்டவனாகிய ஈசன் கோயில், அறிவு பூர்வமாக, வேத நெறிப்படி தருப்பைப் புல் விரித்து நெய், சமித்து ஆகியன கொண்டு வேள்வி செய்து, உலகத்தில் நலம் விளைவிக்கும் அந்தணர்கள் சேரும் ஊராகிய மிழலையாகும்.

1425. எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
சாக்கியரும் என்றும்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்கு
அருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரு மென்மொழியார் பாலகரைப்
பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும்
இழியும் மிழலையாமே.

தெளிவுரை : எண்ணற்ற சமணர்களும் சாக்கியரும் தன்னை நண்ணாதவாறு மயலைத் தந்து, தன்னடியார்களுக்கு அருள் புரிகின்ற நாதன் கோயில், மகளிர் பண்னிசைத்துத் தம் குழந்தைகளைப் பாராட்டும் விமானத்தோடு பூவுலகுக்கு இறங்கி வரும் மிழலையாகும்.

1426. மின்னியலும் மணிமாட மிடைவீழி
மிழலையான் விரையார்பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகும் சிரபுரக் கோன்
செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்தும்ஏத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
ஈசனெனும் இயல்பினோரே.

தெளிவுரை : ஒளிமிக்க மணிமாடங்கள் கலந்த வீழிமிழலையில் வீற்றிருக்கும் நாதனின் மணம் பொருந்திய திருப்பாதத்தைச் சென்னியில் கொண்டு ஒழுகுகின்ற சிரபுரத்தின் தலைவனாகிய, மறைகள்வல்ல நாவன்மையுடைய புகழ்மிக்க ஞானசம்பந்தன்
பரிந்துரைத்த இத்திப்பதிகத்தை இனிய இசையுடன் பாட வல்லவர்கள், உலகில் பெருமையுடையவராய் மலரும் இயல்புடையவராவர்.

திருச்சிற்றம்பலம்

133. திருக்கச்சி ஏகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

1427. வெந்தவெண் பொடிபூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடும் கடிபொழில்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர்போற்ற
அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த
இடர்கெடுமே.

தெளிவுரை : திருவெண்ணீறு பூசும் மார்பில் முப்புரி நூல் பொருந்தித் திகழ, வாசனை பொருந்திய குழலை உடைய உமாதேவியோடு, பொயில் விளங்கும் கச்சியுள் அளவிடற்கரிய நற்குணங்கள் நிரம்ப்பபெற்றவர்களாகிய திருத்தொண்டர்கள் போற்றித் துதிக்க, அவ் அணங்கினோடு சேர்ந்து நடம் புரிகின்ற எந்தை மேவிய ஏகம்பத்தைத் தொழுது ஏத்த இடரானது கெடும்.

1428. வரம்திகழும் அவுணர் மாநகர் மூன்று
உடன்மாய்ந்து அவியச்
சரந்துரந்து எரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயஇடம்
குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல
குரா மரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பம்
சேர இடர்கெடுமே.

தெளிவுரை : வர பலம் பெற்ற அசுரர்களின் வலிமையான மூன்று நகர்களை நொடியில் மாய்ந்து சாம்பலாகுமாறு சரம் தொடுத்து எரித்த நீண்ட சடைகளை உடைய சங்கரன் மேவிய இடம், குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, மணம் கமழ் குராமரம் யாவும் உரியவாறு பொருந்திய பொழில் கொண்டு விளங்கும் கச்சி ஏகம்பம் ஆகும். அதனைச் சேர இடம் கெடும்.

1429. வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந்து எரியாடல் பேணிய
பிஞ்ஞகன் மேயஇடம்
விண்ணமர் நெடுமாடம் ஓங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பம்
சேர இடம்கெடுமே.

தெளிவுரை : வண்ணம்தரும் வெண்ணீறு பூசும் மார்பில், அழகிய அரவத்தை அணிகலனாகப் புனைந்து, உமாதேவியை ஒரு பாகத்தில் கொண்டு, கரத்தில் அனல் ஏந்தி, நடம் விரும்பிச் செய்த பிஞ்ஞகன் மேய இடம், விண்ணை முட்டும் நெடிய மாட மாளிகைகள் ஓங்கி விளங்கும் கச்சியில், மாறாத பொழில்கள் சூழ்ந்த ஏகம்பம் ஆகும்.

1430. தோலும்நூ லும்துதைந்த வரைமார்பில்
சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த
கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற்
கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூழ் ஏகம்பம்
ஏத்த இடர்கெடுமே.

தெளிவுரை : மான்தோலும் முப்புரி நூலும் துதைந்து பொருந்திய அகன்ற மார்பில், சுடலையின் சாம்பல் அணிந்து, மார்கண்டேயரின் உயிரைக் கவரப் போந்த நாளில், காலனைக் காலால் உதைத்து மாய்த்த கடவுள் விரும்பி உறையும் இடமானது, நெடிய மதியில் வெண்மதி பொருந்தும் கச்சிமாநகரில் மணம் மிக்க சோலைகள் சூழந்த ஏகம்பம் ஆகும். அதனை ஏத்த இடரானது கெடும்.

1431. தோடணிம் மலர்கொன்றை சேர்சடைத்
தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப்
பேய்கள் அவைசூழ
வாடல்வெண் தலையோடு அனல்ஏந்தி
மகிழந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பம்
சேர இடம்கெடுமே.

தெளிவுரை : இதழ் கூடிய கொன்றை மலர் சூடிய சடையில் சந்திரனைசத் தரித்து, நான்மறை பாடவும், பேய்கள் சூழ, மண்டையோடும் நெருப்பும் கரத்தில் கொண்டு மகிழந்து நடம் புரியும், பெமை மிக்கவர் சேரும் கச்சி ஏகம்பத்தை அடைய இடம் கெடும்.

1432. சாகம்பொன் வரையாகத் தானவர்
மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ணொருபாக மாக
அரவொடு நூலணிந்து
மாகந் தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த இடர்கெடுமே.

தெளிவுரை : மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் மூன்று மதில்களை அழித்து, உமாதேவியை, உடம்பில் பாகமாகக் கொண்டு, அரவமும் முப்புரி நூலும் அணிந்து, விண்முட்டும் மணி மாடங்கள் கொண்டு உயர்ந்த மதில் உடைய கச்சி மாநகருள், ஏகம்பத்தில் உறையும் ஈசன், செவ்விய திருவடியை ஏத்த இடம் கெடும்.

1433. வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம்அணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்து
ஏணிலா அரக்கன்றன் நீள்முடி
பத்தும் இறுத்தவன் ஊர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பம்
சேர இடம்கெடுமே.

தெளிவுரை : திங்கள் தரித்த செஞ்சடையில் அரவம் அணிந்து, வாசுகி என்னும் பாம்பினை நாண் என்று கொண்டு பேணி, பிரம கபாலம் கொண்டு பிச்சை ஏற்று, உயர்வில்லாத அரக்கனாகிய இராவணன் முடிகள் பத்தும் நலியச் செய்தவன் இடம், ஓங்கி உயர்ந்த பொழில்களையுடைய கச்சி ஏகம்பம், அதனை நாடி அடைய இடம் கெடும்.

1434. பிரமனும் திருமாலும் கைதொழப்
பேரழல் ஆயபெம்மான்
அரவம் சேர்சடை அந்தணன்
அணங்கினொடு அமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருளள்
மரவம்சூழ் பொழிஏகம் பந்தொழ
வல்வினை மாய்நதறுமே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் கைதொழுத போற்றப் பேரழல் ஆகிய பெருமான், அரவம் சேரும் சடையினனாய் அழகிய தண்மை கொண்ட ஈசன். அவன் உமாதேவியுடன் அமர்ந்து விளங்கும் இடம், கரத்தல் தன்மையில்லாத வள்ளல்கள் வாழ்கின்ற கலிக்கச்சி மாநகர் ஆகும். அதனுள் மல்லிகை சூழ் பொழில் உடைய ஏகம்பம் சென்று தொழ வலியவினை மாயும்.

1435. குண்டு பட்டு அமணா யவரொடும்
கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
அவைகொண்டு விரும்பேன்மின்
விண்டரர் புரமூன்றும் வெங்கணை
ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பம்
காண் இடம்கெடுமே.

தெளிவுரை : சமணர்களும் சாக்கியர்களும் கூறும் உரைகளை விரும்பி ஏற்காதீர்கள். பகைவராகிய முப்புரத்து அசுரர்களை ஒரே கணையால் அழித்த ஈசனின் கச்சி ஏகம்பம் கண்டு வணங்க, இடர் கெடும்.

1436. ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி
யேகம்ப மேயவனைக்
காரினார் மணிமாடம் ஓங்கு
கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன்
பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ
ரோடும் சேர்பவரே.

தெளிவுரை : அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேவிய பெருமானை, மேகம் சூழ்ந்த மணிமாடங்கள் ஓங்கி கழுமல நன்னகருள், உலகம் போற்றவிளங்கும் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய இத் திருப்பதிகத்தைப் பாட வல்லவர்கள், வளம் நிறைந்து புகழ் ஓங்கி விண்ணுலகத்தவரோடும் சேர்ந்திருப்பர்.

இம்மைச் சிறப்பும் மறுமை நலமும் வாய்க்கப் பெறும் என்பதாம்.

134. திருப்பறியலூர் வீரட்டம் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர், நாகப்பட்டினம் மாவட்டம்)

1437. கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறி யலூரில்
விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.

தெளிவுரை : ஈசன், யாவும் தானேயாகி ஆட்சி கொண்டு செய்யும் கருத்துடையவனாகிய கடவுள்; நெருப்பைக் கரத்தில் ஏந்தி நடனம் புரிபவன்; பிறைச் சந்திரனைச் சடையில் சூடியவன். அப்பெருமான் மனத்தின் வழி, புலன்களைச் செல்லவிடாது, தன் கழலை நாடச் செய்யுமாறு, திருத்தம் உடைய சான்றோர்கள் விளங்கும் திருப்பறியலூரில் தொன்மை மிக்கவன் எனத்தக்க வீரட்டத்தானே ஆவன்.

1438. மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பொருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

தெளிவுரை : பிணி தீர்க்கும் மருந்தாய், நன்று காக்கும் அமுதனாய், மயானத்துள் நடம் புரியும் அழகனாய், கங்கையைச் சென்னியில் வைத்த பெருமான், பிறவிப் பிணியின் வயப்பட்டு அவலம் அடையாதவாறு, திருந்தப் புகலும் மறை வல்லவர்கள் விளங்கும் திருப்பறியலூரில், மலர்ச் சோலை திகழும் வீரட்டத்தான் ஆவன்.

1439. குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

தெளிவுரை : கங்கை தரித்த சடையுடைய ஈசன், கெடுஞ் சிலையுடைய மன்மதனைச் செற்றுத் தெளிந்த மறையோர் விளங்கும் திருப்பறியலூரில் சோலை சூழ்ந்த வீரட்டானத்தில் விளங்குபவன்.

1440. பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தம் செலச்செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடம்சூழ வீரட்டத் தானே.

தெளிவுரை : ஈசன் பிறப்பின் தன்மையில்லாதவன். ஏனையோர் பிறவிக்கும் இறப்புக்கும் தோற்றமும் முடிவும் ஆகிச் செல்லும் நிலையில் ஒளிவண்ணமாய் இருந்து கலந்து செறிந்தவன். அவன் சிறப்புடைய பெருமக்கள் திகழும் திருப்பறியலூரில், வீரம் மிக்க பூதகணங்கள் சூழ விளங்கும் வீரட்டானன் ஆவன்.

1441. கரிந்தார் இடுகாட்டில் ஆடும்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

தெளிவுரை : இறந்தவர்களை எரிக்கும் இடுகாட்டில் ஆடுகின்ற, கபாலத்தைக் கையில் ஏந்திய ஈசன், படுதம் எனப்படும் ஆட்டத்தை ஆடியவர். அப்பெருமான், நன்கு மறைவல்ல அந்தணர்கள் விளங்கும் திருப்பறியலூரில், விரிந்து மலரும் சோலையுடைய வீரட்டானத்தில் வீற்றிருப்பவர்.

1442. அரவுற்ற நாணா அனல்அம்ப தாகச்
செருவுற் றவர்புரம் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.

தெளிவுரை : வாசுகி என்னும் பாம்பு நாணாகவும், அக்கினி தேவன் அம்பாகவும் கொண்டு, பகைமை கொண்ட அசுரர்களின் மூன்று புரங்களைத் தீயில் வேகுமாறு செற்றவன், ஈசன். அப்பெருமான், தெருக்களில் தோரணங்களால் அலங்கரிக்கப் பெற்ற திருப்பறியலூரில் வீரட்டானத்தில் எழுந்தருளுப் பெற்றவன். அச்சத்தால் அயர்வு கொண்டவர்கள் தொழுது போற்ற அருள்புரியும் ஈசன் அவனே.

1443. நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

தெளிவுரை : ஈசன், நரை போன்ற வெண்மையான இடபத்தை வாகனமாக உடையவன்; அடியவர்களின் நலன்களைக் கருத்தில் ஏற்று வேண்டியவாறு அருள்புரியும் பெருமான்; அரவத்தை அரையில் அழகாக் கட்டியுள்ளவன். அப்பெருமான் நீர்வளம் மிக்க திருப்பறியலூரில் மணங்கமழும் சோலைகள் விளங்கும் வீரட்டானத்தில் வீற்றிருப்பவன்.

1444. வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதான் இருந்தோழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழந்த வீரட்டத் தானே.

தெளிவுரை : வளைந்த கூரிய பற்களை உடைய அரக்கனாகிய இராவணனை, கயிலை மலையின் கீழே மெலியுமாறு செய்த பரமன், மட அன்னம் மகிழந்து விளங்கும் வயல்கள் கொண்ட திருப்பறியலூரில், விளை நிலம் சூழ்ந்த வீரட்டானத்தில் வீற்றிருப்பவன்.

1445. விளங்கொண்மலர்மேல் அயன்ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம் பனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத் தானே.

தெளிவுரை : விளங்குகின்ற ஒண்மலராகிய தாமரையில் மேல் உறையும் பிரமனும், கடல் வண்ணனாகிய திருமாலும், தளர்ந்த மனத்தினராய் அயர்ந்து தொழுத போற்ற, தழலாய் ஓங்கி நின்ற பெருமான், இளங்கொம்பு அனையாள் என்னும் திருநாமம் தாங்கிய உமையவளோடு உடனாகி இணைந்தும், கூறுடைய அர்த்தநாரியாய்ப் பிணைந்தும், திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்தான் ஆவன்.

1446. சடையன் பிறையன் சமண்சாக் கியரோடு
அடையன் பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.

தெளிவுரை : ஈசன், சடை முடியுடையவன்; பிறைச் சந்திரனைச் சூடியவன்; சமணர், சாக்கியர் அடையாதவாறு அன்பற்றவராய்ப் புறத்தே நிற்க, தன்னை வணங்கும் அடியவர்களுக்கும் அருள்புரியும் பெருமான்; புலியின் தோலை உரித்து உடையாகக் கொண்டவன்; இடப வாகனத்தினை உடையவன். அவன் திருப்பறியல் விரட்டானத்தில் வீற்றிருப்பவன்.

1447. நறுநீர் உகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீடு அரவன் புனைபாடல் வல்லார்க்கு
அறுநீடு அவல மறும்பிறப் புத்தானே.

தெளிவுரை : நறுமணம் மிக்க நீர் பெருக்கும் காழியில் விளங்கும் ஞானசம்பந்தன், சுவைமல்கும் நீர் வளம் மிக்க திருப்பறியல் வீரட்டத்தில் விளங்கும் அரவம் தரித்த பெருமானைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு, அவலம் அறும்; மறு பிறப்பும் அற்று விடும்.

திருச்சிற்றம்பலம்

135. திருப்பராய்த்துறை (அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்)

திருச்சிற்றம்பலம்

1448. நீறுசேர்வதொர் மேனியர் நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர்சடை அண்ணலே.

தெளிவுரை : பராய்த்துறையில் வீற்றிருக்கும் அண்ணலாகிய ஈசன், திருவெண்ணீறு அணிந்த மேனியை உடையவர்ந உமையவளைக் கூறாகக் கொண்ட வடிவத்தை உடையவர்; பருந்து கொத்தும் தலையாக உள்ள மண்டையோட்டினைக் கரத்தில் கொண்டு, கங்øயைச் சடையில் சேர்த்தவர், அப்பெருமானை ஏத்திப் பணிக என்பதாம்.

1449. கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண் மாதவி சூழந்த பராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.

தெளிவுரை : நறுமண மலராகிய கொன்றை கமழும் சடையில் பெருகி வந்த கங்கையை வைத்தவர், மாதவி மலர்கள் சூழ்ந்த பராய்த்துறையில் அந்தம் அற்றவராய் விளங்கும் அடிகள் ஆவர்.

1450. வேதர்வேதமெல் லாமுறையால்விரித்து
ஓதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு வாவர் பராய்த்துறை
ஆதியாய அடிகளே.

தெளிவுரை : வேதமாகவும், வேதம் யாவையும் விரித்தவராகவும், யாவராலும் ஓதிப் போற்றப்படும் ஒப்பற்ற ஒருவனாக விளங்கிப் பாதி பாகம் உமையவளின் வடிவத்தோடு கொண்டு அர்த்தநாரீசராக விளக்குபவர், பராய்த்துறையில் திகழும் ஆதியாகிய அடிகள் ஆவர்.

1451. தோலுந்தம்மரை யாடை சுடர்விடு
நூலும் தாம்அணி மார்பினர்
பாலும்நெய்பயின்று ஆடுபராய்த்துறை
ஆல நீழல் அடிகளே.

தெளிவுரை : புலித்தோலை அரையில் ஆடையாக உடுத்தி, முப்புரி நூல் அணிந்த மார்பினராய், ஆலமரத்தின் நிழலில் குரு மூத்தமாய் விளங்கும் அடிகள், பராய்த்துறையில் பாலும் நெய்யும் பூசனைப் பொருள்களாகச் சூடப்பெற்றுத் திகழ்பவர் ஆவர்.

1452. விரவிநீறு பூசுவர் மேனிமேல்
இரவில் நின்றெரி ஆடுவர்
பரவினாரவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.

தெளிவுரை : திருநீறு மெய்யில் பூசி, மேனியின் மீது அரவத்தை உலவுமாறு செய்த அடிகள், இரவில் நெருப்பினைக் கரத்தில் ஏந்தி ஆடுவர், பராய்த்துறையில் மேவி வேதத்தை விரித்தவர் ஆவர்.

1453. மறையும் ஓதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்டம் உடையவர்
பறையும்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

தெளிவுரை : வேதம் விரிப்பவர்; மான் கையினர்; கறை தந்த நஞ்சருத்திய கண்டத்தை உடையவர்; வெற்றிச் சின்னமாகச் சங்கொலிக்கும் பராய்த்துறையில், மந்திரச் சொல்லாக மேவும் அடிகள் ஆவர்.

1454. விடையும் ஏறுவர் வெண்பொடி பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகள்.

தெளிவுரை : பராய்த்துறை என்னும் திருத்தலத்தில் எங்குமாய் முழுமையாய் மேவிய அடிகள், இடப வாகனத்தில் ஏறும் பெருமான்; வெண்ணீறு அணியும் பரமன்; சடையில் கங்கை தரித்த ஈசன். அவர், ஒளி பொருந்திய மழுவைப் படையாகக் கொண்டுள்ளவர்.

1455. தருக்கின் மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார் விரல் ஒன்றினால்
பருக்கினார்அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் றன்னை அடிகளே.

தெளிவுரை : தருக்குற்ற இராவணனைத் தனது திருப்பாத விரலால் அடக்கி, பின் அவன் செருக்கு அழிந்து பணிந்து போற்ற, வளமை செய்தவர் பராய்த்துறை விளங்கும் அடிகள்.

1456. நாற்றமாமல ரானொடு மாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார் வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.

தெளிவுரை : பிரமனும் திருமாலும் தேடியும் எத்தகைய காட்சியும் தோற்றம் பெறாதவராய் ஆற்றல் மிக்கவராய்ப் பராய்த்துறையில் மேவிய அடிகள்; அடியவர்கள் வினைகளைச் சிதறுண்டு விலகுமாறு செய்பவர்.

1457. திருவிலிச்சில தேரணமாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலால்எயில் எய்துபராய்த் துறை
மருவினான்றனை வாழ்த்துமே.

தெளிவுரை : திருவற்றராகிய சில சமணர்களும் தேரர்களும் சொல்லும் உரை கொள்ளற்க, மேருமலையாகிய பருமையான வில்கொண்டு முப்புரம் எரித்து பராய்த்துறை மருவி விளங்கும் ஈசனைப் போற்றி வணங்குவீராக.

1458. செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தன செந்தமிழ்
செல்வமாம் இரை செப்பவே.

தெளிவுரை : செல்வம் பெருகும் பராய்த்துறையின் செல்வனாகிய ஈசனைச் சிதைவுபடாத நிறைசெல்வமாகிய ஞானசம்பந்தன் செந்தமிழ்ப் பதிகத்தைச் சொல்ல செல்வம் பயக்கும் . இம்மை நலனும் மறுமை நலனும் தரும் என்பதாம்.

திருச்சிற்றம்பலம்

136. திருத்தருமபுரம் (அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)

திருச்சிற்றம்பலம்

1459. மாதர்ம டப்பிடியும் மட வன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவர் ஆழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரைபொரு துவிம்மிநின்று அயலே
தாதவிழ் புன்னை தயங்கும லர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : தருமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் நாதனாகிய ஈசன், அழகிய பெண் யானையும் அன்னமும் போன்ற நடையுடைய மலைமகளாகிய உமையவளை உடனாகித் துணையாகக் கொண்டு மகிழ்பவர்; பூத கணங்கள் நின்று இசை பாட ஆடுபவர்; படர்ந்த சடை முடியில் கங்கை தரித்தவர்; வேத கீதங்களும், ஏழிசையும் பாடுபவர்; அப்பெருமான் கடலின் அலைகள் இரைச்சல் கொண்டு கரையை நோக்கி மேலெழுந்து மோத, அயலே விளங்கும் புன்னை மரங்களில் ஒளிரும் மலர்களில் சிறகுகளை உடைய வண்டினங்கள் எழிலாக இசைக்க, பொழில்களில் வாசம் செய்யும் குயில்கள் அதனைப் பயிலவும்எழில் மிக்கு விளங்கும் தருமபுரத்தில் வீற்றிருப்பவர்.

1460. பொங்கு நடைப்புகலில் விடை யாம்அடர் ஊர்திவெண்
பொடி யணி தடங்கொண்மார் புபூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவர் ஆடுவர்
வளம் கிளர் புனல்அர் வம்வைகிய சடையர்
சங்குக டல்திரையால் உதை யுண்டுச ரிந்திரிந்து
ஒசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிருள் ஒல்கநின்று
இலங் கொளிந் நலங் கெழில் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : சங்குகள் கடல் அலைகளால் உதையுண்டு கரை நோக்கித் தள்ளப்பெற்றுச் சரிந்து திரிந்து ஓடிந்து மேட்டில் தங்கிக் கதிர்விடும் முத்துக்கள் வெளிப்பட, ஒளி விளங்கும் எழில் நலம் உடையது தருமபுரம் என்னும் பதியாகும். அத்தகைய பதியில், கம்பீர நடை கொண்ட இடபத்தினை வாகனமாகக் கொண்டு, அகன்ற மார்பில் திருவöண்ணீறு அணிந்து, பூணும் முப்புரி நூல் புரள, ஆகாயத்தில் தவழுமச் சந்திரனைச் சூடி, வளம் திகழ் கங்கை தரித்துக் கிளர்ந்தெழும் அரவம் வைகிய சடை முடி உடையவராகிய ஈசர், நடம் புரிவர்.

1461. விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரிசுரி யொளி கொடோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர்வெண்மதிக் கண்ணியர்
கழிந்தவர் இழிந்திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர்தம் முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவல்மருங்கலர்
கருங்கழிந் நெருங் குநல் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : குளிர்ந்த இதழ்களையுடைய முல்லையும், எட்டு இதழ்களையுடைய மல்லிகையும் அடர்ந்து மிகுந்துள்ள நன்மை திகழ விளங்குவது தருமபுரம் என்னும் பதியாகும். அப்பதியின்கண், எழுந்தருளியுள்ள ஈசன், மலைபோல் பெருமை கொண்ட உயர்ந்த இடபத்தில் ஏறுவர்; கங்கை சூடுவர்; வரிந்தும் வளைந்தும் ஒளிகொண்டு விளங்கும் தோடு காதில் திகழத் தரித்து நின்று, ஒளி தரும் வெண்மதியும் சூடுவர்; இறந்தவர்களின் தலையோட்டினை தொழுமாறு விளங்குவர்; உமாதேவியைக் கூறாகவும் உடனாகக் கொண்டும் பிரியாது விளங்குவர்.

1462. வாருறு மென்முலைநன் னுதல் ஏழையொடு ஆடுவர்
வளங் கிளர்விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடிவெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோர்அவர்
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.

தெளிவுரை : நல்ல கொன்றை மலர்மாலையிலிருந்து பெருகும் மகரந்தத் தாதுக்குள் மழைபோன்று விளங்கும் தருமபுரம் என்னும் பதியில் வீற்றிருக்கும் ஈசன், உமையவளுடன் சேர்ந்து நடம் புரிபவர்; வளரும் திங்கள் விளங்கும் சடையுடையவர்; கார்காலத்தில் நிலைத்து மலரும் கொன்றை மலரைச் சூடியவர்; இடபக் கொடியுடையவர்; இடுகாட்டியல் உறைபவர்; பூவுலகத்தாராலும் விண்ணுலகத்தாராலும் வணங் கப்படுபவர்; கபாலம் ஏந்திப் பலி கொள்வதை கீழ்மையாகக் கருதாதவர்.

1463. நேரும வர்க்குணரப் புகில் இல்லைநெ டுஞ்சடைக்
கடும்புனல் படர்ந்திடம் படுவ்வாதார் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்பு
இலா தவர்உடற் றடர்த் தபெற்றியார் அறிவார்
ஆரம வர்க்கழல்வா யாதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃகொழும் மலர்கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மகள்ஊர்வது போர்விடை
கடிபடு செடி பொழில் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : ஈசனார்க்கு, இணையாகச் சொல்லுவதற்கு யாரும் இல்லை. நெடிய சடையில் கடும் புனலாகும் கங்கை தரித்தவர்; பேரும் ஆயிரம் உடையவர்; பிறப்பும் இறப்பும் இல்லாதவர்; மாறுபாடு கொண்ட பகைவரை அடர்த்து வெற்றி கண்ட தன்மையை யாரால் அறிய முடியும் ? நெருப்புப் போன்று சீறும் நாகம் அவருக்கு ஆரமாகும்; அழகு மிளிற விளங்கும் செழுமையான மலரைச் சூடுவது பொன்மயமான கொன்றை மலர் மாலையாகும். அவருக்குத் தாரமாவது மலையரசன் மகளாகிய உமையவள்; அவர் வாகனமாக ஊர்வது இடபம்; வாசனை பொருந்திய பொழில்கள் சூழ்ந்த தருமபுரம் அவர்தம் பதியே.

1464. கூழையங் கோதைகுலா யவள்தம்பினை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம்மலி படைவிடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி
சைபுள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : யாழையும் விஞ்சும் தன்மையில் ஏழிசையில் வண்டுகள் கீதம் இசைக்கச் சிறகுகள் விரித்துப் பறந்து தாழையும் கொன்றையும் உடைய சோலையில் விளங்கப் புள்ளினம் துயில் கொள்ளும் தருமபுரம் என்னும் பதியில், அழகிய கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து இடபக் கொடியும் மழுப்படையும் தாங்கி ஈசன் விளங்குகின்றார்.

1465. தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்
திருந்திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்
றைதொல் புனல் சிரங்கரந் துரித்ததோல் உடையர்
காமரு தண்கழிநீ டிய கானல கணடகங்
கடல் லடை கழியிழி யமுண்டகத் தயலே
தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயல் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : தேன்கமழ் கூந்தலும், அன்ன நடையும், பெண்மான் விழியும் திருந்திழையும் கொண்ட உமையவளைப் பாகமாகக் கொண்டு, சிவந்த திருமேனியும், செங்கதிர் மருவும் சடையில் வெண்மதியும் கொன்றையும் ஏற்றுத் தோலுடைய அணியும் இறைவன், நீர் வளம் மிகுந்த நிலையில் சோலைகளும் கடல் தாழையும், தாமரை, குவளை, கழுநீர்ப் பூக்களும், மணம் கமழச் செறிந்த வயல்களும் கொண்ட தருமபுரத்தைப் பதியாக உடையவர்.

1466. தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர்வரை புரை திரள்புயம் மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலைம் மலி படையொர்மூ லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடையவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடம்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : ஈசன், தூய வெண்ணீறு வரிந்து பொலிய அகன்ற மார்பிலும், புயங்களிலும் அணிவர்; கோவணமும் மான் தோலும் ஆடையாக உடையவர்; சூலப்படை ஏந்திய அழகர்; பாடல்வண்ணமாக சாம கீதத்தை இசைத்து வேண்டிய அரக்கனான இராவணனுடைய துன்பத்தை நீக்கி, அருள் புரிந்த தலைவர். இடப வாகனத்தை உடைய எம் அடிகளாகிய அப்பெருமான், இடமாகக் கொண்டு வீற்றிருப்பது, கடலின் கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.

1467. வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங்கிளர் மதியர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண் மழு வும்மவர் வெல்படை
குனிசலை தனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொள் தாமரையும்
மிசை யவன் னடிம் முடி யளவுதாம் அறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங்கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : ஈசனார், மாதொரு பாகமாய் ஆகுவர்; வளரும் சந்திரனும் அரவமும், விளங்கும் சடை முடியுடையவர்; கூர்மையான சூலமும் மழுவும் படையாக உடையவர்; வளைக்கப்பெறும் வில்லாக மேருமலையை ஏந்திய அழகர்; ஆழிப் படைகொண்ட திருமாலும், தாமரை மலர்மிசை விளங்கும் பிரமனும் அடி முடியின் அளவு காணப் பெறாதவராகியவர்; கொன்றை மாலையை உகந்து அணிபவர். அவர் வீற்றிருக்கும் இடம் தருமபுரம் என்னும் பதியாகும்.

1468. புத்தர்க டத்துவர் மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில்பெற் றியுற் றநற்றவர் புலவோ
பத்தர்க ளத்தவமெய்ப் பய னாகவுகந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலையிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் திய மால்கடல் ஓதம்வந்
தடர்ந்திடுந் தடம் பொழில் தருமபு ரம்பதியே.

தெளிவுரை : புத்தர்களும் சமணர்களும் உரைக்கும் பொய்யுரைகளை நீக்கி, அழிவில்லாத சிறப்புடைய நற்றவ வேந்தர்கள், அறிஞர்கள், பக்தர்கள் ஆகியோர்தம் மெய்த்தவத்தை உகந்தவராகிய ஈசன், சிவந்த வண்ணமுடையவர்; சுடலைப் பொடியணிபவர்; உமையவளைப் பாகமாகக் கொண்டு பிரியாது விளங்குபவர். அவர் அருவிகள் உந்திய கடல் ஓதமும் பொழிலும் கொண்ட தருமபுரத்தைப் பதியாக உடையவர்.

1469. பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூம் புனலதிரூம் வமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதிஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங்கடல் தருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன்பிணை துணைகழல் கள்பேணுத லுரியார்
இன்னெடு நன்னுலகெய் துவர் எய்திய போகமும்
முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே.

தெளிவுரை : அழகிய நெடிய நன்மணிகள் பதிந்த மாளிகை சூழந்த விழாக்கள் மலியவும், நீர் கரை மோத உள்ளதும், தனக்கு இணையாக வேறு இல்லை எனவும் விளங்கும் புகலியின் ஞானசம்பந்தன் வழங்கிய செந்தமிழ் கொண்டு, தருமபுரத்தில் வீற்றிருக்கும் தலைவனாகிய, நீண்ட சடையில் பிறைச் சந்திரனும் அரவும் கொண்டு விளங்கும் ஈசன் துணைக் கழல்களைப் பேணி வணங்குபவர்கள், இனிய நல்லுகத்தினை எய்துவார்கள்; போகம் பெறுவார்கள்; இடம், பிணி முதலான அவலங்கள் இல்லாதவராவார்கள்.

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் முதல் திருமுறை மூலமும் உரையும் முற்றிற்று.

© Om Namasivaya. All Rights Reserved.