Books / சைவ சித்தாந்தம்


சைவ சித்தாந்தம்

ஒரு அறிமுகம்


சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி சைவ சமயத்துக்கு அடிப்படையாக சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு விளங்குகிறது. சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மையே சித்தாந்தம் எனப்பொருள்படும். (அந்தம் - முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்.

சைவ சித்தாந்தத்தின் நூல்கள்: சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்களில் சிறப்பானதாகக் கருதப்படுவது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் ஆகும். இதனுடன் சேர்த்து பல ஆசிரியர்களால் எழுதப்பட்ட 14 நூல்கள் சைவ சித்தாந்தத் தத்துவ விளக்க நூல்களாகும். இவற்றுட் தலையாய சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்டாரின் பெயரைத் தழுவி இவை மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படுகின்றன.

திருவுந்தியார்
திருக்களிற்றுப் படியார்
சிவஞான போதம்
சிவஞான சித்தியார்
இருபா இருபஃது
சிவப் பிரகாசம்
திருவருட் பயன்
வினா வெண்பா
போற்றிப் பஃறொடை
கொடிக்கவி
நெஞ்சு விடு தூது
உண்மை நெறி விளக்கம்
சங்கற்ப நிராகரணம்
உண்மை விளக்கம்

தத்துவ அடிப்படைகள்

பதி (இறைவன்)
பசு (உயிர்)
பாசம் (மலங்கள்)

ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.

இறைவன்:
  அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.

உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.

மலங்கள்:
மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது.

சித்தாந்தமும் வேதாந்தமும்: உமாபதி சிவம் நெஞ்சுவிடுதூது என்னும் சிந்தாந்த பிரபந்தத்தில் உலகாயதம், வேதாந்தம், பௌத்தம், சமணம், மீமாம்சகம் ஆகிய தத்துவங்களைச் சித்தாந்தப் பார்வையில் மறுத்துக் கூறிச் சித்தாந்த சைவத்தினை நிலைநாட்டியுள்ளார்.  சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும் சைவ சித்தாந்தம் சாதியமைப்பை பெருமாபாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது. இது அது தோற்றம் கண்ட காலத்தில் (சோழர் காலம்) இருந்தே இருந்து வருகின்றது. பிராமணர் அல்லாதவர்கள் இந்தக் கட்டமைப்பில் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்களாகவும், மதக்குருமார்களான பிராமணர்கள் சடங்கு ரீதியில் முக்கியத்துவம் பெறுவர்களாகவும் இருக்கின்றார்கள்.

© Om Namasivaya. All Rights Reserved.