Books / மஹா புராணங்கள்


விஷ்ணு புராணம்

இரண்டாவது அம்சம் (பகுதி-1)


1. பிரியவிரத வம்சம்

பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். நீங்கள் கூறியருளிய முதலம்சத்தில், உலகப்படைப்பு சம்பந்தமாக நான் மீண்டும் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். சுவாயம்புவ மனுவின் பிள்ளைகளான பிரியவிரதன், உத்தானபாதன் என்பவர்களில், உத்தானபாதனுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான் என்று அருளிச்செய்தீர்கள். மற்ற பிரியவிரதனுடைய வமிசத்தை பற்றித் தாங்கள் கூறவில்லை. ஆகையால் அதைச் சொல்ல வேண்டும் என்று மைத்ரேயர் கேட்டார். அதற்கிணங்கி பராசர மகரிஷி கூறலானார். கேளும் மைத்ரேயரே! அந்த பிரியவிரதன் கர்த்தமப் பிரஜாபதியின் குமாரியை மணந்து சம்ராட்டு, குஷி என்ற இரு பெண்களையும் ஆக்கினீத்திரன், அக்கினிபாகு, வபுஷ்மான், தியுதிமான், மேதா, மேதாதிதிபவியன், வைனன், புத்திரன், ஜியோதிஷ்மான் என்ற பத்துப்பிள்ளைகளையும் பெற்றான். அவர்கள் மகாஞானியர். அவர்களில் ஜியோதிஷ்மான் என்பவன் தனது பெயருக்கேற்ற வகையில் மிகவும் தேஜஸ் உடையவனாக விளங்கினான். பிரியவிரதனின் பிள்ளைகளில் மேதா, அக்கினிபாகு, புத்திரன் என்ற மூவரும் பூர்வஜன்ம ஞானத்தால் யோகாப்பியாசத்தில் முக்கிய மகானுபவராய் அரசாட்சி முதலியவற்றில் பற்றற்றவராய், கர்ம பலன்களை விரும்பாதவாய் விதிப்படிக் கர்மாதிகளைச் செய்து வந்தனர். அதனால் பிரியவிரதன் தன்னுடைய ஆட்சியிலிருந்த ஏழு தீவுகளை அந்த எழுவருக்கும் ஒப்படைத்தான். அவர்களில் ஆக்கினீத்திரன் என்பவன் ஐம்பூத்வீபத்தையும், மேதாதி என்பவன் பிலக்ஷத்துவீபத்தையும், வபுஷ்மான் என்பவன் குசத்வீபத்தையும், தியுதிமான் என்பவன் கிரவுஞ்சக்தி வீபத்தையும், பவியன் என்பவன் சாகத்துவீபத்தையும், வைனன் என்பவன் புஷ்பகரத்து வீபத்தையும் அரசாண்டு வந்தார்கள்.

ஜம்பூத் தீவின் அதிபதியான ஆக்கினீத்திரனுக்கு, நாபி கிம்புருஷன், ஹரிவருஷன், இளாவிரதன், ரமியன், இரண்வான் குரு; பத்திராசுவன், கேதுமாலன் என்ற ஒன்பது புதல்வர்கள் பிறந்தனர். அவர்களுடைய தந்தை தனது அரசான ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி, நாபிக்கு தென்பகுதியான பாரத வருஷத்தையும், ஹரிவருஷனுக்கு நைஷத்தையும், இளாவீரதனுக்கு மேருமலையின் இடைப்பட்ட இளாவிருத வருஷத்தையும், ரம்மியனுக்கு நீலாசலத்தைச் சேர்ந்த ரம்மியக வருஷத்தையும், ஹிரண்யவானுக்கு அதற்கு வடக்கிலுள்ள ஸ்வேத வருஷத்தையும், குரு என்பவனுக்கு சிருங்கலத் என்ற மலைக்கு வடக்கிலுள்ள குரு வருஷத்தையும், பத்திராசுவனுக்கு மேருமலையின் கிழக்கேயுள்ள பத்திராசுவ வருஷத்தையும், கேதுமாலனுக்கு கந்தமாதன வருஷத்தையும் கொடுத்து அவர்களுக்கு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து விட்டுத் தவவேடம் பூண்டு, மிகவும் தூய்மையான ஸாளக்கிராமம் என்ற திவ்விய ÷க்ஷத்திரத்திற்குப் போய்ச் சேர்ந்தான். கிம்புருஷ வருஷம் முதலான எட்டு வாசஸ்தானங்களிலும் வசிப்போருக்கு யாதொரு முயற்சியும் இல்லாமலேயே பெரும்பான்மையின் சுகானுபவயே கிடைக்கும். துக்க அனுபவமும், மூப்பு, சாவு, இவை பற்றிய பயமும், தருமம், அதருமம் என்பவைகளும் உத்தமன், மத்தியமன், அதமன் என்ற வித்தியாசங்களும், பிராணிகளுடைய உடல் குறைதல் போன்ற அடையாளமுள்ள யுகபேதங்கள் இல்லை.

ஹிமாஹ்வயம் அல்லது பாரதம் என்ற தேசத்துக்கு அதிபதியான நாபி என்பவருக்கு, மேரு தேவி என்பவளிடத்தில் மிகவும் தேஜசுடைய ரிஷபர் என்பவர் பிறந்தார். அவர் நூறு பேருக்குள்ளே மூத்தவர். அந்த ரிஷப மகாராஜன் தர்மமாக ராஜ்ய பரிபாலனஞ்செய்து, பலவிதமான யாகங்களையும் நிறைவேற்றி, மூத்தகுமாரனான பரதனுக்கு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, தவஞ்செய்யும் பொருட்டுப் புலகருடைய ஆஸ்ரமமான சாளக்கிராம ÷க்ஷத்திரத்திற்குச் சென்றார். அங்கு அவர் வானப் பிரஸ்த விதிப்படி தவங்களையும், யாகங்களையுஞ்செய்து, அந்த தவமுயற்சியினால் உடலிலுள்ள நம்புகள் வெளித்தோன்றும்படி மிகவும் இளைத்துப் போய், பிறகு தனது ஆடைகளையெல்லாம் எறிந்து, நிர்வாணமாய், வாயில் பந்து போன்ற கற்கவளத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து மகாப்பிரஸ்தானம் போய்விட்டார். இவ்விதமாக பரத மகாராஜனுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தேசத்திற்குப் பாரத வருஷம் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தப் பரதனுக்கு தர்மசீலனான சுமதி என்ற புதல்வன் பிறந்தான். பரதனும், நீதிமுறைப்படி அரசாண்டு, யாகங்களைச் செய்து, பிறகு புத்திரனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, சாளக்கிராம ÷க்ஷத்திரத்திற்குச் சென்று, யோகாப் பியாசஞ் செய்து, பிராணனை விட்டான். அவன் மறுபடியும் உத்தமமான யோகியர் வமிசத்தில் ஒரு பிராமணனாகப் பிறந்தான். மைத்ரேயரே! அந்தப் பரதனின் சரித்திரத்தை பிறகு சொல்கிறேன். பரதனின் குமாரனான சுமதிக்கு, இந்திரத்தியும்னன் என்ற குமாரன் பிறந்தான். அவனுக்குப் பரமேஷ்டி என்பவன் குமாரன் அவனுக்குப் புத்திரன் பிரதிஹாரன். அவனுடைய மகன் பிரதிகர்த்தா. அவனுக்குப் பவன் என்பவனும், அவனுக்கு உத்கீதி என்பவனும், அவனுக்கு பிரஸ்தாவன் என்பவனும் பிறந்தார்கள். அவன் மகன் பிருது. பிருதுவின் மகன் நக்தன், அவனுடைய மகன் கயன்; கயனுடைய மகன் நான், அவன் மகன் விரோகணன், அவன் மகன் வீரியன், அவன் மகன் தீமான். அவன் மகன் மகாந்தன், அவன் மகன் பாவனன், அவன் மகன் துவஷ்டா, அவனுக்கு விரஜன், விரஜனுக்கு ரஜன். அவன் மகன் சதஜித்து, அந்த சதஜித்துக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்; அவர்களில் மூத்தவன் விஷ்வக்ஜோதி, இந்த விஷ்வக்ஜோதி முதலியவர்களால்தான் பிரஜைகள் நன்றாக வளர்க்கப்பட்டார்கள், அவர்களால் இந்தப் பாரத வருஷம் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவர்களது குலத்தில் பிறந்தவர்களால், பாரத பூமியானது எழுபத்தொரு சதுர்யுகம் வரை அனுபவிக்கப்பட்டது. இதுதான் சுவாயம்புவமனுவின் படைப்பாகும். இந்த வராக கல்பத்தில், முதலாவது மனுவான சுவாயம்புவமனுவின் காலத்தில்தான் இந்தப் பிரியவிரத சந்ததிக் கிரமம் நடந்தது.

2. பூமண்டலத்தின் பிரிவுகள்

பராசர முனிவரே! தாங்கள் சுவாயம்புவமனுவின் படைப்புக் கிரமத்தைக் கூறியருளினீர்கள். இனி பூமியின் மண்டலத்தையும் அதிலுள்ள சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், காடுகள், நதிகள், தேவர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அளவு, ஆதாரம், சொரூபம் ஆகியவற்றைக் கூறவேண்டும்! என்று மைத்ரேயர் கேட்டார். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! இந்த விஷயங்களை விவரித்துச் சொல்வதற்கு அநேகம் ஆயிரம் ஆண்டுகள் போதாது. ஆயினும் நான் சுருங்கச் சொல்கிறேன். இந்தப் பூமியானது ஜம்புத்துவீபம், சால்மலத்துவீபம், பிலக்ஷதவீபம், குசத்துவீபம், கிரவுஞ்சத்துவீபம், சாகத்துவீபம், புஷ்கரத்துவீபம் என்ற ஏழு த்வீபங்களாகப் பிரிந்திருக்கின்றன. இந்த ஏழு த்வீபங்களும் உப்பு, கருப்பஞ்சாறுகள், நெய், தயிர், பால், சுத்தநீர் என்ற ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளன. இவற்றினுள்ளே, ஜம்புத்வீபம் என்பது எல்லாவற்றுக்கும் நடுவில் இருக்கிறது. அதற்கு நடுவில் மேரு என்ற சுவர்ண மலையானது எண்பத்து நாலாயிரம் யோசனை உயரமும், பதினையாயிரம் யோசனை பூமிக்குள்ளே ஊடுருவியும், முப்பத்தேழாயிரம் யோசனை தரையில் விரிந்ததும், பதினாறாயிரம் யோசனை அடியில் விரிந்ததுமாகி, பூமி என்ற தாமரை மலருக்குக் கர்ணிகையைப் போல விளங்குகிறது. இதற்குத் தென்திசையில் இமவான்; ஏமகூடம், நிஷதம் ஆகிய மூன்றும் வடபுறத்தில் நீலம், சுவேதம், சிருங்கி என்ற மூன்றும் வருஷங்களின் எல்லை மலைகளாக இருக்கின்றன. அவற்றின் நடுவேயிருக்கும் இரண்டு மலைகள் லக்ஷம் யோசனைப் பிரமாணம் உள்ளனவாயும், மற்றவை பதினாயிரம் யோசனை குறைந்தவையாயும் இருக்கின்றன. அவையெல்லாம் இரண்டாயிரம் யோசனை உயரமும் அவ்வளவு பரப்பளவும் கொண்டவையாம். இந்த ஜம்புத்வீபத்தில் முதல் பாரதவர்ஷமும் அடுத்து கிம்புருஷமும் அடுத்து ஹரி வருஷமும் மூன்றும் மேருவின் தெற்கேயுள்ளவை. ரம்மியக வருஷம், ஹிரண்மய வருஷம், குரு வருஷம் ஆகிய மூன்றும் வடக்கில் உள்ளவை. பாரத வருஷம் எப்படித் தெற்கின் கடைசியோ, அப்படியே குருவருஷம் வடக்கின் கடைசியாக இருக்கின்றது. மேருவைச் சுற்றிலுமுள்ள பூமி இளாவருஷம் என்று சொல்லப்படும். இவ்வருஷங்கள் ஒவ்வொன்றும் ஒன்பதினாயிரம் யோசனை பரப்புடையவை. இந்த இளாவிருத வருஷத்தில் நான்கு மலைகள் மேருவுக்குத் தாங்கிகளாக இருக்கும்படி உண்டாக்கப்பட்டு, பதினாயிரம் யோசனை உயரமுள்ள உன்னத கேஸ்ர பர்வதங்களாக இருக்கின்றன. அவற்றின் கிழக்கே மந்தரமும், தெற்கில் கந்தமாதனமும், மேற்கில் விபுலமும், வடக்கில் சுபார்சுவமும் இருக்கின்றன. அந்த மலைகளில் முறையே கடம்பு, நாவல், அத்தி, ஆல் என்ற மரங்கள் பதினோராயிரம் யோசனை அளவுள்ளனவாய், கொடிமரங்களை நாட்டியதுபோல் அமைந்துள்ளன.

முனிவரே! அந்த நாவல் மரத்தைப் பற்றித்தான் இந்தப் பூமிக்கு ஜம்பூத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்த நாவல் மரத்தின் பழங்கள் மகாகஜப் பிரமாணமுள்ளவைகளாய் மலையின் மீது விழுந்து சிதைய அவற்றின் ரசத்தினால் ஜம்பு நதி என்ற புகழ்பெற்ற ஒருநதி ஓடுகின்றது. அந்த நதியின் தண்ணீரை அவ்விடத்தார் பானஞ்செய்வதால் அவர்களுக்கு வியர்வையும் துர்க்கந்தமும் மூப்பும் இந்திரியங்களில் பலக்குறைவும் உண்டாவதில்லை. மேலும் மனமானது எப்பொழுதும் நல்லநிலையில் இருக்கும். அவ்வாற்றங்கரையின் மண்ணானது அந்த ரஸத்தில் நனைந்து காற்றினால் உலர்ந்து ஜாம்பூநதம் என்ற பெயரைக் கொண்டு சித்தர்கள் தரிக்கும்படியான ஸ்வர்ணமாகின்றது. அந்த மேருமலைக்குக் கிழக்கில் பத்திராசுவ வருஷமும், மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின்றன. அன்றியும் மேருவின் கிழக்கு முதலாகிய நான்கு திசைகளிலும் முறையே சைத்திரரதம், கந்தமாதனம், வைப்பிராசம், நந்தனம் என்ற நான்கு உத்தியானவனங்கள் உள்ளன. அவற்றில் அருணோதம் மகாபத்திரம் ஸிதோதம்; மானசம் என்ற நான்கு ஏரிகள் தேவதா யோக்கியங்களாக இருக்கின்றன. அந்த மேருவின் கிழக்கில் ஸிதாம்பம், குமுத்துவான்; குரரி; மாலியவான். வைகங்கம் முதலான கேஸர பர்வதங்கள் உண்டு. சில திரிகூடம், கிசிரம், பதங்கம், ருசிகம், நிஷம் முதலியன தென்புறத்தில் உள்ள கேஸர பர்வதங்கள் சிகிவாஸம், வைடூரியம் கபிலம் கந்தமாதனம், ஜாருதி முதலானவை. மேருவைச் சுற்றிலும் இருக்கிற அவயவங்களில் சேர்ந்திருக்கும் சங்ககூடம், ரிஷபம், ஹம்சம், நாகம், காளாஞ்சம் முதலியன வடகேசர அசலங்களாகும்.

மைத்திரேயரே! மேருவுக்கு மேல் பதினாலாயிரம் யோசனை விசாலமுள்ள பிரம்மாவின் மாபெரும் பட்டணம் இருக்கிறது. அதைச்சுற்றி, எட்டுத்திசைகளிலும் லோக பாலகர் எட்டுப்பேருக்கும் சிறந்த பட்டணங்கள் உண்டு. ஸ்ரீவிஷ்ணு பாதத்தினின்றும் உதித்த கங்காநதி ஆகாயத்திலிருந்து சந்திரமண்டலத்தில் விழுந்து அதை நனைத்துக்கொண்டு மேருவின் மீதிருக்கும் பிரம்மாவினுடைய நகரத்திற்கு நாலுபுரத்திலும் நான்கு பிரிவாக விழுந்து சீதை, அளகநந்தை சட்சு, பத்திரை என்ற பெயர்களைப் பெற்று விளங்குகின்றன. அவற்றுள் சீதை என்ற நதியானது மலை மேல் மலையாக ஆகாயமார்க்கத்திலிருந்து பத்திராசுவ வருஷத்தில் இறங்கிச் சமுத்திரத்தில் சேருகின்றது. அதுபோலவே அளகநத்தை நதியும் தென்புறத்து மலைகளின் வழியாய்ப் பாரதவருஷத்தில் சென்று ஏழு பிரிவாய்ப் பிரிந்து சமுத்திரத்தில் விழுகின்றது. சட்சு என்னும் நதியும் மேற்குமலைகளைக் கடந்து கேதுமால வருடத்தில் சென்று சமுத்திரத்தில் சங்கமமாகிறது. அதுபோலவே பத்திரை வடமலைகளின் வழியாகக் குருவருஷத்தில் புகுந்து கடலையடைகிறது. மாலியவர்து, கந்தமாதனம் என்ற மலைகள் நீலநிஷதபர் வதங்களின் அளவாக இருக்கின்றன. அவற்றின் நடுவிலேதான் மேருமலையானது கர்ணிகையைப் போலுள்ளது. பாரதகேது, மாலபத்திராசுவ வருஷங்கள் எல்லைப்புற மலைகளாகி, ஜடராதிகளுக்கு வெளியே இந்தப்பூமி என்ற தாமரை மலருக்கு நான்கு இதழ்களாக விளங்குகின்றன. ஜடரம்; ஏமகூடம் என்ற மலைகள் தெற்கு வடக்காக, நீல நிஷத மலைகளின் அளவில் தென்புற எல்லை மலைகளாக இருக்கின்றன. கந்தமாதனம் கைலாயம் என்ற இரண்டு மலைகளும் எண்பதினாயிரம் யோசனையுடையவை. அவை கிழக்குத்திசையின் எல்லை மலைகளாய் நீண்டு சமுத்திர நடுவில் இருக்கின்றன. நிஷதம்; பாரியாத்திரம் இவ்விரண்டும்; கீழ்த்திசை மலைகளைப் போலவே மேலைத்திசையின் எல்லை மலைகளாக இருக்கின்றன. திரீசிருங்கம்; ஜாருதி என்பவை; முன்னே சொன்ன மலைகளைப் போலவே நீண்டு சமுத்திரத்தின் நடுவே வடக்கெல்லை மலைகளாக இருக்கின்றன.

முனிவரே; இவ்விதம் இளாவிரத வருஷத்தில் உட்பிரிவின் எல்லை மலைகளாக இரண்டாயிரம் இருக்கின்றன. மகாமேருவின் நான்கு புறத்திலும் கேசரமலைகள் சில இருக்கின்றன என்று சொன்னேன் அல்லவா? அந்த சிதனாசல மலை முதலியவற்றின் நடுவேயுள்ள சரிவான பள்ளத்தாக்குகள் சித்தசாரணர்கள் வாசஞ் செய்யுமிடங்களாக உள்ளன. அவற்றிலே மிகவும் மனோகரமான ஸ்ரீவனம் கிம்சுகவனம்; நளவனம்; சயித்திர ரதம் என்ற வனங்களும் ஹேமசித்திரம், பூதவனம், பிரமபாரிசம், சுநாபகம் என்ற புரங்களும் இருக்கின்றன. அங்கே ஸ்ரீமகாலக்ஷ்மி, விஷ்ணு, அக்னி, சூரியன் முதலிய தேவர்களுக்கும் வாசஸ்தலங்கள் இருக்கின்றன. அம்மலைச் சந்துகளில் கந்தர்வ யக்ஷõதிகள் கீதவாத்தியமிசைத்து ஆடிப்பாடிக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் பூலோக சொர்க்கங்கள் என்று வழங்கப்படும். இவற்றைப் புண்ணியவான்கள் போய்ச் சேருவார்களேயல்லாமல், மற்றவர் அனேக பிறவிகளையெடுப்பினும் போய்ச் சேரமாட்டார்கள். ஸ்ரீவிஷ்ணுபகவான் பத்திராசுவ வருஷத்தில் ஹயக்ரீவரூபியாக எழுந்தருளியிருக்கிறார். கேதுமால வருஷத்திலே வராஹரூபியாகவும், பாரத வருஷத்திலே கூர்ம ரூபியாகவும்; குரு வருஷத்திலே மச்சரூபியாகவும் எழுந்தருளியிருக்கிறார். அந்த ஸ்ரீஹரிபகவான் சர்வசொரூபியாய்ச் சர்வாதாரமாய் எங்குமேயுள்ளார். முன்பு சொன்ன கிம்புருஷாதி வருஷங்கள் எட்டிலும் சோகம், ஆயாசம், பயம்; பசி முதலிய துன்பங்களில்லாமல் பிரஜைகள் எல்லாம் நல்ல மனதுடன் தேஜோபலாதிகளையுடையவராய்ப் பதினாயிரம் பன்னீராயிரம் ஆண்டுகள் வரை ஜீவிப்பார்கள். அங்கே மழையே பெய்வதில்லை. பூமியில் சுரக்கும் தண்ணீரே எப்போதும் போதுமானதாக இருக்கும். அங்கே கிருதயுகம் திரேதாயுகம் முதலிய கால கற்பனைகள் இராது. அவ்வருஷங்களுக்குள்ளே ஒவ்வொன்றிலும் எவ்வேழு குலபர்வதங்களும் உண்டு. அந்தப் பருவதங்களிலிருந்து அநேகமாயிரம் நதிகள் உண்டாகி வெகு ரமணீகரமாய்ப் பாய்கின்றன.

3. பாரததேச வர்ணனை

சமுத்திரத்துக்கு வடக்கே இமயத்திற்குத் தெற்கே இருக்கிற பூமியானது பரதனுடைய சந்ததியார் வசிப்பதால், பாரதவர்ஷம் என்ற பெயரைப்பெற்றது. மைத்ரேயரே! இதன் பரப்பளவு ஒன்பதாயிரம் யோசனை தூரமாகும். சொர்க்கத்தையடைகிறவர்களும், மோக்ஷத்தையடைகிறவர்களுக்கும் பிரவிருத்தி, நிவர்த்தி கர்வ சாதன பூமியாக இருப்பது இதுவேயாகும். இதில் மகேந்திரம், மலயம், ஸஹ்யம், சுத்திமான், ரீக்ஷம் விந்தியம், பாரியாத்திரம் என்ற ஏழுவித மலைகள் இருக்கின்றன. பிராணிகள் இங்கிருந்து தான் சொர்க்கமடைகிறார்கள். மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். மிருகாதி பிறவிகளையும் நரகத்தையும் இங்கிருந்தே அடைகிறார்கள். இதைவிட வேறிடத்தில் மனிதர்களுக்கு சொர்க்கானுபவர்க்கங்களுக்கு உரிய கர்மங்கள் விதிக்கப்படவில்லை. இந்தப்பாரத வருஷத்துக்கு இந்திர த்வீபம் கசேரு, தாம்பர பர்ணம், கபஸ்திமான், நாகத்வீபம், சவுமியத்வீபம், காந்தர்வத்வீபம், வாருணத்வீபம், பாரதத்துவீபம் என்ற பெயருடைய ஒன்பது பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒன்பதாவது பிரிவான பாரதத்துவீபம் என்பதே நாமிருக்கும் இந்தப் பூமியாகும். இது சகரர் தோண்டிய கடலால் சூழப்பட்டுள்ளது. இந்தப்பாரத கண்டமானது தெற்கு வடக்கில் ஆயிரம் யோசனையளவாக இருக்கிறது. கிழக்கில் கிராத தேசமும், மேற்கில் யவனதேசமும் இருக்கின்றன. நடுவில் பிரம்ம க்ஷத்திரிய; வைசிய; சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரும் வகுப்பின்படி இருக்கின்றனர். யாகங்களைச் செய்வதும், யுத்தஞ்செய்து துஷ்டர்களையடக்குதலும், வாணிபஞ்செய்தலும், சிற்பத்தொழில் செய்வதுமாகிய ஜீவன உபாயங்களிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் சதத்துரு சந்திர பானக முதலிய நதிகள்; இமயமலையிலிருந்து பெருகுகின்றன. வேதஸ்மிருதி முதலிய நதிகள் பாரியாத்திர பருவதத்திலிருந்து உண்டாகிப் பாய்கின்றன. நருமதை, சுரசை, முதலிய நதிகள் விந்திய மலையில் உற்பத்தியாகின்றன. தாபீ, பயோஷ்ணீ, நிர்விந்தியை முதலிய நதிகள் சஹ்ய பர்வதத்தின் தாழ்வரையின்று உண்டாகின்றன. கிருதமாலை, தாம்பரபருணீ நதிகள் மலயாசலத்தில் உண்டாகின்றன. திரிசாமா, ரிஷிகுல்யா முதலிய நதிகள் மகேந்திரகிரியில் உதிக்கின்றன. குமாரீ முதலிய நதிகள் சுத்திமத்தென்னும் மலையில் பிறந்தவை. இவற்றைச் சார்ந்த உபநதிகளும் வேறு ஆறுகளும் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. இவ்வாற்றங்கரையில் குரு பாஞ்சாலம், மத்தியதேசம், பூர்வதேசம், காமரூபம், ஆந்திரம், கலிங்கம், மகதம், பாண்டியதேசம், அபராந்தம், சவுராஷ்டிரம், சூத்திர தேசம், ஆபீரதேசம், பாப்பர தேசம், மாருகம், மாளவம், பாரியாத்தி ரம்சவ்வீரம், சிந்து, ஊணம், சால்வம், கோசலம், மத்திரம், ஆராமம், அம்பஷ்டம், பாரசீகம் முதலிய பல தேசத்து மக்களும் வாசஞ்செய்து கொண்டு, அவற்றின் தண்ணீரைப் பானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் தான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகை யுகபேதங்களும் உண்டு.

இங்குதான் யோகியர் தவஞ்செய்கின்றனர். யாகசீலர் யாகஞ்செய்கின்றனர். தானசீலர் தானம் செய்கின்றனர். இவ்விதமான பரலோக சாதகமான நல்ல தருமங்களை ஜனங்கள் ஆதரவோடு செய்து வருகின்றனர். இந்த ஜம்புத்தீவிலே யக்ஞ புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும் இருக்கிற ஸ்ரீவிஷ்ணுபகவான் யக்ஞங்களினால் ஆராதிக்கப்படுகிறான். ஏனெனில் இந்தச் சம்புத் தீவானது பரலோக சாதகமான கருமங்களைச் செய்யத் தகுந்த இடமாகையால், பாரதவருஷம் தான் உயர்வானது. மற்ற பூமியெல்லாம் போகங்களுக்கு உரியனவாம். ஒரு ஜந்து அநேகப் பிறவிகளிலே செய்த புண்ணியத்தினாலே இவ்விடத்தில் மனிதப்பிறவியாகப் பிறக்கும்; இந்தப் பாரத வருஷத்தைப் பற்றித் தேவதைகள் பாடியபாட்டைக் கேளுங்கள். சொர்க்கத்துக்கும் மோக்ஷத்துக்கும் ஏதுவான கர்மங்களுக்குச் சாதகமாயிருக்கிற இந்தப் பாரதவருஷத்திலே தேவஜன்மத்துக்குப் பின்னாயினும் இந்த ஜன்மத்தைப் பெறுவாராயின் அவர்களே புண்ணியவான்கள். அவர்களே தேவர்களிலும் மேலானவர்கள். அவ்விடத்து ஜனங்கள் கர்ம பயன்களிலே கருத்தை வைக்காமல் செய்யும் கருமங்களையெல்லாம் பரமாத்மாவான ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணஞ்செய்து நிர்மலர்களாய் அந்த அநந்தனிடத்திலே லயத்தை அடைகின்றனர். நமக்குச் சொர்க்கப் பிராப்தி காரணமான கருமம் அனுபவித்தலினாலே அழிந்த பிறகு எவ்விடத்திலே தேக சம்பந்தைப் பெறுவோமா அதையும் அறியோம். இப்போது பாரதவருஷத்திலே பிறவி பெற்று ஞானேந்திரியக் கர்மேந்திரியங்களைக் குறைவறப் பெற்றவர்கள், சுலபமாய், ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேடச் சக்தி பெற்றவர்களாவார்கள். ஆகையால் அவர்கள் மகாபுண்ணியவான்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மைத்ரேயரே! இப்படி ஒன்பது வருஷங்களாகப் பிரிந்து லக்ஷம் யோசனை பரப்பளவுள்ள ஜம்புத்து வீபத்தின் விவரத்தைச் சுருக்கமாகச் சொன்னேன். இந்த ஜம்புத்து வீபத்தைச் சுற்றிய வளையத்தைப் போல் லவண சமுத்திரமானது லக்ஷ யோசனை விஸ்தாரமுடையதாக அமைந்திருக்கிறது.

4. பிலக்ஷத் தீவுகளின் வர்ணனை

இந்த ஜம்புத்தீவானது உப்புக் கடலினால் சுற்றப்பட்டது போலவே, இந்த லவண சமுத்திரம் பிலக்ஷத் தீவினாலே சுற்றப்பட்டிருக்கிறது. ஜம்புத்தீவின் பரப்பளவு லக்ஷயோசனையாகும். அதைவிட இருமடங்கு பரப்பளவைக் கொண்டது பிலக்ஷத்தீவாகும். இந்த பிலக்ஷத்தீவின் அதிபதியான மேதாதிதி என்பவனுக்கு சாந்தஹயன், சிவன், சிசிரன், சுகோதயன், ஆனந்தன், ÷க்ஷமகன், துருவன் என்று ஏழுபிள்ளைகள் இருந்தார்கள். அந்தத் தீவில் அவர்களின் பெயராலேயே சாந்தஹயம், சிவம், சிசிரம், சுகதம், ஆனந்தம், ÷க்ஷமகம், துருவம் என்ற ஏழு தேசங்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு கோமேதகம், சந்திரம், நாதம் துந்துபி சோமகம், சுமனசு, வைபிராஜம் என்ற ஏழு மலைகள் எல்லைகளாகும். மிகவும் ரமணீயமான இந்த மலைகளிலுள்ள ஜனங்கள் தேவ கந்தர்வாதிகளோடு வேடிக்கையாக வாசஞ்செய்து கொண்டிருப்பார்கள். அங்கு சகல ராஜ்யங்களும் தூய்மையானவை. அங்கு ஜனங்கள் வெகுகாலம் கழித்த பின்பே மரணமடைவார்கள். நோய்களும் மனோவியாதிகளும் அங்கில்லை. அந்த ஏழு வருஷங்களிலும் சமுத்திரத்தோடு சேரத்தக்க அது தப்தை சிகி வபாவை, திரிதிவை, சுக்கிலமை, அமிருதை, சுகிருதை என்ற ஏழு நதிகள் ஓடுகின்றன. இவையெல்லாம் பெயர் சொன்னவுடன் பாதங்களை நீக்கும் மகிமை வாய்ந்தவை. மேலும் பற்பல சிற்றாறுகளும், சிறுமலைகளும் அங்குள்ளன. அவ்விடத்தார் உத்சர்ப்பிணி என்ற விருத்தி காலமும் அவசர்ப்பிணி என்ற க்ஷய காலமும் கிருதாதியுக பேதங்களுமில்லாமல் எப்போதுமே திரேதா யுகத்திற்குச் சமமான காலமுடையோராய் அந்த மலைச்சாரல்களில் வசிப்பார்கள். இந்த ஆற்று நீரைப் பானஞ்செய்து சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த பிலக்ஷத்தீவு முதலாய் சாகத்தீவு வரையிலுள்ள பூமிகளில் நோயற்று ஐயாயிரம் ஆண்டுகள் வரையில் மக்கள் வாழ்வார்கள். இந்த ஐந்து தீவுகளிலுள் வருணாசிரம தர்மம் உண்டு. அங்கே ஆரியகர், இகரர், வீதிசியர், பாவியர் என்ற நான்கு பிரிவுகள் உண்டு. அந்தத் தீவின் நடுவே முன்பே சொன்ன நாவல் மரத்தின் அளவில் ஒரு கல்லால மரம் இருக்கிறது. அதனால் தான் அந்தத் தீவுக்கு பிலக்ஷத் தீவு என்ற பெயர் வழங்கலாயிற்று. அங்கே சர்வேசுவரனான ஸ்ரீவிஷ்ணுபகவான் சோமரூபியாய், ஆரியகர் முதலானவர்களால் ஆராதிக்கப்படுகிறார். அந்தப்பிலக்ஷத் தீவானது அதன் அளவாயுள்ள கருப்பஞ்சாற்றுக் கடலால் சூழப்பட்டுள்ளது.

இனி, சால்மலித் தீவைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பீராக-இந்தச் சால்மலித் தீவுக்கு அதிபதியான வபுஷ்மா என்பவனுக்குச் சுவேதன் அரிதன் ஜிமூதன், ரோஹிதன்; வைத்துதன், மானசன், சுப்பிரபன் என்ற ஏழு பிள்ளைகள்  இருந்தார்கள். அவர்களது பெயரில் அங்கு ஏழு தேசங்கள் உண்டு அத்தீவின் அளவு, பிலக்ஷத் தீவைவிட இருமடங்கு அதிகம். அங்கு குமுதம் உன்னதம்: பலாஹம் துரோணம் கங்கம் மகிஷம் ககுத்துமான் என்ற ஏழு மலைகள் ஏழு வருஷங்களுக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. அவை நானாவித இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம் அவற்றினுள்ளே துரோணம் என்ற மலை, மூலிகைகளின் பிறப்பிடம்; பூர்வத்தில் ஆஞ்சநேயர் அங்கிருந்து தான் சஞ்சீவினி முதலிய ஒஷதிகளைச் சக்கரவர்த்தித் திருமகனுக்காக இலங்கைக்குக் கொண்டு சென்றார். அந்தத் தீவில் யோனி, தோயை விதிருஷ்ணை சந்திரை சுக்கிலை விமோசினி நிவிருத்தி என்ற நதிகள் ஏழுண்டு. அங்கு கபிலர் அருணர் பீதர் கிருஷ்ணர் என்ற நான்கு வருணத்தினர் சர்வசொரூபியான எம்பெருமானை; வாயு ரூபியாகப் பாவித்து யாகங்களைச் செய்து பூஜித்து வருகிறார்கள். அங்கு சகல தேவதைகளும் சாந்நித்யமாய் இருக்கின்றனர். அதன் நடுவில் மிகவும் பெரியதான இலந்தை மரம் ஒன்றிருக்கிறது. அதனாலேயே அந்தத் தீவிற்கு சால்மலத் தீவு என்ற பெயர் உண்டாயிற்று. அதைச் சுற்றிலும்; மதுச் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்தச் சமுத்திரத்தைச் சுற்றிலும், இதற்கு இரட்டிப்பு அளவுள்ள குசத்வீபம் இருக்கிறது. அதற்கு அதிபதியான ஜியோதிஷ்மானுக்கு உத்பிதன், வேணுமான்; சுவைரதன்; லம்பன் திருதி பிரபாகரன் கபிலன் என்ற ஏழு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடைய பெயராலேயே அங்கு ஏழுதேசங்கள் இருக்கின்றன. அதில் தேவ, அசுர யக்ஷ கின்னர கிம்புருஷ கந்தர்வாதி தேவகணங்களும் தாமிகன் தக்ஷ்மிகன் தேஹர் மந்தேஹர் என்ற நான்குவகை ஜனங்களும் வசிக்கின்றனர். அந்த நான்கு வருணத்தினரும் தமது கர்மாதிகாரம் நிவர்த்தியாகும் பொருட்டு ஞானனுஷ்டானமுடையோராய் பிரம்மரூபியான ஸ்ரீஜனார்த்தனனை ஆராதித்து உக்கிரமான பயன்தரவல்ல பூர்வ ஜன்மங்களைத் தொலைக்கின்றனர். அவ்விடத்தில் வித்திருமம், ஹேமசைலம் தியுதிமான் புஷ்பவான் குசேசயம் ஹரி மந்தரம் என்ற ஏழுமலைகள் இருக்கின்றன. தூதபாயை சிவை பவித்ரை சுமதி வித்யு தம்பை மஹி என்ற ஏழுநதிகள் அங்கு பாய்கின்றன. இவை தவிர உபநதிகளும் உபபர்வதங்களும் அநேகம் அங்கு உள்ளன. சிறந்த நாணற்புல் அங்கு இருப்பதாலேயே அந்தத் தீவுக்கு குசத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. இந்தத் தீவின் அளவுள்ள சர்ப்பி சமுத்திரம் (நெய்க்கடல்) இதைச் சூழ்ந்துள்ளது.

இச்சமுத்திரத்தை கிரவுஞ்சத தீவு சுற்றிக் கொண்டிருக்கிறது. இதன் வளமையைச் சொல்கிறேன்; கேளுங்கள் இந்தத் தீவானது முந்திய தீவைவிட இருமடங்கு பரப்பளவு கொண்டது. இதன் அரசனான தியுதிமான் என்பவருக்கு குசலன், மனுகன், உஷ்ணன், சிவான், அந்தகாரகன், முனு, துந்துபி என்ற ஏழுபிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களின் பெயரால் அங்கு ஏழுதேசங்கள் உண்டு. மேலும் கிரவுஞ்சம் வாமனம் அர்த்தகாரகம் வடவாக்கினிக்கு சமமான இரத்தினசைலம், திவாவிருது புண்டரீகன் துந்துபி என்ற ஏழு மலைகள் எல்லை மலைகளாக இருக்கின்றன. அவற்றுள் கிரவுஞ்சம் என்ற பருவதத்தைப் பற்றி அந்தத் தீவுக்கு அப்பெயர் வந்தது. இந்த மலைகள் எல்லாம் ஒன்றிலொன்று இரட்டிப்பான அளவுள்ளனவாக இருக்கும். இந்த மலைகள் எல்லாம் சித்த சாரண கிம்புருஷ கின்னராதிகள் வினோதமாய் விளையாடிக் கொண்டிருக்கு மிடங்களாகும்; இந்த வருஷங்கள் ஏழிலும் புஷ்கரர் புஷ்கலர் தன்னியர் திஷ்யர் என்ற நான்கு வருணத்தாரும் தேவதானவர்களுடன் வாசஞ்செய்வார்கள். கவுரீ குமுத்துவதீ சந்தியா ராத்திரி மனோ ஜவா கியாதி புண்டரீகா என்ற ஏழுபெரிய நதிகளும் பல உபநதிகளும் பாய்கின்றன. இங்குள்ளவர்கள் ருத்திர ரூபியாய் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீஜனார்த்தனனை யாகங்களால் ஆராதித்து வருகிறார்கள். இத்தகைய கிரவுஞ்சத் தீவானது அதன் அளவுக்குத் தயிர்க்கடலால் சூழப்பட்டுள்ளது. இனி அந்தக் கடலைச் சூழ்ந்துள்ள சாகத் தீவானது அளவில் கிரவுஞ்சத் தீவை விட இருமடங்குள் பெரியது. அதில் அந்தத் தீவின் அதிபதியான பவிரயன் என்பவனின் குமாரர்களான ஜலதம், குமாரம், சுகுமாரம். மரிசகம், குசுமோதம், சுமோதம், மகாத்துருமம் என்பவர்களின் பெயரில் ஏழுபிரதேசங்கள் உள்ளன. அவற்றின் எல்லைகளாக உதயகிரி, ஜலதாரம், ரைவதகம், சியாமம், அம்போகிரி, ஆம்பிகேயம், கேசரி என்ற ஏழுமலைகள் உள்ளன. அங்கு சித்தர் கந்தருவர் விளையாடுமிடமாக சாகம் என்ற மகாவிருட்சம் விளங்குவதால் அதற்குச் சாகத்துவீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அதன் இலைகளில் உறைந்து காற்று வீசும்போது மிகுந்த ஆனந்தவுல்லாசமுண்டாகும். அங்கு பாப ஹரங்களான சுகுமாரீ, குமாரீ, நளினீ, வேணுகீ இக்ஷú தேனுகை, கபஸ்தீ என்ற ஏழு முக்கிய நதிகள் ஓடுகின்றன. அங்கு தரும ஹானியும் பரஸ்பரக் கலகமும் மரியாதையை மீறுதலும் இராது. மங்கர், மாகதர், மானசர், மந்தகர் என்ற நான்கு வருணத்தார் அங்கு வசிக்கின்றனர். அங்கு சூரிய சொரூபியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணுபகவானைத் தங்களுக்கு விதித்துள்ள ஞான கருமங்களினால் ஆராதித்து வருகின்றனர். இந்த சாகத்வீபமானது அதன் அளவையுடைய க்ஷீரசமுத்திரத்தால் (பாற்கடலால்) சூழப்பட்டுள்ளது.

மைத்ரேயரே! இந்தப் பாற்கடலைச் சுற்றி புஷ்கரம் என்ற தீவுள்ளது. அதன் அளவு சாகத்வீபத்தின் அளவைவிட இரட்டிப்பானது. அந்தத் தீவிலே அதன் அதிபதியான சவனனுக்கு பிள்ளைகள் இருவர் உண்டு. அவர்களது பெயரில், மகாபீதம், தாதகீ என்ற இரண்டு பிரதேசங்கள் இருக்கின்றன. அவற்றை மானகோத்ரம் என்ற பெரிய மலையானது இரண்டாகப் பிரித்து தீவின் நடுவே வளையம்போல் அமைந்துள்ளது. அந்தமலை ஐம்பதாயிரம் யோசனை உயரமும் அதன் அளவு விஸ்தீரணமுங்கொண்டது. அங்குள்ள மக்கள் வியாதி சோகம் முதலிய துன்பம் இல்லாமல் பதினாயிரம் ஆண்டு ஜீவித்துச் சுகமாக இருக்கிறார்கள். மேலானவன், கீழானவன் என்ற வேறுபாடும், கொல்பவனும் கொல்லப்படுவோனும், பொறாமை, அசூயை, பயம், கோபம் முதலிய துர்க்குணங்களும் மெய் பொய்களும் அங்கு இல்லை. முன்னே சொன்ன மானசோத்ரம் அன்றி வேறு மலைகளும் நதிகளும் அங்கு இல்லை. அங்கிருக்கும் மனிதர்கள் அனைவரும் தேவர்களுக்கு இணையான ரூபமுடையவர்கள். அங்கு வர்ணாசிரம ஆசாரங்களும் தரும நடக்கைகளும் இல்லை. அங்கு வேதம் ஓதுதல், பயிரிடுதல் போன்ற பிழைப்புகளும், ராஜநீதி முறைகளும் மேலோருக்குக் கீழோர் பணிசெய்தல் போன்ற செயல் முறைகளும் இல்லை. அது பூலோக சொர்க்கம் என்று சொல்லப்பட்டு சுத்த போகத்திற்கே உரியதாக இருக்கிறது. நோய், மூப்பு முதலியன அங்இ இல்லை. அங்கு பிருமதேவன் வாசஞ்செய்யும் விசேஷச் சிறப்புடைய ஆலமரம் ஒன்றுள்ளது. அதனாலேயே அதற்குப் புஷ்கரத்வீபம் என்ற பெயர் உண்டாயிற்று. அந்தத் தீவைச் சுற்றிலும் அதன் அளவேயுள்ள சுத்தோதக சமுத்திரம் (சுத்த நீர்க்கடல்) சூழ்ந்துள்ளது. மைத்ரேயரே! இந்த விதமாக, அந்த ஏழு தீவுகளும் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டிருக்கின்றன. தீவுகளும் சமுத்திரங்களும் ஒரே அளவாயுள்ளன. முந்திய த்வீபச முத்திரங்களைவிடப் பிந்திய சமுத்வீப இரட்டித்த அளவுள்ளவை சகல சமுத்திரங்களிலும் எப்போதும் தண்ணீர் சமமாகவே இருக்கும் உயர்வதும் தாழ்வதுமில்லை. ஆயினும் ஒருபாத்திரத்தில் இருக்கும் தண்ணீர் அக்னியின் சம்பந்தத்தால் பொங்குவதும் அக்னியின் சம்பந்தம் நீங்கும் போது தணிவதுமாயிருப்பது போல் சுக்கில பக்ஷ, கிருஷ்ண பக்ஷ காலங்களில் சந்திரனுடைய உதய அஸ்தம காலங்களில் பொங்கவும் தணியவும் செய்கின்றன. இப்படிப் பொங்குவதும் அடங்குவதும் ஐந்நூற்று ஐம்பது அங்குலம் வரையுமே உள்ளது என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த புஷ்கரத்தீவில் ஷட்சரங்களோடு கூடிய அன்னமானது முயற்சியின்றி கிடைக்கும் முன்பு சொன்ன சுத்த நீர்க்கடலின் புறத்தே உலகநிலை காணப்படவில்லை. ஆயினும் முந்திய பூமிக்கு இரட்டிப்பான சுத்த சுவர்ணபூமி காணப்படுகிறது. அங்கே ஒரு ஜீவனும் இல்லை. அதற்குப் பின்னால் பதினாயிரம் யோசனை உயரமும், பதினாயிரம் யோசனை பரப்பும் உள்ள லோகா லோகம் என்ற பெருமலை ஒன்றுள்ளது. அதன் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. அந்த இருளுக்குப் புறத்தே அண்டச் சுவர் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவ்விதமாக இந்த பூமியானது சகல சமுத்திர த்வீபங்களோடும், அண்ட தாடகத்தோடும் ஐம்பது கோடி யோசனையளவுடன் யாவற்றுக்கும் உற்பத்தி ரக்ஷணைகளைச் செய்துகொண்டு, கந்தம் முதலிய குணங்கள் ஐந்தையும் கொண்டு விளங்குகிறது!

5. பாதாள லோகம்

மைத்ரேயரே! பூமியின் பரப்பளவைப் பற்றி சொன்னேன். அதன் உயரம் எழுபதினாயிரம் யோசனை. அதில் அதலம், விதலம், நிதலம், ரசாதலம், மகாதலம், சுதலம், பாதாளம் என்ற ஏழு கீழ் லோகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் பதினாயிர யோசனை அளவுடையதாகும். இவற்றில் வெண்மை, கருமை, செம்மை, பொன்மையாகிய நிறங்களைக் கொண்ட பருக்கை மலைகளும் பொன்மயமான பூமிகளும் இருக்கின்றன. அங்குள்ள மித்தையான மேடைகளில் தானவர், தைத்யர், முதலிய அசுர ஜாதியினரும், பெருமையுடைய நாகஜாதியினரும், வாசஞ்செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு சமயம் நாரத முனிவர் பாதாளத்திலிருந்து ஸ்வர்க்கத்திற்கு வந்து, தேவ சபையில் இந்திரனை நோக்கி, பாதாள லோகங்கள் சொர்க்கலோகத்தை காட்டிலும் மிகவும் அழகாக இருக்கின்றன. அங்குள்ள நாகஜாதியினர் அணிந்துள்ள ஆபரணங்களிலுள்ள திவ்விய ரத்தினங்கள் மிகப்பிரகாசமாகவும், மிக மகிழ்ச்சியளிப்பவையாகவும் விளங்குகின்றன. ஆகையால் பாதாளத்துக்கு இணை ஏது? என்றார். அங்கே தைத்யதானவருடைய பெண்கள் அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்ப்பவன் மகா விரக்தியுடையவனாக இருந்தாலும் மையல் கொண்டு அவர்கள் மீது மனதை இழந்து விடுவான். அங்கு பகலில், சூரிய கிரணங்கள் வெப்பம் இல்லாமல் வெளிச்சத்தை மட்டும் வீசிக்கொண்டிருக்கும். அதுபோலவே சந்திரக் கிரணங்களும் சைத்தியஞ் செய்யாமல், வெளிச்சத்தை மட்டுமே தருகின்றன. இஷ்டத்திற்கேற்ற உணவுகளையும் பானங்களையும் அருந்தி அங்கிருப்பவர் காலஞ்செல்வதையே அறியாமல் குதூகலமாக இருக்கிறார்கள். அங்கு, மகாவினோதமான உதயமான வனங்களும், ரமணீயமான நதிகளும், தாமரைத் தடாகங்களும், குயில் முதலிய பறவைகளின் இனிய கீதமும், அதிசுகந்த புல்லாங்குழல் இசை, மிருதங்க முழக்கம் முதலான ஒலிகளும், ஆடல்பாடல்களும் இன்னும் வேண்டிய போக பாக்கியங்களும் எப்போதும் சம்பூரணமாய் அனுபவிக்கப்படுகின்றன. இந்தப் பாதாளத்துக்குக் கீழே, முப்பதாயிரம் யோசனையுள்ள இடத்திலே ஸ்ரீமகாவிஷ்ணுவின் தமோ குணாசிரயமான திருமேனியுடன் விளங்கும் ஆதிசேஷன் எழுந்தருளியிருக்கின்றார். அவர் அநந்தன் என்ற திருநாமத்தால் புகழப்பட்டு, தேவர்களாலும் முனிவர்களாலும் பூசிக்கப்படுகிறார். மேலும் ஸ்வஸ்திகம் என்ற ரேகையினால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் திருமுடிகளோடுங்கூடி அந்தத் திருமுடிகளிலுள்ள திவ்யரத்தின காந்திகளாலே திக்குகளை ஒளிரச்செய்து கொண்டும், லோக நலன் கருதி அசுரர்கள் அனைவரையும், சக்தி ஹீனராக்கி கொண்டிருக்கும் திருவிழிகளையுடையவராய், எப்பொழுதும் கிரீட வரிசைகளைத் தரித்து, முடியில் அக்கினி ஜ்வலிக்கும் வெள்ளி மலையைப் போலவும், நீளமானப் பட்டாடையையும் வெண்மையான முத்துமாலைகளையும் தரித்து, ஆகாய கங்கை மேலே விழவும் இடையிலே மேகஞ்சூழவும் இருக்கும் கைலாய மலையைப் போலவும் விளங்குகிறார்.

திருக்கைகளில் உலக்கையும், கலப்பையும் தரித்தவராய் காந்தி வாருணி என்ற தேவிகள் உபாசிக்க அவர் வீற்றிருக்கிறார். அவரது முகங்களிலிருந்து பிரளய காலத்திலே விஷாக்கினிச் சுவாலைகளோடு கூடிய காலாக்னி ருத்திரன் சங்கர்ஷண மூர்த்தியாலே ஆவேசிக்கப்பட்டு உண்டாகி ஜகத்தையெல்லாம் நாசஞ்செய்வான். அந்த ஆதிசேடன் இந்தப் பூமி மண்டலத்தை தனது திருமுடிகளில் ஓராபரணத்தைப் போலத் தரித்துக்கொண்டு, பாதாளத்தின் அடியில் சகலதேவதைகளாலும் பூஜிக்கப்படுகிறார். அங்குள்ள பகவானின் பலத்தையும், சக்தியையும் வருணிக்க தேவர்களாலும் இயலாது. நான் முன்பே சொன்னது போல, த்வீப, சமுத்திர பருவதாதிகளோடுங்கூடிய இந்தப் பூமண்டலம் அவரது திருமுடியில் ஒரு பூமாலையைப் போல் விளங்குகிறது. ஆனால் அவரது சறிப்பை விவரிக்க யாவருக்கும் இயலாது, அந்த அனந்தன் மதத்தினால் கண்கள் சுழலக் கொட்டாவி விடுவாரானால் இந்தப் பூமி முழுவதுமே நடுநடுங்கும் தேவ; தானவ, யக்ஷ, கந்தர்வ, சித்த சாரணாதிகளும் அவருடைய குணங்களின் முடிவைக் காணமாட்டாராகையால், அவருக்கு அனந்தன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அவருடைய திருமேனியில் நாககன்னியர் கைம்மலர்களால் சமர்ப்பித்த ஹரிச்சந்தணமானது, அவரது மூச்சுக்காற்றால் வீசப்பட்டு, திக்குகளில் மேல் கந்தப்பொடி இறைத்தது போலாகிறது. முன்பு ஒரு காலத்தில் கர்க்கர் என்ற பெயர்பெற்ற ஒரு மாமுனிவர் அவரை நெடுநாட்கள் ஆராதித்து, சூரியாதி சகல கிரகசாரக் கிரமங்களையும், அந்தக் கிரகசாரத்தினால் குறிக்கப்படுகிற பல சிறப்புகளையும், நன்றாக அறிந்தார். அத்தகைய அந்த நாகராஜனால் இந்தப் பூமியானது தரிக்கப்பட்டு, தேவ மனுஷியாதிகளோடு கூடிய லோக வரிசையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.

6. நரக லோகம்

மைத்ரேயரே! பூமியின் கீழே இருக்கும் இருட்பள்ளத் தண்ணீருக்குங்கீழே, பாபிகள் வதைக்கப்படும் நரகஸ்தானங்கள் உள்ளன. அவை ரவுரவம், சூகரம், ரோதம், தாலம், விஸஸுதம், மகாச்சுவாலம், தப்தகும்பம், லவணம், விலோகிதம், ருதிராம்பம், வைதரணி கிருமிசம், கிருமிபோஜனம், அசியத்திரவனம், கிருஷ்ணம், லாலாபட்சம், பூயவகம், அக்கினிச்சுவாலம் அதச்சிரம் சந்தமிசம் கிருஷ்ண சூத்திரம் தமசு அவீசி சுவபோசனம் அப்பிரதிஷ்டம் முதலிய ஆயிரம் கொடிய நாகங்கள் இயமனுடைய அதிகாரத்தில் இருக்கின்றன. இதில் ரவுரவம் குரு என்ற மிருகத்தினால் துன்புறுத்தும் இடம், சூகரம்-பன்றிகளால் பீடிக்கப்படும் இடம், ரோதம்-அசையவொட்டாமல் நிறுத்தப்படும் இடம், தாலம்-பனை மரத்தினின்று விழச்செய்து, அதன் மட்டைகளால் அறுக்கப்படும் இடம், விஸநஸம்-கைவாளால் அறுக்குமிடம். மகாச்சுவாலம்-பெருநெருப்பு, தப்தகும்பம்-காய்ச்சிய எண்ணெய்குடம். லவணம்-அறுத்து அறுத்து காய்ச்சி உப்பிடுவது. விலோகிதம்-உதிரத்தை உறியும்படிச் செய்வது, ருதிராரம்பம்-காய்ச்சிய ரத்தத்தில் போகுமிடம், வைதரணி-கடப்பதற்கு வருத்தமான ஆறு கிருமிசம் புழுக்கள் துளைக்கும் இடம். கிருமிபோஜனம்-புழுக்களைத் தின்னும் இடம், கிருஷ்ணம்-நெருங்கின இரும்பு முட்கள் மேலே நடக்க செய்யும் இடம், தாருணம்-சகிக்கத் தகாத குளிராயிருக்கும் இடம், சந்தமிசம்-சந்தமிசினி என்ற ஆயுதத்தால் நாக்கைப் பிடுங்கும் இடம், கசிபத்திரவனம்-நாற்புறமும் கொடிய கத்திகளை நாட்டி நடக்கவைக்குமிடம், பூயவஹம்-அதிக துர்க்கந்தமாய் நிமிஷமும் பொறுக்கக்கூடாத இடம், கிருஷ்ண சூத்திரம்-சக்கரத்தில் ஏற்றிக் கால்விரலில் ஒரு கயிற்றை மாட்டி உடல் எல்லாம் ஒன்றாகும்படி இறுக்கக் கட்டி அறுக்கப்படும்படியான இடம். இங்கு பாவிகளுக்கு ஆயுதபயம், ஜந்து பயம் முதலிய சகலவிதமான பயங்களும் உண்டு. அவற்றினுள்ளே விழுகிற பாவிகளுக்குள் பொய் சாட்சி சொல்பவன் பட்சபாதத்தினால் விவகாரத்தில் அநியாயமாகப் பேசுவோன், பொய் சொல்வோன் ஆகியோர் ரவுரவ நரகத்தில் வீழ்கின்றனர். சிசுவைக் கொல்வோர், பட்டணத்தை அழிப்போர், பசுக்களைக் கொல்வோர், மூச்சைத் திணற வைப்போர், ரோதமடைவோர், மத்தியபானஞ்செய்வோர் பிரமஹத்தி செய்வோர், பொன்னைத் திருடுவோர் இவர்களோடு சேர்ந்தவர்களும் சூகர நரகத்தில் வீழ்வார்கள். அரசனைக் கொல்வோன், வைத்தியனைக் கொல்வோன், குருவின் மனைவியோடு கூடி மகிழ்பவன், உடன்பிறந்தாளைச் சேர்ந்து இன்புறுபவன், அரசரின் ஊழியரைக் கொல்வோன் ஆகியோர் தப்தகும்பம் என்னும் நகரத்திற்கு இரையாவார்கள். மனைவியை விற்போன் தன்னிடம் அன்பாக இருப்பவனைக் கைவிடுவோன், அடைக்கலம் புகுந்தவனை அடித்து விரட்டுபவன் முதலானவர்கள் தப்த லோகத்திற்கு ஆளாவார்கள். மகள், மருமகள் முதலானவரோடு புணர்கின்றவன், குருவை அவமதிப்போன், கோபித்துத் திட்டுபவன், முதலானவர்கள் மகாச்சுவால நரகத்தைச் சேர்வார்கள். தேவதூஷணை செய்பவனுக்கும், புணரக்கூடாத பெண்களோடு புணர்கிறவனுக்கும் லவணம் என்னும் நரகம் கிடைக்கும். திருடனுக்கும், உலக ஒப்புரவை அழிப்பவனுக்கும் விலோமம் நேரிடும். தேவ தூஷணை, பிராமண தூஷணை, பிதுரு தூஷணைச் செய்பவனும், உத்தம வஸ்துக்களைத் தூஷிப்பவனும், பிறருக்குத் தீங்கு செய்வோனும், சூனியம் வைப்பவனும், கிருமிசம் கிருமி பஷம் என்பவற்றில் விழுவார்கள்.

பிதுர்க்களையும் அதிதிகளையும் விட்டு முன்னதாக உண்பவனும், வேடர் முதலியோருக்கு அம்புகள், கத்திகள் முதலிய ஆயுதங்களைச் செய்து கொடுப்பவர்களும், விசஸநத்தைச் சேர்வார்கள். அயோக்கியரிடத்தில் தானம் ஏற்போர், வைதீக கருமங்களுக்குத் தகாதவனுக்கு அவற்றைச் செய்விப்பவன், சோதிட நூலை உணராமல் பயன் சொல்வோன் ஆகியோர் அதோமுகத்தில் வாதைப்படுவார்கள். சாகசஞ்செய்பவனுக்கும் பிறருக்குக் கொடுக்காமல் தான் ஒருவனே நல்ல வஸ்துவைப் புசிப்பவனுக்கும், பூயவக வேதனை உண்டாகும். பூனை, கோழி, ஆடு, நாய், பன்றி, பறவைகள் முதலியவற்றை எப்போதும் மிகவும் கொஞ்சி வளர்ப்பவனும் அந்த நரகத்தையே அடைவான். கூத்தாடிப் பிழைக்கும் பிராமணன், மல்யுத்தம் செய்து பிழைக்கும் பிராமணன், தூண்டில் முதலிய கருவிகளால் மீன்களைப் பிடிக்கும் பிராமணன், குண்டகோளகர் முதலியோரின் அன்னத்தைத் தின்பவன், விடமிடுவோன், கோட் சொல்வோன், மனைவியைக் கூட்டிக் கொடுத்து பிழைப்பவன், பருவமற்ற காலத்தில் பொருளாசையால் பருவச் சடங்குகளைச் செய்பவன், வீட்டைக் கொளுத்துவோன், நட்பைக் கெடுப்பவன், பறவைகளைக் கொலைக்கு விற்பவன், ஊருக்காக யாகஞ்செய்பவன், யாகத்தில் சோமம் என்ற ஆட்டாங்கொடியை விற்பவன் முதலியோர் ருதிராம்பத்தில் விழுவார்கள். யாகத்தை அழிப்பவன், ஊரையழிப்பவன் முதலியோர் வைதரணி நரகத்தை அடைவார்கள். பணம், வயது முதலியவற்றால் செருக்கடைந்து, கிராமத்து எல்லைகளை மாற்றுபவர்கள், சுத்தம் இல்லாதவர்கள், மோசஞ்செய்து பிழைப்பவர்கள் ஆகியோர் கிருஷ்ணத்தை அடைவார்கள். வைதீக உபயோகமில்லாமல் வீணாகப்பலாசு முதலிய மரங்களை வெட்டுபவர்கள், ஆடுகளை விற்பவர், மிருகங்களைக் கொன்று திரிகின்றவர் முதலியவர்களும் அக்கினிச் சுவாலத்தில் பிரவேசிப்பார்கள். கொளுத்தக் கூடாத பாண்டம் முதலியவற்றில் தீயிடுகின்றவனும், அதிலேயே சேருவான், விரதலோபஞ் செய்பவன், தனக்குரிய ஆசிரம தர்மத்தை விடுவோன், சந்தமிசத்தில் வீழ்ந்து வேதனைப்படுவான். பிரமச்சாரிகளாக இருந்தும் பகலிலும் இரவிலும் ஜீவசத்தான சுக்கிலத்தை விடுபவர்கள், புத்திரராலே ஓதுவிக்கப்படுபவர்கள் ஆகியோர் சுவபோஜனத்தில் படுவார்கள், தத்தமது வர்ணாசிரம விரோதமான காரியங்களைச் செய்தல் மனோவாக்குக் காயங்களினால் பாதசஞ் செய்தல் முதலான துர்ச்செயல்களை உடையவரெல்லாம் இதுபோலவே அந்தந்த நரகங்களில் சேர்வார்கள். இதுபோலவே அநேகவிதமான பாவங்களைச் செய்பவர்கள் வேதனைப்படும்படியான நரகங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நரகலோகத்திலிருக்கும் பிராணிகள் தலைகீழாக இருந்து கொண்டு சுவர்க்கத்திலுள்ள தேவர்களைப் பார்த்துத் துன்பப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். தலைகீழாக அவஸ்தைப்படும் நரகவாசிகளைப் பார்த்து தேவர்களும் மிகவும் பயந்து கொண்டிருப்பார்கள். பாவிகள் நரக வேதனைகளை அனுபவித்த பிறகு, தாவரங்களாகவும், புழுக்களாகவும், ஜலவாசிகளாகவும், பறவைகளாகவும், மிருகங்களாகவும், மனிதராகவும், மனிதரில் தர்மசீலராகவும், தேவர்களாகவும் மோக்ஷமயைத்தக்கவராகவும் ஆவார்கள்.

இவர்கள் எல்லாம் முந்தினவரில் பிந்தினவர் ஆயிரத்தில் ஒரு பங்காய் முந்தையப் பிறவியிற் பிந்தியப்பிறவித் தொடர்பு கொண்டு, மோக்ஷமடையும் வரை உழன்று கொண்டே இருப்பார்கள். சுவர்க்கத்தில் எத்தனை ஆன்மாக்கள் இருக்குமோ, அத்தனை ஆன்மாக்கள் நரகத்திலும் உண்டு. எந்த ஜீவன் பாவஞ்செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ளவில்லையோ, அது நரகத்தையடையும், வேதங்களில் எந்தெந்தப் பாவங்களுக்கு, எந்தெந்தப் பிராயச்சித்தம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவற்றை நன்றாக ஆராய்ந்து மனு முதலிய மாமுனிவர்கள், அற்பத்திற்கு அற்பமாகவும், கனத்திற்குக் கனமாகவும் தாங்கள் இயற்றிய தரும நூல்களில் கூறியுள்ளனர். மைத்ரேயரே! சாந்திராயணம் முதலிய தவங்களாயும், யக்ஞம், தானம் முதலிய கர்மங்களாயும் விதிக்கப்பட்டிருக்கும் சகல பிராயச்சித்தங்களும் மேலான பிராயச்சித்தம் ஸ்ரீகிருஷ்ணனுடைய ஸ்மரண சங்கீர்த்தனங்களேயாகும்! அதாவது எம்பெருமான் நிருபாதி சர்வசேஷி என்றும் தான் அவனுக்குச் சர்வதேச சர்வகால சர்வாவஸ்தைகளிலும் கிருபாதிகதாசன் என்றும், அவற்றில் கர்த்துருத்வாதிகள் சுவா தந்தரியத்தால் அல்லவென்றும் அவற்றைப் போக்கும் உபாயம் அவனே என்றும் நினைத்து, அவனது திருவடிகளையே சரணடைந்து அவனது திருநாமங்களையே கீர்த்தனம் செய்து கொண்டிருத்தலாகும். ஆகையால் இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்மரணப் பிராயச்சித்தமானது பகவத்குண பிரபாவத்தாலும் ஆத்ம ஸ்வரூபத்தாலும் தெளிந்து நிற்கின்ற விலக்ஷணதிகாரிக்கேயன்றி மற்றவருக்கல்ல. மற்றவருக்கோ கருமாதிகளே என்று தெரிந்து கொள்ள வேண்டும். எவன் பாவஞ்செய்தபோது, ஐயோ! இனிச் செய்யமாட்டேன். எம்பெருமான் நியமித்த நியமனத்தை உல்லங்கனம் செய்தேனே இனி என்ன செய்வேன்? என்று மனம் தரிப்பானோ அவனுக்கே பிராயச்சித்தத்தில் அதிகாரமுண்டு. அத்தகையவனுக்கு விதித்த பிராயச்சித் தங்களுக்குள்ளே முன்சொல்லப்பட்ட ஸ்ரீஹரி சம்ஸ்மரணமே சிறந்தது, அதுவும் ஒரு தரம் செய்வதே போதுமானது. பலதரஞ் செய்தாலே இனிச் செய்யும் பாவங்களுக்குக் காரணமான பூர்வ பாவங்களின் ஸ்மஸ்காரத்தையழித்து, வரும் பாவங்களை நாசஞ்செய்யும். இந்த ஸ்ரீஹரிஸ்மரணத்துக்கு காலநியமம் வேண்டுவதில்லை. காலை, நடுப்பகல், மாலை, இரவு ஆகிய எந்தக் காலத்திலும், எந்த மனுஷனானாலும், எவ்விதமாக வேண்டுமானாலும் ஸ்மரிக்கலாம். அவ்விதம் ஸ்மரித்துக் கொண்டே ஸ்ரீமந்நாராயணனைச் சரணமடைந்தவன் அப்போதே சகல பாவங்களிலிருந்தும் கிலேசங்களிலிருந்தும் நீங்கியவனாய் மோட்சமடைவான். அத்தகையவனுக்குச் சொர்க்கத்தை அடைவது இடையூறாகவே இருக்கும். ஜப ஹோம அர்ச்சனாதி சகல கருமங்களிலும் ஸ்ரீவாசுதேவ ஸ்மரணஞ்செய்கின்ற மகாத்மாவுக்கு இந்திரப்பதவி கிடைப்பதும் இடையூறுதான். ஏனென்றால் மீண்டும் திரும்பும்படியான சொர்க்கத்தை அடைவதற்கும் மோக்ஷ காரணமான ஸ்ரீவாசுதேவாதி திவ்ய நாம ஸ்மரணத்துக்கும் உள்ள தாரதம்மியத்தை நீரே அறிந்து கொள்வீராக. ஆகையால் எப்பொழுதும் ஸ்ரீவிஷ்ணுபகவானை ஸ்மரிக்கிற மனிதன் அவனது சகல பாதகங்களும் நீங்குவதால் நரகமடையமாட்டான்.

மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதல்லவா சொர்க்கம்? நரகமோ இதற்கு மாறாக இருப்பதாகும். புண்ய பாவங்களே சொர்க்க நரக சாதகங்கள். ஆகையால் உபசார வழக்காய் அவைகளே சொர்க்க நரகமாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரே வஸ்து புருஷ பேதத்தால் சுகஹேதுவாகவும், துக்க ஹேதுவாகவும், பொறாமை கோபம் முதலியவைகளுக்குக் காரணமாகவும் இருக்கிறது. மேலும் ஒருவனுக்கு ஒரே வஸ்து காலதேச அவஸ்தா பேதத்தால் ஒருமுறை சுகஹேதுவாகவும், மற்றொரு முறை துக்க ஹேதுவாகவும், கோபானுக்கிரக ஹேதுவாகவும் ஆகின்றது. ஆகையால் இது சுகம், இது துக்கம் என்று ஒரு வஸ்துவை நிர்ணயித்துச் சொல்லக்கூடுவதில்லை. கர்மவசமான மனோவிருத்தி பேதத்தினாலே, வஸ்துக்களில் சுக துக்காதி ஸ்வரூபமுண்டாவதைப் பற்றி பகவத் பிராப்தியாகிற மோக்ஷத்தைத் தவிர மற்றெல்லா நிருபாதிக சுகரூபமாயும் ஸ்திரமாயும், இராமையினால் சுவர்க்காதிகளும் இடையூறாகும். இவ்விதமாக மனோவிருத்தியான ஞானமானது விஷயங்களை பற்றுமாயின், சம்சார பந்தத்துக்குக் காரணமாகிறது. அப்படிப் பற்றாமல் இருந்தால் பிரமப் பிராப்திக்குக் காரணமாகின்றது. ஆகையால் மனோவியாபாரத்தினாலே சம்சார மோக்ஷங்களாகிய சகலமும் உண்டாகின்றன. மோக்ஷ சாதனமாகிய வித்தையும், பயனைக் கருதாமல் செய்யும் செயலாகிய அவித்தையும் ஞானத்தினாலேயே சாதிக்கப்படுபவை. மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி பூமண்டல, பாதாள, நரகங்கள், மலைகள், நதிகள், சமுத்திரங்கள் ஆகியவை பற்றிய யாவையும் தங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இனி நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்கள்? இவ்விதமாக பராசரர் கேட்டார்.

7. புவர்லோக, மேல் லோகங்களும் கிரக நிலைகளும்

பிரம்ம முனிவரில் உயர்ந்தவரே பூலோக சொரூபங்களை நீங்கள் கூறக்கேட்டு நான் மிகவும் மகிழ்ந்தேன். இனி புவர்லோகம் முதலிய மேலுலகங்களின் சொரூபங்களையும் சூரியன் முதலிய கோள்களின் அமைப்பையும் அளவுகளையும் சொல்லியருள வேண்டுகிறேன் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! சூரிய சந்திரர்களது கிரணங்களாலே எவ்வளவு தூரம் பிரகாசம் படுகிறதோ, அவ்வளவு தூரம் சமுத்திரங்கள்; நதிகள், மலைகள் முதலியவற்றோடு கூடிய பாகமானது பூலோகம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூமியானது அண்டகடாஹத்தை நாற்புறமும் தொட்டிருப்பதாகிய வட்டப்பரப்பின் அளவு எதுவோ; அதுவே வியாசப் பிரமாணமான அளவையுடைய ஆகாயமாகும். இது புவர்லோகம்! பூமிக்கு லக்ஷம் யோசனை தூரத்திலே சூரிய மண்டலம் அமைந்துள்ளது. அதற்கு லக்ஷம் யோசனை தூரத்திலே சந்திரமண்டலம் இருக்கிறது. அந்தச் சந்திர மண்டலத்துக்குச் சரியாக லக்ஷம் யோசனை தூரத்தின் மேலே நக்ஷத்திர மண்டலம் இருக்கிறது. அந்த நக்ஷத்திர மண்டலத்துக்கு மேலே இரண்டு லக்ஷம் யோசனை தூரத்திலே புதன் மண்டலம் இருக்கிறது. அதற்கும் அதனளவு தூரத்தில் சுக்கிர மண்டலம் இருக்கிறது. சுக்கிரமண்டலத்துக்கு அவ்வளவு தூரத்தில் அங்காரக மண்டலமும், அதற்கு அவ்வளவு தூரத்தில் பிரகஸ்பதி மண்டலமும், அதற்குமேல் அவ்வளவு தூரத்தில் சனி மண்டலமும் இருக்கின்றன. அதற்கு மேல் லக்ஷயோசனை தூரத்தில் துருவ மண்டலமானது சகல சேரதிச் சக்கிரத்திற்கு நடுவே நாட்டியுள்ள கம்பத்தைப் போல் விளங்குகிறது. இவ்வளவுதான் சுவர்லோகம் இவ்விதம் உயரத்திலுள்ள மூன்று லோகமும் யாக பலானுபவத்துக்கு ஸ்தானமாக இருக்கிறது. யாகமோ இந்தப் பாரத வருஷத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த துருவ மண்டலத்துக்கும் மேலே கோடி யோசனை தூரத்திலே, ஒரு கல்பகாலம் வாழ்கின்ற பிருகு முதலிய முனிவர்கள் வாசஞ்செய்யும் மகர்லோகம் இருக்கிறது. அதற்கு மேலே இரண்டுகோடி யோசனை தூரத்தில் பிருமபுத்திரரான ஜனகாதிகள் வாசஞ்செய்யும் ஜனலோகம் இருக்கிறது. அதற்குமேல் எட்டுக்கோடி யோஜனை தூரத்தில் தபோலோகம் இருக்கிறது. அதில் வைராஜர் என்ற தேவதைகள், பிரளய அக்கினியினால் உண்டான வெப்பம் இல்லாமல் இருக்கின்றனர். தபோலோகத்துக்கு மேல் பன்னிரண்டு யோஜனை தூரத்தில் சத்தியலோகம் இருக்கிறது. அதுதான், மீண்டும் மரணமடையாதவர்கள் வாசஞ்செய்யும் பிரம்மலோகம் என்று கருதப்படுகிறது. இவற்றின் விவரத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன். காலாலே நடந்து செல்லத்தக்க தாய்ப்பூமி சம்பந்தப்பட்ட வஸ்து எதுவுண்டோ அதுவெல்லாம் பூலோகம் என்று சொல்லப்படும். அதன் நிலப்பரப்பை முன்னமே சொல்லிவிட்டேன். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில்; சித்தர்களும் முனிவர்களும் வாசஞ்செய்யும் இடம் எதுவோ, அதுவே புவர்லோகம். அது லோகங்களில் இரண்டாவதாகும்.

துருவனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பதினான்கு லக்ஷம் யோஜனை அளவான இடம் சுவர்க்கலோகம் ஆகும். இந்த மூன்று உலகங்களுக்கும் கல்பந்தோறும் உண்டாக்கப்படுவதால் கிருதகம் என்றும், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்ற இந்த மூன்றும் கல்பந்தோறும் உண்டாக்கப்படாமையினால் அகிருதகம் என்றும் வழங்கப்படும். இந்தக் கிருதகம், அகிருதகம் என்ற இரண்டுக்கும் நடுவில் மஹர்லோகம் இருக்கிறது. அது கல்ப முடிவில் ஜன சூனியமாகிறதேயன்றி, அதன் சொரூபம் நசிப்பதில்லை. ஆகையால், அது கிருதாகிருதகம் என்று வழங்கப்படும். மைத்ரேயரே! இந்த மேலேழு லோகங்களும், பாதாளங்களாகிய கீழேழுலகங்களும் பிரம்மாண்டத்தின் பரப்பு எனப்படும். இவை விளாம்பழத்தில் விதையானது ஓட்டினால் சுற்றிலும் சூழப்பட்டிருப்பது போல, மேலும் கீழும் பக்கங்களிலும் அண்ட கடாஹத்தினாலே சூழப்பட்டுள்ளது. இந்த அண்ட கடாஹமானது, பத்து மடங்கு அதிகமான தண்ணீராலும் அந்த ஜலமாவது அக்கினியினாலும் அந்த அக்கினியானது வாயுவினாலும், அந்த வாயுவானது ஆகாசத்தினால் பப்பத்துப் பங்கு அதிகமாக சூழப்பட்டிருக்கின்றன. அந்த ஆகாசமும் பத்துப் பங்கு அதிகமான பூதாதியினாலும், அந்தப் பூதாதியும் பத்துப் பங்கு அதிகமான மஹத் தத்துவத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த மஹத் தத்துவத்தைப் பிரகிருதி தத்துவம் சூழ்ந்துள்ளது. அது காலத்தைப் பற்றிய முடிவையோ இடத்தைப் பற்றிய அளவையோ கொண்டிராமையால், அனந்தம் என்று வழங்கப்பட்டு, முடிவில்லாததாய் யாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. அதில் இப்படிப்பட்ட அநேக ஆயிரங்கோடி கோடி அண்டங்கள் உள்ளன. அன்றியும் ஞானத்தினாலே வியாபிக்கத்தக்கவனும், சுயம்பிரகாசனும் ஞான சொரூபியுமான சீவனும் அந்தப் பிரதான தத்துவத்தின், மரத்தில் நெருப்பைப் போலவும், எள்ளில் எண்ணெயைப் போலவும் மறைந்துள்ளான். இவ்விதமாக ஒன்றோடொன்று கலந்திருக்கும் தன்மையுடைய பிரகிருதியும் புருஷனும் சகலபூத வியாபகமான ஸ்ரீவிஷ்ணு சக்தியினாலே வியாபிக்கப்பட்டிருக்கிறார்கள். ஓ மகாபுத்திமானே! அந்த விஷ்ணு சக்தியே பிரகிருதி புருஷர்களை வேறுபடுத்துவதாகிய மோக்ஷத்துக்கும், கூட்டுவதாகிய பந்தத்துக்கும் காரணமாக இருப்பதுந் தவிர, படைப்புக்காலத்திலே சத்துவாதி குணங்கள் விஷமப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. காற்றானது அநேகம் நீர்த்துளிகளை யாதொரு பற்றுமில்லாமல் வகிப்பது போல் அந்த விஷ்ணு சக்தியும் பிரகிருதி புருஷ ரூபமான யாவற்றையும் பற்றில்லாமலேயே வகிக்கின்றது. வேர், கவை, கிளை, இலை முதலிய அவயவங்களுடன் கூடிய மரமானது, முதலில் விதையிலிருந்து எப்படி உண்டாயிற்றோ, எப்படி அதனின்று  வேறுவிதைகளும், அவற்றிலிருந்து வேறு மரங்களும் உண்டாகி, அவ்விதமான காரணத்தினாலே வியாபிக்கப்பட்டிருக்கின்றனவோ, அதுபோலவே சத்துவாதி குணமயங்களான மஹத்தத்துவம் முதல் பிருத்வியாதி பூதங்கள் ஈறாக உள்ள வஸ்துக்கள் யாவும் அவ்வியக்கத்தினின்றே உண்டாகின்றன. பிறகு அவற்றிலிருந்து தேவ, மனுஷியாதிகளும் அவர்களிடமிருந்து அவர்களுடைய புத்திரர்களும், பவுத்திரர்களும் உண்டாகி வருகின்றனர். விதையிலிருந்து மரமும், மரத்திலிருந்து விதைகளும் இப்படியாகப் பெருகி வருவதனால் அவற்றிற்குக் குறையவில்லை. அந்த மரம் விதையிலிருந்து உண்டானாலும் அதற்கு ஆகாசம், காலம் முதலானவை கூடச் சேர்த்திருத்தலினாலே காரணமாவது போல், பிரகிருதியிலிருந்து உண்டாகிற பிரபஞ்சத்துக்கு ஸ்ரீஹரிபகவான் அந்தப் பிரகிருதியின் சான்னியத்தினால் காரணமாகின்றதால் பரிணாம விகாரமில்லாமல் இருக்கின்றார்.

மைத்ரேயரே! நெல்லின் விதையிலேயே மறைந்திருக்கிற வேர், தாள்இலை, முளை, கதிர், பூ, பால், அரிசி, உமி என்பன. உழவு, விதைப்பு, நீர் பாய்ச்சல் முதலிய முளைத்தற்கு வேண்டுவதான காரியக் கருவிகளைப் பெற்று நன்றாய்ப் புலனாவதுபோல் பலவிதமான கர்மங்களில் வீழ்ந்துள்ள ஆத்மாக்கள், ஸ்ரீவிஷ்ணு சக்தியை அடைந்து, தேவ மனுஷ்யாதி பேதத்தினால் வெளிப்படுகின்றன. வேதத்தின் காரண வாக்கியங்களின்படி எங்கிருந்து இந்த உலகமெல்லாம் உண்டாகுமோ, எங்கே நிலைபெற்றிருக்குமோ, எங்கே லயத்தை அடையுமோ, எதனால் வியாபிக்கப்பட்டிருக்குமோ, அந்தப் பரப்பிரமம் விஷ்ணுவேயாகும். பிரம்மம் என்பது பரமபதம் என்பதும் சத்து, அசத்து என்பதும் எதுவும் அந்த ஸ்ரீவிஷ்ணுவேயாகும். இந்த உலகங்கள் யாவும் வித்தியாசமின்றி அந்த விஷ்ணுவினுடையதாய் இருக்கிறது. அவ்யக்தமான மூலப்பிரகிருதி சரீரகனும், வியக்தமான லோக சரீரகனும் அந்த ஸ்ரீவிஷ்ணுவே! அந்த ஸ்ரீவிஷ்ணு தேவனே, தன்னைப் பெறுவதற்குச் சாதனமான யாகாதிகளுக்குக் கர்த்தாவாகவும் உத்தேசிய தேவதையாகவும் கிரியா சொரூபியாகவும் அதன் பயனாகவும் அந்தக் கிரியைகளின் உபகரணங்களான சொரூபம் முதலியனவாகவும் இருக்கின்றன. அவனைவிட மேலானது வேறொன்றும் இல்லை. அவனே யாவற்றுக்கும் சொரூப யோக்கியதா சக்திகளைக் கற்பிப்பவன் என்பது கருத்து.

8. சூரிய மண்டலமும் அதன் மார்க்கமும்

மைத்ரேயரே! பிரம்மாண்ட நிலையை உமக்கு விளக்கிக் கூறினேன். இனி சூரியன் முதலான கிரகங்களின் நிலையைச் சொல்லுகிறேன் கேளுங்கள். சூரியனுடைய தேரானது பதினாயிரம் யோசனை விசாலமுள்ளதாய் ஒன்பதாயிரம் யோசனை வரை சூரிய மண்டலத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கும். அதன் இருபுறத்து இருசுகளையும் சேர்க்கும் கட்டையானது இருபதினாயிரம் யோசனை அளவையுடையது. அதன் ஒருபுறத்தில் இருசு ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷம் யோசனையளவுள்ளது. அதிலே தான் சக்கரம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும். அந்தச் சக்கரமானது சம்வச்சர ஸ்வரூபமாக இருக்கும். அதற்குக் காலை, நடுப்பகல், பிற்பகல் என்ற நாட்பிரிவுகள் மூன்றும் இருசு கோத்திருக்கும் இடமாயிருக்கும். சம்வத்சரம், பரிவச்சரம், இடாவச்சரம், அநுவச்சரம், இத்வச்சரம் என்ற வருஷங்கள், பேதங்கள் ஐந்தும் அரங்களாகும். இரிதுக்கள் ஆறும் சுற்று வட்டங்களாக இருக்கும். இத்தகைய அவயவங்கள் உள்ளதாயும், க்ஷயமில்லாதிருக்கிற அந்தச் சக்கரத்திலே தான் காலச்சக்கரம் முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அந்த இரதத்துக்கு காயத்ரி பிருகிதி உஷ்ணிக் ஜகதீ, திருஷ்டுப் அனுஷ்டுப், பஸ்தி என்ற சந்தங்கள் ஏழுமே குதிரைகளாக இருக்கின்றன. அந்தச் சூரிய ரதத்தில் மற்றொரு புறத்து இருசு, நாற்பத்தையாயிரத்து ஐநூறு யோசனை அளவுள்ளது. நுகத்தடியின் அளவும் இருசின் அளவும் சமமாகும். அந்தச் சிற்றிருசானது, தனது நுகத்தடியின் பாதியோடு கூட, வாயுரூபமான கயிறுகளுடன் கட்டப்பட்டுத் துருவனை ஆதாரமாகக் கொண்டுள்ளது. பேரிரிசு கோக்கப்பட்டிருக்கம் சக்கரமானது மானசோத்திர பர்வதத்தின் மீதுள்ளது. அந்தப் பர்வதத்தின் மேல் கிழக்கில் வஸ்வோகசாரா என்ற இந்திரனுடைய பட்டணமும், தெற்கில் சம்யமனி என்ற எமனுடையப் பட்டணமும் மேற்கில் சுகா என்ற வருணனுடைய பட்டணமும், வடக்கில் விபாவநீ என்ற சோமனுடைய பட்டணமும் இருக்கின்றன.

சூரியன் தென்திசையை அடையும்போது ஜோதிச்சக்கரத்தின் கடைசியை அடைந்தவனாகி, எறிந்த அம்பைப் போல் விரைவாக ஓடுகிறான். அந்தச் சூரியபகவான் தான் இரவு பகல் என்ற ஏற்பாட்டுக்குக் காரணமாயும் யோகிகளுக்குச் சகல கிலேசங்களும் விடுபட்டுப் போகுங்காலமாகிய முடிவுக்காலத்தில் தேவயான வழியாகவும் இருக்கிறான். (தேவயானம் என்பது அர்ச்சிராதி மார்க்கம், அதாவது முதலில் அக்னி, பிறகு முறையே பகல் பூர்வ பக்ஷம், உத்தராயணம், வருஷம், காற்று, சூரியன், சந்திரன், மின்னல், வருணன், இந்திரன், பிரமன் என்பவர்களது எல்லைகளாம். மோக்ஷம் அடைபவர்கள் செல்லும் வழி இதுவேயாகும். சூரியன் நமக்கு எப்படிப் பகலிலே அதிக உஷ்ணமாயும், பிரகாசமாயும் காணப்படுகிறானோ அதுபோலவே எங்கும் இருக்கிறான். ஆகையால் உதயாஸ்தமன பேதங்கள் இல்லை. ஆனால் திக்குவி திக்குகள் எதிலும் எவர்களுக்கு எங்கே காணப்படுகிறானோ அங்கே உதயம் என்றும், அதற்கு நேர்கோணத்தில் அஸ்தமனம் என்றும் உலக விவகாரம் உண்டாயுள்ளது. ஆகவே, எப்பொழுதும் உதயாஸ்தமனங்கள் உண்டாயிருக்கிற காரணம் இவ்வளவேயல்லாமல் சூரியனுக்கு இயல்பாக உதயமும் அஸ்தமனமும் இல்லவே இல்லை. இந்திரன் முதலியவருடைய பட்டணங்களில் சூரியன் எங்கிருந்தாலும் அதனையும் பக்கத்துக் கோணங்கள் இரண்டையும் புரங்கள் இரண்டையும் ஸ்பரிசிக்கிறேன். உதயமானது முதல் கிரணங்கள் வளரப்பெற்றிருந்து நடுப்பகலுக்கு மேல் கிரணங்கள் சுருங்கப்பெற்றவனாய் அஸ்தமனமாகிறான். இந்த உதயாஸ்தமனங்களைக் கொண்டுதான், கிழக்கு என்றும் மேற்கென்றும் திக்குகள் வகுக்கப்பட்டன. இதைக்கொண்டே வலதுபுறம் தென்திசை எனவும், இடதுபுறம் வடதிசை எனவும் குறிக்கப்படுகின்றன. சூரியன் எதிரில் எவ்வளவு காய்கிறானோ, அவ்வளவு பின்புறத்திலும் பக்கங்களிலும் காய்கிறான். ஆனால் மகாமேருவில் இருக்கிற பிரமசபையில் செல்லும்போது, அதன் காரணங்களாலே, சூரிய கிரணங்கள் ஒளி மழுங்கித் திரும்புவதால் அந்தச் சபையைச் சூரியன் காய்வதில்லை. இதுபோன்ற உதய அஸ்தமயங்களினாலேயே, கிழக்கு முதலிய திசைகள் ஏற்பட்டிருப்பதால், மேருமலையானது சகல வருஷங்களுக்கும் வடக்காகவே ஆகின்றது. அதனால் மேருவின்மேல், பிரமசபையின் காந்தியினால் பகலும், சூரிய சஞ்சாரமின்மையால் இரவுமாக எப்போதுமே இருக்கும்.

அஸ்தமயமாகிற சூரியனுடைய கிரணங்கள் அக்னியில் பிரவேசிப்பதால் அந்த அக்கினியானது, இரவில் அதிகமாகப் பிரகாசிக்கிறது. அக்கினிக் கிரணங்கள் பகலில் சூரியனிடத்தில் பிரகாசிப்பதால் சூரியன் அதிகமாய்ப் பிரகாசிக்கிறான். இப்படியாக உஷ்ணப் பிரகாசமுள்ள தேஜஸ் இரண்டும் மாறி மாறி ஒன்றிலொன்று கலந்து விளங்குகின்றன. மேருவின் புறத்திலும், வடபுறத்திலும் பூமியின் பாதியில் சூரியன் உதயமாகும்பொழுது இருளான இரவும், வெளிச்சமான பகலும் முறையே தண்ணீரில் பிரவேசிப்பதால், அந்தத் தண்ணீரானது சிறிது சிவப்பாகவும்,வெளுப்பாகவும் ஆகிறது. இவ்விதமாக புஷ்கரத்தீவின் நடுவினால் பூமியில் முப்பதில் ஒரு பங்கைச் சூரியன் கடப்பதனால் நாலில் முப்பதில் ஒரு பங்காகிய முகூர்த்தக்காலம் உண்டாகிறது. குயவனுடைய சக்கரத்தில் திரிகின்ற பூச்சியைப் போல, ஜோதிச் சக்கரத்தில் திரிகின்ற சூரியன் தென்திசை நீங்கி, உத்தராயணத்தின் முதலான மகரத்திலே வரும்போது, முற்பட்ட பகலிரவுகளை விட வித்தியாசமான பகலிரவுகளைச் செய்து வருவான். பிறகும் அப்படியே முறையாகக் கும்பம்; மீனம் என்ற ராசிகள் இரண்டையும் கடந்து மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது, பூமத்தியாகிய விஷுவத்தின் கதியைச் சேர்ந்து பகலிரவுகளைச் சரியாகச் செய்வான். அங்கிருந்து சஞ்சரிக்கும் போது, நாள்தோறும் பகல் வளர்ந்து கொண்டே வர, இரவு க்ஷீணித்துக் கொண்டே வரும். இப்படியாக மிதுனம் வரையில் சூரியன் சென்று, கர்க்கடக ராசிக்குத் திரும்பும் போது தக்ஷிணாயனம் உண்டாகும். குயவனது சக்கரத்தின் நுனியிலிருக்கும் பூச்சியைப் போல், தக்ஷிணாயனத்திலே சூரியன் விரைவாகச் சஞ்சரித்துக் கொண்டு, பன்னிரண்டு முகூர்த்த காலமான பகலினால் பதின்மூன்றரை நட்சத்திரங்களையும், பதினெட்டு முகூர்த்த காலமான இரவினாலே மற்ற பதின்மூன்றரை நட்சத்திரங்களையும் கடக்கிறான். மறுபடியும் உத்தராயணத்துக்கு வரும்போது, குயவனின் சக்கரத்தின் நடுவே கிடக்கும் பூச்சியைப் போல், மந்தமாகச் சஞ்சரித்துக் கொண்டு முந்திய இரவு பகல்களுக்கு மாறான இரவு பகல்களை உண்டாக்குகிறான். ஆகவே, உத்தராயணத்தில் பகலின்; வளர்ச்சி பதினெட்டு முகூர்த்த அளவாகவும், இரவின் குறைவு பன்னிரண்டு முகூர்த்த அளவாகவும், இருக்கும் சக்கரத்தின் நாபியானது அங்கேயே அதிமந்தமாய்ச் சுழல்வது போலவே ஜோதிச் சக்கர மையத்தினாலேயே துருவனும் சுழன்று கொண்டிருக்கிறான். இவ்விதம் தட்சிணாயன உத்தராயணங்களிலே; அந்தந்த ராசி மண்டலங்களைச் சூரியன் கடக்கும். திறத்தால், பகல் வளர இரவு குறைதலும், இரவு வளரப் பகல் குறைவதுமாக இருக்கும் சூரியனோ பகலிலும் இரவிலும் அவ்வாறு ராசிகளைச் சமமாகக் கடக்கிறான். ஆயினும் ராசிகளின் அளவு வித்தியாசத்தினால் இரவு பகல்களில் வித்தியாசம் உண்டாகின்றது. மேலும் இந்த மாறுபாடு அங்கங்கேயிருந்து பார்ப்பவர்களுடைய பார்வையிற்படுகின்ற உதயாஸ்தமய பேதத்தினாலுமாகும்.

இரவு உஷையென்றும், பகல் வியுஷ்டி என்றும் வழங்கப்படும் இந்த உஷா, வியுஷ்டிகளின் நடுவானது சந்தி என்று வழங்கப்படும். இப்படிச் சந்தி ஏற்படும்போது, மந்தேகர் என்ற அரக்கர் சூரியனையே புசிக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நித்ய மரணமும் உடல் நாசமாகாமலிப்பதுமாகப் பிரமதேவனாலே சாபமிடப்பட்டிருக்கிறது. அவ்வசுரர்கள் சூரியன்மீது பாயும்போது, சூரியனுக்கும் அசுரர்களுக்கும் கொடிய யுத்தம் உண்டாகிறது. அதன் நிமித்தம் பிராமணோத்தமர்கள் பிரணவ, வியாகிருதி காயத்ரீ மந்திரங்களினாலே அபிமந்தரித்த தண்ணீரை எறிகின்றனர். அந்தத் தண்ணீரானது வஜ்ரம் போலாகி அசுரரை நாசஞ்செய்கிறது. பிறகு, பிராமணர்களாலே அக்னி ஹோத்திரத்தில் மந்திரத்துடன் ஆகுதி செய்யப்படும். முதல் ஆகுதியினால் ஆயிரங்கிரகணங்களுக்குள்ள சூரியன் என்னுஞ் ஜோதியானது உலகமெல்லாம் பிரகாசிக்கும்படி விளங்குகிறது. அந்தப் பிரணவமானது ஸ்ரீவிஷ்ணு ஸ்வரூபமாய்; வியாகிருதி தேவதைகளுக்கு இடமாய் வேதங்களுக்கு எல்லாம் அதிபதியாக இருப்பதால், அதன் உச்சாடன மகிமையால் அரக்கருக்கு நாசம் உண்டாகிறது. நிர்விகாரமாய், உள்ளே தோன்றும் ஜோதியாக இருக்கிற ஸ்ரீவிஷ்ணுவினுடைய உத்தம அம்சமானது சூரியனாகி, அந்தப் பிரணவத்தைப் பொருந்தியிருப்பதால், அதையது தெரிவித்துக் கொண்டு, அந்த ஜோதியை நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரபாவமுள்ள பிரணவத்தினால் ஸ்ரீவிஷ்ணுவின் தேஜோமயமான சூரியன் விளக்கப்பட்டதாகி மந்தேகர் என்ற பெயரையுடைய பாபங்களைக் கொளுத்தி விடுகிறது. ஆகையால் சந்தியாவந்தன காரியத்தை எவனும் விட்டு விடலாகாது. விடுவதனாலே, சூரியனைக் கொன்ற பாபத்தை அடைவான். இவ்விதமாக வாலகிலியர் முதலான மகாபிராமணர்களாலே ஏட்சிக்கப்பட்டு சூரியபகவான் லோக சம்ரட்சணார்த்தமாய் அப்புறஞ்செல்கிறான். சந்தியாகால நிர்ணயத்தைச் சொல்கிறேன். கேட்பீராக பதினைந்து நிமிஷங்கள் ஒரு காஷ்டை முப்பது காஷ்டைகள் ஒரு கலை, முப்பது கலைகள் ஒரு முகூர்த்தம். அவை முப்பது சேர்ந்து இரவும் பகலுமாகிய ஒரு நாளாம். இப்படிப்பட்ட நாளில் விருத்தியானாலும் க்ஷயமானாலும் அவற்றுக்கு ஏற்ற அளவைக் கொண்ட பதினைந்தாம் பங்கான ஒரு முகூர்த்த காலமே சந்தியா காலமாகும். உதயகாலந் தொடங்கி சூரியன் மூன்று முகூர்த்தஞ் செல்லுமளவும் பிராதக் காலம் என்று சொல்லப்படும். அது பகலில் ஐந்தில் ஒரு பங்காம் அதற்குமேல் மூன்று முகூர்த்த காலம் சங்கலம் என்று சொல்லப்படும். அந்தச் சங்கல காலத்தின் மேலே மூன்று முகூர்த்த காலமானது மத்தியான்னமாகும். அதன் பிறகு மூன்று முகூர்த்தகாலமானது அபரான்ன காலம் ஆகும். பின்பு உள்ள மூன்று முகூர்த்தகாலம் சாயான்ன காலம். இப்படிச் சரியான பதினைந்து முகூர்த்தமுள்ள பகலானது விஷுவத் காலத்திலாகும். இந்த நாளானது உத்தராயண தக்ஷிணாயனங்களிலே வளர்ந்துங் குறைந்தும் ஒரு போது, பகலினால் இரவு விழுங்கப்பட்டும், மற்றொருபோது இரவினால் பகல் விழுங்கப்பட்டும் இருக்கும். சரத்ருதுவின் ஆரம்பமான துலாராசியில் சூரியன் வருகையிலும் வசந்த ருதுவின் ஆரம்பமான மேஷ ராசியில் சூரியன் இருக்கும்போதும் விஷுவம் என்ற காலம் உண்டாகின்றது. அதுதான் ஏற்றக்குறைவில்லாத இரவு பகல்களை உடையதாகும்.

சூரியன் கர்க்கடக ராசியில் இருக்கும்போது, தட்சிணாயனமும், மகர ராசியில் இருக்கும்போது உத்தராயணமும் ஆகும். பிராம்மணோத்தமரே! முன்பு நான் முப்பது முகூர்த்த அளவானது ஒரு நாளாகும் என்று சொன்னேன். அவை பதினைந்து கூடியது ஒரு பக்ஷம். இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம், சூரிய கதியினாலாகும் இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகும். மூன்று ருதுக்கள் ஒரு அயனமாகும். இரண்டு அயனங்கள் ஒரு வருஷம். இவ்வருஷமானது சவுரம், சாந்திரம், சாவனம், நாக்ஷத்திரம் என்று நான்கு வகைப்படும். இப்படி விகற்பிக்கிற வருஷங்கள் ஐந்து கூடி, ஆரம்பத்தைப் போல விகற்பமின்றி முடிவதாலே, யுகம் என்ற பெயரையடையும், அவற்றுள் முதலாவது சம்வச்சரம் என்றும், இரண்டாவது பரிவச்சரம் என்றும் மூன்றாவது இடாவச்சரம் என்றும், நான்காவது இத்வச்சரம் என்றும், ஐந்தாவது அனுவச்சரம் என்றும் வழங்கப்படும். சுவேதமலைக்கு வடக்கே சிருங்கவான் என்ற மலை ஒன்றுண்டு. அது மூன்று கொடிமுடிகளைக் கொண்டது. அந்த முடிகளில் ஒன்று தென்புறத்திலும், மற்றொன்று வடபுறத்திலும் இன்னொன்று நடுவிலும் இருக்கின்றன. தென்புறச் சிருங்கத்தில் சூரியன் சஞ்சரிப்பதனால் உத்தராயணமும், நடுவே வருவதால் விஷுவமும் உண்டாகின்றன. கிருத்திகையின் முதற்பாதத்தில் சூரியன் இருக்கும்போது, சந்திரன் விசாக நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் இருப்பான். சூரியன் விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கும்போது சந்திரன் கிருத்திகையின் முதலில் இருப்பான். இத்தகைய காலம் தான் மகாவிஷுவம் என்ற புண்ணிய காலம் ஆகும். அப்போது சிரத்தையுடைய புருஷர், தேவதைகள், பிதுர்கள் இவர்களை உத்தேசித்து பிராமணருக்குத் தானங்கொடுக்க வேண்டும். இது தானத்துக்கு முகமாயுள்ளது. அப்போது தானங்கொடுப்பவன் மகாபுண்ணியம் செய்தவனாகிறான். இனி, யாக காலங்களைக் கூறுகிறேன். பகல், இரவு, அர்த்தஜாமம் என்ற பக்ஷம், கலை, காஷ்டை, க்ஷணம், பவுர்ணமி, அமாவாசை, சந்திரன் காணப்படாத குரு என்பதுமான அமாவாசையின் பிரிவுகள் பூரண சந்திரனிலுள்ள ராகை என்பதும் குறைந்த சந்திரனிலுள்ள அனுமதி என்பதுமான பவுர்ணமாவாசையிலுள்ள பிரிவுகள் தபம், தபசியம், மது மாதவம் சுக்கிரம் சுசி என்கிற மாசி முதலிய மாதங்களாகிய உத்தராயண ருதுக்கள் மூன்று, நபம் ந சியம், இஷம், ஊர்ச்சம், சகம், சகசியம் என்கிற ஆவணி முதலிய மாதங்களாகிய தக்ஷிணாயன ருதுக்கள் மூன்று. இந்தக் காலங்கள் எல்லாம் முக்கியமான யாக காலங்கள் என்பதை நன்றாய் அறிதல் வேண்டும்.

முன்பு லோகா லோகம் என்று ஒரு பெரிய மலையைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதன் நாற்புறங்களிலும் கர்த்தமப் பிரஜாபதியின் பிள்ளைகளான சுதன்வா, சங்கபா என்பவர்களும் ஹிரண்ய ரோமா, கேதுமான் என்ற வேறு இருவரும் ஆகலோகபாலகர்கள் நால்வர் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் சுகதுக்கங்களும், ராகத்வேஷாதிகளுமான துன்பங்கள் இல்லை. மைத்ரேயரே! அகஸ்திய வீதிக்கு வடக்காகவும், அஜ வீதிக்குத் தெற்காகவும், வைசுவானவ வழிக்கு வெளியிலிருக்கிற மார்க்கம் பிதுர்யானமாகும். அதாவது, அதுவே பிதுர்லோகஞ்சேரும் வழியாகும். அங்கே அக்னிஹோத்ரமுடையவரான சில முனிவர்கள் வாசஞ்செய்து கொண்டு வேதத்திலுள்ள கர்மகாண்டங்களைத் துதித்துக் கொண்டு யாகமுயற்சிகளை செய்து கொண்டுமிருப்பார்கள். அந்த உலகத்தை அடைய விரும்புவோருக்குத் தான் பிதுர்யானம் என்ற தூமாதி மார்க்கம் உண்டு. (தூமாதி மார்க்கம் அதாவது முதலில் தூமம், பிறகு முறையே இரவு அமர பக்ஷம், தக்ஷிணாயனம் மாதங்கள், பிதுர்லோகம், ஆகாயம், சந்திரன் என்பவை எல்லைகள். இந்த வழியிற்சென்றவர்கள் கர்மலோகானுபவம் முடிவுபெற்றதும், மீண்டும் சந்திரனை விட்டு, ஆகாயம், காற்று, புகை, மேகம், மழை நீர், விதைகள் இவற்றின் ஸ்திரீ புருடர்களையடைந்து கர்மங்களுக்கேற்ற தேகத்தோடு பிறப்பார்கள்.) அவ்வுலகத்திலிருக்கும் பிதுர்க்கள், கர்மகாண்டம் அழியாதபடி சந்ததிகளினாலும் தபசினாலும் வேதத்தியானங்களினாலும் ஸ்தாபித்து வருவதும் அல்லாமல் முந்தினவர் பிந்தினவர்களுடைய வமிசத்திலேயும், பிந்தியவர் முந்தினவர்களுடைய வமிசத்திலேயும் பிறந்து கொண்டே, இந்த மூன்று உலகமும் அழியும் காலமாகிய பிருமாவின், நாள்வரை இருப்பார்கள். நாகவீதிக்கு வடக்காகவும், சப்தரிஷி வீதிக்கு தெற்காகவும் உள்ள மார்க்கம் தேவமார்க்கம் என்று சொல்லப்படும். அங்கு, இந்திரிய வெற்றியுள்ளவர்களாய் சித்திபெற்ற நிர்மல பிரமச்சாரிகளான சில மகாத்துமாக்கள் இருக்கின்றனர். அவர்கள் சந்ததியை வெறுத்திருப்பதால் மிருத்யுவை வென்றவர்களானார்கள். அந்த எண்பதாயிரம் இருடிகளும் சூரியனுடைய வடபுற வழியை ஆஸ்ரயித்துப் பிருமாவின் தினபரியந்தம் யாதொரு துன்பமும் அழிவும் இன்றி இருப்பார்கள். இந்த இருப்பு, லோபமும் குரோதாதிகளும் ஸ்திரீ சம்போகமும் விருப்பு வெறுப்புக்களும் இல்லாமையினாலும் கர்மத் தொடர்பை விட்டிருப்பதாலும் யோகத்திலிருந்து வழுவாமையினாலும் சத்தாதி விஷயங்களில் குற்றத்தைக் காண்பதாலும் அவ்விடத்தில் இருப்பவர் பிருமதினத்தின் முடிவுவரை நிலை நிற்பதாலும் அது அமிருத்வம் என்று வழங்கப்படும். இந்தப் பிரும தின அந்தமான காலமே பிரம்மஹத்தி செய்த பாவத்தின் பயனாக நரகத்தை அனுபவிப்பதற்கும் ஏற்படுத்திய காலமாகும். அந்தக் காலத்தில் பூமி முதல் துருவன் இருக்கும் ஸ்தானம் அளவும் அழிந்து போய்விடும்! சப்தரிஷிகளுக்கு மேலே வடபுறத்திலே துருவ நட்சத்திரம் இருக்குமிடம் யாதுண்டோ அது திவ்வியமாகவும் மகாப் பிரகாசமாகவும் இருக்கின்ற மூன்றாவது ஆகாய ஸ்தானம் அது விராட்புருஷனுக்கு இருதய நாடிஸ்தானமானது பற்றி, அங்கே விஷ்ணு எழுந்தருளியிருக்கிறார். ஆகையால் அதற்கு விஷ்ணுபதம் என்ற பெயர் ஏற்பட்டது. அது காமாதி தோஷங்களைக் கழித்துப் பரமாத்துமாவினிடத்தில் மனதைப் பதியவைத்த யோகிகளுக்கு, புண்ணிய பாப கர்மங்களெல்லாம் க்ஷயித்தபோது அடையத்தக்க ஸ்தானமாகும். யோகிகள் பாவபுண்ணியங்கள் ஒழிந்ததாலே சுகதுக்க அனுபவ ரூப சம்சார ஏதுக்களில்லாதவர்களாய் எந்த உத்தமமான இடத்திலே சென்று ஆனந்தத்தோடு இருப்பார்களோ அதுதான் ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும்!

லோகதாக்ஷிகளான தருமன், துருவன் முதலிய மகாத்மாக்கள் எங்கே இருந்து கொண்டு அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய ஐசுவரியத்துக்குச் சமானமான ஐசுவரியமாகிய இந்திரிய வெற்றியினாலே சீர்ப்பட்டிருக்கும் யோகப் பிரபாவம் உள்ளவர்களாய் விளங்குகின்றன. ரா அதுதான் ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும்! சராசரங்கள் எல்லாம் எங்கே குறுக்காகவும் நெடுக்காகவும் கோக்கப்பட்டு, எங்கே இருப்பனவாய், உண்டாவனவாய் இருக்குமோ அதுவே ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாம். எது ஆகாயத்திலே சூரியனைப் போல் மகாத்மாக்களுக்கு சுத்த விசேஷ ஞானத்தினாலே பிரத்யக்ஷமாய் விளங்குமோ, அதுவே ஸ்ரீவிஷ்ணுவினுடைய பரமபதமாகும். அங்கே சென்றவர்கள் மீண்டும் சம்சாரபந்தத்தையடையாமல் பிரம்மாவுடன் கூடி மோட்சத்தை அடைவார்கள். அது கிரம முந்தி ஸ்தானமாகையால், மோக்ஷ ஸ்தானமான பரமபதம் என்று சொல்லப்படும். அதுஎப்படி லோகாதாரமாகிறது என்பதைச் சொல்கிறேன் கேளுங்கள். மகா தேஜஸுள்ள துருவன் அங்கே நடுக்கூச்சம் போல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறான் அன்றோ? அந்தத் துருவனிடத்திலே சகல கிரக நக்ஷத்திரங்களும் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன. அந்தக்கிரக நக்ஷத்திரங்களில் மேகங்கள் நாட்டப்பட்டு மழையானது சகல ஓஷதிகளின் மூலமாக படைப்புக்குக் காரணமாயும் தேவதைகள் முதலானோருக்கு போஷணையாகவும் இருக்கிறது. அதனாலேயே நெய் முதலிய அவிசொரிகின்ற ஆகுதி மூலமாகத் தேவர்கள் திருப்தியடைந்தவர்களாய் லோகசிருஷ்டிக்கும் ஸ்திதிக்கும் காரணமாகின்றனர். இவ்விதமாக இந்த விஷ்ணுபதம் என்கிற பரிசுத்தமான மூன்றாவது ஸ்தானமானது மூன்று உலகங்களுக்கும் ஆதாரமாயும் விருத்தி ஹேதுவாயும் இருக்கிறது. மைத்ரேயரே! அந்த விஷ்ணு பதத்தின் பரிசுத்தப் பிரபாவத்தை மேலும் கேட்பீராக, அங்கிருந்து சகல பாதகங்களையும் நாசஞ்செய்யவல்ல கங்கை என்று நதியானது உண்டாகி, தேவ மங்கையரின் சரீரத்திலுள்ள குங்குமப் பூச்சினால் பொன் நிறமுடையதாய் விளங்குகின்றது. ஸ்ரீவிஷ்ணு பகவானுடைய இடது திருவடித் தாமரையின் கட்டைவிரல் நகத்திலுண்டான பிரவாகத்திலிருந்து பெருகி வரும் அந்தக்கங்கை நதியைத் துருவன் இரவும் பகலும் பக்தியோடு தனது சிரசில் வகிக்கிறேன். பிறகு, சப்தரிஷிகள் பிராணாயாமம் செய்து கொண்டு, அந்தக் கங்கையின் அலைகளினால் ஜடைகள் மிதக்க, அகமர்ஷண ஸ்நானம் செய்துகொண்டு இருக்கிறார்கள். பிறகு அந்தக் கங்கை நதியின் ஜலப்பிரவாகத்தினால் சந்திர மண்டலம் நன்றாக நனைக்கப்பட்டு இரவில் அதிகக் காந்தியை அடைந்து விளங்குகிறது.

பிறகு, அது சந்திர மண்டலத்தை விட்டுப் புறப்பட்டு, மேருமலையின் மீது விழுந்து சீதா, அளகந்தா சட்சு பத்திரை என்ற பெயர்களை பெற்று நான்கு திசைகளிலும் இவ்வுலகத்தைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு இறங்கி வருகின்றது. அந்த நான்கு பிரிவுகளில் தென்புறம் வருகிற அளகநந்தை என்ற கங்கையின் பிரிவை, சிவன் மகா பக்தியோடு நூறு வருஷத்துக்கு மேலான காலமும் தன் சிரசில் தரித்துப் பிறகு விடுகின்றார். அது சிவனுடைய ஜடாமகுடத்திலிருந்து தரையில் வீழ்ந்து, சகரகுமாரருடைய நொறுங்கிய எலும்புகளை நனைத்து, அந்தப் பாவிகளையும் சொர்க்கஞ்சேரும்படிச் செய்தது. இந்த மகாநதியில் ஸ்நானம் செய்தவுடனேயே சகல பாவங்களும் பாழாவதுமன்றி, மகா புண்ணியமும் உண்டாகும். புத்திராதிகள் அதன் தண்ணீரினால் பிதுர்க்களுக்கு ஒருமுறை தர்ப்பணம் செய்வார்களானால் அதனால் அந்தப் பிதுருக்கள் நூறு ஆண்டுகள் மட்டும் ஒப்பற்ற திருப்தியை அடைவார்கள். அந்தக் கங்கா நதியின் கரையில் பிராமணரும் க்ஷத்திரியரும் யக்ஞேசுவரனான ஸ்ரீபுரு÷ஷாத்தமனை மகா யக்ஞங்களினாலே ஆராதித்து, இந்த உலகத்தில் மேல் உலகத்திலும் மிகுந்த செல்வத்தை அடைந்தார்கள். யோகிகளும் அதன் நன்னீரில் நீராடிப் பாவங்கள் நசிக்கப்பெற்று ஸ்ரீகேசவனிடத்திலே சித்த லயத்தினால் மோக்ஷõனந்தமும் பெற்றார்கள். அந்தக் கங்கையானது தன்னில் மூழ்குகிறவர்களுக்கும், தன்னை உண்பவருக்கும், துதிப்பவருக்கும், பரிகசிப்பவருக்கும், விரும்புகிறவருக்கும், காண்பவருக்கும், கேட்பவருக்கும் சகல பாவநிவர்த்தி செய்யும்படியான மகிமையை உடையது; நூறு காதத்துக்கு அப்புறம் இருந்தாகிலும் கங்கை! சங்கை! என்ற நாம சங்கீர்த்தனம் செய்தவர்களுக்கும், மூன்று பிறவிகளினாலே நேர்ந்துள்ள பாவங்களை ஒழிக்கும். இவ்விதமாக மூவுலகங்களையும் தூய்மைப்படுத்தவல்ல கங்கை நதியானது அவதரிக்கப் பெற்ற புனித ஸ்தலமாக, அந்த விஷ்ணுபாதமானது விளங்குகிறது.


© Om Namasivaya. All Rights Reserved.