Books / மஹா புராணங்கள்


சிவமகா புராணம்

ஞான சம்ஹிதை (பகுதி-1)


காப்பு: ஜகதஹ் பிதாம் சம்பும், ஜகதோ மாதரம் சிவம், தத்புத்ரம்ச கணாதீஸம்,  நக்வைத த்வர்ண யாம் யஹம் -  உலகங்கள் அனைத்திற்கும் பரமபிதாவான சிவபெருமானையும் அவ்வுலகங்கள் அனைத்திற்கும் அருள் அன்னையான உமா மகேஸ்வரியையும் அவர்களின் பிள்ளையான கணேசப் பெருமானையும் நமஸ்காரஞ்செய்து. இந்தச் சிவதத்துவ புராணத்தை வர்ணிக்கிறேன்.

1. புராண வரலாறு

முன் ஒரு காலத்தில், நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிப்பவர்களான தவ முனிவர்கள் அனைவரும் அதிவிநயபக்தியோடு, வியாஸ மகரிஷியின் சிஷ்யரும் நற்குணங்களையுடைய வருமான சூதமா முனிவரைப் பார்த்துப் பின்வருமாறு கேட்டார்கள்.

மகாபாக்கியசாலியான சூத முனிவரே! நீங்கள் நீண்ட நெடுங்காலம் சிரஞ்சீவியாகச் சுகத்தோடு வாழ்வீர்களாக! தாங்கள் தங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறோம். நீங்கள் வியாஸ பகவானது திருவருளால் கிருத கிருத்தியர் என்ற தன்மையை அடைந்தவர். கடந்த காலத்தில் நடந்தவைகளையும் நிகழ்காலத்தில் நடப்பவைகளையும் இனிவரும் காலத்தில் நடக்கப் போகும் விருத்தாந்தங்களையும் அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்த திரிகால ஞானியாதலால் தங்களுக்குத் தெரியாத விஷயம் துளியுமிராது! குருவான வியாஸ பகவானின் கருணையால் அனைத்தும் சுலபமாகச் செய்யப்பட்டன. நீங்கள் தயவு செய்து சர்வோத்கர்ஷமான சிவபெருமானின் தத்துவத்தையும். அவருக்குரிய சிறந்த பூஜை முறையையும் பரமசிவனாரின் பற்பலவிதமான சரித்திரங்களையும் எங்களுக்குக் கூறியருள வேண்டும். நிர்க்குணனான மகேஸ்வரன் எப்படிச் சகுணனாகிறார்? நாங்கள் சிவதத்துவத்தை நன்றாக விசாரித்து அறிந்தவர்களால் மகாதேவரும் உலகத்திற்கு சுகம் நல்குபவருமான சங்கரன் என்னும் திருப்பெயரையுடைய பகவான் இந்த உலகப் படைப்புக்கு முன்பும் படைப்பின் மத்திய காலத்திலும் முடிவான பிரளய காலத்திலும் எவ்விதமாக இருக்கிறாய்? அவர் எப்படித் தோற்றமளிக்கிறார்? எப்படிப் பிரசன்னமாகி இவ்வுலகங்களை முன்னிட்டு அவர் எத்தகைய பயன்களைக் கொடுக்கிறார்? எந்த உபாயத்தினால் சர்வேஸ்வரன் விரைவாகப் பிரசன்னமாவார்? இவற்றையும் இன்னும் நாங்கள் கேட்காத விஷயங்களையும் உத்தம் விரத சீலரான தாங்கள் சொல்ல வேண்டும்? என்று சவுனகர் முதலான முனிவர்கள் விருப்போடு கேட்கவே சூதமாமுனிவர் மிகவும் உற்சாகத்தோடு கூறலானார்.

2. ஜோதிலிங்கம் தோன்றிய கதை

முனிவர்களில் சிறந்தவர்களே! நீங்கள் இப்பொழுது என்னிடம் கேட்ட விஷயங்களைப் போலவே முன்பொரு சமயம் நாரத முனிவர் பிரம்ம ஞானத்தை அறிவதற்காக அவரது பிதாவான நான் முகப்பிரும்மாவைக் கேட்டார். அதன் விவரத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அந்தணோத்தமர்களே திரிலோக சஞ்சாரியான நாரத முனிவர் எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து வரும்போது பரமாத்மாவான சிவபெருமானின் தத்துவத்தை அறிவதற்காக அவரது திருப்பெயரைச் சிந்தித்துக் கொண்டே தம் தந்தையான பிரும்ம தேவரிடம் சென்றார் பிரம்மாவை அவர் வணங்கி விட்டுப் பின் வருமாறு கேட்டார். பிதாவே! பிரமஞானிகளில் சிறந்தவரே இவ்வுலகங்களையும் உயிரினங்களையும் படைத்து பிதா மகனாக விளங்கும் சிருஷ்டி கர்த்தாவே தங்கள் தயவினால் உத்தமமான விஷ்ணுவின் மகத்துவம் முழுவதையும் பக்தி மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் செயற்கரிய தவமார்க்கத்தையும் தானமார்க்கத்தையும் அறிந்தேன். ஆனால் சிவபெருமானது தத்துவத்தையும், விதிப்படிக் கிரமமாகச் செய்யவேண்டிய அவருடைய பூஜையையும் அவரது சரிதங்களையும் நான் அறிந்து கொள்ளவில்லை. நிர்க்குணமான சிவதத்துவத்தைப்பற்றி, சர்வஞானியான தங்களைத் தவிர வேறு யாரை நான் கேட்கப்போகிறேன்? ஆகையால் சிவபெருமானது மகிமையையும் உலகுய்ய அவரால் அருளப்பட்ட விரதங்களையும் அவற்றால் அவர் மகிழ்ந்து உலகங்களுக்கு எந்தெந்தப் பயன்களைக் கொடுக்கிறாரோ அவற்றையும். சிவலிங்க உற்பத்தியையும் அவர் பார்வதியை மணந்த திருக்கல்யாண மகோத்சவத்தையும் நான் கேட்காத பிறவற்றையும் சொல்ல வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றி முன்பு நான் பலரிடம் பலவிதமாகக் கேட்டிருந்துங் கூட எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. என்றார், நாரதர். தம் கேத சம்பூதரான நாரதர் அவ்வாறு கேட்டதும் பிதா மகனான நான்முகப் பிருமதேவர் சொல்லத் தொடங்கினார்.

நாரதா! எதைக் கேட்பதனால் எல்லா உலகங்கட்கும் எல்லாவிதப் பாவங்களும் ஒழிந்து போகுமோ அத்தகைய சிவபெருமானது மிகச்சிறந்த தத்துவத்தையும் அவருடைய அற்புதமான திருவுருவத்தையும் என்னாலும் மகாவிஷ்ணுவினாலுங்கூட சரியாக அறிய முடியவில்லை. ஆயினும் எனக்குத் தெரிந்தவரையில் சொல்லுகிறேன் கேள் நாரதா! அஸதாத்மகாமகவும்ஸதாத் மகமாயும் இருக்கிற இந்த உலகம் எப்பொழுது கண்ணுக்குப் புலப்படாததாக ஆகிவிடுகிறதோ, அப்பொழுது வியாபதி ரூபமான (ஒப்பு நிறைவுருவான) பிரமமாக ஆகவிடுகிறது. அப்பொழுது அந்தப் பிரம்மஸ்தூலமும் (பருமையும்) அல்ல சூக்ஷ்மமும்(நுண்மையும்) அல்ல; உற்பத்தியுடையதும் அல்ல; நாசம் அடைவதும் அல்ல; அது உயர்ந்த சக்தியத்தையும் மிகச் சிறந்த அறிவையும் உடையதாகிறது. அத்தகைய பிரமத்தை யோகியர்கள் எப்பொழுதுமே ஞானக் கண்ணால் பார்க்கிறார்கள். யாவுமாகியும் சிறந்ததாகவும் விளங்கிய அந்தப்பிரமம் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் வழங்கியது சிலகாலம். கழித்த பிறகு, அந்தப் பிரம்மத்திற்கு இச்சை உண்டாயிற்று. அதைப் பிரகிருதி என்றும் மூலகாரணம் என்றும் சொல்வார்கள்.

அந்தப் பிரகிருதி என்பவள் எட்டுக் கைகளையும் விசித்திரமான ஆடையையும் ஆயிரம் பூரணச் சந்திரர்களுக்குச் சமமான முகத்தையும் உடையவள். அநேகவிதமான ஆபரணங்களை அணிந்தவள், அனைத்திற்கும் காரணமானவள், அழகு முதலியவற்றால் அத்விதீயையாகவும் புருஷக் கலப்பால் ஸ்தலதீயையாயும் இருக்கிற அந்த மாயாதேவியானவள், எந்தப் பிரமத்தினடமிருந்து எந்தக் காலத்தில் தோன்றினாளோ, அந்தப் பிரமத்தினிடமிருந்தே அதே காலத்தில் புருஷனும் உண்டானான். அவ்விருவரும் ஒன்று சேர்ந்து யோசனை செய்வதில் ஆவல் கொண்டவர்களாய். நாம் இருவரும் யாது செய்ய வேண்டும்? என்று ஒருவரோடொருவர் யோசித்தார்கள், இவ்வாறு அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது மங்களகரமான ஒரு வானொலி வாக்கு, உங்களுக்குத் தோன்றிய சந்தேகத்தைப் போக்க, நாங்கள் இருவரும் தவஞ் செய்ய வேண்டும் என்று கூறியது. அந்த வாக்கைக் கேட்க பிரகிருதி, புருஷன் ஆகிய இருவரும் மிகக் கடினமான தவம் புரிந்தார்கள். நாரதா! கவனமாகக் கேள்! யோக மார்க்கத்தை முக்கியமாகக் கருதிய அந்தப் பிரகிருதியும், புருஷனும் எவ்வளவு காலம் கழித்து தவ நிலையிலிருந்து கண் விழித்து, ஆஹா நம்மால் எவ்வளவு காலம் தவம் செய்யப்பட்டது? என்று வியந்தார்கள், அப்போது அவ்விருவருடைய தேகங்களிலிருந்து பலவிதமான நீர்ப் பெருக்குகள் உண்டாகி, சகல உலகங்களிலும் வியாபித்தது எல்லையற்றதாகவும் தொட்டவுடனே பாபத்தை போக்குவதுமான அந்தத் தண்ணீரானது பிரமரூபமாக ஆயிற்று.

அப்போது புருஷன் மிகவும் களைப்படைந்து பிரகிருதியுடன் சேர்ந்து, அந்த ஜலத்தில் பற்பலகாலம் பிரியத்தோடு துயில்கொண்டான். அந்த மஹாத்மாவான புருஷனுக்கு, அந்த ஜலசயன காரணத்தால், நாராயணன் என்ற பெயர் வழங்கலாயிற்று. அந்தக் காலத்தில் அவர் களிருவரையும் தவிர வேறொன்றும் உண்டாகவில்லை. பிறகு பரமாத்மா சம்பந்தமான தத்துவங்கள் உண்டாயின பிரகிருதியினிடத்தில் மஹத்தும் அந்த மஹத்தினிடத்தில் ஸத்வம், இராஜஸம் தாமஸம் என்ற முக்குணங்களும் அம்முக்குணத்திலிருந்து ஸப்தம்; ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம்(ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்) என்ற பஞ்ச தன் மாத்திரைகளிலிருந்து, ஆகாயம் வாயு, தேயு, அப்பு பிருத்வி என்ற பஞ்ச பூதங்களும் (வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம், என்ற ஐம்பெரும் பருப்பொருட்களும்) அப்பஞ்ச பூதங்களிடமிருந்து, வாக்கு, பாதம், பாணி பாயுரு உபஸ்தம் என்ற கண்மேந்திரியங்களும் (வாய், கால், கை, மலவாய், கண், மூக்கு, செவி என்ற ஞான இந்திரியங்களும்) (ஐம்பொறிகளும்) மனம், புத்தி, சித்தம் என்ற அந்தக் கரணங்களும், (உட்கருவிகளும்) தோன்றின. இத்தத்துவங்களுக்கு இவ்வாறு எண்ணிக்கைப்பட்டது. பிரகருதி புருஷனைத் தவிர அத்தத்துவங்கள் ஜலமாயமாகும். இருபத்து நான்கு தத்துவங்களுடன் சேர்ந்துள்ள அத்தத்துவங்கள் பிரகிருதி புருஷர்களால் ஒன்றாகச் சேர்க்கப்படுகிறது.

அத்தகைய தத்துவத்தைத் தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு பிரமஸ்வரூபமான ஜலத்தில் நித்திரை செய்யும் தேவனான நாராயணனது நாபியிலிருந்து எண்ணிறந்த இதழ்களுடன் கூடியதாகவும் தாதுக்களால் பரவியதாகவும், பலயோசனை அகல உயரமும், பல கோடி சூரிய காந்தியும் கொண்டதாகவும் பேரழகுள்ள அதி உன்னதத் தாமரை மலர் ஒன்று தோன்றியது அந்தத்தாமரை மலரிலிருந்து ஹிரண்யகர்ப்பனான நான் புத்திரனாக உதித்தேன். நாராயணனுடைய மோகமாயையால் நான் யார்? எங்கிருந்து தோன்றினேன்? நான் யாது செய்ய வேண்டும்? நான் யாருக்கு புத்திரன்? என்னை உண்டு பண்ணியவர்கள் யார்? இவ்வாறான யோசனைகளிலும் சந்தேகங்களிலும் ஆழ்ந்திருந்த எனக்கு ஒன்றும் நிச்சயமாகத் தோன்றவில்லை மறுபடியும் நான் வந்த காரணத்தால் மோகமடைந்தேன், பிறகு இந்தத் தாமரையின் அடிப்பகுதி எங்கு இருக்கிறதோ அங்கு நம்மை சிருஷ்டி செய்தவனும் இருப்பான் அதற்குச் சந்தேகமே இல்லை என்று மனோதிடம் செய்து கொண்டு தாமரை மலரிலிருந்து கீழே இறங்கி அநேக ஆண்டுகள் ஒவ்வொரு நாளத்திலுஞ் சுற்றியும் மோகிதனான நான் உத்தமமான அந்தத் தாமரையின் அடிப்பகுதியைக் காணவில்லை. பிறகு சந்தேகத்தோடு அதன் மலரையடைய விரும்பினேன். அதன் காம்பு விழியாகவே மேல் நோக்கி ஏறினேன். அப்போதும் மலரின் மொக்கை நான் அடையவில்லை. இவ்விதமாக அக்காம்பின் வழியிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன் ஆண்டுகள் பலவாயின க்ஷணநேரம் நான் களைப்படைந்து மூர்ச்சையானேன், அப்போது ஒரு வாக்கு தவஞ் செய்! என்று மங்களகரமாக ஒலித்தது அந்த வானொலியைக் கேட்ட நான், பன்னிரண்டு ஆண்டுகள் தவஞ் செய்தேன். அப்போது, சங்கு, சக்கரம், கதை, ஏந்திய திருக்கரங்களோடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி எனக்கு அருள் புரிவதற்காக காட்சியளித்தார். பிரகிருதியோடு உண்டு செய்யப்பட்ட விஷ்ணுவின் அழகிய ரூபத்தைப் பார்த்த நான் ஆனந்தமடைந்தேன். தங்கமயமான காந்தியோடு வெளிக்கு ஸத்வகுணப்பிரதனாகத் தோன்றியபோதிலும் துஷ்டர்களை நாசஞ் செய்யும் பொருட்டு உள்ளத்தில் தபோகுணப்பிரதனாகவும் நாராயணனாகவும் யார் ஒருவர் என் கண்களுக்குப் புலப்பட்டாரோ, அத்தகைய ஸ்ரீ விஷ்ணுவின் மாயை வயப்பட்ட நான், அவரை நீ யார்? என்று சொல் என்று கேட்டேன்.

அவ்வாறு கேட்டதும் விஷ்ணு என்னைப் பார்த்து, நல்ல விரதமுடையவனே! அடா குழந்தாய்! ஸத்வ குணத்தால் வியாபதனாக உன்னை நிர்மாணஞ் செய்தவனும் விஷ்ணுவும் நான்தான் என்பதை அறிந்துகொள்! இவ்விஷயம் உண்மை! என்று புன்னகை செய்தார் அவரது வார்த்தையைக் கேட்டதும் அவரது மாயை வசப்பட்டு, எப்படி குருவானவன் தன் சீடனை எளிதாகப் பேசுவானோ. அவ்வாறு படைப்புத் தொழில் புரியும் என்னைப் பார்த்து அடா, குழந்தாய் என்று சொல்கிறாய். உன்னை மட்டும் இவ்வுலகங்களை உற்பத்தி செய்கிறவன் என்றும் மாயையை வியாபிக்கச் செய்யும் விஷ்ணு வென்றும் உலகங்கள் யாவற்றையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும் இரட்சிப்பவன் என்றும் நீயும் என் மோகத்தால் இப்படிப் பேசுகிறாய் அதற்காரணம் வேண்டாமா அதைச் சொல் என்று கேட்டேன், அதற்கு அந்த விஷ்ணு நானே உலக காரணன் என்னுடைய சரீரத்திலிருந்து தான் நீயே உண்டானாய் இவ்வுலகங்களை உண்டு செய்வதற்குண்டான என்னை நீ மறந்து விட்டாய். இந்த விஷயத்தில் தவறு உன்னுடையதல்ல. இது எனது மாயையின் செயல் பிரம்மாவோ: உண்மையாகச் சொல்லுகிறேன். முன்பு என்னால் உற்பத்தி செய்யப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் என்னிடத்திலேயே இருக்கின்றன என்று கூறினார் ஸ்ரீமந்நாராயணனுடைய அந்த வார்த்தையைக் கேட்டு கோபங் கொண்ட நான் நீ யார்? இவ்வளவு பேசும் உன்னையும் உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்! என்றுகூறி அவருடன் தீவிரமாக வாக்கு யுத்தஞ் செய்தேன், இவ்விதம் நாங்கள் இருவரும் வாதப் போர் புரிந்து வன்முறைச் செயலில் ஈடுபட்டபோது எங்கள் இருவருடைய விவாதத்தைத் தீர்ப்பதற்காகவும் எங்களுக்கு ஞானம் தோன்றச் செய்யவும் எங்களிருவருக்கும் நடுவே அதியற்புதமானதொரு ஜோதிலிங்கம் உண்டாயிற்று.

நாரதா! பல்லாயிரங்கோடி ஜ்வாலைகளால் பூரணமாகவும் காலாக்கினிக்கு இணையாகவும் நாசவிருத்திகள் இல்லாததாகவும் ஒப்பற்றதாகவும் வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாததாகவும் பிரகாசம் இல்லாததாகவும் உலகங்களை உண்டு பண்ணத்தக்கதாகவும் விளங்கிய அந்த சோதிலிங்கத்தின் சுடர்களால் மயக்க நிலையடைந்த விஷ்ணு என்னைப் பார்த்து  பிரம்மாவே! நீ ஏன் யுத்தஞ் செய்கிறாய்? நான் ஏன் உன்னுடன் யுத்தம் செய்ய வேண்டும்? நம் இருவருக்கும் மத்தியில் தோன்றிய இந்த லிங்கம் எப்படித் தோன்றியது? யாரால் தோன்றியது? ஆகவே இந்த இடத்தில் மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார். நம் இருவரின் போராட்டத்தையும் நிறுத்திக் கொள்வோம். அக்கினி மயமாக இங்கே தோன்றியுள்ள இந்த ஜோதிலிங்கம் எங்கிருந்து உண்டாயிற்று? அதை முதலில் கண்டறிவோம். நான்கு திசைகளிலும், விண்ணிலும், மண்ணிலும் இதற்குரிய ஆதாரம் எங்கிருக்கிறது என்று தேடிக் காண்போம் அதற்காக நீ அன்னப் பறவையின் உருவத்தை எடுத்துக் கொண்டு காற்றின் வேகத்தை விட விரைந்து சென்று அதி வேகமாக ஆகாயத்தில் புகுந்து ஆராய வேண்டும், நானும் வராக வடிவம் (பன்றியுருவம்) எடுத்த இந்த லிங்கத்தின் அஸ்திவாரத்தையே கெல்லிட்பார்த்து விடுகிறேன்! என்று சொல்லிவிட்டு பன்றி வடிவமெடுத்து பூமியைத் தோண்டித் துளைத்துக் கொண்டு சென்றார் நாரதா! நான் அன்னப் பறவையின் வடிவமெடுத்து வானவெளியில் பறந்து சென்றேன், அழகான சிறகுடன் கூடிய நான் அன்று முதல் ஹம்ஸம் என்றும் ஹம்ஸராஜன் என்றும் வழங்கப்படலானேன். ஹம்ஸ ஹம்ஸ என்று எவனொருவன் ஜெபம் செய்கிறானோ நான் அவனாகி விடுவேன். அன்னவிடிவம் ஏற்ற நான் ஆகாயத்தில் காற்றையும் மனத்தையும் விட வெகு வேகமாக பறந்து சென்றேன். ஸ்ரீ மந் நாராயணனோ. பத்து யோசனை நீளமும் பத்து யோசனை அகலமும்மேருமலை போன்ற உடலும் நாகங்களும் கூர்மையான கோரைப் பற்களும் ஊழிக் காலச் சூரியனுக்குச் சமமான காந்தியும் நீண்ட மூக்கும், பெருங்குரலும், சிறு கால்களும் மனோவேகமும் கொண்ட ஸ்வேத வராக (வெண்பன்றி) வடிவம் பெற்று பூமியைத் தோண்டிக் கொண்டே பாதாளலோகத்திற்குச் சென்றார். அவ்வாறு சென்ற திருமால் ஆயிரம் ஆண்டுகள் வரை அந்த ஜோதிலிங்கத்தின் அடியைக் கண்டறிய முடியாமல் பாதாளலோகத்தில் தேடிக் கொண்டிருந்தார் அன்று முதல் எல்லா உலகங்களிலும் ஸ்வேதவராக கற்பம் தோன்றியது.

3. ஹரி அயனுக்கு வரமளித்தல்

முனிவர்களே! பிரும்மாவும் விஷ்ணுவும் முறையே ஹம்ஸ வடிவையும் வராக வடிவையும் எடுத்துக் கொண்டு ஆகாயத்திலும் பூமியிலும் சஞ்சாரம் செய்யச் சென்ற பிறகு நடந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள்! என்று சூத முனிவர் சொல்லத் தொடங்கினார். பிறகு பிரும்மதேவர் நாரதரைப் பார்த்துச் சொல்கிறார். வராக அவதாரமெடுத்த மகாவிஷ்ணு வெகுகாலம் சுற்றியும் அந்த லிங்கத்தின் அடிவாரத்தின் தடத்தைக்கூட காண முடியவில்லை அந்த ஜோதிலிங்கத்தின் முடியைக் காண்பதற்காக ஆகாயத்திற்கு அன்னமாகப் பறந்து சென்ற நான் விடாமுயற்சியோடு முயன்றேன் அதன் விளைவாக நான் இளைத்துக் களைத்து அந்த லிங்கம் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தேன். அது போலவே ஸ்ரீ மந்நாராயணரும் மிகவும் இளைத்தும் களைத்தும் என்னைப் போலவே புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து சேர்ந்தார். அன்னமாகவும் வராகமாகவும் இருந்த நாங்கள் இருவரும் அந்த லிங்கஸ்வரூபியான சிவபகவானை நமஸ்கரித்தோம். அந்த நிலையில் நாங்கள் இருவருமே அவ்வாறு ஏன் செய்தோம் என்று சிந்தித்தோம் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட நாங்கள் இருவருமே ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை வணங்கும் நிலை ஏன் ஏற்பட்டது என்று எண்ணினோம். மாயையில் வல்ல மகா விஷ்ணுவும் வித்தையில் வல்ல நானும் அந்த லிங்கத்தை வணங்க வேண்டுமானால் அத்தகைய மாயை அந்த லிங்கத்திற்குரிய பகவானின் மாயை என்பதை அறிந்தோம். இத்தன்மையானது தான் என்று எண்ணக் கூடாததாகவும் பெயரும் செயலும் இல்லாததாகவும் லிங்கம் இல்லாததாகவும் பக்தர்களுக்கு அருள் செய்யும்படி லிங்கத்தின் தன்மையை அடைந்ததாகவும், பரமயோகிகளுக்கும் புலப்படாததாகவும் விளங்கிய அந்த ஜோதிலிங்க உருவத்தை மன உறுதியுடன் வணங்கிய நாங்கள் இருவரும் ஆண்டவனே! அனைத்திற்கும் மூலக்காரணனே! உம் சுயவடிவை நாங்களறியோம்! நீர் யாரோ? அறியவொண்ணாத உம்மை நாங்கள் நமஸ்கரிக்கிறோம்! என்று தோத்திரம் செய்து கொண்டே ஆயிரம் வருடங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்! எங்கள் இருவருக்கும் மகாபிரகாசமாகவும் ஆனந்தமாகவும் மூன்று மாத்திரை லட்சணத்துடன்கூடிய (ப்லுத மாத்திரை) ஓம் என்ற நாதவடிவம் உண்டாயிற்று.

ஓ! நாரதரே! மகா சப்தத்துடன் சேர்ந்த இது என்ன? என்று நாராயணர் யோசித்துவிட்டு எதனிடத்திலிருந்து இந்தச் சப்த முண்டாயிற்றோ அந்தப் பொருளுக்கு நமஸ்காரம் என்று கும்பிட்டு அந்த லிங்கத்தினது தென்பாகத்தில் அழிவில்லாததும் முதலாவதுமான அகாரத்தையும் அதன் வடபாகத்தில் உகாரத்தையும் இவ்விரண்டிற்கும் நடுவில் மகாரத்தையும் உயரத்தில் ஓம் என்னும் சப்த விசேஷத்தையும் பார்த்தார். அவற்றுள் தெற்கிலிருந்த முதலெழுத்தாகிய அகாரம் சூரிய மண்டலம் போலவும், வடக்கிலிருந்த இரண்டாவது எழுத்தாகிய உகாரம் அக்கினியின் காந்தியைப் போலவும் நடுவிலிருந்த மூன்றாவது எழுத்தாகிய மகாரம் சந்திரமண்டலம் போலவும் விளங்க அதன் பேரில் ஸ்படிக கல் போன்ற காந்தியையுடைய தான பரம்பொருளைத் தரிசித்தார்.

லிங்கஸ்ய தக்ஷிணே பாஹே ததாபஸ்யத் ஸனாதனம்
ஆத்யம்வர்ண மஹாரம்து உகாரம் ச்சோத்ரே தத
மகாரம்மத்யத ஸ்சைவ நாதாந்தம் தஸ்பசோமிதி

ஜாக்கிரம் (நனவு). ஸவப்னம்(கனவு), சுக்ஷúக்தி(உறக்கம்) துரியம்(பேருறக்கம்) என்னும் நான்கு அவஸ்தைகளுக்குப் மேம்பட்ட துரிய அதீதமாயும் (உயிர்ப்படக்கமாயும்) நிர்க்குணமாயும், மாயாசம்பந்த விகாரமில்லா ததாயும். ஸஜாதீயம் விஜாதீயம் என்னும் சொந்தமற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும் இரண்டாவது இல்லாததாயும், உள்வெளி அற்றதாயும், அதிமத்திய அந்தரகிதமாயும், ஆனந்தத்திற்கு காரணமான பரமானந்தமாயும், சதயமாயும், அழிவில்லாததாயும் முக்கியமாயுமிருக்கிற ஏகாக்ஷரம் என்று சொல்லப்படுகிற பரம் பிரம்மத்தைப் பார்த்தார் அகரமென்னும் பெயரையுடைய பகவான் சிருஷ்டி (படைத்தலை) பண்ணுகிறவர். உகாரமென்னும் பெயரையுடைய பர்க்கர் ஸ்திதி(காத்தல்) தொழில் செய்பவர். மகாரமென்னும் பெயரையுடையவர் (அனுக்கிரகிப்பவர்) நானும் அந்த விஷ்ணுவும் ஆச்சரியம் மிகுந்த மனதோடு அச்சமயத்தில் மிகவும் ஆச்சரியகரமானது அழகுள்ளதும், ஐந்து திருமுகங்களுடையதும், பத்து திருக்கரங்களுடையதும், பச்சைக் கற்பூரம் போன்ற நிறமுடையதும் பல விதமான காந்தியையும் பலவித ஆபரணங்களையும் கம்பீரத்தையும் பராக்கிரமத்தையும் மகா புருஷ லக்ஷணத்தையும் சிறந்த உருவத்தையும் உடையதும் எல்லாவற்றையும் உண்டு செய்யத் தக்கதுமாகிய சிவதத்துவத்தையே பார்த்தோம், உடனே, அவர் தான் எல்லா தேவர்களுக்கும் ஈசனென்று தெரிந்து கொண்டு விதிப்படி வேதாந்தமான ஸத்யோ ஜாதாதி மந்திரங்களினால் விஷ்ணுவானவர் அவரைத் துதித்தார். நானும் அவ்வாறே தோத்திரஞ் செய்தேன் எங்கள் இருவருடைய தோத்திரங்களால் சந்தோஷப்பட்ட மாயா சம்பந்தமற்றவரான மகேஸ்வரன் திவ்விய ஸப்தமயமான ரூபம் கொண்டு அந்த ஜோதிலிங்கத்தில் பெருஞ்சிரிப்புடன் விளங்கினார்.

அகார தஸ்ய மூர்த்தாச லலாடம் தீர்க்க உச்சதே
மகாரம் தக்ஷிணம் நேத்ர மீகாரம் வாமலோசனம்
உகாரம் தக்ஷிணம் க்ரோத்ர மூகாரம் வாமமுச்யதே
ருகாரம் தக்ஷிணம் தஸ்யம் கபோலம் பரமேஷ்டிந
வாமம், கபோலம், ர்ருகாரம் ய ஏந சாயுடே உபே
ஏகாரமோஷ்ட மூர்த்வம் து ஐகார மதரம் விபோ
ஓகாரம் சத தௌகாரம் தநத பங்க்தி சயம் க்ரமாது
அம் அஸ்ச தாலு நீ தஸ்ய தேவ தேவஸ்ய தீமத
காதி பஞ்சாக்ஷராண் ய ஸ்ய பஞ்ச ஹஸ்தாஸ்ச தக்ஷிணே
சாதி பஞ்சாக்ஷராண்யேவம் பஞ்ச ஹஸ்தாஸ்து வாமத
தாதி பஞ்சாக்ஷரம்பாத தாதி பஞ்சாக்ஷரம் தத
பகாரமுதரம் தஸ்ய பகாரம் பார்ஸ்வ முச்யதே
பகாரம் வாம பார்பசுவம் துபகாரம் ஸ்கந்த உச்யதே
மகாரம் ஹ்ருதயம் சம்போ மகாதேவஸ்ய யோகிந
யகாராதி சஹராந்தம் விபோர்வை சப்த தாதவ
ஹகாரம் நாபிரூபம் ஹி ஷகாரம் நாத உச்யதே
ஏவம் சப்த மயம் ரூப மகுணஸ்ய குணாத்மன

இத்தகைய குணசொரூபியாயும், நிர்குணனாயும் சப்தமயமாயும் உள்ள பகவானை என்னோடு திருமாலும் பார்த்து பிரபுவே! எங்கள் சஞ்சலத்தை அகற்ற கிருபை செய்யும்! என்று வேண்டிக் கொண்டோம். எங்கள் பிரார்த்தனைக்கு கருணை புரிந்து உங்கள் மேல் கருணை கொண்டிருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்தருளினார், அதைக்கேட்டு அளவிலா ஆனந்தங்கொண்ட நாங்கள் இருவரும் மகாதேவனே! எங்களுக்கு இஷ்டமான வரங்களைக் கொடுத்தருள்வீர்! என்று வேண்டிக் கொண்டோம், உடனே சிவபெருமான் பிரும்மாவான எனக்குச் சிருஷ்டி செய்யும் வரத்தையும் விஷ்ணுவுக்கு சிருஷ்டி செய்யப்பட்டதைக் காப்பாற்றும் வரத்தையும், உருத்திரனுக்கு சங்கரிக்கும் வரத்தையும் அளித்து, இதுதான் தேவ சம்பந்தம் கொண்ட பிரகிருதி என்று கூறியருளினார். மேலும் இந்தப் பிரகிருதியில் பிரமாணி என்னும் பெயருள்ள சக்தி பிரம்மனையும் லக்ஷ்மி என்னும் பெயருள்ள சக்தி விஷ்ணுவையும், காளி என்னும் பெயரில் ஒரு சக்தி உருத்திரனையும் அடையும். இப்படி பிரும்ம விஷ்ணு: உருத்திரர் ஆகிய மூன்று சுபகரமான சக்திகள் உண்டாக அம் மூன்றுதேவரும் மூன்று சக்திகளுடன் சேர்ந்து படைத்தல்-காத்தல்-அழித்தல் என்னும் சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வார்கள் என்று கூறினார். மேலும் விஷ்ணு மூர்த்தி சிவபெருமானை நோக்கி, சுவாமி! தேவரீர் சொன்ன கட்டளையை நாங்கள் தட்டமுடியுமோ உமது சித்தத்தின்படியே உமது ஆணையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும் உம்மிடம் நான் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டிய தொன்றும் இருக்கிறது! என்று வேண்டினார். அதற்கு பகவான் ஓ விஷ்ணுவே! உமது விசுவாசத்தைப் பாராட்டி மிகவும் இஷ்டத்தை உண்டு பண்ணுகிற ரக்ஷிப்புத் தொழிலை செய்யும் பதவியை உமக்களிக்கிறேன் என்று கூற, உடனே விஷ்ணு வானவர், ஓ; சங்கரா, சர்வ ரக்ஷகா தேவதேவா எனக்குப் பதவி முதலியன வேண்டாம்; தத்துவோபதேசம் செய்தருள வேண்டுகிறேன் என்று கேட்டார். அதாவது தியானித்தல், சேவித்தல் பூஜித்தல் ஆகியவற்றிற்குரிய ஓர் உபதேசத்தைக் கேட்டார். எல்லா வல்லமையும் போதித்தருள சந்தேகம் அறுபடும் சக்தியுள்ள உபதேசத்தைப் போதித்தருள வேண்டுமென்று திருமால் கேட்கவே சிவபெருமானோ பரத்தத்துவமாயும், பிரணவஸ்வரூபமாயுமிருக்கிற மங்களமாயுமிருக்கிற நாதரூபத்தை (ஒலி வடிவை) உபதேசித்தார்.

சிவபிரான் அருளால் நாதரூபத்தை பெற்று விஷ்ணு மூர்த்தி பரதத்துவத்தை நன்றாக அறிந்து நாதரூபத்தையும் தரிசித்து மந்திரத்தின் சுபவழிகளடங்கிய உண்மையையும் அனுஷ்டிக்கும் உபாயங்களையும் அறிந்து கொண்டு, நாதரூபமான பரம் பொருளை மேலே பார்த்தார். ஓம் தத்வமசி என்று சொல்லப்பட்டது ஓங்காரத்தைக் காரணமாகவும் ஐந்து கலைகளோடு கூடியதுமான மந்திரமாகும் இம்மந்திரம் சிவ சம்பந்ததான மஹாவாக்கியம், அது சுத்த ஸ்படிக நிறமானதும், மிக மேம்பட்டதும், சகல அபீஷ்டங்களையும் அளிக்க வல்லதாயும், ஞானஸ்வரூபமாயும் மந்திரரூபமாயும் உள்ளது. இன்னும் இருபத்து நான்கு எழுத்துக்கள் கொண்டதும் காயத்திரி ரூபமுடையதும் தருமார்த் காம மோக்ஷங்கள்(அறம், பொருள், இன்பம், வீடு) என்றும் நான்கு வித புருஷார்த்தங்களைக் கொடுப்பதாயும்; மிருத்தியுஞ்சயம், பஞ்சாக்ஷரம் சிந்தாமணி, தக்ஷிணாமூர்த்தி மந்திரம் என்றும் சொல்லப்பட்ட இந்த ஐந்து மந்திரங்களையும் அடையப் பெற்ற ஸ்ரீவிஷ்ணு பகவான் அந்த மந்திரங்களை ஜபித்தார்.

4. சிவலிங்கத்தின் மகிமை

பிரமதேவர் சொல்லுகிறார்-இப்படி தோத்திர ஜெபம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன் முன்னால் சிவபெருமான் காட்சியளித்து அவருக்கு சுவாசமார்க்கமாக அமையும்படி அநேக மந்திரங்களும் அனுஷ்டானங்களும் அடங்கிய வேதத்தைக் கொடுத்தார். சகல வித்யைகளுக்கும் நிலைக்களமாகவும் தலைமையாகவுமுள்ள சிவபிரான், சொன்ன அந்த வேதத்தை மகாவிஷ்ணு பெற்றுக் கொண்டு அந்த வேதத்தையே எனக்கும் சுவாஸமார்க்கமாகக் கொடுத்தார். உன்னதரான சிவபெருமானிடமிருந்து சிவதத்துவ ஞானத்தையும் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந் நாராயணன். அந்த சிவதத்துவஞானத்தை எனக்கும் கொடுத்தார். இப்படிச் சிவபெருமான் அருளிய வேதத்தைச் சாங்கோ பாங்கமான அறிந்து கொண்டு சிவபெருமானை நோக்கி ஸமஸ்த வித்தைகளுக்கும் ஆதிமூலரானவரே! ஜோதி மயமான சுடரொளியே! தேவரீர் எப்படிச் சந்தோஷம் அடைபவர்? எப்படி உம்மை நான் தியானிக்க வேண்டும்? அடியேன் செய்ய வேண்டிய தியானம் எது? சங்கரராகிய தங்களை மனிதன் எப்படி அடைவான்? பாபங்களை யெல்லாம் பரிகரிக்கக்கூடிய இந்தச் சிவ தத்துவ ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் உடனே கருணை கடாட்ச மூர்த்தியான சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி நம்மீது தணியாத விசுவாசங்கொண்ட விஷ்ணுவே! இப்போது உன் முன்னால் நாம் எப்படிப் பிரத்தியக்ஷமாக காட்சியளிக்கிறோமோ, அப்படியே பிரத்தியக்ஷமாக இருப்பதாகக் கருதி கொண்டு சகல பலன்களையும் சகலமான மனோ பீஷ்டங்களையும் தந்தருள்வோம்.

எவர் மனத்தில் எப்பொழுது துக்கம் உண்டாகிறதோ அப்போது அவர் இந்த லிங்கமூர்த்தியைப் பூஜித்தால் அந்த துக்கம் ஒழிந்து போகும் பிரம்மன் சதா சிருஷ்டித் தொழிலைச் செய்யவும், நீ ஜீவன்களை ரக்ஷித்துக் காக்கவும், சதா எம்மிடத்தில் மிகுந்த பக்தியும் கொண்டு பூஜை செய்வதால் எல்லா விருப்பங்களையும் கொடுப்பதோ, ஸகல பாபங்களும் நிவர்த்தியாகுமோ அப்படிப்பட்ட பூஜா விதியைப் போதிக்கிறேன்! என்று கூறினார். அவரிடம் விஷ்ணு பகவான் மேலும் வேண்டலானார். சேதனா சேதனமாயும், லோக ரூபமாயும், தேவ தேவர்களுக்குப் பிரபுவாயும் ருக்வேத சாமவேத யசுர்வேத சொரூபமாயும் சிருஷ்டி ஸ்திதி சங்கார கர்த்தாவாயும், ஸர்வாமீஷ்டங்களையுங் கொடுக்க வல்லவராகவும் இருக்கும் பிரபுவே! உம்மை நமஸ்கரிக்கிறேன். ஏகாக்ஷர ரூபமாகி(ஓரெழுத்து வடிவாகி)யும் நாதராகியும் அகாரரூபமாகியும் ஞான ரூபமாகியும், அறிவுருவாகியும் உகார ரூபமாகியும், ஆதி தேவனாகியும், வித்யாஸ்வரூபம் உடையவராகியும் இருக்கும் உமக்கு நமஸ்காரம் மூன்றாவதான மகாரூபமாகியும் சிவமூர்த்தியாகவும் சிரேஷ்டரூபத்தையுடையவராகியும், நீர் உருவாகியும் நீர் வாழ் பிராணிகளைக் காப்பவராகியும், ஜலத்தில் நித்திரை செய்பவராகியும், இருக்கிற உமக்கு நமஸ்காரம்! சித்ரூபமாயும்(அறிவுருவமாகியும்) பிராணி ரூபமாகியும், ஸ்மிருதி ரூபமாகியும், உள்ள உமக்கு நமஸ்காரம்! ஞான ரூபமாகியும், ஞானத்தினால் அடையத் தக்கவராகியும் உயர்ந்த

ரூபமான உமக்கு நமஸ்காரம்! பொன்மயமான கைகளையுடைய வரும், பொன்மயமான இந்திரியத்தை உடையவருமான உமக்கு வந்தனம் விரிசடை தரித்தவரும், யானைத்தோல் போர்த்தியவருமான உமக்கு வந்தனம் மங்கள ஸ்வரூபியாகவும், மங்களத்தையுண்டு பண்ணுபவராயும், பரமாகாய சரீரியாயும் மகாபத்மம் முதலான நிதிகளுக்கெல்லாம் பதியாயும், லிங்காரமாகியும் லிங்க ஸ்வரூபத்தை யுடையவராயுமிருக்கும் உமக்கு வந்தனம். தேஜோரூபியாயும் தேஜஸுக்களுக்கு பதியாகவும்; ஸகல ஸ்வரூபியாயுமிருக்கும் உமக்கு வந்தனம்! அனந்தரும் அனைத்திற்கும் உன்னதரும் நீரை உள்ளே உடையவரும் தவத்தில் ஆசக்தரும், பிரும்ம விஷ்ணுவான எங்களுக்குச் சாமவேத கீதத்தினாலே பாடம் தரத் தக்கவராயும், பரப்பிரம்ம ஸ்வரூபியாகவும், பரமாத்மாவ யும், ரிஷிஸ்வரூபியாயும் சகலத்திலும் வியாபித்தவராயும் பிரபுவாயுமிருக்கிற உமக்கு வந்தனம் அனைத்துமுணர்ந்த ஐயனே; வந்தனம்; வந்தனம்! இவ்வாறு விஷ்ணுபகவான் என்னுடன் சேர்ந்து சிவபெருமானை துதித்துக் கொண்டு நின்றார்(மகாபுண்ணிய உருவாகவும் உன்னதமாகவும் விளங்கும். இந்தத் துதியை எவன் படிக்கிறானோ, கேட்கிறானோ பிராமண சிரேஷ்டர்களைக் கேட்கச் செய்கிறானோ அவன் மகா பாபியாயிருந்தாலும் பிரம பதவியை அடைவான். நாராயணனாகிய விஷ்ணு பகவானால் செய்யப்பட்ட இச்சவ ஸ்தோத்திரத்தைச் சொல்லித் துதிப்பவனுக்கு வளர்பிறை சந்திரன் போல் மங்களம் வளரும்) திருமால் இந்த சிவ ஸ்தோத்திரத்தைச் செய்த பிறகு சிவபெருமான் எங்களைப் பார்த்துச் சொன்னார். உன்னத தேவர்களே! நீங்கள் எமக்குச் செய்த இந்த தோத்திரத்தால், யாம் மனம் மகிழ்ந்தோம், பயத்தைவிட்டு; சிவமூர்த்தியாகிய என்னைப் பிரார்த்தியுங்கள் உங்களை நாம் விரும்பியபடியே மாபெரும் ஆற்றல் வாயந்தவர்களாக உண்டாகியிருக்கிறோம் அதாவது நாமே உங்கள் மூலவராக மாறியுள்ளோம் எமது விருப்பத்தைப் போலவே எமது உருவம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உலகங்களுக்குப் பதிலாக ஸ்வரூபியான பிரம்மன் எமது வலது பக்கத்திலும் விஷ்ணு எமது இடது பக்கத்திலும் விசுவாத்மனான உருத்திரன் என் இதயத்திலும், இப்படி மூன்று அவதாரமாக இருக்கிறீர்கள், உங்கள் மீது எமக்கு அதிக அன்பு இருப்பதால் நீங்கள் எதைச் சிந்தித்தாலும் அதைக் கொடுப்போம் என்று கூறி கருணை நிறைந்த கடாட்சகரான சிவபெருமான் எங்களிருவரையும் அவருடைய திருக்கரத்தில் தொட்டு ஸ்பரிசித்தார் இதனால் எங்கள் உள்ளங்களில் பொங்கிய ஆனந்தத்தை எவ்வாறு விவரிப்பதென்றே  இப்போதுங்கூடத் தெரியவில்லை மகா விஷ்ணுவோ சிவபெருமானுடன் ஐக்கியமாகும் ஆகையால் உந்தப்பட்டு ஆண்டவரே! எங்களுடைய பக்தி உம்மிடம் நிலைத்திருக்க அருள் புரிவதோடு , எங்களுக்குள் எழுந்த வாதத்தை அறிவீரானபடியால் அதையும் நிறைவு படுத்த வேண்டும் என்று கைகுவித்து நின்றார். சிவபெருமான் அவருடைய வேண்டுதலுக்கிறங்கி நெடுமாலே நீரும் பிரம்மனும் எம்மிடம் எப்பொழுதும் நீங்காத பக்தித் தியானத்தில் மூழ்கியிருப்பீர்களாக நீங்கள் பார்த்த சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்ய வேண்டும். நீங்கள் விதிமுறைப்படி செய்யும் பூஜையால் எம்மை நமஸ்கரித்து வரும்போது சுகத்தையடைவீர்கள் என்று திருவாய் மலர்ந்து பூஜை முறைகளை உபதேசம் செய்து எங்கள் இருவருக்கும் விருப்பமான பல வரங்களையும் தந்தருளினார். பிறகு அவர் என்னைப் பார்த்து பிரமனே! நீ நம்முடைய ஆக்ஞையால் சிருஷ்டிகாரனாக இருந்து படைப்புத் தொழிலை செய்து வா என்று நாராயணனைப் பார்த்து, ஓ விஷ்ணுவே! நீ அசையும் பொருள் அசையாப் பொருட்களையும் அண்டத்திலுள்ள சகலஜீ வராசிகளையும் காத்துரட்சிப்பாயாக நிஷ்களமாகிய நாம் சிருஷ்டி, ஸ்திதி சங்காரமென்னும் முத்தொழிலையும் நடத்த வேண்டி பிரம்மன், விஷ்ணு. ருத்திரனென்னும் மூன்றாகப் பிரித்தோம் ஆதலின் அந்த உருத்திர மூர்த்தி எம்முடைய அம்சத்தைக் காட்டிலும் குறைவுப்பட்டதொன்றும் இல்லையாதலால் நீங்கள் செய்யும் தோத்திர பூஜா கிரியைகள் யாவும் எனக்கும் உருத்திரனுக்கும் ஒன்றேயாகும். ஏனெனில் உருத்திர ரூபமும் சிவரூபமும் ஒன்றேயாகும். ஏனெனில் தங்கத்திற்கு வேறொரு தங்கம் என்கிற பெயர் எப்படிப் பொருந்தாதோ ஒரு மண் கட்டியைப் பாத்திரமாகச் செய்தால் மண்கட்டி வேறு பாத்திரம் வேறு என்கிற பொருட்பேதம் எப்படி வரவே மாட்டாதோ, அது போல் உணர்ந்து கொண்டு நீங்கள் உருத்திரனையும் எம்மையும் வேறு படுத்தி எண்ணக்கூடாது. மேலும் நமது ஸ்வரூபம் எல்லோராலும் பார்க்கத்தக்கது விஷ்ணுவே, பிரம்மனே நீயும் உருத்திரனும் என்னுடைய வடிவமேதான் சத்தியமாயும் ஞான ஸ்வரூபியாயும் நாசமற்றதாயும் அநாதியாயுமிருக்கிற எம்முடைய சிவரூபமே இதற்கெல்லாம் மூலமானதும் முதலானதுமாகும். நீங்கள் சிவ ரூபத்திலிருந்து உற்பத்தியானவர்கள் உருத்திரனாக உருத்திர மூர்த்தி உண்டாவதற்கு நமது ஆக்ஞையே காரணம். நாமே உருத்திரனாக அவதரிக்கப் போகிறோம் பிரம்மனே! விஷ்ணுவே இச்சிவ ரூபத்திலிருந்து சிவாம்சமாக இலக்குமியும் சரஸ்வதியும் அவதரிப்பார்கள். இச் சிவரூபமே காரிய நிமித்தமாகச் சிறந்த வேறு ரூபத்தையடைந்து காளியென்னும் பெயரால் அவதரிக்கப் போகிறாள். ஆகையால் விஷ்ணுவே நீ லக்ஷ்மியைத் துணைவியாகக் கொண்டு காத்தல் தொழிலை செய்து வா! பிரம்மாவே! நீ சரஸ்வதியைத் துணைவியாக கொண்டு எப்பொழுதும் சிருஷ்டித் தொழிலை செய்து வா! உருத்திரன் மகாகாளியை இணைத்துக் கொண்டும் சங்கார(அழித்தல்) தொழிலைச் செய்வான் மிகுந்த அறிவுடன் கூடியிருக்கிற நீங்கள் உலகங்களுக்கு இஷ்டங்களை உண்டு பண்ணுகிறவர்களாய் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர். சூத்திரர் என்னும் நான்கு வருணங்களாகவும், பிரமசரியம் கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், ஸந்நியாசமென்னும் நான்கு ஆசிரமங்களாகவும் கூடியிருக்கவும் இன்னும் பல காரியங்களுடன் கூடியிருக்கவுஞ் செய்து சுகத்தை அடையுங்கள். நீங்கள் இருவரும் வெள்ளி, இரத்தினம் தங்கம் மண் இவைகளில் ஏதாவதொன்றில் விளங்கும் லிங்கரூபத்தை உலகங்களுக்குச் சுகத்தை உண்டு செய்யவும் உம்மைப்போல உலகத்தோர் பூஜிக்கவும் எக்காலத்திலும் இடைவிடாத அன்புடன் பூஜை செய்யுங்கள். இச்சிவ பூஜைக்கு எவன் அந்நியாமாயிருக்கிறானோ அவனை நாம் அடைய மாட்டோம் என்று கூறி மறைந்தோர். அது முதற் கொண்டு நாராயணனும் பிரமதேவனும் சிவபூஜை செய்து கொண்டு சிவபக்தியுடையவராக இருந்தார்கள் லிங்கமே சரஸ்வதி, லிங்கமே மகாலக்ஷ்மி, லிங்கமே மகாகாளி, லிங்கமே பிரம்மாதி தேவர்கள் லிங்கமே சிவபெருமான் எவன் ஒருவன் சிவலிங்கத்தின் பிரபாவத்தை சிவ சன்னிதியில் வாசிக்கிறானோ அவனடையும் பலன்களை அளவெடுத்துச் சொல்ல முடியாது இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரணிய வாசிகளுக்குச் சொன்னார்.

5. சிருஷ்டி தொடங்குதல்

சூதமாமுனிவரே! சிவலிங்க மூர்த்தத்தின் வரலாற்றை நீங்கள் சொல்லக் கேட்டு மகிழ்ந்தோம் இனிமேல் சிவ பெருமான் ஜோதிவடிவமாக இருந்து அர்தர்த்தானமான பிறகு என்னவாயிற்று என்பதையும் சிவபெருமானது பெருமையையும் அவர் உலக சிருஷ்டி செய்த வகையையும் எங்களுக்கு விளக்கமாகக் கூறவேண்டும் என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள். உடனே சூதமாமுனிவர், தவஞானிகளே! மஹாப் பிரபுவான சிவ பெருமான் அந்தர்த்தானமான பிறகு, அன்னவடிவில் இருந்த பிரமனும் வராக வடிவில் இருந்த விஷ்ணுவும் செய்த செயல்களைச் சொல்லுகிறேன் என்றார். அப்போது நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, சூத புராணிகரே! எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதைத் தாங்கள் தான் தயவு செய்து நீக்க வேண்டும். அதாவது பிரம்மாவும், விஷ்ணுவும் முறையே அன்னவடிவத்தையும் வராக வடிவத்தையும் ஏன் எடுத்துக் கொண்டார்கள்? என்று கேட்டார்கள். அதற்குச் சூதமாமுனிவர் சொல்லலானார். அன்னப் பறவையோ ஆகாயத்தில் நெடுந்தூரம் பறந்து செல்லும் ஆற்றலுடையது மேலும் பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அது தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் பருகும் அறிவாற்றல் வாய்ந்தது ஆகையால் பிரும தேவர் ஞானம் அஞ்ஞானம் என்ற இரண்டையும் தனித்தனியாக உணர்ந்து கொள்வதற்காக அன்னப் பறவையின் வடிவை எடுத்துக் கொண்டார் ஆயினும் அவர் ஞானத்தால் விவேகத்தையடையாமல் இளைப்படைந்து திரும்பினார் வராக வடிவமோ வராககல்பம் என்ற கல்பகால நிர்ணயத்திற்காக உதித்தது மகாவிஷ்ணு எந்த தினத்தில் வராகவுருவத்தை ஏற்றாரோ, அந்தத்தினம் முதல் அந்தக் கல்பம் வராக கல்பம் என்று வழங்கலாயிற்று. அன்ன உருவத்தையும் வராகவுருவத்தையும் அடைந்த பிரம்ம விஷ்ணுவின் விஷயத்தில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் சிவ சித்தப்படியே அவர்கள் இருவரும் அவ்வடிவங்களை ஏற்றார்கள். நாசரஹிதமாகவும் நிஷ்களமாகவும் குணவிகிதமாயுமிருக்கும் சிவபெருமான் எதைச் செய்கிறாரோ, அதன்படியே அனைவரும் விளங்குவார்கள்.

முனிவர்களே! இனிமேலே நடந்தவற்றைக் கேளுங்கள் சிவபெருமான், விஷ்ணுவுக்கு அநேக வரங்களைக் கொடுத்து விட்டு பரந்தாமா! யார் உன்னை எந்த இடத்தில் பார்க்கிறார்களோ அந்த இடத்திலுள்ள அனைவருமே மோகத்திற்கு வயப்படுவார்களாக! அப்படி மோகிக்கப்படுவதாலேயே உன்னை மதிக்கவும் துதிக்கவும் செய்வார்கள். பிரமன் படைக்கும் உலகத்தில் எப்போது துக்கங்கள் உண்டாகிறதோ, அப்போது நீ அந்த துக்கத்தை நீக்கி உலகங்களைக் காப்பாய்! நாமோ ருத்திர மூர்த்தியாகி உலகங்கள் அனைத்தையும் அழிக்கும் சங்காரத் தொழிலைச் செய்வோம். இதில் சந்தேகம் வேண்டாம். விஷ்ணுவே! நீயே எம்மை தியானிக்கத் தக்கவன். நான் பற்பல வடிவங்களோடு விளங்குவதால் உனக்கும் எனக்கும் சிறிதளவும் பேதமுள்ளதாக நினைக்கக்கூடாது என்று கூறிவிட்டு பிரும தேவரையும் மகா விஷ்ணுவையும் தம் திருக்கரங்களில் பற்றிக் கொண்டு உங்கள் இருவரையும் எமக்குச் சமமாகவே உலகத்தார் தியானிப்பார்களாக நீங்கள் இருவரும் சகல மக்களுக்கும் பிராணரூபமாக இருப்பீர்களாக! பிரமனே, நாலாயிரம் சதுர் யுகங்களை ஒரு தினமாகக் கொண்ட நூறு ஆண்டுகளாகிய உன் ஆயுள்வரை, ஸத்வம், முதலிய முக்குணங்களுடன் கூடிய பிராணிகளைப் படைக்கும் தொழிலைச் செய்து வா! என்றார். அப்போது விஷ்ணுமூர்த்தி, மிக்க மகிழ்ச்சியுடன் சிவபெருமானை வணங்கி, கருணைக்கடலாகவும் உலகனைத்திற்கும் நாதனாகவும் இருக்கும் சிவபெருமானே, உம் கட்டளையை ஏற்றுச் செய்ய சித்தமாக இருக்கிறேன். ஆயினும் எனக்கு ஒரு விண்ணப்பம் உண்டு அதையுந் திருச்செவி சாற்றியருள வேண்டும் ஐயனே! எப்போதும் என்னால் தியானிக்கத் தக்கவராக இருக்கிறீர். உம்மைத் துதிப்பதிலிருந்து என் மனமானது க்ஷணகாலங்களும் பிரியாமல் இருக்கவேண்டும் என்னிடம் பக்தியுள்ளவனாக இருந்தும் எவன் ஒருவன் உம்மை நிந்திக்கிறானோ அவனுக்கு நீங்காத நரகஸ்தானத்தையே வாசஸ்தலமாகக் கொடுப்பேன். இது நிச்சயம், எவன் உம் பக்தனோ, அவன் என்னையும் பக்தி செய்கிறேன் என்று நான் மகிழ்ச்சியடைவேன் உம்மால் என் மகிமை வளர்ந்தோங்கியுள்ளது! என்று கூறினார். சிவபெருமானும் பெருமகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தார்.

பிறகு உலகங்களுக்கெல்லாம் பிதாமகனான பிரும தேவர் தாம் பெற்ற கட்டளைப்படிச் சிவத் தியானபரராய் விஷ்ணுவையும் பணிந்து அவரால் ஞானம் பெற்று படைப்புத் தொழிலைச் செய்ய இச்சைக் கொண்டார். உடனே மகாவிஷ்ணுவும் அங்கிருந்து மறைந்து போய் விட்டார். பூர்வத்தில் எந்த ஜலம் சிருஷ்டிக்கப் பட்டதோ அந்த ஜலத்தில் பிருமதேவர் அஞ்சலி ரூபமாகத் தமது வீர்யத்தை வெளியிட்டார். உடனே அந்த ஜலத்தில் இருபத்து நான்கு தத்துவங்களோடு கூடிய அண்டம் உண்டாயிற்று முனிவர்களே! அநேக வகையான ஆதாரங்களால் பிரகாசமாக இருந்த அந்த அண்டம் ஜடரூபமாக இருந்தது அதைக் கண்டதும் பிருமன் சந்தேகங் கொண்டு, விஷ்ணுவைத் தியானித்த வண்ணம் பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் செய்தார் அதைக் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு அவர் முன்னால் தோன்றி நான் முகப் பிரமனே! நீ விரும்பும் வரத்தைக்கேள் கொடுக்கிறேன். என்னால் கொடுக்கக் கூடியவற்றைத் தடுப்பதற்கு எதுவுமில்லை தடையுமில்லை! என்றார். அதற்கு பிரமன் அவரை நோக்கி ஸ்ரீஹரியே சிவபெருமான் உமக்கு என்னைக் கொடுத்து விட்டபடியால்; நீர் பிரத்தியட்சமானது யுக்தந்தான் எந்தப்படைப்பை செய் என்று சிவபெருமான் எனக்குக் கட்டளையிட்டாரோ அந்தப் படைப்பை என்னால் செய்ய முடியாமல் அந்தப் படைப்பும் ஜடமாய்ப் போய்விட்டது. ஆகையால் நீர் பிராணவாயு ரூபமாய் அதற்குப் பிராணனை உண்டு பண்ணவேண்டும் என்று கூறினார்; அதைக் கேட்டதும் விஷ்ணுமூர்த்தி சிவாக்ஞையின் படியே செய்ய விருப்பங் கொண்டவராய். ஆயிரந் தலையும் ஆயிரங்காலும் கொண்ட அநந்தரூபம் வகித்து அந்த அண்டத்தை வியாபித்தார். இவ்வாறு சூதமாமுனிவர் நைமிசாரண்ய வாசிகளுக்குக் கூறினார்.

6. பிரும சிருஷ்டி

தவமுனிவர்களே! சகல பாபங்களையும் நீக்கவல்ல சரித்திரத்தைச் சொல்லுகிறேன். கேளுங்கள் என்று சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். பிருமதேவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாவிஷ்ணு அந்த அண்டத்தில் பிரவேசித்ததும், இருபத்து நான்கு தத்துவங்களையுடைய அந்த அண்டம் பாதாளலோகம் முதல் சத்தியலோகம் வரையிலும் பிராணனுடையதாயிற்று. அந்த அண்டத்தினுள் மகாவிஷ்ணு பிரகாசமாக இருந்தார். தவத்தையே தனமாகக் கொண்ட பிருமதேவரோ சிலகாலம் தவலோகத்திலும் மற்றக் காலங்களில் இதர உலகங்களிலும் இருந்தார். பிறகு பிருமா தமது மனத்தால் சில பிள்ளைகளை முதலில் உற்பத்தி செய்தார் அப்பிள்ளைகளோ ஊர்த்துவ ரேதஸாக (சுக்கிலத்தை இறக்காதவர்களாக) இருந்தார்கள். நான்முக பிரமன் மீண்டும் சிலரைப் படைத்தார் அவர்கள் மிகவும் விரக்தர்களாக இருந்தார்கள் அதைக் கண்டதும் பிரம்மா கோபமும் வருத்தமும் கொண்டு அழுதார் அப்பொழுது அஞ்சாதே! என்று சிவாம்சமான உருத்திரர் தோன்றினார். அவர் பிருமாவை நோக்கி அயனே உனக்கு துக்கம் உண்டானால் அதை நான் நாசஞ் செய்வேன். இதில் சந்தேகம் வேண்டாம் என்றார். எனவே பிரமன் உருத்திர மூர்த்தியே! நீர் சொல்வது விந்தையாக இருக்கிறது. ஆயினும் எமது சிருஷ்டித் தொழிலில் இடையூறு வராதபடி செய்ய வேண்டும்! என்றார் அதற்கு உருத்திரர் அப்படியே சிருஷ்டி இடையூறின்றி முடியக் கடவது என்று சொல்லிவிட்டு எந்தக் காலத்திலும் நிலைத்து திருக்கையிலாயத்தில் சிவசன்னதியை அடைந்தார்.

பிறகு பிரம்மன் ஸப்தரிஷிகளை சிருஷ்டித்தார். நாரதரை தமது மடியினின்று உற்பவிக்கச் செய்தார் தமது நிழலிலிருந்து கர்த்தமரிஷியையும் தமது பெரு விரலிலிருந்து தக்ஷப்பிரஜா பதியையும் உற்பத்தி செய்தார். இவ்வாறு மானஸ புத்திரர் பதின்மர்கள் உண்டானார்கள். பிருகு முனிவரிடத்தில் மரீசியும், அவரிடத்தில் காசிபரும் தோன்றினார்கள். காசிபமுனிவரின் சந்ததியினால் தான் இந்த உலகம் விருத்தியடைந்தது தக்ஷப்பிரஜாபதிக்கு அறுபது பெண்கள் பிறந்தார்கள். அவர்களில் பதின்மூன்று பெண்களைக் காசிப முனிவருக்கு தக்ஷன் திருமணம் செய்து கொடுத்தான் அப்பெண்கள் மூலமாகவே, தேவதைகம் அசுரர்கள் தநுஜான் முதலிய அநேகர் உண்டானார்கள் அவர்கள் உலகங்களிளெல்லாம் பரவினார்கள் தட்சப் பிரஜாபதியின் பெண்களிடம் விருக்ஷங்களும் பறவைகளும், சர்ப்பங்களும் மலைகளும் அநேகவிதமான கொடி வகைகளும் தோன்றின. அப்படைப்புகள் பாதாளலோகம் முதல் சத்திய லோகம் வரையிலும் வியாபித்தன. அவை வியாபிக்காத இடமே இல்லை. தட்சப்பிரஜாபதிக்கு சதி என்ற புதல்வி ஒருத்தி இருந்தாள். அவளை தட்சன் சிவபெருமானுக்குப் பத்தினியாகக் கொடுத்தான். அந்த சதி தேவிக்கும் பவானி என்னும் ஒரு பெயருண்டு உருத்திரமூர்த்தி காளியை மணந்தார். விஷ்ணு இலக்ஷ்மியை மணந்தார் பிருமா சரஸ்வதியை விவாகஞ் செய்துகொண்டார் இவ்விதமாக பிருமா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூம்முர்த்திகளும் தங்கள் சக்திகளுடன் சேர்ந்து முறையே ஆக்கல், காத்தல், அழித்தல், என்னும் முத்தொழில்களை செய்து வரலாயினர்.

முனிவர்களே! எந்த சதி என்பவள் சிவபெருமானை கணவனாக அடைந்தாளோ அவளே மஹாகாளி எனப்படுவாள். அந்த மகாகாளியே பின்புஒருகாலத்தில் பர்வதராஜனின் புத்திரியாகி பார்வதி என்ற பெயருடன் சிவபெருமானைப் பதியாக யடைந்தாள் அந்த பார்வதிதேவியே, காளிகா, சண்டிகா, யத்ரா, சாமுண்டா, விஜயா, ஜயா என்ற பல பெயர்களைப் பெற்றுத் திகழலானாள் மும்மூர்த்திகளும் குணபேதத்தாலேயே முத்தொழில்களைச் செய்கிறார்கள் என்று சூதமாமுனிவர் கூறியதும் சவுனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, ஓ முனிபுங்கவரே மகாகுருவியாஸ பகவான் மூலமாக நீங்கள் யாவற்றையும் அறிந்தவர். நாங்கள் தங்களிடமிருந்து சிவ சரியைதான இன்சுவை அமுதை இன்னும் அருந்த விரும்புகிறோம் மகாகாளி முதலில் தட்சப்பிரஜாபதிக்குப் புதல்வியாகவும் பிறகு பர்வதராஜனின் புத்திரியாகவும் பிறந்த அந்தத் திவ்விய சரிதத்தையும் அந்தப் புண்ணியவதி சிவபெருமானைப் பதியாக அடைந்த கதையையும் மற்ற விஷயங்களையும் எங்களுக்குச் சொல்ல வேண்டும்! என்று கேட்டார்கள். சூத புராணிகர் கூறலானார்!

7. சிவபூஜை விதிமுறைகள்

கேளுங்கள் அறிஞர்களே! இதுவரை சிருஷ்டி நிரூபணத்தைச் சொன்னேன் இனி எந்தச் சரித்திரத்தைக் கேட்டால் பிறவிக்கட்டு ஒழியுமோ அந்த மங்களகரமான சரிதத்தைச் சொல்லுகிறேன். ஒரு சமயம் தட்சப்பிரஜாபதிக்கும் சிவபெருமானுக்கும் துவேஷமுண்டாயிற்று. அதனால் தட்சப்பிரஜாபதி ஆத்திரமும் அகம்பாவமும் கொண்டு சிவபெருமானைத் தவிர மற்ற தேவர்களையும் மகரிஷிகளையும் வரவழைத்து ஒரு யாகம் செய்தான் தட்ச குமாரியும் சிவபெருமானின் பத்தினியுமான தாட்சாயணி அதையறிந்ததும் தன் தந்தை தன்னை யாகத்திற்கு அழைக்காமலிருந்தும் கூட, அவன் செய்யும் யாகத்தைப் பார்க்க விரும்பி, சிவபெருமானிடம் விடைபெற்று, தட்சனது மாளிகை அடைந்தாள். தட்சனோ அவளைத் தன் புதல்வியெனவும் கருதாமல் சிவநிந்தையோடு அவளை அவமதித்து ஏசினான். அதனால் தாட்சாயணி துக்கப்பட்டு அவமானம் தாங்காமல் தன் தேகத்தை நீத்தாள். இந்தச் செய்தியை சிவபெருமான் அறிந்ததும் அளவிலாத கோபங்கொண்டு வீரபத்திரையனுப்பி, அந்த தட்சனின் யாகத்திற்கு இடையூறு விளைவித்து அழிக்கும்படிச் செய்து தேவர் முதலானவர்களைத் தண்டித்தார் அதனால் தேவர் முதலானவர் மனம் வருந்தி குறைகூற சிவபெருமான் மீண்டும் அவர்களை உயிர் பெறச் செய்து திருவருள் புரிந்தார் இஷ்டபோகங்களைக் கொடுத்து அனைவருக்கும் நன்மைகள் இயற்றுபவளான தாட்சாயணியின் தேகத்தில் உண்டான ஜ்வாலையானது ஹிமோற்கிரீயில் விழுந்தது அந்த ஜ்வாலாமுகியே சகல இஷ்டங்களையும் கொடுக்கவல்லது. பிறகு அந்த ஜ்வாலாமுகி இமய மன்னனான பர்வதராஜனுக்கும் அவனுடைய மனைவியான மேனை என்பவளுக்கும் புத்திரியாக அவதரித்தாள். அந்த ஜ்வாலமுகியே பர்வதத்தில் அவதரித்த காரணத்தால் பார்வதி என்னும் பெயரைப் பெற்றாள் அவள் சிவபெருமானை விரும்பிவழிபட்டுநன்றாகப்பூஜை செய்து, அவரையே தன் நாயகனாக அடைந்து தன்னை அண்டிய அனைவருக்கும் விருப்பங்கள் அனைத்தையும் வழங்குகிறான் நீங்கள் எதைக் கேட்டீர்களோ, அதைச் சொல்லிவிட்டேன். இந்தச் சரிதத்தைக் கேட்பவர்களுடைய சகல பாபங்களும் நீங்கள்! என்றார்.

அப்போது நைமி சாரண்யவாசிகளான முனிவர்கள் அவரை நோக்கி சூதமா முனிவரே! சிவ சரிதத்தைக் கேட்க நாங்கள் மிகவும் ஆவலுள்ளவராக இருக்கிறோம் சிவபெருமானை எப்படிப் பூஜிக்க வேண்டும்? முதற்காலத்தில் அம்முறைப்படி பூஜித்தவர்கள் யார்? அப்பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் யாருக்குப் பிரசன்னராகி என்னென்ன பலன்களைக் கொடுத்தார்? பார்வதி தேவியார் செய்த தவம் அவரது திருமணம் திரிபுராசுரவதம் ஜ்யோதிர் லிங்கங்களின் உற்பத்தி ஜ்யோதிர் லிங்கங்கள் எத்தனைவிதம், அவற்றைத் தரிசிப்பதால் ஏற்படும் பலன்கள், நான்குவர்ணத்தார்கள் எப்படிச் சிவபூஜை செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் எவ்வாறு உங்கள் குருவான வியாச மகரிஷியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்களோ அவ்வாறே விளக்கமாக எங்களுக்கும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் முறையாக பதில் சொல்லத் துவங்கினார்? ஞானசீலர்களே! நீங்கள் கேட்ட விஷயங்களை முன்பு ஒரு முறை ஸநத்குமாரரிடம் வியாசமுனிவர் கேட்டிருக்கிறார். உபமன்யு முனிவரும் கேட்டிருக்கிறார். பிறகு வியாச முனிவர் ஸநத்குமாரரிடம் சிவபூஜா விதிமுறைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு உலக நன்மைக்காக எனக்குச் சொன்னார், முனிவர்களே! எந்த விஷயமானது ஸ்ரீகிருஷ்ணனால் மகாத்மாவான உபமன்யு முனிவரிடம் கேட்கப்பட்டதோ, அதைச் சொல்கிறேன். அதைச் சுருக்கமாக என்புத்திக்கு எட்டியவரையிலும் சொல்கிறேன். இதை விரிவாகச் சொல்ல வேண்டுமானால் பல ஆண்டுகள் ஆகும் ஆகவே சுருங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள். 

சுகம் பெற விரும்புகிறேன் அவனது சர்வ இஷ்டங்களும் கைகூடி வருவதற்காக அநாதியான சிவரூபத்தை மிகவும் பக்தியோடு பூஜிக்கவேண்டும் ஒருவன் சிவபெருமானை எத்தனைக் காலம் பூஜை செய்யவில்லையோ, அவனுக்கு அத்தனைக் காலமும் தரித்திரம், ரோகம், துக்கம், சத்ருபயம், முதலிய நான்கு வகையான பாபங்கள் சூழ்ந்து கொண்டு மிகவும் தொல்லைப்படுத்தும் சிவபகவானை பூஜித்தவுடனேயே எல்லாவிதமான துன்பங்களும், மறைந்து போகும் சுகத்திற்காகவும் சந்ததிக்காகவும் கிடைத்த தற்கரிய மனிதப் பிறவியை அடைந்தவன் மகாதேவனைப் பூஜிக்க வேண்டும், பூதேவர்கள் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர் ஆகிய நான்கு வருணத்தார்களும் சாஸ்திரபடி முறையாகப் ப்ராஹ்மம் முகூர்த்தத்தில்! எழுந்து மேகவர்ணரே நான்கு திருக்கைகளையுடையவரே பக்தர்களின் பயத்தைப் போக்குபவரே, உன் உழகான உருவம் என் மனதில் எப்பொழுதும் வாபம் புரியவேண்டும் என்று விஷ்ணுவையாவது குருவையாவது ஸ்தோத்திரம் செய்து பிறகு தீர்த்தங்களை ஸ்மரணை செய்து எழுந்து தென்திசையில் ஓர் ஏகாந்தமான இடத்தில் மலஜலம் கழித்து விட்டு சுத்தமான மண்ணைப் பிராமணன் ஐந்து தடவையும், க்ஷத்திரியன் நான்கு தடவையும் வைசியன் மூன்று தடவையும், சூத்திரன் இரண்டு தடவையும் கிரமமாக எடுத்து கைகால்களை அலம்பிக் கொள்ள வேண்டும். இந்த மிருத்க்ரஹண சவுசாதி விஷயங்களில் நான்காவது வர்ணத்தாரைப் போலப் பெண்களும் செய்ய வேண்டும் பிறகு வேதியின் பன்னிரண்டு அங்குல அளவும் க்ஷத்திரியின் பதினொரு அங்குல அளவும் வைசியின் பத்து அங்குல அளவும் சூத்திரன் ஒன்பது அங்குல அளவும் கொண்ட பற்குச்சிகளால் ஸ்மிருதிகளில் சொல்லியபடி கைக்கொண்டு காலதோஷத்தை விசாரித்து பல் துலக்கி தீர்த்தங்களில் எந்தெந்தக் குலத்தினருக்கு எப்படியெப்படி ஸ்நானம் செய்ய வகுத்திருக்கிறதோ, அவ்வாறே தேசகாலங்களுக்கு மாறுபாடில்லாமல்  மந்திரங்களுடன் நீராடி சூரிய உதயத்திற்கு மூன்று நாழிகைக்கு முன்பே செய்ய வேண்டும்.

ஸ்நானம் செய்த இடத்தில் முதலில் ஆசமணியம் செய்து விட்டு தூய ஆடை உடுத்தி ஜன நட மாட்டமில்லாமல் இடத்தில் சந்தியாவந்தனம் முதலானவற்றை அந்தந்த ஜாதியாருக்கு விதித்துள்ளபடி செய்து, பிறகு பூஜையைத் துவக்க வேண்டும். பூஜைக்கிரம்ம-மனதை ஒருமுக, நிலைப்படுத்திக் கொண்டு பூஜா கிருஹத்தில் பிரவேசித்து, பூஜைக்குரிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு முறையாக சிவபெருமானை பூஜைசெய்ய வேண்டும் முதலில் விநாயகரையும் பிறகு துவார பாலகர்களையும் பிறகு திக்பாலகர்களையும் பூஜித்துவிட்டுப் பிறகு பூஜா திரவியங்களின் அருகே, அஷ்டதளபீடமாவது செய்து கொண்டு அதில் உட்கார்ந்து சிவபகவானைப் பார்த்த வண்ணம் அடிக்கடி கைகளைச் சுத்தஞ் செய்து கொண்டு மூன்று முறை ஆசமனம் செய்து மும்முறை பிரணாயாமம் செய்ய வேண்டும். ஐந்து முகங்களும் பத்துப் பூஜங்களும் கொண்டவராயும், நிர்மலமான ஸ்படிகக் கல்லுக்கு ஒப்பான ஒளியையுடையவராயும் ஸர்வாபரண பூஷிதராயும், புலித்தோலைப் போர்த்தியவராகவும் இருக்கும். சங்கரரைத் தியானித்து அப்பெருமானின் ஸாரூப்யத்தை(இறைவனுருவை)அடைந்து மனிதன் தன் பாவத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். பரமேஸ்வரனைப் பூஜிக்கும் போது மந்திரத்தால் தேகசுத்தி செய்து கொண்டு கிரமமாக மூல மந்திரத்தை நியாஸம் செய்ய வேண்டும் எல்லாவிடத்திலும் ப்ரணவ மந்திரத்தால் ஆறு அங்க நியாசங்களையும் செய்ய வேண்டும். பிறகு சங்கல்பஞ் செய்து கொண்டு பூஜைக்கு ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் ஆசமனத்திற்காக ஏற்பாடுசெய்தபாத்திரத்தையும் நவ கும்பங்களையும் சாஸ்திரப்படி ஸ்தாபிக்க வேண்டும். அவற்றை தர்ப்பைகளால் முடியவைகளாய் ஸ்தாபித்து தீர்த்தத்தால் புரோக்ஷணம் செய்து அப்பாத்திரங்கள் அனைத்திலும் குளிர்நீரை சேர்க்க வேண்டும், புத்திமானானவன் சாஸ்திரத்தால் பார்த்து ப்ரணவ மந்திரத்தால் இனி குறிப்பிடும் பொருட்களை அந்தந்தப்பாத்திரங்களில் முறையே சேர்க்க வேண்டும். பாத்ய பாத்திரத்தில் விளாமிச்சை வேரும் சந்தனமும், ஆசமனிய பாத்திரத்தில் ஜாதி சுகந்தை, வெட்டிவேர் கர்ப்பூரம் ஆகியவற்றைப் பொடி செய்து சேர்க்க வேண்டும். மற்ற பாத்திரங்களில் சந்தனத்தையும் ஏலத்தையும் சேர்க்க வேண்டும். சிவபெருமான் பக்கத்தில் நந்தீசுவரரை பூஜை செய்ய வேண்டும். வாசனை பொருட்களாலும் நறுமண மலர்களாலும் தூப தீபங்களாலும் இன்னும் பல விதங்களாலும் சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். அப்போது உபாசகன் மிகவும் மகிழ்ச்சியோடு லிங்கத்திற்குச் சுத்தி செய்து ப்ரணவம் முதல் நாமோந்தமாகிய சிவமந்திரங்களை ஜபித்து பத்மாசனம் செய்து கொள்ள வேண்டும் அதன் கிழக்குப்பக்கம் அணிமா மயம் தெற்கு லகிமா மயம், மேற்கு மகிமாமயம், வடக்கு பிராப்தி ஸ்வரூபம், அக்கினி பக்கதனம்-பராகாமிமயம், நிருதிபக்கம்-ஈசத்வமயம், வாயுதிக்குதளம் வசித்வஸ்வரூப, ஈசானியபக்கம் ஸர்வக்ஞத்தமயம் கர்ணிகையில் சந்திரனும், சந்திரனுக்கு கிழக்குப் பக்கத்தில் அக்கினித் தேவனும் திக்குகளின் இறுதியில் தர்மாதிகளையும் ஸ்தாபிக்க வேண்டும், நான்கு திக்குகளிலும் பிரகிருதி மஹத் அகங்காரம் தத்விகாரம் என்னும் நான்கினையும் கர்ணீகா ரூபமான சந்திரனின் அருகே ஸத்வம், ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

முனிவர்களே! அதன் பிறகு ஸத்யோஜாதம், பிரபத்யாமி என்று பரமேஸ்வரனை ஆவாஹனம் செய்து வாமதேவமந்திரத்தால் இரத்தின சிங்காதனத்தில் எழுந்தருளச் செய்து ருத்தர காயத்திரியால் ஸாந்நித்யம் செய்து அஹோர மந்திரத்தால் நிரோதம் செய்து ஈ ஸாநஸ்ஸர்வ வித்யாநாம முதலான மந்திரங்களால் சிவ மூர்த்தத்தைப் பூஜிக்க வேண்டும்.

சத்யோ ஜாத மந்திரம்

சத்யோ ஜாதம் பிரபத்யாமி
சத்யோஜாதவை நமோநம
பவே பவேனாதி பவே பவஸ்வமாம்
பவோத் பவாய நம

வாம வேதமந்திரம்

வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நமோ
ஸ்ரேஷ்டாய நமோ
ருத்ராய நமோ
காலாய நமோ: கலபி கரணாய நமோ
பலபி காரணாய நமோ
பலாய நமோ
பலப் பிரமதமனாய நமோ
மனோ மனானீய நம

ருத்ர காயத்திரி

தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்

அஹோர மந்திரம்

அஹோர அகோ ரேப் யாத கோரேப்யோ
கோர கோர தரே ப்ய
ஸர்வேப்ய ஸர்வ ஸர்வேப்யோ நமஸ்தே-அஸ்து
ருத்ர ரூபேப்ய

நிரோதம்

ஈஸான சர்வ வித்யானா மீஸ்வர சர்வபூதானாம்
ப்ரம்மாதி பிர் பிர்மனாதி பதிர் பிரம்மா
சிவோமே அஸ்து சதா சிவோம்

சிவபெருமானுக்குப் பாத்தியம் (திருவடி கழுவு நீர்) அர்க்கியம் (மந்திர நீர் இறைத்தல்) ஆசமந்யம் (உட்கொள் நீர்) கொடுத்து வாசனைத் திரவியம் சந்தனம் முதலியவற்றோடு கூடிய தீர்த்தத்தால் மகா நியாச பூர்வக ஏகாதச ருத்ர மஹாபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யத்திற்கு சொல்லியுள்ள முறைப்படி மந்திரித்து பிரணவ மந்திரத்தால் கவ்யஸ்நானம் செய்விக்கவேண்டும், தீர்த்தம், பால், தயிர், தேன், கரும்புரஸம் நெய் இவற்றாலேயும் அபிஷேகம் செய்ய வேண்டும். கஸ்தூரி கந்தம். குங்குமப்பூ பச்சைக்கற்பூரம் முதலிய புண்ணியப் பொருட்களாலும் மந்திரத்தோடு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தூய்மையான மந்திரங்களால் அபிமந்திரித்து, ஜலகும்பங்களில் வெள்ளிய பரிசுத்தமான துணிகளில் வடிகட்டிய நன்னீரை அபிஷேகிக்க வேண்டும் இந்தப் பூஜையை சிவபெருமானுக்குத் தூரத்திலிருந்து கையினால் எட்டிப் பூஜிக்காமல் மிகவும் அருகிலிருந்து செய்ய வேண்டும் தர்ப்பை, நாயுருவி, ஜாதி, சண்பகம், பாடலம், வெள்ளலரி, மல்லிகை, கமலம், உற்பலம் முதலான பற்பல அபூர்வமலர்களை ஜலத்தோடு சேர்த்தும்; விதவிதமான பாத்திரங்களாலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பயன்கள் அனைத்தையும் வழங்கக் கூடிய இந்தச் சிவபூஜையை மந்திரப் பூர்வமாகச் செய்தல் வேண்டும். எம்மந்திரங்களால் ஒரு தடவையாவது சிவலிங்கத்தை அர்ச்சிக்க வேண்டுமோ அம்மந்திரங்களை சர்வ பல சித்தியை முன்னிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

8. சிவ பூஜா மந்திரங்கள்

பவமாநாதி மந்திரங்களாலும் வாங்மீயக மந்திரத்தாலும் சூத்திர மந்திரத்தாலும் சுபமான ஸ்ரீசூக்தத்தாலும் ரஜரீ சூக்தத்தாலும் நிலருத்ரத்தாலும் மங்களகரமான சமகத்தாலும் பிரணவத்தாலும் அதர்வண வேத சிரஸ் என்னும் மந்திரத்தாலும் தச்சாந்தி மந்திரத்தாலும் பாருண்டத்தாலும் ஆரூணத்தாலும் உயர்வான ஸாமத்தாலும் தேவவ்ருதம் என்னும் ஸாமத்தாலும் ராந்தர மந்திரத்தாலும், புஷ்ப மந்திரத்தாலும் புருஷசூக்தத்தாலும் மிருத்யுஞ்ஐய மந்திரத்தாலும் சிவபஞ்சாக்ஷரத்தாலும் ஆயிரம்-அல்லது நூற்றியெட்டு ரந்த்ரங்களையுடைய பூர்ணகும்பங்களால் வேத மார்க்கங்களினாலாவது, சிவநாமங்களாலாவது  அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு சந்தனம், புஷ்பம் முதலியவற்றைச் சாற்றி; ப்ரணல மந்திரத்தால் முகவாஸனைகள் கொடுக்க வேண்டும். பிறகு ஸ்படிக மாயமாயும் நிஷ்களமாயும் அக்ஷரமயமாயும் அனைத்துலகங்களுக்கும் காரணபூதமாயும் சகலலோக ஸ்வரூபமாயும் உத்தமமாயும் இந்திரன், பிரமன், விஷ்ணு, ருத்திரன் முதலான தேவர்களுக்கும் புலப்படாததாயும் வேதமறிந்தவர்களாலே வேதாந்தத்தில் கோசரிக்கவில்லை என்று சொல்லப்படுவதாயும், சிருஷ்டி ஸ்திதிநாசம் என்னும் மூன்றும் அற்றதாயும் சகலவிதமான நோய்களுக்கெல்லாம் மருந்தாயும் சிவதத்துவம் என்று பிரசித்திமாயும் சிவலிங்கத்தில் வைக்கப்பட்டும் இருக்கிற சிவபகவானை, லிங்கத்தின் சிரஸில் ப்ரணவத்தால் தூப தீபம் தாம்பூலம் முதலானவற்றை நீராஞ்சனம் சுற்றுவது போலச் சுற்றி நமஸ்காரம் செய்து துதித்து பலவித மந்திரத்தால் பூஜை செய்ய வேண்டும். ஸ்தோத்திரம் ஜபம் நமஸ்காரம் பிரதக்ஷிணம் ஆகியவற்றையும் விதிப்படிச் செய்ய வேண்டும் அர்க்கியம் கொடுத்து திருவடிகளில் மலர்களைச் சமர்ப்பித்துத் தேவர்களுக்கு அதிபரான சிவபிரானை மனத்தால் வணங்கி, பூஜை புரிய வேண்டும். கையில் மலர்களை எடுத்துக் கொண்டு எழுந்து இருகரங்களையும் கூப்பிநின்று நான் குறிப்பிடும் மந்திரத்தால் ஈஸானனான சிவபெருமானைப் பிரார்த்திக்க வேண்டும்.

அஞ்ஞானாத்ய திவாக்ஞானாது ஜபபூஜாதிகம்யா
கிருதம் ததஸ்து ஸபலம் க்ருபயா தவ சங்கர

சுவாமி! சங்கரா! என் அறியாமையாலோ அல்லது அறிவாலோ ஜபம் பூஜை முதலியவற்றைச் செய்திருந்தாலும் அவை உம் திருவருளால் சித்திக்க வேண்டும் என்று சொல்லி அம்மலர்களைச் சிவபெருமானது திருமுடியில் சேர்க்க வேண்டும். பிறகு மங்களாஸ்பதமான அநேக ஆசீர்வாதங்கள் செய்து பரமசிவன் மீது மார்ஜனம் (நீரால் புரோக்ஷணம்) செய்து தன் அபராதங்களைப் பொறுத்தருள வேண்டும் என்று துதித்துக் கும்பிட வேண்டும் பிறகு எல்லாவிதமான பாபத்தோடு கூடியவனாக நினைத்து மீண்டும் துதிக்க வேண்டும்.

சிவே பக்தி சிவே பக்தி சிவே பக்திர் பவே பவே
அந்யத சரணம் நாஸ்தி த்வமேத சரணம் மம

பிறவிகள் தோறும் எனக்குச் சிவபெருமானிடம் பக்தி இருந்து வரவேண்டும் சிவபக்தி இருக்க வேண்டும். சிவபெருமானிடம் பக்தி இருக்க வேண்டும். எனக்கு வேறு ரக்ஷணம் இல்லை நீயே ரக்ஷணம் என்று இவ்வாறு சர்வ ஸக்தியையும் கொடுக்கும் மகேஸ்வரனைப் பிரார்த்தனை செய்து பக்தியுடன் வாத்ய நாதங்களாலும் வழிபட வேண்டும். பிறகு பரிவாரணங்களோடு சேர்ந்து சங்கர பகவானை வணங்கித் தொழுதுவிட்டு மகிழ்ச்சியுடையவனாய் சுகமாகத் தன் வேலைகளைத் துவக்கலாம். இவ்வாறு தினந்தோறும் எவன் சிவபக்தியுடையவனாகச் சிவபூஜை செய்கிறானோ அவனுக்கு அடிக்கடி எல்லாவித நற்பயன்களும் உண்டாகும். மனதில் நினைத்தது ஆறு மாதங்களில் நிறைவேறும் நோய், கவலை, ரோகம், பயம், சூன்யம். கோணல் வியாபாரம், விஷம்  இவை போன்ற எத்தகைய துன்பம் வந்தாலும் நன்மை விளைவிப்பவரும் கருணாமூர்த்தியுமான சிவபெருமான், அத்துன்பங்களை அகற்றி விடுவார். மேலும் சிவபெருமானை வழிபாடு செய்வதால் மனிதனுக்கு சுபங்கள் விளையும் அவனது குணங்கள் சுக்கில பக்ஷத்துச் சந்திரனைப் போல் விருத்தியடையும் வியாச பகவானிடம் இவ்வாறு நான் கேட்ட அரிய பெரிய விஷயங்களை உங்களுக்காகச் சொன்னேன். இனி எல்லா பாவங்களையும் நீக்கக் கூடிய எந்த சரிதத்தை நீங்கள் கேட்கிறீர்களோ அந்த சரிதத்தை சாஸ்திர பூர்வமாகச் சொல்லுகிறேன் என்று சூதமாமுனிவர் கூறினார்.

9. தாராசுரன் பெற்ற வரமும் தேவர்கள் துயரமும்

நைமிசாரண்ய வாசிகள், சூதமாமுனிவரை நோக்கி; மாபெரும் பாக்கியசாலியான வியாசரது மாணவரே! சிவனாரின் திரிபுர வெற்றியைப் பற்றிக் கூற வேண்டும். அந்தத் திரிபுரத்தின் வடிவம் என்ன? அந்தத் திரிபுரத்திலிருந்த படைபலம் எவ்வளவு? சிவபெருமானது சேனை எவ்வளவு? இவற்றை நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டும். என்றார்கள். சூதமுனிவர் சொல்லலானார்நற்பேறுள்ள சிவநேசச் செல்வர்களே! எந்தக் கதையைக் கேட்டால், உலக மக்களின் துயரம் நீங்குமோ, அத்தகைய புண்ணிய சரிதத்தையே நீங்கள் கேட்டீர்கள். மாயாஜாலம் செய்பவரையும் மயங்க வைக்கும் மாபெரும் மாயனான தாரன் என்ற அசுரனுக்கு தாரகன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். அவன் தன் ஆசிரியனின் உத்திரவைப் பெற்று மது என்ற மிகவும் அழகான வனத்துக்குச் சென்று தேவர்கள் அனைவரையும் வெற்றி பெறுவதற்கு அருந்தவஞ் செய்ய எண்ணினான் இருகைகளையும் ஒரு காலையும் தூக்கிக் கொண்டும் சூரியனைப் பார்த்துக் கொண்டும் நூறு ஆண்டுகள் கடுந்தவஞ் செய்தான் பிறகு மேலும் நூறு ஆண்டுகள் பெருவிரலை ஊன்றிக் கொண்டும், நூறு ஆண்டுகள் வரை வெறும் நீரை மட்டும் உட்கொண்டும், நூறு ஆண்டுகள் வெறும் காற்றை மட்டும் உட்கொண்டும், நூறு ஆண்டுகள் ஜலத்தில் இருந்து கொண்டும், நூறு ஆண்டுகள் வெய்யிலிலும், நூறு ஆண்டுகள் பஞ்சாக்கினியின் மத்தியிலும் நூறு ஆண்டுகள் மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டும், நூறு ஆண்டுகள் அதோமுகமாகவும் இருந்து கேட்பவர்கள் மனமும் அஞ்சத்தக்க வகையில் அகோர தபஸ் செய்து வந்தான் அதனால் அவனது சிரத்திலிருந்து மகத்தான தேஜஸ் கிளம்பியது அந்த தவாக்கினி தேவர்களின் உலகங்களை சுட்டெரிக்கலாயிற்று. தேவேந்திரன் கூட எங்கே இந்த அசுரன் தன் பதவியைக் கைப்பற்றி விடுவானோ என்று பயப்பட்டான். வெப்பத்தால் மிகவும் துயரத்தையடைந்த தேவர்களோ; இதென்ன விந்தை! சிவபெருமான் அகாலத்தில் பிரம்மாண்ட சம்ஹாரஞ் செய்யப் போகிறாரோ? என்று சந்தேகப்பட்டார்கள் பிறகு, யாரோ ஓர் அசுரன் பிரமதேவனைக் குறித்து அத்தகைய பயங்கரமான தவத்தைச் செய்கிறான் என்று தெரிந்தது.

உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த அரசனுக்குப் பிரமதேவர். கொடுக்கக்கூடாத அரும்பெரும் வரங்களைக் கொடுக்கா விட்டாலும் கூட அவனால் எல்லாவுலகங்களுக்கும் அனர்த்தம் விளையும், அப்படியே பிருமா வரங் கொடுத்தாலும் அவன் அசுரனாகையால் அவனால் உலகங்களுக்கு நாசமும் ஏற்படும் ஆகையால் நான்முகப் பிருமாவிடமே இதைப் பற்றி கேட்போம் என்று ஆலோசித்துக் கொண்டு விரைந்து சென்று அவரைக் கும்பிட்டுவிட்டு தாரகாசுரன் செய்யும் அகோர தவத்தைப்பற்றி அறிவித்தார்கள் அவர்கள் மூலம் விஷயமனைத்தையும் பிருமதேவர் தெரிந்து கொண்டு. அந்த தாரகாசுரன் கடுந்தவஞ் செய்யும் இடத்திற்கு அன்ன வாகனத்தில் சென்று, அவனுக்கு காட்சியளித்து, உன் கடினமான தவத்தைக் கண்டு நாம் மகிழ்ந்தோம். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் தருகிறோம்! என்றார்.

உடனே, தாரகாசுரன் சிருஷ்டி கர்த்தாவை வணங்கித் துதித்து சதுர்முகரே! தேவர்களுக்கு இறைவரான பிரமதேவரே நீர் எனக்கு வரங்கொடுக்கத் தகுந்தவர் என்றால் இரண்டு வரங்கள் வேண்டும் அவையாவன உம்மால் படைக்கப்பட்ட இந்த அகிலத்தில் உடல் வலிமையால் எனக்கு இணையான புருஷன் வேறு எவனும் இல்லை என்று சொல்லும்படியான மாபெரும் வலிமை எனக்கு வாய்க்க வேண்டும் சிவபெருமானின் வீரியத்தினால் உண்டாகும் புத்திரன் எப்போது சேனாதிபதியாக வந்து என் மீது அம்பு எய்வாரோ அப்பொழுதுதான் எனக்கு மரணம் என்பதே உண்டாக வேண்டும் என்று வரம் கேட்டான் பிருமா உடனே அவன் விரும்பிய வரங்களைக் கொடுத்துவிட்டு தமது சத்ய லோகத்திற்குத் திரும்பிச் சென்று தாரகாசுரனின் தபோ பலத்தால் உண்டான தாபத்தைத் தணிவித்துக் கொண்டார் பிறகு, தாரகாசுரன் தவச்செயல்  நீங்கிப் பெரும் வரங்கள் பெற்ற பெரு மகிழ்ச்சியுடன் சோணித புரியை அடைந்தான். அப்பொழுது எங்குமுள்ள அசுரர்கள் அனைவரும் ஒன்று கூடி தாரகாசுரனே! மூவுலகிலுமுள்ள அசுரர்களான எங்களுக்கெல்லாம் நீயே தலைமையரசனாக இருக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டார்கள்.

அதன் பின்னர் அசுரர்களால் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு மணிமகுடம் சூடி தாரகாசுரன் மன்னனானான், பூமியில் ஒருவரும் செய்யாத ஆக்ஞைகளையெல்லாம் நடத்தச்செய்தான் பிராமணர்கள், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், விஜாதியானவர்கள் தானவர்கள். யக்ஷர்கள் கிம்புருஷர் ஆகியபலரும் அந்த அசுரனால் மிகவும் துன்புறத்தப்பட்டார்கள் அவர்களிடமுள்ள பொருள்களை யெல்லாம் தாரகாசுரன் பறித்துக் கொண்டான் இந்திரன் முதலான தேவர்களெல்லாம் அரும்பெரும் செல்வங்களை அவனுக்குக் கப்பமாகச் செலுத்தினார்கள் தேவேந்திரன் உச்சைஸ்ரவம் என்ற பட்ட குதிரையும் யமதர்மனின் ரத்தினமயமான தண்டமும் குபேரனின்கதையும் நவநிதிகளும், வருணதேவனின் உத்தமமான குதிரைகளும் மகரிஷிகளின் காமதேனு என்ற தெய்வீகப்பசுவும் அவ்வசுரனிடம் போய்ச் சேர்ந்தன; எந்தெந்த இடத்தில் உன்னதமான பொருட்களை அவன் பார்த்தாலும் அப்போதே அவற்றை அவன் கவர்ந்து சென்று விடுவான். சமுத்திரராஜன் அவனுக்கு தன் இரத்தினங்களைக் கொடுத்தான் சூரியன் அந்த அசுரனுக்கு எத்தனைக்காலம் சுகமாக இருக்குமோ, அத்தனைக் காலம் ஒளி வீசிக் காய்ந்தான் சந்திரன் எப்பொழுதும் அவன் அருகிலேயே இருந்து குளுமையூட்டினான் சுகந்தகாற்றை மெல்லென வீசிக்கொண்டிருந்தான். தேவர்களுக்கு செலுத்தும் ஹவ்யமும் பிதுர்களுக்குச் செய்யும் கவ்யமும் பலிஷ்டனான அவ்வசுரனையே சார்ந்தன மூவுலகங்களில் இருந்த அனைவருமே பயந்து நடுங்கி அந்தத் தாரகாசுரனது கட்டளையையே முக்கியமாகக் கருதிக் கொண்டிருந்தார்கள். இவ்விதமாக தேவர்கள் யக்ஷர்கள் முதலியவர்கள் எல்லாம் அவ்வசுரனின் உத்தரவின் படி நடக்கும்போது நோய் நொடிகளுக்கும் சாக்காட்டிற்கும் ஆளாகும் சாதாரண மனிதர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் வானுலகம், பூவுலகம், பாதாளம் என்னும் மூன்று உலகங்களிலும் எங்கெங்கு சிறப்பான நதிகள், நந்தவனங்கள் முதலியவை இருந்தனவோ, அவையெல்லாம் தாரகாசுரனின் தலைநகரிலே ஸ்தாபிக்கப்பட்டன இதுபோலப் பல்லாண்டு காலம் அந்த அசுரன் கொடுங்கோல் செலுத்தி வந்தான் அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிப் பத்மாஸனரான பிருமதேவனிடம் சென்று அவரிடம் சரணடைந்தார்கள்.

10 சிவபெருமான் யோகமும் மன்மதன் மூட்டிய மோகமும்

தேவர்கள் அனைவரும் பிரமனைக் கும்பிட்டுத் தலைகுணிந்து நின்றார்கள். அப்போது நான்முகப் பிரமன் அத்தேவர்களைப் பார்த்து, அமரர்களே! நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? உங்களுக்கு என்ன துன்பம் நேரிட்டது? என்று கேட்டார். தேவர்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி தாரகாசுரனால் நாங்கள் அனுபவிக்கும் துன்பம் தங்களுக்குத் தெரியாததா? அந்தத் துன்பத்தைத் தயவு செய்து தீர்க்க வேண்டும். என்றார்கள். பிருமதேவன் அவர்களை நோக்கி வானவர்களே நச்சுமரமாக இருந்தாலும் அதை வளர்த்துக் காப்பாற்றியவனே வெட்டுவது உசிதமல்ல என்பதைப் போலவே, என்னால் வரம் பெற்று விருத்தியடையப் பெற்றவன் என்னாலேயே வதம் செய்யப்படுவது சரியல்ல, ஆகையால் உங்களுக்கு நான் ஓர் உபாயம் சொல்லுகிறேன். சிவபெருமானின் வீரியத்திற்கு உற்பத்தியாகும் குமாரன் தான் அவ்வசுரனைக் கொல்ல முடியும்! அப்படி சிவவீர்யத்தில் புத்திர உற்பத்தியாவது துர்லபமாம். இது விஷயமாக ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன்படி நீங்கள் செய்ய வேண்டும்.

இமயமலையின் அழகான கொடுமுடியின் மீது சிவபெருமான் யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். நாரத முனிவராலும் பர்வத ராஜனாலும் மகாதேவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று பார்வதிதேவி நியமிக்கப்பட்டிருப்பதால் அப்பார்வதிதேவி தன் தோழியர் இருவருடன் சிவபெருமான் யோகஞ் செய்யுமிடத்தில் பணிவிடை புரிந்து வருகிறாள். அவளோடு சிவபெருமான் எப்போது இணங்கி கூடுகிறாரோ அப்போது வீர்யம் உண்டாகும். பிறகு உங்கள் காரியமும் கைகூடும். இதில் சந்தேகமில்லை பரமேஸ்வரனின் வீரியத்தைக் கவர்வதற்கு பார்வதியே தகுதியானவள் அவளையன்றி வேறு அன்னியப் பெண்களால் அது இயலாது எனவே அதற்கேற்ற உபாயங்களை நீங்கள் கையாள முயலுங்கள் அப்போது தான் உங்களுக்குக் காரியசித்தி உண்டாகும்! என்றார். பிரம்மாவின் யோசனையைக் கேட்டதும் தேவர்கள் ஒருவரோடொருவர் ஆலோசித்துக் கொண்டு தேவேந்திரனிடம் சென்று நடந்தவற்றை அறிவித்தார்கள். அமராபதியே! என்ன செய்தால் சிவபெருமானுக்குப் பார்வதியிடம் இச்சை ஏற்படுமோ அதைச் செய்து பிரமனது யோசனையை நிறைவேற்றுவது உமது பொறுப்பு என்று சொல்லி விட்டு தேவர்கள் தம் இருக்கைகளை அடைந்தார்கள். தேவர்கள் சென்றதும் தேவேந்திரன் மன்மதனை நினைத்தான்.

உடனே மன்மதன், தன் தேவியான இரதியோடு இந்திரன் முன்னால் வந்து நின்று வணங்கி, தேவராஜரே, நீங்கள் ஏன் என்னை நினைத்தீர்கள்? அதைச் சொல்லுங்கள், அந்த வேலையைச் செய்வதற்கே நான் வந்திருக்கிறேன்! என்று சொல்லி விட்டு மவுனமாக இருந்தான். இந்திரன் மன்மதனை நோக்கி மீனக்கொடியுடையவனே! இப்போது எந்தக்காரியம் வந்துள்ளதோ அது உன்னால் செய்யக் கூடியதாகும் எவ்வெவை என் காரியங்களோ அவையெல்லாம் உன் காரியங்களே தவிரவேறல்ல, எனக்கு நண்பர்கள் பலருண்டு ஆயினும் காமதேவனான உனக்கு இணையான நண்பன் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை போர்க்களத்தில் எனக்கு பயன்படுவதற்காக, பிரமதேவனால் என் வஜ்ராயுதம் சிருஷ்டி செய்யப்பட்டது மாறனான உன்னை மற்றொரு அஸ்திரமாக பிருமனே நியமித்தார், இந்த இரண்டு அஸ்திரங்களில் வஜ்ராயுதம் ஹிம்சிக்கும் இயல்புடையது ஆனால் காமதேவனான நீயோ இன்பம் விளைவிக்கும் இயல்யையுடையவன், மன்மதனை! இவ்விரண்டு அஸ்திரங்களில் நீயே சிறந்தவன், நீயே ஆற்றல் மிகுந்தவன் ஏனென்றால் என் வஜ்ராயுதம் பயனின்றிப் போனாலும் போகும், ஆனால் பஞ்சபாண மன்மதனான நீயோ ஒரு சமயத்திலும் பயனளிக்காமலிருக்க மாட்டாய்! இப்போது நேர்ந்துள்ள நோக்கத்தைச் சாதிக்க நீயே தகுந்தவன் உன்னைத் தவிர மற்றவர்களால் அதைச் செய்யவேமுடியாது உலகத்தில் வள்ளலுக்கு வறுமை வந்துள்ள போதும் சூராதி சூரனுக்குப்போர்க்களத்திலும், நற்பனுக்கு அபாய நெருக்கடியிலும், புருஷனுக்கு அசக்தி காலத்திலும் பெண்களுக்கும் நற்குலத்தில் பிறந்தவர்களுக்கும் ஆபத்துக் காலத்திலும் தொல்லைகள் மூளும்போது மனிதர்களால் பரீட்சை உண்டாகிறது. ஓ! நட்பிற்சிறந்த ரதிகாந்தனே! இப்போது உன் சம்பந்தமான பரீட்சை ஏற்பட்டுள்ளது இந்தக் காரியம் எனக்கு மட்டும் சுகமளிப்பதல்ல தேவர்கள் அனைவருக்குமே சுகத்தைக் கொடுக்கத்தக்கது; இந்த விஷயமாக நானே யாசிப்பதால் இந்தச் சுபமான காரியத்தை நீயே செய்ய வேண்டும்.

இவ்வாறு தேவேந்திரன் சொன்னதைக் கேட்ட மன்மதன் புன்னகையோடு இந்திரனை நோக்கி தேவாதிபரே! நம் இருவருக்கும் பேதமில்லை ஆகையால் நீர் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? உலகத்தில் உபகாரம் செய்பவன் தான் செய்யும் செயலால்தான் தன்னைத் தெரியப்படுத்திக் கொள்கிறானே தவிர வெறும் வாய்ப்பேச்சால் தெரியப்படுத்துவதில்லை. எவன் ஒரு வேலையைத் தானே செய்து முடிக்கத் திறமையுள்ளவன் என்று விளக்கமாகச் வாய்விட்டுச் சொல்கிறானோ அவன் எந்த வேலை செய்யப் போகிறான்? அப்படி வாய்விட்டு சொல்வது உசிதமல்ல என்றாலும் நான் சொல்வதைக் கேளும், உம்முடைய பதவியைப் பறித்துக் கொள்வதற்காக எவன் உக்கிரமாகதவஞ்செய்கிறானோ அவனை ஒரே க்ஷணத்தில் பெண்ணின் கடைக்கண் பார்வையாலும் என் காம பார்வையாலும் வீழ்த்தி விடுகிறேன் அவன் தேவனாயினும் ராட்சசனாயினும் மகாமுனிவனாயினும் அவனை க்ஷணநேரத்தில் காம இச்சைக்கு ஆளாக்கி வீழ்த்தி விடுகிறேன். இப்போதே உமது வஜ்ராயுதத்தையும் இதர போர்க்கருவிகளையும் தூர எறிந்துவிடு. உமக்கு மிகவும் நண்பனும் மன்மதனுமான நான் வந்திருக்கும் போது அக்கருவிகள் என்ன வெற்றியைத் தரப்போகின்றன? யோகமூர்த்தியான சிவபெருமானைக் கூட என் காமபாணங்களுக்கு இலக்காக்கி விடுவேன் என்றால் மற்றவர் விஷயத்தில் என் வெற்றியைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? என்று பெருமையோடு சொன்னான். உடனே இந்திரன் உற்சாகமடைந்து மன்மதா நான் எந்தக்காரியத்திற்காக உன்னை நினைத்தேனோ அந்தக் காரியத்தையே நீயும் சொல்லி விட்டாய். உன்னை எதற்காக நினைதேன் என்பதைசொல்லுகிறேன், கேள்.

தாரகன் என்ற கொடிய அசுரன் பிரமதேவரிடம் வரம் பெற்று தர்மங்களை அழித்து உலகங்களுக்கு ஒரு பெரும் துன்பமாக பீடித்துக் கொண்டிருக்கிறான். சகல தேவர்களும் நிர்மலர்களான மகரிஷிகளும் அந்த அசுரனால் துக்கப்பட்டு தத்தளிக்கிறார்கள். அவ்வசுரனை எதிர்க்கும் விஷயத்திலோ தேவர்களின் ஆயுதங்கள் பயனற்று போயின இத்தகைய கொடிய அசுரனுக்கு அஸ்திரங்களால் மரணம் கிடையாது, அந்தத் துன்மார்க்கன் தாரகாசுரனுக்குச் சிவபெருமானின் வீர்யத்தால் உற்பத்தியாகும் குமாரனால் தான் மரணம் உண்டாகுமாம்! ஆகவே காமசம் பந்தப்பட்ட இந்தக்காரியத்தை உன்னால் தான் நிறைவேற்ற முடியும். இந்தக்காரியத்தை நீ உடனடியாகச் செய்ய வேண்டும் சிவபெருமான் இப்போது கண்மூடி நிஷ்டையில் அமர்ந்து மாபெரும் யோகஞ்செய்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பணி விடை செய்வதற்காகப் பார்வதிதேவி தன் தோழிருடன் அவர் அருகில் அவளது தந்தையான ஹிமாசல மன்னனின் உத்திரவு பெற்றுக் கொண்டு இருப்பதாக நாமும் கேள்விப்படுகிறோம். ஆகையால் மகாயோகியான சிவபெருமானுக்கு யோகம் கலைந்து எப்படி அந்தப் பார்வதியின் மேல் ஆசையும் காமமும் உண்டாக முடியுமோ, அப்படிச் செய்ய வேண்டியது உன் கடமையாகும். இந்த உபகாரத்தைச் செய்தால் நீயும் கிருதார்த்தனைவாய், இதனால் உலகங்களுக்கு மூண்டுள்ள துன்பங்களும் நீங்கிப் போய் விடும். அதில் சந்தேகமேயில்லை! என்றான்.

உடனே கரும்புவில் காமதேவன் புன்முறுவலோடு தேவேந்திரனை நோக்கி சிவபெருமான் இப்போது யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தாலும் சரி அவரைப் பார்வதியிடம் மிகவும் மையல்கொள்ளச் செய்து விடுவேன், இதில் சந்தேகம் வேண்டாம், என்றான். பிறகு அவன் தேவேந்திரனின் வார்த்தையைத் தன் தலை மீதுதாங்கித் தன் காதல் நாயகியான ரதி தேவியோடும் அன்பனான வசந்தனோடும் சேர்ந்து கொண்டு எந்த இடத்தில் பரம சிவன் கண்மூடி பரமயோகம் செய்து கொண்டிருந்தாரோ அந்த இடத்திற்குப் போய் சேர்ந்தான். உடனே வசந்தன் தன் தர்மச் செயல்களைத் துவங்கினான் வஸந்த ருதுவிற்கு உரிய தர்மங்கள் அந்த வனத்தைச் சேர்ந்தன அந்த வனத்தில் இருந்த பலாமரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கி கமகமவென வாசனை வீசின. தென்னை மரங்களிலும் மாமரங்களிலும் அசோக மரங்களிலும் அரும்புகள் அலர்ந்தன. மகிழம்பூ மரங்களில் வண்டுகள் இன்னிசை மீட்டி மொய்த்தன. பூங்குயில்கள் கூவி மோகமூட்டின குளுமையான சந்திர கிரணங்கள் காமாவஸ்தையடைந்துள்ள ஆடவர்களை கூடிக் களிப்பதற்கான காலங்களில் தம் நாயகரிடம் வேட்கையோடு செல்ல வைத்தன. தென்றல் இன்னிசை பாடி இனிமையாக வீசியது. அவ்வனத்திலிருந்த முனிவர்களுக்கும் அடக்கவொண்ணாத காமப்பெருக்கை தென்றல் காற்று எங்கும் பொங்கி எழச்செய்தது மரங்களும் கற்களும் கூட மன்மதன் சக்தியைப் பெற்றனவென்றால் தேவர்கள் மனிதர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

யாவருடைய துன்பத்தையும் போக்குபவரான சிவபெருமான் அப்போது அங்கு அகாலத்தில் வஸந்தருது தோன்றியதை கண்டு வியந்துவிட்டு மீண்டும் கடூரமான யோகத்தில் ஆழ்ந்தார். இவ்வாறு வஸந்தருது வியாபித்திருக்கும்போது மன்மதன் தன் தேவி ரதியோடு கூடியவனாய் சிவபெருமானுக்கு இடது புறத்தில் தன் கரும்புவில்லை ஏந்தியவனாக நின்றான். அந்நிலையில் அந்த இரதி மன்மதரைக்கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள் அந்தச் சமயத்தில் பார்வதி தேவியானவள் பலவதிமான நறுமண மலர்களைச் சேகரித்துக் கொண்டு தன் தோழிகளுடன் சிவபெருமான் இருக்குமிடத்திற்கு சிவபூஜை செய்வதற்காக வந்தாள். இந்த உலகத்தில் அதி உன்னதமான சவுந்தர்யங்கள் எத்தனை உண்டோ, அத்தனை அழகுக் கவர்ச்சிகளும் பார்வதி தேவியிடம் பொலிவுடன் நிலைத்திருந்தன. அதோடு வஸந்த ருதுவில் பூத்த புத்திளம் மலர்களும் மன மகிழ்ச்சியோடு அத்தேவியால் அணியப் படுமானால் அவளது பேரழகை பற்பல ஆண்டுகள் வருணித்தாலும் முற்றிலும் வருணித்துவிட முடியுமா? யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் அருகே பருவ சுந்தரியாக பார்வதிதேவி எப்போது நெருங்கினாளோ அப்போதே அவள்மீது சிவபெருமான் காதலும் மோகமும் கொள்ளும்படி காமதேவனான மன்மதன் தன் கரும்புவில்லை விளைக்க முயன்றான். உடனே அந்த வில் அவன் கையிலிருந்து நழுவி சிவபெருமானின் அருகில் போய் விழுந்தது. அதனால் சிவனாரின் யோகமும் கலைந்தது.

அப்போது கருநெய்தல் மலர்களைப் போல் கவர்ச்சியான கண்கள் வாய்ந்த பார்வதி தேவி மிகவும் பிரியத்தோடு சிவபெருமானை வணங்கிப் பூஜைகள் செய்து கொண்டிருந்தாள். அதி அழகான உடற்பொலிவுடன் குலுங்கும் பார்வதி தேவியைச் சிவபெருமான் உற்றுப் பார்த்துக் கவர்ச்சியுற்று அவளது வனப்பையெல்லாம் வருணீக்கத் தொடங்கி விட்டார். இது முகமோ அல்லது முழு நிலவோ? இவை கண்களா கருநீல மலர்களோ? இக்கண் புருவங்கள் இரண்டும் காமதேவனின் கரும்பு விற்களோ? இது அதரமோ கொவ்வைக்கனியோ? இது நாசியோ கிளியின் மூக்கோ? இது குரலோ குயிலின் ஆலாபனையோ? இது மத்யமோ? இந்த சுந்தரியின் நடையையும் உருவத்தையும் மலர்களையும் ஆடைகளையும் சவுந்தரியத்தையும் என்னவென்று வர்ணிப்பது? என்று பார்வதியை வருணித்துக் கொண்டே சிவபெருமான் தமது யோகத்தை விட்டு விட்டார் அவர் பார்வதிதேவியின் முன்றானையை எவ்வளவு நேரம் கையால் தொட்டு ஸ்பரிசித்தாரோ அத்தனை நேரமும் தேவி தூரத்திலேயே நின்று கொண்டிருந்தாள் மங்கையருக்குரிய நாணத்தோடு தன் அங்கங்களில் ஒளிவீச அவள் அடிக்கடி கடைவிழிகளால் சிவபெருமானைப் பார்த்து கொண்டும் நின்றாள். அவ்விதம் பார்வதிதேவி செய்யும் சிருங்காரங்களையெல்லாம் பார்த்த சிவனார் அதிக மையல் கொண்டு ஆஹா! இவளைக் கட்டியணைக்கும் ஆலிங்கனத்தை நான் அடைவேனானால் இதைவிட நான் அடையும் சுகம் வேறுண்டோ என்று க்ஷணநேரம் யோசித்து, நான் ஏன் மோகமுற்றேன்? சர்வேஸ்வரனான நானே ஆனந்தத்தோடு இவளது அங்க ஸ்பரிசத்தை இச்சிப்பேனானால் வேறு எந்த க்ஷúத்திரன்தான் எந்தெந்த அற்பச் செயல்களையும் இச்சிக்கமாட்டான்! என்று மனந்திரும்பி சர்வாத்மாவான சிவபெருமான் திடமான பர்யங்க பந்தமாயற்யோக பட்டத்தைத் தரித்தார்.

11. இரதி தேவியின் புலம்பலும் பார்வதி தேவியின் காதலும்

தவஞானிகளே! அதன் பிறகு நிகழ்ந்தவற்றைச் சொல்லுகிறேன் கேளுங்கள் யோக நிலையிலிருந்து வழுவியதை உணர்ந்த சிவபெருமான். இதற்குக் காரணம் ஏதாவது இருக்கவேண்டுமே யென்று நினைத்து நான்கு திசைகளையும் பார்த்தார் அப்போது தன் இடது பக்கத்தில் இருந்து கொண்டு மன்மதன் கரும்பு வில்லை வளைத்து காமக்கணைகள் தொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டார் பார்த்ததுமே அவர் கடுங்கோபம் கொண்டு இதென்ன விந்தை? எவராலும் ஆக்கிரமிக்க முடியாத என்னைக்கூட துஷ்டனான மன்மதன் விட்டுவிட வில்லையே என்று சிவபெருமான் தமது திருவுளத்தில் எண்ணும் போதே அவரது நெற்றிக் கண்ணிலிருந்து உயரக் கிளம்பும் ஜ்வாலைகளோடு நெருப்பு வெளிப்பட்டது. அந்த அக்கினியால் அப்பொழுதே மன்மதன் எரிந்து சாம்பலானான் மகா வலிமை சாலியும் காமவல்லபனுமான மன்மதன் மாண்டதை அறிந்ததும் தேவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள் சிவபெருமான் அந்த க்ஷணத்திலேயே அந்த இடத்தைவிட்டு வேற்றிடஞ் சென்றார் பார்வதியும் திடமான உள்ளத்தோடு தன் ஆபரணம் முதலானவற்றை எடுத்துக் கொண்டு தன் தோழியருடன் தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்று விட்டாள்.

அப்போது மன்மதனின் நாயகியான இரதிதேவி கைலாச நாதரின் கடும் கோபத்தால் தன் காதற்கணவன் எரிந்து சாம்பலானதைக் கண்டதும் துக்கம் மேலிட்டு மூச்சுமுட்டி மூர்ச்சையானாள். பிறகு சுயநினைவு திரும்பியதும் ஆற்றமுடியாத துக்கத்தோடு கூச்சலிட்டு அழுதாள். இரதிதேவி அழும்போது அந்த வனமே துக்கத்தில் ஆழ்ந்தது. ஆடும் மயில்கள் ஆட்டத்தை மறந்து அயர்ந்து நின்றன. மரங்களின் கிளைகளும் இலைகளும் அசைவற்று ஒடுங்கியிருந்தன. மிருகங்கள் தங்கள் மேய்ச்சலை ஒழித்தன வண்டுகள் தங்கள் ரீங்காரத்தை நீங்கின. தவமுனிவர்கள் எப்படி மவுனமாக இருப்பார்களோ, அவர்களைப் போலவே, பறவைகளுங்கூட மவுனமாக இருந்தன. காற்றுகளுங்கூட பத்துத் திசைகளிலும் வீசவில்லை, இவ்வாறு சூழ்நிலைகள் முழுவதுமே சோகத்தில் ஸ்தம்பித்துப் போயிருக்கும்போது அசைவற்ற அந்த நிசப்தத்தில் இரதிதேவி பெரியதாகப் புலம்பலானாள். ஐயோ! என்ன செய்வேன்? இனி எங்கு போவேன்? என் கணவரைத் தேவர்கள் வீணிலே அழைத்து என்ன காரியஞ் செய்து விட்டார்கள்? ஓ நாயகனே! என்று கதறி அழுது கைகளையும் கால்களையும் அடித்துக் கொண்டு கூந்தலையும் அறுத்தாள் பிறகு அவள் துயரத்தினூடே, உலகத்தில் சுகத்தைக் கொடுப்பவன் ஒருவனுமில்லை. துக்கத்தைக் கொடுப்பவனும் ஒருவனும் இல்லை, ஆனால் எல்லா உயிர்களும் தான் செய்த வினையே அனுபவிக்கிறது. ஆகையால் தேவர்களைக் குறித்துச் சோகிப்பதில் பயனில்லை! என்றாள்.

இரதி தேவியின் அழுகைக் குரலைக் கேட்டதும் தேவர்கள் நெஞ்சுருகி சிவபெருமானிடம் சென்று அவரைத் துதித்து. உலகங்களுக்குச் சுகத்தை விளைவிக்கும் சர்வேஸ்வரரான சங்கரரே! எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள வேண்டும். இப்போது மன்மதன் செய்த காரியம் அவனுக்காகச் செய்யப்பட்ட குறும்பல்ல, துஷ்டனான தாரகாசுரனால் பீடிக்கப்பட்ட தேவர்களின் வேண்டுகோளாலே செய்யப்பட்டது இதில் ஐயமில்லை எம் பெருமானே! பிறை சூடிய பெம்மானே, கருணைகூர்ந்து அருள் புரிய வேண்டும். ஆண்டவனான நீரே கோபித்தால் அகில அண்டங்களும் இப்பொழுதே அழிந்துவிடும். காதற்கணவனை இழந்து கதறும் ரதிதேவியின் துக்கத்தைக் கண்டவர்களெல்லாம் மரணமூர்ச்சைக்கு ஆளானவர்கள் போலச் சோகமுற்று இருக்கிறார்கள். ஆகையால் ஐயனே இரதிதேவியின் சோகத்தைப் போக்கவேண்டும்! என்று சொல்லி சிவபெருமானைப் பிரார்த்தனை செய்தார்கள்.

சிவபெருமான், மனமிளகிக் கூறலானார்.

தேவர்களே! இரதிதேவி துக்கிப்பது உண்மை, ஆயினும் எது உண்டோ அது வேறாகமாட்டாது. ருக்மணிபதியான ஸ்ரீகிருஷ்ணன் துவாரகாபுரியில் வாசம் செய்து குமாரர்களை உண்டுபண்ணப் போகிறான். அதுவரையில் சாம்பலான இந்த மன்மதன் சரீரம் இல்லாதவனாகவே இருக்க வேண்டும் அதன் பிறகு கிருஷ்ணன் ருக்மணியிடம் மன்மதனை உருவாக்குவான்; அந்த மன்மதனுக்கு பிரத்யும்னன் என்ற பெயர் வழங்கும் அதில் சந்தேகப்பட வேண்டாம். இந்த மன்மதன் ருக்மணியிடம் மீண்டும் பிறந்தவுடனேயே இவனை சம்பரன் என்ற அசுரன் ஒருவன் கவர்ந்து தூக்கிக் கொண்டு பெருங்கடலைக் கடந்து தன் தலை நகருக்கு செல்வான். அவ்வளவு காலம்வரை இரதிதேவி அவ்வசுரனது பட்டினத்தில் இருக்கட்டும்! அதே நகரத்தில் அவள் மன்மதனையடைவாள்! அதன் பிறகு சம்பராசுரனை மன்மதன் யுத்தத்திலே கொன்று அவனது பொன் பொருட்களையெல்லாம் தன் நகரத்திலே கொண்டு போய்ச் சேர்த்துத் தானும் தன் நாயகியுடன் துவாரகையை மீண்டும் அடைவான். இது சத்தியம்! என்று அருள் புரிந்துவிட்டு தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே. தம் திருவுருவை மறைத்தார். தேவர்களும், இரதிதேவியிடம் சென்று சிவபெருமான் சொன்னவார்த்தைகளை அவளிடம் எடுத்துக் கூறிவிட்டுத் தங்கள் சிவபெருமான் கட்டளையிட்டவாறு அந்த சம்பராசுரனின் நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

மாமுனிவர்களே, அவள் அசுரப் பட்டணத்தை அடைந்ததும் சிவபெருமானால் குறிப்பிடப்பட்ட காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தேவர்களும். ஆ ஆ! இனி என்ன நேருமோ? சிவகுமாரன் எப்போது உற்பத்தியாகி எப்போது தாரகாசுரவதம் நடைபெறுமோ? என்று மிகவும் கவலையோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பார்வதி தேவியும் தன் தந்தையான பர்வதராஜனின் அரண்மனையை அடைந்து மாதாவான மேனையுடன் சேர்ந்து, தன்சவுந்தரிய ரூபத்தை நிந்தித்து கொண்டிருந்தாள் தூங்கும் போதும் தண்ணீர் அருந்தும் போதும். உணவருந்தும் போதும், நடக்கும் போது தோழியர்களின் நடுவில் இருக்கும் போதும் சிவபெருமானையே நினைத்து ஏக்கத்தோடு வருந்திக் கொண்டிருந்தாள். இவ்வாறு துக்கத்துடன் சுகமின்றி சிவ தியானத்துடன் சிவ சிவ என்று சிவ நாமங்களை ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் நாரதமுனிவர் புன்சிரிப்போடு வீணாகானம் இசைத்தபடி பார்வதி இருக்குமிடத்தில் வந்து சேர்ந்தார். தேவி பார்வதியும் அவரை வரவேற்று உபசரித்தாள். அப்போது சிவபெருமானை அடையும் வழி பற்றி நாரத முனிவரிடம் பார்வதி கேட்டாள். அதற்கு நாரதர் புன்முறுவல் பூத்து ஓ தேவி! சிவபெருமானைத் தவத்தாலேயே அடைய வேண்டும் அவ்விதம் தவத்தாலும் அவரை அடைய முடியவில்லையென்றால் பிரமன் முதலிய தேவர்களாலும் அவரை அடைய முடியாது! என்றார்.

12. பார்வதியின் தவம்

நாரதர் கூறியதைக் கேட்டதும் பார்வதி தேவி தவஞ் செய்தே சிவபெருமானை அடைய வேண்டும் என்று தீர்மானித்து தவஞ் செய்ய மனங்கொண்டாள். ஆனால் இந்த விஷயத்தைத் தன் தாய் தந்தையரிடம் தானே நேரில் சென்று விஷயத்தை வெளியிட்டு அனுமதி பெற வெட்கப்பட்டாள் அதனால் தன் தோழிகள் மூலம் சொல்லியனுப்பினாள். தோழிகள் பர்வதராஜனிடம் போய் மலையரசே! உங்கள் அருமைச் செல்வி பார்வதியின் வார்த்தையைச் சொல்லுகிறோம் நீங்கள் அதைக் கேட்டு சம்மதிக்க வேண்டும். அதாவது பார்வதி தேவி தன் தேகத்திற்கும் சவுந்தரியத்திற்கும், உமது குலத்திற்கும் அனுகூலம் செய்ய விரும்பி சிவபெருமானைக் குறித்துத் தவஞ்செய்து அவரையே தன் காதற்கணவனாக வரித்து திருமணம் புரிந்து கொள்ள விரும்புகிறாள். அதற்குத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார்கள். பர்வதராஜன் பார்வதியின் தோழிகள் இருவரும் கூறியதைக் கேட்டு பெண்களே! நீங்கள் சொல்லிய விஷயத்திற்கு நான் சம்மதிக்கிறேன் ஆனால் அவளது தாயான மேனையும், இதற்குச் சம்மதிக்கிறேன் ஆனால் அவளது தாயான மேனையும், இதற்குச் சம்மதிக்க வேண்டுமே அப்படி மேனையுஞ் சம்மதித்து பார்வதி தவம் செய்வாளானால் அதைவிட உத்தமமானது வேறொன்றுமிராது, அதனால் என்னுடைய குலம் சாபல்யம் அடையும் என்பதிலும் ஐயம் இல்லை! என்று சொல்லி அவர்கள் இருவரையும் தன் மனைவியான மேனையிடம் அனுப்பி வைத்தான்.

தோழிகள் இருவரும் மேனியின் அந்தப் புரத்திற்குச் சென்று அவளைப் பார்த்து தாயே உன் மகள் பார்வதி சிவபெருமானைக் குறித்துத் தவஞ் செய்ய விருப்பங்கொண்டு தன் தந்தையின் அனுமதியைப் பெற்று உன்னுடைய அனுமதியையும் பெறும்படி அனுப்பியிருக்கிறாள். உன் உத்திரவு கிடைத்தால் இப்போதே தவஞ் செய்யச் சென்று விடுவான். பதிவிரதையான பார்வதி தன் உருவத்திற்கு பயன் செய்ய ஆவலுற்று விட்டாள். ஆகையால் அனுமதியளிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். அதைக் கேட்டதும் தாய் மேனை தாங்காத துக்கமடைந்து உடனே தன் மகள் பார்வதியை அழைத்து வரச் செய்து பார்வதி! நீ ஏன் துரயப்பட வேண்டும்? முற்பிறவியில் செய்த நற்பயனாய் நீ இங்கு வந்து பிறந்தாய். இங்கு உனக்கு என்ன குறைவு நீ தவஞ் செய்வதற்கு ஏன் போக வேண்டும்? அப்படி எங்கேதான் போகப்போகிறாய்? இங்கு தேவர்கள் இல்லையா? தீர்த்தங்கள் இல்லையா? உன் தந்தையின் மாளிகையிலேயே நீ தவஞ்செய்யலாமே? அப்படி செய்தால் நல்ல திவ்விய சக்தி உண்டாகுமே நீ முன்பு ஒரு முறை சிவபெருமானுக்குப் பணி விடைகள் செய்த போது என்ன காரியத்தைச் சாதித்து முடித்தாய்? இனி எந்தக்காரியத்தைச் சாதிக்கப் போகிறாய்! உன் மேனியோ கோமளமானது உன் உடலோ மென்மையானது ஆனால் தவமோ மிகவும் கடுமையானது, ஆகையால் அது உனக்குத் தகுந்ததல்ல ஆயினும் அந்தத் தவத்தை இங்கிருந்து செய்தால் என்ன? என்று சொல்லி மேனை தடுத்தாள்.

என்ன சொல்லியும் பார்வதி தன் தாய் மேனையின் பேச்சைக் கேட்காமல், சிவபெருமானைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள் பார்வதியின் ஏக்கத்தையும் துக்கத்தையும் மேனை புரிந்து கொண்டதும் அவள் நிலையைக்கண்டு சகிக்காதவளாய் தவஞ் செய்ய செல்ல அனுமதியளித்தாள். உடனே பார்வதி மிகவும் அகமகிழ்ந்து தாய், தந்தை இருவரையும் வணங்கி விடை பெற்று தன் இருதோழியரும் தன்னைப் பின் தொடர்ந்து வரத் தவஞ்செயலை மேற்கொண்டாள் தன் உன்னதமான ஆடை ஆபரணங்களையும் விலக்கிவிட்டு மரவுரியும் மவுஞ்சியுமே தரித்துக்கொண்டு இமயமலையில் புனிதமான நதிகள் பெருகும் ஒரு சிகரத்தை அடைந்தாள். அங்கு பார்வதி தேவி தவக் கோலத்தில் அமர்ந்தாள். அது முதல், பார்வதி தவம் செய்த காரணத்தால் அந்தச் சிகரம் கவுரிசிகரம் என்ற பெயருடன் வழங்கலாயிற்று அங்கு மரங்களும் செடிகளும் கொடிகளும் மலர்களோடும் கணிகளோடும் செழித்துக் கொழித்தன. பார்வதிதேவி பூமியைச் சுத்தம் செய்து, மாமுனிவர்களாலும் செய்யமுடியாத கடுமையான தவத்தைச் செய்யத் துவங்கி உடற்பெற்று என்பதே சிறிதுமில்லாமல் சூரியனிடத்தில் பார்வையைப் பதித்து; மேலான தவம் செய்தாள்.

க்ரீஷ்ம ருதுக் காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும் வர்ஷருதுக்காலத்தில் பூமியிலும் குளிர் காலத்தில் தண்ணீரின் மத்தியிலும் இருந்து கடுந்தவம் செய்து கொண்டே மரங்களை நட்டாள், அதோடு அந்தக் கவுரி சிகரத்தில் நாள்தோறும் மரங்களுக்குத் தண்ணீர் வார்த்துக் காப்பாற்றியும் அதிதி பூஜையும் செய்து வந்தாள் பனிக்காலத்தில் குளிராட்டும் வாடைக் காற்றுக்கும் மழைக்காலத்தில் மழைக்கும் எக்காலத்திலும் பசிக்கும் பயத்துக்கும் அஞ்சாமல் மாமுனிவர்களும் செய்ய முடியாத மாபெரும் தவத்தை மகாக்கடுமையாக செய்து வந்தாள் அவளது தவத்தைக் கண்ட அருந்தவமுனிவர்களும் வியந்து பிரமித்தார்கள். பார்வதிதேவி தவஞ்செய்து வந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த சிங்கம், புலி, மான், பசு முதலிய மிருகங்கள் இயற்கைப் பகையின்றி ஒன்றோடொன்று அன்பு கொண்டு வாழ்ந்தன. வித விதமான புற்பூண்டுகள் அவளது ஆசிரமத்தைச் சுற்றிலும் செழித்து வளர்ந்தன நறுமணமலர்கள் பூத்துக் குலுங்கின. இவ்விதம் பார்வதிதவஞ்செய்த அந்த கவுரி சிகரம்; கைலாசத்திற்கு சமமாக விளங்கியது.

இவ்வாறு பார்வதிதேவி அருந்தவஞ் செய்யும்போது தேவர்களும் மகரிஷிகளும் பார்வதிதேவியின் தவத்தைப் பார்த்து. அத்தவத்தின் தேஜசால் வியாபரிக்கப் பெற்றவர்களாய் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டு கைலாசநாதனே நீரே! ஸ்வயம்பு நீரே சங்கரர்! நீர் மேலான கருணையுள்ளவர் உலகங்களைத்தகனஞ் செய்யும் கூடியதாகவும் மிகவும் பயங்கரமான தாயும் தேவர், முனிவர், தானவர் முதலானவர்களாலுங் கூடச் செய்ய முடியாத பெருந்தவத்தை பார்வதி தேவி இயற்றி வருகிறாள் கருணாநிதியே! தயவு செய்து பார்வதியின் தவத்திற்கு இறங்கி எங்களது காரியத்தையும் நிறைவேற்றியருள வேண்டும் என்று இறைஞ்சினார்கள். அவ்விதம் கூறியதேவர்களையும் நாரதரையும் சிவபெருமான் கடைக் கண்ணால் பார்த்துவிட்டுப் புன்னகைசெய்து தேவர்களே உங்களைப் போன்றவர்களாலும் காண முடியாத நான், மலையரசன்மகளான பார்வதி செய்யும் தவத்திற்கு மனமகிழ்ந்து அவளுக்குத் தரிசனம் கொடுத்து அவளையே திருமணஞ் செய்து கொள்ளப்போவது நிச்சயமாகும் இந்த விஷயத்தில் உங்களுக்கு யோசனை வேண்டாம். உங்கள் காரியம் கைகூடும் ஆகவே உங்கள் இருப்பிடங்களுக்கத் திரும்பிப் போகலாம்! என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினார்.

அதன்பிறகு சிவபெருமான், ஜடைமுடி தரித்த ஒரு கிழப்பிராமணராக வேடம் பூண்டு, பார்வதிதேவி தவஞ் செய்து கொண்டிருந்த ஆசிரமத்தையடைந்தார். அவ்வாறு வந்த வேதியரைக் கண்டதும், பார்வதிதேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று, அர்க்கியபாத்திய ஆசமனாதிகளால் உபசரித்து வழிபட்டாள். அவ்வனத்திலுள்ள சுனையான பழங்களை உணவாக உவந்தளித்தாள். விருத்தராக வந்த வேதியர் தமது வயதுக்கு ஏற்பச்சிறிது நேரம் நித்திரைசெய்தார் அவர் உறக்கம் நீங்கி எழுந்ததும், பார்வதிதேவி அவரை மேலும் உபசரித்து, அவரை நோக்கி, நீங்கள் எங்கு வந்தீர்கள்! என்று கேட்டாள். வேதியர் வடிவில் வந்திருந்த சிவபெருமான் தன் விருத்தாந்தங்களை ஒருவாறு சொல்லி தன் மெய்வடிவைக் காட்டாமல் தான் கொண்ட வேடத்திற்கு ஏற்ற கபட வார்த்தைகளைப் பேசலானார்.

ஏ தேவி! இந்தத் தீர்த்தம், பலம், உன் தவம் ஆகியயாவும் எப்பொழுதும் பரிபூரணமாக இருக்கவேண்டும். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீ பதில் சொல்லவேண்டும் பால்யையான நீ என்ன காரணத்திற்காகத் தவஞ்செய்கிறாய்! எல்லா பூஜைகளையும் பூரணமாகச் செய்வதைப் பார்த்தே நம்மிருவருக்கும் சிநேகம் உண்டாயிற்று. உன் அந்தரங்க விஷயம் எதுவாயினும் என்னிடம் பேதம் பாராட்டாமல் சொல்ல வேண்டுகிறேன் உன்னிடத்திலே தவத்தாலாகும் எல்லா விதமான பயன்களும் நிறைந்திருக்கின்றனவே இந்தத் தவத்தை கணவனையடைய வேண்டும் என்று விரும்பிச் செய்வதாக இருந்தால் இத்தவத்தை இத்தோடு நிறுத்திக்கொள். இரத்தினமானது தன்னைக் கொள்வோனை தேடி செல்வதில்லை ஆயினும் இரத்தினத்தைக் கொள்வோன். தானே வந்து அதனைக் கிரகித்துக்கொள்வான்! உன்னுடைய சவுந்தரியமெல்லாம் தவஞ்செய்வதனால் வீணாகின்றன உன் அழகான ஆடையாபரண அலங்காரங்களையெல்லாம் உதறிவிட்டு தோல் மரவுரி போன்றவைகளை ஏன் அணிந்திருக்கிறாய்? அதற்குக் காரணம் சொன்னால் அதை கேட்டு நான் மகிழ்வேன்! என்றார். வேதிய வேடதாரி கேட்ட கேள்விகளுக்குப் பார்வதிதேவி தானே விடை சொல்ல வெட்கப்பட்டு விலகிச் சென்று தன் தோழிகளில் ஒருத்தியை அனுப்பி, அவள் மூலம் எல்லா விஷயங்களையும் அவருக்குத் தெரிவிக்கச் செய்தாள்.

13. வேதிய வேடதாரி தொடுத்த வாக்குவாதமும், கொடுத்தவரமும்

பார்வதி அனுப்பிய பிராண சகி புன்னகையோடு கிழட்டு வேதியரிடம் சென்று ஐயரே! பார்வதிதேவி ஏன் தவஞ்செய்கிறாள் என்பது தானே தங்களுக்குத் தெரியவேண்டும்? சகல ஐசுவர்யங்களும் கூடியிருந்துங்கூட இந்திரன் முதலான தேவர்களையெல்லாம் புறக்கணித்து விட்டு பிநாகம் என்ற வில்லேந்திய சிவபெருமானையே தன் பிரிய காதற் கணவராக அடைய வேண்டும் என்று தான் பார்வதி இப்படி அரும் தவம் செய்கிறாள் இவள் வைத்த மரக்கன்றுகள் கூட பெரிய விருட்சங்களாகிப் பூத்துப்பயன் தரத் துவங்கி விட்டன. இவளோ நாரதர் கூறியபடியே இன்னும் தவஞ்செய்கிறாள் என்றாள். அவளை அவ்வாறு பேசவைத்து விட்டு பார்வதி தனித்து நின்றாள். வேதியர் வியந்தவர்போல் பார்வதியை நோக்கி, ஏ பார்வதி உன் தோழி சொல்பவை உண்மைதானா? அல்லது பெண்களுக்கே உரிய வெறும் பரிகாசமா? நிச்சயத்தை நீயே ஏன் என்னிடம் சொல்லக்கூடாது? என்று கேட்டார். அதற்குப் பார்வதிதேவி பெரியவரே! என் தோழி சொல்வது யாவும் உண்மைதான் மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத அச்சிவபெருமானை என்னால் எப்படி அறியத்தாகும்? அப்படித் துர்லபமாக இருந்துங்கூட, என் விருப்பத்தாலேயே நான் அவரைக் குறித்துத் தவஞ் செய்கிறேன்! என்றாள். பார்வதி நான் இப்போது என் விருப்பப்படிச்செல்கிறேன் நீ எதை இச்சித்தாயோ அதை அறிய எனக்கும் பெரு விருப்பம் இருந்தது அதை உன் தோழியரிடமிருந்தும் உன்னிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். இனி நான் போயாகவேண்டும் இல்லையென்றால் நமது சினேகம் குன்றிவிடும் என்று மறைவர் மந்தகாசத்தோடு சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். உடனே பார்வதி வேதியரைப் பார்த்து,  சுவாமி! நீங்கள் ஏன் புறப்படுகிறீர்? என்று கேட்டாள்.

பார்வதி நான் உனக்கு மிகவும் அன்பனாகையால் சொல்லுகிறேன் நீயோ சந்தனத்தை விட்டுச் சேற்றைப் பூசிக் கொள்ளவும் யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறிச் சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு, கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியைவிட்டு விட்டு மின்மினியின் மினுக்கு ஒளியைக் கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டு வாசஞ் செய்யவும் விரும்பியவளாய் தவஞ்செய்கிறாய் உன்னுடைய இந்த முயற்சி உசிதமாகத் தோன்றவில்லை, தேவர்கள் நிறைந்த சபையைவிட்டு அசுரரும் பைசாசரும் நிறைந்த சபையை நீ இச்சிக்கிறாய்? அலங்காரமான இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு ஆண்டியான சிவனை நீ விரும்புகிறாய்? இது உசிதமல்ல மிகவும் அலட்டுத்தனமாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னுஞ் சொல்லுகிறேன் கேள். பார்வதி கமலப் பூக்களைப் போன்ற கருவிழிகள் வாய்ந்த கட்டழகியான நீ எங்கே? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே? வெண்ணிலா முகம் படைத்த நீ எங்கே? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே? வருணிக்கவே முடியாத கூந்தல் அலங்காரியான நீ எங்கே? விரிசடையனான அந்த ஜடாதரன் எங்கே? சந்தனம் முதலான வாசனைகள் பூசப்பரிமளிக்கும் உடல் வளம் வாய்ந்த நீ எங்கே? சுடுகாட்டுச் சாம்பலைப் பூசித்திரியும் உடலுள்ள அந்த சிவன் எங்கே? சுகமான வெண்பட்டாடை எங்கே? சுகமற்ற அவனது யானைத் தோல் போர்வை எங்கே? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே? அவனது பாம்பு அணிகள் எங்கே? உன் சேவகர்களான தேவர்கள் எங்கே? அவனது பூத கணங்கள் எங்கே? உன் மிருதங்கம் முதலான வாத்தியங்கள் எங்கே? அந்தச் சிவனின் டம்ருகம் எங்கே? உனது பேரிகை எங்கே? அவனது சிருங்கி எங்கே? உனது டங்கம் எங்கே? சிவனது கல்லவாத்தியமெங்கே? ஆகையால் உனக்கும் அந்த சிவனுக்கும் பொருத்தமோ உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அந்தச் சிவனோ விருபாக்ஷ (கோணல் கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அந்தச் சிவன் என்ன செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாக (நிர்வாணனாகத்)திரிய வேண்டும்.

உலகத்தில் ஆடவர்களுக்குள்ள விசேஷ குணங்களில் ஒன்றாவது சிவனுக்குண்டா? அவன் ஏறித் திரியும் வாகனமோ மாடு! உடுத்தும் ஆடையோ யானைத்தோல் அவனது படைவரிசைகளோ பூத பைசாசங்கள்! அவனது நீல கண்டத்திலோ நீல நிறத்து கடுவிஷம், வீடுகளில் வசிக்கலாயக்கற்றவனாய் வனத்தை அடைந்து காடுமேடுகளில் சுற்றுபவன்! அவன் ஜாதியோ இன்னதென்று இன்னும் தெரியவில்லை! அவனது வித்யையும் ஞானமும் இவ்வளவுதான் என்றும் இன்னும் கணக்கிடப்படவில்லை, அவனே ஏகாங்கி! அதிலும் பற்றற்ற விரக்தன்! அந்தச் சிவன் சர்வ சம்மதமான புருஷனாக இருந்தால் மன்மதனைத் தகனஞ் செய்வானா ஆகையால் அந்தச் சிவனிடம் உன் மனதைச் செலுத்துவது உசிதமல்ல! உனக்கும் அந்தச் சிவனுக்கும் பலவகையிலும் ஏற்றத்தாழ்வுகள் எத்தனையோ இருக்கின்றன. ஆகையால் இது எனக்கு யுத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் வினையை வெல்ல முடியுமா? நீ உன் விருப்பப்படியே செய்! தலை விரித்தாடும் அந்த தான்  தோன்றிக் கூத்தனை அறிவேன். அவன் வசிப்பதோ ருத்திர பூமி. அவனே உலகத்திலுள்ள அசத்தான பொருள்களை அடைகிறான். ஆகையால் அப்படிப்பட்டவனிடமிருந்து உன் மனதைத் திருப்புவது உனக்குத்தான் நல்லது. இது உனக்கு இஷ்டமில்லையென்றால் நீ என் முன் நிற்காதே போ! என்று வேதியர் வடிவத்தில் வந்திருந்த சிவனாரே கூறினார்.

அவற்றையெல்லாம் பொறுமையின்றிக் கேட்ட பார்வதிதேவி மிகவும் கோபங் கொண்டாள். அவள் முதுபெரும் வேதியரை நோக்கிக் குமுறிக்குமுறி கூறலானாள். சிவதூஷணை செய்வதில் வாய்த் தேர்ச்சிபெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மைத் தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதல்லவோ நீ அபக்தமானவர் என்பதைப் புரிந்து கொண்டேன் தேவாதி தேவனான சிவபெருமானை அறிவேன் என்று நீர் கூறிய வார்த்தை பொய்யே அன்றி வேறல்ல, நீர் நிச்சயமாக அவரைப்பற்றி அறிந்திருந்தால் அவருக்கு விரோதமாக ஏளனம் சொல்லமாட்டீர்! நீர் ஒரு வஞ்சகர். அதிலும் நீர் வயதான வாயாடிக்காரர், உலகைக் காக்கும் அச் சிவபெருமானின் வாசாமகோசரமான ஸ்வரூபத்தை நான் சொல்கிறேன் கேட்டுத் தெரிந்து கொள்ளும்!...

அந்தப் பரமசிவனார், யோசித்துப் பார்த்தால் நிர்க்குணம் காரணத்தால் ஸகுணராகவும் நிர்க்குணராகவும் விளங்குகிறாரே தவிர அவருக்குப் பிறவி ஏது? ஜாதி ஏது? சகல வித்தைகளுக்கும் அவர் பிறப்பிடமானவர் அவரே முன்பு ஒரு காலத்தில் வேதங்களை ஸ்வாசமார்க்கமான மகாவிஷ்ணுவுக்கு வழங்கியவர் பரமத்மாவும் பரிபூரணருமான அந்தச் சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த ஆனந்தக்கூத்தருக்கு வயது ஏது? பிரகிருதியே அந்தப் பெருமானை நித்தயமாக அடைகிறானோ? அவனுக்குப் ப்ரஹால உத்ஸாஹ மந்திரஜ எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர, அவருக்கென்று ஏன் சுகம்? துன்மதியாளரே! வேதநுட்பம் தெரியாத கிழட்டு வேதியரே! எந்தச் சிவபெருமானின் கருணைக் கண்ணோக்கினால் தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கிறார்களோ, எந்தச் சிவபெருமானின் திருத்தொண்டிற்காகத் தேவர்களும் காத்திருப்பார்களோ அந்தச் சிவபெருமானே ஸ்வயம்பு அத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் என்னை விரும்பி இச்சிப்பாரானால் கல்யாணரூபரும் தேவதேவருமான அந்தப் பெருமானின் சேவையால் எனக்கு என்ன குறைதான் உண்டாகும்? எல்லாப் பிறவிகளிலும் தரித்திரனாக இருப்போன் ஆண்டியென நீர் இகழ்ந்த அந்த ஆனந்தமூர்த்தியை சேவித்தால் அஷ்ட லக்ஷ்மிகளையும் அடைவான் எந்தச் சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும் நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்தப் பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும்? சாதாரணமானவர்களுக்கு அவர் காட்சிக்கு எளியவராக தமது லீலா மாத்திரையால் காணப்பட்டாலும் அவரை ஸ்மரித்தாலேயே சர்வமங்களமும் கிடைத்துவிடுமே! சிவம் என்ற மங்களகரமான பெயர் எவன் முகத்தில் நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி விடுவார்கள் நீர் சொல்வதுபோல் பஸ்மமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் ஏன் நமது சிரசின் மீது அந்தச் சாம்பலைப்பூசிக் கொள்கிறார்கள்? பொன்னார் மேனியில் தூய வெண்ணீறு அணியும் எந்தச் சிவபெருமான் அகில உலகங்களுக்கும் ஆதியாக இருக்கின்றாரோ அவர் சர்வேஸ்வரனாக இருந்து, அனைத்தையும் ஆக்கலும் காத்தலும் துடைத்தலுமான முத்தொழில் புரிந்து அலகிலாவிளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும்?

கேளும் வயதான வேதியரே! இன்னும் கேளும் பரமாத்மாவாகவும் பரப்பிரம்மமாகவும் விளங்கும் சிவபெருமானது அறியக்கூடாத உருவத்தை உம்மைப்போன்ற அஞ்ஞானிகள் எப்படி அறியக்கூடும்? துராசாரமுடையவர்களும் மகாப் பாபிகளும் தேவமார்க்கத்திற்குப் புறம்பானவர்களும் நிர்குணரான சிவபெருமானை எப்படி உணர்ந்தறிவார்கள்? தத்துவஞான விசாரணையில்லாமல் எவன் ஒருவன் சிவபெருமானை நிந்திக்கிறானோ, அவன் பல பிறவிகளில் சேகரித்த புண்ணியங்களும் வீண் சாம்பலாகி விடும். நீரோ அளவற்ற தேஜஸ் வாய்ந்த சிவபெருமானை இழித்தும் பழித்தும் பலப்பல பேசிவிட்டீர் உமது அற்பஞானத்தை அறியாமல் வயதான பெரியவர் என்று மதித்து வழிபட்டு உபசரித்த காரணத்தால் நானும் பாபத்தையடைந்தேன் எவன் ஒருவன் சிவநிந்தனை புரியும் துவேஷியாக இருக்கிறானோ அவனைக் கண்ணால் பார்த்தாலும் ஸசேவ ஸ்நானம் செய்ய வேண்டும். துஷ்டவேதியரே உம் ஊனக் கண்களுக்கு சிவபெருமான் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மணக்கண்ணிற்குப் பிரியரும் என் விருப்பத்திற்கு உரியவருமாவார்! திரும்பத் திரும்பக் கேட்டாலும் அதையேதான் நான் சொல்லுவேன். இவ்வாறு பார்வதி வெகுண்டுரைத்து விட்டு தன் தோழியைப் பார்த்து, சகியே துஷ்ட புத்தியும் கெட்டமனமும் படைத்த இந்தக் குறும்புக் கிழவரை நீயே இங்கிருந்து போகச் சொல்லடி, ஏனென்றால் சிவநிந்தை காது கொடுத்துக் கேட்பவர்களும் பாபத்தை அடைவார்கள். இவர் இங்கிருந்தால் மேலும் சிவநிந்தையே செய்வாராகையால் தாமே இந்த இடத்தைவிட்டு வேறு இடம் செல்வோம் என்று சொல்லிவிட்டு தன் தோழியருடன் காலெடுத்துப் பெயர்த்து வைப்பதற்கு முன், விருத்தவேதியரின் வேடத்திலுள்ள சிவபெருமான் தம் மாறு வேடத்தை நீக்கிவிட்டு தம் சுயவடிவமெடுத்து சிவபெருமானாகக் காட்சியளித்தார். அவ்வாறு அவரைக் கண்டதும் பார்வதிதேவி நாணத்தோடு தலைகுனிந்து நின்றாள், அவளை சிவபெருமான் உற்று நோக்கிப் புன்னகை பூத்து பார்வதி நீ என்னை விட்டு எங்கே போகமுடியும்? நீ என்னால் விட்டுவிடத் தக்கவள் அல்லவே உன் தவத்துக்காக மகிழ்ந்த நான் உன் முன் பிரசன்னமானேன். உன் மனதைச் சோதிப்பதற்காகவே விளையாட்டாக இப்படியெல்லாம் வாய் கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடப்பக்தியைக் கண்டு உவந்தேன். உனக்கு கொடுக்கத் தகாத வரமே இல்லை உன் தவத்தால் நீ என்னை அடைந்தாய் உன் அழகைக் கண்டால் ஒரு க்ஷணம் ஒரு யுகமாகத் தோன்றுகிறது நீ நாணத்தை விடு நமது வீட்டுக்குப் போகலாம் வா என்று சிவபெருமான் கூப்பிட்டார் பார்வதி நீண்ட காலம் தவஞ்செய்த பயனையடைந்து தவத்தால் உண்டாகிய சிரமமும் நீங்கினாள்.

14. பார்வதிக்கு மணம்பேசிய கதை

நைமிசாரண்ய தவஞானிகளே! நான் சொல்வதைப் பக்தியுடன் கேளுங்கள். பார்வதி தேவி சிவபெருமான் கூறிய வார்த்தைகளைகேட்டதும் தான் முன்பு இனம் புரியாமல் அவரைக் கடிந்து கொண்டதற்காக வெட்கப்பட்டாள். பிறகு தம் வீட்டுக்குப்போவோம் வா! என்று கூப்பிட்ட சிவபெருமானை நோக்கி தேவாதி தேவரே! என் விஷயத்தில் கருணைகாட்டி அனுமதியளித்து இப்போது என்னை என் தந்தை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் பிறகு சித்த புருஷர்களால் சுபமான உத்தமமானவிதிக்கிரமமான திருமணத்தை என் பிதாவின் வீட்டில் செய்து கொண்டு என் தந்தையின் கிருகத்தையும் அவரது இல்வாழ்வினையும் சிறப்பித்தருள வேண்டும் என்று பார்வதி தன் தோழி மூலமாக அறிவித்தாள். அவ்வசனத்தைக்கேட்டதும் சிவ பெருமான் அகங்குளிரக் கண்குளிர அவளைப் பார்த்து பார்வதி உனக்கு எதுவிருப்பமோ, அது அப்படியே ஆகுக என்று தருவாய் மலர்ந்து கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தார். பார்வதி தன் தோழிகளை அழைத்துக் கொண்டு இமாசலத்தில்தன் தந்தையான பர்வதராஜனின் மாளிகையை அடைந்தாள். அவளது வருகையை அறிந்ததும் அவள் தாயாரான மேனை ராணிபற்பல தாதியரும் தோழியரும் உறவினரும் புடைசூழத்தன் புதல்வியை எதிர்கொண்டு வரவேற்று நீ நற்கருமம் செய்தாய்! உன்னால் நாங்கள் யாவரும் தூய்மையடைந்தோம் என்று சொல்லி சந்தன மலர்களால் பார்வதியை அருச்சித்து கையுறைகள் கொடுத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றாள் அப்போது பர்வதராஜனான ஹிமவானின் அரண்மனை மாளிகை முழுவதும் ஆனந்தமயமாக விளங்கியது பர்வதராஜன் நாரதரைத் துதித்து துர்ப்புத்திரனைப் பெறுவதைவிட நற்புதல்வியைப் பெறுவதே சிறந்தது என்று கருதித் தன் இல்வாழ்வைச் சுப வாழ்வாக எண்ணிமகிழ்ந்தான்.

சிவபெருமானோ பார்வதி தேவிக்கு வரங் கொடுத்து விட்டு அந்தர்த்தானமான பிறகு காசிமாநகர் என்னும் புண்ணிய ÷க்ஷத்திரத்தை அடைந்தார். அங்கு அவர் ஸப்தரிஷிகளை நினைத்தார் அதையுணர்ந்ததும் ஏழு ரிஷிகளும் பரமேஸ்வரனைத் தியானித்துக் கொண்டு முத்தாபரணங்கள் பூண்டு தங்களது தவத்தின் பிரத்தியட்ச சித்தி போன்ற அருந்ததி முதலான அவரவர் பத்தினிகளோடு புறப்பட்டு வந்து சிவபெருமான் இருக்குமிடத்தையடைந்து துதித்து நின்றார்கள். சூரியகாந்தியைப் போல விளங்கும் சப்த ரிஷிகளைச் சிவனார் பார்த்து தவமுனிவர்களும் தேஜோவந்தர்களுமான மாமுனிவர்களே மனைவிமாரோடு சம்சார சம்பந்தர்களாக இருப்பதைக் கண்டு நமக்கும் நமது திருமண விஷயத்தில் நாணம் வேண்டுவதில்லை என்று கருதினார். அவரை ஸப்த(ஏழு) ரிஷிகளும் நோக்கி அண்ணலே ஆனந்த வள்ளலே, அம்பலவாணரே அளவற்ற தேஜசையுடைய வராகவும் பகவானாகவும் விளங்கும் எம்பெருமானே நமஸ்காரம் கபர்த்தியான (ஜடாதரரான) தேவரீருக்கு நமஸ்காரம் ஐந்து திருமுகங்களையுடைய உமக்கு நமஸ்காரம் ஹிரண்ய பாஹுவாகவும் (பொன்னார் தோளராகவும்) நீலகண்டராகவும் விளங்கும் விரிசடை சிவபெருமானே நமஸ்காரம் ஸர்வ வியாபகராகவும் வியாப்பியரான உமக்கு நமஸ்காரம் சிவனாராகவும் சிவரூபராகவும் பிரணவ ரூபராகவுமுள்ள உமக்கு நமஸ்காரம் என்று பலவாறாகவும் தோத்தரித்து எம்பெருமானே எல்லோருக்கும் மேலான ஏகாம்பரனே யாவருக்கும் அருள் பாலிப்பவரே நாங்கள் உம்மை எவ்விதம் துதிப்போம். நாங்கள் முன்பு இயற்றிய தவம் வேத அத்தியயனம் யாகங்கள் புண்ணிய காலங்களில் செய்த தான தருமங்கள் தீர்த்த ஸ்நானங்கள் முதலியயாவும் உம் திவ்வியமான தரிசனத்தால் கைகூடின உம்மை நினைத்தவன் கிருதகிருத்தியனாவான். அப்படியிருக்கும் போது தேவரீரே எம்மை நினைத்ததால் எங்களுக்குண்டான பெரும் பேற்றை என்னவென்று சொல்வோம்? மிகவும் குள்ளனுக்கு உயர் மரத்துப்பழம் எட்டியது போலவும் பிறவிக்குருடனுக்கு கண்கள் கிடைத்தது போலவும் ஊமைக்கு வாய் பேச்சு உண்டானது போலவும் பரம தரித்திரனுக்கு பெரும் புதையல் கிட்டியது போலவும் முடவன் மலையைத் தாண்டுவது போலவும் மலடிக்கு மைந்தன் பிறந்தது போலவும் உம் அரும்பெரும் தரிசனமானது அடியேங்கட்குக் கிடைத்தது. அதனால் முனிவர்களில் உயர்ந்தவர்கள் எனப் பெயர் பெற்றோம். எங்களால் இயன்றதாகவும் நன்மை பயப்பதாகவும் உள்ள ஏவல் பணிகளைச் செய்யக் கட்டளையிட வேண்டுகிறோம். என்று இறைஞ்சினார்கள்.

அனைவராலும் வழிபடத் தக்க அறிவியல் முனிவர்களே உங்களை நான் நினைத்து உங்களை இங்கே வருவித்தகாரணம் என்னவென்று சொல்கிறேன். பிருமதேவனைக் குறித்துத் தவஞ்செய்த துராத்மாவான தாரகாசுரன் வலிமையான வரங்களை பெற்று தேவர்களுக்குத் துன்பஞ் செய்கிறான். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், சூரியன்; சந்திரன் யாகஞ் செய்வோன் எனப்பிரிந்த என் அஷ்ட மூர்த்தங்கள் எட்டு வடிவப் பொருட்கள் உலகத்திற்கு உற்றுதவி செய்வதற்கேயன்றி தன்னலப்பயனுக்காக அல்ல ஆகையால் யான் சிலையுடன் கூடி நிற்க திருமணஞ் செய்து கொள்ள விரும்புகிறேன் சிவையான பார்வதியோ, அரும் பெரும் முனிவர்களாலும் ஆற்ற முடியாத அருந்தவம் செய்து முடித்தாள். அவளுக்கு இஷ்டமான வரத்தின் பயன் அவளுக்குக் கைகூட வேண்டும். ஆகையால் பார்வதியின் பிதாவான பர்வதராஜனின் மாளிகைக்கு நீங்கள் சென்று அந்த ராஜனையும் அவன் மனைவியான மேனையையும் சந்தித்து, நற்செயல் நிறைவேறும் வண்ணம் மணம் பேசி, பார்வதியை எனக்கு மணமுடிக்கும்படி விரும்புகிறேன் பார்வதியோ ஸர்வகுண பரிபூரணையான கன்னிகையாகையால் அவளை எனக்கு மணமுடித்துக் கொடுக்கும்படி பர்வதராஜனை கேட்டு நிச்சயித்துக் கொண்டு தேவர்களுக்கு நன்மையுண்டாகும்படி விதிமுறைப்படி, நீங்களே மணவினையை நடத்துவிக்க வேண்டும் மற்றபடி செய்ய வேண்டியவற்றையெல்லாம் தெரிந்துள்ள உங்களுக்கு விசேஷமாக நான் சொல்லவேண்டியது எதுவுமில்லை என்றார்.

அதைகேட்ட சப்தரிஷிகள் ஆனந்தப் பரவசமடைந்தார்கள், அரி அயனாலும் வணங்கத் தக்கவரும் புருஷார்த்தங்கள் அனைத்தையும் தரவல்லவருமான சிவபெருமான் உலக நன்மையின் பொருட்டு நம்மை இந்தக் காரியத்துக்கு ஏவினார். இவரோ சர்வலோக கர்த்தாவாகவும் பார்வதியோ சர்வலோக மாதாவாகவுமிருப்பதால் இந்த ஏவல் பணி வெகு உசிதமேயாகும் இந்தக் காரியம் வளர்பிறைச் சந்திரனைப்போல் விருத்தியடைய வேண்டும் என்று சப்தரிஷிகளும் சொல்லிக் கொண்டு பிறை சூடிய பெருமானை வணங்கி விடைபெற்று வானவழியாக இமயமலையிலுள்ள பர்வத ராஜனது தலைநகரை அடைந்தார்கள். அந்தத் திவ்விய நகரத்தைக் கண்டதும் சப்தமகரிஷிகளும் உவகை பெருகித் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளலானார்கள்.
இந்த நகரம் குபேரனது அழகாபுரியைவிட தேவேந்திரனின் அமராவதி பட்டணத்தையும் விட ஆதிசேஷனது யோகவதியை விடச் சிறப்பாகத்தோன்றுகிறதே! ஸ்படிகக்கற்களினாலும் பலவகை ரத்தினங்களாலும் கட்டப்பட்ட அழகு கொழிக்கும் மாளிகைகள் மிகவும் மனோரம்மியமாக ஒளி வீசி ஜொலிக்கின்றன சூரிய காந்த மணிகளும் சந்திர காந்த மணிகளும் சுவர்த்தனங்களிலெல்லாம் மின்னுகின்றன. இத்தகைய இமயமலையின் அழகுக்கு ஈடாகுமா? என்று சப்தரிஷிகள் வியந்தும் உவந்தும் சொல்லிக் கொண்டேமுக மலர்ச்சியோடு மலையரசனின் மாளிகையை அடைந்தார்கள்.

சூரியனுக்குச் சமமான தேஜஸ் வாய்ந்த சப்தரிஷிகளைக் கண்டதும் பர்வதராஜன் தன் மனைவியான மேனையை நோக்கி, ஏழு சூரியர்கள் நமது இல்லதுக்கு வருகிறார்களோ? நான் கிரஹஸ்தனாகையால் இவர்களை நம் கன்னிகை பார்வதியே பூஜிக்க வேண்டியவள். இப்போது தான் நாம் தன்யர்களானோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்திலிருந்து சப்தரிஷிகள் கீழே இறங்கினார்கள். அவர்களை பர்வதராஜன் எதிர்கொண்டு வரவேற்று வழிபட்டுத் திருவடிகளில் விழுந்து வணங்கினான். சப்தரிஷிகள் தங்கள் கைகளால் ஹிமாவானைப் பற்றித்தூக்கி சுபமுண்டாகுக, சுபம் உண்டாகுக, சுபம் உண்டாகுக என்று ஆசீர்வதித்தார்கள், பர்வதராஜன் அவர்களை வணங்கி, ஞானரிஷிகளே! இன்றுதான் என் குடில் புனிதம் பெற்றது என்று பரவசத்தோடு சொல்லி அவர்களுக்கு ஆசனம் கொடுத்து உட்காரச் செய்து அவர்களுடைய ஆக்ஞையைப் பெற்றுத் தானும் உட்கார்ந்து; மஹாத்மாக்களேநீங்கள் எழுவரும் எந்தக் காரணத்திற்காக என் மாளிகையை வந்தடைந்தீர்களோ? நான் தன்யனானேன். கிருத கிருத்தியனானேன் உலகத்தில் பலராலும் புகழத்தக்கவனானேன். எதற்காக வந்தீர்கள்? தாசனான எனக்குத் தெரிவிக்க வேண்டும் அடியேனுக்கு ஏதாவது கட்டளையிடுவதானால் விரைவில் சொல்லியருளுங்கள்! என்றான் பவ்யமாக, சப்த ரிஷிகள், சந்தோஷித்தார்கள். அவர்கள் பர்வதராஜனை நோக்கி ஹிமவானே! நீயே பாக்கியசாலி நீயே தன்யன்! பரோபகார சிந்தையால் சிவபெருமான் சகல ஜீவன்களுக்கும் சுகம் நல்க விருப்பங்கொண்டு எங்கள் மூலம் உன் புதல்வியான பார்வதியை தன் நாயகியாக்கிக் கொள்ள நாடுகிறார் அது உனக்குச் சம்மதமாகி, பார்வதியை அவருக்கு கன்னிகாதானஞ் செய்து மணம் முடித்து வைப்பாயானால் சகல உலகங்களுக்கும் சுகம் செய்யும் சங்கர பகவானுக்குப் பூஜ்யராவீர்; இதில் ஐயமில்லை, உன் பெண் பார்வதியும் அவரது திருவருளால் உலக அன்னையாவாள். உன் ஜன்மமும் பயன் பெற்ற தாகும் என்று கூறினார்.

அதைக் கேட்டதும் பர்வதராஜன் சப்தரிஷிகளே இந்த விஷயத்தில் என் பத்தினியான மேனையின் கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். பார்வதியே என் தேகம் அவளே என் சம்பத்து அவளே என் கீர்த்தி என்று சொல்லிவிட்டு, மேனையோடு ஆலோசித்து அவளையும் இணங்க வைத்து, பார்வதியை உலக அன்னையாகப் பாவித்து ரிஷிகளின் மடியில் அமர்த்தி, முனிவர்களே, இந்தப் பார்வதி என்னால் உங்களுக்கு பிøக்ஷயாகக் கொடுக்கத் தக்கவள். என்னால் கொடுக்கத்தக்க பிøக்ஷ இதுதான் என்றான். அதற்கு சப்த ரிஷிகள், இமவானே, நாங்கள் பிக்ஷகர்கள், நீரோ பிøக்ஷ கொடுப்பவர் பார்வதியே பிக்ஷõ கதம்பமானாள். இதைவிடச் சிறந்தது யாது? என்று சொல்லிப் பார்வதியை நோக்கி, தேவி! நீ சிவபெருமானுக்குச் சுகம் கொடுப்பவளாக என்று வாழ்த்திக் கையைப் பிடித்துக் கொண்டு உனக்குச் சுபம் உண்டாகப் போகிறது. வளர்பிறை நிலவைப்போல்  உன் கணங்கள் உன் வீட்டில் சேர்ந்து நாளா வண்ணம் விருத்தியடையப் போகிறார்கள், என்று சொல்லி விட்டு இமவானிடம் பழங்களோடும் மலர்களையும் தாம்பூலங்களையும் ஒருவருக்கொருவர் திருமண நிச்சயதார்த்தம் சொல்லி மாற்றிக் கொண்டார்கள் அப்போது மேனை கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட அருந்ததி சிவபெருமானின் அநந்தகல்யாண குணங்களை அவள் ஆவலுறும் படி எடுத்துச் சொல்லி கண்ணீரைத் துடைத்தாள். பிறகு ரிஷிகள் நான்காம் நாளன்று உயர்ந்த லக்கனத்தை திருமணத்துக்கு நிச்சயித்து பர்வதராஜனிடம் விடைபெற்று மகிழ்ச்சியுடனும் தம்மனைவியருடனும் காசித் தலத்தை அடைந்து, சிவபெருமானைத் தரிசித்து மனைவியின் முடிவு கூறி தம் இருப்பிடஞ் சென்று மீண்டும் வருவதற்கு உத்தரவு கேட்டார்கள். சிவபெருமான், சப்தரிஷிகளே நீங்கள் என்னால் விவாகத்தில் அத்வர்யுக்களாகச் செய்யப்பட்டீர்கள் ஆகையால் நீங்கள் உங்கள் சீடர்களோடு வரவேண்டும் என்று கட்டளையிட்டார் மகரிஷிகள் அவ்வாறே ஆகுக என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்கள்.

பிறகு சிவபெருமான் தம் கணங்களுடன் திருமண உற்சவத்தைக் கருதிக் கைலாயத்தையடைந்து நாரத முனிவரை நினைத்தார். நாரதரும் உடனே தோன்றி கல்யாண சுந்தரரே! அடியேனை நினைக்கக் காரணம் என்ன? என்று புன்சிரிப்போடு கேட்டார். சிவபெருமான் நிகழ்ந்த செய்திகளைச் சொல்லிக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். அப்போது சிவபெருமான் பார்வதி கூறியவார்த்தைகளைச் சொல்லி. பார்வதி என்னைத் தன் வசப்படுத்தத்தக்க அரும்பெரும் தவத்தைச் செய்தாள் என்று சொன்னார் அதற்கு நாரதர் சங்கரரே? தாங்கள் பக்தர்களுக்கு தன் வசமாவதையே விரதமாகக் கொண்டவராயிற்றே பார்வதியின் மனோ பீஷ்டத்தை நிறைவேற்றினீர் யான் செய்யத்தக்க செயல் என்ன உண்டு? உத்தரவிட்டால் தடையின்றிச் செய்கிறேன். என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் நாரதா! நீ கூறியபடியே பார்வதியே அடைவேன், இவ்விஷயத்தில் உனக்குச் சந்தேகமே வேண்டாம், இனி நாம் சொல்லும் காரியத்தை நீயே செய்ய வேண்டும். நாரதா, பிரமன், விஷ்ணு முதலிய தேவர்கள் சப்தரிஷிகள், சப்தமாதர்கள், யக்ஷர்கள். கந்தவர்கள், நாகர்கள் முதலான அனைவரையும் என் திருமணத்திற்கு அழைத்து வருவதுடன் இந்த விவாகத்திற்கு வராதவர்கள்எனக்குப் பிரியர்கள் அல்லர் எனக்கூற வேண்டும் என்றார் அவரை நாரதர் வணங்கி விடைபெற்றுச் சென்று, சகலமான தேவர்களையும் கண்டு சிவபெருமானின் கட்டளையை அறிவித்து அதிவிரைவில் சிவ சன்னிதானத்தை அடைந்தார்.

15. ஊர்வலத்தில் மேனை தேடிய மாப்பிள்ளை

தேவர்கள் அனைவரும் சிவபெருமானைத் தரிசித்து வணங்க வேண்டும் என்று ஆசையோடு திருமணத்துக்கு வேண்டிய உபகரணங்களோடும் கந்தர்வர்கள் அப்ஸரஸ்திரீகள், வாத்தியங்கள் முதலியவற்றோடும் திருக்கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள். பரிபூரணரான பரமசிவனாருக்கு அலங்காரஞ் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை, ஆயினும் எல்லோரும் பகவத்சேவை செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்களாய் தம்மால் இயன்றவாறு மண நாயகனாக சிவபெருமானை அலங்கரித்தார்கள். சிவனாரின் மகுடத்தில் அமர்ந்தான். திருநெற்றிக் கண் திலகமாயிற்று, காதணிகளான சர்ப்பங்கள் பொற்குண்டலங்களாயின. விபூதியே சந்தனமாயிற்று. யானைத்தோலே பட்டுப் பீதாம்பரமாயிற்று பாம்பு மாலைகள் நவரத்தின நகைகளாயின சிவபெருமானது மகிமையினாலே அவர் தேகத்திலிருந்து இயற்கைகளே கண்டவர்களுக்கு அலங்காரங்களாகத் தோன்றின மாப்பிள்ளை கோலம் பூண்ட சிவபெருமான் யாராலுமே வர்ணிக்க முடியாத சர்வாபரணலங்கார உருவத்தோடு விளங்கினார். அப்போது பிரமத கணங்கள் சகல வாத்தியங்களையும் முழங்கினர் தேவர்கள் மகேஸ்வரனுக்கு பணியாற்ற வரலானார்கள் அவர்களில் பிருமதேவர். அன்னவாகனத்தில் அமர்ந்து சகல முனிவர்களும் புடைசூழ்ந்து வர பூதபதியான பரமேஸ்வரனைச் சேவிக்க வந்து கும்பிட்டு நின்றார் மகாவிஷ்ணு கருடவாகனத்தில் அமர்ந்து சர்வலங்கார பூஷிதராக சகல சேவர்களுடனும் பரிவாரங்களுடனும் வந்து சேவித்து, அருகில் இருந்தார், இந்திரன் முதலிய திக்குபாலகர்கள் யானை, குதிரை, சிவிகை, விமானம் முதலிய தத்தமது வாகனங்களில் ஏறிப் பரிவாரங்களுடனும் ஆயுதங்களுடனும் வந்து பணிந்து ஒரு புறமாக இருந்தார்கள். அஷ்டவசுக்கள் துவாதச ஆதித்தர்கள், முனிவர்கள். கங்கை முதலிய நதிகள், சப்த சமுத்திரங்கள், கந்தவர்கள், தேவதாசிகள், நாகர்கள் முதலிய யாவரும் சர்வாலங்காரங்களோடு தத்தமது பரிவாரங்களோடும் பேருவகையோடும் சிவபெருமானைக் கண்டு தொண்டு புரிய வந்து சேர்ந்தார்கள்.

அந்தச் சமயம் சிவபெருமான், திருக்கைலாய மலையிலிருந்து புறப்பட்டுத் தேவர்களை நோக்கி, நீங்கள் அனைவரும் எனக்கு முன் செல்லுங்கள்! என்று பணித்தார். உடனே தேவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் சகல வாத்தியங்களையும் முழக்கிக் கொண்டு புறப்பட்டனர். சப்தரிஷிகள் ஆசிர்வதிக்க பாநுகம் பன் தன் ஆயிரம் வாய்களால் சங்கத்வனி செய்ய, பாணாசுரன் தன் ஆயிரங் கைகளால் குடழவு அடிக்க நந்திதேவர் பொற்பரம் யேந்தி தேவர்முனிவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன் செல்ல இந்திரன் காளாஞ்சி ஏந்த, ஈசானன் அடப்பை தாங்க, வாயு ஆலவட்டம் வீச, அக்கினி தூபம் ஏந்த, வருணன் பூரண கும்பம் தாங்க, நிருதி கண்ணாடி ஏந்த, குபேரன் நவநிதிகள் சிந்த: யமன் கஞ்சுகத் தொழில்புரிய நாகராஜன் மாணிக்க தீபங்கள் ஏந்த, வேதங்கள் திருவடியைச் சுமக்க கங்கை யமுனை முதலிய நதிமங்கையர் குளிர்ந்த கவரிவீச குண்டோதரன் குடைபிடிக்க, பிரம்ம விஷ்ணுக்கள் இருபுறமும் கை குவித்து வர, சர்வ அலங்கார ஆடம்பர பூர்வமாகச் சிவபெருமான் ரிஷிப வாகனத்தில் அமர்ந்த வண்ணம் இமயமலையை நோக்கி மணம் புரிய வரலானார். இந்நிலையில் பார்வதியின் தந்தை ஹிமவான் தனது உற்றார் உறவினர்களை யெல்லாம் வரவழைத்து, திருமண மண்டபத்தை வினோதமாக அலங்கரிக்கும்படி கட்டளையிட்டான். நானாவிதவிசித்திர தோரணங்களும் கொடிகளுமாக தன் தலை நகரை அழகுறச் செய்தான்.

பர்வதராஜன் தன் குமாரியைக் கன்னிகா தானஞ் செய்ய மங்கள ஸ்நானம் செய்வித்து கல்யாண திருக்கோலத்திற்கேற்ப அலங்கரித்து நாந்தி, தேவதா, ஆஹ்வாநம அங்குரார்ப்பணம் முதலிய தேவ பூஜைகளைச் செய்வித்து விவாக மஹோற்சவத்திற்கான உபகரணங்களை சித்தப்படுத்திவிட்டு மணமகனாரான சிவபெருமானைச் சகல தேவர்களோடும் அழைத்து வரும்படி தன் ஆத்ம நண்பனான கந்தமாதன பர்வதத்தையும் மற்றொரு சேவகனையும் பதிவெண்வகை மேள வாத்தியங்களோடு எதிர் அனுப்பி, சிவபெருமானின் வருகையை எதிர்பார்த்திருந்தான். மணக்கோலத்து மகேஸ்வரர் தம் சைனனியங்ளோடும் சகல தேவர்களோடும் வைபவமாக பர்வதராஜன் தூதுவரால் அறிந்தான். உடனே தன் பரிவாரங்களுடன் எதிர் சென்று சகல தேவர்களோடும் வரும் சாம்பவ மூர்த்தியை கண்டு ஆச்சிரியமடைந்தான். தேவர்கள் அனைவரும் பர்வத ராஜனின் சேனையைக்கண்டு வியந்தார்கள், இரண்டுமாபெரும் கடல்கள் ஒன்றாகச் சேர்ந்து போல இருசாராரின் சேனைகளும் ஒன்று கூடின. இவ்வாறு அனைவரும் பட்டணத்தை நோக்கி வந்தார்கள். ஹிமவான் தேவர்களுக்குத் தக்கபடி விடுதிகள் நியமித்தனுப்பிவிட்டுத் திருமணமேடைக்குச் சென்று அலங்காரங்களைச் சரிவரப்பார்த்து ஸ்நானம் பானாதி நித்தியக் கடன்களை முடித்துக்கொண்டு மணமகனாரின் வருகையை எதிர்பார்த்திருந்தான்.

பர்வதராஜனின் பத்தினியான ராணிமேனையோ நாரதருடன் தன் உப்பரிகையின் மேல் நின்று பக்தர்களுக்குச் சுகத்தைக் கொடுக்கும் பரமேஸ்வரனைக் காண வேண்டும்! அவர் எவ்வளவு அழகரோ? அவருக்காக என் அருமைச் செல்வி பார்வதி அரும்பெரும் தவஞ்செய்தாளே; என்று சொன்னாள். அதையுணர்ந்த சிவபெருமான் அந்த மேனை பிரமிக்கும்படியாகத் தம் சேனா பலத்தை காட்டி நின்றார். தேவர்களின் மாபெரும் சேனையைக் கண்ட மேனை மகிழ்ந்தாள் இவ்வளவு சேனைகளுக்கும் சிவபெருமானே நாயகராக இருப்பாராகில் அவர் புகழுடையவராகவும் பேராற்றல் உடையவராகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். முனிவர்களே! அப்போது ஒரு வேடிக்கை நிகழ்ந்தது அதையுஞ் சொல்கிறேன். கேளுங்கள்.

மணமகனாரான சிவபெருமானின் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த தேவர்கள் கந்தர்வர்கள் முதலானோர் நானாவித அலங்காரங்களோடும் பலவித விருதுக் கொடிகளோடும் அதி அழகான தேவமங்கையர்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தார்கள் அவர்களில் விசுவாசு என்ற கந்தர்வராஜனைக் கண்ட மேனை அவனே சிவன் என்று நினைத்து மகிழ்ந்து என் மருமகன் பெண்கள் சேனையுடன் வருகிறானே! என்று நாரதிரிடம் சொன்னான் நாரதரோ புன்சிரிப்போடு இல்லையே! அது மாப்பிள்ளையல்ல சிவசந்நிதியில் அவன் சங்கீதம் பாடுவோனாயிற்றே என்றார் அதைக்கேட்டதும் மேனை இன்னும் அதிக உற்சாகப்பட்ட அந்த ஆணழகனே மாப்பிள்ளைக்கு ஊழியன் தான் என்றால் மாப்பிள்ளை சிவபெருமான் எப்படியிருப்பானோ என்று நினைத்தாள் அப்போது கீழே ஊர்வலத்தில் மணிக்ரீவன் முதலான யக்ஷர்களும் அவர்களுடைய சேனைகளும் வருவது தெரிந்தது. அவர்களது தலைவனான குபேரனைக் கண்டதும் மேனை மகிழ்ச்சி பொங்க ஆகா! என் மகளுக்கேற்ற மணளானான சிவன் அவன் தான் என்று மயங்கினாள். அதற்குள் வருணன் தன் சேனா சமுத்திரத்துடன் வரவே ஒரு வேளை அவன்தான் சிவன் ஆவனோ? என்றும் இந்திரன் தேவமங்கையருடன் வர, நான் பார்த்த எல்லோரையும் விட இவனே சிறந்தவன் இவனே சிவனாகவேண்டும் என்று நாரதரிடம் குதூகலத்தோடு சொன்னாள். ஆனால் அவர்களில் ஒருவருமே சிவபெருமான் அல்ல வென்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் தன் அகண்ட தேஜசுடன் கூடிச் சகல தேவர்களும் புடை சூழ வருவதைக் கண்டு இவன்தானோ சிவன்! என்று மேனை கேட்டாள் அவனுமல்ல என்றார் நாரதர். அப்போது சந்திரன் சகலகிரகங்களோடும் குளிர்ந்த காந்தியோடும் வருவதை மேனை பார்த்துவிட்டு ஆஹா! இவன் தான் சிவன்! இவனே என் மருமகனானால் என் குலம் முழுவதும் குளிர்ந்து பவித்திரமாகுமே!

இத்தகைய தேஜசுடையவன் என் மருமகனாயின் என் புதல்வி பார்வதியின் பாக்கியத்தை எத்தனையாண்டுகள் சொன்னாலும் கூற முடியுமா? என்றாள். அதற்கு நாரதர்., இவனும் சிவன் அல்ல. இவன் சந்திரன் என்றார். அப்போது பிருமதேவர் சகல பிரம்ம ரிஷிகளோடும் தேஜோராசியாக வருவதை மேனை உற்றுப் பார்த்துவிட்டு ஆகா அவனாவது சிவனாவானோ ஆகானோ? என்றும் குழம்பினாள். மகாவிஷ்ணு மேகவர்ணராய் சதுர்புஜ பீதாம் பரதாரயாயும் ஸ்ரீவத்ச சங்கு சக்கர கிரீடம் முதலிய ஆபரண அலங்காரராகவும் கோடி மன்மதர்களின் பேரழகோடும், தாமரை போன்ற கவர்ச்சிகரமான கண்களோடும் பக்தர்கள் புடைசூழ கருட வாகனத்தில் வருவதைக் கண்டு இவனே சிவன் நான் தன்யளானேன் என்று மேனை குதூகலம் பொங்க ஆனால் நாரதரோ இவரும் சிவபெருமான் அல்ல, இவரைக் காட்டிலும் சிறந்தவர் சிவபெருமான் அச்சிவ பெருமானின் அழகை என்னால் வருணிக்கவே முடியாது என்றார். ஒரு குறும்புச் சிரிப்போடு அப்போது பிருகு முதலிய முனிவர்களும் கங்கை முதலிய நதிகளும் சீடர்களும் இஷ்டகாமியங்களைக் கொடுக்கும் கற்பக விருட்சம் காமதேனு முதலியனவும் புடைசூழ அவர்கள் மத்தியில் பிருகஸ்பதி முனிவர் வருவதைக் கண்ட மேனை இவனே சங்கரன் என்றாள். அதற்கு நாரதர் இவரைக் காட்டிலும் சிறந்தவரும் நிர்குணருமான சிவபெருமான் வருவார் என்றார் அதற்கு மேனை? மூவுலத்திலுள்ளவர்களையும் கண்டேன். அவர்களில் ஒருவருமே சிவனல்லவென்றால் அந்த மாப்பிள்ளை எப்படியிருப்பாரோ? என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே  கீழே ஊர்வலத்தில் சிவபெருமான் வந்தார். அவரை மேனைக்கு நாரதர் சுட்டிக்காட்டி மேனையே இவரே சிவபெருமான் என்றார் மேனையும் மிகவும் ஆவலோடு சிவபெருமானைப் பார்த்தாள். அப்போது அவரோடு வாழு ரூபமான சேனைகள் மர்ப சப்தத்துடன் வந்தார்கள் நாரதர் மேனையை நோக்கி  இவர்கள் அவரது சேனைகள் இன்னும் அவரது சேனைகள் வரக்கூடும் என்றார்.

அதே சமயத்தில் பூதப்ரேத பைசாசங்கள் திரும்பிய முகமுடையவர்கள் வேடிக்கையான விகட உருவமுடையவர்கள் பயங்கர கரிய நிறத்தார், நொண்டிகள் ரோமமுடையோர் தண்டதர, பாசபாணிகள் விருத்த வாகனம் டமருக கல்ல வாத்தியக்காரர், கொம்புதாரை ஊதுவோர் முதலியவர்கள் கணக்கில்லாது வருஞ்சேனையைக் கண்டு மேனை பயந்தாள். அத்தகையவர்களுக்கு இடையே நிர்குணராயும் ஐந்து திருமுகமும் பத்து கரங்களும் மூன்று கண்களும், விபூதிப் பூச்சும் சடைமுடியும் சந்திரசேகரமும் கபால மாலிகாபரணமும் பெரும் புலித்தோல் ஆடையும் பிநாகம் என்னும் வில்லும் கங்காளமும் சங்கபூஷணமும் உடையவராய்ச் சிவபெருமான் எருது வாகனத்தின் மேல் யானைத்தோல் விரித்து அதன் மீது அமர்ந்து நித்திரை செய்து உடலசைவான் போல இருந்தார். நாரதர் உடனே குறுஞ்சிரிப்போடு தன் அருகே இருந்த மேனையைக் கூப்பிட்டு மேனா! அதோ அவரே சிவபெருமான் என்று சுட்டிக் காட்டினார். உடனே மேனை திடுக்கிட்டு சூறாவளிக் காற்றில் அடிபட்ட கொடிபோலத் துக்கம் அடைந்து ஆ பார்வதி என்ன காரியம் செய்து விட்டாய் ஏ துன்மார்க்கி என்று சொல்லி கீழே விழுத்து மூர்ச்சையடைந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்திருந்தாள்.

16. மேனையின் மனக்குமுறல்

முனிவர்களே! மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடன் ராணி மேனை ஆத்திரத்தோடு நாரதரையும் தன் மகள் பார்வதியையும் இகழ்ந்து பேசத் தொடங்கினாள். அவள் நாரதரைப் பார்த்து நாரதரே! நீர் தானே எங்கள் மன்னவரிடம் சென்று உன் மகளைச் சிவபெருமான் வரிக்கப் போகிறார் என்று சொல்லி சிவபெருமான் யோகத்திலிருக்கும் போது, பணிவிடை செய்யச் செய்து எங்களை மோசஞ் செய்தீர். நாங்களும் உம் வார்த்தையை நம்பி மோசம் போனோம் அருந்தவ முனிவர்களாலும் செய்ய முடியாத கடுந்தவத்தைப் பார்வதியும் செய்து முடித்தாள். அத்தகைய தவத்துக்கு இத்தகைய பயனாயா அவையச் செய்தீர் நான் என்ன செய்வேன்? எங்கு போவேன் கையில் விளக்கை ஏந்திக் கிணற்றில் விழுந்தவளானேன்! உமக்கு என்ன இதனால் கெட்டது? எங்களுக்குத் தானே எல்லாமே வீணாயிற்று? பார்வதியை திருமணம் பேச வந்த அந்த சப்தரிஷிகள் இப்போது எங்கே போனார்கள்? அவர்களைக் கண்டால் தாடி மீசைகளைப் பிய்த்து விடுவேன் அவர்களுடன் வந்த அந்த அருந்ததியும் மிகக் கொடியவள். அவள் சொன்ன வார்த்தையாலும் என் புத்திரியின் சொந்த விருப்பத்தாலும் அல்லவா இப்படியாயிற்று? என் மகள் பார்வதிக்கு இந்தக்கல்யணத்தை முடிவு செய்தது பொன்னைவிட்டு கருகமணியைக் கைக்கொண்டது போலாயிற்றே? அன்னப் பறவைக்கு பதிலாக காக்கையைப் பொற்கூட்டில் குடியேற்றியது போலாயிற்றே? கங்கை நதியின் நன்னீரைக் குடிப்பதை விட்டுக் கிணற்று நீரைக் குடித்தது போலாயிற்றே? சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினிப் பூச்சியின் ஒளியைக் கண்டு மகிழ்ந்தது போலாயிற்றே? சிங்கத்தை விட்டு சிறு நரியைபணிந்தது போலாயிற்றே? அரிசியை விட்டு உமியைத் தின்றது போலாயிற்றே யாக விபூதியை விட்டு மயான சாம்பலை அணிந்தது போலாயிற்றே! சகல தேவர்களையும் விட்டுவிட்டு இந்த விகாரரூபியான சிவனையடைவதற்குத் தானா என் குமாரி மிகக் கடுமையான தவம் செய்தாள்? நாரதரே நீரும் உமது புத்தியும் உமது கலகமும் கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பார்வதியால் எங்கள் குலம், ஒழுக்கம் திறமையாவுமே வியர்த்தமாகப் போயிற்றே இவற்றை யெல்லாம் கண்ணால் காண்பதைவிட நாங்கள் இறந்தொழிவதே மேல் இனி என் கணவரின்  முகத்தில் எப்படி நான் விழிப்பேன்? என் வீட்டிற்கு அந்த சப்தரிஷிகள் ஏன் வர வேண்டும்? எல்லோருமாகச் சேர்ந்து என் குலத்தைக் கெடுத்துவிட்டார்களே! நான் மலடியாக இருந்திருந்தாலும் நன்றாக இருந்திருக்குமே?அல்லது இறந்து ஒழிந்தாலும் நன்றாக இருந்திருக்குமே? என்று பலவாறும் கவலையோடு ஓலமிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது பிரும்மதேவர் அங்கு வந்து சேர்ந்தார்.

அவர் வந்த சமயத்தில் நாரதமுனிவர் மேனையே நோக்கி மேனா நீ சிவபெருமானின் இயற்கையான வடிவத்தை அறியவில்லை? என்றார். அதற்கு நாரதரை சீறிப்பார்த்து ஐயா, துஷ்டரே நீர் கொஞ்சம் தொலைவிலேயே இரும். நீர் எனக்கு ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று குமுறினாள். அப்போது அங்கு வந்த பிரும்ம தேவர் மேனையை நோக்கி மேனா! நான் சொல்லும் வார்த்தையைக் கேள். சங்கரபகவானே உலகங்களைச் சிருஷ்டிப்பவரும் ரக்ஷிப்பவரும் சங்கரிப்பவருமாக இருக்கிறார். நீ அவரது திவ்விய சவுந்தர்யத்தை அறியாமல் வீணாகத் துக்கப்படுகிறாய்? என்றார். அதற்கு மேனை, சுவாமி! நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என்ன காரணத்துக்காக எங்கள் குலத்தை வீணாக்க முயற்சிக்கிறீர்கள்? என் அருமை குமாரி பார்வதியின் அழகையெல்லாம் அவலமாக்கி அவளை இவ்வகையான விகார ஆண்டிக்கு திருமணஞ் செய்து கொடுப்பதைவிட என் குமாரியை கொன்றுவிடுவது நல்லது. நீங்கள் அவளைச் சிவனுக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படிச் சொல்லக் கூடாது என்றாள். அதற்குள் இந்திரன் முதலான திக்குப் பாலகர்கள் மேனையிடம் வந்து, தாயே சர்வ உத்தமரும் சகல துக்கத்தைப் போக்கடிப்பவருமன சிவபெருமான் உன் மகள் பார்வதிக்குத் தரிசனம் கொடுத்தருளினார். அத்தகைய தரிசனம் வேறு ஒருவருக்கும் கிடைக்கத்தக்கது அல்ல என்றார்கள். அதைக் கேட்கச் சகிக்காத மேனை இந்த வார்த்தையை நீங்களும் என்னிடம் சொல்லாதீர்கள். இப்படிச் சொல்வதைவிட என்னைக் கொன்றுவிடுங்கள் மகா அவலட்சணமான அந்தச் சிவனுக்குப் பேரழகியான என் பெண்ணைக் கொடுக்க மாட்டேன்.

அப்போது சப்தரிஷிகள் மேனையிடம் வந்து மேனையே! நாங்கள் கூறியது பொய்யல்ல வீணானதுமல்ல சிவதரிசனம் விசேஷ பயன்களைக் கொடுக்கக் கூடியது, சிவனார் உங்களிடம் கன்னிகாதானம் பெறுவதற்கு உத்தம பாத்திரராகவே உங்கள் மனைக்கு எழுந்தருளியிருக்கிறார். அவர் உங்கள் மனைக்கு வந்ததைவிட உங்களுக்குச் சுபத்தை உண்டு பண்ணக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று எடுத்துரைத்தார்கள். அவர்களது வாக்கியத்தையும் மேனை புறக்கணித்து நான் ஆயுதங் கொண்டாவது என் பெண்ணைக் கொன்று எறிவேனேயொழிய அந்தச் சாம்பல்பூச்சு சங்கரனுக்கு என் மகளை ஒருபோதும் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பர்த்தாவான பர்வதராஜன் அங்கு வந்தான். மேனை துக்கத்தோடும் கோபத்தோடும் பேசுவதை அவன் கேட்டதும், பிரியமேனையே! நமது அரண்மனைக்கு யார் யார் வந்திருக்கிறார்கள்? நீ இந்தச் சமயத்தில் துக்கப்படுவானேன்? நீ ஏன் சப்தரிஷிகளை நிந்திக்க வேண்டும்? சர்வலோகங்களையும் காப்பவர் சிவபெருமான். நிக்கிரகானுக்கிரகம் செய்பவரும் அவரே தான் பூஜிக்கத்தக்கப் புனிதரும் அவர்தான். இதையெல்லாம் நான் அறிந்து கொண்டேன் ஆகையால் நீ துயரப்படாதே விவாக காரியம் இனிது நடக்க வேண்டும்! என்றான். ராணிமேனை, மேன்மேலும் ஆத்திரப்பட்டு உணர்ச்சியால் துடித்து பர்வதராஜனை நோக்கி, நாதா நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அவ்வாறே செய்ய வேண்டும். அதாவது என்மகள் பார்வதியின் கழுத்தில் ஒரு பெரிய பாறையைக் கட்டி, அவளைச் சமுத்திரத்தில் விட்டுவிட வேண்டும் என்று சொன்னாள்.

அப்போது அவள் குமாரி பார்வதியே அங்கே வந்து அம்மா! உனக்கு இந்த விபரீதபுத்தி, இந்தப் புத்தி உனக்கு எப்படி வந்தது? தர்மத்தையே முக்கியமாகக் கொண்ட நீ எவ்வாறு தர்மத்தைக் கைவிட்டாய்; சாம்பமூர்த்தி சர்வோத்தமர் பிரம்மா விஷ்ணு ருத்ராதியருக்குக் காரணமானவர். எல்லோருக்கும் நலமும் சுகமும் நல்குபவர் நிக்கிரக அனுக்கிரக சமர்த்தர் சகலமும் தன்னிடத்தில் கொண்டவர் சர்வலோகங்களையும் படைத்துக் காப்பவர்? பிறப்பு இறப்பு பந்தக்கட்டு இல்லாதவர் அதனாலேயே தேவர்கள் எல்லோரும் சேவகர்கள் போல இங்கு அவருடன் வந்திருக்கிறார்கள் அவர்களையெல்லாம் நீ பார்க்கவில்லையா? நீ எனக்கு நன்மை செய்பவளானால் சிவபெருமானைவிடச் சிறந்தவராக யார் இருக்கிறார் என்று எனக்கு சொல்ல வேண்டும் செய்த திருமணமுயற்சியைப் பயனுறச் செய். உலகங்களுக்கெல்லாம் சர்வ சுகங்களையும் பொழிகிற சங்கரபகவானுக்கு என்னை நீ கன்னிகாதானமாகக் கொடுத்து நமது குலத்தையும் வீட்டையும் புனிதமடையச் செய். கவலைப்படாதே, நீ என்னைச் சிவபெருமானுக்கு கொடுக்காவிட்டால் நான் இனிவேறு ஒருவனையும் திருமணஞ் செய்து கொள்ளமாட்டேன். சிங்கத்திற்கு உரியபொருளை சிறு நரி அடையமுடியாது. நானோ, என் மனம், வாக்கு காயங்களால் சுயமாகச் சிவபெருமானையே எனது நாயகனாக வரித்தேன். வரித்து விட்டேன் இனி உனக்கு இஷ்டம் எதுவோ அதைச் செய்து கொள்ளலாம் என்று கூறினாள். பார்வதியின் வார்த்தைகளைக் கேட்டதும் மேனை மிகவும் கோபத்துடன் அடி பெண்ணே உன்னைப் பெற்றவளான என் வார்த்தையை எதிர்த்துப் பேசும் அளவுக்கு நீ வல்லவளாகி விட்டாயோ? இரு உனக்கு விஷமூட்டுகிறேன். அல்லது உன்னைத் தூக்கிக் கிணற்றில் போடுகிறேன். அல்லது உன்னைக்கத்தியால் வெட்டி விடுகிறேன். இல்லையென்றால் நானாவது என் உயிரை மாய்த்துக்கொண்டு விடுகிறேன். என்று பிரலாபித்துப் பல விதமாகத் தனக்குத் தானே யோசித்து தனக்குத் தானே பேசிக் கொள்ளலானாள்.

ஆ! என் மகளுக்கு மணமகனாக வந்த அந்த சிவனைப்பற்றி விசாரித்தால் அவனுக்குத் தாய், தந்தை, உறவினர், உடன் பிறந்தோர் தாயாதியர் நல்ல நடத்தை சாதுரியம் நல்லவீடு, நல்லஆடை, நல்ல அலங்காரம் யோக்கியமான நண்பர்கள் நல்ல வாகனம் வாலிப வயது செல்வம் வித்தை முதலியவற்றில் ஏதாவது இருக்கிறதா? அவனிடம் எதைக் கண்டு என் மகள் மையல்கொண்டாள்? என் மகளை அருகதையற்ற அந்த சிவனுக்கு எப்படிக் கொடுப்பது? என்ன செய்வேன்? என்று புலன்பினாள். அப்போது மகாவிஷ்ணு அலங்காரப் புன்முறுவலோடு அங்கு வந்து அவளை பார்த்து, மேனா பிதுரர்களுக்கு மாயை புத்திரி நீ, பிரம வம்சத்தில் பிறந்தவள் நீ, நீயே மஹாபாக்கியவதி நீயே புண்ணியவதி, ஹிமவானின் மனைவியான உன் பாக்கியத்தை நான் என்னவென்று சொல்வேன்? தர்மத்திற்கே ஆதாரபூதமான நீ தர்மத்தை ஏன் கைவிட வேண்டும் நானும் பிரமனும் மற்ற தேவர்களும் முனிவர்களும் பயனற்ற காரியத்தையா உன்னிடம் சொல்வோம்? நாங்கள் சொல்வது சுபமல்லாது இருக்குமா? அதை சுபமல்லவென்று நீயும் நினைக்கலாமா உன் மகளுக்கு மணாளனாக வந்திருக்கும் சிவபெருமானை நீ உண்மையில் அறிய மாட்டாய். அவர் நிர்க்குணரும் சகுணருமாக இருக்கிறார் அவரால் தான் சகலஜகத்துக்கும் மூலகாரணமான பிரகிருதி நிர்மாணிக்கப்பட்டது பிரகிருதியோடு விராட்புருஷன் படைக்கப்பட்டான். பிறகு பிரமா நான், ருத்திரன் ஆகிய மூவரும் முக்குண வசந்தராகப் படைக்கப்பட்டோம் பிறகுதான் வேதங்கள், தேவர்கள், காணப்படும் தாவர ஜங்கமங்களாகிய சகலஜகத்தும் படைக்கப்பட்டன. ஆகையால் அந்த முழுமுதற்கடவுளாகிய முக்கண் பெருமான் குணரூபங்களை யாரே அறியமுடியும்; நானும் பிரமனும் ஆயிரம் ஆண்டுகள் சொல்வதாயினும்; அந்தச் சிவனாரின் பெருமையைச் சொல்லி முடியாது. சத்திய சொரூபனும் ஞானரூபியும் வியாப்பயனும் வியாபாகனும் மூப்பு மரணமற்றவனும் பிரபுவும் உபாசிப்பவர்களுக்கு அருகிலேயே இருப்பவனும் பிரமன், ருத்ரன், தேவர், சூரியன், சந்திரன் கிரகங்கள் மலைகள், நதிகள் குபேரன் நான் ஆகிய யாவும் யாவரும் அந்தச்சிவபிரானின் சிருஷ்டியே! ஒரு சிறு விதையிலிருந்து ஒரு பெரியமரம் தோன்றி கிளைகள் கொம்புகள் இலைகள் முதலியன உண்டாவது போல ஆதிப்பரம் பொருளான அந்தச் சிவபெருமானிடமிருந்தே சகல பிரபஞ்சங்களும் தோன்றின. ஜகத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் சிவ பெருமானே இருப்பவர். சிவமே ஜகத், ஜகமே சிவம் நானும் சிவம் நீயும் சிவம் சிவத்தைவிட இரண்டாவது பொருள் கிடையாது, அவ்வாறு இரண்டாவது பொருள் ஒன்று இருக்கும் என்று நினைப்பது அஞ்ஞானமே ஆகும் காரியமான ஜகத்தில் காரணமான சிவபெருமானே வியாபித்திருக்கிறார் ஆகையால் காரியம் ஜகம் என்றும் காரணம் சிவம் என்றும் அறிந்துகொள்ள அறியாமையால் காரணகாரியங்களெல்லாம் பேதமாகக்காணப்படுமே தவிர ஞானியருக்குப் பேதமில்லை. சகல ஜகத்தும் சிவமயமே ஆகும் என்று உய்த்துரைத்தார்.

17. பார்வதி கல்யாணம்

ஸ்ரீ மகா விஷ்ணு மலையரசி மேனையைப் பார்த்து மேலும் தொடர்ந்து நல்லுரை கூறலானார். விளக்குகின்ற அனைத்தும் சிவபெருமானே என்று வேத சிவாகமங்கள் கூறுகின்றன. குற்றியை மனிதனாகவும் கயிற்றைப் பாம்பாகவும் சிப்பியை வெள்ளியாகவும் சந்தேகித்துப் பிறகு தான் மனிதனாகக் கருதியது மனிதனல்ல குற்றியென்றும் பாம்பாகப் பயந்தது பாம்பல்ல கயிறு என்றும் வெள்ளியாக மயங்கியது வெள்ளியல்ல வெறும் சிப்பி என்றும் தெரியும். உண்மையைக் கண்டறிந்த பிறகு சந்தேகம் தெளியும் அதுபோல மனத்திடமுற்று இவ்வுலகம் முழுமையும் சிவனுக்கு இரண்டாவதான தோற்றம் என்று கொண்டறிந்து அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெற்று பிறகே இவ்வுலகம் கூட சிவனுக்கு இரண்டாவது தோற்றமல்ல இவையாவும் முக்காலும் சிவனே சிவமயமானதே என்கிற உண்மை தெளிவாகும். மேனா மேலும் உதாரணமாக உனக்கு மேலும் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். வேஷம் தரித்துக் கொள்ளுகிற வேடதாரி பலப்பல வேஷங்களில் காட்சியளித்தாலும் அவன் வேஷங்களில் தான் மாறுகிறதேயன்றி ஆண் ஒருவனாகவே இருக்கிறான். அதாவது அவன் அவனாகவே இருக்கிறான். வேஷம் தரித்தவனைப் பார்த்து உண்மையை உணராதவன் அவனை நம்புகிறான் உணர்ந்தவனோ அவனைக் கண்டு நகைக்கிறான் இதைப் போலத்தான் உண்மை தெரியாத அஞ்ஞானி இவ்வுலகம் சிவனுக்கு இரண்டாவது தோற்றம் என்று கருதுகிறான். ஞானியே காணுகின்ற அனைத்தும் காணாதவையான அனைத்தும் யாவும் சிவனே என்ற மெய்யறிவைக் கண்டறிகிறேன். மேலும் ஒரு திருஷ்டாந்தத்தைச் சொல்லுகிறேன் கேள். மனிதன் ஆடை ஆபரணங்களை உடுத்திக் கொள்கிறான். அதை வகை வகையாக உடுக்கிறான் அப்போது அவனும் வகை வகையான தோற்றங்களைப் பெறுகிறான் அவை வகை வகையான அம்சங்களைப் பெறுகின்றன. ஆனால் அவற்றை அணிந்தவன் அப்படியே தான் இருக்கிறான். அது போலத்தான் சிவஸ்வரூபமானது மற்றொரு அம்சத்தில் கலந்த பொழுது நானாத்மகமாகத் தோன்றுமேயன்றி விசாரிக்கும் போது அனைத்தும் சிவனேயாகும் தான் எனது என்னும் தத்போதம் இருக்கும் வரை ஒருவனிடத்தில் மந்தனம் இருக்கும் அகங்காரம் அவனை விட்டு விலகிய பிறகுதான் அவனும் சிவனாக இருப்பதை உணர்கிறான்.

ஸ்படிகமணியானது செம்பருத்திப் புஷ்ப சையோகத்தால் (கலப்பால்) வேறு நிறமாகக் காணப்படுகிறது அல்லவா. இப்படியே பிரகிருதி சம்பந்தத்தால் சிவபெருமானிடம் அநேகத்துவம் தோன்றுகிறது. பிரகிருதியைவிட சிறந்த பரிபூரணப் பிரமமாகிய சிவ தத்துவார்த்தத்தை நாங்களே இன்னும் அறியோம். ஆகையால் நீ துக்கத்தை விட்டுச் சிவபெருமானுக்குச் சேவை செய்! என்று சிவபெருமானிடத்தில் பக்தியுண்டாகும்படி திருமால் போதித்தார். அந்தச் சமயத்தில் நாரத முனிவர் குறு நகையோடு சிவபெருமானிடம் சென்று மணமகனாரே! நாங்கள் ஒவ்வொருவரும் உம் விஷயமாக உம் மாமியார் மேனையிடம் பலவிதமாகவும் இகழ்ந்து ஏளனம் செய்யப்பட்டோம். என்று சொல்வதற்கு முன் சிவபெருமான் பக்தவாத்ஸல்லியத்தால் கண்டோர் மோகிக்கத்தக்க திவ்விய திருவடிவத்தோடு தோற்றமளித்தார் நாரதர் மீண்டும் மேனையை நோக்கி அம்மா உலகமெல்லாம் மோகிக்கத் தக்க பேரழகுடைய உன் மருமகனை இப்போது பார் என்றார் அப்போது சிவபெருமான் கோடி சூரியர்களுக்குச் சமானமான காந்தியும் குளிர்ந்த பார்வையும் கொவ்வை வாயில் குமிழ் சிரிப்பும் அழகான அணிமணிகளும் அதி உன்னதமான கிரீடங்களும் விலையுயர்ந்த வஸ்திரங்களும் தரித்து விளங்குவதை மேனை உற்றுக் கவனித்தாள். சகல தேவசேவையோடு சூரியன் குடை பிடிக்கவும் சந்திரன் விசிறவும் அணிமாதி அஷ்டமாசித்திகளும் நடிக்கவும் கங்காதி கன்னியர்கள் சாமரையிரட்டவும், பிரமன், விஷ்ணு, ருத்திரர் முதலான தேவர்கள் ஜய ஜயவென ஜயகோஷங்கள் முழங்கவும் மாபெரும் முனிவர்களெல்லாம் பலவாறாக துதித்துக் கொண்டு கொடிகள் பிடித்துலாவவும், விச்சுவாவசு முதலிய கந்தர்வர்கள் அரம்பை மேனகை தேவ தாசிகளுடன் பலவிதமான வேஷங்களும் பூண்டு சங்கீதகானஞ் செய்யவும் சிவகணங்கள் யாவரும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் வேத-அங்க ஸ்ருதி-ஸ்மிருதிகள் வடிவம் பெற்று முன்னால் நடக்கவும் சமுத்திரங்களும் நதிகளும் அநேகமாக அலங்கரிக்கப்பட்டு முன்னே உலாவவும் மகாப்பிரகாசத்துடன் சிவபெருமான் விளங்கிய திருக்கோலத்தை வர்ணிக்க யாருக்கும் ஆற்றல் இராது அப்படிப்பட்ட திவ்விய மங்களவடிவாக விளங்குஞ் சிவபெருமானைப் பார்த்து ராணி மேனை சித்திரப் பதுமைப் போல அசைவற்று ஒன்றும் தோன்றாதிருந்து சிறிது நேரத்தில் மனந்தெளிந்து தேவர்கள் யாவருங் கூறியபடியே இவர் அவ்வகையான சரீரத்தையேயடைந்திருக்கின்றார்.

இவரை மணாளனாக வரித்த என் மகள் பார்வதி மகா புண்ணியவதி அதனால் தான் இத்தகைய ஜகன் மோகன உருவம் படைத்த சிவனாரைக் கணவனாக அடைந்தாள் என்று கருதி அவரது அவயவங்கள் ஒவ்வொன்றையும் சிறிது உற்றுப்பார்த்து மிகவும் சந்தோஷ மடைந்து மனதில் நாணமுற்று இன்னுங் காணக் கூடாதவளாயிருந்தாள். தேவ கணங்களோடு சிவபெருமான் சர்வாலங்கார பூஷணராய்ப் பர்வதராஜன் மாளிகைக்கு வந்தார் அப்போது பிருமாவும் மகாவிஷ்ணுவும் இரு பக்கத்திலும் சூழ இடையே வரும் சிவபெருமானைக் கண்ட மேனை அவரைப் பூஜித்தாள். மணநாயகன் வருகையைக் காட்டும் பொருட்டு எழுந்த பதினெட்டு வகையான மேளவாத்தியங்களின் ஒலியைக் கேட்டு அந்த நகரத்திலிருந்த மங்கையர் அனைவரும் மணநாயகனைக் காணும் ஆர்வப் பெருக்காலும் ஆசையாலும் அவரவர் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டு அப்படியே ஓடி வந்தார்கள் அதாவது நீராடிய பிறகு உடம்பில் வாசனைத் தேய்த்துக்கொண்டிருந்த கோமாளாங்கியும் கணவன் பூஜை செய்யும்போது அவனுக்கு விசிறிக் கொண்டிருந்த பத்தினியும், குழந்தை பால் குடித்துக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தையையும்  விட்டு விட்டு ஓடி வந்த தாயும், மெல்லிய இடையில் பொன் ஒட்டியாணம் அணிய முயன்று அதை அப்படியே கையிலேந்திக் கொண்டு வந்த காரிகையும் கண்களில் மைதீட்டிக் கொண்டிருந்த கன்னிகை ஒரு கண்ணில் மைத்தீட்டியும் மறு கண்ணில் தீட்டாமலும் கையில் சலாகையோடும் கண்ணாடி பார்த்திருந்த கையில் ஏந்தியக் கண்ணாடியோடும், கணவனுக்கும் அன்னமிடப் போனவன் அன்னப் பாத்திரத்தோடும் நீராடிய போது தன் கால்களுக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்தவள், ஒரு காலுக்கு பூசியும் ஒரு காலுக்கு பூசாமலுமாக ஓடி வந்தார்கள். இவ்வாறு அவரவரும் அவரவர் வேலைகளை அரைகுறையாக விட்டு விட்டு சர்வமங்கள வடிவமாக விளங்கும் சிவபெருமானைக் கல்யாணக் கோலத்தில் காண்பதற்காக ஓடி வந்து சர்வாங்க சுந்தர புருஷராய்த் தோன்றிய எம் பெருமானை அகல விரித்த கண்களால் அதிகமாகப் பார்த்துப் பார்த்துப் பெருவியப்பால் திறந்தவாய் திறந்தபடியும் திறந்த கண்கள் சிமிட்டாதபடியும் சித்திரப் புதுமைகளைப்போல் அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள். அவரவர் மனதும் சிவனாரோடு ஐக்கியப்பட்டன. சிவனாரின் வசீகர அழகில் யாவரும் மயங்கி நின்றார்கள் இந்த மயக்கம் நீங்க சிறிது நேரம் ஆயிற்று.

மயக்கத்திலிருந்து தெளிவுற்று எழுந்த அந்நகர மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆஹா! நம் அரசிளங்குமரி பார்வதி செய்த அருந்தவத்தால் அல்லவா இவ்வித அற்புதத் திருவுருவத்தைப் பெற்ற சாட்சாத் சிவபெருமானையே நாயகனாகப் பெறும் பாக்கியமடைந்தாள். மங்களமூர்த்தி எனும் திருநாமம் அவருக்கு அல்லவோ மிகவும் பொருத்தமானது. இத்திருப்பெயருக்குரிய மங்களமூர்த்தியைக் கண்ணாரக் கண்டவர்களுக்கு பற்பலப் புண்ணிய பயன்களெல்லாம் உண்டாகுமே! கடுந்தவம் புரிந்து இவ்வரியத் திருவுருவைக் கணவனாகப் பெற்றதாலல்லவா பார்வதியே தன்யையாயும் கிருக கிருத்யையாயும் இருக்கிறாள். பார்வதியின் தவம் பெரும் பயன் அளித்தது இச்சதிபதியை ஒன்று சேர்க்க பிரமன் செய்த முயற்சி சிறப்பானதல்லவோ? பொன்னும் இரத்தினமும் ஒன்று கூடியனாற்போல், லக்ஷ்மியும் விஷ்ணுமூர்த்தியும் மணஞ்செய்து கொண்டதுபோல, சாம்பவமூர்த்தியான சிவபெருமானைக் கணவனாகப் பெற்ற பார்வதி நல்ல சுகத்தை அனுபவிப்பாள் என்று சொல்லி கந்த புஷ்ப அக்ஷதைகளைச் சிவபெருமான் பேரில் சமர்ப்பித்தார்கள். இவர்களின் உரையாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியுற்று சிவபிரான் பர்வதராஜன் முன்னின்றழைத்துப் போக இதர பரிவாரங்களோடும் விவாகவிகையைச் சேர்ந்தார். பிருமதேவரே புரோகிதராக முன் வந்து சப்த முனிவர்கள் முதலானவருடன் சதுஷ்கோணமான திருக்கல்யாண மண்டபத்திலிருந்து அத்யா திப்ரயோகம் முதலான விவாகச் சடங்குகளை நடத்தினர். பர்வதராஜனும் ராணிமேனையும் நீராடி ஆடை ஆபரண அலங்காரங்களோடு வந்தார்கள். பர்வதராஜன் தன்னுடைய கோத்திர முறையை சாஸ்திர விதிப்படிக் கூறி சிவபெருமானுக்கு ஆவாஹநம் பாத்தியம் அர்க்கியம் பட்டாடை திலகம் மலர் மாலை பொன்னாரம் முதலானவற்றை வழங்கி வழிபட்டு வேதிகையில் மேனையுடன் அமர்ந்து அக்கினிப்பிரதிஷ்டா பனஞ்செய்தான், மங்கலப்பாடல்களைச் சுமங்கலிகள் பாட லக்ஷ்மியும் சரஸ்வதியும் பார்வதியின் தோழியராகி, பார்வதியை அந்தப் புரத்திலிருந்து கைலாகு கொடுத்து அழைத்து வந்து சிவபெருமான் அருகில் மணப்பெண்ணாக உட்கார வைத்தார்கள். பிருமதேவன் மந்திரோச்சாடனஞ் செய்ய, மேனை கரகநீர் வார்க்க ஹிமவான் சிவபெருமானுடையக் கமலப் பாதங்களை விளக்கி, அவ்வுதகத்தைத் தானும் தன் மனைவியுங் கிருதார்த்தர்களாகத் தங்கள் சிரமேற் புரோக்ஷித்துக் கொண்டும், சிறிது உட்கொண்டும் பின்பு சாக்ஷதோ தகதாரா பூர்வகமாய்ப் பார்வதியின் கையைப்பற்றிச் சிவபெருமான் திருக்கரத்தில் வைத்து என் குமாரத்தியான இப்பார்வதியைத் தேவரீருக்குச் சமர்ப்பித்தேன், என்று கன்னிகாதானம் செய்து கொடுத்தான்.

சிவபெருமான் பூரிப்படைந்து தம் திருக்கரத்தால் பார்வதியின் கழுத்தில் மாங்கல்யதாரணஞ் செய்தார். கல்யாண மண்டபத்தில் சூழ்ந்திருந்த முனிவர்கள் தேவர்கள் அனைவரும் ஆசிர்வதித்தார்கள். சுமங்கலிகள் அக்ஷதைகள் சமர்ப்பித்து வணங்கினார்கள் தேவர்கள் நறுமண கற்பக மலர்களைத் தூவ, தேவதுந்துபிகள் முழங்க, உலகங்ளெல்லாம் உற்சாகப் பரவசமடைந்தன. தம்பதிகளான பார்வதி-பரமசிவன் இருவரும் அக்கினிப் பிரதக்ஷிணம் செய்தார்கள். உமாதேவியின் திருவடியைச் சிவபெருமான் கரத்தால் தொட்டு எடுத்து வைக்க, பார்வதி அம்மிமிதித்தனள் அவர்களை நமஸ்கரித்துக் கொண்டே அவர்கள் எதிரே கற்புக்கரசி அருந்ததி வந்தாள். துருவனும் சப்த முனிவர்களும் எதிர்வந்தனர். அவர்கள் சிவபெருமானையும் பார்வதியையும் மீண்டும் சிங்காதனத்தில் வீற்று இருக்கச் செய்தார்கள். வேதாகமத் துதிகளைப்படி வேதோத்தமாக ஆசீர்வதித்தனர். பார்வதியையும் சிவபெருமானையும் நோக்கித் தாங்களே உலகத்திற்கு மாதாபிதாக்களாகப் பெற்ற நாங்களும் பெரும் புண்ணியத்தையடைந்தோம்! என்று புகழ்ந்தார்கள். கந்தர்வர் அப்ஸரசுகள் நிருத்தம் கானம் வாத்தியம் முழங்கி தானும் தனது வமிசமும் தனது இல்லறவாழ்வும் சிறப்பும் பயனும் அடைந்தது என்று பர்வதராஜன் கூறிப் பெரும் களிப்படைந்தான். அதன் பிறகு சிவபெருமானும் பார்வதியும், தாங்கள் வதூரவர் கோலம் கொண்டதையும் தம்மைப் பார்த்துப் பிறர் புகழவும் குலதேவதா பிரார்த்தனஞ் செய்து கங்கண விசர்ஜனம் முடித்து அங்கு வந்திருந்த சப்தமுனிவர்-சத்புருஷர் சகலகலா வித்யாதரர் தேவர் ஆகியோரை நோக்கி சிவபெருமான் கைகுவித்து வணங்கி அருள்பாலித்தார். ஹிமவானும் யாவரையும் பூஜித்தான் இப்பூஜாதானங்களைக் கண்டு பிரம விஷ்ணு முதலிய தேவர்கள் இது காறும் கண்டும் கேட்டும் இல்லாமையால், எதுவும் கூறமுடியாமல் அதோ முகமானார்கள். இப்படி அங்கு வந்திருந்த அனைவரும் மரியாதை பெற்று மனம் பூரித்திருந்தார்கள்.

சிவபெருமானாலும் ஹிமவானாலும் பூஜிக்கப்பட்ட தேவர்களும் முனிவர்களும் தாங்கள் நன்றாக கவுரவிக்கப்பட்டதை எண்ணி வெகுவாக உள்ளம் பூரித்திருக்கும்போது உங்கள் ஒத்துழைப்பாலும் வருகையாலும் என் பிறப்பு பிழைப்பு கிரகஸ்தாச்சிரமமும் யாவும் பயனடைந்தன என்று பர்வதராஜன் சொன்னான்.  அவனது மனைவியான மேனையோ, எனது குலம் பவித்தரமாயிற்று என் புத்திரியான பார்வதியால் நான் எல்லா புகழ்களையும் அடைந்தேன். இவளே எங்கள் புத்திரியாக எல்லா அவதரிக்காவிடில் சிவபெருமான் திருமால், பிரமதேவர், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர், கருடர் முதலிய யாவரும் இங்கு வரக் கூடுமோ? இவர்களைத்தான் நாங்கள் காணவும் கூடுமோ? நீங்கள் மகா புண்ணியர்களாகையால் நான் உங்களை முன்பு நிந்தித்துப் பேசிய நிந்தனைகளையெல்லாம் மன்னித்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதைக் கேட்டதும் தேவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்து, மேனா! நீ கிருதகிருத்தியை ஜகத்ரக்ஷகராகிய சிவபெருமானுக்குப் பார்வதியைக் கன்னிகாதானஞ் செய்த பயன் எவ்வளவு என்று நாங்கள் அளவிட்டுக் கூறுவோம்? பர்வதராஜனைப் பதியாய்ப்பெற்ற நீ பார்வதியை உன் குமாரத்தியாய் பெற்ற நீ அடைந்த புகழ், விவரிக்க முடியாததாகும் நீ எங்களை முதலில் நிந்தித்ததையெல்லாம் சுகமயமாக எண்ணுகின்றோம். உன் சுகம் பெருகட்டும்! உன் ஐஸ்வரியம் பெருகட்டும்! நாங்கள் வருகிறோம்! என்று பர்வதராஜனையும் மேனையையும் ஆசீர்வதித்து. அவர்களது நமஸ்காரத்தையும் பெற்று, புறப்பட்டார்கள்.

புதுமண தம்பதிகளாக சிவபெருமானும் பார்வதிதேவியும் தேவர்களும் புறப்பட்டு கைலையங்கிரியை நோக்கிச் சென்றார்கள். பர்வதராஜனும் மேனையும் கந்தமாதன பர்வதம் வரையில் சென்று வழிவிட்டுத் திரும்பினார்கள். அன்று முதல் பர்வதங்கள் கிருதார்த்தமாயின அரி, அயன், இந்திராதி தேவர்கள் மாமுனிவர்கள் முதலான அனைவரும் எல்லாவித வாத்தியங்களோடும் நிருத்தம் நாட்டியம் முதலிய திருவிழாக் கோலத்தோடும் திருக்கைலாச பர்வதத்தையடைந்து சிவபெருமானின் மாளிகையில் பார்வதியை கிருகப்பிரவேசஞ் செய்வித்து, சிவபெருமானே! பார்வதி தேவியுடன் சுகித்திருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்து அவரது திருவருளைப் பெற்று சிவகடாக்ஷமுற்று அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டு, அந்த விவாகமகோற்சவமகிமை பெருமைகளைப் பற்றிக் குதூகலம் பொங்கப் பொங்கப் பேசிக்கொண்டே தங்கள் தங்கள் நகரத்தையடைந்தார்கள். தேவர்களுக்குண்டான ஆனந்தத்தையும் சிவபெருமான் அநுக்ரஹித்தையும் விவரிக்க வேண்டுமானால் நூறு ஆண்டுகளானாலும் விவரிக்க முடியாது ஆகையால் சிவஞானிகளே, நீங்கள் கேட்டதைத் தட்ட முடியாமல் என் நினைவிற்பட்டதைக் கூறினேன்! நைமிசாரண்ய வாசிகளே! அந்தத் திவ்விய மங்கள மூர்த்தியான சிவபெருமானின் திருமணக்கோல மஹோத்ஸவ சரிதத்தையோ அல்லது அதில் காணும் ஒரு ஸ்லோகத்தையோ அல்லது அந்த ஸ்லோகத்தின் பொருளையோ கேட்டவர்கள் சகல சம்பத்தும் பெற்று அறியாமை நீங்கி, மெய்ஞானமும் சகல சம்பத்தும் சகல ஐஸ்வரியங்களும் கன்னியாலாபமும் பூர்ணமாகப் பெற்று விளங்குவார்கள்-இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

18. தாரகாசுரன் வதையும் திரிபுரத் தோற்றமும்

பார்வதி கல்யாண வைபவத்தைக் கேட்டுப் பரவசப்பட்டிருந்த நைமிசாரண்யவாசிகள் சூதபுராணிகரை நோக்கி, மகா ஞானியே! மாபெரும் புண்ணிய சீலரே! சிவபெருமான் பார்வதி தேவியாரை மணஞ்செய்த பிறகு புத்திரனைப் பெற்று, தாரகாசுரனை எப்படி வதைத்தார் என்பதையும் கேட்க வேண்டும். என்று நாங்கள் மிகவும் ஆவல் கொண்டிருப்பதால் அதையும் விபரமாகக் கூறியருள வேண்டும் என்று கேட்டார்கள் சூதமாமுனிவர் சொல்லத் தொடங்கினார்.

நைமிசாரணிய வாசிகளே உமையளான பார்வதிதேவி யாரைச் சிவபெருமான் திருமணஞ் செய்துகொண்ட பிறகு பார்வதிதேவியோடு அந்தப்புரமடைந்து வெகுகாலம் வரைக்கூடி மகிழ்ந்து லீலாவினோதங்கள் புரிந்து கொண்டேயிருந்தார்கள். தாரகாசுரனால் மிகவும் தொல்லைகளுக்குப் பாத்திரமாகித் தாரகாசுரவதத்திற்கு எப்போது சிவகுமாரன் உற்பத்தியாவானோ என்று ஏங்கி கிடந்த தேவர்களோ தங்கள் வேதனைகளுக்கு விமோசனம் தேடவேண்டி துடிதுடித்தார்கள். ஆனால் அந்தப் புரத்திலுள்ள தேவியோடு கூடி மகிழ்ந்து கொண்டேயிருக்கும் சிவபெருமானைக் கண்டு விண்ணப்பஞ்செய்ய சந்தர்ப்பம் வாய்க்காததைக் கருதிப் பெருத் துயரத்திலாழ்ந்தார்கள். அநேக வருஷங்கள் கழித்து தங்களைத் தாங்களே நிந்தனை செய்து கொண்டு தாரகாசுரனின் கொடுமைக்கு எப்படியும் ஒரு முடிவு கண்டாக வேண்டுமென்று தீவிர எண்ணங் கொண்டு, அக்கினி பகவானை அணுகி அக்கினி தேவனே! சிவபெருமான் பார்வதி தேவியாரை அணுகி தாரகனை சம்ஹாரம் செய்ய இன்னும் புத்திரோற்பத்தி செய்யவில்லையே நீர் எங்களிலும் சிறந்தவராதலால் எங்கள் கவலையைச் சிவபெருமானிடம் சொல்லி தாரகனை வதைக்க வழி செய்யும்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள். தேவர்கள் வேண்டுகோளைத் தாமதப்படுத்த மனமில்லாத அக்கினித்தேவன் உடனே ஒரு புறா வடிவமெடுத்து சிவபெருமான் லீலா விநோதத்தில் மூழ்கியிருந்த அந்தப்புரத்தினுள் புகுந்து சென்றான்! அப்போது சர்வாந்தியாமியான சங்கரர் அந்த புறா வடிவத்தை கண்டு, யாரடா அவன் கபோதவடிவோடு வந்திருப்பவன்? என் வீரியத்தை இவனே தாங்கட்டும் என்று கூறி வீரியத்தை விட புறாவடிவிலிருந்த அக்கினி தேவன் அவ் வீரியத்தை வாயில் கவ்விக்கொண்டு பறந்து சென்றான். ஆனால் சிவனாரின் வீரிய வெப்பத்தைத் தொடர்ந்து தாங்கிப் பறக்க வலுவில்லாமல் போகவே கங்கா நதியில் விட்டு விட்டான். கங்காநதியும் அதைத் தாங்க முடியாமல் அதைத் தருப்பைப் புல்லில் விட்டது. அந்தருப்பைப் புல்லில் விடப்பட்ட வீரியத்திலிருந்து அதிசுந்தரத் தோற்றமாய் கண்டதும் சகல சுகங்களையும் கொடுக்கத் தக்க வன்மையும் உடையவராய்க் குமார ரூபத்தில் திருமுருகன் தோன்றினார். அப்போது நீராட வந்த ஆறு இராஜ கன்னியர்கள் அக்குழந்தையைக் கண்டு என் குழந்தை இது! என் குழந்தை இது என்று ஒவ்வொருவரும் கூறி, அக்குழந்தைக்குப் பால் கொடுத்தார்கள். அப்போது குமாரக்கடவுளான முருகப்பெருமான் ஆறுமுகத்தோடு ஆறு இராஜ கன்னியரிடமும் பால்பருகினார். இதனால் தான், முருகக் கடவுளுக்கு ஷாண்மாதுரன்(அறுவர் புதல்வன்) என்றும் ஆறுமுகன் என்றும் பெயர் வந்தது.

மதியோயம் மதீயஸ்ச வதந்த்யஸ்ச பரஸ்பரம்
ஸம்பாத்ய ஷண்முகா நீஹ பீதஸ்தந்யம் ஸ்வயம்தநா
ஷண்மாதுரஸ் ததாநாம ப்ரஸித்தந்து மஹாத்மந.

பார்வதி மைந்தன் அக்கினி புத்திரன், ஸ்கந்தன் கங்கா புத்திரன், சரவணபவன் ஷாண்மாதுரன் என்ற பலப்பலத் திருநாமங்களைக் காரணங்களோடு பெற்ற சுப்ரமணியரிடம் ஆறுகார்த்திகைப் பெண்களும் அதிக பாசம் கொண்டவர்களாய். அவரைப் புத்திரராகப் பாவித்து அருமையாக வளர்த்து வந்தார்கள். முருகன் தோன்றியதையும் அவர் கன்னியர் அறுவரால் போஷிக்கப்பட்டு வருவதையும் நாரத முனிவர் தேவர்களுக்கு அறிவித்தார். இந்தச் சங்கதியைக் கேட்டதால் சந்தோஷங்கொண்ட தேவர்கள் யாவரும் சிவபெருமானிடம் கட்டளையைப் பெற்று சுப்பிரமணியரையே தங்கள் சேனாதிபதியாகக் கொண்டு தாரகாசுரன் மீது படையெடுத்துச் சென்று போர் முரசு கொட்டி அவ்வசுரனின் தலைநகரான சோணிதபுரத்தையடைந்து பத்து தினங்களாகப் பயங்கர யுத்தஞ்செய்து குமாரக்கடவுளான ஸ்ரீசுப்ரமணியரால் தாரகாசுரனைக் கொன்று வெற்றி பெற்றார்கள். அப்போரிலிருந்த அசுர சேனையில் ஓடிப்போனவர் தவிர மற்றவர்கள் மடிந்தார்கள். சோணிதபுரத்து யுத்தம் தீயோரை வதைத்து-நல்லோரை வாழச்செய்து உலகத்திற் கெல்லாம் நலம் ஊட்டியது தேவர்களும் முனிவர்களும் தாரகாசுரனை வதைத்து ஜெயங்கொண்ட சுப்பிரமணியரோடு சிவ சன்னதியையடைந்து சிவபெருமானை வணங்கி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேவ தேவா! மகாதேவர் விஸ்வேஸ்வரா! பராத்பரா! பரா! வரதா, பவா புவனா அநந்த பாலா பூதநாதா சம்ஹர்த்தா கங்காதரா திரியம்பகா திரிசூலதாரி கபர்த்தி, பரமாத்மா தண்டதரா, வேதமந்திர பிரதாநா சிருஷ்டி ஸ்திதி சங்கார நாதா! அரூபா, ஸ்வரூபா நீலகண்டா விபூதிதாரி சகல பூதா பர்வதங்களில் மேருவே நக்ஷத்திரங்களில் சந்திரனே மகரிஷிகளில் வசிஷ்டரே! சகலவேதங்களிலும் ஓங்கார ரூபரே! ஸ்வாமி! சம்சார பந்த துக்கத்திலிருக்கும் எங்களைக் கரையேற்றிக் காப்பவர் நீரே மஹாப்பிரபு! தங்களுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டிய சேவை எதுவும் உண்டோ உம் கட்டளை எதுவோ? என்று வேண்டி நின்றார்கள். அவர்களின் துதி மந்திரங்களைக் கேட்டு மகேஸ்வரர் மகிழ்ந்து. அமரர்களே! அருமுனிவர்களே! உங்களுக்கு எந்தத் தருணத்தில் துன்பம் வந்தாலும் அத்தருணமே அதைத் துடைத்து உங்களைக் காப்போம் நீங்கள் எப்பொழுதும் எம்மை நினைத்து வணங்கி வாருங்கள் என்று கருணைக் கனிவோடு கண்ணோக்கு செலுத்தினார். அனைவரும் அப்படியே செய்கிறோம் என்று கூறி, அவரைப் பணிந்து விடை பெற்றுச் சென்று அவரவர் இருப்பிடஞ் சேர்ந்து எவ்விதமனக் குறையுமின்றி எப்போதும் சிவபூஜை செய்து கொண்டு வாழ்ந்திருந்தார்கள் இவ்வாறு சூதமா முனிவர் சொன்னார்.

நைமிசாரண்ய வாசிகளாகிய முனிவர்கள் சூதரே! பூஜ்யரே தாரகாசுர வதை நடந்த பிறகு, நிகழ்ந்த சம்பவங்களையும் எங்களுக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். சூதமாமுனிவரும் உற்சாகத்தோடு சொல்லத் தொடங்கினார். தாரன் பெற்ற குமாரனாகிய தாரகாசுரனை முருகக் கடவுள் போர் முனையில் கொன்றொழித்த பிறகு, தாரகன் புதல்வர்களாகிய வித்யுன் மாலி, தாரகாக்ஷன் கமலாக்ஷன், ஆகிய மூவரும் கடுந்தவம் புரியத் தொடங்கினார்கள். ஒற்றைக் காலில் நின்று ஒரு நூறு வருஷங்களும் பூமியிலிருந்து ஒரு நூறு காற்றையே உணவாக உட்கொண்டு பற்பலவருஷங்களும் அதிக தாபமுண்டாகப் பல வருடங்களும் தலை கீழாக நின்று ஆயிர வருடங்களும், கைகளை மேலுயர்த்தி நூறு வருடங்களும், துயரமயமான தவத்தை அநேக வருஷங்களுமாக இப்படிப் பல வகையான தவங்களை பிரமதேவனே குறித்துச் செய்தார்கள். தவஞ் செய்வோர் தாரனின் புதல்வர்களானாலும், அவர்கள் அசுரவழி வந்தக் கொடியவர்களானாலும் அவர்கள் செய்கிற தவம் பெரும் மகிமை வாய்ந்ததால் அத்தவாக்கினியின் ஜ்வாலையால் உலகம் அழியக் கூடுமாதலால் அவர்களுக்கு பிரமதேவன் காட்சியளித்து நீங்கள் இம்மாதவம் புரிவது எதற்கோ? உங்களுக்கு வேண்டிய வரம் என்னவோ? என்று கேட்டார். அதற்கு அவ்வசுரர்கள் சிருஷ்டிகாத்தாவே! நாங்கள் சர்வபிராணிகளிலும் ஒருவராலும் இறவாவரம் அளிக்க வேண்டும்! என்று கேட்டார்கள். அதற்கு பிரமதேவர் அவர்களுக்கு விடையளிக்க தவத்தர்களே! நீங்கள் கேட்கும் இந்த வரத்தை நாம் அளிப்பதற்கில்லை. ஏனென்றால் நீங்கள் எப்பொழுதும் இறவாமல் நித்தியமாயிருக்க யோகமில்லை. ஆதலால் உங்களுக்கு யோக பிராப்தம் கொண்ட வேறு வரங்களைக் கேட்டால், அவற்றைத் தந்தருள நாம் சித்தமாயிருக்கிறோம் என்று கூறினார். உடனே அவ்வசுரர் மூவரும் சதுர்முகரே! நாங்கள் எண்ணியவிடத்திற்குப் போகவும் சஞ்சாரம் செய்யவும் பொன் வெள்ளி-இரும்புகளாலாகிய மூன்று பறக்கும் பட்டணங்கள் வேண்டும், அவை ஆயிர வருடத்திற்குகொரு முறை ஒன்று சேர வேண்டும். அம் மூன்று பட்டணங்களும் ஒன்று கூடியிருக்கும் அந்தச் சமயத்தில் ஒரே பாணத்தால் அவற்றின் முப்புரங்களையும் அழிக்கவல்ல எவனாவது இருந்தால் அவனால் மட்டுமே நாங்கள் மாண்டு மடிவோம் என்று வரந்தரவேண்டும் என்று கேட்டார்கள். அதற்குப் பிரமதேவன் நீங்கள் கோரிய வரத்தை தந்தருளினோம் என்று கூறிவிட்டுத் திரிபுரக் கோட்டைகளை நிருமாணித்துக் கொடுக்க மயன் என்னும் தச்சனைக்கண்டு பொன், வெள்ளி, இரும்பகளாலாகிய மூன்று பட்டணங்களை நிருமித்து தாரகாசுர புதல்வர்களுக்குத் தந்தருளும்படி கட்டளையிட்டு மறைந்தார். அப்படியே அந்த மயனும் முப்புர பட்டணங்களை நிர்மாணித்து பொன் பட்டணத்தைத் தாரகாக்ஷனனுக்கு வெள்ளிப் பட்டணத்தைக் கமலாக்ஷனனுக்கும், இரும்பு நகரத்தை வித்யுன் மாலிக்கும் கொடுத்தான். அவைகளில் பொன் பட்டணமானக் காஞ்சனபுரியைச் சுவர்க்கத்திலும் இரசிதபுரியை மத்தியத்திலும் ஆயசபுரியைப் பூமியிலும் சஞ்சரிக்கத் தக்கதான யந்திர சூத்திரம் செய்து வைத்து பட்டணம் ஒன்று ஓர் யோசனை விஸ்தீரணமுடையதாகச் செய்து கொடுத்த அந்த மயனுக்கு மூன்று அசுரரும் பற்பல விதமான பொருட்களை பரிசளித்து வெகு மரியாதை செய்து வழி யனுப்பினார்கள். பிறகு அவரவரும் பறக்கும் திரிபுரங்களில் தம்தம் பட்டணங்களைச் சேர்ந்தார்கள். யானை, தேர், குதிரை, முதலிய சேனைகள், கற்பகவிருக்ஷம், நந்தவனம், மேடை சந்திர சாலை சித்திரத்தொழில்கள், சூரிய மண்டலம் போன்ற விமானங்கள் பதுமராக மணிகளாலாகிய விமானங்கள் கைலாச சிகரம் போன்ற விமானங்கள். அநேக சாரணர் சித்தர் முதலியோர் வசிக்கும் இடங்கள் சிவாலயங்கள், தடாகங்கள் கிணறுகள், பல்லக்குகள் கச்சேரி சாவடிகள் வேதாந்தியன் சாலைகள் முதலியனவற்றை உருவாக்கி பதிவிரதைகளான மனைவிகளோடு அசுர குடும்பங்கள் குடியிருந்து சிரவுத முதலிய நித்ய கருமங்கள் விடாமல் தொடர்ந்து நடத்தி வரும் பட்டணத்தில் குடியேறி, எப்போதும் கண்டிராத சிறப்புடன் விளங்குவதைக் கருதி மனமகிழ்வுற்றிருந்தார்கள் அங்கிருந்த அசுரக் கூட்டத்தில் பலவகைப்பட்டவர்கள் இருந்தார்கள். கோபிகள் சிலர் சாந்தவான்கள் சிலர் குட்டையர் நெட்டையர் சமரதர் அதிரதர் அர்த்தரதர் மாதாரதர், சிவபூஐõவான்கள் பிரம நிஷ்டாபரர்கள் பலவரங்கள் பெற்றவர் சூரியன் வாயு இந்திரன் முதலிய தேவர்களுக்குச் சமானவளமையாற்றல் கொண்டவர்களாகச் சிலரும் விளங்கினார்கள். அந்தத் திரிபுரங்கள் அசுரர்களேயானாலும் வேத சாஸ்திரங்களும் அவர்களது மூன்று புரங்களிலும் பூரணமாக விளங்கின. அப் பட்டணங்களின் பிரகாசத்தின்முன் தேவர்கள் கூட எதிர் தோன்றி நிற்கமாட்டார்தவர்களாக இருந்தார்கள். இதனால் தேவர்களும் முனிவர்களும் வெட்கி மனம் கூசினார்கள். திரிபுரமான அப்பட்டணங்கள் அவ்வசுரர்கள் கேட்டவரத்தின்படி அவர்கள் எண்ணியோதெல்லாம் இடம் விட்டுப் பெயர்ந்து போய் இடம் சேரும் சக்தி பெற்றவைகளாதலால், அப்படி அவை இடப்பெயர்ச்சி கொள்ளும்போது பலகோடி ஜீவராசிகளும் மாண்டு மடிந்தன. அதைக்கண்டு அப்பட்டணங்களின் சிறப்பினை வியந்து ஆச்சரியமும் அவைகளைத் தங்களால் ஒன்றும் செய்ய முடியாததால் ஆத்திரத் துயரமும் கொண்ட தேவர்களும் மகரிஷிகளும் மனம் சகியாமல் சிருஷ்டி கர்த்தாவான பிரம தேவர் அணுகிச் சென்று தங்கள் மனக்கவலையை முறையிட்டுக் கொண்டார்கள்.

19. திரிபுர சம்ஹார ஆலோசனை

தேவர்கள் முறையிட்டதை கேட்ட பிரமதேவர் தேவர்களே! என்னால் வரமளிக்கப்பட்ட அவ்வசுரர்களை நானே வதைத்து அழிப்பது முறைமையல்ல. அவர்களை நீங்களே வென்று அழிப்பது தான் சிறந்தது. அதற்கு வேண்டிய உபாயங்களையோ யுத்தியையோ வேண்டுமானால் நானே சொல்லித் தருகிறேன். அது வேறொன்றும் விசித்திரமானதில்லை சாட்சாத் சிவபெருமானிடம் நீங்கள் அனைவருமே சென்று முறையிட்டுக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை அக்கருணாநிதியிடம் அபயம் கேட்டால் அவர் இல்லை என்று புறக்கணிக்கப் போவதுமில்லை. உங்கள் குறை தீர்க்க அவர்தான் முயற்சியெடுப்பார் ஆகவே அவரிடமே செல்லுங்கள் என்று கூறி அகன்றார்.

அதுவே சரியெனக் கருதிய தேவர்களும் நந்திக்கொடியுடைய சிவபெருமானிடம் விரைந்து சென்று விண்ணப்பித்தார்கள், சிவபெருமான் அவர்களை நோக்கி தேவர்களே! திரிபுரங்களை ஆட்சி செலுத்துகிற அவ்வசுரர்கள் புண்ணிய சீலர்களாதலால் அவர்களையாம் சங்காரம் செய்தல் கூடாது. அவர்கள் புண்ணியர்களாய் விளங்கும் வரையிலும் விபத்துக்கள் அவர்களை தீண்ட முடியாது. ஆகையால் இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகா மாயாவியான மகாவிஷ்ணுவிடம் சென்று என்கட்டளையைக் கூறி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேவர்களும் அவரிடம் விடைபெற்றுத் திருமாலிடஞ் சென்று முறையிட்டார்கள். தேவர்களின் துயர்கேட்டுத் திருமாலோ வானவர்களே நீங்கள் துயரப்படுவதும் உண்மை தான். ஆனால் நீங்கள் கேட்கும் திரிரபுர சம்ஹாரம் சாத்தியப்படக் கூடுமோ? அத்திரிபுராதிகள் அசுரர்களாயினும் பாபிகள் அல்லவே! தருமம் மிகுந்த புண்ணியசீலர்களாயிற்றே, அவர்களைச் சங்கரிக்க நியாயம் ஏது? தருமம் இருக்குமிடத்தில் அதர்மம் புகமுடியுமா? சூரிய சன்னதியில் இருள் உண்டாகக் கூடுமோ? என்றெல்லாம் சொன்னார். அதைக் கேட்ட தேவர்கள் மிகவும் துயருற்று தலைவணங்கி பரமாத்மாவே! எங்களுக்கு வேறுவழியில்லை நாங்கள் என்ன செய்வோம்? அவ்வசுரர்கள் இருப்பதால் எங்கள் தருமங்கள் விருத்தியடையவில்லை ஒன்று அவர்கள் வாழ வேண்டுமென்று எங்களை அகாலப் பிரளயஞ் செய்து விடுங்கள். அல்லது அவர்களையாவது நாங்கள் வென்றிட வழி செய்யுங்கள் என்று மிகப் பக்திச் சிரத்தையோடு வேண்டினார்கள். திருமாலோ தீவிரமாக யோசித்துவிட்டு தேவர்களே! யச்சுதாரித்தால் சிவபெருமானைப் பூஜித்தால், உங்கள் இஷ்டசித்திகள் கைகூடுமாதலின் நீங்களும் யாகங்கள் செய்தால் திரிபுரங்கள் நாசமாகும்! என்று சொன்னார் தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து மனத்திடமும் தெம்பும் பெற்றார்கள் அப்போது திருமால் மேலும் சொல்லலானார்.

திரிபுர அசுரர்கள் மூவரும் மந்திரமஹிமையாலேயே இறக்கவேண்டும். ஆதலால் அதற்குச் சிவனாரின் தயவுவேண்டும் அது இல்லாமல் அவ்வசுரர்களை வதம் செய்ய நானோ, பிரமனோ தைத்தியர்களோ சக்தியற்றவர்களாகி விடுவோம். சிவபெருமானே அவரவர் இஷ்ட சித்திகளை நிறைவேற்றுபவர் தேவர்கள் கூட அவரைப் பூஜித்ததால் தான் வல்லமைகளைப் பெற்றனர், அவ்வளவு ஏன்? பிரமனும் சரி, நானும் சரி, சிவபெருமானைப் பூஜித்ததால் தான் படைக்கும் ஆற்றலைப் பிரமனும் காக்கும் ஆற்றலை நானும் பெற்றோம். ஆகையால் நீங்கள் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறி அவர்களுக்குச் சிவ மூலமந்திரத்தையும் உபதேசித்துக் கந்த புஷ்ப தூபதீப நைவேத்தியங்களால் இலக்ஷ லிங்கார்ச்சனை செய்வித்தார். அப் பூஜையின் முடிவில், கோரப்பல்-சூலம்-வேல்-கதை-பாணம் எறிகல் ஆகிய ஆயுதங்களையேந்திக் காலாக்நி ருத்ரன் போலவும் பிரளயகால சூரியன் போலவும் காந்தி மிக்க பற்பல பூதங்கள். தோன்றித்தேவர்களை வணங்கி எதிர் நின்றன விஷ்ணுமூர்த்தி அப்பூதங்களை நோக்கி நீங்கள் முப்புரங்களையும் கொளுத்தி இடித்துப் பொடிசூரணமாக்கிச் செல்லுங்கள் என்று பணித்தார். ஆனாலும் அவர் மனம் சலனமுற்றது அவர் சிவபெருமானைத் தனியே துதித்து நமஸ்கரித்து நான் இவர்களிடம் இப்படி ஏன் கட்டளையிட்டேன்; அசுரத் திரிபுராதிகளிடம் புண்ணியமும் தருமமும் பூரணமாய் விளங்கும்போது, அவர்களைச் சங்கரிக்கக் கூடுமோ? இப்பொழுதோ அவ்வசுரர்கள் ஒருவராலுஞ் சாகாவரம் பெற்றிருக்கிறார்களே! பாபிகளாயினும் சிவார்ச்சனை செய்தால் தாமரை இலையில் தண்ணீர் சேராதது போல அவர்களை விட்டுப் பாவங்கள் விலகுமாதலால் என்ன செய்வது? என்று யோசிக்கலானார் திரிபுராதிகள் சிவபூஜையை மறக்க நமது மாயா சக்தியால் ஏதாவது செய்ய வேண்டும் வேத தருமங்களும் சிவபூஜையும் தூய நடத்தையும் உள்ளவரையிலும். அவ்வசுரர்கள் அழிய மாட்டார்கள். அதற்குள்ள உபாயத்தைச் சிந்திக்க வேண்டும் என்று மாயோன் நினைத்துதேவர்களை விடை கொடுத்தனுப்பி விட்டு. ஏகாந்தமாகி இரகசிய சிந்தனையில் மூழ்கினார்.

20. மாயரூபி செய்த புறச்சமய உபதேசம்

விஷ்ணு மூர்த்தி தன்னிடமிருந்தே மாயாஸ்வரூபமான ஒரு புருஷனைத் தர்மவிக்நத்தை முன்னிட்டு உண்டாக்கினார். அப்புருஷன் மொட்டைத்தலையும் மலினவுடையும் மரத்தால் செய்த குண்டிகையும் மயில்தோகையால் செய்யப்பட்ட குஞ்சமும் ஒரு கையில் ஆடையும் தர்மாயென்னுஞ் சொல்லுமுடையவனாய், விஷ்ணுவைக் கைகுவித்துப் பணிந்து கட்டளைக்காகக் காத்து நின்றான். அவனைப்பார்த்து திருமால் நீ என்னுடலினின்றுதோன்றியதால் என் கட்டளைப்படி நடக்ககடவாய் மாயாமயமான சிரவுதாசார ஸ்மார்த்தாசார விருத்தமானதும் வருணாஸ்ரமமில்லாததும், இவ்வுலகத்திலேயே சுவர்க்க நரகங்கள் உள்ளன வென்பதும் வேதம் பொய் என்றும் சாஸ்திரங்கள் கர்மவாத மென்பதுமாய் உள்ள அக்கிரந்தங்களை நீ என்னிடமே கற்றுத் தேர்ந்து விரிவு படுத்த வேண்டிய ஆற்றலையும் என்னிடமே பெற்றுபல விதமாயைகளையும் என்னிடமிருந்தே சுவாதீனமாக அடைவாய் தோன்றுதல் மறைதல் வசியம்-அவசியம் சிநேகம்-விரோதம் முதலிய விசித்திர வித்தைகள் யாவும் உனக்குக் கைகூடும் என்று கூறி அவற்றை அவனுக்குக் கற்பித்து நீ திரிபுரம் சென்று அவ்வசுரர்களை உன் மாயா வித்தையால் மயக்கி அவர்களுக்கு இந்த சாஸ்திரத்தைக் கற்பித்து, அவர்களிடமிருந்து சிரவுதஸ்மார்த்த ஆசாரங்களை உன் வலிமையால் விக்கிதிரிபுரம் நாசமாகும்படி செய்ய வேண்டும் என்று பணித்து அம்மாயா புருஷனை அனுப்பி வைக்கலானார் அவ்விசுரர்கள் உன்னிடம் வசப்பட்டு நீ சொல்லும் சாஸ்திரத்தை மோகித்தபிறகு உவர் நிலத்தையடைந்து கலியுகம் வரும்வரையில் இருந்து, கலியுகம் வந்த பிறகு உன் சிஷ்யர்களுக்கும் பிறசிஷ்யர்களுக்கும் இக்கிரந்த சாஸ்திரங்களைப் போதித்து இவைகளை விருத்தி செய்யக்கடவாய் இதை நீ செய்வதால் நீயும் என் பதவியை அடைவாய் என்று ஆசிர்வதிக்கவே மாயாரூபியானவன் நான்கு சிஷ்யர்களைப் படைத்து அவர்களுக்கு இவ்விதத்தையை படிப்பித்து பண்டிதர்களாக்கி, விஷ்ணு சமூகத்திடம் வந்து நால்வரூமாக வணங்கினார்கள். மகிழ்வுற்ற மகாவிஷ்ணு நீங்கள் நால்வரும் உங்கள் குருவைப் போலவே வித்தை பயின்று விளங்குவீர்களாக! என்று ஆசிர்வதிக்க அந்நால்வரும் நமக்கு கிடப்பதெல்லாம் தர்மமே என்று சொல்லிக் கொண்டு சந்தைகளை கட்டிய பிராணி நிவாரண குச்சிகளைக் கையிலேந்தி விஷ்ணுவைப் பணிய அவர்களின் கையில் ஒப்புவித்து இவர்களை உன் போலவே நினைத்து காப்பாற்று என்று கூறி உங்களுக்கு பூஜ்யன் ருஷி பதி ஆசார்யன், உபாத்தியாயன் என்னும் இப்பெயர்கள் விளங்கிப் பரவுவதுடன் (ஆரிஹந்) சத்துருவைச் செபிப்பவன் என்னும் என் பெயரும் கூட உனக்கு உண்டாகுக! என்று ஆசிர்வதித்தார்.

நீங்கள் இப்பெயர்களை உச்சரித்து கொண்டிருங்கள் என்று அவர் கூறியதும் மாயாரூபி நமஸ்கரித்து விடை பெற்று நால்வரையுமுடன் கொண்டு திரிபுரத்திற்கருகில் ஒரு வனத்திலிருந்து மாயையுடையவர்களையும் மயக்கும் மாயை செய்யத் தக்கதான வினோத வித்தைகள் செய்து கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டவர்கள் அம்மதத்தில் போதனை பெற்று அம்மகத்தில் பற்றுக் கொண்டிருந்தார்கள் மாயைக் கண்டோர் மதிமயங்கினார்கள் இப்படி மாயை செய்து வந்த மாயாரூபியின் வித்தைகள் விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும்போது நாரத மகரிஷி விஷ்ணு மூர்த்தியையடைய விஷ்ணு அவரையும் இந்த ஐவரோடு சேர்ந்துக் கொள்ளும்படிச் சொன்னார் அதனால் மாயாரூபியும் அவர் சிஷ்யர்கள் நால்வரும் அவருடன் நாரதம் ஆக அறுவராக அவர் அசுரர்களின் பட்டணத்தில் பிரவேசித்தார்கள் நாரதர் முதலில் வித்யுன்மாலியைக் கண்டு இவர் மகா புத்திமான் தருமத்தைக் கருமமாகக் கருதுகிறவர். இவரிடம் அநேக தர்மங்கள் உள்ளன. இவருக்குச் சமமானவர் யாருமில்லை நானும் இவர் சிஷ்யனாகி உபதேசம் பெற்றேன். நீயும் இவரிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்! என்று கூறினார். வித்யுன்மாலி நாரதரை நோக்கி மகா புண்ணியரான தாங்களே உபதேசம் பெற்றுள்ளபோது நானும் பெறுவதுதான் தருமம்! என்று கூறி மாயாரூபியை வணங்கி மகானுபாவரே! நீர் எனக்கு திøக்ஷ செய்யவேண்டும்! என்று வேண்டி நின்றார் மாயாரூபியோ வித்யுன்மாலியை நோக்கி அரசனே! நான் சொல்வதைத் தடையின்றி செய்யவேண்டும்! என்று சொல்வதற்கு முன்னரே அவ்வித்யுன்மாலி தங்கள் கட்டளைப்படியே நான் நடப்பேன்! என்றான் உடனே மாயாரூபி தன் வாயை மறைத்துக் கட்டிக் கொண்டிருந்த வெள்ளைத் துணியை நீக்கி, என் உபதேச மந்திரத்தையடைக! என்று சிவ தருமங்கள் நசிக்கத் தக்கதான சிலவகை மந்திரங்களை உபதேசித்து தீøக்ஷ செய்வித்து உன் பட்டணத்தார் அனைவரும் தீக்ஷõதாரராக மேற்கொண்ட அவ்வரசனும் தன் பிரஜைகளைத் தான் தீøக்ஷ பெற்றது போல் அவர்களும் பெறவேண்டும் என்று கட்டளையிட்டான். இதனால் மாயாரூபியின் சிஷ்யப் பிரஷ்யர்கள் நகர முழுதும் தீøக்ஷ செய்வித்து சமணமதத்தை பரப்பினார்கள்.

21. திரிபுராதியர் வஞ்சிக்கப்பட்ட கதை

மாயாரூபியானவன் திரிபுரம் முழுதும் சிவமதத்திற்குப் புறம்பான தன் கொள்கைகளைப் பரவிச் செய்து பதிவிரதத் தன்மை முதலிய மாதர் அறநெறிகள் சிரார்த்த கருமங்கள் சிவபூஜை யாகங்கள், தானங்கள், தீர்த்த தரிசனங்கள், வைதீக கர்மங்கள் ஆகியவற்றால் யாதொரு பயனுமில்லை என்று உபதேசித்தான் இதனால் அந்நகரவாசிகள் அவ்வாறே அவற்றை விட்டு ஒழித்தனர் விஷ்ணுவின் கட்டளையை ஏற்று அந்த மாயாரூபி அந்த நகரத்தையடைந்தவுடன் அந்த மாயையோடு மூதேவியும் அப்பட்டணத்தில் குடியேறி விட்டாள் திரிபுரசூரர்கள் தவஞ்செய்து அடைந்த ஐஸ்வரியலக்ஷ்மி பிரமதேவரின் கட்டளைப்படி இனி அங்கிருக்க ஒண்ணாது விலகினாள்.

மாயாஜாலனாகிய ஜைனனும் நாரதரும் அந்நகத்தாரையெல்லாம் மாயையால் மயக்கினார்கள் அசுரகுல மக்கள் நற்செயல்கள் விட்டு விட்டார்கள். அதைக் கண்டதும் திருமால் இனிக் காரிய சித்தியாகி விடும் என்று உள்ளூர மகிழ்ந்து சிவபெருமானிடம் சென்று மஹாதேவா! பரமாத்ம ஸ்வரூபா! நாராயணாயா! சம்சாரதுக்க நாசத்தைப் பிரமஞான உபதேசித்தால் போக்குபவரே! பிரமானந்த ஸ்வரூபரே உமக்கு நமஸ்காரம்! என்று வழிபட்டு தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை ஜலத்திலிருந்து மூன்றரைகோடி உரு ஜபித்துக் கொண்டிருந்தார் அப்போது தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமானைத் தியானித்து, சர்வ ஸ்வரூபா! மங்களதரா! பாபரஹிதா! நித்யா! நீலகண்டா! நாமரூபக்கிரியா ரஹிதா! ஜலஸ்வரூபா! நமஸ்காரம் நமஸ்காரம் துக்கம் அடையும் போது முறையிடக் கட்டளையிட்ட தேவரீரே எங்களுக்கு உற்றதுணை, உம்மை பூஜித்தாலொழிய எங்கள் துக்கங்கள் ஒழியா பிரகிருதி புருஷர்களுக்கு ஆதியானவரே ஜகத்குருவே ஜகத்துக்களை ரட்சிப்பவரே வேதங்கள் உம்மையே பரம த்மனாகக் கூறுகின்றன. அணுவுக்கு அணுவும் மகத்துக்கு மகத் மாய் உள்ளவர் நீரே! விசுவரூபியானவரே ஆயினும் ஒன்றிலும் அகப்படாதவரே! கோடிசூர்ய பிரகாசரே! சுவயம்புவே நீரே. இந்தத் திரிபுர அசுரர்களை சங்கரித்து, எங்களை ரட்சிக்க வேண்டும் என்று துதித்தார்கள்.

அப்போது சிவபெருமான், விஷ்ணுமூர்த்தி செய்த ஜெபத்திற்கும் தேவர்கள் செய்த தோத்திரத்திற்கும் மகிழ்ந்து அப்போதே பிரசன்னமாய் திருமாலை ஆலிங்கனஞ் செய்து கொண்டு, அவர்களைப் பார்த்து தேவர்களே விஷ்ணுவினால் செய்யப்பட்ட மாய உபாயமும் நாரதர் உடன்பாடும் எனக்குத் தெரியும் தர்மசூனியர்களாக மாறியிருக்கும் அத்திரிரபுர அசுரர்களின் திரிபுரங்களையும் இனி சம்ஹாரம் செய்வேன் என்று கூறி அந்தர்தானமானார் அவர் கூறியதைக் கேட்டதும் நாராயணன், நான்முகன், இந்திரன் முதலிய வானவர்கள் யாவரும் தங்கள் கைகளைத் தலைமேல் குவித்துக் கும்பிட்டு மகிழ்ந்தார்கள் இந்தச் சரித்தைக் கேட்டனர். சொன்னோர் எழுதியோர் முதலியவர்கள் சகலமான இஷ்ட காரியங்களையும் அடைவார்கள்.

22. போருக்குப் புதுமையான ரதம்

தேவர்கள், தத்தமது புத்திரர்களுடன் சிவபெருமானின் திருச்சன்னதிக்குச் சென்று, இனி நாம் என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? இன்னும் என்ன நடக்கப் போகிறதோ? என்று சிலரும் நாம் பாவிகள் என்று வேறு சிலரும் தைத்தியர்களே பாக்கியசாலிகள் என்று சிலரும் சொல்லி தம்மைத்தாமே பழித்துரைத்துக் கொண்டு மீண்டும் சிவசன்னதிக்குள் புகுந்தார்கள். அதுவரை அத்தேவர்கள் கூறியவற்றையெல்லாம் கேட்டிருந்த குபோதரன் அவர்கள் இரைச்சலைச் சகிக்காமல் தன் கையில் இருந்த தண்டாயுதத்தால் தேவர்கள் அடித்தான். அதனால் அமரர் யாவரும் அச்சங் கொண்டு ஓடினார்கள் பிறகு இமையவர் யாவரும் முனிவர்கள் முதலிய புண்ணியருக்கும் இத்தகைய விபத்து விளைந்தது தெய்வபலமா என்று அருகிலிருந்த விஷ்ணுவைக் கேட்டார்கள். அதற்குப் பரந்தாமர் அத்தேவர்கள் நோக்கி உங்களுக்கு ஏன் இத்தகைய துக்கம் வந்தது? இத்துன்பத்தை அறவே ஒழியுங்கள் பயன்கள் யாவையும் ஒருங்கே தரத்தக்க சிவ பூஜையை நீங்கள் செய்வீர்களேயானால் உங்களுக்குக் கிடைக்காதது ஏதாவது உண்டோ? சகல கணங்களுக்கும்  தலைவராகிய சங்கரர் தயையுடையவராவதற்கான வகையைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

தேவர்களே, நீங்கள் முதலில் பிரணவத்தை உச்சரித்து நம: என்பதைப் பிறகு கூறி சிவாய என்பதை இறுதியில் சுபம் சுபம் குரு குரு என்றும் மேல் சிவாய என்றும் நம என்றும் மீண்டும் ப்ரணவம் சேர்த்து சிவகடாக்ஷம் கிடைக்கும் வரையிலும் ஜெபிக்க வேண்டும் இந்த மந்திரத்தைக் கோடி முறை ஜெப்பித்தால் சிவபெருமான் கிருபையோடு இஷ்டப்பட்டக் காரியங்களை அனுகூலமாக்குவார் என்று உபதேசித்தார் பிறகு தேவர்கள் யாவரும் அந்தரங்கமான ஓர் இடம் சென்று அடைந்து சிவ நாமங்களை உச்சரித்துக் கொண்டே மந்திரஜபம் செய்தார்கள். இதுபோலக் கோடிமுறைகள் அந்த மந்திரத்தை ஜெபித்த பிறகு சிவபெருமான் கிருபையுடன் தோன்றி. உங்கள் மனோபீஷ்டத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது தேவர்கள் வரங்கள் அனைத்தையும் கொடுப்பவரான சிவபெருமான் பின்வருமாறு துதிக்கலானார்கள் சகல உலகங்களுக்குச் சுகங்களை அளிக்கும் சுவாமி! பரமாத்மரூபி உலக ரக்ஷணயத்துக்காகச் சூலத்தை தரித்தவரே! உயர்வும் இழிவும் இல்லாதவரே பிரமத கணங்களுக்கு இறைவரே, கபர்த்தி முக்கிருதிக்குக் காரணரே, சர்வ வியாபியே நமஸ்காரம் என்று துதித்து தேவர்கள் அவர் முன்பு கைகட்டி வாய்பொத்தி நின்று எங்கள் விஷயத்தில் கிருபையுடையவராக இருந்தால் திரிபுரங்களை அழிக்கவேண்டும் என்று வேண்டினார்கள் அதனால் சிவபெருமான் விசுவகர்மனை அழைத்து, இரதம், தனுசு, பாணங்கள் ஆகியவற்றை உறுதியுள்ளனவாகச் சித்தஞ்செய் அப்படிச் செய்தால் திரிபுரங்கள் சீக்கிரமே அழிந்து விட்டதாகவே கருதலாம் என்று உத்தரவிட்டார் உடனே, விசுவகர்மன் பிரபஞ்சத்தைக் காக்கும் பொருட்டு சர்வதேவ தேஜோமய திவ்விய மங்கள ஸ்வரூபமான இரதம் ஒன்றைச் செய்து முடித்தான்.

23. திரிபுர தகனம்

சூதமாமுனிவர் மேலும் தொடர்ந்து சொல்லலானார். முனிவர்களே பதினான்கு உலகமயமான திவ்யரதத்தை மிக முயன்று தேவதேவனான மஹாதேவனுக்கு விசுவகர்மன் செய்து முடித்தான், சர்வ பூதமயமாயும் பொன்னால் செய்யப் பட்டதும் வலதுபுரம் சூரியனையும் இடதுபுறம் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்டதும் நட்சத்திரங்கள் எல்லாம் வாமபாரிச சக்கரத்திற்கு அலங்காரஞ் செய்யப்பட்டதாயும் ருதுக்கள் ஆறும் கால நிரூபணத்துக்காக இரு சக்கரங்களில் இருக்கத் தக்கதாகவும் ஆகாயமே கொடுமுடியாகவும் மந்திரகிரியே ரதநீடம் ஆகவும் அஸ்தகிரியும் இருசுகள் ஆகவும் வர்ஷங்கள் வேகமாகவும், உத்தராயண தக்ஷணாயனங்கள் ரதஞ் செல்லும் வழியாகவும் சப்தசமுத்திரங்கள் அலங்காரமாகவும் கங்கை முதலிய நதி நங்கையர் சகல ஆபரண பூஷணதாரிகளாய் சாமரை வீசவும், பிரமன் ரதசாரதியாக கடிவாளங்களை ஏந்தவும் பிரணவத்தை குதிரைகளைச் செலுத்தும் கோலாகவும் விந்தமலையைக் குடையாகவும், மந்திர மலையைக் குடைக்கொம்பாகவும் மேருமலையை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் சரஸ்வதி அதிற்கட்டிய மணியாகவும், விஷ்ணு பாணமாகவும் அக்கினி சல்லியமாகவும் வேதங்கள் நான்கும் நான்கு குதிரைகளாகவும் துருவன் முதலிய நட்சத்திரங்கள் அலங்காரமாகவும் பிரமாண்டத்திலுள்ளயாவும் சம்பந்தமுங் கொண்ட திவ்விய ரதத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தான்.

சிவபெருமான் ஸர்வதேவஸ்வரூபராய் அந்த யுத்த ஸந்நத்தமான இரத்தில் ஆரோகணித்தார். அச்சமயத்தில் முனிவர்கள் ஜயஜய வென்று முழங்கினார்கள் தேவமங்கையர்கள் பல்லாண்டு பாடினார்கள். அந்த ரதம் செல்லும் போது உலகத்தைத் தாங்கும் கூர்ம ரூபியான நாராயணன் இடபரூபத்தை வகித்துவந்து அந்த ரதத்தை தானுஞ் சுமந்தார். அந்த ரதம் மனோவேகத்துடன் நடந்து யுத்தகோலமாகத் திரிபுரமாகிய ராக்ஷஸ வாசஸ்தானத்திற்குச் சென்றது.

அதாதஸ்யர தஸ்யாஸ்ய பகவாந்தரணீதர
வ்ருஷேந்த்ரரூபி சோததாய ஸ்தாபயாமாஸவைரதம்

அச்சமயத்தில் தேவர்களும் மாமுனிவர்களும் சகல உலகங்கட்குஞ் சுகத்தைச் செய்யும் சதாசிவமூர்த்தியைத் தரிசித்துக் களித்து ஜயவென்று புகழ்ந்தார்கள். அந்த ஸ்தோத்திரத்தையும், அவ்வலங்காரத்தையும் நூறு வருஷம் வரை வர்ணித்துச் சொன்னாலும் முடியாது. பார்வதி தேவியும் சிவபெருமானுடன் அவ்விரதத்திலிருந்து திரிபுரசம்ஹாரஞ்செய்து தேவர் முனிவர்கட்குச் சுகம் உண்டாக்குவதற்காகத் தானும் உடன் சென்றாள். விஷ்ணு, இந்திரன், முதலிய இமையவர்கள் தங்கள் தங்கள் வாகனங்களான இரத கஜதுரக விமானாதிகளில் ஏறி ஆயுதபாணிகளாய்ச் சிவபெருமானுக்கு முன்னே திரிபுரத்தை நோக்கி நடந்தார்கள் ஜடைகளையுடைய முனிவர்கள் தண்ட கமண்டலங்களுடன் குதித்து ஆர்ப்பரித்தார்கள். சித்தர் சாரணர் முதலானவர் புஷ்பமாரி பொழிந்தார்கள் சிவபெருமான் யுத்த கோலமாக திரிபுரத்தை நோக்கிச் செல்லும்போது ப்ரக்கிரந்தன் குந்ததந்தன், கம்பன், ப்ரகம்பன், இந்திரன், இந்திர, பகவான், யந்தன், ஹிமகரன், ஸதாட்சன், ஸ்தாயன், கங்கடன், கடபூதனன், த்விசிரன், த்ரிசிரன், ஏகானனன், அஜவக்கிரன்; க்ஷய வக்திரன், கஜவக்திரன் ஊர்த்வவத்திரன் முதலான எண்ணிறந்த லக்ஷக்கணக்குள்ள சிவகணத் தலைவர்கள் ஒரு வார்த்தை சொல்லலானார்கள் ஐயனே தாங்கள் மனதால் நினைத்தவுடனே சகல சராசரங்களையும் சம்ஹரிக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்கும் போது இந்த ஆடம்பரங்கள் எதற்கு? சகலமான போர்படை பரிவாரங்களுடன் கூடி இப்படி இரதத்தில் ஏறி ஆயுதபாணியாய்த் தேவசேனா சமூகத்துடன் வருவானேன் நம்பிக்கை வரவும் தங்கள் கீர்த்தி உலகத்தில் வியாபிக்கவும் பவர் சிவபெருமானேயன்றிப் பிறிதொருவர் இல்லையாதலால் அவர் திரிபுரசம்ஹார நிமித்தமாக வில்லை வளைத்தார். அப்பொழுது திரிபுரங்கள் ஒன்று சேர்ந்தன. அது கண்ட தேவர்கள் பெருஞ் சந்தோஷமடைந்தார்கள்.

தேவர்கள் முனிவர்கள் சித்தர் முதலிய பதினென் கணங்களும் அஷ்ட மூர்த்தமாக விளங்குஞ் சிவபெருமானைத் துதித்தார்கள். அப்பொழுது பிரம தேவர் முக்கண் பெருமானே! முப்புரங்களும் ஒன்று சேர்ந்துள்ள இந்தச் சமயமே நல்ல சமயம்! சிறிது தாமதமானால் அவைபிரிந்து போகக்கூடும் ஆகையால் சீக்கிரமே பாணத்தை எய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார் சிவபெருமானும் உடனே மேருமலையை வில்லாக வளைத்து வாசுகியான நாணையேறிட்டு விஷ்ணுவான முனையையுடைய பாசுபதாஸ்திரத்தை ஏற்றி, பிரமன் வார்த்தை பயனற்றதென்றும் நினைத்து, திரிபுரத்தை சினந்து பார்க்கத் திக்கென்று தீப்பற்றிப் புரங்கள் மூன்றும் எரிந்தன. பிரமன் நடு நடுங்கிச் சிவபெருமானைப் பார்த்துப் பணிந்து கைகட்டி வாய் பொத்தி எதிர் நின்று தேவதேவா! நீங்கள் பார்த்தவுடனேயே திரிபுரங்கள் சுடுசாம்பலாக போவதாயிற்றே? இந்த திரிபுரதகனத்திற்கு இரதம் முதலிய ஆடம்பரங்களெல்லாம் என்னையொத்தவர்கள் இதில் பணிவிடைகள் புரிந்து புகழ் பெறுவதற்காகவே செய்தீர் இனி இப்பாணத்தை விட்டுவிட வேண்டும் என்று பிரார்த்தித்தார் அதற்கிணங்கச் சிவபெருமான் அந்த அஸ்திரத்தைவிட அது திரிபுரத்தையடைந்து நாசம் செய்து சிவனாரிடம் திரும்பி வந்தது பல பல கோடி தைத்ய சேனைகளுடன் கூடிய திரிபுரங்கள் ஒரே அஸ்திரத்தால் எரிந்தது அது கற்பாந்த காலத்தில் திரிலோகங்களும் ஒரே பிரளய கால ருத்ரனால் அழிக்கப்பட்ட போலிருந்தது அந்தத் திரிபுரத்தில் சிவபூஜை செய்து வந்த பெருந்தவமுனிவர்கள் யாவரும் சிவகணப் பதவி அடைந்தார்கள் அப்பொழுது மகாவிஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் தேவதேவனான சிவபெருமானையும் அவர் வாம பாகத்தில் வீற்றிருக்கும் சகலலோக மாதாவான உமாதேவியையும் பார்த்துப் பயந்தால் ஒன்றும் பேசாது கும்பிட்டு நின்றார்கள். பிரமதேவன் விஷ்ணு இந்திரன் முதலிய இமையவர்கள் ஒன்று சேர்ந்து திரிபுரதகனஞ் செய்த சிவபெருமானை நோக்கி மெய்யன்போடு கைகுவித்து அண்ணலே தேவ தேவனாகவும் பரமேஸ்வரனாகவும் ஜகத் பிரபுவாகவும் உலகத்திற்குச் சுகத்தைச் செய்பவராகவும் விளங்குபவரே! எங்களிடம் கோபந்தணிந்து திருவருள் புரியவேண்டும் பிரணவஸ்வரூபியாயும், குணாஹிதனாகியும், சகுணனாகியும், சதாசிவனாகியும், சாந்தனாகியும் மகேசனாகியும், பிநாகியாகியும், சர்வஜ்ஞனாகியும் சகலத்தையும், ரக்ஷிப்பவனாகியும், ஸத்யோஜாதஸ்வரூபியாகியும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் என்று தோத்திரம் செய்து அவரவரும் தனித்தனியாக சாஷ்டாங்கமாகப் பணித்து, பகைவரை வென்றமைப் பற்றிப் பெருங்களிப்புடன் சிவத்தியனபரராய் இருந்தார்கள். அப்பொழுது பிரமதேவர் திரிபுர தகனரே எனக்கு உம்மிடம் பிரியாத திடபக்தியும் இதுபோலவே என்றும் சாரதித் தொழிலும் நிலைபெற அருள் பாலிக்க வேண்டும் என்றார். விஷ்ணு, சாஷ்டாங்க மாய்ப் பணிந்து கைகட்டி நின்று சற்குண நிர்குணஸ்வரூபியாகவும் ப்ரகிருதி புருஷ ரூபனாகவும் விசுவாத் மகனாகவும் விளங்கும் உமக்கு நமஸ்காரம் உம்மிடம் எனக்கு என்றும் நீங்காத பக்தியிருந்து வரவேண்டும் என்றார் பிறகுசகல நமஸ்கரித்து புராரியை நோக்கி நுதல் விழிப் பெருமானே எங்களிடம் தயையுடையவராயிருந்து எங்கள் பக்தியை வளர்க்க வேண்டும் என்றார்கள். சிவபெருமான் பெருமகிழ்ச்சியடைந்து தேவர்களே உங்கள் தோத்திரத்திற்கு நாம் மனங்களித்தோம் உங்களுக்கு வேண்டிய வரங்களை கேளுங்கள்! என்றார்.

மகாதேவா! எங்களுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் காட்சியளித்து எங்கள் கஷ்டங்களைப் போக்கியருள வேண்டும் என்றார்கள். சிவபெருமான் அவ்வாறே ஆகுக வென்றும் உங்களுக்கு முக்தியருள் புரிவோம் என்றும் திருவாய் மலர்ந்தருளிச் சில வரங்களைக் கொடுத்தார், அப்பொழுது நிரீசுவர வாதிகளான சில முண்டித சிரசுடையவர்கள் வந்து தேவர்களைப் பணிந்து எங்கள் கதி என்ன? என்று கேட்டார்கள் அதற்கு திருமால் பிரமன் முதலிய தேவர்கள் நீங்கள் கலியுகம் வரும் வரையில் நிர்ஜ்ஜல பூமியில் வசிக்க வேண்டும் என்று கூறவே அவர்கள் பணிந்து அவ்வாறே சென்றிருந்தார்கள் பிறகு தேவர்கள் தத்தமது இருப்பிடஞ் சேர்ந்தனர். இந்த உபாக்யானததைத் கேட்கிறவன் ஸர்வபீஷ்டமுமடைவான் என்பது திண்ணம்.

24. விசுவகர்மா தந்த சிவலிங்கங்கள்

பிருமதேவர் அவருடைய சத்தியலோகம் சென்றார் முனிவர்களை அழைத்தார். அவர்களைப் பார்த்து நகைத்த வண்ணம் முனிவர்களே! உங்களுக்கு இஷ்டகாரிய சித்தியும் இன்னும் அநேக நன்மைகளும் உண்டாக வேண்டுமென்றால் என்னுடன் சேர்த்து திருப்பாற்கடலுக்கு வாருங்கள். நான் தத்வரகசியத்தை நன்றாக விசாரித்திருக்கிறேன் என்று சொன்னார். அதைக் கேட்ட தேவர்களும் முனிவர்களும் பிருமதேவருடன் சென்று விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் க்ஷராபதியையடைந்து திருமாலை வணங்கி பரந்தாமா ஜகந்நாதா, பக்தப்பிரியா, லக்ஷ்மிநாயகா, அபயங்கொடுத்து அநுக்ரஹிப்போன், மேகவர்ணா, சதுரபுஜங்களையுடையாய்  பீதாம்பரதாரா, சங்கு, சக்கர, கதை, பத்மங்களையளித்தோய், புரு÷ஷாத்தமா, புண்டரீகாஷா கவுஸ்துவாபணா இடர்பட்டவர்களுக்கு இரக்ஷண்யம் அளிப்பவன் நீ தான் ஆதலால் எங்கள் விஷயத்திலும் அபயமளித்திட வேண்டும். சந்தோஷத்துடன் பிரசன்னமாக வேண்டும். ஜய ஜய வென்று துதித்தார்கள் அதனால் மனங்குளிர்ந்த கார்மேக வண்ணர் அவருடைய நிஜ வடிவம் எடுத்து அவர்கள் முன்னால் தோற்றமளித்தார்! அதைக் கண்டு தேவர்கள் மெய்சிலிர்த்தனர், அவர்களை திருமால் நோக்கி தேவர்களே, நீங்கள் என்னை நாடி வந்த நோக்கம் என்ன? என்று கேட்டார் அதற்கு பிரமதேவர் வைகுந்தவாசா உம் குளுமையான கிருபையால் சகல துன்பங்களும் ஒழிந்தன. ஆனாலும் அனைவருக்கும் இதமுண்டாகும்படி ஒன்று உம்மிடம் கேட்க விரும்புகிறோம். நாள்தோறும் எவரைச் சேவித்தால் எல்லாத் துயரங்களும் நீங்கி நித்தமான சுகங் கிடைக்கும் நானும் இவ்வமையவர்களும் எவரை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் பெறுவோம் என்று கேட்டார். அவரை விஷ்ணு பரமாத்மா புன்முறுவலோடு நோக்கி பிரமனே! உனக்கு இதனை நான் ஆதியிலேயே அறிவித்திகுக்கிறேன், நீ அதைக் கேட்டு அறிந்திருக்கிறாய் ஆயினும் மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்துகிறேன் பிரமனே! பூஜிக்கத்தக்கப் பொருள் உனக்குடைதாயிருந்தும் என்னைக் கேட்கிறாய் சகலலோகத்திலும் சங்கரர்தானே பூஜிக்க வேண்டிய பதி? அவரன்றி பிறனொருவன் உண்டோ? இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் முன்பொரு சமயம் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே. அதற்குத் திருஷ்டாந்தமாகத் தாரகாசுரத் திரிபுராதிகளை சிவபக்தியிலிருந்து மறக்கச் செய்து என்னால் சிருஷ்டிக்கப்பட்ட மாயாரூபிகளின் மயக்கத்தில் சுட்டுண்டு அவ்வசுரர்கள் மாண்டு போனதையும் நீ அறிவாயல்லவா? ஆகையால் தேவர்களான நீங்கள் விரும்பும் நித்தியமான சுகத்தை அடைய அதி பத்தி சிரவணத்தோடு, சிவலிங்கமான ரூபியான சிவபெருமானைப் பூஜைசெய்து வாருங்கள், நானும் சாட்சாத் சிவபெருமானைப் பூஜித்து வருவதால்தான், இப்படி உங்கள் தோத்திரங்களுக்கெல்லாம் உரியவனாக இருக்கிறேனேயன்றி மற்றபடியல்ல உலகில் எந்தப் பொருளையும் சிவலிங்க ரூபமாகச் செய்தால் அதில் சிவபெருமான் தோற்றமளிக்கிறார் .

ஆகையால், இஷ்ட சித்தியடைய விரும்பும் யாவரும் சிவலிங்கார்ச்சனை செய்ய வேண்டும் தேவர்களும் வைத்தியர்களும் தானவரும் நாமும் எல்லோரும் சிவலிங்கபூஜை செய்ய வேண்டியவர்களே பிரமனே நீர் இதை அறிந்திருந்து மறந்ததும் ஏனோ? நீ இனிமேலாவது எவ்வகையிலாவது சிவலிங்க பூஜைசெய்து வரவேண்டும். எந்தக் காலத்திலும் சிவத்தியானத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும் எப்பொழுது சிவத்தியானத்தை மறக்கிறோமோ அப்பொழுதே நமக்கு இடையூறு நெருங்கும் அதுவே அதர்மமாகும். அதுவே விக்னகாலம். அதுவே மூடத்தனம் சிவபக்தி எவருக்குண்டோ , சிவஸ்மரணை எவர் செய்வாரோ அவர்கள் துயரங்களின்றி வாழ்வார்கள் மனோகரமான வீடுகள், பலவிதமான ஆபரணங்கள், சுந்தர அழகான பெண்கள், போது மென்ற அளவு தனம் புத்திர பாக்கிய சந்ததி தேகாரோக்கியம், பலவித சீனி சீனாம்பரங்கள் இரதகஜ துரகம் முதலான வாகனங்கள். பெரும்புகழ் ஸ்வர்க்கபோகம், தீர்க்காயுள், நல்ல சிநேகிதர்கள், முக்திபலம் முதலானவற்றை விரும்புகிறவர்கள் எப்போதும் சிவபகவானை சிவலிங்க மூர்த்தத்தில் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் லிங்கபூஜை செய்கிறவன் புண்ணிய கருமங்களைச் செய்ய நேரிடுமேயன்றி பாவத்தால் பீடிக்கப்படமாட்டான் என்று மகாவிஷ்ணு விவரித்தார். இம்மகா ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களும் முனிவர்களும் திருமாலை வணங்கி நாங்கள் பூஜைசெய்ய லிங்கம் கிடைக்காததால் இஷ்டகாமியங்களெல்லாம் . எங்களுக்குக் கைகூடச் சிவலிங்கங்களை பிரஸாதிக்க வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். விஷ்ணுவும் பிரமதேவரும் யோசித்து விசுவகர்மனை அழைத்து இத்தேவர்கட்கெல்லாம் அவரவர் கவுரவத்திற் கேற்றாற்போல் யோக்கியமான லிங்கங்களை செய்து கொடு என்று சொன்னார்கள். விசுவகர்மனும் அப்படியே அவர்களுக்கு லிங்கங்களைக் கொடுத்தான். இந்திரனுக்குப் பதுமராக லிங்கத்தையும் குபேரனுக்கு சுவர்ண(பொன்) லிங்கத்தையும் இமயனுக்கு கோமேதக லிங்கத்தையும் வருணனுக்கு நீலலிங்கத்தையும், விஷ்ணுவுக்கு இந்திரலிங்கத்தையும், பிரமனுக்கு சுவர்ண லிங்கத்தையும் விச்சுவ தேவர்களுக்கு பார்த்திவ லிங்கத்தையும் அஸ்வினி தேவர்களுக்கு ஸ்திரீகளுக்கும் ஸ்படிக லிங்கத்தையும் இலக்குமிதேவிக்கு தாமிர லிங்கத்தையும் துவாசாதித்தர்களுக்கும் சோமனுக்கும் முத்துலிங்கத்தையும் வழங்கினார் வஜ்ரலிங்கத்தை அக்கினியும், சந்தன லிங்கத்தை மயனும் பவளலிங்கத்தை அநந்தன் முதலிய ஸர்ப்பராஜர்களும், கோமயலிங்கத்தை தைத்தியரும் இராக்ஷஸரும் இரும்பு லிங்கத்தைப் பைசாசங்களும், நவநீத லிங்கத்தைச் சசி முதலிய ஸ்திரீகளால் பூஜிக்கப்பட்ட பார்வதிதேவியும், தாருலிங்கத்தை நிருதியும், பஸ்மலிங்கத்தை யோகியும், மாவுலிங்கத்தைச் சூரியன் மனைவியான சாயா தேவியும் இரத்தின லிங்கத்தை சரசுவதி தேவியும், தயிரால் செய்த லிங்கத்தை யக்ஷர்களும் பெறும்படி விசுவகர்மன் கொடுத்தான்.

அவற்றை வாங்கிய தேவர்கள், முனிவர்கள், பிரமாவிஷ்ணு யக்ஷர் முதலானவர்கள் தமது காரியசித்தியின் பொருட்டு அந்த சிவலிங்கங்களை விதிப்படி அருச்சித்தார்கள், விஷ்ணுபகவான் பிருமன் முதலிய தேவர்களுக்குப் பூஜாவிதியைச் சொல்லியருளினார். அவர்கள் ஆனந்தமுற்றுத் தங்கள் வாசஸ்தானத்தையடைந்தார்கள். விஷ்ணுமூர்த்தியும், அந்தர்த்தானமாயினார். பிருமா சத்யலோகமடைந்து, முன்பு தன்னுடன் க்ஷீராப்திக்கு வராத தேவர்கட்கும் சிவபூஜாவிதியை முறைப்படி உபதேசித்தார்.

25. பாஹ்ய ஆந்தரலிங்கங்கள்

நைமிசாரண்ணிய வாசிகள் சூதமுனிவரை நோக்கி ஞான வள்ளலே! பிரமதேவர், சத்தியலோகஞ் சென்ற பிறகு நடந்தலிருத்தாந்தங்களையும், பிரமதேவர் சிவபூஜா விதியை அவர்களுக்கு உபதேசித்ததையும், எங்களுக்குச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள சூதமுனிவர், உலகத்திலிருப்பவர் அனைவரும் சுகமடைய வேண்டிய விஷயமாக என்னைக் கேட்டீர்கள் இவ்விஷயத்தை முன்பு ஒரு காலத்தில் வியாச முனிவர் சநத்குமார முனிவரைக் கேட்க அதற்கு சநத்குமாரர் சொல்லியபடியே வியாசர் எனக்குச் சொல்லியதை உங்களுக்கு சொல்லுகிறேன் என்று கூறலானார். பிருமதேவர் சத்தியலோகமடைந்த பிறகு தேவர், முனிவர் முதலானோரை நோக்கி சிவபூஜா விதியைச் சொல்லுகிறேன் கேட்க வேண்டும். சகல ஜன்மங்களிலும் துர்லபமான மாநுட ஜன்மத்தில் நற்குலத்தில் அங்கக்கேடின்றி உதிப்பது அருமை. அத்தகைய அரிய பிறவியையடைந்த பிறகு தன் குலத்திற்கேற்ற காரியங்களைச் செய்ய வேண்டுமே தவிர, அளவு கடந்திருந்தால் அக்கருமத்திற்குத் தக்க பலன் கிட்டாது, தன் ஞானத்திற்கு எட்டாத காரியங்களில் யாருமே தலையிடக் கூடாது.

கர்மயாகங்கள் பல்லாயிரஞ் செய்வதைக் காட்டிலும் தீர்த்த யாத்திரை முதலான தபோயாகஞ் சிறந்தது. தபோயாகங்கள் பல்லாயிரத்திலும் ஜெபயாகஞ் சிறந்தது. அந்த ஜப யாகங்கள் பல்லாயிரத்தையும் விட மான்சீக தியானயாகம் சிறந்தது. தியான யாகத்திலுஞ் சிறந்தது பிறிதொன்றுமில்லை. அதுவே ஞானமார்க்கத்திற்குக் காரணம் சர்வ வியாபகமாவுள்ள பரம்பிரம வஸ்துவை யோக புருஷன் தன் தியானத்தினால் தன் இதயத்தில் தரிசிக்கிறான். தியான யாகத்தில் இருப்பவனுக்குப் பரமசிவன் எப்பொழுதும் அருகிலேயே இருப்பார். அவன் பிரம ஸ்வரூபமாயிருப்பதால் சத்கருமங்களை விடுத்தாலும் பிராய சித்தம் வேண்டுவதில்லை, சுகம், துக்கம், அதர்மம், ஜபம், ஓமம், தியானம், யோகம் முதலியவெல்லாம் அவனுக்கு அவசியமில்லை பரமானந்தத்தை உண்டு செய்வதும் பரிசுத்தமானதும், நாசமில்லாததும் நிஷ்களமானதும், ஸர்வ பரிபூரணமாயுள்ளதுமான சிவலிங்கத்தை இதயத்திலிருப்பதாக அவன் எண்ணுகிறான். இந்த லிங்கம் பாஹ்யலிங்கம் ஆந்தலிங்கம் என இரு வகைப்படும். அவற்றுள் பாஹ்யம் என்பது ஸ்தூலமாக (பருமையாக) கண்ணுக்குப் புலப்படுவது ஆந்தரம்-இருதயத்தில் சூட்சமாக (நுட்பமாக) உள்ளது. காம்யாகத்திலிருக்கும் எல்லோரும் பாஹ்பலிங்கார்ச்சனை செய்ய வேண்டும். ஏனெனில் அஞ்ஞானிகளுக்கெல்லாம் பக்தியுண்டாவதற்காக ஸ்தூலத்தில் சூட்சமத்தை பாவனை செய்து பூஜிக்க வேண்டும். ஞானிகளுக்குத் தோஷரஹிதமான சூட்சமலிங்கம் பிரத்யட்சமாகவிருக்கும் அஞ்ஞானிகள் அனைவரும் மண் மரம் இவற்றால் செய்யப்பட்ட லிங்கங்களை பூஜிக்க வேண்டும். தத்வார்த்தங்களை உணர்ந்தவர்கள் இம் மிருத்லிங்கம் (புற்றுமண்லிங்கம்) முதலியவற்றால் பயமின்றிச் சகலமுஞ்சிவ மயம் என்று பாவித்து அகண்ட பரிபூரணமாக விளங்குகிறவன் சிவபெருமானென்று தெரிந்திருப்பார்கள். ஞானிக்கு விக்கிரக ஆராதனை (உருவ வழிபாடு) வேண்டியதில்லை. இத்தகைய ஞானம் இல்லாதவனுக்குப் பிரதிமாகல்பனஞ் செய்து கொள்ள வேண்டுவது அவசியம் உயர்விடத்தில் செல்ல வேண்டியவனுக்கு சொபானம் (மடி) இன்றியமையாதது போல நிர்குணமான சிவலிங்கப் பிராப்தியையடைய வேண்டிய அஞ்ஞானிக்கே பிரதிமா பூஜை விக்கிரக வழிபாடு சொல்லப்பட்டிருக்கிறது சகுண பூஜையால் நிர்குணமான சிவப்பிராப்தி யுண்டாகும்.

இவ்வாறே சகல தேவதாப் பிரதிமைகளும் அவரவர் கோரிக்கையின்படி இஷ்டசித்திகளைக் கொடுக்கின்றன பூஜை செய்பவன் பூஜை செய்கிறேன் என்பதேயில்லாமல் பக்திபரவசமாகி அவனுக்கு ஞானோதியம் உண்டாகும்வரை பூஜிக்க வேண்டும். ஞானமில்லாமல் செய்யும் பூஜையால் பூஜை செய்யும் சந்தனம்-புஷ்பம்-தீர்த்தம் நிவேதனம் ஆகிய அனைத்தும் பயனற்றதாகும் சிரத்தையேதுமில்லாமல் பிரயாமையின்றி பூஜை செய்கிறவனின் பூஜை வியர்த்தமாவதுமின்றி அவனும் அதோலோகப் பிராப்தியடைவான். இதனால் உங்களுக்கு மேலும் பாஹ்யலிங்க பூஜையைச் சொல்லுகிறேன் என்று பிரமதேவர் சொல்லலானார், தேவர்களே ஸ்வஜாதி யுசிதமான கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு எந்தெந்த விக்கிரகத்தில் தனக்குப் பக்தியுண்டாகுமோ அந்தந்தப் பிரதிமையை பூஜை செய்ய வேண்டும். பூஜை தானம் முதலான நற்கருமங்கள் செய்யாவிட்டால் பாதகம் ஒழியாது. பாதகம் ஒழியாவிட்டால் சித்தியுண்டாகாது. மாசுபடிந்த ஆடைகளை படிகாரத்தில் ஊறவைத்த பிறகு தோய்த்துச் சாயம் போட்டால் அந்தச் சாயம் அதில் லேசாக பிடிப்பது போல பாதங்களை ஸ்தூல பூஜையாகிய பிரதிமா பூஜைபோல் போக்கின பிறகு! சூட்சம பூஜையால் ஞானமடைந்து விஞ்ஞானிகளாவர் அந்த விஞ்ஞானத்திற்கு ஞானமும் ஞானத்திற்கு த்ருடபக்தியும், பக்திக்குப் பிரதிமா பூஜையும், பிரதிமா பூஜைக்கு சத்குருவும் சத்குருவையடைவதற்கு சத்சாங்கத்யமும் (நல்லுறவு) காரணமாகும் சத்சாங்கயத்தால் சத்குருவையடைந்து சத்குருவால் மந்தராதிக்க பூஜையும் அந்த பூஜையால் பக்தியும், பக்தியால் ஞானமும் ஞானத்தால் விஞ்ஞானமும் உண்டாவது சத்தியம், விஞ்ஞானிக்கு நான் அவன் என்றும், குமாரன் பிறன் என்றும் சிநேகிதன் பகைவன் என்றும்; மானம் அவமானம் என்றும் லாப நஷ்டம், ஜெயம் அபஜெயம் என்றும் பேதமின்றிச் சம்புத்தி உண்டாகும்.

இத்தகையச் சொந்த புத்தியற்றவன் சிவரூபியாவான், இப்படிப்பட்ட விஞ்ஞானியாக எல்லோரும் ஆவதில்லை, கோடியில் ஒருவனே ஆகிறான் அப்படி உள்ளவனை ஒருவன் கண்டதுமே அவனுடைய சகல பாபங்களும் ஒழிந்துவிடும். பிரதிமாரூபனேதேவர்கள் கூட ஒருவனைப் புனிதப்படுத்த அநேக காலமாகும். விஞ்ஞானியோ அவனைக்கண்ட பொழுதே புனிதமாக்குவான். இல்லறவாழ்க்கையில் இருக்கும் வரையில் பிரதிமா பூஜை செய்ய வேண்டும். சிவரூபமாவது தேவிரூபமாவது, விஷ்ணுரூபமாவது சூரியரூபமாவது கணபதிரூபமாவது அல்லது இந்த ஐந்து ரூபத்தையாவது சகலக் காரணகனான சிவலிங்கப் பெருமானையாவது பூஜிக்க வேண்டும். மரத்தின் வேரில்தான் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்பொழுது தான் அது கிளைகளுக்கும் இலைகளுக்கும் பாயும் அதற்கு மாறாகக் கிளையின் மேல் நீர் வார்த்தால் அது மரத்திற்குப் பயனளிக்காது அது போலவே மரத்தின் வேர் போலுள்ள மூல காரணனான சிவபெருமானைப் பூஜித்தால் அது சகல தேவர்களையும் சார்ந்து திருப்தியைத் தரும் சிவபூஜை செய்யாமல் மற்ற தேவர்களைப் பூஜிப்பது மரக்கிளையின் மேல் சொரிய்யப்படும் நீருக்கு ஒப்பாகும் த்ரியம்பகனாகிய சிவபெருமானைப் பூஜித்தால் கோரிக்கைகள் அனைத்தும் சித்தியாகும் என்று பிரமதேவர் கூறினார்.

26. நித்திய கருமங்கள் கூறல்

சூதர் சொல்லலானார். ப்ராம்ஹ முகூர்த்தத்தில் எழுந்து விஷ்ணுவையும் குருவையும் அன்புடன் துதித்து தேக சுத்தி செய்து கால்கைகள் கழுவி சூரிய உதயத்திற்கு முன் தந்ததாவனஞ் செய்து முகத்தை இரு கைகளாலும் நீர் கொண்டு பதினாறு முறைகள் கழுவி நதி முதலியவற்றில் தேசகால விரோதமின்றி ஸ்நானஞ் செய்ய வேண்டியது(ஆதிவாரம்-சிரார்த்ததினம்-சூரிய சங்கராந்தி கிரகணம். மகாதானஞ் செய்யும் சமயம் புண்ணிய காலம், உபவாசதினம் அசவுச தினங்கள் இந்தச் சமயங்களில் உஷ்ணஜல ஸ்நானம் செய்யக் கூடாது) எண்ணை தேய்த்து நீராட வேண்டியவர்கள் முறையே ஆதிவாரம்(ஞாயிற்றுக் கிழமை) ரோகத்தையும் சோமவாரம்(திங்கள்) தேஜசையும், அங்காரகவாரம்(செவ்வாய்) மரணத்தையும் புதவாரம் லக்ஷ்மிகடாட்சத்தையும் குருவாரம்(விழாயன்) தரித்திரத் தன்மையையும் சுக்ரவாரம்(வெள்ளிக்கிழமை) அசுகத்தையும் சனிவாரம் சுகத்தையும், உண்டாக்குமாதலால் நிசித்த வாரங்களில் (விலக்கு கிழமைகளில்) எண்ணை ஸ்நானம் செய்யக் கூடாது. அப்படி நிசித்த (விலக்கு) வாரங்களில் ஸ்நானம் செய்ய நேரிட்டால், ஆதிவாரத்தில் பூவும், மங்கள வாரத்தில் மண்ணும் குரு வாரத்தில் அருகம் புல்லும் சுக்ரவாரத்தில் ஜலத்துளியும் எண்ணையில் சேர்த்து அப்பியங்கனம் செய்து கொள்ள வேண்டும். நித்யாப்யங்கணஞ் செய்யும் நியதியையுடைவன் பரிமளவஸ்துக்கள் சேர்ந்த எண்ணையிட்டுக் கொள்ளலாம், ஸ்ரார்த்தம்-கிரஹணம் உபவாசம் பிரதமை ஆகிய தினங்களில் கடுகெண்ணெயை உபயோகிக்கலாம். தேசகாரிங்களையறிந்து சாஸ்திரப்படி ஸ்நானம் செய்கையில் வடக்கு திசையாயாவது கிழக்குத் திசையையாவது நோக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். முதல் நாளில் உடுத்திய உடையையும் இராத்திரி உடுத்தியதையும் பிறர் உடுத்திய ஆடைகளையும் கட்டிக்கொண்டு நீராடக் கூடாது. நல்ல உடைகளை உடுத்தி கைக்கால் கழுவி ஆசமனஞ் செய்து(நீராடும் தண்ணிரைக்கங்காதி தீர்த்தங்களாகப் பாவனை செய்து துதித்து) சங்கல்பங்கூறி உடலை நனைத்து மிருத்திகா ஸ்நானம் செய்து உடலைத் துடைத்து மடிவஸ்திரங்கட்டிக் கொண்டு ஆசமனஞ் செய்து கோமயம் முதலியவற்றால் சுத்தி செய்த நல்லவிடத்தில் நல்ல மரத்தால் செய்த ஆசனத்தில் கம்பளம் முதலிய சித்ராசனமிட்டு, அதன் மேல் பட்டாடை பரப்பி அதில் உட்கார வேண்டும் அப்படிப்பட்ட ஆசனஞ் கிடைக்காவிட்டால் மான்தோலின் மேலிருந்து த்ரிபுண்டரம் ஊர்த்துவ புண்டரம் அர்த்த சந்திரம் வமிசபத்திரம்-பாரிஜாத புஷ்பம் ஆகிய இவ்வைந்தில் தமக்குரிய ஒரு வகையாகத் தரித்துக் கொள்ளவும் திரிபுண்டர ஊர்த்துவ புண்டரங்கள் சிவ பக்தர்களுக்குரியவை பிரம்மக்ஷத்திரிய வைசியர்கள் நான்கு வகையான திலகங்களை அணியலாம். அர்த்த சந்திரம் ஊர்த்துவ புண்டரமாகிய இரண்டும் சூத்திரர்க்கு உரியவை வத்சபத்ரம் போன்ற திலகம் விஷ்ணு பக்தர்கள் தரிக்க வேண்டும்.

இவ்வாறு தரித்தால் ஜபம், தபம், தானம் எல்லாம் சபலமாகும், பஸ்மம் (திருநீறு) முதலானது இல்லாவிட்டால் ஜலத்தாலாவது திலகந்தரிக்க வேண்டும். பிறகு தங்கள் குலத்திற்கேற்ற அநுஷ்டானங்களைச் செய்து கொண்டு சிவார்ச்சனை செய்ய வேண்டும். எப்படியென்றால் மந்திர பூர்வமாக மூன்று தரம் அல்லது ஒரு தரம் ஆசமனஞ் செய்து கொண்டு வந்து கங்கையைத் துதித்து (ஆத்மதத்வாய சுவாஹா சிவதத்துவாய சுவாஹா வித்தியாத தத்துவாய சுவாஹா) என்று ஆசமனஞ் செய்து சங்கல்பித்து பூஜாபாத்ர ஜலத்தைக் கொண்டு சிவ பூஜைக்கு வேண்டிய உபகாரணங்களைத் தன் சக்திக்கேற்பச் சேகரித்து மனதைத் த்ருடப்படுத்தி லிங்கஸ்ய ஆக்நேய பாகஸ்த ப்ரகாதி முகமர் ச்சயேத் என்று சாஸ்திரப்படி அக்கினி திசையிலிருக்கச் சிவலிங்கத்தை வைத்து மந்திர குருவைத் தியானித்து அவரைப் பூஜித்து மனதில் குருகடாக்ஷத்தைக் கருதி, மீண்டும் தன் மனவிருப்பத்தைச் சேர்த்துச் சங்கல்பங் கூறி, பரிவார தேவர்களுடன் சிவனைப் பூஜிக்க வேண்டும் சங்கம் சக்ரம் தேனு முதலிய முத்திரைகளில் ஒன்றைக்காட்டி முதலில் சித்தி, புத்தி, சமேதராகியும் லக்ஷன், லாபன், என்னும் புதல்வர்களைவுடைய வர கவும் விளங்கும் விநாயகக் கடவுளை சித்தூர வர்ணமான மலர்களால் பூஜித்து நமஸ்கரித்து க்ஷமார்பணம் செய்து நந்திகேசுவரரை சிவகடாக்ஷங் கைகூடும்படி பூஜித்து கைகூப்பி வணங்கி துவார பாலகராகிய மகாதரரை பூஜித்து பார்வதி தேவியை சந்தன, குங்குமம், தூப தீப நைவேத்தியங்களால் அர்ச்சித்துப் பணிந்து சிவசன்னதி கல்பித்துக் கொண்டு தன் வீட்டில் பாத்திரம் பொன், வெள்ளி, இரத்தினம், முதலியவற்றால் செய்யப்பட்ட சரலிங்கமூர்த்தியையாவது ஸ்தாபித லிங்கமூர்த்தியையாவது அன்புடன் பூஜிக்கலாம் இதற்குப் பிராணப் பிரதிஷ்டையும் பூசித்தி பூதசுத்திகளுஞ் செய்து கொண்டு திக்பாலகர்களைப் பூஜிக்க வேண்டும் மூல மந்திரத்தாலேயே சிவபூஜை செய்ய வேண்டும் வீட்டில் சிவபூஜை செய்கையில் துவாரபாலக பூஜாநியமம் வேண்டியதில்லை ஆனால் பரிவாரங்களோடு கூடிய சிவபெருமானே என்று பாவனாமாத்திரமாகப் பூஜை செய்ய வேண்டியது பத்மாசனமாவது பத்ராசனமாவது உத்தானாசமாவது. பர்யநிகாசனமாவது செய்து உட்கார்ந்து ஆதிசைவர்களைக் கொண்டாவது தானேயாவது பூஜை செய்யவும் அர்க்யம் பாத்யம் கொடுத்து தண்ணீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும் நிர்ச்சலமான மனதுடன் இனிச் சொல்லப்படும் மந்திரத்தால் ஆவாஹனஞ் செய்ய வேண்டும்.

கைலாச ஸிகரஸ்தஞ்ச பார்வதீபதி முத்தமம்
யதோக் த்ரூபிணம் தேவம் நிர்குணம் குணரூபிணம்

பஞ்சவக்த்ரம் தஸ்புஜ த்ரிநேத்ரம் வ்ருஷபத்வஜம் 
கர்பூர கௌரகம் திவ்யம் சந்த்ர மௌளிம்கபர் திநம

வ்யாக்ரசர் மோத்தரீயஞ்ச கஜசர்மாம் பர்ம்ஸுபம்
வாசுக்யாதி பரீதாங்கம் பிநாகாதி விபூஷிதம்

கபாலட மருயுக்தஞ்ச கண்டே கரள ஸோபிதம்
ஸித்தயோஷ் டௌச யஸ்யாக்ரே ந்ருத்யந் தீஹ நிரந்தரம்

ஜயஜயேதி ஸப்தைஸ்ச ஸேவிதம் நிஜபக்தகை;
தேஜஸா துஸ்ஸஹேநைவஸம்பத்தம் தேவ ஸேவிதம்

ஸரண்யம் ஸர்வஸத் வாநாம் ப்ரஸந்நமுக பங்கஜம்
வேதஸாஸ்த்ரைர் யதாகீதம் ஸிவமாவாஹயாம் யஹ;

(இதன் தமிழ் பொருள்) கைலாச சிகரத்தில் இருப்பவரும், பார்வதி நாயகரும், உத்தமரும், நிஜஸ்வரூபியும், நிர்குணரும். சுகுணரும், ஐந்து முகங்களும் பத்து கரங்களும், திரிநேத்திரங்களும் ரிஷபக்கொடியும், கற்பூரம் போன்ற வெள்ளிய திருமேனியும் பிரகாசமும், சந்திர சேகரமும் சடையும் புலித்தோல் ஆடையும் யானைத் தோலுடையும் சுந்தர வடிவமும் வாசுகியாதி சர்ப்பங்கள், பிநாகயல்லாதிவியவற்றால் அலங்காரமும் கபால டமருகமும் நீலகண்டமும், அணிமாதியஷ்ட சித்திகளின் நிருத்தமுடைய சன்னதியும் நிஜபக்தர்கள் ஜயஜயதொனியோடு சேவித்தலும் தேஜோரூபியும்! தேவர்களால் சேவையும் சர்வரக்ஷணமும், பிரசன்ன முகபதுமமும் வேதசாஸ்திரங்களாற் புகழப்படுவதுமுடைய சிவபெருமானை ஆவாஹநஞ் செய்கிறேன்! என்பதாகும்.

27. சிவபூஜா விதிமுறைகள்

சூதமுனிவர் சொல்லலானார். பூஜா பாத்திரத்திலிருக்கும் ஜலத்தால் இலிங்கமூர்த்திக்கு அபிஷேகம் செய்யலாம். மகாபிஷேகம் செய்யும் பொழுது சேகரித்து அருகே வைத்துள்ள வேறு நன்னீராலும் அபிஷேகிக்கலாம் முன் அத்தியாயத்தில் சொல்லிய மந்திரம் சொல்லமுடியாவிட்டால் (யதோக்த்ரூபிணம் ஸம்பும் சிவமாவாஹயாம்யஹம்) மேற்கூறிய முறைப்படியே சிவபெருமானை ஆவாஹனம் செய்கிறேனென்று இலங்கிமூர்த்தத்தில் சிவபெருமான் இருப்பதாகப் பாவித்து விதிப்படி உபசாரங்கள் செய்ய வேண்டும். முன் சொல்லிய தோத்திரத்தைக் கூறி ஆசனங் கொடுக்க வேண்டும். சிவாய நம சொல்லி ÷ஷாட ச உபசாரங்களைச் செய்ய வேண்டும். அப்படியே கூறி சர்வவியாபியான பெருமானுக்குப் பாத்யம் ஆசமனங் கொடுத்து வேதமந்திரங்களால் பஞ்சாமிர்தமும் தான் விரும்பிய பழங்களும் அத்தர் பனிநீர் சந்தன முதலிய பரிமள திரவியங்களும் சுத்த ஜலமும் அபிஷேகித்து, தான் கையெட்டுந் தூரத்திலிருந்து சந்தனாபிஷேகஞ் செய்து ஆயிரத்தெட்டு அல்லது நூற்றெட்டுத் தாரைகளையுடைய ஜல பூரணகும்பத்தை மேலே கட்டி வேத மந்திரங்களாலாவது ஆறு மந்திரங்களோடு கூடிய ருத்திரஸுக்த மந்திரத்தாலாவது ஏகாதச ருத்திர மந்திரத்தாலாவது தன்னால் கூடியவரையில் அபிஷேகித்து வஸ்திரத்தால் ஒத்தி, ஆசமநியம் (உட்கொள்ளல் நீர்) கொடுத்து ஆடை தரிக்கச் செய்து! யஜ்ஞோபவீதமும் (பூணூல்) சமர்ப்பித்து. சந்தனம் வெள்ளை யக்ஷதை இவற்றையிட்டு (திலாஸ்சைவ யவாவாபி கோதூமா மாஷகாஸ்ததா, அர்ப்பணீமா-ஸிவாயைவமந்த்ரைர் நாநாவிதைரபி(14) என்ற படி அக்ஷதையாக எள்ளாயினும் எவையாயினும் கோதுமையாயினும் உளுந்தாயினும் தரிக்கலாம். எள் பாபத்தைப் போக்கு மென்றும்யவை (கோதுமையில் ஒருவகை) அன்னபாக்கியமும் கோதுமை தேகபுஷ்டியும் மாஷம்(உளுந்து) வம்சவிருத்தியுஞ் செய்யும் என்பார்கள்-பிரணவரத் நமோந் தகமாகிய சிவமந்திரத்தால் தாமரை, கொன்றை ஆத்தி, மல்லிகை ரோஜா, வில்வம், தர்ப்பை, அறுகு, கரூவூமத்தை துளசி இலை போன்ற தனக்குக் கிடைத்த புஷ்பங்களையோ அல்லது பத்திரங்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

வீட்டிலிருக்கும் சரலிங்கத்தையாவது அசரலிங்கத்தையாவது தானும் சன்னிதானத்தில் இருக்கும் பரார்த்த லிங்கத்தை ஆதிசைவரைக் கொண்டும் மேற்சொன்னவாறு பூஜை செய்த பிறகு பரிமளம் பொருந்திய குங்கிலியம், அகர், சந்தனத்தூள், சாம்பிராணி முதலியவற்றைத் தூபமிட்டு, ஏகார்த்தி, திடயார்த்தி, த்ரியார்த்தி, சதுரார்த்தி பஞ்சார்த்தி என்ற தீபங்களைக் கட்டி திடதீபங்களைக் காட்டி(ரூபந்தேஹி ஜயந்தேஹி பாக்யம் பகவான் தேஹமே புத்தி முக்தி பலம் தேஹி க்ருஹீத்வார்ச்யம் ஸிவாதுநா) பரமேஸ்வரா! நான் தேவரீருக்குச் சமர்ப்பிக்கும் அர்க்கியத்தை ஏற்று எனக்குச் சவுந்தர்யத்தையும் ஜயத்தையும் பாக்கியத்தையும் கொடுக்க வேண்டும் புத்தி, முக்தி பலவிதமான நிவேதனங்களைச் செய்து ஐந்து வர்த்திகளையுடைய தட்டுத்தீபத்தைக் காட்டி கர்ப்பூரதீபராதனை செய்து தாம்பூலம் கொடுத்து வலம் வந்து வணங்கி, குரு உபதேசித்தப்படி மந்திரங்களால் துதித்து ஐந்தெழுந்து மந்திரத்தை ஜெபித்து பலவித சிவ ஸ்தோத்திரங்களைக் கூறி

தாவ கஸ்த்வத் கதப்ராணஸ் தச்சித்தோஹம் ஸதாம்ருடா
கிருபாநித இதிஜ ஞாத்வா பூதநாதா ப்ரஸீதமே

என்றபடி நான் உம்முடையவன், உம்மிடத்தில் பிராணனுடையவன் உம்மிடத்திலேயே மனதையும் உடையவன் கிருபாநிதியே சகல பிராணிகளுக்கும் பிரபுவே, பூதநாதா எனக்கு நீர் பிரசன்னராக வேண்டும் என்று மலர் தூவி புஷ்பாஞ்சலி செய்து வணங்கி! க்ஷமாபணம் செய்து நான் மீண்டும் பூஜை செய்யும்போது இங்கு எழுந்தருள வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும்.

28. சிவபூஜைக்கு உரிய மலர்களும் தாரையும்

நைமிசாரண்ய வாசிகள், சூதமா முனிவரைப் பார்த்து வியாசரின் சீடரே! சிவபெருமானை எந்தெந்த மலர்களால் பூஜித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? என்று கேட்டார்கள். சூதமா முனிவர் கூறலானார். தவஞானிகளே! பெருஞ் செல்வம் பெற விரும்புவோன் தாமரை மலர், வில்வம், சதபத்திரம் ஸங்கபுஷ்பம் ஆகியவற்றால் லக்ஷணக்கணக்கில் பூஜித்தால், சந்தேகமில்லாமல் பெருஞ் செல்வத்தைப் பெறுவான்.

தாமரை மலர்கள் இருபது கொண்டது பிரஸ்தம், சதபத்திரம் ஆயிரம் கொண்டது அர்த்த பிரஸ்தம் வில்வதளம் ஆயிரம் கொண்டது பிரஸ்தம்(பதினாறு பலம் எடையுடையது பிரஸ்தம்) மஹாபூஜையில் மலர்களைக் கொண்டு பூஜிக்கும்போது மலர்களை எண்ணிக்கொண்டே பூஜிப்பது தவறாகையால் இப்படி நிறுத்துப் பூஜிக்க வேண்டும்.

இராஜ போகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்து கோடி மலர்களால் பார்த்திவலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும், அல்லது பத்து கோடி வில்வதளத்தை சுகந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜிக்க வேண்டும் இதற்குத் தாமரை மலர்கள் அல்லது சங்க புஷ்பங்கள் பூஜிக்கத் தக்கவை பிறகு தூபதீப நைவேத்ய, அர்க்ய, ஆரார்திக பிரதக்ஷிண, நமஸ்கார, க்ஷமாபண, விஸர்ஜனம் முதலியவற்றைச் செய்தால், இஷ்ட போகமும் ராஜரீகமும் உலகநாயகரான சிவபெருமான் திருவருளால் கிடைக்கும்.

பிரதானித்துவத்தை விரும்புவோன். ஐந்து கோடி மலர்களாலும் சிறையிலிருந்து நீங்க விரும்புவோன் லக்ஷம் புஷ்பங்களாலும் நோய் நீங்க விரும்புவோன் ஐம்பதாயிரம் மலர்களாலும், அழகான மங்கையை மணஞ்செய்து கொள்ள விரும்புவோன் இருபத்து ஐயாயிரம் மலர்களாலும் கல்வியில் விருப்பம் கொண்டவன் பன்னிராயிரத்து ஐநூறு மலர்களாலும் பகைவன் வெற்றி கொள்ள விரும்புவோனும் பகைவனை ஊரை விட்டு விரட்ட விரும்புவோனும் பத்தாயிரம் மலர்களாலும் பூஜிக்க வேண்டும். மாரணஞ் செய்ய விரும்புவோன் நான்கு லக்ஷம் மலர்களாலும் மோகனஞ் செய்ய வேண்டியவன் இரண்டு லட்சம் மலர்களாலும் ஒரு பிரபுவை வெல்ல விரும்பியவன் கோடி மலர்களாலும் வசியஞ் செய்யவும் கீர்த்தியடையவும் வேண்டியவர்கள் பதினாயிரம் மலர்களாலும் முக்தி வேண்டியவன் ஐந்து கோடி மலர்களாலும் ஞானம் வேண்டியவன் கோடி மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிவபெருமான் பிரத்தியட்சமாக வேண்டியவன் அரைக் கோடி மலர்களாலும் அர்ச்சித்து மிருத்யுஞ்சய மந்திரத்தை ஐந்து லக்ஷம் உரு ஜபிக்க வேண்டும், லக்ஷ மலர்களால் செய்த அர்ச்சனை தேகத் தூய்மையையும் இரண்டு லட்சத்தில் செய்தது ஜன்மாந்தர ஞானமும் மூன்று லட்சத்தால் கர்மநாஞானமும் நான்கு லட்சத்தால் ஸ்வப்னதரிசனமும், ஐந்து லட்சத்தால் சிவப்பிரத்தியக்ஷமும் பத்து லட்சத்தால் எல்லாம் பயன்களும் கைகூடும்

முக்தி நிலை அடைய விரும்புவோன் லட்சம் தருப்பையாலும் தீர்க்காயுளை விரும்புபவன் லட்சம் அறுகினாலும் புத்திரப் பேற்றை விரும்புபவன் லட்சம் கருவூமத்தையாலும் புகழை விரும்புபவன் லட்சம் அகத்திப் பூவினாலும் சித்தி முக்திகள் வேண்டியவள். லட்சம் துளசியாலும் சத்துருக்ஷ்யம் வேண்டியவன். லட்சம் லட்சம் வெள்ளெருக்கமலர் மாதுளைமலர் உற்பல மலர், சப்பாத்தி மலர்களாலும், ரோக நீக்கம் விரும்பியவன் கரவீர மலர்களாலும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தை வேண்டுவோன் அதஸிப் பூவினாலும் முக்திகாமி வன்னியினாலும் அழகான பெண்ணை அடைய விரும்புவோன் மல்லிகையாலும் தானிய சம்பத்தை வேண்டியவன் மலை மல்லியாலும் வஸ்திர சம்பத்தை வேண்டியவன் கோங்க மலராலும் மனநிர்மலத்தை வேண்டுவோன் நிர்க்குண்டியாலும் பூஜிக்க வேண்டும். சிவப் பிரீதியான மலர்கள் கிடைக்கா விட்டால் சண்பகம், தாழை தவிர்த்து, இதர மலர்களால் பூஜிக்கலாம் இவ்விரண்டு மலர்களும் சிவபூஜைக்கு யோக்கியமற்ற மலர்கள்  இவை அவ்வாறு நீக்கப்பட்டதற்கான காரணத்தைப் பின் சொல்லுகிறேன். சிவப்பிரீதியான மலர்கள் லட்சங்கொண்டு அர்ச்சித்தால் அனந்தமான பயன்கள் கிடைக்கும் இனி சிவபெருமானுக்குத் தான்யம் சமர்ப்பிக்கும் பயன்களைச் சொல்லுகிறேன்.

சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசியை) லட்சம்(ஒன்பது பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும். இது போதாயன முனிவர் அருளிய ருத்ரநியாஸ விதானப்படி சுந்தர வஸ்திரந்தரித்துப் பிறகு சமர்ப்பிக்கத் தக்கது. இதற்கு வில்லப் பழத்தை வைத்து தூபதீப ஆராதனைகள் செய்தால் பூஜாபலன் கைகூடும் இவ்வாறு செய்பவன் இருபது அந்தணருக்கு அன்னமிட்டு நூற்றெட்டு ஸ்ரீருத்திர காயத்திரி ஜெபிக்க வேண்டும். எள் அட்சதை பதினொரு பலம் சமர்பித்தால் சகல பாபங்களும் நாசமாகும். இதற்குப் பிராமண பூஜையும் செய்ய வேண்டும். யவை அட்சதை லட்சம்( எட்டரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுவர்க்க போகம் கிடைக்கும். இதற்கு பிரஜாபத்யகிருச்சிரத்திற்குச் செலவாகும் தொகையைப் பிராமண போஜனத்திற்குச் செலவிடலாம். கோதுமை அட்சதை லட்சம் (நூற்று இருபத்தெட்டு பலம்) சமர்ப்பித்தால் ராஜாதிபத்தியம் உண்டாகும். இதற்கும் மேலே சொன்ன அளவு பிராமண போசனம் செய்விக்கப்பயறு அக்ஷதை லட்சம் (ஏழரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுக ஜீவனமும் உண்டாகும், உளுந்து அட்சதை லட்சம் (பதினைந் தரைப் பிரஸ்தம்) சமர்ப்பித்தால் இஷ்டகாமியங்கள் கிடைக்கும் இதற்கு பதினொரு பிராமணரை போக்ஷிக்கவும் சாமைதினை முதலிய தானிய அட்சதை (சுமார் ஒரு பிரஸ்தம்) சமர்ப்பித்தால் அறம், பொருள், இன்பம், வீடு (கர்ம அர்த்த காம மோட்சங்கள்) கிடைக்கும். இதற்குப் பன்னிரண்டு பிராமணர்களுக்கு அன்னமிடவும் கடுகு இலட்சம் (இருபது பலம்) சமர்ப்பித்தால் சத்துரு மாரணமாகும் இதற்கு நூற்றியொரு பிராமண போஜனமும் ஒரு கோதானமும் ஒரு ரிஷபதானமும் செய்க, இவை தவிர வேறு பல விதமான தானியங்களாலும் பூஜை செய்யலாம் துவரை இலையை குங்குமம் கலந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜித்தால் பற்பல பயன்கள் சித்திக்கும் இவ்வாறு சூத முனிவர் கூறியதும் நைமி சாரண்யவாசிகள் அவரை நோக்கி, சிவஞானச் செல்வரே! தானியங்கள் ஒரு லட்சம் எவ்வளவு எடையிருக்கும் என்று சொன்னீர்கள்? இனி மலர்கள் லட்சத்துக்கு எவ்வளவு எடையிருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் சொல்லலானார்

முனிவர்களே, சங்கு புஷ்பம் ஒரு பிரஸ்தமும் ஜாதி மல்லிகை இருபது பிரஸ்தமும், திலபுஷ்பம் பத்தொன்பது பிரஸ்தமும், கரவீரம் நாற்பது பிரஸ்தமும் நிர்க்குண்டி நாற்பது பிரஸ்தமும், கோங்கு திரிசனம் இவை பத்துப் பிரஸ்தமும் லட்சம் மலர்களாகையால் பிற மலர்களை இவ்வாறே எடை நிர்ணயித்துப் பூஜிக்க வேண்டும். இனித் தாரா பூஜையைச் சொல்லுகிறேன்.

சிவலிங்கப் பெருமானின் மீது சொரியும் படி தாராபாத்திரங்கட்டி, அதனால் பூசித்தால் ஜ்வரம் முதலியவை நீங்கும் சதருத்திரம் ஏகாதசருத்திரம், ருத்திரம் புருஷஸுகம், மிருத்யுஞ்ஜயம், காயத்திரி சிவ நாமங்கள் முதலியவற்றாலும், ஆகம யுக்தமான பத்திரங்களாலும் தாரா பூஜையைச் செய்ய வேண்டும் ஜலதாரை பூசையால் சுக விருத்தியும் சந்தான விருத்தியும் கைகூடும். நெய்யைத் தாரா பாத்திரத்தில் சொரிந்து அபிஷேகம் செய்தாலும் செய்வித்தாலும் வமிச விருத்தியும் ரோக நாசமும் உண்டாகும், இது நபும்சகம் வந்தபோது, பத்தாயிரம் மந்திர ஜபத்தோடும், பிரசபத்ய கிருச்சிர செலவின் அளவு தொகைக்கு பிராமண போஜனத்தோடு செய்யத்தக்கது, சர்க்கரை கலந்த பாலை தாரா பாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் ஒருவன் தன்மேல் செய்த பிரயோகம் ஒழியும். இது பதினாயிரம் மந்திராஜபம் முடியுமளவும் தாரை பொழிய வேண்டும். சத்துரு உச்சாடனமும் பயமும் நீங்கும். பரிமளங் கலந்த தைலதாரை சத்ருக்களைத் தொல்லைப்படுத்தும், தேன் தாரைபற் பல ரோகங்களைப் போக்கும். கருப்பஞ்சாற்று தாரை சகல துக்கங்களையும் ஒழிக்கும், சுத்தமான ஜலதாரை மோட்சப்பலன் கொடுக்கும். இவை ஒவ்வொன்றும் தீமையை அகற்றி சுகத்தை கொடுக்கத் தக்கவை, இவற்றைப் பதினாயிரம் மந்திர சபத்தோடும் பதினொரு பிராமண போசனத்தோடும் செய்வித்தால் இஷ்டகாரியங்கள் கைகூடும். முனிவர்களே! நீங்கள் கேட்டவற்றுக்குதக்க பதிலை சொன்னேன். இவ்விதமாகப் பூஜித்தவர்கள் சகலபாபங்களும் நீங்கப்பெறுவர், ஸ்கந்தர், பார்வதி, கணேசர் இவர்களுடன் கூடிய சிவபெருமானை ஒருமுறையாவது பூஜித்தவனுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கைகூடி கோடி சூரியப் பிரகாசமான விமானத்தில் ஏறி அவ்வுலகை அடைந்து அங்கு அநேக தேவதாசிகள் நடனம் செய்யவும் இன்னிசை முழங்கவும் சிவபெருமானைப்போல, எந்த உலகத்தில் எவ்வளவு காலம்வாழ வேண்டும் என்று விரும்புவார்களோ, அவ்வுலகத்தில் அத்தனைக் காலம் அப்படியே வாழ்வார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை.

29. தாழம்பூ பெற்ற சாபம்

சூத புராணிகரே; நீங்கள் தன்யர் அதிக புண்யர். நீங்கள் சொன்ன சிவ மஹாத்மியத்தைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அதில் சண்பகம், தாழை என்ற இரண்டு மலர்களும் சிவ பூஜைக்கு அருகதையற்றவை என்று சொன்னீர்களே? அதற்கு காரணம் என்ன? என்று நைமிசாரண்ய வாசிகள் கேட்டார்கள்.

சூதமாமுனிவர் கூறலானார்.

ஒரு காலத்தில் ஸ்ரீராமர் லக்ஷ்மணரோடும் சீதையோடும் தன் தந்தையின் கட்டளைப்படி வன சஞ்சாரம் செய்யச் சென்ற போது பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார்கள். அந்தக் காலத்தில் தன் தந்தையின் சீரார்த்த தினம் வந்தது. வரவே இன்று அந்தத் திதியை எவ்வாறு முடிப்போம் என்று யோசித்துத் தம்பியாகிய இலக்ஷ்மணனைப் பார்த்து, தம்பீ! நீ அருகேயிருக்கும் கிராமத்துக்குப் போய் கொஞ்சம் தானியங்களைக் கொண்டுவா! என்று கட்டளையிட்டார். இலக்ஷ்மணன் நாணத்துடன் சென்று சீரார்த்த காலம் சமீபிக்கும் வரையில் திரும்பி வராததால் காலங்கழியும் என்பதையறிந்து இராமபிரானும் அங்குசென்றார். சீதை மட்டும் தனியாக இருந்தாள். அவள் நாம் பகலில் செய்ய வேண்டிய சிரார்த்தத்துக்குத் தேவையான சாமான்கள் இல்லையே? நம் கொழுந்தனும் கணவனும் இன்னும் வரவில்லையே? எப்படி இந்தச் சிரார்த்தத்தை முடிப்பது சிரார்த்த காலமும் கழிந்து போகிறதோ? இனி ஆசுர காலம் வருமே என்று விசனத்துடன் நெடு நேரம் யோசித்தாள். பிறகு விதிப்படி நீராடினாள். தாபசம், இங்குதி என்ற பழங்களைக் கொண்டு வந்து அவற்றை நெருப்பிலே அவித்து மணல் மேட்டில் காத்திருந்தாள். அப்பொழுதும் அவர்கள் வராததால், பிதுர்க்களுக்கு உரிய பிண்டத்தை நான் எப்படிக் கொடுப்பேன் என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு கிடைத்த சிறிதுமாவை பிண்டமாகச் செய்து இது என் மாமனாரான தசரதராஜருக்கு அர்ப்பணமாக வேண்டும் என்று நினைத்தாள். அப்போது பிதுர்க்கள் வந்து நாங்கள் நீ செய்த சிரார்த்தந்தில் திருப்தி அடைந்தோம். சீதா பல பூஷண அலங்காரமான உன் கையால் நாங்கள் பிண்டம் பெற்றதில் மகிழ்ந்தோம் என்று அதை ஏற்று நிற்கும் போது, சீதாதேவி அவர்களை நோக்கி நீங்கள் யார்? என்று கேட்க அதைக் கேட்ட பிதுர்களில் சீதையின் மாமனாரான தசரதர்: நல்ல நியமம் உடையவளே! நான் உன் மாமன், நீ கொடுத்த பிண்டம் எங்களைத் திருப்தி செய்தது அது சபலமாயிற்று சீதை என்றார். அவர்களை நோக்கி நீங்கள் நான் கொடுப்பதை உங்கள் கையால் ஏற்றுக் கொண்டீர்கள். இதை என் கணவர் கேட்டால் நம்பமாட்டாரே! என்றாள்.

அதற்குத் தசரதர் சீதையே நோக்கி, அவ்வாறாயின் தக்க சாட்சிகளை வைத்துக் கொள் என்றார். அச்சமயத்தில் அங்கிருந்த பல்குநதி, பசு, அக்கினி, தாழை என்ற நான்கையும் சீதை பார்த்து, நீங்கள் நால்வரும் இதற்குச் சாட்சியாக இருந்து என் கணவருக்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும் என்றாள். பிதுர்களும் சென்று விட்டார்கள் பிறகு ஸ்ரீராமன் வந்தார். வந்தவர் சீதையைப் பார்த்து சீதை! விரைவில் உன் காரியங்களைச் செய்! உன் மாமன் வருவார் என்றார். அதைக் கேட்ட ஜானகி ஆச்சிரியப்பட்டு நடந்தவை எதையும்சொல்லாமல் இருந்தாள். அவள் தாமதிப்பதைக் கண்ட ஸ்ரீராமர், நீ ஏன் இப்படி சும்மா இருக்கிறாய்? என்று கேட்டார். சீதை நடந்தவற்றையெல்லாம் ஒன்று விடாமல் சொன்னாள். அதைக் கேட்டதும் ஸ்ரீராமர் தம் தம்பி லக்ஷ்மணரை நோக்கி, தம்பீ, நீ சீதை சொன்னதைக் கேட்டாயா? என்றார். சீதையைப் பார்த்து, பெண்ணே! நாங்கள் எவ்வளவு சாஸ்திரோக்தமாகச் செய்தாலும் எங்களுக்கு பிரத்யட்ச மாகாத பிதுர்கள் உன் கண்ணெதிரில் தோன்றினார்கள் என்பது அபத்தம் என்றார். அதைக் கேட்ட சீதை ஸ்வாமி! நான் பொய் சொல்லவில்லை எனக்குச் சாட்சிகளும் உண்டு. அச்சாட்சிகளை நீங்களே விசாரித்துக் கொள்ளலாம் என்றாள். ஸ்ரீராமர் சாட்சிகளிருந்தால் நீ சொல்வது நம்பத் தக்கதே என்றார். உடனே சீதை அந்த நான்கு சாட்சிகளையும் காட்டி இவர்களே சாட்சிகள் என்றாள். சாட்சிகள் இராமர் முன்பு உண்மையைச் சொல்லப் பயந்து நாங்கள் அதை அறியோம் என்றன. இராமரும் லட்சுமணரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, நான் வழக்கப்படி சிரார்த்தம் செய்யவேண்டுவதே, ஆகையால் விரைவில் சமையல் செய்! என்று சீதைக்குக் கட்டளையிட்டார். சீதையும் துக்கித்து சமையல் செய்து கொண்டிருந்தாள்.

அப்போது இராமர் சங்கல்பம் செய்து சிரார்த்தத்திற்கான பிராமணர்களை ஆவாஹனம் செய்தார். அப்போது சூரியனின் அருகிலிருந்து ஓர், வானொலி புத்திரனே! ஏன்? ஆவாஹனம் செய்கிறாய்? நாங்கள் ஜானகி செய்த சிரார்த்தத்தாலேயே திருப்தியடைந்தோம் என்று கூறியது. ஸ்ரீராமரோ, நான் ஜானகி சொன்னதை உண்மை என்று ஏற்றுக் கொள்வதற்கில்லை என்றார். அப்போது பிதுர்க்களின் வான்குரல் செய்த சிரார்த்தத்தை மீண்டும் செய்யக்கூடாது என்று கூற இராமர் அதை நம்பாது யோசிக்கும்போது சூரியபகவான் ஸ்ரீராமர் முன்பு பிரத்யட்சமாகி நீயேன் மீண்டும் சிரார்த்தம் செய்கிறாய்? என்றார். உடனே ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் சீதையைப் பார்த்து நன்றாக இருக்கிறது சீதா! நீயே புண்ணியசாலி! என்று புகழ்ந்தார்கள். பிறகு அவர்கள் அவள் செய்த பாகத்தை புசித்தார்கள். ஸ்ரீராமர் தம்பியைப் பார்த்து, லக்ஷ்மணா! இவர்கள் சாட்சியாகக் கோரப்பட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள்... துன்மார்க்கர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சீதை அந்த சாட்சிகளைப் பார்த்து கோபத்துடன் நீங்கள் உண்மையை என் கணவருக்குச் சொல்லாததால், பல்கு நதியே நீ அந்தர்வாஹினியாக இருக்க வேண்டும் தாழம்பூவே நீ என்னால் பூஜிக்கப்படும் பரமேஸ்வரனுக்கு பூஜாயோக்கியமின்றிப் போவதே உனக்குத்தகும். பசுவே உனக்கு வாய் யோக்கியமற்று போவதால் நீ பின்புறத்தில் யோக்கியமும் முகத்தில் அயோக்கியமும் ஆவாய்! அக்கினியே! எல்லா தேவர்களுக்கும் முகஸ்வரூபியாகிய நீ இதனால் எல்லாவற்றையும் தின்றெரிக்கும் சர்வபக்ஷகவாக வேண்டும் என்று சபித்தாள். அந்நால்வரும சீதையின் சாபத்தைப் பெற்றார்கள். அன்று முதல் அந்நான்கும் சாபத்தின்படியே ஆயின. தாழம்பூவுக்கு ஏற்பட்ட சாபத்தின் கதை இதுதான் இனி சண்பகப் பூவுக்கு சாபம் வந்ததைச் சொல்கிறேன்.

30. சண்பகப்பூ பெற்ற சாபம்

நைமிசாரணயவாசிகளே! உலகங்கள் அனைத்திற்கும் சுகத்தைக் கொடுக்கும் சிவபெருமான், கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயர் பெற்றுத் தென் திசையில் இருக்கிறார். அவரது தரிசனத்தால் பாபங்கள் எல்லாம் நீங்கும். ஒரு காலத்தில் நாரத முனிவர் அங்கு வந்தார். அப்படி வரும்போது பரிமளம் மிகுந்த சண்பகமலர்கள் நிறைந்த மரம் ஒன்றையும் அதன் அருகே மலர் கொய்ய வந்த தேவியர் ஒருவரையும் கண்டார். அந்த வேதியர், நாரதரையும் அவர் கையில் ஏந்தியிருந்த மகதி என்ற வீணையையும் பார்த்தார். அதன் நாதத்தைக் கேட்டுச் சிறிது நேரம் அங்கிருந்துதான் செய்து வந்த வேலையைச் செய்யாமலே இருந்தார். நாரதர் அவரைப் பார்த்து மறையோனே! நீ கையில் பாத்திரமேந்தி இங்கு வந்த காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு வேதியர் உண்மையைச் சொல்லாமல், நான் பிச்சையெடுக்கப் போகிறேன் என்றார். பிறகு நாரத முனிவர் அங்கிருந்து ஈஸ்வரசன்னதியின் உள்ளே சென்று, இறைவரைத் தரிசித்து மீண்டும் வெளியே வரும்போது வேதியரைக்கண்டார் அந்தப் பிராணரோ நாரதர் அறியாதவாறு கொய்த மலரைப் பூஜித்துத் தன் கையிலிருந்த பாத்திரத்தை மறைத்துக் கொண்டு வெளியே வந்தார். இருவரும் சந்தித்தார்கள் நாரதர் வேதியரை நோக்கி, நீர் எங்கேயிருந்து வருகிறீர் என்று கேட்க அதற்கு அவர் நான் எங்கும் பிச்சை கிடைக்காததால் போகிறேன் என்று பொய் சொன்னார். நாரதர் தமது ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து சண்பக மரத்தின் அருகே சென்று மரமே! அந்த வேதியர் எங்கே போனார்! உன்னிடமிருந்து எத்தனை மலர்களைக் கொய்தார்? என்று கேட்டார்? ஆனால் வேதியர் தன் வரலாற்றை ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று தன்னிடம் சொல்லியிருந்தால் அந்த மரம், அந்தப் பிராமணர் யார்? மலர்கள் ஏது? நீர் யாது? என்னை ஏன் இக் கேள்விகளையெல்லாம் கேட்கிறீர்? என்று கேட்டது. நாரதர் உண்மையை அறிந்து சிவ சன்னதியை மீண்டும் அடைந்து சிவபெருமான் பூஜை செய்திருந்த மலர்களைக் கணக்கிட்டுப் பார்த்தார். நூற்றியொரு மலர்கள் இருந்தன.

இப்படியிருக்கும்போது மற்றொரு வேதியர் மலர்களைக் கொண்டு வந்து சிவலிங்கப் பெருமானைப் பூஜித்தார், அவரைப் பார்த்த நாரத முனிவர் நீ யார்? எதற்காக பூசை செய்கிறாய்? இந்தப் புஷ்பங்களெல்லாம் இதற்கு முன்பு யாரால் கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்டன? என்று கேட்டார். அதற்கு அந்த வேதியர் உண்மையைச் சொன்னார். ஐயா! நான் சதா சிவபூஜை செய்து முக்தியடைய வேண்டி இங்கு வந்தேன். இதற்கு முன் இங்கு வந்து பூஜித்த பிராமணர் இராஜ அனுக்கிரகத்தைப் பெற வேண்டும் என்று சிவபெருமானை தினந்தோறும் நூற்றியொரு சண்பக மலர்களால் அர்ச்சனை செய்து அவ்வாறே ராஜப் பிரியமடைந்து, அரசனால் செல்வம் பெற்று மற்றுமுள்ள மறையோரை வாட்டி வருத்துகிறார். இந்த சண்பகமலரின் சிறப்பைக் கண்டு பெருமையடைந்து இன்னமும் இங்கு வந்து பூஜிக்கிறார், நான் மோட்சம் அடையவேண்டும் என்று நான் பூஜிக்கிறேன், என்றார். நாரதர் உண்மையைச் சொன்ன அந்த அந்தணரைப் பார்த்து உனக்கு நிரந்தர முக்தி கிடைப்பது சத்தியம் என்று சொல்லி விட்டுச் சிவபெருமானின் சன்னதிக்குச் சென்று, சுவாமி! அந்த அந்தணன் சண்பகமலரால் உம்மைப் பூஜித்து ராஜப்பிரியத்தையும் வேதியருக்குத் தானம் கொடுக்கும் அருளையும் பெற்றதால் பிறரை வருத்துகிறான். இவையெல்லாம் சண்பக புஷ்பத்தின் பூஜா பலன், அத்தகைய பயனை அந்தத் துஷ்டனுக்கு ஏன் கொடுக்க வேண்டும்! என்றார்.

அதற்குச் சிவபெருமான் நாரதரே! அது சண்பக மலர்ப் பூஜையின் பயன்! சண்பகத்தால் அர்ச்சனை செய்தவருக்கு வேண்டிய வரங்களை நாம் கொடுப்பதில் எந்தவித தடையுமில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் ஒரு பிராமண மங்கை துக்கத்துடன் அங்கு வந்து சிவபெருமானை பார்த்து சிவசங்கரா, அந்த துஷ்ட வேதியனை தாங்கள் தண்டிக்க வேண்டும். என் வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம் அவன் பலாத்காரமாகக் கொண்டு போய் விட்டான் என்று முறையிட்டாள். நாரதர் அந்த பிராமண மங்கையை நோக்கி, மாதே யாரால் உனக்கு இத்தகைய துன்பம் நேரிட்டது? நீயே ஏன் அழவேண்டும் என்றார்.

மகானுபாவரே!  என் துக்கத்தைச் சொல்கிறேன் காது கொடுத்துக் கேளுங்கள் என்று சொல்லத் துவங்கினாள். முனிவரே! என் கணவர் கர்மவசத்தால் முடமாகி வீட்டில் இருந்தார் எனக்கு ஒரு புதல்வி திருமணபருவம் நெருங்கியதால் வீட்டில் இருக்கிறாள். அவளுக்குகல்யாணம் செய்யவேண்டிய அவசியத்தாலும் பொருள் இல்லாததாலும் என் கணவர் அரசனிடம் சென்று இன்று தானம் வாங்கினார். அதற்காக இத்துஷ்டவேதியன் என் வீட்டில் பலாத்காரமாக நுழைந்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் கொண்டு போனான். அரசனோ இவை ஒன்றும் அறியாத அந்தகனைப் போல் இருக்கிறான். இந்த விஷயத்தை முறையிட்டும் அவன் கேட்கவில்லை என்ன செய்வது என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. என் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கவர்ந்து சென்ற பிராமணன் இங்கு தினந்தோறும் சிவபூஜைக்கு வருகிறான் என்றாள்!

நாரதர் அந்த மங்கையை பார்த்து, சுந்தரி! உன் கணவனுக்கு அரசன் என்ன தானம் கொடுத்தான்? என்று கேட்டார்.

அதற்கு அவள் முனிவரே அரசன் பெருஞ் செல்வத்துடன் உபயகோமுகி தானஞ் செய்தான்; அதை இங்கே பூஜைக்கு வருகிற பிராமணனே கொடுக்க வைத்து தான் கொடுப்பித்த காரணத்தால் என் வீட்டிற்கு வந்த அவற்றைக் கொள்ளையிட்டான். இந்த விபரீதநஷ்டத்தை நான் யாரிடம் சொல்வேன்? நான் என்ன செய்வேன்? என் கணவர் இது வரையில் இத்தகைய பாப தானத்தை வாங்கியவர் அல்ல. என் கன்னிகைக்கு கல்யாணம் செய்யவே அத்தகைய தானத்தை வாங்கினார், பிராமணனோ அந்தத் தானத்தால் தனக்குப் பாதியைத் தர வேண்டும் என்று தொந்தரவு செய்தான். அதற்கு நாங்கள் தானம் வாங்கியப் பொருளில் பாதியைப் பெற்றுக்கொள் என்றோம். அவனோ தானம் மட்டும் போதாது. பசுவையும் பங்கிட்டு கொடு என்றான். பசுவைவிலை மதித்தலும் பாதியாகப் பங்கிடுவதும் தோஷமாதலால், அந்தப் பாவத்தை ஒழிக்க வழியில்லை என்று நாங்கள் சொன்னோம், என்றாள்.

நாரதர், சிவபெருமானை வணங்கி மகாதேவா! இத்தகைய துஷ்டப் பிராமணன் கையால் தாங்கள் எவ்வாறு பூஜிக்கப்படுகிறீர்? இவனைவிடத் துஷ்டன் ஒருவனுமில்லையே! முதலில் அரசனிடம் தானம் வாங்கவே கூடாதே அத்தகைய தானத்தை வாங்கியவனிடத்திலேயே பசுவை பங்கிட்டுப் பொருள் வாங்குவோனின் பாபத்திற்கு ஓர் அளவு உண்டோ? என்றார்.

கோமஹாத்மியம்

பசுவின் வலது கொம்பில் கங்கையும், இடது கொம்பில் யமுனையும் மத்தியபாகத்தில் சரஸ்வதியும் முன்காலில் பிரமனும் மத்திய பரிவாரங்களுடன் உத்திரனும், பின்புறத்தில் விஷ்ணுவும் பக்கங்களில் அநேக தீர்த்தங்களும் வயிற்றின் வலது புறத்தில் முனிவர்களும், இடது புறத்தில் சகல தேவர்களும் வயிற்றின் கீழ் சகல நதிகளும் குளம்புகளில் வேதங்களும் பால்மடியில் சமுத்திரங்களும், ஆக, பசுவை இடமாகக்கொண்டு உலகம் முழுமையும் விளங்கும் இத்தகைய சிறப்பையுடைய பசுவைப் பூஜித்து பிரதக்ஷிணம் செய்தால் பூப் பிரதக்ஷணம் செய்த பலன் கிடைக்கும். பசுவைத் தானம் செய்பவன் கடல் சூழ்ந்த பயன் கிடைக்கும் பூவுலகையே தானம் செய்த பயனை அடைகிறான். எனவே கோ தானமும் பூமிதானமும் சம பலமுடையன, பசுவின் சாணத்தையும் கோமூத்திரத்தையும் உட்கொண்டவன் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான். பசுவிடம் பூஜிக்கத் தகாத இடம் எதுவுமில்லை உலகத்தில் கோதானம் பூதானம் வித்யாதானம் ஆகிய மூன்றும் பவித்ரமானவை. இவை நாகத்திலிருந்து நூற்றியொரு தலைமுறைகளை சுவர்க்க வாசத்தில் சேர்க்கக்கூடியவை. பிராயச்சித்தமே இல்லாத பாங்களும் கோதானத்தில் ஒழியும் பசுவின் தரிசனம் ஸ்பரிச தியானம் ஆகியவை உண்டு பண்ணும் பயனைச் சொல்ல முடியாது, அதன் கொம்பில் பொன், குளம்பில் வெள்ளி புட்டத்தில் தாமிரம் கண்களில் பவளம் கழுத்தில் ஆபரணம் உடல் முழுவதும் ஆடைகள் இவற்றால் அலங்கரித்து பால் கறக்கும் வெண்கல பாத்திரத்தோடும் கன்றோடு நன்றாகக் கறக்கும் இளம் பருவமும் அழகும் கொண்ட பசுவை தேசகாலத்தில் யோக்கிமானவனுக்குத் தானஞ் செய்தால் கொடுத்தவனுக்கு எவ்வுலகத்திலும் துர்லமானது ஒன்றுமில்லை. இவ்வகையான கோதானம் கொடுத்தவனுக்குப் பெற்றுக் கொண்டவன் செய்திருக்கும் புண்ணியத்தில் எட்டுப் பங்கு அதிகப் புண்ணியம் கிடைக்கும் தாயை விற்றல். கன்னியை விற்றல் வேத விக்கிரயம் கோவிக்கிரயம் இந்த நான்கு பாபங்களுக்கும் பிராய்ச்சித்தமில்லை.

ஓ சுவாமி இந்தத் துஷ்டப் பிராமணன் பசுவைப் பங்கிடச் சொல்கிறானே? இதற்கு என்ன செய்வது? தங்களுக்குப் பக்தனாக இருப்பதால் ஒன்றும் செய்யக் கூடவில்லையே! என்று வருந்தினார். அதைக் கேட்ட சிவபெருமான் நாரதரே! நீ என் பிரம பக்தனாகையால் உன் மனதில் எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்தால் அது எனக்குச் சம்மதமே, இவன் என் பக்தனாகையால் முன்னால் பாப பலத்தையும் பின்னால் சிவார்ச்சனை செய்த பயனையும் அடையும்படிச் செய்யலாம் என்று கட்டளையிட்டார்.

நாரதர் சண்பக விருட்சத்தையடைந்தார். அதனருகே சென்று சண்பகமரமே? உன்னிடமுள்ள பல மலர்களை நாள்தோறும் அறுத்துச் செல்பவன் யார்? உண்மையை ஒளிக்காமல் சொல் என்றார் .அதற்கு அந்த மரம் ஒன்றும் பதில் சொல்லாதிருக்கவே நாரதர் கோபங்கொண்டு சண்பகமரமே உலகத்தில் உண்மை என்பது யாருக்கும் யாவற்றுக்கும் சாதகமானது, உண்மையைப் பேசினால் இந்த உலகத்திலும் மோட்ச உலகத்திலும் அசாத்தியம் என்பது எதுவுமில்லை. அப்படியல்லாமல் நீ அசத்தியம் கூறியதால் இன்று முதல் உன் புஷ்பம் உலகத்தில் சிவபெருமானுக்குப் பூஜாயோக்யமற்று போவதாகுக என்று சிவனானுக்கிரகத்தால் சாபங்கொடுக்கும் போது அந்த துன்மார்க்க வேதியனும் அங்கு வந்தான். நாரதர் அவனைக் கண்டதும் அடா! நீ சண்பக மலரின் சிறப்பினால் சிவபூஜை செய்து அரசனிடம் அதிகாரம் பெற்று, அநேக பிராமணருக்கு தொல்லை செய்கிறாய் நீ இவ்வாறு ராட்சஸ காரியம் செய்து கொண்டிருப்பதால் ராட்சஸனாகக் கடவாய் என்று சாப மிட்டார். அதைக் கேட்டதும் அந்தப் பிரமணன் நடுநடுங்கி என்தவற்றை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும் என்று நாரதரின் பாதங்களைப் பணிந்தான். அவர் சிவபெருமான் கூறிய வார்த்தையை மனதில் கொண்டு அவன் விஷயத்தில் தயாசொரூபியாய் பிராமணா! நான் சொன்னது மாறாதாகையால் நீ அவ்வாறே ராட்சஸ வடிவடைவாய் என்று கூற அப்போதே அவன் விராதன் என்று அசுரானானான். அப்போது நாரதர் அவனைப் பார்த்து நீ ஸ்ரீராமருடைய தரிசனமடைந்து அவரால் மரணமடைந்து பிறகு சிவனாரின் அருளால் திவ்விய உருவமடையக் கடவாய் என்று சாப விமோசனமும் கூறினார். அவன் அவ்வாறே சகல உயிரினங்களுக்கும் துன்பமிழைக்கத்தக்க விராதனானான். நாரதர் சிவபெருமானை நமஸ்கரித்து சண்பகத்தின் மகிமையை வர்ணித்து அங்கிருந்து சென்று விட்டார்.
ஆகையால் சண்பக மலர் சிவபூஜைக்கு யோக்கியதை இல்லாததாயிற்று என்று அறியுங்கள். இவ்வாறு சூதமாமுனிவர் கூறினார்.

31. கணபாலன் அவதரித்த கதை

பரம புண்ணியனே! நாங்கள் கேட்ட விஷயங்களுக்கு நீங்கள் சொன்ன பதில்களிலிருந்து எங்கள் சந்தேகங்கள் நீங்கின. நீங்கள் வியாசரின் சீடர், இது வரையில் பஞ்சாயதன பூஜை உத்தமம் என்றும் இஷ்ட காமியங்களைக் கொடுக்கதக்கது என்றும் சொன்னீர்கள். அதில் சிவபஞ்சாயதனம் விஷ்ணு பஞ்சாயதனம் சக்தி பஞ்சாயதனம், சூரிய பஞ்சாயதனம், கணபதி  பஞ்சாயதனம் என்ற ஐவகைப் பூஜைகளையும் பிரதானமாகக் கூறினீர்கள், கணபதி யாருடைய புதல்வர்? அவருக்கு இத்தனை மகத்துவம் எப்படி ஏற்பட்டது? சிவபெருமான் முதலிய பெருந்தேவர்களுடன் அவர் இருப்பானேன்? அதிலும் அவரை முற்படப் பூஜிப்பது ஏன்? என்று முனிவர் கேட்டார் சூதபுராணிகர் அதைக் கூறலானார்.

புண்ணிய புருஷர்களே! உலகத்தினரின் சுகத்திற்காக நீங்கள் கேட்டதால் அதையும் சொல்கிறேன். சிவபெருமான் பர்வத ராஜனின் புதல்வியாக அவதரித்த பார்வதிதேவியைத் திருமணஞ் செய்து அழைத்துக் கொண்டு, திருக்கைலாய மலையை அடைந்தார். சில காலம் சென்ற பிறகு, பார்வதிதேவி தன் தோழிகளாகிய ஜயை. விஜயை, என்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அத்தோழியர்களில் விஜயை என்பவள் பார்வதி தேவியைப் பார்த்து, அம்மா சிவபெருமானுக்கு நந்தி, பிருங்கி முதலிய பிரதமகணங்கள் கணக்கின்றி இருக்கும்போது உங்களுக்கு கணங்கள் ஒருவரும் இல்லையே! அவர்கள் தான் நம் வாசலில் சிவாக்கினைப்படி காவல் செய்கிறார்கள். ஆகையால் அவர்கள் சிவபெருமானின் கட்டளையை ஏற்று நடப்பதைப் போல உங்கள் கட்டளையை ஏற்க மாட்டார்களாகையால் நமக்கென்று ஒரு சேவகன் இருந்தால் நல்லது என்றாள். தோழியின் வார்த்தையைக்  கேட்டதும் பார்வதி அதை இதவார்த்தையாகக் கொண்டாள். ஒருநாள் பார்வதி தேவியின் அந்தப்புரத்தில் நீராடிக்கொண்டிருக்கும் போது சதாசிவமூர்த்தியான சிவபெருமான் அங்கு வந்தார். அவர் நந்திதேவரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளே சென்றார். உள்ளே வந்த அவரைக் கண்டதும் நீராடிக் கொண்டிருந்த பார்வதிதேவி நாணமடைந்து நெளிந்து சென்று தன் தோழி விஜயை கூறியது சரிதான் என்று நினைத்தாள். எனவே தனக்கு என்று யோக்கியமான சேவகன் ஒருவன் இருக்க வேண்டுவது அவசியம் என்றும் அவன் தன் கட்டளையின்றி அணுவைக்கூட தன் அந்தப்புரத்தில் அனுமதிக்ககூடாது என்று எண்ணினான்.

ஏவம் விசார்யஸாதேவி ஜலம் ஜக்ராஹபாணிநா
தேஹஸ்தம் ருதமாதாய த்யாத்வாரூபம் ப்ரபோஸ் ஸாபம்
நிர்மாய ப்ரணவாகாரம் சதுர்பாஹுந்த்ரி லோசனம்
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் கஜவக்த்ரம் ஸுவாச்ருதிம்

இவ்வாறு தேவி யோசித்து கையிலே நீரை எடுத்துக் கொண்டு உடலில் தேய்த்து உருட்டி தன் நாதனான சிவபெருமானின் திருவுருவைத் தியானித்து அதுபோலவே பிரணவஸ்வரூபமும் யானைமுகமும் நான்கு தோள்களும் மூன்று கண்களும் மங்கள ரூபமும் உடையவராய் வெண்ணிற ஆடையுடுத்தி ஸர்வ வியாபியாய் விளங்கும் கணன் என்னும் புத்திரனை உருவாக்கி, உயிர்கொடுத்து வாயிற்படியில் நிறுத்தி, நீ என் உத்தர வில்லாமல் ஒருவரையும் உள்ளே விடாதே, என்று கட்டளையிட்டு நல்ல ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்து நீ தீர்க்க ஆயுளுடையவனாக இருப்பாய் என்று ஆசீர்வதித்து நீ என் பிரியபுத்திரன் என்று கூறினாள். உடனே உமாபுத்திரன் தன் தாயைப் பணிந்து அம்மா! உனக்குள்ள பணிவிடைகளை யெல்லாம் செய்கிறேன் என்றார். அதைக் கேட்டதும் பார்வதி நீ இப்போது துவாரபாலகனாக இரு, என்று ஒரு தண்டத்தைக் கொடுத்து மகிழ்ந்து, முகத்தில் முத்தமிட்டு அன்போடு அனைத்து விட்டுத்தன் அந்தப்புரத்திற்குச் சென்றாள் அன்று முதல் கணதேவர் பார்வதியின் கட்டளைப்படித் திருவாயிலில் காவலிருந்து வரலானார்.

ஒருநாள் உமாதேவி தன் தோழியருடன் நீராடிக் கொண்டிருக்கும் போது சிவபெருமான் பிரமதகணசகிதராய் தேவியின் அந்தப் புரத்திற்குவந்து உள்ளே நுழைய முயன்றார். அப்போது வாயிற்படியில் காவலிருந்த கஜானனர் என் தாய் நீராடுவதால் உள்ளே போகக்கூடாது என்று சொல்லித் தடுத்துத் தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அதைக் கண்டதும் சிவபெருமான், என்னை யாரென்று நினைத்தாய்? நானே சிவன் என்று சொல்லி மீண்டும் நுழைய முயலும்போது கணபதி கோபித்துக்கையில் இருந்த தண்டாயுதத்தால் ஓரடியடித்து சிவனாக இருந்தால் என்ன இப்போது ஏன் மீண்டும் போகிறீர்? என்று தடுத்தார். உடனே சிவபெருமான் கணபதியை நோக்கி, நீ என்னை அறிய மாட்டாய்! நீ மூர்க்கனாக இருக்கிறாய் உன்னை இங்கே அமர்த்தினவளுக்கு நான் கணவன் என்று சொல்ல கணபதி மீண்டும் அடிக்க சிவபெருமான் கோபங்கொண்டு பிரதம கணங்களைக் கூவியழைத்து இவன் யார்? இவன் துடுக்குத்தனத்தைப் பாருங்கள் என்று சொன்னார். அப்போது பிரதர்மர்கள் துவாரபாலகராயிருக்கும் விநாயகரைப் பார்த்து நீயார்? நீ ஏன் இங்கு வந்தாய் உன்வேலை என்ன? என்று கேட்டார்கள் அதற்கு கணனோ, நீங்கள் யார் ? இங்கே ஏன் வந்தீர்கள் தூரப் போய் விடுங்கள், என்று அதட்டினார். பிரதம கணங்கள் அவரைப் பார்த்துச் சிரித்து இவன் யார் பகவானைப் போல கடின வார்த்தைகளைப் பேசுகிறானே! என்று ஆலோசித்து மீண்டும் கணபதியைப் பார்த்து: அப்பனே நாங்கள் சிவகணங்கள் சிவபெருமான் இட்ட கட்டளையைச் செய்பவர்கள் உன்னையும் எங்கள் கணத்தைச் சேர்ந்தவன் என்று எண்ணியிருந்தோம். இனி தூரச்செல். இங்கே இருந்தால் நாசமாவாய் என்று அதட்டினார்கள். அந்த மிரட்டலைப் பொருட்படுத்தாமல் யானை முகத்தார் வாயிலை விட்டு நகராமல் அங்கேயே இருந்தார். கணங்கள் சிவபெருமானிடம் நடந்தவற்றைச் சொன்னார்கள் சிவபெருமான் அவர்களை நோக்கி கணங்களே! நீங்கள் என்ன பேடிகளா? அவனைத் துரத்துங்கள்! என்றார்.

பிரதம கணங்கள் மீண்டும் வந்து கணனே! உன்னை வாயிற் படியில் காவல் வைத்தவர்கள் யார்? எங்களை மதிக்காமல் நீ பிழைப்பாயா? நரிக்கு சிங்காதனம் கிடைத்தது போலிருக்கிறது! நாங்கள் போர் செய்யும்முன் இங்கிருந்து ஓடிப்போய்விடு இல்லையென்றால் மரிப்பாய் என்று மிரட்டினார்கள். அதைக் கேட்டுக் கஜானனர் கோபங்கொண்டு கையிலே தண்டாயுதத்தைத் தாங்கி இங்கிருந்து போகாவிட்டால் என் பராக்கிரமத்தைக் காட்டுகிறேன் பாருங்கள் என்று சுழற்றி அடித்தார். இவ்விதம் கணநாதரால் அடிபட்ட சிவகணங்கள், இனி இந்தத் துவாரபாலகனை எதிர்த்தால் என்ன விளையுமோ? என்று பயந்தவர்களாய்ச் சிவபெருமானிடம் விரைந்து சென்று பெருமானே! அவன் மிகவும் முரடனாக இருக்கிறான். எங்களையெல்லாம் தண்டத்தால் புடைத்தான்! என்று முறையிட்டுப் பணிந்து நின்றார்கள். சிவபெருமான் அவர்களைப் பார்த்து அவனோ ஒருவன்! நீங்களோ அநேகர் ஒருவன் அடித்தான் என்று இத்தனை பேரும் ஓடி வரலாமா? நீங்களோ பிரதமகணங்கள்? உங்களுக்கு வீரம் இல்லையா? உடனே சென்று அவனைத் துரத்திவிட்டு வாருங்கள் என்று புன்னகையுடன் கூறினார். அதனால் பிரதம கணங்கள் கணபதியிடம் சென்று சிறு பிள்ளையைப் போலப் பேசுகிறாயே! சீக்கிரம் இவ்விடமிருந்து போகாவிட்டால் எங்கள் பிராகிரமத்தைக் காட்டுகிறோம் பார் என்றார்கள். இது போலப் பலமுறைகள் அவர்கள் சொல்லியும் கணபாலர் காவலிருந்த இடத்தை விட்டு நகரவில்லை இதற்குள் அந்தப்புரத்திலிருந்த பார்வதிதேவியும் அவளது தோழியரும் கணபாலருக்கும் பிரதம கணங்களுக்கும் நடந்த பேச்சுக்களைக் கேட்டார்கள். இன்றையதினம் எமது சேவகன் வாயிலைக் காவல் செய்யாமல் இருந்திருந்தால் சிவபெருமான் மட்டுமின்றி மற்ற பிரதம கணங்களும் நாம் நீராடும் போது நம் அந்தப்புரத்தின் மாளிகையிலுள்ளே வந்திருப்பார்கள். அப்படி எல்லோரும் வந்திருந்தால் நன்றாக இராது. கணன் நல்ல காரியஞ் செய்தான். கணங்களுக்கும் கணநாதனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது. இதுவரை அவன் ஒருவரைக்கூட உள்ளே விடவில்லை அவர்களது வாய்ச் சண்டை முற்றி அவர்கள் ஜெயித்தாவது உள்ளே வரக்கூடும். அல்லது விநயத்தாலாவது உள்ளே வரக்கூடும் நமது கணனை தொந்தரவு செய்தது நம்மை தொந்திரவு செய்தது போன்றதாகும் தாயே! இந்த சமயத்தில் நாம் சிறிது கண்டிப்பாக இருக்கவேண்டும். என்று தோழி வற்புறுத்திக் கூறினாள்.

பார்வதிதேவி கணபதியின் மீது அபிமானமுடையவளாய் என் நாதராக இருந்தாலும் சிவபெருமான் நம் வாசலில் காவலிருப்பவனை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? அவனை வேண்டிக் கொள்ளக் கூடாதோ? என்று சொல்லி அந்தத் தோழியை கணனிடம் அனுப்பி ஒருவரையும் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று மீண்டும் கட்டளையிட்டாள். அந்தத் தோழியும் வெளியே சென்று கணனைக் கண்டு, நீ செய்யும் கடமை சிறப்பானது. நீ ஒருவரையும் உள்ளே விட வேண்டாம். இந்தப் பிரதர்கள் உன்னை ஜெயித்தாவது அல்லது உன்னிடம் நல்வார்த்தை கூறியாவது தான் உள்ளே வருவார்கள்? ஜாக்கிரதை! இது தேவியின் கட்டளை என்று சொன்னாள். உடனே கணபதி தன் தாயின் ஆணைப்படி கட்டியிருந்த ஆடையை இழுத்துக் கட்டிக் கொண்டு கிரீடம் தரித்து, தொடையைத் தட்டி பிரதம கணங்களே! நானோ பார்வதி புத்திரன், நீங்களோ சிவகணங்கள் நாமிருவரும் சமபலமாகச் சேர்ந்தோம் செய்யத்தக்கதை பார்ப்போம் இனி உங்களுக்கு உரிய ஆக்ஞையைச் செலுத்திச் சிவாக்கினையைக் காத்துக் கொள்ளுங்கள், நானும் என்னுடைய தாயின் கட்டளைப்படி நடந்து கொள்ளுகிறேன். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமானால் என்னை ஜெயித்தாவது என்னிடம் உத்தரவு பெற்றாவது போகவேண்டும் என்று கர்ஜித்தார். சிவகணங்கள் வேறு வழியின்றி சிவபெருமானிடம் மீண்டும் ஓடி அவரை வணங்கி, நடந்தவற்றையெல்லாம் சொன்னார்கள். அதைக் கேட்டதும் சிவபெருமான் யோசிக்கலானார். நாம் உத்திரவு பெற்று உள்ளே சென்றால் கட்டளைக்கு உட்பட்டவராவோம். ஆகையால் நாம் அனைவரும் போர்புரிய வேண்டுவதே முறை எவ்வாறாயினும் முடியட்டும் என்று முடிவு செய்து சிவபிரமதகணங்களை நோக்கி, நீங்கள் பிரதமகங்களாக இருந்தும் போர் செய்வதை விட்டு வேண்டிக் கொள்வது யுத்தமல்ல, பார்வதியின் செயல் நன்றாக இல்லை! அதற்குரிய பயனை அவளும் அனுபவிப்பாள் யுத்தம் செய்ய வேண்டுவதே யுக்தமானது என்றார்.

32. கணபாலர் போர் புரிந்த கதை

சிவபெருமானின் கருத்திற்கிணங்கப் பிரமதகணங்கள் யுத்தம் செய்வதே தக்கது என்று போர் செய்ய ஆயத்தமானார்கள் அவர்கள் யாவரும் ஆயுதபாணிகளாய்க் கணபதியிருக்கும் இடத்தை அடைந்தார்கள் அவர்களை கண்டதும் போராட்டத்திற்குத் தயாராகி அவர்களைப்பார்த்து, சிவனாரின் கட்டளையைப் பரிபாலிப்பவர்களெல்லாம் வரலாம். நானோ சிறுவன், தனியன், தாயின் கட்டளையை ஏற்று நடப்பவன். பார்வதி தேவியே தனது புத்திரனான என் பலத்தைப் பார்ப்பாள். சிவபெருமானே உங்கள் பலத்தை பார்க்கட்டும் பலவந்தர்களும் பாலனுமாகிய நம்மிருவருடைய யுத்தத்தை நமது தலைவர்களாகிய சிவபார்வதிகள் பார்க்கட்டும் நானும் இதுவரையில் யுத்தஞ் செய்தவன் அல்ல. இப்பொழுதே போருக்கு வருகிறேன், ஆயினும் இறுதியில் உங்களுக்கு நாணமே உண்டாகும் நாமிருவருமே ஜெயிப்போம் என்றோ தோற்று விட்டோம் என்றோ நினைக்க வேண்டாம், நீங்கள் வெற்றி பெற்றால் சிவபெருமான் வெற்றி பெற்றவராவார் நான் வெற்றி பெற்றால் பார்வதிதேவியே வென்றவன் என்று நினைக்க வேண்டும் என்றார்.

அதைக் கேட்டவுடன் பிரதமகணங்கள் கோபங்கொண்டு கண்கள் சிவக்க, பற்களைக் கடித்து ஹுங்காரஞ் செய்து கொண்டு போர் செய்ய வந்தார்கள். அவர்களில் நந்திதேவர் முன்னே வந்து கணனுடைய ஒரு காலையும், பிருங்கி மற்றொரு காலையும் பிடித்து இழுக்க முயலும்போது அவர்கள் இருவருக்கும் பிள்ளையார் ஒவ்வொரு அறை விடவே அவருடைய கால்களை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். உடனே கணன் தன் அருகிலிருந்த ஓர் இரும்பு உலக்கையால் சிலர் மண்டையையும் சிலரது கழுத்தையும் சிலரது கால்களையும் சிலரது தோள்களையும் அடித்தார். அதைக்கண்டதும் சிவ கணங்கள் இந்தச் சிறுவனை ஜெயிக்க முடியாது என்று எண்ணமிட்டார்கள் சிலர் ஓடினார்கள், சிலர் பிள்ளையாரை கும்பிட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிவபெருமானிடம் ஓடிச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் நான்முகபிரமன் தேவேந்திரன் முதலியவர்கள் இந்தச் செய்தியை நாரதர் மூலமாகச் கேள்வியுற்றுச் சிவபெருமானுக்குச் சகாயம் செய்யும் கருத்துடன் அங்கே திரண்டு வந்தார்கள். அவர்கள் சிவபெருமானை வணங்கி, மகாதேவா எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்களும் போராடுகிறோம் என்றார்கள். அப்போது கணனால் அடிபட்டு வந்த பரமதகணங்கள் அங்கு வந்து வருந்தி முறையிட்டார்கள். சிவபெருமான் பிரமதேவன் நோக்கி நான்முகனே! நீ அவனிடம் சென்று போர் மேலும் நிகழாதவாறு அவனை இதமான வார்த்தைகளால் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பிரமதேவன் மற்ற முனிவர்களுடன் கணபாலன் இருக்குமிடத்திற்கு வந்தார், அவர் வந்ததுமே பிள்ளையார் அவரது மீசையை பிடித்துப் பறிக்க பிரமன் அந்த வலியைத் தாங்க மாட்டாமல், நான் உன்னோடு போர் செய்ய வரவில்லையே? என்று அலறினார் கணன் இரும்புலக்கையைக் கையிலெடுக்க பிரம தேவனும் மற்றவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள் அவர்கள் சிவபெருமானிடம் சென்ற முறையிட பெருமான் கோபங் கொண்டு, இந்திரன், சுப்பிரமணியர் முதலிய பிரதமர்கள் பூதபிரேத பைசாசங்கள் யாவரையும் கணனுடன் போர் செய்யச் சொல்லி உத்தரவளித்தார்.

அத்தகைய கட்டளையைப் பெற்றதும் அவர்கள் தத்தம் ஆயுதங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கினார்கள் அவர்கள் செலுத்திய ஆயுதங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவிமறைந்தன அந்தச் சமயத்தில் அந்தப்புரத்தில் இருந்த பார்வதி தேவி இரண்டு சக்திகளைச் சிருஷ்டித்துத் தனியனாகப் போர் புரிந்து கொண்டிருந்த கணனுக்குத் துணைசெய்ய அனுப்பி வைத்தாள். அதில் ஒரு சக்தி பயங்கரமான உடலும் கருநிற மேனியும் மலை போன்ற முகத்தில் குகை போன்ற திறந்த வாயும் கொண்டவளாக இருந்தாள். மற்றொரு சக்தி மின்னலைப் போன்ற ரூபமும் அநேகம் கைகளையுடையவளாகவும் வந்து தேவர்கள் எய்யும் ஆயுதங்களையெல்லாம் தன் வாயைத் திறந்து விழுங்கிலானாள். பிள்ளையாரோ இரும்புலக்கையால் அடித்து தேவர்படை வெள்ளத்தைக் கலக்கினார் இதனால் தேவர்கள் மனங்கலங்கி இனி என்ன செய்வோம். எங்கே போவோம். என்று புலம்பி வருந்தினார்கள். அப்போது அரம்பை, மேனகை முதலிய அப்சரசுகள் சந்தன மலர்களைக் கையில் ஏந்தி ஆகாயத்திலிருந்து தூவினார்கள். நாரதர் முதலியோர் கணபாலன் போர் செய்யும் வீரத்தையும் ஆற்றலையும் பார்த்து மகிழ்ந்தார்கள் இத்தகைய வீரனை நாம் கண்டதே இல்லை. பிரளயகால ருத்திரனே இவ்வாறு வந்திருக்கிறான் என்று முனிவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே கடல் சூழ்ந்த பூமி முழுதும் குலுங்கியது ஏழு கடல்களும் நிலை கலங்கின நவக்கிரக மண்டலத்தையுடைய ஆகாயம் பிளவடையலாயிற்று யாவரும் மனம் மருண்டார்கள். இந்திராதி தேவர்களும் பிரமத கணங்களும் ஓடினார்கள் அப்போது ஆறுமுகப் பெருமான் சக்தியர் இருவரால் அடுத்த சைன்னியம் ஒழியமிகுந்தவர்களை அழைத்துக் கொண்டு சிவசன்னதியை அடைந்து நமஸ்கரித்து தந்தையே! அந்தக் கணனுடைய வல்லமையைச் சொல்ல முடியாது! அவனைப் போன்ற ஒருவனை இதுவரை கண்டதும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. இவனைத் தாங்கள் எதிர்த்து அடக்காவிட்டால் மஹாப்பிரளயம் உண்டாகும் என்று சொல்லவே சிவபெருமான் கோபங் கொண்டு, அப்படியாயின் நானும் வருகிறேன் என்று புறப்பட்டார் தேவர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

அப்போது நாரதர் புன்முறுவலுடன் சிவபெருமானை நோக்கி, மகேஸ்வரா! அவன் கொல்லத் தக்கவனல்லன், அவன் சிறுவன் தனித்து இருந்து தாயின் கட்டளையை நிறைவேற்றுபவன். அவனை வசப்படுத்தினால், ÷க்ஷமம் உண்டு, ஆகையால் அவனை எப்படியாவது சிநேகம் செய்து கொள்வதே நல்லது. என்றார். அவர் வார்த்தையை சிவபெருமான், மறுத்துவிட்டுப் போர் புரியச்சென்றார்.

கணபாலனைக் கண்டதும் அவர் வியப்புற்று இவனை வஞ்சனையாலடிக்கா விட்டால் இவனை ஜெயிக்கவே முடியாது என்று கருதி படைவரிசைகளின் நடுவில் இருந்தார் நிர்குணராகிய சிவபெருமான் விஷ்ணு முதலியவர்களுடன் யுத்தம் புரியவந்ததைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தார்கள். விஷ்ணு சிவபெருமானை நோக்கி சிவபெருமானே, நான் இவனை மோகப் படுத்துகிறேன். அப்பொழுது நீங்கள் இவனை அடிக்க வேண்டும், தந்திரத்தாலன்றி இவனை வெல்லமுடியாது. என்றார் அப்போது சக்திகள் இருவரும் மறைந்தார்கள் விஷ்ணுவின் எதிரில் கணபாலன், கபட நாடக சூத்திரதாரி என்ற பெயருக்கேற்ப கபடஞ் செய்ய நினைப்பவனே! என்று ஏளனமாகச் சிரித்துத் தம் கையிலிருந்த இரும்புலக்கையால் விஷ்ணுவை அறைய சிவபெருமான் தம் கரத்தில் இருந்து சூலாயுதத்தால் தடுத்து கோபங் கொண்டு கணனைத் தாக்க முற்பட்டார். அப்போது அவர் கையிலிருந்த சூலாயுதம் கை நழுவி விழ அவர் பிநாக வில்லை ஏந்தி நின்றார். கணபாலன் அந்த வில்லையும் தம் பாரிசத்தால் பொடிபடச் செய்தார், அந்தப் பரிச ஆயுதம் ஐந்து கரங்களிலும் ஒரடியடிக்க மற்ற ஐந்து கரங்களால் வேறொரு குலத்தை ஏந்தினார் சிவபெருமான் அப்போது அவர் நாமே இவனால் இவ்வாறு சங்கடப்படுவோமானால் மற்றைய தேவர்களும் கணங்களும் இவனுக்கு எம்மாத்திரம்? என்று எண்ணமிட்டார் அப்போது விஷ்ணு அவரை நோக்கி கைலாச நாதரே! உடலுருவம் அழகு ஆகிய இவற்றில் இந்தச் சிறுவனுக்கு ஈடானவர் எவருமில்லை! என்று வியந்துரைத்தார், கணன் தன் பரிசாயுதத்தை விஷ்ணுவின் மீது பிரயோகிக்க அந்த ஆயுதம் விஷ்ணுவின் சக்கரத்தைப் பொடிப் பொடியாக்கியது விஷ்ணு வேறொரு சக்கரத்தை ஏந்திப் போராடத் தொடங்கினார். கணபாலன் தன் இரும்புலக்கையை அவர் மேல் விடுத்து மல்யுத்தஞ் செய்யலானார், அப்போது சூலபாணியான சிவபெருமான் கணனுக்கு பின்புறமாகச் சென்று கணனைப் பாசத்தால் இறுக்கி பூமியின் மேல் வீழ்த்தினார். இவ்வாறு கணபாலன் பாசத்தால் கட்டுண்டதைப் பார்த்து தேவர்களும் கணங்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிகழ்ச்சியைக் கண்ட நாரத முனிவர் உடனே பார்வதி தேவியிடம் விரைந்து சென்று ஓ ஜெகன்மாதா! இப்போது சிவபெருமான் பாசத்தால் கணனைக் கட்டி மூர்ச்சையடையச் செய்து விட்டார், நீ இந்தச் சமயத்தில் தன்மானம் காத்துக் கொள்ள வேண்டும். என்று கலகஞ்செய்து விட்டு அங்கிருந்து மறைந்து போனார். தேவர்கள் ஜெயஜெய சங்கரா! என்று வெற்றி முழக்கமிட்டு ஆன்ந்தத்தால் குதித்தார்கள். முனிவர்களே! இனி பார்வதி தேவி செய்தனவற்றை சொல்கிறேன் கேளுங்கள்.

33. கணபதி பட்டாபிஷேகமும் விரதமும்

முனிவர்களே! சிவபெருமான் கணபதியைப் பாசத்தால் கட்டி மூர்ச்சையடையச் செய்ததை நாரதர் மூலம் அறிந்த பார்வதி தேவி மிகவும் கோபங்கொண்டு இனி, என்ன செய்வேன்? எங்கு போவேன்? பிரளயத்தைச் செய்ய வேண்டி வந்ததே? என்று துக்கித்து, அநேகம் ஆயிரம் சக்திகளை உண்டாக்கினாள். அச் சக்திகள் மஹாதேவியைப் பணிந்து, நாங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? கட்டளையிட வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களை பார்வதிதேவி நோக்கி, நீங்கள் சிறிதேனும் யோசிக்காமல் இந்த சமயத்தில் தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள் முதலானவர்களை அழித்து மகாப்பிரளயத்தைக் கிளப்பிவிட வேண்டும்! என்னுடையவன் என்றும் பிறன் என்றும் பார்க்க வேண்டுவதில்லை என்றும் கட்டளையிட்டாள். உடனே கற்பாந்தரத்தில் செய்யும் சங்காரத்தைப் போலவும் பிரமன் விஷ்ணு ருத்திரன், இந்திரன், குபேரன் சூரியன், சுப்பிரமணியன் என்று யோசிக்காமல் அகப்பட்டவர்களை ஆங்காங்கே அவர்களை வாயிற்போட்டு கபளீகரம் செய்யவல்ல சக்திகளில் சிலர் வாயைத் திறந்து கொண்டும் சிலர் பயங்கரமாகவும் சிலர் தலையை ஆட்டிக் கொண்டும் பலவாறு யுத்தம் செய்தார்கள் அந்தச் சமயத்தில் அந்தச் சம்காரத் தொழிலைப் பார்த்து விஷ்ணு முதலான தேவர்களும், முனிவர்களும் ஐயோ! மஹாப்பிரளயமாக இருக்கிறதே! இது அகாலத்தில் சம்பவித்ததே நாம் பிழைப்பது கடினம், ஆகா என்ன செய்வோம்? ஏது செய்வோம்? என்று யோசித்து விட்டு இந்த மகாப்பிரளயம் பார்வதிதேவி கருணை செய்யக் கருதினாலன்றி அடங்காது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு சக்தி சிவபெருமானின் இடுப்பில் ஓங்கி அடித்தாள். அதனால் சிவபெருமான் மிகவும் வருந்தி பார்வதியிடம் சென்று. இது என்ன என்று கேட்டவுங் சக்தியற்று இருந்து விட்டார். சக்திகள் தராதரமின்றி யாவரையும் துன்புறுத்தினார்கள் நாரத முனிவர் அப்போது தேவர்களுக்கெல்லாம் நன்மை செய்யக் கருதி, பிரமா முதலான தேவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மெல்ல தலைநீட்டி அவர்களோடு கலந்து என்ன செய்யலாம்? என்று ஆலோசித்துவிட்டு ஆகா! இனி பார்வதி தேவிக்குத் தயை வரச்செய்யாவிட்டால் நமக்குச் சுகம் உண்டாவதில்லை என்று கூறினார். அவரை தேவர்கள் உற்று நோக்கி நாரதரே! நீங்களே அதைச் செய்வதற்கு தகுந்தவராதலின் தயை செய்து அந்தப் பார்வதிதேவியிடம் சென்று தேவியின் கோபத்தைத் தணியச் செய்யும்! என்று விநயத்துடன் கூறினார்கள். நாரதர் சில முனிவர்களுடன் பார்வதிதேவியிடஞ் சென்று யாவரும் ஒன்றுகூடி பின்வருமாறு தோத்திரஞ் செய்தார்கள்.

ஜகதம்ப நமஸ்துப்யம் பரக்ருத்யைதே நமோஸ்துதே
அபர்நாயை நமஸ்துப்யம் கிரிஜாயை நமோஸ்துதே
பவாந்யைதே நமஸ் சைவ துர்க்காயைதே நமோஸ்துதே
பத்ராயைதே நமஸ்துப்யம் ப்ரக்ருத்யைதே நமோஸ்துதே
சண்டிகாயை நமஸ்துப்யம் காத்யாயன்யை நமோஸ்துதே

ஜகன்மாதா! பிரகிருதி ரூபியே! சருகு பக்ஷணமுமின்றித் தவஞ் செய்பவளே! பர்வதராஜபுத்திரியே, பவானியே, துர்க்க ஸம்ஹாரியே சகல ஜகத்துக்கும் மங்களஞ் செய்பவளே, முதலாகவுள்ளவளே, சண்டமுண்ட சம்ஹாரியே காத்யாயனியே உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம் என்று துதி செய்ததும் பார்வதி தேவி அவர்களைப் பார்த்து ஒன்றும் சொல்லவில்லை. அதனால் முனிவர்கள் அனைவரும் பயந்து, அவளது திருவடியில் வீழ்ந்து வணங்கி தாயே சிவபெருமானும் நாங்களும் மிகவும் கஷ்டத்தையடைந்தோம். ஆகையால் ஸம்ஹாரத்தை நிறுத்தி சாந்தமடைய வேண்டும். நாங்கள் அனைவருமே உன்னால் படைக்கப்பட்டவர்களாகையால் சாந்தமடையவேண்டும் மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அதனால் பார்வதிதேவி தயவு செய்யக் கருதி என் புத்திரன் கணபாலன் மூர்ச்சை தெளிந்து எழுந்த பிறகு இந்த சம்ஹாரம் நிற்கும் அதுவரையில் சம்ஹாரம் நடந்தேதீரும். தாயான என் கட்டளையை முன்னிட்டுத் தனியாகவும் சிறுவனாகவும் ஒருவனாகவும் இருந்து என் அந்தப்புரத்தை காவல் செய்தவன். அவனுக்கு எதிராக நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு போர் செய்தது முறையற்ற செயல் நீதியற்ற செயல் ஆகையால் உங்கள் யாவராலும் அவன் பூஜிக்கப்படுபவனாய்ச் சகலருக்கும் முதற்கடவுளாக இருந்தாலன்றி நான் செய்யும் சம்ஹாரம் ஒழியாது. நீங்களும் சுகமடையமாட்டீர்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவர்கள் அனைவரும் தேவியிடம் விடைபெற்றுச் சிவபெருமானையடைந்து நிகழ்தனவற்றைச் சொன்னார்கள். சிவபெருமானும் விஷ்ணு முதலான தேவர்களும் அதைக்கேட்டு தீவிரமாக ஆலோசித்து விட்டு இப்பொழுது உலகங்களுக்கு ÷க்ஷமம் உண்டாவதே முக்கியமாகும் ஆகையால் பார்வதிதேவியின் விருப்பப்படி நடப்பதுதான் நன்மையைத் தரும் என்று தீர்மானித்தார்கள் பிறகு சிவபெருமான் சஞ்சீவி முதலிய சகல அவுஷதங்களையும் கொண்ட துரோணாசலய என்ற மலையைத் தம் முன்னால் வர வேண்டும் என்று நினைத்தார், உடனே சஞ்சீவகரணம் முதலிய மருந்து மூலிகைகள் நிறைந்த அந்த மலை அங்கு வந்து சேர்ந்தது அதிலுள்ள மூலிகைகள் படிந்த காற்று வீசியது. அதனால் போரில் உயிர் ஒழிந்த தேவ, முனி பிரதமகணங்கள் உயிர் பெற்று எழுந்தார்கள். அப்போது பாசத்தால் கட்டுண்டு மூர்ச்சித்துக்கிடந்த கணபாலனைப் பார்த்த சிவபெருமான் வருந்திப் பாசத்தை அகற்றித் தனது திருக்கையால் அவனது திருமேனியை தடவினார். அக்கணமே கணபாலன் மூர்ச்சை தெளிந்து என் இருப்புலக்கை எங்கே? என்னுடன் போர் செய்த அந்த விஷ்ணு எங்கே? அவனைக் கொல்ல வேண்டும் என்று அறைகூவிக் கொண்டே தன் இரும்புலக்கையைக் கையிலே தூக்கி நின்றான். இந்திரன் முதலான தேவர்களும் நாரதர் முதலான முனிவர்களும் கணன் மூர்ச்சை தெளிந்து எழுந்தது கண்டு மகிழ்ந்து, சிவபெருமான், மஹாவிஷ்ணு பிரமன் முதலிய முப்பெருந்தேவர்களைப் பார்த்து , இனி பார்வதி தேவியார் கேட்ட காரியங்கள் எல்லாம் உங்களால் செய்து முடிய வேண்டும் என்றார்கள்.

இத்யாலோச்ய ஸங்கரஸ்ச லோகாநாம் ஸுகஹேதுகாம்
ஸஞ்ஜீவகரணீ யுக்தத்ரோணா சலமமேய தீ
ஸ்மரணா தேவஸகிரிராகத்வ ஸ்மஸ்திதஸ்ததா
ஸங்கரஸ்தவாக தஸ்ஸத்ய பாஸமோச நமோதநோத்
ஸஞ்ஜீவகரணீ வாயுப்ரசார வஸதஸ்ததா
ஸிவஸ்ய சகரஸ்பர்ஸாத் ஸஞ்ஞாம் லப்த்வ கணஸ்த்தா.
பரிகம் க்வாத்ய விஷ்ணு; க்வஹந்மயதாம் ஹந்யதாமிதி
உக்த்வாமுஸல மாதாய ஸ்திதோதுரி கணோத்தம
இந்தராத்யா நாரதாத்யாஸ்ச கணம் வீக்ஷயமுதாந்விதா
ப்ரஸம் ஸந்தஸ்ததா தேவாஸ்ஸிவம் விஷ்ணும் விதிந்ததா

இவ்வாறு தேவர்கள் கூறியதைக் கேட்ட பிருமா முதலான தேவர்கள் நாம் அனைவரும் எப்படிச் சிவனாரின் கட்டளையால் சஞ்சரிக்கின்றோமோ, அத்தகைய பரிபூரண தேஜஸானது வேத மந்திர சம்பந்தத்தால் இந்தக் கணனுக்கு உண்டாக வேண்டும். என்று அபிமந்திரித்து சுந்தராகாரமுடைய கணனை பிரமத கணங்களும் யக்ஷர்களும் விஷ்ணு முதலான தேவர்கள் அனைவரும் கணநாதராக இருக்கும்படி பட்டாபிஷேகம் செய்து ஆடையாபரண அலங்காரஞ் செய்து, அவனை அழைத்துக் கொண்டு பார்வதியிடம் சென்று காண்பித்தார்கள். பார்வதி தேவி கணனை வாழ்த்தி அவன் உடலைத் தனது திருக்கையால் தடவி மகனே! நீ மிகவும் வருந்தித் தன்யனானாய், கடமையை நிறைவேற்றுவதில் கண்ணியமாக இருந்தாய் இன்று முதல் யாவராலும் நீ மிகவும் முன்னதாக பூஜிக்கத் தக்கவனாகுக, உன் முகத்தில் சிந்தூரம் அணிந்திருப்பதால் சிவப்பு சந்தனத்தால் பூஜிக்க நீ மகிழ்வாயாக, உன்னைச் செம்மலர்கள் சந்தனம் நைவேத்யம் நீராஞ்சனம், தாம்பூலம், அர்க்கியம், பிரதக்ஷிணம், நமஸ்காரம் முதலியவற்றோடு பூஜிப்பவர்களுக்கு சகல காரியசித்தியும் கைகூடும். இதில் ஐயமில்லை என்று சொல்லித் தான் முன்பு கோபித்துப் பிர யோகித்த சக்திகளை திருப்பியழைத்து இனி யுத்தம் வேண்டாம் என்று அச்சக்திகளை தன்னிடத்திலேயே ஒடுக்கிக் கொண்டாள் இப்பொழுதே தேவர்களுக்குச் சுகம் உண்டானதால் இந்திராதி இமையவர்கள் பார்வதி தேவியை பலவாறு துதித்து சிவபெருமானை அழைத்துக் கொண்டு போய் தேவியாருடன் இணைந்திருக்கச் செய்து இருவரையும் சந்தோஷப்படுத்தி. சிவபெருமானது திருத்தொடையின் மீது பிள்ளையாரான விநாயகரை யானை முகப்பிள்ளையாரின் தலை மீது தன் திருக்கையை வைத்து தேவர்களை நோக்கி இவன் என் பிள்ளை என்று கூற கணேசர் சிவபெருமானது திருத்தொடையிலிருந்து இறங்கி எதிர் நின்று சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வணங்கி தேவர்களை கைகுவித்து சிவபெருமானை நோக்கி தேவதேவா! நான் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்றார் சிவபெருமான் அங்கிருந்த தேவர்களைப் பார்த்து, பிருமனே! விஷ்ணுவே நாம் உலகத்தில் பூஜிக்கப்படுவதைப் போல இக் கணேசனும் யாவராலும் பூஜிக்கப்படவேண்டும், மேலும் இவ்விநாயகனை முதலில் பூஜித்து, நம்மைப் பின்னால் பூஜித்தால் தான் நாமே மகிழ்வோம். இவனைப் பூஜிக்காதவர்களுக்கு காரியங்கள் சித்தியாகாது என்றார்.

அதன் பிறகு சிவபெருமானே முதலில் கணபதியைப் பூஜித்தார். இரண்டாவதாக அவரை விஷ்ணுவும், மூன்றாவதாகவும் பிருமதேவனும், நான்காவதாகப் பார்வதியும் பிறகு தேவர்கள் அனைவருமாக மிக்க மகிழ்ச்சியுடன் அவரைப் பூஜித்தார்கள். சிவபெருமான் கணேசருக்குப் பல வரங்களைக் கொடுத்து உன் பெயர் விக்நஹந்தா(விக்கினங்களைப் போக்குபவன்) சகல கணங்களுக்கு தலைவனான நீ பூஜிக்கத்தக்கவனாக வேண்டும் என்று கூறினார். உடனே சிவ கணங்கள் மங்கள வாத்தியங்களை முழங்கினார்கள், தேவமங்கையர் நடனமாடி இன்னிசைப் பொழிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் கணபதியைப் பார்த்து பாத்திரபத மாச சுக்கில பக்ஷ சந்திரோதய சமயத்தில் இரவு முதற்சாமத்தில் உச்சஸ்தக் கிரஹஞ்சக யோகத்தில் பார்வதி தேவி விக்னேஸ்வரனை நிர்மித்ததால் அந்தச் சமயத்தில் விக்னேஸ்வரனை பூஜித்தல் உத்தமத்திலும் உத்தமமாகும். அன்று முதல் மறு வருஷம் வருகிற அந்தத் திதி வரையில் பிரதி சதுர்த்திகளிலும் விரதத்தை நியமந் தவறாமல் என் கட்டளைப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்பவர்களின் குடும்பம் சகல சவுகரியங்களையும் பெற்றுச் சுகமாக இருக்கும் என்று கூறினார்.

மார்க்கசீரிஷ கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி நாளன்று அதிகாலை உதயத்தில் நீராடிக் குளித்து ஒரு பிராமணனைத் தான் செய்யவிருக்கும் கணபதி பூஜைக்கு இராத்திரி உபயோகப்படும்படி நியமித்து தான் முழுவதும் உண்ணாவிரதத்தோடு உபவாசமிருந்து அந்தப் பிராமணனைக் கணபதியாகப் பாவித்து, தூர்வத்தால் பூஜித்து இரவு ஒரு ஜாமங்கழித்த பிறகு ஸ்நானஞ் செய்து பொன் முதலிய உலோகங்களாலாவது அல்லது பவளத்தாலாவது அல்லது வெள்ளெருக்க மரத்தாலாவது மண்ணாலாவது கணபதிப் பிரதிமை செய்து அதற்கு பிராணப் பிரதிஷ்டை முதலிய நியதியுடன் கந்த, புஷ்ப, தூப தீபங்களால் பூஜிக்க வேண்டும். பிறகு அவரது கீரிடத்தில் விளங்கும் பாலச் சந்திரனைப் பூஜிக்க வேண்டும், பிறகு அந்தப் பிராமணனைப் பூஜித்து அவனுக்கு இன்சுவையுடன் கூடிய அன்னம் இட்டுத் தானும் உப்பில்லாத இனிய அமுதைப் புசிக்க வேண்டும் இவ்வாறு மறு சதுர்த்திகளிலும் செய்து வந்து வருட முடிவில் விரத பூர்த்திக்காக உத்தியா பனமாக பன்னிரண்டு வேதியருக்கு அன்னமிட வேண்டும். இந்த விரதத்தில் தன் சக்திக்கேற்பத் திரவியலோபம் செய்யக் கூடாது. அஷ்டதளபத்மம் எழுதி அதில் ஒரு கலசத்தை அமைத்து, அதில் விக்னேஸ்வரரை ஆவாஹனம் செய்து தூப தீபாதிகளால் பூஜித்து ஹோமம் செய்து இரண்டு சுமங்கலிகளுக்கும் இரண்டு பிரம்மச்சாரிகளுக்கும் அன்னம் அளித்து பூஜித்து விதிப்படித் தான் இரவு முழுவதும் விழித்திருந்து வாத்திய கோஷங்களுடன் உத்சவம் செய்து மந்திரபுஷ்பம் சமர்ப்பித்து அன்புடன் தொழுது தன் இஷ்டங்களைச் சொல்லிக் கொள்ள வேண்டும். மறுநாள் விடியற்காலையில் மீண்டும் வழிபாடு இயற்றி நான் பூஜிக்கும் போது தேவரீர் எழுந்தருள வேண்டும் என்று விசர்ஜனம் செய்ய வேண்டும். இவ்வாறு விரதமிருப்பவர் மனதிலுள்ள கோரிக்கைகளை அடைவார்கள். பக்தியோடு செஞ்சந்தனம் சுவேதாக்ஷதை உபசாரம் முதலியவற்றோடு பூசிப்பவர்கள் சகல காரிய சித்தியும் பெற்று எல்லா விக்கினங்களும் துன்பங்களும் நீங்கப் பெறுவார்கள், இந்த விரதம் எல்லா வர்ணத்தவரும் பெண்களும் பகை வெல்ல விரும்பும் அரசர்களும் செய்வார்களாக! என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இந்தச் சமயத்தில் அனைவரும் பிள்ளையாரான கணநாதரைப் பூஜித்து வழிப்பட்டார்கள் தன் புதல்வனுக்கு நேர்ந்த ஏற்றத்தைக் கண்டு பார்வதிதேவி அடைந்த மகிழ்ச்சியை எழுத்தாலும் சொற்களாலும் சொல்ல ஒருவராலுமே முடியாது. அப்போது தேவவாத்தியங்கள் முழங்கின தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள் உலகங்கள் யாவும் மகிழ்ந்திருந்தன.

34. விநாயகர் வலம் வந்த கதை

தவஞானிகளே! தேவர்களும் முனிவர்களும் சிவனாரின் கட்டளையை ஏற்றுச் சிவனாரையும் பார்வதி தேவியையும் கணேசரையும் புகழ்ந்து எத்தகைய பெரிய யுத்தம் உலகமே சம்ஹாரமாகத் தக்கதாக நிகழ்ந்து விட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிவகணங்களும் சிவபெருமானும் உலகங்கள் பிழைத்தற்காக மகிழ்ந்தார்கள். பார்வதிதேவியின் கோபமும் தணிந்தது. மகாவிஷ்ணுவும் பிருமதேவரும் சிவபெருமானிடம் விடைபெற்று தத்தமது உலகை அடைந்தார்கள். நாரதரும் பார்வதிதேவியைப் புகழ்ந்து பாடிவிட்டு தம் சஞ்சாரத்திற்குச் சென்று விட்டார் என்றார் சூதபுராணிகர்.

மாதவரே! கணபதியின் வரலாற்றைச் சொல்லிக் கேட்டோம் ஆயினும் அவருடைய திவ்விய சரிதங்களைக் கேட்க நாங்கள் மேலும் ஆவலாக இருக்கிறோம். என்றார்கள் நைமிசாரண்ய முனிவர்கள்.

சூதபுராணிகர் கூறலானார்

முனிவர்களே! சிவபெருமானும் பார்வதிதேவியும் கணேசரிடம் அதிக வாஞ்சை கொண்டு, அவரை விளையாட்டாகவே வளர்த்தார்கள், கணேசரும் ஆறுமுகனும் தாய்  தந்தையருக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குப் பிரியம் விளைவித்தார்கள்.
வளர்பிறை நிலவைப்போல் இரண்டு சகோதரரிடமும் நட்பு பெருகிற்று இந்நிலையில் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் தங்கள் புதல்வர் இருவருக்கும் எப்படித் திருமணஞ் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் பேசுவதைக் கேட்ட கணேசரும் முருகரும் ஆச்சரியமடைந்து எனக்கு தான் முதலில் கல்யாணம் ஆக வேண்டும் எனக்கே முதலில் திருமணம் என்று ஒருவரோடு ஒருவர் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அதை அறிந்த சிவபெருமானும் பார்வதிதேவியும் ஒரு யோசனை செய்து ஓரிடத்திலிருந்து புதல்வரிருவரையும் அன்புடன் அழைத்து பிள்ளைகளே! நீங்கள் இருவரும் சமமானவர்கள் நாங்கள் உங்கள் இருவரையுமே ஒரே தன்மையாகவே மதிக்கிறோம். இப்போது உங்களுக்குத் திருமணம் செய்ய வேண்டி ஒரு யோசனை செய்திருக்கிறோம். அதாவது உங்களில் எவன் ஒருவன் இந்த உலகத்தைச் சுற்றி வலம் வந்து முதலில் எங்களிடம் வந்து சேர்வானோ அவனுக்கு முதலிலும் எவன் பிறகு வருகிறானோ அவனுக்கு இரண்டாவதாகவும் திருமணஞ் செய்ய வேண்டும் என்பதே அந்த யோசனை, என்றார்கள் உடனே சுப்பரமணியர் பூப்பிரதட்சிணம் செய்வதற்கு விரைந்து சென்றார். தொந்திப்பிள்ளையாரான கணபதியோ நாம் எவ்வாறு பூவுலகைச் சுற்றுவோம் என்று யோசித்தார் பிறகு முறைப்படி நீராடித் தாய் தந்தையரிடம் வந்து நீங்கள் இருவரும் சிறிது நேரம் சிங்காதனத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அவர்களுக்கு ஆசனமளிக்க அவர்களிருவரும் அவ்வாறே அமர்ந்தார்கள், பிறகு கணேசர் அவர்கள் இருவரையும் பார்த்து நான் உங்களை பூசிக்க வேண்டும் என்று கூறி அவர்களை அமைதியாக உட்கார வைத்து அம்மை அப்பராகிய அவர்களிருவரையும் ÷ஷாடசோபசாரத்துடன் பூஜை செய்து ஏழு முறை அவர்களை வலம் வந்து கைகுவித்து இவர்கள் எதிரே நின்று நான் சொல்லும் விஷயத்தைக் கேட்டு சீக்கிரம் எனக்குத் திருமணஞ் செய்விக்க வேண்டும்! என்றார்.

நீ விரைவில் உலகத்தை வலம் வா. சுப்பரமணியன் அதற்காகவே போயிருக்கிறான் நீயும் சென்று பூப் பிரதக்ஷிணம் செய்து முன்னே வந்தால் உனக்கே விரைவில் மணஞ் செய்வோம் என்றார்கள் பெற்றோர்கள்.

நான் பூமியை ஏழு பிரதக்ஷிணம் செய்து வந்திருக்க என்னை மறுபடியும் போகச் சொல்லாமா? என்று கேட்டார் பிள்ளையார், அக்கேள்வியை வியந்த உமா மகேஸ்வரர் நீ எப்பொழுது பூமியை வலம் வந்தாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் உங்கள் இருவரையும் பூஜித்து ஏழு முறை பிரதட்சிணம் செய்தது பிரதட்சிணம் அல்லவா உங்கள் இருவரையும் பிரதட்சிணம் செய்தால் உலகை வலம் வந்தது போலாகுமென்று வேத சாஸ்திரங்கள் கூறுவது எல்லாம் பொய்தானோ? உலகத்தில்தாய் தந்தையரைப் பூஜித்தும் பிரதட்சணம் செய்தால் பூப்பிரக்ஷிண பலன் கிடைக்கும், வீட்டிலிருக்கும் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு தீர்த்த யாத்திரை செய்பவன் தாய்தந்தையரைக் கொன்ற பாபத்தை அடைவான். தாய்தந்தையரின் பாத கமலத்தீர்த்தத்தைவிட புதல்வனுக்கு வேறு தீர்ததங்களே கிடையாது. கங்கை முதலிய தீர்த்தங்களெல்லாம் கஷ்டப்பட்டு அடைய வேண்டியவை இதுவோ அண்மையில் உள்ளதும் எளிதானதும் தர்ம ஸாதனமானதும் பயன்கள் யாவற்றையும் கொடுக்கவும் வல்லது புதல்வனாக இருப்பவன் தன் தாய் தந்தையரைப் பூசிப்பதே தீர்த்த யாத்திரையின் பலனைத் தரும், மனைவியானவள் தன் கணவனைப் பூசிப்பதே தீர்த்த யாத்திரையின் பயனைத் தந்துவிடும் இவ்வாறு திருமறை நூல்களில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இதைப் பொய்யாக்குவதனால் உங்கள் ஸ்வரூபமும் அசத்தியமேயாம். வேதங்களும் பொய்! ஆகையால் நான் பூப்பிரதட்சணம் ஏழுமுறைகள் செய்தது நிச்சயமும் சத்தியமுமாகும் ஆகவே வேத சாஸ்திரங்களை மெய்யென்றோ பொய்யென்றோ ஆக்குங்கள் அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது என்றார் விநாயகர் வினயமாக அதனால் உமாதேவியும் சிவபெருமானும் பெரிதும் மகிழ்ச்சிடைந்தார்கள்.

35. கணபதியாரின் திருமணம்

சிவபெருமானும் பார்வதிதேவியும் கணபதியைப்பார்த்து கணேசா, நீயே மஹாபுத்திசாலி தாய் தந்தையரிடம் திடபக்தியுடைய நீ சொன்னவை உண்மையானவை துக்கம் ஏற்பட்ட சமயங்களில் எவன் ஒருவன் நிர்மலமுடையவனாக இருப்பானோ அவனது துக்கங்கள் சூரியனைக் கண்ட இருள்போல நீங்கும் தாய் தந்தையரை வலம் வந்தால் பூமியை வலம் வந்த பயன் கிடைக்கும் என்று வேதசாஸ்திர புராணங்கள் கூறுகின்றன. நாங்களும் உன் செயல் கண்டு மகிழ்ந்தோம் என்று பாராட்டிவிட்டுத் திருமண விஷயத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் விஸ்வரூபனின் புதல்வியர்களான சித்தி, புத்தி என்ற மிகவும் அழகிய கன்னியரை வேத விதிப்படிச் சர்வ ஆடம்பரமாகத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள். தேவர்கள் முனிவர்கள் யாவரும் கணபதியின் திருமணத்திற்கு வந்தார்கள். விசுவரூபன் தன் புதல்வியர் இருவரையும் கணபதிக்குத் திருமணம் செய்து கொடுத்தான். அதன் பிறகு கணபதியும் சித்தி புத்திகளுடன் கூடிச் சுகம் அனுபவித்ததைப் பற்றி அளவிட்டு வர்ணிக்கவே இயலாது சிறிது காலம் கழிந்த பிறகு சித்தி என்னும் மனைவியிடம் லக்ஷன் என்னும் பிள்ளையும் புத்தி என்னும் மனைவியிடம் லாபன் என்னும் பிள்ளையும் உண்டானார்கள்.

அந்த சமயத்தில் பூப்பிரதக்ஷிணம் செய்யச் சென்ற குமாரக் கடவுள்; பூமியை வலம் வந்து கைலாயமலைக்குத் திரும்பி வந்தடையும்போது கலகப் பிரியரான நாரதமுனிவர் புன்சிரிப்போடு அங்கு வந்து சுப்பிரமணியமூர்த்தி உம் தாய் தந்தையர் செய்த காரியத்தைக் கேட்டீரோ? உம்மை பூப்பிரதட்சிணம் செய்ய அனுப்பி விட்டு விக்கினேஸ்வரனுக்கு இரண்டு கன்னியரைக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். இப்போது கணபதி அவ்விரு கன்னியரிடமும் இரு புதல்வரைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார். நீரோ இத்தனைக் கஷ்டத்துடன் பூப்பிரதட்சிணம் செய்து வந்திருக்கிறீர் பெற்றோர்களே இவ்வளவு அபகாரம் செய்தால் இதரர் என்ன காரியம்தான் செய்ய மாட்டார்கள்? இது மிகவும் அநியாயம்! இது அவ்வளவு சரியில்லை. இப்படி செய்தவர்களுடைய முகத்தைக் கூடப் பார்க்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது ம்! சொல்ல வேண்டியதைச் சொன்னேன். இனி உம் இஷ்டம் சண்முகா! என்று கோள்மூட்டிவிட்டுப் போய் விட்டார். அதன் பிறகு ஷண்முகர் தம் தாய் தந்தையிடம் விரைந்துவந்து அவர்களை வணங்கி கோபங்கொண்டு புறப்பட்டார் தாய் தந்தையர் தடுப்பதையும் கருதாமல் கிரவுஞ்சகிரி நோக்கிச் சென்றார். அவ்வாறு போகும் போது தாய் தந்தையர் நீ போக வேண்டாம்! பூப்பிரதட்சிணம் செய்து வந்ததும் விவாகம் செய்வதாக நாங்கள் சொன்னபடி இப்போது விவாகம் செய்து வைக்கிறோம்! என்று தடுத்தார்கள். அதற்குள் குமாரர் நீங்கள் என் விஷயத்தில் கபடஞ் செய்தீர்கள் ஆகையால் நான் இங்கிருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே நடந்து கிரவுஞ்சகிரி சென்று அங்கேயே நின்றுவிட்டார். அன்றுமுதல் அவருக்கு குமார பிரம்மச்சாரி என்ற பெயர் உண்டாயிற்று.

கார்த்திகைப் பவுர்ணமியன்று தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் அங்கு சென்று குமார தரிசனம் செய்கிறார்கள் அந்த நாளில் தரிசிப்பவர்கள் பாபம் கழிந்து இஷ்டகாமியங்கள் கைகூடும் புத்திரனது பிரிவுக்கு ஆற்றாத பார்வதிதேவி மிக்க துயரத்துடன் கிரவுஞ்சகிரியையடைந்தாள். பிறகு சிவபெருமானும் மல்லிகார்ஜுனன் என்ற பெயருடன் ஜோதிர் லிங்கஸ்வரூபத்துடன் அங்கு சென்று வசித்தார். அங்கு பார்வதி பரமேஸ்வரன் ஆகியஇருவரும் பிரத்தியட்சமாக இருக்கிறார்கள். அவ்விருவரது வருகையையும் உணர்ந்து ஸ்கந்தர் அங்கிருந்து செல்ல யத்தனிக்கையில் தேவர்கள் அனைவரும் அங்கிருக்கும் படிப் பிரார்த்தித்தார்கள் பிறகு அங்கிருந்து மூன்று யோசனை தூரத்தில் சுப்ரமணியர் தங்கியிருந்தார்.

தாய் தந்தையர்கள் இருவரும் குமாரக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இருவுருவங்களில் அங்கே வருகின்றார்கள். நைமிசாரண்யமுனிவர்களே! கணபதியின் விவாக விஷயத்தை நீங்கள் கேட்டபடியே சொல்லிவிட்டேன். இந்தச் சரிதத்தைக் கேட்டவர்கள் சகல பாவங்களும் நீங்கப் பெற்றுச் சுகமாக வாழ்வார்கள்.

கணபதி விவாஹம் உரைத்த கதை முற்றிற்று.

36. உருத்திராட்சத்தின் பெருமையும் வகைகளும்

முனிவர்களே, சிவ சரிதைகளே உங்களுக்கு விருப்பம் உண்டாக்குகின்றன சிவனாரைப் பணிந்து அவரது திவ்விய சரிதங்களைக்கேட்பவர்களே பரிசுத்தர்கள். அவர்களால் அவர்களது வம்சம் முழுவதும் புனிதமாகும் எவனுடையவாக்கில் சிவநாமங்களும் நெற்றியில் விபூதியும் கழுத்தில் உருத்திராக்கமும் ஆகிய இம்மூன்றும் விளங்குமோ அவனைப் பார்த்தால் திருவேணியில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். அவனை மதிக்காமல் அவமதிப்போர் அப்போதே பெரும் பாவம் அடைவார்கள் விபூதியணியாத நெற்றியும் உருத்திராக்ஷமணி அணியாத கழுத்தும் சிவநாமங்கள் சொல்லாத வாயுமுடைவனைக் கண்டால் சண்டாளனைக் கண்டாற் போல விலகிக் கொள்ள வேண்டும். சிவ நாமமே கங்கை விபூதியே யமுனை உருத்தி ராட்சமே சர்வ பாபங்களையும் போக்கும் ஸரஸ்வதி!

விபூதிர்யஸ்ய கோபாலே களே ருத்திராக்ஷ தாரணம்
நஹிஸிவமயீவாணீ தந்த்யஜே தந்த்ய ஜம்யதா
ஸைவந் நாம ததா கங்கா விபூதிர் யமுநா சுததா
ருத்திராக்ஷõ விதிஜாப் ரோக்தா ஸர்வ பாப ப்ரணாஸ நீ

இம்மூன்றையும் அணிந்த பயனையும் திரிவேணியைத் தரிசித்த பயனையும், உலகத்திற்கு ஹிதஞ்செய்வதற்காக பிருமதேவர் ஒரு துலையில் வைத்து நிறுத்தார். அவை சமமாக இருப்பதைக் கண்டு பிரமன் முதலிய தேவர்கள் அனைவரும் இம்மூன்றையும் அடைந்தார்கள், ஆகையால் அணிந்தவனுடைய பயனைச் சொல்ல என்னால் ஆகுமோ?

இவ்வாறு சூத முனிவர் சொன்னதும் நைமிசாரண்ய வாசிகள் அவரைப் பார்த்து சிவஞான செல்வரே; அத்தகைய பெரும் பேற்றைத் தரவல்ல ருத்திராட்சத்தின் மகிமையைக் கேட்டு நாங்கள் புனிதர்களாகும்படி விரித்துரைக்க வேண்டும்! என்றார்கள்.

சூதமுனிவர் சொல்லலானார்.

தவசீலர்களே! ஆயிரத்தொரு நூறு ருத்திராக்ஷங்களைத் தரித்தவன் ருத்திர ஸ்வரூபத்தையடைவான் அவன் அடையும் பயனை அநேக ஆண்டுகள் சொன்னாலும் முடிவுபெறாது அதிற்பாதியாகிய ஐந்நூற்றைம்பது மணிகளால் கிரீடஞ் செய்து தரித்தவன் சிவரூபியாவான்.

முந்நூற்றுபத்து மணிகளால் உபவீதம்(பூணூல்) செய்து தரிக்கலாம். சிகையில் மூன்றும் இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆறும் ,கழுத்தில், நூற்றொன்றும், புயத்தில் பதினொன்றும் கன்னமாலை பதினொன்றும், மணிபந்தங்களிரண்டில் பதினொன்றும், பூணூலில், மூன்றுமாக முக்திகாமி அணியவேண்டும் ஐம்பது மணிகளை கடி சூத்திரமாக அணியத்தகும் இவ்வாறு அணிபவன் முக்தியடைவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்விதம் அணிந்து ஆசனத்தில் அமர்ந்து சிவத்தியானம் செய்பவன் சாபாநுக்கிரக சாமர்த்தியமடைவான் அவனை கண்டவர் சகலபாவமும் போய் கங்கா ஸ்நான பலனும் சிவதரிசன பலனுமடைவான் ருத்திராட்ச மாலையைத் தாங்கி நூறு மந்திரஞ் ஜெபித்தால் ஆயிரம் ஜெபித்தபயன் கிடைக்கும். சிவபெருமான், மகாவிஷ்ணு சூரியன், சக்தி, கணபதி இவ்வைவர் மந்திரங்களையும் ஜெபிப்பதற்கு உருத்திராக்கமே சிறந்தது. இதனால் சகல மந்திரங்களும் ஜெபிக்கலாம் முக்தி, புத்திர பாக்கியம், ஐசுவரியம் வித்தை கன்னிகைகள் முதலானவற்றை விரும்புபவர்கள் ருத்திராக்ஷமணி தரித்து ஜெபித்தால் அவற்றைத் தடையின்றி அடைவார்கள் ஆயினும் சிவபக்தன் ருத்திராக்க மணிமாலையைச் சிறப்பாக அணிய வேண்டும். ருத்திராட்சத்தை விருப்பத்தோடணிந்தாலும் விருப்பமில்லாமல் அணிந்தாலும் பயனுண்டாம் எனவே அவை உத்தமமானவை.

செல்வம் விரும்புவோன் பொன்னால் செய்த மணியும், புகழைவிரும்புவோன் முத்து மணியும், பிள்ளைப்பேறு விழைபவன் ஸ்படிகமணியும், வசியகாமி பவளமணியும், வாஹனகாமி வெள்ளிமணியும், கையிலேகொண்டு ஜபம் செய்யலாம் என்று திருநூல்கள் கூறுகின்றன. ஆயினும் ருத்திராட்ச மணியே இவற்றைக் காட்டிலும் சிறந்த பயனைக் கொடுக்கும். உபாசனை பல வகைப்படும், எனவே இந்த மணி மாலைகளில் வேதங்களைச் சொன்னேன். சிவபெருமானையும் விஷ்ணு மூர்த்தியையும் தியானிக்கும்போது ருத்திராட்ச மாலையே சுகம் கொடுக்க வல்லது சூரியனுக்கு ஸ்படிகமணியும் சண்டிகை கணேசருக்கு முத்து பவளமணியும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று பெரியோர் கூறுவர். இவ்விதமாகச் சொன்னாலும் ருத்திராக்கமே சிவபெருமானைப் பெரிதும் மகிழச்செய்யும், முத்துடன் கலந்த ருத்திராக்ஷம் விஷ்ணுவை மகிழச் செய்யும், பூர்வத்தில் வியாசபகவான் முதலிய முனிவர்கள் சாஸ்திர விசாரணையால் ருத்திராட்சம் சிறந்தது என்றார்கள். இனி ருத்திராக்ஷங்களின் பேதங்களைச் சொல்கிறேன்.

ஒரு முக ருத்திராட்சம் சகல காரிய சித்தியைக் கொடுக்கும். இந்த ஒரு முக ருத்திராட்சமணி இருக்கும் இடத்தில் அணிமா முதலான அஷ்டசித்திகளும் இருக்கும். இருமுகமணி இருக்குமிடத்தில் லக்ஷ்மிகடாக்ஷம் விளங்கும். மும்முகமணி சகல சித்திகளையும் விளைவிக்கும், நான் முகமணி அறம், பொருள், இன்பம், வீடு எனும் புருஷார்த்தங்களையும் நல்கும், ஐம்முகமணி பாவத்தைப்போக்கும். ஒரு முகமணிகிடைப்பது அரிது அது இலத்தைப் பழத்தின் அளவில் கிடைத்தாலே சுகசவு பாக்கியங்கள் விருத்தியாகும் நெல்லிக்கனியளவில் கிடைத்தால் சகல துக்கங்களையும் ஒழிக்கும். கடலையளவாயின் விலை மதிக்கமுடியாதது. அத்தகைய மணிகளால் மாலையணிந்தவனை என்னவென்று சொல்வேன்? அவ்வொருமணியை வைத்திருப்பவன் சாட்சாத் சிவபெருமானே! மண்டலாதி பத்யராஜ்யாதி பத்தியமும் அதற்குச் சமானமாகாது அத்தகையமணி யொன்று கிடைத்தால் பொற்குவியலாவது ஆணிமுத்துக்கள் நூறாவது கொடுத்துப் பெறலாம். உருத்திராட்சம் அணியவேண்டியவன் அதைபொருள்கொடுத்து வாங்கியணிய வேண்டும், ஒருவன் இனமாகக் கொடுத்தால் வாங்ககூடாது ஆனால் தானங்கொடுத்தவனுக்கு சிறப்பான பயனுண்டு பொருள் கொடுத்து வாங்க முடியாதவன் தன் புண்ணியத்தைக் கொடுத்தாவது பெறலாம். கடலையளவு மணிபோக மோக்ஷõர்த் தங்களைக் கொடுக்கும் குண்டுமணியளவுடைய மணி காரியசாதனஞ் செய்யும் எவ்வளவு சிறியமணியைப் பூண்டானோ. அவ்வளவு விசேஷ பயனைப் பெறுவான். சிவமந்திரத்தை ஜெபிக்காதவனையும் ருத்திராட்சம் அணியாதவனையும் பரிகாசம் செய்யாமல் தூரமாகப் போக வேண்டும். ருத்திராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால், பூதப் பிரேத பைசாச, சாகினிடாகினி முதல் சகல கிரகங்களும் ஆபிசாரம் முதலிய பிரயோகங்களும் அவனை நெருங்காமல் விலகிப் போய்விடும். ஏகமுக ருத்திராட்சத்தை நீரோட்டத்தில் விட்டால் எதிர்த்து ஓடும். இருமுகமணியை அணிந்து நெருப்பில் இறங்கினால் உடல் வேகாது ஜ்வரரோகம் நீங்கும். மூன்று முக மணியை அணிந்தவனை ஆயுதங்கள் ஊறுசெய்யாது. நான்கு முக மணியை வைத்திருப்பவன் வீட்டிற்கு வந்த சோரனுக்குக் கண்தெரியாது. இதைத் தண்ணீரில் விட்டால் மூழ்கி விடும். ஐம்முகமணியிருந்தால் சகல துன்பங்களையும் விலக்கிவிடும். இது நீரில் மூழ்காது இவ்வாறு மணியின் குணத்தைப் பரிசோதித்துப் பார்த்து அணிய வேண்டும், ஸ்நானம் தானம், ஜபம் ஓமம், அத்தியயனம், பிதுர்த்தர்ப்பணம் சிவவிஷ்ணு பூஜைகள் சிரார்த்தம் முதலிய எல்லாக் காலங்களிலும் ருத்திராக்ஷத்தைதரித்துக் கொள்ளலாம் முனிவர்களே! நீங்கள் கேட்ட ருத்திராட்ச மகிமையை விரும்பி கேட்டவன் சிவபெருமானுக்கு மிகவும் பிரிய முள்ளவனாவான்.

37. ஜோதிலிங்கங்களின் தொகை

சூதமுனிவரே! உலகத்திலே புண்ணிய தீர்த்தங்களிலுள்ள புகழ் பெற்ற லிங்கங்களையும் புண்ணிய ÷க்ஷத்திரங்களிலுள்ள லிங்கங்களையும் சொல்ல வேண்டும்! என்று சவுனகாதி முனிவர்கள் கேட்டார்கள் சூதமா முனிவர் சொல்லலானார். மாதவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் மிகச் சிறந்ததேயாயினும் பூமியே லிங்கமயமாக இருப்பதால் அவற்றின் தொகையைச் சொல்ல முடியாது. லிங்கம் இல்லாத இடமே இல்லை. கங்கை முதலிய தீர்த்தங்கள் யாவும் லிங்கமே. உலகம் யாவும் லிங்கத்திலேயே அடங்கியிருக்கிறது எனவே அவற்றை கணக்கிட முடியாது. ஆயினும் எனக்குத் தெரிந்த சில லிங்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். உலகத்தில் காணப்படுவதும் சொல்லப்படுவதும் நினைக்கப்படுவதும் கேட்கப்படுவதும் ஆகியயாவும் சிவரூபமே தவிர, வேறெதுவும் இல்லை. ஆயினும் எனக்கு வியாச பகவான் கூறியவற்றைச் சொல்கிறேன். தவசீலர்களே! இந்த உலகத்தின் இருப்பது போலவே பாதாவத்திலும் சொர்க்கலோகத்திலும் எவ்விடத்தும் லிங்கங்கள் இருக்கின்றன. பூமியிலுள்ள மானிடர்களும் பாதாளத்தில் இருக்கும் நாகர்களும் சுவர்க்கத்திலிருக்கும் தேவர்களும் ராட்சஸர் முதலானயாவரும் லிங்க பூஜை செய்கிறார்கள். சராசரத் மகமான பிரபஞ்ச முழுவதும் ஆன்மாக்களுக்கும் அருள் புரியவே சிவபெருமான் லிங்கரூபமாக விளங்குகிறார். பக்தியோடு பூஜிப்பவருக்கு அந்தந்த இடத்திலேயே விளங்கி அவரவருக்கு சர்வாபீஷ்டங்களையும் கொடுக்கிறார். ஆன்மாக்கள் தன்னை அருச்சித்துக் கடை தேறுவதற்காகவே சிவபெருமான் லிங்க ரூபத்தை ஏற்றிருக்கிறார். லிங்கார்ச்சனை செய்தால் சகல பயன்களும் கைகூடும் பிரதானமான லிங்கங்களைக் கேட்டால் சகல பாபங்களும் நீங்குமாகையால் தேஜோ லிங்கங்களைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

சவுராஷ்டிர தேசத்தில் ஸோமநாத லிங்கமும், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன லிங்கமும், உஜ்ஜயினியில் மகாகாளிலிங்கமும் ஓங்கார லிங்கமும், ஹிமயமலையில் கேதார லிங்கமும், டாகினியில் பீமசங்கர லிங்கமும், வாரணாசியில் விஸ்வேஸ்வர லிங்கமும், கோதாவரி தீரத்தில் திரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைத்தியநாத லிங்கமும், தாருகாவனத்தில் நாகேஸ்வர லிங்கமும், சேதுவில் இராமேஸ்வர லிங்கமும், சிவாலயத்தில் குஸ்மேஸ் லிங்கமும் எனப் பன்னிரண்டு உண்டு. இந்த லிங்கங்களின் திருப்பெயர்களை விடியற்காலத்தில் எழுந்து துதிப்பவன் தன் பாபங்கள் ஒழிந்து சகல சித்திகளையும் பெறுவான். இந்த லிங்கங்களை எக்குலத்தினரும் அர்ச்சனை செய்து ஆராதிக்கலாம். அவ்வாறு அர்ச்சித்தவர்கள் மகாபாவிகளாக இருந்தாலும் கிருத கிருத்தியர்களாவார்கள். அந்த ஜோதிலிங்கங்களுக்கு நைவேதனம் செய்தவற்றை உண்டால் புண்ணியம் வரும் ஆறு மாதம் இந்த லிங்கங்களை அருச்சித்தவர்கள் உயர் குலத்தில் பிறந்து நற்கருமங்கள் செய்து மோட்சத்தை அடைவார்கள். இத்துவாதசலிங்கங்களேயல்லாமல் ஸ்மரித்தவுடனேயே பாபங்களை ஒழிக்கத்தக்க பஞ்சபூத லிங்கங்களான ஐந்துலிங்கங்கள் உண்டு. அவை காஞ்சியில் பிரித்விமயமான ஏகாம்பர லிங்கமும், ஜம்புகேஸ்வரத்தில் அப்புமயமான ஜம்பு கேஸ்வர லிங்கமும், அருணாசலத்தில் அக்கினிமயமான அருணாசல லிங்கமும், தக்ஷிணகைலாயம் என்ற புகழ் பெற்ற சுவர்ணமுகி லிங்கமும் பூலோக மஹா கைலாயம் என்ற புகழ் பெற்ற தில்லையில் ஆகாயமயமான திருமூல லிங்கமும் ஆகும். இவ்வைந்து லிங்கங்களைக் கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், வாயால் சொன்னாலும், மனத்தால் நினைத்தாலும் அப்போதே புனிதமடைந்து, இஷ்டசித்திகள் கைகூடப் பெறுவர்.

இனி தீர்த்தங்களிலும் திவ்விய ஸ்தலங்களிலும் புண்ணிய லிங்கங்களின் உபலிங்கங்களைச் சொல்லுகிறேன். சவுராஷ்டிர சோமநாத லிங்கத்திற்கு மஹீநதிசாகர சங்கம் ஸ்தலத்தில் அந்தகேசலிங்கமும், மல்லிகார்ஜுனலிங்கத்திற்குப் பிருகுபர்வத சமீபத்தில் ருத்திரலிங்கமும், மஹாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்கு கர்த்தமேச லிங்கமும், கேதார லிங்கத்திற்கு யமுனா தீரத்தில் பூதேச லிங்கமும், பீமசங்கர லிங்கத்திற்கு பீமேஸ்வர லிங்கமும், விஸ்வே சுரலிங்கத்திற்கு சரண்யேஸ்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்கு சித்தேஸ்வர லிங்கமும், வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேஸ்வரலிங்கமும்,  இராமேஸ்வர லிங்கத்திற்கு குப்தேச லிங்கமும், குங்மேசலிங்கத்திற்கு வியாக்சிரேஸ்வர லிங்கமும் உபலிங்கங்களாகும், இனி பிரதானமான லிங்கங்களையும் சொல்கிறேன். அவை கங்கா தீரத்திலிருந்து பயன் தருகின்றன.

அவை கிருத்திவாகேச லிங்கம், விருத்தகாலதேச லிங்கம், தலை பாண்டேசுரலிங்கம், தவாசுவமேத லிங்கம், கங்காசாகர சங்கமத்தில் சங்கமேஸ்வர லிங்கம், யமுனா தீரத்தில் கோதுமேஸ்வர லிங்கம், பிருந்தாவனத்தின் அருகே நீலேஸ்வர லிங்கம் பூதேஸ்வர லிங்கம், கவுசிகி தீரத்தில் நாரீசுவர லிங்கம், நல்லகி தீரத்தில் கடுகேச லிங்கம், புஷ்கரதீரத்தில் பூரேசலிங்கம், மல்குமணி தீரத்தில் மண்டகேஸ லிங்கம், கோமதி சாகர சங்கமத்தில் சித்த நாகேஸ்வரலிங்கம் பந்தனத்தில்(பாட்னா) தூரேச லிங்கம் மிருகேசலிங்கம், ஜகந்நாதலிங்கம் எனப்படும்.

நருமதை தீரத்திலுள்ள லிங்கத் தொகையை ஒருவராலும் சொல்லமுடியாது அந்த மகாநதியே சிவரூபமாயும் பாபநாசனியாகவும் இருக்கிறது அதிலுள்ள பருக்கை கற்கள் யாவுமே சிவலிங்கமே. ஆயினும் அங்கிருக்கும் லிங்கங்களில் சிலவற்றின் பெயர்களைச் சொல்கிறேன் அங்குள்ள மாமலையில் ஆவர்த்தேசர், பத்மேஸர், சிம்ஹேசர், ஸுமேசர், குமாரேசர், புண்டரீகேசர், மண்டபேசர், தீக்ஷீணேசர், துந்தரேசர், குலேசர், கும்பேசர், குபேரேசர், சோமேசர், நீலகண்டேசர், மங்களேசர் நந்திகேசர் எனப்பெயர் பெற்றவை நந்திகேசர் கோடி பிரம்மஹத்திகளையும் போக்கடிப்பவர் அந்த லிங்கத்தைப் பக்தியோடு பூஜிப்பவன் அடையாத பயன் இல்லை. அங்கு நருமதையாற்றில் நீராடிக் குளிப்பவர்கள் தாம் செய்த பாவங்களையெல்லாம் நீங்குவர்.

38. யாத்ரீகன் கதையும் நந்திகேஸ்வர லிங்க மகிமையும்

சிவ நேசர்களே! பூர்வத்தில் தர்மராஜன் நாரத முனிவரிடம் கேட்ட ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்ற பட்டிணத்தில் உதத்திய வமிசத்தில் உதித்த பிராமணன் ஒருவன் காசியாத்திரை செய்ய விரும்பி, தன் இரு குமாரர்களிடம் தன் மனைவியை ஒப்படைத்து விட்டு காசிக்கு யாத்திரை சென்று அங்கு தங்கியிருந்து ஒரு நாள் இறந்து விட்டான். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் புத்திரர்கள் தங்கள் தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்தியேஷ்டி முதலிய கருமங்களைச் செய்தார்கள். இறந்தவனின் மனைவி தன் மக்கள் மீது கொண்டிருந்த விருப்பத்தால் அவர்களைக் காத்து மணவினை முடித்து முன்னோர் வைத்திருந்த பொருளை இருவருக்கும் பகிர்ந்து கொடுத்து தன் பாதுகாப்பிற்குச் சிறிது தனம் வைத்திருந்து சில காலத்தில் அதைத் தரும வழியில் செலவிட்டுப் புண்ணியம் தேடியும் பிராணன் ஒழியாதிருக்க வாழ்ந்து வந்தாள். அப்போது அவளது புத்திரர்கள் தாயை நோக்கி. அம்மா உனக்கு மனக்குறை ஏதாவது இருந்தால் அதை எங்களிடம் சொல்! என்றார்கள். அதற்கு அவள் எனக்கு ஒரு குறையிருக்கிறது. அதை செய்வீர்களானால் எனக்கு நல்ல மரணம் ஏற்படும், என்றாள். அது என்னவென்று புதல்வர்கள் கேட்டார்கள். அதற்கு அவள் அது என் மூத்தமகன் செய்ய வேண்டியது அவன் அதைச் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை. அதாவது காசியில் மரணம் கிட்டாவிட்டாலும் என் எலும்புகளை கங்கையில் விடவேண்டும் என்பதேயாகும்? அவ்வாறு செய்தால் எனக்கு ÷க்ஷமம் வரும் இதுவே என் விருப்பம் என்றாள். மூத்த மகன் அவளை நோக்கி, தாயே! நீ நல்லமனதோடு உயிர் நீத்தால் உன் காரியத்தை நீ சொன்னபடி நான் செய்த பிறகே என் காரியங்களைச் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். உடனே தாய் சிவஸ்மரணை செய்துகொண்டே பிராணனை விட்டாள். அப்போது அவளது புத்திரர்கள், தகனம் முதல் உத்தரகிரியை சீராக யாவற்றையுஞ் சிறப்பாகச் செய்தார்கள். சுவாதன் என்ற ஜேஷ்ட-குமாரன் முதல் மாசிகம் செய்து காசிக்குப் போகத் தாயின் எலும்புகளை எடுத்துக்கொண்டு தன் மனைவியையும் புதல்வரையும் வீட்டிலே நிறுத்தி விரைவில் வந்து விடுவதாகச் சொல்லி விட்டு ஒரு சேவகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு புறப்பட்டான். ஒரு யோஜனை தூரம் சென்றதும் இருட்டி விட்டதால் அங்கு ஒரு பிராமணன் வீட்டில் சேர்ந்து சந்தியா வந்தனம் முதலிய கிரியைகளைச் செய்து முடித்துக் கொண்டு அன்றிரவு தங்கி சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். அப்போது ஐந்து நாழிகை இரவில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

அந்த வீட்டு வாசலில் பசுவொன்று கட்டப்பட்டிருந்தது. அவ்வீட்டு வேதியன் பசுவை இன்னும் கறக்கவில்லையா? என்று கேட்டுக் கொண்டே கன்றை அவிழ்த்து விட்டு தன் மனைவியை பசுவை கறப்பதற்குக் கூப்பிட்டு அந்தக் கன்றின் கழுத்துக் கயிற்றைப் பற்றி இழுத்துப் போனான். அப்போது அந்தக் கன்று அவன் காலை மிதிக்கவே வேதியன் கோபங்கொண்டு தன்னை மிதித்தற்காக அந்தக் கன்றை கொம்பாலடித்துப் பாலூட்ட விடாமலும் கொண்டு சென்று ஒரு தூணில் கட்டிப்போட்டான். கன்று அருந்தாத பால் பசுவின் மடியில் இருந்ததால் பசுவானது மிகவும் அழுதது. அவ்விரைச்சலைக் கேட்டதும் பசுவின் கன்று தாயே! நீ ஏன் கூச்சலிடுகிறாய்? என்று கேட்டது. அதற்கு தாய்ப் பசு எனக்கு நேர்ந்த துக்கம் உன்னை அவன் கொம்பாலடித்ததால் உண்டானது என்றது. தாயே! நாம் கர்ம வசத்திலுள்ள ஜீவர்கள் ஆகையால் கர்மத்தை அனுபவிக்காமல் நாம் எங்கே போகமுடியும். பூர்வத்தில் சிரித்துக்கொண்டே செய்த கர்மத்தை இப்போது அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்கிறது. சுக துக்கங்கள் அனுபவிக்காமல் தப்புவதில்லை என்று கன்று பதில் கூறியது. அதற்குத் தாய்ப்பசு, மகனே, நீ சொல்லும் வார்த்தை நான் அறிந்ததுதான் ஆயினும் சம்சார மாயையால் துக்கம் அடைந்திருக்கிறேன். நான் அழுதும் துக்கம் அடங்கவில்லை! என்றது. அதற்கு அதன் கன்று நீ அழுவதால் பயன் என்ன! அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து தானே தீர வேண்டும்? என்றது. அதற்குப் பசுவானது எனக்கு இப்போது உண்டான துக்கம் இந்த வேதியனுக்கும் உண்டானாலன்றி ஒழியாது. ஆகையால் இவனுக்கு அத்தகைய துன்பத்தை நான் உண்டாக்குவேன். அப்போதுதான் அது தன் செயலால் விளைந்தது என்பதை உணர்வான். மகனுக்குத் துன்பம் நேர்ந்தால் தாய்க்கும் அதைக் காட்டிலும் துக்கம் அதிகமாக இருக்கும்! நாளை உதயத்தில் அவ்வேதியனின் மைந்தனை என் கொம்புகளில் குத்திவிடப்போகிறேன். அதனால் அவன் புத்திரன் மாண்டு போவான் என்றது. அதற்கு கன்று தாயே! இதுவரையில் நாம் செய்த கர்மத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது போதாதென்று இந்தப் பிரமஹத்தியை வேறு அடைய வேண்டுமா? இவன் புதல்வனைக் கொன்றால் உனக்கும் அத்தகைய துன்பம் மீண்டும் வராமல் இருக்காது நற்கருமம் செய்தால் சுவர்க்கலோகமும் துர்க்கருமம் செய்தால் நரகமும் மிஸ்ர(கலவைக்) கர்மம் செய்தால் மானுடப்பிறவியும் கர்மநவிவால் முக்தியும் உண்டாகும். ஆகையால் நீ இத்தகைய தீச் செயலைச் செய்ய வேண்டாம். என்னை அவன் அடித்தானே என்று நினைக்கிறாயா? நான் யார்; நீ யார்? நீ தாயும் இல்லை, நான் உன் புதல்வனுமில்லை. தாய் தந்தை உற்றார் உறவினர்கள் மக்கள் என்று சொல்லப்படுகின்ற யாவுமே பொய்! எல்லா பிராணிகளும் தத்தமது கர்மத்தை அனுபவிக்க வேண்டும். ஆகையால் இதனை உணர்ந்து தீமை செய்யாமல் நன்மையையே செய்ய வேண்டும் என்றது, அதற்குத் தாய்ப் பசு, உனக்கு விளைவித்த துன்பத்தைக்கண்ட நான் அதை அவர்களுக்குத் திருப்பிச் செய்வது எப்போது என்று நான் பதைக்கிறேன். பிருமஹத்தி வரும் என்றாயல்லவா? அதைப்போக்கடிக்க தக்க புண்ணிய ஸ்தலம் ஒன்று இருக்கிறது. அது எனக்குத் தெரியும். இந்த வேதியச் சிறுவனைக் கொன்றால் என் உடல் கறுத்து விடும். அந்தப் பிரமஹத்தி நீங்கியவுடன் என் உடல் பழையபடி வெள்ளையாகி விடும். இது எனக்குத் தெரியும் என்று சொல்லியது. கன்று பதில் பேசவில்லை. இந்த சம்பாஷணையை மிருகங்களின் பேச்சு மொழியை உணர்ந்திருந்த காசியாத்திரைப் பிராமணன் கேட்டுக் கொண்டிருந்தான். இதைச்சோதித்த பிறகே நாம் போகவேண்டும் என்று அவன் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தான்.

மறுநாள் காலையில் அவ்வீட்டு வேதியன் எழுந்து. வழிப்போக்கனைப் பார்த்து ஐயரே! பொழுது ஏறுகிறேதே! இன்னும் நித்திரை செய்கிறீரே? என்று கேட்டான். அதற்கு காசியாத்திரை செல்வோன் எனக்கும் என் சேவகனுக்கும் இளைப்பாக இருப்பதால் இரண்டு நாழிகை கழித்துச் செல்கிறோம் என்று மறைத்துச் சொல்லி உறங்குபவனைப் போலிருந்தான். அப்போது பசுவைக்கறக்கும் வேளையாயிற்று. வேதியன் வேறு வேலைக்குப் போக வேண்டியிருந்ததால் தன் மகனை அழைத்து, நீ கன்றை விடு என்று கூறிவிட்டுப் போய் விட்டான். அதன்படி சிறுவன் கன்றை அவிழ்த்து பசுவினிடம் விட அவன் தாய் பால் கறக்க வந்தாள். பசுவின் மடி சுரந்ததைக் கண்டு கன்றைப் பழையபடி கட்ட ஒரு கோலால் புடைத்து இறக்கிக் கட்டும் போது, பசுவானது கோபித்து அவனைத் தன் கொம்புகளால் குத்திற்று சிறுவன் பக்கத்தில் பாய்ந்து விழுந்து மூர்ச்சையானான். அதைக் கண்டோர் சொல்ல தந்தை முதல் அநேகர் கும்பலாகக் கூடித் தண்ணீர் கொண்டு வாருங்கள். என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்தச் சிறுவன் மரண மடைந்தான். அதைக் கண்டு அனைவரும் அழுது புலம்பினார்கள். அந்த வீட்டு வேலைக்காரன் பசுவை அடித்து அவிழ்த்து விட்டான். வெண்ணிறமான அந்தப்பசு கருநிறமடைந்தது: எல்லோரும் வருந்தினார்கள். இந்த வினோதத்தையெல்லாம் கண்ட காசியாத்ரீகன் தன் சேவகனுடன் புறப்பட்டு பசு போகும் வழியைப்பின் தொடர்ந்து சென்றான். பிருமஹத்தி தோஷத்திற்கு ஆளான பசுவானது வாலைக் கிளப்பிக்கொண்டு நருமதை நதியை அடைந்து நந்திகேஸ்வரரின் சமீபத்தில் இருந்த திவ்வியமான ஜலத்தில் மூன்று முறை மூழ்கி ஸ்நானம் செய்ததும், வெண்ணிறம் அடைந்து தான் வந்தவழியே திரும்பிச் சென்றது. அதைக் கண்ட காசியாத்ரீகன். ஆஹா! இந்தத் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்தவுடனேயே பிரமஹத்தி ஒழிந்ததே! என்று தானும் தன் சேவகனுமாக அதில் ஸ்நானம் செய்து நந்திகேஸ்வரரை வணங்கி வழிபாடு இயற்றி விட்டுச் சென்றார்கள்.

அவர்களை அவ்வாறு போகும்போது, அவர்கள் இருவருக்கும் எதிரில் சர்வாபரணங்களையணிந்த பெண் ஒருத்தி வந்து நீ எங்கிருந்து வருகிறாய்? பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! என்று கேட்டாள். அதற்கு யாத்திரீகன் எதையும் மறைக்காமல் நடந்தவற்றைச் சொல்லிவிட்டான். அதன்பிறகு அவள் யாத்ரீகனைப் பார்த்து, நீ இங்கேயே இருக்கவேண்டும் என்றாள். யாத்ரீகனும் தன் சேவகனுடன் அங்கேயே தங்கியிருந்தான். அப்போது கங்கையான அந்த மங்கை நீ எங்கே இவ்விசேஷத்தைக்கண்டாயோ, அங்கேயே இவ்வெலும்புகளை விட்டு விடுவாயானால் உன் தாய் திவ்விய தேகமடைந்து ஸ்வர்க்கம் சேர்வாள் ஒவ்வொரு ஆண்டும் வைகாச சுத்த சப்தமியில் கங்கை இவ்விடத்திற்கு வருவாள். இன்றைய தினம் அந்தச் சப்தமியாகும். நானே கங்கை! நான் அங்கு தான் போகிறேன் என்று சொல்லி மறைந்துவிட்டாள். காசியாத்ரீகன் மீண்டும் நர்மதை நதி தீரத்திலுள்ள நந்திகேஸ்வரத்துக்கு வந்து தன் தாயின் திவ்விய உருவத்துடன் தோன்றி, குமாரா நீயே தன்யன், நீயே கிருத கிருத்யன். உன் வம்சத்தை நீயே பவித்ரஞ் செய்தாய். உனக்குத் தனம் தான்யம் ஆயுள் வசிமவிருத்தி முதலான கிடைக்கும் என்று வரமளித்து. நற்கதியடைந்தாள். இவ்விதமாக, அந்தப் பிராமணன், தன் தாயின் அஸ்தியை நர்மதை நதியில் நந்திகேஸ்வரத்தின் அருகே விடுத்து, தன் யாத்திரையை முடித்துத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். அன்று முதல் அந்தத் தீர்த்தம் மானுடருக்கெல்லாம் பிரசித்தமாகத் தெரிந்தது. ஆகையால் நந்திகேஸ்வரத்திற்கு அருகில் நருமதை நதியில் ஸ்நானம் செய்தால் இஷ்ட காமியங்களையடைவார்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.

மேலும் ருஷீகை என்ற இளம் பிராமண விதவை ஒருத்தி அந்த ஸ்தலத்திற்குச் சென்று கடுமையான சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது மூடன் என்ற தைத்தியன் ஒருவன் அவளை சிவபூஜை செய்யாதிருக்கும்படி பலவகையாகப் போதித்தான். அப்படிப் போதித்தும் ருஷீகை சிவபூஜையைச் செய்து வந்ததால் தைத்தியன் தன் கோரரூபம் முதலியவற்றை அவளுக்குக் காட்டி பயமுறுத்தவே அவள் பயந்து சிவ சிவ என்று சிவ நாமங்களை ஸ்மரித்து சரணமடைந்த தன்னைக்காக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். உடனே நந்திகேஸ்வரர் அவள் எதிரில் தோன்றி, உனக்கு ஒரு பயமுமில்லை. உன்னை நான் இரட்சித்தேன். அவ்வரக்கன் தானாகவே போய்விடுவான் நான் அனைவரையும் காத்தருள்வதற்காகவே இங்கிருக்கிறேன் என்று வரமளித்து அவள் பூஜித்த பார்த்திவ லிங்கத்தில் அந்தர்த்தானமானார், கங்கையும் அவள் முன்பு தோன்றி அவளைப் பார்த்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு, அவள் என் பொருட்டு இந்தத் தினமாகிய வைகாச சுத்த சப்தமியில் இங்கு வந்து பிரத்யட்சமாக இருக்க வேண்டும் என்றாள். அதற்கு அவ்வாறே இசைந்த கங்கை ஆண்டுதோறும் அங்கு வருகிறாள். ஆகையால் அந்தத் தினத்தில் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் சகல பாபங்களும் விலகிப்போகும்; முனிவர்களே! நீங்கள் கேட்ட சிவ சரிதங்களில் நந்திகேஸ்வர மகாத்மியமும் ஒன்றாகும்.

39. அனுசூயை வழிபட்ட கதையும் அத்திரீஸ்வர மகிமையும்

வியாசேஸ்வரர், அமேசுவர, பண்டாரேசுர, ஹாங்காரேசுவர, சுரேசுவர, பூதேசுவர, சையகேசுர, லிங்கங்கள் பாபத்தை நீக்குபவை, இன்னும் தப்திகாநதி தீரத்தில் குமாரேஸ்வர சித்தேஸ்வர ஸ்தாதஸ்வர, ராமேஸ்வர, ருக்ஷிஸ்வர, கும்பேஸ்வர நந்தேஸ்வர பஞ்ச புஞ்சேஸ்வர லிங்கங்கள் தரிசித்தவுடனேயே சகல விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியவை. பூர்ணாநதி தீரத்தில் பூரணாகேஸ்வர வீரேஸ்வர லிங்கங்களும், கோதாவரி தீரத்தில் கபாலேஸ்வர சக்கரேஸ்வர, சந்திகேஸ்வர, தவுதபாபேஸ்வர, பீமேஸ்வர, சூரியேஸ்வர லிங்கங்களும் விளங்குகின்றன. திருப்திகா நதி தீரத்தில் திரியம்கேசுவர, கோகர்ணேஸ்வர, நாரூகேஸ்வர, ராமேஸ்வர; நந்தேஸ்வர, விமலேஸ்வர சண்டகேஸ்வர லிங்கங்கள் பூஜித்தவுடனே ஞானம் உண்டாக்கத்தக்கவை. திருப்திகா நதி கீழ்கடல் சங்கமத்தில் தர்மகேஸ்வர லிங்கமும், மேற்குக் கடற்கரையில் சித்தேஸ்வர, பிலேஸ்வர; அந்தகேஸ்வர லிங்கங்களும் இருக்கின்றன. அந்தகாசுரனை சங்கரித்த உக்கிரரூபத்துடன் சிவபெருமான் நின்ற இடமே அந்தகேஸ்வரம் எனப்படும். எல்லாவுலகங்கட்கும் சுகத்தை விளைவிக்கும் அற்புதாசலத்தல் சங்கேஸ்வர, கர்த்தமேஸ்வர கோடீஸ்வர லிங்கங்கள் இருக்கின்ற கவுசிகி நதி தீரத்தில் அசலேஸ்வர, நாகேஸ்வர அனந்தேஸ்வர யோகேசுவர வைத்திய நாதேசுவர: கோடீசுவர; சப்தேசுவர; பக்திகேசுவர; சண்டசுவர, சங்கமேசுவர லிங்கங்கள் இருக்கின்றன. இதுவரையில் கீழ்த்திசையில் உள்ளவற்றைச் சொன்னேன். முனிவர்களே! இனி தக்ஷிணத்தில் உலகத்தில் இருப்பவர்கள் சுகமடையவும் அத்திரிமுனிவரும் அனுசூயையும் ஒரு பஞ்ச காலத்தில் அன்னதானஞ் செய்யச் சங்கற்பித்துக் கொண்டு அதனை நிறைவேற்றவும் சுயம்புமூர்த்தியாகத் தோன்றிய அத்திரீசுவர லிங்கமொன்று சாக்ஷõத்காரமாக (கண் கூடாக) விளங்குகிறது. இவ்வாறு சூதபுராணிகர் சொன்னதும் அவ்வத்தீஸ்வர லிங்கத்தின் உற்பத்தி முதலியவற்றை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்யவாசிகள் கேட்டார்கள் சூதர் சொல்லலானார்.

முனிவர்களே! நீங்கள் கேட்ட விஷயம் அருமையானது அந்தக் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள். தென்திசையில் காமதம் என்று ஒரு வனம் உண்டு. அது தவஞ் செய்வதற்குத் தக்கதாக இருந்தது. அங்கே பிரம்ம புத்திரரான அத்திரிமுனிவர் தன் பத்தினி அனுசூயையுடன் தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது நூறு ஆண்டுகாலம் மழையே பெய்யாததால் எல்லோரும் கஷ்டப்பட நேரிட்டது. எங்கும் தண்ணீரே இல்லாமல் போயிற்று மரங்கள் எல்லாம் உலர்ந்தன தளிர்கள் பழங்கள் எதுவுமே இல்லாமற்போயின. சந்தியாவந்தனம் முதலிய நித்திய கர்மங்கள், ஜலமில்லாமல் நிறுத்தப்பட்டன. எங்கும் நெருப்புக் காற்றடித்தது இதனால் யாவரும் பெருந்துன்பமடைந்தார்கள். இவற்றைக் கண்ட பதிவிரதையான அனுசூயை இந்தத் துயரைச் சகிக்கமாட்டாமல் தன் கணவன் யோகத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது சீடர்கள் முதலானோர் பசிப்பிணி ஆற்றாது பல இடங்களுக்குச் சென்றதால் நான் மட்டும் தனித்து அவருக்குப் பணிவிடை செய்து கொண்டு பார்த்திவலிங்கம் ஒன்றைச் செய்து பூஜித்து தன் கணவன் முன் இருத்தி இருவருக்கும் தண்டம் செய்தும் பிரதட்சிணம் செய்துகொண்டும் இருந்தாள். அவளது பூஜையைக் கண்ட தைத்தியர் தானவர் முதலியவர்கள் அழகியான அனுசூயையை பார்த்து மயங்கி மோகம் கொண்டார்கள். அவர்கள் ஆசையோடு அவளை நெருங்க முயன்றார்கள். ஆனால் சிவபூஜையின் சிறப்பினாலும் பதிவிரதை மகிமையினாலும் நெருப்பு மயமாய் உஷ்ணம் வீசுவதாலும் அவளை நெருங்க முடியாமல் தூரத்திலேயே இருந்தார்கள்.

அத்திரி முனிவர் செய்த தவத்தைக் காட்டிலும் அனுசூயை செய்த தவம் மிகவும் கடுமையானதாக இருந்தது. அனுசூயை தவஞ்செய்து முடித்தவரையில் அவ்விருவர் நீங்கலாக வேறொருவரும் அங்கில்லை இவ்வாறு சிறிது காலம் கழிந்தது. அத்திரிமுனிவர் தியான யோகத்தில் மயைவயப்பட்டு ஒன்று உணராதவராக இருந்தார் பதிவிரதையான அனுசூயையும் தன் கணவனையும் சிவலிங்க பெருமானையும் அன்றி பிரிதொன்றையும் உணராமல் பெரும் நிஷ்டையிலிருந்தாள். அத்திரி முனிவர் தவத்திற்கும் அனுசூயையின் சிவபூஜைக்கும் சகல தேவர்களும் முனிவர்களும் கங்கை முதலிய தீர்த்தங்களும் மகிழ்ந்து அவர்களைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டுவந்து அவர்களது அற்புதசமாதியோக  நிலையைக் கண்டு அவர்கள் செய்யும் தவமும் பூஜையும் சிறந்தன. இதைப்போல் யாரும் செய்ததில்லை. இவர்கள் மகா புண்ணியசாலிகள்! என்று சொல்லிக் கொண்டே போய் விட்டார்கள். சிவபெருமானும் கங்காதேவியுமே அங்கே தங்கிவிட்டார்கள். அவர்களில் கங்கை அனுசூயையின் பூஜைக்கிரமத்தைக் கண்டு இவளுக்கு ஏதேனும் வரங்கொடுத்துத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானும் வந்திருந்தார் அவரும் ஏதாவது நன்று செய்தே அந்தர்த்தானமாவார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அனுசூயையோ தன் கணவனது நிஷ்டைகலையும் வரையில் சிவபூஜையிலேயே இருக்கவேண்டும். என்று கருத்துடன் அன்னபானாதிகளை நீங்கியிருந்தாள். அவ்விருவர் நிஷ்டையும் ஐம்பத்து நான்கு ஆண்டுகள் நீடித்தன.

ஒரு காலத்தில், அத்திரி முனிவர் தன் நிஷ்டை நீங்கி, அனுசூயையைப் பார்த்து, விரைவில் தண்ணீர் கொண்டு வருக! என்றார்; உடனே அனுசூயை கமண்டலத்தை எடுத்துக் கொண்டு போய் எங்கெங்கோ தண்ணீருக்காக அலைந்தாள். எங்கும் தண்ணீர் கிடைக்காமல் அவள் யோசித்தாள். அப்போது கங்காதேவி அவள் முன்னால் தோன்றி, அனுசூயை! உனக்கு வேண்டியதை கேள். கொடுக்கிறேன் என்று சொல்ல அனுசூயை அவளைப் பார்த்து; நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்று கேட்க. அதற்கு கங்கை; நான் உனது பதிவிரதா தர்மத்தையும் நீ உன் கணவனையும் சிவலிங்கத்தையும் பூஜித்து வந்த உறுதிப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் தான் கங்கை. உனக்கு என்ன வரவேண்டுமோ, கேள் என்றாள். அதற்கு அனுசூயை கங்கையைப் பணிந்து தாயே! எனக்கு தண்ணீர் வேண்டும் என்றாள். அதற்கு கங்கை உன் கையால் சிறுகுழி ஒன்றை தோண்டுவாயின் அங்கே நான் ஜலம் கொடுப்பேன் என்று கூற அனுசூயை அவ்வாறே தோண்ட ஜலதாரை தோன்றியது. அனுசூயை பெரும் வியப்போடு தண்ணீர் முகந்து கொண்டு, கங்கா தேவியைப் பார்த்து, உனக்கு என்மீது தயை இருக்குமானால் என் கணவர் தவஞ்செய்து முடியும் வரையில் இங்கேயே இருக்க வேண்டும்! என்று பிரார்த்தித்தாள். அதற்கு கங்கை உன் கணவனுக்குச் செய்த பணிவிடையால் அடைந்த பயனில் ஒரு மாத பலனை எனக்குக் கொடுப்பாயானால் நான் அப்படியே இருக்கிறேன்! என்றாள். அனுசூயை அப்படியே தந்தேன்! என்று தத்தம் செய்து தண்ணீரை எடுத்துக் கொண்டு தன் கணவனிடம் கொடுத்து அவர் முன்பு நின்றாள். அத்திரி முனிவர் முறைப்படி ஆசமனஞ் செய்து தாகந்தீர்ந்து மிகவும் மகிழ்ந்து  பெண்ணே! நான் தினமும் பானம் செய்யும் ஜலமல்லவே இது. இது சிறப்பாக இருக்கிறதே! என்று கூறி நாற்புறமும் சுற்றிப் பார்த்தார். எந்தப் பக்கம் பார்த்தாலும் உலர்ந்த மரமும் நெருப்புக் காற்றுமாக இருப்பதைக் கண்டு மழையில்லையா என்று அவர்தம் மனைவியைக் கேட்டார். ஆம் மழையில்லை என்றாள் அனுசூயை! மழையில்லையென்றால் இப்பொழுது எங்கிருந்து நீ தண்ணீர் கொண்டு வந்தாய்? என்று முனிவர் கேட்டார். தண்ணீர் வந்த விதத்தைச் சொன்னால் தற்புகழ்ச்சியாகும் சொல்லாவிட்டால் குற்றம் வரும் என்பதால் அனுசூயை சிறிது நேரம் யோசித்தாள் அத்திரி முனிவர் இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டார். அதற்கு அவள் சுவாமி! நான் உண்மையைச் சொல்கிறேன். தங்களுக்கு பணிவிடை செய்த பயனாலும் சிவபூஜை செய்த பலத்தாலும் கங்காதேவியே இங்கு வந்திருக்கிறாள். அந்த ஜலத்தையே உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தேன் என்றாள். அதைக் கேட்டதும் அத்திரி முனிவர், பெண்ணே! நீ சொல்வது உண்மையா? உண்மையென்று நம்ப முடியவில்லை. யோகியருக்கும் தேவர்களுக்கும் அசாத்தியமான காரியம் உனக்கு எப்படி கைகூடும்? கங்கையை நான் என் கண்ணெதிரே கண்டாலொழிய நம்ப மாட்டேன். கங்கையைக் கண்டால்தான் நம்புவேன்? என்றார்.

நாதா! தாங்கள் என்னுடன் வந்தால் காண்பிக்கிறேன்! என்று கங்கை தோன்றிய இடத்துக்கு அவரை அழைத்துக் கொண்டு அனுசூயை போனாள். அங்கே குழியிலிருந்த ஜலப்பெருக்கைக் கண்டு அத்திரி முனிவர் மிகவும் மகிழ்ந்து நீ தன்யை! என் தவமும் சபலமாயிற்று. கங்கா நதியில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்ததே. இது பிறருக்கு கிடைக்குமா என்று அந்தக் கங்கை நீரில் நீராடி ஆசமனம் செய்து பல முறை கங்கையைத் துதித்தார். அப்போது கங்கை அவர்களைப் பார்த்து அனுசூயா தேவி! நான் இனி விடை பெறுகிறேன்! என்ற சொல்ல அனுசூயை கங்கையைப் பார்த்து கங்காதேவி! நீ எனக்குப் பிரத்யட்சமாகி பரிபூரண அன்புடையவளாக இருப்பது உண்மையானால் நீ ஏற்கனவே அங்கீகரித்தது போல இங்கேயே இருக்க வேண்டும்! என்று வேண்டினாள். அத்திரி முனிவரும் பலவாறு கங்கையைத் துதித்துத் தயை வைக்க வேண்டும் என்று இறைஞ்சினார். பிறகு கங்கை அனுசூயையை நோக்கி நீ முதலில் உன் கணவனையும் சிவலிங்கத்தையும் பூஜித்ததால் உண்டான பயனில் ஒரு மாத பயனைக் கொடுத்து உன் கணவனின் தவம் முடியும் வரையிலும் இங்கேயே இருக்க வேண்டும் என்றாய். இப்பொழுதும் இங்கேயே இருக்க வேண்டும் என்பாயாகில் அந்தப் பயனில் ஒரு வருஷ பயனைக் கொடுத்தால் தான் அவ்வாறே இருப்பேன். தானம், ஸ்நானம், யாகம், பதிசேவை முதலியவற்றால் அடையும் பயனைவிட பதிவிரதையைக் கண்டால் அதிகப் பயன் கிடைக்கும். ஆகையால் உன்னை தரிசித்துக் கொண்டே இங்கு இருப்பதால் எனக்கும் மகிழ்ச்சி தான், உலகத்துக்கெல்லாம் நன்மை உண்டாக வேண்டும் என்று நீ நினைத்தால், நான் கேட்ட அந்தப் பயனைக் கங்கைக்கு வழங்கினாள். பொன், சந்தனம், கரும்பு, இந்த மூன்றும் தான் துயருற்றாலும் பிறருக்குப் பயன் அளிப்பது போல கஷ்டப்பட்டு தேடியபுண்ணியத்தை உலக நன்மையை உத்தேசித்து அனுசூயை தன் புண்ணிய பயனைக் கங்கைக்குக் கொடுத்து விட்டாள்.

அப்போது சிவபெருமான். அனுசூயை பூஜித்த பார்த்திவலிங்கத்திலிருந்து பிரத்தியட்சமாகி, உன் பதிவிரதா தர்மத்திற்கும் உன் பூஜைக்கும் மகிழ்ந்தேன். உனக்கு வேண்டியவரத்தைக் கேள் என்றார். ஐந்து திருமுகங்களுடன் பிரத்யட்சமாகிய சிவபெருமானை அத்திரி முனிவரும் அனுசூயாதேவியும் வணங்கி வழிபட்டு. தேவரீரும் ஜகன்மாதாவாகிய கங்காதேவியும் ஆகிய இருவருக்கும் எங்கள் மீது தயை இருக்குமானால் எப்போதும் இங்கேயே எழுந்தருளுயிருந்து உலகத்திற்கு நன்மை செய்து அருள் புரிய வேண்டும். என்று பிரார்த்தித்தார்கள். சிவபெருமானும் கங்கையும் அவ்வாறே அங்கீகரித்தனர், சிவபெருமான் அத்திரீஸ்வரர் என்ற பெயரால் சகலருக்கும் நன்மை செய்ய அங்கேயே கோயில் கொண்டார். கங்கையும் தன் சகோதரியாகிய பார்வதி தேவியுடன். அங்கேயே இருக்கிறாள். அதுமுதல் அவ்விடத்தில் குறைவில்லாமல் கங்காஜலம் எக்காலத்தும் விளங்கி வருகிறது. இதையுணர்ந்த தவமுனிவர்கள் தங்கள் பத்தினிமார்களோடும் சீடர்களோடும் அங்கே வந்தார்கள் கோதுமை தானியங்கள் இலைகள், புற்கள் பழங்கள் யாவும் விருத்தியடைந்தன அதைக் கண்ட முனிவர்கள் இதுவே தவத்திற்கு தகுதியான இடம் என்று அங்கேயே தவஞ் செய்திருந்தார்கள். அவர்களது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் மழை பொழியச் செய்தார். அதனால் சகலருக்கும் சுகம் உண்டாகி, அன்னபானாதிகளைப் பெற்றுத் தங்களுக்குரிய தவஞ்செய்து கொண்டிருந்தார்கள். இந்த அத்திரீசுவரரின் மகிமையை கேட்டவர்கள் சகல சுபங்களையும் அடைவார்கள். இவ்வாறு சூத புராணிகர் சொன்னதும் நைமிசாரண்ய வாசிகள் அவரை நோக்கி, ஞானிசிரியரே! இனி தாருகா வனத்திலுள்ள நாகேஸ்வரலிங்கப் பிரபாவத்தைச் சொல்லவேண்டும் என்று வேண்டினார்கள். சூதமுனிவர் சொல்லத் துவங்கினார்.

40. பிக்ஷõடனர் மோகினி கதையும் நாகேஸ்வரலிங்க மகிமையும்

முன்னொரு காலத்தில் ஒரு கற்பத்தில் தேவதாருவனம் என்ற காடொன்று இருந்தது. அதில் வசித்து வந்த மகரிஷிகள் யாகமே எல்லா பயன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் யாகத்தைக் காட்டிலும் கடவுள் வேறு இல்லையென்றும் தீர்மானித்தார்கள். அவர்களது மனைவியரோ தங்கள் கற்பே சிறந்தது என்றிருந்தார்கள். சிவபெருமான் அவர்களது மயக்கத்தையறிந்து அதை ஒழிக்கக் கருதி மகாவிஷ்ணுவை அழைத்து நீ பெண் வடிவம் ஏற்று என்னுடன் வருவாயாக! என்று பணிந்தார். உடனே திருமாலும் பொற்பதுமை போன்ற உடலழகும் முழுநிலாப் போன்ற முகமும் மன்மதனுடைய கரும்புவில்லைப் போல் வளைந்த புருவமும் உள்ள வேல் போன்ற கூர்மையான கருவிழிகளும் முல்லையரும்பு போன்ற அழகான பல்வரிசையும் கொவ்வைப் பழங்களைப் போன்ற சிவந்த உதடுகளும் பொற் கிண்ணங்கள் போன்ற ஸ்தனங்களும் சாணைக்கல் போன்ற கன்னமும் சங்கு போன்ற கழுத்தும் மூங்கில் போன்ற தோளும் உடுக்கைப் போன்ற இடையும் யானைத் துதிக்கைப் போன்ற தொடையும் பாம்பின் படம் போன்ற நிதம்பமும் செந்தாமரை மலர் போன்ற கைகளும் செம்பஞ்சுக் குழம்பூட்டிய பாதங்களுமுடைய சரவாபரண பூஷிதையான பூங்கொடியென ஒரு பெண்ணுருவம் எடுத்துக் கொண்டார். சிவபெருமானும் அந்த மங்கைக்கேற்ற ஆணழகராய் கோடி சூரியப்பிரகாசமான திவ்விய தேஜசையுடைய திருமேனியோடும் விளங்கினார். அவர் ஒரு கையில் டமருகமும் ஏந்தி, உள்ளாளப்பன் பாடிக்கொண்டு திகம்பரராய் (நிர்வாணமாய்) மதயானைப்போல் நடந்து மாயனாகிய மோகினிப் பெண்ணுடன் தாருகாவனத்து முனிவர்களின் தவநிலையையும் அம்முனி பத்தினியரின் கற்பையும் சோதிக்கக் கருதி அந்த வனத்தை அடைந்து நிர்வாணமாய்த் திரிந்து அம்மங்கையர்கள் மையல் கொள்ளும்படி வீடுகள் தோறும் சென்று பிச்சைக் கேட்டார். ரிஷிபத்தினிகளெல்லாம் பிட்சைப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து பிக்ஷõடனரைக் கண்டு காமப் பித்தேறியவர்களும் மதி மயங்கியவர்களும், தூரமாக ஓடியவர்களும் அப்படியே கட்டியணைப்பார்களும், ஆசையோடு அழைப்பவர்களும், மையல் அவஸ்தையால் அவரைத் தன்னோடு கூடி மகிழச் சேரவாரும் என்று கூப்பிடுபவர்களும், மோகாவேசத்தோடு பின் தொடர்பவர்களும், பெருமூச்சு விடுபவர்களும், காமத்தால் தாம் செய்வது எது வென்றே தெரியாதவர்களும் வளையல்களைச் சோரவிடுவோர்களும், ஆடைகளை நழுவ விடுவோர்களும், விழிதெரியாமல் வீழ்பவர்களும், வார்த்தை குழறுவோர்களுமாக அலைந்தார்கள். நீலகண்டராகிய பிக்ஷõடனப் பெருமான் வேத கீதங்களைப் பாடிக் கொண்டும் விநோத வித்தைகளைச் செய்து கொண்டும் வீதியில் திகம்பரராகவே(நிர்டாணமாகவே) உலாவிக் கொண்டிருந்தார்.

மோகினி வடிவமேற்ற மஹாவிஷ்ணுவோ உடல் இளைக்கச் செய்யும் தவமே சிறந்தது என்றறிந்த முனிவர்களைக் கண்டு பெண்மையின் சாகஸங்களையெல்லாம் காட்டத் தொடங்கினார். நாணமுற்றதைப் போல் கவர்ச்சிகரமாக நெளிந்து ஒதுங்கியும் தன் கையில் ஏந்திய வீணையில் சுருதி சேர்த்து இனிமையாகப் பாடியும், கண்வீச்சு வலைகளால் பலரது மதியை மயக்கியும், பண்ணமைந்த பாடல்களினால் பலர் உள்ளத்தை வாட்டியும் புன்னகையால் பலரைத் துன்புறுத்தியும் இவ்வாறு பலவிதத்திலும் மோகினி மோகாக்கினியை அவர்களுக்கு மூட்டி விட்டாள். அதனால் அம்முனிவர்கள் தங்கள் தவச்செயலை மறந்து. அவச்செயல் கொண்டு மதிமயங்கி மாயனாகிய மோகினியின் மலரடியில் விழுந்து பெண்ணே! பேரழகியே, நீ என்ன காரணமாக இங்கே வந்தாய்? நீ இங்கே வந்தது எங்கள் தவப்பயனே என்று தங்கள் சடைகள் அவிழ்ந்து தரையில் விழவும் உத்தரீயமும் நழுவி விழவும் மோகினியைப் பத்தினிகள் கற்பையும், வளையல் முதலான ஆபரணங்களையும் ஆடைகளையும் நழுவவிட்டு பிக்ஷõடனரைச் சூழ்ந்து வருவதைக் கண்டார்கள். உடனே கோபம் கொண்டு நிர்வாணமாகத் திரியும் அத்திகம்பரணையடைந்து பலவிதமாகச் சபித்தார்கள் ஆனால் அச்சாபங்கள் எதுவுமே சர்வலோக சரண்யனான சிவபெருமானை அடையவில்லை அதைக் கண்டதும் முனிவர்கள் பிக்ஷõடனரை நெருங்கி ஐயரே! நீர் யார்! இந்த மோகினி யார்? என்று கேட்டார்கள். அதற்குப் பெருமான் நான் ஒருமுனிவன். இவள் என் மனைவி. இங்கே தவம் செய்ய வந்தோம் என்றார். அதற்கு முனிவர்கள் அப்படியானால் மயக்கு வேசிபோல் திரியும் இவளை நீக்கிவிட்டு நீர் தவஞ் செய்யும்! என்றார்கள் அதற்கு பிக்ஷõடனர் மனைவியோடு தவஞ்செய்வதே சிறந்த வானப்பிரஸ்த தர்மம். நீங்கள் உங்கள் மனைவியரோடு சேர்ந்து தவஞ் செய்யவில்லையா? நீங்கள் உங்கள் மனைவியரின் கற்பு மிகவும் அழகாக இருக்கிறதே! உங்கள் செயல் இப்படியிருக்க கற்பிற்சிறந்த என் மனைவியை விட்டுவிட்டு நானோ தனித்துத் தவஞ்செய்வேன்? என்று சொல்லிக் கோபங்கொண்டவரைப் போல அவர்களை விட்டு நீங்கி மோகினியாகிய மாயவனோடு வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தையடைந்து வசிஷ்டரும் அவர் மனைவி அருந்ததியும் செய்த பூஜைகளை ஏற்று திருக்கைலையை அடைந்தார்.

வேததாருவனத்தைச் சேர்ந்த முனிவர்கள் சிவபெருமானையும் விஷ்ணுவையும் இகழ்ந்து பேசிய பாவத்தால் ஜ்வரம் முதலிய வியாதிகளையும் பசி முதலான துன்பங்களையும் மனக் கவலையையும் அடைந்து உடல் நடுங்க வாய் குழற சுவாமி! நோய்களாலும் எண்ணற்ற துன்பங்களாலும் நாங்கள் துன்புற்று வருந்துகிறோமே! இதற்குக் காரணம் என்ன? இதை ஒழிக்க வேண்டும், என்று வேண்டினார்கள். அதற்குப் பிரமதேவர், முனிவர்களே யாரானாலும் தன் வீட்டுக்கு வந்த அதிதியை பூஜிக்க வேண்டும் என்பது தர்மம், இதையுணர்ந்த நீங்கள் வேதங்களும் தேடியறியாத சிவபெருமானே பிக்ஷõடனராகவும் திருமாலே அவரது மனைவியாகவும் பிரத்யட்சமாகி உங்கள் இருப்பிடங்களுக்குவந்த போது நீங்கள் அவர்களை அவமதித்தீர்கள். அதனாலேயே இத்தகைய துன்பங்களை அடைந்தீர்கள் பரமேஸ்வரனை அப்பெருமானின் மனமகிழ நாள் தோறும் சிவ லிங்க அர்ச்சனை செய்யுங்கள்! என்றார் தவ முனிவர்களும் தாருகா வனத்தையடைந்து பிருமதேவர் சொல்லியபடி ருத்திராட்ச கண்டிகை அணிந்து விபூதி உத்தானனஞ் செய்து ஸ்ரீபஞ்சாக்ஷரம் ஜெபித்து சிவபக்தியை உடையவராய் மனைவியரோடு இரவும் பகலும் இடைவிடாது நல்லமலர்களால் அர்ச்சனைசெய்து வந்தார்கள். அவ்வாறு இருக்கும்போது சிவபெருமான் முன்பு போலவே பிக்ஷõடனராக மோகினியுடன் தாருகாவனத்தை அடைந்து சிறிதுநேரம் குதித்து விளையாடிக்கொண்டும் சிறிது நேரம் வேத கீதம்பாடிக் கொண்டும் பிøக்ஷ ஏற்பார்போல உலாவியும் யோகஞ் செய்தும் வீணே சிரித்தும் மோகினியோடு சேர்ந்து விளையாடிக்கொண்டும் இருந்தார்.

அவர்கள் அவ்வாறு விளையாடுவதைக் கண்டதும் தவ முனிவர்கள் தங்கள் பத்தினிகளோடு அவர்கள் இருக்குமிடம் தேடிச் சென்று அவர்களது திருவடிகளை மலர்களால் அர்ச்சனை செய்து பணிந்தார்கள். சிவபெருமான் அவர்கள் மீது தயையும் இரக்கமும் கொண்டு பல்லாயிரங்கோடி உதயசூரியனைப் போன்ற தமது மெய்வடிவைக்காட்டினார் முனிவர்கள் வேத வாக்கியங்களால் துதித்து உடல் சிலிர்க்க ஆனந்தக் கண்ணீர் சொரிய வணங்கி வழிபாடியற்றினார்கள். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து மகரிஷிகளே! நீங்கள் கடவுளே இல்லை என்று கருதியதால் இவ்வாறு நாம் உம்மைப் பரீட்சித்தோம் என்று அவர்களுக்கு ஞான உபதேசம் செய்து இச்சிவலிங்கத்தை எப்பொழுதும் பூஜை செய்யுங்கள் என்று மோகினியுடன் அந்தர்த்தானமாய் ஆங்கோர் சிவலிங்க மூர்த்தமாய் எழுந்தருளியிருக்கின்றார். அந்த இலிங்கமே நீங்கள் கேட்ட தாருகாவன நாகேஸ்வரலிங்கம் அது முதல் முனிவர்கள் அந்த லிங்க மூர்த்தியைக் காலந் தவறாமல் பூஜை செய்து தங்கள் இஷ்ட காமியங்களை அடைந்தார்கள்.


© Om Namasivaya. All Rights Reserved.